Search This Blog

14.10.14

பார்ப்பனன் எங்காவது உழுகிறானா? எந்தப் பார்ப்பாத்தியாவது வீடு கூட்டுகிறாளா? கல்லுடைக்கிறார்களா?-பெரியார்


மதங்கள் ஆபாசம் நிறைந்தவைகள்!


இன்று நான் திராவிடர் கழகத்தைப் பற்றி எடுத்துச் சொல்வதை நீங்கள் தயவு செய்து கவனமாகக் கேட்க வேண்டும். ஆனால் கேட்டவற்றை உடனே நம்ப வேண்டுமென்று சொல்லவில்லை. கேட்பவற்றை மனதிலே இருத்தி ஆராய வேண்டும். நான் சொன்னவைகளுக்கு யாராவது மாறுபாடாகச் சொன்னாலும் இரண்டையும் வைத்து நாட்டின் நிலைமையை நன்றாக ஆராய்ந்து பின் எது சரி என்று தோன்றுகிறதோ அந்தப்படி நடக்க வேண்டும் என்று நான் உங்களை முதன்முதலாகக் கேட்டுக் கொள்கிறேன்.

மனிதன் மற்ற  ஜீவ பிராணிகளை விட கொஞ்சம் அதிக அறிவு உள்ளவன். ஆகையினால் அந்தப் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டுகிறேன்.

தோழர்களே! இந்நாட்டுக்குரிய மக்கள் நாம் நாம் திராவிடர் நாட்டு மக்கள் என்று கூறப்பட்டு வருகிறோம். யாராலே, எப்பொழுது அந்தப் பெயர் வந்தது என்பது பற்றி இப்பொழுது விவரிக்க சமயம் இல்லை. அது தேவையும் இல்லை. ஆகவே நம் மக்களுக்குத் திராவிடர் என்பதைத் தவிர வேறு பெயர் இன்றைய தினம் சொல்வதற்கு இல்லை. ஏதாவது சொல்ல வேண்டுமானால் சூத்திரர், தாசர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தப் பெயர் மிகவும் இழிவான கருத்துடையதாகும். இந்த நாட்டிலே மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 3-பேராகிய பார்ப்பனரைத் தவிர்த்து மற்ற எல்லா பேர்களும் சூத்திரர்கள்தான். அந்தச் சூத்திரர்களைத்தான் நான் இன்று திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறது.

பார்ப்பனர் தன்மை என்பது ஆரியம் எனப்படுவது. நம்மை திராவிடர் என்று சொல்லாமல் வேறு பெயரால் அழைத்துக் கொள்ளலாம் என்றால், மேலே சொல்லியபடி சூத்திரர்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. தமிழர்கள் என்று சொன்னால் ஆகாதா என்றால், இந்த சூத்திரத்தன்மையை அது குறிப்பிடவில்லை. ஒரு காலத்திலே தமிழர்கள் என்று குறித்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது அது மொழியின் பேரால் போய்விட்டது. ஆகையால் தமிழர் என்று இப்பொழுது சொன்னால் அந்த மொழியைப் பேசுகிறவர்களை மாத்திரம் குறிக்கிறது. அதில் பார்ப்பானும் சேர்ந்து கொள்ளுகிறான். ஆகையால்தான் சூத்திரன் என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் திராவிடர்கள் என்று குறிப்பிடுவதிலே, யாரை குறிப்பிடுகிற தென்றால், பார்ப்பனரைத் தவிர்த்த மற்ற மக்களை, சமுதாயத் துறையில் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், நீசர்கள் என்றும் சொல்லப்படுகிறவர்களைத்தான்.

ஆகையால், இன்று நமக்குத் திராவிடர் சமுதாயத் துறையிலே உள்ள இழிவு நீக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கிய கொள்கை. திராவிடர்கள் இன்றைய தினம் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்? 100-க்கு 98-பேர்கள் உள்ள சமுதாயம் நீச ஜாதி. ஆனால், 100-க்கு மூன்று பேர் இருக்கிற சமுதாயம் பார்ப்பன ஜாதி. அதாவது மேல் ஜாதி. இந்த நிலை மாறவேண்டும்.


தோழர்களே! இந்தச் சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிற நாம் தான், இந்த நாட்டு பழங்குடி மக்கள். பார்ப்பனர் என்று சொல்லப்படுபவர்கள் இந்த நாட்டுக்கு, வெளி நாடுகளிலிருந்து பிழைப்புக்காக குடியேறினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இது நான் சொல்லுவதில்லை. ஆதாரத்தின்படி, ஆராய்ச்சியின்படி, பார்ப்பனரால் எழுதி வைத்திருக்கிற ஆதாரத்தின்படி ஆரியன் என்றும், இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் ஆரிய முறைப்படி நடக்கிறார்கள். இந்த பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குச் சுமார் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பிழைக்க வந்தவர்கள். வந்ததும் இந்த நாட்டு வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாமல் இந்த நாட்டு வளப்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

நாம் உழைக்கிறோம், உழுகிறோம்; நம்மால்தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யாவிட்டால் இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம். நம்மால்தான் அத்தனை பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம் தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால் தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதி எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலியன வசதியளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவு படுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எங்காவது உழுகிறானா? எந்தப் பார்ப்பாத்தியாவது வீடு கூட்டுகிறாளா? கல்லுடைக்கிறார்களா? ஏன்? இவை எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவை எல்லாம் மாறி நாம் முன்னேறவேண்டுமென்றுதான் கேட்கிறோம்.

மற்றவர்களுக்கெல்லாம் உயர்ந்த வசதியாக, பார்ப்பானாக இருப்பதால்தான் 100-க்கு 100-பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் நாம் சூத்திரர்களாக ஆக்கப்பட்டிருப்பதால் தான் தற்குறிகளாக சகல தொழில்களும் செய்யும்படியாக ஆகிவிட்டோம். அவர்கள் இன்றைய தினம் மோட்சத்திற்கு டிக்கட் கொடுக்கிறார்கள். கடவுளுக்கு அடுத்தபடியில் இருக்கிறார்கள். நம்முடைய மதத்தின் தத்துவத்தின்படி பார்ப்பான்தான் படிக்க வேண்டும்; சூத்திரன் படிக்கக்கூடாது; பார்ப்பனனுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று இருக்கிறது. மதத்தின் பேரால் கடவுள் சொன்னார் என்கிற பேரால் இருந்து வருகிறது. மற்றவர்கள் எல்லாம் தற்குறிகளாக இருந்து வருகிறார்கள்.

இவற்றைப் பற்றி நாம் கவனிப்பது இல்லை. அதாவது கவனிக்கப் போனால், மதம் என்ன சொல்லுகிறது? கடவுளுக்கு இது விரோதம். சாஸ்திரம் என்ன சொல்லுகிறது? என்று பார்க்கிறோம். ஆனால், இதை மக்களுக்கு எடுத்துக் சொல்லும் பொறுப்பில் இதுவரை யாரும் புறப்பட்டதில்லை, எங்களைத் தவிர. நாங்கள் தான் தோன்றி இருக்கிறோம். நாங்கள் என்ன பெரிய வீரர்களா? இல்லை மகா சூரர்களா? நமக்கு முன்னால் இருந்த 63-நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகாத்மாக்கள் எல்லோரையும் விட நாங்கள் என்ன உசத்தியா? இப்பொழுது தான், சட்டசபையிலே மெம்பராக தலைவராக இருக்கும் சிவவண்முகம் பிள்ளையால் கேட்க முடியுமா? சர்.சண்முகம் செட்டியார், சர் ராமசாமி முதலியார், ராஜா சர் முத்தையா செட்டியார், பெரிய பெரிய அரசாங்கப் புலவர்கள் இருக்கிறார்களே, இவர்களுக்காவது வாயில் வருமா? முடியவே முடியாது! காரணம்? இவர்கள் எல்லாம் பார்ப்பானுக்கும் அவனால் ஆக்கப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள் ஆகியவற்றுக்கும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தினம் நாங்கள் அவற்றை லட்சியப்படுத்துவது இல்லை. ஏன்? என்றால் எங்களுக்கு இதைப் பற்றிய கவலையோ பயமோ கிடையாது. இந்த காரியத்திற்கு எங்களைத் தவிர, இன்றும் வெகுநாட்கள் வரை யாரும் தோன்றமாட்டான் என்பது உறுதி.

சுதந்திர சர்க்கார், "தீண்டாமையை ஒழித்தோம்", அப்படி இப்படி என்று எல்லாம் ஒப்பாரி வைக்கிற காங்கிரஸ்காரன் வாயில் கூட ஜாதியை ஒழித்தோம், சாஸ்திரங்கள், கடவுள்கள் எல்லாம் ஒதுக்கிவிட்டோம் என்று வந்ததே கிடையாது.

ஆகையால் இந்த அருமையான காரியத்தைத் திராவிடர் கழகம்தான் செய்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுக்கு இந்த நாட்டுக் கடவுள்களைப் பற்றி கவலை இல்லை. கடவுள்களை எல்லாம் குழவிக் கற்கள், மண்ணாங்கட்டிகள், மாடு, பாம்பு, கழுகு என்றும், சாஸ்திரங்களை எல்லாம் குப்பை கூளங்கள் என்றும், ஆபாசங்கள் நிரம்பியது என்றும், மதத்தை முட்டாள்தனம் என்றும், அடிமைக்கட்டுப்பாடானது என்றும் நினைக்கிறோம். ஜாதி ஒழிய வேண்டுமென்றுதான் அர்த்தம், சாஸ்திரப் புராணங்களைக் கிழித்துக் குப்பையில் போட வேண்டியதுதான். நெருப்பு வைத்து கொளுத்த வேண்டியதுதான் என்று அருத்தம். ஏன் ஜாதி கூடாது என்றால் ஜாதியைக் கூறக்கூடிய ஆதாரங்களும் ஜாதி உற்பத்தி செய்த கடவுளும் மதமும் கூடாது என்றுதான் அர்த்தம்.

இவற்றைச் சொல்ல இன்று யார் சம்மதிப்பார்கள்? இவர்களிடம் போய் சிலப்பதிகாரத்தில் ஜாதி இருக்கிறது; ராமாயணத்தில் ஜாதி இருக்கிறது என்று சொன்னால் அப்படியானால் நமக்கும் இருக்கட்டும் ஜாதி என்பார்களே தவிர அவை தவறு என்று சொல்ல எங்களை விட்டால் வேறு ஆள் இல்லை. எங்களைத் தவிர வேறு யாருக்கும் தைரியமும் வராது. வருமா என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.


தோழர்களே! இன்று நம் பெண்களைத் திருத்தினாலும் திருத்தலாம். ஆனால் படித்த அறிவாளிகளை அய்க்கோர்ட் ஜட்ஜீகளை, மாபெரும் டாக்டர், புலவர்களை, பண்டார சன்னதிகளைத் திருத்துவது கடினம். இன்று வரையில் மேற்கண்டவர்கள் உள்பட நாம் எல்லாம் பார்ப்பனர் வைப்பாட்டி மகன் அடிமை என்று தான் இருக்கிறது. ஆகவேதான் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று நாங்கள் பாடுபடுகிறோம். அவர்களுக்கு ஏனோ மான ஈனமில்லை.

ஆகவே தோழர்களே! இவற்றை எல்லாம் சொல்லி நாங்கள் கடவுள் இல்லை என்ற சொல்ல வந்ததாக நீங்கள் நினைக்கக் கூடாது. கடவுள் உண்டா, இல்லையா என்பது உங்களிடம் பேசுகிற பேச்சல்ல. அது அறிவுப் பேச்சு. ஆனால் உலகத்திலே 250-கோடி மக்களில் 20-கோடி மக்களாகிய நமக்குத்தானே பலகோடி கடவுள்களும், சாஸ்திரமும், மதமும், ஜாதியும் இருக்கின்றன. மீதி உள்ளவர்கள் எல்லோருக்கும் ஒரே கடவுள் ஒரே மதம் என்ற முறையில் மனிதர்களாகத்தானே வாழுகிறார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இவர்களுக்குள்ளே ஜாதி வேறுபாடு உண்டா? இவர்களுக்கு மதம் இல்லையா? சாஸ்திரம் இல்லையா? வேதம் இல்லையா? ஆனால் இவை ஏதும் ஜாதியைக் குறிப்பிடுபவையல்ல. இதைப் போல நாமும் ஜாதியற்று, மதம் அற்று, இதைக் காட்டுகிற சாஸ்திரம் அற்று வாழவேண்டுமென்று சொன்னால் எல்லோரும் நாசக்காரர்களாய் மதத் துரோகிகளாய் மதிக்கப்படுகிறோம்.

இன்று உண்மையிலேயே இவ்வளவு விஞ்ஞான அறிவு ஏற்பட்ட பிறகும் நாம் முட்டாள்களாக பழைய கருத்துக்களையே கட்டி அழுகிறோம். இன்று ஆகாய கப்பல்களும், கம்பியில்லா தந்தியும், ரேடியோவும் வந்து நம்மை அதிசயப்படுத்துகிற சமயத்தில், நாம் தேர் திருவிழாவும் கும்பாபிஷேகமும் செய்கிறோம். 20-மணி நேரத்தில் அமெரிக்கா போகிறான். ஆனால், நாம் கட்டை வண்டி கட்டிக் கொண்டு பிரயாணம் செய்கிறோம்.

ஆகையால் நாம் எடுத்துக் கொள்கிற முயற்சியின் பயனாக, சமுதாயத் துறையில் நாம் செய்கிற முயற்சியின் விளைவாக சுமார் அய்ந்து வருடத்திற்குள் பார்ப்பானோ, பறையனோ, சூத்திரனோ, பஞ்சமனோ, இருக்கக்கூடாது. இந்த மாதிரியான உணர்ச்சி வந்தால்தான் நமக்கு நன்மை கிடைக்கும். மற்றபடி சுதந்திரமோ, சுயராஜ்யமோ வந்தால் நம் அறிவு வளர்ந்து நாம் முன்னுக்கு வரமுடியாது. ஆகவே, எல்லோரும் இதற்காகப் பாடுபட வேண்டும் என்று சொல்லுகிறேன்.

இன்று நமக்கு இவற்றின் பேரால் அறிவு மட்டும் கெட்டுப் போவதில்லை. ஏராளமான பணமும் பாழ் செலவு செய்யப்படுகிறது. எவ்வளவு பணம் இந்த கடவுள்களால் வரும்படி வருகிறதெனப் பாருங்கள். திருப்பதி கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 40-லட்சம் ரூபாய் வரும்படி இதையெல்லாம் அனுபவிப்பவர்கள் யார்? மதுரை கோவிலுக்கு 7, 5-லட்ச ரூபாய் வரும்படி; இதையெல்லாம் யார் உண்டு கொழுக்கிறார்கள்? சிறீங்கத்துக்கு 10-லட்சம் ரூபாய் வரும்படி. இதையெல்லாம் யார் மோசடி செய்கிறார்கள்? இவை மக்களுடைய முன்னேற்றத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறதா? பின் எங்கே போகிறது? பாழும் மதில்களைக் கட்டுவதற்குச் செலவு செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் தொந்தி நிரம்புகிறது. இந்தப் பாழாய்ப் போகும் பணத்தில் ஒரு பகுதியை மக்கள் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான ஸ்தாபனங்கள் ஏற்படுத்த, அறிவு ஊட்டும் அலுவலகங்களைச் செய்யும்படி செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்?

ஆகையால் இனி கடவுள்கள் என்ற பெயரால் ஒரு காசுகூட கொடுக்கக்கூடாது. பத்து சதுர அடி நிலம் கூட கொடுக்கக் கூடாது. நாம் உண்டாக்கின சாமி, நம்மால் கட்டப்பட்ட கோவில், ஆனால் நாம் அதைத் தொடக்கூடாது. நாம் தொட்டால் சாமி செத்துப் போகும். கும்பாபிஷேகத்துக்கு நாம் செலவு செய்கிறோம். ஆனால் பார்ப்பான் சாமியைத் தொடுவது, சாப்பாடு போடுவது, சகலவற்றிலும் அவனுக்குத் தான் அதிகாரம்.

ஆகையால் இந்த மாதிரியான கண்மூடித்தனமான உணர்ச்சிகளை விட்டுவிட்டு அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும். அப்படி நடந்தால் இந்த ஆயிரம் வருடக் கணக்காக நமக்கும் நம் தாய்மார்களுக்கும் இருந்து வருகிற சூத்திரப் பட்டம் பறந்துபோகும்.

இதற்காகத்தான் நாங்கள் சமுதாயத் துறையில் சமத்துவம் வேண்டுமென்று கேட்கிறோம். மக்கள் பிறவியிலே உயர்வு தாழ்வு இருக்கக் கூடாது. எனவே தோழர்களே! சமுதாயத்துறையில் எங்களுடைய திட்டத்தை எடுத்துச் சொன்னோம். இது சரி என ஒப்புக் கொண்டால் நீங்கள் அதன்படி நடக்க வேண்டுமென்று சொல்கிறேன்.


------------------------ 26.07.1951-இல் ஈரோடு பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 30.07.1951

18 comments:

தமிழ் ஓவியா said...

" பெரியார்ஒரு கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.

அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!

அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!

தமிழன் ஒரு நாட்டுக்குச் சொந்தக்காரன்!
தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!

இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!

ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.

இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வதைப்படுகிறான்.

எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!

எனவேதான், பெரியார் தைரியம் பெற்றிருந்தார்!

அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது, தளரா உழைப்பு!

அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது!

(திராவிடநாடு - 03.06.1945)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்லோகம்

பூஜை நேரத்தில் மட்டுமல்ல; வீட்டில் சமைக்கும்போதுகூட ஸ்லோகங்களைச் சொல் லிக் கொண்டே வேலை செய்யலாமாம் - இதனால் பலன் கிடைக்குமாம்.

அது சரி, பிள்ளைகள் பாடம் படிக்கும் பொழுது எப்படி ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? சமைக்கும் போது ஸ்லோகம் சொல் லிக் கொண்டிருந்தால் கவனம் தப்பி உப்பும், காரமும் அதிகமாகி மருத் துவமனையில் சேர வேண்டியதுதானா?

Read more: http://viduthalai.in/e-paper/89212.html#ixzz3G4tccVQM

தமிழ் ஓவியா said...

அழியாப் புகழ்


மனிதன் தோன்றியது மற்றவனுக்கு உபகாரம் செய்ய என்று எண்ணியே செயலாற்ற வேண்டும். அப்படி நடப்பவன்தான் தனக்கு அழியாப் புகழினைச் சம்பாதித்துக் கொள்பவன் ஆவான்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/89191.html#ixzz3G4uUPAcE

தமிழ் ஓவியா said...

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை


சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக் கூடாது.

அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள் ளுங்கள்.

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்குச் சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்குச் சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/89193.html#ixzz3G4vCG9cI

தமிழ் ஓவியா said...

மருத்துவக் குணம் நிறைந்த முருங்கைக் கீரை

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்க ளுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என் கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக் களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டிய லிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப் படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கைக் கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கைக் கீரை சாப்பிடாத வர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட லாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ செல்வம் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் முருங்கை பல நோய்களைக் குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். பச்சை கீரைகளில் எண்ணி லடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். இனிமேல் தவற விடாதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/89186.html#ixzz3G4vW1H7c

தமிழ் ஓவியா said...

அக்டோபர் 14: உலகத் தர நாள்


ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு பொருட்கள் தரமானவையா என்பதை நம்பிக்கைக்கு உட்பட்டு வாங்கிவந்தனர். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு நவீனமயமாதல் காரணமாக கலப்படம் உருவாகியது. இதற்கு முக்கியக் காரணம் தொழிற்போட்டி என்று கூறினாலும் பேராசையும் ஒரு காரணமாகிவிட்டது. முக்கியமாக உணவுப்பொருள் கலப்படம் அதிக அளவில் நடக்கத் துவங்கியது.

இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு மிகவும் தேவையான ஒன்றாகும். விடுதலையடைந்த பிறகு இந்தியாவில் நடுத்தர மக்களிடம் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.

தற்போது உலகம் முழுவதும் பல்வேறு பொருட்கள் பல நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி-இறக்குமதி நடைபெறும் நிலையில் நிலையில் தரக்கட்டுப்பாடு பற்றிய பொதுத்திட்டத்தை வரையறை செய்வது முக்கியமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக அய்.எஸ்.ஓ என்ற அமைப்பு 1974-ஆம் ஆண்டு ஜெனி வாவில் துவங்கப்பட்டது.

அய்.எஸ்.ஓ அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அக்டோபர் 14 ஆம் தேதியே உலகத் தர தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில் தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதற்கு அறிவுரை மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்படுகின்றன. பன்னாட்டு தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு உயர் அமைப்பாக உலகத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் விளங்குகிறது.

உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய தர நிர்ண யங்களைப் பொருள்களுக்கு ஏற்படுத்தி உலக நாடு களிடையே தடையின்றி வர்த்தகம் வளர வழி செய்வதே முக்கிய குறிக்கோளாகும். ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பில் வளர்ந்த நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தன. படிப்படியாக அனைத்து நாடுகளும் உறுப்பினராகி இருக்கின்றன. 500-க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் உலகத் தர நிர்ணய நிறுவனத் துக்கு ஒத்துழைப்பைத் தந்து தரக்கட்டுப்பாட்டை, விதிகளுக்கு உட்பட்டு கடைப்பிடித்து வருகின்றன.

இந்தியத் தர நிர்ணய அமைப்பு (அய்.எஸ்.அய்) ஆரம்ப காலத்திலிருந்தே, உலகத்தர நிர்ணய நிறுவனம், உலக மின்தொழில் நுட்பக்குழு ஆகிய நிறுவனங் களோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியத் தர நிர்ணய நிறுவனம், உலகத் தர நிர்ணய நிறுவனத்தின் தொழில் நுட்பக்குழுக்கள், உலக மின்தொழில் நுட்பக் குழுக்கள், தொழில் நுட்பக் குழுக்கள் போன்றவற்றில் உறுப்பினராக உள்ளது.

அய்.எஸ்.அய். தர முத்திரையிடப்பட்ட பொருள் களை வாங்குவதால் நுகர்வோருக்கு என்ன பயன்?

கலப்படப் பொருள்கள் மற்றும் தரமற்ற பொருள்களால் ஏற்படும் விபத்துகள், ஆபத்து களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களின் தரம், சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. தரமான பொருள்கள் என்பதால் விற்பனை அதிகமாகவும், விரைவாகவும் இருக்கிறது. இதனால், அதிக உற்பத்தி, குறைந்த விலை சாத்தியமாகிறது.

மத்திய அரசு நுகர்வோர் நலன் கருதி, உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களையும், விபத்து ஏற்படுத்தும் பொருள்களையும் கட்டாய அய்.எஸ்.அய். தர முத்திரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. தரக்கட்டுப்பாடு மூலம் கிடைக்கும் நற்பயன்களை நுகர்வோர் உணர்வது இல்லை. நுகர்வோர்களிடம் தர விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், உற்பத்தி யாளர்களிடையே தரம் உயர்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் எண்ணத்தை உண்டாக்கவும் உலகத் தர தினத்தில் கருத்தரங்கள், கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியத்தர நிர்ணய தலைமைச் செயலகம் டில்லியிலும், கிளைஅலுவலகங்கள் கொல்கத்தா, மும்பை, சண்டிகார், சென்னை போன்ற இடங்களிலும் அமைந்துள்ளன.

அக்மார்க் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட நம்நாடு உணவுப்பொருட்களில் தனித்துவம் கொண்ட முத்திரையை அய்.எஸ்.ஓ.வின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு செயல்படுத்தி வருகிறது. தரம் மற்றும் தூய்மைக்கு அடையாளமாக அக்மார்க் அடையாளம் இருக்கிறது. பொதுமக்களாகிய நாம், தரக்கட்டுப்பாட்டில் மிகவும் அக்கறை செலுத்த வேண்டும். முன்பு கூறியது போல் கலப்படம் என்பது முழு சமூகத்தையே பாதிக்கும் ஒன்றாகும்.

லாபம் மற்றும் பேராசை காரணமாக கலப்படம் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனைச் செய்யும் நபர்களைப் பற்றி தெரிந்தால் உடனே மாநகராட்சி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் கொடுக்கவேண்டும்.

அயல்நாடுகளில் தரக்கட்டுப்பாடுகள் குறித்து அக்டோபர் 14 அன்று பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் இந்தியாவில் தனியார் நடத்தும் சில கல்வி நிறுவ னங்கள் மட்டும் விளம்பரத்திற்காக இந்த நாளைக் கொண்டாடிவருகின்றனர்.

நாகரிகம் மற்றும் தொழில் நுட்பம் பெருகி விட்ட காலத்தில் தரக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை நாமும் பெற்று மற்றவர்களுக்கும் இவ்விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-5/89250.html#ixzz3G7vo1REf

தமிழ் ஓவியா said...

பிரச்சாரக் கதைகள்

திராவிட மக்களை ஆரிய வலையில் விழச் செய்து அவர் களைத் தன்மான மற்றவராக, பகுத் தறிவற்றவராக ஆக்கி மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் பிரச்சாரக் கதைகளே பாரதம், இராமாயணம், பாகவதமாகும்.
(விடுதலை, 18.2.1968)

Read more: http://viduthalai.in/page-2/89238.html#ixzz3G7wJPqt5

தமிழ் ஓவியா said...

குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை


முஸ்லிம் பெண்கள் கல்விக்கு எதிராக தாலிபன்கள் மேற்கொண்டு வரும் பிற்போக்குத்தனத்தை எதிர்த்துத் துணிவாகப் போராடி வரும் சிறுமி மலாலாவுக்கும், குழந்தைகள் நல உரிமை என்னும் கண்ணோட்டத்தில் குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதை ஓர் இயக்கமாக நடத்தி வரும் கைலாஷ் சத்யார்த்தி என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன் பற்றிய திசையில் இந்நிகழ்ச்சி ஓர் உரத்த சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது - எழுப்பிடவும் வேண்டும். இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் தெரிவித்துள்ளது.

உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளாக ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது. (ஜூன் 1) இதையொட்டி, மத்திய புள்ளியியல் துறையின் கீழ் உள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் 50 லட்சம் குழந்தைத் தொழி லாளர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரகண்டில் 17.5 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம், ராஜஸ்தானில் 4 லட்சம், குஜராத்தில் 3.9 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இது குறித்து சேவ் தி சில்ட்ரன் அமைப்பை சேர்ந்த தாமஸ் சாண்டி கூறும்போது, 14 வயதுக்கு உட்பட்டவர்களை, வீடுகளி லும் ஓட்டல்களிலும் வேலைக்கு வைக்கத் தடை உள்ளது. இருந்த போதிலும் ஏராளமான குழந்தைகள் ஓட்டல்களிலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற் சாலைகளிலும் வேலைக்கு விடப்படுகின்றனர் என்றார்.

தமிழ் ஓவியா said...


"உலகிலுள்ள குழந்தைத் தொழிலாளர்களில் 40 விழுக்காடு இந்தியாவில் உள்ளனர். இதில் தலைநகர் தில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதுடன் ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் வேலை செய்கிறார்கள்" என குழந்தைகள் தன்னார்வ அமைப்பான க்ரெய் பில்லிப்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "51 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முதலாளிகள் படிக்க வேண்டிய அய்ந்து முதல் பதினான்கு வயதுவரை உள்ள குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளனர். இந்த ஆய்வில் நாற்பத்தேழு சதவிகித முதலாளிகள் சட்டத்தை அறிந்திருப்பதாகவும் ஆனாலும் அது அவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்துவதிலிருந்து தடுப்பதில்லை" எனவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்தது. குழந்தைத் தொழி லாளர்களை மீட்கும் நோக்குடன் செயல்படும் இந்த அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் இதை வெளி யிட்டது. இந்த ஆய்வறிக்கை மூலம் குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் அதாவது எழுபத்தைந்து சதவிகிதம் பேர் தேனீர்க் கடைகள், உணவகங்கள் அல்லது சிறிய கடைகளில் பணிபுரிவ தாகவும், விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற இடங்களில் பணி நெறிமுறைகள் குறைபாடுகள் முழுவதுமாக காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.

14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டு களுக்குள் அடிப்படைக் கல்வியை அளிப்பது என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகின்றது. இந்தச் சட்ட திட்டம் மட்டும் சரியாகச் செயல்படுத்தப்பட்டு இருக் குமானால், இந்தக் குழந்தைத் தொழிலாளர்ப் பிரச்சினை என்ற கேள்வியே எழுந்திருக்காது.

இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்ற பிரச் சினையில்கூட வருணாசிரம தர்மத்தின் ஆணி வேர் ஆழமாக ஊடுருவியுள்ளதை யார்தான் மறுக்க முடியும்?

எந்தப் பகுதி மக்களிடத்தில் கல்வி வளர்ச்சி யில்லையோ அந்தப் பகுதியிலிருந்துதான் இந்த குழந்தைத் தொழிலாளர்கள் உற்பத்தியாகிறார்கள்.

சமூக நீதி முழுமையான அளவு கிடைக்கும் ஒரு சூழலில்தான், கால கட்டத்தில்தான் இந்தக் குழந்தைத் தொழிலாளர் என்னும் கொடுமைக்கு முடிவு ஏற்பட முடியும்.

இன்னொரு வகையில் இது ஒரு மனித உரிமை மீறலும்கூட! குழந்தைகள் நல உரிமைகளுக்காகப் பாடுபட்டு நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்யார்த்தி கூறியுள்ள கருத்து கவனிக்கத்தக்கதாகும்.
இது ஒன்றும் சாதாரணப் பிரச்சினையல்ல. பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; வெறும் சட்டப் பிரச்சினையும் அல்ல. பல்வேறு விதமான சமூகப் பிரச்சினையின் கலவையாகும். சமூகத்தில் வேரோடிப் போயிருக்கும் மிக மோசமான பிரச்சினை - என்று குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் உலகக் குழந்தைகள் நாளை ஒரு சடங்காக அனுசரிப்பதால் உருப்படியான விளைவுகள் ஏற்படப் போவதில்லை.

உயர் ஜாதி, உயர் பணக்கார வீட்டில் பிறந்தாலும் சரி, கீழ் ஜாதி என்று கீழே தள்ளப்பட்ட குடும்பங்களில், வறுமைக் கோட்டுக்கும்கீழ் கிடந்துழலும் குடும்பங் களில் பிறந்தாலும் சரி, குழந்தை குழந்தைதான்! குறிப்பிட்ட குடும்பங்களில் பிறந்து விட்டதால் அவர்களின் தலையெழுத்து அப்படித்தான் என்று நினைக்கும் மனப்பான்மைக்குக் கல்லறை எழுப்பப்பட வேண்டும். குழந்தைகள் நலனுக்குப் பாடுபட்டவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ள இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனை எங்கும் பாய்ந்து பரவட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/89239.html#ixzz3G7wUeSeV

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடே பின்பற்றட்டும்! 56 ஆண்டுகளாக தீபாவளியைப் புறக்கணிக்கும் 12 பட்டி கிராமங்கள்


தீபாவளி பற்றி துளி கூட பரபரப்பு இன்றி, சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடா மல் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றி யத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி. இதில் மாம்பட்டி, ஒப்பி லான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடைய பட்டி, கிலுகிலுப்பைப் பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப் புபட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவ ளியே கொண்டாடுவ தில்லை.வட்டி மேல் வட்டி கட்டி நொந்த கிராமத்தினர் அய்ப்பசி மழைக்காலத்தில் பாசனப் பணிகளை தொடங்குவ தும், அதற்காக கடன் வாங்கி விதைப்பு செய்வ தும் விவசாயிகள் வழக்கம். தை மாதம் அறுவடை யின்போது, வாங்கிய கடனுக்கு வட்டியாக நெல், தானியங்களை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அய்ப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்காக கூடுத லாகக் கடன் பட்டு வட்டி மேல் வட்டி கட்டி பெருந் துயரம் தொடர்ந்துள்ளது.

இதற்கு முடிவு கட்ட, கடந்த 1958ஆ-ம் ஆண்டு பெரிய அம்பலகாரர் பெரி.சேவுகன் அம்பலம் தலைமையில் ஊர்க்கூட் டம் போட்டுள்ளனர். அப் போது கிராம தெய்வ மான காடுகாவலர்சாமி மீது ஆணையாக, இனி தீபாவளி கொண்டாடுவ தில்லை என ஒருமித்து முடிவெடுத்தனர்.

விவசாயிகளை வாட்டி வதைக்கும் தீபாவளியை, துறப்பது என்ற கொள்கை முடிவை கடந்த 56 ஆண் டுகளாக இப்போதும் கடைப்பிடித்து வருகின் றனர்.

இதுகுறித்து பெரிய அம்பலகாரர் சே. சபாபதி கூறியதாவது: தீபாவளி வர்ற காலம் மழைக்கால மாகவும், விதைப்பு செய் யும் காலமாகவும் இருக் கும். அப்போ யாரு கைல யும் காசு இருக்காது. கையில இருக்குற நெல், தானியக் கையிருப்பும் கரஞ்சு, வெளியில வட் டிக்கு வாங்குற நெலம ஏற்பட்டுச்சு.

அப்போல்லாம், வட் டிக்கு வாங்கின 100 ரூபாய்க்கு ஒரு மூட்டை நெல் கொடுக்கணும். அந்த நேரத்தில வர்ற தீபா வளிய, கடன் வாங்கித் தான் கொண்டாடணும்ங் கிற நிலைமை. அது எல்லாருக்கும் கஷ்டத்த கொடுத்துச்சு. அப்பத்தான் கூட்டம் போட்டு, தீபா வளியை நிப்பாட்டிட்டு, அதுக்கு பதிலா பொங்கல சிறப்பா கொண்டாடுற துன்னு முடிவெடுத்தாங்க. தீபாவளிக்கு என்னென்ன பயன்படுத்துறோமோ அத பொங்கலன்னிக்கி பயன் படுத்தி கொண்டாட லாம்னு எல்லாரும் சேர்ந்து முடிவு செஞ் சாங்க. தீபாவளிய இருக்கிற வங்க கொண்டாடுவாங்க, இல்லாத வீட்டுப் புள் ளைக என்ன செய்யும்?

இருக்குற வீட்டுப் புள்ளைங் கோடி (புத் தாடை) கட்டி நிக்கும் போது, இல்லாத வீட்டுப் புள்ளைங்க பழசோட நின்னா மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதப்பாக் குறப்போ புள்ளைய பெத் தவங்களும் நொந்து போவாங்க.

அதனால, எல்லாரும் சந்தோஷமா இருக்குற நாளை தீபாவளியா கொண்டாடுவோம்னு நிப்பாட்டி 56 வருஷமாச்சு.

இந்த ஊரைச் சேர்ந் தவங்க எங்க இருந்தாலும், தீபாவளியன்னிக்கி பலகாரம் கூட போடாம சாதம், கஞ்சியத்தான் குடிப்பாங்க. தீபாவளி யன்னிக்கி இங்க பொண்ணு எடுத்தவங்களை விருந்துக்கு அழைக்கமாட் டோம், வெளியில பொண்ணு கட்டுனவங் களும் விருந்துக்கு போக மாட்டாங்க. மனக்குறை வந்துட கூடாதுங்கிறதால தோதுப்பட்ட இன்னொரு நாளில விருந்து வெப் பாங்க. சின்னப் புள்ளையில இருந்து பெரியாளுக வரைக்கும் இதை கடைப் புடுச்சி வர்றோம். 56 வரு ஷமா தைப்பொங்கலத் தான் தீபாவளியா கொண்டாடுறோம். என் றார்.

இக்கிராமத்தில் பெரிய வர்கள் வகுத்த கொள் கைக்காக சிறுவர்களும் பட்டாசு வெடிக்கும் ஆசைகளை துறந்து, விவசாயப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளாதாரம் காரணமாகக் கூறப்பட் டாலும் தீபாவளி என்பது மூடப்பண்டிகை மட்டு மல்ல - திராவிடர்களை இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்பது மிகவும் முக்கியமானது.

Read more: http://viduthalai.in/e-paper/89260.html#ixzz3G7wifdfc

தமிழ் ஓவியா said...

‪‎பார்ப்பனர்_குறித்து‬
‪‎தந்தை_பெரியார்_அவர்களின்_கூற்று‬ :
" ஆங்கிலோ - இந்தியர்கள் எப்படியோ அதே போலத்தான் இந்நாட்டு பார்ப்பனர்களும் ; ஆங்கிலோ - இந்தியர்கள் நம் நாட்டு தாய்மார்கள் ஈன்றெடுத்தவர்கள் தாமே. ஆனால் அவர்களுக்கு சற்றாவது நம் நாட்டு உணர்ச்சி இருக்கிறதா? நமது மக்களைப் பார்த்தால் டேய் டமில் மனுஷா என்று கேவலமாகத்தானே கூறுகின்றனர். அவர்கள் யார்? எந்த நாட்டில் பிறந்தவர்கள்? என்ற வரலாற்றை அறியாமல், தாம் ஏதோ அய்ரோப்பாவில் பிறந்து இங்கு வந்து குடியேறியதுபோலச் சாதி ஆணவத்துடன் அல்லவா நடக்கிறார்கள்!
அதைப் போலவே இந்நாட்டு பார்ப்பனர்களும் மேல் நாட்டில் இருந்து வந்து குடியேறிய ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்களுக்கும் பிறந்தவர்களாய் இருந்தும் கூட, ஆரிய சாதி முறைகளையும் அதற்கான ஆணவத்தையும் கொண்டு நாட்டுக்குரிய நம்மைக் கீழ் சாதிகளாக அடிமைகளாக மிதித்து நடத்துகிறார்கள்.
(குடியரசு 8-5-1949)
‪அண்ணல்_அம்பேத்கர்_அவர்களின்_கூற்று‬ :
" தமது மூதாதையர்கள் உருவாக்கிய பார்ப்பானிய தத்துவத்தை ஒவ்வொரு பார்ப்பானும் நம்புகிறான். இந்துச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அன்னியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்தள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரண்டு பிரிவினரும் இரு வேறு அயல் நாட்டினரைப் போலத்தான் தோன்றுவார்கள். ஒரு ஜெர்மனியனுக்கு ஒரு பிரெஞ்சுக்காரன் எப்படி அந்நியனோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அந்நியனோ, அது போலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான். "
(காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன?, பக்கம் 215)

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவரின் நூல்பற்றி தி இந்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதி வெளிவந்த கீதையின் மறுபக்கம் நூல்பற்றி இன்றைய தி இந்து (தமிழ்) நாளிதழ் எழுதி யிருப்பதாவது:

கீதையின் மறுபக்கம் பகவத் கீதையைப் பகுத்தறிவு கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் நூல்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள இந்நூல் கீதையை அறிவியல் பார்வையுடனும், வரலாற்றுக் கண்ணோட்டத்துடனும் தீவிரமாக விமர்சிக்கிறது.

திராவிடர் கழகம் 1998 இல் வெளியிட்ட இந்நூல் கீதையைபற்றிய மாற்றுப் பார்வையைத் தர்க்கப் பூர்வமாக முன்வைக்கிறது.

- இதுதான் இந்துவின் விமர்சனம்.

Read more: http://viduthalai.in/e-paper/89327.html#ixzz3GDy3Nl2f

தமிழ் ஓவியா said...

பட்டாசு வெடிக்காதீங்க!


குழந்தைத் தொழிலாளர் மீட்புப் பணிக்காக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி என்ன கூறு கிறார் தெரியுமா?

குழந்தைகளே தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதீர்!

நாடு முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களை வைத்துத்தான் பட்டாசுகளை உற்பத்தி செய்கிறார்கள்

அது மட்டுமா? பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலும் பாதிக் கப்படுகிறது. அதனால் நோயும் பரவுகிறது என்று கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/89302.html#ixzz3GDyHvYIB

தமிழ் ஓவியா said...

பிச்சைக்காரன் யார்?



பாடுபடச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு ஏமாற்றுவதாலும், சண்டித்தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள். - (குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/89347.html#ixzz3GDyk22rX

தமிழ் ஓவியா said...

ஜெர்மனியின் கொல்ராபி என்ற அருமையான உணவுத் தண்டு!


காய்கறி தண்டுகளில் ஜெர்மனி மொழியில் ”கொல் ராபி” (Kohl rabi)என்று அழைக்கப்படும் காய்கறித் தண்டுபற்றி இணையத்தில் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள் வதில் மகிழ்ச்சி.

கேபேஜ் முட்டைகோசு - டர்னிப் என்ற காய்கறி குடும்ப வகையறாவைச் சார்ந்த மெல்லிய தண்டு - Purple (ஊதா) கலரில் வடிவமைப்பில் உள்ளது.

இதில் உள்ள ஏராளமான பொட்டா ஷியம் சத்து காரணமாக, இதைச் சாறாக ஆக்கியும்கூட குடிக்கிறார்களாம்!

நம் நாட்டு மருத்துவர்களேகூட, நோயாளிகளுக்கு பொட்டாஷியம் சத்துக் குறைவாக இருக்கிறது; கூட்ட வேண்டும் என்று கருதும்போது, இளநீரைக்கூட கொடுக்கச் சொல்வதும் உண்டு (பொட்டாஷியத்தை உடலில் குறைக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் இளநீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும் என்று அறிவுரை கூறுவர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும் கூறுவர்).

கேபேஜ் என்ற முட்டைக்கோசு, காலிப் பிளவர், பிராக்லி (Broccoli), கேல்(Kale), Collard Greens என்ற கீரை வகைகள், பிரசல்ஸ் ஸ்பரட்டுஸ் (Sproats) என்ற முளைகள் இவை களின் குடும்பத்தைச் சேர்ந்தது இது!

வெள்ளைக் கலரிலும் மற்றும் பல கலர்களிலும் கூட இந்த கொல் ராபி கடைகளில் அங்கே கிடைக்கிறது.

இது நார்ச்சத்து அதிகம் தரக்கூடியது (Rich dietary Fiber) மட்டுமல்ல, காரோட்டனாய்டுஸ் (Carotenoids) மற்றும் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பி வைட்டமின்கள் எல்லாம் ஏராளம் உடையதாகும்!

இது நல்ல Antioxident ம் ஆகும். உடலின் நலத்திற்கு ஊறு செய்பவை களைத் தடுத்து நிறுத்தும்.

மேலே கூறிய வைட்டமின்கள் மட்டுமா இதில் உள்ளன? மேலும் வியப் பாக உள்ளது கால்சியம், பொட்டா ஷியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், செம்பு (Copper) சத்து களும் இதில் அடக்கம்!

ரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல ரத் தமாக வைக்க இது பெரிய போர் வீரன் போல உதவவும் தயாராக உள்ளது!

அசிடோசிஸ் (Acidosis) என்ற அதிகமான ஆசிட் சுரத்தலை உடலில் தடுக்கவும், ஆஸ்துமா, புற்றுநோய் (கேன்சர்) முதலியவைகளுக்கு எதிரான சத்தை இது உடலுக்குத் தருகிறது. அந்த நோய்க் கிருமிகளை அழிக்கவும் முந்துகிறதாம்!

பச்சை ஆப்பிள் ஜூசில் (திரவத்தில்) (Juice) கலக்கி, இதனைக் குடித்தால் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்து கிறதாம்!

இருதயத்தையும்கூட - இதிலுள்ள பொட்டாஷிய சத்து காரணமாகப் பாதுகாக்கவும் உதவுகிறதாம்!
செரிமானத்திற்கும் இது பெரிதும் உதவுகிறதாம்!

தசை, நரம்புகளைப் பலப்படுத்திட இது மிகவும் பயன்படுகிறதாம்!

பிராஸ்டேட், கொலோன் கேன்சர் இவைகளுக்கு எதிராகவும் இது ஒரு உதவிடும் பாதுகாப்புப் பணியாளனாம்!

தோல் - சருமத்தையும் பாதுகாக் கிறது. எடை குறைக்கவும் உதவிடுமாம்!

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/89349.html#ixzz3GDysRMJT

தமிழ் ஓவியா said...

இலட்சியத்தை அடைய...


நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால், நாம் போகவேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது.
_ (குடிஅரசு, 4.3.1944)

Read more: http://viduthalai.in/page-2/89367.html#ixzz3GJo07zkZ

தமிழ் ஓவியா said...

முதலைக்கஞ்சாச் சிங்கம்!


முதலைக்கு அஞ்சாத சிங்கம் எது தெரியுமா? புளோவர் எனும் சின்னஞ்சிறு பறவைதான்.

எந்த உயிரைக் கண்டாலும் தன் வாய்க்குள் அனுப்பும் முதலை, இந்தப் பறவை வந்தால் மட்டும் வரவேற்கும் வகையில் வாய்த் திறந்து பற்களைக் காட்டுகிறது. இந்தப் பறவை முதலை வாய்க்குள் சென்று, முதலையின் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாமிசத் துண்டுகளைத் தனது ஆகாரமாக்கிக் கொண்டு சிட்டாகப் பறந்துவிடுகிறதாம்!

என்னே, விந்தை! முதலைக்கு அஞ்சாத சிங்கம் என்று இதனைக் கூறினால் என்ன?

Read more: http://viduthalai.in/page-8/89400.html#ixzz3GJpkkmqZ

தமிழ் ஓவியா said...


சிம்சாங் கார்ட்டூனும் யோகன் கார்ட்டூனும்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விவாதத்திற்குரிய கருத்துப் படம் ஒன்றை வெளியிட்டதாகப் பரபரப்பு கிளம்பியது.

அறிவியலாளர்கள் உள்ள பணக்கார நாடுகளின் Elite Space Clubக்குள் தலைப்பாகை, வேட்டியுடன் இந்தியர் ஒருவர் மாடு ஓட்டிக்கொண்டு வந்து அலுவலகக் கதவைத் தட்டுவது போன்று கருத்துப் படம் வரையப்பட்டுள்ளது.

இந்தியர்களை, குறிப்பாக மலையாள மக்களை இந்தக் கருத்துப்படம் கோபப்படுத்தி உள்ளதாம். (அவர்கள் ஆதிக்கம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகம் உள்ளதால் இருக்குமோ?) நியூயார்க் டைம்ஸ் பன்னாட்டுப் பதிப்பில் தலையங்கத்தை ஒட்டி வெளியிடப்பட்ட இந்த கருத்துப்படம் சிங்கப்பூர் ஓவியர் ஹெங் சிம்சாங் என்பவரால் வரையப்பட்டது.

பணக்கார, மேற்கத்திய நாடுகளால்தான் முடியும் என்பதை மாற்றி, இந்தியா செவ்வாய்க்கலன் ஏவியுள்ளது என்பதையே கருத்துப் படத்தின் ஓவியர் கருத்துப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துப்படத்தின் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினால், நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பைக் கோருகிறோம். ஓவியர் ஹெங் எந்தவிதத்திலும் இந்தியாவையோ, அதன் அரசு மற்றும் குடிமக்களையோ எதிராகக் கருதவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்திப் பிரிவின் சார்பில் அந்தப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆன்ட்ரியூ ரோசன்-தால் தெரிவித்துள்ளார்.

கோபம் எதற்கென்றால், தலைப்பாகை, கையில் மாடு என்று ஏழை வடநாட்டுக் குடியானவன் போல படம் போட்டு விட்டார்கள் என்பதற்காகவாம். சம்பந்த-மில்லாமல் தேசபக்தியும், ரோசமும் பொத்துக்-கொள்ளும் இவர்களுக்கு! இப்படித்தான் இந்த நாட்டின் வெகுமக்கள் இருக்கிறார்கள். அப்படியே இப்படம விமர்சிக்கிறது என்றாலும் அது மேலை நாடுகளையே ஏளனம் செய்கிறது. இந்தியாவைப் பாராட்டத்-தான் செய்கிறது. போகட்டும். இவர்களை இப்படியா விமர்சிப்பது? மங்கள்யானை அனுப்புவதற்கு கோயில், நாள், நேரம் என்று திரிந்தவர்கள் எங்கு எதை அனுப்பினால் என்ன? அடிப்படை அறிவில்லாவிட்டால் செவ்வாய்க்கலன் அனுப்பி என்ன பயன்? மைல் கல்லைக் கும்பிடும் இந்தக் கும்பலுக்கும், ராக்கெட் மாதிரியைக் காட்டி பகவானிடம் அப்ரூவல் வாங்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? எனக்கென்னமோ, சிம்சாங்கின் கார்ட்டூனை விட, நம் கார்ட்டூனிஸ்ட் யோகனின் கார்ட்டூன்தான் இதற்கு சரியென்று படுகிறது.