Search This Blog

6.3.10

தப்பா நினைக்காதீங்க.. இது பிரசாதம்தரும் ஒருஸ்டைல்

தப்பா நினைக்காதீங்க... இதுபிரசாதம்தரும்
ஒருஸ்டைல்

வாழைப்பழத்தை மடியில் வாங்கக் காத்திருக்கும் பெண் , பெண்களுக்கு வாழைப்பழம் போல ஆண்களுக்கு எலுமிச்சம் கனி துப்பப்பட்டது

இரை விழுங்கிய மலைப்பாம்பு சுருண்டிருக்கும் டிசைனில் துணியால் சுற்றப்பட்ட ஒரு தீப்பந்தம்! அதைத் தோளில் சுமந்தபடி நடுநாயகமாக வருகிறார் ஒருவர். அவரைச்சுற்றி நெற்றி மற்றும் உடம்பு முழுக்க நாமம், சிவப்பு நிற பார்டரில் மஞ்சள் அல்லது காவி நிற பஞ்சகச்சம் கைகளில் நீளப் பிரம்புகள், சங்கு, சேகண்டி இடுப்பு, மார்பு, கால்களில் சதங்கைகள் சத்தமெழுப்ப வருகிறார்கள் சிலர். இவர்கள்தான் காரமடை ரங்கநாதருக்கு தீப்பந்தச் சேவை செய்யும் பந்த சேவக தாசர்கள்.

தாரை தப்பட்டை, சங்கு, சேகண்டி என அந்த தாசர்கள் வரும் பாதை முழுக்க ஆர்ப்பாட்டமாக இருக்கிறது. ஊருக்குள் உலா வரும் அவர்களைக் கண்டதும் ஆசியும், அருள்வாக்கும் வாங்க, தெருக்கள்தோறும் பயபக்தியோடு மக்கள் திரள்கிறார்கள். தாசர்கள் தங்கள் வீட்டு வாசலை நெருங்கும்போது பெண்கள் பக்திப் பரவசம் மேலிட ஒரு வெள்ளை வேட்டியை வீதியில் விரிக்கிறார்கள். பூஜை சாமான்கள், வாழைப்பழங்கள் அடங்கிய தாம்பாளத் தட்டுகளை தாசர்களுக்கு முன்னால் வரும் பூசாரிகளிடம் கொடுக்கிறார்கள்.

பூசாரி அந்த வாழைப்பழங்களை உரித்து வரிசையாக அந்த வேட்டியின் மீது வைக்கிறார். அதுபோல பக்தர்கள் சர்க்கரை, வாழைப்பழம் கலந்து கரைத்துக் கொடுத்த பிரசாதக் குண்டாவையும் வாங்கி வேட்டியில் ஓர் ஓரமாக வைத்து அதற்கு தேங்காய் உடைத்து ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தி தீபாராதனை காட்டுகிறார். அப்போது தாரை தப்பட்டை, சங்கு. சேகண்டி ஓசைகள் அந்தப் பகுதியையே அதிர வைக்க, அதற்கேற்ப தாசர்கள் அருகே வந்து சாமியாடுகிறார்கள்.

தீப்பந்தம் வைத்திருக்கும் தலைமை தாசர், சாமி வந்து ரொம்பவும் உக்கிரமாக ஆடுகிறார். கோவிந்த பாராக்... கோவிந்தோ...! ரங்க பராக், ராமா பராக் கோவிந்தோ...! என்று கட்டைக்குரலில் அவர் அங்கு ஏற்கெனவே ஒலிக்கும் இசையையும் மீறிப் பாடும் போது, அந்தக் குரல் நம்மை என்னவோ செய்கிறது. தாள லயம் மாறாமல் ஆடியபடி வரும் தாசர்கள் வெள்ளைவேட்டியில் உரித்து வைத்திருக்கும் வாழைப்பழங்களை நோக்கி மண்டியிட்டுக் குனிகிறார்கள். அவர்கள் தலையை நிமிர்த்தும்போது பார்த்தால் ஒவ்-வொருவர் வாயிலும் உரித்த வாழைப் பழங்கள். இசைக் கருவிகள் இன்னும் அதிக ஓங்காரத்துடன் ஒலிக்க, அருள் வந்ததுபோல சிலிர்க்கும் அந்த தாசர்கள் அ...ஆ...உ..ஊ...! என்று ஆவேசம் ததும்ப ஊளையிடுகிறார்கள்.

அப்போது அவர்கள் முன்பு தன் முந்தானையை ஏந்தியபடி பக்திப்பரவசத்துடன் காத்திருக்கிறார்கள் பெண்கள். அடுத்த விநாடி, தாசர்கள் துப்பும் அந்த வாழைப்பழத்தை முந்தானையில் பிடித்து அதைக் கொஞ்சமும் சங்கோஜமின்றி பிரசாதமாகச் சாப்பிடுகிறார்கள் பெண்கள்.

இன்னொரு பக்கம் குருதாசரின் வாயில், உரித்த வாழைப்பழங்களைத் திணிக்கிறார்கள் மற்ற தாசர்கள். அவற்றை வாயில் கவ்வியபடி சாமியாடும் குருதாசர் தன்முன் முந்தானையை ஏந்தி மண்டியிட்டுக் காத்திருக்கும் பெண்களை பிரம்பாலடித்து விரட்டுகிறார். பிறகு தனது விருப்பப்படி ஒவ்வொரு பெண்ணாக அழைக்கிறார். அவருக்குப் பத்தடி தூரத்தில் முந்தானையை ஏந்தியபடி ஒருவித நடுக்கத்துடன் அமர்கிறார் அழைக்கப்பட்ட பெண்.

ஓர் ஓங்கார உறுமலுடன் வாயில் இருக்கும் வாழைப்பழத்தை ஏவுகணை ரேஞ்சுக்குத் துப்புகிறார் குருதாசர். ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் திறமையுடன் முந்தானையில் அதை கேட்ச் செய்கிறார் ஒரு பெண். பிறகு அதை மார்புடன் அணைத்துக் கொண்டு குருதாசரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிச் செல்கிறார். கேட்ச்சைத் தவறவிடும் பெண்களுக்கு சிலசமயம் இன்னொரு வாய்ப்பும் கொடுக்கிறார் குருதாசர். அதையும் தவறவிட்டால் பிரம்படி கிடைக்கிறது. அந்தப் பெண்கள் ஓவென அழுகிறார்கள். என்ன தப்புச் செய்தேன்? பிரசாதம் தப்பிப் போச்சே! என் குடும்பத்துக்கு இனி என்ன கேடு நடக்குமோ? என்று உருகித் தவிக்-கிறார்கள். பிரசாதம் கிடைத்த, கிடைக்காத சில பெண்கள், அருள் வந்து, தாசர்களிடம் உள்ள தீப்பந்தத்தைப் பிடித்து ஆடுவதையும் காண முடிகிறது.

கதை அத்துடன் முடியவில்லை. பெண்களில் சிலருக்கு குருதாசர் கூடுதல் அருள் வந்து வாயோடு வாய்வைத்தே வாழைப்பழத்தை ஊட்டிவிடுகிறார். அதைப் போல வாழைப்பழம், சர்க்கரை கலந்த பிரசாதத்தையும் அருளுடன் அல்லாடியபடி அவர் பெண்களை அழைத்து வாயோடு வாய் வைத்து ஊட்டுகிறார். அதை ஒரு துளிகூட சிந்தாமல், சிதறாமல் பெண்கள் சாப்பிட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களிடம் குருதாசரின் பிரம்பு பேசுவதை நம்மால் காண முடிகிறது.

அதன் பிறகு அடுத்த தெரு, புதிய பெண்கள், விரித்த வெள்ளை வேட்டி, உரித்த வாழைப்பழங்கள், மீண்டும் துப்பல்கள், கேட்ச்சுகள், வாயோடு வைத்து வாழைப்பழ ஊட்டல்கள் என அருள் வைபவங்களை அரங்கேற்று-கிறது தாசர் டீம். யார் இந்த தாசர்கள்? எங்கே நடக்கிறது இந்த மாதிரி பக்திப் பரவசம்?

கொங்கு நாட்டில் உள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்று கோவை காரமடை ரங்கநாத சாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு-தோறும் நடக்கும் மாசிமகத் தேரோட்-டத்துக்கு மறுநாள் இரவு கோயிலில் பரிவேட்டை உற்சவம் நடக்கும். அப்-போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருக்கும் அரங்கநாதனின் அடியார்களான தாசர்கள் பந்த சேவை, கவாள சேவைகளை அவரவர் ஊரில் இருந்து எடுத்து வந்து கோயிலில் சமர்ப்பிப்பார்கள்.

தீப்பந்தம் எடுத்து ஆடியபடி வீதிகளில் வலம் வந்து பந்தத்தின் தீநாக்குக்குள் பயமின்றி கட்டை விரலைவிட்டு சாம்பல் எடுத்து பக்தர்களின் நெற்றியில் இட்டு கோவிந்தா பராக் போடுவது பந்தசேவை. வாழைப்பழம் ரங்கனுக்குப் பிடித்தமான கனி. அதை கைபடாமல் வாயாலேயே கவ்வி எடுத்து பக்தைகளுக்கு பிரசாதமாக வழங்குவதற்குப் பெயர் கவாள சேவை.

அந்த அடிப்படையில்தான் கடந்த ஞாயிறன்று காரமடையில் ரங்கநாதருக்குத் தேரோட்டம் நடந்து முடிந்த மறுநாள், கோவை மாதம்பட்டி அருகே உள்ள குப்பனூரில் பந்தசேவை, கவாளசேவை நடத்தி கலக்கினார்கள் தாசர்கள். இதில் பெண்களுக்கு வாழைப்பழம் ஊட்டப்பட்டதைப்-போல ஆண்களுக்கு எலும்மிச்சம்கனி துப்பப்பட்டது. அதை சரியாக துண்டு ஏந்திப் பிடிக்காத ஆண்கள் பிரம்படியை வாங்கிக் கட்டிக் கொண்-டார்கள்.

சரி, எதற்காக இந்தக் கவாள சேவை? இப்படி எச்சில் பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவது சரிதானா? என்று கவாள சேவை வாங்கிய பெண்கள் சிலரிடம் பேசினோம்.

இதை எச்சில் என்று கொச்சைப்படுத்தக்கூடாது. தாசர்கள் எல்லோரும் ரங்கநாதனின் மறுவடிவங்கள். அவர்களிடம் பிரசாதம் வாங்குவது அந்த ரங்கநாதப் பெருமாளிடமே நேரடியாகப் பிரசாதம் வாங்குவதற்குச் சமம். தாசர்களிடம் வாயோடு வாய் வாழைப்பழம் வாங்கும் பெண்கள் எல்லாமே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த ஆண்டே குழந்தை பிறக்கும். மடியில் பிரசாதம் வாங்கியவர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும்! என்றனர் அந்தப் பெண்கள்.

சாவித்திரி என்ற பெண்மணியிடம் பேசினோம். நான் ஏழெட்டு வருஷமாக வீதிக் கவாளம் வாங்குகிறன். அதில் எனக்கு கூச்சநாச்சமோ, அசூயையோ துளிகூட இல்லை. இன்னும் சொல்லப் போனால் கவாளம் வாங்கும்போது என்னை நானே மறந்து விடுகிறேன். பந்தத்தைப் பிடுங்கிக்கொண்டு ஆடுகிறன். அந்த அளவிற்கு என்மேலே ரங்கநாதன் இறங்கி விடுகிறார் என்றார் அவர். ராஜேஸ்வரி என்ற பெண், முதல்முறை எனக்குக் கொடுத்த கவாளத்தை தூக்கிவீசிட்டேன். அதிலிருந்து எனக்குக் கஷ்டம் அதிகமானது. இப்போது 23 வருஷமாக தொடர்ந்து கவாளம் வாங்கிச் சாப்பிடுகிறேன். நான் நினைத்தது நிறைவேறியிருக்கிறது என்றார் அவர். சுடிதார் அணிந்திருந்த இளம்பெண் மகேஸ்வரி, பி.எஸ்.ஸி மேத்ஸ் இறுதியாண்டு படிக்கும் நான் படித்தவுடன் வேலை கிடைக்க இப்படி மடியில் கனியேந்தினேன். படிப்பு முடிந்ததும் நிச்சயம் எனக்கு வேலை கிடைக்கும்! என்றார் பேருவகையோடு.

குருதாசரிடம் வாயோடு வாய் வைத்து பிரசாதம் வாங்கிய மகேஸ் என்ற பெண்ணிடம் பேசினோம். பத்து வருடமாக எனக்குக் குழந்தையில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாத்தான் கவாளம் வாங்குகிறேன். போன வருஷம் கவாளத்தை மடியேந்திப் பிடிக்க தவறிட்டேன். அதை சாப்பிடவும் மறுத்துவிட்டேன். அப்ப சாமி அருள் வந்து பிரம்பால அடிச்சு இரண்டாவது தடவையாக பிரசாதத்தை வாயோட வச்சு ஊட்டி விட்டுச்சு. அப்பவே, நீ அடி வாங்காம பிரசாதம் வாங்கினாத்தான் குழந்தை கிடைக்கும் என்று சொன்னாங்க. இந்த முறையாவது அடிவாங்காமல் பிரசாதம் வாங்கலாம் என்று உட்கார்ந்தேன். ஆனால், இந்த முறையும் பிரசாதத்தைத் தவற விட்டு விட்டேன். சாமி பிரம்பால் அடித்துத்தான் திரும்ப கவாளம் கொடுத்திருக்கு. இந்த வருஷமும் குழந்தை கிடைக்குமோ, குறையாகவே இருக்குமோ தெரியலை! என்று அங்கலாய்த்தார் அவர். சில பெண்கள் தாங்கள் சாப்பிட்ட வாழைப்பழ பிரசாதத்தை தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்ததை நாம் காணமுடிந்தது.

கடைசியாக இந்த பந்தசேவை, கவாள சேவையை நடத்தியவர்களில் இருவரான கோவிந்தசாமி, பழனிச்சாமி என்ற இரு தாசர்களிடம் பேசினோம்.

இதை நாங்க அய்ந்து தலைமுறையாக நடத்துகிறோம். ரங்கநாதரின் கைகளில் இருக்கும் சங்கு, சக்கரம்தான் தாசர்களுக்கு ஆதாரமானவை. பரம்பரை பரம்பரையாக வரும் தாசர்கள் வீடுகளில் செம்பு உலோகத்திலான இந்தச் சிறிய முத்திரைகள் இருக்கும்.

ஒரு தாசர் இறந்து போனாலோ, வயோதிகம் அடைந்து கவாள விளையாட்டு விளையாட முடியாமல் போனாலோ அதை அவர் தொப்புள்கொடி உறவில் வந்த மகன் செய்ய வேண்டும். அப்போது சங்கு சக்கர முத்திரைகளை கோயிலில் வைத்து கற்பூரத்தில் காய்ச்சி பூஜை செய்து தாசராக பட்டம் கட்டக் கூடிய வாரிசின் தோளில் சுடுவார்கள். அதன் மூலம் அவருக்குள் ரங்க நாதர் இறங்கிவிட்டதாக அய்தீகம். அப்படி ரங்கநாதர் முத்திரை பெற்றவர்கள் கடுமையான விரதம் அனுஷ்டிக்க வேண்டும். தாசர் முத்திரை வாங்கியவரின் மனைவியும் சங்கு, சக்கர முத்திரையைத் தோளில் வாங்கவேண்டும். அவர்கள்தான் தாசர்களுக்கு சமையல் செய்து பணிவிடைகள் செய்ய வேண்டும்.

ஆசார அனுஷ்டானங்களில் ஏதா-வது குறைபாடு நேர்ந்தால் அந்த தாசர் குடும்பம் சொல்ல முடியாத சிரமத்துக்கு ஆளாகும். இதற்குப் பயந்தே பல தாசர்களின் வாரிசுகள் முத்திரை வாங்கச் சம்மதிப்பதில்லை. அப்படி சம்மதிக்காத நிலையில் அந்த சங்கு, சக்கர முத்திரையை பூமிக்குள் இறக்கி விடுவர் என்றனர் அந்த தாசர்கள்.

இப்படி பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து எச்சில் பிரசாதம் கொடுக்கீறீர்களே, இது பண்பாட்டுக்கு விரோதமில்லையா? மேலும் இதில் நோய்க்கிருமிகள் பரவாதா? சுகாதாரக் கேடு ஆகாதா? என்றோம்.

கவாளத்தை நாங்களா கொடுக்கிறோம்? அந்த ரங்கநாதன்தானே கொடுக்கிறான்? அது எப்படி பண்பாட்டுக்கு விரோதமோ, சுகாதாரக்கேடோ ஆகும்? இது இந்த ஊரில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில், இந்தியா முழுக்க காரமடை ரங்கநாத தாசர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் இது நடக்குது? என்றார்கள் அவர்கள் ஒருவித சீற்றத்தோடு.

தீ மிதிப்பது, பக்தைகளை குப்புறப்படுக்க வைத்து அவர்களை மிதித்தபடி சாமியாடிகள் செல்வது, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பது, சுடு காட்டில் மயானக் கொள்ளை என்ற பெயரில் எலும்பு கடிப்பது என எல்லாமே பக்தி என்றால் அதில் இப்படி ஆயிரம் லீலாவினோதங்கள் இருக்கத்தானே செய்யும்? நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனால், அதுவே மூட நம்பிக்கையாகும்போது?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 7.3.2010

0 comments: