Search This Blog

6.10.14

முதுகுளத்தூர் கலவரம் நடந்தபோது பெரியாரின் நிலைப்பாடு என்ன?


எம்.ஜி.ஆரின் கண்ணீர்!
விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள்
வாசகர் கேள்விகள்
கணேசன், மதுரை.


''முதுகுளத்தூர் கலவரம் நடந்தபோது பெரியாரின் நிலைப்பாடு என்ன?''  


'' 'தாழ்த்தப்பட்ட சமுதா­­யத்தவரின் கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் காமராஜர் தயங்கக் கூடாது; அப்படி நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு முழு ஆதரவை அளிப்போம்!’ என்று வெளிப்படையாகப் பேசி, அறிக்கை விட்டவர் தந்தை பெரியார். அதன் பின்னரே முத்துராமலிங்கத் தேவர் போன்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள்!''

உதய்மூர்த்தி, திருப்பூர்.


''எம்.ஜி.ஆருக்கும் பெரியாருக்கும் இடையிலான நெருக்கம், பிரியம் பற்றி சொல்லுங்கள்?''


''தி.மு.க-வைவிட்டுப் பிரிந்துசெல்லும் நிலையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது, அந்தப் பிளவைத் தடுக்க தந்தை பெரியார் முயற்சி செய்ய வேண்டும் என்று (மறைந்த) தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்ற பலர் கேட்டுக்கொண்டார்கள். தந்தை பெரியாரும் அதற்கு இசைந்தார். 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் ஒருநாள் இரவு 11 மணி அளவில், தந்தை பெரியார், எம்.ஜி.ஆரிடம் தொடர்புகொண்டு (பக்கத்தில் தொலைபேசி இருக்கும்) என்னைப் பேசச் சொன்னார்... 'அய்யாவே வந்து உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று சொன்னேன்.


அதற்கு எம்.ஜி.ஆர் பதறிப்போய், 'அய்யா என்னை வந்து சந்திப்பதா? கூடாது. நாளை காலை அய்யா இருக்கும் பெரியார் திடலுக்கே வந்து நேரில் சந்திக்கிறேன். அய்யாவிடம் கூறிவிடுங்கள்’ என்றார்.


அதேபோல அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு, திரையிட்ட ஒரு வேனில் பெரியார் திடலுக்கு வந்து தந்தை பெரியாரைச் சந்தித்துப் பேசினார் எம்.ஜி.ஆர்.
'ஒரு தந்தை நிலையில் இருந்து சொல்கிறேன். நீங்கள் பிரிந்து போகக் கூடாது; அப்படி என்னதான் உங்களுக்குக் குறை?’ என்று கேட்டார்கள். விவரமாகச் சில செய்திகளைச் சொல்லி அவருடைய மன வருத்தங்களைக் கூறினார். (அவர்கள் இருவரும் சந்தித்தபோது நான் வெளியேறிட முயன்றேன்; தந்தை பெரியார், 'இல்லை நீங்களும் இருக்கலாம்’ என்று சொன்னதால், நான் உடன் இருந்தேன்.) 'கட்சியின் பொருளாளரான நீங்கள், கட்சியின் வரவுசெலவு குறித்து பொதுக்கூட்டத்தில் பேசியது முறை அல்லவே’ என்று கேட்டார்.
எம்.ஜி.ஆர் அதற்கு ஏதேதோ சமாதானங்கள் சொன்னார். இறுதியில் கண்ணீர்விட்டார். 'உங்களுக்குத் தெரியாமல் எந்த முடிவும் எடுக்க மாட்டேன்’ என்று கூறி எம்.ஜி.ஆர் விடைபெற்றார்.


அவர் சென்ற பிறகு, தந்தை பெரியார் அருகில் இருந்த எங்களிடம், 'அவர் வேறு எங்கேயோ கால் வைத்துவிட்டார். அநேகமாக அவர் முடிவில் மாற்றம் இருக்காது’ என்று கூறினார். அதேபோல் மறுநாளே தனிக் கட்சி பற்றி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.!



அதற்குச் சில மாதங்கள் கழித்து, தமிழகச் சட்டமன்றச் செயலாளரும் மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான (காலஞ்சென்ற) சி.டி.நடராசன் அவர்களின் மகன் திருமணத்துக்கும், அன்று மாலை இசையரசு எம்.எம்.தண்டபானி தேசிகர் இசைக் கச்சேரி நடந்ததற்கும் தந்தை பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு வந்து மணமக்களை வாழ்த்திய எம்.ஜி.ஆர், தந்தை பெரியார் அருகில் வந்து வணக்கம் செலுத்திவிட்டு, இரண்டு நாற்காலி தள்ளி அமர்ந்தார்.

சிறிது நேரம் அமர்ந்து கச்சேரி கேட்டுவிட்டு, பிறகு என் அருகில் வந்து காதோடு காது வைத்து சிறிது நேரம் பேசினார். இதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்; தந்தை பெரியாரும் பார்த்தார். பிறகு நாங்கள் வேனில் திரும்பும்போது... தந்தை பெரியார், 'ஏம்பா எம்.ஜி.ஆர் உங்களிடம் ஏதோ பெரிய ரகசியம் சொன்னாரே...’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
'ஆமாம் அய்யா, அதை நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நீங்களே  கேட்டுவிட்டீர்கள். எம்.ஜி.ஆர் என்னிடம்... 'அய்யாவிடம் சொல்லுங்கள். நான் வேறு கட்சி ஆரம்பித்தாலும்கூட, என்றும் அய்யாவின் ஆள்தான்; அய்யாவின் கொள்கைக்கு விரோதமாக ஒருபோதும் நடந்துகொள்ள மாட்டேன்!’ என்று சொன்னார்’ எனக் கூறினேன்.


தந்தை பெரியார் எந்தப் பதிலும் கூறாமல் வாய்விட்டுச் சிரித்தார்கள்!
தந்தை பெரியாரின் 95-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது (செப்டம்பர் 17, 1973), அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர், தன் கட்சியின் முக்கியமான தோழர்களுடன்  பெரியார் திடலுக்கு வந்து, பெரியாருக்கு மாலை அணிவித்து வாழ்த்துக் கூறி, ஒரு கவரில் 5,000 ரூபாய் வைத்துக் கொடுத்தார்கள். சிறிதுநேரம் நலம் விசாரித்ததோடு, அடுத்த பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெரியாரும் சிரித்துக்கொண்டே அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, 'உங்கள் அன்பு அபரிமிதமானது’ என்று கூறினார். பின்னர்  எம்.ஜி.ஆர் விடைபெற்றுச் சென்றார்!''


கே.பாலமுருகன், அனுப்பனாடி.

 '' 'பெரியார் ஒரு கன்னடர். திராவிடர் இயக்கம் தமிழர்களை அழுத்தி, தமிழர் அல்லாதோரின் ஆதிக்கத்துக்காக உருவானது’ என்று சில தமிழ்த் தேசியவாதிகள் விமர்சனங்களை முன்வைக்கிறார்களே..?''

''இவை சிலரின் அர்த்தமற்ற வாதங்கள். திராவிடர் இயக்கம் இல்லாவிட்டால், தமிழ் மொழி உணர்வு, தமிழன் என்கிற இன உணர்வு, தமிழரின் மறுமலர்ச்சி, வந்திருக்காதே!

தந்தை பெரியார், பிறப்பால் கன்னடர்தான்; ஆனால், அவர் யாருக்காக இறுதிமூச்சு வரை பாடுபட்டார் என்பதுதானே முக்கியம். பெரியார் கூறும் தேசியம் தமிழர்களுக்கானது. தமிழ்த் தேசியவாதிகளின் தேசியம்... பார்ப்பனர்களைப் பாதுகாப்பது; சாதி உணர்வைக் காப்பாற்றுவது என்பன புரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள்!''

ஆர்.பாரதி கிருஷ்ணன், விருதுநகர்.

''எழுத்தாளர் ஜெயகாந்தனும் நீங்களும் பால்ய வயதுத் தோழர்கள். உங்கள் நட்பின் பிரியமான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''கொள்கைகளில் மாறுபடும் நாங்கள், நட்பால் என்றும் பிணைக்கப்பட்டவர்கள். சிறுவயது முதலே ஒரே ஊர், ஒரே தெருவில் வாழ்ந்த 'அகநகும் நட்புள்ள’ நண்பர்கள் நாங்கள். அப்போது அவர் முருகேசன்; நான் சாரங்கபாணி. அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நெருக்கம் பாராட்டியவை. அவரது அத்தை, என் திண்ணைப் பள்ளி ஆசிரியர். சில நாட்களுக்கு முன்புகூட தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்தோம்; தொடர்வோம்!''




கே.ராஜீவ்காந்தி, கோவை.

''கருணாநிதியை நீங்கள் ஆதரிப்பது உங்கள் உரிமை. அதற்காக அவரை முழுக்க முழுக்க ஆதரித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?''

''எனது உரிமை என்று ஒப்புக்கொண்டுவிட்ட பிறகு, இந்தக் கேள்வியை நீங்கள் எழுப்புவது நியாயமா? முழுக்கவா அல்லது பாதியா என்பதை, நாங்கள்தானே தீர்மானிக்க வேண்டும். கலைஞர் மீது ஏனோ உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு. கொள்கைக்குச் சோதனை ஏற்பட்டால், நாங்கள் நிலைப்பாட்டை மாற்றுவோம்; மாற்றியும் இருக்கிறோம். அதனால் அதைப் பற்றிய வீண் கவலை உங்களுக்கு வேண்டாமே!''

நீதிமணி, நீடாமங்கலம்.

''வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராகப் போராடிய பெரியார், தமிழகத்தில் இரட்டைக் குவளை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக ஏன் போராடவில்லை?''

''நீடாமங்கலம் நண்பரே... உங்கள் ஊரில் 1938-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதி திராவிடத் தோழர்கள் பந்தியில் (தேவசகாயம், ஆறுமுகம், ரெத்தினம்) அமர்ந்து உண்டதற்காக, அந்தக் கால காங்கிரஸ் நண்பர்கள், அவர்களுக்கு மொட்டையடித்து ஊர்வலம்விட்டார்கள். அந்தக் கொடுமைக்கு எதிராக வழக்கு நடத்திப் பாதுகாத்தவர் தந்தை பெரியார். இரட்டைக் குவளைக்கு அடிப்படை.. சாதி! அதை எதிர்த்து தன் 95-ம் வயதிலும்கூட, அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற சாதி தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டவர் தந்தை பெரியார். சாதி வேரைச் சிதைக்காமல் தீண்டாமை ஒழிப்பு என்பது நிழலோடு சண்டைபோடுவது என்பதைப் புரிந்துவைத்திருந்தவர் தந்தை பெரியார்!''


கலியமூர்த்தி, புதுவயல்.

''தீவிர ஆன்மிகவாதியான  ரஜினிகாந்துடன் உங்கள் பழக்கம் எப்படி?''

''ரஜினி அவர்களிடம் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை. அவரது மகள் திருமண அழைப்பிதழைக் கொடுக்க பெரியார் திடலுக்கு வந்திருந்தபோது பேசியதுதான். அப்போது தந்தை பெரியார் பற்றிய பல்வேறு செய்திகளை நேரில் கேட்டு மகிழ்ந்தார். 'ஒவ்வொரு போராட்டத்துக்கும் எவ்வளவு உழைச்சிருக்கார். கிரேட் மேன்!’ என்று பெரியாரின் ஒவ்வொரு செயலையும் அறிந்து ஆச்சர்யப்பட்டார்!''

ராஜேந்திரன், திருத்துறைப்பூண்டி.


''உங்களோடு கொள்கை ரீதியில் நெருக்கமானவர் நடிகர் கமல்ஹாசன். அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் குறித்து சொல்லுங்களேன்?''


''கமல் 'தசாவதாரம்’ படம் பார்க்க அழைத்தார். பார்த்து கருத்து சொன்னேன். அவர் தயாரித்த 'விஸ்வரூபம்’ படத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டபோது, 'ஒருவேளை தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லை என்று தெரிந்தால், மதச்சார்பற்ற மாநிலம் நோக்கி இடம் மாறுவேன். மதச்சார்பற்ற மாநிலம் கிடைக்கவில்லையென்றால் மதச்சார்பற்ற நாட்டில் குடியேறுவேன். வீழ்ந்தாலும் விதையாக வீழ்வேன். விதை மரம் ஆகும்!’ என்று குறிப்பிட்ட அந்தக் கொள்கை, உறுதி ஆகியவை நாங்கள் தூரத்தில் இருந்தாலும் எங்களை இணைக்கின்றன.


'ஒரு காலத்தில் விடியற்காலையில் குளிச்சிட்டு ஈரத்துணியோடு, பூஜையை முடிச்சுட்டு வீட்ல இருக்கிறவங்களுக்கு, தீர்த்தம் கொடுத்திருக்கேன். அப்படி இருந்தவனை பெரியாரின் அறிவுபூர்வமான வரிகள் புரட்டிப் போட்டுடுச்சு’ என்று கமல் ஹாசன் சொன்னது அவரை எங்களோடு மேலும் இணைத்தது. மற்ற நடிகர்களைப் போல ரசிகர் மன்றம் அமைக்காமல், நற்பணி மன்றமாக உருவாக்கி, மனிதநேயத் தொண்டர் பணிகளில் அதை ஈடுபட வைப்பது, ஒரு பகுத்தறிவாதி தலைசிறந்த மனிதநேயவாதியாக இருப்பார் என்பதற்கான சாட்சியம் ஆகும்!''

                                              ----------------- பகுத்தறிவோம்...ஆனந்த விகடன் 17 Sep, 2014-

''உங்கள் பார்வையில் சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா, இப்போதும் சமூக நீதியைக் காக்கிறாரா?''

  ''அடுத்த நூற்றாண்டில் தந்தை பெரியார் எவ்வாறு நினைவுகூரப்படுவார்?''

''விநாயகர் சதுர்த்திக்கு மு.க. ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து கூறப்பட்டு, பின்னர் தி.மு.க-வின் தலைமைக் கழக அறிக்கை அதை மறுப்பதுபோல சமாளித்திருக்கிறதே... அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''

                                                                                                                    -- அடுத்த  வாரம்-



"ஸ்டாலினுக்குத் தெரியாமல் நடந்திருந்தாலும் தவறு தவறுதான்!”
விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள்
வாசகர் கேள்விகள்
எஸ்.ஆர்.ராஜேந்திரன், மின்னஞ்சல் வழியே...

''உங்கள் பார்வையில் சமூகநீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா, இப்போதும் சமூக நீதியைக் காக்கிறாரா?''


''69 சதவிகித இடஒதுக்கீட்டைக் காக்கவே செய்கிறார். சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான பணி நியமனங்களில் சமூகநீதிக்குக் குந்தகம் ஏற்படுகிறது என்று சுட்டிக் காட்டியதும், உடனே திருத்திக் கொண்டாரே!
சமூகநீதி என்பதை இடஒதுக்கீடு என்ற பொருளில் மட்டுமே சிந்தித்தால்தான் இது புரியும்.  ஆசிரியர்களின் பணி நியமனங்களில் அவரின் நிலைப்பாட்டைக் கண்டித்து மாநாடும் போராட்டமும் நடத்தியவர்கள் நாங்கள். மக்கள்நலப் பணியாளர், சாலைப் பணியாளர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என வற்புறுத்தவும் நாங்கள் தவறவில்லையே!''


ராஜன், மேட்டூர்.


''தி.க நடத்திய சுயமரியாதைத் திருமணங்களில் நடந்த குதூகலக் களேபரங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?''


''எதைச் சொல்வது... எதை விடுவது? ஏகப்பட்ட சம்பவங்கள் இருக்கின்றனவே!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் ராஜகிரி என்ற ஊரில் தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம். மணமகளின் தந்தை, கழகத் தோழர். ராஜகிரிக்குச் சென்று அந்தத் திருமணத்தை நடத்திவைக்க அய்யா ஆயத்தமான நிலையில், ஒரு செய்தி வந்தது...


'மணமகள் சட்டப்படி திருமண வயதை எட்டுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், அதை எதிர்த்து காவல் துறையில் புகார் கொடுத்து, திருமணத்தையே கடைசி நேரத்தில் நிறுத்தி, அந்தக் கழகப் பிரமுகருக்கு அவமானம் உண்டாக்கிட ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்’ என்பதுதான் அந்தச் செய்தி.


பெண்ணின் தந்தையை அழைத்துக் கேட்டபோது, 'என் கவனக்குறைவால் இது நடந்துவிட்டது. இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் நடந்து, ஊரார், உறவினர்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் கூடிய நிலையில், திருமணம் நின்றுவிட்டால் தனக்கு மிகப் பெரிய அவமானம். என்றாலும் அய்யாவுக்கு இழுக்கு வர நான் சம்மதிக்க மாட்டேன். திருமணத்தை நிறுத்தவும் தயாராக இருக்கிறேன்’ என்றார்.


'இதைச் சரியாகக் கவனித்திருக்க வேண்டாமா?’ என்று கடிந்துகொண்ட தந்தை பெரியார் சற்று யோசித்த பிறகு, 'நான் ஓர் ஏற்பாடு செய்கிறேன். அதன்படி செய்துவிடுங்கள். 'இது திருமணம் அல்ல; திருமணம் நடப்பதற்கான ஓர் ஒப்பந்தம் மட்டுமே இரு வீட்டாருக்கும் இடையே நடக்கிறது’ என்று அறிவித்து மாலையை மணமகனும் மணமகளும் மாற்றிக்கொள்ளட்டும்; என் தலைமையிலேயே அது நடக்கட்டும். வழக்கம்போல நானும் உரையாற்றி முடிக்கிறேன்’ எனக் கூறி, பிரச்னைக்குத் தீர்வைக் கண்டார். பெரியார் கூறியபடி, ஆறு மாதங்கள் கழித்து எளிய முறையில் திருமணம் நடந்தது.
மற்றொரு சம்பவம்... அப்போதைய திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவரின் மகன், வேறு சாதிப் பெண்ணைக் காதலித்தார். அந்த இருவரும் தந்தை பெரியாரை அவரது சுற்றுப்பயணத்தில் சந்தித்து, 'மணமகள் வீட்டில் திருமணத்துக்குச் சம்மதம் தரத் தயங்குகின்றனர்’ என்று கூறினார்கள். அந்தக் காலத்தில், தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட புதுச்சேரி லகாஷ் - நம்பிக்கைமேரி இல்லத்துக்கு அவர்களை, அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாருடன் பத்திரமாக அனுப்பி ஒரு நாள் தங்கவைத்து, விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு அவர்களை வரவழைத்து, மேடையில் திருமணத்தை நடத்திவைத்தார் தந்தை பெரியார். பிறகு அவர்களை அய்யாவே அவரது வேனில் திருச்சிக்கு அழைத்துச் சென்று, அவர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டார்!


இப்படி பல 'யாயும் ஞாயும் யாரா கியரோ’ காதலர்களின் சுயமரியாதைத் திருமணங்களை பொதுக்கூட்ட மேடையிலேயே நடத்திய பல நிகழ்வுகள் உண்டு. அவர்கள் பேரன், பேத்திகளோடு இன்றும் வாழ்கிறார்கள்!




ஆர்.வெங்கட்ராமன் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தபோது, காவிரி ஒப்பந்தத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராகக் கூறிய ஒரு கருத்தைக் கண்டித்து, மாபெரும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என் தலைமையில் சென்னை மீனம்பாக்கம் அருகில் நடந்தது. சுமார் 600 தோழர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். அனைவரையும் கைதுசெய்து, ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தது செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை. அப்போது எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

எங்களுடன் தோழர் இறையனார், அவரது துணைவியார், மகன் ஆகியோர் கைதானோர் பட்டியலில் இருந்தனர். நாங்கள் கைதாகி இருந்த திருமண மண்டபத்தில் கருத்தரங்கம், இசையரங்கம் போன்றவற்றை நடத்திக்கொண்டிருந்தபோது, கைதானோர் பெயர், முகவரிகளைக் கேட்டு எழுதியவாறு இருந்தனர் காவல் துறையினர்.
தனது மகன் இசையின்பன் திருமணத்துக்கு, என்னிடம் தேதி கேட்டுக்கொண்டிருந்த இறையனாரிடம் ஓர் உபாயம் சொன்னேன். 'இங்கேயே எளிமையாக, எந்தச் செலவும் இல்லாமல் உங்கள் மகனுக்கு சுயமரியாதைத் திருமணத்தை நடத்திவிடலாம்; அனைவருக்கும் திருமண விருந்தாக அரசே மதிய உணவும் தருவார்கள்’ என்று நான் சொன்னவுடன், அவர்களும் மகிழ்ச்சியுடன் இசைவுதந்தனர். இறையனார் வீட்டில் தங்கியிருந்த மணப்பெண்ணை உடனடியாக திருமண மண்டபத்துக்கு அழைத்துவந்து, என் தலைமையில் மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்தது. சிறை வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் மதிய உணவை காவல் துறையினர் தந்தனர். மாலை 6 மணிக்கு நாங்கள் அனைவரும் விடுதலை ஆனோம். மணமக்கள் அவர்களது வீட்டுக்குச் சென்றனர்!


இவ்வளவு ஏன்... தந்தை பெரியார் தலைமையில் நடந்த என் சுயமரியாதைத் திருமணத்திலேயே பல வேடிக்கை நிகழ்வுகள் அரங்கேறின. திருச்சியில் 1958-ல் என் திருமணம். பெரியார் வாழ்த்திப் பேசும்போது, 'இந்தத் திருமணம் தாராளமாகவும் மனம் நிறைவாகவும் நடந்தது’ என்று குறிப்பிட்டார். பிறகு பேசிய நடிகவேள் எம்.ஆர்.ராதா, 'பெரியார் பேசும்போது, 'இந்தத் திருமணம் தாராளமாக நடந்துள்ளது’ என்றார். 'தாராளம்’ என்று அவர் சொல்வது செலவு விஷயத்தில் அல்ல. முன்பெல்லாம் சுயமரியாதைத் திருமணம் செய்வதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கும். பெண்களை ஒளித்துவைத்து, கடைசி நேரத்தில்தான் மணமேடைக்குக் கொண்டுவந்து மாலை மாற்றவைப்பர். ஆனால் இன்றோ, பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள ஒரு மாநாடுபோல திருமணம் நடக்கிறது. அதைத்தான் சிக்கனக்காரரான நம் அய்யா தாராளம் என்று குறிப்பிடுகிறார்’ என்றதும் பலத்த கைத்தட்டல்!''


சங்கீதா, பெரியபாளையம்.

''எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடுகள் பற்றி சொல்லுங்களேன்?''

''அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பெரியார் திடலுக்கு அழைத்து ஒருமுறை அவருக்கு 'பெரியார் விருது’ அளித்தோம். சிறந்த நடிகரான அவர், சிறந்த எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட கிடைத்த அரிய வாய்ப்பை, மேலும் சிறப்பாகப் பயன்படுத்தத் தவறிவிட்டாரே என்ற ஆதங்கம் எனக்கு உண்டு!''


மகேஷ், பொள்ளாச்சி.


''சத்யராஜ், தன் பங்குக்கு நாத்திகக் கருத்துக்களைப் பரப்பினார். அதற்கு அவரது சினிமா புகழும் உதவியது. அதுபோல் தற்போதைய சினிமா நடிகர்களில் பிரபலமானவர்களைக் கொண்டு தி.க-வின் கொள்கைகளைப் பரப்ப முயற்சி எடுக்கலாமே?''


''நாத்திக நன்னெறியாளர் சத்யராஜ் அவராகவே பெரியார் கொள்கைகளைப் படித்து, சிந்தித்து உருவாகியுள்ளார். அதுபோல் தானே யாராவது முன்வந்து உருவானால்தான் உண்டு. இது ஒரு கசப்பு மருந்து; எதிர்நீச்சல் போடத் துணிவு உள்ளவர்கள்தான் உருவாக முடியும்.


நாங்கள் சமூகப் புரட்சிக்காக ஓடியாடிப் பாடுபடுபவர்கள். ஆதலால், பிரபலமானவர்களைத் தேடவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மேலும், எங்கள் கொள்கைகள் வியாபாரச் சரக்கு அல்ல. வருபவர்கள் கொள்கைத்தெளிவுடன் வந்தால், பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு எந்த மறுப்பும் இருக்காது!''


நடராஜன், சென்னை.


'' 'பெரியார்’ படத்தில் மணியம்மையாக குஷ்பு நடித்த சமயம் நிலவிய, கொந்தளிப்பான மனநிலையை எப்படிச் சமாளித்தீர்கள்?''


''மணியம்மை கதாபாத்திரத்துக்கு குஷ்புதான் பொருத்தமானவர் என்ற முடிவை நாங்கள் எடுத்துவிட்ட பிறகு, சிலரின் விமர்சனத்தால் அப்படி ஒரு மனநிலை உருவானதாக ஊடகங்கள் சித்திரித்தன; அவ்வளவுதான்.
நடிகை குஷ்பு, துணிவும் தெளிவும் உள்ளவர். அந்த நாளில் அவருக்குக் கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்து முடித்தார். படத்தின் 100-வது நாள் விழாவில் கலைஞர் உட்பட பலரின் பாராட்டுகளையும் பெற்றார்!''


டேவிட் பால், தோவாளை.

'' 'சாமி, பூதம் இல்லை’ என்கிறீர்கள். ஆனால், பேய் அடித்துப் பலர் சாகிறார்கள்; சாமி வந்து சிலர் ஆடுகிறார்கள். அப்போதும் நீங்கள் நம்ப மாட்டீர்களா?''


''எந்தப் பேய் அடித்துச் சாகிறார்கள் நண்பரே? பணப் பேயா, பயப் பேயா, பதவிப் பேயா, பக்திப் பேயா? அதை முதலில் சொல்லுங்கள்.


சாமி வந்து ஆடுகிறவர்களை ஒரு குண்டூசியால் சுருக்கெனக் குத்துங்கள். அப்போது தெரியும் சாமிக்கு வலிக்கிறதா... இல்லையா என்று. அது சரி, பெரும்பாலும் பெண்கள் மீதே சாமி வருகிறதே... ஏன்? அதுவும் படிக்காத அப்பாவிப் பெண்கள் மீது மட்டுமே சாமி தொற்றிக்கொள்வது ஏன்? 'படிக்காத ஆண்கள் சிலரிடம்கூட வருகிறதே’ என்று நீங்கள் சப்பைக்கட்டுக் கட்டினால், படித்து பதவியில் இருப்போர் மீது ஏன் சாமி வருவது இல்லை? எங்கேயாவது கலெக்டர் மீது சாமி வந்து, பக்கத்தில் நின்றிருந்த தாசில்தார் அவரைப் பிடித்துக்கொண்டதாகவோ, டாக்டர் மீது சாமி வந்து, நர்ஸ் அவரைப் பிடித்துக்கொண்டதாகவோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


அதுவும்போக, மற்ற மதங்களில் மட்டும் சாமிகள் கீழிறங்கி பிறகு மலை ஏறுவதில்லையே... ஏன்? இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா நண்பரே?!''


சண்முக சுந்தரம், சென்னை.


''மு.க.ஸ்டாலினின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறப்பட்டு, பின்னர் தி.மு.க-வின் தலைமைக் கழக அறிக்கை அதை மறுப்பதுபோல சமாளித்திருக்கிறதே... அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?''


''தி.மு.க-வின் பொருளாளர் மானமிகு மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்ததாக எனது கவனத்துக்கும் வந்தது; அதே நேரத்தில் உடனடியாக தி.மு.க தலைமைக் கழகத்தின் சார்பில், 'அந்த வாழ்த்து அவரது இசைவின்றி வெளியிடப்பட்ட ஒன்று’ என்று தெளிவுபடுத்திய மறுப்புச் செய்தியும் 'முரசொலி’யில் வந்தது. 'விடுதலை’ நாளேட்டுக்கும் அந்த மறுப்பு வந்தபோது, அதை வெளியிட்டதோடு, அதன் கீழ் 'குறிப்பு’ எனக் கீழ்க்காணும் கருத்தையும் வெளியிட்டு இருந்தோம்.
'தி.மு.க பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், கொள்கை தெரியாதவர்களை அம்மாதிரியான பொறுப்பில் அமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் - ஆசிரியர்’ - இது 1.9.2014 தேதியிட்ட சென்னைப் பதிப்பு 'விடுதலை’ நாளேட்டின் 8-ம் பக்கத்தில் வெளிவந்தது.


எனவே, 'தி.மு.க தலைமை இந்தப் பிரச்னையைச் சமாளித்திருக்கிறது’ என்று கூற முடியாது. ஸ்டாலின் அறியாமல் நடந்த தவறு அது. அப்படியே நடந்திருந்தாலும் தவறு தவறுதான் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. கொள்கையில் எவருக்காகவும் திராவிடர் கழகம் சமரசம் செய்வதோ, விட்டுக்கொடுப்பதோ ஒருபோதும் கிடையாது.


இதில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்... 'விநாயகர் சதுர்த்திக்காக நாங்கள் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை’ என மறுத்து அறிக்கை வெளியிடும் துணிவு, அரசியல் கட்சிகளில் தி.மு.க-வைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கு உண்டு?''


அ.பரக்கத்துல்லா, சிங்காநல்லூர்.


 ''அடுத்த நூற்றாண்டில் தந்தை பெரியார் எவ்வாறு நினைவுகூரப்படுவார்?''


''சிறந்த நாடாளுமன்றவாதியான பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) என்கிற வரலாற்று வல்லுநர், 'தந்தை பெரியாரும், சமதர்ம வீரர் ம.சிங்காரவேலரும் 500 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படுவார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


யுனெஸ்கோ விருது கூறியதுபோல் தந்தை பெரியார் 'புது உலகின் ஒரு தொலைநோக்காளர்’ (Prophet Of The New Age) என்பதை பல நூற்றாண்டு வரலாறும் வியந்து பாராட்டும்!''


- நிறைந்தது

8 comments:

தமிழ் ஓவியா said...

விரும்பத் தகாத சுவரொட்டிகள், போராட்டங்கள், வன்முறைகள் மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும்!

அ.இ.அ.தி.மு.க. தலைமையே முன்வந்து கட்சியினருக்கு அறிவுரை கூறினால் தலைமைக்கும் - கட்சிக்கும் - ஆட்சிக்கும் பயன் ஏற்படும்!

தமிழர் தலைவர் ஆசிரியரின் உருக்கமான அறிக்கை

தமிழர் தலைவர் ஆசிரியரின் உருக்கமான அறிக்கை

ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து அ.இ.அ.தி.மு.க. தலைமையே முன் வந்து அவர்களுக்கு அறிவுரை கூறினால், தலைமைக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக்கூடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருக்கும், அவருடன் மற்ற மூவருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 27.9.2014 அன்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்கியுள்ளதைக் கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், துயரமும் அடைவது இயற்கைதான்.

சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்!

அதற்கென இனி உள்ள சட்டபூர்வ வாய்ப்புகள் - பிணை (ஜாமீன்) கோரி, தண்டனையை நிறுத்தி வைக்கவும் அல்லது ரத்து செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் போன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பரிகாரம் தேடி, வெளியே வர முயற்சிப்பதும்தான் சரியான வழிமுறை.

நீதிபதியை மனம்போனபடி விமர்சிப்பது, கருநாடக அரசு, மத்திய அரசு போன்றவற்றில் பொறுப்பில் உள்ளவர்களை உணர்ச்சிவசப்பட்டு தாக்கிப் பேசிடுவது, பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில் இடையூறுகளைத் தானே உண்டாக்கும்? ஆங்காங்கே துண்டு துண்டாக நினைத்தபடி கிளர்ச்சிகளை, கடையடைப்புகளை,

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் களை - குறிப்பாக கலைஞர் போன்ற மூத்த தலைவர்களை வசைபாடுவதோ, பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு வந்து சேர்க்காது; மாறாக சட்டப்பூர்வமான ஆக்க ரீதியான மேல்முறையீடுகளைச் செய்யலாம்.

அனுதாப அலை என்றெல்லாம் காட்ட ஆவேசம், உணர்ச்சிவயப்பட்டு சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, மனம்போன போக்கில், பதிவாகவேண்டும் நம் எதிர்ப்பு - உரியவர்கள் கவனத்திற்குச் சேர வேண்டும், எதிர்கால பதவி அரசியலுக்கு இதுவே ஒரு அரிய வாய்ப்பு என்றும் நினைக்கலாமா? வன்முறை அல்லது பொது அமைதிக்குக் கேடு விளைவித்தல்மூலம், மக்களின் வெறுப்புதான் வளருமே தவிர, வேறு உருப்படியான பலன் கிடைக்காது.

அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்!

இப்போது இவர்கள் நீதிமன்றங்களைக் கடுமையாக விமர்சிப்பது, நீதிபதிகளைத் தரக்குறைவாக உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது, எழுதுவது, தீர்மானங்களை தாங்கள் வகிக்கும் பொறுப்பான மன்றங்களில் நிறைவேற்றுவது போன்றவை எந்த அளவுக்கு அம்மையார் ஜாமீனில் வெளியே வருவதற்குத் துணை புரியும் என்பதை அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவேண்டும்.

எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்கட்சி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகின்ற நிலையில், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கு, பிரச்சினையை ஏற்படுத்தலாமா? அன்றாட அரசியல் ஆளுமை, மின்வெட்டு முதலான பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதல்லவா அவசியம்!

இவ்வாட்சியை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதுபோல மத்திய அமைச் சர்கள் இங்கே விடுக்கும் எச்சரிக்கைகளை - எல்லாம் மனதிற்கொண்டு, தங்களது நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர், ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டியதே இப்போது அவசியமாகும்!

எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்!

மீறி நீதிமன்ற நடவடிக்கைகள், தாறுமாறான விமர் சனங்கள் - அவர்களது தலைவி வெளியே வருவதற்கு இத்தகு நடவடிக்கைகள் உதவுவதற்குப் பதிலாக, எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்; ஊடகங்கள்மூலம் நீதித் துறையும், உலகமும், பொதுவானவர்களும் பார்த்துக் கொண்டு, முகம் சுளிக்கவும் செய்கின்றனர்!

நாம் இப்படி எழுதுவது அக்கட்சியினருக்குக் கசப்பாகக் கூட இருக்கலாம். முதியவர்கள் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பது பழமொழி. அ.தி.மு.க.வினரின் நடவடிக்கை எதுவாயினும் - இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் தலைவிக்கு உதவுமா? கேடு செய்யுமா? என்றே யோசிக்கவேண்டுமே தவிர, ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்ற முறை யில் ஆவேசம், ஆர்ப்பாட்டம், தரமற்ற வசைமாரிகளால் கேடுகளும், எதிர்விளைவுகளும்தான் மிஞ்சும்.

யார் வழக்குப் போட்டது என்று ஆத்திரப்படுவதைவிட, ஏன் வழக்கு வந்தது? என்று சம்பந்தப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து, இனி எதிர்கால பொதுவாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று முடிவு எடுத்துச் செயல்பட்டால், அது பயனுறு விடையாக, தீர்வாக உண்மையிலே அமையும்!

அரசியல் பார்வை இல்லை!

இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து, அத்தலைமையே முன்வந்து இவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக் கூடும்.

அரசியல் பார்வை இதில் ஏதுமில்லை!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
5.10.2014

Read more: http://viduthalai.in/e-paper/88747.html#ixzz3FK9YBxmr

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கபாலம்

திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.

-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Read more: http://viduthalai.in/e-paper/88749.html#ixzz3FK9iz1Up

தமிழ் ஓவியா said...

பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள

சென்னை, அக்.5- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள் என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு.குமார தேவன் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் தலைமையில் துணை செயலாளர் சுப்பிர மணியன் வரவேற்றார். பொருளாளர் மனோகரன் இணைப்புரை வழங்கினார். புலவர் வெற்றியழகன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மருத்துவர் க.வீரமுத்து, வை.கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்குரைஞர் சு.குமார தேவன் சிறப்புரையில், 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். மத வெறியர்களின் திட்ட மிட்ட சதியால் காந்தி கொல்லப்பட்டார். அந்தக் கொலை சதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரின் தொடர்ச்சியான திட்ட மிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். காந்தி கொலை சதியில் வீரசவர்க்கர் மூளையாக செயல்பட்டவர் என்ப துடன் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களில் தப்பி ஓடிய வர்களாக உள்ள மூன்று பேர்குறித்த தகவல் இன்று வரை ஏதும் வெளிவர வில்லை என்று குறிப் பிட்டார்.

கொலைவழக்கு விசார ணைகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், அவர்களின் மதவெறிப் பின்னணி கொலைக்கான நோக்கங் களாக கோட்சே குறிப்பிட் டவை உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எடுத்துக் கூறினார். காந்தி கொலையுண்டபோது, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட கல வரசூழலை அடக்குவதற்கு பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கும் தந்தை பெரியார் வானொலியில் மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி அமைதி திரும்ப காரண மாக இருந்ததையும், அதே நேரத்தில் மகாராட்டி ரத்தில் பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டு வெளி யேற்றப்பட்டு தாக்கப்பட்ட தையும் குறிப்பிட்டார்.

1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 2ஆம் நாளில் கல்வி வள்ளல் காமராசர் மறைவுக்கு முக்கியக்காரண மாக இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலமே இருந் துள்ளது என்றும், நெருக் கடிக்காலத்தில் காங்கிர சுக்கு எதிரானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடு மைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடிக்காலத்தில் காமராசரைக் கைது செய்யமறுத்த கலைஞரின் உறுதியால், திமுக ஆட்சிக் கலைப்பு, அதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், மொத்தத்தில் நெருக்கடிக்காலம் என்பது குறித்து சுருக்கமாகக் கூறும் போது, பத்திரிகைகள், நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததைக் கூறினார். நெருக்கடிப் பிரகடனத் துக்கு காரணமாக இந்திரா காந்திமீதான வழக்கு, அவ்வழக்கில் நீதிபதி சின்கா, மேல்முறையீட்டில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய் யர் ஆகியோர் அளித்த தீர்ப்பே பெரிதும் காரண மாக அமைந்தது என்பதை விரிவாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் குறிப் பிட்டார். கூட்ட முடிவில் மல்லிகா ராவணன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/88762.html#ixzz3FK9zDlL6

தமிழ் ஓவியா said...

பெரியாரைப் பின்பற்றுவோம்!

பெரியார் என்ற சொல்லுக்கு மனிதநேயம் என்றே பொருள்! இதை அகராதியில் அச்சிட்டாலும் அதில் பிழையேதும் இல்லை.

ஆம். பெரியார் என்ற ஒற்றைச் சொல்லின் உள்ளடக்கம் மிகப் பெரியது. ஈ.வெ.ராமசாமி என்பவருக்குப் பெண்கள் அளித்த சிறப்புப் பெயர் பெரியார் என்றாலும், அப்பெயர் அவரால் தனித் தன்மையும், தனிப் பெருமையும், உயர்தகுதியும் பெற்றுவிட்டது என்பதே உண்மை!

பெரியார் என்ற தனி மனிதர் வழக்கமாக உலகில் பிறந்து, வாழ்ந்து, மறையும் சராசரி மனிதர் அல்லர். அல்லது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் ஒரு சிலரைப் போன்றவரும் அல்லர்.

அவர் ஒரு சகாப்தம்! காலகட்டம்! சரித்திரம்! திருப்புமுனை! தீர்க்கதரிசி! உலக நாயகர்! சிந்தனைச் சுரங்கம்! ஆதிக்கம் அழித்த சமதர்மச் சிற்பி! இப்படி எத்தனையோ இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர்! அதனால்தான், உலக அமைப்பான அய்.நா.மன்றம் இவரை இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி என்று, இவ்வுலகில் எவருக்கும் அளிக்காத பெருமையை அளித்தது.

அவர் ஒரு தொலைநோக்காளர் என்பதற்கு அவரது இனிவரும் உலகம் என்ற நூலே சான்று. அவர் ஒரு தத்துவ மேதை என்பதற்கு அவரது தத்துவ விளக்கம் என்ற நூலே சான்று. அவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு குடியரசு, விடுதலை, உண்மை போன்ற இதழ்கள் சான்று!

அவர் ஒரு புரட்சியாளர் என்பதற்கு அவரது போராட்டங்கள் சான்று.

அவர் ஒரு சாதனையாளர் என்பதற்கு அவரது பிரச்சாரப் பயணங்களும், மேடை முழக்கங்களும் சான்று.

அவர் ஒரு கொள்கையாளர் என்பதற்கு அவரது வாழ்வே சான்று!

புரட்சி, போராட்டங்கள் நடத்தி தன் வாழ்விலே விடிவும் கண்டு, விளைவுகளையும் கண்டவர் பெரியார் மட்டுமே!

தன்னைப் போலவே, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உணர்வுள்ளவன், உரிமையுள்ளவன், மானமுள்ளவன், மதிக்கப்பட வேண்டியவன், சமமானவன், உறவு கொண்டு வாழ வேண்டியவன். ஆண்டான் அடிமை இல்லை; தீண்டத்தகாதவன், வணங்கத்தக்கவன் இல்லை! பிறப்பொக்கும் எல்லா மனிதர்க்கும் என்பதே இவரது கொள்கை. இவற்றிற்காகவே வாழ்ந்தார்; இவற்றிற்காகவே போராடினார்.

எனவேதான் பெரியார் என்றால், மனிதநேயம் என்று சொன்னேன்!

ஆனால் ஆதிக்கவாதிகள், குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள், பெரியாரின் பரந்துபட்ட இந்த உணர்வைச் சுருக்கி, குறுக்கிக்கூட அல்ல, மறைத்து, குறைத்து, மாற்றி, திரித்துக் கூறினர். பெரியாரின் பெருமையை, புகழை, சிறப்பை, புரட்சியை பிறர் அறியாமலிருக்கும்படிச் செய்தனர்; செய்தும் வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக, செப்டம்பர் மாதம் பிறந்த தலைவர்களைப் படம் போட்டுக் காட்டிய தினமணி சிறுவர் மணி, பெரியார் படத்தைப் போடவில்லை. முதலில் போடவேண்டிய பெரியாரின் படத்தை முற்றாக நீக்கினர். சிறுவர்கள் பெரியாரை அறியக்கூடாது என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்; கவனமாக இருக்கின்றனர்.

பெரியார் என்றால் கடவுள் இல்லை யென்பார்; பார்ப்பானைத் திட்டுவார் என்ற அளவில் பெரியாரை பிறர் அறியும்படிச் செய்கின்றனர்.

ஆனால், இவ்வளவுதான் பெரியாரா? பிஞ்சுகள் சிந்திக்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் செய்தது இவை மட்டுமென்றால், அய்.நா.மன்றம் எப்படி உலகில் யாருக்கும் அளிக்காத பெருமையை _ பட்டத்தை பெரியாருக்கு அளித்துச் சிறப்பித்திருக்கும்? என்ற வினாவோடு பெரியாரைத் தேடவேண்டும்; பெரியாரின் சிந்தனைகளைக் கிளற வேண்டும்; தோளிட வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரியாரின் பல்துறைச் சிந்தனைகள், பணிகள், போராட்டங்கள், புரட்சிகள் வெளிப்படும்.

வெளிப்பட்டவற்றை விடாது பிடித்துச் சிந்தித்தால், தெளிவு, துணிவு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, தொண்டு, சமத்துவம் போன்ற பல உயரிய கொள்கைகள் நம்முள் குடிகொள்ளும்; நம்மை வழிநடத்தும்.

பெரியாரின் சிந்தனைவழிச் சென்றால், தன்மான உணர்வு தானே வரும். தன்மான உணர்வு தலைதூக்கினால், நம் இழிவு, தாழ்வு, அறியாமை எல்லாம் அகலும். நாமும் மனிதன், நாம் யாருக்கும் அடிமையல்ல என்ற உண்மை உள்ளத்துள் பதியும். விழிப்பு, துணிவு, தெளிவு, காரணம் கேட்கும் சிந்தனை வரும்போது நம் வாழ்வு சிறக்கும் _ உயரும். நம் தலைமுறை தலைநிமிரும்.

பெரியார் வழி நடக்கும் பிஞ்சுகள், வாழ்வில் என்றும் வீழ்வதில்லை. எனவே, பெரியாரைப் பின்பற்றுவோம், வாழ்வில் சிறப்போம்; பிறர் வாழ்வு சிறக்கவும் உழைப்போம்! இதுவே இக்காலத்தில் நம் உள்ளத்தில் கொள்ள வேண்டிய உறுதி!

தமிழ் ஓவியா said...

மில்டனின் சொல்லாற்றல்

லண்டனில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றவர் மில்டன். கவிஞர் மட்டுமன்றி, சிறந்த மேதையாகவும் விளங்கியவர். மில்டனின் எழுத்துகளை, காலத்தால் அழியாத எழுத்துகளும் அறிவும் செய்து கொண்ட திருமணம் என்று வோர்ட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

மில்டன் பெரும் பிரச்சினைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். முதலாம் சார்லஸ் மன்னன் கொல்லப்பட்டது சரியே என்று மில்டன் கூறினார். இந்தக் கூற்றைக் கேட்டுக் கோபமடைந்தார் சார்லசின் மகன் இரண்டாம் ஜேம்ஸ். மில்டனை அழைத்து, முதலாம் சார்லஸ் மன்னரின் கொலையினை நியாயப்படுத்துவதால்தான் உங்கள் கண்கள் குருடாகி விட்டன. உங்களுக்கு தெய்வம் தந்த தண்டனை இது என்றார் மன்னர்.

இதனைக் கேட்ட மில்டன், நடக்கும் சில துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சிகள் தெய்வ கோபத்தின் குறியீடுகள் என்று மேன்மை பொருந்திய மன்னர் நினைத்தால், தங்கள் தந்தையாரின் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அட, எனக்காவது 2 கண்கள் மட்டும்தான் போயின; உங்கள் தந்தைக்கு தலையே போய்விட்டதே என்றாராம்.

தமிழ் ஓவியா said...

நாவலாசிரியரின் நகைச்சுவை

இங்கிலாந்தின் மிகப் புகழ்பெற்ற நாவலாசிரியர்களுள் சார்லஸ் டிக்கன்ஸ் குறிப்பிடத்தக்கவர். டிக்கன்ஸ், பத்திரிகை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியபோது, ஓர் இளம் கவிஞர் நாரில் கோர்த்து வைத்த நன்மணிகள் என்ற தலைப்பில் கவிதை எழுதி டிக்கன்சின் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இளம் கவிஞரின் கவிதையைப் படித்த டிக்கன்ஸ் எழுதியவருக்கே கவிதையைத் திருப்பி அனுப்பினார். அப்பொழுது, என் அன்புக்குரிய இளம் கவிஞரே! நாரில் கோர்த்த நன்மணிகள் என்ற தங்கள் கவிதையைப் படித்தேன். நார் அதிகமாக இருக்கிறது. திருப்பி அனுப்பி இருக்கிறேன் என்று எழுதிய கடிதத்தையும் வைத்து அனுப்பியுள்ளார்.

velmurugan said...

பெரியார் என் தமிழகத்தில்
திரவிட கழகம் அமைத்தார்
கேரளா கர்நாடகவிலொ என்
அமைக்க வில்லை