Search This Blog

1.6.13

கடவுள் நம்பிக்கையற்ற காலம் மலரப் போகிறது!

16.9.2005 நாளிட்ட இந்து ஏட்டில் ஒரு கருத்துக் கணிப்பு வெளி வந்தது. எந்த அளவுக்கு கடவுள், மத நம்பிக்கை மக்களிடம் உள்ளது என்பது தொடர்பான கணிப்பு அது.

நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளர்களாக இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஓரளவு பற்றுக் கொண்டுள்ளேன் என்று 49 விழுக்காட்டினரும் எனக்கு மதப்பற்று இல்லை என 14 விழுக்காட் டினரும் அதிகப் பற்றுக் கொண்டுள்ளேன் என்று 45 விழுக்காட்டினரும் பதில் அளித்தனர்.
வழிபாட்டிற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் செல்லுவேன் என 31 விழுக்காட்டினரும், வாரம் ஒரு முறை செல்லுவேன் என்று 38 விழுக் காட்டினரும், மாதத்திற்கு ஒரு முறை செல்லுவேன் என்று 18 விழுக்காட்டினரும் மாதம் ஒரு முறையாவது செல்லுவேன் என்று 9 விழுக்காட்டினரும், இரு வாரத்துக்கு ஒரு முறை செல்லுவேன் என்று 4 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.

இன்றைய நாளில்  இளைஞர்களுக்குக் கடவுள் நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு சிலருக்கு உள்ளது என 45 விழுக்காட்டினரும், அதிகமானவர் களுக்கு உள்ளது என்று 34 விழுக்காட்டினரும், சிலருக்கே உள்ளது என்று 21 விழுக்காட்டினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஒன்று வெளிப்படை கடவுள், மதப் பக்தி என்பது முன்பு இருந்த நிலையிலிருந்து இறக்கம் காணப்படுகிறது என்பது வெளிப்படை!

கடவுளுக்குச் சக்தி உண்டு; கடவுள் கண்ணைக் குத்தி விடுவார் என்ற பயமெல்லாம் மலையேறிக் காலமாகி விட்டது.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஓர் உண்மையை ஒப்புக் கொண்டார்.

மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயிலுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாகக்  (Fashion) கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்று கூறி விட்டாரே!

இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகி விட்டது கோயிலுக்குச் செல்வதாலேயோ, மதச் சடங்குகளில் கலந்து கொள்வதாலேயே அவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் மத நம்பிக்கையாளர்கள் என்ற புள்ளி விவரத்தில் சேர்த்துக் சொல்லுவதுகூட சரியானதாக இருக்க முடியாது. கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர் என்றும், எங்கும் நிறைந்திருப்பவர் என்றும் ஒரு பக்கத்தில் கூறிக் கொண்டு, அதனை நிறுவனப்படுத்தியது - கோயில் கட்டி, விசேஷங்களைக் கொண்டாடுவது எல்லாம் அவர்கள் கூறும் கடவுள் பற்றிய இலக்கணத்துக்கே முரண்பாடானது தானே!

கோயில் திருவிழாக்கள், தேரோட்டங்கள் எல்லாம் பிரச்சாரம்தானே? 

பிரச்சாரம் செய்துதான் கடவுளை நிலை நிறுத்த முடியும் என்றால், அது எப்படி சர்வசக்தி இலக்கணத்துக்குள் பொருந்தி வரும்?

கோயில்கள் விபச்சார விடுதிகள் என்று காந்தியார் சொல்லும் அளவுக்குத்தானே அதன் நடப்புகள் அமைந்துள்ளன. திருக்கடவூர், திரு நள்ளாறு, இராமேசுவரம் முதலிய கோயில்களுக்குப் பக்தர்களை அழைத்து வர முகவர்களும் உண்டு என்பது எத்தகைய கேலிக் கூத்து!

உண்மை என்னவென்றால் யாரும் கடவுளை நம்பி எந்தப் பிரச்சினையையும் கடவுளிடம் ஒப்படைத்து விடுவதில்லை.

நெப்போலியன் சொன்னதுபோல கடவுளை வேண்டுமானால் நம்பு - அதே நேரத்தில் வெடி மருந்து  ஈரமாகாமல் பார்த்துக் கொள்! என்பதுதான் நடைமுறை உண்மையாகும்.

உடல் நலம் இல்லை என்றால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும்; கற்க வேண்டுமானால் கல்விக் கூடங்களுக்குத் தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் எதை நம்பி மனிதன் கையைக் கட்டிக் கொண்டு நிற்க முடியும்?

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறுவதுபோல கடவுள் நம்பிக்கை - பக்தி என்பது மனிதனின் மூளையில் மாட்டப்பட்ட விலங்காகும்!

பேராசையும்; பயமும் சேர்ந்து பெற்றெடுத்த கற்பனையிலிருந்து மனிதன் விடுபட்டே தீருவான்  -அதை நோக்கி தான் காலமும் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
                    --------------------------"விடுதலை” தலையங்கம் 31-5-2013

29 comments:

தமிழ் ஓவியா said...


முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங் கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். - (விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...


பெரியாருக்காக தனி வாழ்க்கையைத் துறந்தவர் பொதுத் தொண்டில் சிறந்தவர் புலவர் இமயவரம்பன்


கதிராமங்கலம், மே 31- தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளராக விளங்கிய புலவர் கோ. இமயவரம்பன் அவர்கள், தந்தை பெரியாருக்காகத் தன் தனி வாழ்க்கையைத் துறந்தவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

29.5.2013 மாலை புலவர் இமயவரம்பன் பிறந்த கதிராமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் கூறிய தாவது:

தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளராக அரும் பணி ஆற்றி மறைந்த புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் தொண்டினைப் பாராட்டும் வகையில் அவர் பிறந்த இந்தவூரில் இந்த விழா வெகு சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

சுயமரியாதைக் கொள்கை வீரர் கோ. சி. மணி

புலவர் அவர்களுடன் படித்த நண்பரும், சுயமரியாதை இயக்கக் கொள்கையில் அழுத்தமான பிடிப்புக் கொண்டவருமான மேனாள் அமைச்சர் மானமிகு கோ.சி.மணி அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமையேற்பது முற்றிலும் பொருத்தமாகும்.

புலவர் மறைவு செய்தி அறிந்ததும், நண்பர் களுடன் திருச்சிக்கே வருகை தந்து இறுதி மரியாதை செலுத்தியவர் மானமிகு கோ.சி. மணி அவர்கள் ஆவார்கள்.

நினைவுக் கட்டடங்களை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கலிய பெருமாள் அவர்களும், பெரியார் கல்வி நிறுவ னங்களைச் சேர்ந்தவர்களும் வெகு சிறப்புடன் கட்டி முடித்துள்ளனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழா அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். இந்தப் பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள படிப்பகம், நூலகம் திறக்கப்பட்டுள்ளது பட்டு இமயவரம்பன் ஆன கதை!

புலவர் அவர்களின் இயற்பெயர் பட்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர் படிக்க வந்தபோது பட்டு என்றால் பெண் பெயர் என்று சொல்லிக் கேலி செய்யும் ஒரு நிலை வந்தபோது இமயவரம்பன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

பெரியாரோடு தங்கி விட்டார்

திருச்சியில் தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் என் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். என் திருமணத்திற்கு வந்த என் நண்பர் இமயவரம்பன் அவர்கள் திரும்பி சொந்த ஊருக்குச் செல்லாமல் தந்தை பெரியார் அவர்களுக்குத் தனிச் செயலாளராக இருந்து அரும் பணியாற்றினார். தனி வாழ்க்கையைத் துறந்தார் எல்லாம் தந்தை பெரியார்தான். கழகம்தான் என்று முற்றிலும் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். வீட்டிலிருந்து பணம் பெற்று சொந்தமாக செலவு செய்து பொது வாழ்க்கையில் தூய மனிதராக, தொண்டறச் செம்மலாக வாழ்ந்து காட்டினார். அவர் வீட்டில் உள்ளவர்கள் அரசு பணிக்கு அவர் செல்ல வேண்டும் என்று விரும் பினாலும், அதற்கு உடன் படாமல் முழு நேர இயக்கப் பணிக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டு உழைத்தார்.

தமிழ் ஓவியா said...

உரிமை எடுத்துக் கொள்வேன்!

நான் உரிமை எடுத்துக் கொண்டு அவரை சில நேரங்களில் கடிந்து கொள் வதும் உண்டு. என் நண்பராக இருந் தாலும், பெரியார், மணியம்மையார் மறைவிற்குப் பிறகு மரியாதை கலந்த நட்புணர்வோடு நடந்து கொண்டார்.

அவருக்கு ஏதாவது குறை இருக்கு மானால் அதனை எனது இணையர் மோகனா அவர்களிடம்தான் சகோதர னாக இருந்து கூறுவார்.

குழந்தை மனம் படைத்தவர். விளம் பரங்களுக்கு ஆசைப்படாதவர்.

கழகத் தோழர்கள் அவரைப்பற்றி பல நேரங்களில் குறை கூறுவதுண்டு. அதற் குக் காரணம் - தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளர் என்ற முறையில் அய்யாவிடம் தேதி கேட்க வரும்போது அந்தச் சிக்கல் ஏற்பட்டு விடும்.

அய்யாவோடு சண்டை

முதல் நாள் ஓர் ஊரில் அய்யா இருப்பார் - மறுநாள் வெகு தூரத்தில் உள்ள ஊருக்கு வர வேண்டும் - திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். புலவரோ ஏற்றுக் கொள்ள மாட்டார். அவ்வளவு தூரம் அய்யாவால் பயணம் செய்ய முடியாது - கூடாது என்பது புலவரின் எண்ணம். தாட்சண்யத்துக்குக் கட்டுப் பட்டு தந்தை பெரியார் ஒப்புக் கொண்டு விடுவார். அந்த நேரத்தில் தந்தை பெரியார் அவர்களுடனும் உரிமையை எடுத்துக் கொண்டு சண்டை போடுவார்.

பொதுவாக தலைவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு இது மாதிரியான கெட்ட பெயர் வருவது தவிர்க்க முடியாத தாகும்.

நான் முடியாது என்கிறேன் - நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களே - என்னைப்பற்றி

தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்று தந்தை பெரியாரிடம் கூறுவார்.

அப்பொழுது தந்தை பெரியார் கூறுவார். நீ கெட்ட பெயர் வாங்குவது முக்கியமல்ல - என்னைப்பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை நினைத் துப் பார் என்று அறிவுரை கூறுவார் அய்யா.

அம்மா இடத்தில் புலவர்

தந்தை பெரியார் உணவில் கட்டுப் பாடு கடைபிடிப்பவர் அல்ல - அய்யா வாயில் போட்டதைக்கூட அம்மா கையை விட்டு, அய்யா வாயிலிருந்து எடுத்து விடுவார். அம்மா இல்லாத இடத்தில் புலவரும் அந்தக் கடமையைச் செய்வார்.

தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குரிய மாமனிதராக புலவர் வாழ்ந்தார். அறக் கட்டளையின் டிரஸ்டியாக அவரை நியமித்தார் தந்தை பெரியார்.

பெரியார் கல்வி நிறுவனங்களில் தாளாளராக இருந்தார். நாகம்மையார் இல்லத்துப் பிள்ளைகளின் பாசமிகுந்த அண்ணனாகத் திகழ்ந்தார்.

புலவரைப்பற்றி எவ்வளவோ சொல்ல லாம். அடுத்து மயிலாடுதுறையில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள நான் செல்ல வேண்டிய நிலை.

இன்னொருமுறை தனியே கூட்டம் போட்டுப் பேசலாம் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

நூல் வெளியீடு

புலவர் கோ. இமயவரம்பன் அவர் களால் உண்மை இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வரலாற் றில் பெண் கொடுமைகள் எனும் நூல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டு அந்நூல் இவ்விழாவில் வெளியிடப்பட்டது.

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் இராமலிங்கம் நூலினை வெளியிட ஒன்றிய தி.மு.க. செயலாளர் இரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.


புலவர் கோ.இமயவரம்பன்பற்றி
கழகத் தலைவர் வழங்கிய குறிப்பு

நமது இனமானப் புலவர், தொண்டறத்தின் தூய உருவம் மானமிகு புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள், கதிராமங்கலம் நடுவெளியைச் சேர்ந்தவர் (இவரது முந்தைய பெயர் பட்டு என்பது).

10.1.1933 இல் பிறந்தவர். (எனக்கு 11 மாதங்கள் மூத்தவர்).

அவர் மறைந்தது 9.8.1994. 1956 இல் எனது இறுதியாண்டு - அவர் புலவர் வகுப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்ததிலிருந்து நட்பு - திராவிட மாணவர் கழகத்தில் ஈடுபாடு, ஏ.பி.ஜே. போன்றவர்கள் நட்பு -
1958 இல் எனது திருமணத்தின்போது அய்யா - அம்மாவுக்கு - அவரை, எனது நெருங்கிய தோழர் என்று நான் அறிமுகம் செய்து வைத்தேன்.

அப்போது திருச்சிக்கு வந்தவர் - பிறகு அய்யாவுடனேயே தங்கி விட்டார்.

திருமணம் செய்துகொள்ள மறுத்து, அய்யா - அம்மாவுடனேயே திருச்சியில் தொண்டறத்தில் ஈடுபட்டார்.

அய்யா மறையும்வரை 15 ஆண்டுகள் சம்பளம், மதிப்பூதியம் ஏதும் பெறாமலேயே, தனது வருவாயை வீட்டிலிருந்து பெற்று மகிழ்ச்சியுடன் இருந்தார்.

எனது வாழ்விணையர் திருமதி.மோகனாவுக்கு உடன் பிறந்த அண்ணனைவிட அதிக பற்றும், உறவும் கொண்டவரானார். அவர் மனம்விட்டுப் பேசுவது அவரிடம்தான்!

தமிழ் ஓவியா said...

அய்யாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். திராவிடர் கழக மத்தியக் குழு (பொதுக்குழு) உறுப்பினராக அய்யா அவரை நியமித்தார்!

1973 அய்யா மறையும்வரை அவரிடம் தொண்டு செய்தவர்; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினராக 1972 முதலே அய்யா அவரை நியமித்தார். அவருடன் என்னையும் நியமித்தார்கள். எனக்கே பிறகு ஓராண்டு கழித்துதான் தெரியும்!

59 ஆண்டு - 60 ஆவது வயதில் மறைந்தார் என்பது மிகுந்த வேதனைக்கும், துன்பத்திற்கும் உரியது.

அதுபோலவே, அம்மா அவர்களும்கூட அய்யாவுக்கு 1944 ஆண்டுமுதல் செவிலியராக, செயலாளராக இருந்து, 95 ஆண்டு வாழக் காரணமானவர்.
அதன் பிறகு அவர் கண்ட இயக்கத்திற்குத் தலைமை தாங்கி 5 ஆண்டுகள் செம்மைப்படுத்தி, தனது சொத்துக்களை அய்யாவைப்போலவே அம்மாவும் மக்களுக்குப் பயன்படும்படி ஒரு அறக்கட்டளையை அமைத்து தொண்டறத்தின் உச்சத்திற்குச் சென்றவர்.

அய்யா தொடங்கிய உண்மை இதழுக்கு 1970 (ஜனவரி 14 முதல் தமிழ்ப் புத்தாண்டுமுதல்) ஆசிரியர் - அவர் மறையும்வரை 1974 வரை.

டிரஸ்ட்டுக்கும் கூட தொடர்ந்த நிர்வாகக் குழுவில்,
பெரியார் கல்வி நிறுவனங்களான,

1. பெரியார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, திருச்சி
2. நாகம்மையார் ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, திருச்சி
3. பெரியார் - மணியம்மை மேல்நிலைப்பள்ளி, திருச்சி
4. பெரியார் தொடக்கப்பள்ளி தாளாளர், திருச்சி,
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் தாளாளர் - காப்பாளர் - பல ஆண்டுகளாக!
அவர் அய்யாவுக்கு 15 ஆண்டுகள் செயலாளர்

அம்மாவுக்குத் தொடர்ந்து 5 ஆண்டுகள்

அதன் பிறகு எனக்கும் செயலாளர் 16 ஆண்டுகள் - மறையும் வரை!

பெரியார் மாளிகையில் ஒரு சிறு அறைதான் அவர்தம் உறைவிடம்.

கடைசி நாள்களில் தங்காத்தாள் உபசரிப்பும், அன்பும் அவருக்கு மிகவும் உதவின.

சிறை வாசங்கள்

1960 இல் தேசப் பட எரிப்பு -
அம்மாவுடன் 1957 இல் சிறைச்சாலை சுற்றுப்பயணம் - செயலாளர்
நெருக்கடி காலத்தில் அம்மாவுக்கு உறுதுணை
நீடாமங்கலம் அருகே டிரஸ்ட்டுக்குச் சொந்தமான காளாச்சேரி பண்ணையில் நிலத்தைக் காப்பாற்றிட, பல நாள் அங்கேயே குடியிருந்து காப்பாற்றியவர்.

தமிழ் ஓவியா said...

அய்யா உடல் நலத்தைக் காப்பாற்ற கழகத் தோழர்களின் எரிச்சலுக்கும், விமர்சனத்திற்கும்கூட ஆளானவர்!

நல்ல எழுத்தாளர் - முன்பு பேச்சாளர் - பிறகு விட்டுவிட்டார்! நிறைய படிப்பார்!
இவரது நினைவாக,

(1) திருச்சி - பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் ஒரு கட்டடம் புலவர் கோ.இமயவரம்பன் கட்டுமானக் கூடம்

(2) தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மகளிர் விடுதிகள், புலவர் கோ.இமயவரம்பன் தோட்டம்

(3) கதிராமங்கலம் - நினைவுக் கட்டடம்
போராட்டங்களில் பங்கு பெற்று சிறை:
1960 - தேசப்பட எரிப்புப் போராட்டம் - பிறகு பல போராட்டங்கள்



நான் சிரித்ததும் - அவர் சிரித்ததும்!

தந்தை பெரியார் பொதுக் கூட்டத்தில் பேசும் பொழுது புலவர்களைப் பற்றிக் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். அப்பொழுது புலவராகிய இமயவரம்பனைப் பார்த்து நான் சிரிப்பேன்.

அடுத்து வக்கீல்களைப் போல பித்தலாட்டக் காரர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்று பேசுவார். அப்பொழுது புலவர் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பார் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம் உண்டு.

- கதிராமங்கலம் விழாவில் தமிழர் தலைவர் 29.5.2013

தமிழ் ஓவியா said...


இராமாயணம்

இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆகவேண்டும். இராமாயணப் பிரசாரம் ஒழுக்கக் கேட்டுப் (கிரிமினல் அண்டு இம்மாரல்) பிரசாரமாகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும் ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய் இரண்டணா ரேட்டுக்குக் குச்சுக்காரியாக இருந்து, தெருவில் போகிற சின்ன பையன்களையெல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன் இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து, ஏண்டா எங்கம்மா இழுத்தால் திமிரிக்கிட்டு ஓடப் பார்க்கிறாய் என்று பையனை அடித்தால், அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, அபிமானம், தாய்ப் பக்தி கொண்டவனாக ஆகிவிடுவானா?

உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப்பற்றி என்ன கருதுவார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது. ------------ தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!

பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள் பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாத வரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை. அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ? - மறைமலை அடிகள்

--------------சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்.

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும். பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும். அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தக சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வாழ வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டுதற்கு, அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு, நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
------------------அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா? - அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன் னகை விளங்குகிறது. நான் எப்பொ ழுதும் சிரித்துக்கொண்டே இருப்ப தால் என்னுடைய மத நம்பிக்கை, என் னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.

(தி இண்டு, 30.11.2002)

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தைப் பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவி உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.

தமிழ் ஓவியா said...


உலக மொழிகளில் தமிழ் முதன்மையாக வரவேண்டும் என்று விரும்பியவர் பெரியார்!


குற்றாலம் பயிற்சி முகாமில் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு

கல்வி வள்ளல் வீகேயென் கண்ணப்பன் அவர்கள், தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார் (குற்றாலம், 31.5.2013).

குற்றாலம், மே 31- உலக மொழிகளில் தமிழ் முதன் மையாக வரவேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார் என்று கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு நேற்று (30.5.2013) நடைபெற்ற குற்றாலப் பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கழகத்தின் துணைத்தலைவர், செயலவைத் தலைவர், பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் ஆகி யோர் மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் வகுப்பு எடுத்து சிறப்பித்தனர்.

கடந்த 29-05-2013 அன்று குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் வீகேயென் மாளி கையில் தொடங்கி நடத்தப் பெற்று வருகின்றன. இரண்டாம் நாளான நேற்று (30-05-2013) காலையில் யோகா வகுப்புகள் நடைபெற்றன. இதை யோகி ராஜா ஒருங்கிணைத்தார். அதைத் தொடர்ந்து காலை உணவுக்குப் பின், சரியாக ஒன்பது மணிக்கு வகுப்புகள் தொடங்கின. இந்துத்துவா, பெரியார் பார்வையில் இலக்கியம், பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு, பெரியார் போற்றிய பெண்ணியம், பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம், மதங்களின் கதை, திராவிடர் கழக வரலாறு ஆகிய தலைப்பு களில் முறையே சு.அறிவுக்கரசு, காளிமுத்து, கவிஞர் கலிபூங்குன்றன், பிறைநுதல் செல்வி, துரைசந்திர சேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

அறிவு வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்

முதல் வகுப்பில் செயலவைத் தலைவர் இந்துத் துவா என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரை யாடினார். அவர் தமதுரையில், இந்து என்றால் யார்? என்ற கேள்வியை எழுப்பி, யார் யூதர் இல்லையோ, யார் சீக்கியர் இல்லையோ, யார் இசுலாமியர் இல்லையோ, யார் கிறிஸ்து இல்லையோ, யார் பார்சி இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று அவாள் சொன்னதைச் சொன்னவுடன் மாணவர்கள் சிரித்து விட்டனர். இப்படித் தொடங்கிய செயல வைத் தலைவர் தொடர்ந்து பொது உடைமை இயக்கமும், ஆர்.எஸ்.எஸ்சும் ஒரே காலகட்டத்தில் தொடங்கப்பட்டதென்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் செயல்பாடுகளை விவரித்து விட்டு, இந்தியாவில் இருக்கும் எட்டுப் பஞ்சாங்கங்களை ஒரு பிடி பிடித்தார். தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் 6000 ஜாதிகளையும், 6 மதங்களைப் பற்றியும் சாடினார்.

தமிழ்த்தாய் சிலை என்று சொல்வது திசை திருப்பும் செயல்

அதைத் தொடர்ந்து, பெரியார் பார்வையில் இலக்கியம் என்ற தலைப் பில் பேராசிரியர் காளி முத்து வகுப்பெடுத்தார். அதில், இலக்கியம் என் பது சமூக வளர்ச்சிக்குப் பயன்பட வேண்டும்; அறிவு வளர்ச்சிக்கு பயன் பட வேண்டும் என்ற பெரியாரின் பார்வை யைச் சொல்லி, பெரியார் எப்படி திருக்குறளுக்கு 2000 ஆண்டுகளில் இல் லாத வகையில் மாநாடு எடுத்த சிறப்பை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து எந்தத் தமிழ் புலவர் களும் செய்யாத எழுத் துச் சீர்திருத்தத்தை பெரியார் செய்ததை மாணவர்களின் முன் எடுத்து வைத்தார்.

தமிழ் ஓவியா said...

மேலும் அவர், தமிழ் உலக மொழிகளில் முதன் மையாக வரவேண்டும் என்று விரும்பியதைச் சொல்லி, இவரைப் போய் தமிழுக்கு எதிரி என்று சொல்கிறார்களே என்று குறைபட்டுக் கொண்டார். அதே நேரத்தில் தமிழுக்கு புனிதம் கொடுப்பதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தவறாமல் சொல்லிவிட்டு, இன்று தமிழ்த்தாய் சிலையை வைப்பதாகச் சொல்வது திசை திருப்பும் செயல் என்று குறிப்பிட்டார்.

தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்

மாணவர்கள் வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு சரியாக ஈடுகொடுத்தனர். பெரியாரின் இலக்கியப் பார்வை பற்றித் தெரிந்துகொண்டவுடன், அடுத்தது துணைத்தலைவரின் வகுப்பு. தலைப்பு பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு. கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், தலைப்பை மாணவர்களிடமிருந்தே தொடங்கினார். ஒரு மாணவியின் பெயரைக் கேட்டார். அது ஒரு சமஸ் கிருதப் பெயர். அதிலிருந்து வரிசையாக தமிழர் களின் பெயர்கள் சுட்டிக் காட்டும் பண்பாட்டு படை யெடுப்பை நகைச்சுவையோடு ஒரு சாடு சாடினார்.

தமிழ் ஓவியா said...


பிறகு, ஊர்ப் பெயர் கள், தமிழ்நாட்டின் முக் கிய தலைவர்களின் பெயர்கள் எப்படி நல்ல தமிழ்ப் பெயர்களாக மாறின, அதற்குப் பெரி யாரும் அவருடைய பிரச் சாரமும் எப்படி காரண மாயின என்பதையும் குறிப்பிட்டு விட்டு, அந்த வரிசையில் சாரங்கபாணியாக இருந்தவர் வீரமணி ஆனதையும் சேர்த்துச் சொல்லி பண்பாட்டுப் படையெடுப்பு எப்படி முறியடிக்கப்பட்டது என்பதை உணர்த்தினார்.

அதைத் தொடர்ந்து பண்டிகைகளின் பெயரால் ஏற்பட்ட படையெடுப்பைப் பற்றியும் விளக்கினார். பிறகு, கோயில்களில் தமிழுக்கு ஏற்பட்ட அவலத்தை சுட்டிக்காட்ட, கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பை பயன்படுத்திக் கொண்டார். பிறகு தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளானதையும், மீண்டும் ஆரியப் பண்பாடு கோலோச்சி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டானதையும் எடுத்துக்காட்டி,ஆயிரம் ஆண்டுகளல்ல நமது கண் முன்னே நடந்ததை விவரித்தார். இன்னும் ஏராளமான சான்றுகளை எடுத்துக்காட்டி தமதுரையை முடித்துக் கொண்டார்.
கவுரவக் கொலைகளுக்கு
ஒரே தீர்வு ஜாதி மறுப்புத் திருமணங்களே! தந்தைபெரியார் அளவுக்கு உலக அளவில் பெண்ணுரிமை பேணியவர் வேறொருவர் கிடையாது என்று கழகப் பொதுச் செயலாளர் பிறைநுதல் செல்வி கூறினார். அவர் பெரியார் பேணிய பெண்ணுரிமை என்ற தலைப்பில் பேசும்போது, புராணங்களாகட்டும் இதிகாசங்களாகட்டும் அனைத்தும் பெண்களை இழிவாகத்தான் சித்தரித்திருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். பெண்களுக்கு வீட்டிலும்,வெளியிலும் ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு சமூகவியலாளர்கள் இப்போது தீர்வு சொல்கிறார்களோ அதை தந்தை பெரியார் 80 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் என்று வியந்தார். பெண்கள் கோலம் போடக் கற்றுக்கொள்வதைவிட குஸ்தி, கைக்குத்து கற்கவேண் டும். பெண்கள் காவல் துறையில் சேரவேண்டும், தொடக்கப் பள்ளிகளில் பெண்களையே நியமிக்க வேண்டும், ஆண்களைப் போலவே சொத்தில் பங்கு- இப்படி வரிசையாக அடுக்கினார்.

கணினிப் பயிற்சி

அதைத்தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, 36 இருபால் மாணவர்களுக்கு கணினி பயிற்சி கொடுக்கப் பட்டது. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சார்பாக அனைவருக்கும் அடிப்படை கணினிப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் பெரியார் நகர்வு கணினி மய்யத்தின் மூலமாக இப்பயிற்சி கொடுக்கப்பட்டது. வலைக்காட்சி பிரபாகரன், பெரியார் வளாக கணினி ஆசிரியர் ஜெகன் ஆகியோர் முகநூலில் தமிழில் எழுதி பதிவிடுவது, மின்னஞ்சல் பயன்பாடு, எம்.எஸ்.வேர்டு, பவர்பாயிண்டு ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட்டன. மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பெரியாருக்குப் பின் திரா விடர் கழகம், மதங்களின் கதை, திராவிடர் கழகத்தின் வரலாறு ஆகிய தலைப்புகளில் முறையே துணைத்தலைவர், செயலவைத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் பாடம் நடத்தினர்.

பெரியார் திரைப்படம்

இரவு உணவுக்குப் பின் பெரியார் சுயமரியாதை ஊடகத் துறையின் சார்பில் பெரியார் திரைப்படம் திரையிடப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தனர்.

திரையிடலை உடுமலை வடிவேல், பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கழகத்தின் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, மருத்துவர் கவுதமன், மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப்பதி, சி.வெற்றிச்செல்வி, செயா.திரா விடமணி மற்றும் பார்வையாளர்கள் பலரும் கலந்து கொண் டனர்.

தமிழ் ஓவியா said...


சரியான கேள்வி



டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்களின் மதமும் மூடநம்பிக்கையும் நூலில், 55ஆம் பக்கத்தில் இருப்பது:-

ஆஞ்செலோ என்ற சிறந்த ஓவிய நிபுணன் மாதா கோயிலை ஓவியங் களால் அழகுப்படுத்தும்போது, செருப் புப் போட்டுக்கொண்ட தேவதைகளை வரைந்தானாம்.
அந்தப்படத்தைப் பார்த்த பாதிரி யார் ஒருவர், செருப்புப் போட்டுக் கொண்டிருந்த தேவதைகளைப் பார்த்தவர் யார்? என்று ஓவியனைப் பார்த்துக் கேட்டாராம்.
அதற்கு ஆஞ்செலோ தேவதை களை வெறுங்காலோடு பார்த்தவர்கள் யார்? என்று மறுமொழியாகக் கேட்டானாம்.

- தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி (கி.அ)

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் அலோபதி மருத்துவம்


போர்த்துக்கீசியர்கள் இந்தியாவில் கோவாவிற்கு வந்தடைந்த பின்னரே அங்கு முதன் முதலில் ராயல் எனும் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின் இதன் தொடர்பாக மதச்சார்பற்ற முதல் நூலான இந்தியாவில் தாவரமும் மருந்தும் 1563இல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்ப முடியாத நிலையில் டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் கடற்கரையோர நகரங்களில் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தியுள்ளனர்.

அந்நிலையில் தங்களுக்கும் தங்கள் சிப்பாய்களுக்கும் மருத்துவம் புரிய கிழக் கிந்திய வணிகக்குழுமம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு மருத்துவமனையினை 1664இல் நிறுவியது. இதன் பின்னர் இம்மருத்துவமனை நான்கு இடங்களில் மாற்றப்பட்டு தற்பொழுது சென்னை பொது மருத்துவமனை உள்ள இடத்தில் 1772இல் இரண்டு பகுதிகளாகத் தொடங்கப்பட்டது. 1842இல் இந்தியர்களுக்கும் இங்கு மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனருகிலேயே 1835இல் சென்னை மருத்துவப் பள்ளியும் தொடங்கப்பட்டு பிறகு 1850இல் கல்லூரியாக மலர்ந்தது.

இக்கல்லூரி மாணவர்களுக்கு எல்.எம்.எஸ். என்ற பட்டத்தை வழங்கி நாடெங்கும் அலோபதி மருத்துவம் வளர உதவியது. இக்கல்லூரியே ஆகும்.

இது ஆசியாவின் முதல் மருத்துவக் கல்லூரியாகும்.

பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் பதிப்பாசிரியர் முனைவர் இராதா செல்லப்பன்

- தகவல்: க. பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


இவர் தான் குடியரசு தலைவர்


பட்ஜெட் நிதி ஒதுக்கீடு - நிதி கமிஷனை நியமிக்கும் ஜனாதிபதிக்குத்தான் பட்ஜெட்டில் முதல் செலவு. ஜனாதிபதி மாளிகை தொடர்பான செலவுகளுக்கு சுமார் ரூ. 2,25 கோடியை ஒதுக்குவார்கள். சம்பளம் - மாதம் துல்லியமாக ரூ. 1,47,728 இதுபோக, கைச்செலவுக்கு என ஆண்டுக்கு ரூ. 15 லட்சம். இது பொழுதுபோக்கு, உடை, மற்றும் இன்னபிற செலவினங்களுக்காக.

வீடு அநேகமாக உலகிலேயே மிகப்பெரிய வீட்டில் வசிக்கும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியாகத்தான் இருக்கும். மொத்தம் 2 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்திருக்கும் ராஷ்டிரபதி பவனில் சுமார் 340 அறைகள் இருக்கின்றன. பிரணாப் மத்திய அமைச்சராக ராஷ்டிரபதி பவனுக்கு வந்தபோது அங்கு உள்ள குதிரையின் பளபள பராமரிப்பைக் கண்டு அடுத்த ஜென்மத்துல ஜனாதிபதி மாளிகை குதிரையா பிறக்கணும் என்று ஆசை தெரிவித்தவர். ஜனாதிபதி குடும்பத்தினருக்கு எனப் பணிபுரிய 200 பணியாளர்கள் உண்டு.

ஜனாதிபதி பயணிக்க ரூ. 12 கோடி மதிப்பு உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் காரை வழங்குகிறது அரசாங்கம். குண்டு துளைக்காத, வெடி விபத்திலும் பாதிக்காத பாதுகாப்பான கார் அது. பயணச்செலவு - இது ஜனாதிபதியின் பயணங்களைப் பொறுத்தது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கடந்த அய்ந்து வருடங்களில் ரூ. 205 கோடிக்குப் பயணச்செலவு காண்பித்து இருக்கிறார்.

விமானங்கள் - எந்த நேரமும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்குத் தேவைப்படும் என்று ஏழு விமானங்கள் தயார் நிலையிலேயே இருக்கும். அதில் நான்கு எம்ப்ரேர் விமானங்கள், மூன்று போயிங் விமானங்கள். இதில் எம்ப்ரேர் வகை விமானம் ஒன்றின் மதிப்பு ரூ. 140 கோடி. போயிங் விமானம் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்து ரூ. 934 கோடி மதிப்பு உடையது.

_- ஆனந்தவிகடன் - 1.8.2012

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்களால் சாகடிக்கப்பட்ட தெய்வங்கள்

தெய்வங்களைப் பற்றி ஆரியம் நமக்கு கற்பித்து வைத்திருக்கும் பாடங்களை நினைத்துப் பாருங்கள்! அவை வெறும் பயமுறுத்தல்கள். எல்லாம் சர்வ வல்லமை படைத்தவை அவை ஆக்கவும் அழிக்கவுமான பலம் பொருந்தியவை தாம் மட்டும் அழியாமல் என்றென்றும் நிலைத்து நிற்பவை தேங்களைப் போல அன்றும் இன்றும் அழியாதவை.

சரி, வேதப்பாடல்களில் பெரும்பாலும் வழிபட பெறும் இந்திரன், வருணன், அக்னி, பர்ஜள்யன், உஷா, நிஷா ஆகிய தெய்வங்களைப் பாருங்கள் இன்று இந்த தெய்வங்களை யாரேனும் வழிபடுகிறார்களா இவற்றுக்கான கோவில்கள் எங்கேனும் உண்டா இல்லையே அப்படியானால் அவையெல்லாம் செத்துப் போயிவிட்டன என்பதுதானே உண்மை என்றும் அழியாத ஒரு பொருள் இருந்ததுமில்லை இருப்பதுமில்லை. மனிதர்கள் தங்கள் தேவைக்கும் நம்பிக்கைக்கும் பார்ப்பனர்களின் பிழைப்பிற்கும் ஏற்ப உண்டாக்கியவை அவை. மனிதர்களைப் போலவே செத்துப்போய்விட்டன என்பது தான் உண்மை ஆனால் இன்றும் மழை இல்லாத காலங்களில் வருண ஜெபம் நடத்தி பார்ப்பனர்கள் பிழைப்பு தேடிக் கொள்கின்றனர்.

அது போலவே வெள்ளைச்சாமி என்ற பெயரைத் தமிழ் நாட்டில் மக்கட் பெயராக பார்ப்பனர்கள் தவிர்த்த மற்ற எல்லாச் சாதியினரும் இடுகின்றனர். மக்கள் வணங்கிக் கொண்டிருக்கிற தெய்வங்கள் எல்லாம் கருப்பு, கருநீலம், சிவப்பு ஆகிய நிறங்களில் தான் இருக்கின்றன ஆனால் வெள்ளை நிறத்தில் ஒரு தெய்வத்தை நாம் எங்கும் பார்த்ததில்லை. பார்ப்பனர்கள் கற்பித்த தெய்வங்களில் ஒன்று தான் இந்த வெள்ளைச்சாமி (ஆடீகூழஹடுடீழுலு) புராண மரபுகளின் படி இந்தத் தெய்வம் கிருஷ்ணனுக்கு அண்ணாவான கிருஷ்ணனை மட்டும் இன்று வரை வழிபடும் பார்ப்பனர்கள் வெள்ளைச்சாமியை மட்டும் ஏன் செத்துப் போகவிட்டு விட்டார்கள்?

இந்த தெய்வத்திற்கு தமிழகத்தில் எங்குமே கோவில்கள் இல்லை புராண மரபுகளின் படி இவன் ஒரு குடிகாரன். கையில் எப்போதும் மதுக்குவளையை வைத்திருப்பான். வெள்ளை நிறமுடையவன் என்பதால் இவனுக்கு வாலி என்ற பெயருமுண்டு வால் என்ற சொல்லுக்கு வெள்ளை என்று பொருள் எடுத்துக்காட்டாக வால்மிளகைப் பாருங்கள். இராமாயணத்தில் வரும் வாலி வெள்ளை நிறமுடைய குரங்கு. வெள்ளைச்சாமியுடைய கொடி பனைக்கொடி பனை திராவிட நாட்டின் பூர்வ தாவரமாகும். இவனுடைய வாகனம் உலக்கை வட மொழியில் முசலிவாகனம் என்றே இவனுக்குப் பெயர் முசலம் என்ற சொல்லுக்கு உலக்கை என்று பொருள் இவனுடைய ஆயுதம் கலப்பை உழவர்களை அடையாளங் காட்டுவதாகவும், மது குடிப்பதுமான அடையாளங்களாலும் பிற்காலப் பார்ப்பனர்களுடைய ஆசாரங்களுக்கு ஒத்துவரவில்லை என்பதால் இந்த தெய்வங்களை செத்துப் போகவிட்டுவிட்டார்கள். ஆனால் எளிய மக்கள் மட்டும் பலராமன், வெள்ளைச்சாமி, முத்துலக்கையன் ஆகிய பெயர்களோடு இந்த தெய்வத்தை நினைவில் வைத்திருக்கிறார்கள். இப்படி செத்துப்போன தெய்வங்களின் பட்டிலை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

- தொ.பரமசிவன்

தமிழ் ஓவியா said...


உறவு முறையில் திருமணம் வேண்டாம்!

குழந்தைகளின் பிறவி காது கேளாமை பிரச்சினைக்கு உறவில் திருமணம் செய்வதே முக்கியக் காரணம் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் நிர்வாக இயக்கு நரும், தலைமை காது-மூக்கு-தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணருமான மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 50 ஆயிரம் குழந்தைகளின் செவித் திறனை சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. ஆய்வு முடிவுகள் தொடர்பாக டாக்டர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

நாட்டிலேயே மிக அதிகமான குழந்தைகளிடம் (50 ஆயிரம் குழந்தைகள்) செவித் திறன் பரிசோதனை செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும். தமிழகத்தில் பிறக்கும் 1,000 குழந்தைகளில், 6 குழந்தைகளுக்கு அதாவது 0.6 சதவீத குழந்தை களுக்கு பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. தேசிய சராசரியை (0.2 சதவீதம்) காட்டிலும் இது மூன்று மடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் ஒப்பிடும்போது இது ஆறு மடங்கு அதிகமாகும்.

66 சதவீத குழந்தைகளுக்கு: ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்களில் மிக முக்கியமானது, காது கேளாமை பாதிப்புள்ள குழந்தைகளில் 66 சதவீத குழந்தைகளின் பாதிப்புக்கு உறவில் செய்யப்படும் திருமணமே காரணம் என்பதுதான். பேறு கால தொற்று நோய், எடைக் குறைவான குழந்தை, குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக குழந்தைக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் உறவில் திருமணமே முக்கியக் காரணியாக உள்ளது.

காக்ளியர் கருவி: பிறவிக் காது கேளாமையால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனை காக்ளியர் கருவியை வெற்றி கரமாகப் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளது.
செவித்திறன் குறைபாடு உடைய குழந்தை களுக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள காக்ளியர் கருவியை இலவசமாக பொருத்த தமிழக அரசு உதவி செய்கிறது.
எனினும் உறவில் திருமணத்தைத் தவிர்த்தல் உள்ளிட்ட செவித்திறன் குறைபாட்டைத் தடுப்ப தற்கான நடவடிக்கைகளில் அரசும் தன்னார்வ அமைப்புகளும் ஈடுபடுவது அவசியம் என்றார் டாக்டர் மோகன் காமேஸ்வரன்.
பிரபல காது, மூக்கு, தொண்டை (நுசூகூ) மருத்துவர் அறிவியல் பூர்வமாகச் சொன்னதற்குப் பிறகாவது பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இன்னும் ஜாதிக்குள் திருமணம் (ஜாதியைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ள பெரிய மனிதர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டும்!) செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மருத்துவர் சொன்னதைக் கவனிக்க வேண்டும்.

ஜாதகம் பொருத்தம் பார்க்காதீர் - குருதிப் பொருத்தம் பாரீர் என்று திருமண விழாக்களில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறி வந்துள்ளதன் நியாயத்தை உண்மையான டாக்டர்கள் கூறும்போது பொருத்திப் பார்க்கட்டும்.

ஒட்டு மாம்பழம் தான் இனிக்கும் என்பதுபோல ஜாதி கலப்பு - மறுப்புத் திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் தாம் நோயற்றும், அறிவு சிலிர்த்துக் காணப்படுவார்கள் என்பது அறிவியல் கூறும் உண்மையாகும்? திராவிடர் கழகம் ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபடுவது மனித சமத்துவத்துக்காக மட்டுமல்ல; விஞ்ஞான பூர்வமான உண்மையை உட்கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பாதையில் மிடுக்குடன், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அடிப்படையிலும்தான் என்பதை உணர்ந்து கொள்வீர்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு! 1-6-2013

தமிழ் ஓவியா said...


வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்


ஸ்ரீமான் ளு.சத்தியமூர்த்தி அய்யர்
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சென்னை கோகலே மண்டபத்தில் ஸ்ரீ எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பேசியதில் கடைசியாக பிராமணர் - பிராமணரல்லா தாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். உத்தியோக விஷயத்தில் பிராமணரல்லா தாருக்கு நியாயமாகவே குறையிருக்கிறது. அக் குறையில்லாதபடி பிராமணர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று பேசியிருக்கிறார். இது மிகவும் சரியான வார்த்தை; நாமும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதற்கு இந்தக் குறைகளைத்தான் சொல்லுகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்தால்தான் இக்குறைகள் நீங்கும்; அல்லது சுவாமி சிரத்தானந்தர் சொன்னபடிச் செய்தாலாவது கொஞ்சம் நீங்கலாம். இரண்டு மில்லாமல் ஸ்ரீமான்களான குழந்தையையும் ஓ.கந்த சாமி செட்டியாரையும், பாவலரையும், ஜயவேலரையும் பிடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண் டாம் என்று சொல்லக் செய்வதாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களைத் திட்டச் செய்வதினாலும் இக்குறை நீங்கி விடுமா? என்று கேட் கிறோம்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 15.08.1926

தமிழ் ஓவியா said...

தேசபக்தன்

தேசபக்தன் பத்திரிகை கொழும்பிலிருந்து வெளிவரும் வார மும்முறைப் பதிப்பாகும். இதன் ஆசிரியராயிருக்கும் திரு.கோ.நடேசய்யரைப் பற்றி நாம் நன்கு அறிவோம். தஞ்சையினின்று வெளிவந்த வர்த்தகமித்திரன் பத்திரிகையும் திரு.நடேசய் யரையே தன் ஆசிரியராகக் கொண்டிருந்தது. அக் காலை வர்த்தகமித்திரனில் ஒழுங்காகவும் தேச நலங்கருதியும் எழுதப்பட்ட கட்டுரைகளே வெளி வந்தன.

ஆனால் இப்பொழுது அதே திரு.நடேசய்யரை ஆசிரியராகக் கொண்ட தேசபக்தன் தாங்கி வரும் கட்டுரைகள் ஒரே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மாட்டு அன்போடும் அபிமானத்தோடும் எழுதி வருவது பெரிதும் வருந்தத்தக்கதாகும். வெளிப்டையாகக் கூறப் புகின் தேசபக்தனும் பார்ப்பனப் பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டான் என்றே கூற வேண்டும். சென்னையில் நடைபெறும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்துவரும் பார்ப்பனப் பிரசாரம் போதாதென்று வெளிநாடு சென்று பிழைக்கப்போன தமிழரின் குடியைக் கெடுக்க மலாய் நாட்டில் தமிழ்நேசன் என்றும் இலங்கையில் தேசபக்தன் என்றும் இரு பார்ப்பனப் பத்திரிகைகள் தோன்றியுள்ள தென்றே கூறவேண்டும்.

கருப்பு நிறங்கொண்ட ஆட்டை வெள்ளாடு என்பது போல் பார்ப்பனப் பக்தனாக யிருப்பவன் தேசபக்தன் என்று பெயர் பூண்டு தமிழர்களைப் பாழ்படுத்த முயலுவதை நாம் கண்டிக்காமலிருக்க முடியவில்லை. ஆதலால் இதை இனித் தமிழ் மக்கள் ஆதரிப்பது கொள்ளிக்கட்டை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வதாகும்.
- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 08.08.1926

தமிழ் ஓவியா said...

சென்னையில் திரு.எஸ்.ஆர்.தாசும் பார்ப்பனர்களின் தந்திரமும்

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் ஸ்ரீமான் சி.ஆர்.தாஸ் அவர்களின் தாயாதி சகோதரர். வங்காளத்தில் மாதம் நாற்பதினாயிரம் அய்ம்பதினாயிரம் சம்பாதித்துக் கொண்டிருந்த பிரபல பாரிஸ்டர். இப்பொழுது டெல்லி இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராயி ருப்பவர். இந்திய அரசாங்கத்திற்கு நமது தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் பத்திரிகைகளின் மூலமாகவும் கோள் சொல்லுவதன் மூலமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கும் தப்பபிப்பிராயங் களை அறிந்த நமது பனகால் அரசர் டெல்லிக்குப் போய் அரசப் பிரதிநிதி யாரிடம் நமது உண்மையான நிலையை எடுத்துச் சொன்னதன் பலனாய் வைசிராய் ஆச்சரிய மடைந்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதாரின் உண்மை நிலைமையை நேரில் அறிந்து வரும்படி தனது நிர்வாக சபையில் ஒரு பொறுப் புள்ள அங்கத்த வரான ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்களை அனுப் பியதாகத் தெரிந்தோம்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் அவர்கள் சென் னைக்கு வந்ததும் சென்னை யிலுள்ள பார்ப் பனத் தலைவர்கள் ஒன்றுகூடி ஸ்ரீமான் ரெங் காச்சாரியார் பெயரால் ஸ்ரீமான்கள் திருப்பதி மகந்து, சர்.சதாசிவய்யர், மகாகனம் சீனிவாச சாஸ்திரி, ஜட்ஜுகள் குமாரசாமி சாஸ்திரி, சீனிவாசய்யங்கார், எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம்தாஸ், எ.வி.இராமலிங்கய்யர், வி.டி.கிருஷ்ணமாச்சாரி, சர்.சி.பி.இராமசாமி அய்யர், அட்வகேட் ஜெனரல் வெங்கட்டராம சாஸ்திரியார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.வரதாச்சாரி, கே.பாஷ்யம் அய்யங்கார் ஜி.எ.நடேசன் அய்யர் முதலிய பல பார்ப் பனர்கள் பெரிய விருந்து நடத்தி தாஸ் அவர் களை உற்சாகப்படுத்தினார்கள். இவ்விருந்தின் செலவின் பெரும்பாகம் திருப்பதி மகந்துவினு டையதென்று சொல்லப்படுகிறது.

இந்த விருந்துக்கு தன்னை சன்னியாசி என்று சொல்லிக்கொள்ளும் திருப்பதி மகந்தும், காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர் களும் அரசாங்க சம்பந்தமான நபர்களுக்கு நடக்கும் விருந்து முதலியவைகளை பகிஷ்காரம் செய்து முட்டுக்கட்டை போடுகிறவர்களும், ஒத்துழையாமை நாற்றம் தங்கள் மீது வீசப்படு கிறதாகக் கூறிக் கொள்ளுகிறவர்களுமான ஸ்ரீமான் எ.ரெங்கசாமி அய்யங்கார், வி.ராம் தாஸ், கே.பாஷ்யம் அய்யங்கார் முதலிய பாப் பனர்களும் வந்திருந்ததிலிருந்தும், அவ் விருந்தில் வாலிபப் பெண்கள் மூலமாக சங்கீதம் நடத்தி ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசை ரம்மிக்கச் செய்ததிலிருந்தும் இவ்விருந்தின் சூழ்ச்சியும் தந்திரமும் விருந்து நடத்தியவர்களின் கருத் தும் நாம் சொல்லாமலே விளங்கும்.

ஸ்ரீமான் எஸ்.ஆர்.தாஸ் விருந்துக்கு திருப்பதி மகந்தைத் தருவிக்க வேண்டிய காரணம் என்ன? பெண்களை அழைத்து சங்கீதம் நடத்த வேண்டிய அவசியமென்ன? திருவாடுதுறை மடத்திலிருந்து வந்ததாகச் சில விஷயங்களை ஸ்ரீமான் எஸ்.ஆர். தாசுக்கு அறிவிக்க வேண்டிய காரணம் என்ன? சர்க் காரை பகிஷ்கரிக்கும் சுயராஜ்யக் கட்சியார் அங்கு வர வேண்டிய வேலை என்ன? ஸ்ரீமான் சாமி வெங்கடாஜலம் செட்டியார் கவர்னருக்குக் கொடுத்த ஒரு விருந்தின் போதே அது சுய ராஜ்யக் கட்சியாருடைய விருந்தல்ல, தனிப்பட்ட நபர் செய்த விருந்துமல்ல என்று சொல்லித் தப்பித்துக்கொண்ட நமது சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்கள் ஸ்ரீமான் ரெங்காச்சாரியார் என்கிற ஒரு தனிப்பட்ட நபர் நிர்வாக சபை மெம்பர் என்கிற சர்க்கார் பிரதிநிதி உத்தி யோகஸ்தருக்கு, அவர் சர்க்கார் வேலை சம்பந்த மாய் வந்திருக்கும் சமயத்தில் கொடுக்கப்படும் விருந்திற்கு இவர்கள் எப்படிப் போகக் கூடும்? இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நமது பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இந்திய அரசாங்கத்தில் நமது பார்ப்பனர்கள் இதுவரை சொல்லி வந்திருக்கும் கோள்களையும், செய்து வந்திருக்கும் சூழ்ச்சிகளையும், கெடுதிகளையும் உண்மை என்று உறுதிப்படுத்துகிறது.
- குடிஅரசு - கட்டுரை - 08.08.1926

தமிழ் ஓவியா said...

இதற்கென்ன சொல்லுவார்கள்?

ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சி யெனவும், மந்திரிகள் தம் நண்பர்களுக்கும் உற்றார் களுக்குமே பதவிகளை வழங்கி வருகிறார் களெனவும், சுயராஜ்யக் கட்சியார் சொல்லாத நாளே கிடையாதெனலாம். ஆனால் உண்மை என்ன? உத்தி யோக வேட்டையாடுபவர்கள் யார்? நண்பர்கட்கும் உற்றார்கட்கும் பாரபட்சமாய் இருப்பவர்கள் யார்? வேலூரில் ஜில்லா கோர்ட்டுக்குப் பப்ளிக் பிராசிகி யூட்டர் பதவிக்கு ஓர் பார்ப்பனர் சமீபத்தில் நியமிக் கப்பட்டிருக்கிறார். அவர் பெயர் திரு. நரசய்யர். ஏற்கனவே இரண்டு முறை களில் இவ்வுத்தியோகங்களிலிருந்தவர். இப்போது மூன்றாம் முறையும் நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு வயதே 57. வேலூரில் இவரைத் தவிர தகுதியான வேறு வக்கீல்கள் இல்லையா? இவரை மூன்றாம் முறையும் நியமிக்க வேண்டிய காரணமென்ன? தவிரவும் 50 அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பப்ளிக் பிராசிகியூட்டர்களாக நியமிக்கப்படாது என்ற அரசாங்க உத்தரவுமொன்று இருக்கிற தென்று அறிகிறோம். அஃது உண்மையாயின் 57 வயதுள்ள திரு.நரசய்யர் மீண்டும் நிய மிக்கப்படுவானேன்? அந்த அய்யர் சட்ட இலாகா அங்கத்தவருக்குப் பந்து வென்று சொல்லப்படுகிறது. அதுதான் காரணமோ? பிராமணர்கள் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று தடவைகள்கூட நியமிக்கப்படுகையில் பிராமணரல்லாதார்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது? திவான் பகதூர் எம்.கோபாலசாமி முதலியாருக்கு மிகுந்த கஷ்டத்துடன் ஆறு மாதகாலம் வரைதான் உத்தியோகம் நீடிக்கப்பட்டது. ஆனால் தஞ்சாவூரிலே இப்போதுள்ள பிராமணப் பப்ளிக் பிராசிகியூட்டர் மூன்று ஆண்டுகளாய் வேலைபார்த்து வருகிறார். உத்தியோக வேட்டையாடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் உற்றார்களுக்கும் பாரபட்சமாய் நடந்துகொள் பவர்களும் யார்? நாமா அல்லது பார்ப்ப னர்களா?
- குடிஅரசு - பெட்டிச் செய்தி - 08.08.1926

தமிழ் ஓவியா said...


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா? பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!


உடல் நலிவுற்ற தயாளு அம்மாளை டில்லிக்கு அழைப்பதா?

பிரதமர் (அலுவலகம்) பழியின்றி மீள வேண்டும்!

தமிழர் தலைவர் அறிக்கை


கலைஞர் அவர்களின் வாழ் விணையர் தயாளு அம்மாள் அவர்களை விசாரணைக்கு டில்லிக்கு அழைப்பது பற்றிய நீதிமன்றத்தின் ஆணை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கலைஞரின் வாழ்விணையர் திருமதி தயாளு அம்மாள் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சி இயக்குநராக இருந்தார் என்ற காரணத்திற்காக, அவருக்கு எவ் வகையிலும் சம்பந்தமில்லாத 2ஜி அலைக் கற்றை வழக்கில் அவரை விசாரித்த நிலையில், அவரது முதுமை காரணமாக அவரை குற்றம் சுமத்தப்பட்டவராகச் சேர்க்க தேவையில்லை என்று முடிவு செய்தது சி.பி.அய்.

ஏற்படாத இழப்பு என்ற அனுமான இழப்பைக் காரணம் காட்டி முன்னாள் அமைச்சர் ஆ. இராசாவையும், அது போலவே எந்த இயக்குநர் கூட்டத்திற்கும் செல்லாத நிலையில் கவிஞர் கனிமொழி அவர்களையும் குற்றவாளிகளில் ஒருவ ராக்கி, 6 மாதங்களுக்குமேல் டில்லி சிறையில் வதியச் செய்தார்கள்.

அதுபோலவே ஆ. இராசா அவர் களுக்கு ஓராண்டு சிறை வாசத்திற்குப் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இவை ஒருபுறம் இருக்க, சாட்சியமளிக்க திருமதி தயாளு அம்மாள் டில்லிக்கு வர வேண்டும் என்று கோருகின்றனர்; அவருக்கோ உடல் நிலை கடந்த ஓராண் டாகவே சரியில்லாது, தனிக் கவனிப்பில் இருந்து வருகிறார் என்ற நிலையில் அவரை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவரது தரப்பில், மருத்துவர்களின் சான்றிதழ்களோடு டில்லி சி.பி.அய். நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் விளக்கியிருக்கிறார். கலைஞர் அவர்கள் நேற்று அளித்த பேட்டியில் கூறியுள்ள விவரம்:

அவரது உடல் நலம் சரியில்லை என் பது தமிழகம் முழுதும் அறிந்த செய்தி யாகும்.

அவரால் விமானத்தில்கூட பயணம் செய்ய முடியாது. அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு நேரில் வீட்டிற்கே வந்து, தயாளுவின் உடல் நிலையை பார்த்து அறிக்கை தரலாம் என்று நீதிபதி முன்பு வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, எந்த மருத்துவ மனை என்று கேட்டறிந்து, புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை என்று கூறப்பட்டது. அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை அழைத்து வரும் செலவினை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினையும் எழுந்து, அந்தச் செலவினையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி கூறப்பட்டது.
அதையெல்லாம் நீதிபதி குறித்துச் கொண்டதோடு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் வரும்போது, எங்கள் குடும்ப மருத்துவரும் உடன் இருக்க அனுமதி கேட்டு, அதுவும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது

சி.பி.அய். தரப்பிலும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களே நேரில் வந்து பரிசோதிக் கலாம் என்று ஒப்புதல் அளித்தனர். ஆனால் 2 நாள்கள் கழித்து சி.பி.அய். நீதிபதி நேரில் வரவேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை.

இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி வழக்குரைஞர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேலும், என் மனைவி, நேரில் தான் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டால், அதனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப் பேற்றுக் கொள்வார்கள்? என்று கலைஞர் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

மனிதநேயத்தோடு அணுக வேண்டிய பிரச்சினை அல்லவா இது?

முதுமை காரணமாக அவர் முன்பே அலைக்கழிக்கப்படாதபோது, இப்போது திடீரென்று இப்படி ஏன் வற்புறுத்தப்பட வேண்டும்?

சி.பி.அய். தரப்பு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தது எப்படி? ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, இப்படி ஒரு நிலை ஏன்?

இதனால் மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு ஒரு அவப்பெயர் பழி, அரசியல் ரீதியாக ஏற்படாதா? ஏனெனில் சி.பி.அய். பிரதமர் கீழ் உள்ள ஒரு துறையாகும். அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படி ஒரு முடிவு என்று நாம் சொல்ல வரவில்லை; ஆனால் இந்தநிலைக்குப் பிறகு, இதுபற்றி மறுபரிசீலனை செய்து மனிதநேயத்தோடு அவர்களை அழைப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

2.6.2013 சென்னை

தமிழ் ஓவியா said...


பெரியார் - அண்ணா ஊட்டிய உணர்வில் பணியாற்றுகிறேன் கவிஞர்கள் பங்கேற்ற விழாவில் கலைஞர்


தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி 90 கவிஞர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்திருந்தார். கவிஞர்களுடன் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்.


சென்னை, ஜூன் 2- பெரியார், அண்ணா மற் றும் பல்வேறு கவிஞர் கள் ஊட்டிய உணர்வா லும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமி ழர்களையும் காப்பாற்ற முடியும் என்று சிந்தித் துக் கொண்டிருக்கிறேன் என்று கலைஞர் நெகிழ்ச்சி உரையாற்றி னார்.
தி.மு.க. தலைவர் கலைஞரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 90 கவிஞர்கள் கூடி அவருக்குச் சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நேற்று (1.6.2013) சென்னையில் நடந்தது. விழாவிற்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

விழாவில் 90 கவிஞர் கள் தனித்தனியாக கலை ஞருக்கு நினைவுப் பரிசு, பூங்கொத்து மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து கலை ஞர் ஏற்புரை வழங்கி னார். அவர் உரையாற்றிய தாவது:- என்னுடைய 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி கவிஞர் வைரமுத்து ஏற் பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என் னையும், அவரையும், இதற்கெல்லாம் மேலாக தமிழையும் பெருமை படுத்தியுள்ளார். ஏற் புரை என்ற தலைப்பில் நான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளை யிட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் என்னை பாராட்டிய சிறப்புரை கள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத் தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண் டால் தமிழ்த்தொண்டு, பொதுத் தொண்டு, சமு தாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காக வும், தமிழர்களுக்காக வும் பணியாற்ற வேண் டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை. பெரியார் - அண்ணா வழியில்...

ஏழ்மையான குடும் பத்தில் பிறந்ததால் வாழ்க்கையில் கஷ்டங் களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துய ரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடி யும். பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு கவி ஞர்கள் ஊட்டிய உணர் வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய் தால் தமிழையும், தமிழர் களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித் துக் கொண்டு இருக்கி றேன். இப்போது முழு நிம்மதியாக இல்லை. எனக்கு பல்வேறு வழி களில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின் றன. என்னைப் பொறுத்த வரையில் பொதுவாழ்க் கையில் அவையெல் லாம் ஒரு தூசுதான்.
தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகி றேன். என் உணர்வை யும், வலியையும் பெரி தாக்கும் அளவுக்கு காரி யங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர் களுக்கு கடமை உள் ளது. நம் காலத்தில் தமி ழுக்கு தீங்கு வந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். அச்சத்தைப் போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமி ழுக்கு ஏற்பட்ட கிளர்ச் சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மனநிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண் டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது. நம் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டில்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழித் தகுதியை அளித்ததுடன், வாழ்த் துகளையும், பாராட்டு களையும் சோனியா காந்தி எழுதிய கடிதத் தில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று செம் மொழி என்று சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்கின்றனர். நான் பெற் றுத் தந்ததால் இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள் ளது.
மொழியைக் காப்போம்!
செம்மொழித் தமிழை காப்பாற்றவும், உலகள வில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடு பட வேண்டும். தமிழ் செம்மொழி நிலை நாட்ட அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி செம் மொழித் தகுதியை இழந்துவிடாமல் காப் பாற்ற என்னை அர்ப் பணிப்பதுடன், வாதாட வும், போராடவும் செய் வதுடன் என்னையே ஒப்படைப்பேன். நம்மு டைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வைப் பங் கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப் பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
- இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்



நாத்திகன் என்று சொன் னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?


உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது.

மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்துவிடுகிறது.

எனக்குத்தாகமே எடுப்பதில்லை. அதனால் தான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என சிலர் ஆறு மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள் இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும்.

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால்தான் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி வரை நேரத்துக்கு ஒரு முறைதான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால் அதை அடிக்கடி எனக் கொள்ளலாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தால் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

தமிழ் ஓவியா said...


முடைநாற்றம் வீசும் மூட நம்பிக்கைகள்!


குலதெய்வத்தைக் கும்பிடப் போனவர் கோரப் பலி!

விருதுநகர், ஜூன் 3- குலதெய்வ கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற போது பாலத்தில் கார் மோதி நேர்ந்த விபத்தில் கணவன், மனைவி ஆகியோர் இறந்தனர். மகன், மகள் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ் (48). திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் மளிகை மற்றும் மிட்டாய்க் கடை நடத்தி வந்தார்.

சாத்தான்குளத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் சாமி கும்பிடுவதற்காக மனைவி உஷாராணி (40), மகள் சவும்யா (21), மகன் பிரபு (18) ஆகியோருடன் வாடகை காரில் செங்கத்தில் இருந்து நேற்றிரவு கிளம்பினார் ராஜ். காரை, ஓட்டுநர் அசன் பாட்ஷா (38) ஓட்டினார்.

விருதுநகர் மருளுத்தூர் -பட்டம்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் ராஜ், உஷா ராணி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சவும்யா, பிரபு, அசன்பாட்ஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தேர் எரிந்து சாம்பல்

திருப்பூர், ஜூன் 3- திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சிற்பக்கூடம், நேற்று தீப்பிடித்து எரிந்ததில், தேர் சக்கரங்கள் நாசமாயின. திருப்பூர் வீராகவப் பெருமாள் கோவிலில், 50 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடக்கின்றன. புதிதாக அமைக்கப்படும் சன்னதிகளுக்கு, கல் தூண், கல்சிற்பங்கள் செய்யும் பணிக்காக, கோவில் வளாகத்தில், கொட்டகை அமைக்கப் பட்டிருந்தது.

இதில், சிற்பிகள் வேலை செய்து வந்தனர். நேற்று, விடுமுறை தினமானதால், பணிகள் நடக்கவில்லை. பிற்பகல், 3.20 மணியளவில், திடீரென, தென்னை ஓலைக் கொட்டகை தீப்பிடித்து எரிந்ததோடு, மேற்கூரையும் சரிந்து விழுந்தது. அருகிலிருந்த தேர்களின், பழைய மரச் சக்கரங் கள் எரிந்து தீக்கிரையாயின. தெற்கு மற்றும் வடக்கு தீய ணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்திற் கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

கழுதைக்கும் கழுதைக்கும் டும் டும் டும்மாம்!

கடந்த ஆண்டு, தமிழகம் முழுவதும், தென்மேற்கு, வட கிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால், ஆறு, ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில், தண்ணீருக்காக மக்கள் அல்லல்படும் நிலை உள்ளது.

இதற்காக மக்கள் மழை வேண்டி, கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே, கழுதைகளுக்குத் திருமணம் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், சேலம் ஏற்காடு மலைப்பகுதியை ஒட்டி அமைந் துள்ள செட்டிச்சாவடியில், இரண்டு கழுதைகளை அழைத்து வந்து, ஊர் மக்கள் திருமணம் நடத்தி வைத்தனராம்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணியளவில் கிருஷ்ணர், ஆஞ்சநேயர் வேடமணிந்த பக்தர்களும், செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, கொண்டப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட அய்ந்து கிராம பகுதி மக்களும் திரண்டு வந்தனராம். பூ, பழம், மேள தாளம் முழங்க, சித்தர்கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட இரண்டு கழுதைகள், அங்குள்ள ஊரணி மாரியம்மன், காளியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டதாம்.

அங்கு, பூசாரி குழந்தை என்பவர் கழுதை யின் கழுத்தில் மாலையை அணிவித்தாராம். பின்னர், ஆண் கழுதை சார்பில், பெண் கழுதைக்கு தாலியைக் கட்டினா ராம். அங்கிருந்த மக்கள் அனைவரும் அக்கழுதைகள்மீது மலர்களைத் தூவினராம்.

செட்டிச்சாவடி ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் கோவில் அறங்காவலர் மற்றும் அவ்வூர் முக்கிய பிரமுகர்களும் பலர் கலந்து கொண்டனராம். தொடர்ந்து, திருமணத்துக்கு வந்திருந்த அனைத்து மக்களுக்கும் சோறு போடப்பட்டதாம். இதனால் மழை பொழிந்துவிடும் என்று நம்பும் மக்கள் என்றுதான் பகுத்தறிவுப் பாதைக்குத் திரும்புவார்களோ?