Search This Blog

11.3.14

பொது உடைகள் பற்றி பெரியார்

பொது உடைகள் I

இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந் திரமோ பெருவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளு வதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே லக்ஷியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்ப தைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தாரென்றும், ஒரே லக்ஷியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும் விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதை யறியலாம்.

ஆனால் நமது இந்தியாவைப் பற்றி பேசப் புறப்படுவோமேயானால் இது ஒரே சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே லக்ஷியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவானது பல மதங்களாய் பல ஜாதிகளாய் பிரிந்திருப்பதோடு பல உள்வகுப்புகளாகவும் பிரிந்திருப்பதல்லாமல் பாஷைகளிலும், உடை களிலும், நடை பாவனைகளிலும் பல பல மாறுதல்களைக் கொண்டிருக் கின்றது. சாதாரணமாக மதம் என்பதைப் பொறுத்த வரையிலாவது அவை தனித் தனி மனிதனுடைய நம்பிக்கையையும் மன உணர்ச்சியையும் சேர்ந்தது என்பதாக ஒரு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனாலும் பாஷைகளும் ஜாதிப் பிரிவுகளும் மக்கள் ஒருவருக்கொருவர் அன்னி யோன்னியம் பெற முடியாதபடி உயர்வு தாழ்வு கொடுமைகளுடன் எதற் காக இருக்க வேண்டும் என்பவற்றிற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும். பல பாஷைகள் மூலமும் மக்கள் பிரிவு படும்படியான பாஷை வேறுபாடு கள் ஏன் என்பதற்கும் இதுவரை யாரும் சமாதானம் சொல்லாததோடு ஒவ்வொரு ஜாதியாரும் தன் ஜாதி பெரிது, தன் ஜாதி பெரிது என்று சண்டை யிடுவதும், ஒவ்வொரு பாஷையாரும் தன் பாஷை பெரிது, தன் பாஷை பெரிது என்று வாதிடுவாருமாக இருந்து கொண்டு அவைகளுக்கு பிரதானம் தேடும் முறையில் வேற்றுமையையும் துவேஷத்தையும் வளர்த்திக் கொண்டு இருக்க வேண்டியுமிருக்கின்றன. இத்தியாதி வித்தியாசங்கள் எந்தக் காலத்திற்குத் தொலைவது? மக்கள் எந்த காலம் ஒன்றுபட்டு ஒரு சமூகமாகி ஒரு லக்ஷியம் கொள்ளுவது? என்பவைகளை நினைத்தால் மனம் ஒடிய வேண்டியிருக்கின்றதே தவிர நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் மக்கள் ஒன்றுபட்ட சாயலை அடைந்து பார்வையிலாவது அதாவது மனித னுக்கு மனிதன் பார்த்தவுடனே ஒரு வேற்றுமை உணர்ச்சி தோன்றுவதற் கில்லாமல் செய்து விட்டால் பிறகு ஒவ்வொருவரும் தன் தன் மதம் ஜாதி வகுப்புப் பாஷை ஆகியவைகளைக் காட்டிய பின்பு ஒரு சமயம் வேற்றுமை உணர்ச்சி உண்டானாலும் அதை அது முதலில் பார்த்தவுடன் தோன்றிய ஒற்றுமையுணர்ச்சியின் பலத்தால் தலை தூக்காதிருக்கும்படி செய்யலாம்.

ஆதலால் ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பல விதமான வேற்றுமை களை யொழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால் முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாயிருக்கும் உடையை ஒன்று படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

உதாரணமாக மற்ற நாட்டினரான சைனாகாரரையோ, ஜப்பான்கார ரையோ இன்று எடுத்துக்கொண்டால் அந்த நாட்டாரில் அந்த நாட்டாருக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாத சாயலையும், உடையையும் கொண்டிருப்பது யாவருமறியலாம்.

அதுபோலவே ஐரோப்பாக்காரருக்குள்ளும் மக்கள் சாயலையோ உடையையோ கொண்டு எந்தவித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடி யாது. இதனால் அத்தேச மக்களுக்கு தங்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு ஒரு லக்ஷியத்திற்கு பாடுபட முடிகின்றது.

இந்த உண்மையையும், இரகசியத்தையும் கண்டுதான் வீரர் கமால் பாக்ஷா அவர்கள் எல்லோரும் ஒரே வித உடையணிந்து ஒரே சாயலாகவே இருக்க வேண்டுமென்று உத்தரவு போட்டதின் மூலம் துருக்கி நாடு சிறிய தாக இருந்தாலும் அது தன்னையும் ஒரு வல்லரசென்று மதிக்கும் படி செய்து கொண்டது. இதைப் பின்பற்றியேதான் ஆப்கானிஸ்தானமும் முயற்சிக் கின்றது.

ஆகவே இந்த கொள்கையானது நமது இந்தியாவுக்கு உலகத்திலுள்ள மற்றெல்லா நாட்டைக் காட்டிலும் மிக்க அவசியமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.

இத்தியாதி காரணங்கள் கொண்டு நமது நாட்டிற்கும் இப்போது வெகு அவசரமாக உடையும், சாயலும் மாற்றப்பட்டு ஒன்றுபோல் தோன்றும்படி செய்ய வேண்டியது அவசியமென்று கருதியே நாம் இதை எழுத முற்பட் டோம். இவ்வெண்ணம் நமக்கும், நமது நண்பர்களில் பலருக்கும் வெகு நாளாகவே இருந்து வந்தாலும் என்ன மாறுதல் செய்வது என்னும் விஷயத் தில் யோசனையாகவே இருந்து வந்ததால் தாமதப்பட்டு விட்டது.

அதோடு நாம் சொல்லுவது மற்றவர்களுக்கும் சம்மதப்படும் படியாய் இருக்க வேண்டுமே, உடனே பின்பற்ற வேண்டுமே என்கின்ற யோசனை யும் இருந்து வந்தது.

சாயல், உடை, பழக்க உணர்ச்சி ஆகியவைகளில் மேல் நாட்டாரைப் போல் கட்டுப்படுகின்ற வழக்கமோ கவலையோ நம்மவர்களுக்கு சிறிதும் கிடையாதாதலினாலும் அவ்வித வித்தியாசங்களே இந்த நாட்டின் பெரு மைக்கும், இயற்கை வனப்பிற்கும் அணிகலனாயிருப்பதாக மக்கள் கருதி வருவதாலும் இது இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாததாகக் கூட பலருக்குத் தோன்றினாலும் தோன்றலாம்.

மேல் நாட்டார் கட்டுப்பாட்டுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டு மானால் அவர்கள் உடை, முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள மாறுதலும் அதை ஒரே அடியாய் ஐரோப்பா, ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா முதலிய கண்டங்கள் உடனே பின்பற்றுவதும் அது போலவே அப்பெண்கள் தலைமயிர் முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசமும் அதை எல்லா கண்டத்து வெள்ளைக்காரரும் பின்பற்றுவதும் பார்த்தாலே போதுமானதாகும்.

அவசியமென்றோ கட்டுப்பாடென்றோ அவர்களுக்குத் தோன்றிவிடு மானால் எந்த மாறுதலானாலும் அதை அரச ஆக்கினைப் போல் பாவித்து எல்லோரும் உடனே கீழ்படியும் வழக்கம் அவர்களுக்குள் உண்டு. கட்டுப் பாட்டிற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றை குறிப்பிடுகின்றோம். அதாவது ஐரோப்பாவில் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்து கொண்டதில் சில உயர் குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பப் பெண்கள் தாங்களும் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டாலும் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மனைவியான மேரி ராணியார் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்ளாததால் சற்று அதிருப்தி யுடன் கட்டுப்பாட்டிற்குப் பயப்பட வேண்டியவர்களாக இருந்தார்களாம். இதை அரச குடும்பத்தார் அறிந்ததும் இளவரசர் மனைவியாரான இளவரசி யை உடனே தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும்படி செய்தார்களாம். இப்போது அது பொது தேசாச்சாரமாய் விட்டது. ஆனால் நம்ம நாட்டிலோ எப்பேர்பட்ட மாருதலாயிருந்தாலும் அது எவ்வளவு சரியானதாயும், தேவையானதாயும், இருந்தாலும் பயனும் பொருளும் அற்ற பழய வழக்கம் என்னும் “பேயுக்கு” அதாவது மூட பயத்திற்கு அடிமையாகி உடனே அதை குற்றம் சொல்லவும் உள் எண்ணம் கற்பிக்கவும், எதிர் பிரசாரம் செய்ய வும் புறப்பட்டு விடுகிறார்கள். ஆதலால்தான் ஆயிரக் கணக்கான வருஷங் களாக இந்திய மக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு பிரிந்து துவேஷங் கொண்டு அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகவே ஆகி விட்டார்கள்.

ஆகவே இதை ஒரு வழியில் போக்க முயர்ச்சிக்க வேண்டுமென்று கருதியே பல மாறுதல்களுடன் உடை மாறுதல்களைப் பற்றி துணிந்து ஏதா வது தெரிவிக்கலாமா என்ற எண்ணம் கொண்டு இதனை எழுத முற்பட் டோம். இப்போது நமக்கு அதாவது இந்தியர்கள் என்பவர்களுக்குள் பல வித உடுப்பும் சாயலும் இருப்பதை பார்க்கின்றோம் . பெண்களிலும் அப் படியே. சாதாரணமாக ஆண்களுக்கு இரண்டு பெரிய பெரிய வேஷ்ட்டி அவசியமாகின்றது. இதை தவிர ஒன்று அல்லது இரண்டு சட்டையும் அவசியமாகிறது. இது தவிர ஒரு துவாலும் அவசியமாகின்றது. இது தவிர பலருக்கு தலை உருமால் அல்லது குல்லாயும் தேவையாகின்றது. அது போலவே பெண்களுக்கும் 16 முழப் புடவையும், ரவிக்கையும், பாடி என் னும் உள் சட்டையும், உள் ஆடை என்று ஒரு பாவாடையும் வேண்டியிருக் கிறது. இவ்வளவு துணிகளும் உயர்ந்த தினுசில் வாங்கவேண்டுமானால் அதிகப் பணச் செலவுமாகின்றது. சாதாரணமாக ஒரு ஜதை உயர்ந்த தினு சானால் 100, 200, 300, 400 ரூ. கூட ஆகிவிடுகின்றது. இவ்வளவு செலவு செய்தும் வேற்றுமையையே காட்டுகின்றது. சாதாரணமாக யாராயிருந்தாலும் இடுப்புக்கு 4 முளத்தில் ஒரு வேஷ்டியை கைலி போல அதாவது இரு தலவும் மூட்டியதாகவும், ஒரு முக்கால் கை குடுத்துணி அதாவது ழயடக hயசஅ என்று சொல்லக்கூடிய ஒரு சட்டையும், சட்டப்பையில் அடங்கக் கூடிய ஒரு சிறு துவாலும் இருக்கும் படியாக இந்திய உடையை ஏன் மாற்றக் கூடாது என்பதே நமது யோசனை. இந்தப்படிதான் இன்று மலையாள நாட்டில் மகமதியர்களும், கிறிஸ்தவர்களும் உடை அணிகிறார்கள். மற்ற இந்துக்களிலும் ஆண்களும் அநேகமாய் 100க்கு 90 பேர் இப்படித்தான் உடை அணிகிறார்கள். மற்றப்படி உடையில் செய்யும் மாறுதல் போலவே தலைமயிர் விஷயத்திலும் ஆண்கள் கிராப்பு செய்து கொண்டும் பெண்கள் வெள்ளைக்காரப் பெண்களைப் போல தலைமயிரை கீழ் காது அளவுக்குக் கத்தரித்துக் கொள்ளவும் செய்து விட்டால் அநேகமாக சாயலிலும் எல்லா மக்களுக்கும் சிறப்பாக ஆண் பெண்களுக்கும் ஒன்றுபட்ட காக்ஷி ஏற்பட்டுவிடும். வித்தியாச உணர்ச்சியும் தானாக மாறிவிடும். இப்போது பெண்களுக்குத் தலையில் மயிர் வளர்த்திருப்பதைப் போன்ற அசவுகரியமும், நேரக் கேடும், வீண் செலவும் போல வேறு எதிலுமில்லை என்றே சொல்லலாம். அதனால் அவர்கள் படும் கஷ்டம் நடுநிலையில் இருந்து பார்த்தால்தான் தெரியும். அவர்களது உடை, நகை, தலைமயிர், பெரிய சீலை ஆகியவைகளே பெண்களை பலவீனர்களாகவும், அவற்றின் பொருட்டு அடிமைகளாக ஆக்கி அவர்களை மெல்லியலார் பலமற்றவர்கள் என்று சொல்லும்படியும் ஆக்கிவிட்டது. தலைமயிரை ஒரு அழகாகப் பாவித்து உணர்ச்சி சரீரத்தில் ஊறிக் கிடப்பதால் இதைப் பற்றி நினைக்கும் போதும் சொல்லக் கேட்கும் போதும் மக்களைத் திடுக்கிடச் செய்வதாகத் தோன்றலாம். ஆனால் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அதன் உபத்திர வமும் கெடுதலும் தெரியவரும். இது போலவே நகை விஷயத்திலும் பல மாறுதல்கள் காணப்பட்டாலும் அவைகள் இந்த மாதிரி அதாவது உடை மாற்றமாகிவிட்டால் தானாகவே மாறிவிடும். மலாய் நாட்டிலும், பர்மா நாட்டி லும், கண்டி நாட்டிலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், பவுத்தர் கள் உள்பட எல்லோரும் ஆண் பெண் அடங்கலும் இம்மாதிரி உடைதான் உடுத்துகிறார்கள். மற்றபடி ஆங்கில உடை உடுத்துவது பலருக்குப் பிடிக்க லாம். ஆனால் அது பெரிதும் குளிர்தேச உடையாதலாலும் உஷ்ண தேசத் திற்கு சவுகரியமில்லாததானதினாலும் அன்றியும் எல்லா மக்களாலும் சாத்தி யப்படக் கூடியதல்லவானதாலும் அதை நாம் பொது மக்களுக்குள் புகுத்து வது சிரமமானதும் பொருத்தமற்றதுமாகும் என்று கருதுகின்றோம்.

மற்றபடி செல்வவான்களும் சவுகரியமுள்ளவர்களும் அணிவதில் நாம் ஆட்ஷேபிக்க வரவில்லை. ஏனெனில் அவ்வுடையின் காரணமாக இப்போது எவ்வித ஜாதி மத வகுப்பு வித்தியாசங்கள் ஏற்படுவதற்கில்லாமல் இருப்பது தான்.

நிற்க, வெறும் ஒரு கால் சட்டை அதாவது சாதாரண செராய் போட்டு குடுத்துணி மாத்திரம் போட்டுக் கொண்டால் என்ன ஆnக்ஷபம்? என்று சிலர் கேட்கக் கூடும். அந்த உடையும் ஏற்கக்கூடியதானாலும் அது எல்லோ ருக்கும் அவசரத்திற்கும் சாத்தியப்படாததாகி விடும் என்று பயப்படுகின் றோம். சிலருக்கு அது அசவுகரியமாகவும் இருக்கக்கூடும் என்றும் நினைக்கின் றோம். ஆனால் அந்தப்படி போட்டுக் கொள்வதை நாம் ஆnக்ஷபிக்க வரவில்லை. ஏனெனில் அதுவும் முன் சொன்னது போல ஜாதி மத வகுப்பு முதலிய பிரிவினைகளைக் காட்ட சாதனமாயில்லாதிருப்ப தால்தான்.

ஆகவே நாம் மேல் சொன்ன அதாவது 4 முளத்தில் ஓரம் இரண்டை யும் சேர்த்து மூட்டி தைத்ததாக எந்த வர்ணம் உள்ள துணியாயிருந்தாலும் அதை இடுப்புக்கும், ஒரு முக்கால் கை சட்டையே மேலுக்கும் உடுக்கும் படியான மாதிரியை பொது உடையாக ஆக்கலாம் என்பது நமக்கு சரி யென்று தோன்றினதால் அதை இப்போது எழுதினோம். ஆனால் இதை அதாவது ஒரு மகாநாட்டில் வைத்துப் பேசிய பின்பே அமுலுக்குக் கொண்டு வர கருதி இருக்கிறோம். அதற்குள் அவசரப்பட்டு இஷ்டப்பட்டவர்கள் உடுத்திக் கொள்வதில் எவ்வித ஆnக்ஷபனையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி அடுத்தாப்போல் மக்களுக்கிடும் பெயர் கள் விஷயத்திலும் பலப் பிரிவுகளைக் கண்டு பிடித்து வேற்றுமை உணர்ச்சி கள் ஏற்பட இடமேற்படுகிறது. ஆகவே அவைகளையும் கவனித்து பெயரினால் ஒரு மனிதன் ஒரு மனிதனை பிரித்துக் காணாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

                         -------------------------------  தந்தைபெரியார் --”குடி அரசு” - தலையங்கம் - 09.11.1930

26 comments:

தமிழ் ஓவியா said...


எங்களின் பயண இன்ப சூளுரை நாள்!


இன்று - மார்ச் 10ஆம் நாள் - தியாகத்தின் இலக்கணமாம்
நம் அன்னையார் தம் பிறந்த 94ஆம் ஆண்டு துவக்கம்.

அன்னையார் பிறந்த நாள், தூய தொண்டறத்தின் கதவுகள் திறந்த நாள் - சிறந்த நாள் - தொண்டுள்ளம் கொண்டோருக்கு!

இள வயதிலேயே அவர், தந்தை பெரியார் எண்ணிய புரட்சிப் பெண்ணாகும் தகுதியைப் பெற்றார்!

கொள்கை வழிப்பட்ட வாழ்வே தம், வாழ்வு என்பதை வேலூரில் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதே முடிவெடுத்து - அய்யாவின் லட்சிய வழி நிற்கத்
திட்டமிட்டார். இது அவரை அதற்கு மேற்பட்ட ஆசிரியர் படிப்பில்கூட நாட்டத்தை ஏற்படுத்தவில்லை.

அய்யாவிடம் சரண் அடைந்து புதியதோர் விடை கண்டார் தமது கொள்கை ஏக்கத்திற்கு!

அதுதான் அய்யாவுக்குத் தொண்டு செய்து அதன் மூலம் கொள்கைப் பயணத்தின் வெற்றிக்கு உழைப்பது என்ற மாறாத உறுதி!

அரண்மனையை அவர் விரும்பவில்லை; கொள்கைக்கு அரணாக இருந்து அதனை (இன) எதிரிகளிடமிருந்து காப்பதே எம் ஒரே பணி என ஒரே நிலையில் பிடிவாதமாய் நின்றார்.

தூற்றுவோரும் பழி பரப்புவோரும் எத்தனை விபரீத விஷமப் பிரச்சாரத்தை வீசினாலும் அவைகளைத் தூசாகத் தட்டி தூய தொண்டறத்தின் உச்சிக்கே சென்றார். ஆம். நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் பாதுகாத்து
வாழ வைத்தார்; அதன்மூலம் இந்த மாபெரும் இயக்கத்தினைப் பாதுகாத்தார்.

அய்யாவின் பின்னும் அவ்வியக்கத்தினையும் காத்து காலத்தால் அழியாது, கடுஞ் சோதனைகளையெல்லாம்
வென்றெடுத்து, நம் அனைவர் கையிலும் அதனை பலமாக்கித் தந்து விட்டு தன் பணி முடித்த பிறகே விடை பெற்றார்!

கடந்த 35 ஆண்டுகாலமாக நாம் (அன்னையார் இல்லாத காலத்தில்)
கடந்து வந்த பாதை ஒரே பிரமிப்பு!

தொடரும் தொடரும் - நம்
தொண்டின் பயணம் தொடரும்!

அய்யா அன்னையாரின் பாதுகாப்புக்
கென தந்த சொத்தையும் தம் சொந்த சொத்தையும்
கூட மக்களுக்கே தந்து விட்டு - பொது அறக்கட்டளையாக்கி மக்களுக்கே தந்து காவலர்களாகக் கடமை வீரர்களான கழகத்து வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, விட்டுத் தான் தன் கண்களை மூடினார்!

அவரது மூடிய கண்கள், பெரியார் -
மணியம்மை கல்விக் கூடங்களாக, அறச் செல்வங்களாக அவருக்குப்பின்
திறந்தன - திறந்தன- தமிழ் மக்களுக்கு,
அந்த ஒளி மிகுந்த பார்வையில், இன்று விழியின் வெளிச்சத்தைப் பெற்று தம் வாழ்வை வசந்தமாக்கிக் கொள்கின்றனர் - பல்லாயிரம் மாணவ இளைஞர்கள்
ஆதரவற்றோர் என்ற துயரநிலை
மாறி, அன்பு உள்ளங்களால் அரவணைக்கப்
பட்டோர் என்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் - நாகம்மை குழந்தைகள் இல்லத்தில்
கல்வி வாய்ப்புக்களை பெறும் எம் இளந்
தலைமுறையின் நன்றி மலர்ச்சியால்
அந்த ஒளி மேலும் பன்மடங்காகி
அன்னையார் மறையவில்லை
நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ளார் என்ற
உணர்வின் பெருக்கத்தை கொட்டும்
மழையாய், குளிர்விக்கும் தென்றலாய்,
குதூகலிக்கும் இன்ப ஊற்றாய்
மகிழ வைக்கிறது!

எம் தலைவரால் பக்குவப்பட்டு,
தலைவர் கண்ட இயக்கத்தையும் காத்த
எம் அன்னையே! உங்கள் பிறந்தநாள்
எங்களின் பயண இன்ப சூளுரை நாள்!
வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்!!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
10.3.2014

Read more: http://viduthalai.in/e-paper/76720.html#ixzz2vc7iW9cN

தமிழ் ஓவியா said...


துணிவின் சின்னம்! அன்னை மணியம்மையார்


துணிவின் சின்னம் நீவிர் !
காமராசரையே கலங்க வைத்தீர்
கழகத்தினர் உடலுக்காக ! அரசையே அதிர வைத்தீர்

இராவண லீலை நடத்தி! மிசா வன் கொடுமை உமது இதயத்தைத் தாக்கியது

துணிவோடு செயல் பட்டீர்! கழகத்தைக் காத்திட்டீர் !

வாழிய உம் புகழ் ! வாழிய வாழியவே!

- சோம. இளங்கோவன் பெரியார் பன்னாட்டமைப்பு.

Read more: http://viduthalai.in/e-paper/76726.html#ixzz2vc7uWHH3

தமிழ் ஓவியா said...


இந்நாள்.. இந்நாள்..


சென்னை மாநிலத் தின் பிரதமராக இருந்த நீதிக் கட்சியின் முக்கிய தலைவர் பொப்பிலி ராஜா மறைந்த நாள் (1978).

Read more: http://viduthalai.in/e-paper/76717.html#ixzz2vc84h3cK

தமிழ் ஓவியா said...


அன்னை மணியம்மையாரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, மார்ச்.10- அன்னை மணியம்மையார் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2014) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினை விடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செய் தார் தமிழர் தலைவர்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களை 95 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கொண் டாடப்படுகிறது.

சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ் சாலையில் உள்ள அன்னை மணியம்மையாரின் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் கழகத் தோழர் - தோழியர்கள் புடை சூழ சென்று மாலை அணிவித்தனர்.

இதையடுத்து பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் கழகத் தோழியர் - தோழர்கள் வரிசையாக சென்று அன்னை மணியம் மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரி யாதை செய்தார். அதைத் தொடர்ந்து மகளிரணி சார் பிலும், பெரியார் மணி யம்மை மருத்துவமனை சார்பிலும், திராவிடன் நல நிதி சார்பிலும், பெரியார் திடல் பணியாளர்கள் திரா விடர் தொழிலாளர் அணி, பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பிலும் மணி யம்மையார் நினைவிடத் தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் நினைவி டத்தில் தமிழர் தலைவர் தலைமையில் அனைவரும் ஒன்றுகூடி மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

95 ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களை வாழ வைத்த அன்னை மணியம்மையா ரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் இப்பெரு விழாவில், அய்யா தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவரின் மறைவிற்கு பிறகு 5 ஆண்டுகள் தலைவராக இருந்து கழகத்தைக் கட்டிக் காத்த அன்னை மணியம் மையாரின் இப்பிறந்த நாள் பெரு விழாவில் அய்யா அம்மா விட்டுச் சென்ற பணிகளை கட்டுப்பாட்டு டன் செய்து முடிப்போம் என உறுதி கொள்கிறோம் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் தோழியர் புடை சூழ உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் முன் னாள் மத்திய அமைச்சர் க. வேங்கடபதி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேக ரன், வீ. அன்புராஜ், பிரச்சார செய லாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி, கழகத் தலைமைச் செயற்குழ உறுப்பினர்கள் க. பார்வதி, திருமகள் மற்றும் மோகனா வீரமணி முன்னாள் மாவட்ட நீதிபதி பரஞ்ஜோதி, திரா விட மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணி யம்மை, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி. பாலு, சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல் வம், பேராசிரியர் மங்கள முருகேசன், பேராசிரியர் ராஜதுரை, தமயந்தி ராஜ துரை, கழக வழக்கறிஞர் அணி அமைப் பாளர் வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி துணைச் செயலாளர் கோ.வீ. ராக வன், பெரியார் திடல் மேலாளர் வி.சீதாராமன், விடுதலை அச்சக பிரிவு மேலாளர் சரவணன் பெரி யார் மணியம்மை மருத் துவமனை ஒருங்கிணைப் பாளர் டாக்டர் மீனாம்பாள், மேலாளர் குணசேகரன், திராவிடன் நலநிதி தலை வர் டி.கே. நடராஜன், பொது மேலாளர் அருள் செல்வன் மற்றும் பெரியார் பணி மனை தோழர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/76718.html#ixzz2vc8H0clF

தமிழ் ஓவியா said...

பெண் உரிமைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் சிலைக்கு அடிமைச்சின்னமான தாலியை அகற்றி தங்கம்

வேலூர் மாவட்டத் தலைவர் சட கோபனின் மகள் குடியாத்தம் மகளிர் பாசறையைச் சேர்ந்த ரம்யா - மாவட்ட இளைஞரணி தலைவர் கண்ணன் ஆகி யோர், பெண் உரிமைக்காகப் பாடுபட்ட பகுத்தறிவு பகலாவனாம் தந்தை பெரி யாரின் சிலைக்காக அடிமைச் சின்னமான தாலியினை அகற்றி, அதிலிருந்த தங்கத் தினை எடுத்து, உணர்ச்சிபொங்க தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Read more: http://viduthalai.in/page-8/76740.html#ixzz2vc971lxm

தமிழ் ஓவியா said...


பார்வை இழப்பை ஏற்படுத்தும் கண் நீர் அழுத்த நோய்


க்ளாக்கோமா என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்சினைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், க்ளாக்கோமா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கிற இந்தப் பிரச்சினையைப் பற்றி, அறிகுறிகள், தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாக கூறுகிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணில் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, க்ளாக்கோமா' ஏற்படுகிறது.

ரத்த அழுத்தம் போலவே கண்களுக்கும் ஒரு வித அழுத்தம் உண்டு. அது அதிகமாவதால் உண்டாகிற பிரச்சினை இது. ஆண்களைவிட, பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்சினை. இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக் கப்படுகிறார்கள். 40 வயதில் பரவலாகக் காணப்படுகிறது.

இந்தப் பிரச்சினையில் இரண்டு வகைகள் உண்டு. கண் ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பிருந் தால் விளக்கொளியைப் பார்க்கிற போது, அதைச் சுற்றி கலர் கலராக வானவில் மாதிரித் தெரியும்.

தலைவலி, கண்களில் வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்றவை இதன் அறிகுறிகள். மாலை நேரத்தில் இவை தீவிரமாகலாம். கண்ணின் திரவம் வெளியே போகிற வழியில் அடைப்பில்லாவிட்டால், அதற்கான அறிகுறிகள் பெரிதாக வெளியே தெரியாமலிருக்கலாம்.

மருத்துவரால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். எனவே தான் கண் அழுத்தம் அதிகமாகி கண்களில் பிரச் சினை வரும் போது, எப்போதுமே கண் மருத்து வரைப் பார்க்க வேண்டும். கண்ணாடிக்கடையில் போய் பரி சோதித்து, நீங்களாக கண்ணாடி வாங்கிப் போடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. மருத்துவர்கள் பரி சோதிக்கும் போதும், கண்களின் பிரஷர் நார்மல் எனக் காட்டலாம். என்கிறார் விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

Read more: http://viduthalai.in/page-7/76727.html#ixzz2vc9VhNG3

தமிழ் ஓவியா said...

கோடையில் குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுங்க!

கோடை வெயிலின் எதிரொலியாக, குளிர்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஆரம்பமே அசதியை தருவதாகத் தான் இருக்கிறது. பச்சிளம் குழந் தைகள் முதல் முதியோர்கள் வரை, அனைத்து வயதின ரையும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க சில வழிகள்.

கோடை வெப்பத்தின் தாக்கத்தால், நம் உடம்பில் உள்ள நீர்ச்சத்தின் அளவு, அளவிற்கு அதிக மாக வெளியேறும் வியர்வை, ஆவியாதல் ஆகியவற்றால் குறையும். இதனால், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு.

இதனை தடுக்க, ஆறு மாதத்திற்கு உட்பட்ட தங்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தரும் இளம் தாய்மார்கள் உள்ளிட்டோர், தினமும், 3 லிட்டர் முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஆறு மாதத் திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது, உணவு மட்டுமின்றி, அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும்.

டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா, வாந்தி பேதி ஆகிய நோய்கள் வராமல் தடுக்க, கோடை காலம் என்றாலும், தண்ணீரை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து பருக வேண்டும். குளிர்பான கடைகளில், பயன்படுத்தப் படும் தண்ணீரின் தூய்மையை பொறுத்தே, வெளி யிடங்களில், ஜூஸ், குளிர்பானங்களை குடிக்க வேண்டும். குளிர்பானங்களை முடிந்தவரை, வீட்டிலேயே தயார் செய்ய வேண்டும்.

உடம்பின் நீர்ச் சத்தை பராமரிக்க பயன்படும், தர்பூசணி பழம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை, கடைகளில் வாங்கும்போது, அவற்றில், ஈ மொய்க்காமல், சுகாதாரமாக விற்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

நீர்சத்து நிறைந்த, இளநீர், நுங்கு ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்வதால், கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற சரும நோய்கள், சின்னம்மை ஆகியவற்றுக்கு இலக் காகாமல் இருக்கலாம். நாகரிகம் என்ற பெயரில், ஜீன்ஸ், டீ-ஷர்ட் போன்ற இறுக்கமான ஆடைகளை அணியாமல், வியர்வை உறிஞ்சும் தன்மைக் கொண்ட, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

Read more: http://viduthalai.in/page-7/76727.html#ixzz2vc9ds8li

தமிழ் ஓவியா said...

கண்பார்வையை மேம்படுத்தும் பொன்னாங்கண்ணி

பொன்னாங்கண்ணி ஈரமான இடங்களில் வளரும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர் பாகங்கள் உணவுக்கு பயன்படும் உணவு மற்றும் மருத்துவதேவைகளுக்காக பயிரிடவும் படுகிறது.

இக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி ஆகியவற்றுக்கு கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. பின்பு இந்நோய்கள் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/76730.html#ixzz2vc9vj2Pc

தமிழ் ஓவியா said...


ஓய்வு வயதை உயர்த்தினால் பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே! புள்ளி விவரங்கள் பேசுகின்றன


புதுடில்லி, மார்ச் 10- அரை க்காசு சம்பளம் என் றா லும், அது அரசாங்க சம் பளமாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். அந்த அரசு வேலைவாய்ப்பை எண்ணி நாள்தோறும் எதிர் பார்த்துக் கிடக்கின்ற இளை ஞர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

அந்த இளைஞர் களுக்கு மிகப்பெரிய ஏமாற் றத்தை அளிக்கும் வகையி லான தகவல்களில் ஒன்று தான் மத்திய அரசால் அண் மையில் வெளியிடப்பட் டது. மத்திய அரசு ஊழியர் களின் ஓய்வுபெறும் வயது 60 இல் இருந்து 62 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளது என்று செய்திதான் அது.

மத்திய அரசு ஓய்வு பெறப்போகும் லட்சக் கணக்கான ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதி யத் தொகையை தள்ளிப் போடவே இதுபோன்ற ஒரு முடிவை எடுத்து அறி விக்க உள்ளது என்ற கார ணம் கூறப்பட்டாலும் இது நாடு முழுவதும் படித்து வேலைவாய்ப்புக்காக காத் திருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் நடவடிக்கை என்ற குரல்களும் கூடவே ஒலிக்க தொடங்கியுள்ளன.

லீவ் சரண்டர், கிராஜு விட்டி, கம்யூட்டேஷன், ஜிபிஎப் என்று ஒவ்வொரு ஓய்வு பெறுகின்ற மத்திய அரசு ஊழியருக்கும் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வரை மொத்தமாக வழங்க வேண்டிய கட்டாயம் அர சுக்கு உண்டு.

வரும் இரண் டாண்டுகளில் அதிகபட்ச அளவில் ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதால் அதற் காக பெரும் தொகை செல விட வேண்டிய நிலையில் அதனை தள்ளிப்போட இந்த வயது வரம்பு அதி கரிப்பு பயனை கொடுக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது என்கின்றனர் விபரம் அறிந் தவர்கள்.

ஆனால் படித்து பல பட்டங்களை பெற்றுவிட்டு, நாள்தோறும் நுழைவுத் தேர்வுகளையும், போட்டித் தேர்வுகளையும் எழுதி வேலைக்காக காத்திருக் கின்ற இளைஞர்கள் கோடிக் கணக்கில் உள்ளனர். ஏற் கெனவே வேலையில்லாத் திண்டாட்டம் நாடு சந்திக் கின்ற மிகப்பெரிய பிரச்சி னையில் ஒன்றாக இருந்து வருகிறது.

படித்து பட்டம் பெற்றவர்கள் வெளிநாடு வேலைகளை தேடிச் செல் கின்றனர். பல்வேறு துறை களில் சிறப்பிடம் பிடித்த இளைஞர்களை இந்தியா முழுமையாக பயன்படுத் திக் கொள்கிறது என்பதை விட, சரியாக பயன்படுத் திக்கொள்ளவில்லை என் பதுதான் உண்மை.

இதன் வெளிப்பாடு உலக அள வில் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் முக்கிய இடங்களில் இந்தியர்களின் பங்களிப்பு வெளிப்படை யாக தெரிய தொடங்கியுள் ளது.

60 வயதுக்கு மேல் எந்த மாநிலமும் தங்கள் மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை நிர்ணயம் செய்யவில்லை. படித்தவர்கள் நிறைந்த மாநிலமான கேரளாவில் ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு 56 தான். ஜார்க்கண் டிலும் 56 ஓய்வுபெறும் ஊழியர்களின் வயது வரம் பாக உள்ளது. தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக உள்ளது.

குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிர தேசங்களிலும் அரசு ஊழி யர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது.

அப்படியிருக்க மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை மட்டும் 62 ஆக உயர்த்து வதின்மூலம் அது பிற மாநி லங்களுக்கும் மோசமான ஒரு வழிகாட்டுதலாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.

60 வயது நிரம்பியவர் களை இரண்டாண்டுகள் பணிக்காலத்தை நீட்டிக் கும் வேளையில் அடுத்த கட்ட பதவி உயர்வுடன் பணிக்கொடை உள்ளிட்ட அவர்களுக்கான நிதி செல வினங்களும் எகிறவே செய்யும். இது மறைமுக மாக மத்திய அரசுக்கு மேலும் செலவினத்தையே கொடுக்கும்.

இந்திய நாட்டில் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்கள் எண்ணிக்கை 56 சதவீதம் ஆக உள்ளது. பாதிக்கும்மேல் 25 வய துக்கு மேற்பட்ட இளை ஞர்கள் உள்ளனர். மத்திய அரசில் தற்போது 31 லட்சம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். இவர்களில் சுமார் 3 லட்சம் பேர் ஆண்டுதோறும் ஓய்வுபெறுகின்றனர்.

நாட்டில் இளைஞர்களி டம் வேலைவாய்ப்பு இல் லாத நிலை கிராமங்களில் 36.6 சதவீதமும், நகரங் களில் 26.5 சதவீதம் உள்ள தாகவும், கல்வி அறிவு பெறாத இளைஞர்களில் வேலை இல்லாதவர்கள் நிலை 37 சதவீதம் உள்ள தாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஓய்வு வயது வரம்பு அதிகரிப்பின் மூலம் ஆண்டுதோறும் 3 லட்சம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வேலை வாய்ப்புகள் தள்ளிப் போகும் நிலை ஏற்படும்.

Read more: http://viduthalai.in/page-7/76721.html#ixzz2vcACWf6M

தமிழ் ஓவியா said...


வளமா? வறட்சியா?


இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் இந்த மதுரவாயல் சம்பந்தப் பட்ட ஒரு வளர்ச்சித் திட்டம் - துறைமுகத்தி லிருந்து மதுரவாயல்வரையிலான பறக்கும் பாலமாகும். ரூ.1800 கோடி மதிப்பிலான திட்டம் இது. தி.மு.க.வின் முயற்சியால் அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்களும் இருந்தமை யால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது.

இந்தத் திட்டத்தையும் எதிர்த்து தமிழக முதலமைச்சர் உயர்நீதிமன்றம் சென்றார். அரசியல் நோக்கத்திற்காக இதுபோன்ற திட்டங்களை முடக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட நிலையில், அதோடவாவது தடை செய்யும் முயற்சியைக் கைவிட்டிருக்க வேண்டாமா? உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்தது இந்த அரசு.

சென்னை மதுரவாயல் பகுதி திராவிடர் கழக இளைஞரணி தலைவர் வேலுச்சாமி ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

உச்சநீதிமன்றம் அ.இ.அ.தி.மு.க. அரசின் தலையில் ஓங்கிக் குட்டி வளர்ச்சித் திட்டத்தை அரசியல் நோக்கத்தோடு முடக்கக்கூடாது என்று கூறிவிட்டதே!

இதற்கு முன்பே பிரதமர், அரசு செயலாளர் ஒருவரை இத்திட்டம் குறித்துப் பேச தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்தத் திட் டத்தை நிறைவேற்றிட மாநில அரசின் ஒத்துழைப்பைக் கோரிய பிறகும், அதற்கு உடன்படத் தயாராக இல்லை.

தாம்பரம் இராவணன் நிறுவனத்தின் சார்பில் மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, மாவட்ட மாணவரணி தலைவர் சிவசாமி ஆகியோர் ரூ.50 ஆயிரத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, மதுரவாயல், 10.3.2014).

மத்திய அரசு மாநில அரசு திட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்று குற்றஞ் சொன்ன நிலைமை போய், மத்திய அரசின் திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை என்ற அவலம் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது.

1800 கோடி ரூபாயில் முடியவேண்டிய இந்தத் திட்டம், காலதாமதத்தால், மேலும் 400 கோடி ரூபாய் அதிக செலவு செய்யும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. 400 கோடி ரூபாய் என்றால், யார் வீட்டுப் பணம்? மக்கள் வரிப் பணம்தானே வீணாகிறது.

இந்தத் திட்டத்தால் இந்த ஊரான மதுர வாயல் உலகெங்கும் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய பாலம் என்ற பெருமைக்குரியது; 19 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

சென்னைத் துறைமுகத்திலிருந்து சரக்குகள் விரைந்து செல்லவும் - சரக்குகள் வந்து சேர வும் பெரிதும் பயன்படக்கூடியது. அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடியது.

அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வளர்ச்சி என்பதோடு வளம் என்று கூறப் பட்டுள்ளதே - அப்படி ஒருபக்கம் கூறிவிட்டு, நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடிய இந்தத் திட் டத்தை முடக்குவது வளத்துக்கு அறிகுறியா? வறட்சிக்கு அறிகுறியா?

மதுரவாயல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி (10.3.2014)

Read more: http://viduthalai.in/page-8/76766.html#ixzz2vhVPEfhu

தமிழ் ஓவியா said...


நலந்தானா? நலந்தானா?


தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஜார்க் கண்ட், சத்தீஸ்கர் என்ற யூனியன் பிரதேசம் - ஆகியவைகள் உள்ள 14,227 பேர்களிடம் ஒரு உடல் நலம் பற்றிய மருத்துவ ஆய்வு சர்வே மருத்துவ ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில் என்ற அமைப்பு மேற் கொண்டது.
அதன் ஆய்வறிக்கையில் காணும் முக்கிய தகவல்கள் நம்மில் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்யக் கூடிய வைகளாக உள்ளன.

54.4 சதவிகிதத்தினர் அங்குள்ள மக்கள் தொகையில் எவ்வித உடலு ழைப்போ, உடல் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டோ வாழ்வதில்லை என்று கண்டறிந்து உள்ளனராம். என்னே கொடுமை!

டாக்டர்ஆர்.என். அஞ்சனா என்பவர் தலைமையில் இந்த- சர்க்கரை நோய் ஆய்வுப் பிரிவினர் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி அவர்கள் கண்டறிந்த உண்மைகள் (பெட்டி செய்தியில் காண்க). ‘Journal of Behavioural Nutrition and Physical Activity‘ என்ற ஆய்வு ஏட்டில் வெளியாகியுள்ள இத்தகவல் களில் பெரும்பாலானவர்கள் - தொலைக்காட்சி பார்ப்பதிலேயே - அமர்ந்து நல்ல உருளைக்கிழங்கு போண்டாக்கள் போல ஆகி, சர்க்கரை நோய்க்குசிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து நோயாளிகள் என்ற மிகப் பெரிய படையில் நாளும் சேர்ந்து கொண்டே உள்ளனர்!

குறைந்தபட்சம் 20 மணித் துளிகள் கூடவா நடக்க, ஓட, உடற்பயிற்சி செய்ய ஒதுக்கிடக் கூடாது?

நோய் தாக்கிய பிறகு நாம் டாக்டர் களிடம் சென்று மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை என்ற வீணே காலத்தையும், பணத்தையும் செலவழித்து அவதிப்படுவதைவிட, நாம் நாளும் அரைமணி நேரம் குறைந்த பயிற்சியான - பாதுகாப்பான பயிற்சியான நடை பயிற்சியை(Walking) அல்லது சிறு வேக ஒட்ட நடைப்பயிற்சி (Jogging) செய் யலாமே! எது இவர்களுக்கு நல்லது என்ற யோசனை வேண்டாமா?

நடைப்பயிற்சியை நாளும் செய்ய என்ன கட்டணமா செலவா? ஒன்றும் தேவைப்படாதே! கிராமப்புற மக்கள் உடல் உழைப்பை நாளும் செய்வதால் அவர்கள், நகர்ப்புற மக்களைவிட (ஒப்பீட்டு அளவில்) சிறப்பாக இந்த உடல் உழைப்பு - அதனால் சுறுசுறுப் புடன் இயங்கும் - தன்மை உடைய வர்களாக உள்ளனர்!

நாளும் எழுந்து காலைக் கடன் களை முடித்து, உடன் நடைப்பயிற் சியை செய்து பிறகு அன்றாடப் பணியை நாம் மேற்கொள்ள முயலும் போது, நமது மனம் சுமையற்றதாக, பசுமையான உணர்வின் குடியிருப்பாக அமையும் வாய்ப்பிருக்கிறது!

எனவே, இருபாலரும் இந்த நடைப்பயிற்சியை ஒதுக்காதீர்கள்! ஒழுங்காகச் செய்து தேவையற்ற மருத் துவச் செலவைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்!

பிறகு நாம் அடுத்தவர்களைப் பார்த்து நலந்தானா? நலம் தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? என்று பெருமிதத்துடன் விசாரித்து நல்லதோர் வாழ்வு பெற முடியுமே!

Read more: http://viduthalai.in/page-2/76783.html#ixzz2vhWBFcua

தமிழ் ஓவியா said...


கணினியை விஞ்சிய சகுந்தலா தேவி


அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார் சகுந்தலா!

1929 நவம்பர் 4 அன்று பெங்களூருவில் பிறந்தார் சகுந்தலா தேவி. சகுந்தலாவின் தந்தை, சர்க்கஸில் வேலை செய்தார். சீட்டுக் கட்டுகளை வைத்து அவர் பல்வேறு நினைவுத் திறன் நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். மூன்றே வயதான சகுந்தலாவுக்கும் ஆர்வம் வந்தது. அப்பாவிடம் சீட்டுக் கணிதத்தைக் கற்றுக்கொண்டார்.

அவற்றைச் செயல் படுத்திக் காட்டினார். அவருடைய கணிதத் திறமையைக் கண்டு, ஊக்குவித்தார் தந்தை. 6 வயதில் கணிதம் மற்றும் நினைவாற்றல் திறமைகளை, மைசூரு பல்கலைக்கழகத்தில் செய்து காட்டும் வாய்ப்பு கிடைத்தது. மிக வேகமாகவும் எளிதாகவும் கணிதப் புதிர்களை விடுவிக்கும் சகுந்த லாவைப் பார்த்து, எல் லோரும் வியந்து போனார்கள்.

8 வயதில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மற்றொரு முறை தன் திறமைகளை நிகழ்த்திக் காட்டினார் சகுந்தலா. மழலை மேதை என்று கொண்டாடினார்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், மேடைகளில் தன்னுடைய திறமை களை உலகம் அறியச் செய்துகொண்டிருந்தார். மின்னல் வேக கணிதத்தையும், நினைவுத்திறனையும் கண்டு பிரமிக் காதவர்களே இல்லை. 1973ஆம் ஆண்டு பிபிசி தொலைக் காட்சியில் பங்கேற்றார். கணிதத்தில் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் சட்டென பதில் அளித்தார்.

அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள். 1977ஆம் ஆண்டு 201 என்ற எண்ணின் 23ஆவது மூலத்தை 50 நொடிகளில் கண்டறிந்தார். அன்றைக்கு இருந்த கணினியை விட 12 நொடிகள் குறைவான நேரத்தில் விடை கூறினார்! இப்படி சகுந்தலா தேவிக்கும் கணினிக்குமான போட்டிகள் பல நடைபெற்றன. கணினியை விஞ்சினார் சகுந்தலா. 1982ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.

கணிதம், கணிதத்தில் மேஜிக் என்று எப்பொழுதும் எண்களுடனே வாழ்ந்தார். கணிதம் தொடர்பான பல புத்தகங்களையும் எழுதினார். மனித கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி 2013 ஏப்ரல் 21 அன்று உடல்நலக் குறைவால் மறைந்து போனார்.

Read more: http://viduthalai.in/page-7/76773.html#ixzz2vhYrNhzl

தமிழ் ஓவியா said...


களப்பலியான காளைகள்!


1937 ஆகஸ்டு 27இல் இந்தியைப் புகுத்துவது பற்றி அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) அறி வித்தார். சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்துவ தற்கே முதற் கட்டமாக இந்தியைக் கொண்டு வருகி றேன். என்று அவரை அறி யாமலேயே சென்னை இலயோலா கல்லூரியிலே பேசினார். ஆம் பூனைக் குட்டி வெளியில் வந்தது!

தந்தை பெரியார் தலைமை தாங்கினர், தமிழர் கள் எல்லாருமே கட்சி களைக் கடந்து ஜாதி, மதம் பிணக்குகளைத் துறந்து, தலைவர் பெரியார் தலைமை யிலே ஒன்று திரண்டனர்.

ஆம், அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழன் என்ற ஓரினக் கோட்பாட்டின் கீழ் தமிழர் கள் அணி வகுக்கும் நிலையை ஏற்படுத்தியது! தமிழ் மொழியின் பற்றுக் கரை புரண்டு ஓடியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு ஏற்க வெளியூர்களிலி ருந்து எல்லாம் தோழர்கள் திரண்டு வந்தனர் தலைநகர் நோக்கி. விடுதலை ஏடு ஓர் அழைப்பைக் கொடுத்தது எப்படி? இந்தி எதிர்ப்புச் சத்தி யாக்கிரகம் செய்ய ஒப்புக் கொண்டு, விடுதலையில் பெயர்களை வெளியிட்ட தொண்டர்களில் தங்கள் சொந்தச் செலவில், உடுப் புக்களோடு ரயில் சார்ஜும் கொடுத்து வரக்கூடிய வசதியுள்ளவர்கள் உடனே புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர வேண்டியது - என்பதுதான் விடுதலை யின் அந்த அழைப்பு. (எத்தகைய வித்தியாசம்!)

குடந்தையிலிருந்து அப்படி வந்து சேர்ந்தவர் தான் தாளமுத்து என்ற வீரன்! சென்னை இந்து தியாலாஜிக்கல் உயர்நிலைப் பள்ளி முன் மறியல் செய்து கைது செய்யப்பட்டார்.

சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட் நீதிபதி மாதவராய் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். இப் படியே விட்டு விட்டால் ஊருக்குப் போய் விடு கிறீர்களா? என்று கேட்டார் நீதிபதி! வில்லிலிருந்து புறப் பட்ட அம்பு போல் பதில் வந்தது - அந்தப் புற நானூற்று வீரனிடமிருந்து. இல்லை முடியாது! என்று. விளைவு நான்கு மாதக் கடுஞ்காவல் தண்டனை. அந்தோ அம்மாவீரன் சிறையிலேயே நோய் வாய்ப்பட்டு வீர மர ணத்தை முத்தமிட்டான்!

இன்னொரு தோழன் சென்னையைச் சேர்ந்த அருமை நடராஜன், அவ் வீரனுக்கோ ஆறு மாதக் கடுஞ்காவல் தண் டனை! அம்மாவீரனும் சிறையிலே மாண்டான். படிப்பறிவு இல்லாத ஹரி ஜன் - ஆதலால் மாண்டான் என்று மமதையோடு சட்ட சபையில் பேசினார் பார்ப் பனரான ராஜாஜி.

நடராஜன் இரங்கல் கூட் டத்தில் தளபதி அண்ணா பேசினார் விடுதலைபெற்ற தமிழகத்தில் தலைவர் பெரி யாரை நடுவில் வைத்து இறந்த இரு மணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச் சிலை எழுப்ப வேண்டும் என்றாரே!

சென்னை எழும்பூரில் செம்மாந்து நிற்கும் பெரு நகர வளர்ச்சித் திட்ட (MMDA) மாளிகைக்கு தாளமுத்து நடராஜன் என்று பெயர் சூட்டித் திறந்து வைத்தார் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்! (14.4.1989). - மயிலாடன்

குறிப்பு: இன்று தாள முத்து மறைந்தநாள் (1939).

Read more: http://viduthalai.in/e-paper/76808.html#ixzz2vnME5b3h

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.க்குள் எங்கு பார்த்தாலும் குடுமிப் பிடிச் சண்டை

பிரதமர் கனவு மூழ்கும் கப்பலாகி விட்டது

தி எக்னாமிக் டைம்ஸ் படப்பிடிப்பு

புதுடில்லி, மார்ச் 12- பாரதீய ஜனதா கட்சிக்குள் எங்குப் பார்த்தாலும் உள் கட்சிச் சண்டை நடந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக பிரதமர் கனவு என்னும் கப்பல் மூழ்கும் கப்பலாகி விட்டது என்று படம் பிடித்துள்ளது தி எக்னாமிக் டைம்ஸ் ஏடு.

தேநீர்க் கடை விவாதம் (சண்டை) கட்சித் தலைமை அலுவலகத்தில் தீவிரமாக நடந்து கொண்டு இருக் கிறது. பாரதீய ஜனதா கட்சி யின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி தலைமை யின் முடிவில் மிகவும் அதி ருப்தியில் உள்ளார்.

முரளிமனோகர் ஜோஷி யின் நாடாளுமன்ற தொகு தியான வாரணாசிமீது பார தீய ஜனதாவின் பிரதம ருக்கான வேட்பாளர் கண் வைத்துள்ளார். தொடக்கம் முதலே இந்த தகவல் முரளி மனோகர் ஜோஷிக்குத் தெரியவந்தாலும் அதை தலைமை தமக்கான தொகு தியை அவருக்கு ஒப்புக் கொள்ளாது என்று நினைத்து வந்தார். ஆனால் இறுதியில் வாரணாசித் தொகுதியை நரேந்திரமோடிக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு முரளிமனோகர் ஜோஷி தள்ளப்பட்டார். இதனால் விரக்தியடைந்த ஜோஷி கட்சியின் தலை மைக்குக் கட்டுப்படுவேன் என்று கூறினாலும், தனக்கு நெருக்கமானவர்களிடம் வாரணாசி தொகுதியில் நான் போட்டியிடாவிட்டால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறிக்கொண்டிருக்கிறார். மேலும் அவர் கூறிய தாவது: தற்போதைய அரசியல் சூழலில் பாரதீய ஜனதா தலைமை கட்சிக்கும், கட்சியின் பிரதம அமைச்சர் பதவி வேட்பாளராக இருக் கும் மோடிக்கும் பாதகம் ஏற்படும் முடிவை கட்சி எடுக்காது என்று நினைக் கிறேன் என்றார்.

சில நாட்களாகவே பார தீய ஜனதா கட்சியில் உட்கட்சிப்பூசல்கள் மெல்ல மெல்ல உருவாகிவிட்டன. முக்கியமாக கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற ஒரு வருக்காக பொதுக்கூட்டங் களில் இரண்டாம் பட்ச நப ர்களாக நடத்தப்பட்டுக் கொண்டு வருகின்றனர். ஜோஷி போர்க் கொடி!

முரளிமனோகர் ஜோஷி யைப் பொறுத்தவரை பார தீய ஜனதா கட்சியின் முக் கியத்தூண்களின் ஒருவராக இருந்து வருகிறார். வார ணாசி தொகுதியில் தொடர்ந்து பாரதீய ஜனதா சார்பாக தேர்தலில் நின்று வெற்றி பெற்று வருகிறார். இந்தச் சூழ்நிலையை மனதில் வைத்து கடந்த இரண்டு முறை வாரணாசியில் பொதுக் கூட்டம் நடத்திய நரேந்திர மோடி வேறு எங்கும் நின்று பரிசோதனை செய்து பார்ப் பதைவிட பாதுகாப்பான வாரணாசித்தொகுதியில் நிற்பதே தற்போது நல்லது என்று நினைத்துத் தலைமை யிடம் கூறினார். தலைமை யும் தற்போது உள்ள அரசி யல் அழுத்தததின் காரண மாக நரேந்திரமோடி இந்த வாரணாசி தொகுதியில் போட்டியிடும் முடிவை ஒப்புக்கொண்டு முரளி மனோகர் ஜோஷியிடம் தெரிவித்துள்ளது, .

தமிழ் ஓவியா said...

தலைமையிடத்தில் பொது விவாதம் வைக்கவில்லை

முரளி மனோகர் ஜோஷி யின் தொகுதியில் நரேந்திர மோடி போட்டி இடுவது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களான சுஸ்மா சுவராஜ், அத்வானி மற்றும் லால்ஜிடண்டன் போன்ற வர்களிடம் விவாதிக்க வில்லை, இதனால் கட்சித் தலைமையில் பெருத்த பிளவு ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. நரேந்திர மோடி பிரதம ராக கட்சித் தலைமை அறி வித்ததில் இருந்தே மூத்த தலைவர்களான அத்வானி, சுஸ்மா சுவராஜ் போன்ற தலைவர்கள் புறக்கணிக் கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மோடி யின் தொகுதித் தேர்வு பிரச்சனையும் சேர்ந்து கொள்ள, தலைமையில் பிளவு கூடிக் கொண்டே வருகிறது.

தற்போது நாடு முழு வதும் ஏற்பட்டுள்ள அரசி யல் கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். முக்கியமாக பாஸ்வானுடனான கூட் டணியில் எந்த மூத்த தலை வர்களின் ஆலோசனையை யும் பெறவில்லை, அதே போல் தொகுதிப்பங்கீட்டி லும் மூத்த தலைவர்களின் கருத்து புறக்கணிக்கப்பட் டது. தற்போது பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ நாத் சிங் தலையாட்டி பொம் மையாக மாறிவிட்டார்.

கர்நாடகாவில் எடியூ ரப்பா கட்சியில் இணைந்த விவகாரம் குறித்து சுஷ்மா சுவராஜ் சமூகவளை தளத் தில் அதிருப்தி தெரிவித் துள்ளார். சுஷ்மா சுவராஜ் நேரடி யாகவே பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜநாத் சிங் மீது குற்றம் சுமத்த ஆரம் பித்து விட்டார். சமூக வளை தளத்தில் கட்சித்தலைவர் என்பவர் அனைத்து உறுப் பினர்களையும் ஒரேமாதிரி யாக பாவிக்கவேண்டும் என்று மறைமுகமாக ராஜ நாத் சிங்கைக் குறிப்பிட் டுள்ளார், மாநிலத்தில் குடுமிப் பிடிச்சண்டை பாரதீய ஜனதா தேர்தல் வேலை ஆரம்பித்ததில் இருந்தே மாநிலங்களிலும் உட்கட்சிச் சண்டை தீவிர மாக துவங்கிவிட்டது.

சிவசேனா பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் மராட் டிய மாநில துணைப் பிரதமராக இருந்த கோபி நாத் முண்டே மற்றும் கட் சியின் முன்னாள் தலை வரும் ஆர்.எஸ்.எஸ்சுக்குப் பிரியமான நிதின் கட்கரியும் தற்போது பொது மேடை யிலேயே சண்டையிட ஆரம் பித்து விட்டனர். குறிப்பாக மராட்டிய பாரதீய ஜனதா கட்சி கிழக்கு மேற்கு என இரண்டு பிரி வாக பிரிந்து அவர்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். நிதின் கட் கரி மீது வருமானவரித்துறை குற்றம் சாட்டியதில் இருந்தே அவரை கட்சியின் முக்கிய பதவியில் நீடிக்கவிடாது கோபிநாத் முண்டே தலை மைக்கு அடிக்கடி கடிதம் எழுதி மிரட்டிவந்தார். இந்த சூழ்நிலையில் தான் நிதின் கட்கரிக்கு பாரதீய ஜனதா கட்சித்தலைவர் பதவி மீண் டும் கிடைக்காமல் ராஜநாத் சிங்கின் கையில் சென்றது, இதனால் கோபிநாத் முண்டே மீது கடுங்கோபத்தில் இருந்த நிதின் கட்கரி மராட்டிய மாநில பாரதீய ஜனதா வேட் பாளர் தேர்வில் கைவைத் தார். கோபிநாத் முண்டே யின் ஆதரவாளர்களில் பலருக்கு போட்டியிட வாய்ப்புக் கிடைக்காமல் இருந்து தனக்கு ஆதர வானவர்களின் பெயர்களை மாத்திரமே அதிகம் பரிந் துரை செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த கோபிநாத் முண்டே தலைமைக்கு எச்சரிக்கை விடும் தொனியில் கடிதம் எழுதியுள்ளார். ஆகையால் மராட்டிய மாநில வேட்பா ளர்கள் அறிமுகமாவது சிக்கலில் உள்ளது,

எடியூரப்பா ஒரு பிரச்சினை!

அதே போல் பிரிந்து சென்று மீண்டும் கட்சியில் இணைந்த எடியூரப்பா அனைத்துத் தரப்பிலும் கட்சியினரிடம் தனது அதி காரத்தை காட்டி வருகிறார். இது பாரதீய ஜனதா கர் நாடகத் தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது, கட்சித் தலைமையை மதிக்காமல் கட்சியை விட்டு விலகி புதுக்கட்சி ஆரம் பித்து அது போணியாகாமல் மீண்டும் திரும்பி கட்சிக்கு வந்தவருக்கு மோடி முக் கியத்துவம் கொடுத்து வருகிறார். இதன் காரண மாக எடியூரப்பா தலைக் கனம் பிடித்து அலைகிறார். கட்சிக்காக சிரமமான காலத்திலும் ஒன்றாக நின்று பாடுபட்ட நாங்கள் தற் போது கட்சிக்கு வேண்டாத வர்களாக ஆகிவிட்டோம், எங்களின் ஆலோசனை களை யாரும் ஏற்பதில்லை என்று கர்நாடகா பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் தன்னுடைய ஆதங் கத்தை வெளிப்படுத்தினார். ஏற்கெனவே பஸ்வானு டனான கூட்டணி குறித்து பிகார் மாநில பாரதீய ஜன தாவின் முக்கிய தலைவர்கள் எதிர்ப்புக் காட்டி வந்த நிலையில் தற்போது மெல்ல மாநிலம் முழுவதும் உட் கட்சிப் பூசல் அதிக அளவில் பெருகியுள்ளது.

இது தேர்தல் நெருங்க நெருங்க மேலும் அதிகரிக் கும் என்றே தெரிகிறது. ஆட்சிக்கனவில் மிதந்து கொண்டு இருந்த பாரதீய ஜனதா கப்பல் தற்போது உட்கட்சி சண்டை காரண மாக மெல்ல மெல்ல மூழ் கிக்கொண்டு இருக்கிறது.

(தி எக்னாமிக் டைம்ஸ் 10.3.2014)

Read more: http://viduthalai.in/e-paper/76809.html#ixzz2vnMTygV6

தமிழ் ஓவியா said...


மோடிக்கு குட்டு!!


- குடந்தை கருணா

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, போட்டியிடும் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதில் பாஜக தலைவர்களிடையே கடும் சச்சரவு ஏற்பட்டுள்ளது. மோடி வாரணாசி தொகுதியில் நிற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி சென்ற முறை வெற்றி பெற்ற தொகுதி. இந்த முறையும் தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்கிறார். இப்போது மோடி அந்த தொகுதியை கேட்பதால், ஜோஷி ஆத்திரம் அடைந்துள்ளார்.

கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் இத் தகைய முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவின் மக் களவைத் தலைவராக இருந்த சுஸ்மா சுவராஜ், ஜோஷிக்கு ஆதரவாக உள்ளார்.

ஏற்கனவே, குஜராத்தில் அத்வானி தொடர்ந்து வெற்றி பெறும் காந்தி நகர் தொகுதியில் மோடி தான் நிற் பதற்கு முயற்சி செய்து, அத்வானியின் கடும் எதிர்ப்பால், அது நிறுத்தப் பட்டது.

இப்போது, வாரணாசி தொகுதி யில், ஜோஷியை விரட்டி விட்டு தான் நிற்கலாம் என முடிவு செய்திருப்ப தற்குக் காரணம், அங்கே ஆர். எஸ்.எஸ். மோடிக்கு ஆதரவாக ஏற் கனவே பிரச்சாரம் துவக்கிவிட்டது.

இந்நிலையில், தனது டிவிட்டரில், மோடிக்கு நாடு முழுவதும் அலை வீசுகிறது என்றால், எதற்காக, வார ணாசி தொகுதிதான் தனக்கு வேண் டும் என ஏன் கேட்க வேண்டும்; மற்ற தலைவர்களும், அவரவர் தொகுதியிலேயே போட்டியிட லாமே? என கேள்வி எழுப்பி உள்ளார் சுஸ்மா சுவராஜ்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை மூன்று பட்டி யல் வெளியிடப்பட்டது. ஆனால், மோடி எந்த தொகுதி என இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, மோடிக்கு அலை வீசுவதாக ஊடகங் கள் சொல்கின்றன. மோடிக்கு அலை ஒன்றும் வீச வில்லை; மோடி தான் அலைந்து கொண்டிருக்கிறார் என்று பேசினார்கள்.

ஆசிரியர் வீரமணியின் இந்த பேச்சை, வழிமொழிவது போல் இருக்கிறது பாஜகவின் மூத்த தலை வர் சுஸ்மா சுவராஜின் கருத்து.

Read more: http://viduthalai.in/page-2/76819.html#ixzz2vnMxPPf6

தமிழ் ஓவியா said...


கடவுள் - மதம்



மற்ற நாடுகளில் மனிதனுக்கு மனிதன் பற்றும், அன்பும் உண்டாக்கக் கடவுள், மதம் இருக்கின்றன. நமது நாட்டிலோ, மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், பக்தி, பூசை, சடங்குகளை ஏற்படுத்து கிறார்கள்.
(விடுதலை, 16.5.1968)

Read more: http://viduthalai.in/page-2/76814.html#ixzz2vnNKZ4gR

தமிழ் ஓவியா said...


இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாதா முதல்வருக்கு?


தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் இருக்கிறதோ, அவற்றை யெல்லாம் மறைக்க வேண்டும் என்று ஸ்டாலின் வழக்குத் தொடுத்திருக்கிறார். அப்படியெனில் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. எனவே அனைவரின் கையையும் வெட்டச் சொல்லி மனு கொடுப்பாரா ஸ்டாலின்?

- என்ற வினாவை சிதம்பரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசி இருக்கிறார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.

இயற்கையில் விளைந்திருக்கும், மலர்ந் திருக்கும் இலைகளை வெட்டச் சொல்லவில்லை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில் உள்ள இரட்டை இலை உருவமாக இருந்தாலும் சரி, பேருந்துகளில் இடம் பெற்றுள்ள இரட்டை இலைப் படங்களாக இருந்தாலும் சரி. இவை எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஏற்பாடுகள்! மக்கள் மத்தியில் அஇஅதிமுகவின் தேர்தல் சின்னத்தை நினை வூட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற திட்டமிட்ட செயற்கையான ஏற்பாடு - மலிவான பிரச்சார யுக்தி.

இயற்கைக்கும், செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசலாமா ஒரு முதல் அமைச்சர்?

Read more: http://viduthalai.in/page-8/76803.html#ixzz2vnPfsCoe

தமிழ் ஓவியா said...

முருகனுக்குப் பிடித்தது பஞ்சாமிர்தம் அல்ல - சாக்லெட்

ஆலப்புழா, மார்ச் 12-முருகனுக்கு பஞ்சாமிர்தம், பால், பழம் என்று பல்வேறு பொருட்கள் வைத்து வழி படுவது உண்டு. எங்காவது, முருகனுக்கு சாக்லேட்களை வைத்து வழிபடுவதை கேள் விப்பட்டிருக்கிறீர்களா?

கேரளாவின் ஆலப்புழா புறநகரில் உள்ள சுப்ரமணிய புரம். இங்கு தெக்கன் பழனி பாலசுப்ரமணியசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் விசேஷம், குழந்தை பருவத் தில் இருக்கும் பால முருக னுக்கு சாக்லேட்களை படைத்து வணங்குவதுதான். இங்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிறியது முதல் பெரியது வரையில் பல்வேறு வடிவங்களில் அமைந்த சாக் லேட்களை கொண்டு வந்து முருகனை வழிபடுகின்ற னர். பின்னர் அதுவே பக்தர் களுக்கு பிரசாதமாக வழங் கப்படுகிறது.

இந்த கோயிலில் எப் போது இருந்து சாக்லேட்டை முருகனுக்கு படைத்து வணங்கி வருகிறார்கள் என்பது யாருக்குமே தெரிய வில்லை. தங்களுக்கு நினைவு தெரிந்த நாள் முதலே, இந்த கோயிலில் முருகனுக்கு சாக் லேட்தான் படைக்கப்படு கிறது என்று விவரம் தெரிந் தவர்கள் கூறுகின்றனர். இங் குள்ள முருகன், பால பருவத் தில் இருப்பதால் சாக்லேட்டை படைக்க ஆரம்பித்திருக் கலாம் என்று தாங்கள் நம்புவ தாகவும் அவர்கள் கூறினர்.

தேர்வுக் காலங்களில் இக்கோயிலில் மாணவர்கள் சாக்லேட்டை முருகனுக்கு படைத்து, தேர்வில் வெற்றி பெற வணங்குவார்களாம்.

Read more: http://viduthalai.in/page-8/76806.html#ixzz2vnPqDzxK

தமிழ் ஓவியா said...


வீரப்பன் கூட்டாளிகள்மீதான மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றத்தின் நாடு போற்றும் நல்ல தீர்ப்பு!

தமிழர் தலைவர் அறிக்கை

வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்ற அமர்வு ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்ததை எதிர்த்து மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை வரவேற்று, நாடு போற்றும் நல்ல தீர்ப்பு என்று பாராட்டுத் தெரிவித்துள் ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

முன்பு வீரப்பன் கூட்டாளிகள் மீசை மாதையன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன் ஆகிய நான்கு பேரும் (தூக்குத் தண்டனை விதித்திருந்த நிலையில் அந்நான்கு பேரும்) தாங்கள் நிரபராதிகள் என்றும், வேண்டுமென்றே தங்களை வழக்கில் காவல் துறை இணைத்துவிட்டது என்றும் வாதாடினர்.

அதன்பின்னரும் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது. அதை வைத்து குடியரசுத் தலைவருக்கு - அதாவது மத்திய அரசுக்கு - தங்களுக்குக் கருணை காட்டவேண்டுமென்று கருணை மனுமூலம், சட்டப்படி தண்டனை பெற்றோர் வேண்டிக்கொண்டனர்.

அந்த மனுமீது உடனடியாக பதில் அளிக்கப்படா மலேயே சுமார் 9 ஆண்டுகளுக்கும்மேலாக கிடப்பில் போடப்பட்டு, பிறகே நிராகரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு.ப.சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு (மூன்று நீதிபதிகளைக் கொண்டது) வட நாட்டில் இப்படி ஒரு வழக்கில் கருணை மனு காலதாம தமான நிலையில், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் - அதாவது அநீதியேயாகும் என்ற கருத்தை - நியா யத்தை உள்ளடக்கி, அவர்களது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கொடுத்த தீர்ப்பு, உச்சநீதிமன்ற சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகியது!

அந்த அடிப்படையிலேயே இவர்களுக்கும் இவர்களை யொத்து 13 ஆண்டுகளுக்கும்மேலாக மறுக்கப்பட்ட நீதியின் கோணலைச் சரி செய்யும் வகையில், ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர்தம் கருணை மனு நிராகரிப்புப்பற்றிய உச்சநீதிமன்ற வழக்கிலும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு சொல்ல உரிமை இல்லையா?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனை மாற்றத்தை எதிர்த்து மத்திய அரசு, சீராய்வு மனுவை ஒரு வழக்காக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, வாதாடியது.

அக்கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்பு, சட்ட ரீதியாக உச்சநீதிமன்றத்திற்குத் தீர்ப்புச் சொல்லும் உரிமை இல்லை என்பதாக வாதாடியது மத்திய அரசு!

அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வீரப்பன் கூட்டாளிகளான நால்வருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்தது, தவறு என்ற மத்திய அரசின் வாதத்தில் வலிமையோ, பசையோ இல்லை என்று கூறி, மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

நாடு போற்றும் நல்ல தீர்ப்பே!

மறுக்கப்பட்ட நீதிக்கு மனிதநேயத்துடன் சரியான பரிகாரத்தைத் தந்த இந்தத் தீர்ப்பு, நாடு போற்றும் நல்ல தீர்ப்பு. இதனை வரவேற்கிறோம்.

சென்னை
13.3.2014

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/76843.html#ixzz2vtN26NWc

தமிழ் ஓவியா said...


தேர்தல் துணுக்குகள்

அத்வானியின் அருள்வாக்கு!

வரும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு 182-க்கும் அதிக மான இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

- எல்.கே.அத்வானி

பெரும்பான்மை கிடைக்கும் - ஆட்சியைப் பிடிப்போம் என்று பீலா விடும் பி.ஜே.பி.யினருக்கு இது அர்ப்பணம்!

பாஷ்யம்

நமோ நமோ கோஷத்தை எழுப்பவேண்டா மென ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பணியாற்ற மாட்டார்கள் என்ற ரீதியில்தான் கருத்துத் தெரி வித்தார்.

- மன்மோகன் வைத்யா, ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர்

அய்யோ பாவம்! ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சுக்கு வெண்டைக்காய், விளக்கெண்ணெய், கத்தாழை பாஷ்யங்களைச் சொல்ல புதிய பாஷ்ய கர்த்தாக்கள் புறப்பட்டுள்ளனர் போலும்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு சலசலப்பை ஏற் படுத்தியது உண்மைதான். அதனைச் சமாளிக்கத்தான் இந்த உதார்களோ!

சோதிடமா?

அ.தி.மு.க.வில் வேட்பாளர்கள் ஜோதிடத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். தி.மு.க.விலோ தொண்டர்கள் தேர்வு செய்கின்றனர்.

- தா.மோ.அன்பரசன், மேனாள் அமைச்சர்

தேர்தலில் நிற்கும் அ.தி.மு.க.வினர் ஜாதகத் தோடு வரவேண்டும் என்று கடந்த தேர்தலில் அ.தி. மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது என்பது நினைவூட்டத்தக்கது.

சாயம் வெளுக்கும்!

ஹோலிப் பண்டிகைக்கு உத்தரப்பிரதேசம் தயா ராகிக் கொண்டிருக்கிறது. ராகுல் வண்ணப் பொடி, மோடி வண்ணப் பொடி என்று வியாபாரம் நடக் கிறதாம். இதில் யார் சாயம் வெளுக்கப் போகிறது என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்.

மோடி காமிக்ஸ்!

டில்லியில் உள்ள ஒரு பதிப்பகம், மோடி காமிக்ஸ் என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டு, காசு சம் பாதிக்கத் திட்டமிட்டுள்ளதாம்.
பொதுவாக மோடி என்றாலே ஒரு காமிக் என்ற நிலைதானே நாட்டில் ஏற்பட்டுள்ளது.

குஜராத்தில் பிறந்த காந்தியாரின் முழுப் பெயரைக்கூடத் தெரிந்து வைத்திராத குஜராத் முதலமைச்சராயிற்றே மோடி!

பில்லி - சூன்யம்

பா.ம.க.விலிருந்து பிரிந்து சென்ற ஒரு கட்சியின் பிரமுகர் சந்திரசேகரன் என்பவர் சிறீபெரும்புதூரை யடுத்த சிவன்தாங்கல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். உள்ளூர் பா.ம.க. பெண் ஒருவர், சந்திரசேகரன் வீட்டுக்குள் எலுமிச்சம் பழத்தையும், தகடையும் வீசியுள்ளார்.

பில்லி - சூன்யம் வைக்கப்பட்டதாகப் பயந்து மந்திரவாதிகளை அழைத்து இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளாராம்! (அரசியல் எப்படியெல்லாம் போகிறது பார்த்தீர்களா?) மூடநம்பிக்கைக் குழியில் விழுந்தால் ஒரு லட்சம் என்ன எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் நட்டம்தான். மூட நம்பிக்கைவாதிகளை விரட்டு வதும் எதிரிகளுக்கு எளிதுதானே!

மண் குதிரையோ!

டில்லியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி யும், அன்னா அசாரேயும் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந் தது. கூட்டத்தில் அசாரே பங்கேற்காத நிலையில், மம்தா மட்டுமே பங்கேற்றார்.

அசாரே, ஏன் வரவில்லை? என்று தமக்குத் தெரியவில்லை என்றார் மம்தா. இவ்வளவுக்கும் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே, அன்னா அசாரே அவர்களின் ஆதரவாளர்கள்தானாம்.

எப்படி இருக்கிறது? அன்னா அசாரேயுடன் கைகோர்த்த கெஜ்ரிவால், அந்த விளம்பரத்தை - ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டார். பரிதாபத் திற்குரிய காந்திக் குல்லாய் அசாரேயோ ஏமாற்றத்தில் இருக்கிறார். அவரை நம்பிய மம்தாவுக்கு அனு தாபங்கள்!

பஸ்வான் பரிதாபம்

மதச்சார்பின்மை என்பது தேர்தல் தந்திரம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார் லோக்ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான். மதச்சார்பின் மைக்கு விரோதமான மதவாதக் கட்சி என்று கூறி, பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து பஸ்வான் வெளியேறினாரே - அதுகூட தேர்தல் தந்திரம்தானா? பி.ஜே.பி. கூறுவதை அட்சரம் பிறழாமல் சொல்லுகிறாரே!

சமூகநீதி என்று பார்த்தாலும் பி.ஜே.பி.யின் நிலைப் பாடு என்ன என்று பஸ்வானுக்குத் தெரியாதா? வி.பி.சிங் ஆட்சியை ஏன் அவர்கள் கவிழ்த்தார்கள்.

பஸ்வான் - புதைக்குழிக்குள் சிக்கிக்கொண்டு விட்டார் - இந்தக் கறையிலிருந்து மீண்டும் மக்கள் மதிப்பென்னும் கரையைத் தொடுவது அவ்வளவு எளிதல்ல!

Read more: http://viduthalai.in/e-paper/76841.html#ixzz2vtNCuF8f

தமிழ் ஓவியா said...


கலைஞர் தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் சிறப்பு நிகழ்வு!


நாளை (14.3.2014) வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கலைஞர் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகும் சிறப்பு விருந்தினர் பகுதியில் விடியலே வா! என்ற நிகழ்ச்சி யில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும், நாடாளுமன்றத் தேர்தல் 2014, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து எடுத்துரைக்கும் நிகழ்வு ஒளிபரப்பாகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/76840.html#ixzz2vtNQWy6b

தமிழ் ஓவியா said...


பிற இதழிலிருந்து....! ஆர்.எஸ்.எஸ். நாடகம் எடுபடாது!


ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் இந்து ராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவக் சங் அமைப்பு தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்றும் தங்களுக்கும் அரசி யலுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவ்வப்போது பம்மாத்து செய்யும். ஆனால் ஆர்எஸ்எஸ் வரலாற்றை அறிந்த வர் அறிவர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் முகமே பாஜக என்பதை பாஜக வின் ஒவ்வொரு அசைவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினாலேயே தீர்மானிக்கப்படு கிறது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் கனவில் மிதந்து கொண்டிருந்த எல்.கே. அத்வானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடியை முன் மொழிந்து முடிவாக் கியது ஆர்எஸ்எஸ் தான்.

இதனால் ஆத் திரமடைந்த அத்வானி அக்கட்சியிலி ருந்தே விலக முயன்றார். அவரை அழைத்து கண்டித்து கட்சியில் தொடருமாறு அறி வுறுத்தியதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். பாஜகவில் அவ்வப்போது ஏற்படும் நெருக்கடியை தீர்ப்பதும் அந்த அமைப்பே.

இந்த நிலையில் ஏதோ நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை முன்னிலைப்படுத்த வேண்டாம். பிரச்சனைகளை முன்னிறுத்த வேண் டும் என்று பெங்களூரில் நடைபெற்ற இந்த அமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் மோகன்பகவத் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டினுடைய மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று மதவெறி. ஒன் றாக வாழும் மக்களிடையே பகைமைத் தீயை மூட்டிவிட்டு அவர்களை மோத விடும் இழிசெயலை செய்துவரும் அமைப்புகளில் முதலிடம் வகிப்பது ஆர்எஸ்எஸ்தான். இந்த லட்சணத்தில் மக்கள் பிரச்சினையைப் பற்றி பேசப் போகிறார்களாம்.

மோடியை ஒரு விற்பனைப் பொருள் போல விளம்பரப்படுத்த பன்னாட்டு விளம்பர நிறுவனங்கள் நியமிக்கப்பட் டுள்ளன.

இதுதவிர பல்வேறு ஊட கங்களை வாடகைக்கு அமர்த்தி மோடி அலை வீசுகிறது, கரையைக் கடந்து விட்டது என்றெல்லாம் கதைகட்டி விடு கிறார்கள். ஆனால், இந்தக் கதைகள் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கே கூட புளித்துப்போய்விட்டது போலும்.

ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு ரகசிய அமைப்பாகவே கட்டமைத்துள்ளது. ஆயுதப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாஜக வின் பிரதான தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர்கள். பாஜகவுக்கு அந்தரங்க ஆலோசனை வழங்குவது அவர்களே. ஆனால் தேர்தல் வந்தவுடன், தன்னை ஒரு சுயேச்சையான அமைப்புபோல காட்டிக்கொள்ள முயல் கிறார்கள். இது பலிக்காது.

மிக முக்கிய கடமை

சிறுபான்மை மக்களை இரண்டாம்தர குடிமக்களாக கருதுகிற, கேடுகெட்ட சாதிய வர்ணாசிரம முறையை நிலைப் படுத்த விரும்புகிற, கலவரங்களின் மூலம் அதிகாரத்தை பிடிக்க முடியும் என்று கருதுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரதிநிதிதான் பாஜக. நாடு விடுதலை பெற்றவுடன் மக்கள் ஒற்று மைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியை படுகொலை செய்ததும் இவர்களது சித்தாந்தமே ஆகும்.

ஆர்எஸ்எஸ் வழி காட்டுதல்படி பாஜக ஆட்சி நடத்தினால் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலே நடை முறைப்படுத்தப்படும். பாஜகவை தோற்கடிப்பதன் மூலம் ஆர் எஸ்எஸ் அமைப்பை பின்னுக்குத்தள்ளுவது தேசத் தின் இன்றைய மிக முக்கிய கடமை யாகும்.

நன்றி: தீக்கதிர் தலையங்கம், 13.3.2014

Read more: http://viduthalai.in/page-2/76845.html#ixzz2vtNhGbdY

தமிழ் ஓவியா said...


வகுப்புவாதம் ஒழியாது


வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை.

(குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/76842.html#ixzz2vtNsdiLA

தமிழ் ஓவியா said...

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (2)

அரசுகள் வரும் - போகும் - சாலைகள்போடும் - தெரு விளக்குகளை உருவாக்கும் - கிணறுகள் வெட்டும் - இதுபோன்ற பணிகளைத்தான் செய்யும். (Ameliorative Measures) ஆனால், சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தோடு புதுமையையும், புரட்சியையும் பூக்கச் செய்யும் அடிப்படை மாற்றம் என்ற கண்ணோட்டத்தோடு ஆட்சி லகானைப் பிடிப்பதற்குத் தனி ஆற்றலும், தத்துவார்த்தமும் தேவைப்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி நாற்காலியில் குறுகிய காலமே அமர்ந்திருந்தாலும், காலத்தை வென்று நிற்கும் முத்தான மூன்று சாதனைகளைப் பொறித்துச் சென்றார்.

1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர்

2. சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம்

3. இந்திக்கு இடமில்லை, தமிழ்நாட்டில் தமிழும் - ஆங்கிலமுமே என்று - எவரும் எந்தக் காலத்திலும் கை வைக்கத் துணியாத மூன்று முத்திரைகளைப் பொறித்துச் சென்றார்.

கலைஞர் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான மறுமலர்ச்சித் திட்டங்கள் (சொத்துரிமை உள்பட) தமிழ் செம்மொழி, தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பெரியார் நினைவு சமத்துவ புரங்கள், இது சூத்திரர்களின் அரசு என்ற பிரகடனம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடக்கவிருக்கும் 16 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. அறிக்கை இத்திசையில் மேலும் பல மைல் கற்களைப் பதித்துள்ளது.

13 ஆவது அம்சமாகச் சொல்லப்பட்டு இருப்பது அகில இந்திய அளவில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் (Self Marriage Act).

திராவிடர் இயக்கம் பல சமூகச் சீர்திருத்தக் கருத்து களை மக்களிடம் வலியுறுத்தி, பல முற்போக்கான சட்டங் களை நடைமுறைப்படுத்தியுள்ளது. சடங்குகளற்ற, மதச் சார்பற்ற, சீர்திருத்த திருமணச் சட்டமான சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1968 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் ஓவியா said...

பல சமூகவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், இந்த முற்போக்கான சட்டத்தை வரவேற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அளவில் இந்துத் திருமணச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சுயமரியாதைத் திரு மணத்தை சட்டப்படி அங்கீகரிக்கவேண்டும் என்று தி.மு. கழகம் வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சாதாரணமானதல்ல. சுயமரியாதை இயக்கத்தின் சிற்பியான தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை இந்தியத் துணைக் கண்டம் அளவுக்கு விரிவுப்படுத்தும் விவேக மிகுந்த சிந்தனையாகும். அதன்மூலம் இக்கண்டத்தில் வாழும் பார்ப்பனர் அல்லாத சூத்திர, பஞ்சம மக்களின் இன இழிவினை ஒழிக்கும் புரட்சிகரமான திட்டமாகும்.

சென்னையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்றைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி அவர்கள், அத்திருமண முறையைப் பார்த்துவிட்டு வியந்த நேரத்தில், மானமிகு கலைஞர் அவர்கள் அகில இந்திய அளவில் செயல்படுத்த சட்டம் இயற்றலாமே என்று சொன்ன கருத்தை மக்களவைத் தலைவர் அன்று ஏற்றுக்கொண்டாரே!

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அண்ணா கொண்டு வந்த சுயமரியாதைத் திருமணச் சட்டத்தைச் சற்றும் மதிக்காமல், தன் வளர்ப்பு மகனுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து வைதிகத் திருமணத்தை நடத்தி வைத்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரிடம் இதுபோன்ற சிந்தனைகளை எதிர்ப்பார்க்க முடியுமா? அதனால்தான் அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மருந்துக்குக்கூட சீர்திருத்த வாடையைக் காண முடியவில்லை.

சுயமரியாதைத் திருமணம் என்கிறபோது வெறும் புரோகித மறுப்பு மட்டுமல்லவே, ஆண் - பெண் சமத்துவம் அதன் உள்ளடக்கமாயிற்றே! மூட நம்பிக்கையை முறியடிக்கும் பகுத்தறிவுச் சிந்தனை மணம் பரப்பும் சாத்தியக்கூறு அதில் மிக முக்கிய அம்சம் ஆயிற்றே! ஜாதி மறுப்பு என்ற மகத்தான மகரந்தமும் அதற்குள்ளிருக்கிறதே!

திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டு, நடத்தப்பட்டுவரும் இந்தச் சுயமரியாதைத் திருமணக் காற்றினை வட மாநிலங்களில் வீசும்படிச் செய்தால், மிகப்பெரிய மாற்றத்தை அங்கெல்லாம் காண முடியுமே - கவுரவக் கொலைகள், குழந்தை மணங்கள் வேரற்றுப் போய்விடுமே!

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மற்றுமொரு குறிப் பிடத்தகுந்த திட்டம் பெரியார் நினைவுச் சமத்துவபுரங்கள் ஆகும்.

சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்றுகூடி, சமத்துவ உணர் வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவிவையொட்டி, 1997 ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான - புரட்சிகரமான திட்டமாம் பெரியார் நினைவு சமத்துவ புரம் திட்டத்தின்மூலம் தமிழகத்தில் 145 சமத்துவப் புரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாதி, பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவபுரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய மக்களை அரித்துத் தின்னும் கொடும் கரையான், ஜாதி என்னும் அமைப்பு முறை! மனிதனின் சமத்துவ உணர்வுக்கும், சகோதரத்துவச் சிந்தனைக்கும் நேர் எதிரானது இந்த ஜாதி அமைப்பு! பிறப்பிலேயே பேதம் ஏற்படுத்தும் படுபாதக அமைப்பு முறை - எந்த விலை கொடுத்தேனும் இதனை ஒழிக்கவேண்டும் என்று பாடுபட்டவர் - அதற்கான கருத்துருக்களைத் தந்தவர் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார் அவர்களே!

தமிழ்நாட்டைவிட பிற மாநிலங்களில் இந்த ஜாதி என்னும் பார்த்தீனியம் படர்ந்து ஒட்டுமொத்தமான சமுதாயத்தையே உருக்குலைத்து வருகிறது.

ஜாதி என்னும் முறை தனி மனிதனை மட்டுமின்றி ஒட்டுமொத்தமான சமூகத்தையே பகை முகாமாக்கிப் பாழ்படுத்தி வருகிறது.

மானமிகு கலைஞர் அவர்கள் சிந்தனையில் உதித்த தன்னிகரற்ற - தனித்துவமான இந்தத் திட்டம் இந்தியாவுக்கே தேவையான மூலிகைத் தோட்டம் போன்றதாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இந்தத் திட்டத்தை விரிவாக்க மறுப்பதோடு, ஏற்கெனவே உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரங்களையும் பராமரிக்கத் தவறி வருவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது சமுதாய வளர்ச்சிக் கான தொலைநோக்குத் திட்டங்களின் தொகுப்பு. இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சிகளாலும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத ஓர் ஆவணக் காப்பகம் என்பதில் அய்யமில்லை.

Read more: http://viduthalai.in/page-2/76844.html#ixzz2vtOErLGX