Search This Blog

22.5.13

தந்தைபெரியாரும் - இராஜகோபாலாச்சாரியாரும்

நடந்த விஷயம் என்ன?
ஈ.வெ.ரா. சி.ஆர். சந்திப்பு

தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது.

என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷேம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷேபணை இருக்க நியாயமில்லை.

ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர் என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும்.

எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். அதாவது நான் அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்கின்ற கருத்தில்.

ஆச்சாரியாரைப்பற்றி அரசியல் விஷயத்தில் பொதுநல விஷயத்தில் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தாலும், கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தாலும் தனிப்பட்ட விஷயத்தில் அவரை எனது மரியாதைக்கு உரியவர் என்றே கருதி இருக்கிறேன்.

நாங்கள் பொது வாழ்வில் நுழைவதற்கு முன் அவர் சேலம் சேர்மெனாயும் நான் ஈரோடு சேர்மெனாயும் இருக்கும் போதே எங்களில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுள்ள மாதிரியில் நெருக்கமுள்ளவர்களாய் இருந்ததோடு இருவரும் சொந்த வாழ்க்கையை அலட்சியம் செய்து பொதுவாழ்வில் தலையிடுவது என்கின்ற அருத்தத்தின் மீதே சற்றேறக் குறைய ஒரே காலத்தில் இருவரும் சேர்மென் பதவியையும் மற்றும் உள்ள சில கவுரவ பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு தோழர் வரதராஜுலுவும் உள்பட நெருங்கி கலந்து இருந்தோம். பிறகு ஒத்துழையாமை ஆரம்பமான வுடன் நான் அவருடைய உள்ளத்தை கொள்ளை கொண்ட காதலி போலவே இருந்து வந்தேன்.

எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையில் அபிப்பிராய பேதமே இல்லாதிருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து அதுவே என் அபிப்பிராயம் போல் காட்டி அவரை இணங்கச் செய்வதுபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டு விட்டே அவரைக் காணுவார்கள்.

அப்படிப்பட்ட நிலை வகுப்பு உணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றமடைய நேரிட்டுவிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டு விட்டன என்றாலும் அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டு விடுகின்றன.

அவரைக் காணும் போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ அதுபோல் ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை.

காரணம், எவ்வளவு பெரிய தியாகம் செய்தவர் அவ்வளவு தியாகமும் ஒரு பயனுமில்லாமல் போகும்படியாய் விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு. என்றாலும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்து பார்க்காமல் நான் ஒரு முடிவுக்கு வருவதில்லை. நான் பிரிந்து விட்ட பிறகும் ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். இந்திய சட்டசபைக்கும் நான் நிற்பது நல்லது என்கின்ற ஜாடையும் காட்டினார். எனக்கு வெற்றி செலவில்லாமல் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும் இந்த ஸ்தானங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்து விடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்.

இப்படியெல்லாம் இருந்தாலும் தற்கால அரசியல் புரட்டுக்களை நான் அறிந்திருப்பது போலவே ஆச்சாரியார் அவர்களும் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இரு கட்சிகளிலும் பெரிதும் சமய சஞ்சீவிகளே பயன் அனுபவித்து விடுவதும் நாம் ஒருவரை ஒருவர் துவேஷித்து முன்னேற ஒட்டாமல் தடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் நலம் கொள்ளை போவதும் என்னைவிட நன்றாய் உணர்ந்திருக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்.

இந்த நிலையில் என்னை அவர் கோயமுத்தூர் ஜெயிலில் எதிர் பிளாக்கில் ஒரு கைதியாக சந்தித்தார். தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் என்னை ஜெயிலில் சந்தித்த அதட்டியினாலும் தோழர் ஆச்சாரியார் முயற்சியாலும் நான் ஆச்சாரியார் அறைக்குப் பக்கத்தில் அவருடைய சமையலறை சாப்பாட்டில் இருக்க நேர்ந்தது.

அப்பொழுதும் எங்கள் பழைய கதை ஞாபகத்துக்கு வந்ததுடன் இருவருக்கும் கண்களில் நீர் ததும்ப எங்கள் காதலைக் காட்டிக் கொண்டோம். எந்த கருத்தில் என்றால் எனக்கும் அப்படிப்பட்ட தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார், அவருக்கும் என்னைப்போல ஒரு தொண்டன் கிடைக்க மாட்டான் என்கின்ற உணர்ச்சிக் கருத்தில் என்றே சொல்லலாம். முடிவில் இருவரும் சேர்ந்து முன்போல ஒத்து உழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்து உழைக்க சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்.

அதற்கு பிறகு ஒருதரம் சந்திக்க நேர்ந்தும் இருவரும் சரிவர அந்த அபிப்பிராயத்தை வலியுறுத்திக் கொள்ளவில்லை.

பிறகு சுமார் 20 மாதம் பொறுத்து நானும் தோழர்கள் பாண்டியன் முதலியவர்களும் குற்றாலத்தில் ஒரு நாள் ஸ்நானத்துக்கு போகையில் அங்கு நான்கு நாள் முன்னதாகவே சுகத்துக்காக போயிருந்த ஆச்சாரியார் அவர்கள் தன் ஜாகையிலிருந்தே என்னைக் கண்டார். பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார். அருவியில் குளித்துவிட்டு அவர் ஜாகைக்கு போனேன். அப்பொழுது மாலை 3 மணி இருக்குமாதலாலும் நானும் என் தோழர்களும் அதுவரை சாப்பிட வில்லையாதலாலும் ஆச்சாரியார் அவர்களிடம் அதிக நேரம் பேச சாவகாசமில்லை என்று சொல்லி அவசரமாய் விடை கேட்டேன். "ஏன் ஒரு நாள் சாவகாசமாக இங்கு தங்குவது தானே" என்றார். நான் இப்போது சாவகாசமில்லை என்றும் மற்றொரு நாள் வருவதாயும் சொன்னேன். அவசியம் வரவேண்டும் என்றார். ஆகட்டும் என்றேன். அந்தப்படியே 15 நாள் பொறுத்து மறுபடியும் குற்றாலம் சென்றேன். அது சமயம் அவர் ஒரு வனபோஜனத்துக்கு புறப்பட்டுக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்துவிட்டார். என்னைக் கண்டதும் ஆசையாக வரவேற்று வன போஜனத்துக்கு அழைத்தார். நான் பின் சென்றேன். செல்லுகையில் வழியில் சிறிது முன்னாக சென்று கொண்டிருந்த நாங்கள் காதல் மிகுதியால் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதுபோல் பல விஷயங்களை கலக்கிக் கலக்கி அங்கொன்று இங்கொன்றுமாக பேசிக் கொண்டே சுமார் 1 மைல் நடந்தோம். சங்கேத இடம் சென்று மற்ற எல்லோருடனும் சேர்ந்து சம்பாஷித்தோம். பிறகு வீட்டுக்கு திரும்பி அன்று மாலையும் இரவும் கழித்தோம். தானாக வந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசினோமே ஒழிய குறிப்பாக எதையும் வருத்தி ஒன்றும் பேசவில்லை. இவைகளிலேயே அனேக விஷயங்கள் கலந்து கொண்டன.

முடிவு என்ன வென்றால் இன்றைய இரு கட்சி கிளர்ச்சிகளும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதும், சேர்ந்து இன்ன இன்ன காரியம் செய்தால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நலன் ஏற்படும் என்பதும் பேசி ஒரு அபிப்பிராயத்துக்கு வந்த விஷயங்களாகும். அவரை விட எனக்கு இருவரும் கலந்து ஒற்றுமையாய் ஒரு வேலை செய்யக்கூடிய காலம் வராதா என்கின்ற ஆசை ததும்பி இருந்தது.

அவ்வளவு பெரிய விஷயம் பேச அந்த சந்தர்ப்பம் போதாது என்கின்ற எண்ணமும் இருந்தது.

ஆனால் சில விஷயங்களில் இருவருக்கும் நேர்மாறான அபிப்பிராயம் இருப்பதும் அது விஷயத்தில் ஒத்து வர முடியாதே என்று பயப்படக் கூடிய அம்சங்களும் வெளியாயிற்று.

எப்படி இருந்த போதிலும் ஒரு சமயத்தில் கூடுவோம் என்கின்ற நம்பிக்கை குறையவில்லை.

இவ்வளவுதான் நாங்கள் கலந்து பேசியதின் தத்துவமாகும்.

----------------------------------ஈ.வெ.ரா.'குடி அரசு' துணைத் தலையங்கம் 14.06.1936

39 comments:

தமிழ் ஓவியா said...


பெட்டிக்கடைகளும் - நடைபாதை கோவில்களும்!


சென்னையில் சாலையோரங்களிலும், நடை பாதைகளிலும் உள்ள பெட்டிக் கடைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

சென்னையில் பெட்டிக்கடைகளால் போக்கு வரத்து இடையூறு என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், அத்தகைய பெட்டிக்கடைகளை அகற்றி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் திங்களில் ஆணையிட்ட தன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி பெட்டிக்கடைகளை அகற்றும் பணியில் இறங்க உள்ளதாம்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 62, அண்ணாநகர் மண்டலத்தில் 36, கோடம்பாக்கத்தில் 17, வளசரவாக்கத்தில் 8, திரு.வி.க. நகரில் 22, தண்டையார்ப்பேட்டையில் 18, ஆலந்தூரில் 6 கடைகளும் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளனவாம்.

உண்மையைச் சொல்லப்போனால், சென் னையில் பெட்டிக்கடைகளைவிட, போக்குவரத் துக்குப் பெரும் இடையூறாக இருப்பது நடைபாதைக் கோவில்கள்தான்.

போக்குவரத்தைக் காரணம் காட்டி இடிக்கப் படவேண்டுமானால், முதலில் அகற்றப்படவேண் டியது நடைபாதைக் கோவில்களும், அனுமதி யின்றிக் கட்டப்பட்டுள்ள கோவில்களும்தான்.

உயர்நீதிமன்றத்தின் ஆணையின் காரண மாகத்தான் பெட்டிக் கடைகளை அகற்றும் நிலை ஏற்பட்டது என்று சமாதானம் சொல்லப்படுமானால், உயர்நீதிமன்றத்தைவிட பெரும் அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம்தானே!

அந்த உச்சநீதிமன்றம் 2010 செப்டம்பரில் பிறப்பித்த ஆணையின்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

பொது இடங்களில் அனுமதியின்றிக் கட்டப் பட்டு இருக்கும் வழிபாட்டு இடங்களை அகற்றாமல் இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலா ளர்கள் உச்சநீதிமன்றத்திற்கு நேரில் வந்து பதில் கூறவேண்டும் என்று 2010 செப்டம்பர் 14 அன்று உச்சநீதிமன்ற அமர்வு ஆணை பிறப்பித்ததே!

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனுமதி யற்ற வழிபாட்டு இடங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். 77,450 கோவில்கள் தமிழ்நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்களாகும்.

இன்னும் சொல்லப்போனால், 2009 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் இந்த ஆணை யைப் பிறப்பித்தது. கடைசியாகப் பிறப்பித்த ஆணைதான் 2010 செப்டம்பர் 14 அன்று பிறப்பிக்கப்பட்டதாகும்.

இதன்மீது தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றத்தின் ஆணையைச் செயல்படுத்திட முனைந்துள்ள தமிழ்நாடு அரசு - உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணையைக் கிடப்பில் போட்டுள்ளதே - இது சரியானதுதானா?

உயர்நீதிமன்றத்தைவிட உச்சநீதிமன்றம் அதிகாரம் அற்றது என்று ஒருக்கால் தமிழ்நாடு அரசு கருதுகிறதோ!

சிறுசிறு பெட்டிக் கடைகளை வைத்து அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாடு கிறார்கள். அவர்கள்மீது காட்டும் வேகத்தை - நடைபாதையில் அத்து மீறிக் கோவில்களை எழுப்பி, உண்டியல் மூலம் வசூல் வேட்டை நடத்தி, ஒவ்வொரு நாள் இரவிலும் உண்டியலை உடைத்து, அந்தப் பணத்தின்மூலம் போதை ஸ்நானம் - தீர்த்தம் - செய்யும் பேர்வழிகளிடம் காட்ட வேண்டியதுதானே!

கல்லு சாமிகளிடம் காட்டும் கருணை, மனிதர்களிடத்தில் காட்டப்படுவதில்லையே, ஏன்?

முதலில் இந்த நடைபாதைக் கோவில்களில் கை வைக்கட்டும் - அடுத்ததை அடுத்துப் பார்க்கலாம்!

தமிழ் ஓவியா said...


பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!


எருமைகள் பலி - பக்தை உயிரிழப்பு - கலசம் திருட்டு - பண மோசடி - மழைக்காக தொழுகையாம்!

சென்னை, மே 22- எருமைகள் பலி - பக்தை உயிரிழப்பு - கலசம் திருட்டு - பண மோசடி - மழைக்காக தொழுகையாம் இவற்றையெல்லாம் பக்தியின் பெயரால் நடக்கும் கூத்துகளை இங்கே காணலாம்.

கோவில் தேர் திருவிழா: எருமைகளை பலி கொடுத்து வழிபாடாம்!

செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக் கண்ணியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடை பெற்றது. இதில் எருமை மாடுகளைப் பலிகொடுத்து வழிபட்டனராம்.

செஞ்சிக் கோட்டை ராஜகிரி மலை மீது உள்ள கமலக்கண்ணியம்மன், கோட்டை, குளக்கரையில் உள்ள ராஜகாளியம்மன், பீரங்கிமேடு வீரனுக்கு பல நூறு ஆண்டுகளாக ஒவ்வோராண்டும் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கமாம். மாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் கடந்த 4 ஆண்டுகளாக திருவிழா நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இந்த வருட திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் காலையில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து திருவிழா நடை பெற்றது. இரவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

நேற்று 9 ஆம் நாள் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் 1008 பால்குட ஊர்வலம் வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் கோட்டை மீது உள்ள கமலக்கண்ணியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டு அங்கிருந்து குளக்கரையில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலுக்கு வந்து அங்கு காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு பூங்கரக ஊர்வலம் கோட்டையில் தென்புற வாயில் வழியாக உள்ளே எடுத்து வரப்பட்டது.

அங்கு அம்மனுக்கு எருமை கடா வெட்டி காவு கொடுக்கப் பட்டது. தொடர்ந்து ஊர்வலமாக வேலூர் கேட்டு அருகே வந்து அங்கு ஒரு எருமை மாடு வெட்டி அம்மனுக்கு காவு கொடுக்கப் பட்டது. தொடர்ந்து மந்தை வெளிக்கு சென்று அங்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஏற்றப் பட்டு தேர் திருவிழா செஞ்சி பீரங்கிமேடு பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனராம்.

சாமி ஊர்வலத்தில் 4 பேர் கைது

தமிழ் ஓவியா said...

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி நஞ்சுண்டா புரத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் விழாவையொட்டி சிலையை வைத்து வீதி உலா நிகழ்ச்சி நடத்தினர். அப் போது அதே ஊரைச் சேர்ந்த மற் றொரு தரப்பை சேர்ந்த வழக்குரை ஞர் உதயகுமார் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது சாமியை தூக்கி வந்த சிலர், சாமி ஊர்வலத்தில் வழக்குரைஞர் பங் கேற்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்களுக்கும், உதயகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அதே பகு தியைச் சேர்ந்த இளையராஜா (வயது 32), ராஜேஷ் (23), மணிகண்டன் (23), ராஜன் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து உதயகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உதயகுமார் கொடுத்த புகாரின்பேரில் சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர்.
கோவில் நெய் விளக்கு தீபம் சேலையில் பற்றி பெண் சாவு

திருச்சி உறையூர் தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மெய்யப்பன், கூலித் தொழிலாளி. இவரது மனைவி மீனாள் (வயது 40). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு தனது வேண்டுதல் நிறைவேற நெய் விளக்கு ஏற்றி வழிபட்டாராம். கண்களை மூடி தியானம் செய்தபோது எதிர்பாராத விதமாக அங்கு வீசிய காற்றில் நெய் விளக்கு தீபத்தில் இருந்த தீயின் சுடரானது மீனாளின் சேலையில் பற்றியது. அடுத்த சில நொடிகளில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் படுகாயம் அடைந்த அவரை கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி அவரது கணவர் மெய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

கோயிலில் கலசம் திருட்டு

சென்னை, மாதர்பாக்கம் சத்தியவேடு சாலையில் பழமைவாய்ந்த ராமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பூசாரி, நேற்று காலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோயில் நடையை திறந்தார்.அப்போது மேல்விதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த செப்புக் கலசத்தை காணவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.25ஆயிரம் என கூறப் படுகிறது. புகாரின்படிபாதிரிவேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...

ஜெபத்தை நம்பி பணம் இழப்பு

நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே யுள்ள சங்கனாச்சேரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கடந்த ஆண்டு இவரை அணுகிய இந்தப் பகுதியைச் சார்ந்த ராமராஜா, அவரது மகன் ஜெயப்பிரபு, கணேசன் மனைவி கிரேஸ் கருத்தப்பாண்டி மனைவி செல்வி ஆகியோர் நயமாகப் பேசினர். உங்கள் வீட்டில் பணம் நகை இருந்தால் கொடுங்கள். நாங்கள் அவைகளை வீட்டில் வைத்து ஜெபம் செய்வோம் 2 மாதங்களில் அவை பல மடங்காகப் பெருகி விடும் என ஆன்மிகக் கோட்பாடுகளோடு பேச, அதை நம்பிய சுப்பிர மணியன் தன் வீட்டிலிருந்த 24 பவுன் நகை மற்றும் 5 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கத்தையும் கொடுத்தார். இதனை வாங்கிய ஜெயப்பிரபு, தன்னோடு சுப்பிர மணியத்தை அழைத்துக் கொண்டு தன் வீடு வந்தவர் அவைகளைப் பீரோவில் வைத்துப் பூட்டி விட்டு, பீரோ முன் அமர்ந்து ஜெபம் செய்யத் தொடங்கினார்.

இப்படியே, தினந்தோறும் ஜெபம் செய்வோம் பீரோவில் உள்ள பணம் நகைகள் 2 மாதத்தில் இரண்டு மடங்காகப் பெருகும் 2 மாதங்கள் கழித்து வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று கூற, அதனை உண்மை என நம்பிச் சென்று விட்டார் சுப்பிரமணியன் 2 மாதம் கழித்து வந்த சுப்பிரமணியன், ஜெயப்பிரபுவிடம் நகை, பணத்தைக கேட்க அவர்கள் கொடுக்காமல் இழுத் தடித்து திடீரென தலைமறைவானார்கள் இது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திரபிதாரியிடம், சுப்பிர மணியம் புகார் செய்ய, அதனடிப்படையில் வாசுதேவ நல்லூர் ஆய்வாளர் இளஞ் செழியன், விசாரணை நடத்தி ஜெயபிரபு, ராமராஜா உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடிவருகிறார். ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு ஜெயப்பிரபு செல்வி, உள்ளிட் டவர்கள் ஏமன் பட்டியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்ற பெண்ணிடம் ஜெபத்தின் மூலம் இரட்டிப்பாக பெருகும் என்று கூறி, 20 பவுன் நகை ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்த வழக்கில் 3 பேரும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் மீண்டும் மோசடியை துணிச்சலாக நடத்தியுள்ளனர். இந்த ஆன்மிக மோசடியால் வாசுதேவ நல்லூர் பகுதி அதிர்ந்துள்ளதாம்.

தமிழ் ஓவியா said...

மழைவேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையாம்

பெரம்பலூரில் மழை வேண்டி நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனராம். பெரம் பலூரில் அனைத்து பள்ளிவாசல்கள் சார்பிலும் மழைவேண்டி சிறப்பு தொழுகை நடத்திட டவுன் ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதன் படி வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள திடலில் முஸ்லிம்கள் நேற்று காலை சிறப்பு தொழுகை நடத்தினர்.

இந்த வழிபாட்டிற்கு பேஸ் இமாம் டவுன் ஹஜ்ரத் முகம்மது சல்மான் தலைமை தாங்கினார்.

அப்போது இமாம்கள், ஹஜரத்துகள், பருவ மழையும் பொய்த்து போய், கோடை மழையும் இல்லாதநிலையில் குழந் தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து மக்களும் குடிநீருக்காக அவதிப் படுகிறோம்.

தமிழ் ஓவியா said...

பயிர்விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தண்ணீரும், பசுந்தீவனங்களும் இன்றி வறட்சியால் மடி கின்றன. காடுகளில் மான் உள்ளிட்ட காட்டுயிர்கள் தண்ணீர் இன்றியும், தீவனம் இன்றியும் மடிகின்றன.

வறட்சிபஞ்சம்போக்க இறைவா மழை தந்தருளாய் என்று துவா செய்து மனமுருகி வழிபாடு நடத்தினராம். இதில் டவுன் பள்ளிவாசல், வடக்குமாதவி சாலை நூர் பள்ளிவாசல், மக்கா பள்ளிவாசல்,மவுலானா மதரசா பள்ளிவாசல், மதீனா பள்ளிவாசல், ஆலம்பாடி சாலை அரபிக்கல்லூரி மதரசா மற்றும் துறைமங்கலம் பள்ளிவாசல் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனராம்.

கோவில் விழாவில் தகராறு; 6 பேர் கைது

ஜீயாபுரம், பேட்டைவாய்த்தலை அருகே உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறால் 2006 ஆம் ஆண்டு முதல் திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த ஒரு தரப்பினர் முயற்சி செய்தனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை யொருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டனர். இதில் மணிகண்டன், ஜெகநாதன், பழனியம்மாள், ராமச் சந்திரன், சகுந்தலா, ராஜேஷ், மரகதம் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கோவில் பந்தல் தீ வைத்து எரிப்பு

ஓசூர் சமத்துவபுரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் கோவில் பந்தல்.

ஓசூரில் ஆட்டோ, கோவில் பந்தல் தீ வைத்து எரிக் கப்பட்டது. இது தொடர்பானவர்களை காவல்துறை யினர் தேடி வருகிறார்கள். ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் சிவசங்கர். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவரது ஆட்டோவை ஓசூர் சமத்துவ புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி வருகிறார். நேற்றிரவு அவர் வழக்கம் போல ஆட்டோவை ஓட்டி விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டு அருகில் உள்ள மாரி யம்மன் கோவில் பக்கமாக ஆட்டோவை நிறுத்தி விட்டு ரமேஷ் தூங்கச் சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை அங்கு வந்த சிலர் ஆட்டோவிற்கும், கோவில் பந்தலுக்கும் தீ வைத்தனர். இதில் ஆட்டோவும், பந்தலும் எரிந்தது. இது குறித்து ரமேஷ் ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

தறிகெட்ட கிர்க்கெட்டு! கிரிக்கெட் சூதாட்டத்தின் விளையாட்டைப் பாரீர்!

மேலும் வீரர்கள் சிக்குகின்றனர்
சென்னையில் 6 தரகர்கள் கைது!
13 இடங்களில் சோதனை! ரூ.14 லட்சம் பறிமுதல்

மே 24-இல் தி.க. மாணவரணி, இளைஞரணி விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 18- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதான வீரர் களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 வீரர்கள் சிக்குகின்றனர். சென்னையில் 13 இடங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 6 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் பறி முதல் செய்யப்பட்டது.

அய்.பி.எல். 6 போட்டியில் சூதாட்ட புகாரில் சிக்கிய ராஜஸ் தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் சிறீகாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா, முன்னாள் வீரர் அபித் சிங் ஆகிய நான்கு பேரிடமும் டில்லி காவல்துறையினர் நேற்று இரண்டாவது நாளாக விசா ரணை நடத்தினர். அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ் மேன்களான ரஹானே (இந்திய வீரர்), பிராட்காட்ஜ் (ஆஸ்திரேலியா வீரர்) ஆகிய இருவருக்கும் தொடர்பு உண்டு என்று தெரிய வந்துள்ளதால் அவர்கள் டில்லி காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட் டுள்ளனர்.

இதற்கிடையே மும்பை இணை காவல்ஆணையர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த அய்.பி.எல். சூதாட்டப் புகாரில் மேலும் பல வீரர்களுக்கு தொடர்பு இருக்கும் எனதான் நம்புவதாக கூறினார்.

இதுதொடர்பாக சென்னை யில் அய்.ஜி. மஞ்சுநாதா நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லி காவல்துறையினர் 3 கிரிக்கெட் வீரர்களை கைது செய்ததற்கும், நாங்கள் எடுத் துள்ள நடவடிக்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங் கிய உடனேயே எங்கள் தனிப் படை போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். ரகசிய தகவல்களையும் சேகரித்து வந்தனர். நாங்கள் சேகரித்த தகவல் களில், டெல்லியை தலைமையிட மாகக் கொண்டு மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கட்டி சூதாட்டத்தில் ஈடுபடு கிறார்கள் என்பது தெரிய வந்தது.

தமிழ் ஓவியா said...


இவர்கள் நாடு முழுவதும் பெரிய அளவில் நவீன வசதிகளுடன் நெட்வொர்க் அமைத்து பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல் படுவது தெரிய வந்தது. சென்னை யில் மட்டும் 20 குழுக்கள் கொண்ட தரகர்கள் செயல்படு வதை கண்டறிந்தோம் இந்த குழுக்களின் தலைவனாக சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஹரீஸ் பஜாஜ் செயல்படுவது தெரியவந்தது. இவர் பிரபல தொழில் அதிபர் ஆவார். சூளை மேட்டில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்தினோம்.

அடுத்து இவரது கூட்டாளிகளான ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வேதாச்சலம், புரசைவாக்கத்தைச் சேர்ந்த லக்கி என்ற நர்பத், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற பப்புகவுதம், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 தரகர்கள் கைது செய்யப்பட்ட னர். இவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அடுத்தபடியாக சைதாப் பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாநகர், காலடிபேட்டை ஆகிய இடங்களி லும் சோதனை மேற்கொள்ளப் பட்டது. இந்த சோதனையில் சுமார் ரூ.14 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 10 லேப்-டாப் கள், 4 கம்ப்யூட்டர் சாதனங்கள், 5 வயர்லஸ் போன்கள், 24 செல் போன்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கைதானவர்களில் ஹரீஸ் பஜாஜும், தீபக் பஜாஜும் உறவினர்கள். கைதான வேதாச் சலம் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் 20 ஓவர் போட்டிகளிலும், ஒரு நாள் போட் டிகளிலும் சூதாட்டம் நடத்துப வர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு ஐ.ஜி. மஞ்சு நாதா தெரிவித்தார். கைதான சூதாட்ட தரகர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் பணம் கட்டும் வாடிக்கையாளர் கள் பட்டியலை வைத்து இருந் தனர். போன் மூலம் வாய்மொழி யாகவே சூதாட்டம் நடந்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை கூட பணம் கட்டி இருக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு பந்து வீச்சுக்கு கூட சூதாட்டம் நடந்துள்ளது. பண பரிமாற்றம் கூரியர் சேவை மூலம் நடைபெற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந் துள்ளது.

சென்னையில் நடந்த போட்டிகளில் மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் நடை பெற்ற போட்டிகளிலும் சென் னையில் இருந்து சூதாட்டம் நடந்துள்ளது. இது குறித்து சென்னையில் இருந்து டெல்லி, ஆமதாபாத், மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுடன் நடைபெற்ற டெலிபோன் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்

சூதாட்டம் : தகவல்கள்

சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம் நடந்தது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் வரி நேற்று மாலை செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

செல்போன் மூலம் சென்னை யில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம் முழுக்க, முழுக்க பொதுமக்களை பணம் கட்ட வைத்து அவர்களை ஏமாற்றும் விதத்தில் நடந்துள்ளது. இதை மேட்ச் பிச்சிங் என்றோ, ஸ்பாட் பிச்சிங் என்றோ சொல்ல முடி யாது. பொதுமக்களிடம் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் வீதத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை பணத்தை வசூலித்துள்ள னர். உதாரணமாக ஒரு போட்டியில் குறிப்பட்ட அணிதான் ஜெயிக்கும் என்று ரூ.1,000 பணம் கட்டினால் அந்த அணி ஜெயித்துவிட்டால் பணம் கட்டியவர்களுக்கு ரூ.1,400 கிடைக்கும்.

தோற்றுப்போனால் பணம் பறிபோய்விடும். அனைத் தும் செல்போன் மூலமாகவே சூதாட்டம் நடந்துள்ளது. பணம் கொடுக்கல்-வாங்கல் அனைத் தும் தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் நடந்துள்ளது. பணம் கட்டிய பொதுமக்கள் நிறையபேருக்கு சூதாட்டக் காரர்கள் பணத்தை கொடுக்க வில்லை. இதனால் எங்களிடம் நிறைய புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோதுதான் இந்த சூதாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது. 6 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.

தொடர்ந்து தோற்றுப் போகும் அணி ஜெயிக்கும் என்று அதிக ரிஸ்க் எடுத்து பணம் கட்டியவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும் என்று விளம்பரப் படுத்தியுள்ளனர். தோற்றுப் போகும் அணி ஜெயித்துவிட்டால் அதில் வெற்றிபெறுபவர்களுக்கு 80 சதவீதம் லாபத்தொகை கிடைக்கும். தொடர்ந்து ஜெயிக் கும் அணிகளில் பணம் கட்டுபவர் களுக்கு 40 சதவீதம்தான் லாபம் கிடைக்கும்.

சங்கேத பாஷை இந்த லாபக் கணக்கை சங்கேத பாஷையில் தான் சூதாட்டக்காரர்கள் பேசு வார்கள். உதாரணமாக 40 சத வீதம் லாபம் கிடைக்கும் என் பதை 40 காசு என்றும், 80 சதவீதம் லாபம் கிடைக்கும் என்பதை 80 காசு என்றும் சூதாட்டக்காரர்கள் போனில் பேசியுள்ளனர். நாங்கள் சோதனை செய்தபோது பஞ்சாப், டெல்லி அணிகளிடையே நடந்த மோதல் குறித்து சூதாட்டக்காரர் கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந் தனர். அப்போதுதான் நாங்கள் சோதனை போட்டோம். அதில் இரண்டு இடங்களில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது என்றார் அவர்.

தி.க. ஆர்ப்பாட்டம்

மே 24ஆம் தேதி, திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, சார்பில் கிரிக்கெட் போதை சூதாட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

தமிழ் ஓவியா said...

24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் முக்கியம் பெறுகிறது!

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பி.சி.சி.அய்.) தலைவர் சீனிவாசன் - அய்.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்டில் சூதாட்டத்தைத் தடுக்க முடியாது. தரகர்களையோ, சூதாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாது - என்று அடித்துக் கூறியுள்ளார்.

வீரர்களை காவல்துறை போல், எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சூதாட்டம் குறித்த தகவல்கள் வருகின்றன. இதனைத் தடுக்க போதிய சட்டங்கள் இல்லாமையால் காவல்துறையும் தக்க நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் கலந்து பேசி சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம், இளைஞர்கள் கிரிக்கெட் மீது கொள்ளைப் போதை - இவை குறித்து திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (விடுதலை 16.5.2013).

அய்.பி.எல். கிரிக்கெட் என்பது பெரும் முதலாளிகளின் கருப்புச் சந்தைக் களமாக உள்ளது. வீரர்களை ஏலம் எடுப்பது என்பது கேவலமானது. பல நூறு கோடி ரூபாய் போட்டு இந்தக் களத்தில் இறங்கி உள்ளவர்கள், தாங்கள் வெற்றி பெற குறுக்கு வழியைத் தானே தேர்வு செய்வார்கள். தரகர்களையும் ஏற்பாடு செய்வார்கள்?

ஒரு விளையாட்டில் இவ்வளவுப் பெருந்தொகை நுழைவதுதான் குற்றங்களுக்கெல்லாம் முதற்படி.

கிரிக்கெட் என்றால் பணம் காய்ச்சி மரமாக அல்லவா இருக்கிறது? கிரிக்கெட் விளையாட்டுக் காரர்களுக்கு ஆண்டு சம்பளம் ஒரு புறம் - ஒவ்வொரு நாளும் விளையாடுவதற்குச் சம்பளம் - நான்கு ஓட்டம் எடுத்தால் அதற்கொரு வெகுமதி, ஆறு ஓட்டம் எடுத்தால் அதற்கென்று தனித் தொகை இவையன்றி அரசாங்கத்தின் சலுகைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.

டெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுகிறார் - ஒரே ஒரு முறை கூட அவைக்கு அவர் சென்றதாகத் தெரியவில்லை.

இந்த வசீகரம்தான் அந்த விளையாட்டின்மீது அதிகப்படியான ஈர்ப்பு ஏற்படுவதற்கே காரணமாகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல விளையாட்டு என்றால் அதில் திறமை - அர்ப்பணிப்பு இவையல்லவா குடிகொண்டு இருக்க வேண்டும்? அதனை விலை பேசுகிறார்கள் என்றால் இந்தக் கேவலத்தை என்ன சொல்ல!

ஒவ்வொரு முறை பந்தை வீசும் பொழுது எல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதென்ன - கழுத்தில் மாட்டியுள்ள தாயத்தை கண்ணில் ஒற்றிக் கொள்வதென்ன? என்ன....

சாயிபாபா இருந்த இடத்தை நோக்கி ஓடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு வருவ துண்டு. அவர் கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு விளையாடுவதுண்டு. ஆனாலும் சாதனைக்கு அவை துணை நிற்கவில்லை என்பது தெரிந்த சேதியே!

கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்குப் பணம் மட்டுமல்ல - பெண்கள் வரை அனுப்பி வைக்கப்படு கின்றனர் என்றால் நாடே தலைகுனிய வேண்டாமா?

இதில் எந்தவித அரசியல் செல்வாக்குக்கும் கட்டுப்படாமல் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்காரர் களையும், சூதாட்டத் தரகர்களையும், அவர்களை இயக்கும் பணத் திமிங்கலங்களையும் வெளிச்சத் துக்குக் கொண்டு வந்து, சட்டத்தின் கடமையைத் தங்குத் தடையின்றி செயல்படுத்திட வேண்டும்.

பி.சி.சி.அய். தலைவர் சீனிவாசன் அளித்துள்ள பதில் பொறுப்பற்றதாக உள்ளது. இந்த அமைப்பை அரசின் கட்டுப்பாட்டுக்குள் எந்த அளவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்; வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து திரளாகப் பங்கேற்கவும் அனைவரையும் அழைக் கிறோம்.

-------------------------"விடுதலை” தலையங்கம் 21-5-2013

தமிழ் ஓவியா said...


நம் பழைய சூதாட்டத்தைப் பரப்பும் சிகாமணிகளுக்கு பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தரலாமே!




- ஊசி மிளகாய்

நெறிகெட்ட கிரிக்கெட் சூதாட்டம்!

சூதாட்டத்தின்மூலம் கிரிக்கெட்டின் மீது - அய்.பி.எல். என்ற ஒரு வாய்ப்பின் மூலம் - திடீர்க் குபேரர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி!

கிரிக்கெட் தரகர் ஒருவர் தினமும் ரூபாய் ஒரு கோடி வீதம் சம்பாதித் துள்ளார். எந்தாடா ஆச்சர்யம்!

இது எவ்வளவு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி - அதுமட்டுமா?

ஏற்கெனவே ஆட்டம் ஆடியவர் களுடன் செய்த ஏற்பாட்டின்படி, பந்தயம் கட்டிய (சூதாட்ட பேரத்தில்) வெறும் ஏழு நிமிடங்களில் இரண்டரை கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்று எல்லா ஊடகங்களிலும் செய்தி இன்று வெளியாகியது! எவ்வளவு வெட்கக் கேடான விஷயம் இது!

மது, மாது என்பதைவிட இந்தக் கிரிக்கெட் சூது எப்படிப்பட்ட லாபகர மான தொழிலாக பலருடைய ஆதரவின் பேரில் செழித்தோங்கி நடைபெறுகிறது பார்த்தீர்களா? இதைத் தடை செய்ய இதற்குமேலும் காரணங்கள் தேவையா?

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியாரின் பொருள்களை இங்கிலாந்து நாட்டில் ஏலம் விட்டுள்ளனர்.

காந்தி சீடர்களான ஆட்சியாளர் அதை ஏலம் எடுத்து, காந்தி மியூசியத்தில் வைக்கவேண்டும் அல்லது காந்தி சமாதிக்கு அருகில் அவர் பயன்படுத்திய பொருள் கொண்ட ஒரு காட்சியகத்தை அமைக்கவேண்டுமென்ற எண்ணம்கூட இல்லை. எவர் எவரோ ஏலம் எடுத்துள் ளனர்!

இன்று காந்தி என்றாலே எந்த காந்தி என்று கேட்கும் நிலையில், இதற்காக முக்கியத்துவம் வரும்? அது கிடக்கட்டும்!

காந்தி பயன்படுத்திய சில பொருள் களின் மதிப்பு ஏலத்தில் விடப்பட்டு எடுக் கப்பட்டதின்மீது வந்த தொகை 2 கோடியே 30 லட்சம் ரூபாய்தான்.

ஆனால், 7 நிமிட கிரிக்கெட் சூதாட் டத்தின்மீது சம்பாதிக்கப்பட்ட பணம் ரூபாய் இரண்டரை கோடி (2 கோடியே 50 லட்சம்) ஆகும்!

இரண்டு தராசு தட்டுகளில், காந்தி தட்டு வெயிட் இல்லாதது; மேலே நிற்கும்!

கிரிக்கெட் என்ற விளையாட்டு, வெளிநாட்டு விதேசி, (அது சுதேசி விளையாட்டு அல்லவே) என்றாலும், நம் நாட்டில் ஆண்டியை அரசனுக்குமேல் ஆக்கும் நவீன அலாவுதீனின் அற்புத விளக்காக அல்லவா கிடைத்துள்ளது!

ஊழலை ஒழிப்பது, கறுப்புப் பணத்தைத் தடுப்பது என்பதன்கீழ் வராது என்பது மத்திய - மாநில ஆட்சியாளர்களின் கணக்கோ!

அதுமட்டுமா? கொலைகளுக்கும்கூட இந்த அய்.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் காரணமாக அமைந்துள்ளது என்பது மகாராஷ்டிரத்தில் எம்.பி.ஏ., படித்தவன் 30 லட்சம் ரூபாயை இழந்ததைச் சரி கட்ட, ஆள் கடத்தி கொலை செய்த கதை போலவே ஆந்திராவிலிருந்து மற்றொரு வேதனையான செய்தி!

அய்.பி.எல். கிரிக்கெட் போட்டி, பல் வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என பெற்றோர் கவலை ஒருபுறம், கணவரும், குழந்தை களும் அய்.பி.எல். போட்டிகளை பார்க்க முடியவில்லை என்று சண்டை ஆரம்பித்து, ரிமோட்டை வைத்து ஆரம்பித்து - இதனால் அடிவாங்கிய மனைவி, (சீரியல் பார்க்க அவர் விரும்பினார்;

அய்.பி.எல். பார்க்க கணவர் விரும்பினார்) இதனால் மனமுடைந்த மனைவி, மண் ணெண்ணெய் ஊற்றி, தீக்குளித்துச் சாகும் நிலையில் உள்ளாராம்! என்னே கொடுமை! பரிதாபம்! (நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் இது நடந்தது).
இவ்வளவு ஒழுக்கக்கேட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மக்களாட்சியின் கடமை அல்லவா?

சூதாட்டத்தில் பங்கு வாங்கி மகிழ்வதா ஆட்சியின் கடமை என்று மக்கள் கேட்கமாட்டார்களா?

இது ஞானபூமியாம்! நம்ம பாரத கலாச்சாரமே சூதாட்டம்தானே!

மஹாபாரதத்தில், தருமன் உள்பட பஞ்சபாண்டவர்கள் தம் பொது மனைவியை (துரோபதையை) பந்தயமாக வைத்து ஆடித் தோற்றதும்,
அதற்குமுன் வேத காலங்களி லும்கூட ஆரியர் சூதாட்டத்தில் ஈடு பட்டு, ஓய்வு அதிகம் (வேறு விளை யாட்டுத் தெரியாத காலமோ!) என்ப தால் ஆடினார்கள் என்பது உண்மை.

பழைய நம் பாரத கலாச்சாரத்தை நம் கிரிக்கெட் என்ற நவீன விளையாட்டின்மூலம் பரப்புவதற்காக சூதாட்ட வீரர்களுக்கும் பாரத சூதாட்ட ரத்னா பட்டம் தந்து கவுரவிக்கலாமே! 22-5-2013

தமிழ் ஓவியா said...


இலங்கையில் மனித உரிமைக்கு இடமில்லை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குழு குற்றச்சாற்று



கொழும்பு, மே 22- இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந் நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந் திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்து கொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங் களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை அரசாங்கம் எடுக்க வில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. யுத்த காலத்திலேயே பல கஷ்டங் களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டு வந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண்மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழிதேடுவார்கள்.

ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ், தொடர்புடைய விடயங்கள், மனித உரிமை தவிர மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்ற வர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும், தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப் படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும், காணாமல்போனவர்களின் கதி பற்றிய தகவலை எதிர்பார்த்தும், தமது அடிப் படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள், ஆனால் ராஜபக்சே அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவ கார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை எத்தரப்பு செய்திருந்தாலும் அது விசாரிக்கப்படும் என அய்.நா. தலைமைச் செயலாளருக்கு ராஜபக்சே வழங்கியிருந்த வாக் குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தால் நியமித்த படிப் பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு பொறுப்புகூறல் தொடர்பில் செய்த பரிந்துரை களும்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை என அது சுட்டிக்காட்டியுள்ளது.

பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக் கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட உண் மையை வெளிக்கொண்டுவர நிச்சயம் வழி தேடுவார்கள் என பிராட் ஆடம்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பன தர்மம்



பார்ப்பன தர்மம் என்பதே கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு, புரட்டு, பித்தலாட்டம், துரோகம், அசிங்கம், ஆபாசம், நம்பிக்கைக் கேடு, நாணயக் கேடு ஆகிய கூடாத காரியங்களை, குணங்களை அடிப்படையாகக் கொண்டே ஏற்பாடு செய்யப்பட்டவை என்றே சொல்லக்கூடியவையாக இருக்கின்றன.
(விடுதலை, 5.1.1966)

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

இட ஒதுக்கீட்டைக் குழி தோண்டிப் புதைப்பதா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசின் அநீதி!

சென்னை, மே 23- ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட தாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

ஏறத்தாழ ஆறரை லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி யதில் 10397 இடைநிலை ஆசிரியர் களும், 8,849 பட்டதாரி ஆசிரியர் களும் தேர்ச்சி பெற்றனர். இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக் காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வில்லை. காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப் போது நடத்தப்படும்? என்று இடை நிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர் பார்த்து வந்தனர். இந்த நிலையில், தகுதித்தேர்வுக் கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150-க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த தால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தகுதித்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி களிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. அனைவருக்கும் ஒரே அளவுகோலா?

நடந்து முடிந்த தகுதித் தேர்வின் அடிப்படையில் 19 ஆயிரம் ஆசிரியர் கள் பணி நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.

இந்தத் தகுதித் தேர்வின் அடிப் படையில் சமூகநீதிக்கு - இடஒதுக்கீட் டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படையான தவறினை தமிழக அரசு செய்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் - உயர் ஜாதியினர் அனை வருக்கும் தகுதி மதிப்பெண் 60 என்று நிர்ணயிக்கப்பட்டது.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழிகாட்டுதலுக்கு விரோத மானது இது.

தமிழ் ஓவியா said...

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திராவில் உயர்ஜாதியினருக்கு 60, பிற்படுத்தப் பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோ ருக்கு 40 மதிப்பெண்கள் என்றும் அஸ்ஸாமில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 55, ஒரிசாவில் உயர் ஜாதியினருக்கு 60, மற்றவர்களுக்கு 50 மதிப்பெண்கள் என்றும் தகுதி மதிப் பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலில் அதிமுக அரசு இறங்கி விட்டது. தகுதி மதிப் பெண்கள் 60 ஆக நிர்ணயிக்கப் பட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்பட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சட்டப் பேரவையில் கேள் விகள் எழுப்பப்பட்ட போது கல்வி அமைச்சர் இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டவர்களையும், உயர் ஜாதியினரையும் சகட்டுமேனிக்கு சம நிலையில் வைத்து மதிப்பெண்களை நிர்ணயிப்பதுதான் அதிமுக அரசின் கொள்கை முடிவா?

ஏற்கெனவே செய்த அதே தவறை மறுபடியும் மறுபடியும் அதிமுக அரசு செய்யத் தொடங்கி விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணையை நிர்ண யித்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 1980 மக்களவைத் தேர்தலில் மண்ணைக் கவ்வினார் என்பதை நினைவூட்டுகிறோம். 7 லட்சம் பேர் தேர்வு எழுதும் மிக முக்கிய பிரச் சினையில் அதிமுக அரசு மாபெரும் அநீதியை இழைத்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. அரசால் அறிவிக் கப்பட்டுள்ள இந்தக் கொள்கை முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்து நடத்தவிருக்கும் தகுதித் தேர்வும் தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதல்படி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யுமா?

தமிழ் ஓவியா said...


இதுதான் மதம் என்பதோ! கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானதாம் சொல்கிறார் சவுதி மத குரு


வாஷிங்டன், மே 23- வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத் துவது ஒழுக்கமற்ற செயல் என்று சவுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்து உள்ளார். சவுதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி யடைய வைத்துள்ளது.

அவரது ட்வீட், கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி.யை பயன்படுத்துவது அவர்கள் வீட் டில் இருப்பதை பிறர் கவனிக்கக் கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழி வகுக்கும் என்று தெரிவித்து உள்ளார். முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூ டியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் சன்னி முஸ்லிம் மற் றும் முஸ்லிம் அல்லாத பெண் கள் பாலியல் வன்முறை செய் யப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

கிரிக்கெட்டைத் தடை செய்க! தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!


இளைஞர்களே, மாணவர்களே, போதை தெளிவீர்!

சூதாட்டப் பொருளாகி விட்ட கிரிக்கெட்டைத் தடை செய்க!

தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மே 24- சூதாட்ட மாகி விட்ட கிரிக்கெட் விளை யாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக் களிடத்திலும், மாணவர்களி டையே விழிப்புணர்வை ஊட்டும் வகையிலும் இன்று (24.5.2013) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் இளைஞரணி, மாண வரணி, மகளிரணி சார்பில் மாவட் டத் தலை நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அய்.பி.எல். கிரிக்கெட் என்ற கொள்ளை லாபக் குபேரர்களின் பெரும் வாணிபத்தில் சூதாட்டம் கற்பனை செய்ய இயலாத எல்லைக்குச் சென்று, இதில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடித்து, காவல்துறை கைது நடவடிக்கைகளைத் தொடரும் நிலையில், விசாரணையில் வெளி வரும் பல செய்திகள் பலரை திடீர்க் கோடீசுவரர்களாக்கியுள் ளது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் மதுவைவிட அதிகம் போதையூட்டக் கூடி யதும், சூதாட்டம், கறுப்புப் பணம் இவற்றின் காரணமாக கொலைகள் வரை நடக்கும் கிரிக்கெட்டிற்கு குறிப்பாக அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு அரசு அனுமதி கொடுப்பதைக் கண் டித்து மக்களிடத்தில் விழிப் புணர்வை ஊட்டும் வகையில் 24.5.2013 அன்று தமிழகம் முழு வதும் மாவட்டத் தலைநகரங் களில் திராவிடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறும் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார். இதையொட்டி இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் மிகுந்த எழுச்சியுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் பல்லாயிரணக் கணக்கான கழகத் தோழர் - தோழியர்கள் பங்கேற்றனர்.

சென்னை

சென்னை மாவட்ட ஆட்சியர் மாளிகை அருகில் இன்று (24.5.2013) காலை 11 மணியளவில் அய்.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்:

சூதாட்டம் சூதாட்டம் கிரிக்கெட் சூதாட்டம்!
மத்திய அரசே! அனுமதிக்காதே; சூதாட்ட விளையாட்டை அனுமதிக்காதே
கிரிக்கெட் விளையாட்டா சூதாட்ட விளை யாட்டா வெற்றி பெறுவது யார்? சூதாட்டக்காரர்களா? விளையாட்டுக்காரர்களா?
அய்.பி.எல். கிரிக்கெட்டா? கறுப்புப் பண சந்தையா?
வெட்கம்! வெட்கம்! விளையாட்டின் பேராலே வர்த்தகச் சூதாட்டமா?
விளையாட்டின் சிறப்பை கொச்சைப்படுத்தும் கிரிக் கெட்டை தடை செய்!
இளைஞர்களே, மாண வர்களே, பலியாகாதீர்! கிரிக்கெட் போதைக்கு!
மத்திய அரசே நடவ டிக்கை எடு! கிரிக்கெட் பேராலே மோசடி செய்யும் பெரிய மனிதர் கள் மீது நடவடிக்கை எடு!
மத்திய அரசே ஆதரவு கொடு சடுகுடு ஆட்டத்துக்கு, ஹாக்கி ஆட்டத்துக்கு ஆதரவு கொடு
வெட்கக் கேடு விளை யாட்டுக்காரர்கள் ஏலம் போவது வெட்கக் கேடு!
தடை செய் - தடை செய்! சூதாட்டக் கிரிக்கெட்டை சூதாட்டக் கிரிக்கெட்டை தடை செய்! தடை செய்!

என்ற ஒலி முழுக்கங்கள் ஆர்ப் பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில மாணவரணிச் செய லாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை தாங்கினார். சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ், சென்னை மண்டல திராவிடர் மாணவர் கழக செயலாளர் பா. மணி யம்மை, ஜோதி ராமலிங்கம், மங் களாபுரம் பாஸ்கர், கலைச் செல்வன், செல்வேந்திரன், சண் முகப்பிரியன், சூதன்லீ, விஜய குமார், சிவசாமி, கார்வேந்தன், அன்பு, இளமதி, கலைவேந்தன், ரமேஷ், ரவி, எழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும்!

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன் றன், ஆர்ப்பாட்ட விளக்க கண் டன உரையில்:-

திராவிடர் கழகம் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட் மோசடியை எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக் கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களை புரோக்கர்கள் விலை பேசி, கிரிக்கெட்டை சூதாட்டக் களமாக்கி விட்டார்கள். இந்த கிரிக்கெட் பித்தலாட்டத்தில் சூதாட் டக்காரர்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட்டை நடத்துகிறவர்களுமே பங்கு பெற்றிருக்கிறார்கள். இதை காசு கொடுத்து இன்றைய மாண வர்களும், இளைஞர்களும் பார்த்து தங்கள் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிரிக்கெட் சூதாட்டக் களமாகி விட்ட சூழலில் இன்றைய மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இந்த அய்.பி.எல்-லை தடை செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் தலைமைச் செயற் குழு உறுப்பினர் க. பார்வதி, பொதுக் குழு உறுப்பினர் மனோரஞ்சிதம், சி. வெற்றிச்செல்வி, கு. தங்கமணி குணசீலன், இ. இறைவி, பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாரா யணன், பகுத்தறிவாளர் கழக வட மணப்பாக்கம் வி. வெங்கட்ராமன், விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால், சென்னை மண்டலத் தலைவர் நெய்வேலி வெ. ஞான சேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், செயலாளர் எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் கந்தசாமி, செயலாளர் தென்னரசு, கும்மிடிப் பூண்டி மாவட்டத் தலைவர் செ. உதயகுமார் மற்றும் திரளான கழக இளைஞரணி, மாணவரணி, தோழர் - தோழியர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

கிரிக்கெட் சூதாட்டத்தை விளக்கும் வீதி நாடகம்

முன்னதாக இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் கிரிக்கெட் சூதாட் டத்தை விளக்கும் வகையிலும், மாணவர்கள் - இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் திராவிடர் கழக மாணவரணி தோழர்கள் விமல், சந்தீப், பிரபாகரன், காரல் மார்க்ஸ், ஆனந்த், சைதை செல்வம், வை. கலையரசன், புரூனோ என்னாரெசு, ஆகியோர் பங்கேற்ற வீதி நாடகம் நடைபெற்றது. இதை சாலையில் சென்ற பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து விழிப்புணர்வு பெற்றனர்.

கறுப்புப் பண மழை கொட்டும் விளையாட்டாக கிரிக்கெட் இருப் பதை எடுத்துக்காட்டியும், பன் னாட்டு முதலாளித்துவ நிறுவனங் களின் விளம்பரக் கூலியாக கிரிக் கெட் ஆட்டக்காரர்கள் இருப்பதைப் பற்றியும், விளையாட்டு என்பதைத் தாண்டி சூதாட்டக் கூடாரமாக கிரிக்கெட் திகழ்வதை விளக்கியும், பொருள்களைப் போல மனிதர் களையும் சந்தையில் ஏலம் எடுக்கும் அடிமை முறையைக் கண்டித்தும், இப்படிப்பட்ட மோசமான கிரிக் கெட்டுக்கு ஆதரவு வழங்கும் இந்திய அரசும், நிறுவனங்களும் உண்மை யான விளையாட்டுகளான சடுகுடு ஹாக்கி, கால் பந்து, தடகளம் போன்றவற்றை புறக்கணிப்பதையும் எடுத்துக்காட்டி திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியினர் இந்த வீதி நாடகத்தை நடத்திக் காட் டினர்.

தமிழ் ஓவியா said...


மனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி ஏதும் கிடையாது!

மருத்துவம் என்பதே மனிதநேயம் தான்; (சில நேரங்களில் சிலரின் பணப் பேராசை அதைப் பொய்யாக்கு கிறது என்பது உண்மையேயாயினும்; தத்துவப்படி அப்படி அல்ல)

சென்னையில் ஃபோர்ட்டீஸ் மலர் மருத்துவமனையின் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும், அவரது அறுவை சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் குழுவி னரும் சிறந்த மனித நேயச் சாதனையைச் செய்துள்ளனர்!

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மவுலானா முகம்மது ஜுபேர் ஆஸ்மி. இவர் டைலேட்டர் கார்டியோ மயோபதி என்ற ஒரு வகை இதய நோயால் பாதிக்கப்பட்டவர்.

இதன் காரணமாக இவரது இதயத்தின் செயல்பாடுகள் மிகவும் பலவீனமாக இருந்ததால் பாகிஸ் தான் மருத்துவமனைகள் இவருக்கு சிகிச்சை அளிக்கத் தயங்கின.

இதையடுத்து இந்த உயர் சிகிச் சைக்காக இவர் பாகிஸ்தான் லாகூரி லிருந்து சென்னைக்கு வந்தார்.

அவரைப் பரிசோதித்தில் அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் பலவீன மாக இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன் இவ ருக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயின் காரணமாக, இவரது கல்லீரல், சிறுநீரகங்களின் செய ல்பாடுகள் குறைந்திருந்தன.
இதைத் தவிர இவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் கூட இருந்தன.

இவரின் ரத்த வகை மிகவும் அரிதான ஏபி பாசிட்டிவ் ஆகும்!

இவற்றின் காரணமாக இவருக்குச் சிகிச்சை அளிப்பது டாக்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்தது!

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 37 வயதான கோயில் அர்ச்ச கருக்கு மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட நிலையில் அர்ச்சகரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன் வந்தனர்.

இந்த மூளைச் சாவு ஏற்பட்டவரின் இதயத்தின் செயல்பாடு குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

இவரது - அர்ச்சகரது - இதயத்தை எடுத்து பாகிஸ்தான் நோயாளிக்கு பொருத்திட வேண்டிய சிகிச்சை ஏற்பாடு களை நமது டாக்டர்கள் செய்தனர்!

இன்னொரு சிக்கலும்கூட. இந்த இரு வரது ரத்த வகையும் வெவ்வேறானவை என்பது மற்றொரு பெரிய சவால் - சிகிச்சை அளிக்க முன்வந்த டாக்டர்கள் குழுவுக்கு.

இதையும் தாண்டி அந்த பாகிஸ்தான் ஆசிரியருக்கு, இந்த அர்ச்சகரின் இதயம் மாற்று இதயமாக வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
சுமார் 2 மணி நேரத்தில் இந்த மருத்துவ மனிதநேய அற்புதம்! நிகழ்த் தப்பட்டுள்ளது!

தற்போது அவர் நலமாக உள்ளாராம்!

ஒரு சில வாரங்கள் கழித்து மருத் துவக் கண்காணிப்புக்குப் பிறகு - அந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கொண்ட இஸ்லாமிய ஆசிரியர் பாகிஸ் தான் - சொந்த நாட்டிற்குத் திரும்ப இருக்கிறாராம்!

இந்த சாதனையை நிகழ்த்திய டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது குழுவினர், அம்மருத்துவ மனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் சுரேஷ் ராவ், எல்லா வற்றிற்கும் மூலா தாரமான Fortus Malar மருத்துவமனை யின் நிர்வாகத் தினர் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

1. மேலை நாடுகளுக்குச் சென்றால் தான் முடியும் என்பதை மாற்றி அதை முறியடித்துள்ளனர் நமது டாக்டர்கள் தங்கள் அறிவு, ஆற்றல், அனுபவம் மூலம்.

2. மனிதநேயத்திற்கு நாடு, மதம், ஜாதி, தொழில் வேறுபாடு எதுவும் கிடையாது. அவற்றை மனிதர்கள் செயற்கையாக அறிவியலுக்கு எதிராக தூக்கிப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அலை கின்றனர் என்பதை இந்த நிகழ்வு தெளிவாக்கியிருக்கிறது!

3. மூளைச் சாவு ஏற்பட்டு விட்டதை அறிந்து உறுப்பு தானம் கொடுக்க முன் வந்த அந்த அர்ச்சகர் குடும்பத்தினரும் பாராட்டுக்குரியவர்கள்.

எனவே ஜாதி, மதம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டியது மனித நேயம் - மானிடப்பற்று என்று காட்டி யுள்ள இம்மாதிரி நிகழ்வுகள் மேலும் தொடரட்டும்! --கி. வீரமணி 24-5-2013

தமிழ் ஓவியா said...


வாழ்க்கையால்...



ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமையவேண்டும்.
----பெரியார்(விடுதலை, 20.03.1956)

தமிழ் ஓவியா said...

சென்னையில் பேச்சாளர்களுக்கு சிறப்பு பயிற்சி


* கணினி - இணையதள பயிற்சியும் உண்டு

தஞ்சை வல்லத்தில் நடந்த கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

வல்லம், மே 24- திராவிடர் கழக சொற்பொழி வாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 23.5.2013 வியாழன் பகல் 12 மணி முதல் 2.15 மணி வரை தஞ்சை வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் பூவை. புலிகேசி கடவுள் மறுப்புக் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் வரவேற்றுப் பேசினார்.

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழக சொற்பொழிவாளர்கள் முனைவர் அதிரடி க.அன்பழகன், சிவகங்கை சுப்பையா, என்னாரெசு பிராட்லா, கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் கருத்துரையாற்றினர்.

கழக சொற்பொழிவாளர்கள் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப கணினி - இணையதளம் உள்ளிட்ட ஊடகங்கள் மூலம் அதிகமான செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், பயன்படுத்திட பழகிக் கொள்ள வேண்டும் எனவும், நூல்கள் வாசிப்பு, மீள் வாசிப்பு தேவை எனவும், தலைப்பு வாரியாக குறிப்பெடுத்து வைத்திருப்பது அவசியம் எனவும், பேச்சாளர்கள் என்போர் பேச்சாளர்களாக மட்டுமின்றி - களப்பணியாளர்களாகவும் இருக்க வேண்டும், நூல்கள் பரப்பிடுவோராகவும் திகழ வேண்டும் என்று தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

வழக்குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் புலிகேசி, முத்து.கதிரவன், யாழ்திலீபன், ஆரூர் முனியாண்டி, தஞ்சை இரா.பெரியார் செல்வன், சிவகங்கை சுப்பையா, காஞ்சி கதிர வன், முனைவர் அதிரடி அன்பழகன், வழக்குரை ஞர் அ.அருள்மொழி, முனைவர் துரை.சந்திர சேகரன், கழக செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு, என்னாரெசு பிராட் லா, வழக்குரைஞர் சிங்கார வேலு உள்ளிட்ட கழக சொற் பொழிவாளர்கள் மற்றும் பொதுச் செயலா ளர் இரா.செயக்குமார், அமைப்புச் செயலாளர் இரா.குணசேகரன் ஆகி யோர் பங்கேற்றனர். தஞ்சை இரா. பெரியார் செல்வன் நன்றி கூறினார்.

சொற்பொழிவாளர்களுக்கு தமிழர் தலைவர்...

* வாழ்க்கை முழுவதும் பெரியாரின் மாணவன் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. அதுபோல சொற்பொழிவாளர்கள் ஒவ்வொருவரும் அதே எண்ணத்துடன் திகழ வேண்டும். பெரியாரை, பெரியாரின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். வயது ஏற ஏற நாம் படிக்கும் பெரியாரின் கருத்துகளுக்கான விளக் கங்கள், சிந்தனைகள், நம் மை வியக்க வைப்பதாய மையும்.

* பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட் சமுதாயத்துக்கு தேவையான முன்னேற்றத் துக்கு, விடுதலைக்கு தேவை யான அனைத்துக் கருத்து களும் கிடைக்கும் இடம் அது. மீள் வாசிப்பு அவசியம்.

* நூல்கள் வாசிப்பும், அதையொட்டி தலைப்பு வாரியான குறிப்புகளை தொகுத்து குறிப்பேட்டில் எழுதுவதும் அவசியம். குறிப்புகளுடன் தான் பேச வேண்டும். வானொலி உரைக்கு எப்படி தயார் செய்வோமோ அப்படி குறிப்புகள் இருக்க வேண்டும்.

* விரைவில் பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னையில் நடத்தப்படும். கணினி - இணைய தள பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

* திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புறப்பட்டிருக்கும் தமிழ் தேசிய வாதிகளுக்கு திராவிடத்தால் தான் எழுந்தோம் என்பதை புரிய வைக்கும்படியான கருத்துகளை தெளிவாக பேச வேண்டும்.

* நமது அறக்கட்டளை சார்பில் நடைபெறும் அறப்பணிகள், கல்விப்பணிகள் பற்றி கூட்டங்களில் பேசும் போது எடுத்துக் கூற வேண்டும்.

* நிறைய படிக்க வேண்டும், அய்யாவின் நூல்களை திரும்பத் திரும்பத் படிக்க வேண்டும். படிக்கும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்து பழக வேண்டும். பேச்சில் பயன்படுத்த அவை துணை செய்யும்.

* பேச்சாளர்களாக மட்டுமின்றி, நமது தோழர்கள் சீரிய களப்பணியாளர்களாகவும் திகழ வேண்டும். நூல்கள் விற்பனை, பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்தல், அமைப்பு பணிகள் என அனைத்திலும் திறன்மிக்கவர்களாக திகழ வேண்டும்.

மேற்கண்ட கருத்துகளை தமிழர் தலைவர் தமது வழிகாட்டுதல் உரையில் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


சிந்தனைப் பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

##############

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.

##############

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

##############

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

##############

அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


அரசும் - அமைச்சும்


அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அரு வருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம் தான் நமக்குத் தேவை என்று கூறுகிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!

இது முறையன்று. நமது நிலைமை சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு-தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ்யமும், ராம ராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.

அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:

ஜாதிமாத்ரோபஜீ வீவா காமம்ஸ்யாத்
ப்ராஹ் மணப்ருவ;
தர்மப்ரவக்தா, ந்ருபதேர்
நது சூத்ர; கதாசன

(மனு)

பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினா லேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒரு போதும் அரச சபைக்கு உரியவனாக மாட்டான்.

இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயி ருந்தால், அந்நாடு சீர்கெடுமெனபதற்கு மனு கூறியதாவது:-

யஸ்ய சூத்ரஸ்து குருதே
ராஜ்யே தர்ம விவேசனம்
தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்
பங்கே கௌரிவ பஸ்யத;
யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம்
நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,
வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்
துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்

பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கிறானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர் களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்த நாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும்.

கல்வியை விரும்புகிற சூத் திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத் தக்கவனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லி லேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமையில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கியிருக்கின்றன.

(ஞானசூரியன்

தமிழ் ஓவியா said...


உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும். கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.

உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

பயந்த மனிதனும் - பரிகாரமும்!

பயந்த மக்கள் பரிகாரம் காண முற்படுகிற போது அந்த இடத்திற்கு வந்து விடுகிறது சோதிடம்! சோதிடர்கள் பிழைப்பாக்கிக் கொள்கிறார்கள்!

திருமணத்தை நடத்தி வைக்க, புதுக்கணக்கு எழுத, கடையை தொழிற்சாலையை திறந்து வைக்க, அடிக்கல் நாட்ட என்று நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள்! குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும், குறத்தி கூறும் வாக்கையும், சோவி உருட்டிச் சோதிடம் கூறுபவனையும், கிளி ஜோசியத்தையும் நம்புகிற நம் மக்களிடத்தில் ஜோதிடமும் இடம் பெற்றுவிட்டது.

மதவாதிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் ஜோதிடம் பரப்பப்பட்டது. அவர்கள் சொல்வதை நம்ப வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.

தமிழ் ஓவியா said...


சோதிட அறியாமை


சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும் அக்கறையும் வந்திருக்கிறது? அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்து கொள்ள முடியவில்லை.

அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு அதை (சோதிடத்தை) ஏற்றுக் கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப்படைக் கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.

விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து இட்டுக் கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.

ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்
முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்
(அக்கினிச் சிறகுகள் நூலில்)

தமிழ் ஓவியா said...


ஜெயலலிதா போற்றி வணங்கும் இராம கிருஷ்ண பரமஹம்சரின் கதை


மூளைக் குழப்ப வியாதியால் பைத்தியமாகிவிட்ட கடாதரின் பூர்வாசிரப் பெயர் மாற்றப்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று நாமம் சூட்டப்பட்டு உச்சாணிக் கொம் பில் ஏற்றி வைக்கப்பட்டார். அவரே கூறுகிறார். இறுதியில் தேவியின் ஆணை எனக்கு அருளப்பட்டு விட்டது.

மானுடம் பயன் பெறுவதற்காக உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள் என்று மதப்பைத்தியம் பிடித்த மக்கள் கடாதரரை வேடிக்கை பார்ப்பதற்குக் கூட்டங் கூட்டமாகத் தானேஸ்வரம் தேடிச் சென்றார்கள். படித்த இளைஞர்கள்கூட விவேகானந்தராக ஆகப் போகும் நரேந்திர தத்தா உட்பட அனைவரும் குருவின் காலடியில் அமர்ந்து ஆத்ம தரிசனம் அடைந்தார்கள். நான் படிப்பற்றவன் இருந்தும் என்னைக் காண்பதற்கு மக்கள் இங்கே அலை மோதுகிறார்கள் என்னே விந்தை?

நிரஞ்சன்தர் தனது ஆய்வின் முடிவில் கூறுகிறார் தன்னளவில் ராமகிருஷ்ணர் நேர்மையானவர்தான் ஆனால் அவரது மூளை ஏணல் கோணலாக செயல்பட்டது. அவரது வாழ்க்கை முழுதும் இயற்கைக்கு மாறான நெறிபிறழ்ந்த செயல்கள் மட்டுமே நிரம்பி வழிந்தன. அவரது இயற்கைக்கு மாறான நெறி பிறழ்ந்த செயல்களின் கட்டுமீறிய வெளிப்பாடுகள்தான் அவர் அவ்வப் பொழுது கிறுக்குப் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவது.

அவர் வாழ்ந்த காலத்தில் நவீன நோயாளியான அவரது செயல்களுக்குத் தெய்வீகத் தன்மை கொடுக்கப்பட்டு விட்டது. வாய்ப்பை வளமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் அவரை வைத்து ஆதாயம் அடைந்தது கடாதரர் கடவுளாக்கப்பட்டார். இதில் அவலம் என்னவென்றால் கடாதரரும் தன்னைக் கடவுள் என்று நம்பும் அளவுக்கு நரம்பியல் நோய் தீவிரமாக இருந்தது.

நரம்பியல் நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனுக்குத் தனது உண்மையான நிலவரம் தெரிய வாய்ப்பில்லை. புற்று நோயால் அவதிப்பட்ட ராமகிருஷ்ணர் மரணப் படுக்கையில் கிடந்தார். தனது யோக சக்தியைப் பயன்படுத்தி நோயின் பிடியிலிருந்து மீண்டு கொள்ளுமாறு நரேந்திர விவேகானந்தர் உட்பட அவரது சீடர்கள் அவரை வேண்டினர்.

இராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பொழிப்புரை ஒன்றை எரிச்சலுடன் எடுத்தோதினார். நான் இவ்வாறு வேதனையில் அவதியுறுவது தலைவிதியா என்ன? நோயில் இருந்து விடுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.

ஆனால் தேவியின் திருவுளம்பற்றி னாலன்றோ எனது நோய் தீர முடியும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று இராமகிருஷ்ணர் தணியாத தாகம் கொண்டிருந்தார். ஆனால் புற்றுநோயின் கொடுமையால் நீண்ட காலமாக இழுபறியில் தத்தளித்த அவர் 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று இறந்தார். மிகுதியான யோக சக்திகள் கொண்டிருப்பதாக நம்பப்பட்ட அவரது விருப்பத்தை நிறைவேற்ற யோக சக்திகள் கை கொடுக்கவில்லை.

(இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலில் ஆராய்ச்சி அறிஞர் பிரேம் நாத் பசாஸ்)

தகவல்: பரமத்தி சண்முகம், கரூர்

தமிழ் ஓவியா said...


குருபார்வையும் குருபெயர்ச்சியும்...!



கோபுர தரிசனம்..
கோடி புண்ணியமாம்...?
குரு பார்க்க...
கோடி நன்மையாம்...?
பக்தர்களுக்கு...!
குரு பெயர்ச்சி
கோடி வருமானம்
கோயில்களுக்கு!
கோடி கோடியாய்
குவியுது உண்டியலில்!!
புது பழமொழி
நாதியற்ற நாடாக இருந்தாலும்
நதியற்ற நாடா இருக்கக் கூடாது!
-_ கோ. கலியபெருமாள், மன்னார்குடி

தமிழ் ஓவியா said...

தீர்மானம்

1920ஆம் வருடம் திருநெல்வேலி யில் நடந்த 26ஆவது ராஜீவ் மாகாண கான்பிரன்சின்போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில், ஈ.வெ. ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ்ப் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடிச் சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகங்களிலும் வகுப்பு ஜன சங்கைக்குத் தகுந்தபடி வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண் டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


பூனை கெட்ட சகுனமா?


மனிதர்கள் எந்த காரியத்தை செய்ய வெளியே கிளம்பி னாலும் பாதையின் குறுக்கே ஒரு பூனை கடந்து போனால் உடனே அதை கெட்ட சகுனமாக நினைத்து நின்று விடு வார்கள். உண்மையில் பூனை கெட்ட சகுனமா?

பூனைகள் எப்போதும் மனித சமூகத்தோடு சேர்ந்து வாழ்பவை. மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும் படைகள் மனித நடமாட்டமே இல்லாத நீண்ட காடுகளையும், பாலைவனப் பகுதிகளையும் கடந்து செல்லும். அப்படி போகும் போது தங்கள் பாதையின் குறுக்கே பூனை போவதைப் பார்த்தால் உடனே நின்று விடுவார்கள். காரணம், அருகில் குடியிருப்புகள் இருப்பதை பூனைகள் காட்டுகின்றன. அருகில் உள்ள அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தம்மை எதிரியாக கருதி தாக்குதல் நடத்தலாம். எனவே படை வீரர்கள் சிறிது நேரம் கழித்து, தங்களை தயார் செய்து கொள்வார்கள். எனவே பூனைகள் எதிரியை அடையாளம் காட்டுவதாக மாறின.

இதுவே நாளடைவில் பூனையைப் பார்த்தாலே படை வீரர்களுக்கு எதிரி நினைவு வரும் நிலையை ஏற்படுத்தியது. படை வீரர்கள், பூனையை எதிரியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்சம் காலம் போகப் போக பூனையைப் பார்த்தால் தங்களுக்கு கெட்டதாக, அதாவது தாக்குதல் நடக்கப் போகிறது என்று எண்ணத் தொடங்கினார்கள்.

இந்த எண்ணம் படை வீரர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவர்கள் நாட்டிற்கு வந்த பின்னும் தங்கள் பாதையில் பூனை சென்றால் போருக்கு செல்வது போலவே கெட்ட நிகழ்வாக பார்க்கத் தொடங்கினார்கள். இப்படித்தான் பூனை ஒரு கெட்ட சகுனமாக மாறத் தொடங்கியது.

இன்றைக்கு மன்னர்கள் ஆட்சி செய்யவில்லை. மக்கள் போருக்கு குதிரை மேல் அமர்ந்து போகவில்லை. எல்லாம் மாறி விட்டது. ஆனால் அன்று உருவான பூனை மீதான பயம் மட்டும் இன்னும் தொடர்கிறது. பூனை ஒரு கெட்ட சகுனமாகவே மக்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்து விட்டது. இன்றைய காலத்துக்கு ஒத்துவராத மூடநம்பிக்கை தான் இது.

தினத்தந்தி 29.4.2013
தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம்

தமிழ் ஓவியா said...


மழைக்கு வழி தொழுகையா?


கடும் வறட்சி பருவத்தில் மட்டுமல்ல; மக்களின் அறிவிலும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நாள்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்தில் ஜாடையாம் பட்டி என்னும் குக்கிராமம். 300 குடும்பத்தினர் அவ்வூர் மக்கள். என்ன செய்தார்கள்?

தத்தம் வீடுகளைப் பூட்டி விட்டு ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர் (23.5.2013).

எதற்காக அப்படிச் சென்றார்களாம்? ஊரைக் காலி செய்துவிட்டு வெளியே சென் றால் மழை கொட்டுமாம் - வறட்சி நீங்குமாம். அப்படி ஒரு மூடநம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு.

மூடநம்பிக்கைகளில் உள்ள பலப்பல ரகங்களை நினைத்துப் பார்த்தால் நகைச்சுவை மட்டுமல்ல; பாழும் மூடநம்பிக்கையால் இந்த 2013ஆம் ஆண்டிலும்கூட நம் மக்கள் அறிவைப் பயன்படுத்த மறுக்கிறார்களே என்ற பரிதாப உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது. பெரம்பலூரில் நூற்றுக்கணக்கான முசுலிம் மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளனர். மழை வேண்டி. (குடையை எடுத்துக் கொண்டு போகவில்லை).

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம். கல்யாணப் பத்திரிக்கை அடித்து - பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து முறைப்படி கல்யாண மந்திரங்களை ஓதி நடைபெறுகிறது.

அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். இப்படி எல்லாம் செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையாம். ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் செல்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாவது மழை பொழிந்ததா - வெப்பம் குறைந்ததா? குடிநீர் கிடைத்ததா?

இன்னும் சில இடங்களில் வருண பகவானை வேண்டி யாகம் நடத்துகிறார்கள். அமிர்த வர்ஷினி ராகத்தை இசைக்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஆட்சியில் புழல் ஏரியில் நின்று கொண்டும் சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளத்திலும் குன்னக்குடி வைத்தியநாதய்யர் அம்ச வர்த்தினி ராகத்தில் வயலின் வாசித்த துண்டு; விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை.
இந்த ராகத்தில் பாடினால், பிரார்த்தனை தொழுகை நடத்தினால் வருண பகவான் மனமிரங்கி மழையைக் கொட்டுவார் என்ற நம்பிக்கையாம்.

ஒரு கேள்விக்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். கருணையே வடிவானவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் மதவாதிகள், பக்தர்கள் கூறுகிறார்கள். அது உண்மையானால், பிரார்த்தனை செய்தால்தான் மழையைக் கொடுப்பாரா? தொழுகை செய்தால் தான் கடவுளின் கருணைக் கண்கள் திறக்குமா?

மாடுகூட பால் நினைந்தூட்டும் என்று சொல்கிறார்கள் - பகவானுக்கு அந்த ஈர நெஞ்சம் இல்லாது போனது ஏன்?

காரணம் தெளிவானது - கடவுள் என்ற ஒன்று இல்லை - அதனால் மழையைக் கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை!

மழை எப்படி பொழிகிறது? அதற்கான அறிவியல் காரணம் என்ன? என்பதை நான் காம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனையோ, சிறுமியையோ கேட்டால் பட்டென்று பதில் சொல்லி விடுவார்கள்.

மதப்பாசி ஏறிய மதியுடையோர் அறிவைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் மவுடீகத்தைப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய மூடநம்பிக்கை வழிகளைப் பின்பற்றுகின்றனர்.

யாகம் நடத்தி நெருப்பை வளர்க்க மரங் களை வெட்டிப் போடுவதற்குப் பதிலாக, மரங்களை வளர்த்தால், ஏரி, குளங்களைத் தூர் செய்து வைத்திருந்தால், நிலத்தடி நீரைக் காப்பாற்றி வைத்தால், தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இடம் இருக்காதே!

மரங்களைக் கும்பிடுவதைவிட்டு மரங்களை வளர்க்க முனையுங்கள். அதுதான் மழையைக் கொடுக்கும் - மறவாதீர்கள்! 25-5-2013

தமிழ் ஓவியா said...


காவிரி கண்காணிப்பு தற்காலிகக் குழு அமைப்பு காவிரி மேலாண்மைக் குழு எப்பொழுது?


புதுடில்லி, மே 25- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படு வதற்கு முன்னோடியாக, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காவிரி நதிநீர் பங்கீட் டில் சம்பந்தப்பட்ட தமி ழகம், கருநாடகா உட் பட 4 மாநிலங்களின் தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப் பட்டது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணை யத்தையும் உடனடியாக அமைக்க மத்திய அர சுக்கு உத்தரவிட வேண் டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.எம். லோதா, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் மாதத்தில் பயிர் சாகுபடி தொடங்க இருப்பதால், இந்த 2 குழுக்களையும் மத்திய அரசு எப்போது அமைக்கும் என்பதை யும், எவ்வளவு அவகா சம் தேவை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை தற்காலிக மாக காவிரி கண்காணிப்பு குழு அமைக்க வேண் டும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கரு நாடகாவைச் சேர்ந்த தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவுக்கு மத்திய நீர் வளத் துறை செயலாளர் தலைமை ஏற்க வேண் டும் என்று உத்தர விட் டனர்.

அதன்படி, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. இக் குழு வில் தமிழகம், கரு நாடகா உட்பட 4 மாநி லங்களின் தலைமை செயலாளர்கள் உறுப் பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மத்திய நீர் ஆணை யத்தின் தலைமைப் பொறியாளர், இந்த குழுவின் உறுப்பினர்- செயலாளராக இருப்பார்.

கண்காணிப்பு குழு வின் தலைமையகம், டில்லியில் செயல்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, இது முற்றி லும் ஒரு தற்காலிக நட வடிக்கை என்று மத்திய அரசு கூறி உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல் படுத்தும் பொறுப்பை இந்த கண்காணிப்பு குழு கவனிக்கும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட் டால், மேற்பார்வை குழுவின் தலைவரோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களோ உச்ச நீதிமன்றத்தில் அணுக லாம். மற்ற மாநிலங் களுக்கு எதிராக உத் தரவை பெறலாம்.

புதிதாக அமைக் கப்பட்ட காவிரி நீர் கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம், ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவித்து உள்ளன.

நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தும் பணியில், இது ஒரு மிகப்பெரிய நடவடிக் கையாக கருதப்படுகிறது.

தமிழ் ஓவியா said...


நமது பணி...


மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கை களைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக் குவதே நமது முக்கிய வேலை.

(விடுதலை, 2.4.1973)

தமிழ் ஓவியா said...


தமிழ் சுயராஜ்யா


பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிற தென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளைப்போல் பார்ப்பனரல்லா தாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பனரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல்லாதாரின் க்ஷீணத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வருவதை உலகமறியும்.

சின்னாட்களுக்குமுன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. சுயராஜ்யா பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது. ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார் வீடுதோறும் அலைந்து திரியும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சுயராஜ்யா பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமியிருந்த பார்ப்பனரல்லாதவர் களன்று. இதைப்பற்றி திராவிடன் கூறியுள்ள முத்து போன்ற எழுத்துக்களைக் கவனிப்போம்.

தமிழ் சுயராஜ்யா அற்பத்தனமாயும் அயோக்கியத் தனமாயும் எழுதத் துவங்கிவிட்டது மிகவும் வருந்ததக் கதாகும். உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சௌந் தரிய மகாலில் பெருந்திரளாய்க் கூடியிருந்தவர்கள் அனைவருமாம். வீடுதோறும் பிறப்புக்கும், கலி யாணத்துக்கும், இழவுக்கும் அழையா விட்டாலும் நாய்போல் வந்து பல்லைக் காட்டி அரையணா, ஒரு அணா பெற்றுப் பொறுக்கித் தின்பவர்கள் பார்ப்பனர் களே, நிருவாகசபை உத்தியோ கங்கள் முதல், கேவலம் செருப்புத் துடைத்தல், கும்ப கோணம் வேலையில் ஈடுபடல் ஆகிய இழிதொழில்கள் செய்து கால்களை நக்கிப் பொறுக்கித் தின்று வயிறு பிழைப்பவர்கள் பார்ப்பன மாக்களேயன்றி பார்ப்பனரல்லாத மக்களல்ல.

இதைப்பார்த்த பின்னும்- இவ்வாறு அந்த பார்ப்பனப் பத்திரிகையால் பார்ப்பனரல்லாதாரை ஏழேழு ஜென்மத்திற்கும் மறையாத மாசுடையோராய் இழித் துரையாடப் பெற்ற நக்கிப் பொறுக்கிகள் என்ற வார்த்தையைக் கேட்டபிறகும் - தன் நரம்பிலே பார்ப்பனரல்லாதாரின் சுத்த ரத்தம் ஓடப் பெறும் எவராவது - பார்ப்பனரல்லாதாராய்ப் பிறந்த எந்த ஆண்மையுடையோராவது இனி சுயராஜ்யாப் பத்திரி கையை கையில் தொடுவாரா? கண்ணில் பார்ப்பாரா? மானம், வெட்கம், ரோஷம், சுயமதிப்பு உடைய எந்த பார்ப்பனரல்லாதாரும் இனி அப்பத்திரிகையைப் பார்க்கவும் தொடவுமாட்டார்களென்றே நம்புகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 18.07.1926

தமிழ் ஓவியா said...

தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி

தமிழ்நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர்கள் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச்சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசி யில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலா சாலை ஏற்படுத்த வேண்டு மென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.

இக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக் கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணிவேர் நுனி வரை நுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழி யெனக்கொண்டு, தமிழையே உயிரினும் பெரியதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந்தொண்டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார்,, ந.மு.வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா.பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும், தமிழுக்கும் உள்ள பேதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலேயே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 01.08.1926

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்



அச்சம்

செய்தி: திருப்பதி கோயில் நகைகள் அனைத் தும் சரியாகவே உள்ளன. பக்தர்கள் அச்சம் அடைய வேண்டாம்.

- திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை

சிந்தனை: இந்த அறிக் கையைப் பார்க்கும்பொழுதே அச்சப்பட வேண்டிய அள வுக்கு ஏதோ நடந்திருக் கிறது என்பது புரிகிறதே!

தமிழ் ஓவியா said...

முக்கிய தகவல் கல்லீரல் புற்று நோயை தடுக்க தடுப்பூசி



சென்னை, மே 26- சர்வதேச ஜீரண (கேஸ்ட் ரோஎன்டராலஜி) ஆரோக்கிய தினம் ஆண்டு தோறும் மே மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக கேஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் இயக்குனர் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி, இந்திய கேஸ்ட்ரோ என்டராலஜி சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் வி.பாலசுப்பிர மணியன் ஆகி யோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நோய் வர காரணமாக இருப்பது உடல் பருமன், சர்க்கரை நோய், மது அருந்துவது மற்றும் ஹெபடைடஸ் பி, ஹெபடைடஸ் சி வைரஸ்தான். கல்லீரலை சுற்றி கொழுப்பு படர்ந்து அதனால் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஹெபடைடஸ் பி வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஹெபடைடஸ் சி வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. தற்போது தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு ஹெபடைடஸ் பி தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.1000 மட்டுமே செலவு ஏற்படும்.

இதுவரை ஹெபடைடஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இதனால் கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

தமிழ் ஓவியா said...


என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை மத்திய அரசுக்கு கலைஞர் எச்சரிக்கை


என்.எல்.சி. நிறுவன பங்குகளைத் தனியா ருக்கு விற்க முற்படுவது, தமிழர்களை வீண் வம் புக்கு இழுக்கும் செயல் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கலைஞர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மே 23-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதி னார். அந்தக் கடிதத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வும், அது கூடாது என்று எழுதியுள்ளார்.

ஆனால் என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கை வலியுறுத்தி 2012 ஏப் 21-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.

ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வு காண மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று மட்டும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.

ஒப்பந்தத் தொழி லாளர்கள் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் நாள் கணக்கில் பேச்சு வார்த்தை நடந்ததே தவிர, முதல்வரோ, அமைச்சர்களோ இதில் ஈடுபடவில்லை.

இறுதியாக இந்தப் போராட்டம் 2012 ஜூன் 5 -ஆம் தேதி முடிவுற்றது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் நாரா யணசாமி என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.

இந்தக் கருத்து புதுவை உள்பட தமிழ கத்துக்கும், குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமானதாகும். எனவே, என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது.

அது தேவையின்றி, தமிழர்களை, குறிப்பாக நெய்வேலி தொழிலாளர் களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல்.

அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு, மேலும் ஓர் எதிர்ப்பை தேடிக் கொள்ள வேண்டாம் என கலைஞர் எச்சரித் துள்ளார்.

தமிழ் ஓவியா said...


கா. அப்பாதுரையார்


பன்மொழிப் புலவர் என்று சொன்னால் முதன்மையாக கா. அப்பாதுரையார் அவர் களைத் தான் குறிக்கும். அவரது ஏழாம் பாட்டனார் 40 மொழிகளை அறிந்தவர் என்றால் நம் அப்பாதுரையார் 10 பத்து மொழிகளில் பண் பட்ட புலமையாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 170 நூல்களை யாத்தவர் இவர். ஜஸ்டிஸ் லிபரேட்டர், திராவிடன், விடுதலை முதலிய ஏடுகளில் பணியாற் றியவர் ஆவார். இவர் சென்னை வருவதற்கு முதற் காரணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்கள்.

இவர் எழுதிய இந்தியா வில் மொழிச் சிக்கல் எனும் ஆங்கில நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கம் முன் னுரை எழுதினார் என்றால், அது என்ன சாதாரணமா?

சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அ. சிதம்பரநாதர் அவர் களின் தலைமையில் தொகுக் கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் துறையில் இணை ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையும் பன்மொழி புலவருக்கு உண்டு.

தந்தை பெரியார் அவர் களிடம் நெருக்கமான தொடர்பு இருந்தது. திராவி டர் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆகும் அள வுக்குக்கூட அவர் பேசப்பட்ட துண்டு. தென் சென்னையில் கழகத்தை வளர்க்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் என்றால் யாருக்கும் ஆச் சரியமாக இருக்கலாம்.

மதச் சார்பற்ற முறையில் குறளுக்கு ஓர் உரையினை எழுதுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொள்ள, முப்பால் ஒளி எனும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி திருக்குறளுக்கு விளக்க வுரை எழுதினார். இருபது அதிகாரங்களுக்கு அவர் எழுதிய உரை ஆறு தொகுதி யானது.

திராவிடர் இயக்க ஆர்வ லரும், பதிப்பக உரிமையாளரு மான வெள்ளையம்பட்டு சுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் கா. அப்பா துரையார் குறிப்பிடும் கருத் தினை வெளியாக்கியுள்ளார்.

மொழி வகை மூன்று

1) திராவிட மொழிக் குடும்பம்

2) ஆசியாவை உள்ளடக் கிய ஆரிய மொழிக் குடும்பம்

3) மேலை நாட்டார் மொழிக் குடும்பம் அறிஞர் கால்டுவெல், மறைமலை அடிகளார், தேவ நேயப்பாவாணர் மூவரும் தமிழ் தந்த மூவர் என்றார்; படித்தவர்களைவிட தந்தை பெரியார் சிந்தனையும் செய லாற்றலும் மிக மிகச் சிறந்தது - ஈடு இணையற்றது என்று குறிப்பிடுகிறார் புலவர்.

சென்னை பெரியார் திடலில் சங்கராச்சாரி யார்? எனும் தொடர் சொற் பொழியை ஆறியவர் அன் றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள். ஒரு தொடருக்கு அப்பாதுரையார் தலைமை வகித்தார் (5.6.1983) அப்பொழுது அவர் சொன்னார்.

ஆதி சங்கரர் எழுதிய மனேசாப் பஞ்சகம் எனும் நூலில் கடவுள் மறுப்புக் கூறப்பட்டுள்ளது. மதச் சடங்குகள் கூடாது, உருவ வணக்கம் தவறு என்றும் ஆதிசங்கரர் கூறியுள்ளார் என்று குறிப்பிட்ட அப்பாதுரை யார் ஆதி சங்கரரைக் கொன்றது பார்ப்பனர்களே என்கிறார்.

கா. அப்பாதுரையின் நினைவு நாள் இன்று (1989).

- மயிலாடன்

குறிப்பு: முகம் மாமணி எழுதிய அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் நூலினைப் படியுங்கள்.

தமிழ் ஓவியா said...


இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதா? தமிழர் தலைவர் கண்டனம்!


இலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது பொன் முட்டை யிடும் வாத்தினை அறுப்பதாகும். இந்த முயற்சியினை மத்திய அரசு கைவிட வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது லாபந்தரும் பொதுத்துறை நிறுவனம். நவரத்தினங்களில் ஒன்று. முன்பே 10 சதவிகித பங்குகளை விற்கும் யோசனை வெளிவந்தபோது, திராவிடர் கழகம், அதுபோலவே தி.மு.க. அத்துணைக் கட்சி தொழிற் சங்கங்கள் எல்லாம் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின! தி.மு.க. அய்க்கிய முற் போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்தது; அதன் விளைவு அன்று இத்திட்டம் கை விடப்பட்டது.

மீண்டும் இப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழி போல் 5 சதவிகிதப் பங்கினை விற்கும் ஆபத்தான யோசனை முளைவிட்டுக் கிளம்பியுள்ளது.

இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமல்ல; அ.தி.மு.க.வும் தமிழக அரசும் அதன் தோழமைக் கட்சிகளும்கூட இதனை எதிர்த்துள்ள நிலையில், இந்த வகை யில் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, (காங்கிரஸ்) தேவையின்றி தமிழ் நாட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அழித்துக் கொள்ள முடிவு செய்து விட்டது போலும்!

நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தைக்கூட லாபத்தில் இயங்க வைக்க முன் வருவதுதான் ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, லாபத்தில் இயங்கும் நிறுவனப் பங்குகளை இப்படி தனியாருக்குத் தாரை வார்ப்பதா?

பொன் முட்டையிடும் வாத்தினை கொல்லும் பேதைமைத்தனம் அது என்பதல்லாமல் வேறு என்ன?

எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

கொள்கை முடிவுகள் கோணல் இல்லாமல் இருக்க வேண்டும்; தனியார் கொள்ளைக்குக் கதவு திறந்து விடுவதாக இருக்கக் கூடாது!

சென்னை
26.5.2013

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்