Search This Blog

10.5.13

சுயமரியாதைக் கொள்கைப்படி....--பெரியார்

திருவாரூரில் சுயமரியாதைப் பிரசாரம்
தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! இன்று நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயமான “கராச்சிக் காங்கிரசும், சுயமரியாதையும்” என்பது நோட்டீசில் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. இதைப்பற்றி பல இடங்களில் பேசியும், எழுதியு மிருக்கின்றேனே யென்று சொல்லியும் கூட யாரோ சிலரால் “கராச்சிக் காங்கிரசுக்கும், காங்கிரஸ் தீர்மானங்களுக்கும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கும் வித்தியாச மில்லையாதலால் சுயமரியாதை இயக்கம் வேண்டியதில்லை” யென்று சொல்லப்படுவதாகவும், அதை நம்பி சில வாலிபர்கள் காங்கிரசில் கலந்து கொள்ளஆசைப்படுவதாகவும் தெரியவருவதால், இரண்டுக்குமுள்ள சம்பந்தத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல வேண்டுமென்றே, இந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டுமென்று குறிப்பிட்டதாகச் சொன்னார்கள். ஆகவே, இப்பொழுது நான் இதைப்பற்றி பேசுவேனென்பதாகக்கருதி, அதிலும் இது சம்பந்தமான எனதபிப் பிராயத்தை உள்ளபடி சிறிதும் ஒளிக்காமல் எனக்குப் பட்டதை சொல்லுவேனென்று யெண்ணி, நீங்களித்தனை பெயர்கள் இன்று இங்கு கூடியிருக்கிறீர்கள். ஆகவே நான் இந்தச் சமயத்தில் யாருக்காவது பயந்து கொண்டோ, யார் தாட்சன்னியத்திற்காவது மயங்கிக்கொண்டோ எனதபிப்பிராயத்தை உள்ளபடி வெளியிடாமல் மறைத்துப் பேசுவேனே யானால், உங்களை ஏமாற்றியவனென்பதாக ஆவதோடு, நானும் ஒரு பயங் காளியென்பதாகவே யாகிவிடுவேன். இந்தப்படி நீங்கள் ஏமாற்றப்படுவ தாலும், நான் பயப்படுவதாலும், யாருக்கென்ன லாபம் ஏற்படக்கூடும்? நாங்கள் ஏதாவது உங்களிடம் பணம் பறிக்கவோ, பத்திரிகை பிரசாரம் செய்யவோ அல்லது யாரிடமாவது சம்பளம் பெற்று கூலிப்பிரசாரம் செய் யவோ, அல்லது உங்களுடைய ஓட்டுகளை யாருக்காவது வாங்கிக் கொடுக்க ஏஜண்டுகளாகவோ, தரகர்களாகவோ, அல்லது வயிற்றுப்பிழைப்புக்கே இதையொரு தொழிலாகக் கொண்டு, புராணப் பிரசங்கிகளைப் போல உங்களை ஏமாற்றி திருப்தி செய்து விட்டுப்போகவோ அவசியமுடையவர் களாக இங்கு இப்போது வரவில்லை. எதோ எங்களுடைய வாழ்நாட்களானது வீணாகாமலும், எங்கள் வயிற்றுப்பிழைப்புக்கும், வாழ்க்கை, சுகபோக ஆசைக்குமே வீணாகக் கழியாமல் ஏதாவதொரு பயனுள்ள காரியத்தை செய்து விட்டு அதுவும் எங்களுக்கு உண்மையாகவும், உறுதியாகவும், சரி யென்று பட்ட காரியத்தையே செய்துவிட்டு முடிவெய்தலாமே யென்கிற யெண்ணத்தின் மீதே சகல சுக, துக்க பலன்களுக்கும் துணிந்து உண்மை யென்றுபட்டதை யெடுத்துச் சொல்ல வந்திருக்கின்றோம்.

ஆகவே, சகோதரர்களே! நீங்களும் இது போலவே இந்த விஷயத் தில் நியாயமாகவும், யோக்கியமாகவும் நடந்து கொள்ளவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். எதற்காக வென்றால் நாங்கள் சொல்லுவதை அப்ப டியே நம்பி, மோசம் போய் விடாதீர்களென்பதற்கும், வேறு எந்தக் காரணத் தினாலாவது நாங்கள் சொல்லும் விஷயங்களுக்குள் புகுந்து பாராமல் அப்படியே தள்ளி விடாதீர்களென்பதோடு எங்களுடைய சொந்த பெருமை, சிறுமை ஆகியவைகளை யுத்தேசித்து விஷயங்களை மதிக்காதீர்கள் என்பதற்குமாகத்தான் இப்படிச் சொல்லுகிறேன். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுடைய சொந்த அறிவையும் ஆராய்ச்சியையும் கொண்டு, நடுநிலைமையிலிருந்து அலசிப்பார்த்து தள்ளுவதைத் தள்ளி, கொள்ளுவதைக் கொள்ளுங்கள். அந்த தைரியத்தைக் கொண்டு தான் நாங்களும் தைரியமாய் உண்மையென்று பட்டதை பேசுகிறோம்.

நாங்கள் சொல்லும் விஷயங்கள் உங்களுக்குப் புதிதாகயிருக்கலாம், அசாத்தியமாகயிருக்கலாம், ஆச்சரியமாகவிருக்கலாம், திடுக்கிடக்கூடிய தாகவிருக்கலாம். உங்களுடைய உணர்ச்சிக்கும் பழக்க வழக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் விரோதமாயிருக்கலாம். அன்றியும், நாங்களிதற்கு முன் எப்போதாவது வெளிப்படுத்தின அபிப்பிராயங்களுக்கு மாறுபாடாயிருந் தாலும், அவற்றைவிடத் தீவிரமானதாயிருந்தாலுமிருக்கலாம். எப்படியிருந்த போதிலும் நீங்கள் மாத்திரம் நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தால் தான், ஏமாராதிருக்க முடியுமே யொழிய மற்றப்படி மத விஷயத் தைப்போல் அரசியலிலும் யார் சொல்லுவதையும் நம்ப வேண்டுமென்றும், நம்பாவிட் டால் பாவம், நரகம் வந்துவிடுமோ என்று பயப் படுகின்ற தன்மை போலும் வைத்துக் கொண்டால் கண்டிப்பாய் இதிலும் ஏமாந்துதான் போக முடியும் என்பதை தெரிவித்துக் கொண்டு மேலே பேசுகிறேன்.

சகோதரர்களே! கராச்சி காங்கிரசும், சுயமரியாதையும் என்னும் விஷ யத்தில் எங்களபிப்பிராயத்தைச் சொல்லுவதென்பதில் முதலாவது நாங்கள தற்குத் தகுந்தவர்களாயென்பதும் கவனிக்க வேண்டிய விஷயந்தான். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் காங்கிரஸ் என்பதிலும் கொஞ்சகாலம் உழைத்து அதன் தத்துவங்களையும் உள் பிரகாரத்திலிருந்து மனப்பூர்வமா யுணர்ந்தவர்களேயாவோம். அத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும், ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கும் பல தடவை ஆளானவர்களுமாவோம்.

இன்னும் விவரமாய்ச்சொல்ல வேண்டுமானால் அதற்காகப் பல தடவை “சிறைக்கு” சென்றுவந்தவர்களுமேயாவோம். அதன் பெருமை யை யுத்தேசித்து இப்பொழுது உங்களிடம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஆனாலும் கஷ்டத்திற்கு பயந்து கொண்டு நாங்கள் ஏதோ இவ்வித அபிப்பிராயம் சொல்லுவதாக சொல்லுகின்றவர்களுடைய வார்த்தைக்கு சமாதானம் தெரியாமல் திண்டாடாதீர்கள் என்பதற்காகத்தானே சொல்ல வேண்டியவனாவேன். அன்றியும், நாங்கள் காங்கிரசின் கொள்கைகள், திட்டங்கள், தீர்மானங்களாகியவைகளின் உள்யெண்ணம் என்னவென்பதும், வெளியெண்ணமென்னவென்பதும் அவற்றை தீர்மானிக்கும் முறை எப்படி யென்பதும், அதன் தலைவர்கள், தொண்டர்களாகியவர்களின் தன்மை எப்படிப்பட்ட தென்பதையும், அத்திட்டங்களையும், தீர்மானங்களையும் பிரசாரம் செய்யும் மாதிரியும் அமுல் நடத்தும் மாதிரியும், அதிலுள்ள நாணயங்களும், அதனாலேற்படும் பயன்களும் நன்றாய் அறிந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்களே யாவோம். அதோடு சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், அதன்பேரால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள், திட்டங்கள், அதன்பயனாய் ஏற்பட்ட பலன்கள் ஆகியவைகளையும். நன்றாயறிந்திருக்கிறோமென்றே கருதிக் கொண்டிருக்கிறவர்களாவோம். ஆதலால், மேற்கண்ட இரண்டு விஷயத்திலும் சிறிதாவது அனுபோகங் கொண்டே பேசுகிறோமென்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! என்னுடைய சொந்த கருத்துப்படி காங்கிரசும், சுயமரியாதையும் ஒன்றுக் கொன்று மாறானது என்பதோடு குறிப்பாக கராச்சிக் காங்கிரசினால் நாட்டு மக்களின் உண்மையான சமதர்மத்துக்கும், மற்ற நலத் துக்கும் எவ்வித அனுகூலத்தையும் விளைவிக்காதென்பதோடு, அதனால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் நடைபெறவும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியேற்படவும், இடையூறு ஏற்படுமென்றும் நான் கருது கிறேன். இரண்டினுடைய அடிப்படையான கொள்கைகளே ஒன்றுக் கொன்று மாறானதாகுமென்றும் கருதுகின்றேன்.

உதாரணமாக சில கூறுகிறேன். சகோதரர்களே! நமது சுயமரியதை இயக்கத்தின் கொள்கைப்படி முதலாவதாக மதமும், ஜாதியும், கடவுளுணர்ச் சியும் மக்களிடத்திலிருந்து விலக்கப்பட வேண்டியதவசியமாகும். காங்கிரஸ் கொள்கைப்படி மதமும், ஜாதியும், கடவுளுணர்ச்சியும் முறை பிசகாமல் காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமாகும். சுயமரியாதைக் கொள்கையில் பிராமணனென்பவறும், பறையனென்பவறும் நாட்டிலிருக் கக்கூடாது. காங்கிரஸ் கொள்கைப்படி அவர்களிருந்துதான் தீருவார்கள்.

சுயமரியாதைக் கொள்கையில் இந்துமதமென்பதும், மநுதர்ம சாஸ்திர மென்பதும் அழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கொள்கையில் இந்துமதமும், மநுதர்மசாஸ்திரமும் காப்பாற்றப்படவேண்டும்.

சுயமரியாதைக் கொள்கையில் இராமஇராஜ்யம், ஹரிச்சந்திர இராஜ்ய மாகிய இந்துமத ஆதார, புராண இராஜ்ய பாரங்கள் - இராஜ்ய முறைகள் அழிக்கப்பட்டாக வேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி இராமஇராஜ்யமும், ஹரிச்சந்திர இராஜ்யமும் புதுப்பித்தாக வேண்டும்.

சுயமரியாதைக் கொள்கைப்படி இந்த ஊர் கமலாலய கோவிலின் கட்டட விஸ்தீரணமாகிய ஐந்து வேலி விஸ்தீர்ணமுள்ள இடம் சமநிலை யாக்கப்பட்டு, பயிர் செய்யப்பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் கொள்கைப் படி கமலாலயத்தையும், அதைச் சுற்றிலுமுள்ள குட்டிச் சுவர்களையும் பந்தோபஸ்தாய்க் காப்பாற்ற வேண்டும்.

சுயமரியாதைக் கொள்கைப்படி ஏழை-பணக்காரன், முதலாளி- தொழிலாளி, சோம்பேரி- பாடுபடுபவன், மேல் ஜாதி - கீழ் ஜாதி, மிராசுதாரன்- பயிர் செய்பவன், ஜமீன்தாரன் - குடியானவன், மேல்வாரக்காரன் - கீழ்வாரக் காரன் என்கின்ற தன்மைகளிருக்கக் கூடாது. காங்கிரஸ் கொள்கைப்படி இவர்கள் ஒவ்வொருவருடைய பிறப்புரிமைகளையும், அதாவது அவரவர் கள் பிறக்கும்போது இருந்த சொத்துரிமைகளைக் காப்பாற்றி, அவரவர் களுக்கு மதத்தின்பேரால், வர்ணாச்சிரம தர்மத்தின் பேரால், சாஸ்திரங்களில் கூறியுள்ள நீதி நிபந்தனைகளின் பேரால் உள்ள உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.

சுயமரியாதைக் கொள்கைப்படி ஆயிரம்வேலி, இரண்டாயிரம் வேலி நிலமுள்ள மடாதிபதிகளும், கோயில் சாமிகளும் ஒழிக்கப்பட வேண்டும். அவைகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தும், மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தவும் வேண்டும். காங்கிரஸ் கொள்கைப் படி மடங்களையும், சாமிகளையும், காப்பாற்றுவதோடு அதன் சொத்துக்களையும், மடங்களுக்கும், சாமிகளுக்கும் பழைய வழக்கப்படி, மாமூல்படி அடைந்து கொண்டிருக்கச் செய்யவேண்டும்.

சுயமரியாதைக் கொள்கைப்படி மடாதிபதிகளும், சங்கராச்சாரியார் களும், மதப்பிரசார சன்னியாசிகளென்பவர்களும் பட்டாளத்தில் சேர்க்கப் படவும், விவசாயத்திலமர்த்தப்படவும் செய்வதோடு, சக்தியில்லா தவர்களை தானியக்களஞ்சியங்களை சோம்பேரிகள் கொள்ளை கொள்ளாதபடி காவல் காக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி இம் மடாதிபதிகளையும், சங்கராச்சாரிகளையும், நூற்றுகணக்கான மக்கள் பல்லக்கில் ஊரூராய் சுமந்துகொண்டு, அவர்கள் கால்களை (பாதத்தை) கழுவினத்தண்ணீரை மக்களுக்குக் குடிப்பித்து, அதற்காக வரிகள் வசூலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

சுயமரியாதைக் கொள்கைப்படி மக்களுக்கு மேல்லோகம்- கீழ் லோகம், மோட்சலோகம் - பிதுர்லோகம் என்கின்றதான பித்தாலாட்டங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கொள்கைப்படி செத்துப் போனவர்களுடைய ஆவியை மோட்சலோகத்திற்கும், பிதுர்லோகத் திற்கும் அனுப்புவதற்கு பிணங்களின் எலும்புகளையும், சாம்பலையும், கங்கையில் போட வேண்டும்.

சுயமரியாதைக் கொள்கைப்படி ஆத்மாவே சந்தேகம். காங்கிரஸ் கொள்கைப்படி மகாத்மாக்கள், குட்டி மகாத்மாக்கள் உண்டு.

இப்படிப்பட்டவையான அநேக வித்தியாசங்கள் இன்றைய காங்கி ரஸ், காங்கிரஸ் கருத்தாக்கள், காங்கிரசின் ஏகநாயகர்களாகியவர்களுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் இருந்து வருகின்றன. இவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு “காங்கிரசுக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் வித்தியாசமில்லை” என்றும் “காங்கிரசில் பூரண சுயேச்சை உண்டு” யென்றும், பொதுவுடைமைத் தத்துவம், சமதர்மக் கொள்கை ஆகியவைககள் உண்டு, என்றும் பேசுவதில் யோக்கியப் பொறுப்போ, நாணயப் பொறுப்போ இருக்க முடியுமா? வென்பதை யோசித்துப் பாருங்கள்

சகோதரர்களே!

இந்த நாட்டின் சொத்துக்களெல்லாம் கடவுள்களுடையதாகவும், சம்பாதனைகளெல்லாம், மோட்சப் பிரவேச அனுமதிச் சீட்டுக்கும், வழிப் பிரயாணதுக்குமாகவும், மக்களின் சூட்சிக்காரர்களெல்லாம் மோட்சவழி காட்டிகளாகவும், சுயராஜ்ய கர்த்தாக்களாகவும், பாடுபடுகிற ஜனங்களெல்லாம் அடிமைகளாகவும், பாவிகளாகவும் இருந்து கொண்டு பட்டினி கிடப்பவர் களாகவும் இருந்து வரும் முறைதான் இன்றைய கராச்சி காங்கிரஸ் சுயராஜிய திட்டமென்பதை யுணருங்கள். எந்தத் திட்டத்தில் ஏழையென்றும், அடிமையென்றும், ஈனனென்றும், மக்கள் பிறவி யில்லையோ அதுதான் சுயமரியாதை இயக்கத்திட்டம். எந்தத் திட்டத்தில் முதலாளியென்றும், தொழிலாளியென்றும் ஜாமீன்தாரனென்றும் குடியானவனென்றும் மடாதி பதிகளென்றும் சிஷ்யர்களென்றும், பிராமணனென்றும் சூத்திரனென்றும், பறையன் என்றும், பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சாஸ்திரப்படியுள்ள பிறப் புரிமை காப்பாற்றத் திட்டம் போடப்பட்டிருக்கின்றதோ அதுதான் சுயராஜியத் திட்ட மென்பதை யுணருங்கள்.

நாற்பத்தைந்து வருஷகாலம் காங்கிரஸ் இருந்து வந்தும், லோக மானியர்கள், லோகநாயகிகள், மகாத்மாக்கள், தெய்வீக அவதாரச் சக்தியு டையவர்கள், வீரர்கள், தியாகிகள் என்பவர்கள் காங்கிரசுக்குத் தலைமை வகித்து காங்கிரசை குரங்குபோல் ஆட்டி வந்தும் இன்னமும் இந்த நாட்டை விட்டு பறையரும், சண்டாளரும், முகாலோபம் செய்யக்கூடாத இழிவான மனிதரும் ஒழிந்த பாடில்லை, ஒழிவதற்குரிய அறிகுறிகளும் காணப்பட வில்லை என்றால் காங்கிரசும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றா என்பதை யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பிராமணனும், பூதேவனும், சூத்திர னும், பஞ்சமனும், பாக்கியவானும், நிர்ப்பாக்கியவானும் இந்த நாட்டை விட்டு ஒழிந்த பாடில்லை. ஒழியும் மார்க்கங்களும் குறிப்பிடப்படவில்லை என்றால் காங்கிரசும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றா? என்று யோசித்துப் பாருங்கள். இந்த நாட்டில் ஏழைமக்கள் கோடிக் கணக்காக கஞ்சிக்குத் திண்டாடிக் கொண்டு படிப்பில்லாமல் துணியில்லாமல், மனிதத்தன்மை யில்லாமல் நாயாய், கழுதையாய், பன்றியாய், ஏன் அதற்கும் கேவலமாய் நடத்தப்பட்டு வருவதொருபுறமிருக்க, கல்லுகளை ஆட்டுக்கல்லாகவும், குழவிக் கல்லாகவும் ஆக்கி ஒன்றுக்குள் ஒன்று சிக்க வைத்து அதன் தலைகளில் தேன், பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம் அபிஷேகங்களை செய்து கொண்டு அவைகளுக்குப் பெண்டு, பிள்ளை, வைப்பாட்டி கற்பித்து பட்டு, பட்டாடை, வயிரக்கெம்பு நகைகளை சாத்தி கட்டை முட்டிகளையடுக்கி அதன் மீது தூக்கி வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் சுமப்பதையும், பதினா யிரக்கணக்கான மக்களிழுப்பதையும் இதற்காக இந்த நாட்டில் மாத்திரம் பல கோடிக்கணக் கான ரூபாய்கள் பாழாவதையும் பார்த்தும் காங்கிரஸ், ஏனென்று கேட்க வில்லை. அப்பக்கம் திரும்பியும் கூட பார்க்கவில்லை என்றால் இனியும் கூட காங்கிரசும், சுயமரியாதை இயக்கமும் ஒன்றா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்த நாட்டின் வாழ்க்கை முறையானது வியாபாரத்தின் மூலம், வட்டி வாங்குவதின் மூலம், புரோகிதம், குருஸ்தானம், உத்தியோகம் முதலியவை களின் மூலம் பாடுபடுவர்களுடைய செல்வமெல்லாம், வரும்படியெல்லாம் சிலரிடமே போய் பெருகவும், அவர்கள் அதை தங்களுடையதேயென்று பாழாக்கவுமான மாதிரியிலேயே பாழாக்கத்தகுந்த வாழ்க்கைத் திட்ட மிருந்து வருகிறது. இதைப் பற்றி எந்தக் காங்கிரசும் திரும்பிப் பார்க்கவே யில்லை. ஆனால் நேற்றுத் தோன்றிய சுயமரியாதை இயக்கம் இம் மாதிரி யானத் தன்மைகளையெல்லாம் ஒழித்தாக வேண்டுமென்றே சொல்லுகிறது. இந்த வேலையைத்தான் விடுதலை மார்க்கம் என்று சொல்லுகின்றது. காங்கிர சானது, வெள்ளைக்காரன் அனுபவித்து வரும் போக போக்கியத்தை இந்த நாட்டுப் பணக்காரனும், படித்தவனும், பார்ப்பனனும், மகாத்மாக்களும், தேசீய வாதிகளும், அனுபவிக்க வேண்டுமென்கின்ற ஆசைக்காக “வெள்ளைக்கார இராஜியம் இந்நாட்டை விட்டுப் போக வேண்டு” மென்கிறது. சுயமரியாதை இயக்கமானது இந்த நாட்டு செல்வத்தையும், இன்பத்தையும், இயற்கை வளத்தையும், எல்லா மக்களும் சமமாக அனுபவிக்கவும், இந்த நாட்டு சொத்துக்களெல்லாம் எல்லா மக்களுக்கும் பொதுவானதாயிருக்கவும் இந்த நாட்டு மக்களெல்லாம் பிறவியில் உயர்வு - தாழ்வு என்பது சிறிதுமில்லாமல் சகோதரர்கள் போலிருக்கவும், இந்நாட்டுச் சோம் பேரிகள் சூட்சிக்காரர்கள் பாமர மக்களை யேமாற்றாமலிருக்கவுமான காரியங்களுக்கு மாத்திரந்தான் வெள்ளைக்காரர்கள் ஆட்சி இந்த நாட்டை விட்டுப் போய்த்தீரவேண்டு மென்று சொல்லுகிறது. இந்த நாட்டிலுள்ள ஜமீன்தாரர்களுடைய அக்கிரமம் சகிக்க முடியவில்லை. மிராசுதாரர்களுடைய அநீதி, கொடுமை ஆகியவை கள் நிர்வகிக்க முடியவில்லை. பார்ப்பனர்களுடைய அகம்பாவமும் ஏமாற்று தலும் நினைக்கமுடிய வில்லை. இரண்டு இங்கிலீஷ் எழுத்துகள் தெரிந்து விட்டதனாலேயே படித்தவர்களென்று சொல்லப்படுவர்களின் பகல் கொள்ளை தாங்க முடிய வில்லை. இவைகளை யெல்லாம் அழிப்பதற்கு காங்கிரஸ் என்ன செய்கிறது? இத்தனை பேரையும் காப்பாற்ற காங்கிரஸ் பாடுபடுகின்றதா? இல்லையா? என்று உங்கள் மனதைக் கேளுங்கள். உங்கள் அறிவைக் கேளுங்கள். உங்கள் அனுபவத்தைக் கேளுங்கள், உங்கள் நாணையத்தை கேளுங்கள்.

ஆனால் சுயமரியாதை இயக்கமானது இந்த மாதிரியான பிரிவுகள் கூடாதென்பதோடு இதற்கு ஆதாரமாய் இருந்து வருவதான எதுவும் கூடாது. அவைகள் எல்லாம் அடியோடு அழிக்கப்பட வேண்டுமென்றல் லவா சொல்லுகின்றது.

சகோதரர்களே! இந்த கோவில்களைக் கண்டால். இந்தத் தேர் திரு விழாக்களைக் கண்டால், இதன் சொத்துக்களைக் கண்டால் உங்களுக்கு வயிறு பற்றி எரியவில்லையே. அதற்கு பதிலாக “ஆநந்த பாஷ்பம்” பெருக் குகின்றீர்களே! பிள்ளைக்குட்டிகளுடன் விழுந்து கும்பிடுகின்றீர்களே! இந்த ஜால வித்தைக்காரர்கள் உங்களை எவ்வளவு முட்டாள்களாக்கி வைத் திருக்கிறார்களென்பதை இதிலிருந்தாவது சிந்தித்துப் பாருங்கள்.

இந்த மடாதிபதிகள் உங்கள் செல்வத்தை கொள்ளை கொண்டு சோம் பேறிகளைக் கூட்டி வைத்து “மதன கோலாகலக்கிரீடை”, “ஜலக்கிரீடை”, “கிருஷ்ண லீலை” நடத்துகின்றார்களே! உங்களுக்கு ஆத்திரமில்லையா? அதற்கு பதிலாக விழுந்து கும்பிட்டு கால்கழுவின தண்ணீரைக் குடித்துக் காணிக்கை செலுத்துகின்றீர்களே! உங்களுக்கு மதியில்லை, மானமில்லை என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

நான் போக்கிரியாய் இருக்கலாம்,காலியாய் இருக்கலாம், கூலியாய் இருக்கலாம். இந்த கோவிலும், மடமும், இருப்பதும், இவற்றை நீங்கள் விழுந்து கும்பிட்டுக் கன்னம் கன்னமாய் போட்டுக் கொள்வதும், அறிவுள்ள, மானமுள்ள மனிதனுடைய செயலா? என்றுதான் கேட்கின்றேன். இவை களை ஒழிக்கவேண்டாமா? இந்தச் சொத்துக்களை எடுத்துக் கல்விக்கும், அறிவுக்கும், மானத்திற்கும், மனிதத்தன்மைக்கும் செலவழிக்க வேண்டா மா? என்றுதான் கேட்கின்றேன்.

நீங்கள் என்னைப் பார்த்துக் கோபிப்பதிலோ, ஆத்திரப்படுவதிலோ சிறிதும் பயனில்லை, இதனால் நீங்கள் என்னை என்செய்வீர்கள் என்ப திலும் எனக்குக் கவலை இல்லை. உங்களை ‘வாழவைக்கும்’ காங்கிரசு, அதுவும் கராச்சிக் காங்கிரசின் யோக்கியதையைச் சற்று யோசித்துப் பாருங்கள். உங்கள் மானத்திற்கும்,மதிக்கும், மனிதத்தன்மைக்கும் இந்தக் கராச்சிக் காங்கிரசு என்ன செய்தது, செய்கின்றது, செய்யக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

உங்கள் இத்தனை பேரையும் இந்த நிலைமையிலேயே இருக்கச் செய்யத்தானே காங்கிரஸ் கர்த்தாவாகிய மகாத்மா என்பவர் காலையும் மாலையும், ‘ராம் ராம், சீத்தாராம்’ என்று பஜனைபாடுகிறார், பிரார்த்தனை செய்கின்றார், கீதைபடிக்கிறார். அவர்களது சீஷர்களும் சென்ற விட மெல்லாம், புராணப் பிரசங்கம் செய்கிறார்கள். இது உங்களுக்குப் புரிய வில்லையா?

ஆகவே கடவுள் பூஜையிலும், பிரார்த்தனையிலும், ராம பஜனை யிலும், புராண காலnக்ஷபத்திலும் இருந்து ராம ராஜியம் அடைய வேண்டு மென்கின்றீர்களா? அல்லது இவற்றையெல்லாம் அழித்து, ஒழித்து மனித தர்ம ராஜியம் வேண்டுமென்கின்றீர்களா? என்பதுதான் இப்போது உங்கள் முன் நிற்கும் கேள்வி. அது வேண்டுமானால் காங்கிரசில் சேருங்கள். இது வேண்டு மானால் சுயமரியாதையில் சேருங்கள். “இரண்டும் ஒன்று” என்று மாத்திரம் சொல்லாதீர்கள் என்றுதான் சொல்லுகின்றேன். மற்றபடி உங்கள் இஷ்டம்.

------------------------ திருவாரூர் கமலாலயத்துக்கு முன்புறம் உள்ள தெப்புக்குளத்து மைதானத்தில் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய உரை.-”குடி அரசு”

- சொற்பொழிவு - 14.06.1931

48 comments:

தமிழ் ஓவியா said...


கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க ஆட்சியே!
+2 தேர்வில் பெருவாரியாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் - வாய்ப்புத் தந்தால் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெறுவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

ஜாதிக் கலவரத்தில் ஈடுபடாமல் வட மாவட்ட மாணவர்கள் தென் மாவட்டங்களைப் பார்த்து சாதனை படைக்க வேண்டும்! தமிழர் தலைவரின் அறிக்கை

+2 தேர்வில் வெளிவந்த முடிவுகளை ஒப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக் கையில், தென் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்; வட மாவட்டத்தில் உள்ளவர்கள் ஜாதிக் கலவரங்களில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

சுமார் எட்டரை லட்சம் மாணவ - மாணவிகள் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மிகச் சிறப்பான வகையில் மதிப்பெண்களை எடுத்து, தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

நீதிக்கட்சி ஆட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சி தொடக்கிய கல்விப் புரட்சி, தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தின் ஏற்றமிகு வீச்சின் காரணமாக காமராசர் ஆட்சி, தொடங்கி அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, இன்றைய அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா ஆட்சி வரை தொடர்ந்த வண்ணமே இருக்கிறது!

குலக்கல்வித் திட்ட ஒழிப்பு?

1952-53 ராஜாகோபாலாச்சாரியாரின் குலதர்மக் கல்வித் திட்டம் தந்தை பெரியார் இயக்கத்தின் பேரெதிர்ப்பால் ஒழித்துக் கட்டப்பட்டு, புதரின் புற்றரவங்களை அழித்து, பூங்காக்களை உருவாக் கியதுபோல, இன்று நாடெல்லாம் கல்வி நீரோடை பாய்ந்து ஓடிய வண்ணம் உள்ளது!

சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகக் கொண்ட மதத்தினர் பெரும்பாலோர் உள்ள நாட்டில், பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளாக சரஸ்வதி மூடநம் பிக்கை - வாழும் சரஸ்வதிகளைக் கூட எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக ஆக்காத நிலையில், திராவிடர் இயக்கம் தான் குறுகிய 85 ஆண்டு காலங்களில் வாதாடியும், போராடியும், புதிய அரசுகளின் இடஒதுக்கீடுகள், சமூக நீதிக்கான ஆணைகள், சட்டங்கள் மூலம் இந்த கல்விப் புரட்சியை அறிவுப் புரட்சியாக, அமைதிப் புரட்சியாக மலரச் செய்து மகத்தான சரித்திரம் படைத்துள்ளது.

கல்வி வளர்ச்சி!

பஞ்சாயத்து யூனியன்கள் சுமார் 455; ஆனால் அந்த எண்ணிக்கையையும் தாண்டி பொறியியல் கல்லூரிகள் 556 முதல் புதியவை இணைந்தால் 575 உள்ளன!

பல ஆயிரம் காலி இடங்கள். (பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்குத் தயாராக அடிக்கட்டுமான வசதிகளுடன்!)

ஏறத்தாழ மாவட்டந்தோறும் தி.மு.க. - கலைஞர் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் - இப்படிப் பல.

விவசாயத் தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள், கால்நடைக்கான பல்கலைக் கழகங்கள் - எல்லாத்துறைகளிலும் வளர்ச்சி. தனிச் சிறப்போடு இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் நாட்டில் 2500 பல்கலைக் கழகங்களே தேவை என்பது அறிவு சார் குழுவின் கருத்து.

இத்தகைய கல்விப் புரட்சி. ஏராளமான பள்ளிகள் - தனியார் துறைக்குப் பதிலாக அரசே நடத்த வேண்டும் என்பது சமதர்மம் முழுமையாக அமலானால் தான் சாத்தியமாகும். அதுவரை தனியார் பங்களிப்பு இன்றேல், இவ்வளவு பெரும் வளர்ச்சியைக் காண முடியாது. கல்வித்துறை முன்புபோல பற்றாக் குறையில்தான் இருக்க வேண்டியிருந்திருக்கும்! தேர்வு முடிவுகள் வந்துள்ளதில் ஒரு புதுமை - புரட்சி!

உள் மாவட்ட மாணவர்களின் சாதனைகள்!

பெரும் நகர்ப்புறப் பள்ளிகளிலிருந்து முதலாவது, இரண்டாவது (மாநில அளவில்) மாணவ, மாணவிகள் வரவில்லை.

நாமக்கல், ஓசூர் போன்ற உள் மாவட்டங்கள் கிராமாந்திரப் பள்ளிகள் தான் சாதித்துள்ளன!

அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்!

சென்னை - மேட்டிமை வகுப்பு Elite - பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வழக்கம்போல் பெண்கள் - மாணவிகள் 91 விழுக்காடு தாண்டி விட்டனர்!

ஆண்கள் - மாணவர்கள் 84 விழுக்காடுதான் வெற்றி பெற்றுள்ளனர்!

பெண் கல்வி பரவுவதையும், வாய்ப்புத் தந்தால் நமது மகளிரின் ஆற்றல் ஆண்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதையும் காட்டியுள்ளது!

தென் மாவட்டங்களைப் பாரீர்!

தென் மாவட்டங்கள் தொடர்ந்து வெற்றியை தக்க வைக்கின்றன; வட மாவட்டங்களின் பெயர்கள் ஜாதிக் கலவரங்களில் அடிபடாமல், இப்படியாக ஆரோக்கிய போட்டியில் இனியாவது கவனம் செலுத்தினால் அது மிகவும் சிறப்பாக அமையும்.

சென்னை
10.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் சேமிப்பு வங்கி - மனித குல தொண்டறத்தில் புதிய பரிமாணம்!


நேற்று (9.5.2013) மாலை கலைஞர் தொலைக்காட்சி, செய்தியில் ஒரு புதுமையான அறிவியல் - மருத்துவ இயல் சாதனை சீனாவில் நிகழ்ந்துள் ளதைக் கூறினார்கள்.

மனித குலத்தின் வருங்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட வேண்டிய அற்புதமான சாதனை - அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற கற்பனைக் கதைகளைத்தான் நாம் இதுவரைக் கேட்டு வந்தோம்!

அறிவியல் தொழில்நுட்பம் - மருத் துவத் துறையில் மிக அற்புதமான, வளர்ச்சிக்குரிய புதுயுக சாதனை களைச் செய்து நாளும் புதுமை சேர்த்து வருகிறது!

ஆதி மனிதனுக்கு வேட்டையாடத் தான் தெரியும்; மிருகங்கள் தாக்கிய போது அவன் ரத்தம் சிந்தி மரண மடையும் நிலைதான் - துவக்கத்தில்.

ஆனால் மனித ரத்தம் இப்படி, பயனற்று சிந்தப்படுவதும் உண்டு. (இன்றும் வன்முறை வெறியாட்டங் களில் சிந்தும் ரத்தமும் - ஜாதிக் கலவரம், மதக் கலவரம் - ஜாதிக்கலவரங்கள், பயங் கரவாதக் கலகங்கள் மூலம் சிந்தப்படும் ரத்தமும் - மிக அதிகம் தான்).

என்றாலும் மருத்துவத் துறையில் தொழில் நுட்பம் புகுந்ததின் விளைவாக, ரத்ததானம், ரத்த சேமிப்பு வங்கி கண்டுபிடிக்கப்பட்டு, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்ததானம் - குருதிக் கொடை - மூலம் தரப்படுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றும் அரிய தொண்டறம் அல்லவா இது!

அதன்பிறகு மனித உறுப்புக்களைக் கொடையாக வழங்கும் - கண்தானம் பரவலாக ஏற்பட்டு வருகிறது!
செத்தவர் இதன்மூலம் வாழுபவராக வாழ்கிறார் என்பதில்தான் எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

இதற்கென கண்கள் சேமிப்பு வங்கிகள் (Eye-Bank) உருவாக்கப்பட் டுள்ளன.

சிறிய மருத்துவமனைகளில் இவை போன்றவைகளைச் சேகரித்து வைக்க முடியா விட்டாலும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளின் ரத்த வங்கி, கண் வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுகின் றனர்.

உடலுறுப்புக் கொடையும் அண்மை யில் தாராளமாக, ஏராளமாக மக்களின் இதயங்களில் அன்பு நதிகள் ஓடுகின்ற காரணத்தில், மகிழ்ச்சியும் அளித்து மன நிறைவு கொள்ளுகின்றனர்!

தந்தை பெரியார் அவர்களின் கடைசிப் பொதுக் கூட்டம் 19.12.1973 சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. அப்போது வேனில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், அய்யா அவர்களின் அந்நாளில் வந்த Illustrated Weekly of India-வில் ஒரு புதுமையான செய்தியை படித்துக் காட்டினேன்.

மனிதனின் விந்துவைச் சேகரித்துப் பிறகு பயன்படுத்தும் வகையில் (Seman Bank) விந்து வங்கியை ஏற்படுத்தி, பாதுகாப்பாக வைக்கும் முறை செயல்படத் துவங்கியுள்ளது - அறிவியலின் மற் றொரு அற்புதமான மருத்துவ தொழில் நுட்பச் சாதனை என்பதைக் கேட்ட தந்தை பெரியார் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்!

ஒருவன் விபத்துக்குள்ளான போதி லும் கூட மரணமுற்றாலும்கூட - அவ னது விந்துவை இன்செக்ஷன் செய்து, அவனுக்கே குழந்தை அவன் மனைவி மூலமோ, அல்லது வாடகைத் தாய் மூலமோ பிறக்க வைக்க முடியும்; இதை 10 ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம் என்ற குறிப்பும் இருந்தது!

இதைப்பற்றி அவரது தியாகராயர் நகர் பேருரையில் குறிப்பிட்டு மகிழ்ந் தார்கள்!

தாய்ப்பால் தான் குழந்தைகளின் ஊட்டத்திற்கு மிகவும் அவசியம். பல குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து இல்லாததால் நலிவுற்ற நிலையில் சீனாவில் இருப்பதை அறிந்து அங் குள்ள அரசு - சுமார் 2000 கோடி அமெரிக்க டாலர் செலவில், தாய்ப் பால் சேகரிப்பு வங்கி ஒன்றை நிறுவியுள்ளார்களாம்!

ஒரு தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு போத்தலில் தூய்மையாக லாவகமாக கைபடாமல் கறந்து சேமித்து பாதுகாத்து, ஊட்டமில்லாத குழந்தைகளுக்குத் தரும் ஏற்பாடாம்!

என்னே அறிவியலின் விந்தை - மனித குல வரலாற்றில் இது மாபெரும் கண்டுபிடிப்பு, ஏற்பாடு மட்டுமல்ல - தலைசிறந்த தொண்டறமும் ஆகும்!

சுரந்த பாலை வீணாக்காமல், தாயும் நலத்துடன் வாழ இது உதவிடக் கூடும். இம்முயற்சியின் மூலம் மற்ற நாடுகளுக்கு சீனா வழிகாட்டியுள்ளது!

கறந்த பால் முலைபுகா
கடைந்தவெண்ணெய் மோர்புகா

- என்று சித்தர்கள் பாடினார்கள்.

தாயின் முலைப்பால் பல குழந்தை களைக் காப்பாற்றிடப் பயன்படும்போது தாய்மையே தனிச் சிறப்பல்லவா பெறுகிறது?
--கி.வீரமணி -10-5-13

தமிழ் ஓவியா said...


மாநாடு நடத்துவது எளிது! புதிய சாதனை! - புதிய வரலாறு!


- வி.சி.வில்வம்

இந்தத் தலைப்பைப் படித்தவுடன் எழுதுவது எளிது என்று நீங்கள் எண்ணக் கூடும். எண்ணிய பிறகும் கூறுகிறோம், மாநாடு நடத்துவது எளிது. உதாரணம் இராஜபாளையம்!

வாய்ப்பு, வசதிகள் குறைந்த ஊரில், ஜாதி, மதம். ஆர்.எஸ்.எஸ். பூச்சாண்டிகள் நிறைந்த ஊரில் சாதனைப் படைப்பது கூட, நம் தோழர்களுக்கு எளிதுதான்! அதனால் தான் ஆசிரியர் அவர்கள் 07.05.2013 நாளிட்ட தம் அறிக்கையில், இராஜபாளையம் மாநாடு உண்மையி லேயே ஒரு வரலாறு படைத்த மாநாடாகும்.

தென்திசையில் ஏற்பட்ட புத்து ணர்ச்சி வெள்ளத்தில் பூரிப்பின் உச் சிக்கே சென்றேன், என எழுதி இருக் கிறார்கள். அந்தளவிற்கு இது திட்டமிடப்பட்ட மாநாடாக அமைந்துவிட்டது. எதிர் காலங்களில் இம்மாநாட்டின் செயல் முறைகள் நமக்கு வழிகாட்டும் திசைக் கருவியாக விளங்கிடும். தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஜனவரி 19 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

அன்றுதான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இம் மாநாட்டை அறிவிக்கிறார்கள். அறிவிப்பு வெளியான அக்கணமே, தோழர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கிறார்கள். மாநாட் டுச் சீருடை அணிவகுப்பில் மூவாயிரம் தோழர்களைப் பங்கேற்கச் செய்வது எனவும் , குறைந்தது - 15 இலட்சம் ரூபாய் நன்கொடைத் திரட்டுவது என்றும் தீர்மானிக்கிறார்கள்.

அதற்கு முன்னோடியாக 24.02.2013 அன்று 12 மாவட்டங்கள் பங்கேற்ற, மதுரை - திருநெல்வேலி மண்டலக் கூட்டம் இராஜபாளையத்தில் நடைபெறுகிறது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் பங்கேற்ற அக்கூட்டத்தில் நன் கொடையாக 1,48,000 அறிவிக்கப்பட்டது.

இதில் இளைஞரணியின் அறிவிப்பு மட்டும் ரூபாய் 80 ஆயிரம் ஆகும். அறிவிப்பு மட்டுமல்ல, 50 ஆயிரம் ரூபாய் அங்கேயே வசூலாகி, சாதனையானது. அதன் மூலம் சுவரெழுத்துகள் முடுக்கிவிடப்பட்டன. தெற்கின் 12 மாவட்டத்திற்கும், மாநாட்டின் சார்பாகவே எழுதப்பட்டன. அவைகளின் எண்ணிக்கை 50, 100 இல்லை, 300 க்கும் மேற்பட்ட சுவரெழுத்துகள்.

தென்மாவட் டங்களை அழகுறச் செய்து, அதிரச் செய்த பணிகள் அவை. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுவ ரெழுத்துகள் பரவத் தொடங்கின. தஞ்சாவூர் நகரில் மட்டும் 22 இடங்களில் இராஜபாளையம் பெருமைப் பேசப்பட்டது.

இவை ஒருபுறமிருக்க மானமிகு கலி.பூங்குன்றன், வீ.அன்பு ராஜ், இரா.செயக்குமார் உள்ளிட்ட 10 பேர் ஒருங்கிணைப்புப் பணி ஏற்கிறார்கள். தென்மாவட்டப் பொறுப்பாளர்கள் 8 பேர் வரவேற்புக் குழுவில் இடம் பெறுகிறார் கள். இதன் உறுப்பினர்களாக 12 மாவட் டத்தைச் சார்ந்த 67 பேரும், விளம்பரக் குழுவிற்குத் தனியாக 20 பேரும் நியமிக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் வேகமெடுக்கத் தொடங்குகின்றன.

கலந்துரையாடல் கூட்டம் நடத்த வலியுறுத்தியும், சமூகக் காப்பணி, சீருடை அணிவகுப்புக்கு இளைஞர்களைத் தயார் செய்திடக் கோரியும், விளம்பரங்களை வேகப்படுத்தத் தூண்டியும் தமிழகம் முழுவதும் கடிதங்கள் பறக்கின்றன, பொதுச் செயலாளர் அன்புராஜ் அவர்கள் மூலம். இதில் ஏற்கனவே மாநாட்டின் சமூகக் காப்பணியில் பங்கேற்ற 80 தோழர்களுக்கும் கடிதங்கள் செல் கின்றன.

அதனைத் தொடர்ந்து 24.03.2013 அன்று மாநில இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.

அங்கு இரு அணிகளும் பட்டைத் தீட்டப்பட்டு, கூராக்கப்படுகின்றன. இதற்கிடையில் 06.07.2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் மாநாட்டு அணி வகுப்புப் புகைப்படத்தை விடுதலையில் வெளியிட்டு, இதுபோல தோழர்கள் ஆயத்தமாக வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். இப்பெரு முயற்சி யினால் 105 தோழர்கள் சமூகக் காப்பணியில் பங்கேற்கின்றனர்.

திருச்சி புத்தூர் மாளிகையில் நடைபெற்ற இப் பயிற்சியை, பல்வேறு பணிகளுக்கிடையே யும் தமிழர் தலைவர் அவர்கள் பார்வை யிட்டுப் பாராட்டிச் செல்கிறார்கள். தொடர்ந்து சமூகக் காப்பணித் தோழர்களுக்குப் பெரியாரியல் வகுப்பு 25.04.2013 தொடங்கி 03.05.2013 வரை நிகழ்த்திப் புத்துயிர் ஊட்டப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

பிறகு மாநாட்டை பெரு வெற்றியாக்கிட 3 மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக் கிய சென்னை மண்டலம், 5 மாவட்டங் களை உள்ளடக்கிய வேலூர் மண்டலம், 3 மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டலம், 5 மாவட்டங்களை உள்ளடக் கிய கோவை மண்டலம் மற்றும் திருவா ரூர், நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, திருச்சி, இலால்குடி, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களிலும் தோழர்கள் கலந்து பேசி, மாநாட்டைச் சிறப்பாக்க முடிவு செய்கின்றனர்.

கண்ணைக் கவரும் அழகிய சுவ ரொட்டிகள் ஆறாயிரம் தயார் செய்யப் பட்டு, மாநாட்டிற்குப் பத்து நாள்களுக்கு முன்னரே தமிழகம் முழுக்க வழங்கப் படுகிறது. அழைப்பிதழ்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு திராவிடர் கழக நிர்வாகிகள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவரணி, வழக்கறி ஞரணி, விவசாய அணி, தொழிலாள ரணி, பொதுக்குழு உறுப்பினர்கள் என எந்த ஒருவரும் விடுபடாதவாறு 1500 -க்கும் மேல் அனுப்பப்படுகிறது.

அதுமட்டுமின்றி மாநாட்டுப் பொறுப் பாளர்கள் தமிழ்நாட்டின் 60 கழக மாவட்டங்களோடும் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்கள். மாநாடு நெருங்கி வரும் வேளை. ஏப்ரல் 15 ஆம் தேதி இராஜபாளையத்தில் நன்கொடை பணியைத் தொடங்குகிறார்கள். அவர் களுக்குத் தேவைப்பட்டது 20 நாட்கள் மட்டுமே.

சிவகாசி, விருதுநகர், திருத் தங்கல், அருப்புக்கோட்டை, சாத்தூர், சங்கரன்கோயில், ராயகிரி, வாசுதேவ நல்லூர், சேத்தூர், வத்திராயிருப்பு, தளவாய்புரம், திருவில்லிபுத்தூர், இராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் பொறுப் பாளர்கள் வேகமெடுத்தும், இதே பகுதி களின் கடைத் தெருக்களில் தோழர்கள் திரண்டு சென்றும் நன்கொடை பணி களை முடிக்கிறார்கள். இதுவன்றி, சில முக்கியஸ்தர்கள் தனியே பெருந்தொகைகளையும் வசூ லித்து மாநாட்டின் மிச்சமாக அறிவிக்கத் திட்டமிட்டனர்.

இதனிடையே தமிழகம் முழுக்கவுள்ள நம் தோழர்களுக்கு இராஜபாளையம் நினைவில் வந்து கொண்டே இருக்கிறது. நினைவூட்டும் அந்தப் பணியை விடுதலை விடாமல் செய்தது. குறிப்பாக 29.04.2013 அன்று, சிறைக்கு அனுப்பிட தீர்மானிக் கும் மாநாடு! ஜாதி ஒழிப்புக்குப் போர்ச் சங்கு ஊத இராஜபாளையம் நோக்கி வாரீர்! வாரீர்! தோழர்களே!!, என்கிற ஆசிரியரின் அறிக்கை எவரையும் அவரின் சொந்த ஊரில் இருக்கவிடவில்லை.

இவ்வளவு சிறப்போடு ஏற்பாடுகள் முடிந்தன. பொழுது விடிந்தால் மாநாடு. அந்திசாய்ந்த அந்த நேரத்தில் காவல் துறை அழைக்கிறது. பேரணிக்கு அனுமதி இல்லை. கூட்டம் நடத்தி விட்டுப் போங்கள், என்கிறார்கள். எந்த ஒன் றுக்கும் பதறுவதும், சிதறுவதும் தோழர் களுக்குப் பழக்கமில்லையே! எங்குமே காணக் கிடைக்காத நம் கழக அணுகு முறைக்குத் தோல்வியும் ஏற்படுமோ? வெற்றி தான் கிடைத்தது.

பொழுது விடிந்தது! மாநாடு பிறந்தது! அது எப்படியெல்லாம் மலர்ந்தது என்பதைக் கண்டு இரசித்தோம். இராஜபாளையத்தை விட்டு எல்லோரும் ஊருக்குப் போய் விட்டார்கள். ஆனாலும் இராஜபாளை யத்தை விட்டு வெளிவர முடியவில்லை. திட்டமிட்டு செய்தால் எல்லாமே சாத்தியம்தான்! இப்போது சொல்லுங்கள், மாநாடு நடத்துவது எளிதா இல்லையா ?

தமிழ் ஓவியா said...


பெரியார் பிஞ்சு பழகு முகாமின் நான்காவது நாளில் இன்பச் சுற்றுலாவில் - உற்சாகத்தில் ஊறித் திளைத்த பெரியார் பிஞ்சுகள்!


புகைவண்டியில் மாணவர்கள் உல்லாச சவாரி

தஞ்சை, மே 10- மாமன்னன் சரபோஜியின் அரண் மனை, அதிலுள்ள அரிய நூலகம், கலைக்கூடம், சிவகங்கை பூங்கா என்று இன்பச் சுற்றுலா சென்ற பெரியார் பிஞ்சுகளின் உற்சாகம் இறக்கை கட்டிப் பறந்தது.

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகுமுகாம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகளை மெருகேற்றிக் கொண்டே இருந்தது. முக்கியமாக ஆக்கபூர்வமான கேள்விகளை கேட் பதில் நல்ல வளர்ச்சி தெரிந்தது. தக்க பதில்களும் அவ்வப்பொழுது சொல்லப்பட்டுக்கொண்டே இருந்தது. ஆக, செவிக்கும் சரி - அதாவது அறி வுக்கும் சரி, வயிற்றுக்கும் சரி, உடல்நலத்துக்கும் சரி, முக்கியமாக நட்புக்கு - பழகுமுகாமின் மய்யக் கருத்தான பழகுவதில் - குழந்தைகள் ஒருவரை யொருவர் மிஞ்சினர்.


செயற்கை நீர் ஊற்றுப் பூங்காவில் பெரியார் பிஞ்சுகள் உற்சாக மிகுதியுடன் குளித்து மகிழ்ந்தனர்

நேற்று (9.5.2013) பெரியார் பிஞ்சுகள் இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்கள் இருக்கும் இடமே பெரியார் பிஞ்சுகளுக்கு இன்பச் சுற்றுலாதான். இதில், அவர்களுக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்றால்... அவர்களின் உற்சாகத்தால், இன்பச் சுற்றுலாவாக மாறிப் போனது.

பழகுமுகாமின் வழக்கப்படி, அதிகாலையில் எழுந்து தயாராகி நடைபயிற்சி முடித்து, யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளைக் கற்றுக் கொண்டு, காலை உணவு முடித்து, எப்போது... எப்போது... என்று பரபரத்துக் கிடந்தனர். ஒழுங்கு முறைப்படி வரிசையாக நின்று, பேருந்தில் ஏறுங்கள் என்று சொன்னதுதான் தாமதம், ஹேய்... என்ற உற்சாகப் பிளிறலோடு ஏறிக் கொண்டனர்.

வியப்பை இரட்டிப்பாக்கியது மாமன்னன் சரபோஜியின் அரண்மனை

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைக் காட்டியபடியே இருக்க, பேருந்து சரபோஜியின் அரண்மனைக்கு வந்தது. அடேயப்பா... பெரியவர்களே மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் ஆகியவற்றை கதைகளில்தான் படித்திருப்பார்கள்.

அதையே நேரில் கண்டால், இவர்களின் நிலையே இப்படியென்றால், குழந்தை கள்... வியந்து வியந்து துருதுருவென்று ஆசையாக சுற்றிப் பார்த்தார்கள். அங்கு சரஸ்வதி நூலகத்தில் 1712-1728 இல் ஆண்ட முதலாம் சரபோஜியின் மா...பெரும் ஓவியம், அந்தக் காலத்தில் பயன் படுத்திய கனமான ஈட்டி, துப்பாக்கி, 300 ஆண்டு களுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்ட அரிய ஓலைச் சுவடிகள், சார்லஸ் -லீ- புரூன் வரைந்த மனிதன், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கிடையே இருந்த முக ஒற்றுமை ஓவியங்கள், சரபோஜி சேகரித்த நூல்கள், அரிய ஆங்கில அகராதி, இன் னும்... இன்னும்... ஏராளமான வரலாற்று ஆவணங் களை பார்த்துவிட்டு, அரண்மனையில் கலைக் கூடத்திற்கு சென்றனர்.

காலையில் எழுந்தவுடன், பெரியார் பிஞ்சுகளுக்கு யோகா பயிற்சியும், சிலம்பும் சுற்றும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது

அங்கே... மா..பெரும் திமிங்கிலத்தின் எலும்புக்கூடு வைக்கப்பட்டி ருந்தது. திறந்த வாய் மூடவேண்டுமே - அதன்பிறகு, அரிய சிலைகளின் மாட்சி, தர்பார் கூடம் தந்த மிரட்சி ஆகியவற்றோடு முடித்துக்கொண்டு, பேருந்தில் அதே ஒழுங்குமுறையோடு மீண்டும் புறப்பட்டனர்.

சின்னூண்டு ரயிலும், சின்னஞ் சிறுசுகளும்!

பேருந்து சிவகங்கை பூங்காவிற்கு வந்ததுமே பெரியார் பிஞ்சுகள் சிட்டுக்குருவிகளாக மாறிப் போயினர். ஏனென்றால், அங்குதான் நீச்சல் குளம் இருந்தது. உள்ளே நுழைந்த உடனே, அனை வருக்கும் சுவையான இனிப்பு (கேக்) மற்றும் நீர் மோர், தர்பூசணி ஆகிய நீராகாரங்கள் தரப்பட்டன. அங்கே மரத்தின் மீதிருந்த ஆண் மயில், இந்த சிட்டுக் குருவிகளின் கூடுதல் இன்பத்திற்கு இலக் கானது. அதைத் தொடர்ந்து, சின்னூண்டு ரயிலில், சிவ கங்கை பூங்காவை வலம் வந்தனர். நரிகள், முயல்கள், சில பறவைகள் ஆகியவை பயணிகளின் பார்வைக்கு இலக்காக்கியிருந்தனர் பூங்கா நிர்வாகிகள்.

உற்சாகத்தில் ஊறித் திளைத்த பெரியார் பிஞ்சுகள்

தமிழ் ஓவியா said...


செயற்கை நீர் ஊற்று பூங்கா முன்பாக அனை வரும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். அங்கே யும் மீண்டுமொரு முறை தர்பூசணி கொடுக்கப் பட்டது. வில்லிலிருந்து புறப்படும் அம்பின் நிலையில், பெரியார் பிஞ்சுகள் இருந்தனர். ஒருவழியாக நடைமுறைகள் முடிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.

அவ்வளவுதான்... மீண்டும் ஹேய்... என்னும் உற்சாகப் பிளிறல். அவர்களை ஒழுங்கு செய்வதற்காக, அழகிரி, பிரின்சு, உடுமலை, துரை, முனைவர் அதிரடி. அன்பழகன் மற்றும் பெரியார் மணியம்மை பல் கலைக் கழக மாணவர்கள் என்று அவர்களுட னேயே இருந்து, இரண்டு மணிநேரம் உற்சாகத்தில் ஊறித் திளைத்த அவர்களை ஒருவழியாக படாத பாடுபட்டு, கரைக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அங்கேயே மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

சிற்றுண்டி தந்த வள்ளல்கள்

மதிய உணவுக்குப் பிறகு அனைவருக்கும் சுவையான அய்ஸ் கிரீம் வழங்கப்பட்டது. அய்ஸ் கிரீமை தஞ்சை செழியன் தங்கமாளிகை உரிமையா ளர் இளஞ்செழியன் அவர் கள் கொடையளித்திருந் தார். அதேபோல, திரா விடர் கழகத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் அமர்சிங் லட்டு வழங்கி மகிழ்ந்தார் இனிப்பு (கேக்), பலாப் பழம் ஆகியவற்றை பட் டுக்கோட்டை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் வழங்கி மகிழ்ந்தார்.


காலையில் எழுந்தவுடன், உடற்பயிற்சி செய்யும் பெரியார் பிஞ்சுகள்

திரா விடர் கழகத்தின் தஞ்சை நகர செயலாளர் பழக் கடை கணேசன் தர்பூசணி வழங்கி குழந்தைகளை மகிழ்வித்து தானும் மகிழ்ந் தார். இந்த சுற்றுலா நிகழ் வில் துணைத் தலை வர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், தஞ்சை மாவட்டச் செய லாளர் அ.அருணகிரி, தஞ்சை மாவட்ட நகர அமைப்பாளர் வெ.ரவிக்குமார், தஞ்சை மாவட்ட மாணவரணிச் செயலாளர் இரா.தர்ம சீலன், பேரா.பர்வீண், புதுவை பா.வீர மணி, தஞ்சை மகளிர் அணி செயலாளர் கலைச் செல்வி, செழியன் தங்க மாளிகையின் உரிமையாள ரின் சகோதரரும், முதன்மை, கல்வி அலுவலக கண்காணிப்பாளராகவும் உள்ள திருமாவளவன், மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரத்தின செல்வன், யோகா ஆசிரியர் முரளீதரன், உடற்பயிற்சி ஆசிரியர் ஹேமலதா மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுலாவை இனிமையாக்கினர்.

இன்பச் சுற்றுலாவை இனிதே முடித்துக் கொண்டு மீண்டும் பெரியார் மணியம்மை பல் கலைக்கழக வளாகத் திற்கு பேருந்து திரும்பியது. ஆடித் தீர்த்திருந்ததாலும், குழந்தைகள் ஆவலுடன் முதலுதவி செய்து கொள் வது எப்படி என்று கற்றுக் கொண்டனர். இந்த வகுப்பை சி.துளசி துரை மாணிக்கம் என்பவர் ஒழுங்கு செய்தார். அதைத் தொடர்ந்து, அனைவருக் கும் சத்தான, சுவையான சிற்றுண்டி கொடுக்கப்பட் டது.

சுற்றிலும் மரங்கள். அந்த மரங்களின் ஊடே பச்சை பாய் விரித்தது போன்ற புல்தரை. சுகமான தென்றல் காற்று. இதுதான் முத்தமிழ் அரங்கம் மாலை வேளையில் இங்கு வருவ தென்பதே குழந்தைக ளுக்கு அப்படியொரு விருப் பம். இன்றும் அதேபோல் சாத்தூர் சரவணபெருமா ளின் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழ் ஓவியா said...

வழக்கறிஞர் அமர்சிங் அவர்கள் பயிற்சி முகாம் மாணவர்களுக்கு லட்டு வழங்கினார்

தொடக்கத்திலேயே, அவரை விதை போட்டா துவரை முளைக்கும், துவரை விதை போட்டா அவரை முளைக்கும் அப்படி ஒரு பூமி என்று ஒரு கதையைச் சொல் லிவிட்டு, கேட்பவனுக்கு புரியவில்லை என்றால், அது தத்துவம். சொன்னவனுக்கே புரியவில்லை என்றால் அது மகா தத்துவம் என்று சொன்னார். தொடர்ந்து, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வந்தபிறகு இங்குள்ள மரங்களின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, தான் எழுதிய கவிதை ஒன்றை ராகத்தோடு பாடினார்.

அது, மரங்கள்! மரங்கள்! மரங்கள்!, இயற்கை கொடுத்த வளங்கள்! வாழ்க்கையைக் காக்கும் கரங்கள்!, மனிதம் செழிக்க உரங்கள்! என்பதுதான். இந்த கவிதையை பாடலாக அவர் பாடிய போது, தம்மையறியாமல் பிஞ்சுகள் பாடலுக்கேற்றபடி கைகளால் தாள மிட்டு மகிழ்ந்தனர்.


முதலுதவி செய்து கொள்வது எப்படி என்ற பயிற்சி கொடுக்கப்பட்டது

அதைத்தொடர்ந்து, தாயின் பெருமையைச் சொல்லுகின்ற ஈரய்ந்து மாதங்கள் எனைத் தாங்கினாய், நான் எழுந்தோடி விளையாட தினம் ஏங்கினாய், புரியாத மழலைக்கு பொருள் கூறினாய், நான் பொய்யாக விழும்போதும் தடுமாறினாய் என்று பாடி, ஒவ்வொருவரையும் தங்கள் தங்கள் தாயின் பெருமையை நினைக்கச் செய்தார்.

அதைத்தொடர்ந்து, அரண்மனை புரோகிதனின் கதையைச் சொன்னார். மனைவியிடம் தற்பெருமை யாக மன்னனிடமருந்து யானை வாங்கி வருகிறேன் என்று சொல்லி, இருக்கின்ற குடுமியையும் சிரைத் துக்கொண்டு திரும்பிய கதையைச் சொல்லி, வேதம் படிச்சிட்டா எல்லாம் தெரிந்ததாக ஆகாது. பெரியார் சொன்னபடி எதையும் ஏன்? எதற்கு? எப்படி? - என்று கேள்வி கேட்க வேண்டும். அப்படிக் கேட்கவில்லை என்று கேள்வியோடு நிறுத்தி, ஆறறிவில் ஓரறிவு அவுட்டு. இருக்கும் அய்ந்தறிவும் நிலைக்குமானால் - எதுவும் கூட டவுட்டு.

என்று மருதகாசி எழுதிய பாடலைப் பாடிக் காட்டினார். தொடர்ந்து தாத்தா பாட்டி யிடம் கதைகள் வேண்டும். கதைகள் என்றாலே கற்பனைதான். கற்பனை மிகவும் அவசியம். கற்பனை (கிரியேட்டிவிட்டி) இல்லாத சமுதாயம் முன் னேறாது. ஆகவே, தொலைக்காட்சி முன்பு உட் கார்ந்து, உங்கள் கற்பனைத் திறனுக்கு திரை போட்டுக் கொள்ளாதீர்கள் என்று கூறி முடித்துக் கொண்டார்.

பெரியார் திரைப்படமும் பெரியார் பிஞ்சுகளும்

அதிகாலை எழுந்ததிலிருந்து, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கற்று - பெற்று, உண்டு - கண்டு களித்தும் கூட அவர்கள் மறக்காமல், பெரியார் திரைப் படத்தின் மீதியை எங்களுக்கு காட்டுங்கள் என்று போர்க்கொடி தூக்கிவிட்டனர். பிறகென்ன, உண்டுகொண்டே இடைவேளையிலிருந்து பெரியார் திரைப்படத்தை பார்த்து ரசிவித்துவிட்டு உறங்கச் சென்றனர். நான்காம் நாள் எப்பொழுது தொடங்கியது, எப்போது முடிந்தது என்றே தெரியாமல் நிறைவு பெற்றது.

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி, மே. 10- மன்னார் குடி நகர திராவிடர் கழகத்தின் சார்பில் போர்குற்றவாளி யார் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் சிலை அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

11.04.2013 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடை பெற்ற கூட்டத்திற்கு தி.க. மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித் தார்த்தன் தலைமை வகித்தார்.

திருவாரூர் மண்டலத் தலை வர் இரா.கோபால், கோட்டூர் ஒன்றிய தலைவர் வீ.புட்பநா தன், மன்னை நகர பகுத்தறிவா ளர் கழக செயலாளர் கோவி. அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வம் கலந்து கொண்டு போர் குற்றவாளி யார் என்ற தலைப்பில் பேசிய போது: சிறு மக்கள் தொகை கொண்ட வாடிகண் நகர் தனி நாடாக இருக்கும்போது, இலங் கையில் 35 லட்சம் பூர்வீக மக்கள் உள்ளிட்ட 50 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் தனித் தமிழீழம் கேட் பதில் என்ன தவறு இருக்க முடியும்.

இலங்கை தமிழ் தலை வர்கள் செல்வா, பொன்னம்ப லனார் போன்றவர்கள் பல ஆண்டுகள் காந்திய வழியில் போராடியும் உரிமை மறுக்கப் பட்டதுடன், ராணுவம், காவல், ஆட்சி, நிர்வாகம், கல்வி, அர சியல் என அனைத்து துறைகளி லும் தமிழர்களை பங்கேற்க விடாமல் உரிமைகள் பறிக்கும் வகையில் புதிய சட்டத்திட்டங் களை இலங்கை அரசு கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய பின்தான் அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் ஒருங்கிணைந்து தமிழ்ஈழ தேசிய இராணுவத்தை தம்பி பிரபாகரன் தலைமையில் அமைத்து உரிமைகளை மீட் டெடுக்க ஆயுதப் போராட் டத்தான் ஒரே வழி என முடிவுக்கு தள்ளப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கி தனி இராணுவம், தனி ஆட்சி, தனி சட்டம் என நடைமுறைப் படுத்தி வந்தனர்.

திராவிடக் கட்சிகளுடன், அதன் தலைவர்களிடமும் கொள்கை அளவில் வேறுபட்டு நின்றாலும், இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை உள்ளிட்ட தமி ழர் உரிமை சார்ந்த பிரச்சி னைகளில் காங்கிரஸ் கட்சி முதல்வராக இருந்த காமராஜர், பெரியார், அண்ணா ஆகி யோரின் கருத்துகளை வழி மொழிந்தார்.

இலங்கையை மையப்படுத்தி அமெரிக்கா இலங்கையை மையப்படுத்தி அமெரிக்கா இராணுவத் தளங்களை அமைத் தப் போது இது இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என உணர்ந்து இந்திராகாந்தி, விடு தலைப்புலிகளுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் பயிற்சி முகாம் அமைக்க அனுமதி அளித்தார்.

இதுபோன்ற இராஜதந்திர அனுகுமுறையினை காங்கிரஸ் கட்சி பின்பற்றி தெற்கு சூடான் சுதந்திர நாடாக ஆனதற்கு துணை நின்றது போல் தனிஈழம் மலர இலங்கையில் பொது வாக்கெடுப்பு வேண்டும் என்ற தீர்மானத்தை இந்தியா முன் மொழிய வேண்டும் என்றார்.

ஈழப்பகுதியில் எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாத்திடவும், ஈழதமிழர்களின் உடமை, குடியிருப்பு, விளைநிலங்களை மீட்கவும், அவர்கள் விரும்பும் பொதுவாக்கெடுப்பை நடத்தி தனி தமிழ்ஈழம் உருவாகிடவும், சர்வதேச போர் விதிமுறைகளை மீறி ஆயிக்கணக்கான தமிழர் களை கொன்று குவித்த கொடுங் கோலன் இலங்கை அதிபர் இராசபக்சேவையும் போர் குற்றத்திற்கு துணை நின்று இராணுவ உதவி செய்த நாடு களும் போர் குற்றவாளியாக அறிவிக்கும் காலத்தை விரை வில் டெசோ அமைப்பு மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் கவ னத்திற்கு கொண்டு சென்று உலக அமைதியை விரும்பும் நாடுகளின் உதவியுடன் நிறை வேறும் என்றார்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து பேராவூரணி - சேதுபாவாசத்திரத்தில் இணையதளம் வலைப்பூ தொடக்கம்


பேராவூரணி, மே 10- திராவிடர் கழக இளை ஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவ ரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண் டும். அதனடிப்படை யில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச் சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும், நமது இயக்க நடவடிக் கைகள், முக்கிய உரை கள், தீர்மானங்கள் பற் றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுது வது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல்படு வது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம் என்று ஆசிரியர் 7.5.2013 விடு தலையில் இறுதிப் பக் கத்தில் அறிவிப்பு விடுத் துள்ளார்.

5 ஆகஸ்ட் 2012 அன்று பேராவூரணி-சேதுபா வாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பாக இணையதளம் தொடங்கபட்டு செயல் பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொள்கிறேன்.

இணையதள முகவரி: http://dkperavurani. blogspot.in/

டிவிட்டர் முகவரி : https://twitter.com/dkperavurani

இரண்டு ஒன்றியங்க ளின் சார்பாக நடை பெறும் பிரச்சாரங்கள், தோழர்கள் கலந்து கொள் ளும் பிரச்சாரங்கள், புதி யவர்களுக்கான விஷயங் கள் என நிறைய தகவல் களைக் கொடுத்துள் ளோம். தொடர்ந்து இணையதளம் சிறப் பாக செயல்படும் என்று பட்டுக்கோட்டை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீல கண்டன் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜவகர்லால் நேரு

வடநாட்டுப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த - மறைவெய்திய ஜவகர்லால் நேரு தமது புகழ்பெற்ற இந்தியாவைக் கண்டுணர்தல் எனும் நூலில், இந்து மதம் என்பது யாது? எனத் தாமே கேள்வி எழுப்பிக் கொண்டு தந்துள்ள விடை அருமையானது.

இந்து எனும் சொல் நமது பழைமையான இலக்கியங் களில் காணப்பெறவேயில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது; ஒழுங்கான உருவமைப்புப் பெறாதது; பல்வகைத் தோற்றக் கூறுகள் உடையது;

எல்லா மக்களுக்கும் எல்லாச் செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது - வழக்கிலுள்ள கருத்தின் படி - ஒரு மதமா, இல்லையா என மெய்யாகவே உறுதிமொழிவதோ இயலும் செயலன்று.

“what is Hinduism? The word Hindu does not occur in all our ancient literature...Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. It is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word” (Discovery of India : page 108).

தமிழ் ஓவியா said...


பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன். நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்லவில்லையே?

ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார். நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப் படுகிறது - இவ்வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஆதாரம்:

(வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்)

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்துமதம் என்ற ஒன்று கிடையாது!


(கல்கியில் 5.11.1972 காஞ்சி காமகோடி பீட சங்கராச் சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதியதாவது:)

இப்போது ஹிந்துமதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்து என்று சொல்லுகிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல் நாட்டுக்காரர் சிந்து நதியை கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் சிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை ஹிந்து என்றும் குறிப்பிட்டார்கள்.

ஒரு தேசத்துக்குப் பக்கத்தில் உள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவ நாடு என்பதும் கூட இதே மாதிரிதான். ஆந்திர தேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அர்வா தேசம் என்று பெயர்.

இந்த முறையில்தான் சிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர் களும் பாரத தேசம் முழுமையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர். தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே... அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

ஜெயேந்திர சரஸ்வதி

சென்னை மார்ச் 6 (1976) வேதமதம்தான் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது என்றும்; ஆரம்ப காலத்தில் இதற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது என்றும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி பேசுகையில் கூறியதாவது:

இந்து மத மாநாடு என்ற பெயரில் இந்த மாநாட்டைக் கூட்டாமல், வேத மாநாடு அல்லது சனாதன மாநாடு என்றே கூட்ட வேண்டும். எனக்கு பலர் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்து என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு.

நமது மதத்துக்கு இந்து மதம் என்று பெயரில்லை; மதத்திற்கு ஏதாவது ஒரு பெயரைச் சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்து மதம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேதமதம்தான் நமது மதம். இந்த வேதம் என்ற சொல்லைத்தான் மற்ற மதத்தினர் பயன்படுத்திக் கொண்டனர். - இவ்வாறு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


தீர்மானம்


அடுத்தாற்போல் வரும் மக்கள் எண் ணிக்கைக் கணக் கெடுக்கும் சென் ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திரா விடர்கள் என்றே சொல்ல வேண்டு மென்றும், இந்துக் கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக் காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.

(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)

தமிழ் ஓவியா said...


சிவன்கோயில்களில் பூசை செய்ய பார்ப்பனருக்கு அதிகாரமில்லை!


சிவாலயங்களில் பூசை செய்ய, தன்னைப் பிராமணர் என்று சொல் லிக்கொள்ளும் சுமார்த்தப் பிரா மணர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி அவர்கள் பூசை செய்வார்களேயானால் நாட்டுக்குப் பெருங்கேடு என்று ஆகமங்கள் கூறுவ தாக நீதிபதி மகராசன் தலைமையில் அமைந்த குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதன் விவரம் இதோ:

1. சில சொற்பொருள்கள்

பிராமணர் என்ற பெயர் ஜாதி அடிப்படையில் அல்லாமல், பிரம் மத்தை உணர்ந்தவன் என்ற அடிப் படையில் தான் வழங்கப்பட்டது.

பட்டர் என்ற சொல், சாத்திரத்தை நன்கு உணர்ந்தவர் ஞானி, தபோதனர், பூசகர் என்ற பொருளைக் கொண்டது என்று சப்தகல்பத்ருமம் என்னும் வடமொழி நிகண்டில் (பக்கம் 478, பாகம் 3) விளக்கப் பெற்றிருக்கிறது.

அவ்வாறு அல்லாமல், தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொண்டு ஜீவிப்போரை பிராம்மணப்ருவன் (சொல் மாத்திரத்தில் பிராமணன்) என்று அதே சப்தகல் பத்ருமத்தில் (பக்கம் 460. பகுதி 3) சொல்லப் பட்டுள்ளது. வாழ்க் அந்தணர் (திருஞான சம்பந்தர் தேவாரம்) அந்தணர் என்போர் அறவோர் (திருக்குறள்) என்ற தொடர்களில் அந்தணர் என்ற சொல் ஜாதியின் பாற்பட்டதல்ல என்பது ஆன்றோர் கருத்து.

பேர் கொண்ட பார்ப்பான் (திருமூலர்) பரார்த்த பூசையில் சிவனைத் தீண்டினாலும் பூசித்தாலும் தேவலகத்துவதோஷம் (ஊதியத்துக் காகப் பூசை செய்தல் என்ற குற்றம்) பிறக்கும். பரங்கில்லை தீண்ருப் பரார்த்தம், அவர் தீண்டில் தீங்கு உலகுக்காம் என்றதேறு என்ற மறைஞான சம்பந்தர் சைவ சமய நெறி என்ற நூலில் (பாடல் 437) கூறியுள்ள கருத்து அறிதற்பாலது.

2. சிவாச்சாரியாரும், சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப்பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமானுடைய அய்ந்து முகங் களிலிருந்து தோன்றி, சிவபிரானையே வழிபடுகிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களிலிருந்து தோன்றிய பிர மத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவசிருஷ்டியின் பாற்பட்ட சிவப் பிராமணர் அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன்றி சுமார்த்தப் பிராமணர் சிவாலயங்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே, சிவாலயங்களில் பரார்த்த பூசை ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக்கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக்கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதிசைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதிசைவர். ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர்.

இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம் மணோத்தமர் சர்வ காரியங்களிலும் சிவயாகத்திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதிசைவர்களே அதிகாரமுடையவர். ஏனையோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு பக்கம் 31-32)

- மகராசன் குழு அறிக்கை, பக்கம் 7,8

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார்

நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார் சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் திருக் கண்டேசுவரத்தைச் சேர்ந்தவர் ஜம்புலிங்க முதலியார். இவர் கடலூர் நகராட்சித் தலைவர், ரெயில்வே வாரியத் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரது சிறப்பு மிக்க பொது நலப்பணிகளைப் பாராட்டி அப்போதைய ஆங்கில அரசு, ராவ் பகதூர் என்ற சிறப்புமிக்க விருதினை வழங்கிக் கவுரவித்தது.

மிகப்பெரிய நிலக்கிழாரான இவர், தனக்கு சொந்தமான வயலில், 1934ஆம் ஆண்டு ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது கறுப்பு நிற பொருள் தண்ணீருடன் கலந்து வெளியேறு வதைக் கண்டறிந்து அத்தகவலை அப்போதைய ஆங்கில அரசின் மண்ணியல் துறைக்கு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அப்போதைய ஆங்கில அரசு, சுரங்கப் பொறியாளர் களையும், மண்ணியல் நிபுணர்களையும் நெய்வேலிக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அப்பகுதியின் அடியில் இருக்கும் தனிமம் நிலக்கரி குடும்பத்தின் ஒரு வகையைச் சேர்ந்த பழுப்பு நிலக்கரி என்று கண்டறியப்பட்டது.

ஜம்புலிங்க முதலியார் சுரங்கம் வெட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக தனக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கிய துடன் அவரது சீரிய முயற்சியின் மூலம் அப்போதைய சென்னை மாகாண முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் மூலம், 1953ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசின் தொழிற் துறையால் நிலக்கரி வெட்டியெடுக்கும் திறன் கொண்டது.

பின்னர் இந்த நிறுவனத்தை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொணர்ந்து, 14.11.1956ம் ஆண்டு மத்திய பொதுத்துறை நிறுவனம் உதயமானது. பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வால் 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.

இன்று, என்.எல்.சி. நிறுவனம் ஆண்டிற்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்து, ஒரு மணி நேரத்தில் சுமார் 27லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு பன்மடங்காக வளர்ச்சி பெற்றுள்ளது. நவரத்னா தகுதி பெற்றுள்ள இந்த நிறுவனம் உருவாக வித்திட்ட ஜம்புலிங்க முதலியாரை கவுரவப்படுத்தும் வகையில் நெய்வேலி நகரியத்தில் உள்ள ஒரு பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது.

அவருக்கு மேலும் புகழாரம் செலுத் தும் வகையில் நெய்வேலி நகரியத்தில், நான்கு வட்டங்கள் சந்திக்கும் மிக முக்கிய பகுதியான இரட்டை பால சதுக்கத்தில் ஜம்புலிங்க முதலியாரின் முழு உருவ வெண்கலச் சிலை ரூ. 9 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ளது. அவரது சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜம்புலிங்க முதலி யாரின் பேரன் அமரன், பேத்தி ரஞ்சிதம் மற்றும் அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நெய்வேலி நகரியத்தின் 22-ஆவது வட்டத்தில், ரூ. 1 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ள நவ ரத்னா பூங்காவை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக் கப்பட்டுள்ள இப்பூங்காவில் சிறுவர் களுக்கான விளையாட்டு வசதிகள் மட்டுமல்லாது 54 வகை அறிவியல் உபகரணங்கள் அடங்கிய அறிவியல் பூங்காவும் இங்கு விரைவில் அமைக் கப்பட உள்ளது. 54 வகை அரிய வகை மூலிகைப் பண்ணை இங்கு அமைக்கப் பட்டுள்ளது. இப்பூங்காவின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சிகளில் என்.எல்.சி.இயக்குநர்கள் உயர் அதி காரிகள், தொழிற்சங்கம் மற்றும் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். எல்லாம் சரிதான்; அவர் நீதிக்கட்சிப் பிரமுகர் என்பதை இருட்டடித்தது - ஏன்?

தமிழ் ஓவியா said...


மாம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

மாம்பழம் நாவில் நீர் ஊற வைக்கும் சுவை கொண்டது மட்டு மல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸி டென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சி கரணிகள் நிறைய அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்றுநோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக் கொள் கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கருவுற்ற பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத் துடன் ரத்த சோகை உள்ளவர் களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப் பிடலாம் என்பது குறித்து மருத் துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர் களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத் திற்கும் உதவுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே.

நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டை யிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு!


நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கிலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஸ்டீபன்சன் என்ற கிருத்தவர் நீங்கள் மோட்டார் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஹென்றிபோர்டு என்ற கிருத்தவர்.

நீங்கள் கேமிராவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். அதனால் திரைப் படம் பார்க்காதீர்கள் நீங்கள் கிராமபோனை பயன்படுத்தாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். நீங்கள் வானொலியைக் கேட்காதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிருத்தவர்.

நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிருத்தவர். நீங்கள் அச்சுப்பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக்ஸடன் என்ற கிருத்ததவர். நீங்கள் பவுண்டன் பேனாவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மென் என்னும் கிருத்தவர்.

நீங்கள் டயரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிருத்தவர். நீங்கள் டெலிபோனைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிருத்தவர் நீங்கள் தையல் மிஷன் என்ற கருவியைப் பயன் படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தின்மானியர் என்ற கிருத்தவர்.

நீங்கள் டைப்ரைட்டரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிருத்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி யாகிறது. இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில், அது முஸ்லீம் நாடு இந்துக்களே! உங்கள் கால் கை உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள் ளாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிருத்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தைச் சேர்ந்த கிருத்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டு பிடித்ததும், கடைப்பிடிப்பதும் இந்து மதம்தான்.

தமிழ் ஓவியா said...


பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்


பதிப்பாசிரியர் : முனைவர் இராதா செல்லப்பன்
தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சிராப்பள்ளி -_ 620 024
பதிப்பு ஆண்டு: 2008
76ஆம் பக்கத்தில் இருப்பது:

நல்வாழ்வின் புள்ளி விவர அளவுகோல்கள்

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் (infant Mortality Rate, IMR) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (Under Five Mortality Rate, UMR) என்பவை ஒரு நாட்டின் சுகாதாரப் பணிகளின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

50 வருடங்களுக்கு முன்பு, பிறந்த 1000 குழந்தைகளில் 200 முதல் 250 குழந்தைகள் ஒரு வயதிற்குள் இறந்து போயின.

வயிற்றுப்போக்கு, சத்துணவுக் குறைபாடு, நுரையீரல் தொற்று (Diarrohea, Malnutrition, Respiratory Infection)
ஆகியவை குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணங்கள்.

ஆனால், தற்போது பல அறிவியல் கண்டுபிடிப்புகளால் இந்த இறப்புகள் மிகவும் குறைந்துவிட்டன.

தற்போது இந்தியாவில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு (IMR) 1000-க்கு 67.

தமிழ்நாட்டில் 1000-க்கு 53, நமது அண்டை மாநிலமான கேரளாவில் 1000-க்கு 14,
உத்தரபிரதேசத்தில் 1000க்கு 110, இந்தியாவில் 1IMR 1000க்கு 30க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிக்கோள்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1960-இல் 1000-க்கு 242 ஆக இருந்தது.

இது மிகவும் குறைந்து தற்போது 91ஆக குறைந்துள்ளது.

இவை நமது தற்போதைய மருத்துவ வளர்ச்சியின் வெற்றிப்படிகள்.

தொற்று நோய்கள் (Infectious Diseases), வயிற்றுப்போக்கு நோய்கள் மூலம் இறப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.

கொள்ளை நோய் என்று அழைக்கப்பட்ட பெரியம்மை (Small Pox), 1977ல் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

அம்மை நோய் தடுப்பு ஊசியின் மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

தகவல்: க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


சூத்திரமேட்டுத் தெரு!


ஆபரேட்டர் கோவிந்த ராசன் என்று கழகத் தோழர்களாலும், பொது மக்களாலும் அன்பொழுக அழைக்கப்பட்ட பெரியார் பெருந் தொண்டர் திருவை யாறு நகர திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் விளம் பரப் பிரிவில் ஆப்ரேட்டராகப் பணியாற்றியவர்.

அரசு பணியில் இருந்த போதும், கருஞ்சட்டை அணிந்து இயக்கப் பணி களில் தீவிரமாக ஈடுபட்ட அழுத்தமான பகுத்தறிவுக் கொள்கைக்குச் சொந்தக் காரர்!

அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு நேரடியாகக் கழகப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு சிறைச் சாலைக்கும் சென்றவர்.

தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்களையும் உடலையும் (தஞ்சை மருத் துவக் கல்லூரிக்கு) கொடை யாக அளிக்க முறைப்படி ஏற்பாடுகளைச் செய்து வைத் திருந்தார். அதன் படியே கொடையும் அளிக்கப்பட்டது.

தான், வாழ்ந்தபோது மாத்திரம் அல்ல; மரணத் திற்குப் பிறகும், தாம் ஏற்றுக் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைக்குச் சேதாரம் எந்த வகையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் செயல்படுத்தும் இந்தத் திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு உலகத் தில் ஈடு இணை ஏது?

நேற்று திருவையாற்றில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி - பொதுக் கூட்டமாக - பிரச்சார நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரி வித்த தகவலும் - கருத்தும் புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

மானமிகு ஆப்ரேட்டர் ப. கோவிந்தராசன் அவர்கள் வாழ்ந்து வந்த அந்தத் தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா? சூத்திர மேட்டுத் தெரு என்பதாகும்.

சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று பொருள். இப்படி ஒரு பெயர் பச்சையாக வைக்கப்பட்டு இருந்தது.

பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் கோவிந்த ராசன் போன்ற பெரியார் தொண்டர்கள் போராடி ஊராட்சி மன்றத்தில் தீர் மானம் நிறைவேறச் செய்து அதனைத் தமிழர் மேட்டுத் தெரு என்று மாற்றினார்கள் என்பது சாதாரண தகவலா?

திராவிடர் கழகம் என்ன செய்தது என்று கேட்கும் செவிட்டுத் தமிழர்களுக்கு இதனைக் காணிக்கையாக் குகிறோம். திருவையாறில் இன்னொரு தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா?

பிராமண மேட்டுத் தெரு என்பதாகும் - இன்றும் அதே பெயர்தான்! பார்ப்பனர் அல்லாதாரே, தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்


சென்னை, மே 11- இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தி.மு.க. தலைவர் கலைஞர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப் பதாவது:

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர் களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன் வெல்த் மாநாட்டினை இலங்கை யிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டு மென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரிய வில்லை. டெசோ இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களையெல்லாம் சந்தித்து, இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளையும் அதற் கான விளக்கத்தையும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

அதற்கு முன்பே, 25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங் கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக் காரணம் கொண்டும் அங்கு நடத் திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் காமன்வெல்த் மாநாட் டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடு கள் நடைபெற்ற வருகின்றனவாம். ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

பல்வேறு மனித உரிமை அமைப் புகள் - குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்தி ரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் நாடுகளின் கூட்ட மைப்பு என்று ஒன்று உருவாக்கப் பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக் கணித்திருப்பது என்பது முக்கிய மான தகவலாகும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலி யாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆஸ்தி ரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காமல்வெல்த் சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப் பிரிக்காவில் உள்ள கேப்-டவுன் நகரத்தில் நடைபெற்றபோது; காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண் டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மா னத்தில். காமன் வெல்த் அமைப் பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்;

தொடர்ந்து இலங்கையில் நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத் துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று அய்.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவின் அறிக் கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன் றாகவே உள்ளது. இனப் படு கொலை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு வகையான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி யுள்ள ராஜபக்சேயை, நம்பிக்கை யுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென டெசோ தொடர்ந்து கோரி வருகிறது.

காமன்வெல்த் மாநாடு இலங்கை யில் நடைபெற்றால், அதன் காரண மாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக் கூடுமென்றும்; வலிமை யான கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன. இந்த நிலையில் இலங் கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயா னால், அங்கே நடைபெற்ற இனப் படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும்.

எனவே இனியாவது இந்தியா, தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடு, நேசத் தோடு ஆதரவுக் கரம் நீட்ட முன் வர வேண்டும். தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு;

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு, அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கை


மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதி யையும் ஆராயும்படிச் செய்து விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

(விடுதலை, 16.10.1960)

தமிழ் ஓவியா said...


தேவை விழிப்பு!


19.4.2013 விடுதலை வெளியூர் இதழில் மயிலாடன் அவர்கள். ஒற்றைப்பத்தி பகுதியில் எழுதிய பலே விவாஹம் என்ற செய்தியினைப் படித்துப் பார்த்தேன்.

என் நினைவு 65 ஆண்டுகட்கு முன்பு - அன்றைய விடுதலை இதழில் படித்த செய்தியை நோக்கிப்பறந்தது. அன்றும் இதே கூத்து - அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் விவாகம் செய்து வைக்கப் பட்ட - பத்திரிகையை அப்படியே வெளி யிடப்பட்டிருந்தது. அரசப்பனுக்கும் - வேம்பு அம்மனுக்கும் என்ற பெயருடன் பத் திரிகைச் செய்தி - அதைப்பற்றிய குத் தூசியில் பலமான கிண்டலுடன் கூடிய கண்டனம்.

பெரியார் - அண்ணா - கலைஞர் போன்றவர்களின் அற்புத பணியும் ஆசிரியர் போன்றவரின் கடுமையான உழைப்பும் இந்த தமிழ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தும் இது போன்ற மடமை நிகழ்வுகள் நடப்பது கேலிக் கூத்தாகவே உள்ளது. நம் அனைவரின் உழைப்பும் வீணாகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. ஒரு பக்கத்தில் நம்முடைய படை செல்லும் - பயணமும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் திட்டமிட்டே இது போன்ற மூட செயல்களை ஊதிப் பெருக்கும் ஊடகங்களும் இருப்பது குறித்து வேதனைப்பட வேண்டியுள்ளது.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பதை திருமண அழைப்பிதழ் - மன்றல் அழைப்பிதழ். வாழ்விணையர் அழைப்பிதழ் என்றெல்லாம் - வளர்ந்து வருகின்ற கால கட்டம். நம்பிக்கையோடு இருக்கும் வேளையில் - பத்தாம் பசலியும் - புறம் தாங்கி வீடணர்களும் செய்யும் சேட் டைகள் குறித்தும் விழிப்பாக செயல்வட வேண்டும் என்ற எச்சரிக்கையும் இதன் மூலம் நமக்கு ஏற்படுகிறது.

காரிருளால் கதிரவனை மறைக்கபோமோ?

கறை சேற்றால் தாமரையின் வாசம் போமோ?

என்று மனதை தேற்றித் கொள்வதேன்

- வேலை பொற்கோவன்
வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில்
தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை சட்டமன்றத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் சுபா குற்றச்சாட்டு

சென்னை, மே 11- தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் - அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும், இடஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு பின்பற்றாததால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சட்டமன்றத்தில் நேற்று (10.5.2013) பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் ஆர்.சுபா குற்றச்சாட்டை கூறினார்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-

தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது. அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் பேசியது:-

பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.

ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.

அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கு வதற்கான வாய்ப்பு இல்லை.

தமிழ் ஓவியா said...


பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்


திருவையாறு ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் மறைந்த கோவிந்தராசன் குடும்பத்தினர் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (10.5.2013).

திருவையாறு ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் படத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட கருத்து மணிகள்:

1. திராவிடர் கழகத் தோழர்களும், கட்சிக்கு அப்பாற் பட்ட பொதுமக்களும், நகரப் பிரமுகர்களும் இவ்வளவு திரளாக நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால், அதற்குக் காரணம் என்ன?

மானமிகு கோவிந்தராசன் பெரும் பதவியில் இருந்தவரா? பெரும் பணம் படைத்தவரா?

இல்லை, பின் ஏன் இவ்வளவுப் பெரிய மரியாதை கடைசி மூச்சு அடங்கும்வரை கொள்கையில் விடாப்பிடியாக வாழ்ந்து காட்டிய இலட்சிய வீரர் - கருப்புச் சட்டைக்காரர் என்பதுதான் இந்த மரியாதைக்கு முக்கிய காரணம்.

2. தனது மரணத்துக்குப் பிறகும் தமது கண்களைக் கொடையாக அளித்தவர்; மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தமது உடலையே கொடையாக அளித்த மனிதநேயர்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குச் சோதனைக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. நம் நாட்டு மதச் சம்பிரதாயம் மரணத்திற்குப் பின் உடலை எரிக்கவேண்டும்; சாம்பலைக் கரைக்கவேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதால், மருத்துவக் கல்லூரிக்கு உடல்கள் கிடைப்பதில்லை. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் போன்ற பெரியார் பெருந்தொண்டர்கள் செத்த பிறகும் கூட தமது உடல் பிறருக்குப் பயன்படவேண்டும் என்று நினைப்பது எத்தகைய சிறப்பு!

திராவிடர் கழகம் உடற்கொடைக் கழகம் என்ற பிரிவையே வைத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.

3. மனிதன் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று வருகிறான். இந்தக் காலகட்டத்தில் இன்னும் ஜாதிபற்றிப் பேசும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது வெட்கக் கேடு!

ஜாதிக்காக ரத்தம் சிந்துகிறான் வீதிகளிலே - இன்னொரு மனிதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்த ரத்தத்தைக் கொடையாக அளிக்கக்கூடாதா?
ரத்தத்தில் ஜாதிப் பிரிவு உண்டா? நாடார் ரத்தம், நாயக்கர் ரத்தம், அய்யர் ரத்தம், அய்யங்கார் ரத்தம், வன்னியர் ரத்தம் என்று இருக்கிறதா?

மனிதர்களை ஒன்றுபடுத்த நாம் இருக்கிறோம். சிலர் ஜாதியைக் காட்டிப் பிளவுபடுத்தத் துடிக்கிறார்கள். ஜாதிக்காக அரிவாளைத் தூக்குகிறார்கள். தந்தை பெரியார் தொண்டர்களோ ஜாதியை ஒழிக்க அறிவாயு தத்தைத் தூக்குகிறோம்.

4. இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஆப்ரேட்டர் கோவிந்தராசன் குடும்பம் தாழ்ந்து போய்விட்டதா? இந்த அழைப்பிதழைப் பாருங்கள்
எம்.ஏ.,

பி.ஏ.,எல்.எல்.பி.,

எம்.ஏ.,எம்.எல். (மாவட்ட முன்ஷிப்),

எம்.ஏ., பி.எட்., எம்.ஈ.,

ஒரு குடும்பத்தில் இவ்வளவு பட்டதாரிகள்.

பெரியாரும், திராவிடர் இயக்கமும் என்ன சாதித்தனர் என்பதற்கு இந்தப் பட்டியல் போதாதா? நூறு ஆண்டு களுக்குமுன் இது சாத்தியமா?

அய்.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 96 பேர் வெற்றி பெற்றது எப்படி? சத்திய சாயிபாபா கையசைப்பிலா வந்தது?

சரஸ்வதி பூஜை கொண்டாடி வந்தோமே - எத்தனை எத்தனை ஆண்டுகளாக? நமது பாட்டி சரஸ்வதிக்கே, சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியாதே!

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியாரும் - அவரின் இயக்கமும்தானே கல்வி உரிமையை உத்தியோ வாய்ப்பைப் பெற்றுத் தந்தது மறுக்க முடியுமா?

5. இவற்றை வன்முறையாலா பெரியார் சாதித்தார்? போராட்டத்திலும்கூட பொது ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த தலைவர் அல்லவா தந்தை பெரியார். பேருந்தை உடைப்பது - எரிப்பது என்றால் - அவை யார் வீட்டுப் பணம்; மக்கள் வரிப்பணம்தானே பாழாகிறது?

கலவரத்தைத் தூண்டி விடுவது சுலபம் - அதனை அடக்க முடியாதவர்கள் போராட்டம் நடத்திடத் தகுதி யில்லாதவர்கள்.

1942 இல் காந்தியார் நடத்திய போராட்டத்தின்போது தந்திக் கம்பிகளை அறுத்தபோதும், தண்டவாளத்தைப் பெயர்த்தபோதும் காந்தியாரையே கண்டித்தவர் தந்தை பெரியார். தண்டவாளத்தின் கீழா வெள்ளைக்காரன் சுதந்திரத்தைப் புதைத்து வைத்துள்ளான் என்று கேட்ட தலைவர் பெரியார்.

6. அறிவியல் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அறிவியலுக்கு முன் ஜாதி எடுபடுமா? ஜாதி என்பது புரட்டு - மூளையில் மாட்டப்பட்ட விலங்கு.

வைதிகர்களாக இருந்தால் இந்த நிகழ்ச்சிபற்றி எப்படி பத்திரிகை அடித்திருப்பார்கள் - உத்திரகிரியைப் பத்திரிகை என்று போட்டு அட்டையின் ஓரத்தில் கறுப்பு இருக்கும்.

படிப்பறிவு இல்லாத காலத்தில் துக்க காரியம் என்பதற்காக பார்த்தவுடனேயே தெரிந்துகொள்வதற்காக அப்படி செய்தார்கள்.

இப்பொழுதுதான் கல்வி அறிவு வந்துவிட்டதே இன்றைக்கும் எதற்கு பத்திரிகையில் கருப்பு அடையாளம்?

செத்தவர் சைவராக இருந்தால் சிவலோக பதவி அடைந்தார் என்றும், வைணவராக இருந்தால் வைகுந்த பதவி அடைந்தார் என்றும் போடுவார்கள்.

தமிழ் ஓவியா said...

செத்த பிறகும்கூட பதவி ஆசை மனிதனை விட்டுப் போகவில்லை என்பதுதானே இதன் பொருள்.

இன்னும் சில பேர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் என்று சொல்லுவார்கள்.

ஆத்மா என்றால் என்ன?

அது எங்கு இருக்கிறது?

இது கீதையின் பித்தலாட்டம்.

ஜாதியைப் பாதுகாக்கும் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்தக் காலத்திலே தீப்பெட்டி இல்லை. சிக்கிமுக்கிக் காலம். சுடுகாட்டுக்குப் பிணத்தைக் கொண்டு செல்லும்போது, பிணத்தை எரிக்கவேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்தே தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவார்கள். இப்பொழுது என்ன வந்தது?

மின்சார சுடுக்காட்டுக்குச் செல்லும்பொழுதுகூட தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவது - எத்தகைய முட்டாள்தனம்?

காரண காரியம் தெரிவதில்லை. ஆட்டு மந்தை மாதிரி முன்னோர்கள் செய்தார்கள். அது தொடர்கிறது- அவ்வளவுதானே!

7. அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே. இப்பொழுது ஆண்களுக்கு 68; பெண்களுக்கு 71 என்று வளர்ந்தது எப்படி? அறிவு வளர்ச்சியால் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சிதானே - இந்த வளர்ச்சிக்குக் காரணம்?

மரபணு ரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால், பிறந்த மனிதன் இறக்கமாட்டான் என்ற காலம் வரப் போவதாக மருத்துவ உலகம் கூறுகிறதே! ஆயுள் நீண்டால் மட்டும் போதாது; முதுமை தடுக்கப்படவேண்டும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

8. படிப்பு ஒரு பக்கம் வளர்ந்தாலும், பகுத்தறிவு வளரவில்லை என்பது வெட்கக்கேடு.

மறைந்த கருஞ்சட்டை வீரர் கோவிந்தராசன் பட்டதாரி அல்ல. ஆனால், அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆயிரம் பட்டதாரிகள் முன்வந்தாலும் பதில் சொல்ல முடியாதே! காரணம் அவர் பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளிக் கூடத்தில் படித்துத் தேர்ந்தவர்.

9. நெருக்கடியான நேரத்தில் மெய்க்காப்பாளர் போல செயல்படுபவர். ஓர் இயக்கத்தில் கட்டுப்பாட்டுடன் கொள்கை உரத்துடன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசு ஒரு முன்னுதாரணம்.

உலகில் முதல் பகுத்தறிவுவாதி கவுதம புத்தர். (அதனால்தான் தன் மகனுக்குக் கவுதமன் என்று பெயர் சூட்டியுள்ளார் ஆப்ரேட்டர்).

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்றார் புத்தர்.

அதற்கு விளக்கம் சொன்னவர் பெரியார்.

உன் தலைவனுக்குக் கட்டுப்பட்டு இரு. ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இரு. ஸ்தாபனத்திற்கு உண்மையாக இரு என்பதுதான் இதன் தத்துவம் என்றார் தந்தை பெரியார்.

இதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெரியார் பெருந்தொண்டர்தான் நமது கோவிந்தராசன்.

இவரின் நினைவைப் போற்றும் வண்ணம், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பூங்காவிற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசன் பெயர் சூட்டப்படும் (பலத்த கரவொலி!).

தமிழ் ஓவியா said...

10. இவ்வளவு கருத்துகளையும், தகவல்களையும் எடுத்துக்கூறிய தமிழர் தலைவர், இந்த வட்டாரத்தில் அரும்பணியாற்றிய சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவு கூர்ந்தார். (இது எப்பொழுதுமே தமிழர் தலைவருக்கே உரிய தனித்தன்மை!).

திருவையாறு ஒன்றிய தலைவராக இருந்த பெரியார் பெருந்தொண்டர் கோதண்டபாணி (எப்பொழுது வந்தா லும் திருவையாறு அல்வாவை மறக்காமல் கொடுப்பவர்) புலவர் சுபாஷ்சந்திரன், புலவர் முருகானந்தம், தஞ்சை இரா.இராசகோபால், வரகூர் நடராசன், தங்கையா, கண் டியூர் கணபதி, கந்தசாமி என்று நீண்ட பட்டியல் உண்டே!

11. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்களின் துணை வியாரைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கைக்கு ஈடுகொடுத்து அருந்துணையாக இருந்த அம்மையாரைப் பாராட்டவேண்டும். வீட்டுக்கு விருந்தினர் திடீரென்று வந்தால், தன் சாப்பாட்டைத் தியாகம் செய்து வந்தவர் களை உபசரிப்பது நம் வீட்டுப் பெண்கள்தானே!

பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராசன் மறைந் தார் என்றாலும், அவர்தம் தொண்டால் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அவரது மகன் கவுதமன், தம் தந்தையாரைத் தொடர்ந்து இயக்கப் பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன் என்று கூறி முடித்தார்.

45 நிமிட நேர உரையில் இந்த ஆழமான விலை மதிக்க முடியாத கருத்து முத்துகளை வாரி இறைத்தார் தமிழர் தலைவர்.

கூட்ட நிகழ்ச்சி

10.5.2013 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு திருவையாறு தேரடி திடலில் பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் அவர்களின் படத்திறப்பு விழா - திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது. தொடக்கத்தில் தோழியர் ஜெயமணிகுமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவருக்குக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்!

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து வழக்குரைஞர் ஸ்டாலின், தஞ்சை இரா.இரத்தினகிரி, மதுரை மாநகர் வாசகர் வட்ட தலைவர் அ.முருகானந்தம், தஞ்சை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ.செயராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றிய பிறகு, கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். கோ.ரமேஷ் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டம் முடிந்து ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்கள் இல்லத்தில் கழகத் தலைவர் மற்றும் பொறுப் பாளர்களுக்கு உணவளித்து உபசரிக்கப்பட்டது.

புலவர் முருகானந்தம் இல்லத்தில்...

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் புலவர் முருகானந்தம் அவர்களின் இல்லத்திற்குக் கழகத் தலைவர் சென்று விசாரித்தார். விடுதலை சந்தாவினை புலவர் முருகானந்தம் அவர்களின் இணையர் அளித்தார்.

நல்லாசிரியர் அப்பாசாமி இல்லத்தில்...

காந்தி நடுநிலைப்பள்ளி நிறுவனர், நல்லாசிரியர் அப்பாசாமி (மறைவு) அவர்கள் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...


ஒரு சேதி


(திருவாரூர் திருத்தியாகராஜனின் திருத்தேர் தீக்கிரையாயிற்று)

தியாகராஜ பெருமானின் தேரானது 09.06.1926ந் தேதி தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக் கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப்பெரியது திருவாரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங்களும், 5000த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்களும் வேண்டும். இவர்கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம்.

தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப் பாட்டம் எதற்கு? இதை நினைக்கும் போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது,
ஒரு குருவுக்கு நான்குசிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குருவானவர் கடையில் ஊசி வாங்கிக் கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர்களிடம் கட்டளை யிட்டார்.

அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளை யிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப்போனால் கோபித்துக் கொள் ளுவார் என்று ஒரு நீண்ட பனைமரத் துண்டில் ஊசியைக் குத்தி நால்வரும் வழிநெடுக இறக்கி இறக்கி சுமந்து சென்று குருவை அடைந்ததும் அவர் அறியும்படி தொப்பென்று போட்டு ஊசியைத்தேடி காணாமல் போகவே நடந்ததைச் சொன்னார்கள்.

குரு கோபித்துக் கொண்டு, உங்களுக் குள்ள பக்திக்குத் தகுந்த புத்தியில்லை யென்று சொல்லி வேறொரு ஊசி வாங்கி பனைமரத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி தூக்கி வரும்படி கட்டளையிட்டார். உடனே அவர்கள் இதனால் ஒரு நல்ல புத்தி கற்றுக் கொண்டதாக சந்தோஷித்து மறுபடியும் ஊசி வாங்க கடைக்குப் போகும் போது, ஒருவன் குரு ஊசிக்கு மாத்திரம் காசு கொடுத்தாரே யல்லாமல் கயிறு வாங்க காசுக்கு என்ன செய்கிறது என்று கேட்க மற்றவர்கள் தோஷம், தோஷம் இதெல்லாம் நினைக்கவே கூடாது; நினைப்பது குருத் துரோகமாகும் என்று சொல்லி நினைத் ததற்குப் பிராயச்சித்தம் செய்து கொண் டார்கள்.

அதே போலிருக்கிறது திருவாரூர் தேரில் சுவாமியை வைத்து இழுக்கும் கதை.தேசம் வறுமைப் பிணியால் வதையுற்று கல்வியற்று சிறுமைச் செயலால் சீரழிந்து இருக்கும் இதுகாலை 2000 வேலி நிலமுள்ள தியாகராஜ சுவாமிகளின் உற்சவத்திற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு தொழி லாலயங்களும் கல்லூரிகளும் அமைத்து வறுமைப் பிணியால் வாடும் மக்களுக்கு வேலை கொடுத்து போஷித்தும், கல்வி போதித்து சன்மார்க்க பேதம் புரிந்துவர பிரயோஜனப்படுத்த லாகாதோ? - குடிஅரசு துணைத் தலையங்கம் - 13.06.1926

தமிழ் ஓவியா said...

கடவுள் துகளா? கண்டுபிடித்தவரின் மறுப்பு


பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் ஒரு நாத்திக அறிவியலாளர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 83 வயதான அவர் சுவிட்சர்லாந்து நாட்டின் செர்ன் நகரில் சென்ற ஆண்டு அணுக்களை உடைத்து ஆராயும் போது, அணுக்களின் துணைத் துகள்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார்.

அந்தச் செய்தியை அவர் வெளியிட்டபோது பத்திரிகைகளும் ஊடகங்களும் அதற்குக் கடவுள் துகள் என்று தாங்களாகவே பெயர் வைத்துவிட்டார்கள். அச்செய்தி முதன் முதலில் வெளிவரும் போதே அப்படி எழுதிவிட்டதால் உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் கடவுள் துகள் என்றே இன்னமும் எழுதுகின்றன. ஆனால், இந்தச் சொல்லை அத்துகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பேராசிரியர் ஹிக்ஸ் மறுத்துள்ளார்.

கடவுளின் துகள்கள் என்று குறிப்பிடப்-படுவதை நிறுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஹிக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். காரணம், அவர் ஒரு நாத்திகர்!

பேராசிரியர் ஹிக்ஸ், உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் துணை அணுத்துகள்கள் தான் காரணம் என்ற ஆய்வு முடிவுக்கு வந்துள்ளார்.

ஆனால், 83 வயதான அந்த அறிவிய-லாளருக்கு -_ அவரது கண்டுபிடிப்பிற்கு கடவுளின் துகள்கள் என்ற பட்டப்பெயர் பிடிக்கவில்லை; ஏனென்றால், எல்லா-வற்றையும் படைப்பிக்கவல்ல ஒரு கடவுளின் கண்டு-பிடிப்பாக தனது ஆராய்ச்சி இல்லை என்பது அவர் முடிவு.

அந்தப் பெயர் வேடிக்கையாக, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிவியலாளரான லியோன் லெடர்மேன் என்பவரால் குறிப்பிடப்பட்டது. அது ஒரு நல்ல பெயரும் இல்லை என ஹிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

1993இல் லெடர்மேன் ஒரு புத்தகத்தில், கடவுளின் அணுத்துகள் என்ற பெயர் எப்படி வந்தது? உதாசீனம் செய்யப்பட்ட(God damn) துகள் என்று பெயரிட புத்தக வெளி-யீட்டாளர்கள் அனுமதிக்க-மாட்டார்கள். அதனால்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். எடின்பர்க் நகரைச் சேர்ந்த ஹிக்ஸ், முதலில் நான் ஒரு நாத்திகன். இரண்டாவது, அந்தப் பெயர் ஒரு விதமான வேடிக்கைதான்; நல்ல பெயர் இல்லை. நான் அதற்கு இடமளித்து இருக்கக்கூடாது. அது தவறானவற்றிற்கு அழைத்துச் செல்லும் என்று சொன்னார்.

சென்ற ஆண்டு Hadron Collider என்ற பெரிய கருவியில் அணுவை உடைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவரது கருத்து உறுதி செய்யப்பட்டது.

அறிவியல் உலகம் அந்தத் துகளை ஹிக்ஸ் போசான் துகள் (higgs boson particle) என்றுதான் அழைக்கிறது.

ஆனால், புத்தக வெளியீட்டாளர்களும், ஊடகத்தினரும் தங்களின் வியாபாரத்திற்காக இப்படி செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் ராமாயணம் என்ற நாடகத்தை நடத்தினார். அது அச்சு அசல் வால்மீகி ராமாயணம். அதில் உள்ள் உண்மைகளைத்தான் அவர் எடுத்துக்காட்டினார். ஆனால், அந்த உண்மைகளைப் பொறுக்கமுடியாத ஆத்திகர்கள், எம்.ஆர்.ராதா நடிப்பது ராமாயணம் அல்ல: அது கீமாயணம் என்று தமது இயலாமையை வெளிப்படுத்தினர். அதையே சில பத்திரிகைகளும் வெளியிட கீமாயணம் என்றே அந்நாடகம் பரப்பப்பட்டது.

பகுத்தறிவை எதிர்கொள்ள முடியாத அறியாமையும் பிற்போக்கு மதங்களும் பந்தை அடிக்க முடியாமல் காலை அடிக்கும் வேலையை அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை செய்துகொண்டிருக்கின்றன. அறிவுக்கு இன்னும் எத்தனை நாள்தான் திரைபோட்டு மறைக்கமுடியும்? அண்ட சராசரங்களையும் அகழ்ந்து ஆய்ந்து உண்மையைக் காட்டுவதல்லவா அறிவு. அதன் முன் கடவுள் எம்மாத்திரம்!

- பெரியாரிடி, ஆர்.ராமதாஸ் உதவியுடன்
நன்றி : சந்திரன், வீராசாமி

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.



நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

தமிழ் ஓவியா said...


அன்னையர் நாள்!


இன்று அன்னையர் நாள் - உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மாசு மருவற்ற அன்பு என்பது தாயிடத்தில் தான்குடி கொண்டு இருக்க முடியும் - எதையும் எதிர்பாராத இயற்கை அன்பு என்று இதனைக் கூறலாம்.

ஒரு குழந்தைக்குத் தன்பாலை ஊட்டி உயிரூட்டம் செய்கிறார் - குழந்தையின் முதல் ஆசிரியராகவும் அந்தத் தாயே அமைகிறார்.

தாய்ப்பால் என்பது தான் கலப்படத்திற்கும் இடம் இல்லாதது - ஊட் டச் சத்தும் நிறைந்தது.

இன்றைய தினம் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை 2000 கோடி அமெரிக்கன் டாலரை செலவு செய்து சீனா உருவாக்கி - புதிய அத்தியாயத்தைப் பூக்கச் செய்துவிட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை 44 விழுக்காடு குழந் தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் அவதிப்படு கின்றன. தென்னாப் பிரிக்காவில்கூட 25 சதவிகிதம்தான்; இந்தி யாவின் அவல நிலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

இந்தியாவிலேயே பொருளாதாரம் கொழிக்கும் மாநிலம் மோடி ஆளும் குஜராத் மாநிலம் என்று ஊதிப் பெருக்கிப் பலூன் விடுகிறார்களே - அந்த மாநிலத்தைப்பற்றிய கணிப்பு என்ன தெரி யுமா? இந்தியாவின் சோமாலியா என்பதே!

உலக அன்னையர் நாளில் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தாயின் நிலை இன் றைய நிலையில் எத் தகையது?

வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம்; ஆனால் அந்த அன்னையார் இருப்பதோ முதியோர் இல்லம் - இதுசரிதானா?

வருமானம் பெருகிய அளவிற்கு மனிதநேயம் பெருகவில்லையே! வெறும் பணமும் நுகர் வும்தான் வாழ்க் கையா?

மாதா, பிதா, குரு என்ற வரிசையில்கூட தாய் தானே முதலிடத் தில்; ஒவ்வொருவரும் தமக்குள் எடை போட் டுப் பார்க்கட்டும் - இந் நாளில்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


குடமுழுக்கும் - அர்ச்சகர் பிரச்சினையும்

2011-2012ஆம் ஆண்டில் 1006 கோயில்களுக்கும், 2012-2013ஆம் ஆண்டில் 1096 கோயில்களுக்கும் குட முழுக்குச் செய்யப்பட்டது. நடப்பாண்டில் 1006 கோயில்களுக்குத் திருப்பணி செய்யப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் 110ஆவது விதியின் கீழ் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தினால் மக்களை முட்டாள்களாக ஆக்குவதற்குச் செய்யப்படும் நிரந்தரமான ஏற்பாடு அல்லாமல் வேறு என்னவாம்?

படித்த மற்றும் படிக்காத பாமர மக்கள் காலத்தையும், பொருளையும், உழைப்பையும் வீணடிக்கப் பயன்படக் கூடிய திட்டம்தான்.

மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. நடைபாதையில் வாழும் மக்கள் தொகை குறையவில்லை.

தலைநகரமான சென்னையிலேயே இந்த அவல நிலை! இரவு உணவு இல்லாமல் வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு பசியால் தூக்கம் இல்லாமல் துடிக்கும் மக்களும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கரும் பலகைகூட இல்லாத பள்ளிகள் உண்டு; போதிய கட்டட வசதியில்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பது ஏடுகளில் படத்துடன் வெளி யிடப்படுவதும் உண்டு. உயர்நிலைப்பள்ளியில் கல்வியை முடிக்காமல் இடையில் நிறுத்தப்படும் (Dropouts) நிலையும் உண்டு.

விவசாயம் பாதிக்கப்பட்டு கிராமப்புற மக்கள் வறுமையின் வன்பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறார்கள்.

அரசு மருத்துவமனைகளை எடுத்துக் கொண்டால் சொல்லும் தரமன்று; நோயாளிகளுக்குப் படுக்க வசதியில்லாமல் தரையில் படுத்துக் கிடக்கிறார்கள். போதிய மருந்துகளும் அரசு மருத்துவமனையில் இருப்பதில்லை.

இவ்வளவுக் கொடுமைகளும், இல்லாமையும் வறுமையும் குவிந்து கிடக்கும் நாட்டில், எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்ததாகக் கூறப்படும் கடவுள்களுக்குக் கோயில் புனருத்தாரணம்தான் முக்கியமா?

உயிருள்ள ஜீவனுக்குக் குந்தக் குடிசை இல்லை; குழவிக் கற்களுக்குக் கூடக் கோபுரங்கள் கேட்கிறதா?

சிறிதும் மனிதாபிமானமற்ற செயல்பாடு இது. அரசின் செயல் திட்டங்கள் வளர்ச்சிப் போக்கில் இருக்க வேண்டுமே தவிர. உற்பத்தி நாசத்திற்கு எந்த வகையிலும் பயன்படக் கூடாது.

கோயில் என்ற பெயரால் ஒவ்வொரு நாளும் நடைபெறுவது உற்பத்தி நாசம்தான் - பால், தயிர், வெண்ணெய், எண்ணெய், தேங்காய் என்று அழிக்கப்படுகின்றன. மக்களுக்குப் பயன்படக் கூடிய இந்தப் பொருள்கள் கடவுளுக்கு அபிஷேகம் என்ற பெயரால், கற்சிலைகளின் தலைகளில் கொட்டி குளிப்பாட்டி சாலவத்தின் வழியாக வெளியேற்றப் படுவது - உற்பத்தி நாசமல்லாமல் வேறு என்னவாம்?

இவை எல்லாம் இல்லாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று எந்த கடவுள் முதல் அமைச்சரின் கனவில் வந்து சொல்லியதாம்? சொல்ல முடியுமா?

காணிக்கைகளால் வருமானம் அர்ச்சகப் பார்ப்பானுக்கு கிடைக்கிறது. புரோகிதச் சுரண்டல் ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது; கோயில் என்பது சுரண்டலின் மறுபெயர். இதற்கு அரசுப் பணம் எதற்காக செலவழிக்கப்பட வேண்டும்?

கோடிக்கணக்கில் கோயிலுக்காக குடமுழுக்குக் காக மக்கள் பணம் அரசு சார்பில் கொட்டப்படுகிறதே - அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பலன் என்ன?

குறைந்த பட்சம் பருவ மழையாவது பெய்ததா? நியாயப்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைத்து விட்டதா - முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு முடிவுதான் எட்டப்பட்டதா?

தற்கொலைகள் குறைந்தனவா? படுகொலை பட்டியல் அடைபட்டு விட்டதா? (கோயில் சிலைகளே கடத்தப்படுகின்றன - இந்த லட்சணத்தில் அவற்றிற்குக் குட முழுக்காம்!)

இன்னொன்று மிக முக்கியமானது. விதி 110 இன்கீழ் கோயில் குட முழுக்குகளின் பட்டியலை வெளியிட்ட முதல் அமைச்சர், இந்தத் துறைக்குச் சம்பந்தப்பட்ட, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினைபற்றி மூச்சு விடாததே ஏன்?

206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்று ஆண்டுகள் பல ஓடிய நிலையில், இதற்கானஅறிவிப்புகள் இதுவரை வராதது ஏன்? உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் நிலைப்பாடு குறித்து முதல் அமைச்சர் சட்டப் பேரவையில் தெரிவித்திருக்க வேண்டாமா?

முதல் அமைச்சருக்குத் தனிப்பட்ட முறையில் இருக்கும் பக்தியை மக்கள் சமுதாயத்தின் தலையின்மீது ஏற்றிச் சுமக்க வைக்கக் கூடாது; காரணம், அரசு என்பது சட்டப்படி மதச் சார்பற்றத் தன்மை கொண்டதாகும்.16-5-2013

தமிழ் ஓவியா said...

கலாச்சாரப்படி...


பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள் தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம்.

(விடுதலை, 24.2.1954

தமிழ் ஓவியா said...


கடவுளர் சக்தி இப்படியா சந்தி சிரிப்பது?


- ஊசி மிளகாய்

வழக்கம்போலவே நேற்றும் தமிழக சட்டமன்றத்தில் நமது முதலமைச்சர் அவர்கள், விதி 110 இன்கீழ் வாசித்த ஓர் அறிக்கையில் கூறியுள்ள சில கருத்துகள்பற்றி:-

கோவில்களில் உண்டியல் கொள்ளை, நகைகள் மற்றும் உடை மைகள் திருட்டு; எல்லாவற்றையும் விட கடவுள், கடவுளச்சிகளையே பெயர்த்துக் கடத்திக் கொண்டு போகும் கள்ள பக்த கேடிகள் ஆகியோரைக் கண்டுபிடிக்க, முன் னெச்சரிக்கையாக எச்சரிக்கை மணி - அபாய மணி போன்று ஒலிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், மேலும் கடவுளைத் திருடும் - கடத்தும் பக்த கேடிகளைக் கண்டுபிடிக்கவும் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்தவும் இனி இந்து அறநிலையத் துறையினரால் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிப்புச் செய்துள்ளார்!

பலே, பலே, கடவுள் சக்தி எப்படிப்பட்டது என்பதை நிரூபிக்க இதைவிடச் சிறந்த பிரச்சாரம் - எடுத்துக்காட்டு வேறு என்னதான் இருக்க முடியும்?
கோவிலுக்குச் செல்லும் பக்தர் களை எதற்காகக் கோவிலுக்குப் போகிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் நம்மைக் கடவுள் காக்க வேண்டும்;

உலகத்தைக் காக்க வேண்டும் என்று பிரார்த்தனை - வேண்டுகோளை வைக்கவே செல் கிறோம்; ஏனெனில் கடவுள் சர்வ சக்தி - சர்வ வல்லமை - சர்வ வியாபி - சர்வதயாபரன் - கரு ணையே வடிவானவன் என்பதால் தான் என்றுதானே கூறுகிறார்கள்?

சர்வசக்தி வாய்ந்த சாமிக்கு - அதன் இருப்பிடமான கோவிலைப் பாதுகாக்க மனிதர்களும், மின்னணு இயந்திரங்களுமா தேவை? கண் காணிப்புக் கேமிராவில் எல்லாம் தெரியுமோ; ஆண் சாமியைக் குளிப் பாட்டினதோடு, பெண் கடவுளையும், பிறந்த மேனியாக்கிக் கழுவிக் குளிப்பாட்டுவது வரை படம் பதிவா குமோ? அர்ச்சகரையும் அப்படியே கண்காணித்தால் நல்லதுதானே!

அதிலும் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதன் கோவில் கருவறையில் நடத்திய சொர்க்க லோகக் காட்சிகளும் பதிவாகு மானால், அதைவிட பக்தி ரசம் சொட்டும் அருமையான சரித்திரம் தான் யாருக்குக் கிடைக்கும்?

சர்வசக்தி கடவுளுக்கு இல்லை; அதை வைத்துப் பிழைக்கும் மனிதர் களுக்கும், அரசுக்கும்தான் இருக் கிறது என்பதை இந்த முறையின் மூலம் நாட்டுக்குணர்த்திட்ட முதல மைச்சரின் ஏற்பாடு விசித்திரமானது என்றால், கடவுள் மறுப்புப் பிரச் சாரத்தை வேறு மாதிரி செய்கின்ற முயற்சி அல்லாமல் வேறு என்ன?

ஏற்கெனவே பல முக்கிய பெரிய கோவில்களின் சாமி சிலைகள்கூட ஒரிஜினல்கள் எல்லாம் பாதுகாப்புப் பெட்டகங்களில் டெபாசிட் செய்து வைக்கப்பட்டு, முக்கிய திருவிழா வின்போது மட்டும் அந்த ஒரிஜினல் சாமி, பரோலில் ஓரிரு நாள்கள் வெளியே வந்து சிறைக்கு மீண்டும் திரும்பும் கைதிபோல, ஊர்ப் பொதுத் திருவிழா முடிந்தவுடன் மீண்டும் பாதுகாப்புப் பெட்டகத்திற்கே (Safe Deposit Vault) திரும்பி விடுவார்.

மற்ற நாள்களில் மாற்று நகல் கடவுள்தான் - counterfeit Coin போல பக்தர்களுக்குக் காட்சியளிக் கிறாராம்!

பெரியார் கேட்டார்: ஏம்பா, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத கடவுள், எப்படியப்பா உன்னைக் காப்பாற்றுவார்? என்று.

நியாயமான கேள்விதானே அது?

அதனால்தான் பதில் தர முடியாத சிக்கலான கேள்வியாகவே அது எப்போதும் இருக்கிறது!

வருஷாவருஷம் கடவுள் - கடவுளச்சியர் திருக்கல்யாணம் செய்து வைப்பவர்களைப் பார்த்தும் கேள்வி கேட்டார்!

போன வருசம் பண்ண கல்யாணம் என்ன ஆச்சு? டைவர்சா? ரத்தா? இல்லை, ஓடிப் போயாச்சா? - அறிவுள்ளவர்கள் கேட்கமாட் டார்களா? என்பார்!

அதுமட்டுமா?

சாமிகளுக்குப் பள்ளியறை கட்டி பெரியவர்கள் பிள்ளை விளையாட்டு நடத்துகின்றனரே!

எங்காவது பிரசவம் பார்க்க மருத்துவமனை, மகப்பேறு மருத் துவமனை உண்டா? கட்டப்பட்டுள் ளதா? நடிகவேள் எம்.ஆர். ராதா கேட்பார் தனது நாடகத்தில்,

ஏண்டா, சாமி ஆறு வேளை சாப்பிடுதுங்கிறியே, சரி படைக்கிறே; அதற்கு டாய்லட் (கழிப்பறை) கட்டி வச்சியா? உண்மையிலேயே அது சாப்பிடறதாயிருந்தா அதுவும் இல்ல கட்டி வைச்சிருப்பே என்று கேட்பார்.

பக்தர்களும், பாமரர்களும், படித்தமேதை முட்டாள்களும் சேர்ந்தே கைதட்டிச் சிரித்து விட்டு வருவர்!

எல்லாம் வல்ல

எங்கும் நிறைந்த

கடவுள்களின் சக்தி

இப்படியா சந்தி

சிரிப்பது?

அரே, ராம், ராம் ஓம்! ஓம்! ஆம்! ஆம்!15-5-2013

தமிழ் ஓவியா said...


காரணம்


வடநாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்துகொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.

(விடுதலை, 28.8.1963

தமிழ் ஓவியா said...


நுழைவுத் தேர்வு அறவே வேண்டாம்


நுழைவுத் தேர்வு என்றாலே - அதன் பொருள் கிராமப்புற மக்கள், ஆண்டாண்டுக்காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட மக்கள் உள்ளே நுழையாமல் தடுக்கும் முட்டுக்கட்டை என்று பொருள்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வந்தபோதே அதனைக் கடுமையாக எதிர்த்தது திராவிடர் கழகமே. சமூக நீதித் திசையில் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெளிவு கிடையாது - அதன் காரணமாகத்தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்களிடம் நல்ல பாடமும் கற்றுக்கொண்டார்.

5 ஆம் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக வந்த மானமிகு கலைஞர் அவர்கள் நுழைவுத் தேர்வைத் தடை செய்து சட்டம் இயற்றினார். உயர்நீதிமன்றம் - உச்சநீதிமன்றம்வரை சென்று மோதி முட்டிப் பார்த்தனர் - விளக்கெண் ணெய்க்குத்தான் கேடானதே தவிர பிள்ளை பிழைத்திடவில்லை.

மாநில அரசின் இந்தக் கொள்கை முடிவினை - கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன்மூலம் முட்டித் தள்ளுகிறது.

அதுவும் கபில்சிபல் என்ற மேல்தட்டு மனிதர் மனித வள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்ச ராக வந்த நாள் முதற்கொண்டு நுழைவுத் தேர்வைத் திணித்தே தீருவது என்று ஒற்றைக் காலில் எலும்பு உடைய உடைய ஊசி முனையில் தவம் இருக்கிறார்.

பி.ஏ., பி.எஸ்ஸி., என்ற பட்டப் படிப்பில்கூட அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு வைத் துத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்.

அகில இந்திய அளவில் பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு வைக்கப்படும் என்கிறார்.

முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வினை மருத்துவக் கவுன்சில் வைக்க அடம்பிடிக்கிறது.

அதனை எதிர்த்து போர்க்கொடி தூக்கியது கலைஞர் தலைமையிலிருந்த தி.மு.க. அரசு.

உச்சநீதிமன்றம் மருத்துவக் கவுன்சிலின் முடிவுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இது என்ன கொடுமை!

தமிழ்நாடு அரசும், ஆந்திர மாநில அரசும் மருத்துவக் கவுன்சிலின் முடிவினை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், இவ் வாண்டு நுழைவுத் தேர்வு இல்லாமலேயே மருத் துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இது தற்காலிக வெற்றியே! ஆனாலும், நிரந்தரமாக நுழைவுத் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

பிளஸ் டூ தேர்வு என்பதே எழுத்துத் தேர்வு; அதற்குப் பிறகு எதற்கு இன்னொரு எழுத்துத் தேர்வு? அப்படி என்றால், பிளஸ் டூ தேர்வுக்குத் தான் என்ன மரியாதை?

போட்டித் தேர்வும், நுழைவுத் தேர்வும் ஒன்றல்லவே! இரண்டையும் போட்டு ஏன் குழப்பிக் கொள்ளவேண்டும்?

சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் கள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்கின்போது சொன்ன கருத்துரை என்ன?

நுழைவுத் தேர்வு நடத்தினாலும் முழு சமநிலை என்பது கட்டுக்கதைதான்! ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கின்றனர்?

இட ஒதுக்கீட்டின் காரணமாக, தட்டுத் தடுமாறி தொழிற்கல்லூரிகளில் நுழைபவர்களைக் கொல் லைப்புறம் வழியாக நுழைந்து வெளியே தள்ளும் பார்ப்பன சூழ்ச்சிதான் நுழைவுத் தேர்வு என்பது.

தற்காலிகமாக அல்ல - நிரந்தரமாகவே நுழைவுத் தேர்வை தடை செய்யவேண்டும் என்பதுதான் சமூகநீதியாளர்களின் அழுத்தமான வேண்டுகோள்! 15-3-2013

தமிழ் ஓவியா said...


இந்தியா டுடே பார்வையில்... ராஜபாளையம்


சாதிக்கு சவுக்கடி

சாதிவெறி சக்திகளை ஒடுக்கக் கோரியது திராவிடர் கழக மாநாடு

தி.க. தொண்டர்கள் அணிவகுப்பு

தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி யாக செயல்படும் என்று என்றோ சொல்லப்பட்டது இன்று ஞாபகத்திற்கு வருகிறது. ராஜபாளையத்தில் மே 4 அன்று நடந்த தி.க.இளைஞர் அணி மாநாட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண் டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது. ஆகஸ்ட் 1 அன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமைக்கான சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவதாகும்.

இந்தப் போராட்டத் தில் பங்கு கொள்ள உறுதி தெரிவித்தவர்களில் சிலர் ரத்தத்தில் கையொப்பமிட்டிருந்தனர். இதற்கெல்லாம் ரத்தம் சிந்தக்கூடாது. ரத்தம் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டியது எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்பட வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார் தி.க. தலைவர் கி.வீரமணி.

பெண்களை விளம்பரப் பொருளாகவும் கலையின் பெயரால் ஆபாச வடிவமாகவும் காட்டுவது கூடாது; பாலியல் தொடர்பான கல்வியை கல்லூரி பாடத்திட்டத்திலாவது இருபால் மாணவர்களுக்கும் போதிப்பது அவசியம்; சாதி வெறியைத் தூண்டும் சக்திகள் மீது மத்திய; மாநில அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; காதல் திருமணங்கள் சாதி ஒழிப்புக்கு ஆக்கம் தருவதால் அதனை ஆதரிக்க வேண்டும்;

காதல் திருமணம் என்றால் கெட்ட வார்த்தை என்ற பிரச்சாரத்தை முறியடிக்க, அதுவே மனம் ஒத்த, உண்மையான இணையைத் தேடிக்கொள்ளும் வழிமுறையாகும் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் போன்ற தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

(நன்றி: இந்தியா டுடே மே 22, 2013)

தமிழ் ஓவியா said...


நல்ல தீர்ப்பு தந்த நீதியரசர்களை நாடே வாழ்த்தட்டும்!

- கி.வீரமணி

அண்மையில் ஓய்வு பெறும் உயர்நீதிமன்ற நீதியரசர்களில் மிகவும் மனிதநேயத்தோடு, சமூக நலத்தையே பிரதானமாகவும் கொண்ட இருவர் ஜஸ்டீஸ் திரு கே. வெங்கட்ராமன், ஜஸ்டீஸ் திரு.கே.என். பாஷா ஆகியோர் ஆவார்கள்.

எந்த வழக்கிலும் ஓர்ந்து கண்ணோடாது, தேர்ந்து நீதித் தீர்ப்பு வழங்குவதில், அச்சமோ, சலுகையோ இன்றி, நியாயத் தராசு எப்பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாது தீர்ப்புகளை - மனித நேயக் கண் ணோட்டத்தோடு அளிப்பதில் உயர்நீதிமன் றத்தில் வரலாறு படைத்தவர்கள் அவ்விரு பெருமை மிகு மாண்பமை நீதியரசர்கள்.

அவர்களில் ஒருவரான ஜஸ்டீஸ் திரு. கே.என். பாஷா அவர்களும், ஜஸ்டீஸ் திரு. நாகமுத்து அவர்களும் இணைந்த அமர்வு ஒன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண்மையை, தாய்மையைச் சிறுமைப்படுத்தாத ஒரு தீர்ப்பை, (மேல் முறையீடு) ஒரு கொலைக் குற்ற வழக்கில் தந்துள்ளனர்.

ஒரு நிறுவனத்தின் காவலாளியான ஆண் ஒருவரும், அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் துணைவியும் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் ஒழுக்கக் கேடான - பாலுறவில் ஈடுபட்டிருக்கக் கூடும். ஏனெனில் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தால் அவர்களுக்குள் உடலுறவு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அந்த சந்தேகத்தின் மீதுதான் இந்த குற்றவாளி அந்தக் கொலையைச் செய்திருக்கக் கூடும்;

எனவே அவருக்கு மறைமுக சாட்சிய ஆதாரங்களின் அடிப்படையில் (குறிப்பாக அனுமானத்தின் - யூகத்தின்) ஆயுள் தண்டனை வழங்கு கிறேன் என்று மாவட்ட செஷன்ஸ் நீதிபதி யவர்கள் கூறியதை, ஏற்க மறுத்து, அவ் வழக்கில் குற்றவாளியின்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை; மறைமுக (Cricumstantial Evidence ) சாட்சியங் களுக்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை; மாறாக, ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தாலே அவர்கள் உடலுறவு கொள்வார்கள் என்று நீதிபதி முடிவுக்கு வருவது ஏற்கத்தக்கதல்ல என்று நன்றாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்!

பெண்களைப் பற்றிய இப்படிப்பட்ட தவறான கருத்துகளுக்கு - முன்னோடி மனுதர்மம், மகாபாரதம், இராமாயணம் போன்ற தர்மங்களும், இதிகாசப் புராணங்களும்தான்.

அதில் இதே கருத்துள்ள வாசகங்கள், ஏராளம் நீதி வாக்கியங்கள்பேரில் உபதேசிக் கப்பட்ட கருத்துக்களாகக் கூறப்பட்டதின் விளைவு....? இன்று நீதிபதிகளின் மண்டைக்குள்கூட அது புகுந்து குடைந்து, நீதியின் போக்கையே மாற்றி, மனித தர்ம ஆளுமைக்குப் பதில் மனுதர்ம ஆளுமை நடந்து கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டு விட்டது!

பெண்களை - மனிதர்களாகவே இதிகாசங்களும், புராணங்களும் பார்க்க விடாமல், அவர்களை வெறும் பாலியல் இயந்திரங்களாகப் (Sex Machines) பார்க்கும் வெட்கப்படத்தக்க நிலையை உருவாக்கி நாட்டில் பரவச் செய்ததின் விளைவுதான்.

6-7 வயது பெண் குழந்தையிடம் கூட வயதான ஆண்கள் பலர் சமூக வக்கிரங்களின் வாலாட்டங்களாக ஆகி கொடுமைக்குட்படுத்தி, அவமானத்தின் அதல பாதாளத்தில் வீழ்கின்றனர்!

சிறு வயதிலிருந்தே அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளை - பாலியல் அடிப்படையில் வைக்காமல் - மரியாதைக்குரியவர்கள் நம் தாய், தமக்கை, தங்கை, வாழ்க்கைத் துணைவிகள் - வாழ்விணையர்கள் என்ற வாழ்க்கைக் கல்வியை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆரம்பப் பாடத் திட்டங்களில் துவங்கி, பல்கலைக் கழக பாடங்கள் வரை பயிற்று விக்கப்படல் வேண்டும்.

ஓர் ஆணும் ஆணும் பழகும் போது ஏற்படாத சந்தேகம், அசூயை, அருவருப்பு - ஓர் ஆண் - பெண் சந்தித்தால், பேசினால், பழகினால் மட்டும் ஏன் ஏற்பட வேண்டும்?

அது பார்வைக் கோளாறும், அதன் விளைவும்தானே!

திரைப்படங்கள், சின்னத் திரையில் சிறு இளம் வயது பள்ளி மாணவப் பருவத்திலேயே காதல் என்ற காம உணர்வு அரும்பி, நட்பே (காதலைத்) தவிர வேறு இல்லை என்று ஆவதா?

பெண்களை அடிமைகளாக்கியிருக்கிற சமூகப் பார்வையும் மாறி, அவர்களைச் சுதந்தரம் பெற்றவர்களாக ஆக்கிட தந்தை பெரியார்தம் பகுத்தறிவு, சுயமரியாதைப் பார்வை - அணுகுமுறை தேவை!

நல்ல தீர்ப்பு தந்த நீதியரசர்களை நாடே வாழ்த்தட்டும்!

தமிழ் ஓவியா said...


மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!


புதுடில்லி, மே.14- மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது.

+2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வரு கின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி மாணவ - மாணவிகள் பெரும் பாதிப்புக்கு ஆளா கின்றனர் என்பதுதான் நுழைவுத் தேர்வு ரத் துக்கு அடிப்படையான காரணமாகும்.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப் புக்கும் மற்றும் எம்.டி, எம்.எஸ். போன்ற மேற்படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கை நடை பெறும் என்று, மத்திய அரசின் கட்டுப்பாட் டில் உள்ள இந்திய மருத் துவ கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்து இருந் தது.

தமிழக அரசு மட் டுமின்றி, ஆந்திரா உள் ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தன. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்த மொத்தம் உள்ள 23 வழக்குகளும் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றப் பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நேற்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருக் காது என்றும், தற்போது உள்ள நிலையே தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.

என்றாலும், இதில் இறுதி தீர்ப்பை, வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஒரு வேளை இந்த தீர்ப்பில் மாற்றம் எதுவும் வந் தாலும், மாணவர்கள் நலன் கருதி அடுத்த கல்வி ஆண்டுக்குத்தான் அந்த தீர்ப்பு பொருந் தும். இதற்கிடையில், இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதத்தில் உத் தரவு ஒன்றை உச்சநீதி மன்றம் பிறப்பித்து இருந்தது.

இந்திய மருத் துவ கவுன்சில், மாநில அரசுகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை ஏற்கெனவே நடத்தி இருந்த மருத்துவ பட்ட மேற்படிப்பு உள் ளிட்ட நுழைவுத் தேர் வின் முடிவுகளை வெளி யிட அந்த உத்தரவில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. நேற்றைய இடைக்கால தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி அந்த தடையும் நீக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அ.தி.மு.க. அரசின் மிக மோசமான கொள்கை முடிவு!


ஆசிரியர் தகுதித் தேர்வில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழ்நாடு அரசு - அ.இ.அ.தி.மு.க. அரசு இடஒதுக்கீடு முறையில் அடிப்படையான தவறினைச் செய்திருக்கிறது. 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் செய்யப் பட்டுள்ள மிகப் பெரிய தவறினைத் தமிழக மக்கள் புரிந்து கொள்ளவில்லை; நம் நாட்டு அரசியல் கட்சிகளும் தலைவர்களும்கூட சமுதாய அமைப்புகள் கூட இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கோட்டை விட்டது ஆச்சரியம்தான்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இதுகுறித்து மிகவும் விரிவான அறிக்கையை வெளியிட்டு இருந்தார் (விடுதலை 2.4.2013).

அதற்குப் பிறகுதான் இந்தப் பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. இடதுசாரிகள் சட்டப் பேரவையில் பிரச்சினையைக் கிளப்பினார்கள். முதல் அமைச்சரின் கவனத்தில் இருப்பதாகக் கல்வி அமைச்சர் கூறினார்.

கல்வி மானியக் கோரிக்கையின் போது திருத்தத் துடன் முதல் அமைச்சரோ அல்லது கல்வி அமைச் சரோ புதிய அறிவிப்பினை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சி தருவதாக உள்ளது.

தகுதித் தேர்வு எழுதிய உயர் ஜாதியினர், தாழ்த் தப்பட்டோர், மலை வாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) தமிழ் வழியில் படித்தோர் என்னும் வகையில் தமிழ் நாட்டில் இடஒதுக்கீடு தனித்தனியே உள்ளது.

ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு மதிப் பெண்கள் தனித்தனியே அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக இதே தேர்வில் ஆந்திர மாநிலத்தை எடுத்துக் கொண்டால் உயர் ஜாதி யினருக்கு 60 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம் என்று தனித்தனியே மதிப்பெண்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

அ.இ.அ.தி.மு.க. அரசு தேசிய ஆசிரியர் கழகம் (சூஊகூநு) அறிவுறுத்தியதற்கு மாறாக உயர் ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அனை வருக்குமே ஒரே அளவுகோலாக 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கூறி தேர்வையும் நடத்தி பணி நியமனமும் செய்துள்ளது!

இது அடிப்படையில் தவறானது - இடஒதுக்கீடு வழி முறைகளுக்கு முரணானது. தாழ்த்தப்பட்ட வர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்குவது என்று சட்டப் பேரவையில் சுட்டிக் காட்டினால், கல்வி அமைச்சர் சொல்லுகிறார் இது அரசின், கொள்கை முடிவு என்று. தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சம அளவில் பாவித்துத் தேர்வு நடத்துவதுதான் அரசின் கொள்கை முடிவா?

அப்படி என்றால் அ.இ.அ.தி.மு.க. அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் எதிரான அரசு என்று பிரகடனப்படுத்தப் பட்டதாகப் பொருள். இது இடஒதுக்கீட்டின் தத்துவத்தையே குழி தோண்டிப் புதைக்கும் ஆபத்தான பார்ப்பனத்தனமாகும். மதிப்பெண்கள் தனித்தனியாக அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் பலன் பெற்றிருப்பார்களே.

இந்தச் சந்தர்ப்பத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசின் இன்னொரு செயல்பாட்டை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமானது.

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு சமூக வாரியாக அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்களை நிர்ணயம் செய்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு 40 சதவிகித மதிப்பெண்களை அது நிர்ணயித்து இருந்தது. 35 சதவிகிதம் இருந்தாலே போதும் என்பது தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு சென்றது. அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த அணுகுமுறை ஆசிரியர்கள் தேர்வில் ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை? அதிமுக அரசுக்கு ஏனிந்த தடுமாற்றம்? தவறு நடந்து விட்டது. நாகரிக மாக ஒப்புக் கொண்டு மறு தேர்வு நடத்துவதற்குப் பதிலாக முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற தன்மையில் நடந்து கொள்ளலாமா? இது பெரியார் மண் - சமூகநீதியில் கை வைத்தால் விளைவைச் சந்தித்தே தீர வேண்டும் - எச்சரிக்கை!
14-5-2013

தமிழ் ஓவியா said...


மயக்கம் தெளியட்டும்!


தமிழர்களில் சிலரை மயக்கி மடக்கப் பார்க்கின்றது பார்ப்பனீயம் !

ஒவ்வொரு மயக்கத்தையும் பயன் படுத்துவதே அவர்களது வழக்கம்.தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் கெட்டுப் போக வேண்டுமா? அரசியலுக் குச் செல்! என்று.இன்று அதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம்.தமிழக மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு முதலமைச்சர் என்றால் கூட எல்லோரை யும் மகிழ்விக்க இன்னும் பல மாவட் டங்கள் தேவைப்படும் !

பதவியைப் போன்றதே இன்னும் பெரிய மயக்க மருந்து, பெரிய போதை தருவது புகழ் என்ற மமதை! இன்று கூட்டம் சேர்க்க முடியாதவர்களுக் கென்று பார்ப்பனீயம் கண்டு பிடித்துள்ள புதிய மயக்கம் பத்திரிகை மயக்கம்,

சிலரைக் குறி வைத்து ஏதோ அவர்கள் சொல்லுங் கருத்துக்கு மதிப்பளிப்பது போன்ற மாயையை உண்டாக்கி, அவர் களை எழுதச் சொல்லி அதை வெளி யிடுவது. நாம் எழுதுவது பத்திரிகையில் வந்தால் மகிழ்ச்சியடையாதவர் எவர்? அந்த உணர்வையே மயக்க மருந்தாக்கி நன்கு பயன் படுத்துகின்றனர் இன்று.

பார்ப்பன ஊடகங்களுக்கு எழுதுவ தற்கென்று வரிசையில் நிற்கும் மானங்கெட்ட தமிழர்கள் மயக்கத்தில் அலைகின்றனர்; அதற்காக எதையும் எழுதத் தயாராக உள்ளனர்.பெரியாரைப் பற்றி ஒரு வரிகூட இல்லாத திராவிட வரலாற்றையே எழுதுகின்றனர்.தமிழினத் தலைவர்கள் பற்றி எழுதாத தமிழர் வரலாறு.

இதில் முக்கியம் என்னவென்றால் ஒரு தமிழரை விட்டு இன்னொரு தமிழரைத் தாக்க வைக்க வேண்டியது.அதைப் படித்து ரசிக்கத்தான் நம்மில் பெருங் கூட்டம் உள்ளதே! இந்தப் புகழுக்கு மயங்கும் பெரிய மனிதர்கள் காஞ்சி சங்கரனைப் பற்றியோ, பார்ப்பன அநியா யங்கள் பற்றியோ, மதத்தால் நடக்கும் மூடத்தனம் பற்றியோ எழுதச் சொல்லி வெளியிட்டுள்ளதைப் பார்த்துள்ளீர்களா?

தலைப்பு நமக்கு வேண்டியதாக, விரும்பிப் படிக்கக் கூடியதாக இருக்கும். உடனே உள்ளே சென்று படிக்க ஆவலைத் தூண்டும். உள்ளே சென்று படித்தால் இன்னொரு தமிழரை எதிர்த்து, கிண்டல் செய்து இருக்கும். ஈழத்தின் மீது திடீர்க்காதல் வந்துள்ளது சில பார்ப் பனர்களுக்கு!

பிரபாகரனை வைத்துப் பணம் சம் பாதித்தது ஒரு பார்ப்பன வெளியீடு என்றால் நம்பமுடிகின்றதா?

உலகத்திலேயே தம்மைப் பற்றியும், தமது தலைவர்களைப் பற்றியும் வாழைப் பழத்தில் நஞ்சை வைத்துத் தருவதை ஆதரித்துக் காசு போட்டு வாங்கி அவர் களை ஆதரித்து,தம்மையே இழிவுபடுத் திக் கொள்ளும் இனம் தமிழினந்தான்.

பார்ப்பனப் பத்திரிக்கைகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழர்கள் தாங்கள் நடத்தும் பத்திரிகைகளிலும் இந்தக் கோமாளித்தனத்தை நடத்துவது வேடிக்கையல்ல, வேதனை !

அண்மையில் பார்த்தால் சில தமிழர்களைப் பயன் படுத்தி அவர்களை எழுத வைப்பதும், அவர்களுக்கு விழா எடுப்பதும் எதற்காக என்பதைப் "புகழுக்காக" மயங்கும் பெரிய மனிதர்கள் புரிந்து கொள்வார்களா? அப்படிப் புரிந்து கொள்ளாதவர்களைத் தமிழர்கள் ஓரங்கட்ட வேண்டும்.

பெரியார் திடல் பலருக்கும் அறிமுக மேடை. வளர்த்து விடும் பள்ளிக் கூடம்.வளர்ந்துவிட்டதாக அவர்கள் நினைத்துக் கொண்டதும் அவர்கள் தங்கள் தலைகளிலேயே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது வழக்கம். எத் துணைப் பேர் இந்த மயக்கத்தில் தங் களையே அழித்துக் கொண்டுவிட் டார்கள் என்று பார்க்கும் போது வருந்துபவர்கள் பெரியார் தொண்டர்கள் தான்.

மயக்கம் தெளியட்டும் !

வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவும், தன் மானமும்!

- சோம.இளங்கோவன், அமெரிக்கா

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


அட்சயதிருதியை பித்தலாட்டத்தைப் புரிந்து கொள்வீர்களா?


இன்று தங்கம் (நகைகள்) வாங்கினால் அது பெருகுமாம்! காரணம் அட்சயதிருதியை என்ற ஒரு மூடநம்பிக்கையை யாரோ (ஒரு வேளை தங்கம் விற்பனையாளர்களே அவர்களது வியாபாரத்தைப் பெருக்குவதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்) கிளப்பி விட்டிருக்கும் புரட்டு - மூடநம்பிக்கை. இது முற்றும் புரட்டானது.

பகுத்தறிவுள்ள எவராவது இதனை நம்ப முடியுமா?

நாட்டில் நகைகள் பறிப்பு, திருட்டுகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறதே! அதைத் தடுக்க ஏதாவது அட்சயதிருதியையினால் முடியுமா?

அட மூடத்தின் முடை நாற்றங்களே, உங் களுக்கு எப்போதுதான் புத்தி வருமோ? இன்னும் எத்தனை பெரியார்கள் தேவையோ?

தமிழ் ஓவியா said...


அட்சயதிருதியை பித்தலாட்டத்தைப் புரிந்து கொள்வீர்களா?


இன்று தங்கம் (நகைகள்) வாங்கினால் அது பெருகுமாம்! காரணம் அட்சயதிருதியை என்ற ஒரு மூடநம்பிக்கையை யாரோ (ஒரு வேளை தங்கம் விற்பனையாளர்களே அவர்களது வியாபாரத்தைப் பெருக்குவதில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கலாம்) கிளப்பி விட்டிருக்கும் புரட்டு - மூடநம்பிக்கை. இது முற்றும் புரட்டானது.

பகுத்தறிவுள்ள எவராவது இதனை நம்ப முடியுமா?

நாட்டில் நகைகள் பறிப்பு, திருட்டுகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறதே! அதைத் தடுக்க ஏதாவது அட்சயதிருதியையினால் முடியுமா?

அட மூடத்தின் முடை நாற்றங்களே, உங் களுக்கு எப்போதுதான் புத்தி வருமோ? இன்னும் எத்தனை பெரியார்கள் தேவையோ?

தமிழ் ஓவியா said...


அத்வானியின் ஒப்புதல் வாக்குமூலம்


கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எனக்கு வியப்பை அளிக்கவில்லை. அதே நேரத்தில், பா.ஜ.க.வுக்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. அங்கு பி.ஜே.பி. வெற்றி பெற்றிருந்தால்தான் வியப்பு அடைந்திருப்பேன்; பொது மக்களை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று பி.ஜே.பி.யின் முன்னணித் தலைவர் லால்கிஷன் அத்வானி கூறியுள்ளார்.

தென் மாநிலத்தில் கருநாடக மாநிலத்தில் 2008இல் தன் அரசியல் கணக்கைத் தொடங்கி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தது பி.ஜே.பி.. அந்த ஆட்சி மக்கள் வளர்ச்சிக்கு உகந்ததல்ல; சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்றதல்ல; நேர்மை என்பது கிஞ்சிற்றும் கிடையாது; ஊழல் என்பது ஒரு பொருட்டேயல்ல பி.ஜே.பி. ஆட்சியில் என்பதை யெல்லாம் முடிவு செய்து நடந்து முடிந்த தேர்தலில் பி.ஜே.பி.யை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

இதில் இன்னொன்றும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாநிலத்தில் உள்ள தனது கட்சியை ஒழுங்கு படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பாரதிய ஜனதாவின் தலைமைக்குப் போதுமான திறமையும், ஆளுமையும் கிடையாது என்பதும் தெள்ளத் தெளிவாகி விட்டது.

பி.ஜே.பி.தான் நல்லாட்சியைக் கொடுக்க முடியும் என்று சொல்லி வந்தவர்கள் கருநாடகத் தேர்தலின் முடிவு அது உண்மையல்ல; நல்லாட்சியைக் கொடுக்க பி.ஜே.பி.க்குத் திறனில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டு விட்டது.

மற்றொன்று; பிஜேபி இந்து மதத்தைக் காப்பாற்றக் கூடியது. இந்துக் கலாச்சாரம் பி.ஜே.பி.யால் காப்பாற்றப்பட முடியும் என்பதையும் கருநாடக மக்கள் உதறித் தள்ளி விட்டனர்.

மக்களவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் நடைபெற்றுள்ள கருநாடக மாநிலத் தேர்தல் - சில அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறது.

மதத்தை முன்னிறுத்தும் எந்த அமைப்புக்கும் இங்கு இடமில்லை. மதச் சார்பின்மை தான் இந்தியா வுக்கு உகந்தது என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

மக்கள் வளர்ச்சிமீது அக்கறை கொண்டு செயல்படாமல், மதத்தை முன்னிறுத்திப் பேசுவ தெல்லாம் ஏமாற்று வேலையே! ஓர் ஆட்சியின் கடமை மக்கள் வளர்ச்சியே தவிர மதவாதம் அல்ல; மதம், நம்பிக்கை என்பதெல்லாம் குடி மக்களின் தனிப்பட்ட பிரச்சினை - அதனை அரசியல்படுத்தக் கூடாது என்பதும்தான் வாக்காளர்களின் எண்ண மாக இருக்கிறது.

காங்கிரஸ்மீது ஊழல் குற்றச்சாற்று எனும் குற்றப் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் பிஜேபியின் யோக்கியதை என்ன? ஊழலின் ஒட்டு மொத்த குத்தகையை ஏகபோகமாக அது எடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதையும் வாக்காளர்கள் சரியாகவே புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே ஊழலை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தை முடக்குவது போன்ற நாடகத்தை மக்கள் ரசிக்கவில்லை; வைத் தியரே! முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! என்று பொது மக்கள் முகத்தில் அறைந்து கூறி விட்டனர்.

காங்கிரசாகட்டும், வேறு எந்தக் கட்சியாகட்டும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 65 ஆண்டு காலம் சுதந்திரத்தைக் கொண்டாடித் தீர்த்து விட்டோம். இன்னும் வறுமைக் கோட்டைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறோம்.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் என்ற சுணக்கில் 77விழுக்காடு மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக விவசாயத்தைச் செய்து கொண்டிருந்த விவசாய நாடான இந்தியாவில் அம்மக்கள் விவசாயத் தொழிலை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்.

அடிப்படைத் தேவை இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. சீனாவும் இந்தியாவும் ஒரே கால கட்டத்தில் சுதந்திரம் பெற்றன என்றாலும், இந்தியாவைவிட அதிக மக்கள் தொகை கொண்டு இருந்தபோதிலும் சீனாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை இந்தியா உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் - கற்கவும் வேண்டும். மக்கள் வளர்ச்சி! மக்கள் வளர்ச்சி!! ஆட்சியின் கவனம் இதில் தானிருக்க வேண்டும். 13-5-2013

தமிழ் ஓவியா said...


மதங்கள்


மதங்கள் பிரிவினைக்கும், பேதத் திற்கும் காரணமாய் இருப்பது மாத்திர மல்லாமல், மடமைக்கும், மூட நம்பிக் கைக்கும் காரணமாக இருக்கின்றன. பயத்தின் அஸ்திவாரத்தின் மீது கடவுள் இருக்கிறார் என்றாலும், மூட நம்பிக்கை மடமை என்கின்ற அஸ்தி வாரத்தின்மீதே மதங்கள் இருக்கின்றன.

(குடிஅரசு, 27.7.1946)