Search This Blog

9.6.13

கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது!



இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.
குறிப்பாக நமது நாட்டு மக்களிடையே உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன.

நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை. அரசியலானது சமுதாயக் கொள்கையையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது. அரசியல் கொள்கைகளை, சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும். சமூகத்துக்கு ஆதாரம் முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளை களுமே ஆகும்.

எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய, ஜாதி, மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம். நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங் கத்தாராவது, சமூக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக் கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை.
நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்துவிட்டு ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா?  இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும், சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்து விட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடை பெறுகின்றது.

இன்றைய தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித் திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்திரவாதம் கல்லுப்போல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

காங்கிரசு முயற்சி செய்யும் சுயராஜ்ஜியத்தில்

1)    The article in the constitution relating to fundamental rights, shall include a guarantee to the communities concerned of protection of their culture, language, scripts, education, profession, practice religion and religious endowments.

2)    Personal Laws shall be protected by specific provision to be embodied in the constitution.

1)    சுயராஜ்ஜிய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப் பாருடையவும் அவர்களது கலைகள், நாகரிகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவை களைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாதமளிக்கப்படும்.

2)    ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும் படியான திட்டத் தையும் சேர்க்கப்படும் - என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது.
அந்நிய அரசராகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதி களின் பயனாகவே சமூக வாழ்வில் ஜாதிமதக் கொடுமை யில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது.

சாரதா சட்டம்கூட அதனாலேயே சுயமரியாதையற்று பிணமாகக் கிடக்கிறது. இப்படியிருக்கும் போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமூகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தர வாதமும், வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவைகளில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?
ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டு விடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும். இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம் இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய முகமதியர் ஆட்சியிலோ, பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது.

மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப் படுத்திய குணமும், ராமராஜ்ஜியம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வரை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது.

உண்மையை யோக்கியமாய் வீரமாய்ப் பேச வேண்டு மானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓரளவு பழைய கொடுமைகளும், இழிவுகளும், குறைவு களும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம். இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 97 பேர்களாகும்.

ஜாதியால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் 100-க்கு 25 பேர்களாகும். மதத்தால் இழிவுபடுத்தப் பட்ட மக்கள் 100-க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருது கின்றான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான். பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ்ஜாதி என்பது இந்து மத சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலைமை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?

பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழிவுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பனன் பட்டினி கிடக்கின் றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகின்றானா?அது போலவே பறையர், பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக்கூட்டத்தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே, ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகர்களுக்கு இழிவும், தரித்திரமும் மக்களிடம் நிலவுகின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அந்நிய அரசாலும், சுயராஜ்ஜியத்தாலுமா நிலவுகின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப்புரியப் போகும் சுயராஜ்ஜியம் நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவ தற்கு ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூழ்ச்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய, யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது.

கேவலம் ஒரு தீண்டாமை விலக்கு என்கின்ற சாத னத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை காங்கிரசால் இந்தக் காரியத்துக்கு என்ன  பயன் ஏற்பட்டது? இந்தக் காரி யத்தின் பேரால் காங்கிரஸ் பண வசூல் செய்து அதனால் ஓட்டுப் பெற்றது. மற்றப்படி தீண்டாமை விலக்குக்கு என்ன திட்டம் காங்கிரசினிடம் இருக்கிறது?

தீண்டாமை விலக்குக்குப் பாடுபடாமல் உயிர் வாழ முடியாது என்று சொல்லி பட்டினி கிடந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த காந்தியார் என்ன சாதித்தார்?

இந்தியச் சட்டசபைக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டி யாக வந்து விட்டார்கள் என்பதைக் கேட்டவுடன், காந்தியார், சட்டசபைக்கு சமுதாய சம்பந்தமான தீர்மானங்களைக் கொண்டு போகாதீர்கள் என்று உத்திரவு போட்டுவிட வில்லையா? காங்கிரஸ் தீண்டாமை விலக்கு விஷயத்தில் நடந்து கொள்ளும் நாணயத்துக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?

ஆகவே, இந்த சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் இருந்தா லென்ன? சர்க்கார் நியமனக் காரர்களே இருந்தால் என்ன? என்று யோசித்துப்பாருங்கள். கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி நடக்கும் சந்தர்ப்பம் கிடைத்த காங்கிரஸ் காரர்கள் தீண்டாமை விஷயத்தில் தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பொருளாதார விஷயத்தில் எவ்வளவு யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மாதம் 1-க்கு 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை என்ற காங்கிரஸ்காரர்கள், ஒரு ஒற்றை ஆளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் சர்க்காரிடமிருந்து படி வாங்கினார்கள். இதில் ஒரு அளவு காங்கிரஸ் பண்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் உத்திரவு போட்டார். யார் இதற்கு கட்டுப்பட்டு நடந்தார்கள்?

தோழர் சத்தியமூர்த்தி அய்யர், தென்னாட்டு காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலைவர் என்கின்ற ஹோதாவில் அதை மறுத்து ஒரு தம்பிடி கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். தனது (ஒண்டி ஆள்) செலவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூபாயே போதாது என்று சொல்லி ஒரு காசு கூட குறைத் துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த யோக்கியர்கள் நாளை சுயராஜ்ஜியம் பெற்ற பிறகு மாத்திரம் பொருளா தாரத்தில் எப்படி யோக்கியமாய் நடந்து கொள்ள முடியும்?

ஒரு காசு கூட சர்க்காருக்கு இன்கம்டாக்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத தோழர் சத்தியமூர்த்திக்கு தன் சாப்பாட்டுச் செலவுக்கு மாத்திரம் தினம் ஒன்றுக்கு ரூ.20 போதவில்லை என்றால் மற்றபடி மற்றவர்களுக்கு எவ்வளவு அதாவது செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்த கோடீஸ்வரர்களுக்கு, தினமும் எவ்வளவு ரூபாய் வேண்டியிருக்கும் என்பதைப் பார்த்தால் தோழர் சத்தியமூர்த்திக்கோ மற்ற காங்கிரஸ்காரர்களுக்கோ இன்றைய சம்பளம் அதிகம் என்றும், ஜனங்களால் தாங்க முடியாதது என்றும் சொல்லுவதற்கு யோக்கியதை உண்டா என்பதோடு, இவர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுவார்களா என்றும் கேட்கின்றோம்.

நிற்க, ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ்காரர்கள் சம்மதிக்கவில்லை யானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? பிராமணன், சூத்திரன், பறையன், சண்டாளன் என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் ஜாதி காரணம் மாத்திர மல்லாமல் மதங்காரணமாகவும் இருந்து வருகின்றன.

மதம் காரண மாத்திரமல்லாமல், தெய்வம் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக்கு இந்து மதமும், மனு தர்ம சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும் அதற்கும் மேல்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.

கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவைகளில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமல்லாமல், இந்து ஆஸ்திகர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.
பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார் என்பவர்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், முகமதியர், பௌத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்புவிக்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்கு இடமான காரியமாய் இருந்தாலும் நான்கு வருணத்தையும் மறுக்க எந்த ஒரு இந்துவும் துணிவதில்லை. ஏதோ சில பேர்கள் சூத்திரர்கள் என்கின்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் இருப்பதால் நான்கு வருணத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும், மற்றொரு புறம் அக்கொள்கைக்கு அடிமையாகியே தீருகிறார்கள்.

எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக் கியானம் 
செய்கின்றவர்களும், பாரதக் கதையை நம்பாத வர்களும், அக்கதைகளில் வரும் பாத்திரங்களான ராம னையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. அது மாத்திரமல்லாமல் பாரதக் கதையில் ஒரு சிறு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ணன், அர்ச்சுனன் சம்பாஷணை என்னும் கீதையைப் பிரமாதமாக மதிக்கிறார்கள்.
கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குத் தைரியம் வருமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட கீதையில் கிருஷ்ணன் நான்கு வருணங்களை நான் தான் சிருஷ்டி செய்தேன் என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை தங்களுடைய மதத்துக்கு ஒரு ஆதாரமாகவும் கிருஷ்ணனை ஒரு கடவு ளாகவும் கொண்டிருக்கிற ஒருவன், சூத்திரன் என்கின்ற பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும். ஜாதிப் பிரிவுக்குப் பார்ப்பனன்தான் காரணம் என்று சொல்லுவது இனி பயனற்ற காரியம் என்பதே எனது அபிப்பிராயம்.

ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதி காசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உணருகிறானோ, அவன்தான் வருண பேதத்தை, ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்க வாவது யோக்கியமுடையவனாவான்.

காங்கிரசுக்காரர்கள் 100க்கு 99பேர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். கீதையை நெருப்பிலிடவோ, கிருஷ்ண பகவானை மறுக்கவோ ஒப்புக் கொள்ளாதவர்கள்.

காங்கிரசுக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் நான்கு வருணம் கூடாது என்கின்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஒரு அளவுக்கு மனுதர்ம சாஸ்திரத்தின் மீது பார்ப்பனர்கள் உள்பட பலருக்கு வெறுப்பும், அலட்சியமும் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், கீதையின் மீதும், கிருஷ்ணன் மீதும் வெறுப்பும், அலட்சியமும், அவ நம்பிக்கையும், மக்களிடையிருக்கும் அந் நம்பிக்கையை ஒழிக்கும் தைரியமும் ஏற்படுவது என்பது சுலபத்தில் எதிர் பார்க்க முடியாத காரியம். இந்தக் காரணங்களாலேயே இந்த நாட்டில் பல ஆயிர வருஷங்களாக இந்த இழிவும், முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் நிலவி வந் திருக்கின்றன. திருவள்ளுவர் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகித மாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர் விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.

இந்த முட்டாள்தனமான காரியம் பார்ப்பனர்களிடம் மாத்திரம் இருப்பதாக மாத்திரம் நான் சொல்ல வரவில்லை. சைவன்கள், வைணவன்கள் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். அவ நம்பிக்கைப்படவும் மாட்டார்கள். ஆனால், தங்களுக்குள் ஜாதி, பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள், ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சள வில் மாத்திரம் போற்றப் படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் எப்படி ஜாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஜாதியை உற்பத்தி செய்தவர்களை நாம் கேவலமாய் நினைத்து, அவர்கள் மீது மாத்திரம் ஆத்திரப்படுவதின் மூலமே நமது முயற்சிகள் இதுவரை நாசமாகிக் கொண்டே வந்துவிட்டது.

பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும் கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது என்பதை ஞாபகத் தில் வையுங்கள். இது தெரிந்துதான் ராஜகோபாலாச் சாரியார் உள்பட பக்கா பார்ப்பனர்கள் ஜாதி போக வேண் டும்; ஜாதி போக வேண்டுமென்று நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போடுகிறார்கள். நம் வீட்டிலும், பறையன் என்கின்றவன் வீட்டிலும் சாப்பிடு கிறார்கள். ஆனால் கீதையை வெகு பத்திரமாகக் காப் பாற்று கிறார்கள். கிருஷ்ணனுக்குப் பதினாயிரக்கணக் கான கோவில்கள் கட்டி கோடிக்கணக்கான மக்களைக் கும் பிடும்படி செய்து மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி வருகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு நம் வீட்டில் சாப்பிடுவதின் மூலம் ஆகாரச் செலவு மீதி ஆவதுடன், அவர்களிடம் மக்களுக்குத் துவேஷம் இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விடுகின்றதே தவிர, மற்றபடி ஜாதி பிரிவுக்குச் சிறிதுகூட ஆட்டம் ஏற்பட்டுவிடுவதில்லை.

நமக்கு இன்று வேண்டிய சுய ஆட்சி என்பதனாது ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், ஜாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும், ஒழிக் கும்படியாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால், நமக்கு அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனபதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.

கோவில் நுழைவு என்பதைப் பற்றிக் கராச்சி காங் கிரஸ் திட்டத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை. அதற்கு மாறாக பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதாகவே வாக்குறுதியும், உத்திரவாதமும் இருக்கிறது. சமீபத்தில் சத்தியமூர்த்தி தலைவர், கோவில் நுழைவைப் பற்றி, தான் ஒப்ப முடியாது என்று சொல்லி விட்டார். ரோடு, குளம், பள்ளிக்கூடம் இவைகளுக்கு மாத்திரம் அனுமதி கொடுப்பதாய் கருணை வைத்து அருள் புரிந்து இருக்கிறார். இதையே கராச்சிக் காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு சத்தியமூர்த்தியுடையவும், கராச்சி காங் கிரசினுடையவும், காந்தியாரினுடையவும் தயவு எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. ரோடும், பள்ளிக் கூடமும், குளமும் சர்க்கார் பாதுகாப்பில் இருப்பவை.  அவை தினமும் சர்க்கார் உதவியால் நடந்து வருபவை. ஆதலால் அதை ரயில், தந்தி, தபால் போல் எல்லா மக்களுக்கும் கிறிஸ்துவர்,  முகமதியர் உட்பட சம சுதந்திர மாய் அனுபவிக்க கட்டுப்பட வேண்டியவர் களாகிறார்கள்.

கோவில் மதத்தைச் சேர்ந்ததானதினாலும், மதத்துக்கு மத ஜனங்களே பிரதிநிதி களானதினாலும், ஜனங்களுக்குக் காந்தியாரும், சத்திய மூர்த்தியாரும் பிரதிநிதிகளாக ஆகிவிட்டதாலும் கோவில் பிரவேசம் என்பது களப்பிரதிநிதிகளையும், ஜனப் பிரதிநிதி சபையான காங்கிரசையும் சேர்ந்தது என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் காந்தியாருக்கும் இஷ்ட மில்லையானால், சத்தியமூர்த்தியாருக்கும் இஷ்டமில்லை யானால், காங்கிரசுக்கும் இஷ்டமில்லையானால், பிறகு இந்த அரசியல் பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி காங்கிரஸ் ஆட்சியோ, காந்தி ஆட்சியோ, சத்தியமூர்த்தி ஆட்சியோ ஆகிவிடுவதால் என்ன லாபம் என்று கேட்கின்றேன்.

நிறபேதம் மாறுவதால் அதாவது வெள்ளை நிறக்காரர் ஆட்சி மாறி பழுப்பு நிறக்காரர் ஆட்சி வந்தவுடன் ஜனங்களுக்கு இன்றுள்ள இழிவு மாறிவிடும் என்று கருதுவது போன்ற முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.
கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். அதை மாற்றுவதற்கு ஒப்புகிறவர்கள் கைக்கு ஆட்சி வர வேண்டும். அது வர முடியவில்லையானால் பொது மக் களிடம் இன்னும் 10 வருஷத்துக்கோ, 100 வருஷத் துக்கோ பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அதில்லாமல் ஜஸ்டிஸ் மந்திரிகள் உள்ள ஸ்தானத்தில், சத்தியமூர்த்தி, பிரகாசம் மற்றும் இவர்கள் அடிமைகள் போய் உட்கார்ந்தால் ஒரு மாறுதலையும் கண்டுவிட முடியாது. ஆகவே, வீண் சூழ்ச்சிப் பிரச்சாரங்களையும், துவேஷப் பிரச்சாரங்களையும், சுயநலப் பிரச்சாரங் களையும் கண்டு மக்கள் யாவரும் ஏமாந்துவிடாதீர்கள்.

              ----------------------அருப்புக்கோட்டை, திண்டிவனம், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில்  நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவுகளின் சாரம்-- -"குடிஅரசு' - சொற்பொழிவு - 02.06.1935

31 comments:

தமிழ் ஓவியா said...


சமூக நீதிக்காக ஆற்றும் தொண்டே நிலைத்து நிற்கும்! - தமிழர் தலைவர் கி.வீரமணி


10 சதவீதத்தினர் 90 சதவீதத்தினரை ஆதிக்கம் செய்ய விரும்பலாமா?
- மத்திய இணை அமைச்சர் வே. நாராயணசாமி

வாய்ஸ் ஆஃப் ஒபிசி ஆண்டு விழாவில் சமூக நீதிக்கான குரல்கள்!

சென்னை, ஜூன் 9- சமூக நீதிக்காக ஆற்றப்படும் தொண்டே நிலையானது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களும், 10 சதவீதத்தினர் 90 சதவீத மக்களை ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர் என்று மத்திய இணை அமைச்சர் வே. நாராயணசாமி அவர்களும் குறிப்பிட்டனர்.

வாய்ஸ் ஆஃப் ஒபிசி மாத இதழின் 11ஆம் ஆண்டு விழாவில் நேற்று (8.6.2013) பங்கேற்று உரையாற்றுகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது:

மக்கள் தொகையில் 52 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்கள் என்று மண்டல் குழு அறிக்கை கூறுகிறது. உண்மையில் இதைவிட அதிகம்தான்; பிற்படுத்தப்பட்ட மக்கள் வாக்கு வங்கி என்று எடுத்துக் கொண்டாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் ஆட்சியை நிர்ணயிக்கக் கூடிய வர்கள். ஆனாலும் பிற்படுத்தப்பட்டவர்கள் இன்னும் மனு போடும் இடத்தில்தான், போராடும் நிலையில்தான் இருக்கிறார்கள்.
70 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக் காக ஒரே ஒரு வாய்ஸ் ஆஃப் ஒபிசி குரல்தான் அரசுப் பணியாளர்கள் மத்தியிலே ஒலிக்க வேண்டியுள்ளது.

பத்திரிகையை நடத்திப் பார்த்தால்தான் கஷ்டம் தெரியும்

பத்தாண்டுகளாக வாய்ஸ் ஆஃப் ஓபிசி (பிற்படுத்தப்பட்டவரின் குரல்) ஒலித்துக் கொண்டு இருக்கிறது; பத்தாண்டுகள் தானே என்ற யாரும் எளிதாகச் சொல்லி விடலாம்; நடத்திப் பார்ப்பவர்களுக்குத் தான் அதில் உள்ள கஷ்டம் என்ன என்று தெரியும். நாங்களும் ஒரு நாளேட்டை விடுதலையை 1935 முதல் நடத்திக் கொண்டு வருகிறோம். அதில் உள்ள சிர மங்கள் என்ன என்பதை அறிந்தவர்கள்.

சந்தாக்களைச் சேர்ப்பீர்!

பொதுவாக நம் மக்கள் பாராட்டி விட்டுப் போய் விடுவார்கள். அது போதுமானதல்ல - பத்திரிகை நிலைக்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் பத்து சந்தாக்களையாவது சேர்த்துக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் பத்திரிகை பரவ முடியும். சமூக நீதிக்கான உரிமைகளையும் பெற முடியும்.

நான்காவது தூண் என்று ஊடகங் களை கூறுவார்கள். அவை ஆதிக்கவாதி களின் கைகளில் இருக்கின்றன.

எனவே பாதிக்கப்படும் நாம், குரல் கொடுக்கிறோம் நமக்கு ஏற்பட்டுள்ள வலியின் காரணமாக தாங்க முடி யாமல் கத்துகிறோம்.
நாம் பின் தங்கியவர்கள் அல்லர்!

நாம் பின் தங்கியவர்கள் அல்லர் -பிற்படுத்தப்பட்ட வர்கள். ஏன் பிற்படுத்தப்பட் டோம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்;

காரணத்தை அறிந்து போராட வேண்டும் என்றால் நமது இதழைப் படிக்க வேண் டும் - பரப்ப வேண்டும்.

சமூக நீதி என்று சொல் லும்போது இங்கு அரசிய லுக்கு வேலை இல்லை. சமூக நீதிக்காக ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.
நீதிக்கட்சி முன்னோடி!

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் முதன் முதலில் இட ஒதுக்கீட்டுக்காக ஆணை பிறப்பிக்கப்பட்டது. இடை இடையே எவ்வளவோ முட்டுக்கட்டைகள், நீதிமன்ற தீர்ப்புகள் - இவற்றை எல்லாம் கடந்துதான் தமிழ்நாட்டில் 69 சதவீதத்தை அனுப வித்துக் கொண்டு இருக்கிறோம்.

அந்நிய ஆட்சியில் நீதிக்கட்சி சமுதாய விடுதலைக்காக, சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தது என்றால் சுதந்திர இந்தி யாவின் அரசமைப்புச் சட்டம் அதற்குப் பாதுகாப்பு கொடுப்பதாக இல்லை நீதிக் கட்சி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டு நடை முறையிலிருந்து வந்த ஆணை செல்லாது என்று நீதிமன்றங்கள் தீர்ப்புக் கூறின.

தந்தை பெரியார் போராட்டத்துக்கு, காமராசர் துணை நின்றார்

தந்தை பெரியார் போர்க் குரல் கொடுத்தார் - காமராசர் ஆதரவு கொடுத் தார் - இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாக இடஒதுக்கீட்டுக்காகத்தான் திருத்தப்பட்டது.

கல்வி வளர்ச்சிக்காக பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சி பெரும் பங்காற்றி யுள்ளது. கல்விக் கண்களை திறந்த ரட்ச கர் என்று தந்தை பெரியார் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

கடுமையான எதிர்ப்புகளை காமராசர் சந்தித்தார். அதற்காக அவர் ஒன்றும் பின் வாங்கிடவில்லை.

தாழ்த்தப்பட்ட தோழரை படிக்க வைத்தோம் - டாக்டர் ஆனார் - அவர் ஊசி போட்டதால் எந்தக் குழந்தை செத் தது? என்ஜினியரிங் படிக்க வைத்தோம். அவர் கட்டிய எந்தப் பாலம் இடிந்தது? என்று திருப்பிக் கேட்டார்.

தமிழ் ஓவியா said...

விழிப்புடன் இருக்க வேண்டும்

ஆனாலும் நாம் மிகுந்த விழிப்புணர் வோடு இருக்க வேண்டும். கண்களில் விளக்கெண்ணெய்ப் போட்டுக் கொண்டு பார்க்க வேண்டும்.
எஸ்.ஸி., பி.சி., ஒ.சி. என்று சொல்லும் போது என்ன நடந்தது? ஓ.சி. என்றால் திறந்த போட்டி (Open Competition) என்பதை தலை கீழாக்கி அரசே விளம்பரம் செய்யவில்லையா?

ஓ.சி. என்றால் அதர் கம்யூனிட்டியா?

ஓ.சி. என்றால் ஒபன் காம்படிசன் என்பதற்கு பதிலாக அதர் கம்யூனிட்டி என்று ஆக்கினார்கள். கிராம நிர்வாக அலுவலர்களுக்காக 21 ஆயிரம் இடங்களுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோருக்கான சதவிகிதத்தை வெளியிட்டு அடுத்து திறந்த போட்டி (OC) என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக இதர பிரிவினர் என்று அறிவிக்கப்பட்டது.

விடுதலையில் அதைச் சுட்டிக் காட்டி எழுதினோம் திருத்தப்பட்டது. அதேபோல எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மக்கள் நல் வாழ்வுத் துறை வெளியிட்ட விளம்பரத் திலும் அதே தவறு செய்யப்பட்டது. எதிர்த்து வழக்கு போட்ட நிலையில், அந்தத்துறை அமைச்சர் எச்.வி. ஹண்டே,முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். கூறியதன் அடிப்படையில் என்னோடு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார் விவரத்தை எடுத்துச் சொன்ன பிறகு விளம்பரத்தை மாற்றி வெளியிட்டார்கள் - இந்த இரண்டுமே எம்.ஜி.ஆர். ஆட்சியில் நடந்ததுதான். இப்படி நாம் தூங்கிக் கொண்டு இருக்கிறோமா அல்லது விழித்துக் கொண்டு இருக்கிறோமா என்று ஆழம் பார்ப்பார்கள் - ஏமாந்து விடக் கூடாது!

மத்திய அமைச்சராக நாராயணசாமி அவர்கள் கிடைத்தது நமக்குப் பெரிய வாய்ப்பு!

நல்வாய்ப்பாக மத்தியிலே பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த நமது வே. நாராயணசாமி அவர்கள் இருக்கிறார்கள். வே என்றால் அவரின் தந்தையார் பெயர் என்பதைவிட நமக்கு வேண்டும் நாராயணசாமி என்று அந்த வேயைக் கருதுகிறோம்.

அய்.ஏ.எஸ். தேர்வு இனி தமிழில் எழுத முடியாது என்று கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் நம் மக்கள் தானே!

அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தோம் - கோரிக்கை வைத்தோம்; நமது இணை அமைச்சர் நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்திலே அறிவித் தார். ஏற்கெனவே இருந்தது போல தமிழிலும் அய்.ஏ.எஸ். தேர்வுகளை எழுதலாம் என்று அறிவித்தார் (பலத்த கைதட்டல்) இதற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக அவருக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூக நீதிக்காக ஆற்றும் தொண்டே நிலைத்து நிற்கும்

எந்த அரசும் பாலம் கட்டலாம்; சாலை போடலாம்; இன்னொரு அரசு வந்து அதனைவிட பெரிதாகக் கூட செய்யலாம்.

ஆனால் சமூக நீதிக்காக ஆற்றப்படும் செயல்தான் - இயற்றப்படும் சட்டம்தான் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் (பலத்த கரவொலி!) அந்த வகையில் நமது அமைச்சர் அவர்கள் நமக்காக டில்லியிலே இருக் கிறார் என்று மன நிறைவு கொள்கிறோம் - பாராட்டு கிறோம்.

தந்தை பெரியார் சமூகநீதிக் கொள்கை இந்தியா முழுமையும் வரவேற்கப்படும் கால கட்டம் இது - காசியில் பெரியார் விழா நடைபெற்றது. நண்பர் கருணாநிதி முன்னின்று ஏற்பாடு செய்தார். அதில் நான் கலந்து கொண்டேன் சந்நியாசியாக தந்தை பெரியார் காசிக்கு வந்த காலம் ஒன்று உண்டு, அவரின் சீடர் காசிக்குச் சென்று அவரது பாராட்டு விழாவில் கலந்து கொண் டேன் என்று குறிப்பிட்டார். அமைச்சர் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

மத்திய இணை அமைச்சர் வே. நாராயணசாமி சமூக நீதிக்காகவே என்றும் பாடுபட்டு வரும் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்த விழாவிலே பங்கு கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. சமூகநீதி தொடர்பான நிகழ்ச்சிகளில் எல்லாம் நம்மைப் போன்றவர் களை அழைத்து நம்மை எல்லாம் பேச வைப்பது அவரது பழக்கம்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கும் நமது கருணாநிதி சதாநம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கக் கூடியவர். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்ப்பது சாதாரண வேலையல்ல - அவர்களை எல்லாம் ஒன்று சேர்க்கும் முக்கிய பணியை அவர் சதா செய்து கொண்டே இருப்பார்.

யூனியன் வங்கி பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவரது சமூக நீதிப் பணிக்கு ஓய்வு கிடையாது. எப்பொழுது பார்த்தாலும் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்பார். அவரைத் திருப்திப்படுத்துவது எளிதல்ல.
இந்த விழாவில் கூட நான்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.

1) தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
2) பதவி உயர்விலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.

3) நேர்முகத் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

4) பிற்படுத்தப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நிருவாகம் அழைத்துச் பேச வேண்டும் - அதற்கான விதிமுறைகள் உருவாக் கப்பட வேண்டும் என்ற நான்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இந்த நான்கும் தேவையானவை - அவசியமானவை - நியாயமானவையாகும். இவற்றைச் செயல்படுத்துவதற்கு என் பங்கு நிச்சயம் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பற்றிய சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றவிடாமல் தடுக்கின்றனர். ஏனிந்த இரட்டை வேடம்?

மக்களவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை நான் முன்பொழிந்து பேசிக் கொண்டிருந்தபோது என் கையில் இருந்த காகிதத்தை பறித்த உறுப்பினர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

உயர் ஜாதிக்காரர்கள் இதனைச் செய்யவில்லை அவர்கள் நேரிடையாக எப்பொழுதும் வர மாட்டார்கள். அப்படி வந்தால் அவர்கள் எத்தகையவர்கள் என்பது தெரிந்துவிடுமே அதனால் அவர்களுக்கே உரிய தந்திர முறையில் நம்மவர்களையே ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

அவர்கள் எத்தனை முறை இப்படி நடந்து கொண்டாலும் சரி, இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டே தீரும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சட்ட ரீதியாக அளிக்கப்பட்ட பிறகு பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் அந்த வகையில் சட்டம் நிறைவேற்றப்பட பிரதமரும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டித் தலைவர் சோனியா அவர்களும் உறுதி கொடுத்துள்ளனர்.

நான்கு ஆண்டு சாத னைகள்பற்றிப் பேசுகையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மை மக்களுக்கான அடிப் படை உரிமைகள் வாய்ப்புப் பாதுகாக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுத்து உள்ளனர்.

10 சதவீதம் வளர்ந்தால் அது வளர்ச்சியல்ல; 100 சதவீத வளர்ச்சியைப் பெற வேண்டும் - அதுதான் உண் மையான ஜனநாயகமாகும்.
காலி இடங்கள் நிரப்பப்படும்

மத்திய அரசுத் துறைகள் பொதுத்துறைகளில் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பிற்படுத்தப் பட்டோருக்கான காலி இடங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன; கிட்டத்தட்ட 85 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.

துறை செயலாளர்களைக் அழைத்துப் பேசினோம். காலக் கெடு கொடுக்கப்பட்டது. அதற்குள் அவை நிரப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன் காரணமாக 80 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. எந்த அளவுக்குக் காலி இடங்கள் நிரப்பப் பட்டுள்ளன என்ற விவரத்தை அமைச்சரவைக் கூட்டத் தில் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்குப் பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார். இன்னும் ஆறு மாதங்களுக்குள் எஞ்சியுள்ள இடங்களும் நிரப்பப்பட்டு விடும்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட உரிமைகள்

நாடாளுமன்ற நிலைக்குழு இது குறித்துப் பரிந்துரை கொடுத்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நானும் சென்று பிரதமரிடம் இது குறித்து மனு ஒன்றினைக் கொடுத் துள்ளோம். பொதுவாக இது போன்று அமைச்சர்கள் செல்லக் கூடாது என்றாலும் அதையும் மீறித்தான் சென்றேன்.

மக்களவைத் தலைவரிடம் இது குறித்துப் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அப்பொழுது கூறினார்.

நேர்முகத் தேர்வில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி

இது குறித்து சுற்றறிக்கையை எங்கள் துறை அனுப் பிட ஆவன செய்வேன். குறிப்பிட்ட கால இடைவெளியில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் பிற்படுத்தப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச ஆவன செய்வோம்.
நண்பர் கருணாநிதி அவர்கள் வைத்த கோரிக்கைகள் பற்றி அனேகமாக அவர் திருப்தி அடையும் வகையில் கூறிவிட்டதாக நினைக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

மத்தியப் பிரதேசத்தில் ஒரு நிகழ்ச்சி

மத்திய பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், மாவட்டக் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றினார். கிரானைட்டை திருட்டுத்தனமாக எடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சென்ற இடத்தில் அவரைக் கொலை செய்துவிட்டனர்.
அவருடைய துணைவியார் அய்.ஏ.எஸ். அதிகாரி. கர்ப்பிணியாகவும் அந்த நேரத்தில் இருந்தார். தமது கணவரை இழந்த நிலையில் தன்னை மத்தியப் பிரதேசத் திலிருந்து, டில்லிக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித் திருந்தார். அதிகாரிகள் வழக்கம்போல முட்டுக்கட்டைகள் போட்டனர். மனித நேயத்தின் அடிப்படையிலும், ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற தன்மையிலும் அவருக்கு உதவி செய்தேன்.

என் பணி நிச்சயமாக சமூக நீதிக்காக என்றும் இருக்கும் என்று குறிப்பிட்டார் மத்திய இணை அமைச்சர்.

தமிழர் தலைவருக்குச் சிறப்பு

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார் மத்திய அமைச்சர். தோழர்கள் கருணாநிதி, ஜெ. பார்த்தசாரதி ஆகியோருக்கும் சால்வை அணிவித்தார்.

நிகழ்ச்சி

வாய்ஸ் ஆஃப் ஓபிசி (பிற்படுத்தப்பட்டோரின் குரல்) எனும் மாத இதழின் 11ஆம் ஆண்டு விழா வட சென்னையில் பெருந்தலைவர் காமராசர் - மூப்பனார் - வாசன் பயிலரங்கக் கட்டடத்தில் நேற்று (8.6.2013) இரவு 7 மணிக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கங்களின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. எஸ். முருகன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய முரசு ஆசிரியர் கோபண்ணா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் உ. பலராமன் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் இராயபுரம் ஆர். மனோ, நீதியரசர் ஏ.கே. ராஜன் (ஓய்வு) தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன் தோழர் கே. அன்பழகன் (அச்சக உரிமையாளர்) து. ரவி (ஆசிரியர் வீரசிவாஜி) எம். ஜார்ஜ் பெர்னாண்டசு (பரோடா வங்கி) செந்தமிழ்தாசன் ஆகியோர் உரையாற்றினர். வாய்ஸ் ஆஃப் ஓபிசி ஆசிரியர், - பதிப்பாளர் ஜெ. பார்த்தசாரதி நன்றி கூறிட விழா இரவு 9.30 மணிக்கு நிறைவுற்றது.
விழாவில் பங்கேற்ற விருந்தினர் பெரு மக்களுக்கும், பத்திரிகை சிறப்பாக வெளிவருவதற்குக் காரணமாக உள்ள அச்சகத்தார் மற்றும் கணினி பிரிவைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் மத்திய இணை அமைச்சர் வே. நாராயணசாமி பயனாடை அணிவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் உ. பலராமன் ரூ.25 ஆயிரமும் பரோடா வங்கியைச் சார்ந்தவர் சார்பாக எம். ஜார்ஜ் பெர்னாண்டசு ரூ.25 ஆயிரமும் பத்திரிகை வளர்ச்சிக்காக அதன் ஆசிரியர் ஜெ. பார்த்தசாரதி அவர்களிடம் நன்கொடை யாக வழங்கப்பட்டது.


எழுந்து நின்று கைதட்டி தமிழர் தலைவருக்கு நன்றி - பாராட்டு!


இந்த நிகழ்ச்சிக்கு நமது திரா விடர் கழகத் தலைவர் கலந்து கொண்டுள்ளது இந்த விழாவுக்குச் சிறப்பாகும். தமிழ்நாட்டில் 69 சத விகித இடஒதுக்கீட்டுக்குச் சட்ட சிக்கல் ஏற்பட்டது. அதனைத் தீர்த்து வைத்தவர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களே. அதற்கான சட்ட ரீதியான தீர்வினைச் சொன்னதோடு, அதற்கான மாதிரி மசோதாவையும் தயாரித்துக் கொடுத்தவர்.

அதற்கான சட்டம் தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது பார்வையாளர் பகுதியில் அமர்ந்து அதனைக் கவனித்துக் கொண்டு இருந்தார். நான் அப்பொழுது சட்ட மன்ற உறுப்பினர்; அப்பொழுதுகூட சில நண்பர்கள் சொன்னார்கள். நீதிமன்றம் சென்றால் இந்த சட்டம் அடிபட்டுப் போய் விடும் என்றார்கள். அதற்கும் ஓர் வழியைக் காட்டியவர் நமது ஆசிரியர் வீரமணி அவர்கள்தான். ஒன்பதாவது அட்ட வணையில் இதனைக் கொண்டு சேர்த்து விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொன்னார். அதன் காரணமாகவே 69 சதவிகிதம் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கிறது, நாமும் அனுப விக்கிறோம். அதற்காக நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகை யில் அனைவரும் எழுந்து நின்று கைதட்டிச் கவுரவிக்க வேண் டும் என்று சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் உ. பலராமன் கூறிட அனைவரும் எழுந்து நின்று பலத்த கைதட்டி வாழ்த்துக் கூறினர்.

தமிழ் ஓவியா said...


செய்திச் சிதறல்கள்!


வருமானம் கொஞ்சம்தான்(?)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ். தோனியின் ஆண்டு வருமானம் அதிகம் இல்லை - ரூ.179 கோடி தானாம். விளையாட்டாகவே இவ் வளவு வருமானம் குவிகிறது. ஆட்டத்தில் மட்டுமா? விளம்பரத்திலும் தான்!

சட்டம் ஒழுங்கு படும்பாடு

நீதிமன்றத்தில் சாட்சி சொன்னதற்காக காவல் துறை உதவி ஆய்வாளர் திருஞான சம்பந்தம் (வயது 50) அவர் மனைவி ஆகியோரை வழக்கில் சம்பந் தப்பட்ட லட்சுமண துரை என்பவர் சரமாரியாக வெட் டினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதான்!

தமிழ்நாட்டில் அல்ல

மகாராட்டிர மாநிலம் கோட்ரிகான் பகுதியைச் சேர்ந்த டாட்டு அம்போ ரோகதே (வயது 53) என்ப வருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எதற்குத் தெரியுமா? அய்ந்து வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதற்காக.

முன்மாதிரி...

திருமண நிகழ்ச்சியில் வாண வேடிக்கை - பகட்டுக் கச்சேரிகள் எல்லாம் நடை பெறுவதுண்டு. ஒடிசாவின் கேந்திர பாரா மாவட்டம் சந்தோஸ் கிரா மத்தில் நடைபெற்ற திருமணத்தில் ஓர் எடுத்துக் காட்டான ஏற்பாடு அனைவரையும் வித்தியாசமாகப் பார்க்கச் செய்தது. குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மணமக்களே குருதிக் கொடை கொடுத்து முகாமைத் தொடங்கி வைத்தனர். பாராட்ட வேண்டாமா?

நக்சல் படுகொலை

சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் கமாண்டர் உதாம் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - சிந்தனையும்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஞாயிறு, 09 ஜூன் 2013 14:43
E-mail Print

காவிக் கொண்டாட்டம்

செய்தி: குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக் கக்கோரி நாடு முழுவதும் யாத்திரை செய்யப் போகிறேன். - யோகா குரு ராம்தேவ்

சிந்தனை: காவிகளும், பணத் திமிங்கலங் களும் கொடுக்க வேண்டாமா ஆதரவு? சும்மா ஆடுமா சோழியன் குடுமி?

தமிழ் ஓவியா said...


தினமலரே கூறுகிறது திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...!


திருப்பதி, ஜூன் 9- திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.

திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு காவல்துறை பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 காவலர்கள் உண்டு.

ஆனால், தினசரி, 200 காவலர்கள் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 காவல்துறையினரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 காவல்துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவத்தை சேர்ந்த, "ஆக்டோபஸ்' என்ற படைப்பிரிவு, விஜிலென்ஸ், சிறப்பு காவல் படை, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் வரும் போது, காட்டு பகுதியில் சென்று சோதனை செய்ய தனிப்பிரிவு என, திருமலையில், பாதுகாப்பு பணியில் போதிய அளவில், ஆட்கள் உள்ளனர்.

எனினும், திருட்டு, குழந்தைகள் கடத்தல், பெரியவர்களே காணாமல் போவது போன்ற சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், டவுன் - 1 காவல் நிலையத்தில், 300 வழக்குகளும், டவுன் - 2 காவல் நிலையத்தில், 243 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திருமலையில் கூட்ட நெரிசல் சமயத்தில், தங்குவதற்கு வாடகை அறைகள் கிடைக்காததால், வெளியிடங்களில் பக்தர்கள் உறங்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், அதிகமாக நடக்கிறது. பெற்றோரும், உறவினர்களும் புகார் அளித்தாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு வேளையில், பெற்றோர் அருகில் உறங்கும் குழந்தைகளையும், கூட்ட நெரிசல் சமயத்தில், காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க, பாதுகாப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

கடந்த ஆண்டு, திருமலையில் காணாமல் போன சென்னையை சேர்ந்த, மூன்று வயது சிறுவன் பிரத்யுத்தை, இன்று வரை கண்டுபிடிக்க வில்லை. மூன்று நாட்களுக்கு முன், நடைபாதை வழியில் காணாமல் போன, அய்ந்து வயது சிறுமி ரோஷினியை கடத்திச் சென்றவன் குறித்த, புகைப்பட தகவல் கிடைத்தும், காவல்துறையினர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

திருமலைக்கு வரும், முக்கிய பிரமுகர்களின் தரிசன ஏற்பாட்டையும், அவர் களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வசதிகளையும் கவனிக்கவே, காவல்துறையினருக்கு நேரம் போதவில்லை. இதனால், பக்தர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள், ரொக்க பணம் திருடு போவது அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து, உறவினர்கள் தகவல் அளித்த உடனே, தேடியிருந்தால், பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

ஆனால், காவல்துறை யினரிடம் புகார் அளிக்க சென்றால், "உங்களால் முடிந்தவரை தேடி பாருங்கள்; கிடைக்கவில்லை என்றால், அப்போது புகார் அளிக்க வாருங்கள்' என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி விடுகின்றனர்.

திருமலை முழுவதும், 2,000 கண்காணிப்பு கேமராக்களை தேவஸ்தானம் பொருத்தி உள்ளது. ஆனால், அதிக திருட்டு சம்பவங்கள் நடைபெறும், முடி காணிக்கை அளிக்கும், "கல்யாண கட்டா' பகுதி, சப்தகிரி வாடகை அறைகள் உள்ள பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

ஒரு சில இடங்களில் இருந்த போதும், அது சரியாக இயங்காத நிலையிலேயே இருக்கும். திருமலையில், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை, ஜி.எம். ஆர்., குழுமம் பராமரித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஜி.எம்.ஆர்., குழுமம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல், தேவஸ்தான நிர்வாகம் அமைதி காக்கிறது.

திருமலையில் காணாமல் போனவர்கள் பற்றி புகார் கிடைத்தவுடன், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க, ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்தவர் அளிக்கும் ஆதாரத்தின் அடிப் படையில் செயல்பட்டால், சுலபமாக இதற்கு ஒரு வழி பிறக்கும். தேவஸ்தான நிர்வாகம், இதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

நேர்த்திக் கடன் செலுத்த கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்! கணவன் கண் முன் மனைவி, மாமனார் பலி



துவரங்குறிச்சி, ஜூன் 9- நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு செல்லும் வழியில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கணவன் கண் முன்னே மனைவி, மாமனார் பரிதாபமாக பலியாயினர்.

திருச்சி மாவட்டம், சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி, 32. இவர்களுக்கு, போதும் பொன்னு என்ற, 2 வயது மகள் உள்ளார். முத்துலட்சுமியின் அப்பா, மலையாண்டி, 50. இவர்கள் குடும்பத்துடன், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த, நேற்று காலை, 8:30 மணிக்கு புறப்பட்டனர்.

மலையாண்டி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய மூவரும், இருசக்கர வாகனத்திலும்; தங்கப்பாண்டி, இவரது தம்பி பொன்னுசாமி ஆகியோர், வேறொரு இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.

திருச்சி புறவழிச் சாலை, வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே, மதுரையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற, டவேரா' கார் படுவேகமாக, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மலையாண்டி, முத்துலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கண் முன்னே மனைவியும், மாமனாரும் இறந்ததால், தங்கபாண்டி அதிர்ச்சியடைந்தார்.

அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். 108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், இருவரது உடல்கள், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் வேலு (40), என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ் ஓவியா said...


ஜெ பாராட்டு



கோவாவில் நடை பெற்ற பிஜேபியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்களின் கட்சிக்குள்ளேயே மோதல் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் - அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச் சருமான ஜெயலலிதா அவர்கள், இன்று விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; குறிப் பாக திராவிட இயக்கத்த வர்களும், மதச் சார்பற்ற தன்மையில் மதிப்புடைய வர்களும், சிறப்பாக சிறு பான்மையினரும் கவனிக் கத்தக்கதாகும்.

நரேந்திரமோடி பிஜேபி யின் பிரச்சாரக் குழுத் தலைவராகத் தேர்வு செய் யப்பட்டதற்குத் தம் வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். வெறும் வாழ்த்தோடு நிறுத்திக் கொண்டு இருந்தாலும், ஏதோ சம்பிரதாயம் என்கிற கோட்டுக்குள் அடக்கி விடலாம்.

ஆனால் அதையும் தாண்டி அவர் சிறந்த ஆட்சியாளர் - சிறந்த நிர்வாகி, குஜராத் மாநிலத் தில் நல்லாட்சி புரிகிறார் என் றெல்லாம் சகட்டு மேனிக்கு புகழ்ந்து வார்த் தைகளைக் கொட்டியுள்ளார் - இவ் வளவையும் தெரிவித்து விட்டு, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பாதுகாப்பு வளையம் தேடுவது - ஆகா, எவ்வளவு சாமர்த்தியம்!

தனிப்பட்ட கருத்து என்றால் வெறும் வாழ்த்து களோடு நின்று இருக்க வேண்டும். அதையும் தாண்டி மோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ்வது - அதுவும் அவரின் ஆட் சியை வானளாவ சிலாகிப் பது என்பது எப்படி தனிப் பட்ட கருத்தாகும்? மறை முகமாக மோடியின் இந் துத்வா ஆட்சிக்குக் கொடுக்கும் சான்று பத்திரம் தானே இது! இதனை அ.இ.அ.தி.மு.க. வில் கூட்டு வைத்துள்ள முசுலிம் பிரிவினரும் (மனித நேயக் கட்சி), இடதுசாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்களா?

பி.ஜே.பி. மோடியின் குஜராத் இனப்படு கொலையை துப்பட்டிப் போட்டு மறைப்பதற்குக் கையாளும் யுக்தி - குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்திருக்கிறார் என்பதுதான்.

அதே பாணியைத் தானே நம்மூர் ஜெயலலி தாவும் செய்திருக்கிறார்? மோடி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதற்கு இரு முறை தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா அவர்கள் சென்றதையும், ஜெயலலிதா வின் முதல் அமைச்சர் பதவிப் பிரமாணத்திற்குத் தனி அழைப்பின் பேரில் மோடி வந்து கலந்து கொண்டதையும், தனது போயஸ் தோட்டத்துக்கு மோடியை அழைத்து 40 வகைகளில் சிறப்பு விருந்து அளித்ததையும் நினைவு கொண்டால், மோடியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள் வது தனிப்பட்ட பிரச் சினையா? அதையும் தாண் டிய இந்துத்துவா உணர்வா என்பதை மக்கள்தான் எடை போட்டுத் தீர்மானிக்க வேண்டும்.

- மயிலாடன் 10-6-2013

தமிழ் ஓவியா said...


தெரிந்து கொள்க....



நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுகாதார கேடு உடையதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ஓராண்டு தண்டனை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ் ஓவியா said...


அரசியல் வாழ்வு



நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ் வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத் தான் நேரிடும்.
(விடுதலை, 29.5.1973)

தமிழ் ஓவியா said...


ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!


குப்பைத் தொட்டியாகிவிட்டது ஐ.பி.எல். கிரிக்கெட், சூதாட்டக்குப் பையைக் கிளறக் கிளற அழுக்கும் துர்நாற்றமுமே வெளிவருகிறது. தரகர் கள், தொழிலதிபர்கள், சினிமாக் காரர்கள், அரசியல்வாதிகள், ஐ.பி.எல். அணி முதலாளிகள் என நீளும் தொடர்புடையோர் பட்டியல், நம் சமூகம் தொலைத்துள்ள நேர்மை, நாணயம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றின் தொகுப்பு. சூதாட்டத்தரகர் தொடர்புக் காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டவுடன், சூப்பர் கிங்ஸில் அவருக்கு முக்கிய பதவி ஏதும் கிடை யாது என்று பூசிமெழுகி என்.சீனி வாசன் வெளியிட்ட அறிக்கை, ஒழுக்கக் கேட்டின் உச்சம்.

தம் மருமகன் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருப்பினும், பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் மூன்று பேர் குழு அமைத்து விசாரிப்பேன் என்றும் என்.சீனிவாசன் சொல்வது, அதர்மத்தின் கொடுமுடி. தம் மருமகன் இத்தகைய தவறுகளில் ஈடுபட்டிருப்பார் என்று சீனிவாசன் எதிர்பார்க்காமல் இருக்கலாம். அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன் தார்மீகப் பொறுப்பேற்று தம் பதவியை ராஜினாமா செய்து, நேர்மையான விசாரணைக்கு வழி செய்திருக்க வேண்டும் சீனிவாசன். பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் பன்சால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது சமீபத்திய எடுத்துக்காட்டு.

ஐ.பி.எல்.லின் ஆரம்பமே தவறு. கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி, போட்டிகள் மூலம் வருமானமும் கண்டன, வெளிநாட்டு நிறுவனங்கள். அதை அப்படியே அடியொற்றி, ஐ.பி.எல். அணிகள் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு வீரர்கள், அந்த அணியில் இடம்பெறுவது போன்ற நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. அதுவும் வீரர்களை, ஏலத்தில் எடுப்பது போல் தேர்வு செய்யும் நடைமுறை உருவானபோதே, பணத்தாசை வேர் கொள்ளத் தொடங்கிவிட்டது. வீரர்கள் மேன்மேலும் தங்கள் இஷ்டப்படி பொரு ளீட்ட நல்ல, அல்ல வழிகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இந்தியாவிலும் சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்க வேண் டும் என்ற கோரிக்கை நம் மதிப்பீடு வீழ்ச்சிக்கு சரியான உதாரணம். இத னால் விளையாட்டில் முறைகேடுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இங்கே விளையாட்டுக்கான உத்வேகம், ஈடு பாட்டு உணர்வு ஆகியவை செத்துப் போய்விட்டன. கிரிக்கெட் மீது ரசிகர்கள் கொண்ட தீராத ஆர்வத்தை மூலதன மாக்கி, சோரம் போன அத்தனை பேர் களுமே இதில் குற்றவாளிகள். பி.சி.சி.ஐ. விஷயத்தில் அரசு தலையிடாது என்று கபில்சிபல் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மக்கள் பணமே பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். ஆகியவற்றின் முதுகெலும்பு. இவ் வமைப்புகளைக் கேள்வி கேட்க மக்கள் மன்றம் அனைத்து உரிமையும் பெற் றுள்ளது.

மக்களை ஏமாற்றும் எந்த அமைப்பும், நிறுவனமும், திட்டமும் சமூக விரோத மானதே. ஐ.பி.எல்.மக்களின் ஆர் வத்தைக் கொச்சைப்படுத்தியது: அவர்களுடைய பொன்னான நேரத்தை, பணத்தைக் கபளீகரம் செய்தது; மன வேதனையை ஏற்படுத்தியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஒழிப்பதன் மூலமே இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற முடியும்.
நன்றி: கல்கி 9.6.2013 (பக்கம் 7)

தமிழ் ஓவியா said...


மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (1)



கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழுவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியில் உள்ள கட்சிகள் என்ன கருதுகின்றன என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ளன.

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது பிஜேபி என்று காங் கிரஸ் தரப்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.

மோடியை பிஜேபி பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்க விரும்புகிறது;

அதற்கு முன்னோட்டமாகத்தான் கட்சியில் இந்தப் பதவி மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

2002இல் கோத்ரா நிகழ்வைக் காரணம் காட்டி குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதம் என்பதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான வகையில் வேட்டையாடப்பட்டனர்.

2000-த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 230 தர்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை; 4000 நான்கு சக்கர வாக னங்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் சாம்பல் குவியலாகக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3800 கோடி என்று மதிப்பிடப்பட்டது.

இந்த கலவரத்தில் மலைவாழ் மக்கள் உட்பட 12 லட்சம் பேர் களத்தில் இறக்கி விடப்பட்டனர் என்றால் அந்த உக்கிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.


குஜராத்தில் இனப் படுகொலை செய்யப்பட்டது பற்றி முதல் அமைச்சர் மோடி சொன்ன பதில் என்ன தெரியுமா?

எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் தியரியை நினைவூட்டினார். ஒரு முதல் அமைச்சர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகள் தானா இவை? அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு முதல் அமைச்சர் இந்த மனப் போக்கில் இருந்தால் இந்துக்களைத் தவிர்த்த மற்ற மக்களுக்குக் குஜராத்தில் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது? வேலியே பயிரை மேய்ந்தால் பயிருக்குப் பாதுகாப்பு எங்கே? எங்கே?

கோத்ரா சம்பவத்தை நேரில் பார்த்த முதல் அமைச்சர் அந்தக் கணத்தில் எடுத்த முடிவு மிக மிக விபரீதமானது. செத்தவர்களின் உடல் சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு எடுத்துச் செல்லுவது என்ற முடிவை மாற்றி, அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆணையிட்டு, ஏற்பாடு செய்தவர் முதல் அமைச்சர் மோடி. இதன் நோக்கம் என்ன என்பது எளிதிற் புரிந்து கொள்ளத்தக்கதே.

கோத்ரா ரயில் எரிப்பை திட்டமிட்டு நடத்தினார் கள் முசுலிம்கள் என்று பரப்பி, அந்தச் சூழலில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட 56 பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்துக்களின் வெறித்தனம் இஸ்லாமியர்கள் மீது திரும்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதற்குள் இருக்கிறதா - இல்லையா? ஆக இனக் கலவரத்துக்கான விதையை அந்த இடத்திலேயே விதைத்த விஷமிதான் இந்த மோடி.

உடனே அன்றே அரசு அதிகாரிகளைக்கூட்டி நாளை மாநிலத்தில் நடக்க இருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்களை காவல் துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு போட்டவர்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுத் துறை அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் இதனை உறுதிபடுத்தியுள்ளனரே.

இந்த மோடியைப் பற்றி வேறு எவர் சொன்னதை யும்கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மோடி சார்ந்துள்ள பிஜேபியைச் சேர்ந்த சட்டப் பேரவை பெண் உறுப்பினர் ரமிலாபென் ஆன் லுக் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்று போதுமே!
ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர். பொய்களையே பிரகடனங்களாக வெளியிட்டவர் என்று கூறியதைவிடவா மோடிக்கு நற்சான்றுப் பத்திரம் தேவை?

உச்சநீதிமன்றமே இந்த மனிதருக்குக் கொடுத்த பட்டம் நீரோ மன்னன்!

இந்த நிலையில் உள்ளவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் - அதற்கு முன்னோட்டம் தான் பிஜேபி பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டு இருப்பது.

இதன் மூலம் பிஜேபி என்ற அமைப்பே பாசிசத்தின் கொடிய தாய் என்பது அம்பலமாகி விடவில்லையா?

இந்திய ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? அல்லது இனப்படுகொலை மய்யமாக்கப்பட்ட குஜராத்தாக ஆக்கப்பட வேண்டுமா? சிந்திக்க வேண்டியது இந்தியத் துணைக் கண்டத்து வெகு மக்கள்தான்!10-6-2013

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி! கல்வியாளர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வர்


சென்னை, ஜூன் 10-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக் குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர் களை சந்தித்து கூறியதாவது:

கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்ட தாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது. இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய வற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது.

ஆசிரியர் பணி நியமனம் செய்யும் போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ் வொரு பாடத்துக்குமான காலி இடங்கள் எண்ணிக்கை, வகுப்பு இனவாரியாக ஒதுக்கப்பட்ட பணி யிடங்களின் எண்ணிக்கை, தேர்ந் தெடுக்கும் முறை ஆகியவை குறிப் பிட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முறையான அறிவிப்பும் செய்யாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. என்சிடிஇ நெறிமுறைகளின்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடிக்கவில்லை.

இட ஒதுக்கீடு மோசடி குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, 19000 ஆசிரியர் பணி நியமனத்தின்போது, பொதுப் பிரிவின் அனைத்து இடங்களையும் முற்பட்ட ஜாதியினருக்கு தாரை வார்த்துள்ளார். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கையை குறைத்துள் ளார். இது மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி. இதை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது விசா ரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்ததை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீடுபடி மதிப்பெண்கள் நிர்ணயித்து புதிய பட்டியல் தயாரித்து 35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதை அரசு செய்யாவிட் டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்.

இவ்வாறு பேராசிரியர்கள் தெரி வித்தனர்.

தமிழ் ஓவியா said...


நோயின்றி நாம் வாழ...


இயற்கை நமக்களிக்கும்
இனிமையான பிறப்பு
புன்னகை பூத்து - இன்முகம்
சிவக்க அரியதோர் வாய்ப்பு
அழுகை ஒலியுடன் அகிலத்தில்
அடிவைத்து அரவணைக்கும்
தாயிடம் - கண்டதோ
ஆனந்தக் களிப்பு

இந்த ஆனந்தக்களிப்பு - நம் வாழ்வில் தொடர நோயின்றி இவ்வுலகில் நாம் வாழ வேண்டும். நோயின்றி மனிதன் தன் வாழ்நாளில் வாழ முடியுமா? இது இன்றைய நவீன வாழ்க்கையில் ஓர் ஆச்சரியக் கேள்விக்குறி? ஏனென்றால் நம் மனமானது.

நோயுடனே வாழ்வதற்கு தன்னைத்தயார்படுத்திக் கொண்டு விட்டது என்று தான் நினைக்க வேண்டி உள்ளது. இயற்கை நமக்களித்த அய்ந்து உயிர் இயக்க சக்திகளான மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் எனக்கூறி அதன்மீது ஓர் மாயை என்னும் பய உணர்வை ஏற்படுத்தி இந்த அய்ந்து உயிர் சக்திகளையும், உயிர்களைக் கொல்லும் உயர் சக்தி என்று பயப்பட்டு, படாதபாடுபட்டு, நல்லதோர் மானிடனை மனித நேயமற்று நமக்குள்ளே பகை உணர்வை பரப்புவதிலே குறியாக செயல்பட்டு குதூகலம் அடைந்த ஒரு கூட்டம் செய்த சதியே இன்று நாம் அடையும், மனநோய்க்கும், உடல் நோய்க்கும், சமூக நோய்க்கும் அடிப்படை என்பதை மனித இனம் அறிவுசார் விளக்கங்கள் மூலமாக தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பெற்றதாய் நமக்கு பாலூட்டி வளர்ப்பாள் இயற்கை தாய் நம்மை நலமாக வளர்ப்பாள். நம் தந்தை நம்மை நல்வழியில் வளர்ப்பார். இருளர் நம்மை எவ்வாறு வளர்ப்பார்? இன்னுமா புரியவில்லை இயற்கையின் சிறப்பை!

மனிதன் நலமாக வாழ ஆறு அடிப்படைத் தேவைகள்

1. சிறந்த சூரிய ஒளி
2. தூய காற்று
3. சுத்தமான நீர்
4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)
5. சத்தான உணவு
6. அமைதியான தூக்கம்

இவை ஆறும் சிறப்பாக அமைந்தால் உடலும் மனமும் ஆறுதல் அடையும். இவ்வாறு சிறப்புப்பெற்றால் நோய் ஆறும் நம்மைவிட்டு அகலும், இவற்றில் நாம்தினம் குளித்தால் எவ்வாறு நோய் உண்டாகும்?

1. சிறந்த சூரிய ஒளி

நம் முன்னோர்கள் இயற்கையை ஆராய்ந்து கூறியதில், காலையில் சூரிய உதயத்தின் முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்து பின், சூரிய உதயத்தின் போது திறந்த வெளியில், சில அடிப்படை உடல் பயிற்சிகளை, காலைக்கதிரவன் ஒளிப்படச் செய்தால், பலவிதமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெளிவுபடக் கூறுகின்றன.

2. தூயக்காற்று

மனிதனின் நோயில்லா வாழ்விற்கு மிக முக்கியமான தேவை சுத்தமான பிராணவாயு, இன்று அந்த பிராண வாயுவிற்கே களங்கம் ஏற்படும் வகையில் நவீன வாகனங்களின் புகைகளும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கலப்படமான விஷ வாயுக்களும் கலந்து பூமியில் வாழும் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக முக்கிய காரணமாகிப் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாகின்றது.

3. சுத்தமான நீர்

நீரில்லையேல் இவ்வுலகே இல்லை. இவ்வுலகே இல்லையேல், இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியவில்லை. எல்லா உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமே நீர்தான் தண்ணீர் இல்லையேல் கண்ணீர் கூட தோன்றாது. எனவே ஆனந்தக் கண்ணீர் வர தண்ணீர் தேவை அடிப்படை தண்ணீர் ஆதாரங்களை நாம் அழித்தால் கண்ணீர் விட்டு அழும் காலம் வெகு விரைவில் இல்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்குவது இன்று கவுரவமாகத் தோன்றுகிறது. இன்று பாட்டில்களில் வரும் தண்ணீரே நோய்களுக்கு காரணமாகிறது என்பதை நாம் அறிந்து கொண்டு, விழிப்படைய வேண்டும்.

4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், அடியெடுத்து நாம் நடந்தால் நோய் நம்மை விட்டு அகலும்
நல்லதோர் நடைப்பயிற்சி
நோயின்றிவாழும் முயற்சி
நல்லதோர் ஓட்டப்பயிற்சி
நோய்களை ஓட்டும் முயற்சி
நல்லதோர் மனப்பழக்கம்
நோயின்றி வாழ பழக்கம்
இனியும் ஏன் தயக்கம்
இன்னும் வேண்டுமோ விளக்கம்?

5. சத்தான உணவு

சுத்தமான, சத்தான உணவு தான் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை இயற்கை உணவுகளான கீரை, காய்கறிகள், மீன், முட்டை, கலப்படமில்லா இறைச்சிகள், பயிறு வகைகள், தானியங்கள், இளநீர் போன்ற இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டால் நாம் நோயின்றி வாழலாம். செயற்கை உணவுகளைத் தவிர்த்தால் செயற்கை சுவாசம் பெற்று உயிர்வாழ கருவிகளிலிருந்து நாம் பிராண வாயு பெறாமல் இயற்கையான காற்றை சுவாசித்து இனிமையாக நோயின்றி வாழலாம்.

6. அமைதியான தூக்கம்

அமைதியான தூக்கமே அனைத்து வித
நோய்களுக்கு அருமருந்து
தூங்காத கண்கள் சோர்வடைந்து தோன்றும்
தூங்காத மனமும் நிலை தளர்ந்து போகும்.
தூக்கமில்லா வாழ்க்கை துக்கமான வாழ்க்கை
சீக்கிரம் தூங்கி விடியற்காலை எழுந்தால் புதுக்காலை
தினமும் பொலிவுடன் புலரும் புதியதாய்
சிந்தனைகள் பூக்களாய் மலரும், நோயில்லா புதுவாழ்வு
நித்தமும் நிகழும் நல்ல நித்திரை முத்திரை
பதிக்கும், அறிவார்ந்த உலகம் அனுதினம்
உதிக்கும், நோயில்லா அகிலம் விரைவில்
பிறக்கும் அனைவரும் முயன்றால்
அகிலமே சிறக்கும்.

தமிழ் ஓவியா said...


பாரதீய ஜனதாவில் உள்கட்சிப் பூகம்பம் வெடித்தது!


மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியா? அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அத்வானி விலகல்

சுயநலக் கூடாரமாகிவிட்டது கட்சி என்றும் குற்றச்சாற்று

சென்னை, ஜூன் 11- வரும் நாடாளுமன்றத் தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இக்கட்சிக்குள்ளே ஏற் பட்டுள்ள உச்சக் கட்ட மோதலின் விளைவாக சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இக்கட்சி யின் செயற்குழுவில் மோடிக்கு பிரச்சாரக் குழுத் தலைவர் பதவி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரி வித்து அத்வானி திடீர் ராஜினாமா செய்து பூகம் பத்தைக் கிளப்பியுள் ளார்.

மத சார்பற்ற நாடான இந்தியாவில் இந்து மத வெறியைத் தூண்டும் வகையிலும், சிறுபான்மையினரை பல்வேறு வகையில் கொச்சைப்படுத்தியும் தாக்குதல் தொடுத்து வருவது பாரதீய ஜனதா கட்சியாகும்.

அத்வானி பற்றி..

இக்கட்சியின் மூத்த தலைவரான அத்வானி இந்தியா முழுவதும் மதவெறியைத் தூண்டும் வகையில் ரத யாத்திரை நடத்தி அயோத்தியில் உள்ள இஸ்லாமியரின் வழிப்பாட்டுதலமான பாபர் மசூதியை இடித்து, தன்னை முன்னணி தலை வராக பிரகடனப்படுத் திக் கொண்டவர். இச் சம்பவம் உலகம் முழு வதும் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத் தியது.

கட்சியில் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பார தீய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல் வர் நரேந்திரமோடி குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தனக்கு சாதகமாக்கி இஸ்லா மியர்மீது பழி போட்டு, தனது அரசு இயந்தி ரத்தை பயன்படுத்தி சிறு பான்மை மக்கள்மீது மேற்கொண்ட கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்கள் மூலம் தனது இந்துமத வெறித் தனத்தின் கோரத்தை தனக்குத்தானே வெளிப் படுத்திக் கொண்டவர்.

இந்த இருவருக்கும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என பனிப் போர் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழு வில் குஜராத் முதல மைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நிய மிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அத்வானி நேற்று (10..6.2013) கட்சி யின் தேசிய செயற்குழு, ஆட்சிமன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

மோடியை தவிர்த்தார்:

தனது உதவியாளர் மூலம் நேற்று காலை 11 மணிக்கு ராஜ்நாத் சிங்குக்கு ராஜினாமா கடிதத்தை அத்வானி அனுப்பினார். பின்னர், 12.30 மணியளவில் அத் வானியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். ராஜினாமாவை திரும் பப் பெற அத்வானியை அவர் கோரியதாக தெரி கிறது. ஆனால், மோடிக்கு பதவி அளிக்கப்பட்ட தற்கு அத்வானி தனது எதிர்ப்பை ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முன்ன தாக, மோடியும் ராஜ் நாத் சிங்கும் அத் வானியை சந்தித்து மோடியின் நியமனத் துக்கு ஆசி பெற முடிவு செய்ததாகவும், கடைசி நேரத்தில் ராஜ்நாத் சிங் மட்டுமே சந்தித்துள் ளார். கட்சியின் மூத்த தலை வர்கள் சுஷ்மா சுவராஜ், எஸ்.எஸ்.அலுவாலியா, அனந்த் குமார், வெங் கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் டில்லியில் உள்ள அத்வானி வீட் டுக்கு சென்றனர். அத் வானியை சந்தித்து ராஜி னாமாவை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தனர். அத்வானி யின் ராஜினாமாவை ஏற்க மறுத்த ராஜ்நாத் சிங் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள் ளார். ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்ற பாஜ தலைவர்களின் வேண்டு கோளை அத்வானி நிராகரித்தார்.

ஏமாற்ற மாட்டார்

அத்வானியை நரேந்திர மோடி நேற்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை திரும்பப் பெறும்படி கோரினார். இத்தகவலை டுவிட்டர் இணையதளத் தில் மோடி தெரிவித் துள்ளார். லட்சக்கணக் கான தொண்டர் களை அத்வானி ஏமாற்ற மாட்டார் என்று மோடி கூறியுள்ளார்.

ராஜ்நாத்துக்கு உருக்கமான கடிதம்

ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

ஜனசங்கத்துக்காகவும் பா.ஜ.வுக்காகவும் எனது வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காக பெருமைப்படுகிறேன். இது எனக்கு எல்லை யற்ற திருப்தியை அளிக் கிறது. ஆனால், சமீப காலங்களில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் போக்கு ஏற் றுக் கொள்ள முடியாத தாக இருக்கிறது. நாட் டையும் மக்களையும் பற்றி கவலை கொண்ட ஷியாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா, நானாஜி தேஷ்முக், வாஜ்பாய் போன்ற தலை வர்களின் கொள்கை யோடு உருவாக்கப்பட்ட கட்சியில் அந்தக் கொள் கைகள் இப்போது இல்லை. நமது கட்சியின் பெரும்பாலான தலை வர்கள் தங்கள் சொந்த நலன் குறித்தே கவலைப் படுகின்றனர்.

எனவே, கட்சியின் தேசிய செயற்குழு, ஆட்சி மன்ற குழு, தேர் தல் குழு ஆகியவற்றில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். இதையே எனது ராஜி னாமா கடிதமாக ஏற் றுக் கொள்ளவும்.
- இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூன்று முறை ராஜினாமா

பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, கடந்த எட்டு ஆண்டுகளில், மூன்று முறை, பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த, 2005இல் பாகிஸ்தான் சென்ற அத்வானி, அந்நாட்டின் உயரிய தலைவர், முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என, பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு, கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு, பல நாட்களுக்கு பிறகு, திரும்பப் பெற்றார். அதே ஆண்டு, டிசம்பரில், மும்பையில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், இப்பிரச்சினை மீண்டும் எழவே, அத்வானி தன் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவராக, ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ.,வின், பிரச்சாரக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக, அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பிஜேபியின் பிற்போக்குத்தனம்:


திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் கூடாதாம்

இந்தூர், ஜூன் 11- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத் திற்கு முன் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அணுமதிக் கக் கூடாது என மத்திய பிரதேச பா.ஜ., துணைத் தலைவரும் மக்களவை எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய போது ரகுநந்தன் தனது கருத் தைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசு கையில், மாணவர்கள் குறிப்பாக இளம்பெண் கள் செல்போன் பயன் படுத்துவதாலேயே பெரும் பாலான அச்சுறுத்தல் களும், குற்றங்களும் நடைபெறுவதாக தெரி வித்தார். இளம்பெண் கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத் துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதி ரானது, ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித் துள்ளார். தனது இந்தக் கருத்தை தனி மனித நோக்கில் இருந்தே தெரி விப்பதாகவும், பா.ஜ.,வின் கொள்கை யின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை எனவும் ரகுநந்தன் தெரி வித்துள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு பா.ஜ., எம்.பி., ரகுநந் தனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் மற்றம் தேசிய மகளிர் ஆணையம் ஆகி யன எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இது குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா கூறுகையில், பெண்கள் இன்னும் பழங்கா லத்தை போன்றே இருக்க வேண்டும் என இந்த அரசியல்வாதி விரும்புவதாகவும், இவரது இந்தக் கருத்து அனைத்து பெண்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என வும் தெரிவித்துள்ளார். ரகுநந்தனின் இந்த கருத்திற்காக அவரும், பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலி யுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் தெரி வித்ததாவது: ரகுநந் தனின் இந்த கருத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ., கட்சி யிடையே இரட்டை நிலைப்பாடு உள்ளது சந்தேகத்திற்கு இடமில் லாமல் நிரூபணம் ஆகி உள்ளது; மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்ச வான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்; ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான விஜய்ஷா, பாபுலால் கவுர், கைலாஷ் விஜய் வர்கியா, ரகுநந்தன் சர்மா உள்ளிட்டோர் பெண் களுக்கு எதிரான கருத் துக்களை வெளியிட்டு வருகின்றனர்; ரகுநந் தனின் பெண்களுக்கு எதிரான இந்த கருத் திற்கு அவர் மட்டுமல்ல பா.ஜ.,வும் பொது மன் னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


காவிரி மேலாண்மை நிரந்தரக் குழுவை உடனே அமைத்திடுக மதுக்கூர் மாநாட்டில் கழகத் தீர்மானம்


மதுக்கூர் மாநாட்டில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (10.6.2013)


காவிரி டெல்டா விவசாயிகள் நலனைப் பாதிக்கும் வகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு உடனே கைவிட வேண்டும் என்பதையும், காவிரி நதிநீர் பங்கீடு சரியாகக் கிடைக்க ஒரே நிரந்தரத் தீர்வு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தி அதன் அளவீட்டின்படி கர்நாடகம், தமிழ்நாட்டிற்குக் காவிரி நதி நீரைத் தரும் வகையில் காவிரி மேலாண்மைக் குழுவினை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

அதற்கு கர்நாடக அரசு ஒத்துழைக்க மறுத்தால், மத்திய அரசே தனது நேரடிக் கண்காணிப்பில் நாட்டின் அணைகளை அவசரச் சட்டத்தின் மூலம் எடுத்து தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டுமென்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கர்நாடகத்தைப் போல எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் உரிமைபற்றி முழங்க வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்திட வேண்டும் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளையும் இத்திராவிடர் கழக மாநாடு சுட்டிக் காட்டுகிறது.

- மதுக்கூரில் நேற்று (10.6.2013) நடைபெற்ற வட்டார திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்


பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


உண்மையான நாவன்மை எது?


நண்பர்களைக்கூட, சிறிய கருத்துமாறு பாடுகளுக்காக எதிரிகளாகப் பார்ப்பது என்பது விரும்பத்தக்கதல்ல.

மனிதர்களுக்குள்ள பகுத்தறிவு காரணமாக, சுதந்தரமாகச் சிந்திப்பது என்பதோ, கருத் துக்களைக் கூறுவது என்பதோ தவறானதல்ல; மாறுபட்ட சிந்தனை சில நேரங்களில் நம்மையே புதிய கோணத்தில் செம்மைப்படுத்திக் கொள்ளக்கூட உதவிடக் கூடும்; எனவே அப்படிக் கூறுபவர்களை எதிரிகள் என்றோ, அல்லது அலட்சியப்படுத்தக் கூடியவர்கள் என்றோ கருதிடக் கூடாது.

நண்பர்களைக்கூட எதிரிகளாகக் கருதிக் கொள்ளுவார்கள் சிலர் - தங்களது நாக்கு என்ற ஆயுதத்தின் மூலம். எனவே தான் வள்ளுவர் மிகவும் எச்சரிக்கை செய்தார்:

நா காக்க நாவினாற் சுட்ட வடு என்றார்.

இதே நாக்கு அதன் ஆற்றலால் (நாவன்மை) நல்ல நாயகர்களை நாட்டுக்குப் பெரிதும் அறிமுகப்படுத்தும் நற்கருவியாகவும் அமை வதை மறுக்க முடியாது.

என்றாலும் அந்த நாக்கு - பலரை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவதன் மூலம் பண்புள்ள நண்பர்களைக்கூட எரிச்சல் அடையச் செய்து, எதிரிகளாக்கிக் கொள்ளவும் செய்கிறது.

எதுவும் - எந்தக் கருவியும் - அதை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்ததேயாகும்! இல்லையா?

அறிஞர் அண்ணாவின் தனிச் சிறப்பு அவரது அரசியல் எதிரி களையும்கூட நண்பர்களாக்கிக் கொண்டதுதான்!

அதற்காக கொள்கை - லட்சியங் களை அவர் விட்டு விட்டார் என்பதல்ல பொருள்.

நட்பு ரீதியாக அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் நேரத் தில், கொள்கைகளை வலியுறுத்திடவும் வாழ்ந்து காட்டினார்!

தந்தை பெரியார் அவர்கள் - ஆச்சரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜுலு போன்ற பலரிடம் கூட அவர்களிடம் மாறுபட்ட காலத்திலும் கூட நட்புணர்வை இழக்கவே இல்லை!

காரணம் அவரது அடக்கம்; அதனுள்ளே பொதிந்த ஆழம்!

சிலர் தங்களது நாவன்மையைக் காட்டு வதாக எண்ணிக் கொண்டு, உரையாடும் நண்பர்களிடம் கேலி, கிண்டல், நக்கல் செய்து அவர்கள் இவர் என்ன இவ்வளவு பக்குவப் படாதவராக நடந்து கொள்ளுகிறாரே, என்று மனம் நொந்து வெளியில் காட்டாவிட்டாலும்கூட, பிறகு அத்தகையவர்களை தவிர்க்கவே விரும்பு வார்கள்!

எனவே நாம் பயன்படுத்தும் நமது ஆயுதங் களில் மிகவும் எச்சரிக்கை யுடன் பயன்படுத்த வேண்டிய ஆயுதம் நமது நாக்குதான். அதன் மூலம் நன்மையும் விளையலாம்; தீமைகளும் வரலாம்!

நன்மையும் தீமையும் பிறர் தரவாரா
நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டதுதான்

என்ற கணியன் பூங்குன்றனாரின் - கருத்தடங்கிய வரிகளுக்கு இப்படிக்கூட பொருள் கொள்ளலாமே!

நாக்கின் போக்கே, நமது எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும்!

எனவே வாய் திறக்கும்போது நிதானத்துடன் திறந்து, நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு மட்டுமல்ல - பிறருக்கும் ஏற்படும் வண்ணம் பேசுவதே, நாவன்மையாகும்.

அது அள்ளித் தருவது மற்றவர்களுக்கு நஞ்சா, தேனா என்பது அது (நாக்கு) சுழலும் முறையைப் பொறுத்ததல்லவா?

எனவேதான் எச்சரிக்கை மிகவும் தேவை!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...

வெட்கக்கேடு!

கொலை, கொள்ளை தடுக்க காவல் நிலையத்தில் பூஜையாம்!

சென்னை, ஜூன் 11- கொலை, கொள்ளை மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பூசணிக்காய், தேங்காய் உடைத்து திருத்தணி காவல் நிலையத்தில் திருஷ்டி கழித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டதாம்.

திருத்தணி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் அடிதடி, குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட வர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி திருத்தணி பொரி வியாபாரி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். இதில் சம்பந்தப் பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருத்தணி - திருப்பதி சாலையில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியின் வரவு கால்வாயில் கர்ப்பிணி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப் பட்டு புதைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

திருத்தணி - பெரியார் நகரில் ரிக்ஷா தொழிலாளி தன்ராஜ், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அவரது உறவினர் ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமாவாசையை யொட்டி திருத்தணி காவல் நிலையத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதாம். காவல்நிலையம் முழு வதையும் கழுவி சுத்தப்படுத்தி அங்குள்ள சாமி படத் துக்கு மாலை போட்டு கற்பூரம் ஏற்றி காவல்நிலை யத்தின் வாசலில் பூசணிக்காய், எலுமிச்சம் பழம் உடைத்து திருஷ்டி கழித்தனராம்.

திருத்தணி பகுதியில் கொலை, கொள்ளை நடக்க மல் இருப்பதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாம்

பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய காவல் துறையினரே காவல் நிலையத்தில் பூஜை போன்ற மூடத்தனங்களில் ஈடுபடுவது சரியானதுதானா?

தமிழ் ஓவியா said...

மணமகனின் சமயோசிதமான முடிவு
தமிழர் தலைவர் பாராட்டு

வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவின்போது மணமகன் நீலகண்டன் சங்கிலி அணிவித்தபோது தலைவழியாக அந்தச் சங்கிலி நுழையவில்லை. நீலண்டன் அப்படியே கழற்றி எடுத்து விட்டு மணமகளின் சடை வழியாக சங்கிலியை மாட்டி திருப்பிக் கழுத்தில் அணிவித்தார்.

அதைக் கண்ணுற்ற தமிழர் தலைவர் அவர்கள் மீண்டும் ஒலிபெருக்கியை வாங்கி இந்த நிகழ்வைக் கவனித்துப் பார்த்தீர்களா? எம்போதுமே நம் மக்கள் மணமகளுக்கு தலையில் கொஞ்சம் அதிகமாகப் பூவைச் சுற்றி விடுவார்கள். சங்கிலி அணிவிக்க வேண்டும் என்று சொன்னவுடன் அதை வாங்கிப் பார்த்தேன். அதில் தாலி இல்லை. டாலர் மட்டும் இருந்தது. அதை அணிவிக்க முயன்றபோது தலை வழியாக நுழையவில்லை. மணமகன் மிகவும் சமயோசிதமாக சடைமுடி வழியாகக் கொண்டு வந்து எளிதாக அணிவித்து விட்டார். இந்த மணமக்கள் இருவரும் சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் என்பதற்கு இது நல்ல சான்றாகும் என்றார். (பேராவூரமணி மணவிழாவில்...)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தேர்வு, பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்


சென்னை, ஜூன் 11- ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப் படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த வலியுறுத்தி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் தியாகராயர் நகரில் நேற்றுமுன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தலைமை வகித்தார்.

மத்திய அரசு முன்னாள் செயலாளர் பி.எஸ்.கிருஷ்ணன், மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் முன்னாள் துணை வேந்தர் வசந்திதேவி பேசியதாவது:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதன் அடிப்படை யிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் நிர்ணயித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தகுதிக்கான மதிப்பெண்ணில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்.

அதற்கான ஆணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அரசாணையை திரும்பபெற வேண்டும்.

- இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


மோடி பிரதமருக்கான வேட்பாளரா? அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்!


புதுடில்லி, ஜூன் 11- மோடியைப் பிரச்சாரக் குழுத் தலைவராக அறி வித்தும், அதன் பின்ன ணியில் பிரதமருக்கான வேட்பாளர் என்பதை முன்னிலைப்படுத்தியும் செயல்படும் போக்கினை பி.ஜே.பி.யின் கூட்டணி கட்சிகள் உள்பட கடும் எதிர்ப்பை தெரிவித்துள் ளனர்.

பா.ஜ., தலைமையி லான, தே.ஜ., கூட்டணி யின் பிரதமர் வேட்பா ளராக, நரேந்திர மோடியை அறிவிப்ப தற்கு, அந்த கூட்டணி யில் அங்கம் வகிக்கும், அய்க்கிய ஜனதா தளம், கடும் எதிர்ப்புத் தெரி வித்து வருகிறது. இந் நிலையில், இந்த பிரச் சினை குறித்து, பீகார் முதல்வரும், அய்க்கிய ஜனதா தள தலைவரு மான, நிதிஷ் குமார் கூறியதாவது:

பா.ஜ.,வுக்குள் ஏற்பட் டுள்ள குழப்பத்தை, கூர்ந்து கவனித்து வரு கிறோம். நரேந்திர மோடியை, கட்சியின், பிரச்சார குழு தலைவராக நியமித்துள்ளதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அத்வானியின் விலகலால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும், எங்கள் கட்சி நிர்வாகி கள் கூடி ஆலோசனை நடத்துவோம். அதைத் தொடர்ந்து, விரைவில் முடிவை அறிவிப்போம். - இவ்வாறு, நிதிஷ் குமார் கூறினார்.

அழிவுப் பாதையில் பா.ஜ., காங்கிரஸ் கருத்து: காங்., பொதுச்செய லாளர், ஜனார்த்தன் திவிவேதி கூறியதாவது:

நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக் கப்பட்டதை எதிர்த்து, அத்வானி, கட்சியின் அனைத்துப் பொறுப்பு களிலிருந்தும் விலகியுள் ளார். மோடிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது, எங்களை பொறுத்த வரை, பெரிய விஷய மல்ல. இது, அந்த கட்சி யின் உட்கட்சி விவகா ரம். அதேநேரத்தில், மோடிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதன் மூலம், பா.ஜ., அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என் பது, அத்வானியின் ராஜி னாமா மூலம், வெளிப் படையாக தெரிகிறது.

- இவ்வாறு, ஜனார்த் தன் திவிவேதி கூறினார்.

தேசியவாத காங்கிரஸ்

தேசியவாத காங்., கட்சியின் செய்தி தொடர் பாளர், மகேஷ் டாப்சி கூறியதாவது: நரேந்திர மோடி, பா.ஜ., பிரச்சார குழு தலைவராக நியமிக்கப் பட்டதற்கு, அந்த கட் சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது, அத்வானி ராஜினாமா மூலம், வெளிப்படை யாக தெரிகிறது. உட் கட்சி பூசலில் சிக்கியுள்ள பா.ஜ.,வால், அடுத்த மாநிலங்களவைத் தேர் தலில், கண்டிப்பாக வெற்றி பெற முடியாது. இவ்வாறு, மகேஷ் டாப்சி கூறினார்.

கேரள மாநில காங்., தலைவர், ரமேஷ் சென் னிதலா கூறியதவது: நரேந்திர மோடியை, பா.ஜ., பிரச்சார குழு தலைவராக நியமித்தது, நாட்டின், மதச் சார்பின் மைக்கு விடுக்கப்பட் டுள்ள அச்சுறுத்தல். நரேந்திர மோடியின் செயல்பாடுகள், ஜனநாய கத்துக்கு, மதச் சார்பின் மைக்கும், எதிரானவை யாகவே இருக்கும்.

அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும், கருத்து வேறுபாடு இருப் பது போல் தோற்ற மளித்தாலும், இரண்டு பேருமே, ஒரு நாணயத் தின் இரண்டு பக்கங் களை போன்றவர்கள் தான். நரேந்திர மோடி யால், ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத் தலை சமாளிக்க, மதச் சார்பற்ற சக்திகள், ஓர ணியில் திரள வேண்டும். இவ்வாறு, ரமேஷ் சென் னிதலா கூறினார்.

சமாஜ்வாதி கட்சி யின் மூத்த தலைவரும், உ.பி., மாநில சட்டசபை விவகாரத் துறை அமைச் சருமான, ஆசம்கான் கூறுகையில், குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு கார ணமானவர், நரேந்திர மோடி. இப்படிப்பட்ட அவரை, பா.ஜ.,வின், பிரச்சார குழு தலைவ ராக நியமித்தது, எதிர்பா ராதது'' என்றார்.

திக்விஜய் சிங்

காங்., பொதுச்செய லாளர், திக்விஜய் சிங் கூறியதாவது:

நரேந்திர மோடி விவகாரதத்தில், பா.ஜ., தேசிய தலைவர், ராஜ் நாத்சிங் ஏமாந்து விட் டார். நரேந்திர மோடி, எப்போதுமே, தனக்கு உதவி செய்பவர்களுக்கு துரோகம் செய்யும் வழக் கம் உள்ளவர். இவர் விஷயத்தில், ராஜ்நாத் சிங் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

மாலேகான் - மறு தீர்ப்பு!

மகாராட்டிரத்தில் மாலேகான் நகரத்தில் முசுலிம் அமைப்பான சிமி அலுவலகமுன் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இரு சக்கர மோட்டார் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பயங்கர செயலால் 7 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயமடைந்தனர்.

பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக் _ அபிநவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் என்பவருக்குச் சொந்தமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முன்னாள் இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய், இந்நாள் இராணுவ உளவுப் பிரிவு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பி.எஸ். சிறீகாந்த் பிரசாத் புரோகித் (பார்ப்பனர்) சுயம்பு சங்கராச்சாரியார் தயானந்த் பாண்டே (பார்ப்பனர்) சிவ நாராயணன் கல்சன்கரா, ஷாம்சாகு, சமர்குல்கர்னி, அஜய ரசிர்கர், ராகேஷ் தாவ்டே, சுதாகர் சதுர்வேதி, ஜெகதீஷ் மார்த்ரே ஆகியோர் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்தக் கும்பலுக்கும் _ பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் நடைபெற்ற குண்டு-வெடிப்பு-களுக்கும் தொடர்புண்டு என்றும் கண்டறியப்பட்டது.

மாலேகான் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து வெளியில் எங்கும் கிடைக்காதது _ இராணு-வத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவதாகும். இதில் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்கள்மூலம் இது கிடைத்திருக்கிறது. சிறுபான்மை-யினரைத் தீர்த்துக் கட்ட இராணுவ வெடிமருந்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் என்பவர் மகாராட்டிர மாநிலம் நாசிக் நகரில் இராணுவக் கல்லூரி ஒன்றையும் நடத்திக்கொண்டும் வருகிறார். இதில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவின் முப்படை-களிலும் ஊடுருவியுள்ளனர்.

இந்த இராணுவக் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பலுக்கு வன்முறைப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது முதற்கொண்டு, எப்படிக் கையாள்வது என்பதுவரை இங்குப் பயிற்சி!.

இந்தியாவை இந்து மயமாக்கு _ இந்திய இராணுவத்தையும் இந்து மயமாக்கு! என்று இந்துத்துவா கும்பல் குரல் கொடுத்துவரும் பின்னணியையும் இதனோடு இணைத்துப் பார்க்கவேண்டும்.

பாரதீய ஜனதா தலைமையில் மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது இராணுவத்திலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்ட வகையில் திணிக்கப்பட்டனர். விமானப் படைத் தளபதியாக இருந்த விஷ்ணு பகவத் அப்பொழுதே இந்தக் கசப்பான உண்மையை வெளிப்படுத்தியதுண்டு.

ஓய்வு பெற்ற 96 இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டனர் என்றால், இதன் பின்னணி எவ்வளவு ஆழமானது _ பலமானது _ பயங்கரமானது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாமே!

மாலேகான் குண்டுவெடிப்பின் முக்கிய சூத்திர-தாரியான இராணுவ அதிகாரி புரோகித் என்ற பார்ப்பனர் இசுரேல் நாட்டின் உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக இந்துத்துவா போட்டி அரசு ஒன்றை நிறுவுவதுவரை திட்ட-மிட்டி-ருந்தனர் என்றால், இவர்கள் எத்தகைய சதி-காரர்-கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்கள் கையாண்ட மடிக்கணினியில் இவையெல்லாம் பதிவாகி இருந்தன.

தமிழ் ஓவியா said...

இந்த சதிகாரர்கள்மீது 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தயார் செய்வதில் முதன்மை வகித்தவர் ஹேமந்த் கார்கரே என்ற காவல்துறை அதிகாரி ஆவார். ஆர்.எஸ்.எஸ். வன்முறைக் கும்பலின் ஆணிவேர் வரை சென்று அலசி எடுத்து அறிக்-கையைத் தயாரித்த இந்த அதிகாரிதான் மும்பை தாஜ் ஓட்டல் தாக்கப்பட்ட கலவரத்தில் மர்மமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலே அவர்கள்கூட காவல்துறை அதிகாரி கார்கரே கொல்லப்பட்டதன் பின்-னணியில் சதியிருக்கிறது_ அது விசாரிக்கப்பட-வேண்டும் என்று சொன்னார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்பு சதிகாரர்கள் 11 பேர்கள்மீதும் மோக்கா என்னும் மகாராட்டிர அமைப்பு ரீதியான குற்றத் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இவர்கள்மீதான வழக்கு நாசிக் நீதிமன்றத்திலிருந்து மும்பை மோக்கா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஓர் அதிர்ச்சியான செய்தி _ மும்பை மோக்கா நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக இந்தப் பதினோரு பேர்கள்மீதான குற்றப் பத்திரிகையை நிராகரித்துவிட்டது.

இந்த அதிர்ச்சி மிகுந்த ஆணையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராட்டிர தீவிரவாத தடுப்புக் காவல்படை மேல்முறையீடு செய்தது.

மோக்கா சட்டத்தின்கீழ் மாலேகான் குண்டு-வெடிப்புக் குற்றவாளிகள் மீது அரசு எடுத்த நட-வடிக்கை செல்லும் என்று தீர்ப்பு வழங்கி _ சட்டத்தின் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றியது.

சிறையில் இருந்து விடுதலையாகி சுதந்திரமாகச் சுற்றித் திரியும் இந்தக் கும்பல் மீண்டும் சிறைக் கொட்டடியில் தள்ளப்பட உள்ளனர்.

இந்துத்துவா காவிக் கும்பல் மிகப்பெரிய சதிப் பின்னணியோடு (வெளிநாட்டுச் சக்திகளுடன் கூடிய தொடர்-போடு) செயல்பட்டு வருகின்றன என்பது_ மாலே-கான் குண்டுவெடிப்பு மீதான விசாரணை வெளிச்-சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. இராணுவத்துறை, காவல்துறை, நீதித்துறை வரை ஊடுருவியுள்ள இந்தக் கும்பலை சட்ட ரீதியாக ஒரு பக்கத்திலும், பிரச்சார ரீதியாக சமூகத்தில் இன்னொரு பக்கத்திலும் ஒடுக்க-வேண்டியது மிகவும் அவசியமாகும். ------விடுதலை -22-7-2010

தமிழ் ஓவியா said...

மோகன் பகவத்தின் முனை முறியாப் பொய்கள்!

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தையும், இந்துக்களையும் தொடர்பு படுத்த முடியாது. பயங்கரவாதம் மற்றும் இந்துக்கள் என்ற சொற்கள் நேர் எதிரான முரண்பாடான பொருள் கொண்டவை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்த முடியாது. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு, குறிப்பிட்ட யாருக்கும் எதிரானதல்ல. எனவே, காவி பயங்கரவாதம் எனக் கூறுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடியவர் இவ்வாறு சொல்லியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இந்துத்துவா அமைப்பின் தலைவர் அவ்வாறு கூறவே கடமைப்பட்டவராகிறார்.

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்ல என்று அவர்கள் சொல்லவில்லையா? நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயும், கோபால் கோட்சேயின் மனைவியும் அதனைத் திடமாக மறுத்துள்ளனரே! இருந்தாலும் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன் அல்ல என்று மறுத்துத் தீரவேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு.

காந்தியாரைச் சுட்டுக் கொல்லுவதற்கு முன் நாதுராம் கோட்சே என்ன செய்தான்? தன்னை ஒரு முசுலிம் என்று திரித்துக் காட்டிக் கொள்வதற்காக சுன்னத் செய்து கொண்டிருக்கிறான் - தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இருக்கிறான். இப்படி கடைந்தெடுத்த பித்தலாட்டம் - மோசடியை இவர்களைத் தவிர வேறு யார்தான் செய்ய முடியும்?

பயங்கரவாதத்தையும், இந்துத்துவாவையும் தொடர்புபடுத்த முடியாதாம் - அப்படியானால், 1992 டிசம்பர் 6 அன்று 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், விசுவ இந்துபரிசத்தினரும், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலும் வன்முறை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கினார்களே - அதற்கு என்ன பெயராம்?

இவர்கள் எல்லாம் இந்துத்துவாவாதிகள் அல்லர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறப்போகிறாரா?

இவர்களின் இந்துத்துவா கதாநாயகனான இராமன், தவம் செய்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அதற்குப் பெயர் வன்முறை யல்லாமல் - நன்முறை என்று பட்டம் கட்டப் போகிறார் களா?

இந்து மதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் வாளாயுதம், வேலாயுதம், அம்பு, வெட்டரிவாள், கதை, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்கின்றனவே - இவை பலாத்காரத்தின் சின்னங்கள் அல்லவா - கொலை காரக் கருவிகள் அல்லவா!

சண்டை போடாத இந்து மதக் கடவுள்கள் உண்டா? கொலை செய்யாத சாமிகள் உண்டா?

தன் உற்றார் உறவினர்களைக் கொல்ல முயன்ற அர்ச்சுனனுக்கு அறிவுரை புகன்று அவர்களைக் கொல்லுமாறு போர்க்களத்தில் அறிவுரை புகன்றானே - அவர்களின் பகவான் கிருஷ்ணன் - அதற்கு என்ன பெயராம்!

யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால், அதைக் கொள்ளை யிடுவது தர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 7, சுலோகம் 24) என்கிறதே இந்து மத சாத்திரம் - இந்தக் கொள்ளையிடுவது என்பதன் பொருள் என்னவோ!

செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங் காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளை யிடலாம்!

(மனுதர்மம் அத்தியாயம் 11, சுலோகம் 13)

பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் என்ப தற்குத் தனி அகராதியை மோகன் பகவத்துகள் தயார் செய்து வைத்துள்ளார்களோ!

வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால், பிராம ணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்யவேண்டும்.

(மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 348)

மனுதர்மம் (வர்ணாசிரமம்) முறைப்படி ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை, அந்தத் தண்டத்தைக் கொண்டே -மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம்.

(மனுதர்மம் அத்தியாயம் 6, சுலோகம் 26)

இவை எல்லாம் பலாத்காரம், பயங்கரவாதம், வன்முறை என்ற பட்டியலில் வராது என்று வெளிப் படையாகச் சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்த முடியாது என்று சொல்லட்டும்!

வன்முறை நடவடிக்கைகளுக்காக மூன்று முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைக்க அடேயப்பா, இத்தனைப் பொய்புரட்டுப் பேச்சா? 20-10-2010

தமிழ் ஓவியா said...



அசோக் சிங்கால் பேட்டி

அசீமானந்தர், குஜராத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மதமாற்றத்தை அதிகம் தடுத்தவர். அவரை எப்படியாவது முடக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டது சோனியா அரசு. அதற்கு ஏற்ப கைது செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன் - என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படிக்கிற விவரம் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க முடியாத அளவுக்குத் திணறுவார்கள். இன்னொரு பழமொழியும் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.

பிடிச் சோற்றில் பூசனிக்காயை மறைக்கப் பார்க்கும் மோசடி இது என்பது எடுத்த எடுப்பிலேயே புரிந்துவிடும். அதுவும் காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டாம் - அப்படி அவர் நம்புகிறாராம்.
எந்த எல்லைக்கும் சென்று புளுகுவது, உண்மைகளை திரிப்பது என்பது இந்தத் திரிநூல் கூட்டத்துக்கு கைவந்த கலையாகும்.

அந்தப் பாணியிலேயே இந்த வி.எச்.பி. முதியவரும் மனம் போன போக்கில் பிதற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பிஜேபியினர், சங்பரிவார்க் கூட்டத்தினர்கூட ஜெயேந்திர சரஸ்வதியின் கைதுக்கு சோனியாதான் காரணம் என்று சொன்னதில்லை.

அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்ததுகூட கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்கள் வேறு எப்படிதான் சொல்வார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

அய்தராபாத் மக்கா மஸ்ஜித் 2007 மே 17ஆம் தேதி குண்டு வெடிப்புக்கு இலக்கானது. ஒன்பது பேர் பலியாகினர்.

தொடக்கத்தில் இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம், சிமி இயக்கத்தைச் சேர்ந்த முசுலிம் தீவிரவாதி கள்தான் என்று 70 பேர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

அதன்பிறகுதான் காவி தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணமானவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் ஒன்பது பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மிக முக்கியக் குற்றவாளியான சுனில்ஜோஷி, அப்ரூவராக மாறி விடுவாரோ என்ற சந்தேகத்தின் பெயரில் சங்பரிவார்க் கும்பலாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான அசீமானந்தர் என்ற சாமியார் வசமாக சிக்கிக் கொண்டார்.

இந்தியன் குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) 164ஆம் பிரிவின்கீழ் மாஜிஸ்டிரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்தச் சாமியார் உண்மைகளைக் கக்கிவிட்டார். இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்றும் அடையாளம் காட்டியுள்ளார்.

ஆனால் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறுகிறார் - அசீமானந்தர் ஒன்றுமே தெரியாத பாப்பா மாதிரி அவரிடம் தவறாக வாக்குமூலம் வாங்கி விட்ட தாகக் கரடி விடுகிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடித்த, மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்துத்துவா காவி தீவிரவாதிகள் இருக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் அந்துலேயே கூறிடவில்லையா?

“Who Killed Karkare?’’ என்னும் விரிவான நூலினை மகாராட்டிர மாநில காவல்துறை முன்னாள் தலைவர் முஷ்ரப் எழுதியுள்ளாரே, இதுவரை மறுப்பு உண்டா?

தன் உயிருக்குக் குறிவைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுடப்படுவதற்குமுன்புகூட தம்மிடம் கூறியதாக திக் விஜய்சிங் அடித்துச் சொல்லியுள்ளாரே! கார்கரேயின் மனைவிக்கும் அந்த சந்தேகம் இருந்து வருகிறதே!

அஜ்மீர் தர்கா, அய்தராபாத் மெக்கா மசூதி, மகாராட்டிர மாநில மாலேகான்குண்டு வெடிப்பு - இவை மூன்றுக்கும் காரணமானவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மத்தியப் பிரதேச மால்வா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அத்தனைப் பேரும் இந்துத்துவா காவிக் கும்பல்காரர்கள் என்பதற்கான தடயங்கள் (உரையாடல்கள் உள்பட) வலுவாகக் கிடைத் துள்ளனவே.

இவற்றிற்குப் பிறகும்கூட விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் காவிக் கும்பலின் கற்புக்கு உத்தரவாதம் கொடுப்பது சொல்லுபவர்களின் யோக்கிய தாம்சத்தின் முகத்திரையைத்தான் கிழித்துக் காட்டும்.

காந்தியாரைப் படுகொலை செய்தவன் இந்து அல்ல - முசுலிம்தான் என்று பிரச்சாரம் செய்த கும்பல் அல்லவா! நாதுராம்கோட்சே என்ற அந்தக் கொலைகார மராட்டிய பார்ப்பான் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருக்கவில்லையா?

அதே ரகத்தில்தான் சிங்கால் பேட்டி கொடுத்துள்ளார். இந்தப் பொய் முகங்களை மக்கள் அடையாளம் காண்பார்களாக! 1-2-2011