Search This Blog

18.3.12

திராவிடர் கழகத்தில் ஏன் பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கக்கூடாது?

பூணூலுக்கும் மனுதர்மத்துக்கும் வக்காலத்து வாங்கும் அண்ணா தி.மு.க.


தமிழ்த் தேசியவாதிகள் என்ற போர்வையில் திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது. திராவிட என்ற இனவழிப் பெயரைத் தன் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கிற, திராவிட இயக்கத்தின் தளபதியாக விளங்கிய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பறக்க விட்டுக் கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க.வோ ஆரியத் தலை மையின் கீழ் திராவிட இயக்கத்தின் கோட் பாடு எனும் வேரின் மீது கோடரியைத் தூக்கி வீசிக் கொண்டிருக்கிறது.

ஆரியம் புத்த மார்க்கத்தில் ஊடுருவி அழித்ததுண்டு. அந்தத் தந்திரத்தைத் திராவிட இயக்கத்திலும் ஆரியம் செய்து கொண்டு இருக்கிறது என்பதைத் தாய்க் கழகம் எச்சரிக்கை செய்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

சமண, பவுத்த மார்க்கத்திற்கு எதிராகப் பக்தி மார்க்கம் தோன்றி அவற்றை அழித்தது!

பவுத்த, சமண மார்க்கத்தின் சாயலையும் தாண்டி, அதற்கு மேலாகவும் உறுதி யான தத்துவக் கோட்பாட்டினைக் கொண்ட திராவிட இயக்கத்திலேயே அதே பெயர் கொண்ட முகமூடியோடு அ.இ.அ.தி.மு.க. திராவிட இயக்கச் சித்தாந்தததின் வேரில் வெடி குண்டை வீசிப் பார்க்கிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் ராஜகுருவாக இருக்கக் கூடிய திருவாளர் சோ ராமசாமி அய்யர் மிகவும் வெளிப்படையாகவே அடையாளம் காட்டி எழுதித் தள்ளி விட்டார்.


திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது, அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத்திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றுக்கு தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவர். அந்தப் பாரம்பரியத்தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமையாகவும், கேவலமாகவும் எதிர்க்கப்பட்டதோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். கோவில், அர்ச்சனை, பிரசாதம் இவற்றில் நம்பிக் கையானவர். (துக்ளக் 21.-9.-2005)

இதில் இரண்டு விஷயங்களை விஷய ஞானத்துடன் கண்டாக வேண்டும். ஜெயலலிதா ஒரு திராவிட இயக்கத்திற்குத் தலைமை வகிக்கிறார். ஆனால் அவருக்கு திராவிட இயக்கக் கொள்கைகளில் சம்பந்தம் இல்லை என்று சோ கூறி இருப்பதற்கு, திராவிட இயக்கத்தில் நம்பிக்கை உள்ளவராகவும், அதற்குத் தலைமை வகிக்கத் தகுதி உடையவராகவும் இருந்திருந்தால் ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்?

முதலில் அவருக்கே உரித்தான முறையில் கோபம் வெடித்துக் கிளம்பி இருக்க வேண்டும். கிளம்பவில்லையே - ஏன்? அப்படி என்றால் சோ சொன்னது உண்மை என்று உள்ளுக்குள் உணர்ந்து மகிழ்பவராக இருக்க வேண்டும். இப்பொழுது இரண்டாவது பிரச்சினை நம் முன் வருகிறது. அ.இ.அ.தி.மு.க.வினர் அதன் தொண்டர்கள், அண்ணா பெயரில், திராவிடத்தின் பெயரில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள். தங்கள் கட்சிக்கு இந்த அம்மையார் பொருத்த மானவர் அல்லர்; மாறாக விரோத மானவர் என்பதையாவது உணர்ந்திருக்க வேண்டும்.

இவை ஒன்றும் நடக்கவில்லை என்பதே - பார்ப்பனர்கள் காட்டில் பெய்த மழையாகத் துளிர்த்து விட்டது.

திருவாளர் சோ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. திராவிட இயக்கத்துக்கு மாறான கோவில், அர்ச்சனை, பிரசாதம் இவற்றில் நம்பிக்கை உள்ளவராக மிக வெளிப்படையாக நடந்து கொண்டு வருகிறார் ஜெயலலிதா.

தஞ்சாவூரில் கடந்த 11-.3-.2012 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் 9 (ஆ) கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தமிழ்நாடு முதல் அமைச்சர் மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமாகக் குறிப்பிட்ட மதத்துக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் வெளிப்படை யாக பூஜை, புனஸ்காரங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பக்தியைத் தனிப்பட்ட முறையில் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது என்பது தான் அந்தத் தஞ்சை மாநாட்டுத் தீர்மானம்.

திராவிடர் இயக்கத்துக்குச் சம்பந்த மில்லாதவர் - அதே நேரத்தில் ஒரு முதல் அமைச்சர் மதச் சார்பற்றவராக இருக்க வேண்டும் என்ற தன்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க., அறுதிப் பெரும்பான்மை பெற்ற நிலையில் சென்னையின் உள்ள முக்கியக் கோவில்களில் அர்ச்சகப் பார்ப்பனர்கள், அந்தப் பூணூல் கோலத்தோடு மேல் சட்டையின்றி அரை நிர்வாணத்தோடு செல்வி ஜெயலலிதாவுக்கு பிரசாதத் தட்டுகளை அளித்து அ.இ.அ.தி.மு.க. விலும் உறுப்பினர்கள் ஆகிவிட்டனர் என்றால் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாமே _ இது அண்ணா தி.மு.க. அல்ல, அக்கிரகார தி.மு.க. என்பதை.

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டதன் மூலம், பூணூல் மேனிகளைக் கட்சி உறுப்பினர்களாக வரித்துக் கொண்டதன் மூலம் அக் கட்சி நான்கு வருண தர்மத்தை வரித்துக் கொண்டு விட்டது. இந்நாட்டுப் பெரும் பான்மையான பார்ப்பனர்கள் அல்லாத மக்களைச் சூத்திரர்கள் என்று கருதுகிறது, -நம்புகிறது என்றுதானே பொருள்.

தான் பிறந்த மாசி மாதம் மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறீரங்கம் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் முதல் அமைச்சர் - அகில இந்திய அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

(நமது எம்.ஜி.ஆர். ஏடு 8-.3.-2012 படத்துடன் முதல் பக்கத்தில்)

இதே சிறீரங்கம் கோவில் பற்றி அறிஞர் அண்ணா என்ன எழுதுகிறார்? அண்ணா பார்வையில் மதமும் ஒழுக்கமும்

இன்று சிறீரங்கம் கோவிலில் உள்ள சீரான அமைப்புகள் நாகப்பட்டினம் புத்தராலயத்திலிருந்து திருமங்கை கொள்ளையிட்டுச் சென்ற தங்க விக்ரகத்தினால் ஏற்பட்டவை. பாதகச் செயல் புரிந்து, பக்தி செலுத்தியது நியாயந்தானா, தேவைதானா? இதிலிருந்து மக்கள் பெறத் தக்க பாடம், கைக்கொள் ளத்தக்க ஒழுக்கம், போற்றத் தக்க நீதி என்ன இருக்கிறது என்பதே கேள்வி.

சோழ மன்னனுக்குக் கட்டவேண்டிய பொருளை முன்பே, திருமங்கை திருப்பணிக்குச் செலவிட்டார். மன்னன் தண்டிக்கிறான். உடனே பக்தனைக் காப்பாற்ற மகாவிஷ்ணு அப்பனே காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றோரத்தில் பொருள் புதைத்திருக்கிறேன். போய் எடுத்து, கப்பம் செலுத்திவா என்று திருவருள் சாதிக்கிறார். அதே போலப் போய்ப் பார்க்க, புதையல்இருக்கிறது. மாணிக்க வாசகருக்கும், ராமதாசருக்கும், இதே போல், அரசாங்கப் பொருளை அவர்கள் ஆலயப் பணிக்குச் செலவிட்ட போது, அருள் கிடைத்திருக்கிறது! இந்த அருள் திருமங்கைக்குக் கிடைத்தான பிறகு, ஆலயம் அமைக்க, களவு, வழிப்பறி, பிற மதத்தவரின் புனித இடத்தைக் கொள்ளையிடுவது போன்ற செயலில் ஈடுபடத்தான் வேண்டுமா?

இந்த அறிவால் மக்கள் அடையப் போகும் புதிய ஞானம் ஏதாவது இருக் கிறதா? புதிய ஒழுக்க விதி கிடைத்தி ருக்கிறதா? என்ன பலன் கிடைக்கிறது? எனவேதான் திருமங்கை ஆழ்வார் போன்றோரின் சிந்தனையும் செயலும் இன்றைய சமூகத்துக்குப் பலனளிக்காது- மாறாத பக்தியே கேலிப் பொருளாக்கப் படவும், ஒழுக்கம் கேடுபாடடையவும் - சமூகத் துரோகிகளுக்குத் துணிவு பிறக்கவுமே பயன்படுகின்றன என்று கருதுகின்றேன் என்கிறார் அண்ணா. அண்ணா அவர்களால் இழித்துக் கூறப்பட்ட இந்த சிறீரங்கநாதன் கோவி லுக்குதான் அந்த அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தும் ஒருவர் சிறப்புப் பூஜை நடத்துகிறார். இப்பொழுது அதையும் தாண்டி அண்ணா தி.மு.க.வின் அதிகார பூர்வமான ஏடான நமது எம்.ஜி.ஆர். பூணூல் போடுவது ஏன்? என்பதற்குத் தத்து வார்த்த முட்டுத் தூணை நிமிர்த்தி வைக்கிறது. (பெட்டி செய்தி காண்க). பூணூல் மகாத்மியத்தோடு விட்டு விட் டதா? மனுதர்மம்பற்றி தனிக் கட்டுரையும் வேறு. மனுதர்மம் கூறுவது யாது? என்ற தலைப்பில்.

சபாஷ்! கோணிப் பைக்குள்ளிருந்து பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

சந்தேகம் வேண்டாம். நாங்கள் அண்ணா தி.மு.க. அல்ல. அக்கிரகார தி.மு.க.தான் என்று கண்ணாடி சட்டம் போட்டு ஆயிரம் வாட் வெளிச்சத்தில் மாட்டித் தொங்கவிட்டுவிட்டது.

ஒரு குலத்துக்கொரு நீதியை சொல்லும் மனுதர்மத்தைக் கொளுத்திய திராவிடர் இயக்கப் பாரம்பரியத்தின் பெயரைச் சொல்லத் தகுதி உடையதுதானா அ.இ.அ.தி.மு.க.?

அய்யா மட்டுமல்ல; அண்ணல் அம்பேத்கரும் கொளுத்திய இந்த மனு தர்மத்தை, அதுவும் ஒரு பெண்ணாக இருந்து ஜெயலலிதா பல்லக்குச் சுமப்பது பரிதாபம்!

புனாவில் 1981 டிசம்பரில் ஆர். எஸ்.எஸ். ஊர்வலத்தில் மனுதர்ம சாஸ்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென் றார்கள் என்றால் (Economical and Political Weekly Dated 6-3-1982) மனுதர்மம் என்பதற்கு இந்துத்துவா என்ற பொருள் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாமே!

திராவிடர் இயக்கம் என்று சொல்லிக் கொண்டு அந்த அமைப்பை இந்துத்துவா கொட்டடியில் அடைத்துள்ள கொடுமையை என்சொல்ல?

போலீஸ்காரனுக்குரிய அடையாளச் சின்னங்கள் தரப்படுகின்றன. ஒரு சான்றிதழ் போல அடையாளச் சின்னம் போல காட்டப்படுவதுதான் பூணூல் என்று வக்காலத்து வாங்குகிறது.

பூணூலுக்குத் தத்துவார்த்தம் வேறு.

ஒரு உண்மை தெரியுமா? அ.தி. மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏட்டுக்கு; பார்ப்பனனர்கள் துவி ஜாதியாக மாறுவது இந்தப் பூணூலைத் தரித்ததற்குப் பிறகுதான்.

இன்னொரு முக்கிய தகவல் தெரியுமா? சூத்திரருக்குப் பூணூல் தரிக் கும் உரிமை கிடையாது. இது ஈரோட்டுச் சரக்கோ, காஞ்சி சரக்கோ அல்ல. மனுதர்ம சாஸ்திரம் மண்டையிலடித்து என்ன கூறுகிறது?

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், சத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்பன் நாரினாலும், மேடு பள்ளமில்லாமல் மெல்லியதாய்ப் பின்னி மூன்று வடமாக மேலரைஞாண் கட்ட வேண்டியது என்கிறது அ.இ.அ.தி.மு.க. ஏடு போற்றும் மனுதர்மம். (அத்தியாயம் 2 சுலோகம் 42). பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், சத்திரியனுக்கு க்ஷணப்பன் நாரி னாலாலும், வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்று வடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டும். (மனு அத்தியாயம் 2 சுலோகம் 44).

இதில் கவனமாகக் கவனிக்க வேண்டிய நுட்பம் சூத்திரனுக்குப் பூணூல் அணி வது சொல்லப்படவில்லை என்பதுதான்.

அதோடு நிறுத்தியதா நமது எம்.ஜி.ஆர். தலையில் தூக்கி ஆடும் மனு தர்மம்?

சூத்திரன் பிராமண ஜாதியைக் குறிக்க பூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரன் அங்கங்களை வெட்டி விடவேண்டும். (மனு அத்தியாயம் 9 சுலோகம் 224)

பூணூல் போட உரிமை இல்லாத அந்தச் சூத்திரன் யார்? அதுவும் மனு வின் எழுதுகோலால் படிப்பது அவசியம்.

(1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்,

(2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்

(3)பிராமணனிடத்தில் பக்தியால் ஊழியம் செய்கிறவன்

(4) விபசாரி மகன் (5) விலைக்கு வாங்கப்பட்டவன்

(6) ஒருவனால் கொடுக்கப் பட்டவன்

(7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.

(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415)

அண்ணா தி.மு.க. என்ன சொல்லு கிறது? அதன் அதிகார பூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர். என்ன சொல்லுகிறது - மனுதர்மத்துக்கு மகுடம் சூட்டுவதன் மூலம்?

பார்ப்பனர் அல்லாத மக்களைப் பார்த்து விபசாரி மகன் என்பது உட்பட கேவலமான வகையில் சித்தரிக்கிறது.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி! என்ற முழக்கத்தைக் கொடுத்த சுயமரியாதை இயக்கம் - திராவிட இயக்கம். அந்த இயக்க வழி வந்ததாகக் கூறிக் கொண்டு ஒரு கட்சி பார்ப்பனர் அல்லாத மக்களைப் பார்த்து, திராவிடர் மக்களைப் பார்த்து விபசாரி மக்கள் என்று கூறுகிறது.

மனுதர்மம் பற்றித் தொடர்ந்து சோ தனது துக்ளக்கில் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தார். இப்பொழுது அ.இ. அ.தி.மு.க. ஏட்டிலும் இடம் பெற்றுள்ளது என்றால், அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ ஏட்டின் ஆசிரியர் குழுவில் சோவோ அல்லது அவரது பரமார்த்த சீடர் ஒருவரோ இடம் பெற்றிருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

ஆரியம் புகுந்ததால் ஏற்பட்ட ஆபத்தைப் பார்த்தீர்களா? திராவிடர் கழகத்தில் ஏன் பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கக்கூடாது என்று தந்தை பெரியார் நிபந்தனை வைத்ததன் அருமையை உணர்வீர்!


பூணூல் போடுவது ஏன்?

கல்லூரியில் படிக்கிறோம். படித்து முடித்தவுடன் ஒரு சான்றிதழ் தரப்படுகிறது. காவலர் பயிற்சியை முடித்தவனுக்கு போலீஸ்காரனுக்குரிய அடையாள சின்னங்கள் தரப்படுகின்றன. ஒரு சான்றிதழ் போல அடையாளச் சின்னம் போல காட்டப்படுவதுதான் பூணூல் ஆகும். இந்தப் பூணூல் அடையாளம் எதற்குத் தேவைப்படுகிறது? மந்திரங்களில் ராஜமந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும். நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்லும் சிறந்தவனாகயிருக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையைக் காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதறவிடாமல் காக்கிறது. இந்த மந்திரத்தைச் சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்துவிட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.

பூணூலில் மூன்று புரி நூல்கள் இருக்கும். இவை சிவன், விஷ்ணு, பிரம்மாவையும் சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும். அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களையும், ஞாபகப்படுத்துகிறது. முக்காலத்தையும், விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம். மேலும் மனிதன் பரலோக, இகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.

மூன்று நூல்களையும் இணைத்து முடிவில் போடுகின்ற முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர். மனித உடலில் ஓடும் இடகலை, பிங்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியில் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சு உருவகமாகக் காட்டுகிறது.

வேதங்கள் பூணூலைப் பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோபவிதம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன.

சூத்ர, வைசிய, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்தப் பிரம்மாணங்கள் வலியுறுத்துகின்றன. தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய்விட்டது.

பழைய ஆரோக்கியமான சமூக நிலையை உருவாக்க விரும்பிய பாரதியார் தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார். இன்றைய சமூக சீர்திருத்தக்காரர்கள் பூணூல் அறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு எல்லோருக்கும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும்.

பூணூலைப் பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும். இயற்கை உபாதைகள் பரிவராதவர்கள் காதுகளில் பூணூலைச் சற்று அழுத்தமாக சுற்றிக் கொண்டால் மிகச் சுலபமாக பிரச்சினை தீரும். இது அனுபவ உண்மை மட்டுமல்ல, மருத்துவ உண்மையாகும்.
- யோகி சிறீராமானந்தா குரு (நமது எம்.ஜி.ஆர். 13.3.2012 பக்.7)


கடவுள் உண்டா?

விண்மீதுமு கடவுளர் உளர்
என்றே விளம்புகின்றாரா சிலர்?
இல்லை இல்லை! கடவுளர் அங்கில்லை!
மூடமதியினர் மூடமதி கதை கூறி
முடமாக்க முனைகின்றார்.
இசையாதீர்!
காரணம் காட்டுவேன் கருத்தில்
கொண்டு உண்மை காண்பீர்!
கொலையோடு கொள்ளை சூது
சூழ்ச்சிகள் செய்திடும் மன்னர்
திருநகர் பலவும் தீக்கிரையாக்குவர்
இச்செயல் புரிந்திடும் இவரெலாம்
சாந்த சீலர் தமை விட இன்பமாய்
வாழ்கின்றார்!
கடவுளை நம்பிடும் சிறுநாடு பல
கடவுள் நெறி இகழும் பேரரசுக்குப்
பலியாயின!
படைபலம் கொண்டவன்
அடிமை கொள்கிறான்.

-- அறிஞர் அண்ணா காஞ்சி ஆண்டு மலர், 1965

--------------- மின்சாரம் அவர்கள் 17-3-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

இலங்கைக்கு எதிரான தீர்மானம்... சிதம்பரம் முயற்சியால் ஆதரிக்கிறது இந்தியா?

டெல்லி: இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், "எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா... இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது," என்ற கேள்விகளை பாராளுமன்றத்திலேயே தமிழர் கட்சிகள் முன்வைத்தன.

தா பாண்டியன் போன்றவர்கள், இந்த முறை இந்தியா இலங்கைக்கு ஆதரவு காட்டினால், நான் ஒரு இந்தியன் என்ற குடியுரிமையையே மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். நான் மட்டுமல்ல, இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்லும் நிலைக்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தள்ளப்பட்டுவிடும் என பகிரங்கமாகக் கூறினார்கள்.

திமுக எம்பிக்களும் இதையே பாராளுமன்றத்தில் எதிரொலித்தனர். ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிமுகவினரும் இந்த விஷயத்தில் உறுதியாக நின்று மத்திய அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.

இனியும் இந்தப் பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கியதாகத் தெரிகிறது.

"இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்பதை, அது தமிழ் இனத்துக்கே எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு பகையாளியா? என்ற கேள்வியை கிருஷ்ணாவின் அறிக்கை எழுப்பிவிட்டது," என அழுத்தமாகக் கூறியுள்ளாராம் ப சிதம்பரம்.

தமிழ் ஓவியா said...

இது பிரதமர், சோனியா உள்ளிட்ட அனைவரையுமே யோசிக்க வைத்துள்ளது. எனவே சில முக்கியமான அம்சங்களில் திருத்தங்கள் செய்து, தீர்மானத்துக்கு ஆதரவு தரலாம் என்பதே இப்போதைய நிலைப்பாடு என்கிறது டெல்லி வட்டாரம்.

இன்னொரு பக்கம், இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெருமளவு பெற்று வரும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்து செயல்படுவது டெல்லியை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, நாச்சிக்குடா, கச்சத் தீவில் சீனாவை காலூன்ற வைக்கும் வகையில், சீன வீரர்கள் உதவியுடன் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

எனவே இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் விதமாக, ஐநாவில் தமிழருக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கலாம் என்கிறார்கள்.

SM Krishna, Pranab Mukherjee,AK Antony, Manmohan Singh and P Chidambaramஇதிலும் ப சிதம்பரத்தின் பங்குதான் முக்கிய அங்கம் வகிக்கிறது. ராஜீய உறவுகளில் இலங்கை தொடர்ந்து இழைத்து வரும் துரோகம், இலங்கைக்கு ஆதரவளிப்பதால், தமிழகத்தில் எந்த அளவு காங்கிரஸ் அந்நியப்பட்டு நிற்கிறது என்ற உண்மை ஆகியவற்றை ப சிதம்பரம்தான் இந்த முறை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

இவரது கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், அந்தோனி ஆகியோர் ஒப்புக் கொண்டதைவிட, எப்போதும் இலங்கையின் நண்பனாகத் திகழும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டதைத்தான் டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பேசுகிறார்கள்.

இன்னொரு பக்கம் திமுகவுக்கு நேர்ந்துள்ள பெரும் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளுமாறு சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளார்.

"மம்தாவைப்போல இந்த முறை கருணாநிதி கடும் நிலைப்பாட்டை மேற்கொண்டால், மத்திய அரசு தார்மீக ரீதியாகவே பலமிழக்கும். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் அரசு தமிழர் விரோதமாகப் போவதால், தமிழகத்துக்குள் முற்றாக ஆதரவை இழந்து நிற்க வேண்டி வரும்" என்ற நிதர்சனத்தை முன்னெப்போதையும்விட தெளிவாகவே உணர்த்தியுள்ளார் சிதம்பரம் என்கின்றனர்.

தங்கள் கோஷ்டி சண்டைகளை மறந்து, இந்த முறை சிதம்பரத்தின் கருத்தை முழுமையாக ஆதரித்துள்ளனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இதுவும் மத்திய அரசின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

மார்ச் 23-ல் வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் வரும் மார்ச் 22 அல்லது 23ம் தேதி ஐநா மனித உரிமைச் சபையில் ஓட்டுக்கு விடப்படுகிறது. ஏற்கெனவே இந்தத் தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவிள்ளன. இன்னும் ஒரு நாடு ஆதரவளித்தாலே போதும். எனவே இந்தியா ஆதரித்தாலும், இல்லாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் எம் தந்தையர் நாடு என்று ஈழத் தமிழர்கள் கொண்டாடிய தேசமான இந்தியா, இத்தனை துயரங்களுக்குப் பிறகாவது அரவணைக்காதா என்ற ஏக்கம் உலகத் தமிழரிடையே நிலவுகிறது. தாயகத் தமிழர்கள் 8 கோடி பேரின் ஆதங்கமும்கூட அதுவே.

அதைப் புரிந்து நடந்தால் இந்தியா இழந்த மரியாதையையும் அபிமானத்தையும் ஓரளவுக்குப் பெறும்!
---------------http://tamil.oneindia.in/news/2012/03/18/india-india-support-us-resolution-against-aid0136.html

தமிழ் ஓவியா said...

வன்முறை ஊழல் ஒழுக்கக் கேட்டின் உறைவிடம்


பாரதிய ஜனதா ஆட்சி என்றால் வன்முறை - ஊழல் ஒழுக்கக் கேட்டின் ஒட்டு மொத்தமான உறைவிடம் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் அன்றாடம் நடை பெறும் நிகழ்ச்சிகளே இவற்றை நிர்வாணமாக நிரூபிக்கின்றன.

வன்முறை என்பதற்கு குஜராத் மாநிலம் ஒன்று போதுமே. நரேந்திரமோடி என்றால் நர வேட்டை மனிதன் என்கிற முத்திரை ஆழமாகப் பதிந்து போன ஒன்றே! என் ஆட்சியில்தானா மதக் கலவரம் நடந்தது? என் ஆட்சிக்கு முன்பும் நடைபெற்றுள்ளது என்று கூறியிருப்பதன் மூலம் தமது ஆட்சியில் மதவன்முறை நடைபெற்றது உண்மையே என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

இதற்குமேல் தம்மீது படிந்த வன்முறைக் கறையை மறைக்க முடியாது என்ற நிலையில், வேறு வழியின்றி இப்படி அவர் பேசி இருப்பது ஒரு வகையில் திருப்பத்தைத் தரக் கூடியதே!

உச்சநீதிமன்றம் அவரை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டுச் சொன்னதை இப்பொழுது நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

மூன்று நாள்கள் அவகாசம் கொடுத்து அதற்குள் சிறுபான்மையின மக்களின் கதையை முடித்து விடுங்கள்! காவல்துறை கண்டு கொள்ளாது என்று முதல் அமைச்சராக இருந்தபோது சொன்னதை ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களே தெகல்கா முன் கூறியது ஒலி- ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. (சோ ஒருவர்தான் இதை நம்பவில்லை. அந்த அளவுக்கு வறட்டுத்தனமான ஆர்.எஸ்.எஸ். பக்தர் அவர்)

இரண்டாவதாக ஊழல் என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவில் முதன்மையான இடத்தில் இருப்பது பி.ஜே.பி. ஆளும் கருநாடக மாநிலம்தான்.
அம்மாநில அமைச்சர்கள் இருவர் இன்னும் சிறையில்தான் உள்ளனர். எடியூரப்பா மீதான வழக்கி லிருந்து விடுபட்டதாக ஒரு காரணம் கூறப்படுகிறது. உண்மை என்னவென்றால் இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கத்தான் செய்கின்றன. முற்றிலும் விடுவிக்கப்படவில்லை என்பதை மறக்கக் கூடாது.

மூன்றாவதாக ஒழுக்கக்கேடு பற்றியது. பி.ஜே.பி. அமைச்சர்கள் மூவர் சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது கைப்பேசியில் ஆபாச நிர்வாண காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டி ருந்த காரணத்தால் அமைச்சர்களின் பதவிகள் பறி போய்விட்டன.

இதற்காக பி.ஜே.பி. அமைச்சர் சொன்ன சமாதானம் இருக்கிறதே - அதை நினைத்தால் ஒரு பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று கேட்டதற்குப் புல் பிடுங்கப் போனேன் என்று சொன்னவன் கதைதான் நினைவிற்கு வருகிறது.

பிப்ரவரியில் உடுப்பி அருகே இருக்கும் செயின்ட் மேரி தீவில் செக்ஸ் பார்ட்டியை பி.ஜே.பி. அரசு ஆதரிக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுவதை எதிர்த்துப் பேச தனக்கு விஷயங்கள் தேவை என்று அந்தக் காட்சிகளைப் பார்த்ததாக விளக்கம் கொடுத்துள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா சொன்ன காரணம் இருக்கிறதே - அது ஆபாசத்துக்குப் பொட்டு வைத்தது போன்றதாகும். இது என்ன பெரிய குற்றம் - குடி மூழ்கிப் போய் விட்டது? மற்றவர்கள் அவ்வாறு பார்ப்பதை யார் தடுத்தார்கள் என்று ஒரு போடு போட்டாரே பார்க்க லாம் (அந்த மூன்று அமைச்சர்களும் எடியூரப்பா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இவ்வாறு கூறியுள்ளார்).

பி.ஜே.பி. என்றால் ஒரு வித்தியாசமான கட்சி அறநெறி சார்ந்த கட்சி, தார்மீக ஒழுக்கமுடைய கட்சி என்று சொல்லுவதெல்லாம் ஊரை ஏமாற்றும் உதார் பிரச்சாரம் என்பதை உணர வேண்டும். இந்த யோக்கியதையில், மாநிலங்களை ஆளும் பி.ஜே.பி. தான் மத்தியில் மீண்டும் ஆள வேண்டுமாம். அதுவும் நர வேட்டை நரேந்திர மோடி பிரதமராக ஆக வேண்டு மாம். நாடு சுடுகாடாகத்தான் இந்தச் சத்தம் - எச்சரிக்கை! 20-2-2012