Search This Blog

5.5.13

இராமர் பாலம் இராமேஸ்வரத்தில் இல்லை!


(கட்டுரையாளர் - திராவிடர் இயக்கத்தவர் அல்லர் - அவர் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துள்ளார்).
சிறீராமனுடைய சரித்திரத்தை நாரத முனிவர் வால்மீகிக்குச் சொல்லி அதை அவர் காவியமாக எழுதினார் என்பதுதான் நாம் அறிந்தது. வால்மீகி எழுதிய இராமாயணம் மிகப் பெரிய புகழ் பெற்ற பிறகே பிற மொழிகளில் கம்பர் முதற்கொண்ட பலரால் இராமாயணம் எழுதப் பெற்றது.
இராமர் பாலம் பற்றிய எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் வான்மீகத்தில் இருப்பதை ஆதாரமாகக் கொள் வதுதான் நியாயம். கம்பரோ, எழுத் தச்சனோ, துளசிதாசரோ யாராயினும் இவர்கள் எழுதியவை வான்மீகத்தை அடியொற்றி மாற்றியும், மிகைப் படுத்தியும் எழுதப்பட்டவைதான் என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. இந்த காவியங்களிலெல்லாம் ஏராளமான இடைச்செருகல்கள் உண்டு என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
மதரீதியாக இராமர் பாலத்தின்மீது நம்பிக்கை வைத்து அது இன்றளவும் இருக்கிறது என்று ஒருவர் நம்பினால் அவரது நம்பிக்கை யார் எழுதிய இராமாயணத்தை அடிப்படையாக வைத்து அமைய வேண்டும்?
இராமாயணத்தை எழுதிய ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டு இருப்பதையும், இவர்களது காவி யங்களில் ஏராளமான கற்பனைகள் இருப்பதையும், இவற்றில் பல இடைச்செருகல்கள் இருப்பதையும் ஒப்புக் கொள்ளும்போது, இராமர் பாலத்தை புனிதம் என்று நம்பு கிறவர்கள் யார் எழுதியதை ஆதார மாகக் காட்டுவார்கள்?
உதாரணமாக, இராமர் தான் கட்டிய பாலத்தைத் தானே உடைத் தார் என்ற செய்தி கம்பராமா யணத்தில் வருகிறது. இதை மிகைப்பாடல் என்றும், இடைச் செருகல் என்றும் ஆகவே இது உண்மையல்லவென்றும் சிலர் (துக்ளக் சோ) சொல்கிறார்கள்.
இதே அளவுகோலைப் பயன் படுத்தினால் இராமர், இராமேஸ் வரத்தில் சிவனை வழி பட்டார் என்பதும் கம்பராமாயணத்தில் மட்டுமே. அதுவும் மிகைப்பாடல் பகுதியில், இடைச்செருகலாகத்தான் வருகிறது.
இதை நம்பி இன்றுள்ள இராமேஸ்வரம் கோவிலை ஆரம்பத் தில் ஸ்தாபித்தவர் இராமனே என்றும் நம்புகிறவர்களின் நம்பிக்கை என்னாவது? இப்படி இராமன் இரா மேஸ்வரத்தில் சிவனை வழிபட்டார் என்பது வான்மீகத்தில் இல்லவே இல்லை.

முதல் நூலில் இல்லாத ஒன்று தழுவல் நூலில் இருக்குமானால் நாம் முதல் நூலைத்தானே ஆதார மாக ஏற்க முடியும். மேலும், வான் மீகத்தில் இராமேஸ்வரம் என்ற ஊரின் பெயர் எங்குமே பயன்படுத் தப்படவில்லை. அதுபோல தனுஷ் கோடி என்ற ஊரின் பெயரும் வான்மீகத்தில் இல்லை.
மாறாக அனுமன் லங்காவுக்குச் சென்றபோதும், இராமன் லங்காவை பார்வை இட்டபோதும் மகேந்திர கிரி மலையில் ஏறி நின்று பார்த் தார்கள் என்று வான்மீகத்திலும், கம்பரிலும் ஒரே மாதிரி வருகிறது.
இந்த மகேந்திரமலை இராமேஸ் வரத்திலோ, தனுஷ்கோடியிலோ இல்லை. ஒரு சிறிய மணல் பொத் தையை மகேந்திரமலை என்று இராமேஸ்வரத்தில் வழிகாட்டிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அனுமனும், இராமனும் ஏறி நின்ற மகேந்திர மலை இன்றும், உண் மையிலேயே இந்திய வரைப்படத்தில் ஒரி சாவை ஒட்டிய ஆந் திர மாநிலத்தின் கடற்கரையில் தான் உள்ளது. இந்த மலை யில் நின்று பார்த்தால் கடலும், கடற்கரையில் உள்ள லங்காவும் (சிறிய தீவு) அவர் களுக்குத் தெரிந்தது.
லங்கா என்ற சமஸ் கிருத வார்த்தைக்கு சிறிய தீவு என்று அர்த்தம். வான்மீகத் திலும், கம்பரிலும் சொல்லப்படுகின்ற கிட்கிந்தை, தண்டகாரண்யம், விந்திய மலை, கோதாவரி நதி, நர்மதை நதி, விந்தியத்தின் மலைக்குகைகள் அனைத்துமே இன்றும் இந்திய வரைபடத்தில் ஆந்திராவின் வடக்கு எல்லையிலும், ஒரிசா சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேசம், உத்திர பிரதேசம் மாநிலங்களிலும் உள்ளன.
வான்மீகத்திலும் கம்பரிலும் வரும் பஞ்சவடியும், அயோத்தியும் சித்திரக்கூடமும் கூட இன்றைய உத்திரபிரதேச மாநிலத்திலேயே உள்ளன. அயோத்தியில் புறப்பட்டு காட்டில் கால்நடையாக வனவாசம் வந்த இராமன் முதலியோர் முதல் 10 ஆண்டுகள் சித்திரக்கூடத்தில் முனிவர்களின் விருந்தினர்களாகவே தங்கியிருந்தார்கள் என்கிறது வான்மீகம்.
சீதையை இராவணன் கடத்திய தாகச் சொல்லப்படும் பஞ்சவடி ஆஸ்ரமம் கோதாவரி ஆற்றின் ஒரு கிளையின் அருகில் இருந்தது என்று இரண்டு இராமாயணங்களும் சொல்கின்றன.
இந்த பஞ்சவடியும், கோதாவரியும், கிட்கிந்தையும் சட்டீஸ்கர் மற்றும் ஆந்திராவின் வடக்கு எல்லையில் இன்றும் உள்ளன. இராவணனின் தங்கை சூர்ப்பனகை தண்டகாரண் யப் பகுதியில் வசித்தாள் என்கிறது வான்மீகம்.
ஆகாயத்தில் பறக்கும் குதிரை, தேர், புஷ்பக விமானம், பேசும் குரங்கு, பேசும் கழுகு, பேசும் கரடி, பறந்து செல்லும் அரக்கர்கள் போன்ற இயற்கைக்கு புறம்பான கற்பனைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இராவணனது லங்கா இன்றுள்ள ஒரிசா கடற்பகுதியில் உள்ளது என்பது புரியும்.
எப்படி?
கிட்கிந்தையில் இருந்து படைகளுடன் மகேந்திரமலையை கால்நடையாக சென்றடைய இராமன் எடுத்துக் கொண்ட காலம் வெறும் நான்கே நாட்கள் ஆறுகள், மலைகள், ஏரிகள், அடர்ந்த காடுகளையெல் லாம் சுற்றியோ, நடுவில் சென்றோ வீரர்கள் இந்த தூரத்தைக் கடந் தார்கள் என்று வான்மீகத்தில் வருகிறது.
கிட்கிந்தையில் இருந்து காட்டு வழியாக நான்கு நாட்களுக்குள் ஒரு சேனை கடந்து செல்லும் தூரத்தில் இருப்பது தான் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையும் கடற்கரையும்.
மாறாக கிட்கிந்தையில் இருந்து குறுக்காக நடந்தாலும் 1500 கிலோ மீட்டர் தூரம் உள்ள இராமேஸ் வரத்தை இராமனின் சேனை வந்தடைய நான்கு நாளல்ல. ஆறு மாதங்கள் ஆனாலும் முடியாது.
பாலம் கட்ட 5 நாட்களும், போர் செய்து இராவணனைக் கொல்ல 8 நாட்களும் எடுத்துக் கொண்ட இராமன் சித்திரை மாதம் சுக்ல ஷஷ்டியன்று வனவாசம் முடிந்து  திரும்பி நந்திகிராமம் வந்துவிடுகிறார்.

கிட்கிந்தை மகேந்திரகிரி -4 நாட்கள்
பாலம் கட்ட    -5 நாட்கள்
போர்    -8 நாட்கள்

பங்குனி மாதம் உத்தரத்தில் கிட்கிந்தையிலிருந்து புறப்பட்ட இராமன் சித்திரை மாதம் கிருஷ்ண சதுர்த்தியுடன் கூடிய அமாவாசையில் இராவண வதம்  முடிந்து மீண்டும் நந்திகிராமம் வந்து சேர எடுத்துக் கொண்டது இவ்வளவு குறுகிய நாட்கள் மட்டுமே. (ஸ்ரீ மத்வால்மீகி இராமாயணம் ஸாரம். ஸ்ரீ ராம கிருஷ்ணமடம் மைலாப்பூர் வெளி யீடு).
இதனால், இராமன் இராமேஸ் வரம் வரவே இல்லை என்பதும், இராமன் கட்டிய மிதவைப் பாலம் ஒரிசாவில் உள்ள மகேந்திரமலையின் பக்கமுள்ள கடலிலேயே கட்டப் பட்டது என்பதும். அன்றிருந்த சிறிய லங்கா (தீவு) இன்று கடலில் மூழ்கி இருக்கலாம் என்பதும் தான் உண்மையாக இருக்க முடியும்.
இராமபிரான் புருஷோத்தமனாக வாழ்ந்து மக்களுக்கு வழிகாட்டிய மனிதன் என்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஸ்தாபகரான பரமபூஜ்ய டாக்டர் கேசவ பலிகாரம் ஹெட் கேவார்.
மக்களை மடையர்களாக்கி தீண் டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கு வதற்கு காரணமாக இருந்தவர்கள் கள்ள பண்டிதர்களான உயர் ஜாதி பூஜாரிகள் என்றும், சடங்காசாரங்கள் போன்றவற்றினால் பாமர இந்துக்களை ஏமாற்றியவர்கள் என்றும், இன்றும் பொய்யான கட்டுக் கதைகளைச் சொல்லி அறியாதவர்களை ஏமாற்றி வேதாந்தத்திற்கு தப்பான பொருள் சொல்லி விடுகிறார்கள் என்றும், இன்றுள்ள பூஜை முறைகளினால் இந்துக்களை ஆண்மையற்றவர் களாகவும், பிச்சை எடுக்கும் புத்தியுடையவர்களாகவும், ஆக்கி விட்டார்கள் என்றும் உயர்ஜாதி பூஜாரிகளை சாடுகிறார். சுவாமி சின்மயானந்தர் அவர்கள்.
இந்த சின்மயானந்தர் சுவாமி. ஆர்.எஸ்.எஸ். கிளை ஸ்தாபனங் களில் ஒன்றான விஸ்வஹிந்து பரிஷத்தின் ஸ்தாபனத் தலைவர் களில் ஒருவர் என்பதை மறந்து விடக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.ன் பெரும் தலைவர்களில் ஒருவரும் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் ஸ்தாபகருமான ஏக்னாத் ரானடேயும் கூட இரா மனை அற்புதங்கள் செய்யாத மக் களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாபெரும் மனிதர் என்றுதான் சொல்கிறார்:
ஆனால், இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று சொல்லிக் கொள் கிறவர்கள் அதன் ஸ்தாபகத் தலை வரின் கொள்கையையே சத்த மில்லாமல் சாப்பிட்டு விட்டு இராமனை கற்பனை கதாபாத்திரம் ஆக்குவதிலேயே குறியாக இருக் கிறார்கள்.
ராமன் கட்டிய பாலம் மரங் களையும் கற்களையும் போட்டு, காட்டுச் செடிகளால் பிணைத்து கட்டப்பட்ட மிதவைப் பாலம் என்பது வான்மீகத்தில் விளக்கப் பட்டுள்ளது.
மிதவைப்பாலம் அசையாமல் இருக்க கற்கள் கீழே கட்டி தொங்க விடப்பட்டிருக்கலாம். அந்த கடற்கரையில் உள்ள ஒருவரிடம் கேட்டறிந்து (இதை சமுத்திர ராஜன் என்கிறார்கள்) அலை அதிகம் இல்லாத இடத்தில் இராமன் பாலம் அமைத்தான் என்றும் வான்மீகத்தில் வருகிறது.
மரத்தினாலும், கொடிகளினாலும் ஒரிசா கடற்கரையின் அருகில் உள்ள லங்காவுக்கு செல்ல அமைக்கப்பட்ட மிதவைப் பாலம் எத்தனை நாட் களுக்கு இருந்திருக்க முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். வான்மீகத்தின்படி தமிழகத்திற்கு வராத இராமன், இராமேஸ்வரத்தில் 100 யோஜனை (200 மைல்) நீளத்தில் 20 மைல் அகலத்தில், பாலம் கட்டினார் என்று நம்பச் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இயற்கையில் நடக்காத, கற் பனையான கதைகளைச் சொல்லி பாமர இந்துக்களை கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பல ஆயிரம் ஆண்டுகள் ஏமாற்றி சுகபோகமாக வாழ்ந்த உயர்ஜாதி பூஜாரிகளின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்களுக்கு, இன்று. இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் செய்து வரும் ஏமாற்று வேலைகள் புரிந்து வரும்.
புருஷோத்தமன் ஸ்ரீராமனை வழிகாட்டியாக மதித்து, வீரனாக வாழ்ந்து அதர்மத்தையும், அறியாமை யையும் எதிர்த்து போராடும் நம்பிக்கையில் உள்ள என் போன் றவர்களின் மனம் புண்படும்படி, ராமனை வெறும் கற்பனைக் கதாநாயகனாக ஆக்க முயலும் ஜாதி பூஜாரிகளின் முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.
ஒருவரது மத நம்பிக்கை இன்னொருவரது அறிவுபூர்வமான நம்பிக்கைக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ இடையூறு செய்யாத வரையிலும் யாரும் பெரி தாகக் கவலைப்பட போவதில்லை.
ஆனால் உண்மைக்குப் புறம்பான வெறும் கற்பனைகளை நம்பச் சொல்லி பாமர இந்துக்களைப் பகடைக்காய்களாக பயன்படுத்தும் இவர்கள் இந்து மதத்திற்கும், ஸ்ரீராமனுக்கும் தீராத களங்கத்தையே உண்டு பண்ணுகிறார்கள் என்பது தான் உண்மை.
------------------- கேப்டன் எஸ்.பி. குட்டி பி.இ.-நூல்: "அறிவுக்கு எட்டிய கடவுள்"

19 comments:

panankadu.com said...

very nice

கவியாழி said...

அருமையான அலசல் கேள்வி?

தமிழ் ஓவியா said...

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு 1 - சிறை நிரப்பும் போராட்டம்!



இராஜபாளையம் மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு

தமிழர் தலைவர் அறிவித்த ஆகஸ்டு -1 சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கு பெறும் இளைஞரணி தோழர்களின் ரத்த கையொப்பமிட்ட முதல் பட்டியலை மாநில இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார் மற்றும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் கு. தென்னரசு ஆகியோர் உள்ளனர் (4.5.2013).

இராஜபாளையம், மே 5- வரும் ஆகஸ்டு முதல் தேதி அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமைக் கான சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்

இராஜபாளையத்தில் கடல் இல்லை. ஆனால் இங்கே கருஞ்சட்டைக் கடல் பொங்கி நிற்கிறது.

தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தோழர்கள், இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக கூடி யுள்ளீர்கள். எல்லா வயதி னரும் வந்துள்ளீர்கள்.
யார் இளைஞர்?

இளைஞர் என்பது வயதைப் பொறுத்ததல்ல உணர்வைப் பொறுத்தது - உணர்ச்சியைப் பொறுத்தது - இலட்சியத்தில் கொண்டி ருக்கும் பிடிப்பைப் பொறுத் தது.

முதியவர்களுக்குப் பின்னால் இளைஞர்கள்

எனக்குப் பின்னால் நமது தளபதி ஸ்டாலின் உரையாற்றிட உள்ளார். இளைஞர்களுக்குப் பின் னால் முதியோர் இருக் கிறார்கள் என்பதைவிட முதியவர்களுக்குப் பின் னால் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனக் குப் பின்னால் தளபதி உரையாற்ற இருக்கிறார்.

இராஜபாளையம் என்று வருகிறபோது 1982-க்கு என் நினைவு செல்லுகிறது.

அந்த மம்சாபுரம்

மம்சாபுரத்திற்கு மருத் துவமனையைத் திறப்பதற்கு நான் காரில் சென்றபோது தி.மு.க. கொடியைக் காட்டி, மாலையைக் கையில் வைத் துக் கொண்டு என்னை வரவேற்பது போல பாசாங்கு காட்டி என்னைத் தாக்கி னார்கள். ரத்தம் கொட்டியது. உடம்பெல்லாம் காரின் கண்ணாடித் தூள்கள், ஓட்டுநரின் சாமர்த்தியத் தால் தப்பினேன். ஆனாலும் ஒப்புக் கொண்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டம் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு முடித்த பிறகு தான் திருச்சிக்குச் சென் றேன் என்ற தகவலை கழ கத் தலைவர் குறிப்பிட்டார். 31 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற வன்முறை அது (மேலும் மூன்று முறை அவர் உயிருக்குக் குறி வைக்கப் பட்டதுண்டு)

ஆயிரம் ஆயிரம் எதிர்ப் புகள், அடக்கு முறைகள் சிறைச் சாலைகளைச் சந் திக்க நேரிட்டாலும் தந்தை பெரியார் அவர்களும் சரி, அவர்கள் கண்ட இந்த இயக்கமும் சரி இலட்சியப் பாதையை விட்டு விலகாது என்பதைக் குறிப்பிட்டார் தமிழர் தலைவர்.

போராட்ட அறிவிப்பு! இந்த மாநாட்டில் போராட்டத் திட்டம் அறி விக்கப்படும் என்று கூறி யிருந்தேன். தீர்மானமும் கூட நிறைவேற்றப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகும். மனிதன் சந்திர மண்டலத்துக்குள் கூடப் போய்த் திரும்பும் கால கட்டம் இது. இத்தகைய கால கட்டத்தில் தமிழன் கட்டிய கோயிலுக்குத் தமிழன் அர்ச்சகனாகப் போக முடியாது. கோயில் கருவறை என்பது பார்ப்பனர்கள் மட்டுமே செல்லக் கூடிய இடமாக இருக்கிறது. இது மதத்தின் பெயரால் திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையாகும்.

இதனை ஒழிக்க தந்தை பெரியார் புறப்பட்டார். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சைத் துறந்தார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள்

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த இந்த முள்ளோடு அய்யாவைப் புதைத்து விட்டோமே என்று மானமிகு கலைஞர் அவர்கள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் அறிக்கை வெளியிட்டார்.

தமிழ் ஓவியா said...

கழகம் தொடர்ந்து இந்த உரிமைக்காகப் போராடிக் கொண்டு வருகிறது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை முதல் அமைச்சர் கலைஞர் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றாலும் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று முடக்கி வருகின்றனர். சுமுகத் தீர்வு என்றால் என்ன?

உச்சநீதிமன்றத்திலே தமிழ்நாடு அரசு சார்பிலே மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாகத் தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

அந்தச் சுமுகம் என்றால் என்ன? விளக்கம் தேவை கிராமக் கோயில் பூசாரிகளாக பார்ப்பனர் அல்லாதார் இருப்பார்கள். ஆகமவிதிகளுக்கு உட்பட்ட பெரிய பெரிய கோயில்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்று சுமுகமாக தீர்வு காணலாம் என்று தமிழ்நாடு அரசு நினைத்தால் அதனை ஏற்க மாட்டோம் - கடுமையாக எதிர்ப்போம்! போராட்டத்தில் ஈடுபடுவோம்!

இரண்டு மாதங்கள் இதுபற்றி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம், இலட்சியம் நிறைவேறும் வரை ஓய்ந்திட மாட்டோம்.

ஆகஸ்டு 1 சிறை நிரப்பும் போராட்டம்!

ஆகஸ்டு முதல் தேதி என்பது - தந்தை பெரியார் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம், போராட்டத்தை நடத்தும் வரலாற்றுக் குறிப்பாகும்.

அதே போல வரும் ஆகஸ்டு முதல் தேதி திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும். அது சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் (பலத்த கைதட்டல்).
ரத்தக் கையொப்பம்

தமிழ் ஓவியா said...


நான் இதனை அறிவிப்பதற்கு முன்னதாகவே எனது அறிக்கையின் அடிப்படையில் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களின் பட்டியலோடு தயாராக இருக்கிறார்கள். ரத்தக் கையொப்பம் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். இதற்கெல்லாம் நாம் ரத்தம் சிந்தக் கூடாது. அந்த ரத்தம் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது இயக்கம் மனிதாபிமான இயக்கம். எதைச் செய்தாலும் பிறருக்கு அது பயன்படுவதாக அமைய வேண்டும்.

வன்முறைக்கு இடம் இல்லை

நாம் நடத்தும் போராட்டத்தில் எப்பொழுதுமே வன்முறைக்கு இடம் இருக்காது. பேருந்துகளுக்குச் சேதம் ஏற்படாது - பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இருக்காது.
சுதந்திரப் போராட்டம் என்று கூறி காங்கிரஸ்காரர்கள் தண்டவாளத்தைப் பெயர்த்த போதும், போஸ்டாபீஸைக் கொளுத்திய போதும்கூட அப்பொழுதே தந்தை பெரியார் அதனைக் கண்டித்துள்ளார்.

எந்த ஒரு இலட்சியத்தை அடைவதாக இருந்தாலும் அதற்குரிய விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

தோழர்களே தயாராகுங்கள் - இங்கே நமது அழைப்பை ஏற்று தி.மு.க. பொருளாளர் தளபதி கலந்து கொண்டு இருக்கிறார்.

மிசா கைதியாக...

1976 நெருக்கடி காலத்தின்போது மிசா கைதிகளாக சென்னை மத்திய சிறைச்சாலையில் நாங்கள் அடைக்கப் பட்டபோது ஒரு நாள் இரவு - தளபதி ஸ்டாலினை அடித்துத் துவைத்து நாங்கள் இருந்த அறையில் தான் போட்டார்கள். என்மீது தான் விழுந்தார். அப்பொழுது அவரைத் தூக்கி நிறுத்தி - பொது வாழ்வில் இவை எல்லாம் சகஜம்தான் அதற்கொரு பயிற்சிதான், தளராதீர்கள் என்று அன்று சொன்னேன்.

தளரவில்லை தளபதி

அவர் தளர்ந்து விடவில்லை - வளர்ந்திருக்கிறார் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிருகிறார். அவரை வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.



போராட்ட வீரர் பட்டியல் ரத்தக் கையொப்பத்துடன்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆகஸ்டு முதல் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க போராட்ட வீரர்களின் பட்டியல் முதல் பட்டியல் கழகத் தலைவரிடம் இராஜபாளையம் இளைஞரணி மாநில மாநாட்டில் அளிக்கப்பட்டது.

1081 பேர் அதில் கையொப்பமிட்டி ருந்தனர். பலர் ரத்தக் கையொப்பமும் போட்டிருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலை தமிழர் தலைவரிடம் வழங்கியபோது கடல் அலை ஓசையாக கையொலி எழுந்தது.

தமிழ் ஓவியா said...


நசுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் - தளபதி மு.க. ஸ்டாலின் எழுச்சியுரை


இராஜபாளையத்தில் நடைபெற்ற கழக இளைஞரணி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார் (4.5.2013)

இராஜபாளையம் மே 5- நசுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுவதில் திராவிடர் கழகத்துக்கே முதலிடம் என்றார் தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.

இராஜபாளையத்தில் நேற்று (4.5.2013) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் பங்கேற்று தி.மு.க. பொருளாளர் தி.மு.க. இளைஞரணி செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்ட தாவது: திராவிடர் கழக இளைஞரணி 1978இல் தொடங்கப்பட்டுள்ளது தி.மு.க. இளைஞரணி 1980இல் மதுரையில் ஜான் சிராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.

தி.க. இளைஞரணியின் குறிக்கோள்கள் உன்னதமானவை

திராவிடர் கழக இளைஞரணியினரின் குறிக்கோள்கள் மிகவும் உயர்ந்தவை.

பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி மறுப்புத் திருமணங்கள் விதவைத் திருமணங்கள் வரதட்சணையற்ற திருமணங்களைச் செய்து கொள்வது என்பதெல்லாம் அறிவார்ந்த முற்போக்குத்தனம் கொண்டதாகும்.

கலைஞரின் அறிவுரை

தி.மு.க. இளைஞரணியினருக்காக ஒரு சின்னம் (Emblem) ஒன்றைத் தயாரித்து தலைவர் கலைஞரிடம் அளித்தோம். அதில் அண்ணா, கலைஞர் உருவம் இடம் பெற்றிருந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் அதில் தந்தை பெரியார் உருவம் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார். அதற்கு விளக்கம் சொன்னதுதான் முக்கியம்.

பதவிக்கு ஆசைப்படாதே - கொள்கைக்கு முன்னுரிமை கொடு என்பதற்காகத்தான் அய்யா படம் இடம் பெற வேண்டும் என்று சொன்னேன் என்று கலைஞர் அவர்கள் சொன்னது நமது இளைஞர்களுக்கு முக்கியமான, தேவையான வழிகாட்டுதல் ஆகும். நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறு வயதிலேயே மேடை ஏற்றப்பட்டு உரையாற்றப் பயிற்சி அளிக்கப்பட்டவர். அண்ணா அவர்களே அந்த சிறுவன் உரையைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியுள்ளார்.

இந்தச் சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே திருநீறு, கழுத்திலே உருத்திராட்சம் அணிந்திருந்தால் திராவிடர் கழகத்தின் திருஞானசம்பந்தன் என்றிடு வார்கள். ஆனால் இவர் அருந்திய ஞானப்பால் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு ஈரோட்டுப்பால் என்று 1943ஆம் ஆண்டிலேயே அடையாளம் காணப்பட்டவர் தான் நமது ஆசிரியர் பெருந்தகை.

வழிகாட்டுகிறார் ஆசிரியர்

அவரின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடியவை.
இதே ராஜபாளையத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதற்குமுன் நான் கலந்து கொண்டு இருந்தாலும் தாய்க் கழகத்தில் மாநில இளைஞரணி மாநாட்டில், நான் பங்கு பெறுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


மாநில இளைஞரணி மாநாடு தோழர்கள் முழக்கம்


4.5.2013 சனி மாலை 7 மணிக்கு ஜவகர் திடலில் சுயமரியாதைச் சுடரொளி ஏ.எஸ்.ஆர். தங்கராசா நினைவரங்கில் தெற்கு நத்தம் சித்தார்த்தன், பெரியார் நேசன் குழுவினரின் திக்கெட்டும் பரவட்டும் திராவிடம் எனும் வீதி நாட கங்களுடன் தொடங்கப்பட்டது. பெரும் வரவேற்பு மக்கள் கடலில் கிடைத்தது. பேரணி திடலில் நுழைந்தபோதே மக்கள் கடல் நிரம்பி வழிந்தது. இரா. திருப்பதி,

மாநாட்டுத் தலைவர்

மாநாட்டுக்கு இளைஞரணி மாநில செயலாளர் இரா. திருப்பதி தலைமை வகித்தார். மாநில மாணவரணி செய லாளர் த.சீ. இளந்திரையன் அனைவரை யும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில மாணவரணி துணை செயலாளர் நம்பியூர் மு. சென்னியப்பன் தலைவரை முன்மொழிந்தார். விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. கோவிந் தன், விருதுநகர் கழக மாவட்ட இளை ஞரணி செயலாளர் இரா. அழகர் ஆகியோர் தலைவரை வழி மொழிந்தனர்.

மதுரை மண்டலக் கழகத் தலைவர் வே. செல்வம், விருதுநகர் கழக மாவட்ட தலைவர் வானவில் வ. மணி, மாவட்ட செயலாளர் தி. ஆதவன் ஆகியோர் முன் னிலை வைத்தனர்.

பழனி மாவட்ட மாணவரணி செய லாளர் சே.மெ. காவியா கழகத் தோழர் களின் முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.

தஞ்சை இரா. செயக்குமார்

மாநாட்டைத் திறந்து வைத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் உரையாற்றினார்.

தீர்மானங்கள் - டாக்டர் துரை. சந்திரசேகரன்

காலத்தை வெல்லும் 20 தீர்மானங் களை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் முன்மொ ழிந்தார். பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி உரையாற் றுகையில், ஜாதியைக் காப்பாற்றத் துடிக் கும் சக்திகளை எதிர்த்து இதோ இளைஞர் பட்டாளம் தயாராகி விட்டது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்

கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தமது உரையில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி நம் பிரச்சாரம் நடைபெற வேண்டும். நமது இளைஞர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் திட்டம் நம்மிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் தமது உரையில் கேரள மாநிலத்தில் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் கூடாதா? இந்தி யாவுக்கு இரண்டு அரசியல் சட்டங்கள் இருக்கின்றனவா? என்ற வினாவை எழுப்பினார்.

செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு

2400 கோடி ரூபாய் செலவில் தொடங் கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை புராணக் கற்பனை ராமனைக் காட்டி முடக்குவது என்ன நியாயம்? என்ற நியாயமான வினாவை எழுப்பினார் செயலவைத் தலைவர்.

ச.அமுதன்

தி.மு.க. இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் திருவல்லிபுத்தூர் ச. அமுதன் தன் உரையில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பது மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.

தமிழர் தலைவர் தலைமையில் திரா விடர் கழகப் பணிகள் எழுச்சியுடன் நடைபெறுவது நம்பிக்கையை அளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

பார்ப்பனர் எதிர்ப்பு தான் தன்னை நாத்திகவாதியாக ஆக்கியது என்றார் தந்தை பெரியார். அந்த உணர்ச்சிதான் நம் மக்களுக்குக் கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தது - உத்தியோக உரிமையைப் பெற்று தந்தது. அதனைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது பார்ப்பனர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடோ தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தந்தை பெரியார் அவர்களையும் திராவிடர் இயக்கத்தையும் கொச்சைப்படுத்து பவர்களை தமிழின இளைஞர்கள் புறக் கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தங்கம் கு. தென்னரசு

முன்னாள் கல்வி அமைச்சரும், தி.மு.க. நெசவாளர் அணியின் தலைவருமான தங்கம் தென்னரசு அவர்கள் தமது உரையில், இம்மாநாடு தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது உண்மையே என்பதை நிரூபித்துக் காட்டும் மாநாடு என்று குறிப்பிட்டார் கோடையிலே இளைப்பாறக் கிடைத்த குளிர் தருவதாக ஆசிரியர் அவர்கள் கழகத் தலைவர் கலைஞருக்கு இருக் கிறார் என்றார். இந்தியா டுடே என்ற இதழ் தி.மு.க. வில் இளைஞரணியினை வலுவாக்கி அதன் மூலம் நல்ல தலைவராக மு.க. ஸ்டாலின் அவர்கள் வளர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டதை எடுத்துக்காட் டினார்.

நன்றியுரை

இதையடுத்து மாநாட்டு வரவேற்புக் குழு பொருளாளர் பூ. சிவக்குமார் நன்றி கூற மாநாடு நிறைவுற்றது.

தமிழ் ஓவியா said...

சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ.75,000 பரிசு: இமாச்சல பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு


சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சாதி பேதத்தை ஒழிக்க சாதி விட்டு சாதி திருமணம் செய்வோருக்கு ரூ. 75,000 பரிசு அளிக்கப்படும் என்று வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் சாதி விட்டு சாதியோ, மதம் விட்டு மதமோ திருமணம் செய்தால் காப் பஞ்சாயத்தில் தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அருகில் உள்ள மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சாதி பிரச்சனையை போக்க வீரபத்திர சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் ஜோடிக்கு ரூ.75,000 பரிசு அளிக்கப்பட்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு திருமணம் செய்யும் ஜோடியில் ஒருவர் எஸ்.சி.யாக இருக்க வேண்டும். முன்னதாக இந்த வகை திருமணத்திற்கு ரூ.25,000 பரிசு அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை சிறப்பு செயலாளர் எம்.பி. சூத் கூறுகையில்,

சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 25,000 பரிசுத் தொகை ஊக்கமளிப்பதாக இல்லை. அதனால் தான் அந்த தொகையை அதிகரிக்க முடிவு செய்தோம். இந்த புதிய அறிவிப்பை அடுத்து ஏராளமான இளம் ஜோடிகள் அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

புதிதாக திருமணம் செய்துள்ள சிம்லாவை சேர்ந்த அனீஷ் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா கூறுகையில், திருமணம் அவரவர் விருப்பம் என்றனர். வங்கியில் பணிபுரியும் அனீஷ் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தார். அவரது மனைவி ஸ்வேதா பிராமணர்.
--------------http://tamil.oneindia.in/news/2013/05/05/india-marry-outside-caste-himachal-get-rs-75000-174680.html

தமிழ் ஓவியா said...


இராஜபாளையம் மாநாடு



4.5.2013 சனியன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு கழக வரலாற்றில் முத்திரை பொறித்த ஒன்றாக அமைந்து விட்டது!

தன்மான இயக்கக் காலந்தொடங்கி, திராவிடர் கழகம் என்ற வகையில் இவ்வூரில் பொதுக் கூட்டங்கள் பல நடைபெற்றதுண்டு, மாநாடு என்னும் வகையில் இந்த மாநாடுதான் அந்த மண்ணில் மிகப் பெரியது - எழுச்சி மிக்கது!

கடந்த இரு மாதங்களாக மாநில இளைஞரணி செயலாளர் மானமிகு இல. திருப்பதி அவர்களுடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு தஞ்சை இரா. செயக்குமார் - அவருடன் பத்துத் தோழர்கள், இராஜபாளையம் தோழர்கள் மானமிகு சிவக்குமார், மானமிகு கோவிந்தன் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாண்டி முருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு சிகரத்தை எட்டியது என்றே கூற வேண்டும். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வானவில் வ. மணி அவர்களின் துணை அருந் துணையாக இருந்தது.

எத்தனைப் பேர் இருந்து நடத்தினார்கள் என்பதைவிட இருப்பவர்கள் எப்படி திட்டமிட்டுப் பணியாற்றினார்கள் என்பதுதான் முக்கியம்! இதற்கொரு எடுத்துக்காட்டுதான் இராஜபாளையம் மாநாடு!

ஆன்மிகம் நிரம்பி வழியும் இராஜபாளையத்தில் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்கும் உரிய இடம் தந்தனர் என்றே கூற வேண்டும். கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்காதவர்கள்கூட, கழகத் தின் சமுதாயப் பணியால் ஏற்பட்ட பலன்களை அன் றாடம் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களால், எப்படி அவற்றைப் புறந்தள்ள முடியும்? அதன் வீச்சைக் காண அங்கு முடிந்தது.

கொளுத்தும் வெயில் கால மன்றோ! மாலை நேரத்தில் பேரணி என்றாலும் தாகத்திற்குத் தவிக்காதவர்கள் இருக்க முடியாதே! அதுவும் தொண்டை வற்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு வந்த நிலையில், தாகத்திற்குக் கேட்கவா வேண்டும்?

ஆங்காங்கே தாய்மார்கள் குடும்பத் தலைவர்கள் குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு, தண்ணீரை வழங்கிய அந்தத் தன்மையை என்ன சொல்லுவது!

பக்தியைத் தாண்டி இந்தப் பகுத்தறிவு இயக்கத் தின்பால் தமிழர்கள் வைத்துள்ள அந்தப் பாசம், அன்பு மெய்ச் சிலிர்க்கக் கூடியதே!

பல கட்சிக்காரர்களின் மாநாட்டையும், பேரணி யையும் அவ்வூர் மக்கள் பார்த்தவர்கள்தான்; திரா விடர் கழக மாநாட்டில் ஊர்வலத்தில் பல வித்தியாச மான காட்சிகளை அவர்கள் கண்டதுதான் அவர்களின் ஆச்சரியத்துக்குக் காரணம்.

கழகத்தின் எந்த ஒரு செயலும் வீணானதல்லவே! மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிகள் பெண்கள் உட்பட பங்கேற்று நடத்திக் காட்டியது அவர்களின் ஆச்சரியத்துக்கான வித்தியாசமான பார்வைக்கான காரணம் ஆகும். அங்கு நடைபெற்ற எந்த ஊர்வலத்திலும் காணப்படாதவை அவை.

மானாவாரியாக முழக்கங்களை முழங்கிச் செல்லாமல் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த ஒலி பெருக்கிமூலம் குறிப்பிட்ட இளைஞரணி தோழர்கள் அச்சிட்டு வழங்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட முழக்கங்களை எடுத்துச் சொன்னதும், பேரணியிலே பங்கு கொண்ட தோழர்கள் அவற்றைத் தொடுத்துச் சொன்னதும் நம் கொள்கைகளைப் பொது மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. பெரியார் சமூகக் காப்பு அணியின் அணி வகுப்பு (இருபால் இளைஞர்கள்) தமிழில் கட்டளைச் சொற்கள் காவல்துறையினர் உட்பட அனைவரையும் பெரிதும் ஈர்த்தன.

இளைஞரணியினரின் சீருடையுடன் கூடிய அணி வகுப்பின் நேர்த்தி பெரியார் பிஞ்சுகள் முதல் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை கையில் கழகக் கொடியை ஏந்தி முழக்கமிட்டு வந்த அந்தக் கட்டுப்பாடு பலே பலே என்று பாராட்ட வைத்தது.

பல அரசியல் கட்சிகளின் நண்பர்கள்கூட ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களை நடத்துங்கள் என்று தாங்களாகவே முன்வந்து தெரிவித்ததையும் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.

பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கம் எங்கே இருக்கப் போகிறது என்று சொன்னவர்கள் உண்டு.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்கிறது. பலமாக இருக்கிறது - இளைஞர்களின் கோட்டமாக இருக்கிறது என்று மக்களுக்கு உணர்த்திய மாபெரும் மாநாட்டினை நடத்திக் காட்டிய தோழர் களுக்கும் ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்களுக் கும், ஆதரவுக்கரம் நீட்டிய தமிழர்களுக்கும் பாராட் டையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

தமிழ் ஓவியா said...


நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. பின்னே வெட்கம் கெட்ட அரசும்..!


சென்னையின் மக்கள் நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட் டுக்கு தேவையான பொருட் களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார். பகலெல் லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட் டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொது கழிப்பறைகள் எதுவும் கிடை யாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை.

ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும் போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட் டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார். அதன் பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள். நேற்று இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்த போது ஆத்திரமாக விவரித்தார். அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான். ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத் தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமான கரமாக உணர்ந்திருப்பார்.

சென்னையில் மக்கள் நெருக் கடியான பகுதிகளுக்குள் சுற்றும் போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.. வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ?

பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் சாராயக்கடையை திறந்து வைத் திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொது கழிப்பறைகளை திறந்து வைக்க வில்லை. அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான். ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் நிலை? பள்ளி கல்லூரிகளில் பெண் பிள்ளைகளின் நிலை இன்னும் பரிதாபம்.

மேலோட்டமாக பார்த் தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க கழிப்பறையை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மன நிலை எவ்வளவு மோசமானது. மக்களுக்கு அத்தியாவசியத் தேவை யான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி. கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்சினை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை. மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு கழிப்பறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக, சாக்குதான் இருக்கும். அதே மும்பை யில் பணக்கொழுப்பெடுத்த அம் பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் கழிப்பறையும் (வித்தியாசமா கக்கா இருப்பாய்ங்களோ !)

இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக் களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுங் கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்..

எப்போதாவது செல்லும் இறை வழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவ சியமான கழிவறைகளுக்கு இட மில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்க முமில்லை.. - கார்ட்டூனிஸ்ட் பாலா

தமிழ் ஓவியா said...


அறிவுப் பிரச்சாரம்


மக்களை முட்டாள்களாக்கப் பஜனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
(விடுதலை, 5.1.1972)

தமிழ் ஓவியா said...


உலகில் வளர்ந்த நாடு என்பதற்கு எது சரியான அளவுகோல்?


- ஊசி மிளகாய்

உலக அரங்கில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர வேண்டிய நாடுகள் என்று மூன்று வகையாகப் பிரித்துக் கூறுகின்றனர்.

மக்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் - இவற்றையே, உலக வல்லுநர்கள் அளவுகோல்களாகக் கொண்டு, மேற்காட்டிய மூவகை களைப் பிரித்து வகைப்படுத்து கின்றனர்.

பொருளாதாரத்தில், தொழில் முன்னேற்றத்தில் வாழ்க்கைத் தரத் தில் மட்டும் வளர்ந்தால் போதுமா?

பகுத்தறிவுத் துறையில் வளர்ந் தால் தானே அவற்றை உண்மை யாகவே வளர்ந்த நாடுகள் என்று அழைக்க முடியும்?

அவ்வகையில் நமது நாட்டின் தென் பகுதியில் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், மக்கள் மத்தியில் செய்த அறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகள், மதவெறியை எதிர்த்து மனிதநேயத்தைப் பரப்பிய தன் விளைவாக, - மற்ற வழிகளில் பிற்போக்காக இருந்தாலும் கூட இந்தியா - சில விஷயங்களில் இந்த வளர்ந்த நாடுகள் என்று அழைக் கப்படும் நாடுகளைவிட கூடுதலாக வளர்ந்துள்ள நாடாகவே காட்சி யளிக்கின்றது!

எடுத்துக்காட்டாக, கொடிய நோயான புற்று நோய்க்கு Cancer) நவீன மருத்துவத்துறை சிகிச்சை யான மரபு அணுக்கள் மூலம் ‘Stem Cell’ சிகிச்சைக்கு இங்கே வரு கிறார்கள் அமெரிக்காவிலிருந்து புற்று நோய்க்கு ஆளான நோயாளி கள். காரணம் கத்தோலிக்க மத நம்பிக்கை, கிறித்துவ மத நம்பிக் கைக் காரணமாக இந்த சிகிச் சையை இவ்வளவு அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் வளர்ந்த அமெரிக்காவில் அனுமதிக்க வில்லை. அந்நோயாளிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அதன் விளைவு அதனைத் திறம்படச் செய்யும் நமது நாட்டுத் தனியார் மருத்துவமனைகளுக்கு அல்லவா வருகின்றனர்!

நம் நாட்டு கரன்சிநோட்டில் மத நம்பிக்கைக்கோ, கடவுள் நம்பிக் கைக்கோ இடமில்லை. ஆனால் அமெரிக்காவில் அதன் ஆரம்ப கால அரசியல் சட்ட வரைவாளர்கள், எண்ணத்திற்கு எதிரிடையாகவே ‘In the God we trust’ என்று அச்சிடப்பட்டி ருக்கிறதே!

கடவுளை நம்பாதவர்கள் அங்கும் ஏராளம் உண்டே! இங்கர்சால் களின் பிரச்சாரம் உண்டு. கருத்துச் சுதந்தரம் - மதச் சார்பின்மை பற்றிக் கூறிவிட்டு இப்படி அரசின் கரன்சி நோட்டுகளில் போடலாமா?

அது மட்டுமா? அறிவியல், புவியியல் தத்துவங்களுக்கும், உண்மைகளுக்கும் விரோதமாக சில மாநிலங்களில் வகுப்புகளில் Creationism பூமியைக் கடவுள் ஆறு நாள்களில் படைத்தார்; என்றும் பாடத்தில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து போதிப்பதைவிட அசல் பிற்போக்குத்தனம் வேறு உண்டா?

இதை எதில் வளர்ந்த நாடு என்று கூறுவது?

அதுபோலவே மிகவும் சுதந்திரக் காற்று வீசிய, இங்கிலாந்து நாட்டை யொட்டிய அயர்லாந்து நாட்டில் கத்தோலிக்க மதவெறி கருச் சிதைவை ஏற்றுக் கொள்ள - சட்ட பூர்வ அனுமதியின்றி சட்ட திட் டங்கள் உள்ள நிலை காரணமாக இந்திய வம்சாவளியைச் சார்ந்த ஒரு தாய் - அதைச் செய்ய மருத்துவ மனைகளும் டாக்டர்களும் மறுத்த தால் உயிர்விட நேர்ந்தது, மிகப் பெரிய மனிதாபிமானத்திற்கு நேர் எதிரிடையானதல்லவா?

அது கிளப்பிய எதிர்ப்பினை - சுவர் எழுத்துப் படிப்பினையாகப் பெற்ற அந்நாட்டு ஆட்சியாளர் அண் மையில் ஒரு குறிப்பிட்ட நிலைகளில் மட்டுமே கருச்சிதைவை (Abortion) நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

அதற்கு அந்நாட்டு கத்தோலிக்க மதக் குருக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மதவெறி கொண்ட அவர் களுக்கு மனித உயிர்கள் காப் பாற்றப்படுவது முக்கியமல்ல; மதம் தான் காப்பாற்றப்பட வேண்டுமாம்! என்னே அறிவர்களின் அறியாமை - மதவெறி!

ஆனால் நாம் பல மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களின் விளைவாக 50 ஆண்டுகளுக்கு முன்பே MTP Medical Termination of Pregrency) Act சட்டம் கருச்சிதைவு சட்டபூர்வம் என்று வந்துவிட்டதே!

அதன்படி நாம் முன்னேறிய அளவு அயர்லாந்து - முன்னேற வில்லையே!

இப்படி எத்தனையோ பிற்போக் குத்தனங்கள் - அறிவியல் தொழில் நுட்பவியல் வளர்ந்த நாடுகளில் இன்னமும்!

காரணம் அங்கு பெரியார்கள் தோன்றி, மக்கள் இயக்கங்களை நடத்தி ஆட்சிகளுக்கு முன்னோடி யாக வழிகாட்ட வரவில்லை என்பதே!

தமிழ் ஓவியா said...

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

இராஜபாளையம் மாநாடு - தென்திசையில் ஓர் புத்தெழுச்சி!
போராட்டத்தை அறிவித்த ராஜபாட்டை மாநாடு!
வெற்றிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டு - நன்றி!
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

ராஜபாளையம் மாநாடு போராட்ட அறிவிப்பு கொடுத்த ராஜபாட்டை மாநாடு என்றும், மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக் கும் பாராட்டு, நன்றி என்றும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: ராஜபாளையத்தில் 4.5.2013 சனிக்கிழமையன்று கூடிய திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாடு உண்மையிலேயே ஒரு வரலாறு படைத்த மாநாடாகும்!

ராஜபாளையத்தில் கழக கருஞ்சட்டை இளைஞர் பட்டாளம் ஏராளம் திரண்டு வந்திருந்தனர். இயக்கக் குடும்பத்தவர்களும் கூடி பல்லாயிரக்கணக்கில் உணர்ச்சி கொப்பளிக்க, உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது!

ராஜபாளையத்தில் கழக மாநாடா? அதுவும் இளைஞர் மாநாடா? என்று சற்று சந்தேகம் கலந்த அச்சத்துடன் கேள்வி கேட்ட அப்பகுதி மக்களில் சிலர் திகைத்து விட்டனர்; காரணம் கூடிய மக்கள் கடலால் திண்டாடியது அந்நகரம்!

தென் திசையில் ஏற்பட்ட புத்துணர்ச்சி வெள்ளம் எங்களை எல்லாம் பூரிப்பின் உச்சிக்கே கொண்டு சென்று, புளகாங்கிதம் அடையச் செய்தது!

தமிழ் ஓவியா said...

கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள...

தாகமுற்ற மக்கள் தண்ணீர் பந்தலை நோக்கி தணியாத தாகத்தைத் தணித்துக் கொள்வதற்காக கூடி திராவிடப் பெருங்குடி மக்கள், கொள்கைத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள அன்று காலை முதலே அந்நகரில் திரண்டனர்!

மக்கள் கடலும் கருங்கடலும் இணைந்த காட்சியைக் கண்டவர் வியந்தனர்!

தந்தை பெரியார் என்பவர் வற்றாது ஓடிக் கொண்டே இருக்கும் ஜீவநதி;

தலைவர் பெரியார் திராவிடர் சமுதாயம் திணறும் போதெல்லாம் அதன் (மூச்சுத்) திணறலை மாற்றி வாழ வைக்கும் மூச்சுக் காற்று என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு ராஜபாளையம் ஓர் சான்று! இயக்கக் குடும்பங்களுக்கோ இது ஓர் இன்பமயமான கொள்கைச் சங்கம கோலாகலத் திருவிழா - பெருவிழா.

விடுத்த வேண்டுகோள் கண்டு விரைந்தோடி வந்து எங்களை உற்சாக மூட்டிய எங்களின் ஈடு இணையற்ற கழகக் குடும்பத்தினர்களே, உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி - கூறுவது தெரியாமல் திகைக்கிறோம்!

மிகப் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல எம் கழகக் குடும்பத்தினர். என்றாலும் அறிக்கை வந்துவிட்டதே ராஜபாளையம் செல்லாமல் இருப்போமா? என்று கேட்டு, உற்சாகத்துடன் அவ்வூர் காணாத காட்சியின் மாட்சியை உருவாக்கினார்கள்!

ராஜபாளையம் மாநாடு குறித்து முன்கூட்டியே நமது தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், மதுரை மண்டலத் தலைவர், செயலாளர், தென் மாவட்டப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் அனைவருமே, மாவட்டப் பொறுப்பாளர்க ளுடன், பொதுச் செயலாளர், மாநில இளைஞரணிச் செயலாளர் ஆகிய அனைவரும் கலந்துரையாடி சிறப்பான திட்டங்களைத் தீட்டினர்.

கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான மானமிகு தோழர் ஜெயக்குமார்; அவருடன் 10 இளைஞர்கள் மாநில இளைஞரணி செயலாளர் செயல்வீரர் இல. திருப்பதி, மாவட்டத் தலைவர் சிவகாசி வ. மணி, ராஜபாளையம் தோழர் சிவக்குமார், தோழர் கோவிந்தன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பாண்டிமுருகன் உள்ளிட்ட தோழர்களின் ஒத்துழைப்புடன் சுமார் இரண்டு திங்களாக, தேனீக்களாகச் சுற்றிச் சுற்றிப் பறந்து பணியாற்றி இந்த மாபெரும் வெற்றிச் சரித்திரத்தைப் படைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கது.

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது; வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்ற நமது இலக்குச் சொல்லுக்கேற்ப இச்சாதனை சிறப்பாக வாகை சூடியதாக சாதாரண மக்கள், நடுத்தர மக்களை கடைகடையாக, வீதி வீதியாக அந்நகரத்திலும், சுற்று வட்டாரத்திலும் சென்று மாநாட்டுத் துண்டறிக்கைகளைக் கொடுத்து, எளிய தொகைகளை அன்பு பொங்க அவர்கள் தர, இவர்கள் பெற்றே இம்மாபெரும் மாநாட்டை நடத்தி, இளைஞர்கள் வரலாறு படைத்தனர்!

நல்ல இளம் போத்துக்களைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் பெரியார் சமூகக் காப்பணி புது முறுக்குடன் வீர நடை போட்டது.

அதன் பயிற்சியாளர்களான மானமிகு தோழர்கள் இரா. பெரியார்செல்வன் (இயக்குநர்), துணை இயக்குநர்கள்: சித. வீரமணி, தே. பொய்யாமொழி, ப. நாத்திக செழியன், பயிற்றுநர்கள்: அண்ணாசரவணன், கி. கார்வண்ணன், ச. விஜய்யோகானந்த், ம. திராவிடராசன், வ. ஆறுமுகம், அ. சித்தார்த்தன், இராம. சகாதேவன், அ. திருநாவுக்கரசு, விசுவநாதன், சி. அம்பேத்கர், கி. முரளி அனைவருமே குறுகிய காலப் பயிற்சியில் மிக அருமையான பணியைச் செய்து கட்டுப்பாட்டுக்குரியதே கருஞ்சட்டைப் படை என்பதைக் காட்டினர். அதிலும் குறிப்பாக திராவிடர் மகளிர் அதில் தனி அணியாகப் பங்கு பெற்று அணி வகுத்த காட்சி கண்டோரை மெய் சிலிர்க்க வைத்தது!

நமது உளப்பூர்வ நன்றி!

அந்நகரம் இதுவரை காணாத மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியை பல்லாயிரம் மக்கள் இரு மருங்கிலும் திரண்டு நின்று வியந்து பார்த்து பக்தி மோசடிபற்றிச் சிந்திக்கத் துவங்கினர்!

விருதுநகர் மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மிகவும் திறமையுடனும், பொது உணர்வுடனும் தங்கள் கடமையாற்றினர். அவர்களுக்கு நமது உளப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

மிகப் பிரமாண்டமான அந்த மாநாட்டுக் கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்போ, அசம்பாவிதமோ எதுவும் நிகழவில்லை என்பதும் பேரணி வந்தபோதும் கடைகள் எல்லாம் திறந்தே இருந்ததோடு, மகிழ்ந்து பார்த்தனர்! இதையே ஊரில் உள்ள பல மக்கள் பேசி வியந்தனராம்!

அழகுக்கு அழகு சேர்த்த தளபதி மு.க. ஸ்டாலின் உரை

ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தினை செயல்பட வைக்க - அரசினை வற்புறுத்தும் வகையில் அறவழிப் போராட்டம் என்பதை அறிவித்த ராஜபாளையம் மாநாடு, கழகத்தின் பாட்டை ராஜபாட்டை என்பதை உணர்த்தும் மாநாடாக அமைந்தது.

சிறப்புரையாற்றிட்ட நம் இனமானத் தளபதி மு.க. ஸ்டாலின் அரியதோர் உரையாற்றி அழகுக்கு அழகு சேர்த்தார். அவர்களுக்கும் நமது தாய்க் கழகத்தின் சார்பில் நன்றி.

பணிகள் தொடரட்டும்; பிரச்சாரம் பெருகட்டும்!

சென்னை
7.5.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


இன இழிவை ஒழிக்கும் போராட்டத்துக்குத் தயாராவீர்!


இராஜபாளையம் மாநாட்டின் சிறப்பு அம்சங்களுள், அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 20 தீர்மானங்களும் காலத்தை வென்று நிற்கக் கூடியவையாகும்.

முதல் தீர்மானம் முதல் 20 ஆம் தீர்மானம் வரை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கப்பட வேண்டியவை!

அனேகமாக நம் சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகள் மீதும், ஊடுருவியும், கவனம் செலுத்தியும், கருத்தூன்றியும், தொலைநோக்கோடும், நடைமுறைக் கண்ணோட்டத்தோடும் தீட்டப்பட்டவை அவையாகும்.

ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டம் - தீண்டாமை ஒழிப்பு நோக்கம் இவற்றின் அடிப்படையிலும், இன இழிவைத் துடைத்தெறியும் ஓர் இனத்தின் சுயமரியாதைக் கண்ணோட்டத்திலும், தந்தை பெரியார் அவர்களால் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும்.

கடவுளே இல்லை என்று சொல்லும் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்தான் இதற்காகவும் பாடுபட வேண்டிய - போராட வேண்டிய கடமையை முன்னிறுத்தியுள்ளது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

காரணம் கடவுள் இல்லை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை என்றாலும் அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை யாகும்.

கல்வி உரிமைக்காகவோ, வேலை வாய்ப்பு உரிமைக் காகவோ திராவிடர் கழகம் போராடும் போது இதனால் பலன் பெறுகிறவர்கள் பகுத்தறிவுவாதிகளா? பக்திமான்களா? என்று கழகம் பார்ப்பதில்லை.

எங்கள் இனத்தைச் சேர்ந்த பக்தியுள்ள தமிழன் அதற்குரிய பயிற்சியைப் பெற்றாலும்கூட அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி இல்லை என்று வெளியிலே பிடித்துத் தள்ளுவது - எந்த அடிப்படையில்? தமிழன் - இந்துமத அடிப்படையில் நாலாம் ஜாதி - சூத்திரன் - பிறவி அடிமை - பார்ப்பனர்களின் வேசி மக்கள் - அவன் அர்ச்சகன் ஆகத் தகுதி கிடையாது.

அவன் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்தால் சாமி தீட்டுப்பட்டுப் போய்விடும். அதற்காக பிராயச் சித்தம் செய்யப்பட வேண்டும் - சுத்திகரிக்க வேண்டும். 108 கலசங்களைச் செய்து வைக்க வேண்டும், பிராமண போஜனம் செய்ய வேண்டும் என்றெல்லாம் அடுக் கடுக்காக நிபந்தனைகளை விதிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இவற்றை ஏற்றுக் கொண்டால் தமிழர்கள் தங்கள் சூத்திரத் தன்மையை ஒப்புக் கொண்டதாகத்தானே பொருள்? இந்தப் போராட்டத்தை பக்திமான்களாக இருக்கக் கூடிய தமிழர்கள் கையில் எடுத்துக் கொண்டிருந்தால் கருப்புச்சட்டைக்காரர்களுக்கு வேலை இருந்திருக்காதே!

தமிழர்களுடைய மான உணர்வைக் காப்பாற்றும் கடமை திராவிடர் கழகத்திற்கென்று ஆன நிலையில், அதற்கான களத்தில் நிற்க வேண்டியவர்களாகி விட்டோமே!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை உண்டு என சட்டம் இயற்றப்பட்ட பிறகும்கூட, பார்ப் பனர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று அதனை முடக்குகிறார்கள் என்றால் இதன் நிலையைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இந்த 2013 ஆம் ஆண்டிலும் தமிழர்களைச் சூத்திரர்களாக நிலை நிறுத்துவதிலும், பார்ப்பனர்கள் தங்களைப் பிராமணர் என்ற பிறவி ஆதிக்கத் திமிரி லிருந்து சற்றும் இறங்கி வரத் தயாராக இல்லை என்பதிலும் உறுதியாகவே இருக்கிறார்கள் என்பது விளங்கிடவில்லையா?

பார்ப்பனர்கள் எவ்வளவோ திருந்தி விட்டார்கள். இனி மேலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் தேவை தானா என்று அதிமேதாவிகளாக தங்களை நினைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் பார்ப் பனர்கள் நடந்து கொள்ளும் தன்மையையும், போக்கையும் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் போதுமே, அந்தத் தருணத்திலேயே பார்ப்பனர்கள் பற்றி திராவிடர் கழகம் முன்னிறுத்தும் கருத்து நூற்றுக்கு நூறு மிக மிகத் துல்லியமாகவே சூரிய வெளிச்சம் போல உண்மை - உண்மையிலும் உண்மை என்பது விளங்கி விடுமே!

இந்த நிலையில் இராஜபாளையம் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டு தீர்மானத்திலும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் மாநாட்டு உரையிலும் குறிப்பிட்டுள்ளபடி அடுத்த இரு மாதங்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இதுகுறித்து விளக்கமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வரும் ஆகஸ்டு முதல் தேதியன்று (தந்தை பெரியார் பெரும்பாலும் போராட்டம் நடத்திடத் தேர்வு செய்யும் நாளிது) பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் பங்கேற்கும் போராட்டத்தை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிக்க உள்ளார்.

கழகத் தோழர்களே தயாராக இருங்கள்! இருங்கள்!! போராட்ட வீரர்களின் பட்டியல் தயாராகட்டும்! தயாரா கட்டும்!

இன இழிவை ஒழிக்கும் போரிலே இன்னுயிரையும் இழக்கத் தயாராவோம்! தயாராவோம்!! வாழ்க பெரியார்!

வளர்க இன உணர்வு!!

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும் கழுதைக்கும் டும்! டும்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை யடுத்த கோழிக்கால் நத்தம் பகுதியில் நடந்துள்ள ஒரு நிகழ்வு - மக்கள் இன்னும் கற்காலத்தில்தான் உழலுகிறார்களோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்துகிறது.

மழை பொழியவில்லையாம் - கடும் வறட்சி ஏற்பட்டுவிட்டதாம் - விவசாயம் செய்ய முடிய வில்லையாம்.

என்ன செய்தார்கள் தெரியுமா? கழுதைக் கும், கழுதைக்கும் கல்யாண ஏற்பாடாம்.

சாதாரணமாக அல்ல - கல்யாணப் பத்திரிகை அடித்து அழைப்புகள் கொடுக்கப் பட்டுள்ளன. நாள் நட்சத்திரம் பார்க்கப்பட் டுள்ளது (ஒரு சந்தேகம் கழுதைக்குத் தாலி கட்டிய அந்தவூர் பிரமுகருக்கும், அந்தக் கழுதைக்கும் ஜாதகப் பொருத்தம் பார்க்கப் பட்டதா என்ற விவரம் தெரியவில்லை).

அய்தீக முறைப்படி சடங்குகள் நடந்தன வாம்! ஆண் கழுதைக்கு ஸ்ரீஹரி என்றும், பெண் கழுதைக்கு ஸ்ரீயோக லட்சுமி என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்னிகுண்டம் இடம்பெற்றதாம் (அய்யர் வந்து மந்திரம் சொன்னதுபற்றித் தகவல் இல்லை).

அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பெண் கழுதைக்குத் தாலி கட்டியுள் ளார்.

நீ முதலில் ஸோமனுக்கு மனைவியாக இருந்தாய்; இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாய்; மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்தாய்; நான் காவதாகத்தான் எனக்கு மனைவியாக வந்துள்ளாய் என்ற கல்யாண மந்திரத்தை பெண் கழுதையை நோக்கி சொன்னார்களா என்பதும் தெரியவில்லை.

இன்னொரு தகவல் சாந்தி முகூர்த்தம் பற்றியும் குறிப்பிடப்படவில்லை.

மனிதன் பகுத்தறிவு பெறவில்லையென் றால் கழுதைக்குக் கூடக் கல்யாணம் செய்வான் என்பதைப் புரிய வைக்கவேண்டும். மற்ற எந்தப் பிரச்சாரத்தையும்விட பகுத்தறிவுப் பிரச்சாரம்தான் முதன்மையானது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா? திராவிடர் கழகத்தின் பிரச்சாரம் எத்தகைய முக்கியத் துவம் வாய்ந்தது என்பதும் தெரியவில்லையா?

மதம் மனிதனைக் கழுதையாக்கும் - பகுத்தறிவு மனிதனை செழுமையாக்கும் புரிகிறதோ! (ஆமாம், கழுதைக்கும் கழுதைக் கும் கல்யாணம் ஆகிவிட்டதே - மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்து விட்டதோ!)

தமிழ் ஓவியா said...

பக்தர்கள் பலி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அட்டங்கி என்ற ஊரைச் சேர்ந்த பக்தர்கள் 15 பேர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். எதற்கு?

எந்த வாகனத்தில் வந்தனர்? சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரியில் ஏறி வந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் சிங்கராய கொண்டா அருகே லாரி வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்தது - கவிழ்ந்தது! சிமெண்டு மூட்டைகளுக்குள் சிக்கி அந்த பத்துப் பக்தர்களும் பரிதாபகரமாக மடிந்தனர் என்பது ஏடுகளில் வெளிவந்த செய்தி!

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் கடவுளைக் கும்பிட வந்தபோது விபத்தில் சிக்கிச் செத்துப் போய்விட்டனரே!

ஒருகணம் பக்தர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? கடவுளைத் தேடி வந்தவர்களை குறைந்தபட்சம் அந்தக் கோவில், அந்தக் கடவுள் பக்தர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கவேண்டாமா?

ஏன் காப்பாற்றவில்லை? கடவுள் என்ற ஒன்று இல்லை - எனவே, காப்பாற்றவில்லை.

திருப்பதி கோவில், அய்யப்பன் கோவில் என்று சொல்லி சாமி கும்பிடச் செல்லும் பக்தர்கள் மரணம்பற்றி அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன.

அப்பொழுதுகூடப் பக்தர்கள் புத்தி கொள்முதல் பெறவில்லையே - ஆம், பக்தி வந்தால் புத்தி போயே போகுதே!

கூடுதல் தகவல்: (Tail Piece) திருச்சி அருகே சிறுகனூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் கிறிஸ்துவ பாதிரியார் உள்பட நான்கு பேர் சாவு!

எந்த மதக் கடவுளுக்கும் சக்தி இல்லவே யில்லை - போதுமா?

தமிழ் ஓவியா said...

ஜெயேந்திரர் துறவறம் பூண்டவரா?

காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி துறவறம் பூண்டு 60 ஆண்டுகள் ஆகிவிட்டனவாம்! அதை முன்னிட்டு 60 தம்பதிகளைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் ஒரு மண்டபத்தில் நடைபெற்றதாம்.

அந்த நிகழ்ச்சியில் அந்த சாட்சாத் ஜெயேந்திரரும், அவரின் சீடர் விஜயேந் திரரும் கலந்துகொண்டனராம்.

60 ஜோடிகளுக்கும், பக்தர்களுக்கும் ஜெயேந்திர சரஸ்வதி அருளாசி வழங்கினா ராம். இந்த விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப் பட்டதாம்.

பார்ப்பனர்களின் இனப்பற்றுக்கு இது ஒரு சான்று. ஜெயேந்திர சரஸ்வதி அனைத்தையும் துறந்தவரா? அவர் 60 ஆண்டுகாலமாகத் துறவியாகத்தான் வாழ்ந்து வருகிறாரா?

இந்தப் பத்திரிகை செய்தியைப் படித்தவர் கள் யாராவது வாயால்தான் சிரிக்க முடியுமா?

ஊருக்கு ஊர் காதலிகள், காமகோடியின் சங்கர மடமே காமக்கோட்டமாக, ஆபாசச் சேட்டையின் பஞ்சு மெத்தையாக இருந்து வந்துள்ளதை பார்ப்பன எழுத்தாளரான அனுராதா ரமணன் ஊர் சிரிக்க வைத்தாரே! நக்கீரன் வார இதழ் தோரணம் கட்டி தொங்கவிட்டதே!

இவ்வளவுக்குப் பிறகும் இந்தப் பார்ப் பனர்கள் அந்த வெட்கம் கெட்ட மனிதரை ஜெகத்குரு என்பதும், முற்றும் துறந்தவர் என்பதும் அவாளிடத்தில் உள்ள இனப் பற்றைத்தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...


திராவிட மாணவர், இளைஞரணி கழகத் தோழர், தோழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு


திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள், தோழியர்கள் அனைவரும் கணினி பயிற்சி பெற்றவர்களாக வேண்டும். அதனடிப்படையில், இணையதளத்தில் நமது கொள்கைப் பிரச்சார செய்திகளை, கழக ஏடுகள் - விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ‘The Modern Rationalist’ ஆகியவைகளில் வரும் கருத்துக்களையும்,

நமது இயக்க நடவடிக்கைகள், முக்கிய உரைகள், தீர்மானங்கள்பற்றிய ஆரோக்கியமான விவாதங்களைப்பற்றி இணையதளங்களில் இடையறாது எழுதுவது, விவாதிப்பது போன்ற பிரச்சாரக்களம் அமைத்து செயல் படுவது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியம்.

திராவிடர் மாணவர் மாநில கழகச் செயலாளர் பிரின்ஸ் அவர்கள் தலைமையில் இதற்கென ஒரு சிறப்புக்

குழு விரைவில் அமைக்கப்பட விருக்கிறது.


சென்னை
7.5.2013

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்