Search This Blog

18.6.13

ஜாதி வெறி வளருவதற்கு இடம் அளிக்காது S.C., S.T., S.C.(A)., MBC., OBC., OBC(M) என்று குறிக்கவும்!

ஜாதி, தீண்டாமை ஒழிப்பு - இடஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு  - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை!

மூன்று முத்தாய்ப்பான தீர்மானங்கள்
சமூகநீதி, வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, தூக்குத் தண்டனை ரத்து உள்ளிட்ட முத்தாய்ப்பான 13 தீர்மானங்கள்
திண்டுக்கல் பொதுக் குழுவில் ஒரு மனதாக நிறைவேறின
திண்டுக்கல், ஜூன் 15- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை உள்ளிட்ட 13 முத்தாய்ப் பான தீர்மானங்கள் - திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களின் தலை மையில் இன்று (15.6.2013) திண்டுக் கல்லில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் குழுவில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1
இரங்கல் தீர்மானம்
தமிழ் பத்திரிகை உலகில் சாதனை படைத்த அருந்தமிழர் தினத்தந்தி அதிபர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் (வயது 76, மறைவு 19.4.2013), புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நெடுங்காடு ப.சண்முகம் (வயது 86, மறைவு 2.2.2013), தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தந்தை பெரியார் பற்றாள ருமான கே.சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்., (வயது  87, மறைவு 27.5.2013), தி.மு.க. மகளிரணியின் முன்னாள் மாநில செயலாளர் பொற்செல்வி இளமுருகு (மறைவு 6.2.2013), உலகத் தமிழர் பேரவையின் நிறுவனர் டாக்டர் இரா.ஜனார்த்தனம் (மறைவு 20.2.2013), தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஜி.வெங்கட்ராமன் (வயது 82, மறைவு 21.2.2013), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் கமுதி பஷீர் (19.3.2013), மாணவர் பருவந்தொட்டு இயக்க ஈடுபாட்டுடன் சீரிய பகுத்தறி வாளராக வாழ்ந்து வந்த ஈரோடு புலவர் ஆறுமுகனார் (மறைவு 13.2.2013), முதுபெரும் பொதுவுடைமை இயக்க வீரர் செங்கம் ஆர்.ஆர்.இராமசாமி (வயது 92, 29.5.2013), நாகர்கோவில் சுயமரியாதை வீரர் அலிஷேக் மன்சூர் (வயது 85, மறைவு 3.3.2013), சிங்கப்பூர் நிழற்பட கலைஞர் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.வி.நாதன் (மறைவு 28.12.2012), தமிழ்த்திரைப்பட உலகில் சிறந்த பின்னணிப் பாடகராக விளங்கிய டி.எம்.சவுந்தரராசன் (வயது 90, மறைவு 25.5.2013) ஆகியோரின் மறைவிற்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், தந்தை பெரியார் அவர்களின் உரையை ஒலிநாடா மூலம் பதிவு செய்து ஆவணப்படுத்தி இயக்கத்திற்குத் தந்த திருச்சி து.மா.பெரியசாமி (வயது 86, மறைவு 12.3.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் சீரிய இயக்கத் தோழர் குடவாசல் வீ.கல்யாணி (மறைவு 15.3.2013), முன்னாள் ஆசிரியர் ஆத்திநாட்டார் (வயது 77, மறைவு 2.4.2013), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டநாகன் பட்டி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நா.திரு மலைசாமி (வயது 78, மறைவு 15.4.2013), செங்குன்றம் - வடகரை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் டி.முனுசாமி (வயது 97, மறைவு 3.4.2013), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் அரியலூர் - வாலாஜா நகரம் வா.கந்தசாமி (வயது 91, மறைவு 9.4.2013), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஆனைமலை ஏ.எம்.திருமூர்த்தி (வயது 93, மறைவு 3.12.2012), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நீடாமங்கலம் - ரொக்கக்குத்தகை காளாஞ்சிமேடு வை.கணேசன் (மறைவு 24.12.2012), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நீடாமங்கலம் - இராயபுரம் வ.காத்தையன் (வயது 86, மறைவு 11.2.2013), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குடந்தை சோழபுரம் முருகேசன் (வயது 80, மறைவு 20.5.2013), திருவையாறு நகர திராவிடர் கழகத் தலைவர் ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் (வயது 80, மறைவு 17.4.2013), மேட்டூர் நகர திராவிடர் கழக அமைப்பாளர் முத்து (வயது 55, மறைவு 4.1.2013), சிவகங்கை முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வேல்சாமி (மறைவு 27.1.2013), வேலூர் - கழிஞ்சூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் ஏ.சொக்கலிங்கம் (வயது 94, மறைவு 28.1.2013), மதுரை - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திராவிடர் தொழிலாளர் சங்கத்தின் துணைச் செயலாளர் எஸ்.முருகேசன் (மறைவு 7.2.2013), வேலூர் சத்துவாச்சாரி பெரியார் பெருந்தொண்டர் ச.நா.சோமு (வயது 75, மறைவு 11.2.2013), குடந்தை பெரியார் பெருந்தொண்டர் ஏ.எஸ். இராசசேகரன் (வயது 76, மறைவு 23.2.2013), கரூர் - புலியூர் கழக செயலாளர் ஆசிரியர் மு.கந்தசாமி (மறைவு 9.2.2013), ஆவடி உண்மை வாசகர் வட்ட செயலாளர் செயவேல் (மறைவு 24.2.2013), வேலூர் சலவன்பேட்டை வெ.முனிரத்தினம் (வயது 76, மறைவு 24.2.2013), வேதாரண்யம் ஒன்றிய கழகத் தலைவர் த.கிருட்டிணன் (மறைவு 25.2.2013), குடியாத்தம் வாசகர் வட்ட தலைவர் வி.எஸ்.இந்திரபூபதி (மறைவு 9.3.2013), அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் மகன் துலிப் அழகிரி (வயது 85, மறைவு 17.3.2013), தண்டரம்பட்டு பா.சீனிவாசன் (வயது35, மறைவு 23.3.2013), தஞ்சை பகுத்தறிவாளர் கழகத் தோழர் பொன்.நடராசன் (வயது 76, மறைவு 26.3.2013), நல்லாசிரியர் அம்மன்பேட்டை ச.அப்பாசாமி (வயது 93, மறைவு 5.4.2013), திருவெற்றியூர் ஓவியர் சம்பத் (வயது 74, மறைவு 11.4.2013), காட்டுக்கூடலூர் ஆசிரியர் பொய்யாமொழி (வயது 81, மறைவு 19.4.2013), புதுச்சேரி கழக மகளிரணியைச் சேர்ந்த நாகம்மை (மறைவு 7.4.2013), அருப்புக்கோட்டை மனநல மருத்துவர் இர.குணசீலன் (வயது 67, மறைவு 17.5.2013), தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு அவர்களின் தம்பியும், பெரியார் பெருந்தொண்டருமான கோ.வெங்கட்ராமன் (வயது 80, மறைவு 25.5.2013), கருநாடக மாநிலம் பெங்களூரு கமனஹள்ளி கழக செயலாளர் கோ.இரவிச்சந்திரன் (மறைவு 6.5.2013), சட்ட எரிப்பு போராட்ட வீரர் பட்டுக்கோட்டை தியாகராஜன் ஆகிய கழகப் பெருமக்களின் அரும்பெரும் தொண்டுக்கு இப்பொதுக்குழு வீரவணக்கம் செலுத்தி, அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதுடன், அவர்களின் பிரிவால் துயரம் அடையும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் இப்பொதுக்குழு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது!

தீர்மானம் எண்: 2
ஜாதி தீண்டாமை ஒழிப்பு
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்று - பிறவியை அடிப்படையாகக் கொண்டு, நம் நாட்டில் புகுத்தப்பட்ட பெரும் தீமை ஜாதி என்ற கொடுமையாகும்.

திராவிட சமுதாயத்தில் தொடக்கத் தில் இல்லாத இந்த ஜாதி முறை ஆரியத்தாலும், அதன் வேத, புராண, இதிகாச, அதர்ம சட்ட நூல்களாலும் புகுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மக்களுக்குக் கல்வி அறிவைத் தடுத்தும், அதன் காரணமாக உயர்குடிகளின் குற்றேவல் அடிமை களாகவும், பிறவி உழைப்பாளிகளாகவும் தீண்டக்கூடாதவர், பார்க்கக் கூடாதவர் என்று நம் மக்களுக்குள்ளேயே பேத வாழ்வை நிலை நிறுத்தியும் வந்துள்ளதால் நாம் இழந்த தன்மானம் தன் உரிமைகளும் அநேகம் ஆகும்!
அறிவியல் ரீதியாகவும் ஜாதி என்பது ஆதாரமில்லாத, ஆதிக்கவர்க்கத்தின் கட்டு என்பதற்கு - ரத்த தானம், மனித உறுப்புக்கொடைகள் - தரும்போது அந்த ஜாதியினுடையது - அந்தந்த ஜாதிக்குத் தான் பொருந்தும் என்பதல்லாமல், உடற்கூறு அறிவியல்படி பொருத்தப் படுவதே தக்க சான்றாகும்.
தந்தை பெரியாரும், அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கங்களும் ஜாதி ஒழிப்பை தமது இயக்க லட்சியங்களில் மிகவும் அடிப் படையானதாகக் கருதி, அந்த இலக்கு நோக்கியே பிரச்சாரம், கிளர்ச்சி முதலியவற்றில் ஈடுபடுகின்றன.

தந்தை பெரியார் அவர்களின் இந்த ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம், அவர்கள் காங்கிரசில் இருந்தபோதே வைக்கம் சத்தியாகிரகத்தில் தொடங்கி (1924 இல்),  சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் (1925 இல்) உள்பட அவர்தம் இறுதி மூச்சடங்கும் 1973 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தது.

சென்னையில் டிசம்பர் 8, 9 (1973) ஆகிய நாள்களில் அவர்கள் நடத்தி, போராட்டம் அறிவித்த தமிழர் சமுதாய இழிவு  ஒழிப்பு மாநாட்டில் தீர்மானமாகவே, ஜாதியை அரசியலமைப்புச் சட்ட ரீதியாக ஒழித்திட வற்புறுத்தினார்.

இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவின்படி, தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்திலும் கடைப்பிடிப்பது சட்டப்படிக் குற்றம் என்பதாக உள்ளதில்,
தீண்டாமை என்ற சொல்லை நீக்கிவிட்டு, ஜாதி என்ற சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்துக! அத்துடன் விளக்கமாக (அதன்கீழ்) ஜாதி என்பது தீண்டாமையையும் உள்ளடக்கியதே என்றும் விளக்கி,
அரசியல் சட்டத்தைத் திருத்தவேண் டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம், காலங்கருதி செய்யப்பட்ட மிக உயர்ந்த சமூகப்புரட்சித் தீர்மானம் ஆகும்.
இன்று இந்தியாவின் பல பகுதிகளில் ஜாதி மோதல்களும், ஜாதி பஞ்சாயத்துக்களும் மலிந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று கூறப்படும் நம் நாட்டு ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது!
எனவே, உடனடியாக ஜாதியை (தீண்டாமை இணைந்த) சட்ட விரோதமாக்கிட இந்திய அரசியல் சட்டத் திருத்தம் அவசரத் தேவை என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 3
இட ஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு
பல்லாயிரம் ஆண்டுகளாக அந்த ஜாதி முறை காரணமாக, கீழ்ஜாதியாக்கப்பட்ட மக்களுக்கு, கல்வி, உத்தியோக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, தற்குறிகளாகவும், அதனால் உடலுழைப்புச் செய்யும் கூலித் தொழிலாளர்களாகவுமே பெரும்பான்மை மக்கள் ஆக்கப்பட்ட கொடுமை நீடித்தது.

அதிலிருந்து பெரும்பாலான மக்களை, (பெண்கள் உள்பட) மீட்டெடுக்கவே, சமூகநீதி என்ற பெயரில் இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட பல்வேறு பிரிவினர்களுக்கு வாய்ப்புத் தரும் சட்டப் பாதுகாப்பு, பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு திராவிட இயக்கத்தால் பெற்றுத் தரப்பட்டது.
அதன் காரணமாகத்தான் ஓரளவுக்காவது ஒடுக்கப்பட்ட மக்களின் பல பிரிவினர் இன்று கல்வி, உத்தியோகங்களில் அமர்ந்துள்ள சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி ஜாதி சட்டப்பூர்வமாக ஒழிக்கப்படும் நிலையில்,
குறிப்பிட்ட காலம்வரை இந்தக் கல்வி, உத்தியோக ஒதுக்கீடு என்ற சமூகநீதி தொடர வேண்டிது காலத்தின் கட்டாயம் ஆகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் சமூகக் கொடுமைகளில் அவதிப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உயர்த்திட, ஒரு நூற்றாண்டு என்பதுகூட ஒரு சிறு காலகட்டம்தான் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது விதியில் எப்படி தீண்டாமை ஒழிப்பு என்பதால், அவர்களுக்குரிய கல்வி, உத்தியோக இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டதோ, அதுபோலவே, ஜாதி ஒழிந்தது என்ற சட்டத் திருத்தத்திற்குப் பின்பு, சமூகநீதி பாதுகாக்கப்பட உத்தரவாதம் தொடரப்படவேண்டும்.

தனித்தனி ஜாதிகள் என்று பிரித்து, அதன்மூலம் ஜாதி வெறி வளருவதற்கு இடம் அளிக்காது, அதற்குப் பதிலாக S.C., S.T., S.C.(A)., MBC., OBC., OBC(M) என்பது போன்று குறித்தால் போதும் என்பதோடு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்டு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதியற்ற பிரிவினர் என்பதைச் சுட்டும் வகையில் I.C.Quota (Inter Caste Quota) என்பதை சிறிதாகத் தொடங்கி, (மற்ற பிரிவுகளிலிருந்து சில விகிதங்களை எடுத்து) முதலில் 5 பிறகு 10 சதவிகிதம் என்று படிப்படியாக அதிகரித்து, மற்ற மற்ற இட ஒதுக்கீட்டின் அளவைக் குறைத்துக்கொண்டே வரும் ஏற்பாட்டினையும் சட்ட ரீதியாகச் செய்ய மத்திய - மாநில அரசுகள் முன்வரவேண்டும்.
ஜாதி ஒழிப்பு என்ற இலக்கைப் பெரிதும் அடையும் வரையில், ஒரு குறிப்பிட்ட கால வரையறையும்கூட வரையறுத்துவிடலாம்; ஜாதி ஒழிப்புக்கு நாம் கொடுக்கும் விலையாகக்கூட அதனைக் கருதலாம்.

முன்னேறிய ஜாதியினர் என்ற பிரிவுக்கு என (அவர்கள் 10 விழுக்காட்டிற்கும் குறைவு என்பதால்)  FC என்று தருவதற்கும் நமக்கு (வகுப்பு விகிதாச்சாரம் என்பதுதான் இந்த இயக்கக் கொள்கை தொடக்கத்திலிருந்து என்பதால்) எந்தவித சங்கடமும் இல்லை. 10 சதவிகிதம் போக மீதி 90 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்கவும் வழி செய்யப்பட்டுவிடும்.

இந்தப் புதிய ஏற்பாட்டின்படி, அனைவருக்கும் அனைத் தும் என்பது கிட்டும் வகை ஏற்படும்!

ஜாதிக் கலவரங்கள் என்பவை கடுமையான தண்டனைக் குரிய குற்றங்களாகவும், சட்டப்படி அறிவிக்கப்படல் வேண்டும்!
இதன்மூலம்தான் - துளியும் ரத்தம் சிந்தாத - நாடே சமத்துவபுரமாக மலர்ந்திட வழிவகை ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 4

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - உடனடியாக அமலாக்கம்பற்றி...

தந்தை பெரியார் அவர்கள் விரும்பிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பை உருவாக்கிட 1972 ஆம் ஆண்டிலும், பிறகு கலைஞர் தலைமையில் 2006 ஆம் ஆண்டிலும் சட்டமாக்கி, அதனையொட்டி, ஆகமக் கல்வி 69 சதவிகித இட ஒதுக்கீட்டுப்படி வைணவ, சைவக் கோவில் களில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் தேர்வு பெற்றுள்ள 206 பேர்களையும், தமிழ்நாட்டு முக்கியப் பெருங்கோவில்களில் அர்ச்சகராக நியமித்து - கேரளாவில் உள்ளதுபோல் - பூஜை செய்யும் ஏற்பாட்டை உடனடியாகத் தொடங்க, தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
முன்பு ஒருமுறை தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் செயல்படவிடாமல் பார்ப்பனர்களின் முயற்சியால் உச்சநீதிமன்றத்தில் முடக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் உள்ள தடையாணையையும், வழக்கினையும் - தமிழக அரசின் சட்டம் - இந்திய அரசியல் சட்டத்தின் 25, 26 ஆவது பிரிவுகளுக்கு எவ்வகையிலும் முரண்பட்டதல்ல என்பதை வலியுறுத்தி, இப்போதுள்ள அரசும், முதல்வரும் - எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தகாலம் முதற்கொண்டு, இதனை செயல்படுத்த வாக்குறுதிகளை சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும் தந்துள்ள நிலையில், உடனடியாக இதற்குமுன் இது அளவற்ற காலதாமதம் ஆகியுள்ளதாலும், பயிற்சி பெற்ற 206 பேர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இப்பணிகள் தேவை என்ற வறுமை நிலையில் உள்ளதைத் தவிர்க்கவும், உச்சநீதிமன்ற வழக்கில் சட்டத்தின் நோக்கத்தினை நிறைவேற்றிடும் வகையிலான அணுகுமுறையை - செயல்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக அரசை, குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இப்பொதுக்குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் இதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் - சட்டமன்றத்திலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இது வெறும் அர்ச்சகர் நியமனப் பிரச்சினை மட்டுமல்ல; ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் மிக முக்கிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் ஆகும் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

உச்சநீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கில் சுமுகமாக வெளியில் பேசித் தீர்த்துக்கொள்வோம் என்று கூறி, பல மாதங்கள் ஓடிய நிலையில், அதைப்பற்றிய தெளிவு அரசுத் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. 206 பயிற்சியாளர்கள் முக்கியமான சைவ, வைணவ கோவில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற நிலையில், அவர்களைப் பணி நியமனம் செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
இதுபற்றி ஒரு உறுதிமொழி விளக்கத்தை செயல் முறையை தமிழக அரசு அளிக்கவேண்டும் என்று இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் செய்யவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இல்லையேல், ஜாதி, தீண்டாமை ஒழிப்பை முன்னிறுத்தும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலையை உருவாக்க தேவையான போராட்டத்தில் ஈடுபடுவது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்: 5 (அ)

சமூகநீதித் திசையில் செய்யப்படவேண்டியவை

சமூகநீதித் திசையில் கீழ்க்கண்டவை நிறைவேற்றப்பட வேண்டியவையாகும்.

(1) பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு.

(2) இட ஒதுக்கீடு எத்தனை சதவிகிதம் என்பதை மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை

(3) 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்ற நிலை மாற்றப்படுதல்

(4) பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரைப் புகுத்தி இருப்பதை அறவே நீக்குதல்

(5) மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவிகிதத்தினை முழுமையான அளவில் உடனடியாகச் செயல்படுத்துதல்

(6) விதி விலக்கின்றி நீதிபதி பதவிகள், அறிவியல் துறைகள் உள்பட கல்வி, வேலைவாய்ப்புகளில் அனைத்துத் துறைகளிலும் , அனைத்துத் தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளித்தல்

(7) தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்புச் சட்ட அதிகாரம் வழங்குதல்

(8) அனைத்து அகில இந்திய தேர்வுகளையும் தாய்மொழியில் எழுதிட வாய்ப்பு அளித்தல்

இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம், புதிய ஆணைகள் உள்பட பிறப்பித்து, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களின் வளர்ச்சிக்கு ஆவன செய்யவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5 (ஆ)
பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் 1996 ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் இருப்பதால், இனியும் காலதாமதம் செய்யாது,
உள் ஒதுக்கீடுடன் கூடிய சட்டத்தை உடனடியாக நிறை வேற்றுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்து கிறது. சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள் இதற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி, மத்திய அரசையும் வலி யுறுத்தவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள் கிறது.

தீர்மானம் எண்: 5 (இ)
ஆசிரியர் தகுதி தேர்வு - சமூகநீதிக்கு விரோதமான தமிழக அரசின் செயல்பாடு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், சமூகநீதிக்கு விரோதமாகவும், தேசிய கல்விக் கழகத்தின் வழிகாட்டு தலுக்கு விரோதமாகவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், உயர்ஜாதி அனைவருக்கும் ஒரே அளவு தகுதி மதிப்பெண்ணை (60 சதவிகிதம்) நிர்ணயித்து இருப்பதை திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியும், அதுகுறித்துச் சிந்திக் காமல் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு அறிவித் திருப்பது - சமூகநீதிக்கு வெட்டப்படும் படுகுழி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.
இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், செய்த தவறைத் திருத்திக் கொண்டு, தமிழ் மண்ணுக்கே உரிய சமூகநீதி உணர்வைக் கட்டிக் காக்குமாறு தமிழ்நாடு அரசை - குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 6
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக!
தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமும், தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் கொடுக்கக் கூடியதும், அந்நிய செலாவணியை நம் நாட்டுக்கு அளிக்கக் கூடியதுமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ராமன் பெயரைச் சொல்லி, மதவாதத்தைப் புகுத்தி முட்டுக்கட்டை போடும் சக்திகளுக்கு இப்பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மைக் கண்ணோட்டத்தில், இந்தப் பிரச் சினையை அணுகி, மக்கள் வளர்ச்சிக் கண்ணோட்டத்தோடு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து, தமிழர்கள் எதிர்பார்க்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைவில் நிறைவேற்றிக் கொடுக்குமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது.

தீர்மானம் எண்: 7
காவிரி நீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரப் பரிகாரம் தேவை!

தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியும், உரிமைப்படியும் கிடைக்க வேண்டிய காவிரி நீர், கருநாடக அரசின் அடாவடித் தனத்தால் கிடைக்க முடியாமல் போய், தமிழ்நாட்டில் விவ சாயமும், அதனை நம்பி வாழும் கோடானுகோடி மக்களும், உணவுப் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த தமிழகமும் கடந்த 40 ஆண்டுகாலமாக சொல்லொணாத துன்பத்தை அடைந்து வருகிறது.
உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் ஆணை யிட்டாலும் அதனை நிறைவேற்றாமல், சட்ட விரோத ஆட்சிகளாக (எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும்) நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு விரோதமான அரசியல் போக்கை அம்மாநில மக்களிடம் வளர்த்து வருவதும் ஆபத்தான போக்காகும்.

இந்த நிலையில், நடுவர் மன்றத்தின் ஆணை மிகக் காலந்தாழ்ந்து அரசு கெசட்டில் வெளியிடப்பட்டாலும், காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் இது ஒரு முக்கிய கட்டமேயாகும்.

அதன்படி காவிரி நீரைக் கட்டுப்படுத்தும் நிரந்தர காவிரி மேலாண்மைக் குழுவை (தற்போதுள்ளது தற்காலிகக் குழுவே!) உடனடியாக ஏற்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்டு அய்ந்தாண்டு காலம் ஆகிவிட்டதால், விதிப்படி மறுஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று கருநாடக அரசு கூறியிருப்பது - பிரச்சினையைத் திசை திருப்புவதாகும். நடுவர் மன்ற தீர்ப்பு கெசட்டில் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்தேதான் மறு ஆய்வுக்குரியது (2018 இல்தான்) என்பதையும் இப்பொதுக் குழு சுட்டிக்காட்டி,
காவிரி நதிநீர்ப் பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதை மேலும் நீட்டிக்காமல் தொடர்ந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள தமிழ்நாட்டை மேலும் வஞ்சிக் காமல் உடனடியாக சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்பாட்டை செய்திடுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
கருநாடக அரசு ஒத்துழைக்க மறுத்தால் மத்திய அரசே தனது நேரடிக் கண்காணிப்பில் நாட்டின் அணைகளை அவசர சட்டத்தின்மூலம் எடுத்து, தமிழ்நாட்டு விவசாயி களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கருநாடகத்தைப்போல எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் உரிமைபற்றி முழங்கவேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவதை நிறுத்தி, ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கவேண்டும் என்று அனைத்து சமூக மற்றும் அரசியல் கட்சிகளையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
காவிரி டெல்டா விவசாயிகள் நலனைப் பாதிக்கும் வகையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை அரசு உடனே கைவிடவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது.

ஒரே நிரந்தரத் தீர்வு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்தி, அதன் அளவீடுப்படி கருநாடகம் தமிழ் நாட்டிற்குக் காவிரி நதிநீரைத் தரும் வகையில் காவிரி மேலாண்மைக் குழுவினை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அமைக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8
ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு நிரந்தர தீர்வு தேவை!

தமிழர்களின் பூர்வீகமான ஈழத்தில் ஒட்டுமொத்தமான தமிழர்கள் ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கும் கொடுமை எழுத்துக்களால் வருணிக்கப்பட முடியாது.
இலங்கையில் இருப்பது இரு இனம் அல்ல - ஒரே இனம் - அது சிங்கள இனம்தான் என்னும் தன்மையில், அரச பயங்கரவாதமாக செயல்பட்டுவரும் சிங்கள இனவாத அரசோடும், மக்களோடும் இணைந்து ஈழத் தமிழர்கள் வாழ்வது நடைமுறை சாத்தியம் இல்லை என்றாலும், இன்றைய நிலையில், உடனடியாக ஈழத் தமிழர்கள் சுயமரியாதையோடும், வாழும் உரிமையோடும் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை உரிமைகள் அளிக்கப்படவேண்டும். இது உலகத் தமிழர்களின் எண்ணம் மட்டுமல்ல - மனித உரிமை, மனிதநேயம் விரும்பும் அனைத்து உலக மக்களின் விருப்பமும், எதிர்பார்ப்புமாகும்.
ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட 13 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையும் உருக்குலைக்கும் ஒரு வேலையில் இலங்கை அரசு இறங்கி இருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டி ருக்கக் கூடாது என்றும், ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந் தத்தில் கூறப்பட்டுள்ளதை நிலை நிறுத்துவதற்கு இந்திய அரசுக்கு அடிப்படைக் கடமை, தார்மீக உரிமை இருக்கிறது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு அவசியம் தேவை; சிங்களப் பகுதிகளோடு ஈழத் தமிழர் பாரம்பரியப் பகுதிகளை இணைப்பதைக் கைவிடுவது, ஈழத் தமிழர் பூர்வீகப் பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவத்தை அப்புறப்படுத் துவது, ஈழத் தமிழர்களின் ஊர்ப் பெயர்களை சிங்கள மயமாக்கியிருப்பதை விலக்கிக் கொள்வது, ஈழத் தமிழர் களுக்குக் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்புகளில் உத்தரவாதம், பொருளாதார வளர்ச்சி - இன்னோரன்ன வாழ்வுரிமைகள் தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட இந்திய அரசு அனைத்துச் செல்வாக்கையும் பயன்படுத்தியும், உலக நாடுகளின் ஆதரவை இந்த வகையில் திரட்டியும், அழிக்கப்பட்டுவரும் வரலாறு படைத்த ஈழத் தமிழர்களின் வாழ்வில் ஒளி யேற்றுமாறு இப்பொதுக்குழு இந்திய அரசை வலி யுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9
தமிழக மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு - கச்சத்தீவு மீட்பே!

தமிழக மீனவர்கள் பரம்பரைப் பரம்பரையாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் மீன் பிடிக்கக் கூடாது என்றும், கச்சத்தீவு எங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, போர்க் கப்பலை நிறுத்தியும், தமிழக மீனவர்களைத் தாக்கியும், படகுகளையும், மீன்களையும் பறிமுதல் செய்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், வெறியாட்டம் போடும் இலங்கைக் கடற்படையின் கொடுமைக்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், இதற்கு நிரந்தரப் பரிகாரத்தைக் கோருவதோடு, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்குச் சொந்தமாக்குவது என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே கருத்து என்பதையும் இப்பொதுக்குழு மத்திய அரசுக்கு வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு உடனடியாக ஆவன செய்யவேண்டும் என்றும் மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது!

தீர்மானம் எண்: 10
இயற்கைச் செல்வங்களைப் பாதுகாத்திடுக!

சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் பல வகைகளிலும் அல்லலுக்கு ஆளாக்கப்படுவதற்குக் காரணம் இயற்கைச் செல்வங்களை அழிப்பதாகும்.
காடுகள் பராமரிப்பை அரசு முக்கியமாக எடுத்துக் கொள்வதோடு, கனிம வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முன்வரவேண்டும்; இவற்றை எக்காரணம் கொண்டும் தனியாரிடத்தில் ஒப்படைக்காமல், அரசு வசம் இருக்க வேண்டும் என்றும், இவற்றைக் கண்காணிக்க நிபுணர்கள் - மலைவாழ் மக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஓர் ஆணைக் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அரசுகளை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 11
கூலிப்படைகளை ஒடுக்குக!

நாட்டில் வன்முறைகள், படுகொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் என்பது அன்றாட செய்திகளாகிவிட்டன. நாகரீகமான சமுதாயத்தில் நாம் வாழ்கிறோமா என்ற வினாவைத்தான் இந்நிலை எழுப்புகிறது.
கூலிப்படைகள், கட்டப் பஞ்சாயத்துகள் என்கிற போக்குகள் மனித சமூகத்தின் நாகரிகத்துக்கும், அமைதி வாழ்வுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருப்பதால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், தண்டிப்பதிலும் மத்திய - மாநில அரசுகள் பெரும் அளவுக்கு அக்கறை கொண்டு குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கவேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத் துகிறது.

காவல்துறையை நவீனப்படுத்தி, போதிய எண்ணிக் கையில் காவலர்களை அமர்த்தி, நேர்மையான முறையில் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

இளைஞர்கள் வன்முறையின் பக்கம் திரும்புவதற்கான காரணங்களைக் கண்டறிந்து கல்வி முறை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்ப தோடு, ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மக்களுக்குப் பயன்படும் வகையில் நன்னெறிகளை ஊக்கப்படுத்தி செயல்படுவதற்கான விதிமுறைகளைப் புகுத்தவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 12
தூக்குத் தண்டனையை ரத்து செய்க!
தூக்குத் தண்டனை மனித நாகரிகத்துக்கு எதிரானது என்பதாலும், கொலைக்குக் கொலை பரிகாரம் ஆகாது என்பதாலும், உலகின் பெரும்பாலான நாடுகளில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு இருப்பதாலும் இந்தி யாவில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 13
பயிற்சி முகாம்கள்
வரும் ஜூலையில் தேனி மாவட்டம் சுருளியிலும் (அருவி), ஆகஸ்டில் காரைக்குடியிலும், செப்டம்பரில் திருவண் ணாமலை மற்றும் குன்னூரிலும், அக்டோபரில் கல்வராயன் மலையிலும் (கல்லக்குறிச்சி) பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

                           ------------------------”விடுதலை” 15-6-2013

54 comments:

தமிழ் ஓவியா said...



கோவையில் ஜூன் 16இல் ஜாதிமறுப்பு இணைதேடல் மன்றல் பெருவிழா


கோவை, ஜூன் 15- பெரியார் சுயமரியாதைத் திருமணம் 1974-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னையில் உள்ள பெரியார் திடலைத் தலைமையிடமாகக் கொண்டு தொடர்ந்து 40 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை இத்திருமண நிலையம் நடத்திவைத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் இத்திருமண நிலை யத்தின் மூலமாக தங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து மணம் முடித் துள்ளனர். முற்றிலும் வணிக நோக்கின்றி சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வெற்றியையே கருத்தில் கொண்டு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடைபெற்று வருகிறது.

எண்ணற்ற ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மண முறிவு - துணையை இழந்தோர் மறுமணம் ஆகிய வற்றை நடத்தி வைத்திருந்தாலும், இந்த வாய்ப்பைப் பரவலாக எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழ் நாடெங்கும் இதன் கிளைகள் விரிவு படுத்தப் பட்டன. இன்றைய சமூகச் சூழலில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யத் தயாரானவர்களுக்கும் அவர்கள் விரும்பும் இணையர் (வாழ்க்கைத் துணை) கிடைப்பதில் இருக்கும் தாமதத்தையும், குறை களையும் போக்கும் வண்ணம் பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும் வண்ணம் மன்றல் என்னும் நிகழ்ச்சியினை கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்திவருகிறது. சென்னையில் கடந்த 2012- ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் மன்றல் தொடங்கப் பட்டது. தமிழகம் முழுக்க இருந்து 300க்கும் அதிகமான குடும்பங்கள் பங்கேற்றுப் பலன டைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் கவரும் வண்ணம் திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பட்ட அமைப்புகளும், சங்கங்களும் பல வழிகளிலும் தங்கள் பங்களிப்பை அளித்துவருகின்றனர்.

வரும் 16.6.2013 ஞாயிற்றுக்கிழமை கோவையில் தமிழகத்தின் மாபெரும் ஜாதி மறுப்பு இணை தேடலான மன்றல் நடைபெறுகிறது. பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்துடன் கோயம் புத்தூர் அரிமா சங்கமும் இணைந்து இந்நிகழ்ச் சியை வழங்குகிறது.

மன்றல் கோவை, சிவானந்தா காலனியிலுள்ள அரிமா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுவருகின்றன. கோவை மண்டலம் முழுக்க விளம்பரங்கள் செய்யப்பட்டு, அதன் மூலம் பலரும் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பு வோருக்கான மிகப்பெரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமையும். அது தவிர, மத மறுப்புத் திருமணம், மண முறிவு பெற்றோர், துணையை இழந்தோர் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவுகளும் உணடு. மாற்றுத் திறனாளிகளுடன் மண வாழ்க்கை அமைத்துக் கொள்ள விரும்புவோருக்கான சிறப்புப் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் பங்கேற்க வருவோருக்கு குருதிப் பரிசோதனை செய்யவும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கவும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மன்றல் நிகழ்ச்சி 16.6.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணியளவில் தொடங்கும். பதிவு செய்ய வருவோர் தொடர்ந்து தங்களைப் பதிவு செய்து கொள்வர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். காலை 10 மணி யளவில்நடைபெறும் தொடக்க விழாவில் பாரதியார் பல்கலைக் கழகப் பதிவாளர் கு.ம.ராமாத்தாள் பங்கேற்று தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் மருத்துவர் பிறைநுதல்செல்வி, வீ.அன்புராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை நடைபெறும் நிறைவு விழாவில் அக்சயா அ.நாகராஜ் பங்கேற்கிறார். மேலும் இதுகுறித்து கோவையில் நேற்று (14.6.2013) பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:-

கோவை மன்றல் பெருவிழாவில், 180க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பதிவு செய்துள்ளவர்களை 16.6.2013 ஞாயிறன்று அனைவரையும் விழாவன்று அழைத்துள்ளோம். பதிவு செய்துள்ளவர்கள் மன்ற விழாவன்று வழக்குரைஞர் குழுவின் இலவச ஆலோசனையும், மருத்துவர் குழுவினரின் இலவச பரிசோதனையும் நடைபெற இருக்கிறது.

கோவை சிவானந்தா காலனி, அரிமா சங்க திருமண அரங்கில் 16ஆம் தேதியன்று நடைபெறும் இவ்விழாவில் கோவை மாநகரில் ஜாதி மறுப்பு திருமண விழா, 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

எல்லாவித பிரச்சினைகளையும் சமூக நோக்கோடு பார்க்கும் திராவிடர் கழகம் ஜாதிமத பேதமற்ற சமூகம் அமையப் பெறுவதற்காக தமிழகம் முழுவதும், அனைத்து நகரம், மற்றும் குக்கிராமங்களிலும் மன்றல் இணைதேடல் பெருவிழா நடத்துவதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்

தமிழ் ஓவியா said...


தமிழ்மொழியின் தயவால் சமஸ்கிருதம் செம்மொழி ஆனது! திருவெறும்பூரில் தமிழர் தலைவர்


திருவெறும்பூர், ஜூன் 15- தமிழ்மொழியின் தயவால் சமஸ் கிருதம் செம்மொழி ஆனது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். தமிழின முன்னேற்றத் திற்குப் பெரிதும் தடையாக இருப்பது அகப்பகையே, புறப் பகையே எனும் தலைப்பில் திருவெறும்பூரில் பட்டிமன்றம் நேற்று (14.6.2013) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அடையாளம் முக்கியம்!

பெருமையோடு வாழ்ந்த தமிழினம், தனது அடையா ளத்தை மறந்ததால் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எந்த இனமும் தனது அடையாளங்களை மறக்கக் கூடாது. வளர்ச்சி பெற்ற நாடுகளில், எழுச்சிப் பெற்ற இனங்கள் தங்கள் அடையாளங் களைப் பேணுவதில் முதன்மையாக இருக்கிறார்கள். ஆப் பிரிக்க நாடுகளில் கூட தங்கள் அடையாளங்களைப் பாது காத்துப் பெருமை கொள்கிறார்கள். அடையாளம் என்பது வேர்களுக்குச் சமமானது. வேர்கள் பழுதானால் கிளைகளும், இலைகளும் இருக்காது. வேர்கள் வெளிப்படையாகத் தெரி வதில்லை. ஆனால் அதுதான் முக்கியமானது. கட்டடங்களின் அஸ்திவாரம் கூட வெளியே தெரியாது, ஆழத்தில் பதிந் திருக்கும். ஆனால் அதுவே கட்டடங்களின் அடையாளம். தமிழ் குவியல்! சமஸ்கிருதம் அவியல்!
தமிழ் உருவான காலத்தில், சமஸ்கிருதம் தோன்றவே இல்லை. இந்த வரலாறு பலருக்குத் தெரியாது. பல காய்கறிகள் கொண்ட சமையலுக்கு அவியல் என்று பெயர். சமஸ்கிருதம் கூட பல மொழிகளால் சேர்த்துச் சமைக்கப்பட்ட ஒரு மொழி. அது ஒரு கலவை. அதற்கென்று தனித்தன்மை கிடையாது. பேராசிரியர்களாக இருந்த பார்ப்பனர்களே இதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் அப்படி கிடையாது. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்திலேயே தமிழ் தனித்தன்மையோடு விளங்கியது.
தமிழின் தயவில் சமஸ்கிருதம்!

தனித்தன்மையோடு விளங்கும் தமிழுக்கு, செம்மொழி அங்கீகாரம் வழங்க முடிவு செய்தார்கள். உடனே பார்ப்பனர் கள் சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி வேண்டும் என்றார்கள். செம்மொழி அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உண்டு. அதில் எல்லாவற்றிலும் தமிழுக்கு முதலிடம் உண்டு. ஆனால் சமஸ்கிருத மொழிக்கு அந்தத் தகுதி இல்லை. எனினும் நிபந்தனைகளைத் தளர்த்தி, தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்த நேரத்தில், அதைப் பயன்படுத்தி அவர்களும் செம்மொழித் தகுதியைப் பெற்று விட்டார்கள். சுனித்குமார் சட்டர்ஜி எனும் ஆய்வாளர் கூறுவதுபோல, நிறைய தமிழ்ச் சொற்களைக் கொண்டதுதான் சமஸ்கிருதம். முனைவர் தொ.பரமசிவன் எனும் தமிழ் ஆய்வாளர் இதுகுறித்து நிறைய எழுதியுள்ளார். பூ செய் என்பதைப் பூஜை என்றார்கள், ரசம் என்பதை ரஜம் என்றார்கள், வேட்டி என்பதை வேஷ்டி என்றார்கள். பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். என்பவர் மொழி ஆய்வில் தனி உலக வரைபடமே தயாரித்துள்ளார். தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ, எகிப்து போன்ற பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதை அவர் நிரூபிக்கிறார். இந்த வரலாறுகளை நாம் அறிய வேண்டும்.

துரோகத்தின் தொடக்கம்!

நம் இதிகாசம், நம் புராணம் எனப் பார்ப்பனர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அவற்றை வெள்ளையர்கள் கெடுத்துவிட்ட தாகவும் சொல்வார்கள். என்ன உன் புராணம் என்றால் கண்ணகியைக் காட்டுவார்கள். தீக்குளித்ததைப் பெருமை யாகப் பேசுவார்கள். எங்கே, இப்போது யாரையாவது தீக் குளிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். உன் மீது எனக்கும் சந்தேகம் இருக்கிறது, நீ தீக்குளி என்பார்கள் இன்றைய புரட்சிப் பெண்கள். அதேபோல இராமாயணம். முதன்முதலில் காட்டிக் கொடுத்த வேலையைச் செய்தவன் விபீஷணன். அவனுக்கு ஆழ்வார் பட்டம் வேறு. துரோகம் தொடங்கிய இடமே இராமாயணம்தான். அன்று தொடங்கிய அந்தத் துரோகம் இன்று ஈழத்துக் கருணாவிடம் வந்து நிற்கிறது.

இலங்கையில் தமிழர்களைச் சிறுபான்மையினம் என்று அழைத்து வந்தார்கள். இனி அதற்கும் வழியற்று, 13-ஏ எனும் புதுச் சட்டத்தின் மூலம், தமிழர்களின் ஒட்டு மொத்த அடை யாளங்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள். இதற்கான ஏற் பாட்டை சிங்கள அதிகாரி ஒருவர் செய்கிறார். அவர் யாரென் றால், ராஜீவ் காந்தி, இலங்கை சென்ற போது, துப்பாக்கியின் பின்புறத்தால் ராஜீவை தாக்கியவர். அவர் இன்றைக்கு அங்கு நல்ல நிலையில் இருக்கிறார். எப்படி தமிழர்களைக் காட்டிக் கொடுத்து, கருணா பதவி சுகத்தோடு இருக்கிறாரோ அப்படி. ஆக வெளிப்படையான புறப்பகையை விட, துரோகம் செய்யும் அகப்பகை மிகவும் ஆபத்தானது. எனவே இந்த இருபகை களிலும் நாம் கவனமாக இருந்து, நம் வரலாற்று அடையா ளங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.

தமிழ் ஓவியா said...


ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை


பெரியார் தொடங்கினார் - நாம் முடித்து வைப்போம்!

திண்டுக்கல் பொதுக் குழுவில் தமிழர் தலைவர்

திராவிடர் கழகப் பொதுக் குழு விளக்கப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். (திண்டுக்கல் - 15.6.2013).

15.6.2013 காலை 11 மணியளவில் திண்டுக்கல்லில் நடைபெற்ற திரா விடர் கழகப் பொதுக் குழுக் கூட் டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிறப்பான முத்திரைக் கருத்துகளையும் வழி காட்டுதலையும் தம் உரையில் வெளிப்படுத்தினார்.

திண்டுக்கல்லில் நடைபெறும் இந்தத் திராவிடர் கழகப் பொதுக் குழு வரலாற் றில் இடம் பெறத் தக்க ஒன்று என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தமது பேச்சின் தொடக்கத்திலேயே அறிவித்து - ஒரு கலகலப்பை உண்டாக்கினார்.
திண்டுக்கல்லில் மாநாடா?

பொதுக்குழு - பொதுக்குழு தீர்மான விளக்கம் பொதுக் கூட்டம் தான் என்று சொன்னாலும் திண்டுக்கல் நகரத்தில் ஏதோ திராவிடர் கழக மாநாடு நடக் கிறதோ என்று கருதும் வண்ணம் எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - பதாகைகள் - பல வகைச் சுவரொட்டிகள் - நகரைக் கருஞ்சட்டைக் காடாக்கும் கழகக் கொடிகள் என்று கண்டோரை வியப்பில் ஆழ்த்தின.

இவ்வளவு சிறப்புகள் ஒரு பக்கத்தில் முத்து முத்தான 13 தீர்மானங்கள் - என்றென்றும் பேசக் கூடியவையே.

கழகத் தலைவரின் உரையில் பெரும்பாலும் ஆகஸ்டு முதல் தேதி கழகம் நடத்தவிருக்கும் ஜாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போராட்டமான அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட் டத்தையே மய்யங் கொண்டிருந்தது.

தொடக்கம் 1970இல்

1970இல் தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்த கால கட்டத்தில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் 43 ஆண்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எவ்வளவு காலம் கழிந்தாலும் இந்தப் பிரச்சினையில் வெற்றி கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை - கழகத் தோழர்களே ஆகஸ்டு முதல் தேதி நடக்கவிருக்கும் சிறை நிரப்புப் போராட்டத்திற்குத் தயாராகுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த போது அரங்கமே அதிரும் வகையில் கருஞ்சட்டைத் தோழர்களின் கர ஒலி எழுந்தது.

இரண்டு முறை சட்டம்

இது ஏதோ அனைவருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம் என்று கருதிவிடக் கூடாது, ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப் போராட்டமாகும்.

இதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை யில் இரண்டு முறை சட்டம் இயற்றப்பட் டுள்ளது. தந்தை பெரியார் உயிரோடு இருந்தபோது ஒரு முறை - 2006இல் இன்னொரு முறை சட்டம் இயற்றப்பட்டும் உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்களின் முயற்சியால் முடக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ப தற்குக்கூட இந்தப் பிரச்சினையை செயல் படுத்த யார் முன் வருகிறார்களோ, அவர்களுக்கே கழகத்தின் ஆதரவு என்ற கொள்கையை முன்னிறுத்துனோம். மானமிகு கலைஞர் அவர்கள் முன் வந்தார் - தீர்மானமே போட்டுத் தந்தார். அந்த அடிப்படையிலேயே கழகம் 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரவு தந்தது.

வாக்கு கொடுத்தபடியே 2006இல் ஆட்சி அமைத்த மானமிகு கலைஞர் அவர்கள், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார்.

ஆட்சியாளர்கள் அனைவராலும் ஏற்கப்பட்டதுதான்!

இன்னும் சொல்லப் போனால் 1970 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அனைவருமே இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்கள் தாம். கலைஞரை அடுத்து ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தொடக்கத்தில் இந்தப் பிரச்சினைபற்றிப் போதிய புரிதல் இல்லாமையால் கருத்துத் தெரிவித்திருந் தாலும் பின்னர் புரிந்து கொண்டார்.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி நீதியரசர் எஸ். மகராஜன் தலைமையிலே குழு ஒன்றை அமைத்து இந்தப் பிரச்சினை குறித்து அறிக்கை ஒன்றைக் கேட்டார்.

சங்கராச்சாரியார் கிருபானந்தவாரியார், சிவாச்சாரியார் உட்பட அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக ஆகமத்தில் எந்தவிதத் தடையும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் இது செயல்படுத் தப்படும் - பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று சட்டப் பேரவையிலேயே அறிவித்தார். அதன் பின்னர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டார் - எப்படியோ தடைப் பட்டுப் போயிற்று.

ஜெயலலிதா அவர்களும் ஏற்றுக் கொண்டதுதான்!

அவரைத் தொடர்ந்து முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டார். 69 சதவீத அடிப்படையில் அனைத்து ஜாதியிலிருந்தும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். கம்பரசம் பேட்டையில் அதற்காக பயிற்சிக் கல்லூரி திறக்கப்படும் என்று கூடத் தெரிவிக்கப்பட்டது.

இப்படி 43 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் நாம் ஓய்ந்து விடவில்லை. இப்பொழுது மீண்டும் போராட்டக் களத்தில் குதிக்கும் முடிவை இப்பொதுக் குழுவில் நாம் எடுத்திருக்கிறோம்.

தமிழ் ஓவியா said...

நாளை முதலே தொடங்குவீர்!

நாளை முதலே நமது பிரச்சாரம் தொடங்கப் பட வேண்டும்.

1) முதலாவதாக குமரி முதல் திருத்தணி வரை சுவர் எழுத்துப் பிரச்சாரம் நடைபெற வேண்டும். ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போராட்டம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்) ஆகஸ்டு 1இல் தமிழ் நாடெங்கும் என்ற வாசகங்கள் இடம் பெற வேண்டும்.

தெரு முனைக் கூட்டங்கள்

2) இதனை மய்யப்படுத்தி தமிழ் நாடெங்கும் தெரு முனைக் கூட்டங்கள் சுழன்றடிக்கும் சூறாவளி போல, திடீர் சுனாமி போல எங்கெங் கும் நடந்திட வேண்டும். பொது மக்களின் கவனம் எல்லா வகையிலும் ஈர்க்கப்பட வேண்டும்.

3) நாகர்கோயில் முதல் மதுரை வரை இரு வழிகளில் தொடர் பிரச்சாரம் - மதுரையில் முடியுமாறு ஏற்பாடு செய்யப்படுகிறது (வேறு ஓர் இடத்தில் காண்க)

வருகிறது சிறு வெளியீடு

4) இதே தலைப்பில் இரண்டு ரூபாய் விலையில் இந்தப் போராட்டத்தினை விளக்கி சிறு வெளியீடு தலைமைக் கழகத்தின் சார்பில் கொண்டு வரப்படும்; இன்னும் ஒரே வாரத்தில் உங்கள் கைகளுக்குக் கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...

5) தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஊமை செயராமன் போராட்ட நிதி ரூ.5000 என்று அறிவித்து, ஒரு தொடக் கத்தைக் கொடுத்துள்ளார்.

மக்களுக்காக நடைபெறும் மனித உரிமைப் போராட்டம் அந்த மக்களின் ஆதரவாகத்தான் நடைபெற வேண்டும். அதற்காகத்தான் இந்த நிதி திரட்டப்பட வேண்டும்.

சிறை நமக்குப் புதிதல்ல

7) சிறைச்சாலை நமக்கொன்றும் புதிதல்ல. கையடக்கக் காகிதத்தைக் கொளுத்தி (ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புப் பகுதியைக் கொளுத்தும் போராட்டம்) மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள்.

சிறைக்குச் செல்லுபவர்களைவிட, வெளி யில் இருப்பவர்களுக்குத்தான் வேலைப் பளு அதிகம். சிறைச் சாலைக்குள் நாம் கருத்தரங்கு களை நடத்திக் கொண்டு இருப்போம்?

சால்வை வேண்டாம் போராட்ட வீரர் பட்டியல் தாரீர்

சால்வை அணிவிக்க வேண்டாம் - சந்தாக்களை அளியுங்கள் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது ஒன்றை நான் சொல்லுகிறேன். ஆகஸ்டு முதல் தேதி வரை போராட்ட வீரர்களின் பட்டியலை அளியுங்கள் - இதுவரை 5000 கழகத் தோழர் களின் பட்டியல் கிடைத்திருக்கிறது (பலத்த கரஒலி) இது மேலும் மேலும் பெருக வேண்டும்.

தந்தை பெரியார் தொடங்கினார் அன்னை மணியம்மையார் தொடர்ந்தார் - நம் காலத்தில் அதனை முடித்து வைப்போம்! (பலத்த கரஒலி)

நம்மால் முடியாததும் உண்டோ!

நாம் எடுத்த எந்த செயலும் வெற்றியில் தான் முடிந்திருக்கிறது. நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதை இதிலும் நிரூபிப்போம்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்தார் நாம் தான் எதிர்ப்பைத் தெரிவித்தோம் - அனைவரையும் ஒருங் கிணைத்தோம் - வெற்றியும் பெற்றோம்.

மூன்று முத்திரைகள்

ராஜபாளையம் ஃபார்முலா
மதுக்கூர் மருந்து
திண்டுக்கல் சாதனை

இம்மூன்றும் இருந்தால் எதிலும் நாம் வெற்றி பெறுவோம்.
- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் 15.6.2013

69 சதவீத இடஒதுக்கீடு நிலை பெற்றது எப்படி?

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு நெருக்கடி வந்தது - அதிலிருந்தும் மீட்டதும் நாம்தான் 69 சதவீதம் கிடைக்க வழி செய்ததால்தான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்குப் பங்கு போட்டுக் கொடுக்க முடிந்தது. ஆக சமைத்தது நாம், பரிமாறி யவர்கள் மற்றவர்கள் அதில் நமக்கு மகிழ்ச்சிதான். எதிலும் முதல் கருத்தைச் சொல்லுவதும் நாம்தான் கிரிக்கெட் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு வரை நாம் தான் முதலாவதாகக் கருத்தைக் கூறி தொடங்கி வைக்கிறோம்.

இராஜபாளையம் இளைஞரணி மாநில மாநாடு நமக்குப் புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. நாம் எத்தனைப் பேர் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. இருக்கிற நாம் ஒற்றுமையாக கட்டுப்பாடாக திட்டமிட்ட வகையில் செயல்படுகிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

ராஜபாளையம் ஃபார்முலா!

இதற்குப் பெயர்தான் ராஜபாளையம் ஃபார்முலா - மதுக்கூர் மருந்து - திண்டுக்கல் சாதனை - இம்மூன்றும் நம் கைவசம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

புரட்சிப் போராட்டம்!

நாம் நடத்தும் போராட்டம் சாதாரண மானதல்ல சமூக அமைப்பைப் புரட்டிப் போடும் சமூகப் புரட்சிப் போராட்டம் என்பதை மறவாதீர்கள்

இரட்டிப்பு உற்சாகமாகச் செல்லுவீர்!

இந்தப் பொதுக் குழுவுக்கு நீங்கள் உற்சாகமாகத்தான் வந்துள்ளீர்கள். இரட்டிப்பு உற்சாகத்துடன் திரும்பிப் போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

5) தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஊமை செயராமன் போராட்ட நிதி ரூ.5000 என்று அறிவித்து, ஒரு தொடக் கத்தைக் கொடுத்துள்ளார்.

மக்களுக்காக நடைபெறும் மனித உரிமைப் போராட்டம் அந்த மக்களின் ஆதரவாகத்தான் நடைபெற வேண்டும். அதற்காகத்தான் இந்த நிதி திரட்டப்பட வேண்டும்.

சிறை நமக்குப் புதிதல்ல

7) சிறைச்சாலை நமக்கொன்றும் புதிதல்ல. கையடக்கக் காகிதத்தைக் கொளுத்தி (ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புப் பகுதியைக் கொளுத்தும் போராட்டம்) மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள்.

சிறைக்குச் செல்லுபவர்களைவிட, வெளி யில் இருப்பவர்களுக்குத்தான் வேலைப் பளு அதிகம். சிறைச் சாலைக்குள் நாம் கருத்தரங்கு களை நடத்திக் கொண்டு இருப்போம்?

சால்வை வேண்டாம் போராட்ட வீரர் பட்டியல் தாரீர்

சால்வை அணிவிக்க வேண்டாம் - சந்தாக்களை அளியுங்கள் என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது ஒன்றை நான் சொல்லுகிறேன். ஆகஸ்டு முதல் தேதி வரை போராட்ட வீரர்களின் பட்டியலை அளியுங்கள் - இதுவரை 5000 கழகத் தோழர் களின் பட்டியல் கிடைத்திருக்கிறது (பலத்த கரஒலி) இது மேலும் மேலும் பெருக வேண்டும்.

தந்தை பெரியார் தொடங்கினார் அன்னை மணியம்மையார் தொடர்ந்தார் - நம் காலத்தில் அதனை முடித்து வைப்போம்! (பலத்த கரஒலி)

நம்மால் முடியாததும் உண்டோ!

நாம் எடுத்த எந்த செயலும் வெற்றியில் தான் முடிந்திருக்கிறது. நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதை இதிலும் நிரூபிப்போம்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்தார் நாம் தான் எதிர்ப்பைத் தெரிவித்தோம் - அனைவரையும் ஒருங் கிணைத்தோம் - வெற்றியும் பெற்றோம்.

மூன்று முத்திரைகள்

ராஜபாளையம் ஃபார்முலா
மதுக்கூர் மருந்து
திண்டுக்கல் சாதனை

இம்மூன்றும் இருந்தால் எதிலும் நாம் வெற்றி பெறுவோம்.
- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் 15.6.2013

69 சதவீத இடஒதுக்கீடு நிலை பெற்றது எப்படி?

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு நெருக்கடி வந்தது - அதிலிருந்தும் மீட்டதும் நாம்தான் 69 சதவீதம் கிடைக்க வழி செய்ததால்தான் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்குப் பங்கு போட்டுக் கொடுக்க முடிந்தது. ஆக சமைத்தது நாம், பரிமாறி யவர்கள் மற்றவர்கள் அதில் நமக்கு மகிழ்ச்சிதான். எதிலும் முதல் கருத்தைச் சொல்லுவதும் நாம்தான் கிரிக்கெட் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு வரை நாம் தான் முதலாவதாகக் கருத்தைக் கூறி தொடங்கி வைக்கிறோம்.

இராஜபாளையம் இளைஞரணி மாநில மாநாடு நமக்குப் புது நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. நாம் எத்தனைப் பேர் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. இருக்கிற நாம் ஒற்றுமையாக கட்டுப்பாடாக திட்டமிட்ட வகையில் செயல்படுகிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

ராஜபாளையம் ஃபார்முலா!

இதற்குப் பெயர்தான் ராஜபாளையம் ஃபார்முலா - மதுக்கூர் மருந்து - திண்டுக்கல் சாதனை - இம்மூன்றும் நம் கைவசம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

புரட்சிப் போராட்டம்!

நாம் நடத்தும் போராட்டம் சாதாரண மானதல்ல சமூக அமைப்பைப் புரட்டிப் போடும் சமூகப் புரட்சிப் போராட்டம் என்பதை மறவாதீர்கள்

இரட்டிப்பு உற்சாகமாகச் செல்லுவீர்!

இந்தப் பொதுக் குழுவுக்கு நீங்கள் உற்சாகமாகத்தான் வந்துள்ளீர்கள். இரட்டிப்பு உற்சாகத்துடன் திரும்பிப் போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

அரசுக்கு நமது வேண்டுகோள்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது அ.இ.அ.தி.மு.க. அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் (2001-2006) 69 சதவீத அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும் என்று அன்றைய தினம் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதுதான். அதனை நிறைவேற்றும் பொறுப்பு முதல் அமைச்சருக்கு இருக்கிறது. இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும், நோக்கமும் அறவே கிடையாது.

போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தினால் அதனை நாங்கள் வரவேற்போம் - மகிழ்ச்சி அடைவோம் - ஏன், பாராட்டவும் செய்வோம் எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்!

- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 15.6.2013

தமிழ் ஓவியா said...


பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம்


நாம் நடத்தும் பெரியார் பிஞ்சு - குழந்தைகள் பழகு முகாம் பற்றி இங்கே குறிப்பிட்டனர். நான் சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு விழாவிற்குச் சென்றேன். இப்பொழுது அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடியவரின் வீட்டுத் திருமணம். நான் அங்கு சென்றபோது அன்புடன் வரவேற்றனர். அப்பொழுது அவர் பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். இவர் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா என்று கேட்டார். தெரியவில்லையே என்றேன்.

இவர் வல்லத்தில் தாங்கள் நடத்திய குழந்தைகள் முகாமிலே பயிற்சி பெற்றவர். இப்பொழுது பொறியாளர் மிகப் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார் என்று சொன்னார். அதனைக் கேட்ட பொழுது எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் பையனுடைய தாயார் குறுக்கிட்டுச் சொன்னார் குழந்தைகள் முகாமில் நீங்கள் விதைத்த விதை இன்றுவரை நன்கு வேலை செய்கிறது. இவன் பகுத்தறிவுவாதியாகவே இருக்கிறான் என்று தாயார் சொன்னபோது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நம் வீட்டுக் குழந்தைகளை பெரியார் பிஞ்சு முகாமுக்கும், வளர்ந்தவர்களை பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

இளைஞர்கள் கணினி பயிற்சி பெற்றாக வேண்டும். இணையதளத்தின் மூலம் நம் கருத்துகளைப் பரப்ப வேண்டும். காலம் மாறி வருகிறது. அதற்கேற்ற வழிமுறைகளையும் நாம் மாற்றிக் கொண்டாக வேண்டும்.

- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் 15.6.2013

தமிழ் ஓவியா said...

காவிரித் தீர்ப்பு : திசைத் திருப்பும் கரு’நாடகம்’



தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை நாளுக்கு நாள் சொல்லொணாத சோகத் தொடராக தொடர்ந்து கொண்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா?

குறுவை, சம்பா என்று பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் நடத்திவரும் நமது விவசாயத் தோழர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தின் ஈரமில்லா நெஞ்ச முடிவு காரணமாக நியாயமான உரிமைப்படி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஒருமுறைகூட, நீரை அளித்ததே கிடையாது!



உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், நடுவர் மன்றாக இருந்தாலும்கூட, சட்டத் தீர்ப்புகளைக் கூட மதிக்காது, கர்நாடக அரசு (அங்குள்ள வாக்கு வங்கி அரசியலில் யார் அதி வேகமாக தமிழ்நாட்டுக்கெதிரான குரலை உயர்த்துவது என்ற போட்டியினால்) 6.6.2013 அன்று ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி (அது மத்திய அரசால் கெசட் செய்யப்பட்டதினால் சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகவே கருதப்பட வேண்டும்) முதல் 4 மாதங்கள் (ஜூன் துவங்கி) 134 டி.எம்.சி. தண்ணீர் தர முடியாது. மாறாக 97.82 டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்க இயலும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வருகிற ஜூன் 12ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கும் காவிரிக் குழுக் (தற்காலிகக் குழு) கூட்டத்தில் இதனைத் தெரிவிக்கப் போவதாகவும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புத் தரப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டதால் _- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்ய அச்சட்டத்தில் இடம் இருப்பதால் மறு பரிசீலனைக்காக மனு போட்டு வழக்கை நடத்தப் போவதாகவும் கூறியிருப்பது

சட்டப்படியும் சரி
நியாயப்படியும் சரி
சரியான நிலைப்பாடு அல்ல.
கண் ஜாடை நடவடிக்கையா?

அதற்குரிய காரணங்கள்:

மத்திய அரசு அமைத்துள்ள குழு ஒரு தற்காலிக ஏற்பாடாகவே உள்ளது. கர்நாடகத் தேர்தலை ஒரு சாக்காக மத்திய அரசு கூறியது. தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும் நிலையில், ஏன் இன்னமும் காலதாமதம் _- கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்குச் சாதகமான கண் ஜாடை நடவடிக்கையா?

இக்குழு தற்காலிகக் குழுவாக அமைந்தபோதே நாம் தெளிவாகச் சுட்டிக் காட்டினோம்; இதனால் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படாது என்று.

அதுபோலவே இது ஒரு கொலு பொம்மைக் காட்சியாகத்தான் அமைந்தது.

உடனடியாக நிரந்தரக் குழுவை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி செயல்படுத்த நிபுணர்களைக் கொண்ட நடுநிலை தன்னாட்சிக் குழுவின் மேற்பார்வை _- கண்காணிப்புக்கு விட்டு, நீரை இரு மாநிலங்களுக்கும் அக்குழுதான் அளிக்க ஆணைகள் ஆண்டுதோறும் பிறப்பிக்கப்பட வேண்டும்.

சட்டப்படி அதுதான் சரியான ஏற்பாடாகவே அமையும்.

இந்நிலையில் கர்நாடக அரசு தனது பல்வேறு முட்டுக்கட்டை முயற்சிகளில் ஏற்கெனவே தோல்வி அடைந்து விட்ட நிலையில், புதுக்கரடி ஒன்றை விட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை மறுக்க நினைக்கிறது!

நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறுபரிசீலனை செய்வோம் என்று கர்நாடக முதல் அமைச்சர் கூறுவது சரியல்ல.

1). இறுதித் தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் *(கெசட்டில்) வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வந்த நாள் பிப்ரவரி 5, 2007; அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013 ஆகும். இதன்படி மறுபரிசீலனை மனு 2018இல்தான் போட முடியும்.

2). 2007 முதல் கணக்கிடப்படக் கூடாது; மேலும், நிரந்தரக் குழுவும் இன்னும் அமையவில்லையே! எனவே இது ஒரு திசைத் திருப்பல் நாடகம் ஆகும் _ -இதனை ஏற்கவியலாது. தமிழக அரசே, கருநாடகத்தைப் பார்!

தமிழ்நாட்டில் -_ அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்பிரச்சினையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை.

எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக் கருத்துகூட கர்நாடகத்தைப்போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனையின் வெந்த புண்ணாகும்!

தமிழ்ச் சமுதாயமே, அந்தோ! உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா?

வேதனை! வெட்கம்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கூழ் முட்டைகள்



மகள் : தமிழ்த் தேசியம்ன்னு சொல்றாங்களே, அப்படீன்னா என்னப்பா ?

அப்பா : ஆம்லேட் எதுல இருந்து வந்தது ?

மகள் : முட்டையில் இருந்து...

அப்பா : இதே கேள்விக்கு ஆம்லேட் தோசைக்கல்லில் இருந்து வந்தது ன்னு பதில் சொல்றதுக்குப் பேருதான் தமிழ்த் தேசியம்.

- ஓவியன், தாம்பரம்

தமிழ் ஓவியா said...

சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களை எங்கே தேட வேண்டும்?


- ஆர்.பாலகிருஷ்ணன், அய்.ஏ.எஸ்

இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை இரண்டு புதிர்கள் என்று சொல்லியிருந்தேன். ஒரு புதிர் என்னவென்றால், நாம் சிந்து சமவெளி நாகரிகத்தைக் கண்டுபிடித்தாச்சு. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் யாருடைய நாகரிகம்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? அந்த நாகரிகம் ஏன் முடிவுக்கு வந்தது? எப்படி முடிவுக்கு வந்தது? எதனால் அழிந்தது? சிந்து சமவெளி நாகரிகம் எப்படி முடிந்தது?

என்பது குறித்த ஒரு கேள்வி. அதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இரண்டாவது புதிர். ஒரு முக்கியமான பழைய நாகரிகத்தினுடைய வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகிற பழந்தமிழர்களின் நாகரிகம் எங்கே தொடங்கியது? இந்த இரண்டும் ஒரே கேள்விக்குறிகள். இது ஏன் எங்கே தொடங்கியது என்று கேட்டால் இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கு. ஏன்னா சிந்து சமவெளி நாகரிகம் என்பது இந்தோ _ ஆரிய நாகரிகம் என்கிற ஒரு கருதுகோள்; திராவிட நாகரிகம் என்கிற கருதுகோள்;



இவை இரண்டுமில்லாமல் வேறொரு நாகரிகம்னு சொல்லுகிற கருதுகோள்; அது சுமேரியாவிலிருந்து வந்த நாகரிகம் என்று சொல்லுகிற கருதுகோள்; இப்படி நிறையக் கருத்துகள் இருக்கிற மாதிரி, திராவிடர்களின் தோற்றம் பற்றியும் பல கருத்துகள் இருக்கும். ஒரு கருத்து, அவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள்; ஒரு காலத்தில் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வந்த ஒரு மொழிக்கூட்டம்; அதுமட்டுமில்லாமல் லெமூரியா கண்டத்திலிருந்து வந்தவர்கள். இப்படிப் பல வகையான கடல்கோள் நினைவுகள் சங்க இலக்கியத்தில் இருக்கு. ஆக திராவிடர்களின் தோற்றம் பற்றிய ஒரு தெளிவின்மையும் இருக்கிறது.

திராவிடர்கள் எங்கு தோன்றினார்கள்? எப்படித் தோன்றினார்கள்? என்பது ஒரு வினாக்குறி. சிந்து சமவெளி நாகரிகம் எப்படி அழிந்தது என்பது இரண்டாவது வினாக்குறி. ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்று கேட்பீர்களேயானால், இரண்டு வரலாற்றுப் புதிர்களுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதினுடைய புரிதலில்தான் இருக்கிறது.

இந்திய வரலாற் றின் உண்மையான எதிர்காலம் என்ன வென்றால், இந்த இரண்டு கேள்விகளுமே _ இரண்டு புதிர்களுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல இரண்டு வெவ்வேறான பிரச்சினைகளை வளர்ப்பதால்தான் பிரச்சினையே இருக்கு. அதில் என்ன பிரச்சினை வருது? என்பதைத் தனியாகப் பார்ப்போம். எழுத்து வடிவம் வரலாற்றின் தொடக்கம். வேதங்களுக்கு முன் பிரிந்த ஒரு விரிவான உலகம். அந்த உலகத்தைப் பற்றி யாருக்குமே தெரியாமல் இருந்தது. இந்தியாவின் தொன்மை வரலாறு வாய்மொழி மரபாகவே இருந்தது. எனது இந்த ஆராய்ச்சியானது தேதியற்ற இந்தியாவிற்கான தேடல்தான். சிந்துவெளி நாகரிகம் எப்படி முறிந்தது? பழந்தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் எது? பழந்தமிழ்த் தொன்மங்கள் வாய்மொழி மரபாய் நிலைபெற்றன. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இலக்கியப் பதிவு பெற்றன. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் இருக்கு. ஆனால், நமக்குக் கடைச்சங்க நூல்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால்...? நீங்கள் யோசித்துப் பாருங்கள். அந்த இலக்கியம் இல்லாத ஒரு தமிழ்த் தொன்மத்தை யோசித்துப் பாருங்கள். ஆக நமக்குக் கிடைக்காமல் போன நூல்கள் பல இருக்கு. அதற்கு முன்னால் ஒரு வாய்மொழி மரபு இருக்கு. பாட்டு மரபு, பாணர் மரபு, கூத்தர் மரபு, கலை மரபு இருக்கு. இப்படிப்பட்ட சொல்லாடல்கள் இருக்கக்கூடிய ஒரு நீண்ட நெடும் வாய்மொழி மரபு இலக்கியத்தில் ஒரே நாளில் தோன்றிவிட முடியாது!

தமிழ் ஓவியா said...

அந்த இலக்கியத்திற்குப் பின்னால் நீண்ட மரபு இருக்கும். அந்த மரபுக்கு ஒரு காலம் இருக்கும்; ஓர் இடம் இருக்கும். இவ்விரு புதிர்களும் நாணயத்தின் இரு பக்கங்கள்! திராவிடக் கருதுகோள் என்பதைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு என்னுடைய ஆய்வினைச் சொல்ல இன்னும் விரும்புகிறேன். இந்தத் திராவிடக் கருதுகோள் என்பது 1924ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர் ஜான் மார்ஷல் லண்டனில் இருந்து அறிவிச்ச சரியாக 50ஆவது நாளிலே டிசம்பர் மாதம் இந்தியன் ரிவ்யூ என்கிற இதழில் ஒரு கட்டுரை வருகிறது வங்காளத்தைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான சுனித்குமார் சட்டர்ஜி 1960களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறந்த உரையை ஆற்றினார். அந்த உரையை நான் ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். சுனித்குமார் சட்டர்ஜிதான் திராவிடக் கருதுகோளுக்கான முதல் குரலைப் பதிவு செய்தவர். அவர்தான் ஒரு கட்டுரை எழுதுகிறார். லண்டனில் இருந்து 50 நாளில் கால்டுவெல், கட்டுரையை கால்க்லேட் பண்ணுகிறார். கால்டுவெல்லுக்கு முன்னால் எல்லீஸ் பங்களிப்பைப் பற்றிப் புதிய நூல்கள் வந்திருக்கின்றன. கால்டுவெல் திராவிடக் குடும்பத்தைப் பற்றிப் பேசியதெல்லாம், அவர் சொல்லி இந்த சிந்துவெளி நாகரிகத்திற்கும், வேதகால நாகரிகத்திற்கும் தொடர்பு இல்லை.

திராவிட நாகரிகத்தோடு தொடர்புடைய நாகரிகம் சிந்துவெளி நாகரிகம். இது தமிழர்களுடைய நாகரிகம் என்பதை முதன்முதலாக சிந்துவெளி நாகரிகம் அறிவிக்கப்பட்ட 50 நாட்களுக்குள் ஓர் அறிவிப்பைச் செய்தவர் சுனித்குமார் சட்டர்ஜி.

சர் ஜான் மார்ஷல்

அதற்குப் பின்னால் ஹிராஸ் பாதிரியார், ரஷ்ய நிபுணர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால், பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா போன்றவர்கள் முயற்சி செய்தார்கள். அய்ராவதம் மகாதேவனுடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இவர்களெல்லாம் சேர்ந்து, சிந்துவெளி நாகரிகம் திராவிடர் என்பதை, அந்த எழுத்தினுடைய கணிப்பொறியியல் மூலமாகச் செய்த அந்த வரிவடிவின் ஆய்வின் மூலமாகவும், மொழியியல் அடிப்படையிலும், தொல் அடையாளங்களைப் பொருத்தும் அந்த அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கிற சிவன் மாதிரி இருக்கக்கூடியது; தாய்த் தெய்வ வழிபாடு திராவிடர்களுக்குரியது; பெரியகோட்டை மதிற்சுவர் உள்ள கட்டடங்கள் இவர்களுக்கு உரியது; வணிகம் சார்ந்த மரபு, கடல் வணிகம் சார்ந்த மரபு; இப்படியென்று திராவிடத்திற்குரிய கருத்துகளை எல்லாம் பட்டியல் போட்டு பலரும் எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், வேறு மாறுபட்ட கருத்துகளும் இருப்பதனால் இதுவரையிலும் சிந்துவெளி நாகரிகத்தினுடைய எழுத்துகளை யாரும் படிக்கவில்லை. அதற்கு ரொஸடாஸ்டோன் என்று சொல்லக்கூடிய _ இருமொழி இன்கிரிப்ஸன் என்று சொல்லப்படுகின்ற கல்வெட்டின் துணையைக் கொண்டுதான் சுமேரியா நாகரிகத்தினுடைய எழுத்தைப் படிக்க முடிந்தது. அப்படின்னா... என்னவென்று கேட்பீர்களேயானால், இப்ப நம்ப தமிழில் எழுதியிருப்பதை ஆங்கிலத்தில் எழுதியிருப்போம் அல்லவா! இது இரண்டும் சேர்ந்து கல்வெட்டா கிடைச்சுதுன்னா, இந்த ஆங்கிலமும், இந்தத் தமிழும், தொடர்பு உடையதை வைத்து மத்த கல்வெட்டை எல்லாம் படிக்கலாம். அப்படி ஓர் இருமொழிக் கல்வெட்டுக் கிடைக்காததனால், இதுவரை சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முடியவில்லை.
அதனால் என்ன மொழி என்பது தெரியவில்லை. அது என்ன மொழி என்று தெரியாத சூழ்நிலையில் _ அந்தத் தெளிவற்ற நிலைமையில் திராவிடக் கருதுகோள் என்பது ஆகக் கூடுதலான சாத்தியங்கள் உள்ள ஒரு கருதுகோளாக நினைக்கப்படுகிறதே தவிர, அது ஒரு முடிந்த முடிவாக நினைக்கப்படவில்லை. இதுவரைக்கும் இது திராவிடக் கருதுகோள் என்று நாம் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆப்கானிஸ்தானின் பிராகுயி என்கிற மொழி ஆப்கானிஸ்தானுடைய _ ஈரானுடைய எல்லை _ கிழக்கு ஈரானுடைய எல்லையான இது, பாகிஸ்தான் (பலுசிஸ்தான்) பகுதியில் பிராகுயி என்ற திராவிட மொழியாகப் பேசப்படுகிறது. அங்கே பிராகுயி என்ற ஊரும் உள்ளது. அங்கு பிராகுயி மொழி பேசப்படுவதனாலே சிந்துவெளி நாகரிகத்தின் எச்சமாக இருக்குமென்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. நீங்கள் வளர்ந்த உன்னதமான பண்பாட்டுக்கும், வேறு எந்தவித பண்பாட்டு வளர்ச்சிக்கும் இல்லாமல் ஓர் அடிப்படை நிலையில் வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதை, ஒரு நாடோடிகளாகவும், செட்டில்டு இல்லாத ஒரு வாழ்க்கை இருப்பதையும் பார்த்தீர்களேயானால், அப்படிப்பட்ட வாழ்க்கைக்கு உரிமையாளராகவும், சொந்தக்காரர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நகர நாகரிகத்திற்குச் சொந்தமான மக்களுடைய வழித்தோன்றல்கள் இப்படிப்பட்ட அடிமட்டமான நிலையில் இருப்பார்களா? இவர்களைப் போய் நீங்கள் எப்படித் திராவிட நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்று சொல்லலாம்? என்கிற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. இரண்டாவதாக பிராகுயி மொழி கி.பி. ஆயிரத்தில் மத்திய இந்தியாவிலிருந்து அந்தப் பகுதிக்குப் போனதென்று இந்தச் சந்தேகங்களின் அடிப்படையில் சிலர் எழுதுகிறார்கள்.

சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்

பிராகுயி திராவிடக் கருதுகோளுக்கு ஒரு தீர்வாக இல்லாமல் பிரச்சினையாகவே இருக்கின்றது. அதனால்தான் அதற்கு பிராகுயி என்று ஆய்வறிஞர்கள் எழுதுகிறார்கள். ஆக, பிராகுயி (Problem) பிரச்சினை என்பதைத் தவிர தீர்வல்ல. அப்படியென்றால், வேறென்ன தீர்வு இருக்கு? நம் மனதில் கொள்ள வேண்டிய விஷயம், ஒரு நாகரிகம் _ அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஒரு நாகரிகம், அந்த நாகரிகத்திற்கான வழித்தோன்றல்களை _ அதாவது எந்த மொழியை நாம் சந்தேகப்படுகிறோமோ, (திராவிட மொழி என்று சந்தேகப்படுகிறோம்) அது சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று சொன்னால் சந்தேகப்படக் கூடிய அந்த மொழிக்குடும்பத்தில் எந்தப் பகுதி, எந்த மொழி, எந்த மக்கள் இன்னொரு உயர்ந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்களோ, அந்த நாகரிகத்தில் போய்ச் சேரவேண்டும். விட்டகுறையை, தொட்டகுறையை நீங்கள் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய தொல் பழங்குடியைப் போய்ச் சேரக்கூடாது. அதாவது, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி ஒரு தொல்மொழியாக இருக்க முடியாது. ஒரு வளர்ந்த மொழியாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், சிந்துவெளி மக்கள் சாதாரண மக்கள் அல்ல. அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாக்கடை கட்டியவர்கள்; சாரங்களை அமைத்தவர்கள்; நீச்சல் குளங்களை அமைத்தவர்கள்; பெரிய பெரிய வீடுகளில் குடியிருந்தவர்கள்; நகர சபையை நடத்தியவர்கள்; துப்புரவுத் தொழிலாளர்களை நியமித்து வேலை வாங்கியவர்கள்; வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்தவர்கள்; முத்திரைகளை வைத்திருந்தவர்கள்; ஒரே மாதிரியான செங்கல்களை 1600 சதுர கிலோமீட்டரில் எல்லா நகரங்களிலும் பயன்படுத்தியவர்கள்; அப்படிப்பட்ட ஒரு நாகரிகத்திற்குச் சொந்தமானவர்கள்.

சிற்பக்கலையை வளர்த்திருந்தார்கள்; ஓவியக் கலையை வளர்த்து இருந்தார்கள். அப்படியென்றால் அவர்கள் பேசிய மொழியில் இலக்கியம் இல்லாமல் இருந்திருக்குமா? அல்லது வாய்மொழி இலக்கியமாவது இல்லாமல் இருந்திருக்குமா? அப்படியென்றால் அந்த நாகரிகத்தினுடைய எச்சத்தை, எச்சமிச்சங்களை அதோடு தொடர்புடைய, இன்னொரு சொந்தக்காரர்களிடம் தேட வேண்டுமே தவிர, வேறெங்குமே தேடக்கூடாது என்பதன் அடிப்படையில் பழந்தமிழ்த் தொன்மங்களோடு சிந்துவெளியைத் தொடர்புபடுத்துகிற ஓர் அணுகுமுறை இருக்கிறது. இந்த அணுகுமுறையை அஸ்கோ பர்போலாவும் அய்ராவதம் மகாதேவனும் கடைப்பிடித்து இருக்கிறார்கள். இதுதான் இன்றுவரை உள்ள நிலவரம். இதற்கு எதிரான வாதம் என்னவென்று சொன்னால் அவர் கேட்கும் ஒரே கேள்வி. சிந்துவெளி நாகரிகம் எங்கே இருக்கு? கன்னியாகுமரி எங்கே இருக்கு? சிந்துவெளி நாகரிகம் எங்கே இருக்கு? மதுரை எங்கே இருக்கு? சிந்துவெளி நாகரிகம் எங்கே இருக்கு? தமிழ்நாடு எங்கே இருக்கு? 2000 _ 2500 கி.மீ. இவ்வளவு தூரத்திற்குள்ள இடைவெளியை எப்படி விளக்கப் போகிறீர்கள்? இரண்டாவது கேள்வி. 1900களில் சிந்துவெளி நாகரிகம் அழிந்துவிடுகிறது. ஆனால் நீங்கள் சங்க இலக்கியங்கள் கி.மு. 200, கி.மு.300தான் சொல்ல முடியும். (தொடரும்)

தொகுப்பு: அ.பிரபாகரன்

தமிழ் ஓவியா said...

தமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது?



தமிழ்வழிக் கல்வி குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போதைய இளம் தலைமுறை என்ன கருதுகிறது என்பதாக இந்த வாசகரின் எண்ணம் அமைந்துள்ளது. ``சென்ற தலைமுறையினர் செய்த தவறை நாம் இனிமேலும் தொடரக்கூடாது. பிற நாட்டவரின் அறிவியல் தொழில்நுட்பங்களை முந்தைய தலைமுறையினர் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கத் தவறிவிட்டதன் விளைவுதான் இன்று தமிழ்வழிக் கல்வியா அல்லது ஆங்கிலவழிக் கல்வியா என்ற விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தத் தலைமுறையினராகிய நாம் அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்தையும் மொழிபெயர்க்க முழு முயற்சியுடன் களமிறங்க வேண்டும். அனைவரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் பிற நாட்டவரின் அறிவியல் தொழில் நுட்பங்களைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துப் போதிக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலப் பயிற்சியை மேற்கொள்கிறார்களே தவிர, ஆங்கிலக் கல்வி முறையை ஊக்குவிப்பது இல்லை. இன்று நடைமுறையில் பார்த்தோமானால், மெட்ரிக் பள்ளி களில் படித்த பெரும் பாலானவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகுகூட தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை அற்றவர்களாகவே உள்ளனர் என்பது நடைமுறை உண்மை. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத் தெரிவதில்லை என்பதும் நடைமுறை உண்மை. இதுகூட பரவாயில்லை. இவர்களில் எத்தனை நபர்கள் தாங்கள் பயின்ற பாடத்திட்டங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு படித்திருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

நான் இளங்கலை வரையில் தமிழ் வழியில்தான் படித்தேன். முதுகலையில் ஆங்கிலவழிக் கல்வி மட்டும்தான் என்ற நிர்ப்பந்தத்தால் அனைத்துப் பாடங்களையும் தமிழில் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுத பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டேன். இன்றுகூட என்னுடைய விடைத்தாள்களை எடுத்துப் பார்த்தால், நான் என் சொந்த நடையில்தான் எழுதியிருப்பேன். தமிழ்வழிக் கல்வியால் தாழ்வு மனப்பான்மை என்று ஏதேதோ சொல்கிறார்கள். ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் பேசுவதைப் பார்க்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை வரும் என்பது உண்மைதான் என்றாலும், ஆங்கிலம் என்பது ஒரு மொழி, முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் தாழ்வு மனப்பான்மை என்ற சொல் நம் அகராதியில் இருக்காது.

இனிமேலும் தாமதம் செய்யாது நாம் முதலில் மொழிபெயர்ப்பினைத் தொடங்குவோம். பிறகு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்போம்.

- கணேஷ் ஏழுமலை

தமிழ் ஓவியா said...

கலகலக்கும் கடவுள்

இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடுவோர், யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? என்று விடுதலையில் வெளிவந்த செய்தியைப் பார்த்து மதவாதிகள் சிலர் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இறை நம்பிக்கையாளர்கள் 6% குறைந்தால் கடவுள் நம்பிக்கையற்றோரில் 6% கூடியிருக்க வேண்டாமா? என்பது அவர்கள் கேள்வி. இந்தக் கணக்கெடுப்பு ஒன்றும் முழுமையான ஒன்றோ, இதை வைத்து போட்டி போடுவதற்கான ஒன்றோ, எண்ணிக்கை விளையாட்டு விளையாடத் தேவையான ஒன்றோ அல்ல என்றாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றுண்டு. அது என்னவெனில், மதநம்பிக்கையற்றோர் என்றொரு வகையும் இதில் உள்ளது. அதில் இந்தியாவைப் பொறுத்தவரையில் 13% பேர் உள்ளனர்.

கடவுள் நம்பிக்கை என்ற கருத்திலிருந்து கடவுள் மறுப்பு என்ற சிந்தனைப் போக்குக்கு வரும் வழியான ஒரு இடைநிலைப் பகுதியே மத நம்பிக்கையற்றோர் என்பதாகும். கடவுள் கருத்து கலகலத்துப் போயிருக்கிறது. அதன் அடிப்படையிலான மத நம்பிக்கையிலிருந்தும் விடுபட்டவர்களாக 13% பேர் இருக்கின்றனர் என்பது, இவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. -_லிருந்து +க்குப் போவதற்கு நடுவில் 0 என்ற இடத்தைத் தாண்டித்தானே ஆகவேண்டும். இந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக மாறுவர் என்பதே இக்கணக்கெடுப்பு கூறும் உண்மை.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

தழைக்கும் நாத்திகம் தகரும் ஆன்மிகம்


ஆய்வு சொல்லும் அதிரடி தகவல்

பொதுவாக கருத்துக் கணிப்புகளை அப்படியே ஏற்க முடியாது என்றாலும், மக்களின் மனவோட்டங்களைச் சொல்பவையாக எடுத்துக் கொள்ளலாம். இந்தியாவில் தேர்தல் காலங்களில் ஊடகங்களால் எடுக்கப்படுபவை இதில் சேர்க்க முடியாது. காரணம், தாம் யாரை விரும்புகிறார்களோ அவர்களுக்கோ, அல்லது யாரால் பேரம் பேசப்பட்டுள்ளார்களோ அவர்களுக்கு ஆதரவாகவோதான் பெரும்பாலும் கணிப்புகளை வெளியிடுகிறார்கள்.

அவை கணிப்புகள் அல்ல; திணிப்புகள். ஊசலாட்டத்தில் இருப்பவர்களை ஒரு பக்கமாகச் சாய்க்கும் ஒரு வகைத் தந்திரம். சரி, இது இருக்கட்டும்.



நாம் இப்போது சொல்ல வருவது மக்களிடம் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு பற்றியது. அதாவது மக்களின் கடவுள் -மத நம்பிக்கை குறித்த மன ஆய்வு பற்றியது.

சுவிட்சர்லாந்தில் உள்ள வின்-_காலப் இண்டர்நேசனல் (Win-Gallup International) ஆகிய இரு நிறுவனங்கள் அண்மையில் ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளன. வணிக மேலாண்மை உத்திகளை வகுத்திடத் துணை செய்யும் உலகளாவிய ஆய்வுகளை இந்நிறுவனங்கள் எடுத்துத் தருகின்றன. நீண்ட அனுபவம் பெற்ற இவை மதநம்பிக்கை மற்றும் நாத்திகம் குறித்து தாம் எடுத்த கணக்கெடுப்பு முடிவுகளை அண்மையில் அறிவித்தன.

மத உணர்வு மாந்தர்கள், நாத்திகம் என்பதைக் கடவுள் மறுப்பு, மத மறுப்பாகவே கருதுகிற சூழலில் நாம் மேற்சொன்ன வின்_-காலப் இண்டர்நேசனல் ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. உலகின் எல்லாக் கண்டங்களிலும் உள்ள 57 நாடுகளில், 51,927 பேரிடம் (ஆண்,பெண் இருபாலரிடமும்) முன்வைக்கப்பட்ட கேள்வி இதுதான்.

மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்பவராக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், நீங்கள் மத நம்பிக்கை உள்ளவரா?அல்லது மத நம்பிக்கை இல்லாதவரா? அல்லது கடவுள் மறுப்பாளரா? எனக் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு, 59 விழுக்காட்டினர் தமக்கு மத நம்பிக்கை உண்டு என்றும், 23 விழுக்காட்டினர் தமக்கு மத நம்பிக்கை இல்லை என்றும், 13 விழுக்காட்டினர் தாம் கடவுள் மறுப் பாளர் என்றும் கூறியுள்ளனர். 5 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் கூறவில்லை.

இந்தக் கணக்கெடுப்பு களை நேரடியாக 35 நாடுகளிலும், தொலைப்பேசி வாயிலாக 11 நாடுகளிலும், இணையதளம் வாயிலாக 11 நாடுகளிலும் எடுத்திருக் கிறார்கள்.
பொதுவாக மத நம்பிக்கை மற்றும் கடவுள் நம்பிக்கையில் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகமாக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால், இந்தக் கணக்கெடுப்பு அதனை மறுக்கிறது. மத நம்பிக்கையாளர்களில் ஆண்களைவிட பெண்கள் 1.5 விழுக்காடு குறைவாக உள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் ஆண்களைவிட பெண்கள் 1 விழுக்காடு அதிகமாக உள்ளனர். மதநம்பிக்கை இல்லாதவர்களில் ஆண்களும் பெண்களும் சம அளவில் இருக்கின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

மத நம்பிக்கை யுள்ளவர்களில் அதிகமானவர்கள் குறைந்த வருவாய்ப் பிரிவினரே. அதிக வருவாய்ப் பிரிவினரைவிட இவர்கள் 17 விழுக்காடு அதிகம்.

இந்தக் கணக்கெடுப்பு எடுத்த ஆண்டு 2012. இதற்கு முன் 2005 ஆம் ஆண்டில் இதே கேள்வியுடன் கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர். அதனுடன் 2012 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது உலக அளவில் மத நம்பிக்கை குறைந்து வருவதாக அந்த ஆய்வு கூறியுள்ளது.

40 நாடுகளில் 2005இல் மத நம்பிக்கையாளர்கள் 77 விழுக்காடு; 2012இல் இது 68 விழுக்காடாகக் குறைந்து விட்டது.

39 நாடுகளில் 2005இல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் 4 விழுக்காட்டினர்; 2012இல் இது 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இந்த வகையில் மத நம்பிக்கை 9 விழுக்காடு குறைந்தும், கடவுள் நம்பிக்கையின்மை 3 விழுக்காடு அதிகரித்தும் உள்ளது தெரிய வந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அங்கு 47 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்; 30 விழுக்காட்டினர் மத நம்பிக்கை இல்லாதோர்; 14 விழுக்காட்டினர் மட்டுமே மத நம்பிக்கையாளர்கள்.



தமிழ் ஓவியா said...

வியட்நாமில் 2005இல் 53 விழுக்காட்டினராக இருந்த மத நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை 2012இல் 30 விழுக்காடாகக் குறைந்து உள்ளது.

ஜப்பானில் 2005இல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் விழுக்காடு 23. இது 2012இல் 31 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 2005இல் 4 விழுக் காடாக இருந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை 2012இல் 3 விழுக்காடாகக் குறைந்தாலும், 2005இல் 87 விழுக்காடாக இருந்த மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை 2012இல் 81 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இதன்மூலம் இந்தியாவில் 6 விழுக்காட்டினர் மத நம்பிக்கையைக் கை விட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் எந்தக் கருத்தும் சொல்லாத 3 விழுக்காட்டினரை கடவுள், மதங்களைப் பற்றிக் கவலைப்படாதவர்களாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையினரும் ஒரு வகையில் கடவுள், மதங்களுக்கு எதிரானவர்கள்தானே! இந்தியாவில் தொலைப்பேசி வாயிலாக இந்தக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் தலைதூக்கியுள்ள, அழுத்தமான மத நம்பிக்கை கொண்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மத நம்பிக்கையற்றோர் கணிசமான அளவில் உள்ளனர். இவ்விரு நாடுகளிலும் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டில் மத நம்பிக்கை இல்லாதவர்களின் விழுக்காடு 15 என்கிறது இந்தக் கணக்கெடுப்பு (2 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் சொல்லாதவர்கள்). பாகிஸ்தானில் 8 விழுக்காட்டினர் மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும், 2 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகவும் (6 விழுக்காட்டினர் எந்தக் கருத்தும் சொல்லாதவர்கள்) உள்ளனர்.

உலக மக்கள் தொகை 712 கோடி. இவர்களில் 51,927 பேர்களிடம் மட்டுமே இந்தக் கருத்துக் கேட்பு செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையான ஆய்வாக எடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும் மேலோட்டமாக மக்களின் மன ஓட்டம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இந்த மேலோட்டமான ஆய்விலேயே 59 விழுக்காட்டினர்தான் தமக்கு மத நம்பிக்கை உண்டு என்று கூறியுள்ளனர். எஞ்சிய 41 விழுக்காட்டினர் மத நம்பிக்கை இல்லாதோர், கடவுள் நம்பிக்கை இல்லாதோர் மற்றும் எந்தக் கருத்தும் சொல்லாதோர். ஆக, உலகில் சரி பகுதிக்குக் கொஞ்சம் அதிகமாகத்தான் மத உணர்வாளர்கள் உள்ளனர் என்பது தெரிய வருகிறது.

ஆனால், எதார்த்தம் என்ன? நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மத மோதல்கள் உலகை அச்சுறுத்துகின்றன. மத அடிப்படைவாதம் மனிதநேயத்தை அழிக்கிறது. மதங்கள் ஊட்டும் போதனைகளால் சக மனிதர்கள் வெறுக்கப்படுகிறார்கள். மத வேறுபாடுகளால் நாடுகளுக்குள் பகை மூண்டு போர்கள் நடக்கின்றன. மனிதனை மனிதனாகப் பார்க்காமல் மதவாதியாகப் பார்க்கும் நிலை நீடிக்கிறது. உலகமே என் மதத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என ஒவ்வொரு மதமும் நினைக்கிறது. இதனால் மேலும் மேலும் பிரிவினைகளே வளரும். இந்நிலையில்தான் மதமற்ற உலகைப் படைப்போம் என பகுத்தறிவாளர்கள் அழைக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

அறிவுக்கு இடம் தராமல் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மத அடிப்படை அரசுகளும், மதச்சார்பற்ற அரசுகள் என்று சொல்லிக் கொண்டாலும் மதச்சார்பற்ற மனித நேயர்களுக்குப் போதிய பங்களிப்பைத் தராத அரசுகளுமே உலகில் உள்ளன. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கும்போது கண்டிப்பாக மதம் எது? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. மதமற்றவர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் இந்தப் பட்டியலில் இதுவரை இடம் தரப்படவில்லை. தன் கடவுளையும் தன் மதத்தையும் அடுத்தவன் மீது திணிக்கும் மத வெறியே இங்கு மேலோங்கியுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பகுத்தறிவாளர் என்ற பிரிவு இல்லாததால் வேறு வழியின்றி தாம் பிறந்த மதத்தைப் போடவேண்டிய அவசியம் நேருகிறது. இதனால் இந்தியாவில் பகுத்தறிவாளர்களின் உண்மையான எண்ணிக்கை சரியாகத் தெரியாத நிலை.

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் பகுத்தறிவு இயக்கங்கள் மக்கள் இயக்கங்களாக உள்ளன. குறிப்பாக, தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பகுத்தறிவை மக்கள் மயமாக்கினார். அதன் தாக்கம் எல்லாக் கட்சிகளுக்குள்ளும் உண்டு. இந்தியாவில் பகுத்தறிவாளர்களை உரிய முறையில் கணக்கெடுத்தால் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை அறிய முடியும். வாய்ப்பையே அளிக்காமல் குறைந்த எண்ணிக்கையினர் என்று மதவாதிகள் அலறுவது அசல் அயோக்கியத்தனம் அல்லாமல் வேறென்ன. ஒரு சமுதாயத்தைக் கட்டமைப்பதிலும், ஒரு நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெறச் செய்வதிலும், சமூகத்தை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்வதிலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களான பகுத்தறிவாளர்களுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. இது உலகம் முழுமைக்கும் பொருந்தும். இதனை யார்தான் மறுக்க முடியும்?
எல்லோரையும் போலவே நாட்டின் குடிமகன் என்ற முறையில் பகுத்தறிவாளர்கள் நாட்டிற்கு வரி செலுத்துகிறார்கள். ஆனால், அவர்களுக்குரிய பங்கு எல்லாவிடங்களிலும் கொடுக்கப்படுகின்றனவா?

மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் இந்திய அரசு எல்லா மதங்களுக்கும் செலவிடுகிறது. பகுத்தறிவாளர்களுக்கு என்ன தருகிறது? ஹஜ் பயணத்திற்கும், ஜெருசலேம் பயணத்திற்கும், மான்சரோவர் -முக்திநாத் பயணத்திற்கும் சலுகைக் கட்டணம் அளிக்கும் அரசுகள் பகுத்தறிவாளர்களின் அறிவியல் பயணத்திற்குச் சலுகை அளிப்பதில்லை. இது, தன் நாட்டு மக்களைப் பேதப்படுத்தும் செயல் அல்லவா?

ஒவ்வொரு நாடும் எவர் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் பின்பற்றாமல் போனாலும் அவர் தன் நாட்டுக் குடிமகன்/குடிமகள்; அனைவரும் சமமே. எல்லாச் சலுகைகளும் எல்லோர்க்கும் உண்டு. வாழ்விடங்களில், சமூகப் பொதுத்தளங்களில் எந்தவித பேதமும் இல்லை; மதத்தின் பெயரால் எந்தச் சலுகையும் இல்லை என்ற நிலையை உருவாக்கும் காலம் வந்துதான் தீரும். மதங்களில் வெறிச் செயல்பாடுகள் அதிகமாக அதிகமாக மக்களின் மனங்கள் மனிதநேயத்தின் பக்கம் திரும்பும்; அது இயற்கை. உலக அளவில் மதமற்றவர்கள் மற்றும் நாத்திகர்களின் என்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது இதைத்தான் உணர்த்துகிறது.

ஆன்மீகம் என்ற சொல் மத நம்பிக்கையை, கடவுள் நம்பிக்கையைக் குறிக்கிறது. அதாவது ஆன்மாவோடு தொடர்புடையது. தன் மதம் மட்டுமே உயர்ந்தது என்பது ஒவ்வொரு மத நம்பிக்கை கொண்ட ஆன்மீகவாதிகளின் கருத்து. இதேபோல நாத்திகம் என்ற சொல்லை இங்கே விளங்கிக் கொள்வோம். இந்து மதத்தின் படி, நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பாளன் என்று பொருள் அல்ல; வேத மறுப்பாளன் என்பதே அதற்குப் பொருள். இதுகூட வேத விருப்பாளர்கள் சூட்டிய பெயர்தான். கடவுள் மறுப்பாளர்கள் தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர் பகுத்தறிவாளர் என்பது. மத நம்பிக்கையாளர்களான வேத(ங்களின்-எல்லா மதங்களின்) விருப்பாளர்களுக்குக் கடவுளை மறுக்கும், மதங்களை ஏற்காத மனிதர்கள்மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், பகுத்தறிவாளர்களோ ஒருபோதும் மனிதர்களை வெறுப்பதில்லை; மனிதர்களிடையே பிரிவினையை விதைத்துவிட்ட மதங்களை வெறுப்பவர்கள்.உலக மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். இப்போது சொல்லுங்கள். ஆன்மீகம் தகர்ந்து நாத்திகம் தழைப்பது நல்லதுதானே!

- அன்பன்

தமிழ் ஓவியா said...



கடல்லயே இல்லையாம்!

(இந்திய ஒலிம்பிக்கும், வண்டுமுருகன் ஜாமினும்)

உலகெங்கும் ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.. ஒலிம்பிக் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வெல்லுங்கள் அப்படின்னு ஒரு விளம்பரம். சரி, நாமளும்தான் என்ன போட்டின்னு போய்ப் பார்க்கலாமேன்னு பார்த்தேன். உங்களுக்குப் பக்கத்தில எங்க விழா நடக்குதோ, போட்டி நடக்குதோ அங்க போய் கலந்துக்கங்கன்னு போட்டிருந்துச்சு. சரி, நம்மளுக்குப் பக்கத்திலன்னா சென்னை இல்ல பெங்களூரு-வா இருக்கும்னு ஆவலா எடுத்துப் பார்த்தா... அடப் பாவிகளா...

வஞ்சர மீன் இருக்குன்றான்... வால மீன் இருக்குன்றான்...

கெண்டை மீன் இருக்குன்றான்... கெளுத்தி மீன் இருக்குன்றான்...

அவ்வளவு ஏன் சுறா மீன் கூட இருக்குன்றான்... ஆனா... ஜாமீன் மட்டும் இல்லைங்கிறான்...

கடல்லயே இல்லையாம்..னு வடிவேலு படத்தில வர்ற மாதிரி...

பாகிஸ்தான்ல இருக்குன்றான்... பங்களாதேஷ்ல இருக்குன்றான்...

இலங்கைல இருக்குன்றான்... இந்தோனேசியால இருக்குன்றான்...

மியன்மார்ல இருக்குன்றான்... மாலத்தீவுல இருக்குன்றான்...

அவ்வளவு ஏன் நேபாளத்திலகூட இருக்குன்றான்... ஆனா... இந்தியாவுல மட்டும் இல்லைங்கிறான்...

ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டு, இந்தியா ஒலிம்பிக்-லயே இல்லையாம்..னு சொல்றாய்ங்க...

அதிர்ச்சி ஆகாதீங்க.. இது பழைய செய்தி! கடந்த ஆண்டு டிசம்பர்லயே இந்திய ஒலிம்பிக் சங்கத்தைத் தடை பண்ணிருச்சாம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி! இங்க ஒரே ஊழல், அரசின் தலையீடு, முறைகேடு, உறுப்பினர்கள் பலர் மேல கிரிமினல் வழக்குகள் அப்படியிப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லித் தடை பண்ணிட்டாங்க... துப்பாக்கிச் சுடும் போட்டியில பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மாதிரி ஆட்கள் நேரில போய் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை 5 மாதம் கழிச்சுச் சந்திச்சு (கடந்த மே மாதத்தில) தடையை நீக்கக் கேட்டிருக்காங்க... முறையா தேர்தல் நடத்துங்க... அப்புறம் தடையை ரத்து பண்றோம்னு சொல்லிட்டாங்க... நம்மாளுகளும் நம்பிக்கை தெரிவிச்சுட்டு வந்துட்டாங்க...

இதைப் பத்தி எவனுக்காவது தெரியுமா? கிரிக்கெட் - ஒரு விளையாட்டுன்னு அதைக் கட்டிக்கிட்டு அழுது, அதுலயும் சூதாடி, ஊழல் செஞ்சு, அதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கானுக...

இங்க என்னடான்னா, உருப்படியா விளையாட வேண்டிய விளையாட்டுகளுக்கே ஆப்பு வந்திடுச்சு! முழுமையான உடல் தகுதியும், விளையாட்டுத் திறமையும் இருக்கிற, இந்த நாட்டோட மூலை முடுக்குகள்லயும், கிராமங்கள்லயும், மலைப் பகுதியிலயும் இருக்கிற வீரர்கள், வீராங்கனைகளைக் கண்டுக்காம, அவங்களை வளர்த்தெடுக்காம, பணம் - சிபாரிசுன்னு உருப்படாத சாம்பார்களைத் தேர்ந்தெடுக்கிறது - கிரிக்கெட் மாதிரி மொக்கை விளையாட்டுகளுக்கு விளம்பரம், வசதி கொடுக்கிற ஊடகங்கள், அரசுகள் எல்லாம் உருப்படியான விளையாட்டுகளுக்கு வசதி தராம தட்டிக் கழிக்கிறதுன்னு இருந்தா... வௌங்கும் இந்த நாட்டு விளையாட்டு!

கிரிக்கெட் இந்த நாட்டுல மத்த உண்மையான விளையாட்டுகளை எப்படி ஒழிச்சதுன்னு ரொம்பப் பேரு கேட்கிறாங்க... ஒலிம்பிக்-ல நம்ம இல்லைங்கிறதயே தெரியாம வச்சிருக்கே... இதை விடவா ஒரு எடுத்துக்காட்டு வேணும்... அந்த மட்டையைப் புடுங்கி அடுப்புல போட்டாத் தான் நாடு உருப்படும்.

தமிழ் ஓவியா said...

விலைவாசி ஏறினா நமக்கென்ன?

அம்புஜம் : ஏன்னா, மாசம் பொறந்து இத்தன நாளாகுறதோ இல்லியோ.?.. இன்னும் இந்த மளிகை ஜாமான் வாங்கியாராம இருக்கேளே? விலைவாசி வேற கும்முன்னு ஏறிண்டே போகுதாம்.. நியூஸெல்லாம் படிக்கிறேளா...?

சிறீராமன் : அடிப் போடி அம்புஜம்.. விலைவாசி எவ்வளவு ஏறினாத்தான் நமக்கென்னடி ஆச்சு? நாம யாருன்னு நோக்குத் தெரியுமா தெரியாதா?

அம்பு : எனக்கு என்னன்னா தெரியும் .. நீங்க என் ஆம்படையாள் .. அது மட்டும்தானாக்கும் நேக்குத் தெரியும் ..

சிறீரா : அட மடையி ! நாம பிராமணாள்டி .. நாம் பூதேவர்டி .. பூஜை, யாகம் புனஸ்காரம் எல்லாம் செய்ய நமக்கு மட்டும் தான்டி நீஷீஜீஹ்க்ஷீவீரீலீ இருக்கு அம்பு : அப்படியாங்கானும் .. பேஷ் .. பேஷ்...

கிறீரா : மழை வேண்டியும், உலக நலனுக்காகவும் அப்டின்னு அள்ளி விட்டோம்னா ஒரு மாச மளிகை ஜாமான அள்ள முடியாதா என்ன ? அதுவும் இந்தச் சூத்திராள் இருக்காளே, சரியான மடப்பசங்க .. அவா எவ்வளவு காலம் ஏமாறுவாளோ, அவ்வளவு காலம் மாசா மாசம் நமக்கு மளிகை ஜாமான் அவாளோட பணத்துலதான்டீ...என்ன...நான் சொல்றது..புரியறதா...?

அம்பு: ...ம்...பேஷ்..பேஷ்..நம்மளவா அந்தக் காலத்துலேயே நன்னாத்தான் யோசிச்சு இந்த பூஜை, புனஸ்காரங்களையெல்லாம் உருவாக்கியிருக்கா...!

_ திராவிடன் கமுகக்குடி மாரிமுத்து

தமிழ் ஓவியா said...

வாடிப்பட்டியில் வன்கொடுமை


மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் வசிக்கும் முருகாயி (வயது 65) தனது வீட்டிற்கு அருகே உள்ள பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்துள்ளார்.

இதனைப் பார்த்த ஜாதி இந்து பிரிவைச் சேர்ந்த சிலர், தலித் இனத்தைச் சேர்ந்த பெண் எப்படிப் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கலாம் என்று கூறி, முருகாயியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, ஜாதிப் பெயரைச் சொல்லி அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இப்படி, வெளிச்சத்திற்கு வரும் நிகழ்வுகள் சில இருக்க வெளி உலகத்திற்குத் தெரியாமல் எத்தனை மக்கள் இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ? அரசும், அரசு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

- பவானந்தி

தமிழ் ஓவியா said...

வடுகப்பட்டியில் சிறுவன் தலையில் செருப்பு

உசிலம்பட்டிக்கு அருகே உள்ள வடுகப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் பள்ளி மாணவன் அருண்குமார் அந்த ஊரின் வழக்கப்படி தலையில் செருப்பை வைத்துக்கொண்டு நடந்து வந்துள்ளான். வந்த வழியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு நின்றபோது, வெயிலின் சூடு தாங்க முடியாமல் தலையில் வைத்திருந்த செருப்பை எடுத்துக் கால்களில் போட்டுள்ளான். அதனைப் பார்த்த ஜாதி இந்துப் பிரிவைச் சேர்ந்த இளைஞன், அருண்குமாரைத் திட்டி, தலையில் செருப்பை வைக்கும்படிக் கூறியுள்ளான்.
இதுகுறித்து, தலித்துகள் இந்துக்கள் வாழும் தெருக்களில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது, இறந்தவரின் உடலினையும் கொண்டு செல்லக் கூடாது. கோயில் வராண்டாவில் உட்காரக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் பல உள்ளன. என் மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பின்புதான் இங்குள்ள தீண்டாமைப் பிரச்சினை வெளியே தெரிய வந்துள்ளது என்று அருண்குமாரின் பாட்டி கூறியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டில்தான் நாம் இருக்கிறோமா? செருப்பு என்பது கால்களைப் பாதுகாப்பது. அதனை ஒரு மனிதன் தலையில் சுமக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமை.இதனை இன்னும் அனுமதிக்கும் சமூகம் எப்படி வளர்ந்த சமூகமாகும்? வெட்கம்.. வெட்கம்...

தமிழ் ஓவியா said...




புகையிலையை ஊக்கப்படுத்தும் விளம்பரங்களைத் தடை செய்வீர் என்ற வாசகத்தை உலக புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 அன்று உலக சுகாதார நிறுவனம் முன் வைத்துள்ளது.

151 நாடுகளில் உள்ள வயது வந்த பெண்களில் 7 சதவிகிதத்தினரிடம் புகையிலைப் பழக்கம் இருப்பதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும், புகைப் பிடிப்பவர்கள் விடுகின்ற புகையினால் ஒவ்வோர் ஆண்டும் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தொற்று அல்லாத நோய் களால் இறப்போரில் 63 சதவிகிதத்தினர் புகையிலைப் பழக்கம் உடையவர்கள்.

புகைப்பிடிக்கும்போது வெளிவரும் புகையினால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று மதுரை ஆசீர்வாதம் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜெபசிங் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

புதுமை இலக்கியப் புங்கா ஓ மனிதா!


தமிழ் இலக்கிய உலகில் புதுமைச் சிந்தனையை விதைத்தவர்களுள் முக்கியமானவர் விந்தன். இவரது பல படைப்புகள் மனிதனின் முரண்களை விமர்சிக்கும். சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைத் தொடுக்கும். படிக்க விறுவிறுப்பாகவும், காலம் கடந்தும் வாசிக்க இலகுவான எழுத்து நடையும் விந்தனுக்கே உரிய கைவந்த கலை.அவரது முத்திரை பதித்த இரண்டு படைப்புகள் இங்கே...

குரங்கு கேட்கிறது

மனம் ஒரு குரங்கு என்று சொல்லிக் கொள்வதோடு மனிதர்களான நீங்கள் நிற்பதில்லை; ஆதியில் என்னிலிருந்து வந்ததாகவே நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள். அதையும் சாதாரணமாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆராய்ச்சிப் பூர்வமாகச் சொல்லிக் கொள்கிறீர்கள். அதற்கென்றே டார்வின் சித்தாந்தம் என்று ஒரு தனிச் சித்தாந்தத்தையே உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் அதை ஒரு பெருமையாகக்கூட நீங்கள் கருதிக் கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் அந்த அளவுக்கு எங்களுடைய பெருமையைக் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம், உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவு எங்களுக்கு இல்லாமல் இருப்பதுதானோ என்னவோ?

ராம_ராவண யுத்தத்தில் ஈடுபட்டதன் காரணமாக உங்களில் சிலருக்கு நாங்கள் வணக்கத்துக்குரிய ஜீவன்களாக இருந்து வருகிறோம். ஆயினும் என்ன, கடவுளரைக் குறிக்கும் விக்கிரகங்களை வேண்டுமானால் நீங்கள் நைவேத்தியம் என்ற பேரால் பழம் _பட்சணம் வைத்து வணங்குவீர்கள் _ அவற்றை எடுத்து அவை தின்றுவிடாது என்ற தைரியத்தில்! எங்களை வணங்கும்போதோ? _ ராம ராமா! என்று கன்னத்தை வலிக்காமல் தொட்டுக் கொள்வதோடு சரி!

இதனால் என்ன நடக்கிறது? _ எங்களுக்கு வேண்டியதை நாங்கள் உங்களிடமிருந்து தட்டிப் பறித்தே தின்ன வேண்டியிருக்கிறது.

நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்று கொண்டிருக்கிறீர்கள்!

இது உங்கள் பிறவிக் குணம். நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டீர்கள். அப்படியே கொடுத்தாலும் ஏதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேளையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற்போலேயே யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்துத் தாராளமாகத் தருமம் செய்துவிட்டு, நான்தான் தருமம் செய்துவிட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா! என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்!

இருப்பவன் எதையும் எதிர்பாராமல் இல்லாதவனுக்குக் கொடுப்பது என்ற ஒரு தருமத்தை மட்டுமாவது நீங்கள் அன்றிருந்தே கடைப்பிடித்து வந்திருந்தால், இன்று உங்களிடையே திருடர்களும் கொலைகாரர்களும் ஏன் உருவாகி இருக்கப் போகிறார்கள்?

அல்லது, இந்த உலகத்தில் காணும் எல்லாமே எல்லாருக்கும் சொந்தமானவை. இவற்றில் உனக்கு, எனக்கு என்று எதுவும் இல்லை என்ற வேதாந்தத்தை எங்களைப் போலவே நீங்களும் உண்மையாகவே கடைப்பிடித்து வந்திருந்தாலும் உங்களிடையே இருப்பவன் என்றும், இல்லாதவன் என்றும் இப்போது எவனும் இருந்திருக்க மாட்டானே!

போகட்டும்; இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா? _ உங்களுக்குத் தன்னம்பிக்கை இல்லாமற் போனதுதான்.

அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றாலும் உங்கள் குழந்தைகளுக்காவது இருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? அதுவும் இல்லை.

நான்தான் சில சமயம் உங்கள் வீட்டுக் கூரையின் மேல் உட்கார்ந்து கொண்டு உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கிறேனே! _ நீங்கள் பல் தேய்ப்பதைப் பார்த்துவிட்டு உங்கள் குழந்தை தானும் பல் தேய்க்க எண்ணிப் பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் கையில் எடுத்தால் போதும், வேண்டாண்டா கண்ணு, உனக்குத் தேய்க்கத் தெரியாது. இப்படிக் கொண்டா, நானே தேய்த்து விடுகிறேன்! என்று நீங்களே அதற்குப் பல் தேய்த்து விடுகிறீர்கள். குளிக்கப் போனால், உனக்குத் தெரியாதுடா, இப்படி வா! என்று நீங்களே அதைக் குளிப்பாட்டி விடுகிறீர்கள். சாப்பிடப் போனால், உனக்குத் தெரியாதுடா, இப்படி வா! என்று நீங்களே அதற்கு ஊட்டி விடுகிறீர்கள். உடை அணிந்து கொள்ளப்போனால் உனக்குத் தெரியாதுடா, இப்படி வா! என்று நீங்களே அதற்கு உடை அணிவித்து விடுகிறீர்கள்.


தமிழ் ஓவியா said...

எல்லாம் முடிந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது அப்பா! பென்சில் வாங்க வேண்டும், காசு தா! என்று கேட்டாலோ, உனக்கு என்ன தெரியும், பென்சில் வாங்க? வா, நானே வாங்கித் தருகிறேன்! என்று அவனைக் கையோடு கடைக்கு அழைத்துப் போய்ப் பென்சில் வாங்கித் தந்துவிட்டு, பார்த்துப் போ! பத்திரமா போ! பார்த்துப் போ, பத்திரமா போ! என்று ஆயிரம் பார்த்துகளும், ஆயிரம் பத்திரங்களும் சொல்லி அனுப்பிவிட்டு வருகிறீர்கள். முடிந்தால் பள்ளி வரை சென்று அவனை அங்கே உட்கார வைத்த பின்னரே நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்கள்.

அதாவது, எடுத்ததற்கெல்லாம் உனக்கு ஒன்றும் தெரியாது, உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிச் சொல்லியே அவனை ஒன்றும் தெரியாதவனாக வளர்த்து, எதற்கும் தன்னை நம்பி வாழாமல் பிறரை நம்பி வாழக் கூடியவனாக அவனை உருவாக்கி விட்டு விடுகிறீர்கள்!

ஓ மனிதா! என்னையும் என் குட்டியையும் சேர்ந்தாற்போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ? _ அய்யோ, குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே! தவறிக் கீழே விழுந்து விடுமே! என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டேன்; அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். அதுவும் எப்படி? _ என் முதுகைத் தன் கால்களால் சுற்றி வளைத்துப் பிடித்தபடி, அடி வயிற்றில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும். நானோ அதைக் குனிந்துகூடப் பார்க்காமல் கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் இரை தேடித் தாவிக் கொண்டே இருப்பேன். அப்படித் தாவும்போது, பத்திரம், கெட்டியாகப் பிடித்துக் கொள்! என்றோ, விழுந்துவிடப் போகிறாய், ஜாக்கிரதை! என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா? _ மாட்டேன். தன்னைத்தானே தான் அது காப்பாற்றிக் கொள்ள வேண்டும். என்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் அதற்குள் எழுந்துவிட்டால், பிற்காலத்தில் அது தன்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?

இப்படிச் சொல்வதால், எனக்கு அதன்மேல் அன்பே கிடையாது என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். உண்டு; நானும் உங்கள் வீட்டுப் பெண்களைப்போல அதை என் முன்னங்கால்களால் அணைத்துப் பிடித்துக் கொண்டு பால் கொடுப்பதுண்டு _ ஆனால் எதுவரை? _ அதற்கு இந்த உலகம் தெரியும் வரை. தெரிந்தபின்? _ எதற்கும் பிறரை அது ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எதிர்பார்க்கவிட வேண்டும்?

தமிழ் ஓவியா said...

புலி இருக்கிறதே புலி, அதற்கு எங்களைக் கண்டால் வெல்லம். நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு அது எங்களைச் சுற்றிச் சுற்றி வரும். சில சமயம் அது எங்களைப் பிடித்துத் தின்ன மரத்தைக்கூடத் தாவும். அதற்குப் பயந்து நாங்கள் வானளாவி வளர்ந்துள்ள மூங்கிலின் உச்சிக்குப் போய்விடுவோம். அந்த மூங்கிலோ எங்கள் கனத்தைத் தாங்காமல் ஸ்பிரிங் போல் உதைத்துக் கொண்டு அப்படியும் இப்படியுமாக வீசி வீசி ஆடும். அந்த ஆட்டத்தில் சில சமயம் எங்களை வளைத்துப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் எங்கள் குட்டிகள் பிடி தளர்ந்து கீழே விழுந்து விடுவதுண்டு. அப்போதும் அவற்றைக் காப்பாற்ற நாங்கள் விரைந்து செல்வோம் என்கிறீர்களா? _ மாட்டோம்; தட்டுத் தடுமாறி எழுந்து தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்றுதான் அவற்றை விட்டுவிடுவோம்...

இம்மாதிரி சமயங்களில் அவை காணாமற் போனால்கூட அவற்றைத் தேடி நாங்கள் அலைவது கிடையாது. ஏனெனில், என்றாவது ஒரு நாள் அவையே எங்களைத் தேடி வந்துவிடும் என்பது எங்களுக்குத் தெரியும்; நாங்கள் அவற்றைத் தேட மாட்டோம் என்பதும் அவற்றுக்குத் தெரியும்.

மனம் விட்டுச் சொல்கிறேனே! _ இயற்கையாக இல்லாத பந்தத்தையும் பாசத்தையும் உங்களைப்போல் அவ்வப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, அவற்றுக்காக ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருந்து கொண்டு, சதா தொல்லையில் உழன்றபடி வாழும் வாழ்வு எங்களுக்குப் பிடிப்பதே இல்லை.

அப்படியிருக்க, எங்களிலிருந்து வந்ததாக நீங்கள் எப்படித்தான் சொல்லிக் கொள்கிறீர்களோ, அதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.

காகம் கேட்கிறது

கொஞ்ச நாட்களாக உங்களை இந்த சோஷலிஸப் பைத்தியம் பிடித்து ஆட்டி வைக்கிறது. எங்களையும் நீங்கள் சோஷலிஸ்டுகள் என்று சொல்லி, எது கிடைத்தாலும் அதை நாங்கள் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவதாகப் போற்றி வருகிறீர்கள்.

இது எந்த அளவுக்கு உண்மையென்றால் நீங்கள் சோஷலிஸம் பேசும் அளவுக்குத்தான் உண்மை!

அதாவது, கீழே ஏதாவது இருந்து, அதைக் கொத்திக் கொண்டு மேலே போக முடியாமலிருந்தால், நாயோ பூனையோ வந்து எங்களை விரட்டிவிட்டுத் தின்றுவிடக் கூடாதே என்பதற்காக கா, கா, கா என்று கரைந்து நாங்கள் பக்க பலத்துக்காக மேலும் கொஞ்சம் கூட்டம் சேர்ப்போம். உங்களுக்கு முன்னால் அதைக் கலந்துண்டு, எங்களை சோஷலிஸ்ட்டுகளாகவும், காட்டிக் கொள்வோம். கிடைத்ததை எடுத்துக் கொண்டு மேலே போக முடிந்தாலோ? _ அதைக் கொண்டுபோய் ஒரு மரக்கிளையின்மேல் வைத்து, அது தவறிக் கீழே விழுந்துவிடாதபடி அதன்மேல் ஒரு காலை ஊன்றிக்கொண்டு, சக காக்கைகள் பகிர்ந்துண்ண வந்தால் அவற்றைச் சிறகால் அடித்து விரட்டிக் கொண்டு, அதை நாங்களே, நாங்கள் மட்டுமே எங்கள் அலகால் பிய்த்துப் பிய்த்துத் தின்று தீர்ப்போம்.

இந்த விஷயத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள ஓர் அபூர்வ ஒற்றுமை என்னவென்றால், நீங்களும் கீழே உள்ளவரை சோஷலிஸம் பேசிவிட்டு, மேலே போனதும் அதை மறந்துவிடுகிறீர்கள்; நாங்களும் கீழே எதையாவது வைத்துத் தின்ன நேர்ந்தால் சோஷலிஸ்ட்டுகளாக இருக்கிறோம்; மேலே வைத்துத் தின்ன முடிந்தால் சுதந்திராவாகி விடுகிறோம்.

அடாடா! இந்த அழுமூஞ்சி உலகத்தையே ஆனந்த உலகமாக்கப் போகும் சோஷலிஸத்தில் நமக்குள்ளே என்ன ஒற்றுமை, என்ன ஒற்றுமை!

அது போகட்டும்; இது என்ன சங்கதி? _ உங்களில் சிலர் உண்பதற்காகக் காடை, கவுதாரி போன்றவற்றைப் பிடிக்கிறார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். வளர்ப்பதற்காக கிளி, மைனா போன்றவற்றைப் பிடிக்கிறார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன். எங்களையோ? _ யாரும் எதற்காகவும் பிடிக்கவுமில்லை; பிடிப்பதாகத் தெரியவுமில்லை. அப்படியிருந்தும் இந்தக் காக்கா பிடிக்கும் கலை என்று ஒரு கலை உங்களிடையே எப்படி உருவாகி வளர்ந்தது?...

அதைப்பற்றி நீங்கள் யோசித்தீர்களோ இல்லையோ, நான் யோசித்தேன், யோசித்தேன், அப்படி யோசித்தேன். கடைசியில் அந்தக் கதைதான் என் நினைவுக்கு வந்தது. எந்தக் கதை? என்கிறீர்களா? _ சொல்கிறேன்.

தமிழ் ஓவியா said...

தங்களைப் பற்றியே இன்னும் சரிவர ஆராய்ந்து தெரிந்து கொள்ளாத உங்களில் சிலர், எங்களைப் பற்றி இப்போது ஆராய்ந்து வருகிறார்களல்லவா? அவர்கள் எங்கள் இனத்தைத் திருட்டுப் பறவை இனத்தில் சேர்த்திருக்கிறார்கள். இது ஏன்? என்று எனக்குப் புரியவில்லை. யாரோ படைத்த பொருட்களுக்குச் சொந்தம் கொண்டாடும் யோக்கியர்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கேதானே திருடர்களும் இருக்க முடியும்? எங்களிடையேதான் எதற்கும் சொந்தம் கொண்டாடும் யோக்கியர்கள் இல்லையே? திருடர்கள் எப்படி இருக்க முடியும்?

என்ன ஆராய்ச்சியோ உங்கள் ஆராய்ச்சி!

இந்த அழகான ஆராய்ச்சியை உண்மை என்று நிரூபிப்பதற்காகவோ என்னவோ, உங்களில் ஒருவர் என்னை வைத்து ஒரு கதை கட்டி விட்டுவிட்டார். ஒரு நாள் ஒரு செட்டியார் கடையிலிருந்து ஒரு வடையைத் திருடிக்கொண்டு வந்து நான் மரத்தின்மேல் உட்கார்ந்து கொண்டேனாம். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த ஒரு நரி என்னிடம் வந்து, காக்கா காக்கா, இவ்வளவு அழகாயிருக்கிறாயே! உன் வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாடேன்? என்றதாம். உடனே நான் உச்சி குளிர்ந்து, கா, கா என்று பாட, வாயிலிருந்த வடை கீழே விழ அதைக் கவ்விக்கொண்டு ஓட்டம் பிடித்ததாம் நரி; நான் ஏமாந்து போனேனாம். இப்படி வஞ்சகப் புகழ்ச்சியால் பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் கலைதான் உங்களிடையே காக்கா பிடிக்கும் கலையாக உருவாகி வளர்ந்திருக்க வேண்டும்; இல்லையா?

அந்தக் கலையும் உங்களில் சிலருக்குத்தான் கை கொடுக்கிறது; சிலருக்குக் கை விரித்து விடுகிறது.

ஓர் அவசரத் தேவை _ உங்கள் நண்பர்களில் யாரிடமாவது போய்க் கை மாற்றாக ஒரு பத்து ரூபா வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள். அதற்காக நீங்கள் முதலில் நுழையும் வீடு ஒரு பாடகரின் வீடாயிருக்கிறது; வணக்கம், வணக்கம். நேற்று உங்கள் கச்சேரி பிரமாதமா இருந்தது. இந்த சீசனிலேயே ஏ ஒன் கச்சேரி உங்களுடையதுதான் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்! என்று காக்கா பிடித்துக் கொண்டே உள்ளே நுழைகிறீர்கள்.

ஏன் அய்யா, என் மானத்தை இப்படி வாங்குகிறீர்? இந்த சீசனிலேயே அந்த ஒரு கச்சேரிதான் எனக்குக் கிடைத்தது. அதுவும் கடைசி நிமிஷத்தில் கான்சலாகிவிட்டது! என்கிறார் அவர்.
அப்போதுதான் அன்றைக்கு முதல் நாள் அவருடைய கச்சேரி நடக்காமற் போனது உங்களுக்குத் தெரிகிறது. ஹிஹி,அப்படியா? நான் வரேன்! என்று போன சுவடு தெரியாமல் திரும்பி விடுகிறீர்கள். இது ஒரு விதம்.

தமிழ் ஓவியா said...

அலுவலகத்தில் பத்தோடுபதினொன்றாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மானேஜர் தம் அறையிலிருந்தபடி, யார் அங்கே? என்கிறார். அவர் எள் என்பதற்குள் எண்ணெயையே கொண்டுபோய்க் கொடுத்துவிட வேண்டுமென்பதற்காக, இதோ வந்து விட்டேன், என்று நீங்கள் எல்லாரையும் முந்திக்கொண்டு ஓடுகிறீர்கள். எங்கேயோ போயிருந்த ஹெட் கிளார்க்கைத் தேடிப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் மானேஜருக்கு முன்னால் நிறுத்துகிறீர்கள். நான் இவரையா கூப்பிடச் சொன்னேன்? ஸ்டெனோவையல்லவா கூப்பிடச் சொன்னேன்? என்கிறார் அவர். ஹிஹி, ஸ்டெனோவையா? இதோ கூப்பிடுகிறேன்! என்று பிடரியை ஒரு காரணமுமில்லாமல் தடவிக் கொண்டே திரும்புகிறீர்கள். இது இன்னொரு விதம்.

ஆக, எல்லாக் கலைகளிலும் உள்ள நுணுக்கம் இந்தக் கலையிலும் இருக்கிறது. அந்த நுணுக்கம் தெரிந்தவர்களே இதிலும் வெற்றிபெற முடிகிறது; அல்லாதவர்கள் தோல்வியையே தழுவ நேருகிறது.

ஓ மனிதா! ஒரு பாவமும் அறியாத என்னை இந்தக் காக்கா பிடிக்கும் கலையில் சம்பந்தப்படுத்தியதோடு நீ நின்றாயா? _ இல்லை; தெருவில் நீ அடித்துப் போடும் எலிகளையும், உன் காலடியில் சிக்கிச் செத்துக் கிடக்கும் தவளைகளையும் அப்புறப்படுத்தி நான் துப்புரவாக்குகிறேன் என்பதற்காக என்னை நீ ஆகாயத் தோட்டி என்ற சிறப்புப் பெயரால் வேறு அழைத்துத் தொலைகிறாய்!

இதில் தோட்டி என்னத்துக்கு, தோட்டி? அதற்குப் பதிலாக ஆகாயத் தொண்டன் என்றோ, ஆகாய ஊழியன் என்றோ அழைத்தால் என்னவாம்?

எப்படி அழைப்பாய்? தொழிலுக்கு ஒரு ஜாதி, ஜாதிக்கு ஒரு தொழில் என்று அந்த நாளிலேயே கண்டவனாயிற்றே நீ! நாளது வரை ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கம் சவரத் தொழிலாளி என்றும், சலவைத் தொழிலாளி என்றும் அரிஜன் என்றும் பழைய பெயர்களுக்குப் பதிலாகப் புதிய புதிய பெயர்களைச் சூட்டி, ஜாதிக்கு ஒரு தொழிலையும், தொழிலுக்கு ஒரு ஜாதியையும் நவீன முறையில் வளர்த்து வருபவனாயிற்றே நீ!
இந்த நிலையில் தன் ஜாதிக்கு விரோதமாகச் சவரத் தொழிலை மேற்கொண்டு தொழிலுக்கு ஒரு ஜாதியில்லை என்பதை நிரூபிக்க உங்களிடையே உள்ள ஒரு முதலியாரோ, ஒரு நாயுடுவோ எங்கே முன்வரப் போகிறார்?

சலவைத் தொழிலை மேற்கொண்டு, ஜாதிக்கு ஒரு தொழில் இல்லை என்பதை நிரூபிக்க ஒரு சர்மாவோ, சாஸ்திரியோ எங்கே துணியப் போகிறார்?

என்னை ஆகாயத் தோட்டி என்று இழித்துரைக்கும் மனிதனே! உங்களிடையே உங்களில் ஒருவனாக நடமாடும் தோட்டியை நீ நகர சுத்தித் தொழிலாளி என்று சொல்லிவிட்டால் சமூகத்தில் அவனுக்குள்ள இழிவு அவனைவிட்டுப் போய்விடுமா? ஒரு நாளும் போகாது.

அதனால்தான் வைசியரான மகாத்மா, தாமே தோட்டி வேலை செய்து காட்டினார். அவரையே டாக்டர் அம்பேத்கர் கேட்டார்:

அரிஜனங்கள் கடவுளின் மக்கள் என்றால், மற்றவர்கள் யாருடைய மக்கள்?

இதிலிருந்து என்ன தெரிகிறது? _ புறப்புரட்சி மூலம் யாரும் எதையும் சாதிக்க முடியாது; அகப்புரட்சி மூலமே சாதிக்க முடியும் என்று தெரியவில்லையா?

அந்த அகப் புரட்சியை நீ எப்போது செய்யப் போகிறாய்?

அதைச் செய்தால், ஜாதி இருக்காது; ஜாதி இல்லாவிட்டால் தேர்தலில் சுலபமாக வெற்றிபெற முடியாது;

தேர்தலில் வெற்றிபெற முடியாவிட்டால் எம்.எல்.ஏ.வாகவோ, அமைச்சராகவோ ஆக முடியாது; ஆகாவிட்டால் ஜனநாயகம் பிழைக்காது என்கிறாயா?

அதுவும் சரி; எது பிழைத்தால் என்ன, எது பிழைக்காவிட்டால் என்ன? _ நீ பிழைத்தால் சரி!

சுயநலத்தில் பிறந்த சோஷலிஸம் இப்படி இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்?

- விந்தன்

தமிழ் ஓவியா said...

பூமியின் தோற்றம் தற்செயல் நிகழ்வே!


வானவியல் அறிவியலாளர் டாக்டர் ப்ஃரான்சிஸ்கோ டயகோ கருத்து

டாக்டர் ப்ஃரான்சிஸ்கோ டயகோ உலகப் புகழ் பெற்ற வானவியல் அறிவியலாளர்.இவர் இலண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜின் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும்,இயற்பியல் மற்றும் வானியல் துறையின் தலைவராகவும் உள்ளார்.

பி.பி.சி மற்றும் பல்வேறு தொலைக்காட்சிகளில் கோள்கள் - பிரபஞ்சம் பற்றி நிகழ்ச்சிகளை வழங்குபவர். கோளரங்கம் அமைப்பதில் வல்லவரான டயகோ, உலகின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் தமது ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார். பகுத்தறிவாளரான டயகோவின் நேர்காணலை ழிமீஷ் New Humanist (May-June 2013) இதழ் வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம் நமது உண்மை வாசகர்களுக்காக...



கேள்வி: நீங்கள் மதத்துடனேயே வளர்ந்தீர்களா?

பதில்: நான் மெக்சிகோவில் பிறந்தேன். அங்கே நூறு விழுக்காட்டினரும் கிறித்துவ கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அங்கே ஒவ்வொரு மனிதர் மீதும், கிறித்துவர் தேவாலயம் ஆதிக்கம் கொண்டிருந்தது. எங்கள் குடும்பம் வழக்கமாக கோயிலுக்குப் போகும் குடும்பமல்ல. என் தாய்க்கு ஆழ்ந்த மதநம்பிக்கை உண்டு. ஆனால், என் தந்தை ஒரு நாத்திகர். இருவரும் ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாகப் புலம்பெயர்ந்து வந்தவர்கள். நான் இளைஞனாக இருந்தபோது நம்பிக்கை கொண்டவனாகத்தான் இருந்தேன். நீங்கள் நம்பிக்கை கொண்டிராவிட்டால், பாவம் தொடர்புடைய பலதரப்பட்ட கேள்விகளினால் நீங்கள் துளைத்தெடுக்கப்படுவீர்கள். மேலும், உடல்நிலை நல்நிலை பெறுதல், உங்களுக்கு நேரக்கூடிய கெட்ட நிகழ்வுகள் பற்றியெல்லாம் தொல்லைப் படுத்தப்படுவீர்கள். நான் வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள உலகத்தையும், பார்க்க ஆரம்பித்தபோது, பகுத்தறிவுப் பார்வையுடன் பார்க்க நேரிட்டவையெல்லாம், விவிலியத்துடன் முரண்பட்டு நின்றன. எப்படி ஒரு மாபெரும் இயற்கையை மாறிய சக்தி, உலகத்தையும், மனிதர்களையும் விலங்குகளையும் படைத்தன என்பது புரியாததாக இருந்தது. அங்கே முரண்பாடுகள் நிலைநின்றன. ஆக, இன்று நான் ஒரு மதமற்றவனாக இருக்கிறேன். கேள்வி: உங்களால் மதநம்பிக்கை உடையவராகவும், வானவியலாளராகவும் இருக்க முடியுமா? பதில்: என் கருத்துப்படி, ஒத்துப்போனதற்கான எந்த வாய்ப்புமில்லை! அவர்கள் வேறு வழிப்பட்ட, வேறு வகைப்பட்ட எண்ணம் கண்ணோட்டத்தில் இருந்து வந்தவர்கள். சிலர் தாங்கள் கடவுள் அல்லது கடவுளர்கள் மீது இன்னமும் நம்பிக்கை கொண்டு இருப்பதாகவும் ஆனாலும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் உலகத்தைப் பார்ப்பதால், அறிவியலாளராகவும் இருக்க முடிகிறது. நான் அப்படி நினைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...


கேள்வி: ஆனால் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது. இல்லையா?

பதில்: உலகத்தைப் பற்றிய பல விவரங்களை நம்மால் விளக்க முடியாது. இருந்தாலும், உண்மையில் நாம் சில விஷயங்களுக்கு விலக்களிக்க முடியாதவர்களாக இருக்கிறோம். ஆனால், அதற்காக ஸ்டீபன் ஜே.கோல்டு (Stephen J. Gould) இடைவெளியில் கடவுள் என்று சொன்னதைப் போல, நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. ஆனால் உலகத்தின் தோற்றத்தை நம்மால் விளக்க முடியாது. அல்லது வெளிப்படையாக கண்களுக்குத் தெரிகிற முறையில் உள்ள 96 விழுக்காட்டு உலகத்தைப்பற்றியும்கூட நம்மால் விளக்க முடியாது. இந்த இடைவெளிகளை நிரப்ப முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking) பேசிய கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். அங்கே யாரோ ஒருவர் கேட்டார்; உலகத்தில் உள்ள எல்லாவற்றையும்பற்றி, நாம் எப்பொழுதாவது தெரிந்துகொள்ளுவோமா? என்று. அதற்கு அவர்,.

அப்படி நான் நம்பவில்லை மனித அறிவு அதன் பயிற்சி, கண்டுபிடிக்கும் திறன், கருத்துகளை வளர்த்துக்கொள்ளுதல்பற்றி அறிந்துகொள்ளுதல் அல்ல. அவை நமக்குச் சவால் விடக்கூடியன. நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருந்தால் வாழ்க்கை மிகவும் சுவை குறைந்ததாகிவிடும்.

கேள்வி: அண்டத்தின் பிற பகுதிகளில் உயிர் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆம். அண்டத்தின் பல பகுதிகளில் ஆரம்பகால உயிரினங்கள் உள்ளன. அநேகமாக கோடிக்கணக்கான இடங்களில். ஆரம்பகால உயிரினங்கள் என்று நான் குறிப்பிடுவது ஆரம்பகால உயிரிகள் (Bacteria) அளவில் உள்ளவை. எந்த ஒரு அதீதமான நிலையிலும் உயிரிகள் உயிர் வாழ முடியும். அதற்கான ஆதாரங்கள் பூமியிலேயே பல இடங்களில் கிடைத்துள்ளன. ஆகவே, நிலவிலும் உயிரிகள் உண்டு. வியாழன் மற்றும் சனி கோள்களில் உள்ள பல நிலவுகளிலும், நிச்சயமாக செவ்வாய்க்கோளிலும் உயிரிகள் உண்டு. நாம் இப்போது நமது பால்வீதி கோள் கோட்டத்தில் (Milky Way galaxy) பல கோடி கோள்கள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளோம். அவற்றில் சில உயிரிகள் அளவில் சில உயிர்கள் தோன்றுவதற்கான நிலைமைகளைப் பெற்றுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஆனால், நாம் உயிர்களின் அதிகம் வளர்ந்தவற்றைப் பற்றிப் பேசும்போது, நுண்ணோக்கியின் உதவியில்லாமல் பார்க்கக்கூடிய பெரிய அமைப்புகளை (Macro structures) யூகார்யோடிக் செல்களினால் (Eukaryotic cells) பார்க்க முடியும். அவற்றைத் தயாரிப்பது மிகமிகக் கடினமான ஒன்று. பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆயின. பூமியில் தோன்றிய மனித வாழ்க்கை வரலாறு, மிகவும் கவர்ச்சிகரமானது. ஏனென்றால், அது ஒரு கிட்டத்தட்ட இயற்பியல் சட்ட ஒழுங்குகளைப் போன்று, அது ஓர் உயிரியல் மற்றும் ரசாயனக் கலவை ஆகும். அதாவது, அணுக்களை ஒன்றுபடுத்தி மோளகுயூல்கள் (Molecules) ஆக்கி அவற்றை மேலும் மேலும் சிக்கலுள்ளதாக வளர்ச்சி பெறச் செய்து, மேலும் அவற்றைப் பேரழிவு (Cataclysmic) நிகழ்ச்சிகளுக்கு உட்படுத்தி, கோள்களை மோதச் செய்து, பெரும் பூதாகரமான எரிமலை வெடிப்புகளை உண்டாக்கி, அந்தப் பூதாகரமான அழிவுகள் இயற்பியலுடனும் உயிரியலுடனும் தொடர்பில்லாதனவாக விளைந்தவை. இவை தற்செயல்களாக நிகழ்ந்தன. இந்த தற்செயல் விளைவுகள் பலமுறை வேர் வரை கவர்ந்து செய்யப்பட்ட நமது உயிர் வாழ் வழித்தடம் (Tree of Life) உயிரியல் பரிணாம வளர்ச்சியையும் கொண்டு திரும்பவும் ஒரு புது வழியில் வளர்கிறது.

நாம், பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும், அந்தத் தற்செயல் விளைவின் பல கிளைகள் ஒன்றில் வாழ்கிறோம். மற்ற கோள்கள் உயிர் வாழ் வழித்தடங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவைகள் மிகவும் வேறுபட்டிருக்கும்.

கேள்வி: நீங்கள் குழந்தைகளுக்கு அண்டத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்குப் பள்ளிக்கூடங்களுக்குப் போகிறீர்கள். அது கடினமாக உள்ளதா?

பதில்: ஆம். ஒரு பொருளைச் சரியாகப் புரிந்துகொள்வது கடினமானதுதான்.

ஏனென்றால், நமது புத்தி (Mind) நியூட்டனுடையது போல, நேர்கோடுகளிலோ, முப்பரிமாணத்திலோ, குறுகிய காலங்களுக்குள்ளான நேரம், வெளி ஆகியவைகளிலேயே செலவிடப்படுகிறது. நாம் ஒரு நூற்றாண்டுகளைப்பற்றியோ வருங்காலத்தையோ அல்லது சென்ற காலத்தையோதான் நினைக்க முடியும். ஆனால் நாம் ஆயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகளை நினைக்க ஆரம்பித்தால் நாம் நமது கால அளவைத்திறனை இழந்து விடுகிறோம். இவைகளைப்பற்றி விளக்குவதற்காக நான் கண்டுபிடித்துள்ள ஒரு வழி, கால அளவீட்டின் வரிசைப்படியானதாகும். 14 மீட்டர் நீளமுடைய ஒரு கயிறை நான் வைத்துள்ளேன். அண்டத்தின் கால வரிசையை இன்று நாம் கொண்டுள்ளது போல, அந்த 14 மீட்டர் கயிறானது, 14 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரு மில்லி மீட்டர் கயிறு, மில்லியன் ஆண்டுகளைக் குறிப்பதாக நாம் கருதிக் கொண்டால், அண்டத்தின் முழு வரலாறும் கொண்டுள்ளதாகச் சொல்லலாம். நான் குழந்தைகளை ஒரு மில்லி மீட்டர் நீளக்கயிற்றை ஒரு மில்லியன் ஆண்டுகளாக கற்பனை செய்துகொள்ளச் சொல்வேன். அதில் நான் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடும் வண்ணம், அண்டவெடிப்பு (Big Bang) விண்மீன்களின் தோற்றம், சூரியக் குடும்ப அமைப்பு, பூமியில் உயிரினம் உண்டாதல், Eukaryotic செல்கள் தோன்றுதல், டைனோசரஸ் தோற்றம் வரை அவற்றைக் குறிப்பிட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு பொருளைத் தொங்க விடுவேன். அந்த அளவையில் கடைசியிலிருந்து 0.2 மில்லி மீட்டர் இடத்தில் மனித இனம் வருகிறது. ஒரு சிறு துண்டுக் காகிதத்தின் அளவில் மனிதகுல வரலாறு அடங்கிப் போகிறது. இந்த உலகத்தில் நம்முடைய தோற்றத்தைக் கற்பனையில் பார்ப்பதற்கு இது உதவுகிறது. குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அது மிகவும் எளிமையானது. சிலருக்கு அது சோர்வு கொடுக்கக்கூடியதாக இருக்கும். அண்டத்தைப் பற்றி அறிந்துகொள்வது, நம்மைப்பற்றியே நாம் அறிந்து கொள்வதாகும். நாம் நம்மை அழித்துக் கொள்ள இன்னமும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், நான் அவர்களிடம், இந்தத் துண்டுக் காகிதத்தின் அடுத்த மடிப்பு வரும் வரை நாம் உயிர் வாழ்வோம். அண்டத்தைப் பற்றி மேலும் அறிந்து கொண்டிருப்போம் என்று சொல்வேன்.

நேர்காணல்: ஜோஸ் கான்சால்வ்ஸ்

தமிழில்: ஆர். ராமதாஸ்

தமிழ் ஓவியா said...

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,21,38,958


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக 1872 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடக்கமாகக் கொண்டு தற்போது 2011ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு 15 ஆவது கணக்கெடுப்பாகும். அதன் விவரங்களைத் தற்போது அரசு வெளியிட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (2011 மார்ச் 1 அன்று உள்ளவாறு) தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர்கள் உள்ளனர். இதில், ஆண்களின் எண்ணிக்கை 36,158,871 பெண்களின் எண்ணிக்கை 35,980,087 மொத்த மக்கள்தொகையில் பெண்களைவிட 1,78,784 ஆண்கள் அதிகமாக உள்ளனர்.

நகர்ப்புறங்களில் 3,49,17,440 பேர்களும் கிராமங்களில் 3,72,29,590 பேர்களும் வசிப்பதாகப் பதிவாகியுள்ளது. அதாவது, 2011ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் 23 லட்சம் பேர்களும் நகர்ப்பகுதிகளில் 74 லட்சம் பேர்களும் அதிகரித்து தற்போது 97 லட்சம் மக்கள் அதிகரித்துள்ளனர்.

46.5 லட்சம் மக்களுடன் சென்னை மாவட்டம் மாநிலத்தில் முதலாவது இடத்திலும் 39.99 லட்சம் மக்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம் 2ஆம் இடத்திலும், 39.3 லட்சம் மக்களுடன் வேலூர் மாவட்டம் 3ஆம் இடத்திலும் உள்ளன. பெரம்பலூர் மாவட்டம் 5.6 லட்சம் மக்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியில் கிராமப் பகுதிகள் 15.6 சதவிகிதத்தையும் நகர்ப்பகுதிகள் 27 சதவிகித வளர்ச்சியையும் பெற்றுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் மக்கள் தொகை 3.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது, 6 வயதிற்குட்பட்ட 68,94,821 ஆண் குழந்தைகளும் 35,42,351 பெண் குழந்தைகளும் உள்ளனர். 33,52,470 தாழ்த்தப்பட்டோர் (ஷெட்யூல்டு வகுப்பினர்) உள்ளனர். இது, 2001ஆம் ஆண்டைவிட 26 லட்சம் அதிகரித்திருப்பதுடன் வளர்ச்சி விகிதமும் 21.8 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

பழங்குடியினர் 7,94,697 பேர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ள இவர்களின் வளர்ச்சி விகிதம் 22 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.

எழுத்தறிவுள்ளவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் முதலிடத்தில் கன்னியாகுமரியும் (91.7%), இரண்டாமிடத்தில் சென்னையும் (90.2%), மூன்றாமிடத்தில் தூத்துக்குடியும் (86.2%) உள்ளன. கடைசி மூன்று இடங்களில் கிருஷ்ணகிரி (71.5%), அரியலூர் (71.3%), தர்மபுரி (68.5%) மாவட்டங்கள் உள்ளன.
சென்னை மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 26,553 பேர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,111 பேர்களும், திருவள்ளூரில் 1,098 பேர்களும் வசித்து வருகின்றனர்.

நீலகிரியில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர்களும், சிவகங்கையில் 316 பேர்களும் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்கள் 5,18,37,507 பேர்கள் உள்ளனர். இது 80.1 சதவிகிதமாகும். வேலை செய்யும் 28,84,681 பேர்களில் 42.5 சதவிகித மக்கள் விவசாயம் செய்பவர்களாகவும் 96 லட்சம் மக்கள் விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். 2001ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 8.7 லட்சம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தும் விவசாயக் கூலி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 9.7 லட்சமாக அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை 1.4 லட்சமாக குறைந்தும் மற்ற வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்தும் பதிவாகி உள்ளதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் தமிழ்நாடு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 1,000 ஆண்களுக்கு நிகரான பெண்கள், 996 என்று உள்ளது. இந்த விகிதம் கிராமப்புறங்களில், 993 எனவும், நகர்ப்புறங்களில், 1,000 எனவும் உயர்ந்துள்ளது. கோவை, சிவகங்கை, பெரம்பலூர், வேலூர், விருதுநகர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சை ஆகிய 16 மாவட்டங்களில், ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர்.

பெண்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில், நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் உள்ளனர். தஞ்சையில், 1,035 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,025 பெண்களும் உள்ளனர்.
பெண்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில், தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 946 பெண்களே உள்ளனர். அடுத்து, சேலத்தில், 954 பெண்களும், கிருஷ்ணகிரியில், 958 பெண்களும் உள்ளனர் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளதாக அதன் இயக்குநர் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

விஞ்ஞானிக்கும் . . .


பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். பரவாயில்லை அய்யா, டிக்கெட்டைத் தேட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.

அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து அய்ன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். அய்யா, தாங்களோ உலகப் புகழ் பெற்ற பெரிய விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால்தான் என்ன? ஏன் வீணாகத் தேடிக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்று மீண்டும் சமாதானப்படுத்தினார்.

அய்ன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, உங்களுக்குப் பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..! என்றார்.

- சந்திரன் வீராசாமி

தமிழ் ஓவியா said...


மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?

- ஊசி மிளகாய்

ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடு ஒன்றில் கீழ்க் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது (21.6.2013).

ஜூன் 21ஆம் தேதி, ஜேஷ்ட, சுக்ல த்ரேயோதசி (ஆனி மாதம் சுக்லபட்சம், த்ரயோதசி திதி) புனித நாளாகும்! இதே நாளில்தான் 1674 ஜூன் 6ஆம் தேதி, சத்ரபதி சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார்.

பிரபல சரித்திர ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ஜதுநாத சர்க்கார் சிவாஜியைப் பற்றி எழுதியுள்ளதில் தங்களுக்கு உகந்த சில பகுதிகளை மட்டும் (இதுதான் ஆரியத்தின் கைதேர்ந்த டெக்னிக்குகளில் ஒன்றாயிற்றே!)

...சிவாஜி ஒரு அவதார புருஷரல்ல. நம்மைப் போன்ற ஒருவர்தான் என்பதை நினைப்போம்!

...சிவாஜி மகாராஜாவைப் போலவே சுதந்திரமான ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக் குவோம் என்று இந்த மங்களகரமான நன்னாளில் விரதமேற்போம் ........என்று முடித்துள்ளார்கள்.

அதே வரலாற்று ஆசிரியர் ஜதுநாத் சர்க்காரின் எழுத்துக்களையும், இன்னும் சில சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டே அறிஞர் அண்ணா அவர்கள், தானே எழுதி நடித்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் -

பார்ப்பனர்களின் பக்திச் சுரண்டல்கள், எப்படி சிவாஜியின் கஜானாவையே, யாகயோகம் என்று கூறி மொட்டையடித்தது என்பதை மிகத் துல்லியமாக, தானே ஏற்று நடித்த காகபட்டர் வேடத்தின் மூலமும் அவரது சீடன் கங்குபட்டர் மூலமும் விளக்கி யுள்ளார்களே!

தோனார், புரந்தர், கல்யாண் போன்ற எண்ணற்ற மலைக்கோட்டைகளை வென்ற மலைஎலி என்று புகழப்பட்ட சிவாஜி முடி சூட்டிக் கொள்ள முனைந்த நேரத்தில், அது முடியாத காரியம் என்று தடுத்தது ஹிந்துமத சனாதன சாம்ராஜ்யம் அல்லவா!

சிவாஜி நீ சூத்திரன் - நாலாம் ஜாதிக் காரன் அடிமை வேலையை பிராமணருக்குச் செய்ய ஆண்டவனால் உண்டாக்கப்பட்டவன், நீ எப்படி மன்னனாக முடியும்?

க்ஷத்திரியர்கள் அல்லவோ நாடாளப் பிறந்தவர்கள். நாடாள அவர்கள் ஆசைப்பட்டால் அதுதான் வர்ண தர்மப்படி நியாயமானது; நீ விரும்புவது அதர்மம், என்றவுடன், மனம் வெதும்பி, இதை மாற்ற வேறு மார்க்கமில்லையா குருதேவா? என்று கேட்க, கங்கை நதிப் புரத்திலிருந்து காகபட்டர் என்ற பெரும் பிராம்மண முனிவரை அழைத்து வந்து பெருத்த யாகம் செய்து, அவர் அழைக்கும் ஆயிரக்கணக்கான பிராம்மணர் களுக்கும் பொன்னும், வைரமும், மற்றவை களையும் தானமாக தாராளமாகக் கொடுத்து, 45 நாள் யாகம் தொடர்ந்து செய்தால் உன்னைத் தற்காலிகமாக க்ஷத்திரி யனாக்கி மன்னனாக்கி முடி சூட்டலாம் என்று ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட அந்த சிவாஜி பரம்பரை எப்படி வீழ்ந்து, பார்ப்பன சாம்ராஜ்யமாகவே - பேஷ்வாக்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பச்சை வர்ணாசிரம ஆட்சியாகியது என்ற வரலாற்றை அருமையாக 3 மணி நேரத்தில் நாடகமாக்கினார் - அறிவு வெளிச்சம் ஏற்பட்டது.

அதில் சிவாஜி ஒப்பனையோடு சிவாஜி யாகவே மாறி சிறப்பாக நடித்த வி.சி. கணேசனுக்கு தந்தை பெரியார் இன்று முதல் சிவாஜிகணேசன் என்று கூற, அதுவே அவரது பெயராக இறுதிவரை ஆகிவிட்ட கதை சில பேருக்காவது தெரிந்தால் நல்லது.

சிவாஜி கண்ட ஹிந்து ராம்ராஜ்யம் பார்ப்பனர்களின் பகற் கொள்ளை சாம்ராஜ்யம், யாகங்கள் என்ற பெயரால் சோம்பேறிப் பார்ப்பனர்கள் கூட்டம் பொன்னையும், பொருளையும் அள்ளிச் சென்று அக்கிர காரத்தில் ஆட்டம் போட்டு, செல்வச் செழிப்பில் புரண்ட காலம் தான் ஹிந்து சாம்ராஜ்ய வர்ணதர்மக் கொடி பறந்த கொடுமையான காலம்!

அந்த நாடகத்தில் மிக அருமையாக எளிய முறையில் அண்ணா காகபட்டராக நடித்துக் காட்டுவார்! கங்குபட்டர் என்ற ஒரு அப்பாவி சீடன் கேள்வி கேட்பான்.

அவனை வைத்து அருமையான பாடங்களை கூறுவார்.

டேய் கங்கு, நான் எதன்மீது அமர்ந்துள்ளேன் பார்த்தாயா?

ஹம் தெரியாதா - ஆசனத்தில்....

டே - மண்டு அதல்லடா - ஆசனத்தில் எதன்மீது?

புலித்தோல்மீது...!

பார்த்தாயா அந்த புலியை உயிருக்குத் துணிந்து வேட்டையாடியவன் எவனோ?

நான் புலித்தோல்மீது சுகமாய் அமர்ந்துள்ளேன் இதுதாண்டா நம்மவாளின் சாமர்த்தியம் புரிந்ததோ என்பார்.

இப்படி ஆரியத்தின் தோலை உரித்து மறைந்த வரலாற்று உண்மைகளை நாடகமாக்கி சிந்திக்க வைத்து எழுச்சி உண்டாக்கினார் அண்ணா.

சிவாஜிக்கு நல்ல புத்தி கூறிய தளபதி சந்திரமோகனை விரட்டி விட்டான் சிவாஜி ஆரியர் பேச்சைக் கேட்டு.

அதுபோல ஹிந்து சாம்ராஜ்யம் மீண்டும் வர வேண்டுமாம்

எவ்வளவு பேராசை பார்த்தீர்களா?

'' பேராசைக்காரனடா பார்ப்பான்!

பிச்சுப்பணங் கொடு என்றே தீர்ப்பான்?"

- பார்ப்பன பாரதியார்

தமிழ் ஓவியா said...


திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் அல்ல!


ஆண் - பெண் இருபாலருக்குமிடையே நிலவும் பாலியல் உறவே!


சென்னை, ஜூன் 18- திருமணம் என்பது தாலி கட்டுவதும், மதச் சடங் குகள் செய்வது அல்ல. ஆண் - பெண் இருவருக் கிடையே நிலவும் பாலி யல் உறவே கணவர் மனைவி என்பதை நிச்ச யிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் புதிய சிந்தனையின் அடிப் படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயா ரித்து விற்பனை செய் பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லா மிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந் தைகள் பிறந்தன.

1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண் டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமது வுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வரு கிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் பாத்திமா வழக்கு தாக் கல் செய்தார்.

இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் விசாரித்தது. விசார ணையின்போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தை களின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதா ரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. செருப்பு குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதி டப்பட்டது.

கையொப்பமே ஆதாரம்

இரண்டாவது குழந் தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட் டுள்ளதை டாக்டர் சாட் சியாகக் கூறினார்.

இரு தரப்பு வாதங் களையும், ஆதாரங் களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந் தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தர விட்டார்.

ஆனாலும், முகம துவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எது வும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பரா மரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்த ரவை எதிர்த்து நீதிமன் றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

நீதியரசர் கர்ணன்

தமிழ் ஓவியா said...

இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித் தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுத யத்தில் பாதிப்பு ஏற் படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.

இந்த இரண்டு குழந் தைகளையும், முகம துக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனை வியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவ துண்டு. அந்த ஆவணத் தில் கணவன், மனை விக்காக குறிக்கப் பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.
திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல.
இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.

பாலியல் உறவு முக்கியம்

ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.

ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக் காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்ட பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.

ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்ப தால், அவரிடம் இருந்து சட்ட பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது.

சட்ட பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடு கின்றனர்.

அப்படி சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாத வர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்ட பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப் படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.

தாலி கட்டுவதும் சடங்குகளும் மட்டும் திருமணமல்ல

தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின் பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கிய மான சட்ட பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணை யர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப் பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலி யல் உறவு இருந்ததற்கான ஆதாரங் களை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.

அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளு டன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.

திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.

பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்

ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-அய் பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


எழுத்தாளர் இராமகிருஷ்ணன் :
எழுத்துரு அளவு Larger Font



சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியதாவது:

கோயில்களில், சிலைகளின் அழகைப் பார்க்காமல் குங்குமமும், விபூதியும் அவற்றில் கொட்டிப் பாழாக்குகிறோமே என்றார்.

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை



ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும்.
(விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட முடிவுதான்!



திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யமாகக் கொண்டது என்றும், இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியதோடு, அதனைத் தமிழக அரசு செயல்படுத்தினால், மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு, பாராட்டவும் தயங்க மாட்டோம் என்று மனந்திறந்து பேசினார்.

தி.மு.க.வோடு சம்பந்தப்படுத்தி அரசியல் கண்ணோட் டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த போது, அதற்கான போராட்டத்தை அறிவித்த நேரத்தில், உங்களுடைய சீடர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? அதற்கான சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று சொல்லி அதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். அவர்களும், அதனை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி நீதியரசர் எஸ். மகராஜன் தலைமையில் 12 பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பரிந்துரையும் பெறப்பட்டது.

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கு ஆகமவிதிகள் தடையாக இல்லை என்றும் அந்த அறிக்கை காரண காரியத்துடன் தெளிவுபடுத்தியது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். நியமித்தார் (செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத் (செ.வை) துறை - செய்தி வெளியீடு எண் 339 நாள்: 8.9.1984).

அந்தக் குழுவும் மூன்று மாதத்தில் அதற்கான அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.

அறிவிப்புகள் இருந்தாலும் எந்தக் காரணத்தாலோ அது நடைமுறைக்கு வராமல் தள்ளிக் கொண்டே போனது. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடல் நல பாதிப்பும் ஒரு காரணம். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் 113 ஆம் ஆண்டு விழாவில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பினை உருவாக்கும் கோரிக்கையினை முதல் அமைச்சர் முன் வைத்தார். (17.9.1991).

அ.இ.அ.தி.மு.க.வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஹேமமாலினி மண்டபத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழக அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அதுபற்றிப் பல பிரச்சினைகளும் எழுப்பப் பட்டுள்ளன. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசால் திறக்கப்படவிருக்கும் வேத ஆகம கல்லூரியில் தாழ்த்தப் பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்களாக ஆக்கப் படுவார்கள். இதன் மூலம் பெரியார், அண்ணா கனவுகள் நனவாக்கப்படும் என்று பேசினார். (17.10.1991).

அது ஆகமக் கல்லூரியாக இருக்க வேண்டுமே தவிர வேத ஆகமக் கல்லூரியாக இருக்கக் கூடாது என்று கழகப் பொதுச் செயலாளர் கூறினார். அதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது உரையாற்றிய போது தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில் ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தாரே! (9.4.1992) திருச்சியை அடுத்த கம்பரசம் பேட்டையில் அதற்கான இடமும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டதே!

இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணமே - இந்தப் பிரச்சினை அஇஅதிமுகவுக்கு - அதன் ஆட்சிக்கு - முதல் அமைச்சருக்கு உடன்பாடான ஒன்றே என்பதை நினைவூட்டவும், செயல்படுத்திட தார்மீகக் கடமை இருக்கிறது என்பதை வலியுறுத்தவும்தான்; உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதே நமது மிக முக்கியமான வேண்டுகோள்.

தமிழ் ஓவியா said...


பவுத்தம் விடுத்த பகுத்தறிவுக் கேள்விகள்


அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஜைனர்களையும், பவுத்தர்களையும் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்து கொன்ற கொலை பாதகங்களைத் திருவத்திபுரம், காஞ்சிபுரம் கோயில்களில் இன்றைக்கும் சிற்பங்களாகக் காணலாமே!

யதாஹிசவ்ர;
ஸ்யத தயாஹி புத்த;
ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி

என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறதே - இதற்குப் பொருளென்ன?

திருடனும் புத்தனும் ஒன்றாவான். அவன் நாத்திகன் என்று இந்துமதத்தின் இதிகாசம் கூறி இருக்கிறதே. இந்த நிலையில் மாஜி சங்கராச்சாரியார் புத்தரின் நாத்திகவாதத்தையும், ஜைனர்களின் நாத்திகத் தத்துவத்தையும் போற்றிப் புது அகவல் பாடுகின்றார் என்றால், பார்ப்பனர்களின் சந்தர்ப்பவாதப் பாசாங்குத் தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பவுத்தர்களையும், ஜைனர்களையும் வாதில் வெல்ல யோக்கியதை இல்லாத திருஞான சம்பந்தப் பார்ப்பனர் - சூழ்ச்சி வலைகளைப் பின்னி, சூதாக அவர்களைக் கொன்றொழித்த கதை எல்லாம் வரலாற்றில் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன என்று சங்கர மடங்கள் மனப்பால் குடிக்கின்றனவா?
கையில் சரக்கு இருந்திருந்தால் உட்கார்ந்து மணிக்கணக்கில் பவுத்தர்கள், ஜைனர்களுடன் விவாதப் போர் நடத்தி இருக்கலாம்.

கையாலாகாத் திருஞான சம்பந்தரோ கடவுளிடம் போய் அல்லவா மன்றாடுகின்றார், மடிப்பிச்சைக் கேட்கின்றார்.

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லிய மணோடு தேரரை
வாதில் வென்றழிக்கத்
திருவுள்ளமே.

இவர்களோடு வாதில் வெல்லக் கடவுள் அருள்புரிய வேண்டும் என்று மன்றாடுவதிலிருந்து இவர்களின் கோழைத்தனம் புரியவில்லையா?

வாதில் வெல்ல மட்டுமா ஆண்டவனிடம் அடிபணிந்து கிடக்கின்றார்? ஜைன பவுத்தர்களின் அழகிய பெண்களின் கற்பினை அழிக்கவும் கடவுளிடம் வரம் கேட்கின்றார் திருஞான சம்பந்தர்.

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே

என்று பாடுகின்றார் என்றால், பர்ப்பனீய வேதமதக் கொடுங்கோலர்களின் கேவலப் புத்தி எந்த எல்லை வரை தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பக்தியின் யோக்கியதையையும் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வளவும் செய்துவிட்டு, இன்றைய தினம் ஆரியம் மாஜி சங்கராச்சாரியார் உருவில் பவுத்த, ஜைன நாத்திக வாதங்கள் பற்றிக் கசிந்துருகுகிறது என்றால்-இது எவ்வளவு நீலித்தனம்! போலித்தனம்!! போக்கிரித்தனம்!!!

பவுத்தர்களும், ஜைனர்களும், புனல்வாதம், அனல்வாதம், புத்திவாதம் எல்லாம் செய்தனர் என்று மாஜி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.

பவுத்தர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளிக்க முடியாமல் விழி பிதுங்கினார்கள்.

யாகத்தில் கொல்லப்படுகின்ற பசு சொர்க்கத்தை அடைவது உண்மையானால் யாகம் செய்கிறவன் தன் தந்தையைக் கொன்று சொர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைத்துக் கொல்லப்படுகின்ற பசுவைக் கட்டி வைக்கின்ற தூண்) உண்டுபண்ணிப் பசுக்களைக் கொன்று ரத்தச் சேற்றை உண்டுபண்ணுபவன் சொர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்?

என்பதுபோன்ற அறிவு பொருந்திய ஆற்றல் கணைகளை அடுக்கடுக்காக ஆரியத்தை நோக்கிப் பவுத்தம் விடுத்தது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம்



அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கைக் கணக்கெடுக்கும் சென்ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்றே சொல்ல வேண்டுமென்றும், இந்துக்கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக்காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.

(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும்.

இன்று எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணு கிறோமோ, அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் என தள்ளப்படும்.

நாம் கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக்களெனத் தள்ளி விடவில்லையா?

-குடிஅரசு, தொகுதி 32, பக்கம் 22

தமிழ் ஓவியா said...


சு...தந்திரம்


நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட்டது என்று ஆடினார்கள் - பாடினார்கள். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கப்படுகிறது - (மன்னிக்கவும், கொஞ்சம் முன்னேறி - சாக்லெட் கொடுக்கப்படுகிறது)

ஆனாலும்.. ஆனாலும்... 2012ஆம் ஆண்டு குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் எனும் அமைப்பு வெளியிட் டுள்ள ஒரு தகவல் நமது தலையை 360 டிகிரியில் சுற்றச் செய்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் 2012ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத் தப்பட்ட வன்கொடுமை வழக்குகள் 33,655; 1.10 லட்சம் வழக்குகள் இன் னும் நிலுவை என்னும் ஊறுகாய்க் கலயத்தில் குறட்டை விட்டுத் தூங் கிக் கொண்டிருக்கின் றன - 5.6 சதவீத வழக் குகளில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண் டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக் கான தங்கப்பூண் அணி விக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்!

இந்த லட்சணத்தில் சில ஜாதீயவாதிகள் இப் பொழுது அக்னியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளார்கள். தலித்களுக்கு எதிரான அணியைத் திரட்டப் போகிறார்களாம். தமிழ் நாட்டில், தந்தை பெரியார் மண்ணில் அது வேகாது என்பதற்கு அடையாளம் அந்த நெருப்பு அதற்குள் அணைந்து சுருண்டது என்பதுதான்.

தீண்டாமைக் குற்றம் செய்பவர்களைத் தண்டிப் பதற்காக இருப்பது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம்; அது தவறாகப் பயன்படுகிறது என்றும், அந்தச் சட்டத்தை அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் நீட்டி முழங்கிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவ ரத்தை ஒரு முறை கவனிக்க வேண்டும்.

இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக் கின்றன. இன்னும் ஜாதி சுடுகாடுகள் இருக் கின்றன. இன்னும் கரு வறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை தாழ்த் தப்பட்ட மக்களுக்குக் கிடையாது. இன்னும் கவுரவக் கொலைகள் - தருமபுரிகள் - நடந்து கொண்டுதான் இருக் கின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந் திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்


சந்தி... சிரிக்கிறது!

செய்தி: அத்வானியை நரேந்திர மோடி சந்தித்தார்.

சிந்தனை: விடயம் சந்தி சிரிக்கிறதே - சந்திக்காமல் என்ன செய்வாராம்?

தமிழ் ஓவியா said...


அரசு என்ன செய்ய உத்தேசமோ!


திண்டுக்கல்லில் நடைபெற்ற (15.6.2013) திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் குறிப்பிடத்தக்கது - சமூகநீதித் தொடர்பான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வு பற்றியதாகும். இதுவரை தமிழ்நாட்டில் நடந்திராத அளவுக்கு சமூக அநீதி இதில் கொடி கட்டிப் பறக்கிறது.

தீர்மானம் வருமாறு:

ஆசிரியர் தகுதி தேர்வு - சமூகநீதிக்கு விரோதமான தமிழக அரசின் செயல்பாடு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், சமூக நீதிக்கு விரோதமாகவும், தேசிய கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமாகவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதி அனைவருக்கும் ஒரே அளவு தகுதி மதிப்பெண்ணை (60 சதவிகிதம்) நிர்ணயித்து இருப்பதை திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியும், அதுகுறித்துச் சிந்திக்காமல் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது - சமூகநீதிக்கு வெட்டப்படும் படுகுழி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், செய்த தவறைத் திருத்திக் கொண்டு, தமிழ் மண்ணுக்கே உரிய சமூகநீதி உணர்வைக் கட்டிக் காக்குமாறு தமிழ்நாடு அரசை - குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.

இந்தச் சமூக அநீதி கமுக்கமாகக் கழுத்தறுப்பது போல, மிக மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

முதன் முதலில் இந்தப் பிரச்சினையை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான்; வெளிப்படையாக்கியது விடுதலை - எனும் சமூக நீதிப் போர் வாள்தான்.

அதன் பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி சமாளித்த கல்வி அமைச்சர், தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளாமல், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏதோ சில வார்த்தைகளை பிறகு வெளியிட்டார்.

இது இன்னும் ஆபத்தானது. அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு - சமூகநீதிக்கு விரோத மானதே என்பதே கல்வி அமைச்சர் கூறுவதற்கான பொருளாகும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதுகுறித்து விளக்கமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்; கல்வியாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் கதையாக, ஏற்கனவே 19 ஆயிரம் ஆசிரியர் பணிகள் நியமனத்தில் செய்த அதே தவறினை - வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பான்மை அ.இ.அ.தி.மு.க. அரசிடம் இல்லை என்பது இன்னும் விரிவாக வெளிச்சமாகத் தெரிந்து விட்டது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால், தமிழ்நாடு அரசு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு என்ற ஆணையைப் பிறப்பிக்கப் போய் - 1980 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியை வாரி அணைத்துக் கொண்டார் - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சமூகநீதிக்கு எதிரான அவரது ஆணையை மக்கள் மத்தியில் வலுவாக திராவிடர் கழகம் எடுத்துச் சென்றது - இநதத் தோல்விக்குக் காரணம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிக் கொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அரிய ஆலோசனை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்டது.

அதே முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் இன்றைக்கும் முதல் அமைச்சர் - சமூக நீதிப் பிரச்சினை யில் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டாமா? கோட்டை விட்டு விட்டாரே!

தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியவருக்கும் இடையே உள்ள இடைவெளி கூடத் தெரியாதவரா முதல் அமைச்சர் ஜெயலலிதா? பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் கையணைத்து வீதிகளில் உரிமை முழக்கமிடக் களத்தில் குதிக்க ஆரம்பித்தால் இந்த ஆட்சியின் நிலை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

குதிரை காணாமற் போன பின்பு தான் இலாயத்தை இழுத்துப் பூட்டப் போகிறதா அ.இ.அ.தி.மு.க. அரசு? தமிழ் மண் போராட்டக் களமாக மாற வேண்டுமா?

பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது; என்ன செய்ய உத்தேசம்?

தமிழ் ஓவியா said...

நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)


சில மாதங்களுக்கு முன்பு (ஏன் ஓராண்டுக்கு மேலாகவே கூட இருக்கலாம்); என்னுடன் முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் விடுதியில் தங்கியிருந்தவர் திரு. லட்சுமி நாராயணன் என்ற நண்பர். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர்; பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; அதற்கு முன்பும் இண்டர்மீடீயெட் என்ற இடைநிலை வகுப்பும் அங்கேயே படித்து அறிமுகமான நண்பர் திராவிடர் இயக்கப் பற்றாளர்.

எப்போதும் என்னிடத்தில் அன் புடன் பழகுபவர்; நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அண்ணாச்சி என்றுதான் அழைத்துக் கொள்வோம்! எனது அறைக்கே வந்து விடுதலை படிப்பார்; பல்வேறு செய்திகளை விவாதிப்பார்.

அதன்பிறகு அவர் பணிக்கு சென் னையில் சேர்ந்தபிறகு அடையாறு காந்திநகர் பகுதியில் குடியிருந்தார்; அவருடைய மகனும், என் மகனும் அங் குள்ள பள்ளியில் வகுப்புத் தோழர்கள்!

சிற்சில நேரங்களில் எங்கள் வீட் டிற்கு வந்து உரையாடிச் செல்வார்; பிறகு அதிக தொடர்பு இல்லை.

திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் அலுவலக முகவரிக்கு வந்தது. அத் துடன் முப்பாதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு, நான் லட்சுமிநாராயணன் எழுது கிறேன் என்று எழுதி, விடுதலையை நாளும் படித்து வருகிறேன். ஓய்வு பெற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி யுள்ளேன் சென்னை புறநகர் பகுதியில்.

தங்களின் பணிகள் சிறக்க விரும்பி, இந்தத் தொகையை நன்கொடையாக அனுப்பியுள்ளேன் பெற்றுக் கொண்டு, தங்கள் விருப்பப்படி இதனை பணி களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட முகவரிக்கு நான், நன்றி தெரிவித்துக் கடிதமும்கூட எழுதினேன்.

இதுபோல் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நண்பர் களைவிட நேரடிப் பார்வையில் இல்லா மலேயே நமது பணிகளைப் பாராட்டி ஊக்க மூட்டி நன்றி தெரிவிக்கும் நண்பர்கள் ஏராளம்! ஏராளம்!! அநேகர் அந்தப் பட்டியலில் உண்டு.

அதுபோலவே மருதூர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - மறைந்தா லும் எப்போதும் நம் நெஞ்சங்களில் நிறைந் தவரான நாகை மாவட்ட முன்னாள் தி.க. தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் - அவர்களது குடும்பம் அம்மா, பிள்ளைகள் உட்பட அனைவருமே மிகுந்த பற்றும் மரியாதையுடன் கழகப் பணிகளைப் பாராட்டிடுவர்.

சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை வளர்ச்சி நிதி திரட்டப்பட்ட கால கட்டத்தில் தங்கள் பங்கு என்று கூறி தந்தது சந்தாக்கள் அல்லாமல், ஒரு தொகையை என்னிடம் நேரில் வந்து தந்து, எதற்குப் பயன்படுத்திட தாங்கள் எண்ணுகிறீர்களோ, அதற்கு இந்த எளிய தொகையைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள் என்று கூறி சென்று விட்டார்கள்!

விடுதலையின் எழுத்தாலும் கழகத் தின் போராட்டத்தினாலும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண் இன்று தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து M.B.B.S. பட்டம் வாங்க இருப்பதாக திண்டுக்கலில் நான் நமது கெழுதகை நண்பரும் பெரியார் சுயரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் டிரஸ்ட்டின் நிர்வாக உறுப்பினருமான வழக்குரைஞர் மானமிகு கொ. சுப்ரமணியம் இல்லத்தில் 15.6.2013 - பொதுக் குழுவுக்குப் போன போது நான் தங்கியிருந்த இடத்தில் - நேரில் வந்து இருவர் கூறி, நன்றி தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

திண்டுக்கல் மாநகரில் மிகப் பெரிய புத்தக விற்பனையாளர்களாக இருக்கும் அய்யனார் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர்கள் பெரியவர் பூவலிங்கம், முத்து மாணிக்கம் தந்தையும் தனயனும் ஆவர்.

பெரியார் பற்றாளர்கள் - பகுத்தறி வாளர்கள் அவ்விருவரும்.

அய்யா எனது பேத்தி நல்ல மார்க் வாங்கியிருந்தும், மருத்துவக் கல்லூரிக்கு சேர்ப்பதில் வரிசைப்பட்டியல் வந்தததில் - முறைப்படி தேர்வு செய்ய 100 இடங்கள் - கலைஞரின் ஆட்சியில் சென்ற முறை தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, கட்டுமானங்கள் எல்லாம் முடித்து துவக்க மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லையாதலால் நூறு இடங்களை பூர்த்தி செய்யாமல் நிறுத்தி வைத்து விட்டனர்.

இது குறிப்பிட்ட கல்வி ஆண்டே துவக்கப்பட்டால் தான் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய கிராமப் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு ஏற்படும், என்று மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிகள் மேற் கொண்டு உடனடியாக இவ்வாண்டே துவக்க வேண்டும் என்று விடுதலையில் எழுதினீர்கள்.

தர்மபுரியில் அறப்போராட்டத்தை யும், திராவிடர் கழகம் நடத்திட அறிவித்து நடத்தினீர்கள். அதனால் அவ்வாண்டே மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. 100 இடங்கள் கூடுத லாக வந்ததால், கிடைக்கவில்லை என்று வேறு வேலைக்குச் சென்ற என் பேத்திக்கு M.B.B.S. அட்மிஷன் கார்டு வந்தது - எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது! எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர் இப்பெண். இது விடுதலையாலும், கழகத்தாலும் தான் சாத்தியமானது என்று நன்றி பொங்கக் குறிப்பிட்டார்கள்.

இப்படிப் பலப்பல நிகழ்வுகள்! பெரியார் என்ற பேராசானின் உழைப்பு என்றுமே பலன் தராமல் சென்ற தில்லை, என்றாலும் பயனடைந்தவர் களில் பலர் இல்லாவிட்டாலும் - சிலராவது கூறுகிறார்களே - அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நன்றிப் பெருக்கின் நாயகர்கள் வாழ்க! .

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


தமிழக அரசின் தவறான முடிவால் காலியான இடங்கள்


சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் போக்குப் பார்ப்பனீயத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது.

குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் நிலைப் பாட்டை மிகவும் தூக்கிப் பிடிக்கின்றன.

சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதில் இன்றைய மாநில அரசு தொடக்கம்முதலே எதிர்நிலையில் தான் இருந்துவந்தது.

உச்சநீதிமன்றம்வரை சென்று பார்த்த அரசு கடைசியில் வேறு வழியின்றி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது.

சமச்சீர் கல்வி காரணமாக இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர் இருபால் மாணவர்களும்; அதிக மதிப்பெண்களையும் ஈட்டியுள்ளனர். இதனைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன தினமணி உள்ளிட்ட அவாள் ஏடுகள்.

ஒரு காலகட்டத்தில் தேர்வில் பெறும் மதிப் பெண்கள்தான் தகுதி திறமைக்கான அளவுகோல் என்று ஆணி அடித்து எழுதினர்; அந்தக் கால கட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் அபார ஆற்றல் அவர்களிடம்தான் இருந்தது.

இப்பொழுது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஆரம்பித்த நிலையில், மதிப்பெண் தகுதியின் அளவுகோலா என்று பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியின் அடிப்படை ஆணிவேரில் வெந்நீரை ஊற்றிவிட்டது.

மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப் மார்க்) தனித் தனியேதான் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவருக்கும் (உயர்ஜாதிக்காரர்கள் உள்பட) ஒரே அளவு தகுதி மதிப்பெண்கள் - 60 சதவிகிதம் பெறவேண்டும் என்பது சமூகநீதிக்கே நேர் விரோதம் அல்லாமல் வேறு என்னவாம்?

இப்படி அனைவருக்கும் ஒரே அளவு மதிப் பெண்களை வரையறை செய்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள் 1470 இல் 659 காலியாகவே உள்ளன. பழங்குடியினர்க் கான 99 இடங்கள் காலியாகவே உள்ளன. அருந்ததியருக்கான 131 இடங்கள் பூர்த்தி செய்யப் பட முடியவில்லை. முசுலிம்களுக்கான 153 இடங்கள் காலியாகவே உள்ளன.

தமிழ்நாடு அரசின் குளறுபடியான - சமூகநீதிக்கு விரோதமான அணுகுமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவ்வகையில் பெரிய அநீதி நடந்துள்ளது. கேட்டால் இதுதான் அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு என்று சொல்லுகிறார் கல்வி அமைச்சர் - எங்கே போய் முட்டிக்கொள்வது?
இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் கல்விக் கழகம் அகில இந்திய ரீதியில் தகுதித் தேர்வு எப்படி நடத்தப்படவேண்டும் என்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதிக் கண்ணோட்டத் துக்கே விரோதமானது தமிழக அரசின் செயல்பாடு.

ஆந்திரா, கேரளா, பிகார் முதலிய மாநிலங்களில் தனித்தனியே தகுதி மதிப்பெண்களை நிர்ண யித்துள்ளபோது, சமூகநீதி பிறந்த பெரியார் மண்ணில், பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இப்படியொரு கொடுமை - அநீதி இழைக் கப்பட்டுள்ளதே - இதனை எப்படிப் பொறுப்பது?

சமூகநீதியாளர்கள் களம் காணவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தவறைத் திருத்திக் கொள்ளுமா தமிழக அரசு?

எங்கே பார்ப்போம்? 20-06-2013

தமிழ் ஓவியா said...


மோடி அலையை உருவாக்குவது யார்? நிதிஷ் அம்பலப்படுத்துகிறார்


பாட்னா, ஜூன் 20- நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அது போன்ற தோற்றத்தை உரு வாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்த்தின் மீது நிதிஷ்குமார் பதிலளிக் கையில், நரேந்திர மோடியை அவரது பெயரை குறிப் பிடாமல் மறைமுகமாகத் தாக்கியும், குற்றம் சாட்டியும் பேசினார். நிதிஷ் பேசியதாவது:

தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவருக்கு (நரேந்திர மோடி) ஆதரவாக அலை வீசிவருவதாக பா.ஜ. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், அப்படி எதுவும் அலை வீசவில்லை. பெரிய தொழில் நிறுவனங் கள்தான் இதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த போலித்தோற்றம் நீண்ட காலம் நீடிக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் இதனால், எந்த அற்புதமும் நடக்காது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததாலேயே யாரும் அவர்களது தலைவராகி விட முடியாது. பெரிய தொழில் நிறுவனங்களின் நலனை விரும்புகிறவர் பிற்படுத்தப் பட்டோரின் தலைவராக முடியாது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. பீகாரின் வளர்ச்சிக்காக அவர்கள் கூறிய ஆலோசனைகளை நாங்கள் கேட்டோம். ஆனால், எங்கள் யோசனைகளை பா.ஜ.க.வினர் நிராகரித்தனர். கூட்டணி முறிவதற்கு இதுதான் முக்கிய காரணம்.

- இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

தமிழ் ஓவியா said...


எருமை போவதுபோல்...



எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)

தமிழ் ஓவியா said...


கோவை மன்றல் - ஓர் பார்வை


- வி.சி.வில்வம்

சென்னை மன்றல், திருச்சி மன்றல், மதுரை மன்றல் என ஒவ் வொன்றும் வரலாற்றுப் பதிவுகளான நிலையில், இப்போது கோவை மன்றல் முடிந்துள்ளது. அடுத்த மன்றல் எங்கே எனக் கேட்டுப் போகும் தமிழர்கள் நிறைந்து வருகிறார்கள். சரியான திட்டமிடுதலுக்குச் சாதனைகள் தூரமில்லை. இந்த தேதியில், இந்த ஊரில் மன்றல் என முதலில் முடி வாகிறது. அதற்கான ஆயத்தங்கள் சில ஆகின்றன. குறிப்பிட்ட நாளில், வெவ்வேறு இடங்களில் இருந்து சிலர் ஒன்று சேர்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கின்றனர். களைப்பும் இல்லை; மலைப்பும் இல்லை! மக்களின் விழிகள் விரிய!

மன்றல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி

இப்படித்தான் முடிந்தது கோவை மன்றலும்! கோயம்புத்தூர் பெரிய நகரம்தான். எனினும் சுவர்கள் முழுக்க மன்றல் வாசகங்கள் அவ்வூரையே அழகுபடுத்தி இருந்தன. திருமணத் துக்குத் தேவை நல்ல மனசுதாங்க... ஜாதி எதுக்குங்க?, மதத்தை விடுங்க, நல்ல மனுசங்களா இருந்தா போதும், துணையை இழந்தால் துவண்டு போவதா? புது வாழ்க்கையை இழந்து விடுவதா?, மணமுறிவு முடக்கமல்ல... புதிய தொடக்கம், மாற்றுத் திறனாளி யுடன் மணவாழ்க்கை அமைத்துக் கொள்ள விருப்பமா? போன்ற வாச கங்களைக் கண்ட கோவை மக்கள் பலருக்கும் விழிகள் விரிய, சமூக ஆர்வலர்கள் உற்சாகத்தில் மிதக் கின்றனர். காரணம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் செய்திட யாரும் முன்வரு வதில்லை. கூடவே தைரியமும் வேண்டும். அதை நாம் செய்கிற போது அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. மற்றொரு முக்கியமான விசயம், நாம் செய்வது முழுக்கவும் பொதுக் காரியம். மற்ற பலரும்தான் செய்கிறார்கள், அவை ஒரு ஜாதி ஜாடிக்குள் மூழ்கிப் போகிறது. சிலரோ பொதுவாகச் செய்கிறோம் எனக் கூறிப் பயனாக்காமல், பணமாக்கி விடுகின்றனர். மன்றலைப் பொறுத்தவரை ஒரு பெரும் சிறப்பு என்ன தெரியுமா? சென்னை மன்றலில் 300 பேர் வந்தார்கள். இந்த 300 பேர் விவரங்களும் திருச்சி மன்றலில் வழங்கப்பட்டன. அடுத்து மதுரையில் நடந்தது. அங்கு சென்னை, திருச்சி விவரங்கள் வழங்கப் பட்டன. இப்போது கோவை. இங்கு மூன்று ஊர்களின் விவரங்களும் வழங்கப் பட்டன. ஆக இந்த விவரங்களின் தொகுப்பை வைத்துதான் பலரும் இங்கே வணிகம் செய்கிறார்கள். நமக்கோ அது நோக்கமல்ல.

மன்றல் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் பிறைநுதல் செல்வி உரை

தமிழ் ஓவியா said...

நம் நிலை என்பது திறந்த மனநிலை. இவைகளைப் பார்த்துதான் மக்கள் பூரித்து, வியக்கிறார்கள். 91767 57083, 91767 57084 இந்த எண்கள் தமிழ்நாடு முழுக்கவும் பிரபலமாகி வரு கின்றன. ஒவ்வொரு மாநகராட்சியிலும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கைப் பேசிகளில் சேமித்து வைத்திருக்கிறார் கள். காரணம் அவர்கள் வாழ்விற்கான வழி அங்கே இருக்கிறது. கைகோத்த பயணம்! கோவை மன்றலை அங்குள்ள லயன்ஸ் கிளப்பில் சொன்னதும், அடடா! என்னே ஒரு வாய்ப்பு! எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார் கள். வாருங்கள் இணைவோம் என்றோம். இணைப்பில்தானே நம் மகிழ்ச்சியே இருக்கிறது.

அதேபோல மன்றலில் பங் கேற்கும் மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றதும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவன இயக்குநர் காரையடி செல்வன் என்பவர் அந்த வாய்ப்பை எனக்கே தாருங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். மன்றல் நிகழ்ச்சிக்கு அரங்கம் வடிவ மைக்கும் அந்த இளைஞரை நாம் மறக்க முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவர்தான் வடிவமைக்கிறார். எவ்வளவோ விழாக்கள், என்னென்னமோ விழாக்கள் பார்த்தாயிற்று. எனினும் வாழ்க்கை இணை தேடல் பெரு விழாவை, தன் வீட்டுத் திருமணமாய் அலங்கரிக்கிறார். ஊடகங்கள் குறித்தும் சொல்ல வேண்டும். மன்றல் நடைபெறுவதை முன்கூட்டியே அறிவிப்பதில் அவர்கள் பங்கும் அளப் பரியது. குறிப்பாக தினத்தந்தி, வானொ லிகள் கைகோத்துப் பயணிக்கிறார்கள். நம்பிக்கைதான் பெரியார் சொத்து!

மன்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

மன்றலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணமுறிவு பெற்றோர், துணை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள் என அய்ம்பெரும் பிரிவுகள் உள்ளன. இதில் மற்ற பிரிவினர் பொது இடங்களுக்கு அதிகம் செல்வதும், பத்திரிகை விளம்பரங்கள் பார்ப்பதும் மிகுதி. மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் நண்பர்களே! நம் மன்றல் நிகழ்சிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் அதிகமாகவே வருகின்றனர். அவர் களுக்குச் செய்தி போகும் வண்ணம் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதில் இன்னொரு சிறப்பு, சில ஊர்களில் மாற் றுத் திறனாளிகள் தனியாகவே வந்தனர். கோவையில் கூட இரண்டு கால்களையும் முற்றிலும் இழந்த ஒரு நண்பர் தனியாகவே வந்தார். பெரியார் நிகழ்சிகளுக்குத் தனியாகவும், தைரியமாகவும் செல் லலாம் என்கிற அவர்கள் நம்பிக்கை. பொதுவாகக் கூட்ட நெரிசல் இருக்கிற இடங்களுக்கு இவர்களைப் போன் றோர் துணையுடன் கூட செல்வ தில்லை. மாறாக நம் நிகழ்ச்சிகளின்மீது அவர்கள் பெரும் நம்பிக்கை வைத் துள்ளனர். இதுபோன்ற நம்பிக்கைகள் தான் பெரியாரின் சொத்து! அதிரச் செய்து, குலுங்கச் செய்த மக்கள்!

அதேபோல பக்தி கொண்ட மக்கள் நம் மீது காட்டும் ஆர்வமும், ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. கோவை மன்றலில் நாள் முழுக்க நம் கூடவே இருந்தார்கள்.

இடையிடையே நம் தோழர்கள் பேசும் கருத்துகளை மிகுந்த உற்சாகத்தோடு வழிமொழி கிறார்கள். எல்லாக் கருத்துகளையும் பொறுமையோடு கேட்கிறார்கள். மக்கள் பழைமையில் ஊறிப் போயுள் ளனர், அவர்களுக்குப் புதுமைகள் பிடிப்பதில்லை என ஊடகங்களும், திரைத்துறையினரும் சொல்லி வருவது மகா மோசடி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இன் னொரு எடுத்துக்காட்டையும் நம்மால் எழுத முடியும். கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மன்றல் நிறைவில் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தார். பிரவீன்குமார் - அமுதா என்பது அந்தத் தோழர்களின் பெயர். அவர்கள் இருவரையும் அறி முகம் செய்துவிட்டு, மாப்பிள்ளை கேரளா நாயர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று கூறினார். உடனே மக்கள் கரவொலியால் அரங்கை அதிரச் செய்தனர். பெண் தாழ்த்தப்பட்ட என்று சொல்லக் கூடிய அருந்ததி இனத்தைச் சார்ந்தவர் என்று சொன்னதுதான் தாமதம், மக்கள் அரங்கத்தையே குலுங்கச் செய்தனர். இதற்கு என்ன பொருள்? அவர்கள் எல்லாவற்றையும் விட்டு வெளிவந்து பல நாட்களாகிறது. ஆனாலும் உள்ளேயே இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் போது வெடித்து வெளிவருவார்கள். அப்படி வெடித்து, வெடித்துத்தான் இவ்வளவு தூரம் சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் வெடிப் பொருளாக, கருப் பொருளாக நம் பெரியார் இருக்கிறார்.

மக்களிடம் கேளுங்கள்!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மன்றல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எதுவுமே இல் லையா எனக் கேட்கிறீர்கள்? இருக் கிறது. அங்கொன்றும், இங்கொன்று மாகக் கைப்பேசி வழியாக வருகிறது. கோவையில் கூட ஒரு நண்பர் கோப மாகக் கேட்டார், ஜாதி மறுப்புத் திரு மணங்கள் செய்ய நீங்கள் யார்? என்றார். நாங்கள் யார் என்பதை மண் டபத்தில் வந்து மக்களிடம் கேளுங்கள் என்றோம், இணைப்பைத் துண்டித்து விட்டார். அவர் மீது நமக்குக் கோபமில்லை. ஏனெனில் வேறொரு மன்றல் நிகழ்ச்சிக்குத் தன் மகளோடும் அவர் வரக்கூடும். 20-6-2013