Search This Blog

9.5.13

புத்தகமல்ல... அது ஒரு பூக்காடு!

அண்மையில் அருமையானதொரு சுயசிந்தனையின் மலர்த்தோட்டமாக, எண்ண ஓட்டங்கள், ஜீவநதிபோல் பிரவாகம் எடுத்து ஓடிடும் ஓர் அற்புதமான நூல் கிடைக்கப் பெற்று படித்தோம் - சுவைத்தோம் - மகிழ்ந்தோம்!

எழுதியவர் முதிர்ந்த பேராசிரியர்; வரலாற்றுத் துறையில் துறைபோகிய நல்லாசான்; தமிழ் இலக்கியத்தைப் படித்து, ஆய்வு செய்து, எதிலும் தனித்தன்மையோடு கருத்துக் கூறும் தமிழறிஞர்; எல்லாவற்றையும்விட, மற்ற பற்றுகளை இல்லறத்திலிருந்து கொண்டே விட்டுவிட்டு, மனிதப்பற்று, வளர்ச்சி பற்று மட்டுமே முக்கியம் என்று கூறிய தந்தை பெரியார் அவர்களைப் போன்று, மனிதநேயப் பற்றாளர்!

99 வயதை நெருங்கும் வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியம் அவர்கள்!

இயற்கையை எதிர்த்து வெற்றி பெற்று வரும் இடையறாத கருத்தாளரான எழுத்தாளர் அவர்!

மதுரைப் பல்கலைக் கழகம், வடகிழக்கு கவுகாதி பல்கலைக் கழகங்களில் பணியாற்றி (வரலாற்றுத் துறைத் தலைவராக) ஓய்வு பெற்று உடுமலைப்பேட்டையில் வாழ்ந்து வருபவர்.

இன்றும் இந்த வயதிலும் தானே எழுதுகிறார்; தனித்தே சிந்திக்கிறார்!
உட்கார்ந்த இடத்தைவிட்டு அதிகம் எழுந்து நடமாட முடியவில்லை என்றாலும், மனோ வேகமோ என்று சொல்ல முடியாத வேகத்தில் செல்லும் நிலை!

இதில் முக்கால் வயதுள்ள பலருக்கும் இக்காலத்தில் மறதி நோய் - Alzheimer, Amnesia, Demenia - இப்படிப் பல வந்து குழந்தைகளைவிட மோசமான எடுத்து தடுத்து வழி நடத்தும் நிலையான பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஆனால், இவரோ, உரையாடும்போது காட்டும் உற்சாகம், எதையும் உள்வாங்கி பதில் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை நாங்கள் குடும்பத்துடன் சென்று அளவளாவி, அன்பில் விளைந்த அமுதம் பருகி மகிழ்ச்சியுடன் திரும்புவோம்.
எங்கள் நட்பு ஒரு விசித்திர நட்பு!

தனித்த சிந்தனை உள்ளவர்களைக் காண்பது நம் நாட்டில் அரிது. படித்தவைகளை வாந்தி எடுப்பதுதான் கற்றறிந்த மேதை(?)களின் வாடிக்கை இங்கே! இவர்களோ அதற்கு முற்றிலும் விலக்கு.

எல்லாவற்றிலும் புத்தாக்க சிந்தனை, புதுப்புது கேள்விக் கணைகள் - உண்மைகளை பெரியார் பாணியில் சொல்லவேண்டுமானால் - அதன் நிர்வாணத் தன்மையில் எடுத்துரைப்பது.

அவர்களுடன் உரையாடினால் காலம் பறப்பதே தெரியாது!
கோவை வானொலியின் அதிகாரியாக இருந்த திரு.ஸ்டாலின் அவர்கள் இவர்களைப் பேட்டி கண்டு வாராவாரம் ஒலிப்பதிவினை ஒலிபரப்பினார்.
அற்புதமான நவில்தொறும் இலக்கியம் போன்று உரத்த சிந்தனை என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளிவந்துள்ளது. நேற்றுதான் எனக்குக் கிடைத்தது!

படிக்கப் படிக்க பல புதிய சிந்தனைச் சுரங்கத்தின் கருவூலத்திற்கு புகுந்து புதையல் கண்டெடுப்பதுபோல் உள்ளத்தில் இன்பத்தைப் பாய்ச்சியது.
உரத்த சிந்தனை என்று தலைப்பிட்டாலும்கூட உயரிய சுயசிந்தனைப் பூக்காடு அது!

வாழ்வியல் பாடங்கள்! வைகறை வெளிச்சங்கள்!!
நாளை ஒரு சில பகுதிகளைப் பார்ப்போமா! 
                             -------------------------------------8-5-2013

புத்தகமல்ல... அது ஒரு பூக்காடு! (2)
வரலாற்றுப் பேராசிரியர், பேரறிஞர் டாக்டர் ந.சுப்ரமணியன் அவர்களது புதிய புத்தகமான உரத்த சிந்தனைபற்றி நேற்று எழுதியிருந்தோம்.

சுதந்திர சிந்தனையாளரும், 98 வயதிலும் துணிவுடன் எவர் புகழ்வார், எவர் இகழ்வார் என்று கவலைப்படாமல் சுயசிந்தனைகளின் உலைக்கூட சம்மட்டி யாக நொறுக்கித் தள்ளும் இவரது இந் நூல் ஒரு பிரச்சினைக்குரியதாக இருக்கும்.

தின்றதையே தின்று தெவிட்டாமல், இது ஒரு புதிய நோக்கு; அரிய போக்கு என்றால், அது மிகையல்ல.

மற்ற நூல்கள் பல ஒப்பனைகள் - ஒப்புக்காகத் தீட்டப்பட்ட ஓவியங்கள்.
இவருடையதோ தந்தை பெரியார் பாணியில் எக்ஸ்ரே பார்வை - தனித்தன் மையான தகத்தகாய கருத்து ஒளியுடன் உள்ள நூலாகும்!

தமிழ் இலக்கியங்கள், இலக்கிய கர்த்தாக்கள் பற்றியெல்லாம் கூட வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறும் ஆணி அடித்த கருத்துக்கள்!
எடுத்துக்காட்டாக சில:

இந்நூல் பக்கம் 35 முதல் 38 வரை

கேள்வி கேட்ட வானொலி நிலைய அதிகாரி ஸ்டாலின்: இப்படிப்பட்ட மிகப் பெரிய ஒரு தமிழ் இலக்கியப் படைப்பு, மத சம்பந்தமான வேலைகளுக்கு இங்கே வந்த பெஸ்கி என்ற வீரமாமுனிவர், ஜி.யு.போப் இவங்களையெல்லாம் அது கவர்ந்திருக்கிறது. இன்னும் ஆல்பெர்ட் சுவிட்சர் போன்ற அறிஞர்களையெல்லாம் அந்த நூல் கவர்ந்திருக்கு.

சுப்ரமண்யன்: ஆமா... வள்ளுவர் எந்த சமுதாயத்துக்குப் பேசியிருக்கிறார். ஏன் இதையெல்லாம் சொல்லவேண்டிய அவ சியம் அவருக்கு...

ஸ்டாலின்: அது ஒரு முக்கியமான... வாட் ஈஸ் தி நெசசிட்டி.

சுப்ரமண்யன்: திருடாதே, திருடாதே என்று எந்த சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டும்? திருடிக்கொண்டே இருக்கிற சமுதாயத்திற்குச் சொல்லவேண்டும்.

ஸ்டாலின்: அப்ப கள்ளுண்டு...

சுப்ரமண்யன்: ஆ... கள்ளுண்ணுதலி லேயே மூழ்கிப் போய் இருப்பவனுக்குச் சொல்லவேண்டும், அப்பா, கள்ளுண்டு மயங்கிப் போய்ப் பாவம் பண்ணிக் கொண்டே இருக்கிறாயே, அதை நிறுத்து என்று சொல்லுகிறார். நேரடியாகக் கண் டவர் சொல்லுகிறார். அது சங்க காலத்தில்.

இந்த கபிலர் என்னும் பிராம்மணப் புலவர், கள்ளுக் குடித்திருக்கிறார். மாமி சம் சாப்பிட்டிருக்கிறார். அவர் தான் கள்ளுண்டதையே வெளிப்படையாகச் சொல் லுகிறார். என்ன தவறு வந்துவிட்டது? வள்ளுவர்தான் சொல்லுகிறாரே, நான் இத்தனையும் சொல்லுகிறேன். இப்படி நடக்க முடியும் என்று நான் சொல்ல வில்லை, ஒத்துக்கொள்ளுகிறாரே.

ஸ்டாலின்: எப்படி?

சுப்ரமண்யன்: இயலாது என்று அவரே சொல்லுகிறாரே, சொல்லுவது சுலபம். செய்வது கடினம் என்றால், என்ன அர்த்தம். நான் சும்மா சொல்லிவிட்டுப் போகிறேன். இதுபடி நீங்க நடக்க முடியாது என்றுதானே பொருள். அவரே ஏற்றுக் கொள்கிறாரே அதை.

ஸ்டாலின்: இந்தக் கருத்தை இப்படி எடுத்துக்கிட்டுதான் நிறைய பேரு...

சுப்ரமண்யன்: இதைச் சொல்லவேண் டியது என்னுடைய கடமை. சொல்லி விட்டேன். நடக்க முடியுமானால் நடங்கள், அவ்வளவுதான்.

ஸ்டாலின்: இதை கிரேன்டடா எடுத் துக்கிட்டு, திருக்குறளைப் பற்றி ஓகோ, ஆகான்னு சொல்லிட்டு, இறங்கிப் போன பிறகு, அதை சொன்னதுக்கு மாறா சில பேரு செய்யலாமே, நடக்கலாமே.

சுப்ரமண்யன்: இந்த நூலில் சொன்ன ஒரு விதியைக் கொண்டு வாழ்க்கையை நடத்திவிட முடியாது. வரலாறு என்பது வேறு; அறங்கூறுதல் என்பது வேறு.
ஆத்திச்சூடி எல்லாம் அறம் செய விரும்பு, அறஞ்செய்ய விருப்பம் இருக்கிற தய்யா, எப்படி செய்யறது? கையில் இருந்தாதானே கொடுக்க. நானே ஒரு பிச்சைக்காரன். எவனுக்கு போடறது? ஒரு பிச்சைக்காரனைக் கூப்பிட்டு, நீ அறஞ்செய விரும்பு என்றால், அது... அவன் எங்க போவான். இதையே, இந்த மாதிரி பேசுகிறது சில பேருடைய பழக்கம். அவர் யார்? வள்ளுவர்.
ஆங்கில இலக்கியத்திலேயும் உண்டு. தமிழர்கள்தான் பெரிதுபடுத்திக் கொண் டிருக்கிறார்கள்.  இதை.

ஸ்டாலின்: இப்ப ஆங்கிலத்தில் கப் லெட்ஸ் உண்டுங்களா?

சுப்ரமண்யன்: வள்ளுவரைப் போலவே இதே நூலைப் போலவே ஆங்கில நூல் ஒன்று இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், அந்த நூல் என்ன பெயர், அதன் ஆசிரியர் யார் என்பதை, என்னுடைய திருக்குறள் கட்டுரை முகவுரையில் எழுதியிருக்கிறேன். அந்த நூல் முப்பது, நாற்பது வருஷங்கள் பிரமாதமாக அடிபட்டி ருந்ததொரு காலத்தில், பிறகு அது முற்றிலும் மறக்கப்பட்டது.

ஸ்டாலின்: ஏன்?

சுப்ரமண்யன்: ஆ... இதுதான் பண் பாட்டு வேறுபாடு. இன்றைக்கும் தமிழர்கள் திருக்குறளின் ஒரு பிரதியை முன்னால் பிடித்துக்கொண்டு, பின்னால் இஷ்டம்போல் வாழ்வார்கள். ஆங்கிலேயர்கள் அப்படி செய்யவில்லை. அந்த அறநூலைக் கட்டி தூர வைத்துவிட்டு, நான் வாழ்க்கை எதற்கு இடம் கொடுக் கிறதோ, அப்படி வாழ்வேன் என்று வாழ்கி றார்கள்.
நம்முடைய வாழ்க்கையை மறைப்ப தற்கு ஒரு ஸ்கிரீன் திருக்குறள்.

ஸ்டாலின்: இப்ப ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலே, சேலம் நகராட்சியில், ராஜாஜி சேர்மனா இருந்தாரு. அப்போ ப்ரொகிபிஷனை இம்ப்ளிமென்ட் பண் ணாரு.

சுப்ரமண்யன்: இந்தியர்கள் செய்து கொண்ட எந்தக் காரியத்தையும், ஆங்கி லேயர்கள் தடுக்கவில்லை. அதுவும் முக் கியமாக, குவீன் விக்டோரியா வந்து, உங்களுடைய சமுதாய பழக்கவழக்கங் களில் நான் தலையிடுவதில்லை என்று கூறிய பிறகு, அவர்கள் இந்தியர்களின் காரியங்களில் தலையிடுவதில்லை. காரணம் 1857 இல் நடந்த கலகம்.

ஸ்டாலின்: சிப்பாய் கலகம்...

சுப்ரமண்யன்: அந்த கலகத்துக்குப் பிறகு, அவர்களும் தீர்மானித்து விட்டார் கள். இவர்கள் எப்படியோ வாழட்டும். எப்படி வாழ்ந்தால் நமக்கென்ன? என்று விட்டுவிட்டார்கள். அதாவது இந்த சமு தாயத்தைச் சீர்திருத்துகிற முறையெல் லாம் அவர்கள் கைவிட்டுவிட்டார்கள். நீங் களே எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள்.

ஆகவே, இவர்கள் விருப்பம்போல் வாழ ஆரம்பித்தார்கள்.

@@@@@@@@@

இந்நூல் பக்கம் 76 முதல் 80 வரை 

ஸ்டாலின்: அய்ரோப்பாவில் தொழில் புரட்சி நடந்தது. பத்தொன்பதாம் நூற் றாண்டில்.
சுப்ரமண்யன்: எங்கே சொல்லுங்கோ.
ஸ்டாலின்: அய்ரோப்பாவில்.
சுப்ரமண்யன்: ஆ...ஆ... ஆமா.... தொழிற்புரட்சியா...
ஸ்டாலின்: ஆமா... அப்ப இந்த பிரிண் டிங் டெக்னாலஜி எல்லாம் அப்பதான் வந்தது.
சுப்ரமண்யன்: அ...
ஸ்டாலின்: அதே நேரத்திலதான். அமெரிக்கா ஒரு தனி சுதந்திர நாடாகவும் ஆச்சு. அப்போ அந்த நேரத்துல, அய்ரோப் பியன் லேங்க்வேஜ்ல மேற்கத்திய மொழி கள்ல நிறைய இலக்கியப் படைப்புக்க ளெல்லாம் நிறைய வந்திட்டிருந்தது.
சுப்ரமண்யன்: அ....
ஸ்டாலின்: கூட இந்த அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுனால், ரொம்ப தீவிரமாக வளர்ச்சி அடைஞ்சுது. அதே சமயத்துலதான்,மேற்கத்திய செல் வாக்கு கல்கத்தாவில் மய்யங்கொண்டது. அதனுடைய விளைவா, கீதாஞ்சலி எல்லாம் வந்தது.
சுப்ரமணியன்: அ..அ...
@@@@@@@@@
ஸ்டாலின்: அத மாதிரி மேற்கத்திய தாக்கத்தினால, தமிழ்ல என்ன தரமான ஒரு இலக்கியப் படைப்பு வந்திருக்குது?

சுப்ரமணியன்: தொழிற்புரட்சி 18 ஆம் நூற்றாண்டு இறுதிக் காலத்தில் இங்கி லாந்தில் தோன்றியது. அதே, ஸ்டீம் லோக்கமேட்டிவ் அதுல ஆரம்பித்தது தொழிற்புரட்சி. ஆனால், பிரின்டிங்க் டெக் னாலஜி என்பது 15 ஆம் நூற்றாண்டி லேயே உண்டு.

காக்ஸ்டன் பிரின்டிங் 16 ஆம் நூற்றாண்டு. இரண்டு நூற்றாண் டுக்கு முன்னாலேயே பிரின்டிங் உண்டு. இந்தத் தொழிற்புரட்சிக்கு முன்னால. ஆகவே, அது தொழிற்புரட்சியினுடைய பகுதி அன்று பிரின்டிங் டெக்னாலஜி. அது முந்திப் போனது. தவிர, தொழிற்புரட்சி நடந்த அய்ரோப்பாவினுடைய பண்பாட்டுத் தாக்கம், இந்தியாவின் மீது, அதிகமாக இல்லை. தாக்கமில்லை.
அந்த தொழிற் புரட்சிக்குப் பின்பு இருக்கக்கூடிய மனப் பான்மை இருக்கிறதே, அதை இந்தியப் பண்பாடு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதன்  வெளிப்படை சில வேஷங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அதற்கு உள்ளீடு கொஞ்சம்கூட, மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறது. மனதார, தொழிற்புரட்சிக்குள் போகவில்லை அது.
தொழிற்புரட்சியினால் வரக்கூடிய சில.... இந்த சமுதாயப் பலன்கள் இருக்கின் றனவே, அவற்றை மட்டும் மேற்கொண் டது. டிரான்ஸ்போர்ட் முதலானவற்றா லெல்லாம் எடுக்கப்பட்ட பலன்.

ஸ்டாலின்: எஜுகேஷன்.....

சுப்ரமண்யன்: ஆமா. உதாரணமாக, வேகமாக ஓர் இடத்துக்குப் போக வேண்டு மானால், ஒரு டிரான்ஸ்போர்ட். மோட்டார் சைக்கிள்ல போலாம். ஆனால் அங்க மோட்டார் சைக்கிள்லே அவன் போய் என்ன காரியம் பண்ணுகிறான். மேனாட் டிலே... நம் நாட்டில் ஏறத்தாழ மோட்டார் சைக்கிள்ளயே பழைய புரோகிதர் அதிலயே வந்து இறங்குவார். இங்க வந்து அந்த வேகம் வந்திருச்சுன்னு சொல்லுவார். இந்த மேனாட்டுக் கருவிகள் இருக்கிறதே, அது எதுக்குவேண்ணாலும் பயன்படும்.

ஸ்டாலின்: யூனிவர்சிட்டி வந்துதே.....

சுப்ரமண்யன்: யுனிவர்சிட்டி வாயிலாக நீங்கள் பழைய கருத்துக்களையும் சொல் லிக்கொண்டே இருக்கலாம். இன்றைக்கு அதுதான் நடக்கிறது. புது கருத்துக் களையும் சொல்லலாம். நீங்க இங்கிலீஷ் லயும் பழைய கருத்துக்களை சொல்லலாம். தமிழிலயும் சொல்லலாம். அப்ப இங்கி லீஷ்ல யுனிவர்சிட்டின்னு பெயர் கொடுத்து, ஷர்ட்டைப் போட்டுக்கொண்டு, டை கட்டிக் கொண்டு போனால், தொப்பிக்குள்ளேயே என்ன இருக்கிறது என்றால், ஒரு ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கருத்துக்கள். அது வெளியே போகாமல் காப்பாற்றுகிறது.

ஸ்டாலின்: நீங்கள் கொறச்சு மதிப் பிடறீங்கன்னு நெனக்கறேன்.

சுப்ரமண்யன்: உண்மையாக மதிப்பிட் டால், கொஞ்சம் கொறச்சாப்போறது. உங்களுக்கு இஷ்டமானால் கொஞ்சம் மாத்திச் சொல்லலாம். அது ஆனால் உண்மையா  இருக்காது. தாகூருடைய மொத்த கவிதை, தொழிற்புரட்சிக்கு நேர்மாறா இருந்தது.

ஸ்டாலின்: மாடர்னிசத்துக்கு எகைன்ஸ்டானது.....

சுப்ரமண்யன்: நேர்மாறானது. இது..... மனிதன், இயற்கையை வெல்லுவதற்கு, இண்டஸ்ட்ரியல் ரெவலூஷன். தாகூரு டைய கவிதை முழுவதும், இயற்கையை அனுபவிப்பதற்கு, டு என்ஜாய் நேச்சர். அண்ட் நாட் டு மாஸ்டர் இட். இண்டஸ்ட் ரியல் ரெவலூஷன் ட்ரைஸ் டு மாஸ்டர் நேச்சர். தாகூர் ட்ரைஸ் டு அண்டர்ஸ் டாண்டிட். பிக்கம் பார்டாஃப் இட். அதுதான்.
இதற்கும் அதுக்கும் தொடர்பே கிடையாது. அதனால்தான் தாகூருக்கு அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும், பெரும் புகழ் ஏற்பட்டதற்கு காரணமே இதுதான். அவருடைய பாரம்பரியத்திலி ருந்து முற்றிலும் விலகிப்போய், இயற்கை யோடு ஒன்றாக சேர்ந்து போனாரே, எப்படி முடிந்தது என்பது அவருடைய வியப்பு. அது நமக்கும் உள்ள வியப்புதான். ஆனால் தாகூர் இன்னக்கி அதைச் சொல் லுகிறது. சங்க இலக்கியத்தை தமிழில் படித்தவனுக்கு ஒரு வியப்பும் தராது.

ஸ்டாலின்: ஏன்?

சுப்ரமண்யன்: ஏனென்றால் சங்க இலக்கியத்தில் இயற்கைதான் பேசப்பட்டி ருக்கிறது தமிழிலே. அவர் வங்காளியில் சொன்னதுபோல், தமிழில் சொல்லியி ருக்கிறார்கள். எனக்கு என்னுடைய தாய் மொழியான தமிழில் சொல்லப்படும்போது, அந்த இயற்கையோடு நானும் ஒன்றிப் போகிறேன்.

ஸ்டாலின்: அப்போ, மாடர்ன் ட்ரெண்ட்-னு சொல்றாங்...

சுப்ரமண்யன்: மாடர்னே இல்ல அது. இயற்கையை மாஸ்டர் பண்ணி, தனக்கு அடிமை ஆக்குவது. கலை என்பது மாடர்ன் ஆர்ட். நேச்சரை இழுத்துப் பிடித்து தனக்கு அடக்கி அதனால் வரும் பலன்களை தான் சமுதாயத்தில் பயன் படுத்த பாக்கறது மாடர்ன் இண்டஸ்ட்ரி யல்... அப்போ அதை போரடிக்கறது இருக்குது டிஸ்கஸ்டிங் (disgusting) ஃபெர்ட் அப் (fed up) வித் இட் அப் படீன்னு நெனக்கறவங்களுடைய மனப் பான்மை பாருங்கள்....

ஸ்டாலின்: விருப்புக்கும், சலிப்புக்கும் வித்யாசம் இருக்குது.

சுப்ரமண்யன்: சலிப்பு கொஞ்சம் மிகுந்தால் வெறுப்பாகும். சலிப்புதான் தொடக்கம். சுதந்திரன் என்று ஒருத்தன் சொல்லிக் கொண்டே இருப்பான். சுதந் தரமா இருந்து அதனால் தன்னால் முடிய வில்லையே என்று தெரிந்து, மறுபடியும் மற்றவர்களுடைய தயவுக்கு வருவான். ஆகவே, சுற்றிக் கொண்டுதான் இருக்கும் வாழ்க்கை.

@@@@@@@@@

ஸ்டாலின்: புதுசா உருவான அமெ ரிக்கால, நல்ல லிட்ரேச்சர், நல்ல ஆர்ட்டு, நல்ல..,.. விளைவுகள்லாம் வந்திருக்கே.

சுப்ரமண்யன்: இருக்கிறது.

ஸ்டாலின்: உலகப் புகழ்பெற்ற எழுத் தாளர்களெல்லாம் அங்க இருந்தாங்களே.

சுப்ரமண்யன்: தற்காலத்து க்ளாசிசி சம் என்பது, இடைக்காலத்துல, பழைய காலத்து கிளாசிசிசம்தான் அது. ஆனால் கிளாசிக்கசல்தான். அதே பழைய கிளா சிக்கலே, தற்காலத்து சூழ்நிலை பாதிப்பு னாலே, அது கொஞ்சம் மாறி இருக்கும். அவ்ளோதான். வேறொன்றுமில்லை. ஆனால், அந்த ஆர்ட்டினுடைய கருவிகள் இருக்கிறதே, அதனுடைய முடிவு எல்லாமே கிளாசிக்கலா இருக்கும். வேண்டுமென்றே பிறழ்ந்து போய்விட்டால், அப்பொழுது தான் ரொமான்டிக் வரும்.

அய்ரோப்பியனிசம், அமெரிக்கனிசம் என்பதெல்லாம், இந்தியனிசத்தினுடைய பகுதியாகவே முடியாது. இஸ்லாமிக், ஹிண்டு, மாடர்னிசத்த தடுக்கற சக்திகள், அதுல இஸ்லாம் வெளிப்படையாகத் தடுத்து சில சமயம் தோற்றுப்போகும். இந்து தர்மத்தினுடைய ஒரு தனிப்பட்ட சிறப்பு என்னவென்றால், தடுப்பது தெரியாமல் தடுத்து, தான் மறையாமல் நின்று, எப்பொழுதும்போல் இருந்து, வெளி வேஷம் மட்டும் மாடர்ன்போல் இருந்து, உள்ளூர் பழமையக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது.

ஸ்டாலின்: சர்வைவ் பண்றது.

சுப்ரமண்யன்: ஆம். ஆதாரமான பண்புகளையெல்லாம் விட்டுக் கொடுத்து விட்டார்கள். இப்ப அகம் புறம் என்ற வேறுபாடு இல்லாமல் போய்விட்டது. லவ், அண்ட் வார், அந்த ஹீராயிக் போய் விட்டது. அதைப் பார்க்கவே இல்லை.
இப்பொழுது புதிதாக ஒன்று வந்தது. அரசியல் என்று......

ஸ்டாலின்: அது இரண்டாம் உலகப் போருக்கு அப்புறம்..

சுப்ரமண்யன்: இல்ல.....அ...ஏன்? சுப்ரமணிய பாரதி எப்ப இறந்தார்? ரெண்டாவது உலகப்போருக்கு பிறகா?

ஸ்டாலின்: இல்ல.அதுக்கு முன்ன.

சுப்ரமண்யன்: முதல் உலகப்போருக்கு முன்னால...ஆ...பின்ன... சுப்பிரமணிய பாரதிதானே அரசியல்லபோய்... கவிதை... ஆகவே, இதெல்லாம் என்ன? கிளாசிக்கல் எடத்தில் வரப்பட்ட ஒரு போர்..தனக்கு...

ஸ்டாலின்: சலிப்பு....

சுப்ரமண்யன்: அ...சலிப்பு, அலுப்பு இதவிட்டுவிட்டு விலகி, வேறெங்கியாவது போலாம் என்று, அப்படி போனது, எங்கே போனார்கள். எங்கே போகிறோம் என்று தெரியாமலே ஒரு பாலைவனத்துக்குள் போய்க்கொண்டு.....

@@@@@@@@@

இந்நூல் பக்கம் 124

ஸ்டாலின்: நீங்க எத்தனை நூல்கள் எழுதி யிருக்கீங்க?

சுப்ரமண்யன்: நானா? அண்மையில் நானே ஒரு கணக்குப் போட்டுப் பார்த் தேன். கடைசி நூல். நூத்தி எழுபதாவது நூல். நூத்தி எழுபது நூல்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில், அறுபத்து மூன்று நூல்கள் ஆங்கிலத்திலெயும், மிச்சமெல்லாம் தமிழ்லெயும் எழுதியி ருக்கேன். தமிழ்லே எழுதின நூல்கள்லே பிறர்வாழ்க்கை வரலாறு, என் வாழ்க்கை வரலாறு, பழைய நூல்களினுடைய பதிப்பு உரையோடு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள்

ஸ்டாலின்: ஓ.....க்ரியேட்டிவ் ரைட் டிங்கும்...

சுப்ரமண்யன்: இதெல்லாம் க்ரியேட் டிவ் ரைட்டிங்....நாடகங்கள், சிறுகதைகள் அப்பறம் க்ரியேட்டிவ் க்ரிட்டிசிசம், கவிதைகள். இதெல்லாம் க்ரியேட்டிவ் அதாவது, க்ரிடிக்கலாக எழுதினதெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரைகள், மத்த நூலிலே பதிப்பித்ததெல்லாம்.

ஸ்டாலின்: நீங்க எப்ப பிறந்தீங்க? இப்ப என்ன வயசு?

சுப்ரமண்யன்: 1915 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆவது நாள் பிறந்தேன்.

@@@@@@@@@

வழக்கமாக படிக்கும் இலக்கிய ஆய்வுகளைவிட இது புதிய பார்வையுடன் அமைந்த நூல் - விவாதத்திற்கு வித்துகள்!
நமது வாழ்த்துகள் - இருவருக்கும்!
                      ------------------------------"விடுதலை” 9-5-2013

38 comments:

தமிழ் ஓவியா said...


1098


தஞ்சை வல்லம் - பெரியார் மணியம்மைப் பல் கலைக் கழகத்தில் பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் 6.5.2013 அன்று தொடங்கி 11.5.2013 முடிய ஆறு நாள்கள் நடைபெறுகின்றது. 8 வயது முதல் 12 வயதுவரை உள்ள இருபால் பிஞ்சுகளுக்கான பயிற்சி முகாமிது. 120 இளஞ் சிட்டுகள் இம்முகாமில் கலந்துகொண்டு சிறகடித் துப் பறந்து கொண்டிருக்கும் காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும்.

பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வந்துள்ளார்கள் - முதன்முதலாகப் பெற்றோர் களும் தங்கள் பிள்ளை களைப் பிரிந்துள்ளனர். இரு தரப்பார்க்கும் கிடைத்த அனுபவம் இது.

இந்த முகாமை முடித்துப் பிள்ளைகள் வீட்டுக்குத் திரும்பும்போது பல மாற்றங் களை உடையவர்களாக இருக்கப் போவது உறுதி.

விடியற்காலையில் எழுந் திருந்து ஜாக்கிங்கில் ஆரம் பித்து இரவுவரை பிஞ்சுகள் என்பதை மனதிற்கொண்டு திட்டங்கள் பலாச் சுளையை உண்பதுபோல் விளையாட் டுப் போக்கில் புகட்டும் கருத் துக்கள், பழக்க வழக்கங்கள் அவர்களின் வாழ்க்கையில் என்றென்றும் நினைத்துப் பார்க்கத் தக்கதாகவும், திருப்பங்களைக் கொடுப்ப தாகவும் அமையக்கூடியது என்பது மிகைபடக் கூறுவ தல்ல.

முகாமுக்குப் பிறகு பிள்ளைகள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களைப் பெற் றோர்கள் மேலே கொண்டு செலுத்த முன்வரவேண்டும் என்பது எங்களது கனிவான வேண்டுகோள்.

பிள்ளைகளிடத்தில் புதைந்து கிடக்கும் திறன் களை வெளியில் கொண்டு வந்திருக்கிறோம். கூச்ச சுபாவத்தைப் போக்கடித் திருக்கிறோம். சாப்பிட அடம் பிடிக்கும் போக்கு காணாமல் போயிருக்கிறது. நேரத்தோடு எதையும் செய்யும் நேர்த்தி அவர்களோடு பின்னிப் பிணையச் செய்திருக்கிறது.

விடுகதைகள், பொது அறிவுக் கருத்துகள், வினா-விடைகள், அறிவியல் தக வல்கள், செய்முறைகள், கலை நிகழ்ச்சிகள் என்று அவை விரியும்.

ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டவேண்டும். Child Line என்ற ஒரு அமைப்பு தேசிய அளவில் அமைந்த ஒன்றுதான். தஞ்சை மாவட்டத்தில் அதன் மய்யம் (Nodel) வல்லம் பெரியார் மணியம் மைப் பல்கலைக் கழகம் ஆகும். இப்பல்கலைக் கழகத் தில் பணியாற்றும் பேராசிரி யர்கள் இந்தத் தொண்டு நிறுவனத்தில் தங்களை ஒப்படைத்துக்கொண்டு செய்துவரும் பணி மிகவும் மெச்சத்தகுந்தது.

குழந்தைகளைத் துன் புறுத்துவது (பெற்றோர்களாக இருந்தாலும்) குழந்தைகள் காணாமல் போனால் கண்டு பிடித்துக் கொடுப்பது - குழந்தைத் தொழிலாளர்கள் எனும் கொடுமை, பிச்சை எடுக்க வைப்பது, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி வேலைக்குச் செல்ல வைப் பது, 18 வயதுக்கு முன் பெண் களுக்குத் திருமணம் செய் வது - இவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு தொலைப்பேசி எண் இருக்கிறது.

அந்த எண் 1098 என்பதாகும். அதனைச் சுழற்றினால் Child Line அமைப்பினர் உதவிக் கரம் நீட்ட ஓடோடி வருவார் கள். நேற்று அந்த அமைப் பைச் சேர்ந்தவர்கள் பல அரிய தகவல்களை முகாமில் வழங் கினர்.

அடடே, நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை தான் இன்னும் எத்தனை! எத் தனையோ!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


இந்தியாவும், இந்துத்துவா வாதிகளும் திரும்பிப் பார்க்கட்டும்!


இந்தியாவும், இந்துத்துவா வாதிகளும் திரும்பிப் பார்க்கட்டும்! ஜாதி அடிப்படையில் வேற்றுமை காட்டுவது சட்டப்படி குற்றம் பிரிட்டனில் மசோதா நிறைவேற்றம்

லண்டன் மே 9- பிரிட்டனில் 4 லட்சம் தாழ்த்தப் பட்டோர் வசிக்கும் நிலையில் ஜாதி அடிப்படையில் வேற்றுமை காட்டுவது சட்டப்படி குற்றம் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது,

பிரிட்டன் நாட்டில் 4 லட்சம் தாழ்த்தப்பட்டோர் வசிக்கிறார்கள் அவர்கள் அத்தனைப் பேருக்கும் வெற்றி பெற்றுத் தரும் விதமாக, சட்டப்பாதுகாப்பு கொடுப்பதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இரு முறை வாக்களித்துள்ளது.

ஜாதி அடிப்படையில் வேறுபாடு காட்டுவது சட்டப்படி குற்றம் என்று ராணியின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. 2010-ஆம் ஆண்டின் சமத்துவச் சட் டத்தின் ஒரு பகுதியாக ஜாதியையும் ஒரு பிரி வாக்கி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு சரித்திரம் படைத்துள்ளது.

நாடாளுமன்ற பிரபுக்கள் அவையில்...

நாடாளுமன்ற பிரபுக் கள் அவையில், கடின மான கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டன. நாங் கள் எங்கள் நிலைமையை மறு பரிசீலனை செய் தோம். அதன்பிறகு ஜாதி தொடர்பான சட்டத்தை அறிமுகப்படுத்த ஒத்துக்கொண்டோம் என்றார் சமத்துவத்துறை அமைச்சர் ஜோ.ஸ்வின்சன். காமன்ஸ் சபையில், இது தொடர்பாக அரசு தனது கருத்தைத் திரும்ப பரிசீலித்துள்ளது. இந்த மசோதா அதன் கடைசி நிலையைத் தாண்டி, ராணியின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

ஜாதிவேறுபாட்டுக்கு எதிராக தெற்கு ஆசியா விற்கு வெளியே இம்மாதிரிச் சட்டங்கள் இயற்று வதில், பிரிட்டன் தான் முதல் நாடாகும். நான்கு லட்சம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சட்டப் பாது காப்பு கொடுப்பதற்காக பிரிட்டனில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

ஜாதி உணர்வுடைய ஆசிரியர்கள்

வருங்காலத்தில் ஜாதியானது இனத்தின் ஓர் அங்கமாக கருதப்படும். பிரிட்டனில் உள்ள ஆசிரி யர்கள் வாழ்க்கை இந்த ஜாதி வெறுப்பு உணர்ச்சி களால் மங்கிப்போய் இருந்தது. அவர்கள் வாழ்க் கையில் இனி புது நம்பிக்கை ஏற்படும் என்று தேசிய ஜாதி மதமற்ற அமைப்பின் ஆணையர் கெய்த் போர்டியஸ்வுட் என்பவர் கூறியுள்ளார்.

மற்ற மற்ற நாடுகளுக்கு ....

பன்னாட்டுத் தலித் களின் ஒன்றிணைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான (Rikke Nohrlind) ரிக்கி நோர் லிண்ட், இந்த முடிவா னது மற்ற நாடுகளுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும். ஜாதி வேறு பாடு ஒரு உலகளாவிய பிரச்சினை. உலகத்தின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் பாதித்துள்ளது என்று சொல்லியுள்ளார்.

பிரிட்டிஷ் அரசு தேசியப் பொருளாதார சமூக நிலையம் (NIESR) ஒன்றை அமைத்து இப்பிரச் சினை தொடர்பான ஆய்வுகளைக்கண்டறிந்து அளிக்க ஆணையிட்டதன் பேரில் 2010 டிசம்பரில், ஜாதி வேறுபாடும் கிரேட் பிரிட்டனில் அதனால் ஏற்படும் தொல்லைகளும் என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியாவிலிருந்து வந்துள்ளவர்களுக்கு ஜாதி உணர்ச்சி

அந்த ஆய்வு கீழ் ஜாதி வகுப்புகள் 50 ஆயிரத்தி லிருந்து 2 லட்சம் வரை இருப்பதாகவும், அதில் இந்திய துணைக்கண்டத்திலிருந்து வந்துள்ளவர்களுக்கு ஜாதி உணர்ச்சி பெரிதும் இருப்பதாகவும் கூறியது.

பிரிட்டனில் உள்ள இந்து அமைப்புகள், இம்மாதிரியான சட்டங்கள், இந்து சமுதாயம் முழுவதும் அமைப்பு ரீதியாக வேறுபாடுகளைக் கொண்டவை என்று முத்திரை குத்தப்படும். இந்து சமுதாயம் ஜாதி அமைப்பைவிட்டு விலகி வருகிறது.

தற்கால இந்துக்கள் யார் எந்த ஜாதி என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. இந்தச் சட்டம் நம்மை பின்னோக்கி இழுத்துச்செல்லும் என்று அர்ஜன் வக்கரியா என்ற இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு பிரதிநிதி கூறியுள்ளார்.

இனத்தின் ஒரு பகுதியாக ஜாதி

எதிர்ப்புகள் எப்படி இருந்த போதிலும், அண்மையிலான சில சமாதானங்கள் பேரிலும், அரசு பிரிவு 9(5)ன் கீழ், இனத்தின் ஒரு பகுதியாக ஜாதி சேர்க்கப்படும்.

இந்தப் பிரச்சினை பிரிட்டனில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களுக்கான ஒரு பிரச்சினை. ஆகவே தான் நாங்கள் இப்பிரச்சினை பற்றி அவ்விரு குழு மக்களிடமும் பேசி செயல்படுகிறோம். அதற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்ற ஜோ.ஸ்வின்சன் மேலும் கூறினார்.

அரசு, மேலும் சமத்துவ மற்றும் மனித உரிமை ஆணையத்தை இது பற்றி திரும்பவும் ஆராய்ந்து பிரிட்டனில் ஜாதி வெறுப்புணர்ச்சியின் இயல்புகள், காரணிகள் ஆகியவைகளைக் கண்டறிந்து இந்த ஆண்டு கடைசிக்குள் கொடுக்கப்பட வேண்டுமென்று அரசு கூறியிருக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஃபுல்லர் (Richard Fuller) இது ஒரு நேரடிப்பிரச்சினை. வேலை செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவது தவறு. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. முடிவும் முதலுமாக இது இருக்கட்டும் என்று சொல்லியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


உரிமையுண்டு


எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்து என்ற பெயரால் எதையும் எடுத்துச்சொல்ல உரிமையுண்டு. அதைத் தடுப்பது அயோக்கியத்தனம்.

(விடுதலை, 2.4.1950)

தமிழ் ஓவியா said...


கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?


தமிழ்நாடு சட்டப்பேரவையில் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதன்போது கல்வி அமைச்சரோ அல்லது முதலமைச் சரோ முக்கியமான ஒரு பிரச்சினைமீது என்ன சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும், குறிப்பாக சமூக நீதியாளர்கள் மத்தியிலும், சிறப்பாக பயிற்சி பெற்று ஆசிரியர் பணிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் இலட்சோபலட்ச ஆசிரியர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நுழைவுத் தேர்வு என்பது அறவே கிடையாது.

கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்ற நிலையில், மாநில உணர்வுகளையும், நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ளாமல் தானடித்த மூப்பாகவே மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) அறி வுறுத்தலின்படி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் 2012 ஜூலை 12 மற்றும் அக்டோபர் 14 ஆகிய இருமுறை தேர்வுகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன. அப்படி நடத்தப்பட்ட இரு தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள அம்சங்கள் பின்பற்றப்படவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாற்றாகும்.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இந்த மிக முக்கியமான பிரச்சினை குறித்து விடுதலையில் (2.4.2013) விரிவான அறிக்கை ஒன் றினை வெளியிட்டு இந்தப் பிரச்சினையில் நடந்துள்ள விதிமீறலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

அதன் பிறகுதான் ஊடகங்களில் இந்தப் பிரச்சினை ஓரளவு வெளிவர ஆரம்பித்தது. முழு அளவில் வெளிவரவில்லை என்பதுதான் உண்மையாகும்.

தகுதித் தேர்வு எழுதும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர் களுக்கான மதிப்பெண்கள் தனித்தனியே வரையறுக் கப்பட்டு, விளம்பரம் செய்யப்படவேண்டும்.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகமும் (NCTE) இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகிதம், தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவிகிதம், அசாம் மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவிகிதம், மற்றவர்களுக்கு 55 சதவிகிதம், பிகாரில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவிகிதம், மற்றவர் களுக்கு 55 சதவிகிதம், ஒடிசா மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவிகிதம், மற்ற பிரிவினருக்கு 50 சதவிகிதம் மதிப்பெண்கள் என்று தனித்தனியே வரையறை செய்து, விளம்பரமும் செய்து அதற்குப் பின் தகுதித் தேர்வினை நடத்தியுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் தனித்தனியே ஒதுக்கீடு செய்யாமல் ஒட்டுமொத்தமாக முன்னேறிய உயர்ஜாதி யினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், முசுலிம்கள், அருந்ததியர் ஆகிய அனைவருக்குமே ஒட்டுமொத்தமாக சகட்டுமேனியாக 60 சதவிகித மதிப்பெண்கள் என்று வரையறுத்திருப்பது அடிப்படை யிலேயே சட்ட விரோதம் - விதிமீறல் அல்லவா!

இந்த அடிப்படையில் தேர்வு நடத்தி, 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு எல்லாம் (19 ஆயிரம் பேர்களுக்கு) பணி நியமனம் செய்திருப்பது சட்ட விரோதம் என்பது மிகவும் வெளிப்படையே!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்விலும் விதிமீறல் நடந்ததைச் சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.நாகமுத்து அவர்கள் பணி நியமன ஆணையை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்.

இப்பொழுது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் களின் தகுதித் தேர்விலும் - பணி நியமனத்திலும் விதிமீறல் சட்ட மீறல் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது.

மிக முக்கியமான பிரச்சினையில் நடைபெற்றுள்ள இந்தத் தவறினை சரி செய்யவேண்டியது தமிழ்நாடு அரசின் மிக முக்கிய கடமையாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தலைவர் திரு. சவுந்தரராஜன் அவர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பியபோது, கல்வி அமைச்சர், இந்தப் பிரச்சினை முதலமைச்சரின் கவனத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், கல்வி மானிய கோரிக்கை தொடர்பான விவாதத்தில் சமூகநீதியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை ரத்து செய்து, இட ஒதுக்கீடு முறை விதிகளை சரிவரப் பயன் படுத்தி மறு தேர்வு நடத்துவதற்கு ஆவன செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள் கிறோம் - வலியுறுத்துகிறோம்.

தமிழ் ஓவியா said...

பழகு முகாம் மூன்றாவது நாளில்
பத்தே நிமிடங்களில் பெரியார் பிஞ்சுகள் அத்தனை பேரும் நடிகர்கள்!
சைல்டு லைன் அமைப்பினரின் அரிய சாதனை!


குழந்தைகளுக்கு திருக்குறள் கையேடு வழங்கப்பட்டது

தஞ்சை, மே 9- பெரியார் பிஞ்சுகள் அனைவரும் வெறும் பத்து நிமிடங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டு, தனித்தனி மூன்று குழுக்களாக மேடை யேறி நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழகத்தில் கடந்த 6.5.2013 தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பெரியார் பிஞ்சுகளின் நண்பர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவது போலவே, நிகழ்ச்சிகளும் கருத்தும் தலைப்பும் கூடிக்கொண்டே இருந்தது. நேற்றும் (8.5.2013) அதிகாலையில் தொடங்கி இரவு படுக்கச் செல்லும் வரை நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் பிஞ்சுகள்

அதிகாலையில் எழுந்து நடைபயிற்சி, கராத்தே, சிலம்பம், யோகா, காலை உணவு ஆகியவை முடிந்தவுடன் சிட்டுக்குருவியை போன்றே துறுதுறு வென்றிருந்த ஒவ்வொரு குழந்தையும் அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று அவரவர் குழு ஆசிரியர்களையும், மற்றவர்களையும் கேட்டுத் துளைத்துக் கொண்டேயிருந்தனர்.


ஆர்வமுடன் நூல்களைப் படிக்கும் பிஞ்சுகள்

அவர்களில் சிலர் இரு கைகளையும் கூப்பி, முதுகை வளைத்து இரு கால்களையும் சேர்த்து வைத்து பார்க்கிற வர்களுக்கு எல்லாம் வணக்கம் கூறி குபீர் சிரிப்பு களை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அப்படிப் பட்ட உற்சாகச் சிட்டுகளை சுமந்து கொண்டு இரண்டுபேருந்துகள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் வளாகத்துக்குச் சென்றன. அங்கே மரங்களில் சில குரங்குகள் தென்பட உற்சாகம் இன்னமும் கூடித்தான் போனது.

வாழ்க! வளர்க! உயர்க! வெல்க!

முதல் வகுப்பை, ஆளுமைத் திறன் பயிற்சியாளர் பி.கே.பாலாஜி, லதா பாலாஜி ஆகியோர் ஒழுங்கு செய்தனர். முதலில், குழந்தைகள் நான்கு குழுக் களாக பிரிக்கப்பட்டு, எந்தக் குழு அதிக ஓசை எழுப் புகிறது என்ற போட்டி வைக்கப்பட்டது. கேட்கவா வேண்டும் அந்த அறையே கிடுகிடுத்துவிட்டது. நான்கு குழுக்களுமே வென்றதாக அறிவிக்கப் பட்டது.


பெரியார் பழகு முகாமில் குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்றுநர்கள்

தமிழ் ஓவியா said...

அதிலும், பி.கே.பாலாஜி ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்று பெயரிடப்பட்ட குழுக்களை அந்தந்த எண்ணைக் குறிப்பிடும்போது பிஞ்சுகள் நான்கு வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என்பதும் அந்த விளையாட்டின் ஒரு விதி. வாழ்க! வளர்க! உயர்க! வெல்க! என்பதுதான் அந்த நான்கு வார்த்தைகள். அந்த வார்த்தைகள் ஒவ்வொரு முறை சொல்லப்படும்போது, அறையினுள் உற்சாகம் பெருக்கெடுத்தோடும்.

அதுமட்டுமல்ல, அந்தச் குழுவில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் அந்தக் குழுவில் இருப்பவர்கள் அனைவரின் பெயர்களையும் கேட்டுத் தெரிந்து தங்கள் நண்பர்களின் எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ள வேண்டும். வேறொரு சமயத்தில், தான் பெற்ற நண்பர்களின் பெயர்களை நினைவில் வைத்து, சுட்டிக்காட்டி பெயரையும் சொல்ல வேண்டும். அதில் அதியமான் என்ற சிறுவன்தான் 14 நண்பர்களை அடையாளம் காட்டி கைதட்டலை அள்ளினான். அதுபோல பலரும் பல புது நண்பர் களைப் பெற்று ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டி ருந்தனர்.


பெரியார் பிஞ்சு பழகு முகாமில் குழந்தைகளுக்கு பொது அறிவு கேள்விகள் - பதில்கள்

அதைத் தொடர்ந்து, Please, Sorry, Thankyou, Welcome ஆகிய நான்கு வார்த்தைகளை எந்தெந்த சூழ்நிலையில், எப்படியெப்படி பயன்படுத்த வேண் டும் என்று கற்றுக் கொடுத்தார் பாலாஜி.

உணவின் சிறப்பு

பழகு முகாமில் குழந்தைகள் குழாம் எங்கெங்கு செல்கிறதோ, அங்கங்கெல்லாம் உற்சாகமும் உடன் வந்து கொண்டேயிருந்தது. நிகழ்ச்சிகளும் ஒன்றுக் கொன்று விஞ்சியபடியே இருந்தது. எல்லாவற் றையும் விட, குழந்தைகளை ஈர்த்தது, உணவுதான். உணவு எப்படி இருந்தது என்று கேட்டால், ஒட்டுமொத்தமாக சூப்பரா இருந்துச்சு என்று பதில் வருகிறது. உணவாக இருந்தாலும் சரி, சிற் றுண்டியாக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் வரிசையில் நின்று தேவையானதைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்குள் நான் இத்தனை சாப்பிட் டேன். அத்தனை சாப்பிட்டேன் என்கின்ற சவடால் கள் வேறு.

தமிழ் ஓவியா said...

சிற்றுண்டிக்குப் பிறகும் பி.கே.பாலாஜியின் வகுப்பு தொடர்ந்தது.

பேய் பிறந்த கதை

அதைத் தொடர்ந்து, பிரின்சு, அழகிரி இருவரும் மாறி மாறி குழந்தைகளுடன் கலந்துரையாடினர். பொதுவாக வீடுகளில் பெரியவர்கள் குழந்தைகளை என்ன சொல்லி பயமுறுத்துவார்கள் என்று கேள்வி கேட்டதுதான் தாமதம். பேய், பிசாசு, எலுமிச்சம் பழத்தை மிதிக்கக் கூடாது. பூனை குறுக்கே போகக் கூடாது என்று விதவிதமான மூடநம்பிக்கையைப் பற்றி கொட்டித் தீர்த்து விட்டனர். அனைத்துக்கும் அவர்களுக்கு உரிய விளக்கங்கள் சொல்லப்பட்டது.

நடிகர்களான பிஞ்சுகள்

ஒருகட்டத்தில், அழகிரி லட்ச ரூபாய் பரிசென்று ஒரு கேள்வியை அறிவித்தார் பெரும் எதிர்பார்ப் போடு. கேள்வி, உலகத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறது? என்பதுதான். எல்லோரும் எதிர்பார்த் தார்கள். ஆளாளுக்கு ஏதாவது ஒரு கடவுளை சொல்லுவார்கள் என்று. ஆனால், அழகிரி உள்பட அனைவரும் ஏமாற்றப்பட்டார்கள். அதாவது, உலகில் எத்தனை கடவுள்கள் இருக்கிறது? என்று கேட்டவுன், ம்.... கடவுளே இல்லை. அப்புறம் எப்படி எத்தனை கடவுள்னு சொல்றது என்று பதில் வந்ததும், ஒருங்கிணைப்பாளர்கள் அத்தனை பேரும் தன்னை மறந்து பட படவென்று கைதட்டிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து, அய்யய்யா என்னங்க அநியாய சாமிங்க, பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி என்ற பாடலும் குழந்தைகளுடன் சேர்ந்து பாடப்பட்டது. பிறகு, அழகிரி பேய் பிறந்த கதையைச் சொன்னார். அதாவது, நள்ளிரவில் - பக்கத்திலிருந்து பெரியார் பிஞ்சு இளமாறனை சுட்டிக் காட்டி - இவனுக்கு உச்சா வந்துச்சாம். கொல்லென்ற சிரிப்பு அடங்கியவுடன் தொடர்ந்தார். இவங்கப்பா இவனை கொல்லைக்குக் கூட்டிட்டு வந்து, உச்சாவை பெய்யி என்றாராம். பெய்யி, பெய்யி என்று சொன்ன வார்த்தையை பேயி பேயி என்று பக்கத்து வீட்டுக்காரன் தூக்கக் கலக்கத்தில் எண்ணி அடுத்தநாள் அதை ஊரெல்லாம் பரப்பியதாகவும் நகைச்சுவையாக சொல்லி, இது தொடர்பான அய்யங்களை போக்கினர்.


தமிழ் ஓவியா said...

பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு இடையே நூல்களைப் படிக்கும் பிஞ்சுகள்

மதிய உணவு முடிந்த பிறகு குழந்தைகளுக்கு நூலகம் பற்றி சிறு அறிமுகம். அங்கிருக்கும் நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே நூலகராக இருந்த டாக்டர் சிவகாமி, அனைவரையும் அன்புடன் வரவேற்று, குழந்தைகள் அனைவருக்கும் சிறு சிறு புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் செய்தார். அவர்களும், மிகுந்த ஆர்வமுடன் படித்தனர்.

அங்கேயும் புத்தகங்களைக் கொண்டே குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு நடைபெற்றது. பிரின்சு அந்த விளையாட்டை ஒருங்கிணைத்தார். விடைபெறும் போது, பெரியார் பிஞ்சுகள் அனைவருக்கும் கையடக்கப் பதிப்பு திருக்குறள் ஒன்று கொடுக்கப்பட்டது. துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேரா.பர்வீன், பாலிடெக் னிக் முதல்வர், நூலகர், புதுவை பா.வீரமணி, வி.சி.வில்வம், பொதுச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

சைல்டு லைன் - 1098

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் உள்ள சமூக பணித் துறையில் பணியாற்றுகின்ற முனைவர் ஆனந்த் ஜெரால்டு, ஞானராஜ், சைல்டு லைன் - 1098 இணை நிறுவன ஆலோசகர் வீரமணி, அய்யப்பன் ஆகியோர் குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள், அந்தப் பிரச்சினைகளை எப்படி கையாள்வது, முக்கியமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்சினைகள், அதில் சரியான தொடுதல் எது, தவறான தொடுதல் எது, எந்தெந்த இடங்களில் தொட்டால் அது தவறான தொடுதல் என்பது பற்றியும், அப் போது என்னென்ன செய்ய வேண்டும் என் பதை குழந்தைகளுடன் கலந்துரையாடியபடியே கற்றுக் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சி பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக அய்ன்ஸ்டீன் அரங்கில் நடைபெற்றது.

சைல்டு லைன் - 1098 எப்படி செயல்படுகிறது என்பது பற்றி காரைக்கா லைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு அகிலாவை, 1098-க்கு தொடர்பு கொண்டு பேச வைத்துக் காட்டினர். ஒளி ஒலி காட்சி மூலமும் தேவையான விளக்கங்க ளைக் கொடுத்தனர். சிறு சிறு நாடகங்களையும் குழந்தைகளையே நடிக்க வைத்து புரிய வைத்தனர். இந்த சைல்டு லைன் குழந்தைத் திருமணம், ஆதர வில்லாத குழந்தைகள், குழந்தைத் தொழிலாளிகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் போன்றவற்றுக்கு தீர்வு காண்கிறது என்றும், தஞ்சாவூரை தலைமை யிடமாகக் கொண்டு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் 474 குழந்தைகளை மீட்டிருக்கிறது என்றும் சொல்லி, குழந்தைகளுக்கு விழிப்புணர் வூட்டினர்.

பத்து நிமிட நடிகர்கள்!

சிற்றுண்டிக்குப் பிறகு, அனைவரும் ஆவலுடன் முத்தமிழ் அரங்கத்தில் கூடினர். அங்கு, குழந்தைகள் அனைவராலும் மூன்று குழுக்களாக பிரித்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, குழந்தைத் தொழிலாளர்களின் அவலம், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகளின் நிலை, குழந்தைத் திருமணம் ஆகிய கருத்துகளில், சைல்டு லைன் உறுப்பினர்களோடு சேர்ந்து நடித்து சிறப்பான பாராட்டைப் பெற்றனர்.

தாங்களும் நடித்துவிட்டோம். மற்றவர்களிடம் பாராட்டையும் பெற்று விட்டோம் என்ற பெருமிதத்துடன் அவர்கள் திரிந்ததை காண இரண்டு கண்கள் போதாது. அதைத் தொடர்ந்து, மரங்களின் தேவைபற்றி நாடகம் ஒன்றை சைல்டு லைன் உறுப்பினர்கள் நடத்திக் காட்டினர். அதில், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் 60,000த்துக்கு மேல் மரங்கள் இருக்கிறது என்று சொல்லி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.

இந்த நாடக நிகழ்ச்சியை ஆனந்த் ஜெரால்டு ஒருங்கிணைத்தார். துணைத் தலைவர், பேரா.தவமணி, புதுவை வீரமணி, பேரா.பர்வீன், பிரின்சு ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினர். குழந்தைகள் இரவு உணவுக்குப் பிறகு தங்கள் அறைகளுக்குச் சென்றனர்.

தமிழ் ஓவியா said...


கோடைக் காலத்தின்போது அதிக வெயில் ஏன்?

கோடைக்காலம் வந்து விட்டால் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகளில் எந்த ஊரில் எவ்வளவு வெயில் என்ற விவரத்தை முதல் பக்கத்தில - பல சமயங்களிலும், கொட்டை எழுத்தில் போட்டிருப்பார்கள்.இந்த ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி கத்திரி வெயில் எனப்படும் கடும் கோடை நாட்கள் தொடங்கி விட்டதைத் தொடர்ந்து வேலூரில் அதிக பட்சமாக 107 டிகிரி (பாரன்ஹீட்) வெயில் பதிவாகியது. வருகிற நாட்களில் தமிழகத்தில் அநேகமாக எல்லா இடங்களிலும் வெயில் அதிகரிக்கும்.

சரி, வெயிலை எப்படி அளக்கிறார்கள்? .வெப்பமானி மூலம தான் என்பது எல்லோரும் உடனே சொல்லக் கூடிய விடை.ஆனால் வெப்பமானியை நல்ல வெயில் அடிக்கும் இடமாகப் பார்த்து மாட்டியிருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

சொல்லப் போனால் வெப்பமானியானது காற்று புகும் வசதி உள்ள ஒரு பெட்டியில் தான் வைக்கப்படுகிற்து. தவிர, அது வெயிலை அளப்பதே கிடையாது. தரையி லிருந்து சுமார் நான்கு அல்லது ஆறு அடி உயரத்தில் இருக்கின்ற காற்றின் வெப்பத்தைத் தான் அளக்கிறது. ஆகவே உள்ளே காற்று எளிதில் புகும் வகையில் வெப்பமானிப் பெட்டியின் நான்கு புறங்களிலும் சாய்வான திறப்புகள் இருக்கும்.

வெயிலானது காற்றை நேரடியாக சூடாக்குவது கிடையாது. அப்படிப் பார்த்தால் தரையிலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் காற்று பயங்கர சூடாக இருக்க வேண்டும். சூரிய ஒளி காற்று மண்டலம் வழியே வந்தாலும் சூரிய ஒளியானது காற்றை சூடாக்குவது கிடையாது.

சூரிய ஒளி தரையில் வந்து விழும் போது தரையை சூடாக்குகிறது. தரை சூடாகும் போது தரைக்கு சற்று மேலே உள்ள காற்று சூடாகிறது.இந்தக் காற்றின் வெப்பத்தைத் தான் வெப்பமானி அளக்கிறது. இதைத் தான் நாம் நேற்றைய வெயில் அளவு என்று கூறுகிறோம்.

வெப்பமானி எவ்விதமாக இருக்க வேண்டும். அதை எங்கு நிறுவ வேண்டும் எனபன பற்றி சர்வதேச அளவில் விதி முறைகள் உள்ளன. இவை உலக வானிலை அமைப்பு நிர்ணயித்தவை.

தமிழ் ஓவியா said...

இதன்படி வெப்பமானி ஒரு மரப்பெட்டிக்குள் இருக்கும். அந்த மரப்பெட்டி திறந்த வெளியில் இருக்க வேண்டும். அருகே கட்டடங்கள் இருத்தல் கூடாது. மரங்கள் இருத்தல் கூடாது.அப்படி மரம் இருந்தால் மரத்தின் உயரத்தைப் பொருத்து வெப்பமானிக்கும் மரத்துக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்று கணக்கு உள்ளது.

வெப்பமானியானது காற்றின் வெப்பத்தை அளப்ப தாகக் கூறி னோம். தரை வெப்பத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. காற்றின் வெப்பமே இடத்துக்கு இடம் சற்று மாறுபடும். தரை வெப்பமோ இடத் துக்கு இடம் மிக நிறையவே மாறுபடும்.

ஒரு நகரில் கட்டடங்கள் நிறைய உள்ள இடத்தில் தார் சாலையில் தார் உருகும் அளவுக்கு வெப்பம் இருக்கின்ற அதே நேரத்தில் அருகே ஓரிடத்தில் புல் தரையில் வெறும் காலால் நிற்க இயலும். தோட்டங்களில் மர நிழலில் தரை சுடாது. ஆகவே தான் காற்றின் வெப்பத்தை அளக்கிறார்கள்.

ஆனாலும் ஆற்றின் கரையோர மாக ஜிலு ஜிலு காற்று அடிக்கலாம். அந்த அளவில் வெப்பமானி அள விடுகின்ற காற்றின் வெப்பம் கூட ஓரளவு இடத்துக்கு இடம் சற்றே மாறலாம். ஆகவே நாளிதழில் நீங்கள் படிக் கின்ற வெப்ப அளவு அந்த நகரில் எல்லா இடங்களிலும் ஒரே சீராக உள்ள வெப்பம் அல்ல. வெப்பமானியில் பதிவாகி நாளி தழ்களில் பிரசுரிக்கப்படுவது குத்துமதிப்பான ஒன்றே.

கோடைக் காலத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் வெயில் அதிகமாக இருக்கும். சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் போது குளிர் காலமாக இருக்கும் உச்சி வெயில், மண்டை வெடிக்கிற வெயில் என்பார்கள். அதாவது சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கின்ற போது தான் வெயில் மிக அதிகபட்சமாக இருக்கும் என்று பலரும் கருதுவர். ஆனால் அது அப்படி அல்ல.

தமிழ் ஓவியா said...


பெரும்பாலும் பிற்பகல் சுமார் இரண்டு அல்லது இரண்டரை மணிக்குத் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஓரிடத்தில் அதிகபட்ச வெப்பமும் அந்த நேரத்தில் தான் வெப்பமானியில் பதிவாகிறது
இதற்குக் காரணம் உண்டு. வெயில் ஏற ஏறத் தரை மேலும் மேலும் சூடாகத் தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் சூடேறிய தரையானது அதிக அளவில் வெப்பத்தை வெளியிட ஆரம்பிக்கிறது. பிற்பகல் இரண்டு மணி அளவில் இது ஏற்படுகிறது.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தமிழகத்தில் மே மாதத்தில் அதாவது இரண்டாவது மூன்றாவது வாரங்களில் வெயில் கடுமையாக இருப்பதற்குக் காரணம் உண்டு.சூரியன் அப்போது பூமிக்கு அருகில் இருப்பதாக சிலர் தவறாகக் கருதுவர்.

உண்மையில் சூரியன் ஆண்டுதோறும் ஜனவரி 4 ஆம் தேதி வாக்கில் தான் பூமிக்கு சற்றே அருகில் உள்ளது.ஆனால் அப்போதோ பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங்களில் குளிர் காலமாக உள்ளது. தமிழகத்திலும் தான். பூமியானது 23.5 டிகிரி சாய்வான நிலையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதுவே உலகில் கோடைக் காலம், குளிர் காலம் ஏற்படுவதற்கான காரணமாகும்.

சூரியனின் கதிர்கள் எந்த இடங்களில் எல்லாம் செங்குத்தாக விழுகிறதோ அந்த விடங்களில் எல்லாம் கோடைக்காலம் ஏற்படும்.பூமியின் இந்த சாய்மானம் காரணமாக சூரியன் தெற்கே போவது போலவும் வடக்கே போவது போலவும் தோன்றுகிறது.

அந்த வகையில் மார்ச் 23 ஆம் தேதி சூரியன் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருந்தது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வடக்கே நகர ஆரம்பித்தது. இப்போது சூரியன் தமிழகத்துக்கு நேர் மேலே இருக்கிறது. ஆகவே வெயில் அதிகமாக உள்ளது.

வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் சூரியன் ஜூன் 21 ஆம் தேதி வாக்கில் கடக ரேகைக்கு( 23.5 வடக்கு அட்ச ரேகை) நேர் மேலே இருக்கும். சூரியன் பிறகு தெற்கு நோக்கி அதாவது பூமியின் நடுக்கோட்டை நோக்கி நகர ஆரம்பிக்கும். இதன் விளைவாக சூரியன் இரண்டாம் தடவை தமிழகத்துக்கு நேர் மேலே இருக்கும்.

அப்போது இரண்டாம் தடவையாக ஆவணி-புரட்டாசி மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்துக்கு இரண்டு கோடை உண்டு பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள இடங் களில் கோடையாக இருக்கும் போது நடுக்கோட்டுக்கு தெற்கே உள்ள நாடுகளில் குளிர் காலமாக இருக்கும். அங்கு சூரியனின் கதிர்கள் சாய்வாக விழும் என்பதே அதற்குக் காரணம்.

மறுபடி அன்றாட வெயில் விஷயத்துக்கு வருவோம். ஓரிடத்தில் தினமும் பதிவாகிற அதிகபட்ச வெயிலை வைத்து மாத மற்றும் ஆண்டுதோறும் சராசரி வெப்பம் கணக்கிடப்படும். உலகில் பல நூறு இடங்களிலும் இவ்விதம் கணக்கிடப்படுகிற ஆண்டு சராசரி வெப் பத்தை வைத்து உலக சராசரி வெப்பம் கணக்கிடப்படும்.

இந்த சராசரி வெப்ப அளவு மனிதனின் பல்வேறு செயல்களால் கடந்த 150 ஆண்டுகளில் மெல்ல உயர்ந்து வருவதாகவும் இதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்

தமிழ் ஓவியா said...


கல்விப் புரட்சிக்கு வித்திட்டது திராவிடர் இயக்க ஆட்சியே!
+2 தேர்வில் பெருவாரியாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் - வாய்ப்புத் தந்தால் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெறுவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

ஜாதிக் கலவரத்தில் ஈடுபடாமல் வட மாவட்ட மாணவர்கள் தென் மாவட்டங்களைப் பார்த்து சாதனை படைக்க வேண்டும்! தமிழர் தலைவரின் அறிக்கை

+2 தேர்வில் வெளிவந்த முடிவுகளை ஒப்பிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக் கையில், தென் மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்; வட மாவட்டத்தில் உள்ளவர்கள் ஜாதிக் கலவரங்களில் ஈடுபடாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

சுமார் எட்டரை லட்சம் மாணவ - மாணவிகள் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மிகச் சிறப்பான வகையில் மதிப்பெண்களை எடுத்து, தேர்வு பெற்றிருக்கிறார்கள்.

நீதிக்கட்சி ஆட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சி தொடக்கிய கல்விப் புரட்சி, தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தின் ஏற்றமிகு வீச்சின் காரணமாக காமராசர் ஆட்சி, தொடங்கி அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி, இன்றைய அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா ஆட்சி வரை தொடர்ந்த வண்ணமே இருக்கிறது!

குலக்கல்வித் திட்ட ஒழிப்பு?

1952-53 ராஜாகோபாலாச்சாரியாரின் குலதர்மக் கல்வித் திட்டம் தந்தை பெரியார் இயக்கத்தின் பேரெதிர்ப்பால் ஒழித்துக் கட்டப்பட்டு, புதரின் புற்றரவங்களை அழித்து, பூங்காக்களை உருவாக் கியதுபோல, இன்று நாடெல்லாம் கல்வி நீரோடை பாய்ந்து ஓடிய வண்ணம் உள்ளது!

சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகக் கொண்ட மதத்தினர் பெரும்பாலோர் உள்ள நாட்டில், பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளாக சரஸ்வதி மூடநம் பிக்கை - வாழும் சரஸ்வதிகளைக் கூட எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக ஆக்காத நிலையில், திராவிடர் இயக்கம் தான் குறுகிய 85 ஆண்டு காலங்களில் வாதாடியும், போராடியும், புதிய அரசுகளின் இடஒதுக்கீடுகள், சமூக நீதிக்கான ஆணைகள், சட்டங்கள் மூலம் இந்த கல்விப் புரட்சியை அறிவுப் புரட்சியாக, அமைதிப் புரட்சியாக மலரச் செய்து மகத்தான சரித்திரம் படைத்துள்ளது.

கல்வி வளர்ச்சி!

பஞ்சாயத்து யூனியன்கள் சுமார் 455; ஆனால் அந்த எண்ணிக்கையையும் தாண்டி பொறியியல் கல்லூரிகள் 556 முதல் புதியவை இணைந்தால் 575 உள்ளன!

பல ஆயிரம் காலி இடங்கள். (பல பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்குத் தயாராக அடிக்கட்டுமான வசதிகளுடன்!)

ஏறத்தாழ மாவட்டந்தோறும் தி.மு.க. - கலைஞர் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள், கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள் - இப்படிப் பல.

விவசாயத் தொழில் நுட்ப பல்கலைக் கழகங்கள், கால்நடைக்கான பல்கலைக் கழகங்கள் - எல்லாத்துறைகளிலும் வளர்ச்சி. தனிச் சிறப்போடு இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் நாட்டில் 2500 பல்கலைக் கழகங்களே தேவை என்பது அறிவு சார் குழுவின் கருத்து.

இத்தகைய கல்விப் புரட்சி. ஏராளமான பள்ளிகள் - தனியார் துறைக்குப் பதிலாக அரசே நடத்த வேண்டும் என்பது சமதர்மம் முழுமையாக அமலானால் தான் சாத்தியமாகும். அதுவரை தனியார் பங்களிப்பு இன்றேல், இவ்வளவு பெரும் வளர்ச்சியைக் காண முடியாது. கல்வித்துறை முன்புபோல பற்றாக் குறையில்தான் இருக்க வேண்டியிருந்திருக்கும்! தேர்வு முடிவுகள் வந்துள்ளதில் ஒரு புதுமை - புரட்சி!

உள் மாவட்ட மாணவர்களின் சாதனைகள்!

பெரும் நகர்ப்புறப் பள்ளிகளிலிருந்து முதலாவது, இரண்டாவது (மாநில அளவில்) மாணவ, மாணவிகள் வரவில்லை.

நாமக்கல், ஓசூர் போன்ற உள் மாவட்டங்கள் கிராமாந்திரப் பள்ளிகள் தான் சாதித்துள்ளன!

அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்!

சென்னை - மேட்டிமை வகுப்பு Elite - பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வழக்கம்போல் பெண்கள் - மாணவிகள் 91 விழுக்காடு தாண்டி விட்டனர்!

ஆண்கள் - மாணவர்கள் 84 விழுக்காடுதான் வெற்றி பெற்றுள்ளனர்!

பெண் கல்வி பரவுவதையும், வாய்ப்புத் தந்தால் நமது மகளிரின் ஆற்றல் ஆண்களுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதையும் காட்டியுள்ளது!

தென் மாவட்டங்களைப் பாரீர்!

தென் மாவட்டங்கள் தொடர்ந்து வெற்றியை தக்க வைக்கின்றன; வட மாவட்டங்களின் பெயர்கள் ஜாதிக் கலவரங்களில் அடிபடாமல், இப்படியாக ஆரோக்கிய போட்டியில் இனியாவது கவனம் செலுத்தினால் அது மிகவும் சிறப்பாக அமையும்.

சென்னை
10.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


தாய்ப்பால் சேமிப்பு வங்கி - மனித குல தொண்டறத்தில் புதிய பரிமாணம்!


நேற்று (9.5.2013) மாலை கலைஞர் தொலைக்காட்சி, செய்தியில் ஒரு புதுமையான அறிவியல் - மருத்துவ இயல் சாதனை சீனாவில் நிகழ்ந்துள் ளதைக் கூறினார்கள்.

மனித குலத்தின் வருங்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் பயன்பட வேண்டிய அற்புதமான சாதனை - அலாவுதீனும் அற்புத விளக்கும் போன்ற கற்பனைக் கதைகளைத்தான் நாம் இதுவரைக் கேட்டு வந்தோம்!

அறிவியல் தொழில்நுட்பம் - மருத் துவத் துறையில் மிக அற்புதமான, வளர்ச்சிக்குரிய புதுயுக சாதனை களைச் செய்து நாளும் புதுமை சேர்த்து வருகிறது!

ஆதி மனிதனுக்கு வேட்டையாடத் தான் தெரியும்; மிருகங்கள் தாக்கிய போது அவன் ரத்தம் சிந்தி மரண மடையும் நிலைதான் - துவக்கத்தில்.

ஆனால் மனித ரத்தம் இப்படி, பயனற்று சிந்தப்படுவதும் உண்டு. (இன்றும் வன்முறை வெறியாட்டங் களில் சிந்தும் ரத்தமும் - ஜாதிக் கலவரம், மதக் கலவரம் - ஜாதிக்கலவரங்கள், பயங் கரவாதக் கலகங்கள் மூலம் சிந்தப்படும் ரத்தமும் - மிக அதிகம் தான்).

என்றாலும் மருத்துவத் துறையில் தொழில் நுட்பம் புகுந்ததின் விளைவாக, ரத்ததானம், ரத்த சேமிப்பு வங்கி கண்டுபிடிக்கப்பட்டு, ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்ததானம் - குருதிக் கொடை - மூலம் தரப்படுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றும் அரிய தொண்டறம் அல்லவா இது!

அதன்பிறகு மனித உறுப்புக்களைக் கொடையாக வழங்கும் - கண்தானம் பரவலாக ஏற்பட்டு வருகிறது!
செத்தவர் இதன்மூலம் வாழுபவராக வாழ்கிறார் என்பதில்தான் எத்தனை கொள்ளை மகிழ்ச்சி!

இதற்கென கண்கள் சேமிப்பு வங்கிகள் (Eye-Bank) உருவாக்கப்பட் டுள்ளன.

சிறிய மருத்துவமனைகளில் இவை போன்றவைகளைச் சேகரித்து வைக்க முடியா விட்டாலும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனைகளின் ரத்த வங்கி, கண் வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுகின் றனர்.

உடலுறுப்புக் கொடையும் அண்மை யில் தாராளமாக, ஏராளமாக மக்களின் இதயங்களில் அன்பு நதிகள் ஓடுகின்ற காரணத்தில், மகிழ்ச்சியும் அளித்து மன நிறைவு கொள்ளுகின்றனர்!

தந்தை பெரியார் அவர்களின் கடைசிப் பொதுக் கூட்டம் 19.12.1973 சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. அப்போது வேனில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், அய்யா அவர்களின் அந்நாளில் வந்த Illustrated Weekly of India-வில் ஒரு புதுமையான செய்தியை படித்துக் காட்டினேன்.

மனிதனின் விந்துவைச் சேகரித்துப் பிறகு பயன்படுத்தும் வகையில் (Seman Bank) விந்து வங்கியை ஏற்படுத்தி, பாதுகாப்பாக வைக்கும் முறை செயல்படத் துவங்கியுள்ளது - அறிவியலின் மற் றொரு அற்புதமான மருத்துவ தொழில் நுட்பச் சாதனை என்பதைக் கேட்ட தந்தை பெரியார் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தார்!

ஒருவன் விபத்துக்குள்ளான போதி லும் கூட மரணமுற்றாலும்கூட - அவ னது விந்துவை இன்செக்ஷன் செய்து, அவனுக்கே குழந்தை அவன் மனைவி மூலமோ, அல்லது வாடகைத் தாய் மூலமோ பிறக்க வைக்க முடியும்; இதை 10 ஆண்டுகள் வரை பாதுகாக்கலாம் என்ற குறிப்பும் இருந்தது!

இதைப்பற்றி அவரது தியாகராயர் நகர் பேருரையில் குறிப்பிட்டு மகிழ்ந் தார்கள்!

தாய்ப்பால் தான் குழந்தைகளின் ஊட்டத்திற்கு மிகவும் அவசியம். பல குழந்தைகள் தகுந்த ஊட்டச்சத்து இல்லாததால் நலிவுற்ற நிலையில் சீனாவில் இருப்பதை அறிந்து அங் குள்ள அரசு - சுமார் 2000 கோடி அமெரிக்க டாலர் செலவில், தாய்ப் பால் சேகரிப்பு வங்கி ஒன்றை நிறுவியுள்ளார்களாம்!

ஒரு தாயின் மார்பகத்திலிருந்து பாலை ஒரு போத்தலில் தூய்மையாக லாவகமாக கைபடாமல் கறந்து சேமித்து பாதுகாத்து, ஊட்டமில்லாத குழந்தைகளுக்குத் தரும் ஏற்பாடாம்!

என்னே அறிவியலின் விந்தை - மனித குல வரலாற்றில் இது மாபெரும் கண்டுபிடிப்பு, ஏற்பாடு மட்டுமல்ல - தலைசிறந்த தொண்டறமும் ஆகும்!

சுரந்த பாலை வீணாக்காமல், தாயும் நலத்துடன் வாழ இது உதவிடக் கூடும். இம்முயற்சியின் மூலம் மற்ற நாடுகளுக்கு சீனா வழிகாட்டியுள்ளது!

கறந்த பால் முலைபுகா
கடைந்தவெண்ணெய் மோர்புகா

- என்று சித்தர்கள் பாடினார்கள்.

தாயின் முலைப்பால் பல குழந்தை களைக் காப்பாற்றிடப் பயன்படும்போது தாய்மையே தனிச் சிறப்பல்லவா பெறுகிறது?
--கி.வீரமணி -10-5-13

தமிழ் ஓவியா said...


மனிதன் என்றால்...


மனிதன் யார் என்றால் நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

(குடிஅரசு, 23.10.1943)

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் அறிவிப்பை தொடர்ந்து பேராவூரணி - சேதுபாவாசத்திரத்தில் இணையதளம் வலைப்பூ தொடக்கம்


பேராவூரணி, மே 10- திராவிடர் கழக இளை ஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவ ரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண் டும். அதனடிப்படை யில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச் சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும், நமது இயக்க நடவடிக் கைகள், முக்கிய உரை கள், தீர்மானங்கள் பற் றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுது வது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல்படு வது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம் என்று ஆசிரியர் 7.5.2013 விடு தலையில் இறுதிப் பக் கத்தில் அறிவிப்பு விடுத் துள்ளார்.

5 ஆகஸ்ட் 2012 அன்று பேராவூரணி-சேதுபா வாசத்திரம் ஒன்றிய நகர திராவிடர் கழகத்தின் சார்பாக இணையதளம் தொடங்கபட்டு செயல் பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித் துக் கொள்கிறேன்.

இணையதள முகவரி: http://dkperavurani. blogspot.in/

டிவிட்டர் முகவரி : https://twitter.com/dkperavurani

இரண்டு ஒன்றியங்க ளின் சார்பாக நடை பெறும் பிரச்சாரங்கள், தோழர்கள் கலந்து கொள் ளும் பிரச்சாரங்கள், புதி யவர்களுக்கான விஷயங் கள் என நிறைய தகவல் களைக் கொடுத்துள் ளோம். தொடர்ந்து இணையதளம் சிறப் பாக செயல்படும் என்று பட்டுக்கோட்டை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீல கண்டன் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


ஜவகர்லால் நேரு

வடநாட்டுப் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த - மறைவெய்திய ஜவகர்லால் நேரு தமது புகழ்பெற்ற இந்தியாவைக் கண்டுணர்தல் எனும் நூலில், இந்து மதம் என்பது யாது? எனத் தாமே கேள்வி எழுப்பிக் கொண்டு தந்துள்ள விடை அருமையானது.

இந்து எனும் சொல் நமது பழைமையான இலக்கியங் களில் காணப்பெறவேயில்லை. கடவுள் நம்பிக்கை (மதம்) என்ற வகையில் இந்து இயல் என்பது தெளிவற்றது; ஒழுங்கான உருவமைப்புப் பெறாதது; பல்வகைத் தோற்றக் கூறுகள் உடையது;

எல்லா மக்களுக்கும் எல்லாச் செய்திகளும் என்பதான தன்மை படைத்தது. அதை வரையறை செய்வதோ அல்லது அது - வழக்கிலுள்ள கருத்தின் படி - ஒரு மதமா, இல்லையா என மெய்யாகவே உறுதிமொழிவதோ இயலும் செயலன்று.

“what is Hinduism? The word Hindu does not occur in all our ancient literature...Hinduism, as a faith, is vague, amorphous, many sided, all things to all men. It is hardly possible to define it or indeed to say definitely whether it is a religion or not in the usual sense of the word” (Discovery of India : page 108).

தமிழ் ஓவியா said...


பழைமைக்கு அடி!


ஓ ஜ ஜி! உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன். நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்யவில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்

காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்லவில்லையே?

ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல்வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார். நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்பதற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்புகிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வதில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக்கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும்தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப் படுகிறது - இவ்வளவையும் பார்த்துக்கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஆதாரம்:

(வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்
ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்)

தமிழ் ஓவியா said...


கடவுள் எங்கே இருக்கிறான்?


ஜெபமாலை உருட்டுவதை விடு, அத்துடன் பாட்டையும், மந்திரத்தையும் விட்டு விடு. தாளிட்ட கோயிலில் இருண்ட மூலையில் யாரைப் பூசிக்கிறாய்? கண்களைத் திற, கடவுள் உன்முன் இல்லை என்பதை அறி. நெற்றி வியர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாட்டாளி மக்களிடமும், ஏழை விவசாயிகளிடமும் கடவுள் இருக்கிறான்.

அவர்களுடன் வெயிலிலும், மழையிலும் உழைக்கும் அவர்களுடைய ஆடையில் தூசி படிந்திருப்பதை பார். ஆகவே, நீயுங்கூட உன் காஷாயத்தை விலக்கி, மண்ணில் வந்து உழைக்க வா! கடவுளின் அருள் உனக்குக்கிட்ட இதை விடச் சுலபமான வழியும் கிடையாது

குறிப்பு: கோயிலில் கடவுள் இருக்கிறார் என்பதை மறுக்கிறார், அந்தக்கால சீர்திருத்தக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

ஆதியிலே வழிபாட்டுக் கார்ந்த பெருங்கோயில் பல
சாதிமதச் சாக்கடையாய்ச் சண்டாளர் இருப்பிடமாய்
நீதிஅறம் அழித்து வரல்
நிர்மலனே நீ அறிவாய்
கோதுகளை அறுத்தொழித்துக்
குணம் பெருகச் செய்யாயோ?

- திரு.வி.க.

தமிழ் ஓவியா said...


இந்துமதம் என்ற ஒன்று கிடையாது!


(கல்கியில் 5.11.1972 காஞ்சி காமகோடி பீட சங்கராச் சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதியதாவது:)

இப்போது ஹிந்துமதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்து என்று சொல்லுகிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.

ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல் நாட்டுக்காரர் சிந்து நதியை கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் சிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை ஹிந்து என்றும் குறிப்பிட்டார்கள்.

ஒரு தேசத்துக்குப் பக்கத்தில் உள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவ நாடு என்பதும் கூட இதே மாதிரிதான். ஆந்திர தேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அர்வா தேசம் என்று பெயர்.

இந்த முறையில்தான் சிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர் களும் பாரத தேசம் முழுமையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர். தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே... அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை.

ஜெயேந்திர சரஸ்வதி

சென்னை மார்ச் 6 (1976) வேதமதம்தான் இந்து மதம் என்று சொல்லப்படுகிறது என்றும்; ஆரம்ப காலத்தில் இதற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது என்றும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி பேசுகையில் கூறியதாவது:

இந்து மத மாநாடு என்ற பெயரில் இந்த மாநாட்டைக் கூட்டாமல், வேத மாநாடு அல்லது சனாதன மாநாடு என்றே கூட்ட வேண்டும். எனக்கு பலர் கடிதம் எழுதியிருந்தார்கள். இந்து என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு.

நமது மதத்துக்கு இந்து மதம் என்று பெயரில்லை; மதத்திற்கு ஏதாவது ஒரு பெயரைச் சொல்ல வேண்டுமே என்பதற்காக இந்து மதம் என்று சொல்லியிருக்கிறார்கள். வேதமதம்தான் நமது மதம். இந்த வேதம் என்ற சொல்லைத்தான் மற்ற மதத்தினர் பயன்படுத்திக் கொண்டனர். - இவ்வாறு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கூறினார்.

தமிழ் ஓவியா said...


தீர்மானம்


அடுத்தாற்போல் வரும் மக்கள் எண் ணிக்கைக் கணக் கெடுக்கும் சென் ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திரா விடர்கள் என்றே சொல்ல வேண்டு மென்றும், இந்துக் கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக் காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.

(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)

தமிழ் ஓவியா said...


சிவன்கோயில்களில் பூசை செய்ய பார்ப்பனருக்கு அதிகாரமில்லை!


சிவாலயங்களில் பூசை செய்ய, தன்னைப் பிராமணர் என்று சொல் லிக்கொள்ளும் சுமார்த்தப் பிரா மணர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அப்படி அவர்கள் பூசை செய்வார்களேயானால் நாட்டுக்குப் பெருங்கேடு என்று ஆகமங்கள் கூறுவ தாக நீதிபதி மகராசன் தலைமையில் அமைந்த குழு கருத்து தெரிவித்துள்ளது.

அதன் விவரம் இதோ:

1. சில சொற்பொருள்கள்

பிராமணர் என்ற பெயர் ஜாதி அடிப்படையில் அல்லாமல், பிரம் மத்தை உணர்ந்தவன் என்ற அடிப் படையில் தான் வழங்கப்பட்டது.

பட்டர் என்ற சொல், சாத்திரத்தை நன்கு உணர்ந்தவர் ஞானி, தபோதனர், பூசகர் என்ற பொருளைக் கொண்டது என்று சப்தகல்பத்ருமம் என்னும் வடமொழி நிகண்டில் (பக்கம் 478, பாகம் 3) விளக்கப் பெற்றிருக்கிறது.

அவ்வாறு அல்லாமல், தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொண்டு ஜீவிப்போரை பிராம்மணப்ருவன் (சொல் மாத்திரத்தில் பிராமணன்) என்று அதே சப்தகல் பத்ருமத்தில் (பக்கம் 460. பகுதி 3) சொல்லப் பட்டுள்ளது. வாழ்க் அந்தணர் (திருஞான சம்பந்தர் தேவாரம்) அந்தணர் என்போர் அறவோர் (திருக்குறள்) என்ற தொடர்களில் அந்தணர் என்ற சொல் ஜாதியின் பாற்பட்டதல்ல என்பது ஆன்றோர் கருத்து.

பேர் கொண்ட பார்ப்பான் (திருமூலர்) பரார்த்த பூசையில் சிவனைத் தீண்டினாலும் பூசித்தாலும் தேவலகத்துவதோஷம் (ஊதியத்துக் காகப் பூசை செய்தல் என்ற குற்றம்) பிறக்கும். பரங்கில்லை தீண்ருப் பரார்த்தம், அவர் தீண்டில் தீங்கு உலகுக்காம் என்றதேறு என்ற மறைஞான சம்பந்தர் சைவ சமய நெறி என்ற நூலில் (பாடல் 437) கூறியுள்ள கருத்து அறிதற்பாலது.

2. சிவாச்சாரியாரும், சுமார்த்தப் பிராமணரும்

சிவாச்சாரியார் அல்லது சிவத்து விஜர் அல்லது ஆதிசைவர் என்போர் சுமார்த்தப் பிராமணர் அல்லர். அவர்கள் சிவப்பிராமணர் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதி சைவராகிய சிவப்பிராமணர்கள் அனாதி சைவர் என்று சொல்லப்பட்ட சிவபெருமானுடைய அய்ந்து முகங் களிலிருந்து தோன்றி, சிவபிரானையே வழிபடுகிறவர் என்றும், சுமார்த்தப் பிராமணர் பிரம்மாவினுடைய நான்கு முகங்களிலிருந்து தோன்றிய பிர மத்தையே வழிபடுகிறவர்கள் என்றும் சிவசிருஷ்டியின் பாற்பட்ட சிவப் பிராமணர் அல்லாமல், பிரம சிருஷ்டியில் தோன்றி சுமார்த்தப் பிராமணர் சிவாலயங்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்றும் ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே, சிவாலயங்களில் பரார்த்த பூசை ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியர் தவிர, இதர பிராமணர் செய்யக்கூடாது என ஆகமங்களில் கீழ்க்காணுமாறு விதிக்கப்பட்டுள்ளது.

சித்தாந்த சாத்திரம் உணர்ந்த ஆதிசைவர்கள், அரசர் ஊர் எஜமானர் இவர்களுடைய சேமத்தின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிட்டை செய்து பூசிக்க வேண்டியது. ஆதிசைவர். ஆன்மார்த்த, பரார்த்தங்களுக்கு அதிகாரமுடையவர்.

இல்லறத்திலுள்ள ஆதி சைவ பிராம் மணோத்தமர் சர்வ காரியங்களிலும் சிவயாகத்திலும் சிவத்துவிஜர்களாகிய ஆதிசைவர்களே அதிகாரமுடையவர். ஏனையோர் ஆன்மார்த்தமே செய்யத்தக்கவர். அரசனுக்கும் அவனால் காக்கப்படும் நாட்டிற்கும் உடனே கேடு சூழும் என்பதில் சந்தேகமில்லை (காமிகாகமம் தென்னிந்திய அர்ச்சகர் சங்க வெளியீடு பக்கம் 31-32)

- மகராசன் குழு அறிக்கை, பக்கம் 7,8

தமிழ் ஓவியா said...


நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார்

நெய்வேலியில் என்.எல்.சி. உருவாக காரணமாக இருந்த ஜம்புலிங்க முதலியார் சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். கடலூர் மாவட்டம் திருக் கண்டேசுவரத்தைச் சேர்ந்தவர் ஜம்புலிங்க முதலியார். இவர் கடலூர் நகராட்சித் தலைவர், ரெயில்வே வாரியத் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவரது சிறப்பு மிக்க பொது நலப்பணிகளைப் பாராட்டி அப்போதைய ஆங்கில அரசு, ராவ் பகதூர் என்ற சிறப்புமிக்க விருதினை வழங்கிக் கவுரவித்தது.

மிகப்பெரிய நிலக்கிழாரான இவர், தனக்கு சொந்தமான வயலில், 1934ஆம் ஆண்டு ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது கறுப்பு நிற பொருள் தண்ணீருடன் கலந்து வெளியேறு வதைக் கண்டறிந்து அத்தகவலை அப்போதைய ஆங்கில அரசின் மண்ணியல் துறைக்கு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அப்போதைய ஆங்கில அரசு, சுரங்கப் பொறியாளர் களையும், மண்ணியல் நிபுணர்களையும் நெய்வேலிக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அப்பகுதியின் அடியில் இருக்கும் தனிமம் நிலக்கரி குடும்பத்தின் ஒரு வகையைச் சேர்ந்த பழுப்பு நிலக்கரி என்று கண்டறியப்பட்டது.

ஜம்புலிங்க முதலியார் சுரங்கம் வெட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக தனக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கிய துடன் அவரது சீரிய முயற்சியின் மூலம் அப்போதைய சென்னை மாகாண முதல் அமைச்சர் பெருந்தலைவர் காமராஜ் மூலம், 1953ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தமிழக அரசின் தொழிற் துறையால் நிலக்கரி வெட்டியெடுக்கும் திறன் கொண்டது.

பின்னர் இந்த நிறுவனத்தை மத்திய அரசின் கட்டுப் பாட்டில் கொணர்ந்து, 14.11.1956ம் ஆண்டு மத்திய பொதுத்துறை நிறுவனம் உதயமானது. பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு வால் 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன.

இன்று, என்.எல்.சி. நிறுவனம் ஆண்டிற்கு 3 கோடியே 6 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்து, ஒரு மணி நேரத்தில் சுமார் 27லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவிற்கு பன்மடங்காக வளர்ச்சி பெற்றுள்ளது. நவரத்னா தகுதி பெற்றுள்ள இந்த நிறுவனம் உருவாக வித்திட்ட ஜம்புலிங்க முதலியாரை கவுரவப்படுத்தும் வகையில் நெய்வேலி நகரியத்தில் உள்ள ஒரு பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது.

அவருக்கு மேலும் புகழாரம் செலுத் தும் வகையில் நெய்வேலி நகரியத்தில், நான்கு வட்டங்கள் சந்திக்கும் மிக முக்கிய பகுதியான இரட்டை பால சதுக்கத்தில் ஜம்புலிங்க முதலியாரின் முழு உருவ வெண்கலச் சிலை ரூ. 9 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ளது. அவரது சிலையை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜம்புலிங்க முதலி யாரின் பேரன் அமரன், பேத்தி ரஞ்சிதம் மற்றும் அவரது கொள்ளுப்பேரன் ஸ்ரீராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நெய்வேலி நகரியத்தின் 22-ஆவது வட்டத்தில், ரூ. 1 கோடியே 25 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ள நவ ரத்னா பூங்காவை என்.எல்.சி. தலைவர் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக் கப்பட்டுள்ள இப்பூங்காவில் சிறுவர் களுக்கான விளையாட்டு வசதிகள் மட்டுமல்லாது 54 வகை அறிவியல் உபகரணங்கள் அடங்கிய அறிவியல் பூங்காவும் இங்கு விரைவில் அமைக் கப்பட உள்ளது. 54 வகை அரிய வகை மூலிகைப் பண்ணை இங்கு அமைக்கப் பட்டுள்ளது. இப்பூங்காவின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

இந்நிகழ்ச்சிகளில் என்.எல்.சி.இயக்குநர்கள் உயர் அதி காரிகள், தொழிற்சங்கம் மற்றும் பொறியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். எல்லாம் சரிதான்; அவர் நீதிக்கட்சிப் பிரமுகர் என்பதை இருட்டடித்தது - ஏன்?

தமிழ் ஓவியா said...


மாம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்டது மாம்பழம். ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம்.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

மாம்பழம் நாவில் நீர் ஊற வைக்கும் சுவை கொண்டது மட்டு மல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸி டென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சி கரணிகள் நிறைய அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்றுநோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக் கொள் கிறது.

மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கருவுற்ற பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத் துடன் ரத்த சோகை உள்ளவர் களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப் பிடலாம் என்பது குறித்து மருத் துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக காணப்பட்டாலோ அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

அஜீரண பிரச்சனை உள்ளவர் களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத் திற்கும் உதவுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.

100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதை விட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே.

நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டை யிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

தமிழ் ஓவியா said...


இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். மேதாவிகளின் கவனத்திற்கு!


நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் பென்ஜமின் பிராங்கிலின் என்னும் கிறித்தவர் நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஸ்டீபன்சன் என்ற கிருத்தவர் நீங்கள் மோட்டார் வண்டியில் பயணம் செய்யாதீர்கள் ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் ஹென்றிபோர்டு என்ற கிருத்தவர்.

நீங்கள் கேமிராவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். அதனால் திரைப் படம் பார்க்காதீர்கள் நீங்கள் கிராமபோனை பயன்படுத்தாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிருத்தவர். நீங்கள் வானொலியைக் கேட்காதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்ற கிருத்தவர்.

நீங்கள் கடிகாரத்தை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இந்தக் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் பீட்டர்ஹல் என்ற கிருத்தவர். நீங்கள் அச்சுப்பொறியை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதைக் கண்டுபிடித்தவர் ஹீடன்பார்க்கேக்ஸடன் என்ற கிருத்ததவர். நீங்கள் பவுண்டன் பேனாவைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வாட்டர்மென் என்னும் கிருத்தவர்.

நீங்கள் டயரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிருத்தவர். நீங்கள் டெலிபோனைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிருத்தவர் நீங்கள் தையல் மிஷன் என்ற கருவியைப் பயன் படுத்தாதீர்கள். ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் தின்மானியர் என்ற கிருத்தவர்.

நீங்கள் டைப்ரைட்டரைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிருத்தவர். நீங்கள் மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இஸ்லாமிய நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி யாகிறது. இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போன இந்துக்களை திரும்பி வரும்படி ஆணையிடுங்கள்.

ஏனெனில், அது முஸ்லீம் நாடு இந்துக்களே! உங்கள் கால் கை உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள் ளாதீர்கள் ஏனெனில் இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிருத்தவர்.

குறிப்பு: நம் நாட்டிலுள்ள நம் இனத்தைச் சேர்ந்த கிருத்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்துக்களுக்கு அறிவுறுத்தி மதக் கலவரத்தை தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட தீர்மானத்திற்குப் பதிலாக இது அமையும்.

உலகத்திலே தீண்டாமையை கண்டு பிடித்ததும், கடைப்பிடிப்பதும் இந்து மதம்தான்.

தமிழ் ஓவியா said...


பல்கலைத் தமிழ் அறிவியல் தமிழ் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்


பதிப்பாசிரியர் : முனைவர் இராதா செல்லப்பன்
தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சிராப்பள்ளி -_ 620 024
பதிப்பு ஆண்டு: 2008
76ஆம் பக்கத்தில் இருப்பது:

நல்வாழ்வின் புள்ளி விவர அளவுகோல்கள்

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் (infant Mortality Rate, IMR) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (Under Five Mortality Rate, UMR) என்பவை ஒரு நாட்டின் சுகாதாரப் பணிகளின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

50 வருடங்களுக்கு முன்பு, பிறந்த 1000 குழந்தைகளில் 200 முதல் 250 குழந்தைகள் ஒரு வயதிற்குள் இறந்து போயின.

வயிற்றுப்போக்கு, சத்துணவுக் குறைபாடு, நுரையீரல் தொற்று (Diarrohea, Malnutrition, Respiratory Infection)
ஆகியவை குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணங்கள்.

ஆனால், தற்போது பல அறிவியல் கண்டுபிடிப்புகளால் இந்த இறப்புகள் மிகவும் குறைந்துவிட்டன.

தற்போது இந்தியாவில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு (IMR) 1000-க்கு 67.

தமிழ்நாட்டில் 1000-க்கு 53, நமது அண்டை மாநிலமான கேரளாவில் 1000-க்கு 14,
உத்தரபிரதேசத்தில் 1000க்கு 110, இந்தியாவில் 1IMR 1000க்கு 30க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிக்கோள்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1960-இல் 1000-க்கு 242 ஆக இருந்தது.

இது மிகவும் குறைந்து தற்போது 91ஆக குறைந்துள்ளது.

இவை நமது தற்போதைய மருத்துவ வளர்ச்சியின் வெற்றிப்படிகள்.

தொற்று நோய்கள் (Infectious Diseases), வயிற்றுப்போக்கு நோய்கள் மூலம் இறப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது.

கொள்ளை நோய் என்று அழைக்கப்பட்ட பெரியம்மை (Small Pox), 1977ல் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

அம்மை நோய் தடுப்பு ஊசியின் மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.

தகவல்: க. பழநிசாமி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


சூத்திரமேட்டுத் தெரு!


ஆபரேட்டர் கோவிந்த ராசன் என்று கழகத் தோழர்களாலும், பொது மக்களாலும் அன்பொழுக அழைக்கப்பட்ட பெரியார் பெருந் தொண்டர் திருவை யாறு நகர திராவிடர் கழகத் தலைவராக இருந்தவர்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் விளம் பரப் பிரிவில் ஆப்ரேட்டராகப் பணியாற்றியவர்.

அரசு பணியில் இருந்த போதும், கருஞ்சட்டை அணிந்து இயக்கப் பணி களில் தீவிரமாக ஈடுபட்ட அழுத்தமான பகுத்தறிவுக் கொள்கைக்குச் சொந்தக் காரர்!

அரசுப் பணி ஓய்வுக்குப் பிறகு நேரடியாகக் கழகப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு சிறைச் சாலைக்கும் சென்றவர்.

தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்களையும் உடலையும் (தஞ்சை மருத் துவக் கல்லூரிக்கு) கொடை யாக அளிக்க முறைப்படி ஏற்பாடுகளைச் செய்து வைத் திருந்தார். அதன் படியே கொடையும் அளிக்கப்பட்டது.

தான், வாழ்ந்தபோது மாத்திரம் அல்ல; மரணத் திற்குப் பிறகும், தாம் ஏற்றுக் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைக்குச் சேதாரம் எந்த வகையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைக்கும் செயல்படுத்தும் இந்தத் திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு உலகத் தில் ஈடு இணை ஏது?

நேற்று திருவையாற்றில் அவரின் படத்திறப்பு நிகழ்ச்சி - பொதுக் கூட்டமாக - பிரச்சார நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரி வித்த தகவலும் - கருத்தும் புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

மானமிகு ஆப்ரேட்டர் ப. கோவிந்தராசன் அவர்கள் வாழ்ந்து வந்த அந்தத் தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா? சூத்திர மேட்டுத் தெரு என்பதாகும்.

சூத்திரன் என்றால் பாரத ரத்னா பட்டமா? பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்று பொருள். இப்படி ஒரு பெயர் பச்சையாக வைக்கப்பட்டு இருந்தது.

பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் கோவிந்த ராசன் போன்ற பெரியார் தொண்டர்கள் போராடி ஊராட்சி மன்றத்தில் தீர் மானம் நிறைவேறச் செய்து அதனைத் தமிழர் மேட்டுத் தெரு என்று மாற்றினார்கள் என்பது சாதாரண தகவலா?

திராவிடர் கழகம் என்ன செய்தது என்று கேட்கும் செவிட்டுத் தமிழர்களுக்கு இதனைக் காணிக்கையாக் குகிறோம். திருவையாறில் இன்னொரு தெருவுக்கு என்ன பெயர் தெரியுமா?

பிராமண மேட்டுத் தெரு என்பதாகும் - இன்றும் அதே பெயர்தான்! பார்ப்பனர் அல்லாதாரே, தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்


சென்னை, மே 11- இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தி.மு.க. தலைவர் கலைஞர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப் பதாவது:

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர் களும், ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் கூட காமன் வெல்த் மாநாட்டினை இலங்கை யிலே நடத்தக் கூடாது என்றும், அதற்கு இந்திய அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டு மென்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டுள்ளனர்.

பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்திய அரசு அதைப் பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுத்ததாகத் தெரிய வில்லை. டெசோ இயக்கத்தின் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தூதுவர்களையெல்லாம் சந்தித்து, இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டினை நடத்தக் கூடாது என்ற வேண்டுகோளையும் அதற் கான விளக்கத்தையும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கியிருக்கிறார்கள்.

அதற்கு முன்பே, 25-3-2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில், இனப் படுகொலையை நடத்தி, தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங் கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்த மானதோ, ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக் காரணம் கொண்டும் அங்கு நடத் திடக் கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் காமன்வெல்த் மாநாட் டினை இலங்கையிலே நடத்திட முடிவு செய்யப்பட்டு விட்டது என்பதைப் போல இலங்கையில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடு கள் நடைபெற்ற வருகின்றனவாம். ஏற்கனவே கனடா நாட்டின் சார்பில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டு விட்டது.

பல்வேறு மனித உரிமை அமைப் புகள் - குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்தி ரேலிய மனித உரிமை சட்ட மையம் போன்றவை இலங்கையில் இந்த மாநாட்டினை நடத்தக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் இலங்கை யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

தமிழ் ஓவியா said...

காமன்வெல்த் நாடுகளின் கூட்ட மைப்பு என்று ஒன்று உருவாக்கப் பட்ட பிறகு, இதுவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்ட எலிசபெத் ராணி இலங்கை மாநாட்டினைப் புறக் கணித்திருப்பது என்பது முக்கிய மான தகவலாகும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்காக ஆஸ்திரேலி யாவில் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆஸ்தி ரேலியாவின் முன்னாள் பிரதமர் பிரேசர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

காமல்வெல்த் சட்ட மாநாடு ஒன்று ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தென்னாப் பிரிக்காவில் உள்ள கேப்-டவுன் நகரத்தில் நடைபெற்றபோது; காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் கலந்து கொண் டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மா னத்தில். காமன் வெல்த் அமைப் பிலிருந்து இலங்கையை நீக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்;

தொடர்ந்து இலங்கையில் நடை பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் காமன்வெல்த் போற்றி வரும் அடிப்படை கொள்கை மீறல்கள் ஆகியவற்றின் காரணமாக இலங்கையை நீக்குவது முக்கியமானது; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத் துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டுக் கொண்டார்கள்.

இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்று அய்.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவின் அறிக் கைக்குப் பிறகும், இலங்கையில் நவம்பர் மாதத்தில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன் றாகவே உள்ளது. இனப் படு கொலை, மனித உரிமை மீறல்கள், பல்வேறு வகையான போர்க் குற்றங்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி யுள்ள ராஜபக்சேயை, நம்பிக்கை யுடன் கூடிய சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணைக் கமிஷன் முன் நிறுத்தவேண்டுமென டெசோ தொடர்ந்து கோரி வருகிறது.

காமன்வெல்த் மாநாடு இலங்கை யில் நடைபெற்றால், அதன் காரண மாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக் கூடுமென்றும்; வலிமை யான கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன. இந்த நிலையில் இலங் கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயா னால், அங்கே நடைபெற்ற இனப் படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும்.

எனவே இனியாவது இந்தியா, தமிழர்களும் இந்தியர்களில் ஒரு பிரிவினர் தான் என்ற உள்ளுணர்வோடு, நேசத் தோடு ஆதரவுக் கரம் நீட்ட முன் வர வேண்டும். தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு;

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொண்டு, அதற்கேற்ற வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூட நம்பிக்கை


மக்களின் அறிவைக் கிளறி விட்டு, மக்களுக்கு அறிவுச் சுதந்திரத்தை உண்டாக்கித் தாராளமாக எந்தச் சங்கதி யையும் ஆராயும்படிச் செய்து விட்டால், மூட நம்பிக்கைகள் நாளாவட்டத்தில் குறைந்தே போகும்.

(விடுதலை, 16.10.1960)

தமிழ் ஓவியா said...


தேவை விழிப்பு!


19.4.2013 விடுதலை வெளியூர் இதழில் மயிலாடன் அவர்கள். ஒற்றைப்பத்தி பகுதியில் எழுதிய பலே விவாஹம் என்ற செய்தியினைப் படித்துப் பார்த்தேன்.

என் நினைவு 65 ஆண்டுகட்கு முன்பு - அன்றைய விடுதலை இதழில் படித்த செய்தியை நோக்கிப்பறந்தது. அன்றும் இதே கூத்து - அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் விவாகம் செய்து வைக்கப் பட்ட - பத்திரிகையை அப்படியே வெளி யிடப்பட்டிருந்தது. அரசப்பனுக்கும் - வேம்பு அம்மனுக்கும் என்ற பெயருடன் பத் திரிகைச் செய்தி - அதைப்பற்றிய குத் தூசியில் பலமான கிண்டலுடன் கூடிய கண்டனம்.

பெரியார் - அண்ணா - கலைஞர் போன்றவர்களின் அற்புத பணியும் ஆசிரியர் போன்றவரின் கடுமையான உழைப்பும் இந்த தமிழ் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தும் இது போன்ற மடமை நிகழ்வுகள் நடப்பது கேலிக் கூத்தாகவே உள்ளது. நம் அனைவரின் உழைப்பும் வீணாகிவிடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. ஒரு பக்கத்தில் நம்முடைய படை செல்லும் - பயணமும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் திட்டமிட்டே இது போன்ற மூட செயல்களை ஊதிப் பெருக்கும் ஊடகங்களும் இருப்பது குறித்து வேதனைப்பட வேண்டியுள்ளது.

விவாஹ சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பதை திருமண அழைப்பிதழ் - மன்றல் அழைப்பிதழ். வாழ்விணையர் அழைப்பிதழ் என்றெல்லாம் - வளர்ந்து வருகின்ற கால கட்டம். நம்பிக்கையோடு இருக்கும் வேளையில் - பத்தாம் பசலியும் - புறம் தாங்கி வீடணர்களும் செய்யும் சேட் டைகள் குறித்தும் விழிப்பாக செயல்வட வேண்டும் என்ற எச்சரிக்கையும் இதன் மூலம் நமக்கு ஏற்படுகிறது.

காரிருளால் கதிரவனை மறைக்கபோமோ?

கறை சேற்றால் தாமரையின் வாசம் போமோ?

என்று மனதை தேற்றித் கொள்வதேன்

- வேலை பொற்கோவன்
வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் - 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தில்
தமிழக அரசு இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை சட்டமன்றத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் சுபா குற்றச்சாட்டு

சென்னை, மே 11- தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் - அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதிலும், இடஒதுக்கீட்டு முறையை தமிழக அரசு பின்பற்றாததால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சட்டமன்றத்தில் நேற்று (10.5.2013) பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் ஆர்.சுபா குற்றச்சாட்டை கூறினார்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:-

தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் (என்சிடிஇ) வழிகாட்டுதல்படி தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் முறையை அரசு அறிமுகப்படுத்தியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தலாம் என தேசிய ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவாகக் கூறியுள்ளது. அண்மையில் 19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாமல் பொதுத் தேர்வாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்குத் தனி கட்- ஆஃப் தரப்படவில்லை. இதனால் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தோர் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவுக்கான பணியிடங்களில் 40 சதவீதம் காலியாக உள்ளது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாமல் பட்டதாரி ஆசிரியர் நியமித்ததை செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி, மறு ஆய்வு செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்துக்கான கட்- ஆஃப் மதிப்பெண்களைக் குறைத்து இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வன் பேசியது:-

பணித் தேர்வின் போது இடஒதுக்கீட்டு முறையை அரசு சரியாகக் கடைப்பிடித்து வருகிறது. அதேசமயம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காகவும், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையைப் பின்பற்றுகிறோம்.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கட் - ஆஃப் மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.

ஆர்.சுபா: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்போது பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், கடந்த காலமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரும் ஆசிரியருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றவர்கள். அவர்களுக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.

அமைச்சர் வைகைச்செல்வன்: அரசின் கொள்கை முடிவின்படி அவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கு வதற்கான வாய்ப்பு இல்லை.

தமிழ் ஓவியா said...


பெரியார் தொண்டர் என்பவர் யார்? தமிழர் தலைவரின் அரிய விளக்கம்


திருவையாறு ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரையாற்றினார். உடன் மறைந்த கோவிந்தராசன் குடும்பத்தினர் மற்றும் கழக முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் (10.5.2013).

திருவையாறு ஆபரேட்டர் ப.கோவிந்தராசன் படத் திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்ட கருத்து மணிகள்:

1. திராவிடர் கழகத் தோழர்களும், கட்சிக்கு அப்பாற் பட்ட பொதுமக்களும், நகரப் பிரமுகர்களும் இவ்வளவு திரளாக நீங்கள் கூடியிருக்கின்றீர்கள் என்றால், அதற்குக் காரணம் என்ன?

மானமிகு கோவிந்தராசன் பெரும் பதவியில் இருந்தவரா? பெரும் பணம் படைத்தவரா?

இல்லை, பின் ஏன் இவ்வளவுப் பெரிய மரியாதை கடைசி மூச்சு அடங்கும்வரை கொள்கையில் விடாப்பிடியாக வாழ்ந்து காட்டிய இலட்சிய வீரர் - கருப்புச் சட்டைக்காரர் என்பதுதான் இந்த மரியாதைக்கு முக்கிய காரணம்.

2. தனது மரணத்துக்குப் பிறகும் தமது கண்களைக் கொடையாக அளித்தவர்; மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தமது உடலையே கொடையாக அளித்த மனிதநேயர்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குச் சோதனைக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. நம் நாட்டு மதச் சம்பிரதாயம் மரணத்திற்குப் பின் உடலை எரிக்கவேண்டும்; சாம்பலைக் கரைக்கவேண்டும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதால், மருத்துவக் கல்லூரிக்கு உடல்கள் கிடைப்பதில்லை. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் போன்ற பெரியார் பெருந்தொண்டர்கள் செத்த பிறகும் கூட தமது உடல் பிறருக்குப் பயன்படவேண்டும் என்று நினைப்பது எத்தகைய சிறப்பு!

திராவிடர் கழகம் உடற்கொடைக் கழகம் என்ற பிரிவையே வைத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்.

3. மனிதன் செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று வருகிறான். இந்தக் காலகட்டத்தில் இன்னும் ஜாதிபற்றிப் பேசும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது வெட்கக் கேடு!

ஜாதிக்காக ரத்தம் சிந்துகிறான் வீதிகளிலே - இன்னொரு மனிதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக அந்த ரத்தத்தைக் கொடையாக அளிக்கக்கூடாதா?
ரத்தத்தில் ஜாதிப் பிரிவு உண்டா? நாடார் ரத்தம், நாயக்கர் ரத்தம், அய்யர் ரத்தம், அய்யங்கார் ரத்தம், வன்னியர் ரத்தம் என்று இருக்கிறதா?

மனிதர்களை ஒன்றுபடுத்த நாம் இருக்கிறோம். சிலர் ஜாதியைக் காட்டிப் பிளவுபடுத்தத் துடிக்கிறார்கள். ஜாதிக்காக அரிவாளைத் தூக்குகிறார்கள். தந்தை பெரியார் தொண்டர்களோ ஜாதியை ஒழிக்க அறிவாயு தத்தைத் தூக்குகிறோம்.

4. இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதால் ஆப்ரேட்டர் கோவிந்தராசன் குடும்பம் தாழ்ந்து போய்விட்டதா? இந்த அழைப்பிதழைப் பாருங்கள்
எம்.ஏ.,

பி.ஏ.,எல்.எல்.பி.,

எம்.ஏ.,எம்.எல். (மாவட்ட முன்ஷிப்),

எம்.ஏ., பி.எட்., எம்.ஈ.,

ஒரு குடும்பத்தில் இவ்வளவு பட்டதாரிகள்.

பெரியாரும், திராவிடர் இயக்கமும் என்ன சாதித்தனர் என்பதற்கு இந்தப் பட்டியல் போதாதா? நூறு ஆண்டு களுக்குமுன் இது சாத்தியமா?

அய்.ஏ.எஸ். தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 96 பேர் வெற்றி பெற்றது எப்படி? சத்திய சாயிபாபா கையசைப்பிலா வந்தது?

சரஸ்வதி பூஜை கொண்டாடி வந்தோமே - எத்தனை எத்தனை ஆண்டுகளாக? நமது பாட்டி சரஸ்வதிக்கே, சரஸ்வதி என்று கையொப்பம் போடத் தெரியாதே!

கடவுள் இல்லை என்று சொன்ன தந்தை பெரியாரும் - அவரின் இயக்கமும்தானே கல்வி உரிமையை உத்தியோ வாய்ப்பைப் பெற்றுத் தந்தது மறுக்க முடியுமா?

5. இவற்றை வன்முறையாலா பெரியார் சாதித்தார்? போராட்டத்திலும்கூட பொது ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த தலைவர் அல்லவா தந்தை பெரியார். பேருந்தை உடைப்பது - எரிப்பது என்றால் - அவை யார் வீட்டுப் பணம்; மக்கள் வரிப்பணம்தானே பாழாகிறது?

கலவரத்தைத் தூண்டி விடுவது சுலபம் - அதனை அடக்க முடியாதவர்கள் போராட்டம் நடத்திடத் தகுதி யில்லாதவர்கள்.

1942 இல் காந்தியார் நடத்திய போராட்டத்தின்போது தந்திக் கம்பிகளை அறுத்தபோதும், தண்டவாளத்தைப் பெயர்த்தபோதும் காந்தியாரையே கண்டித்தவர் தந்தை பெரியார். தண்டவாளத்தின் கீழா வெள்ளைக்காரன் சுதந்திரத்தைப் புதைத்து வைத்துள்ளான் என்று கேட்ட தலைவர் பெரியார்.

6. அறிவியல் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. அறிவியலுக்கு முன் ஜாதி எடுபடுமா? ஜாதி என்பது புரட்டு - மூளையில் மாட்டப்பட்ட விலங்கு.

வைதிகர்களாக இருந்தால் இந்த நிகழ்ச்சிபற்றி எப்படி பத்திரிகை அடித்திருப்பார்கள் - உத்திரகிரியைப் பத்திரிகை என்று போட்டு அட்டையின் ஓரத்தில் கறுப்பு இருக்கும்.

படிப்பறிவு இல்லாத காலத்தில் துக்க காரியம் என்பதற்காக பார்த்தவுடனேயே தெரிந்துகொள்வதற்காக அப்படி செய்தார்கள்.

இப்பொழுதுதான் கல்வி அறிவு வந்துவிட்டதே இன்றைக்கும் எதற்கு பத்திரிகையில் கருப்பு அடையாளம்?

செத்தவர் சைவராக இருந்தால் சிவலோக பதவி அடைந்தார் என்றும், வைணவராக இருந்தால் வைகுந்த பதவி அடைந்தார் என்றும் போடுவார்கள்.

தமிழ் ஓவியா said...


செத்த பிறகும்கூட பதவி ஆசை மனிதனை விட்டுப் போகவில்லை என்பதுதானே இதன் பொருள்.

இன்னும் சில பேர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் என்று சொல்லுவார்கள்.

ஆத்மா என்றால் என்ன?

அது எங்கு இருக்கிறது?

இது கீதையின் பித்தலாட்டம்.

ஜாதியைப் பாதுகாக்கும் ஏற்பாடு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அந்தக் காலத்திலே தீப்பெட்டி இல்லை. சிக்கிமுக்கிக் காலம். சுடுகாட்டுக்குப் பிணத்தைக் கொண்டு செல்லும்போது, பிணத்தை எரிக்கவேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்தே தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவார்கள். இப்பொழுது என்ன வந்தது?

மின்சார சுடுக்காட்டுக்குச் செல்லும்பொழுதுகூட தீச்சட்டியைத் தூக்கிச் செல்லுவது - எத்தகைய முட்டாள்தனம்?

காரண காரியம் தெரிவதில்லை. ஆட்டு மந்தை மாதிரி முன்னோர்கள் செய்தார்கள். அது தொடர்கிறது- அவ்வளவுதானே!

7. அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயது 30 தானே. இப்பொழுது ஆண்களுக்கு 68; பெண்களுக்கு 71 என்று வளர்ந்தது எப்படி? அறிவு வளர்ச்சியால் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சிதானே - இந்த வளர்ச்சிக்குக் காரணம்?

மரபணு ரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டால், பிறந்த மனிதன் இறக்கமாட்டான் என்ற காலம் வரப் போவதாக மருத்துவ உலகம் கூறுகிறதே! ஆயுள் நீண்டால் மட்டும் போதாது; முதுமை தடுக்கப்படவேண்டும் என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

8. படிப்பு ஒரு பக்கம் வளர்ந்தாலும், பகுத்தறிவு வளரவில்லை என்பது வெட்கக்கேடு.

மறைந்த கருஞ்சட்டை வீரர் கோவிந்தராசன் பட்டதாரி அல்ல. ஆனால், அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆயிரம் பட்டதாரிகள் முன்வந்தாலும் பதில் சொல்ல முடியாதே! காரணம் அவர் பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளிக் கூடத்தில் படித்துத் தேர்ந்தவர்.

9. நெருக்கடியான நேரத்தில் மெய்க்காப்பாளர் போல செயல்படுபவர். ஓர் இயக்கத்தில் கட்டுப்பாட்டுடன் கொள்கை உரத்துடன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசு ஒரு முன்னுதாரணம்.

உலகில் முதல் பகுத்தறிவுவாதி கவுதம புத்தர். (அதனால்தான் தன் மகனுக்குக் கவுதமன் என்று பெயர் சூட்டியுள்ளார் ஆப்ரேட்டர்).

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

என்றார் புத்தர்.

அதற்கு விளக்கம் சொன்னவர் பெரியார்.

உன் தலைவனுக்குக் கட்டுப்பட்டு இரு. ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இரு. ஸ்தாபனத்திற்கு உண்மையாக இரு என்பதுதான் இதன் தத்துவம் என்றார் தந்தை பெரியார்.

இதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய பெரியார் பெருந்தொண்டர்தான் நமது கோவிந்தராசன்.

இவரின் நினைவைப் போற்றும் வண்ணம், வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு பூங்காவிற்கு ஆப்ரேட்டர் கோவிந்தராசன் பெயர் சூட்டப்படும் (பலத்த கரவொலி!).

10. இவ்வளவு கருத்துகளையும், தகவல்களையும் எடுத்துக்கூறிய தமிழர் தலைவர், இந்த வட்டாரத்தில் அரும்பணியாற்றிய சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவு கூர்ந்தார். (இது எப்பொழுதுமே தமிழர் தலைவருக்கே உரிய தனித்தன்மை!).

திருவையாறு ஒன்றிய தலைவராக இருந்த பெரியார் பெருந்தொண்டர் கோதண்டபாணி (எப்பொழுது வந்தா லும் திருவையாறு அல்வாவை மறக்காமல் கொடுப்பவர்) புலவர் சுபாஷ்சந்திரன், புலவர் முருகானந்தம், தஞ்சை இரா.இராசகோபால், வரகூர் நடராசன், தங்கையா, கண் டியூர் கணபதி, கந்தசாமி என்று நீண்ட பட்டியல் உண்டே!

11. ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்களின் துணை வியாரைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கைக்கு ஈடுகொடுத்து அருந்துணையாக இருந்த அம்மையாரைப் பாராட்டவேண்டும். வீட்டுக்கு விருந்தினர் திடீரென்று வந்தால், தன் சாப்பாட்டைத் தியாகம் செய்து வந்தவர் களை உபசரிப்பது நம் வீட்டுப் பெண்கள்தானே!

தமிழ் ஓவியா said...

பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராசன் மறைந் தார் என்றாலும், அவர்தம் தொண்டால் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.

அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அவரது மகன் கவுதமன், தம் தந்தையாரைத் தொடர்ந்து இயக்கப் பணியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறேன் என்று கூறி முடித்தார்.

45 நிமிட நேர உரையில் இந்த ஆழமான விலை மதிக்க முடியாத கருத்து முத்துகளை வாரி இறைத்தார் தமிழர் தலைவர்.

கூட்ட நிகழ்ச்சி

10.5.2013 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு திருவையாறு தேரடி திடலில் பெரியார் பெருந்தொண்டர் ஆப்ரேட்டர் ப.கோவிந்தராசன் அவர்களின் படத்திறப்பு விழா - திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன் றன் தலைமையில் நடைபெற்றது. தொடக்கத்தில் தோழியர் ஜெயமணிகுமார் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இவருக்குக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார்!

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தொடர்ந்து வழக்குரைஞர் ஸ்டாலின், தஞ்சை இரா.இரத்தினகிரி, மதுரை மாநகர் வாசகர் வட்ட தலைவர் அ.முருகானந்தம், தஞ்சை மண்டல திராவிடர் கழகத் தலைவர் வெ.செயராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருணகிரி, அமைப்புச் செயலாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராசகிரி கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றிய பிறகு, கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார். கோ.ரமேஷ் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டம் முடிந்து ஆப்ரேட்டர் கோவிந்தராசன் அவர்கள் இல்லத்தில் கழகத் தலைவர் மற்றும் பொறுப் பாளர்களுக்கு உணவளித்து உபசரிக்கப்பட்டது.

புலவர் முருகானந்தம் இல்லத்தில்...

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் புலவர் முருகானந்தம் அவர்களின் இல்லத்திற்குக் கழகத் தலைவர் சென்று விசாரித்தார். விடுதலை சந்தாவினை புலவர் முருகானந்தம் அவர்களின் இணையர் அளித்தார்.

நல்லாசிரியர் அப்பாசாமி இல்லத்தில்...

காந்தி நடுநிலைப்பள்ளி நிறுவனர், நல்லாசிரியர் அப்பாசாமி (மறைவு) அவர்கள் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்தார் தமிழர் தலைவர்.

தமிழ் ஓவியா said...


ஒரு சேதி


(திருவாரூர் திருத்தியாகராஜனின் திருத்தேர் தீக்கிரையாயிற்று)

தியாகராஜ பெருமானின் தேரானது 09.06.1926ந் தேதி தீக்கிரையாயிற்று என்ற செய்தியைக் கேட்க இந்துக்களில் பலர் மிகுதியும் துக்கப்படுவார்கள். ஆனால் நாம் அதை ஒரு நல்ல சேதியாகவே நினைக் கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா தேர்களையும் விட மிகப்பெரியது திருவாரூர் தேரேயாகும். இதை இழுத்துச் செல்ல குறைந்தது மூன்று நான்கு மாதங்களும், 5000த்துக்குக் குறையாமல் பதினாயிரம் ஆட்களும் வேண்டும். இவர்கள் படிச் செலவும் சுமார் 20,000 ரூபாய்க்குக் குறையாதென்றே சொல்லலாம்.

தற்காலமுள்ள நிலைமையில் இவ்வளவு ஆர்ப் பாட்டம் எதற்கு? இதை நினைக்கும் போது ஒரு சிறுகதை நமது ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது,
ஒரு குருவுக்கு நான்குசிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குருவானவர் கடையில் ஊசி வாங்கிக் கொண்டு வரும்படி தன் நான்கு சிஷ்யர்களிடம் கட்டளை யிட்டார்.

அவர்கள் ஊசி வாங்கிய பிறகு, நால்வரையும் வாங்கிவர கட்டளை யிட்டிருக்க ஒருவர் மாத்திரம் இதை எடுத்துப்போனால் கோபித்துக் கொள் ளுவார் என்று ஒரு நீண்ட பனைமரத் துண்டில் ஊசியைக் குத்தி நால்வரும் வழிநெடுக இறக்கி இறக்கி சுமந்து சென்று குருவை அடைந்ததும் அவர் அறியும்படி தொப்பென்று போட்டு ஊசியைத்தேடி காணாமல் போகவே நடந்ததைச் சொன்னார்கள்.

குரு கோபித்துக் கொண்டு, உங்களுக் குள்ள பக்திக்குத் தகுந்த புத்தியில்லை யென்று சொல்லி வேறொரு ஊசி வாங்கி பனைமரத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி தூக்கி வரும்படி கட்டளையிட்டார். உடனே அவர்கள் இதனால் ஒரு நல்ல புத்தி கற்றுக் கொண்டதாக சந்தோஷித்து மறுபடியும் ஊசி வாங்க கடைக்குப் போகும் போது, ஒருவன் குரு ஊசிக்கு மாத்திரம் காசு கொடுத்தாரே யல்லாமல் கயிறு வாங்க காசுக்கு என்ன செய்கிறது என்று கேட்க மற்றவர்கள் தோஷம், தோஷம் இதெல்லாம் நினைக்கவே கூடாது; நினைப்பது குருத் துரோகமாகும் என்று சொல்லி நினைத் ததற்குப் பிராயச்சித்தம் செய்து கொண் டார்கள்.

அதே போலிருக்கிறது திருவாரூர் தேரில் சுவாமியை வைத்து இழுக்கும் கதை.தேசம் வறுமைப் பிணியால் வதையுற்று கல்வியற்று சிறுமைச் செயலால் சீரழிந்து இருக்கும் இதுகாலை 2000 வேலி நிலமுள்ள தியாகராஜ சுவாமிகளின் உற்சவத்திற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு தொழி லாலயங்களும் கல்லூரிகளும் அமைத்து வறுமைப் பிணியால் வாடும் மக்களுக்கு வேலை கொடுத்து போஷித்தும், கல்வி போதித்து சன்மார்க்க பேதம் புரிந்துவர பிரயோஜனப்படுத்த லாகாதோ? - குடிஅரசு துணைத் தலையங்கம் - 13.06.1926

தமிழ் ஓவியா said...

கடவுள் துகளா? கண்டுபிடித்தவரின் மறுப்பு


பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் ஒரு நாத்திக அறிவியலாளர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 83 வயதான அவர் சுவிட்சர்லாந்து நாட்டின் செர்ன் நகரில் சென்ற ஆண்டு அணுக்களை உடைத்து ஆராயும் போது, அணுக்களின் துணைத் துகள்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார்.

அந்தச் செய்தியை அவர் வெளியிட்டபோது பத்திரிகைகளும் ஊடகங்களும் அதற்குக் கடவுள் துகள் என்று தாங்களாகவே பெயர் வைத்துவிட்டார்கள். அச்செய்தி முதன் முதலில் வெளிவரும் போதே அப்படி எழுதிவிட்டதால் உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் கடவுள் துகள் என்றே இன்னமும் எழுதுகின்றன. ஆனால், இந்தச் சொல்லை அத்துகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பேராசிரியர் ஹிக்ஸ் மறுத்துள்ளார்.

கடவுளின் துகள்கள் என்று குறிப்பிடப்-படுவதை நிறுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஹிக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். காரணம், அவர் ஒரு நாத்திகர்!

பேராசிரியர் ஹிக்ஸ், உலகில் உள்ள எல்லாவற்றிற்கும் துணை அணுத்துகள்கள் தான் காரணம் என்ற ஆய்வு முடிவுக்கு வந்துள்ளார்.

ஆனால், 83 வயதான அந்த அறிவிய-லாளருக்கு -_ அவரது கண்டுபிடிப்பிற்கு கடவுளின் துகள்கள் என்ற பட்டப்பெயர் பிடிக்கவில்லை; ஏனென்றால், எல்லா-வற்றையும் படைப்பிக்கவல்ல ஒரு கடவுளின் கண்டு-பிடிப்பாக தனது ஆராய்ச்சி இல்லை என்பது அவர் முடிவு.

அந்தப் பெயர் வேடிக்கையாக, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிவியலாளரான லியோன் லெடர்மேன் என்பவரால் குறிப்பிடப்பட்டது. அது ஒரு நல்ல பெயரும் இல்லை என ஹிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

1993இல் லெடர்மேன் ஒரு புத்தகத்தில், கடவுளின் அணுத்துகள் என்ற பெயர் எப்படி வந்தது? உதாசீனம் செய்யப்பட்ட(God damn) துகள் என்று பெயரிட புத்தக வெளி-யீட்டாளர்கள் அனுமதிக்க-மாட்டார்கள். அதனால்தான் என்று குறிப்பிட்டுள்ளனர். எடின்பர்க் நகரைச் சேர்ந்த ஹிக்ஸ், முதலில் நான் ஒரு நாத்திகன். இரண்டாவது, அந்தப் பெயர் ஒரு விதமான வேடிக்கைதான்; நல்ல பெயர் இல்லை. நான் அதற்கு இடமளித்து இருக்கக்கூடாது. அது தவறானவற்றிற்கு அழைத்துச் செல்லும் என்று சொன்னார்.

சென்ற ஆண்டு Hadron Collider என்ற பெரிய கருவியில் அணுவை உடைத்து ஆராய்ச்சி செய்தபோது, அவரது கருத்து உறுதி செய்யப்பட்டது.

அறிவியல் உலகம் அந்தத் துகளை ஹிக்ஸ் போசான் துகள் (higgs boson particle) என்றுதான் அழைக்கிறது.

ஆனால், புத்தக வெளியீட்டாளர்களும், ஊடகத்தினரும் தங்களின் வியாபாரத்திற்காக இப்படி செய்வது எந்தவிதத்தில் நியாயம்?

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் ராமாயணம் என்ற நாடகத்தை நடத்தினார். அது அச்சு அசல் வால்மீகி ராமாயணம். அதில் உள்ள் உண்மைகளைத்தான் அவர் எடுத்துக்காட்டினார். ஆனால், அந்த உண்மைகளைப் பொறுக்கமுடியாத ஆத்திகர்கள், எம்.ஆர்.ராதா நடிப்பது ராமாயணம் அல்ல: அது கீமாயணம் என்று தமது இயலாமையை வெளிப்படுத்தினர். அதையே சில பத்திரிகைகளும் வெளியிட கீமாயணம் என்றே அந்நாடகம் பரப்பப்பட்டது.

பகுத்தறிவை எதிர்கொள்ள முடியாத அறியாமையும் பிற்போக்கு மதங்களும் பந்தை அடிக்க முடியாமல் காலை அடிக்கும் வேலையை அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை செய்துகொண்டிருக்கின்றன. அறிவுக்கு இன்னும் எத்தனை நாள்தான் திரைபோட்டு மறைக்கமுடியும்? அண்ட சராசரங்களையும் அகழ்ந்து ஆய்ந்து உண்மையைக் காட்டுவதல்லவா அறிவு. அதன் முன் கடவுள் எம்மாத்திரம்!

- பெரியாரிடி, ஆர்.ராமதாஸ் உதவியுடன்
நன்றி : சந்திரன், வீராசாமி

தமிழ் ஓவியா said...

இதோ மக்கள் தலைவன்!


உலகம் போற்றிய புரட்சித் தலைவன், ரஷ்ய மக்களின் மனம் கவர்ந்த லெனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு இது. அரசு, கட்சிப் பணிகளில் மனித ஆற்றலுக்கு மேல் அதிகமாக ஈடுபடுத்தி உழைத்து வந்த லெனின் பார்வையாளர்களை வரவேற்கவும் நேரம் கண்டுபிடித்தார்.

தாமே அவர்களை வரவேற்று அவர்களுடன் உரையாடினார். அரசின் தலைவருக்கு இது அவசியம் என்று அவர் கருதியதால் மட்டும் இவ்வாறு அவர் செய்யவில்லை. மக்களுடன் உயிர்ப்புள்ள உரையாடல் நிகழ்த்த வேண்டிய ஒரு கட்டாயத் தேவையை அவர் உணர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம்.



நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் மூலமாகவும் கால்நடையாகவும் விவசாயிப் பிரதிநிதிகள் லெனினிடம் வந்தார்கள். விவசாயிப் பிரதிநிதிகளைச் சந்திக்க சிறப்பு தினம் வைத்திருந்தார் லெனின்.

குறித்த நாளில் கைத்தறித் துணிக் கோட்டுக்களும், மரவுரிச் சோடுகளும் அணிந்து தோள்களில் மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் கிரெம்ளினுக்கு வந்தார்கள். மூட்டை முடிச்சுகளைத் தரையிலும் சுவற்றோரமாகவும் வைத்துவிட்டு பதற்றத்துடன் கிசுகிசுத்துக் கொண்டு மக்கள் கமிசாரவைத் தலைவரை, லெனினைப் பார்ப்பதற்கு எப்போது தம்மை அழைப்பார்கள் என்று காத்திருந்தனர்.

சிறிது நேரமே அவர்கள் காத்திருக்க நேர்ந்தது. விரைவில் அவர்கள் கூப்பிடப்பட்டார்கள். இடுப்பு வார்களை இழுத்துக் கட்டியபடி, உள்ளங்கையால் தலைமுடியை நீவி விட்டுக் கொண்டு மரியாதையுடன் லெனினது அறைக்குள் அவர்கள் நுழைந்தார்கள். அவரோ மேசைக்குப் பின்னாலிருந்து அவர்களை நோக்கி எழுந்து வந்தார். ஒவ்வொருவருடனும் அன்புடன் கை குலுக்கிவிட்டு, விருந்தினர்களை உட்கார வைத்தார். தாத்தா, நீங்கள் இந்தச் சாய்வு நாற்காலியில் உட்காருங்கள்!

ஒவ்வொருவரின் பெயரையும், குடும்பப் பெயரையும், தந்தை பெயரையும், அவர் எங்கிருந்து வருகிறார் என்பதையும் லெனின் கேட்டார். எளிய மனப்பூர்வமான உரையாடல் தொடங்கியது.

லெனின் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் குடும்பப் பெயர், தந்தை பெயர் சொல்லி அழைத்தது வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அவர்களது கிராமங்களின் தேவைகள் என்ன என்றும், அவர்களிடம் இருக்கும் நிலம் எத்தகையது என்றும் அவர் அறிந்திருந்தும் அவர்களைச் சுரண்டுகிற நிலச்சுவான்தாரரின் பெயரையும்கூட லெனின் சொன்னதும் விவசாயிகளை இன்னும் அதிகமாக வியப்பில் ஆழ்த்தியது. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மிகவும் நன்றாக லெனின் ஆய்வு செய்திருந்தார் என்பது பற்றி விவசாயிகட்கு எதுவும் தெரியாது.

தமிழ் ஓவியா said...


அன்னையர் நாள்!


இன்று அன்னையர் நாள் - உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மாசு மருவற்ற அன்பு என்பது தாயிடத்தில் தான்குடி கொண்டு இருக்க முடியும் - எதையும் எதிர்பாராத இயற்கை அன்பு என்று இதனைக் கூறலாம்.

ஒரு குழந்தைக்குத் தன்பாலை ஊட்டி உயிரூட்டம் செய்கிறார் - குழந்தையின் முதல் ஆசிரியராகவும் அந்தத் தாயே அமைகிறார்.

தாய்ப்பால் என்பது தான் கலப்படத்திற்கும் இடம் இல்லாதது - ஊட் டச் சத்தும் நிறைந்தது.

இன்றைய தினம் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை 2000 கோடி அமெரிக்கன் டாலரை செலவு செய்து சீனா உருவாக்கி - புதிய அத்தியாயத்தைப் பூக்கச் செய்துவிட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை 44 விழுக்காடு குழந் தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் அவதிப்படு கின்றன. தென்னாப் பிரிக்காவில்கூட 25 சதவிகிதம்தான்; இந்தி யாவின் அவல நிலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

இந்தியாவிலேயே பொருளாதாரம் கொழிக்கும் மாநிலம் மோடி ஆளும் குஜராத் மாநிலம் என்று ஊதிப் பெருக்கிப் பலூன் விடுகிறார்களே - அந்த மாநிலத்தைப்பற்றிய கணிப்பு என்ன தெரி யுமா? இந்தியாவின் சோமாலியா என்பதே!

உலக அன்னையர் நாளில் ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தாயின் நிலை இன் றைய நிலையில் எத் தகையது?

வீட்டுக்குப் பெயர் அன்னை இல்லம்; ஆனால் அந்த அன்னையார் இருப்பதோ முதியோர் இல்லம் - இதுசரிதானா?

வருமானம் பெருகிய அளவிற்கு மனிதநேயம் பெருகவில்லையே! வெறும் பணமும் நுகர் வும்தான் வாழ்க் கையா?

மாதா, பிதா, குரு என்ற வரிசையில்கூட தாய் தானே முதலிடத் தில்; ஒவ்வொருவரும் தமக்குள் எடை போட் டுப் பார்க்கட்டும் - இந் நாளில்.

- மயிலாடன்