Search This Blog

27.5.13

ரஷிய யாத்திரையில் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை! - பெரியார்

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்
தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும் என்று தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு ஐரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என் கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.

நாம் இந்த 7, 8 வருஷ காலமாகவே படிப்படியாய் முன்னேறி வந்திருக் கின்றோம் என்பதை நமது இயக்க வேலையை முதலில் இருந்து கவனித்து வந்திருப்பவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.

சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பாக நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் எது மக்களுக்கு நன்மையானது என்று கருதினாலும் அதையெல்லாம் அரசாங்கத்தைக் கொண்டே செய்யச் சொல்லி கெஞ்சுவோம். அதற்கு பார்ப்பனர்களையே தரகர்களாய் வைத்து அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் திரிவோம், அவர்கள் சொல்லுவதையே நன்மை என்று கருதுவோம். அன்றியும் அது அரசாங்கம் வேறு பார்ப்பனர்கள்வேறு என்று சொல்ல முடியாத காலமாய் இருந்தது. அந்தக் காலத்தில் பெரும் பணக்காரன், ஜமீன்தாரன், மீராசுதாரன் என்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் காலடியில்தான் கிடந்தார்கள். அதிலிருந்து ஒரு பெரும் புரட்சி உண்டாயிற்று. அது தான் ஜஸ்டிஸ் கட்சி புரட்சி என்பது. அது தோன்றிய பின்பு பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும் பார்ப்பன ரல்லாத படித்தவர்கள் என்பவர்களுக்கும் சற்று செல்வாக்கு தோன்றிற்று. பார்ப்பனர் களையே நம்பி இருந்த அரசாங்கமானது பார்ப்பனரல்லாதாரைத் தட்டிக் கொடுத்து அவர்கள் ஆதரவில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் பயனாய் பார்ப்பனர்கள் அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுக்கக்கருதி பார்ப்பன ரல்லாத பாமர ஜனங்களை வசியம் செய்யத்தக்க சில புதிய சூக்ஷிகளைக் கையாள ஆரம்பித்தார்கள். அதன் பயனாய் பார்ப்பனர்கள் தன்மை இன்னது என்றும் அரசாங்கத்தின் தன்மை இன்னது என்றும் ஓரளவுக்கு வெளியாயிற்று. பிறகு அவை ஒரு புரட்சியாய் ஆயிற்று. அந்த இரண்டுவித கிளர்ச்சியும் சுயநலங்களையே அதாவது முன்னணியிலிருந்து கிளர்ச்சி செய்பவர்கள் அதிகாரமும் பதவியும் பெருவழியும் கவலை கொண்ட பாமர மக்களை ஆயுதமாக வைத்து போர் நடத்தியதால் இரண்டும் பலமற்று ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுவதும் மறுதடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதுமாக நிலையில்லாமல் இருந்து வந்தது. இந்த மாதிரியில் ஜஸ்டிஸ் கட்சி என்பதும் ஒரு தடவை நல்ல தோல்வியடைய வேண்டி ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பம் நமக்கு நல்ல சந்தர்ப்பமாய் கிடைத்ததால் நாம் சமூக வாழ்க்கையில் ஒரு கிளர்ச்சி செய்ய முடிந்தது. இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காத பக்ஷம் நமது வேலைக்கு அவ்வளவு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.

ஏனெனில் பார்ப்பனரல்லாதார்கள் ஜாதி வித்தியாசங்களையும் அதற்கு ஆதாரமான மத சம்பிரதாயங்களைப் பற்றியும் இவ்வளவு தூரம் கிளர்ச்சி செய்ய சம்மதித்து இருக்கவேமாட்டார்கள். பார்ப்பனரல்லாதாரியக்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்து மறுபடியும் அது வெற்றியாவதற் குள் சுமார் 4 வருஷ காலத்துக்குள் அபரிமிதமான காரியங்களைச் செய்திருக் கிறோம். இதை சமூக சம்பந்தமான ஒரு புரட்சி என்றே சொல்லவேண்டும்.

இப்பொழுது மேல்கண்ட அரசியல் கிளர்ச்சியும் சமூகக் கிளர்ச்சியும் நடத்தப்பட்டது போலவே தான் இப்போது பொருளாதாரத் துறையிலும் ஒரு கிளர்ச்சி செய்ததாக வேண்டியிருக்கின்றது. இது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதைப் பற்றி நாம் கலலைப்பட வேண்டியதில்லை. இது நியாயமா? அநியாயமா? அல்லது அவசியமா? அவசியமற்றதா? என்று தான் பார்க்கவேண்டும். அரசியலைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ சமூகத்தில் ஜாதி மதங்களைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ அவைகள் எல்லாம் இன்றைய பொருளாதார இயலிலும் இருப்பதைக் காங்கின்றோம். எப்படி அரசாங்கம் என்பதற்காக சில மக்களின் உழைப்பு வீணாகின்றதோ, எப்படி மேல் ஜாதியான் என்பதற்காக சில ஜனங்கள் இழிவு படுத்தப்படுகின்றார்களோ அதுபோலவே தான் பணக்காரன் முதலாளி என்பதற்காக பல மக்களின் உழைப்பு வீணாக்கப்படுவதுடன் இழிவு படுத்த வும் படுகிறார்கள். இந்தக் காரணங்களால் பொருளாதார இயலில் ஒரு பெரும் கிளர்ச்சி செய்யவேண்டியது இப்போது அவசியமாகின்றது. இது இன்று நமது நாட்டுக்கு மாத்திரம் அவசியம் என்று காணப்பட்டதாக நினைக் காதீர்கள். இன்று உலகில் எங்கும் இவ்வுணர்ச்சி பரவி தாண்டவமாடுகின்றது.

ரஷியா தேசத்தில் இவ்வுணர்ச்சி தோன்றி பெரும் புரட்சியாக மாறி வெற்றி பெற்று இன்று காரியத்தில் நடைபெற்றும் வருகின்றது. ரஷியாவில் அரசியல் ஆதிக்கமோ ஜாதிமத ஆதிக்கமோ செல்வவான் ஆதிக்கமோ ஒன்றுமே கிடையாது. அந்த நாட்டிலுள்ள வாலிபர்களுக்கு அரசியல் என்றால் என்ன மதம் என்றால் என்ன ஏழை பணக்காரன் என்றால் என்ன என்கின்றவைகளுக்கு அருத்தமே தெரியாது.

மனிதரில், வாழ்க்கையில், கவலையில், பொருப்பில் ஒருவருக் கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் அறியார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இங்கும் ஏற்படுவதில் யாருக்கும் எவ்வித கஷ்டமோ நஷ்டமோ இருக்காது. பணக்காரனென்றும் மேல் ஜாதிக்காரன் என்றும் அரசன் என்றும் சொல்லிக் கொள்ளப்படுவதில் ஒருவித செயர்க்கை திருப்தி ஏற்படுவதைத் தவிர இவற்றின் பயன்களால் இவர்கள் கவலையற்று, அதிருப்தியற்று சாந்தியாய் மனச் சமாதானமாயிருக்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

உலகம் தோன்றிய காலம்தொட்டு இதுவரை எத்தனையோ பேர் சாதாரண மனுஷர்களாகவும் ரிஷிகளாகவும், மகான்களாகவும் அவதார புருஷர்களாகவும் தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகவும் ஏற்பட்டு மக்கள் சமூக நன்மைக்காக என்று எவ்வளவோ காரியங்கள் செய்தாகி விட்டது. இவற்றால் வாழ்வில் மனிதனுக்கு எவ்வித சௌகரியமோ உயர்வோ ஏற்பட்டதாக சொல்வதற்கில்லை. இது மாத்திரமல்லாமல் மனித சமூக நன்மைக்காக, நல்ல வாழ்வுக்காக, முன்னேற்றத்திற்காக என்று எவ்வளவோ மதங்களும் அரசாட்சிகளும் சீர்திருத்தங்களும் தோன்றின. அவைகளும் இன்றை வரை எந்த ஆட்சியிலோ, எந்த மதத்திலோ எந்த சீர்திருத்தத்திலோ ஏதாவது ஒரு காரியம் சாதித்ததாக காணப்படவேயில்லை.

மக்களுக்கு சுக துக்கம் பொது என்றும் ஒருவன் சுகப்படுவதும் ஒருவன் கஷ்டப்படுவதும் இயற்கை என்றும் இவையெல்லாம் கடவுள் செய லென்றும், மாற்றமுடியாதவை என்றும் சொல்லப்பட்டு அந்தப்படியே மக்க ளையும் நம்பச்செய்து சிலர் கஷ்டப்படவும் சிலர் சுகப்படவுமான முறைகள் நிலைநிறுத்தப் பட்டனவே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

இன்றைய தினம் இருந்து வரும் எந்த அரசியலை, எந்த மத இயலை, எந்த செல்வ இயலைக் கொண்டும் மேல்கண்ட அக்கிரமங்களை ஒழித்து விடக்கூடும் என்றோ மக்கள் யாவரையும் சமமாக ஆக்கிவிடக்கூடும் என்றோ நினைப்பது முட்டாள் தனமேயாகும், ஆதலால் ஏதாவதொரு புதிய முறையைக் கொண்டுதான் ஆகவேண்டும். அதைப்பற்றி பிறத்தியார் என்ன சொல்லுவார்கள் என்கின்ற கவலையை சிறிதும் வைக்கக்கூடாது. அது கிளர்ச்சி என்று சொல்லப்பட்டாலும், புரட்சி என்று சொல்லப்பட்டாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. கிளர்ச்சியும் புரட்சியும் உலக இயற்கை, மனித இயற்கை, நடப்பு இயற்கை. கிளர்ச்சியிலும், புரட்சியிலும் பிரிக்க முடியாமல் கலந்து இருக்கிறான் என்பதை ஒவ்வொரு மனிதனின் நடப்பையும், உணர்ச்சியையும் கவனித்துப் பார்த்தால் விளங்கிவிடும் நாம் எவ்வித சுயநலத்தையோ பலாத்காரத்தையோ குறிவைத்து இப்படி பேசவில்லை. ஆனால் மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து சகிக்க முடியாமல் பரிதாபத் தாலேயே தான் இப்படிப் பேசுகிறோம்.

--------------------------------- 28.02.1933 இல் விருதுநகர் அம்மன் கோவில் முன்பு சுயமரியாதை சங்க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள்  ஆற்றிய உரை,”குடி அரசு” - சொற்பொழிவு - 12.03.1933

22 comments:

தமிழ் ஓவியா said...


ஓடி விளையாடும் ஆட்டமா?


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுப்பதும், அதனை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கண்டனக் குரல் கொடுப்பதும், திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பதும் வழமையான ஒன்றாகி விட்டது. ஓடி விளை யாடும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

2004ஆம் ஆண்டில் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போதே குறைந்தபட்ச செயல் திட்டம் (Common Minimum Programme) ஒன்று அறிவிக்கப்பட்டதே நினைவிருக்கிறதா?

இலாபம் தரும் பொதுத் துறை நிறுவ னங்கள் எதுவும் அரசின் கையை விட்டுப் போகாது; அதன் பங்குகளை விற்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அதில் கூறப்பட்டதே - மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா?

பிரதமர் உள்ளிட்டவர்கள் இதுபற்றியெல்லாம் பொறுப்போடு சிந்திக்க வேண்டாமா? அரசு ஒரு வார்த்தையைச் சொன்னால் அதனைக் காப்பாற்றும் பண்பாட்டைக் கை கொள்ள வேண்டாமா?

1930இல் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டு கர்ம வீரர் காமராசர் அவர்களின் முயற்சியினால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட் டுக்குக் கிடைத்தது!

டி.டி.கே. போன்ற பார்ப்பனர்கள் இது பயன்படாத திட்டம் என்று சொன்ன நிலையில், வெளிநாட்டு நிபுணர்கள் சிறந்த திட்டம் என்று கூறினர்.

1957இல் தொடங்கப்பட்டாலும், அது இலாபம் தரும் நிறுவனமாக மாறியது - 1976ஆம் ஆண்டு முதல்தான். 1976இல் கிடைத்த லாபமும் வெறும் மூன்று கோடி ரூபாய்தான்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஆந்திரா, கருநாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் வரை - இந்த நெய்வேலி அனல் மின்சாரத்தால் தான் வெளிச்சம் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

தனக்கு மிஞ்சிதான் தான தருமம் என்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதெல்லாம் பழைய மொழிதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்பது என்பது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது.

பிஜேபி ஆட்சியில் இருக்கும் பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு தனித்துறையும், அதற்கென ஓர் அமைச்சருமே இருந்து வந்தார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியானாலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் பொருளாதாரக் கொள்கையில் சம எடை உள்ளவர்களாகவே இருந்து வருகின்றனர்.

சோப்பு, சீப்பு விற்க வந்த வெள்ளைக்காரன், பிறகு இந்தியாவையே 350 ஆண்டுகள் வரை ஆண்டான்; அவனை விரட்டி சுதந்திரம் பெற்றதாக மார் தட்டினோம்.

இப்பொழுது என்னடா என்றால் சோப்பு, சீப்பு, காய்கறிகள், மளிகை சாமான்கள் வரை விற்பதற்கு வெளிநாட்டுக்காரர்களை சிகப்புக் கம்பளம் போட்டு, பூர்ண கும்பமும் அளித்து, வரவேற்கத் தயாராகி விட்டோம்! இதற்குப் பெயர் சுதந்திர நாடாம்.

புதிய பொருளாதாரம் என்பதன் உண்மை யான பொருள் என்னவென்றால் ஒரு நாட்டின் சுதந்திரத்தை சூட்சமமான முறையில் இன்னொரு நாட்டுக்கு விலை பேசுவதே!

தனியார்த் துறைகளில் இருந்தவற்றை நாட்டுடைமையாக்குவது தான் சோசலிசம் என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை, அதன் பங்குகளை தனியா ருக்கும், வெளிநாட்டுக் காரர்களுக்கும் விற்பது என்ற தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது என்ன இசமோ தெரியவில்லையே!

மக்கள் விழிப்புணர்வுதான் இதற்கெல்லாம் முடிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மையாகும். 27-5-2013

தமிழ் ஓவியா said...


பிள்ளையார் உடைப்பு!


1953 - இதே நாளான மே 27 இல் தமிழ்நாடே - ஏன் இந்(து)திய நாடே திடுக்கிடக் கூடிய ஒரு போராட்டத்தை நடத்தி யவர் தந்தை பெரியார்.

ஆம்! பிள்ளையார் உடைப்புப் போராட்டம் தான் அது. புத்தர் விழா வில் தந்தை பெரியார் பேசிய உரையை ஒலி பரப்புவதாக ஒப்புக் கொண்டு ஒலிப் பதிவும் செய்த அகில இந்திய வானொலி நிலையம், உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. நட்டக் கணக்குப் பெரியார் வரலாற்றுப் பேரேட்டில் ஏது? முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார். புத்தர் ஜெயந்தியன்று நாடெங் கும் பிள்ளையார் பொம் மைகளை உடையுங்கள் கழகத் தோழர்களே என்று ஆணையிட்டார்.

ஆட்சியோ ஆச்சாரி யாருடையது - பொது மக்கள் பார்த்துக் கொள் வார்கள் என்று வன் முறைக்குத் தூபம் போட்டார். ஆனாலும் அய்யா அவர்கள் அறிவித்த வாறே நடத்தியும் காட் டினார்.

இவ்வளவுப் புரட்சிகர மான போராட்டத்தை நடத்தினாலும் தந்தை பெரியார் எப்படி வழி காட்டினார்? போராட்டம் என்றாலே வன்முறை வெறியாட்டம் என்ற அகராதியைத் தயாரித் துள்ள தலைவர்கள் (?) தெரிந்து கொள்ள வேண் டும்.

இதோ பெரியார் கூறுகிறார்:

விக்ரகங்களை உடைக் கிறேன் என்றவுடன் கோயிலுக்குள் போய் புகுந்துஉடைப்போம் என்று யாரும் கருத வேண்டாம்; இந்தப்படி கோயிலுக்குள் புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்சத் தேவையில்லை - கோயிலுக்குள் யாரும் போக மாட்டோம். குயவரிடத்தில் மண் கொண்டு வந்து இன்றைய கோயி லில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச் சொல்லி, அல்லது கடை களில் விற்கிறதே, வர்ணம் அடித்த பொம்மை கள், அதைக் கடையிலே வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு நடு ரோட்டிலே போட்டு உடைப் போம்! (விடுதலை 4.5.1953) என்றார்.

வருணாசிரம ஜாதி ஏற்பாட்டையும் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட கடவுளையும் எதிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இந்தப் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் என்ற முறையில் நடத்தப்பட்ட போராட்டம் இது. - மயிலாடன் 27-5-2013

தமிழ் ஓவியா said...


பாராட்டத்தக்க பகுத்தறிவாளர் நியமனம்! கர்நாடக அரசின் அட்வகேட் - ஜெனரலாக சட்டமேதை ரவிவர்மக் குமார் நியமனம்!


பெங்களூரு - 27.5.2013 கர்நாடகாவின் மேனாள் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான சட்டமேதை பேராசிரியர் ரவிவர்மக்குமார் அவர்கள் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞராக (Advocate General) அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று நாள்களுக்கு முன் பொறுப்பேற்றார்.

அவருக்குக் கழகத் தலைவர் அவர்கள் தொலை பேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்!

சமூக நீதி வழக்குரைஞர் ஃபோரத்தின் டிரஸ்டிகளில் ஒருவர் இவர்.

சிறந்த சமூக நீதியாளர். அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும். கி.வீரமணி சமூக நீதி விருது இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனன் செத்தான்


நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட்டோமானால், கொல்லுவாரின் றியே பார்ப்பனன் செத்தான்.

(விடுதலை, 14.3.1970)

தமிழ் ஓவியா said...


கடமை வீரர் மனோகரனுக்கு நமது புகழ் அஞ்சலி!


எத்தனை பேர் நம் நாட்டில் கடமையாற்றுவதில் தவறாதவர்கள்? என்ற ஒரு கணக்கெடுத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்! பெரும்பாலும் பணியாற்றும் பலரும் - எந்த நிறுவனமும் நம் நாட்டில் எளிதில் விலக்கல்ல - கடியாரத்தையும் காலண்டரையும் தான் பார்த்துப் பணியாற்றுகிறார்களே தவிர, தங்கள் மனச் சாட்சிக்குக்கூட அவர்கள் நீதி வழங்குவதில்லை! எப்போது இடை வெளி - மணி - வருவதேகூட கால தாமதம் பல சாக்குப் போக்குகள்! சமாதானங்கள்! விளக்கங்கள் - வியாக்யானங்கள் இத்தியாதி! இத்தியாதி!

நெருக்கடி நிலை பிரகடனத்தைக் கூட இன்னமும் நம் வயதானவர்கள் சிலர் சிலாகித்துப் பேசுவதற்கே ஒரு முக்கிய காரணம் - அப்போது எல்லாம் அரசு பணிமனைகள் சரியாக இயங்கின. எவரும் தாமதித்து வர மாட்டார்கள். லஞ்சம் கேட்டதில்லை. திருமணங்களைக்கூடச் சிக்கனமாக நடத்தினர்; காரணம் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளைக்கூட அதிகாரிகளை விட்டு கணக்கெடுத் தது அரசு - அபராதம் - சிறை வருமே என பயந்து எல்லோரும் கடமையாற்று வதில் கண்ணும், கருத்துமாக இருந்தனர் என்பர்.
உண்மைதான்!

மனிதர்களுக்கு சுதந்திரக் காற்று - சுயக்கட்டுப்பாடும் அல்லவா தனி அடையாளம் - அவர்களது ஆறாம் அறிவு காரணமாக. அதை விடுத்து எப்போதும் கட்டுப்பாடு! கடுமையான அடக்குமுறை இருந்தால்தான் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க முடியும் என்றால் அது என்ன வாழ்க்கை? சிறைக்கூட வாழ்வு அல்லது சர்க்கஸ் கூடார மிருக வாழ்க்கை! இல்லையா?

தானே கடமையாற்றும் நல்லவர் பலர் இன்னும் நாட்டில் இல்லாமல் இல்லை!

இதோ ஒரு அருமையான உடல் புல்லரிக்கும் செய்தி. கடமையாற்றி விட்டு உயிரைவிட்ட ரயில் என்ஜின் ஓட்டுனர் மனோகரன்!

இதோ அந்தச் செய்தியைப் படியுங்கள்! கும்மிடிப்பூண்டி, மே.25- கும்மிடிப்பூண்டி- சென்னை இடையே சென்ற மின்சார ரெயிலில் என்ஜின் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சாகும் முன் ரெயிலை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத் திற்கு மின்சாரரெயில் நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயிலை மனோகரன் (வயது 48) ஓட்டி வந்தார்.

ரெயில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றது. பயணிகள் ஏறிய தும் ரெயில் புறப்பட்டது. கவரைப் பேட்டையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜின் டிரைவர் மனோகரன் திடீர் என்று ரெயிலை நிறுத்தினார். நடுவழியில் ரெயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் என்னவோ ஏதோ என்று பயந்து கீழே இறங்கினார்கள். அதற்குள் டிரைவர் மனோகரனும் கீழே இறங்கினார். வலியால் நெஞ்சை பிடித்த படி மனோகரன் தரையில் சாய்ந்தார்.

உடனடியாக அதிகாரிகள் மனோகரனை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோகரனின் உயிர் பிரிந்தது. மரணத்தின் பிடியில் இருந்த போதும் ரெயிலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற் றுவதற்காக சிரமப்பட்டு ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி இருக்கிறார் மனோகரன்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன் இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும் அந்த ரெயிலில் வந்த பயணிகள் கண்ணீர் மல்க மனோகரனின் மனிதாபிமானத்தை நெகிழ்ந்து பாராட்டினார்கள். மரணம் அடைந்த மனோகரனின் சொந்த ஊர் திருவள்ளூர் ராஜீவ்நகர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பல நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றி விபத்து நேராமல், ஸ்டேஷன் கவரைப் பேட்டை அருகில் கொண்டு வந்து ரயிலை நிறுத்தி விட்டார்.

அவருக்கு நெஞ்சு வலி. மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார் அந்த கடமை வீரர் மனோகர்! அவருக்கு நமது வீர வணக்கம். விபத்தினை தவிர்த்தார். இவருக்கு ரயில்வே துறையினர் தனி சிறப்பு விருது - வழங்க வேண்டும் குடும்பத் தினருக்கு - செய்வார்களா?

தமிழ் ஓவியா said...


இராஜபாளையம் மாநாடு


சிகரம் தொட்ட சிறப்பான தி.க.மாநாடு இன்று சுமார் 62 ஆண்டுகளுக்கு முன்பு 21.10.1951இல் அய்க்கிய முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தி காங்கிரசை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரத்தை தந்தைபெரியார் அவர்கள் தமிழகமெங்கும் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது இராஜபாளையத்தில் சென்னை மாநில காங்கிரசு முதலமைச்சர் குமாரசாமி ராஜாவை எதிர்த்தும் அய்க்கிய முன்னணியைச் சேர்ந்த டி.கே.ராஜா அவர்களை சட்டமன்ற தேர்தலில் ஆதரித்தும் கூட்டத்தில் பேச வந்தார், தந்தை பெரியார். அன்னை மணியம்மையாரும், கழகத் தோழர்களும் அருகில் இருந்தனர்.

கூட்டத்தில் கல் எறிய ஆரம்பித்தார்கள். தந்தை பெரியாரவர்கள் துணிச்சலுடன் ஒரு போர்வையை வாங்கித் தலையில் சுற்றிக்கொண்டு பேசத் தொடங்கினார் காங்கிரசு முதலமைச்சர் இருக்கிற ஊரில் இவ்வளவு கல்லெறி காலித்தனம் நடக்கிறது என்றால் நாட்டில் காங்கிரசு ஆட்சி யில் என்ன பாதுகாப்பு இருக்கிறது.

ஒரு ஈ.வெ.ராமசாமி பேச முடியவில்லையென் றால் எனக்கு ஏதாவது ஏற்பட்டால் இராஜபாளையம் என்ன ஆகும் மந்திரி குமார சாமி ராஜா பட்டணம் வந்து திரும்ப முடியுமா? வன்முறையில் ஈடுபடும் பயித்தியக் காரப் பசங்களா ஜாக்கிரதை என்று வேகமாக முழக்கமிட்டர். பின்பு கூட்டம் அமைதியாக நடந்தது அந்தத் தேர்தலில் இராஜபாளையத்தில் காங்கிரசு முதல் அமைச்சர் தோல்வியடைந்தார்.

காங்கிரசுக் கட்சியும் பெரும் தோல்வியடைந்தது.

அடுத்து இராஜபாளையத்திலிருந்து உடன் மதுரை வந்து சேர்ந்தார் இரவு தங்கும் விடுதியில் இருந்தார் அப்போது அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மறுநாள் திருமங்கலத்தில் கருமுத்து சுந்தரம் செட்டியாரவர்களை எம்.பி. தேர்தலில் ஆதரித்து பேச வேண்டும் என்று அரை மணிநேரம் பேசினார்.

மீண்டும் கூட்ட மேடையில் வயிற்றுப் போக்கு ஏற்பட்ட உடன் நிறுத்தி விட்டார். பேச வேண்டாம் என்று தோழர் காசிநாதன் சொல்லியும் கேட்கவில்லை. தந்தை பெரியாரவர்களின் துணிச்சல் யாருக்கு வரும்.
சிந்தனைக் கவித்துளி கவியரசர் முடியரசன்

நெஞ்சுரத்தை மட்டுமொரு - துணையாய்க் கொண்டு

நீ பட்ட பாட்டையெல்லாம் - நினைத்ததன்றி அஞ்சலிக்கு நானெழுதும் பாட்டை என்றன் அகங்கருத முடியாமல் தவித்த தய்யா என்று பாடுகிறார்.

- த. இனியன் பத்மநாபன் - ஈரோடு

தமிழ் ஓவியா said...


சட்டம் ஒழுங்கு - அபாய நிலை!


நாட்டில் சட்டம் ஒழுங்கு வெகு நேர்த்தியாக இருப்பதாக சட்டப் பேரவையில் அறிவிக்கப்படு கிறது; அவ்வப்பொழுது அரசு சார்பில் சொல்லப்படுகிறது.

ஆனால் அன்றாடம் நாட்டில் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் வேறு எப்பொழுதும் கேள்விப்படாதவை - நடக் காதவை.

நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே புகுந்து கொலை. ஆளுங் கட்சிக்காரர்களேகூட கொல்லப்படுகிறார்கள் - இரவு நேரத்தில் மட்டுமல்ல; பட்டப் பகலிலேயே கொலைகள் பட்டவர்த்தனமாக நடைபெறத் தொடங்கி விட்டன.

ஏதோ குக்கிராமங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைப் பெரு நகரத்திலேயே குலை நடுங்கும் கொலைகள்.

காவல்துறை அதிகாரிகள் மாற்றப்படுவதால் மட்டும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டு விடுமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தருமபுரி மாவட் டத்தில் தொடங்கப்பட்ட - தாழ்த்தப்பட்டவர் களின் பகுதிகள் எரிப்பு என்பது இப்பொழுது மரக்காணம் வரை பரவி விட்டது.

அதெல்லாம் ஒன்றுமில்லை என்று அறிக்கை வெளியிடுவதால் நிலைமையைச் சமாளித்து விட்டதான நெருப்புக் கோழி மனப்பான்மை அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி விடாது.

மக்கள் அன்றாடம் நாட்டில் நடக்கும் வன்முறையை நேரில் கண்டு கொண்டு தானிருக்கிறார்கள் - ஏடுகளிலும் படித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப்படாது.

வீட்டைப் பூட்டி விட்டு வெளியூருக்குச் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ள பொருள்கள், நகைகள் பணத்திற்கு உத்திரவாதம் கிடையவே கிடையாது.

வெளியூர் சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்து படுக்கையறையில் ஓய்வும் எடுத்துக் கொண்டு, சர்வ சாதாரணமாக, எந்தவிதப் பதற்றமுமின்றிப் பொருள்களை வாரிச் சுருட்டிக் கொண்டு, வீட்டுக்காரரின் இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தி செல்லுகிறார்கள் என்றால் இவை எல்லாம் சினிமாவில் நடப்பதுபோல் தெரியவில்லையா?

காவல் நிலையம் அருகே படுகொலை என்றெல்லாம் செய்தி வருகிறது.

பட்டப்பகலில் நடந்து செல்லும் பெண்களின் நகைகள் பறிக்கப்படுவது சர்வ சாதாரணம். தங்க நகை என்று நினைத்துப் பறித்துச் சென்றவன், அது போலி என்று தெரிந்து கொண்டபிறகு, அந்தப் பெண்ணிடம் திரும்பி வந்து ஓர் அறை அறைந்து விட்டுச் சென்றான் என்று எல்லாம் சேதி வருகிறதே - இது எங்கே கொண்டு போய் விடும்?

கொலைகாரர்களும், கொள்ளைக்காரர் களும் எளிதாக பிணை பெற்று வந்து விடுகிறார்கள் என்ற ஒரு கருத்தும் இருக் கிறது. பிணையில் வெளிவந்த ஆளே வெட்டிக் கொல்லப்படும் செய்தியும் வருகின்றது.

இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல - வாய்ச் சவடால் விடுவதற்கு; மக்களின் உயிருக்கும், உடைமைக்கு உத்தரவாதம் என்பது மிகவும் அடிப்படை உரிமைப் பிரச் சினை. இதனைச் செய்து கொடுக்க முடியா விட்டால் அரசாங்கம் இருப்பது என்பதற்கே பொருளில்லாமல் போய் விடும்.

மூல காரணத்தைக் கண்டு அறிவதில் அரசும், காவல்துறையும் போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.

தேவை வெறும் அறிக்கையல்ல - நடை முறையில் மாற்றம்தான்!

ஊடகங்கள் மவுனசாமியார் ஆகிவிட்டன என்ன பின்னணியோ! யார் அறிவார் பராபரமே!28-5-2013

தமிழ் ஓவியா said...


சூழ்ச்சியே இது


உண்மையான தகுதியும், திறமையும் கெட்டு ஒருவனை ஒருவன் கீழ்ப்படுத்துவதற்குச் சாதனம் எதுவோ அதுதான் இன்று தகுதி - திறமை ஆக்கப் பட்டு வருகிறது. கீழ்ச்சாதி ஆக்கப்பட்ட மக்களைக் கீழ் நிலையிலேயே நிரந்தரமாக இருத்தி வைக்கும் சூழ்ச்சியே இது.

(விடுதலை, 28.10.1967)

தமிழ் ஓவியா said...

மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கேள்வி: மத நம்பிக்கை வளர்கிறதா? குறைகிறதா?

கலைஞர்: அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பைக் கூறுகிறேன். அந்தக் கருத்துக் கணிப்பு 2005ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதற்கும் தற்போது எடுக்கப்பட்டதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுவதாக உள்ளது. 2005ஆம் ஆண்டு உலகில் எந்த நாட்டு மக்கள் அதிகமாக மத நம்பிக்கை கொண்டி ருக்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை எடுத்த போது, இந்தியா முழுவதும் சுமார் 87 சதவிகிதம் பேர் மத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மத நம்பிக்கைபற்றி அண்மையில் உலகம் முழுவதும் ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டிருக்கிறது. 51 ஆயிரத்து 927 பேரிடம் இதுபற்றி கருத்துகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களில் 81 சதவிகிதம் பேருக்கு மத நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளது. 2005ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 6 சதவிகித அளவிற்கு இந்தியர்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பட்டியலுக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தக் கணக் கெடுப்பில் தெரிய வந்திருப்பது, சீனாவில் 47 சதவிகிதம்; ஜப்பானில் 31 சதவிகிதம்; செக் குடியிருப்பில் 30 சதவிகிதம்; பிரான்சில் 29 சதவிகிதம்; இந்தியாவில் 3 சதவிகிதத்தினர் தான் அசல் நாத்திகவாதிகள் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.

தமிழ் ஓவியா said...


இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தல்


சென்னை, மே 29- இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டு கோள் என தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கேள்வி - பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: தமிழக மக்களின் உணர்வு களைப் புரிந்து கொண்டு, தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் திரு. ஏ.கே. அந்தோணி தஞ்சையில் கூறியிருக்கிறாரே?
கலைஞர்: இலங்கை ராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட ராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வரு கிறது; ஆனால் தமிழக மக்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழ கத்தில் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று நண்பர் ஏ.கே. அந்தோணி அவர்கள் தஞ்சை யில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத் தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். இந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டு கோளை விடுத்து விளக்கியுள்ளோம். இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி அவர்களே, இலங்கையில் தமிழர் மறு வாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்று ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ், இந்தியாவில் இலங்கை ராணு வத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை. அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகா ரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை என்று கூறினார். அப்போதே அதற்குப் பதி லளித்த மத்திய அமைச்சர் அந்தோணி அவர்கள், தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை. இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்துகொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் ராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.

அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள ராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள ராணுவத் தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள். இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் புரிந்து கொண்டு அதற் கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கை யாகும்.

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியடையும்!



நமக்குப் புதிதாகக் கருத்துச் சொல்லக்கூடியவர்கள் கூட இப்போது தேவையில்லை. நம் கருத்துகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இல்லாமலிருந்தாலே போதும். மனித அறிவும், சமுதாயமும் நல்ல வண்ணம் வளர்ச்சியடையும்.
(விடுதலை, 24.7.1969)

தமிழ் ஓவியா said...


திராவிடக் கட்சிகளுடன் உறவு கிடையாதா? கூட்டணி வைக்க பாமகவை யாரும் அழைக்கவில்லையே: மு.க.ஸ்டாலின் பேட்டி


சென்னை, மே 29-திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தை மாவட்ட வாரியாக மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம், நேற்று (28.5.2013) காலை அன்பகத்தில் நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் மா.சுப்பிர மணியன், அசன் முகமது ஜின்னா, சுபா சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு, துணை அமைப்பா ளர்கள் வடிவேல், ஆனந்தம், சுரேஷ், பிரபாகர் ராஜா, ஆனந்த் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
ஓராண்டுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனத்தில் விதிக்கப்பட்ட சில விதிமுறைகள் அடிப் படையில் நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்ந் தெடுத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் 5000 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஓராண்டு செயல்பாடு பற்றி கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சரியாக பணியாற்றாதவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. சில இடங்களில் மாற்றப்பட வேண்டிய நிலையும் இருக்கிறது. அந்த பணியும் முறைப்படுத் தப்படும்.

கேள்வி: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது?

பதில்: சட்டம், ஒழுங்கே இல்லை. பிறகு எப்படி எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்ல முடியும்.

கேள்வி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளாரே?
பதில்: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. 2006இல் கலைஞர் முதல்வ ரான பிறகு, மீண்டும் அந்த திட்டத்தை முழுவீச்சில் முடுக்கிவிட்டார். நானும், அதிகாரிகளும் ஜப்பான் சென்று தேவையான நிதியை பெற்று வந்தோம். 90 சதவீத பணிகள் திமுக ஆட்சியில் முடிந்துவிட்டது.
2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த பணிகளை தொடர்ந்திருந்தால் 6 மாதத்தில் திட்டம் முழுமையாக முடிந்திருக்கும். ஆனால், அப்படி செய்யாத தால் தேக்க நிலை இருந்தது. இப்போது கூட, பணிகள் முழுமை பெறவில்லை. அவசர கோலத்தில் திறந்து வைக்கப்படுகிறது என்று செய்தி வந்துள்ளது. இதுதான் உண்மை. பல பகுதிகளில் பணிகள் முழுமை அடைய வில்லை. புதிய தலைமைச் செயலகம், சேது சமுத்திர திட்டம் போல், இந்த திட்டத்தையும் கிடப்பில் போடாமல், திறந்து வைப்பது வரவேற்கதக்கது. மீதமுள்ள பணிகளை முழுமையாக முடித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு முன்வர வேண்டும்.

கேள்வி: ராமதாசை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில்: நான் அவரை சந்திக்கவில்லை. மருத்துவ மனையில் இருந்த துரைமுருகனை சந்தித்து உடல்நலம் விசாரிக்க சென்றேன். அப்போது, எதிர் அறையில் ராமதாஸ் குடும்பத்தினர் இருந்தனர். அவர்கள் கட்சியை சேர்ந்த தனராஜ் இதை தெரிவித்ததால் நான் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தேன்.

கேள்வி: திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அன்புமணி கூறியிருக்கிறாரே?

பதில்: எந்த திராவிட கட்சியினர் இவர்களை அழைத் தார்கள் என்று தெரியவில்லை.

கேள்வி: அய்பிஎல் சூதாட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

கேள்வி: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடுமா?

பதில்: இதுபற்றி கட்சித் தலைவர் கலைஞர் அறிவிப்பார்.

தமிழ் ஓவியா said...


தடையானவர்கள்



மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும், மனிதத் தன்மைக்கும் இமயமலை போன்ற தடையானவர்களும், கேடானவர்களும், நமது சோசியர்களும், மந்திரவாதிகளும், மத, புராண, இதிகாசப் பிரச்சாரகர்களும் ஆவார்கள்.
(விடுதலை, 4.4.1968)

தமிழ் ஓவியா said...


பக்தியின் யோக்கியதையைப் பாரீர்!



கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாக மோசடி!

திருட்டைக் கண்டுபிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!!


சென்னை, மே 30- திருட்டைக் கண்டு பிடிக்க தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை - மழை பெய்ய கழுதைகளுக்கும் திருமணமாம் - கிடா வெட்டி சிறப்புப் பூஜை யாம் - கோயில் விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு - மந்திரித்துத் தருவதாகக் கூறி பெண் ணிடம் நகை மோசடி செய்தவர் கைது போன்ற பக்தியின் பெயரால் நடக்கும் மோசடிகள் - மூடநம்பிக்கைகளை இங்கே காணலாம்.

தீச்சட்டியில் கையை விடச் சொன்ன கொடுமை!

குஜராத்தில் ரூ. 3 லட்சம் திருடியதாக சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட 10 பேரை தீச்சட்டியில் கையை விட சொன்ன சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட் டத்தின் கனா கிராமத் தில் ஒருவரது வீட்டில் கடந்த ஞாயிறன்று ரூ. 3லட்சம் திருடு போனது. இது குறித்து சந்தேகத் தின் பேரில் அக்கி ராமத்தைச் சேர்ந்த 10 பேரை பிடித்து விசாரித் தனர்.அவர்கள் நாங்கள் திருடவில்லை என கூறினர். அப்படியெனில் அங்குள்ள கோயில் ஒன்றில் தீச்சட்டிக்குள் கையைவிட்டு திருட வில்லை என கூற வேண் டும் என கட்டாயப் படுத்தினர். நேற்று நடந்த இந்த சம்பவத்தில் 10 பேரின் கையும் தீயில் கருகின. சம்பவம் தொடர் பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரிக்கின் றனர். தீக்காயங்களுடன் 10 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மந்திரித்துத் தருவதாக கூறி நகை மோசடி

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த வர் காளிமுத்து. ஜவுளிக் கடை அதிபர். இவரது மனைவி சுந்தரம்மாள், (வயது 55). இவர்களின் கடையில் வேலை செய்தவர் மாரிமுத்து, (வயது 26). சில ஆண்டுகள், மாந்த்ரீகம் கற்பதற்காக வெளியூர் சென்று விட்டார். பின், ஊர் திரும்பியவர், சுந்த ரம்மாளிடம், தொழில் அபிவிருத்திக்கும், தோஷம் கழிக்கவும், நகைகளை மந்திரித்து தருவதாக கூறியுள்ளார். சினிமா பாணியில், கொஞ்சம், கொஞ்சமாக பணம், நகை வாங்கி மோசடி செய்துள்ளார். இதற்கு இவர்கள் வீட்டில் வேலை செய்த மாரியம்மாள், (வயது 56), என்பவரும் உடந் தையாக இருந்துள்ளார்.

இருவரும், 118 பவுன் நகை, 7.25 லட்சம் பணம் மோசடி செய்து உள் ளனர். இது பற்றி, சுந்த ரம்மாள் சின்னமனூர் காவல்துறையில் புகார் செய்தார். காவலர்கள், மாரிமுத்துவை கைது செய்தனர்.

கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் கடந்த ஆண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவ மழை பொய்த்த தால் நடப்பாண்டு மேட்டூர் அணை வறண்டு விட்டது. தமிழக எல் லையில் மேட்டூர் அணை கரையோரம் கோவிந்தபாடி, செட் டிப்பட்டி, காவேரிபுரம், கருங்கல்லூர் உள்பட ஏராளமான கிராமங்கள் உள்ளது.

கடும் வறட்சியால் அணை வறண்டதால் கரையோர கிராமங் களில் நிலத்தடி நீர், 800 அடிக்குக் கீழே சென்று விட்டது. இதனால் விவ சாய பணிகளும் முடங் கியதால் மக்கள் அவதிப் படுகின்றனர். கழுதை களுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூடநம் பிக்கை அப்பகுதியில் நிலவுகிறது.

இதனால், அணை கரையோரம் உள்ள காவேரிபுரம் கிராம மக்கள் நேற்று அங் குள்ள வினாயகர் கோயில் முன், கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். பின், தாரை, தப்பட்டை முழங்க கழுதை தம்பதியரை கிராமங்களில் வீதி, வீதியாய் அழைத்து சென்றனர். வீதிகளில் பெண்கள் கழுதை களுக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினராம்!

கழுதைகளுக்கு திரு மணம் செய்து வைத்த மாணிக்கம் கூறியதா வது: கழுதைகளுக்கு திருமணம் செய்தால் மழை பெய்யும் என்ற அய்தீகம் எங்கள் பகுதியில் நிலவுகிறது. எங்கள் பகுதியில் ஒரு ஆண் கழுதை இருந்தது. அதற்கு திருமணம் செய்து வைப்பதற்காக சுற்று கிராமங்களில் பெண் கழுதைகள் தேடி யும் கிடைக்கவில்லை.

அருகிலுள்ள கருங் கல்லூர் கிராமத்தில் பெண் கழுதை இருப்ப தாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் கருங் கல்லூர் சென்று நாங் கள் கழுதை உரிமை யாளிடம், "முறைப்படி' பெண் கேட்டோம். ஆனால், அவரது பெண் கழுதைக்கு திருமணம் செய்து வைக்க, அவர் மறுத்து விட்டார். வேறு வழியின்றி நள்ளிரவில் கருங்கல்லூர் சென்று மணப்பெண்ணை (கழுதை) கடத்தி வந்து விட்டோம்.

இதனால், மணப் பெண் தரப்பில் திரும ணத்தில் யாரும் பங்கேற் கவில்லை. திருமணத்தை சிறப்பாக நடத்தியதைத் தொடர்ந்து, பெண் வீட்டார் சமாதானமாகி விட்டனர். முதல் முறை யாக கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதால், எங்கள் பகுதியில் மழை பெய்யும் என நம்பு கிறோம், என்றார். இப் படியும் ஒரு மூடந ம்பிக்கை.

தமிழ் ஓவியா said...

பெண்களிடம் 25 சவரன் பறிப்பு

காஞ்சிபுரம் வரத ராஜ பெருமாள் கோயிலில் நேற்று தேர்த் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கூட்டத்துக்குள் திருடர் கள் புகுந்து கைவரிசை காட்டினர். காஞ்சிபுரம் புத்தாகரத்தை சேர்ந்த பூதேரியம்மாளிடம் நான்கரை பவுன் செயின், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த விஜயலட்சுமி யிடம் 2 சவரன், ஜோதிமாலா என்பவரி டம் 5 சவரன், ராஜேஸ் வரியிடம் 5 சவரன் செயினை திருடர்கள் பறித்தனர். இதுபோல் சென்னை கூடுவாஞ் சேரியை சேர்ந்த செண் பகத்திடம் 5 சவரன் செயின், சென்னை கொரட்டூரை சேர்ந்த இந்துமதியிடம் மூன் றரை சவரன் செயினை பறித்தனர். செயினை பறி கொடுத்தவர்கள் கூச்சல் போட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந் திருந்த காவலர்கள் திருடர்களை தேடினர். ஆனால் கூட்டத்தில் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கொடுக் கப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில், சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை வேண்டி அணையில் கிடா வெட்டி சிறப்புப் பூஜையாம்!

நாகர் கோவில் நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே நாகர்கோவில் நகரசபை சார்பில், மழை வேண்டி முக்கடல் அணை பகுதியில் உள்ள ஆலமரத்து இசக்கி அம்மன் கோவில் முன்பு யாகம் வளர்த்து வழி பாடு நடத்தப்பட்ட தாம்! பின்னர் கிடா வெட்டி அம்மனுக்கு படைத்து சிறப்புப் பூஜைகளும் நடத்தப் பட்டனவாம்! இந்த சிறப்பு பூஜை குறித்து நகரசபை தலைவி மீனாதேவி கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவுகிறது. அணை களிலும் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வருவ தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியில் உள் ளது. இந்த ஆண்டாவது பருவ மழை பெய்தால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடியும். இதனால் முக் கடல் அணை அருகே உள்ள இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினால் மழை பெய்து பஞ்சம் தீரும் என்று அந்த பகுதி மக்கள் கூறினர். எனவே தான் கிடா வெட்டி சிறப்பு பூஜை நடத்து கிறோம் என்று அவர் கூறியுள் ளார். இப்படி ஒரு மூடநம்பிக்கை.

தமிழ் ஓவியா said...


புலிகளின் மனைவிகளுக்கு இலங்கை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை!


கொழும்பு, மே 31- இலங்கையில் வாழும் முன்னாள் விடுதலைப் புலிகளின் மனைவிகள் இலங்கை ராணுவத்தின ரால், பாலியல் வன் கொடுமைக்கு ஆளாவ தாக தெரிய வந்துள்ளது. இலங்கை திரிகோண மலை பகுதியில் வாழும் முன்னாள் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் அவ்வப்போது விசா ரணை என்ற பெயரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் படுவது உண்டு, அத் தகைய சூழ்நிலைகளில் அவர்களை காவலில் அடைத்துவிட்டு அந்த குடும்பத்தின் பெண் களிடம் இலங்கை ராணுவத்தினர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொள்வது தற் போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியன்று இலங்கை யின் சுதந்திர தின கொண்டாட்டங்களை அடுத்து கட்டாய்-பாரிச்சான் ராணுவ முகாமில் இருந்து வந்த வீரர்களால், மூத்தூர் என்ற இடத்தில் இருந்து 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 15 பேர் திருமணமானவர்கள். சிலரின் மனைவிகள் முன்னாள் பெண் புலிகள். கணவன்மார் களை சிறையில் அடைத்து விட்டு, வீட்டில் தனியாக இருக்கும் அவர்களது மனைவிகளை இலங்கை ராணுவத்தினர் அத் துமீறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றன ராம். இது குறித்து, மூத்தூர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த முன் னாள் பெண் புலியான கந்தபோடி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய ராணுவத்தினர் முயன்றதாக தெரிவித் துள்ளார். மேலும், தங் கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிங்களர்களும் தமிழ் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வும், இரு வாரங்களுக்கு முன்னர், கந்தபோடி தனது குடிசையில் தனி யாக இருந்தபோது நள் ளிரவில் குடிசைக்குள் நுழைந்த நபர் ராணுவ புலனாய்வு துறை அதி காரி என்று கூறிக் கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக வும் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங் கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள். - (விடுதலை, 25.7.1968)

தமிழ் ஓவியா said...


இராமாயணம்

இராமாயணம் - இராமன் அழித்து ஒழிக்கப்பட்டு ஆகவேண்டும். இராமாயணப் பிரசாரம் ஒழுக்கக் கேட்டுப் (கிரிமினல் அண்டு இம்மாரல்) பிரசாரமாகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும் ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய் இரண்டணா ரேட்டுக்குக் குச்சுக்காரியாக இருந்து, தெருவில் போகிற சின்ன பையன்களையெல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன் இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து, ஏண்டா எங்கம்மா இழுத்தால் திமிரிக்கிட்டு ஓடப் பார்க்கிறாய் என்று பையனை அடித்தால், அவன் தாய்ப்பற்று, தாய் அன்பு, அபிமானம், தாய்ப் பக்தி கொண்டவனாக ஆகிவிடுவானா?

உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப்பற்றி என்ன கருதுவார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால் இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது. ------------ தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!

பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள் பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக்கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாத வரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத்தான் நடத்துகிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தினராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணருடனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் சாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை. அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ்செய்தல் பெரிதும் இகழத்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ? - மறைமலை அடிகள்

--------------சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்.

தமிழ் ஓவியா said...

அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும்

உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும் ஊட்டக்கூடிய ஏடுகளைச் சேகரித்து அதற்குப் புத்தகச்சாலையென்று பெயரிடுவது; குருடர்களை கூட்டி வைத்து, அவர்கள் உள்ள இடத்துக்கு, வழிகாட்டுவோர் வாழும் இடம் என்று பெயரிடுவது போன்ற கோமாளிக் கூத்தாக முடியும்.

ஒவ்வோர் வீட்டிலும், வசதி கிடைத்ததும், வசதி ஏற்படுத்திக் கொண்டதும் அமைக்க வேண்டிய புத்தகச் சாலையில், நாட்டு வரலாறு, உலக நாடுகளின் நிலையைக் குறிக்கும் நூல்கள் இவை முதலிடம் பெற வேண்டும். பொதுவாகவே மக்களின் அறிவுக்கு தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்துக்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்க வேண்டுமெயொழிய வாழும் இடத்தை வகையற்றது என்று கூறி வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், மாயா வாதத்தையும், மனமருட்சியையும் தரும் ஏடுகளும் தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்திப் பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்களும் இருத்தலாகாது.

பஞ்சாங்கம் அல்ல, புத்தகச் சாலையில் இருக்க வேண்டியது; அட்லாஸ் - உலகப்படம் இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் பிரச்சினையிலே நேர்மையான முறையையும், நெஞ்சுரத்தையும் காட்டியாக வேண்டும். அப்போதுதான் வீட்டிற்கோர் புத்தக சாலை அமைப்பது என்பது அறிவுத் தெளிவுக்கு வழி செய்யும் - மனவளத்தை உண்டாக்கும்; நாட்டை வாழ வைக்கும். புலியை அழைத்து பூமாலைத் தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தனவாடை கிடைக்கு மென்று எண்ணக் கூடாது.

நமது பூகோள அறிவு, பதினான்கு லோகத்தைக் காட்டுதற்கு, அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று. அந்த நாட்களில் நமது சரித்திர அறிவு, பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக்கிழத்தி வீட்டுக்கு, நாயகனைக் கூடையில் வைத்துத் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு, நெருப்பிலே ஆறும், அதன் மீது ரோமத்தால் பாலமும் இருப்பதாக அறிவித்தது.

அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாள்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாகக் கேடு செய்யும். பூகோள, சரித, ஏடுகள் இருக்க வேண்டும் - நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட, வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
------------------அறிஞர் அண்ணா

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா? - அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் ஒரு பெரிய திரையாக என்னுடைய புன் னகை விளங்குகிறது. நான் எப்பொ ழுதும் சிரித்துக்கொண்டே இருப்ப தால் என்னுடைய மத நம்பிக்கை, என் னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார்.
கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.

(தி இண்டு, 30.11.2002)

தமிழ் ஓவியா said...

விஞ்ஞான முடிவுக்கு எதிரானவை!

அறிவாளிகள் ஒரு விஷயத்தின் எல்லா அம்சங்களையும் கவனமாக பரிசீலிக்காமல் அதைப்பற்றி முடிவு கூறமாட்டார்கள். மூடர்களும், கோழைகளும், சிந்திக்கத் தயங்குகிறவர்களும்தான் - குழந்தைப் பருவத்தில், அறிவு முதிர்ச்சியில்லாத காலத்தில், காரணத்தோடு புரிய முடியாத போது தங்களின் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் திணிக்கப்பட்ட மூடக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்கிறார்கள்.

உலகிலுள்ள 80 கோடி இஸ்லாமியரும் வான மண்டல தூதுவரால் குர்-ஆன் அளிக்கப்பட்டதாக நம்புகிறார்கள்; 34 கோடி இந்துக்களும் தங்கள் கடவுளரில் ஒருவனான சிவனுக்கு ஆறு கைகள் இருப்பதாக நம்புகிறார்கள்; 16 கோடி பவுத்தர்களும் மறுபிறவி உண்டென்று நம்புகின்றனர் 91 கோடி கிறிஸ்துவரும் கடவுள் ஆறே நாட்களில் உலகைப் படைத்தான் என்று நம்புகின்றனர்.

இப்படியெல்லாம் நம்புவதற்கு விஞ்ஞான ரீதியான சான்று எதுவும் இல்லை. அறிவைக் கொண்டு இதுவரையில் காணப்பட்ட உண்மைகளுக்கு இவை நேர் விரோதமானவை என்பதை விஞ்ஞானம் காட்டி விட்டது.
- ஜேம்ஸ் ஹார்வி ஜான்சன்.