Search This Blog

15.10.14

பார்ப்பன ஆதிக்க ஆட்சி உள்ளவரை ஜாதியும், இழிநிலையும் ஒழியாது!-பெரியார்



இந்தக் கூட்டமானது 82-ஆம் ஆண்டு பிறந்த நாள் எனக்குத் தோன்றி இருக்கின்றமைக்குப் பாராட்டவும், நாட்டின் விடுதலைக்காகச் சிறை சென்றவர்களைப் பாராட்டவும் கூட்டப்பட்டதாகும்.

எந்தப் பேரால் இருந்தாலும் நம் நாட்டு மக்களின் மாபெரும் இழிவை நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கவே இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது ஆகும். எனக்கு 82-வயது ஆகின்றது. இப்படி நீண்ட நாள் வாழ்வது உடல் அமைப்பைப் பொறுத்ததே ஒழிய பாராட்டுதலால் அல்ல.

தாய்மார்கள் சிறைக்குச் சென்று வந்தார்கள்; மீண்டும் போராட்டத்தில் கலந்து கொள்ளவே சென்றார்கள். 10000-கணக்கான மக்கள் இந்திய நாட்டின் யூனியன் படத்தைக் கொளுத்தினார்கள். 3000-பேர் மட்டும் கைது செய்யப்பட்டு அதில் 600, 700-பேர்கள் மீது மட்டும் (ஆட்சியாளர்) வழக்குத் தொடுத்துச் சிறைக்கு அனுப்பினார்கள். இந்த நங்கவரம் ஊர் பெண்மணிகள் 5 (அய்ந்து) பேர் சிறை சென்றதும் பாராட்டுதற்கு உரியதாகும். பெண்கள் சமுதாயத்திற்கு வழி காட்டியாகவே சிறை சென்றார்கள். அவர்கள் அடுத்தும் சிறைக்குப் போகத் தயாராக இருக்கின்றார்கள்.

இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் பற்றிப் பேச வேண்டி இருக்கின்றது. இந்த நங்கவரம் கிராமத்திற்கு 2- (இரண்டு) தடவை வந்துள்ளேன். பேசி விட்டு நேரே போய்விடுவேன். இந்தத் தடவை ஊர்வலத்தில் என்னைப் பல மைல் இழுக்கடித்தபடியால் ஊர்களைச் சுற்றிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. கூட்டத்துக்கு நாள் கேட்டவர்கள் ஊர்வலம் உண்டு என்று என்னிடம் கூறவில்லை. வந்தபிறகு தான் ஊர்வலம் உண்டு என்று உணர்ந்தேன். எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் ஊரைச் சுற்றிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்ததே என்ற அளவில் மட்டும் திருப்தி அடைகின்றேன்.

தோழர்களே! இயக்கப் பிரச்சாரத்துக்கு அடிப்படை உதவியாக இருப்பது நம் கழகப் புத்தகங்களைப் பரப்புவதுதான். பிரச்சாரத்துக்கு நூல்கள் முக்கிய காரணம் ஆகும். எனக்குப் பின்னாலே இப்படிப்பட்ட காரியம் நடக்குமா என்பது சந்தேகம். ஆகவே வாய்ப்பு உள்ள போதே எல்லாவற்றையும் வாங்கிப் படித்துப் பார்ப்பதுடன் பாதுகாக்கவும் வேண்டும்.

இந்தக் கிராமத்தில் பெரிய பண்ணைத் தலைவர்களாக இருப்பவர்கள் இந்த  ஊர் விவசாயிகளின் நலத்துக்கு மாறாக நடக்கின்றார்கள். சரிவரக் கவனிப்பது இல்லை என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. சாதாரணமாகக் கிராமத்தில் இருக்கின்ற நிலச்சுவான்தார்கள் கிராம மக்களிடம் அன்பாக இருப்பது கடமையாகும்.

நண்பர்கள் முறையீட்டில் சடடப் பிரச்சினை உரிமைப் பிரச்சினை எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் மனிதக் பிரச்சினைப்படி செல்வவான்கள் பொறுப்பும், கவலையும் உள்ளவர்கள். அவர்கள் சாதாரண விஷயங்களில் விட்டுக் கொடுத்து மக்களுக்கு உதவுவதுதான் அறிவுடைமையாகும்.

இங்கு இரண்டு காரியங்கள் - பணத்தில் பெரியவர்கள் என்பது ஒன்று; ஜாதியிலே பெரியவர்கள் என்பது ஒன்று. இதன் காரணமாகக் கொடுமைப்படுத்தினால் வெறுப்பும் ஆத்திரமும் தான் வளரும் என்பது இயற்கை.

இது என்ன ஆகிவிடும் என்று ஆத்திரப்படாமல் அறிவுடன் சிந்திக்க வேண்டும்.

இங்கு, பண்ணையில் மட்டும் நீதி இல்லை என்பது மட்டுமல்ல, அதிகாரிகள் இடத்திலும் நீதி இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள். அதிகாரிகளும் பார்ப்பனர்கள் என்றார்கள். பார்ப்பனர் அல்லாதார் (திராவிடர்கள்) இருந்தாலும் அப்படித்தான் நடப்பார்கள். அவர்களே (பண்ணையார்கள்) பணக்காரர்கள் - செல்வாக்கு உடையவர்கள் - மேல்சாதிக்காரர்கள். இவர்களை ஏன் விரோதித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி நடப்பார்கள்.

இந்தத் தமிழ் நாட்டைப் பார்ப்பனர் அல்லாத மந்திரிகள் (அமைச்சர்கள்) ஆண்டபோதிலும் இவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை மந்திரிகளுக்கு எட்டினாலும் துணிந்து செய்வார்களா என்பது சந்தேகம்.

குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட மந்திரிகள் நேர்மையாக நடந்தால், இடம் யாருடையதாக இருந்தாலும் அதனை அக்குவயர் செய்து (அரசு கையப்படுத்த) பொது மக்களுக்குக் கொடுக்க வேண்டியது தான் ஆட்சியின் முறைமை. 200-ஏக்கராவிற்கு மேல் பயிர் இடுபவர்களுக்குத் தானியம் அடிக்கக் களம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். நேர்மையான அதிகாரிகள், அரசாங்கம் இப்படிச் செய்வதுதான் முறைமையாகும். இந்தப் பிரச்சினைக்குப் பரிகாரம் பூமியை (அரசு தன்வசப்படுத்துதல்) அக்குவயர் பண்ணிப் பொதுமக்கள் காரியத்துக்காக ஒதுக்க வேண்டும்.

இன்று பணக்காரன் பேரிலும் வெறுப்பு உள்ளது. பார்ப்பனர் பேரிலும் வெறுப்பு உள்ளது. இந்தப் பிரச்சினை நாளா வட்டத்தில் பலாத்காரத்தைத் தோற்றுவிக்கும்படியான நிலையைத்தானே தானாகக் கொண்டு வந்துவிடும்? புத்திசாலித்தனமாக, இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதுதான். பொது மக்களுக்கு, விவசாயிகளுக்குக் களம் இல்லையென்பது அநியாயமானது. பணக்காரர்கள் தங்கள் நிலத்தைத் களமாக வைத்துக் கொள்ளலாம்; ஆனால் ஏழைகள் எங்கே போவார்கள்?

தீர்மானத்தில் பரம்பரை பாத்தியதைகளை விவசாயிகள் விட்டுவிடவும், முதலாளி ஆதிக்கம் ஏற்படும்படியான நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் எழுதியுள்ளார்கள். என்னிடம் கூறினால் நான் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்வேன் என்று கூறியுள்ளார்கள். நான் எதையும் நேரடியாகச் சொல்லுவதில்லை. பொதுக்கூட்டத்தில் பேசுவேன் - அது அரசாங்கத்துக்கும் போகும்.

தோழர்களே! அரசாங்கம் விவசாயிகளிடம் கந்தாயம் (நிலவரி) வாங்குபவர்கள். எனவே மக்களுக்குச் சவுகரியம் செய்து கொடுப்பது கடமையாகும். இப்போதைய கலெக்டர்கள் (மாவட்ட ஆட்சியாளர்கள்) இதில் கவனம் செலுத்துபவர்களாகப் பெரும்பாலும் இல்லை. வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அப்படி இருந்தது. இன்று அப்படி இல்லை. நல்ல பிள்ளையாக நடந்து பதவி உயர்வும், பலனும் அடைவதில் கருத்துடையவராக இருக்கின்றனர். எனவே அரசாங்கம் இதில் கவலை எடுத்துப் பரிகாரம் தேடினால்தான் வகையுண்டு.

தோழர்களே! இனிக் கழகக் கொள்கைகளைப் பற்றிப் பேசுகின்றேன். ஜாதி இழிவுக்குப் பரிகாரம் ஏற்பட தமிழ் நாட்டு ஆட்சி தமிழர் ஆகிய நம்மிடம் வரவேண்டும். ஜாதிக்குப் பரிகாரம் ஏற்பட இன்றைய ஆட்சியாளர்கள் கையில் இருந்து மாறி ஆட்சி துலுக்கன் (இசுலாமியர்) கைக்கோ, வெள்ளைக்காரன் கைக்கோ போக வேண்டும். நாம் இந்த இழிநிலையில் இருக்க கடவுளும், மதமும், சாஸ்திரமும் ஆகும். வேறு ஆட்சி வந்தாலொழிய இவைகள் ஒழியாது. ஜாதி ஒழிய முடியாது. நமது மதம் - இந்து மதம் - நமது கடவுள் மதம் சாஸ்திரங்களைப் பாதுகாப்பது நமது அரசாங்கம். அரசாங்கம் இப்படி இருக்கையில் ஜாதியை ஒழிக்க முடியாது. ஆட்சி பார்ப்பான் கையில் உள்ளது. இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டும் - மேல்ஜாதிக்காரர்கள் மேல் ஜாதியாகவும், கீழ்ச் ஜாதிக்காரர் கீழ்ச்ஜாதியாகவும் எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்கள் குறிக்கோள். இந்த நாட்டுக்கு முகமதியரோ, வெள்ளையனோ ஆட்சியைக் கைப்பற்றாதவரை விமோசனமே இல்லை.

வட நாட்டில் முகம்மதியர்கள் செல்வாக்குடன் ஆண்ட காலத்தில் இந்த நாட்டு அரசர்கள் ஜாதியையும், மதத்தையும், பார்ப்பானையும் காப்பாற்றுவதுதான் தருமம் என்று எண்ணி ஆண்டும் வந்திருக்கின்றனர். கவலை எடுத்துச் ஜாதி முறைகளை ஒழிக்கப் பாடுபடவில்லை என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில் ஜாதி வித்தியாசம் முஸ்லிம்கள் என்பவர்கள் இடையே இஸ்லாமை பற்றித் தெளிவுபடுத்தியும், நமது கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி இந்த மத்திய ஆட்சி ஆகியவை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.

-------------------------------------------- 26.10.1960 அன்று நங்கவரத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 10.11.1960

6 comments:

தமிழ் ஓவியா said...

‪‎பார்ப்பனர்_குறித்து‬
‪‎தந்தை_பெரியார்_அவர்களின்_கூற்று‬ :
" ஆங்கிலோ - இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும் ; ஆங்கிலோ - இந்தியர்கள் நம் நாட்டு தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே. ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய் டமில் மனுஷா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல், தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியதுபோலச் சாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்!
அதைப் போலவே இந்நாட்டு பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட, ஆரிய சாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் சாதிகளாக அடிமைகளாக மிதித்து நடத்துகிறார்கள்.
(குடியரசு 8-5-1949)
‪அண்ணல்_அம்பேத்கர்_அவர்களின்_கூற்று‬ :
" தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பானிய தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்தள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போலத்தான் தோன்றுவார்கள். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அந்நியனோ, அது போலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான். "
(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?, பக்கம் 215)

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் நூல்பற்றி தி இந்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி வெளிவந்த கீதையின் மறுபக்கம் நூல்பற்றி இன்றைய தி இந்து (தமிழ்) நாளிதழ் எழுதி யிருப்பதாவது:

கீதையின் மறுபக்கம் பகவத் கீதையைப் பகுத்தறிவு கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் நூல்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள இந்நூல் கீதையை அறிவியல் பார்வையுடனும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும் தீவிரமாக விமர்சிக்கிறது.

திராவிடர் கழகம் 1998 இல் வெளியிட்ட இந்நூல் கீதையைபற்றிய மாற்றுப் பார்வையைத் தர்க்கப் பூர்வமாக முன்வைக்கிறது.

- இதுதான் இந்துவின் விமர்சனம்.

Read more: http://viduthalai.in/e-paper/89327.html#ixzz3GDy3Nl2f

தமிழ் ஓவியா said...

பட்டாசு வெடிக்காதீங்க!


குழந்தைத் தொழிலாளர் மீட்புப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி என்ன கூறு கிறார் தெரியுமா?

குழந்தைகளே தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதீர்!

நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களை வைத்துத்தான் பட்டாசுகளை உற்பத்தி செய்கிறார்கள்

அது மட்டுமா? பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலும் பாதிக் கப்படுகிறது. அதனால் நோயும் பரவுகிறது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/89302.html#ixzz3GDyHvYIB

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியின் கொல்ராபி என்ற அருமையான உணவுத் தண்டு!


காய்கறி தண்டுகளில் ஜெர்மனி மொழியில் ”கொல் ராபி” (Kohl rabi)என்று அழைக்கப்படும் காய்கறித் தண்டுபற்றி இணையத்தில் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள் வதில் மகிழ்ச்சி.

கேபேஜ் முட்டைகோசு - டர்னிப் என்ற காய்கறி குடும்ப வகையறாவைச் சார்ந்த மெல்லிய தண்டு - Purple (ஊதா) கலரில் வடிவமைப்பில் உள்ளது.

இதில் உள்ள ஏராளமான பொட்டா ஷியம் சத்து காரணமாக, இதைச் சாறாக ஆக்கியும்கூட குடிக்கிறார்களாம்!

நம் நாட்டு மருத்துவர்களேகூட, நோயாளிகளுக்கு பொட்டாஷியம் சத்துக் குறைவாக இருக்கிறது; கூட்ட வேண்டும் என்று கருதும்போது, இளநீரைக்கூட கொடுக்கச் சொல்வதும் உண்டு (பொட்டாஷியத்தை உடலில் குறைக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இளநீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் என்று அறிவுரை கூறுவர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறுவர்).

கேபேஜ் என்ற முட்டைக்கோசு, காலிப் பிளவர், பிராக்லி (Broccoli), கேல்(Kale), Collard Greens என்ற கீரை வகைகள், பிரசல்ஸ் ஸ்பரட்டுஸ் (Sproats) என்ற முளைகள் இவை களின் குடும்பத்தைச் சேர்ந்தது இது!

வெள்ளைக் கலரிலும் மற்றும் பல கலர்களிலும் கூட இந்த கொல் ராபி கடைகளில் அங்கே கிடைக்கிறது.

இது நார்ச்சத்து அதிகம் தரக்கூடியது (Rich dietary Fiber) மட்டுமல்ல, காரோட்டனாய்டுஸ் (Carotenoids) மற்றும் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி வைட்டமின்கள் எல்லாம் ஏராளம் உடையதாகும்!

இது நல்ல Antioxident ம் ஆகும். உடலின் நலத்திற்கு ஊறு செய்பவை களைத் தடுத்து நிறுத்தும்.

மேலே கூறிய வைட்டமின்கள் மட்டுமா இதில் உள்ளன? மேலும் வியப் பாக உள்ளது கால்சியம், பொட்டா ஷியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், செம்பு (Copper) சத்து களும் இதில் அடக்கம்!

ரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல ரத் தமாக வைக்க இது பெரிய போர் வீரன் போல உதவவும் தயாராக உள்ளது!

அசிடோசிஸ் (Acidosis) என்ற அதிகமான ஆசிட் சுரத்தலை உடலில் தடுக்கவும், ஆஸ்துமா, புற்றுநோய் (கேன்சர்) முதலியவைகளுக்கு எதிரான சத்தை இது உடலுக்குத் தருகிறது. அந்த நோய்க் கிருமிகளை அழிக்கவும் முந்துகிறதாம்!

பச்சை ஆப்பிள் ஜூசில் (திரவத்தில்) (Juice) கலக்கி, இதனைக் குடித்தால் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்து கிறதாம்!

இருதயத்தையும்கூட - இதிலுள்ள பொட்டாஷிய சத்து காரணமாகப் பாதுகாக்கவும் உதவுகிறதாம்!
செரிமானத்திற்கும் இது பெரிதும் உதவுகிறதாம்!

தசை, நரம்புகளைப் பலப்படுத்திட இது மிகவும் பயன்படுகிறதாம்!

பிராஸ்டேட், கொலோன் கேன்சர் இவைகளுக்கு எதிராகவும் இது ஒரு உதவிடும் பாதுகாப்புப் பணியாளனாம்!

தோல் - சருமத்தையும் பாதுகாக் கிறது. எடை குறைக்கவும் உதவிடுமாம்!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/89349.html#ixzz3GDysRMJT

தமிழ் ஓவியா said...

அமீத் ஷாவின் ஆதங்கம் நமக்கு புரிகிறது?


- குடந்தை கருணா

மகாராஷ்டிரா தேர்தல் பிரச் சாரத்தில் பேசிய பாஜகவின் தலைவர் அமீத் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது மனைவிக்குப் பிறகு, இன்னொரு பெண்மணியிடம் பேசினார் என்றால், அது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மட்டும் தான் என்று பேசியுள்ளார்.

அமீத் ஷா தனது பேச்சின் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எப்போதும் யாரிடமும் பேசுவதில்லை; ஆனால், தற்போதைய பிரதமர் மோடி, சிறப்பாக மக்களிடையே பேசுகிறார் என சொல்ல வருகிறார்.

இது மிகவும் தரக்குறைவான பேச்சு, இது முன்னாள் பிரதமரை மட்டுமல்ல, பெண்களையே இழிவு படுத்தும் பேச்சு, இதற்கு, அமீத் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

இதெல்லாம், அமீத் ஷா பரி வாருக்கு பெரிய விஷயமே அல்ல. அய்.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா என்பவர், உச்ச நீதிமன்றத்தில் 2011-ல் தொடுத்த வழக்கில், தன்னிடம் வேலை பார்த்த ஒரு பெண்மணியை, தொடர்ந்து வேவு பார்க்கும் வேலையை, அப் போதைய உள்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய பாஜக தலைவர் அமீத் ஷாவின் உத்தரவின் பேரில், அதிகாரிகள் செய்ததாகவும், அந்த பெண்மணியின் தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், புகார் மனுவில் கூறி இருந்தார்.

இவையெல்லாம், குஜராத்தில் சர்வ அதிகாரம் படைத்தவராக திகழ்ந்த மோடிக்காக செய்யப்பட்டது என்ற புகார் எழுந்தது. அந்தப் பெண் மணியை, மோடி அடிக்கடி சந்தித்த தாகவும், இந்த விஷயம், பிரதீப் சர்மா விற்கு தெரிந்த காரணத்தால், அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், சர்மா, தனது புகார் மனுவில் கூறி இருந்தார். இது சம்பந்தமாக, குஜராத் அரசே, ஒரு கண்துடைப்பு விசாரணை கமிஷனை அமைத்தது.

இப்போது, மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், எல்லா வழக்குகளையும் போல, இந்த விசாரணையையும், மூடி விட்டார்கள்.

இப்படி தனி மனிதரை வேவு பார்க்கும், கீழ்த்தர பணியை மேற்கொண்ட, தங்களைப்போல், மன் மோகன் சிங் நடந்து கொள்ளாமல் இருந்தாரே, என்ற ஆதங்கத்தில், அமீத் ஷா பேசியிருப்பது நமக்குப் புரிகிறது.

Read more: http://viduthalai.in/page-2/89353.html#ixzz3GDz1O7GE

தமிழ் ஓவியா said...


சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.

பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.