Search This Blog

4.5.13

ஆஸ்திகனா? - நாஸ்திகனா? பெரியார் எழுதிய உரையாடல்



நாஸ்திகன்:- “பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை விடுதலை செய் விக்க வேண்டும்” என்று பேசுகிற, பாடுபடுகிற தேசாபிமானிகள், தேசிய வாதிகள், தேச பக்தர்கள் ஆகியவர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?

ஆஸ்திகன்:- ஆஸ்திகர் என்றால் என்ன?

நா:- சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் உள்ள சர்வேஸ்வரன் ஒருவன் உண்டு. உலகம் முழுமையும் உண்டாக்கி ஆண்டு வருகிறான். அவ(னது சித்தம்) னன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்ற முடிவை உடையவர்கள்.

ஆ:- நாஸ்திகர் என்றால் என்ன?

நா:- மேற்கண்ட முடிவை ஒப்புக் கொள்ளாதவர்கள். ஆகவே “பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும்” என்ற தேச பக்தர்கள் முதலிய வர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?

ஆ:- பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின்றவர்களுக்கும் ஆஸ்திக நாஸ்திகத்துக்கும் என்ன சம்பந்தம்?

நா:- சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள கடவுளின் திருச்சித்தமில்லாமல் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்திருக்க முடியுமா?

ஆ:- ஒரு நாளும் வந்திருக்க முடியாது.

நா:- அப்படிப்பட்ட கடவுளுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம், இந்தியாவுக்கு மிக மிக இன்றியமையாத அவசியம் என்ற முடிவேற்படாமல் திருச்சித்தம் ஏற்பட்டிருக்குமா?

ஆ:- ஏற்பட்டிருக்காது.

நா:- அப்படியானால் சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள ஒரு கடவுளுடைய முடிவுக்கும் திருச்சித்தத்திற்கும் விரோதமாக இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரின் ஆதிக்கம் ஒழிந்துவிட வேண்டு மென்று கருதுவதும் முயற்சிப்பதும் கடவுளுடைய சர்வசக்தி........... முதலிய வைகளை நம்பாமலா அல்லது கடவுளின் அப்படிப்பட்ட சக்திகளுடன் எதிர்த்து போட்டிபோட்டுப் பார்க்கவா?

ஆ:- கடவுளின் சர்வ சக்தியை நன்றாய் அறிந்து தினமும் கடவுளிடம் பேசும் மகாத்மா காந்திகூட இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்கவேண்டுமென்று தானே கருதுகிறார்.

நா:- அது வேறு சங்கதி. உம்மைக் கேட்டதற்கு நீர் பதில் சொல்லும்.

ஆ:- எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. காந்தியார் வரப்போகிறார். அவரைக்கேட்டு நான் பதில் சொல்லுகிறேன்.

நா:- உன் சங்கதியே அதாவது நீ நாஸ்திகனா? ஆஸ்திகனா? என்கின்ற சங்கதியே உனக்குத் தெரியாமல் திண்டாடுகிற நீ, சுயமரியாதைக் காரர்கள் நாஸ்திகர்கள் என்று சொல்லுவது மடத்தனமும் போக்கிரித்தனமு மான காரியமா இல்லையா? அல்லது இவ்விரண்டிலொன்றா இல்லையா? ஆதலால் இந்த சங்கதிக்கு சரியான பதில் தோழர் காந்தியிடமிருந்தோ அல்லது அவரது பாட்டனாரிடமிருந்தோ தெரிந்து வந்து எனக்குச் சொல்லு கின்ற வரையில் “சு.ம. காரர் நாஸ்திகர்” என்று எங்காவது, மூலை முடக்கு களிலாவது, சந்து பொந்துகளிலாவது பேசுவாயேயானால் உன்னைப்போல் அயோக்கியன், இழிதகமை உள்ள மனிதன் அற்பன், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்ட வஞ்சகன் வேறு யாரும் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.

--------------------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் அவர்கள் எழுதிய உரையாடல்-”புரட்சி”  - 17.12.1933

22 comments:

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


வாரன்ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாயைக் கையாடல் செய்த நந்தகுமார் என்ற பார்ப்பனருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும், அதை எதிர்த்து பார்ப்பனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா-?

தமிழ் ஓவியா said...

சென்னையில் குழந்தை நரபலி : நோய் நாடி நோய்முதல் நாடவேண்டும்


கடந்த 13.04.2013 அன்று சென்னையில் நடந்த செய்தி குழந்தை நரபலி என்ற கோர சம்பவம் நம் நெஞ்சங்களில் ரத்தக் கண்ணீர் வடியச் செய்யும் கொடுமையான, அநாகரிகமான, காட்டுமிராண்டிகளாக நம் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதற்கான நிர்வாண அடையாளம் ஆகும்!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் -_- அவரது மனைவி கீதா; இவர்களின் இரண்டரை வயது பையன் விஷ்ணு.

9.4.2013 அன்று இவர்களது பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக் கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு உடனே எடுத்துச் சென்ற நிலையில், அக்குழந்தை வழியிலேயே இறந்து விட்டது.

குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் விழுந்து, (விபத்தாக) இறந்துவிட்டதாக எண்ணி, பெற்றோர் -_ -குடும்பத்தினர் அதன் உடலை எரித்து விட்டனர்.

பிறகுதான் உண்மை உலகுக்குத் தெரிய வந்தது!

அந்தக் குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்ற பெண், தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம் பக்கத்தாரிடம் அப்பகுதியில் உள்ள ஜோசியர் ஒருவர் தெரிவித்துள்ளார்; அதன்பிறகு காவல் துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது. மகேஸ்வரியை அழைத்து விசாரித்தபோது, அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்!

அவர் அளித்த வாக்குமூலம் எப்படி மூடநம்பிக்கை நோய் நம் மக்களின் மூளையை அறவே அரித்துத் துளை போட்டுள்ளது -_- என்பதற்கான அப்பட்டமான சான்றாகும்.

7.4.2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக்காரனிடம் என் கையை நீட்டி, ஜோசியம் பார்த்தேன். அப்போது எனக்கும் என் குடும்பத்திற்கும் யாரோ செய்வினை வைத்ததாகத் தெரிவித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அதை அகற்றி விடுவதாக அந்தக் குடுகுடுப்பை ஜோசியன் சொன்னான்.

மறுநாள் அந்தக் குடுகுடுப்பைக்காரன் மந்திரித்த எலுமிச்சம் பழம், இரண்டு தாயத்து, குங்குமம் போன்ற பொருள்களைக் கொடுத்து தாயத்தை என்னையும், என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடுகுடுப்பைக்காரன் என்னிடமிருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொண்டான்.

தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுயநினைவை இழந்தேன்.

குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும்போது எனக்கு ஆத்திரமாக இருந்தது.

தமிழ் ஓவியா said...

(எனக்கும் செந்தில் குடும்பத்திற்கும் மனவேறுபாடு இருந்தது. என்றாலும் குழந்தை விஷ்ணு என்னிடம் வந்துதான் விளையாடிக் கொண்டிருப்பான்) கொலை செய்து விடலாம் என்று தோன்றியது. 9.4.2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து வீட்டிலிருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற்சித்தேன், மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான்.

உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று அங்கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டு விட்டு தவறி விழுந்ததாக நாடகம் ஆடினேன். அனைவரும் அதை நம்பினர். (சுயநினைவை இழந்தேன் என்பதும் நாடகத்தின் ஓர் அங்கம்தானோ!)

மகேஸ்வரி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை விஷ்ணுவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மகேஸ்வரி தோஷம் கழிக்கும் நோக்கத்தில் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுபற்றி நேற்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மிக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு பெரியார் எப்போதும் தேவைப்படுவது ஏன் என்பதை இதன்மூலம் நெக்குருக வர்ணித்துள்ளார்கள்!

21ஆம் நூற்றாண்டிலா வாழுகிறோம் என்ற பொருள் பொதிந்த கேள்வியினை பொறி தட்டும்படிக் கேட்டுள்ளார்கள்!

நமது அரசியல் சட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்று 51கி(லீ) பிரிவின்கீழ், அறிவியல் மனப்பான்மையை _ மனிதநேயத்தை ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் மனப்பாங்கை ஊக்குவிப்பது, வளர்ப்பது, சீர்திருத்தத்தை வலியுறுத்துவது என்று உள்ளது?

இதை அமைச்சர்கள் பொதுத் தலைவர்களில் தொடங்கி, சாதாரண குடிமக்கள் வரை எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்?

வெறும் ஏட்டுச் சுரைக்காய் எழுத்துகள்தானே இவை?

தமிழ்நாட்டில் முன்பு செங்கற்பட்டில் ஒரு நரபலி (1976இல்), அதன்பிறகு பெரம்பலூரில் பள்ளி மாணவியைக் கொன்ற நிகழ்வு, இப்போது இப்படி என்று குறைவான அளவு என்றாலும் பெரியார் மண்ணில் -_- அதுவும் 21ஆம் நூற்றாண்டில் இப்படி நடக்கலாமா?

ஜோசியங்கள், யாகங்கள் நடத்துவோர், காவி வேட கபடதாரிகள், மூடநம்பிக்கை மோசடிப் பேர் வழிகள் இவர்களையெல்லாம் தனிச் சட்டம் கொண்டு வந்து உள்ளே தள்ள வேண்டாமா? ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பில்லையா? அரசியல் தலைவர்கள் மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்களே!

இங்கிலாந்து நாட்டுத் தலைவர் மார்கரெட் தாட்சருக்கே, கைபார்த்து, எலுமிச்சம் பழம் தந்து, ஏமாற்றிய சந்திரா சாமி கதையும், அவரை அவரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்திய நட்வர்சிங் அய் இங்கிலாந்து நாட்டுக்கான இந்தியத் தூதுவரும் பற்றி அண்மையில் ஓர் ஏட்டில் வெளிவந்த கட்டுரை எதைக் காட்டுகிறது? வெளிநாட்டுக்கும் இம்மோசடி மூடநம்பிக்கை வியாபாரம் ஏற்றுமதி ஆகிவிட்டது என்பதைத்தானே!

உடனடியாக, இந்தோனேஷியா நாட்டில் ஜோதிடத்தைத் தடை செய்ததுபோல மத்திய மாநில அரசுகள் ஜோதிடத்தைத் தடை செய்ய முன்வர வேண்டும்.

இவற்றைத் தலைமை தாங்கி நடத்துவோரே இந்த மூடநம்பிக்கை ஜோசிய அடிமைகளாக இருக்கும் நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், நிரந்தர அறிவியல் மனபான்மை ஓங்கிட இத்தகைய மூடநம்பிக்கை முட்புதர்களை அழித்திட வேண்டும் பகுத்தறிவு மனிதநேயப் பூங்காக்களை உருவாக்க வேண்டும்.

தனி மகேஸ்வரிகளைத் தண்டித்தால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்து விடாது; நோய் நாடி நோய் முதல் நாடிட வேண்டும். அரசுகள் கடமை தவறலாமா?

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

தமிழ் ஓவியா said...

பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகளுக்கு . . .


நம் நாட்டின் கலாச்சாரத்தைச் சீர்கேடாக நினைக்கும் சிலர் தாங்கள் யாருக்கும், எதற்கும் அடங்கமறுக்கிறோம் என்ற உறுதி மொழியை ஏற்று அதன்படி பெண்ணியவாதிகளாக ஆகிறார்கள்.

நல்ல விசயம் ஆணுக்கு இணையாக நாங்களும் வாழ்வோம் என்ற போக்கை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அறிவான செயல்தான். அதற்காக முற்றிலும் ஆண்களைப் புறக்கணித்து புறம் தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாகப் பேசுவது, நடப்பது எந்த வகையில் நியாயம்..?

ஒரு பெண்ணுக்கு வேண்டிய அனைத்தும் அவளால் செய்து கொள்ள முடியும். அதே மாதிரி ஆண்களுக்கு வேண்டிய அனைத்தும் அவர்களால் செய்து கொள்ளமுடியும். அப்படி இருக்க. ஏன் இரு (ஆண்,பெண்) இனத்தையும் இணைத்து திருமணம் நடத்திக் கொள்கிறார்கள்?அங்கே என்ன முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது?

பெண்ணியவாதியாக இருப்பவர்..காதல் வயப்படாமல் இருக்கிறார்களா..? அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களா..? இல்லை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்களா..? எதுவோ..... என்ன காரணமோ அவர்களை மற்றவர்களிடமிருந்து தனிப்பட்டுக் காண்பிக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு கவிதாயினி பெண்., ஆண்கள் மட்டும் இரு பெண்களோடு வாழ்கிறார்கள். நாம் ஏன் அப்படிச் செய்யக்கூடாது என்று இரு ஆண்களை மணக்காமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தார். நாளடைவில் சக்களத்தி சண்டைபோல் சக்களத்தன் சண்டை வந்து மூவரும் பிரிந்துவிட்டனர். ஏன் இந்த அவசர முடிவு.

அதேமாதிரி ஒரு பெண் போராளி தான் காதலித்த நபருக்காக மாசமாக இருந்து பின் கருக்கலைப்பு நடத்தி, இன்னொரு ஆணுடன் தொடர்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு என்னதான் வேண்டும். பெண்ணியம் என்பது இதைத்தான் கற்றுக் கொடுத்ததா..?

அதற்காக ஆண் வர்க்கத்திற்கு ஆதரவாக நினைக்க வேண்டாம். ஒழுக்கம் என்பது இருபேருக்கும் உரித்தானதுதான். ஆண்களைத் தண்டிக்கிறோம், அல்லது பழி வாங்குகிறோம் என்ற பெயரில் பெண்கள் தங்களை இழிவுபடுத்திக்கொள்ள வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

பெண்ணியவாதியாக கடைசி வரை இருந்து காலம் சாதித்தவர்கள் எத்தனை பேர் வெற்றியாளராக வலம் வருகிறார்கள். கூறுங்கள். ஆண்களின் ஆணாதிக்கத்தை எதிர்க்க வேண்டும். நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே (ஒருசிலரைத் தவிர) மற்றவர்களுக்கு லட்சியமாகத் தெரியவில்லை.

அதிலும் சில பெண்ணியவாதிகள் பல பேரோடு தொடர்புப்படுத்தி, தங்களது அந்தரங்கப் படங்களை வெளிப்படுத்தி, தங்களது நட்புக்களுடன் அசிங்கப்படுத்தி (ஆதாரங்களுடன்) பேசப்படுகிறார்கள். தேவையா இந்த அநாகரிகமான செயல்பாடுகள். ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் தனிமனித ஒழுக்கம் தேவை. அது இல்லாவிட்டால், நம் நாட்டின் பல பேர் பல பேரோடு கூடிவாழ்வதன் மூலம் பிற்கால சந்ததியினருக்கு உதாரண சீர்கேட்டாளர்களாகத்தான் ஆக்கப்படுவோம்.

தனிமனித சுதந்திரம் வேறு, தனி மனித ஒழுக்கம் வேறு, தனி மனித பண்பாடு வேறு. இதைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல், படுபாதகமாகப் பயன்படுத்தாமல் இருக்கும்வரை எல்லாப் பெண்களும் பெண்ணியவாதிகள்தான். அடக்குமுறைக்கு அடங்காமல் தானும் அடுத்தவர்களை அடக்காமல் வாழ்தல் ஒரு பெண்ணுக்கான அழகு.

பெண்ணாதிக்க வழிக்கு பெண்களைத் தூண்டுவதே ஆண்கள்தான். அந்தப்போக்கை ஆண்கள் மாற்றிக்கொண்டால் பெண்கள் தங்களின் யாருக்கும் செவி சாய்க்காத முடிவை மாற்றிக்கொள்வர்.

ஆதிக்கம் என்ற வார்த்தையே ஒருவரை அடக்குதல். அவர் மீது ஆதிக்கம் செலுத்துதல் என்றே பொருள்படும் என்பது பொதுவான கருத்து. ஒருவர் மீது ஆதிக்கம் செய்யும் போக்கைக் கைவிட்டு, நல்ல நடவடிக்கையின் மூலம் பிறரது அன்பையும், சுய சிந்தனை மூலம் நல் எண்ணங்களையும், சுய ஒழுக்கத்தின் மூலம் நற் பேரையும் எடுக்க ஒவ்வொரு ஆண் ஆதிக்கவாதியும் பெண்ணாதிக்கவாதியும் எடுக்க வேண்டியது முக்கியமான பணியாகும்.

சொல்லும் பொருளைப் புரிந்து கொள்ளுதல்.., எடுத்துக்கொள்ளுதல்.., நடத்திக்கொடுத்தல் - இதுதான் பொருள்படப் புரிதல்.. இதை எல்லாம் தங்களைப் பெண்ணியவாதிகளாக வெளிக்காட்டிக் கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்....... நாளைய எதிர்காலம்.... நோக்கி.

தமிழ் ஓவியா said...

பெண்ணினத்தின் கோரிக்கை


பேருந்து நிலைய கழிப்பறைகளில் நாப்கின் டஸ்பின்கள் அவசியம் !

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறையின் அனைத்து அறைகளிலும் மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் போட குப்பைத்தொட்டிகள் (DUSTBINS) வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருமுறையும் நாகர்கோவில் செல்லும்போது இதைக் காண்கிறேன்.

பல வேலைகளுக்காக வெளியூர் செல்லும் பெண்கள் மாதவிடாய்க் காலங்களிலும் பயணம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்நேரங்களில் நாப்கின்கள் போடுவதற்கும் மாற்றுவதற்கும் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பறைகளையே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான கழிப்பறைகளில் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் நாப்கின்களை ஆங்காங்கே போட்டுவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதனால் பேருந்து நிலையங்களில் உள்ள பெண்கள் கழிப்பறையின் அறைகள் நாப்கின்களால் இரத்த ரத்தமாக காட்சியளித்து முகச் சுளிப்பையும், சுத்தம் செய்வோருக்கு எரிச்சலையும் உண்டாக்குகிறது. இது பெண்களின் மீதான தவறு அல்ல. முழுக்க முழுக்க கட்டணக் கழிப்பறைகளைக் குத்தகைக்கு எடுக்கும் நபர்களின் மீதுதான் தவறு. கழிப்பறைக்குச் செல்ல 3 முதல் 4 ரூபாய் வரை வசூலிக்கும் இவர்கள், பெண்களுக்காக நாப்கின்கள் போட குப்பைத்தொட்டிகளை வாங்கி வைப்பதில்லை. தமிழகத்தில் நாகர்கோவில் பேருந்து நிலையத்தைத் தவிர, பெரும்பாலான மாவட்டங்களின் பேருந்து நிலைய கழிப்பறைகளில்கூட, நாப்கின்களைப் போடுவதற்கு வசதி செய்து தரப்படவில்லை. பணம் வசூலிப்பது மட்டுமே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. குத்தகை விடும் நகராட்சிகள்கூட, குத்தகைக்குவிட்ட பிறகு எதையுமே கண்டுகொள்வதில்லை.

- வினி சர்ப்பணா

தமிழ் ஓவியா said...


சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!


சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, இவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது.

அஃது இவன் முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரந்தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.

அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம்.

உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடுங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

உத்தம சோழன் சூட்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்
பிற்காலச் சோழர் சரித்திரம்
பகுதி பக்கம் 79-_80

தமிழ் ஓவியா said...


அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?


கர்ப்பக்கிருகப் போர்ப்படையில் 18.10.69 - முதல் பதிவு செய்து கொண்டார்கள். சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபாலசாமி கோயிலில் தொடங்குவது.

1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும். 17.1.70 -முதல்வர் கலைஞர் அறிக்கை 19.1.70 - போரின் வெற்றி. 12.3.70 - கர்ப்பக் கிருகக் கிளர்ச்சி வெற்றி. 30.11.70 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது. கிளர்ச்சியை ஒரு சிறிது நாட்களுக்கு ஒத்தி வைத்தல். 1974 சனவரி 26ஆம் தேதிக்குள் பதில் எதிர்பார்த்தல். 3.3.74 இழிவு ஒழிப்புக்கிளர்ச்சி முதல் கட்ட தேதி அறிவிப்பு. 15.3.74 போராட்ட வீரர் பட்டியல். 3.4.74 தந்தைக்குப் பின் முதல் போராட்டம். 8.4.74 சட்டமன்றத்தில் நமது போராட்ட எதிரொலி. 15.4.74 சட்டமன்றத்தில் அர்ச்சகர் சட்ட தீர்மானம். 2.5.74 டில்லியில் நமது குரல். 20.8.74 டில்லி அரசு பரிசீலனை. 4.5.75 கோயில் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு. 2.8.75 கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி அம்மா அறிக்கை. 18.9.77 அ.தி.மு.க. வைத்த அய்யா சிலை. 4.6.78 திருச்சியில் மத்திய கமிட்டி பிறவி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலேயே எப்போதும் குறியாக இருக்கும். பார்ப்பனர்கள் பன்னிரெண்டு பேர் உச்சநீதிமன்றத்திற்கு படையெடுத்துச் சென்று தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அர்ச்சகர் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கும் ஒரு தீர்ப்பினைப் பெற்று விட்டனர்.

நீதிபதி மகராசன் குழு

14.8.82 தஞ்சையில் மாநாடு. 24.8.82 வேண்டுகோள் அறப்போர் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் குழு. 17.9.91 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. 16.5.98 ஈரோட்டுத் தீர்மானம். 24.4.1999 போராட்ட அறிவிப்பு ஆபரேஷன் வெற்றி ஆனால் நோயாளி செத்தார்.

டாக்டர் கலைஞர் அவர்களின் ஆதங்கம்

அய்யா அவர்களை அரசு மரியாதையோடு புதைக்கிறோம் என்றாலும் அவர் நெஞ்சில் இருக்கும் முள்ளை எடுத்துப் புதைக்க இயலவில்லையே என்று ஆதங்கப் பட்டார்!
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை ஜாதிக் கலவரமும் வரக் கூடாது மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி




மதுரை, மே 4- தமிழகத்தில் மதக் கலவரம் வருவதில்லை, ஜாதிக் கலவரமும் வரக்கூடாது என மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி யளித்தார்.

இதுகுறித்து நேற்று (3.5.2013) மதுரையில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறியதாவது: மரக்காணம் கலவரம், திட்டமிட்டு ஜாதி வெறியை முன்னிலைப்படுத்தி அரசியலில் வாக்கு வங்கியை பலப்படுத்த சில தலைவர்கள் எடுத்த தவறான நிலை. இது தவிர்க்கப்பட வேண்டும். ஜாதியை இட ஒதுக்கீட்டில் மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும். அதை இடஒதுக்கீட்டு படிக்கட்டாகப் பார்க்காமல், காவடியாகத் தூக்கி பெருமை அடையக் கூடாது. தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது. தொடர்ந்து அமைதிப்பூங்காவாகத் திகழ தலைவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முதலில் இங்கு மதவெறி மாய்க்கப்பட்டது, அதன் பின்னர் ஜாதி அரசியலை கொண்டு வந்தனர், அது தேவையில்லை. இங்கு மதக்கலவரம் வருவதில்லை. அதேபோல் ஜாதிக்கலவரமும் வரக் கூடாது.

வன்முறை வேண்டாம்!

வன்முறையால் எதையும் சாதித்து விடமுடியாது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பது, பொதுமக்களைத்தான் பாதிக்கும். அதில் அப்பாவி மக்களை பலியிடக்கூடாது. தமிழகத்தில் எப்போதும் ஜாதி அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. இந்தக் கருத்துகளை தெளிவாக மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


நாட்டை விட்டே...


நாட்டில் பார்ப்பனர்கள் களைச் செடிகள் போன்றவர்கள். எப்படி வயலில் தேவை இல்லாத களைச் செடிகள் இருப்பதால் பயிருக்குச் சேதம் என்று கருதிக் களைச் செடியை அகற்று கிறோமோ அதுபோல் நாட்டிற்குச் சமுதாயத்திற்குக் கேடு விளைவிக்கும் பயனில்லாத பார்ப்பானை இந்த நாட்டைவிட்டே அகற்றிவிட வேண்டும்.
(விடுதலை, 10.7.1961)

தமிழ் ஓவியா said...


பா.ஜ.க. காட்டில் பண மழை!


குஜராத் மாநிலம் ஜீனகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று கோசாலை அமைத்துள்ளது. பசுக்களைப் பாதுகாக்கும் இந்த அமைப்பு கடந்த சனியன்று (27.4.2013) விழா ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. அவ்விழாவில் குஜராத் மாநில அமைச்சர்கள், மாநில பா.ஜ.க. தலைவர் கட்சியின் முன்னணியினர், பெரும் பணக் காரர்கள் எல்லாம் பங்கு கொண்டனர்.

அமைச்சர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையில் பிஜேபி தொண்டர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வீசிப் பண மழை பொழிந்தனராம். அதனைக் கண்டு அமைச் சர்கள் மிகவும் நெகிழ்ந்து போனார்களாம்.

கோசாலைக்கும் நிறைய நன்கொடைகளை அமைச்சர்களும், பிரமுகர்களும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து என்.டி. டி.வி. தெரிவித்துள்ள செய்தி மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்ச்சி நடந்த பகுதியைச் சுற்றியும் உள்ள கிராமங்கள் கடுமையான வறட்சிக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கும் ஆளாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட பகுதியில் இயற்கை மழை பொழியவில்லை என்பதற்காகப் பண மழையைப் பொழிய வைத்துள்ளனர் போலும்!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிஜேபி ஆட்சி யும், அமைச்சர்களும், பிஜேபி பிரமுகர்களும் எத்தகைய மனப்பான்மையில் குளிர் காய்கின் றனர் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நரேந்திரமோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி மேல் தட்டு மக்களுக்கான ஆட்சி, நகர்ப்புற மக்களுக்கான ஆட்சி என்ற விமர்சனம் உண்டு.

பார்ப்பன மற்றும் இந்துத்துவா ஊடகங்கள் இந்த உண்மைகளை மறைத்து - இந்தியா விலேயே வளர்ச்சியில் முதன்மையான மாநிலம் நரேந்திரமோடி முதல்வராக இருக்கும் குஜராத் மாநிலம் தான் என்று விளம்பரக் காற்றை ஊதி ஊதி ஆகாயத்தில் பறக்க வைக்கின்றனர். உலகம் விளம்பரத்துக்குக் கட்டுப்பட்டது என்பதில் அசாத்தியமான நம்பிக்கை வைத் துள்ளவர் நரேந்திரமோடி.

சவுராஷ்டிரா மாநிலத்தில் சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் கோதாவரி முதலிய கிராமங்கள் வறட்சியின் உச்சக் கட்டத்தில் உள்ளன.

ஊருக்குப் பொதுவான தண்ணீர்த் தொட்டி யில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்கள் தடை செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், தாழ்த்தப்பட்டவர்கள் கொளுத்தும் கொடிய வெயிலில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீரைச் சுமந்து வரும் அவலநிலை நீடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் குஜராத்தின் உண்மையான நிலை. உண்மையான இந்தியா கிராமத்தில்தான் இருக்கிறது என்று வக்கணையாகச் சொல்லிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.

கிராமத்தின் உண்மை நிலையோ இந்தப் பரிதாப நிலையில்தான் தவித்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு சோமாலியா என்று குஜராத் மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைந்த நிலையைப்பற்றி செய்தி வருகிறது.

என்ன கொடுமை இது! தனது மாநிலத்தில் உண்மையான நிலையை மறைத்து, பொய்யாக ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரப்பக் கூடிய ஓர் ஏமாற்றுப் பேர்வழியாக இருக்கக் கூடிய ஒருவர் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சொல்லும் துணிவு எங்கிருந்து குதித்தது?

பொய்ப் பேசுவதிலும், பொய்யைப் பரப்புவ திலும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களை வெல்ல உலகில் யார் தான் இருக்க முடியும்?

பண மழை பொழியும் அளவுக்கு பா.ஜ.க. வினர் அங்கே இருக்கிறார்கள் என்றால் ஆட்சி அதிகாரம் யாருக்குப் பயன்படுகிறது என்பதும் தெளிவாகிறது.

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை அவசியம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி

சேதுசமுத்திர திட்டம்: அண்ணா அறிவித்த எழுச்சி நாள் எதற்காக? தி.மு.க. தலைவர் கலைஞர்

சென்னை, மே 4- தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்களின் ஒற்றுமை அவசியம் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் நேற்று (3.5.2013) அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி?

கலைஞர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை கடலூர் மாவட்டத்திலும், மதுரை மாவட்டத் திலும் நுழையக் கூடாது என்ற போது, அதற்கு மறுப்பு தெரிவித்தவன் நான். அதற்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் அவர்களும், அவரைச் சார்ந்த நண்பர்களும், குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கே இடமில்லை, திராவிடக் கட்சிகளே இருக்கக் கூடாது என்ற அளவில் தங்கள் பிரச் சாரத்தை முடுக்கிவிட்டு, அந்தச் சூழ்நிலையிலே நடைபெற்ற ஒரு பெரிய நிகழ்ச்சியில் வன்முறைப் பேச்சுகள் தலை தூக்கிய காரணத்தால் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், சிறை யிலே அடைக்கப்பட்டிருப்பதாகவும் அறியும் போது உள்ளபடியே நான் வருத்தப்படுகிறேன். பா.ம.க. வினரும் இது போல கடுமையாக, நாகரிகமற்ற முறையிலும், நாவடக்கம் இல்லாமல் எதிர்க்கட்சிகளை, மற்றக் கட்சிகளைத் தாக்கிப் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது. ஒரு சுமூகமான சூழ்நிலையை இந்தப் பிரச்சினையிலே உருவாக்குவதற்கு அது வழி வகுக்கும். வழக்குக்கு மேல் வழக்கு போடுவதும், எப்போதோ பேசினார் என்பதற்காக தற்போது அன்புமணி மீது வழக்கு போட்டுக் கைது செய்வதும் சரி என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதாபிமானத்தோடு டாக்டர் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டுமென்று முதலமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒற்றுமை அவசியம்

பொதுவாக ஜாதிக் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள், மதக் கலவரங்கள் - இவை எல்லாம் தலையெடுக்காத வகையில், தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், குடிமக்கள் என்போரும் எல்லோருமே ஒன்றாக வாழ்வது தான் சமதர்மம். அந்தச் சம தர்மத்தை நோக்கி எல் லோரும் செயல்பட வேண்டும். எல்லா கட்சிகளும் பயணம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக ஜாதி வேறுபாடுகளை, சண்டைகளை, போராட்டங் களை ஊக்குவிப்பது, அதற்குப் பக்க பலமாக இருப்பது சரியாகத் தோன்றவில்லை. நான் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ் ஓவியா said...

கடிதோச்சி மெல்ல எறிக என்பது பொன் மொழி. எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், கடிதோச்சினாலும் கூட, அணுகும்போதும், நெருங் கும் போதும் மெல்ல எறிக என்ற வாக்கியத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற அந்த மொழிக்கேற்ப அரசு நடந்து கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பா.ம.க.வினருக்கு....

அரசும் தன்னுடைய அடக்குமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். சிறையிலே உள்ளவர்களை விடுவிக்க வேண்டும். பா.ம.க. வினரும் இனியாவது கடுமையாகப் பேசுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய கருத்து.

செய்தியாளர் :- அரசு சார்பில் என்ன சொல் கிறார்கள் என்றால், தாங்கள் கொடுத்த எந்த விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை, அதனால் தான் இந்த நடவடிக்கை எடுத்திருக் கிறோம், ராமதாஸ் அவர்களிடமே போராட்டத் திற்கு வந்தால் கைது செய்வோம் என்று சொல் லியிருந்தும் அவர் மீறி வந்து கைதாகியிருக்கிறார் என்று கூறுகிறார்களே?

கலைஞர் :- இந்தக் கருத்துகளையெல்லாம் படித்து விட்டுத் தான் நான் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். அதனால் ராமதாஸ் அவர்களை விடுவிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் நுற்றுக்கணக்கானவர்கள், ஆயிரக்கணக் கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிற சூழ் நிலையைத் தவிர்ப்பதும், நாள்தோறும் அங்கே பஸ் எரிந்தது, இங்கே பஸ் எரிந்தது, அங்கே வீடு எரிந்தது, கடை எரிந்தது என்ற இந்தப் பேச்சுக்கள் எங்குமே வராமலும், பொதுவாக அமைதியாக தமிழகத்தை அனைவரும் காண வேண்டும் என்ற ஆசையோடு இந்தக் கருத்துகளை நான் சொல்லுகிறேன்.

சட்டம் ஒழுங்கு படும்பாடு

செய்தியாளர் :- வட மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டார்கள் என்று கருதுகிறீர்களா? சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என்பது உங்கள் கருத்தா?

கலைஞர் :- சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்பது என்னுடைய நீண்ட நாள் வாதம். நான் அதை பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். அந்தச் சட்டம், ஒழுங்கு சரியில்லாத இந்தச் சூழ்நிலையிலே தான் இந்தக் காரியங்கள் மேலும் அவைகளை அதிகப்படுத்தும் வகையிலே நடைபெற்றிருக் கின்றன. அதையெல்லாம் சட்டம் ஒழுங்கு சரியில்லை, அது சரியில்லாமலே இருக்க வேண்டும் என்ற கருத்தோடு இருக்கக் கூடாது. நாமாவது சட்டம் ஒழுங்கைச் சரிப்படுத்த தமிழ்நாட்டில் அமைதியைக் காத்திட, உருவாக்கிடப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்திலே தான் இதைச் சொல்கிறேன். சட்டம், ஒழுங்கு தமிழ்நாட்டில் ஒழுங்காக இருக்கிறது, சரியாக இருக்கிறது என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் அதற் கிடையே இந்தக் கருத்துகளைச் சொல்வது, நண்பர் டாக்டர் ராமதாஸ் அவர்களையும், அன்புமணி அவர்களையும் சிறையிலே போட்டு தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆளாக்க வேண்டாம் என்ற இந்தக் கருத்தை நான் இந்த அரசுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கச்சத்தீவு

செய்தியாளர் :- தமிழகச் சட்டப் பேரவையில் கச்சத் தீவினை மீண்டும் பெற வேண்டுமென்று அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்திருப் பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இதிலே என்னுடைய பொதுவான கருத்து, கச்சத் தீவினை திரும்பப் பெற வேண்டும் என்பது ஏற்கத் தக்க கருத்து. நாங்களும் உச்ச நீதி மன்றத்திலே டெசோ சார்பிலே வழக்கு தொடர் வோம் என்று கூறி, அதற்கான ஆதாரங் களையெல்லாம் திரட்டி வைத்திருக்கிறோம்.

செய்தியாளர் :- டாக்டர் ராமதாஸ் அவர்களை சிறையிலே சென்று தி.மு.க. வினர் யாராவது சந்திப்பார்களா?

கலைஞர் :- அவர் எங்களைச் சந்திக்க விரும்ப மாட்டாரே? அவருக்குத்தான் தி.மு.க. வினரையே பிடிக்காதே?

தமிழ் ஓவியா said...


எங்கும் இராமசாமி நாயக்கர்


பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு:

சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் வகுப்புத் துவேஷமும் ஏற்பட்டிருப்பதாகவும், அதை ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் வளர்த்து வருவதாகவும் அவர் பேச்சை எவரும் கேட்கக் கூடாது என்றும், அவர் சொல்லுவதை எவரும் நம்பக்கூடாது என்றும், அவர் பேரில் பல குற்றங்களைக் கற்பித்து பிராமணர்களும் பிராமணப் பத்திரிகைகளும், அவர்களைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீமான் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் போன்றவர்களும், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதும் - பேசும் சிப்பந்தி கோடிகளும், அவர்கள் தயவால் பதவிபெற நினைக்கும் சில சுயகாரியப் புலிகளும் சதா காலமும் கையொடிய தொண்டை கிழிய எழுதியும் பேசியும் வருகிறார்கள்.

இப்பொழுது மத்திய மாகாணத்திலும் (மஹா ராஷ்ட்டிர மாகாணத்தில்) பம்பாய் மாகாணத்திலும் பிராமணரல்லாதார் மகா நாடுகள் என்றும் வகுப்புத் துவேஷங்கள் வளர்ந்து வருகிறது.பஞ்சாபிலும் கல்கத்தா விலும் இந்து முஸ்லீம் சச்சரவுகள் இல்லா விட்டால் அங்கும் பிராமணர்-பிராமணரல் லாதார் வகுப்புத் துவேஷங்கள் வளரும்.

ஆதலால் இராமசாமி நாயக்கர் சென்னையில் மாத்திரம் இல்லை; இந்தியாவெங்கும் இராமசாமி நாயக்கர் மயமாய்த்தான் இருக்கிறது. சென்னையில் 4 பேர் கூலிக்கு மாரடிப்பதால் இராமசாமியை ஒழித்துவிட முடியாது. சின்னாட்களுக்கு முன் இவர்கள் சென்னையில் சில காலிகளை ஏவிவிட்டு ஸ்ரீமான் சர். தியாகராயச் செட்டியாரை அடிக்க முயற்சித்து அவர் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் முதலியவற்றையும் உடைத்தார்கள். அதிலும் இந்த இயக்கம் அழிந்து விடவில்லை.

அதற்குப் பிறகு ஸ்ரீமான் சுரேந்திரநாத் ஆரியா அவர்களையும் அடிக்கும்படி செய்தார்கள். அதனாலும் இவர்களுக்குப் பயந்துகொண்டு இயக்கம் போய்விடவில்லை. சமீபத்தில் பேரார் மாகாணத்தைச் சேர்ந்த அமராவதியில் 2ஆவது அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸின் காரிய தரிசியாயும், பிராமணரல்லாதாரின் பேருழைப் பாளராகவுமிருக்கும் ஸ்ரீமான் அமிர்த்காரை சில காலிகளைக் கொண்டு பலமாய் அடித்து விட்டார்கள்.

இதனாலும் பிராமணரல்லாதார் இயக்கம் ஒழிந்து விடவில்லை. இவர்கள் கெட்ட எண்ணங்கொண்டு தூற்றத் தூற்ற, அடிக்க அடிக்க பந்து கிளம்புவதைப்போல் இயக்கம் இந்தியாவெங்கும் கிளம்பி பரவிக்கொண்டு தான் வருகிறது.

- குடிஅரசு - அறிக்கை - 9.5.1926

தமிழ் ஓவியா said...


ஸ்ரீமான் சத்தியமூர்த்தி எல்லா இந்தியப் பிரசாரகராய் விட்டாராம்

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப்பட்டிருப்பதாகக் காங்கிரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அறிவிக்கிறார் என்று சுதேசமித்திரனில் குறிப்பிட்டிருக்கிறது. பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித்தார்கள்? ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் நியமித்தார், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்.

யாருடைய பணம்? ஊரார் பொதுப்பணம். என்ன பிரச்சாரம்? பிராமணத் தேர்தல் பிரச்சாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம்ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது;

பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள், மகாபுத்தி சாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி அய்யங்காரும், எஸ்.சீனி வாசய் யங்காரும் சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்காரும், எம்.கே.ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது நாங்கள் தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய தியாகம் செய்தவர்கள்; கதர், மது விலக்கு, தீண்டாமை முதலிய வைகளில் அதிக நம்பிக் கையுடையவர்கள்; காரியத்திலும் நடத்து கிறவர்கள்;

அதனால் தான் தமிழ்நாட்டு உண்மை தேச பக்தர்களான ஸ்ரீமான் கலியாண சுந்தர முதலியார் போன்றவர்கள் எங்கள் அய்வர்களையே தமிழ்நாட்டிற்குத் தலைவர்களாகத் தெரிந்தெடுத்து எங்களையே பின்பற்றுகிறார்கள்; நாங்கள்தான் தமிழ் நாட்டுக்குத் தலைமை வகிக்க யோக்கியதை உள்ளவர்கள்.

எங்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தேசத் துரோகிகளும் வகுப்பு நலன் நாடுபவர் களுமான குறுகிய புத்தியுடையவர்கள் என்று பிரச்சாரம் செய்து வரும் எல்லா இந்தியத் தலைவராவார்கள். மற்றபடி வேறு என்ன பிரச்சாரம் செய்யக் கூடும்? தமிழ்நாடே! உன் தலைவிதிதான் என்ன? உன்னை இத்தலைவர் களுக்குக் காட்டிக் கொடுத்த தர்மசீலர்களுக்கு ஆயுள்தான் எவ்வளவோ?

- குடிஅரசு - செய்தி விளக்கம் - 16.5.1926

தமிழ் ஓவியா said...


சுசீந்திரம் சத்தியாக்கிரகம்


சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டது போல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர்.

எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ளவராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்ததாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.

குடிஅரசு - வேண்டுகோள் - 23.05.1926

தமிழ் ஓவியா said...


தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி குடியரசு பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணா திக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.

அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கி யிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை சூத்திரர், பஞ்சமர், மகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் என்கின்ற பிராமணரல்லாத வருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்கு மாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர் களை வகுப்பு துவேஷத்தைக் கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.

ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கை யென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை,

சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவை களையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் உத்தம தேசபக்தர்களை வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு - விமர்சனம் - 6.6.1926

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு 1 - சிறை நிரப்பும் போராட்டம்!



இராஜபாளையம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

தமிழர் தலைவர் அறிவித்த ஆகஸ்டு -1 சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கு பெறும் இளைஞரணி தோழர்களின் ரத்த கையொப்பமிட்ட முதல் பட்டியலை மாநில இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் கு. தென்னரசு ஆகியோர் உள்ளனர் (4.5.2013).

இராஜபாளையம், மே 5- வரும் ஆகஸ்டு முதல் தேதி அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமைக் கான சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

இராஜபாளையத்தில் கடல் இல்லை. ஆனால் இங்கே கருஞ்சட்டைக் கடல் பொங்கி நிற்கிறது.

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோழர்கள், இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக கூடி யுள்ளீர்கள். எல்லா வயதி னரும் வந்துள்ளீர்கள்.
யார் இளைஞர்?

இளைஞர் என்பது வயதைப் பொறுத்ததல்ல உணர்வைப் பொறுத்தது - உணர்ச்சியைப் பொறுத்தது - இலட்சியத்தில் கொண்டி ருக்கும் பிடிப்பைப் பொறுத் தது.

முதியவர்களுக்குப் பின்னால் இளைஞர்கள்

எனக்குப் பின்னால் நமது தளபதி ஸ்டாலின் உரையாற்றிட உள்ளார். இளைஞர்களுக்குப் பின் னால் முதியோர் இருக் கிறார்கள் என்பதைவிட முதியவர்களுக்குப் பின் னால் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனக் குப் பின்னால் தளபதி உரையாற்ற இருக்கிறார்.

இராஜபாளையம் என்று வருகிறபோது 1982-க்கு என் நினைவு செல்லுகிறது.

அந்த மம்சாபுரம்

மம்சாபுரத்திற்கு மருத் துவமனையைத் திறப்பதற்கு நான் காரில் சென்றபோது தி.மு.க. கொடியைக் காட்டி, மாலையைக் கையில் வைத் துக் கொண்டு என்னை வரவேற்பது போல பாசாங்கு காட்டி என்னைத் தாக்கி னார்கள். ரத்தம் கொட்டியது. உடம்பெல்லாம் காரின் கண்ணாடித் தூள்கள், ஓட்டுநரின் சாமர்த்தியத் தால் தப்பினேன். ஆனாலும் ஒப்புக் கொண்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு முடித்த பிறகு தான் திருச்சிக்குச் சென் றேன் என்ற தகவலை கழ கத் தலைவர் குறிப்பிட்டார். 31 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற வன்முறை அது (மேலும் மூன்று முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப் பட்டதுண்டு)

ஆயிரம் ஆயிரம் எதிர்ப் புகள், அடக்கு முறைகள் சிறைச் சாலைகளைச் சந் திக்க நேரிட்டாலும் தந்தை பெரியார் அவர்களும் சரி, அவர்கள் கண்ட இந்த இயக்கமும் சரி இலட்சியப் பாதையை விட்டு விலகாது என்பதைக் குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

போராட்ட அறிவிப்பு! இந்த மாநாட்டில் போராட்டத் திட்டம் அறி விக்கப்படும் என்று கூறி யிருந்தேன். தீர்மானமும் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும். மனிதன் சந்திர மண்டலத்துக்குள் கூடப் போய்த் திரும்பும் கால கட்டம் இது. இத்தகைய கால கட்டத்தில் தமிழன் கட்டிய கோயிலுக்குத் தமிழன் அர்ச்சகனாகப் போக முடியாது. கோயில் கருவறை என்பது பார்ப்பனர்கள் மட்டுமே செல்லக் கூடிய இடமாக இருக்கிறது. இது மதத்தின் பெயரால் திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையாகும்.

இதனை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டார். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளோடு அய்யாவைப் புதைத்து விட்டோமே என்று மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார்.

கழகம் தொடர்ந்து இந்த உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை முதல் அமைச்சர் கலைஞர் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றாலும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கி வருகின்றனர். சுமுகத் தீர்வு என்றால் என்ன?

உச்சநீதிமன்றத்திலே தமிழ்நாடு அரசு சார்பிலே மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

அந்தச் சுமுகம் என்றால் என்ன? விளக்கம் தேவை கிராமக் கோயில் பூசாரிகளாக பார்ப்பனர் அல்லாதார் இருப்பார்கள். ஆகமவிதிகளுக்கு உட்பட்ட பெரிய பெரிய கோயில்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்று சுமுகமாக தீர்வு காணலாம் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால் அதனை ஏற்க மாட்டோம் - கடுமையாக எதிர்ப்போம்! போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இரண்டு மாதங்கள் இதுபற்றி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம், இலட்சியம் நிறைவேறும் வரை ஓய்ந்திட மாட்டோம்.

ஆகஸ்டு 1 சிறை நிரப்பும் போராட்டம்!

ஆகஸ்டு முதல் தேதி என்பது - தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம், போராட்டத்தை நடத்தும் வரலாற்றுக் குறிப்பாகும்.

அதே போல வரும் ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் (பலத்த கைதட்டல்).
ரத்தக் கையொப்பம்

தமிழ் ஓவியா said...

நான் இதனை அறிவிப்பதற்கு முன்னதாகவே எனது அறிக்கையின் அடிப்படையில் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களின் பட்டியலோடு தயாராக இருக்கிறார்கள். ரத்தக் கையொப்பம் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். இதற்கெல்லாம் நாம் ரத்தம் சிந்தக் கூடாது. அந்த ரத்தம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது இயக்கம் மனிதாபிமான இயக்கம். எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்படுவதாக அமைய வேண்டும்.

வன்முறைக்கு இடம் இல்லை

நாம் நடத்தும் போராட்டத்தில் எப்பொழுதுமே வன்முறைக்கு இடம் இருக்காது. பேருந்துகளுக்குச் சேதம் ஏற்படாது - பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இருக்காது.
சுதந்திரப் போராட்டம் என்று கூறி காங்கிரஸ்காரர்கள் தண்டவாளத்தைப் பெயர்த்த போதும், போஸ்டாபீஸைக் கொளுத்திய போதும்கூட அப்பொழுதே தந்தை பெரியார் அதனைக் கண்டித்துள்ளார்.

எந்த ஒரு இலட்சியத்தை அடைவதாக இருந்தாலும் அதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

தோழர்களே தயாராகுங்கள் - இங்கே நமது அழைப்பை ஏற்று தி.மு.க. பொருளாளர் தளபதி கலந்து கொண்டு இருக்கிறார்.

மிசா கைதியாக...

1976 நெருக்கடி காலத்தின்போது மிசா கைதிகளாக சென்னை மத்திய சிறைச்சாலையில் நாங்கள் அடைக்கப் பட்டபோது ஒரு நாள் இரவு - தளபதி ஸ்டாலினை அடித்துத் துவைத்து நாங்கள் இருந்த அறையில் தான் போட்டார்கள். என்மீது தான் விழுந்தார். அப்பொழுது அவரைத் தூக்கி நிறுத்தி - பொது வாழ்வில் இவை எல்லாம் சகஜம்தான் அதற்கொரு பயிற்சிதான், தளராதீர்கள் என்று அன்று சொன்னேன்.

தளரவில்லை தளபதி

அவர் தளர்ந்து விடவில்லை - வளர்ந்திருக்கிறார் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிருகிறார். அவரை வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.



போராட்ட வீரர் பட்டியல் ரத்தக் கையொப்பத்துடன்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆகஸ்டு முதல் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க போராட்ட வீரர்களின் பட்டியல் முதல் பட்டியல் கழகத் தலைவரிடம் இராஜபாளையம் இளைஞரணி மாநில மாநாட்டில் அளிக்கப்பட்டது.

1081 பேர் அதில் கையொப்பமிட்டி ருந்தனர். பலர் ரத்தக் கையொப்பமும் போட்டிருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலை தமிழர் தலைவரிடம் வழங்கியபோது கடல் அலை ஓசையாக கையொலி எழுந்தது.

தமிழ் ஓவியா said...


நசுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் - தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சியுரை


இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் (4.5.2013)

இராஜபாளையம் மே 5- நசுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் என்றார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.

இராஜபாளையத்தில் நேற்று (4.5.2013) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்று தி.மு.க. பொருளாளர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது: திராவிடர் கழக இளைஞரணி 1978இல் தொடங்கப்பட்டுள்ளது தி.மு.க. இளைஞரணி 1980இல் மதுரையில் ஜான் சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.

தி.க. இளைஞரணியின் குறிக்கோள்கள் உன்னதமானவை

திராவிடர் கழக இளைஞரணியினரின் குறிக்கோள்கள் மிகவும் உயர்ந்தவை.

பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் விதவைத் திருமணங்கள் வரதட்சணையற்ற திருமணங்களைச் செய்து கொள்வது என்பதெல்லாம் அறிவார்ந்த முற்போக்குத்தனம் கொண்டதாகும்.

கலைஞரின் அறிவுரை

தி.மு.க. இளைஞரணியினருக்காக ஒரு சின்னம் (Emblem) ஒன்றைத் தயாரித்து தலைவர் கலைஞரிடம் அளித்தோம். அதில் அண்ணா, கலைஞர் உருவம் இடம் பெற்றிருந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் அதில் தந்தை பெரியார் உருவம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார். அதற்கு விளக்கம் சொன்னதுதான் முக்கியம்.

பதவிக்கு ஆசைப்படாதே - கொள்கைக்கு முன்னுரிமை கொடு என்பதற்காகத்தான் அய்யா படம் இடம் பெற வேண்டும் என்று சொன்னேன் என்று கலைஞர் அவர்கள் சொன்னது நமது இளைஞர்களுக்கு முக்கியமான, தேவையான வழிகாட்டுதல் ஆகும். நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறு வயதிலேயே மேடை ஏற்றப்பட்டு உரையாற்றப் பயிற்சி அளிக்கப்பட்டவர். அண்ணா அவர்களே அந்த சிறுவன் உரையைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்தச் சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உருத்திராட்சம் அணிந்திருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என்றிடு வார்கள். ஆனால் இவர் அருந்திய ஞானப்பால் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு ஈரோட்டுப்பால் என்று 1943ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டவர் தான் நமது ஆசிரியர் பெருந்தகை.

வழிகாட்டுகிறார் ஆசிரியர்

அவரின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடியவை.
இதே ராஜபாளையத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதற்குமுன் நான் கலந்து கொண்டு இருந்தாலும் தாய்க் கழகத்தில் மாநில இளைஞரணி மாநாட்டில், நான் பங்கு பெறுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மாநில இளைஞரணி மாநாடு தோழர்கள் முழக்கம்


4.5.2013 சனி மாலை 7 மணிக்கு ஜவகர் திடலில் சுயமரியாதைச் சுடரொளி ஏ.எஸ்.ஆர். தங்கராசா நினைவரங்கில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன் குழுவினரின் திக்கெட்டும் பரவட்டும் திராவிடம் எனும் வீதி நாட கங்களுடன் தொடங்கப்பட்டது. பெரும் வரவேற்பு மக்கள் கடலில் கிடைத்தது. பேரணி திடலில் நுழைந்தபோதே மக்கள் கடல் நிரம்பி வழிந்தது. இரா. திருப்பதி,

மாநாட்டுத் தலைவர்

மாநாட்டுக்கு இளைஞரணி மாநில செயலாளர் இரா. திருப்பதி தலைமை வகித்தார். மாநில மாணவரணி செய லாளர் த.சீ. இளந்திரையன் அனைவரை யும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் தலைவரை முன்மொழிந்தார். விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. கோவிந் தன், விருதுநகர் கழக மாவட்ட இளை ஞரணி செயலாளர் இரா. அழகர் ஆகியோர் தலைவரை வழி மொழிந்தனர்.

மதுரை மண்டலக் கழகத் தலைவர் வே. செல்வம், விருதுநகர் கழக மாவட்ட தலைவர் வானவில் வ. மணி, மாவட்ட செயலாளர் தி. ஆதவன் ஆகியோர் முன் னிலை வைத்தனர்.

பழனி மாவட்ட மாணவரணி செய லாளர் சே.மெ. காவியா கழகத் தோழர் களின் முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

தஞ்சை இரா. செயக்குமார்

மாநாட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் உரையாற்றினார்.

தீர்மானங்கள் - டாக்டர் துரை. சந்திரசேகரன்

காலத்தை வெல்லும் 20 தீர்மானங் களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் முன்மொ ழிந்தார். பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி உரையாற் றுகையில், ஜாதியைக் காப்பாற்றத் துடிக் கும் சக்திகளை எதிர்த்து இதோ இளைஞர் பட்டாளம் தயாராகி விட்டது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தமது உரையில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நம் பிரச்சாரம் நடைபெற வேண்டும். நமது இளைஞர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் தமது உரையில் கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் கூடாதா? இந்தி யாவுக்கு இரண்டு அரசியல் சட்டங்கள் இருக்கின்றனவா? என்ற வினாவை எழுப்பினார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு

2400 கோடி ரூபாய் செலவில் தொடங் கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனை ராமனைக் காட்டி முடக்குவது என்ன நியாயம்? என்ற நியாயமான வினாவை எழுப்பினார் செயலவைத் தலைவர்.

ச.அமுதன்

தி.மு.க. இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் திருவல்லிபுத்தூர் ச. அமுதன் தன் உரையில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் தலைமையில் திரா விடர் கழகப் பணிகள் எழுச்சியுடன் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

பார்ப்பனர் எதிர்ப்பு தான் தன்னை நாத்திகவாதியாக ஆக்கியது என்றார் தந்தை பெரியார். அந்த உணர்ச்சிதான் நம் மக்களுக்குக் கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தது - உத்தியோக உரிமையைப் பெற்று தந்தது. அதனைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது பார்ப்பனர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடோ தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும் திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்து பவர்களை தமிழின இளைஞர்கள் புறக் கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தங்கம் கு. தென்னரசு

முன்னாள் கல்வி அமைச்சரும், தி.மு.க. நெசவாளர் அணியின் தலைவருமான தங்கம் தென்னரசு அவர்கள் தமது உரையில், இம்மாநாடு தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது உண்மையே என்பதை நிரூபித்துக் காட்டும் மாநாடு என்று குறிப்பிட்டார் கோடையிலே இளைப்பாறக் கிடைத்த குளிர் தருவதாக ஆசிரியர் அவர்கள் கழகத் தலைவர் கலைஞருக்கு இருக் கிறார் என்றார். இந்தியா டுடே என்ற இதழ் தி.மு.க. வில் இளைஞரணியினை வலுவாக்கி அதன் மூலம் நல்ல தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் வளர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டதை எடுத்துக்காட் டினார்.

நன்றியுரை

இதையடுத்து மாநாட்டு வரவேற்புக் குழு பொருளாளர் பூ. சிவக்குமார் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது.