Search This Blog

15.10.14

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிறவர்கள் ஜாதி மாநாடுகளில் கலந்து கொள்ளலாமா?-பெரியார் விளக்கம்

ஜாதி முறைத் தொழிலைவிட்டு விலகுவதே பிற்படுத்தப்பட்டோர் முன்னேற வழி!

ஜாதியை ஒப்புக் கொள்ளாது, அதை ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டு தொண்டாற்றும் நான், ஜாதிக் கூட்டங்களில் இப்படிப் போய்க் கலந்து கொள்ளலாமா என்று சிலருக்குச் சந்தேகம் எழும்.

சலவைத் தொழிலாளர் கூட்டம் என்றோ, சவரத் தொழிலாளர்கள் கூட்டம் என்றோ, செக்குத் தொழிலாளர்கள் கூட்டம் என்றோ, நகரசுத்தித் தொழிலாளர்கள் கூட்டம் என்றோ, இப்படித் தொழிலின் பெயரால் கூட்டம் கூட்டினாலும், அது ஜாதித் தொழிலாளர் கூட்டம்தான். அந்தத் தொழில்களைச் செய்பவர்கள் எல்லாரும் ஒவ்வொரு ஜாதியினர்களே!

எங்களுடைய பணி தொழிலை அழிக்க வேண்டும் என்பதல்ல;ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். இன்ன இன்ன தொழில், இன்ன ஜாதியாருக்குத்தான் - இவர்களுக்குச் சமூகத்தில் இன்ன இன்ன
மரியாதைதான் என்கின்றவர்களை ஒழிக்க இந்தியாவிலேயே நாங்கள்தான் பாடுபடுகின்றோம். எங்களைத் தவிர வேறு ஆளே இல்லை; வேறு கட்சியும் இல்லை.

இன்று மட்டும் அல்ல; இரண்டாயிரம் ஆண்டுகளாக - சரித்திர காலந்தொட்டும் இதற்காக எவரும் பாடுபடவே இல்லை.

இப்படிச் ஜாதி முறையினை ஒழிக்க வேண்டும் என்கின்றவர்கள் ஜாதிக் கூட்டத்திற்குப் போய்க் கொண்டே இருந்தால் - அந்தச் ஜாதிக்காரர் அந்த அந்த ஜாதிக்குப் பாதுகாப்புத் தேடிக்கொண்டே இருந்தால், எப்படிச் ஜாதி தேடிக் கொண்டே இருந்தால் எப்படிச் ஜாதி ஒழிப்புமுறை வெற்றி பெறும்? என்று சிலர் எண்ணலாம்.

நான் ஜாதிக் கூட்டங்களுக்குப் போக ஆசைப்படுபவன்; அது தவறாகாது; அப்படிச் சென்று அந்தச் ஜாதிக் குறைபாடுகளை - குறையை எடுத்துச் சொல்லி, அதனை ஒழிக்கப் பாடுபட வேண்டும்; சலவைத் தொழிலாளர்கள் மாநாடு என்றால் வண்ணார் ஜாதி மாநாடு என்றுதான் அர்த்தம் (பொருள்); அதுபோலவே செக்குத் தொழிலாளர் மாநாடு செக்காளர்கள் - வாணியர்கள் மாநாடு; நகர சுத்தித் தொழிலாளர் கூட்டம் என்றால் தோட்டிகள் மாநாடு; தச்சுத் தொழிலாளர் என்றால் ஆசாரி ஜாதிக் கூட்டம் - இப்படித்தானே உள்ளது! இன்னத் தொழிலுக்கு இன்ன ஜாதி என்றதானே உள்ளது! இன்னத் தொழிலுக்கு இன்ன ஜாதி என்றுதானே உள்ளது! இது கூடாது; ஒழிய வேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை. எனவே, இது ஒரு ஜாதி மாநாடு என்று கருதியே நான் பேசுகின்றேன்.

தோழர்களே, நான் சொல்லப்போவது உங்களுக்குச் சங்கடமாகத் தான் இருக்கும். நீங்கள் இந்தத் தொழிலை விட்டுவிட வேண்டும். கஷ்டமாக (துன்பமாக) இருந்தாலும் வேறு தொழிலை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜாதி என்கிற பெயரால் மக்களுக்கு இருக்கின்ற இழிவு - அசவுகரியங்கள் ஆகியவை ஒழிய வேண்டும். சிறிது கூலி உயர்வதால் உங்களுக்கு என்ன நன்மை? வண்ணார் என்றால் கீழ்ச்ஜாதி என்கின்ற தன்மை ஒழிந்துவிடுமா?

என்ன கீழ்ச்ஜாதி? நீங்கள் ஆண்களில் 100-க்கு 90- பேர் படிப்பில்லாதவர்கள். பெண்களில் 100-க்கு 95- பேர் தற்குறிகள். பிறர் ஏவலுக்காகக் காத்துக் கிடக்க வேண்டியவர்கள்.

நாங்கள் (திராவிடர் கழகத்தினர்) கண்ணை மூடினால் நீங்கள் பழையபடியும் இன்னும் கேடான, மோசமான அந்தஸ்துக்கு (நிலைக்கு) ஆளாகவேண்டி வரும். இன்னொரு பக்கம் ஜாதி இருக்க வேண்டும், ஜாதித் தொழிலை அவரவர் செய்து ஆகவேண்டும் என்கின்ற முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. எங்களால் தான் அம்முயற்சி வெற்றி பெறவில்லை.

தோழர்களே! நீங்கள் மிகச் சிறு பிள்ளைகள். 75- ஆண்டுகளுக்கு முன் உங்களுக்கு என்ன சம்பளம் இருந்தது என்று தெரியுமா? ஒரு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு வெளுக்க 8 அணாதான். வாரத்தில் ஒரு நாள் ஒரு தடவை சோறு. ஏதோ விசேஷ (சிறப்பு - விழா) நாள்களில் சோறு பலகாரம் இவ்வளவு தான்; கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஒரு ரூபாயாக உயர்ந்தது.

காரணம் என்ன? இது இழிவான தொழில். இதில் ஈடுபட்டு இருக்கின்றவர்களுக்கு இன்ன இன்ன அந்தஸ்து போதும் என்பதாகத்தான் இருந்து வந்தது. நான் பள்ளிக்கூடத்திற்குப் போன காலத்திலே இரண்டு பசங்கள் (பையன்கள்) படிக்க வருவார்கள். ஒரு பையன் நாவிதர் (முடி திருத்துவோர்) ஜாதி; மற்ற ஒரு பையன் வண்ணார் ஜாதி. அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும்போது வீட்டில் இருந்தே ஆளுக்கு ஒரு தடுக்கும் எடுத்துக் கொண்டு வருவார்கள். அதை வராண்டாவில் (தாழ்வாரம்) போட்டு அதன் மேலேதான் அவர்கள் உட்கார்ந்து கொண்டு படிப்பார்கள். நாங்கள் உள்ளே உட்கார்ந்திருப்போம். இப்படி இருந்த அந்தக்காலத்தில் 8 அணா கொடுத்த நாங்கள் இன்று 5-ரூபாய் மாதத்திற்குக் கொடுக்கின்றோம். பலர் மாதம் 10-ரூபாய்க்கு மேல்கூட கொடுக்கின்றார்கள்.

இன்றோ (சலவை செய்த) துணிக்கு 2- அணா; இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கேட்டாலும்கூடக் கிடைத்துவிடும். ஆனால், சமுதாயத்தில் பிறவியின் பெயரால் இருந்துவரும் அசவுகரியங்களும் (வசதிக் குறைவுகளும்) இழிவும் நீங்க வழி உண்டா? நாலு அணா, 8- அணாவானால், 8- அணா வருமானம் உள்ளவன் 1-ரூபாய்க்காரனாகின்றான். முன்பு தலைச் சவரம் செய்து கொள்ள கால் அணா, அரை அணாதான். இன்று முகச்சவரம் மட்டும் நாலணாவாக உயர்ந்திருக்கின்றது. ஆனால், தொழிலாளியின் கூலி உயர்ந்ததே ஒழிய அவனது கவுரவம் உயர்ந்தா? எங்களுடைய கூப்பாட்டால் ஏதோ ஓர் அளவாவது கவுரவமாக நடத்தப்படுகின்றீர்கள். அதுவும், நகர்ப்புறங்களில்தான். இன்னமும் கிராமப்புறங்களில் உங்களை எப்படி நடத்துகின்றார்கள்? வாடா, போடா என்றுதானே அழைக்கிறார்கள்! சில இடங்களில் அடி, உதை எல்லாம் கூட இருக்கின்றனவே. அவை எல்லாம் இந்தத் தொழிலினால்தானே!

கான்ஸ்டபிளாகவோ, பியூனாகவோ அல்லது பள்ளிக் கூடத்து வாத்தியாராகவோ இருந்தால் வருமானம் குறைவாகவே இருந்தாலும், எவனாவது வாடா போடா என்று கூப்பிடுவானா? எனவே, இந்தத் தொழில் நம்மோடு தீர்ந்தது - நம் பையன் இந்தத் தொழிலுக்கு வரக்கூடாது என்று ஒவ்வொருவரும் முடிவு கட்டிக் கொள்ள வேண்டும்.

மற்ற நாடுகளில் இப்படி இல்லை. காஃபிக் கடை, மளிகைக்கடை, ஜவுளிக்கடை போன்றுதான் சலவைக் கடை, சவரக்கடை என்பவைகளும் உள்ளன.

கூடுமானவரையில் நீங்கள் இந்தத் தொழிலைக் கைவிட்டுவிட வேண்டும்; இன்றேல் வசதியாகவாவது செய்ய வேண்டும். மேல் நாடுகளில் 10- ஆயிரம், 20-ஆயிரம், 50-ஆயிரம் ரூபாய் முதல் போட்டு சலவைக் கடை, சவரக் கடை நடத்துகிறார்கள். அங்குப் பிறவிப்பேதம் பாராட்டப்படவில்லை.

நீங்கள் ஆண் - பெண் அத்தனை பேரும் படிப்பில் ஈடுபட வேண்டும்; ஏழையாக இருந்தாலும் குறைந்தபட்சம் (குறைந்த அளவு) எஸ்.எஸ்.எல்.சி., (பத்தாம் வகுப்பு) வரையிலாவது படிக்க வேண்டும்.

சர்க்காரில், காமராசர் ஆட்சியில் உங்களுக்குத் தக்க வசதி செய்து கொடுத்து இருக்கின்றார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் (Most Backward Class) என்று கருதி, கல்லூரி வரையிலும்கூட எந்த நிலைப் படிப்பு படிப்பதானாலும் சம்பளம் இல்லாமல் செய்திருக்கின்றனர். ஒருவேளை சோறும் போட்டுப் படிப்புச் சொல்லிக் கொடுக்கின்றனர்.

மேல்படிப்புக்கு ஹாஸ்டலுக்கு (தங்கும் விடுதிக்கு) உண்டான பணம் கொடுக்கின்றார்கள். எப்படியாவது படித்து உங்கள் பிள்ளைகள் எல்லாம் பேனா பிடிக்கும் வேலைக்கு உத்தியோகத்திற்குப் போகவேண்டும்.

சம்பளம் அரை வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தாலும் பரவாயில்லை;  ஜாதி இழிவு ஒழிந்தால் அதுவே போதும் என்பதுதான் என்னுடைய ஆசை.

எனக்கு நேர் விரோதமாகவே மற்றவர்களும் சொல்லுகின்றார்கள். 15- ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக இருந்தபோது சென்னை - திருவான்மியூரில் நடந்த உங்கள் ஜாதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருந்தார்; அவர் உங்களுக்குச் சொன்ன புத்திமதி என்ன தெரியுமா?

"நீங்கள் நன்றாக வெளுப்பதில் திறமைசாலிகளாக ஆகுங்கள்; ஜாதித் தொழிலை விட்டு விடாதீர்கள்; உங்களுக்குப் படிப்பு முக்கியம் இல்லை; பதவி, உத்தியோகத்தைப்பற்றிச் சிறிதும் எண்ணாதீர்கள்" என்று கூறினார்.

ஒரு காலத்தில் நீங்கள் முழங்காலுக்கு மேல்தான் உடை உடுத்த வேண்டும் என்று இருந்தது. நாங்கள் அந்தக் காலத்தில் வேட்டியை இப்போதுபோல் அல்லாமல் தூக்கிக் கட்டி இருந்தாலும் முழங்காலுக்குமேல் கட்டி இருந்தால் வீட்டில் உள்ளவர்கள், "என்னடா வண்ணான் மாதிரி வேட்டி கட்டி இருக்கிறாய்?" என்பார்கள். இன்று 100-க்கு 90- பேர்கள் சட்டை அணிந்திருக்கிறீர்கள். இந்தப் பெரிய கூட்டத்தில் சட்டை இல்லாதவர்கள் 10- பேர்களைக் கூடப் பார்க்க முடியவில்லை. அந்தக் காலத்தில் நீங்கள் 'சொக்காய்' (சட்டை) போட முடியாது. உங்கள் பெண்கள் எல்லாரும் இடுப்பில் துண்டும், மேலே ஒரு துண்டும்தான் உடுத்தவேண்டும். இப்படித்தான் இருந்தது. இன்று அவைகள் எல்லாம் எங்கே? நீங்கள் மற்ற மேல் ஜாதி என்பவர்கள் போல உடை உடுத்துவதை இன்று எவரும் தடுப்பதற்குப் பதில் சந்தோஷம் (மகிழ்ச்சி) அல்லவா அடைகின்றனர். இன்று கிராமங்களிலுங்கூட அடி - உதை என்பது போன்ற கஷ்டங்கள் (தொல்லைகள்) எல்லாம் பெரிதும் மறைந்து விட்டன.

இப்படிப்பட்ட நிலை எங்கள் பிரச்சாரத்தின் காரணமாகவே அடைந்தீர்கள். இது நீண்ட நாளைக்கு நிற்காது; நாளைக்கே எங்கள் முயற்சிகளுக்கு மாறானவர் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாளில் மாற்றி விடுவார்கள்.

இந்த இராஜகோபாலாச்சாரியார் 1938, 39- இல் (சென்னை மாகாணத்துக்கு) முதன் மந்திரியாக வந்தபோது 2,000, 2,500- பள்ளிகளுக்கு மேல் மூடினார். இப்போதைய முதன் மந்திரி காமராசருக்கு முன்பு, ஆச்சாரியார் இரண்டாவது தடவையாக முதன் மந்திரியாக வந்தாரே அப்போதும் 4000,  5000 பள்ளிகளை மூடினார். இம்மாதிரி நகரங்களில் உள்ள பள்ளிகளை அல்ல - எல்லாம் கிராமங்களில் உங்கள் போன்றவர்கள் உள்ள பிள்ளைகள் படித்து வந்த பள்ளிகளை மூடினார். இம்மாதிரி நகரங்ளில் உள்ள பள்ளிகளை அல்ல - எல்லாம் கிராமங்களில் உங்கள் போன்றவர்கள் உள்ள பிள்ளைகள் படித்து வந்த பள்ளிகளை மூடினார். பாக்கி இருந்த பள்ளிகளிலும் பிள்ளைகள் ஒரு நேரம் படித்தால் போதும் மறுநேரம் அவன் அவன் ஜாதித் தொழிலைச் செய்யப் பழகவேண்டும் என்று உத்தரவு போட்டார்.

வண்ணார் மகன் வெளுக்கவும், நாவிதர் மகன் சிரைக்கவும், குயவர் மகன் சட்டிப்பானை செய்யவும், இப்படிச் ஜாதித் தொழில் பழகவேண்டும் என்று உத்தரவு போட்டார். சர்க்கார் (அரசு) செலவிலேயே ஜாதித் தொழில் இன்னது என்னது என்று பொம்மை போட்டு விளக்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவு போட்டார். படிப்பு, அறிவுக்காக என்பது தப்பு. படிப்பு என்பது ஜாதி அமைப்பு மாறாமல் இருப்பதற்காக என்று பச்சையாகச் சொன்னார். புதிதாக அய்ஸ்கூல்கள் (உயர்நிலைப்பள்ளிகள்) தேவை இல்லை என்று கூறி உத்தரவு கொடுத்து விட்டார்.

எந்த எதிர்க்கட்சிக்காரர்களாலும் அவரை (முதலமைச்சர் ஆச்சாரியாரை) அசைக்க முடியவில்லை. பிறகு எங்களுடைய கூப்பாட்டால் இரகளை (கலகம்) ஏற்படும் என்று பயந்து ஆட்சியை விட்டு ஓடினார். அப்போது காமராசர் அவர்கள் முதன் மந்திரிப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆச்சாரியாரின் வருணாசிரமத் திட்டத்தை இரத்து செய்தார்.

ஆச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் திறந்து மேற்கொண்டும் 5000, 6000- பள்ளிகளைப் புதிதாக ஏற்பாடு செய்தார். முதலில் 8-ஆம் வகுப்பு வரையில் படிக்க சம்பளம் இல்லை என்றார். நாளைய வருஷம் முதல் எஸ்.எஸ்.எல்.சி (உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பு) வரையிலும் சம்பளம் இல்லை என்று ஆக்கப் போகின்றார். சோற்றுக்கு இல்லாத பிள்ளைகளுக்கு ஒருவேளை சாப்பாடும் போட ஏற்பாடு செய்து உள்ளார்.

நாம் கல்வி இன்மையால்தான் இந்த இழிநிலையில் உள்ளோம். நாடு கல்வி கற்று விட்டால் ஜாதி இழிவு ஒழிந்துவிடும் என்று எண்ணுகின்றார். காமராசர் அவர்களும் ஓர் இழிவான ஜாதி என்று கூறப்பட்ட ஜாதியில் வந்தவர் ஆனதால், மக்களின் இழிநிலையினைப் போக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்.

தோழர்களே! வருணாசிரமக் கல்வித் திட்டமானது இன்றும் ஒழிந்தாடில்லை. அதனை மறைமுகமாகப் புகுத்த முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன சக்கிலிகள் (கால் செருப்பு தைப்போர்) என்றென்றைக்கும் சக்கிலியாகவே இருக்க வேண்டும் என்பதற்காகத் தோலை எப்படிப் பதனிடுவது என்று கற்றும் கொடுக்கவும், நெசவாளி பிள்ளைகளுக்கு நெசவு சொல்லிக் கொடுக்கப் பள்ளிகளும், கன்னார் பிள்ளைகளுக்குக் கன்னார் வேலை, தச்சு வேலை சொல்லிக் கொடுக்கப் பள்ளிகளும், இப்படியாகச் சவரத் தொழிலை அவன் நிரந்தமாகவே செய்துவரக் கற்றுக் கொடுக்க அரசாங்கத்தாரால் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளிலும் மறுபடியும் ஜாதித் தொழில் போதிக்க, ஆதாரக் கல்வி என்ற உருப்படாத திட்டமும் புகுத்தப்பட்டு இருக்கின்றது. நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையுமே இப்படிச் ஜாதித் தொழில் பள்ளியாக மாற்ற அரசாங்கம் உத்தரவு இட்டு இருக்கின்றது.

எங்களால் அவர்கள் இந்தத் திட்டத்தை - குலக்கல்வி என்பதைச் சொல்லப் பயப்படுகின்றார்கள். ஆனால், காரியத்தில் புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். மக்கள் இத்தகைய அக்கிரமங்களை எல்லாம் கண்டிக்க முன்வர வேண்டும்.

தோழர்களே! உங்களுக்கு உத்தியோகத்திற்கு வகை இல்லை. சக்கிலி, பறையர்களுக்கு வகை இருக்கின்றது. ஆனால், உங்களுக்கு இல்லை பார்ப்பானுடன் படிப்புப் போட்டியில் ஏதோ தப்பித் தவறி வெற்றி பெற்று வந்தால் ஏதோ உங்களுக்கு உத்தியோகம் உண்டு.

இது பெரும்பாலும் சாத்தியம் இல்லாதது. பறையர், சக்கிலிகள் அப்படிப் போட்டிப் போட வேண்டி, அவர்கள் துலுக்கர், கிறிஸ்தவர்களாக ஆக்க நடைபெற்ற முயற்சி கண்டு பயந்து அவர்களுக்கு இத்தனை உத்தியோகம் சட்டசபை - பார்லிமெண்டு (நாடாளுமன்றம்), ஸ்தலஸ்தாபனங்களிலும் (உள்ளாட்சித் துறை நிறுவனங்களிலும்) இத்தனை பதவிகள் என்று ஒதுக்கியுள்ளார்கள்.

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) ஆட்சியில் இருந்தபோதுதான் பறையனுக்கு முனிசிபல் கவுன்சிலர் (நகராட்சி உறுப்பினர்) பதவி, சட்டசபை, பார்லிமெண்டு ஆகிய ஒன்றில் அங்கத்தினராக (உறுப்பினராக) நியமனம் செய்து முதல் மந்திரி பதவி கொடுத்தும் உயர்ந்த உத்தியோகங்கள் அவர்கள் அடைய வழிவகை செய்தது.

ஆனால், உங்களுக்கு இன்று நாதியே இல்லை. கேட்டால் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொன்று கொடுக்க எங்கே போவது என்பார்கள். நீங்கள் (ஆதிதிராவிடர்) எப்படிப் பொதுத் தொகுதியில் நின்று போட்டியிட்டுத் தேர்தலில் வெற்றி பெற முடியும்? உங்களுக்கு வசதிதான் என்ன இருக்கின்றது? எனவே, உங்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்டசபை பார்லிமெண்டு ஆகியவைகளிலும் ஸ்தானம் (பதவி இடம்) அளிக்க வேண்டியது நியாயமானதேயாகும்.

உங்களுக்கு இருக்கின்ற குறைபாடுகளை எல்லாம் - தேவைகளை எல்லாம் - நீங்கள் உங்கள் சங்கத்தின் மூலமாகத் தீர்மானம் போட்டு அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டுவதோடு இரண்டொரு சட்டசபை மெம்பர்களை (உறுப்பினர்களை) விட்டு அதுபற்றிச் சட்டசபையில் பேசச் சொல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உங்கள் பிரதிநிதிகள் சந்தித்து எடுத்துச் சொல்ல வேண்டும். கூடிய வரையில் கவனிப்பார்கள். முன்பு நான் குறிப்பிட்டது போலவே நமது நல்ல வாய்ப்பாக நமக்கு வாய்த்த முதலமைச்சரும் (காமராசரும்) ஒரு கீழ்ச் ஜாதியில் இருந்து வந்தவர்தான். அவருக்கு மக்களுடைய குறைபாடுகள் நன்றாகத் தெரியும். நீங்கள் எல்லோரும் மக்களுடைய கல்வி, உத்தியோகம் ஆகியவற்றில் அக்கறை காட்டி அடுத்துவரும் தேர்தலிலும் காமராசரையே ஆதரிக்க வேண்டும். அதற்காக அவர் கையைப் பலப்படுத்த அவர் நிறுத்தி வைக்கும் காங்கிரஸ்காரர்களையே ஆதரிக்க வேண்டும்.

நம்மைக் காட்டுமிராண்டியாகவும், இழிமக்களாகவும், ஆக்கிவரும் கடவுள், மதம், பண்டிகைகளைவிட்டு ஒழித்து விடவேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.

நான் கடைசியாக வாக்காளரிடம் மீண்டும் கூறுவது, நீங்கள் ஆண்களும், பெண்களும் குறைந்தபட்சம் எஸ்.எஸ்.எல்.சி., வரையிலாவது படிக்க எப்படியாவது முயற்சி செய்ய செய்ய வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அழுக்குத் துணிகளை எடுத்துக் கொண்டு வர துணிக்காரர் வீடுகளுக்குப் போவதையாவது முதலில் விட்டு ஒழிக்க வேண்டும். அவர்கள் உங்கள் வீடு தேடி, கடை தேடி, துணி கொண்டு வந்து போடச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் ஒரு சிறிதாவது உங்களுக்குக் கவுரவமும், தொழிலுக்கு மதிப்பும் ஏற்படும்.

----------------------------------- 15.04.1960 ஈரோடு பெரியார் நகரமன்றத்தில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு. ”விடுதலை”, 19.04.1960

27 comments:

தமிழ் ஓவியா said...

பட்டாசு வெடிக்காதீங்க!


குழந்தைத் தொழிலாளர் மீட்புப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி என்ன கூறு கிறார் தெரியுமா?

குழந்தைகளே தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதீர்!

நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களை வைத்துத்தான் பட்டாசுகளை உற்பத்தி செய்கிறார்கள்

அது மட்டுமா? பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலும் பாதிக் கப்படுகிறது. அதனால் நோயும் பரவுகிறது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/89302.html#ixzz3GDyHvYIB

தமிழ் ஓவியா said...

கையால் மலத்தை அள்ளி தலையில் சுமக்கும் அவலம்!


அய்.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய்க் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில்.

இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.

கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பிகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது.

தலைநகர் டில்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை என மய்ய அரசின் பல்வேறு பிரிவுகளிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாடெங்கிலும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் குறிப்பிடுகிறது.

இந்தப் புள்ளி விவரம் ரயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தயாரிக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்தும் அரசு சாரா அமைப்புகள், அத்தொழிலாளர் களையும் சேர்த்தால், நாடெங்கும் ஏறத்தாழ 13 இலட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன.

சுகாதாரப் பணி என அலங்காரமாகச் சொல்லப்படும் மலத்தை அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்குள்ளேயே அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர், ஆதி ஆந்திரா, வால்மீகி உள்ளிட்ட சில பிரிவு மக்களின்மீது திணிக்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால், அதற்குள் இறங்கி அடைப்பை நீக்கும் பொறுப் பைத் தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீது சுமத்தியிருக்கும் இந்திய இந்துத்துவா ஜாதி சமூக அமைப்பு, மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதைத் தாழ்த்தப்பட்ட பெண்கள்மீது சுமத்தியிருக்கிறது.

என்னுடைய உடம்பின் ஒவ்வொரு அங்கமும் நாறுகிறது; பலமுறை குளித்த பிறகும் நாறுகிறது. என்னால் சோற்றில் கை வைக்க முடியவில்லை; எனக்கு வேறு எந்த வேலையாவது கொடுங்கள். தயவு செய்து இந்த நரகத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கள் என்கிறார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மலம் அள்ளும் தொழிலாளி சரசுவதி. அவர் மலத்தை அள்ளிக் கொண்டு வரும்பொழுது ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இளைஞர்கள், இன்று நீ நடிகை கார்தீனா கைஃப் போல இருக்கிறாய் எனக் கேலி பேசுவார்கள். அதைக் கேட்டும் கேட்காததுபோல நான் நடந்து செல்வேன் என்று அன்றாடம் தனது மனது படும் வலியை விவரிக்கிறார், அவர்.

இந்தியாவைக் காக்க வந்திருக்கும் ரட்சகனாக நம்முன் நிறுத்தப்படும் மோடி, வால்மீகி ஜாதியினர் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதை ஆன்மப் பரிசோதனையாகச் செய்து வருகின்றனர் எனச் சாதித் திமிரோடு நியாயப்படுத்திப் பேசவில்லையா?

கர்மயோக் என்ற நூலில் அவர் என்ன எழுதியிருக்கிறார்?

Scavenging must have been a spiritual experience for the valmiki caste. At some time some body have got enlightment in scavenging, they must have been taught that it is their duty to work for the happiness of the entire society and the gods.

"சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப் போருக்கு ஞானம் ஊட்டப் பெறலாம்; அவர்கள் செய்யும் வேலை சமூகத்தில் மகிழ்ச்சிக்காகவும், கடவுளின் சந்தோஷத் திற்காகவும் செய்யப்படுவதாகவும் கருதலாம்" - இதுதான் கர்மயோக் என்ற நூலில் மோடி குறிப்பிட்டுள்ள பகுதியாகும்.

மலம் எடுக்கும் தொழிலைக் கேவலமாகக் கருதிய காலம் உண்டு. மலம் எடுப்பதற்கென்றே தனி ஜாதியும் இந்து வருணாசிரம அமைப்பு முறையிலும் உண்டு; அதைத்தான் வால்மீகி ஜாதி என்று மோடி குறிப்பிடுகிறார்.

தமிழ் ஓவியா said...

அந்தத் தொழிலை, இழிவு என்று கருதி, அம்மக்கள் மத்தியில் கல்வி ஆர்வம் அரும்பும் நிலை ஏற்படும் பொழுது, அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்காகப் போராடி, அதனைப் பெற்றுவரும் ஒரு காலகட்டத்தில், அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, அரசே வெளியிட்ட நூலில், மலம் எடுப்பதை இழிவான தொழிலாகக் கருதாதீர்கள். அந்தத் தொழிலைச் செய்வதானது கடவுளுக்குச் சந்தோஷத் தைத் தரக் கூடியது என்று சொல்ல முன் வந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும் என்கிறார்.

கைகளால் மலம் அள்ளும் முறை முற்றிலும் தடைசெய்யப்பட்ட மாநிலங்கள்

யூனியன் பிரதேசங்கள் சிக்கிம், கோவா, லட்சத் தீவுகள்.

கைகளால் மலம் அள்ளும் தொழில் இன்றும் உள்ள மாநிலங்கள் முதலிடம்

உத்தரப்பிரதேசம்,

இரண்டாமிடம் டில்லி,
மூன்றாமிடம் ராஜஸ்தான்,
நான்காமிடம் குஜராத்
அய்ந்தாமிடம் மத்தியப்பிரதேசம்
ஆறாமிடம் பிகார்
ஏழாமிடம் ஆந்திரா-தெலுங்கானா
எட்டாமிடம் அரியானா
ஒன்பதாமிடம் சத்தீஷ்கர்
பத்தாமிடம் ஒரிசா
தமிழ்நாட்டில் இன்றும் சுமார் 30,000 குடும்பங்கள் கைகளால் மலம் அள்ளும் தொழில் செய்துவருகின்றனர்.

நாட்டைத் தூய்மைப்படுத்தப் போவதாக துடைப்பத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தொலைக்காட்சிக்குத் தோற்றப் பொலிவைக் (Pose) காட்டட்டும்; வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு முன் கையால் மலத்தை அள்ளி, தலையில் சுமக்கும் கேடுகெட்ட தன்மைக்கு முடிவு கட்டட்டும்!

மலம் அள்ளுவதைக்கூட கர்ம யோக் என்று இந்துத்துவா மொழியில் சிந்திப்பதை- பேசுவதை நிறுத்திக் கொள்ளட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/89348.html#ixzz3GDyaUl9D

தமிழ் ஓவியா said...

பிச்சைக்காரன் யார்?



பாடுபடச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள். - (குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/89347.html#ixzz3GDyk22rX

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியின் கொல்ராபி என்ற அருமையான உணவுத் தண்டு!


காய்கறி தண்டுகளில் ஜெர்மனி மொழியில் ”கொல் ராபி” (Kohl rabi)என்று அழைக்கப்படும் காய்கறித் தண்டுபற்றி இணையத்தில் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள் வதில் மகிழ்ச்சி.

கேபேஜ் முட்டைகோசு - டர்னிப் என்ற காய்கறி குடும்ப வகையறாவைச் சார்ந்த மெல்லிய தண்டு - Purple (ஊதா) கலரில் வடிவமைப்பில் உள்ளது.

இதில் உள்ள ஏராளமான பொட்டா ஷியம் சத்து காரணமாக, இதைச் சாறாக ஆக்கியும்கூட குடிக்கிறார்களாம்!

நம் நாட்டு மருத்துவர்களேகூட, நோயாளிகளுக்கு பொட்டாஷியம் சத்துக் குறைவாக இருக்கிறது; கூட்ட வேண்டும் என்று கருதும்போது, இளநீரைக்கூட கொடுக்கச் சொல்வதும் உண்டு (பொட்டாஷியத்தை உடலில் குறைக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இளநீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் என்று அறிவுரை கூறுவர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறுவர்).

கேபேஜ் என்ற முட்டைக்கோசு, காலிப் பிளவர், பிராக்லி (Broccoli), கேல்(Kale), Collard Greens என்ற கீரை வகைகள், பிரசல்ஸ் ஸ்பரட்டுஸ் (Sproats) என்ற முளைகள் இவை களின் குடும்பத்தைச் சேர்ந்தது இது!

வெள்ளைக் கலரிலும் மற்றும் பல கலர்களிலும் கூட இந்த கொல் ராபி கடைகளில் அங்கே கிடைக்கிறது.

இது நார்ச்சத்து அதிகம் தரக்கூடியது (Rich dietary Fiber) மட்டுமல்ல, காரோட்டனாய்டுஸ் (Carotenoids) மற்றும் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி வைட்டமின்கள் எல்லாம் ஏராளம் உடையதாகும்!

இது நல்ல Antioxident ம் ஆகும். உடலின் நலத்திற்கு ஊறு செய்பவை களைத் தடுத்து நிறுத்தும்.

மேலே கூறிய வைட்டமின்கள் மட்டுமா இதில் உள்ளன? மேலும் வியப் பாக உள்ளது கால்சியம், பொட்டா ஷியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், செம்பு (Copper) சத்து களும் இதில் அடக்கம்!

ரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல ரத் தமாக வைக்க இது பெரிய போர் வீரன் போல உதவவும் தயாராக உள்ளது!

அசிடோசிஸ் (Acidosis) என்ற அதிகமான ஆசிட் சுரத்தலை உடலில் தடுக்கவும், ஆஸ்துமா, புற்றுநோய் (கேன்சர்) முதலியவைகளுக்கு எதிரான சத்தை இது உடலுக்குத் தருகிறது. அந்த நோய்க் கிருமிகளை அழிக்கவும் முந்துகிறதாம்!

பச்சை ஆப்பிள் ஜூசில் (திரவத்தில்) (Juice) கலக்கி, இதனைக் குடித்தால் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்து கிறதாம்!

இருதயத்தையும்கூட - இதிலுள்ள பொட்டாஷிய சத்து காரணமாகப் பாதுகாக்கவும் உதவுகிறதாம்!
செரிமானத்திற்கும் இது பெரிதும் உதவுகிறதாம்!

தசை, நரம்புகளைப் பலப்படுத்திட இது மிகவும் பயன்படுகிறதாம்!

பிராஸ்டேட், கொலோன் கேன்சர் இவைகளுக்கு எதிராகவும் இது ஒரு உதவிடும் பாதுகாப்புப் பணியாளனாம்!

தோல் - சருமத்தையும் பாதுகாக் கிறது. எடை குறைக்கவும் உதவிடுமாம்!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/89349.html#ixzz3GDysRMJT

தமிழ் ஓவியா said...

இலட்சியத்தை அடைய...


நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால், நாம் போகவேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது.
_ (குடிஅரசு, 4.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/89367.html#ixzz3GJo07zkZ

தமிழ் ஓவியா said...

கடல்நீர் உப்பு கரிப்பதின் காரணம் என்ன?


பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல்.

ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப் பார்த்தோம். மழை பெய்து குளிரும் போது, வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது. கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன. அவை வெளியிடும் லாவாக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்புத் தன்மையை அதிகரிக்கும்.

கடல்வாழ் உயிர்கள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும். கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கின்றன. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும். கடலில் தான் நதிகள் கலக்கின்றன. கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை. இதனால் நீர் வெளியேற்றம், உப்பு என எதுவும் வெளியேறாது.

சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி. அவ்வாறு ஆவியாகும் போது, உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும்.

இதுபோன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டு களாக நடந்து கடல் நீரில் உப்புத் தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில் ஆவியாதல் தவிர வேறுவழியில் நீர் வெளியேறிக்கொண்டு இருந்திருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது. தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும், சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலை விகிதத்தில் இருக்கிறது.

கடல் நீர் உப்புக் கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும், வியர்வையும் உப்புக் கரிப்பது ஏன் என்றால் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து கண்ணீர் வருகிறது. அதில் உப்பு வரக் காரணம்.

நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவமான ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/89384.html#ixzz3GJpG5A96

தமிழ் ஓவியா said...

முதலைக்கஞ்சாச் சிங்கம்!


முதலைக்கு அஞ்சாத சிங்கம் எது தெரியுமா? புளோவர் எனும் சின்னஞ்சிறு பறவைதான்.

எந்த உயிரைக் கண்டாலும் தன் வாய்க்குள் அனுப்பும் முதலை, இந்தப் பறவை வந்தால் மட்டும் வரவேற்கும் வகையில் வாய்த் திறந்து பற்களைக் காட்டுகிறது. இந்தப் பறவை முதலை வாய்க்குள் சென்று, முதலையின் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாமிசத் துண்டுகளைத் தனது ஆகாரமாக்கிக் கொண்டு சிட்டாகப் பறந்துவிடுகிறதாம்!

என்னே, விந்தை! முதலைக்கு அஞ்சாத சிங்கம் என்று இதனைக் கூறினால் என்ன?

Read more: http://viduthalai.in/page-8/89400.html#ixzz3GJpkkmqZ

தமிழ் ஓவியா said...


சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.

பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.

தமிழ் ஓவியா said...

தீபாவளி தமிழர் விழாவா? எப்பொழுது புகுந்தது தமிழ்நாட்டில்?



தீபாவளி தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால், பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெரு நாள்... இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவேயில்லை.

சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை

- அ.கி. பரந்தாமனார் எழுதிய மதுரை நாயக்கர் வரலாறு - பக்கம் 433-434).

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே தீபாவளி நமது விழாவா? இப்பொழுது சொல்லுங்கள்!

இடையில் புகுத்த இந்த இடைச்செருகல் எப்படி நமது விழாவானது? ஒரே ஒரு கணம் சிந்தித்து புறக்கணிப்பீர்! புத்தியைப் பயன்படுத்துவீர்!

பொருள் இழப்பைத் தவிர்ப்பீர்!
பொழுதை வீணாக்காதீர்!

ஆரியர் திராவிடரை வீழ்த்திய நாளை திராவிடர்கள் கொண்டாடலாமா? கொண்டாடலாமா?

Read more: http://viduthalai.in/e-paper/89516.html#ixzz3GVYwxxh1

தமிழ் ஓவியா said...

சாமி த(க)ரிசனம்?


தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் ரெட்டி(48) தன் மனைவி, மகள், பெற்றோர் சகிதமாக திருப்பதி சென்று ஏழுமலை யானைத் தரிசிக்கக் காரில் சென்று கொண்டிருந்தார் ரேணிகுண்டாவையடுத்த மாமண்டூர் அருகே சென்று கொண்டிருந்தபோது இவரது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதால் ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற 5 பேரும் பலியானார்கள். தரிசனம் செய்யச் சென்ற வர்கள்மீது ஏழுமலையானுக்குக் கரிசனம் இல்லையே! (அது என்ன செய்யும் அதுவெறும் சிலைதானே?)

Read more: http://viduthalai.in/e-paper/89515.html#ixzz3GVZfpJi8

தமிழ் ஓவியா said...

பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக் கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ, நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

Read more: http://viduthalai.in/page-2/89520.html#ixzz3GVZsOWch

தமிழ் ஓவியா said...

சுப்பண கவுண்டர்


கோபிக்கு அடுத்த கூகலூர் திருவாளர் கே. சுப்பண கவுண்டர் அவர்கள் காங்கிரசினிடமும், காந்தியினிடமும் அதிகப்பற்றுள்ளவராயிருந்தாலும் தீண்டாமை, வருணா சிரமம் ஆகியவைகள் ஒழிய வேண்டுமென்பதில் உண்மையாகவே பற்றும், உண்மையான ஊக்கமும், செல்வமும், செல்வாக்கும் கொண்ட ஒரு வேளாளப் பெரியாராவார்.

இவர் இரண்டு வாரத்திற்கு முன்பு தனது தோட்டத்துக் கிணற்றில் ஆதி திராவிடர்களைத் தண்ணீர் எடுக்க அனுமதித்ததினால் ஊரார் இவரைப் பகிஷ்காரம் செய்து இவர் வீட்டு வேலைக்கும், விவசாய வேலைக்கும் ஆள்களைப் போகாவொட்டாமல் தடுத்து விட்டார்கள்.

இதனால் வெளியூர்களில் இருந்து ஆள்கள் தருவிக்கப் பட்டு திரு. கவுண்டர் அவர்களின் குடித்தனம் கிரமமாய் நடைபெற்று வருகின்றதோடு அநேக அறிவாளிகளும், சில மிராசுதாரர்களும் திரு. சுப்பண கவுண்டருக்கு அனுகூல மாகவும் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

ஆனாலும், மூடப்பழக்கவழக்கங்களைக் கையாளும் அஞ்ஞானி களாயுள்ள சிலர் அந்த ஜாதிப் பெரியார்களான பட்டக்காரர்கள் என்பவர்களுக்குக் கடிதம் எழுதி கவுண்டர் வீட்டில் வேலை செய்யும் ஆட்களைச் சாதியைவிட்டு நீக்கும்படி கேட்டுக் கொள்வதாகப் பயமுறுத்துகின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த மாதிரியான காரியங்களில் எல்லாம் பட்டக்காரர் கனவான்கள் துணிந்து முன் வந்து அஞ்ஞானிகளுக்கு ஞான உபதேசம் செய்து இக்கால நிலைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், நாகரிகத்திற்கும் ஏற்றவண்ணமே நடந்து மக்களுக்கு சுதந்திரமும், சமத்துவமும் கிடைக்கும்படி செய்வதன்மூலம் தங்கள் பட்டத்திற்கும், ஸ்தானத்திற்கும் பெருமை விளைய செய்வார்கள் என்றே கருதுகின்றோம். கடைசியாக இவ்வளவு மேலான ஒரு காரியத்தைத் துணிந்துமேற்போட்டுக் கொண்டு செய்த திரு. சுப்பண கவுண்டர் அவர்களையும், இவ்விஷயத்தில் அவருக்கு உதவி செய்து துணையாய் இருக்கும் மற்ற கனவான்களையும் போற்றிப் பாராட்டுகின்றோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 17.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89544.html#ixzz3GVbi0Lpk

தமிழ் ஓவியா said...

தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பகத்சிங்

1. (a) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கை களுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.

(b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.

(c) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.

விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கை களை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் - உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.
பெண் உரிமை

3. (a) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டுமென்பதாக இம்மகாநாடு திட்ட மாய்க் கருதுகின்றது. (தீ) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடைகளையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வ நிலைக்கும் தகுந்த அளவில் குழந்தைகளைப் பெறுவதற் காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.

நம்பிக்கையில்லை

4.

1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும்,

2. தனது செய்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால் ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும்,

3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும்

4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும், 5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

குடிஅரசு - தீர்மானங்கள் - 12.04.193

Read more: http://viduthalai.in/page-7/89546.html#ixzz3GVbxfyee

தமிழ் ஓவியா said...

மூன்றாவது மாகாண சுயமரியாதை மகாநாடு

விருதுநகரில் நடக்கவிருக்கும் 3வது சுயமரியாதை மகாநாடானது முன் குறிப்பிட்டபடி ஜூன் 6, 7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்டதென்று தெரிவிக்க வேண்டியதாகி விட்டது.

ஏனெனில், மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே இசைந்து அதை உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு வந்து நீலகிரியில் (ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும், மேலும் அவருக்கு அந்த வலி நிற்காமல் மிகவும் தொந்தரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர முடியாமலும் திடீரென்று தமது ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது.

ஆன போதிலும் மகாநாட்டை எந்த விதத்திலும் ஒரு வாரம் முன் பின்னாகவாவது நடத்தி விடலாம் என்கிற தீர்மானத்தின் மீதே தலைவர் உயர்திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்களும் மற்றும் விருதுநகர் பிரமுகர்கள் திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார் நாடார் முதலியவர்களும் வெகு மும்முரமாகவே மகாநாட்டு வேலைகளைக் கவனித்துக்கொண்டு வருகின்றார்கள். வேறு தலைவர் தேர்ந்தெடுத்து சீக்கிரம் மகாநாடு நடக்கும் தேதியை தெரிவிக்கப்படும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 24.05.1931

Read more: http://viduthalai.in/page-7/89546.html#ixzz3GVcDkV8T

தமிழ் ஓவியா said...

விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் அய்ரோப்பிய ஒன்றியத்தை இந்திய அரசும் பின்பற்ற வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!


சென்னை, அக்.18_ அய் ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலி கள் அமைப்பு மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடு தலைப்புலிகள் மீது விதித் திருந்த தடையைத் தற் போது விலக்கிக் கொண் டிருக்கிற அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக் கைகளையும் விமர்சித்துள் ளது.

இந்திய அரசு, இலங் கைப் பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறை களைக் கொண்டிருக் கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்து களில் நம்பிக்கை இல்லை என்றும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ளனர். விடுதலைப் புலிகள்மீது சிங்கள அர சும், இந்திய அரசும் எவ் வாறு அவதூறுகளைப் பரப்பிவந்துள்ளன என் பதை இதிலிருந்து சர்வ தேச சமூகத்தால் அறிந்து கொள்ள முடியும்.

சிங்கள இனவெறியர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருப்பதால், மிக இலகு வாக சர்வதேச நாடுகளின் ஆட்சியாளர்களை அணுகி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்ப முடிகிறது. ஒரு தரப்பு கருத்துகளை மட் டுமே கேட்கிற வாய்ப் பைப் பெற்ற நாடுகள், அவற்றை உண்மையென நம்பி, விடுதலைப் புலி களுக்கு எதிரான முடி வெடுக்கும் நிலையும் உரு வாகிறது. சிங்கள அரசுக் குத் துணையாக இந்திய அரசு விடுதலைப் புலி களுக்கு எதிரான அவ தூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது.

அதனடிப் படையில், அய்ரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடு தலைப் புலிகள் மீது தடைவிதித்திருந்தது. தற்போது, சட்டபூர்வ மாக விசாரணை நடத்தி யதில் அய்ரோப்பிய ஒன் றியத்தின் நீதிபதிகள் அக் கருத்தை மாற்றிக் கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர்.

இது சர்வதேச சமூகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதுடன், புலி களின் மீது ஒரு புதிய பார் வையை ஏற்படுத்தும் என் றும் நம்புகிறோம். அய் ரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி பிற நாடுகளும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகும்.

அந்த வரி சையில், இந்திய அரசும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண் டுமென்றும் புலிகளின் மீதான தடையை விலக் கிக் கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக் கிறது.

அத்துடன், விடு தலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரித்து ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது. _ இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/89531.html#ixzz3GVcl7000

தமிழ் ஓவியா said...

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடி கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல், மற்றும் பெரிய நிறுவனங்களைத் தொடங்கி தங்களின் தொழிலை மட்டுமே வளமாக்கிக் கொண்டார்கள். தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும் சிந்திக் காதவர்கள்.

நாம் ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர்.

ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..!

இன்னும் சிலரோ ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் அகடமி தொடங்கு வார்கள். அதில் புதிய ஆட்டகாரரர்கள் நுழைவதற்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குவார்கள். அவர்களின் சம்பளத் தில் இருபது சதவீதம் வாழ்நாள் முழு வதும் தரகு பெறுவார்கள். இது தானே இங்கே நடந்து கொண்டு இருக்கிறது.

Read more: http://viduthalai.in/page2/89472.html#ixzz3GVdyJIZk

தமிழ் ஓவியா said...

மும்பையைத் தொடர்ந்து பெங்களூருவிலும் பார்ப்பனர்களுக்கு மட்டும் என்ற விளம்பரம்


2013 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டிட நிறுவனம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்று விளம்பரமிட்டு ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு புறப் பட்டதும் இவ்விளம்பரத்தை நீக்கி விட்டது. தற்போது பெங்களூருவில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று வேதிக் ஆசிரமம் என்ற பெயரில் ஒரு குடியிருப்புத் தொகுப்பு வீடுகளைக் கட்டிவருகிறது. இதன் விளம்பரத்தில் வேதிக் ஆசிரம வீடுகள் பார்ப்பனர்களுகாக உருவாக்கப்பட்டது என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுக் கப்பட்டுள்ளது.

பெங்களூரு--அய்தராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 1200 தொகுப்பு வீடு களைக் கொண்ட வேதக்கிராமத்தை தனியார் நிறுவனம் ஒன்று கட்டி வரு கிறது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப்பகுதி முழுவதுமே தொகுப்பு வீடுகளைக் கட்டி வருகிறது, இச்செயற்கை கிராமம் பார்ப் பனர்களுக்கு மாத்திரமாம்.

இது குறித்து இந்த கட்டுமான நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.பி.ராவ் தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் பார்ப்பனர் என்பது சாதியல்ல; அது ஒரு நல்ல எண்ணஓட்டம் கொண்ட மனிதர்களைக் குறிக்கும் குறியீடாகும். இதை பார்ப்பன சாதி என்று பார்க்காமல் பார்ப்பன அய்டியாலஜி (சித்தாந்தம்) என்று கூறுவதுதான் சரியானது. மேலும் இது போன்ற செயற்கை கிராமங்களின் மூலம் சமூகத்தில் எந்த சச்சரவும் இல்லாமல் அமைதியான சூழலில் வாழும் நிலையை நாம் உருவாக்க முடியும். தற்போதுள்ள சூழலில் அனைத்துப் பிரிவு மக்களும் பல்வேறு சிந்தனை கொண்ட வர்கள் பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள். அதனால் அங்குள்ள வர்களின் பழக்கவழக்கங்களினால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

இது போன்ற தனிக் குடியிருப்புகள் கட்டும் போது சச்சரவற்ற நிலையில் அமைதியான சூழலில் வாழ வகை யுண்டு. இதனால் பல நன்மைதான் உண்டு, வேண்டுமென்றால் பல்வேறு பிரிவு மக்கள் அவர்களுக்கு என்று குடி யிருப்புகளைக் கட்டிக்கொள்ளட்டும், இதில் எங்கும் பாகுபாடு என்ற பேச்சிற்கே இடமில்லை, ஒரே எண்ண ஓட்டம் கொண்டவர்கள் ஓரிடத்தில் வாழ்வது எப்படி பாகுபாடு ஆகும்? அடுத்தடுத்து இது போன்ற செயற்கைக் கிராமங்கள் உருவாக வேண்டும். அப்படி உருவாகும் போது சமூகம் அமைதியான சூழலில் வாழும் நிலை ஏற்படும் என்று கூறினார். இந்த திட்டம் ஆரம்பித்த உடனேயே 90 சதவீத வீடுகள் விற்றுத் தீர்ந்து விட்டன இதுவே எங்களின் திட்டத்திற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page2/89475.html#ixzz3GVeHrlS9

தமிழ் ஓவியா said...

பொதுபலசேனா -இலங்கை ஆர்.எஸ்.எஸ். - ஆர்.எஸ்.எஸ். இந்திய பொதுபலசேனா

சில நாட்களுக்கு முன்பு இலங்கையின் சிங்கள பயங்கரவாத இயக்கமான பொதுபலசேனா இந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. மேலும் கீழை நாடுகளில் உள்ள பல்வேறு பவுத்த இயக்கத்துடன் பேசி வருவதாகவும், அடுத்த ஆண்டு வைசாக் அன்று இலங்கையில் பவுத்த இந்து அமைப்புகள் இணைந்து மாநாடு ஒன்று நடத்தவிருப் பதாகவும் செய்திகள் வந்தது.இதில் முக்கியமான அமைப்பு ஒன்று தானாகவே முன்வந்து கரம் கோர்த்துள்ளது, அந்த அமைப்பு கடந்த ஆண்டு பர்மாவில் உள்ள ரெஹிங்கோ இஸ்லாமிய கலவரத்தில் மறைமுகத்தொடர்பு கொண்ட மியன்மா 969 அமைப்பு என்ற அமைப்பாகும்.தெற்காசியப்பகுதியில் சமத்துவமற்ற அமைதியற்ற சூழலை உருவாக்க பொதுபலசேனா தயாராகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈரான் பகுதிகளை இணைத்து அகண்ட பாரதம் என்ற கனவு காண்கிறேன், இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்று கூறுகிறார். அதாவது தற்போது சில பழமைவாதக் குழுக்களால் மேற்கு மற்றும் மத்திய ஆசியப்பகுதியில் அமைதி குலைந்து இருப்பது போன்ற சூழ்நிலையை தெற்காசியாவிலும் உருவாக்க முனைவது இவர்களின் பேச்சிலும் போக்கிலும் நன்றாகத்தெரிகிறது. முக்கியமாக 2009 இலங்கையில் போர் முடிந்த பிறகு பொதுபலசேனா ஒரு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அதில் இலங்கையில் உள்ள இஸ்லாமியர் மற்றும் இதர மதத் தவர் சிங்கள நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும், என நேரடியாக மிரட்டும் தொனியில் அறிக்கை ஒன்றை விட்டிருந் தது. அன்றிலிருந்தே இலங்கையில் இஸ்லாமியர் மீதான விரோதப்போக்கு மெல்ல மெல்ல அதிகரித்து 2013- அக் டோபரில் கலவரத்தில் முடிந்தது.

அதா வது இந்தியாவில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இலங்கையில் இயங்கும் பொதுபலசேன இரண்டும் சிறுபான்மை மதத்தினருக்கு ஒரு அச்சுறுத்தலை தெற்காசியப்பிராந்தியத்தில் உருவாக் குவதை விரும்புகிறதோ என்றே தோன்று கிறது. ஒரு பழமைவாத மத அமைப்பிற்கு மற்றொரு பழமைவாத மத அமைப்பு என்றுமே ஒரு தீர்வாக இருக்காது. போட்டிக்கு போட்டி என்பது சமூகத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கி பிராந்தியத்தையே அச்சத்தில் வாழும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். இதை நாம் மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுகளில் கண்டு வருகிறோம். அங்கு அளப்பரிய எண்ணெய் வளம் இருப்பதால் பிற நாடுகளின் தலையீடு இருக்கிறது. ஆனால் இங்கே அழிந்து வரும் இயற்கை வளம் மற்றும் மூடப்பழக்கங்களில் உழலும் மக்கள் அதிகம் வாழும் பிராந்தியத்தில் இப்பழமை வாதிகளின் போக்கு மிகவும் மோசமான சூழலை உருவாக்கிவிடும். பொதுபல சேனாவின் இந்த வெளிப் படையான அறிக்கைக்கு இந்துத்துவத் தலைவர்களின் சிலர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். முக்கியமாக சுப்பிர மணிய சுவாமி மற்றும் சில வட இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் இலங்கையில் இஸ்லாமியத்தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதே போல் தமிழ் நாட்டில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் பாகிஸ் தானின் உளவாளிகள் என்று பத்திரி கையில் செய்திகள் வெளியாகின. மோகன் பகவத்தின் அக்டோபர் 3-இல் பேசிய பேச்சில் தெளிவாக இரண்டு வார்த்தைகளை குறிப்பிட்டார். அதாவது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தீவிர வாதிகளின் நடமாட்டம் உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் புலிகள் இன்றும் தங்களது தீவிரவாத நடவடிக்கைகளை தொடரத் தயாராக இருக்கிறார்கள் என்று சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த செப்டம்பர் முதல் வாரம் செய்திவெளியிட்டிருந்த்து.

அதாவது இலங்கையில் பாதுகாப்பு மாநாடு நடந்து கொண்டு இருக்கும், போது இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது தீவிரவாதிகளின் நடமாட் டம் இருக்கிறது, புத்தமதத்திற்கும் இந்துத்துவாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி வைக்கப்பட்டால் ஒரு உண்மை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையில் இருக்கும் தேரவாத புத்தம் என்பது பார்ப்பனிய வகைப்பட்ட புத்தவாதம். இன ஒதுக்குதலையும், இனவெறியையும் உள்ளே வைத்து செயல்படும் பவுத்தம் உன்மையான பவுத்தமல்ல. இங்கே தாழ்த்தப்பட்ட மக்களை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கரின் பெயரைக்கூறி சில சாதி அமைப்புகள் ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சிக்கு பலியாகி இருப்பதுவும், தேசியம்-பாரதம்-இந்துப்புனிதம் என்று பேச ஆரம்பித்திருப்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும். இதில் ஒரு புறம் தமிழர்களை இந்துத்துவ மயமாக்க முற்படுவதும், மறுபுறத்தில் பவுத்த பேரினவாதத்திற்கு துணை போவதும் கவனிக்கப்படவேண்டியவை. இவ்விரண்டு பேரினவாத அமைப்பு களின் முக்கிய நோக்கம் தமிழர் அழிப்பு என்பதில் மய்யம் கொண்டு இருக்கிறது என்பதை கவனிக்கவேண்டியது இங்கே அவசியமாகிறது. அதாவது இத்தனை நாட்களாக தனித்தனியாக இயங்கிவந்த மதவாதக்குழுக்கள் ஆட்சி அதிகாரம் முழுமையாக கையில் வந்த பிறகு பிராந்தியத்தையே தங்கள் கைவசம் கொண்டுவரும் திட்டத்தில் இறங்கி விட்டது.

Read more: http://viduthalai.in/page2/89476.html#ixzz3GVePkkBC

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகும் உயிர் வாழச் செய்யுறாங்க....

போடி ஜே.கே. பட்டியில் சுந்தரபாண்டியன் என்பவர் திடீரென்று இறந்து போகவே கண்தானம் வழங்க சம்பந்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் உடனே ரகுநாகநாதனுக்கு போன் பண்ணுங்க.. எனக் கூறியது வியப்பாக இருந்தது. அவர்களிடம் கேட்ட போது.... இறந்த பின்பும் உயிர் வாழத்தான் கண் கொடை என்றனர். சிறிது நேரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்களும் வீட்டிற்கு வந்தனர். சற்று நேரத்திலே அறுவை சிகிச்சை செய்து சுந்தரபாண்டியன் கண்களை கொண்டு சென்றனர். சரி ரகுநாகநாதன் யார் என்று கேட்டபோது, போடி பி.எச். ரோட்டில் குருதி, விழி, உடல் கொடைக் கழகம் நடத்தி வருகிறார்.

இனி ரகுநாகநாதன்....

இருக்கும்போது நாம் பலருக்கு உதவியாக இருக்கின்றோம். இறந்த பின் மண்ணுக்கு உரமாவது தவிர வேறு பயன் ஒன்றும் தருவதில்லை. ஆனால், இறந்த பின்பும் நம் உடல் உறுப்புகள் உடல் வாழ்வதற்கும், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனித உடல் சம்பந்தமாக பயிற்சி பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும். இந்த நோக்கம் பிடித்துப் போனதால் குருதி விழி, உடல் கொடைக் கழகம் என்ற பெயரில் குருதி, கண், உடல் உறுப்புகள் கொடை பெற்று மற்றவர்களுக்கு உதவி செய்து வருகின்றோம். 10 பேர் கொண்ட நிர்வாகக் குழு மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு என்றார். இறந்த பின்பும் பிறர் உயிர் வாழ விழி, உடல் கொடை செய்ய ரகுநாதகநாதனை தொடர்பு கொள்ள - 98421 20321.

Read more: http://viduthalai.in/page2/89481.html#ixzz3GVf9hbPq

தமிழ் ஓவியா said...

அரசியல் கட்சிகளுக்கு புதிய கடிவாளம்


அரசியல் கட்சிகளின் நிதி, தேர்தல் செலவுகள் ஆகியவற்றை முழுமையாகக் கண்காணிக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் புதிய நெறிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின் கீழ், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. அன்று பிறப்பித்த உத்தரவின் நெறிமுறைகளில்,

* அரசியல் கட்சியின் பொருளாளர், தனது கட்சியின் வரவு, செலவுக் கணக்குகள் அடிமட்ட நிலைகளிலும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பராமரிக்கப்படும் ஆண்டுக் கணக்குகள், தகுதியுடைய கணக்குத் தணிக்கையாளர்களால் முறையாக சான்றளிக்கப்பட வேண்டும்.

* அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகையை எந்தவொரு தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ ரொக்கமாக வழங்கக்கூடாது.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் செலவுகளுக்காக வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேல் அரசியல் கட்சிகள் வழங்கக்கூடாது.

* வேட்பாளருக்கான தொகையை வங்கிக் கணக்கு மூலம் காசோலையாகவோ, வரைவோலையாவோ மட்டுமே வழங்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், கணக்கு தணிக்கையாளர் ஆய்வு செய்து சான்றொப்பம் அளித்த ஆண்டு வரவு-செலவு தொடர்பான அறிக்கைகளை, தேர்தல் ஆணையத்திடம் ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

* அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மாநிலத் தேர்தல் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
முதலான புதிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டன. இந்தப் புதிய நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Read more: http://viduthalai.in/page2/89484.html#ixzz3GVgEciHS

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏனிந்த குழப்பம்

தீபாவளியின்போது தமிழ்நாட்டில் நாராய ணனையும், மகாலட்சுமி யையும், வழிபடுவார்கள். நேபாளத்தில் லட்சுமி யையும் ராஜஸ்தானில் ராமரையும், மத்தியப் பிரதேசத்தில் குபேர னையும், வழிபடுவர் வங் காளத்தில் காளிதேவி யையும், மராட்டியத்தில் மகாபலி சக்ரவர்த்தியை யும் வழிபடுகிறார்களாம்.

கிறிஸ்துமஸ் என்றால், ரம்ஜான் என்றால் சம்பந் தப்பட்ட மதங்களைச் சார்ந்தவர்கள் ஒரே மாதிரி யான தகவல்களைத்தான் சொல்லுவார்கள்; உலகம் முழுவதும் ஒரே நிலை தான் அவர்களிடத்தில். இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஏனிந்த குழப் பம்! குழப்பம்தானே இந்து மதம் என்கிறீர்களா? அது வும் சரிதான்.

Read more: http://viduthalai.in/page1/89439.html#ixzz3GVgjGCJP

தமிழ் ஓவியா said...

வெற்றிக்கு ஒரே ஒரு பாதை அல்ல; பல உண்டு

நாம் அனைவரும் அன்றாடம் நமது நலம் விரும்பிகளான பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், குடும்ப ஆலோசகர்கள் என்ற பலரும் கடுமையாக உழைத்தால், பொறுப்பான வகையில் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டால், எதையும் உரிய நேரத்தில் செய்தால் வெற்றி நம் வீட்டுக் கதவைத் தட்டும் என்று கூறுவர்.

கேட்டுப் பழகிய காதுகள் நம் முடையவை; இதனை ஏற்று, அதனைப் பின்பற்றி நாளும் சோர் வறியாமல் உழைத்து வெற்றிக் கனியைப் பறிக்கின்றவர்கள் பல ருண்டு, உண்மைதான்.

ஆனால், இந்த மாதிரி ஒரே வழியைப் பின்பற்றாமல் - பல்வேறு சூழ்நிலைகளாலும் - நெருக்கடி - நிர்ப்பந்தங்களாலும் வழமையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்ற வாய்ப்பில்லாதவர்களிலும் பலர் வெற்றிப் படிக்கட்டுகளின் மீதே ஏறி நின்று, மற்றவர்களுக்குத் தாங்களும் கூட எடுத்துக்காட்டானவர்கள் - ரோல் மாடல்கள் தான் என்று காட்டுபவர்களும் உண்டு என்பதை நாம் மறந்திடக் கூடாது.

பள்ளிக்கூடம், கல்லூரிப் படிப்புகளை முழுமையாக முடிக்காமல், பெரிய பெரிய ஆய்வுப் பட்டங்களான முனைவர், அதற்கு மேல் உள்ள பட்டங்களைப் பெறாதவர்கள் உலகில் மிகப் பெரிய குறிப்பிடத்தக்க சாதனையாளர்களாக நம் காலத்திலேயே திகழ்கிறார்களே, அவர்கள் பெற்றது பெரு வெற்றி அல் லாமல் வேறு என்ன?

கணினித் துறையில் மிகப் பெரிய சாதனையாளராக உயர்ந்து நிற்கும் மைக்ரோசாஃப்ட் (“Microsoft’’) நிறுவனர் பில்கேட்ஸ் இடையில் கல்லூரிப் படிப்பை நிறுத்திய ஒரு(Dropout) தானே!

அவர் எத்தனைப் பெரிய பில்லியனர்! அவரும் அவரது வாழ்விணையர் மிலிண்டா பில்கேட்ஸ் தங்களது சொத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளையாக்கி, அந்தப் பொருளை, உலகின் கொடிய நோயான எய்ட்ஸ் (Aids நோயை ஒழிக்க மிகப் பெரிய அளவில் ஓர் இயக்கத் தினையே நடத்துவதன் மூலம்; உலகின் தொண்டறச் செம்மல்களாக உயர்ந் துள்ளனர்!

அதுபோலவே, அதிகம் படிக்காத, கடவுள் நம்பிக்கை அற்ற ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவன - உரிமையாளர் ஸ்டீவ்ஜாப்ஸ் என்ன Ph.D. பட்டமா வாங்கியவர்?அவர் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் வேலைக்கு மனு போட்டால் அவரை நமது கல்வி அமைப்புகள் விரிவுரையாளர் பதவிக்குக்கூட தேர்வு செய்ய மாட்டாவே! இதுதான் இன்றைய படிப்பறிவுக்கும், பட்டறிவு - சுதந்தரச் சிந்தனைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளி!

ஆப்பிள் - 6, ஆப்பிள் 6 - பிளஸ், என்ற அண்மையில் வெளியான புது வகைக் கைப்பேசிகள் செல்போன் களுக்கு உலக சந்தையில்தான் எவ்வளவு கிராக்கி! காத்துக்கிடந்து போட்டி போட் டுக் கொண்டு அதனை விலை கொடுத்து வாங்குவதில் நான் முந்தி, நீ முந்தி என்ற போட்டி - அதுவும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சியில் முந்தியுள்ள நாட்டினரும்கூட! இந்த வெற்றியின் ரகசியம் எதில் உள்ளது?

புரட்சிக் கவிஞர் சொன்ன இரு வரிகளில் உள்ளது என்பது நமது எளிய கருத்து.

அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு உலகை!

ஒவ்வொரு முறை மாற்றம், புதுமைக்குமேல் புதுமை செய்திட்ட நிலை - கவிஞரின் வரிகளுக்கு சான்று அல்லவா?

எனவே தேர்வில் அதிக மதிப் பெண் பெறவில்லை அல்லது முதல் முயற்சியிலேயே வெற்றிகிட்டிட வில்லை என்று மனமுடைந்து விரக்தியில் தற்கொலை முயற்சி அல்லது உலகமே இருண்டு விட்டது போன்ற கற்பனையின் உச்சி, விரக்தியின் விளிம்புக்குச் சென்று, வெறுப்பினால் மன உளைச்சல் எதுவும் கொள்ளாமல் வெற்றிக்கான இந்தக் கதவு மூடினால், இன்னொரு திறக்கப்படும் கதவைக் கண்டு வாழ்வினை வெளிச்சம் உள்ளதாக ஆக்கி, விரக்தி இருட்டை விரட்டி அடித்து, வெள்ளி முளைப்பதைக் கண்டு, வீறு நடை போடுவோம் என்று எழுந்து நடவுங்கள் - துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை அள்ளி அணையுங்கள்!



- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page1/89429.html#ixzz3GVgtoi7F

தமிழ் ஓவியா said...

சுக வாழ்வில் இல்லை

ஒரு நாட்டின் பொது வாழ்வும், ஒற்று மையும் அந்நாட்டின் ஒவ்வொரு வகுப்பின் முன்னேற்றத்திலும், திருப்தி யிலும் தான் இருக்கிறதே ஒழிய, ஏதோ ஒரு வகுப்பின் மேம்பட்ட சுக வாழ்வில் இல்லை.
(விடுதலை, 8.9.1950)

Read more: http://viduthalai.in/page1/89427.html#ixzz3GVh8sHL1

தமிழ் ஓவியா said...

ஜோதிடமும் - அறிவியலும்


சஞ்சலமான மனதின் வெளிப்பாடாகவே ஜோதிடம் போன்ற புனைவுகளும் பொது வாக அமைவதைக் காணலாம். ஆகவே, இத்தகைய கருத்துக்கள் நமது மனதில் இடம்பிடிக்கத் துவங்கியதும் உடனடியாக தாமதியாது ஒரு மருத்துவரின் உதவியை நாடுவதோடு நல்ல உணவும் ஓய்வும் அவசியம்.

- விவேகானந்தர்

Read more: http://viduthalai.in/page1/89464.html#ixzz3GViQLMZc

தமிழ் ஓவியா said...

கடவுளும் மின்சாரமும்!


கேள்வி: Can you live without god? (கடவுள் இல்லாமல் உங்களால் வாழ முடியுமா?)

பதில்: Yes. I can live without god, but I cannot live without electricity (கடவுள் இல்லாமல் நான் வாழ முடியும். ஆனால், மின்சாரம் இல்லாமல் நான் வாழ முடியாது) (சிரிப்பு).

அமெரிக்காவில் ஒருநாள் திடீரென மின்தடையை ஏற்படுத்தினார்கள். அமெரிக்கா முழுவதும் மக்கள் சில நிமிடங்கள் அவதிப்பட்ட பின்னர். மீண்டும் மின் ஓட்டத்தை இயக்கி விட்டு, வானொலியில் அறிவித்தார்கள்.

சில நிமிடங்கள் மின்சாரம் இல்லாவிடில் எவ்வளவு அவஸ்தை? இப்போது புரிகிறதா மின்சாரத்தைக் கண்டுபிடித்த ஆல்வா எடிசனின் பெருமை?

(மதுரை பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி பகுத்தறிவுச் சிந்தனை கலந்துரையாடலில் கழகப் பொதுச் செயலாளர் கூறியது) 15.3.1980

Read more: http://viduthalai.in/page1/89465.html#ixzz3GVik5CE5

தமிழ் ஓவியா said...

மதத்திற்கு எதிராக..

தன்னுடைய அடிமைத் தனத்தை உணருகின்ற, தன்னை விடுதலை செய்து கொள்வதற்காகப் போராட கிளர்ந் தெழுகின்ற ஓர் அடிமை, தன்னுடைய அடிமை நிலையில் பாதியை ஒழித்து விடுகின்றான்.

தொழிற்சாலை அமைப் பினாலும், பெருமளவு உற்பத்தி செய்யும் நவீன தொழில்மூலமும், நவீன நகர வாழ்க்கையிலும் வளர்ந்து வரும் வர்க்க உணர்வுள்ள தொழிலாளி ஒரு நவீன மதத்துவேச எண்ணங்களை அருவருத்து ஒதுக்கித் தள்ளுகிறான். சொர்க்கலோக நம்பிக்கையைப் பாதிரிமார்களும் பூர்ஷ்வா பிற்போக்காளர்களும் வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான்.

இந்த உலகில் இன்றே இக்கணமே தனக்காக ஒரு நல்வாழ்வை அடைய முன்வருகிறான். நவீன பாட்டாளி வர்க்கம் சோஷலிஸத்தின் பக்கமே நிற்கிறது.

மதம் என்ற பனித்திரையை எதிர்த்த போராட்டத்திற்கு விஞ்ஞானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. தொழிலாளர்களை மறு உலக நம்பிக்கையிலிருந்து விடுவித்து, ஒன்றுபடுத்தி இவ்வுலகில் இன்றே ஒரு நல்வாழ்வை அடையப் போராடுகிறது.

- லெனின்

Read more: http://viduthalai.in/page1/89465.html#ixzz3GVitM4QG