Search This Blog

29.3.12

சகல துறைகளிலும் அறிவைப் பயன்படுத்த வேண்டும் -பெரியார்


தந்தை பெரியார் அவர்கள் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டதாவது:-

பெருமை சான்ற கல்லூரி துணைத் தலைவர் அவர்களே, கல்லூரி மாணவர் யூனியன் தலைவர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே! நான் இந்தக் கல்லூரிக்கு வந்து சொற்பொழிவாற்ற வேண்டும் என்று அழைக்கப்பட்டு இருக்கின்றேன்.

நான் இங்கு வந்ததுமே எதைப் பற்றி பேசப் போகிறீர்கள் என்று மாணவர் தலைவர் கேட்டார். எனக்கும் எதைப் பற்றிப் பேசுவது என்று புரியவில்லை. நமது தேவைகளைப் பற்றித்தான் பேசலாம் என்று இருக்கின்றேன் என்று கூறினேன்.

நான் சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டதை மட்டுமே ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளிவிட வேண்டு கின்றேன்.நமது நாட்டில் சொல்லுகின்றதைக் கேட்டு உங்கள் அறிவுக்குப்பட்டதை ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளுங்கள் என்ற அறிவுரையோ, உபதேச மோ நீண்ட நாளாகவே இல்லை.

நீ எதிலும் உன் சொந்தப் புத்தியைப் பயன்படுத் தாதே. முன்னோர்கள் சொன்னபடி, சாஸ்திரம் சொன்னபடி, மகான்கள் சொன்னபடி நட என்றுதான் சொல்லி வைக்கப்பட்டு இருக்கின்றதே ஒழிய, அறிவுப் படி நட என்று கூறப்படவே இல்லை. நம்நாட்டில் உள்ள பெரிய குறைபாடு இதுதான். இக்குறை இல்லாதிருந் தால் நாம் எவ்வளவோ முன்னுக்கு வந்து இருப்போம்.

இன்றைக்கு நம் நாட்டை எடுத்துக் கொண்டால் எது குறைபாடு என்று சொல்லத் தோன்றவில்லை. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாலும் மிகுந்து தான் இருக்கின்றது. ஆனால், அறிவுக் குறைபாடு ஒன்றுதான் உள்ளது. மதத் துறையை எடுத்துக் கொண்டாலும், கடவுள் துறையை எடுத்துக் கொண் டாலும், சாஸ்திரத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஏராளமாக உள்ளன. இருக்கின்றதை குறைக்க வேண்டுமானால் முடியுமே ஒழிய, கூட்ட இடமே இல்லை.

அரசியல் துறையினை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தேவைக்கு மேல் உரிமை வந்துள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகளுக்குக் கூட ஓட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதைவிட என்ன வேண்டும்?

பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண் டாலும், வாழ்க்கைத் துறையை எடுத்துக் கொண்டாலும் எவ்வளவோ முன்னுக்கு வந்துள்ளோம். சட்டியில் சோறு தின்றவன்கள் எல்லாம் இன்று எவர்சில்வர் பாத்திரத்தில் அல்லவா சாப்பிட்டு வருகின்றார்கள். அன்று கோவணம் கட்டிக் கொண்டு தான் பெரும் பாலான கிராமத்துக்காரர்கள் இருந்தார் கள். சட்டையே போட மாட்டார்கள். இவர்கள் எல்லாம் இன்று குதிக்கால் மறைய வேட்டி, சட்டை உள்ளே பாடி மேலே, அங்கவஸ்திரம் இதுகளுடன்தான் வெளிவரு கின்றார்கள். முன்பு வேலை செய்யும் பெண், பிள்ளைகள் எல்லாம் கிழிந்த ஜால்ரா சேலைதான் கட்டியிருப்பார்கள். ரவிக்கை கிடையாது. இன்று அவர்கள் ஆடை, அணிகலன்களில் எல்லாம் எவ்வள வோ மாறுதல் அடைந்து இருப்பதைக் காண்கிறோம்.

முன்பு 12 அணாவுக்கு வேலைக்கு வந்த கொல்லத்துக்காரன் இன்று 3 ரூபாய், 3.50 ரூபாய் வாங்கு கின்றான். 3.50 ரூபாய் வாங்கியும் போதவில்லை என்கின்றான். ஆனால், தினம் இவன் ஒன்றிரண்டு ரூபாய்க்கு காப்பி குடிக்கின்றான்.

வேலை இல்லா திண்டாட்டம் என்று கூறப்படு கிறது. இது சுத்த பொறுப்பு இல்லாத பேச்சு. இன்று வேலைக்குத் திறமையான ஆள் இல்லை என்று தான் கூற வேண் டும். இன்று 4 ரூபாய் வாங்கிக் கொண்டும் வேலை செய்ய நல்ல கொத்தான், தச்சன் கிடைக்க வில்லையே.

நாலு எழுத்துப் படித்துப் போட்டு பேனா பிடித்து உத்தியோகம் பண்ண நினைத்துக் கொண்டு வேலை இல்லையே, வேலை இல்லையே என்று கூப்பாடு போடுகின்றார்கள். இவர்கள் படித்து உத்தியோகம் கிடைக்கவில்லை என்பதைத்தான் வேலை இல்லாத் திண்டாட்டம் என்கின்றானே ஒழிய, அத்தியா வசியமான வேலைகளுக்குத் தகுதியான, போதுமான ஆட்கள் கிடைக்க வில்லையே. அவர்களிடத்தில் நாணயம் இல்லையே என்பதில் எவன் கவலைப்படு கின்றான்?

என் தொண்டு நாட்டிலே வெகு பேர்களுக்குப் பிடிக்காது. ஆனால், என் தொண்டின் பயனை அனுபவிக்கிறதில் வேண்டுமானால் விரும்புவார்களே ஒழிய, எங்கள் தொண்டின் போக்கை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். வெறுக்கத்தான் செய்வார்கள்.

தோழர்களே, நான் ஒரு பகுத்தறிவுவாதி. இந்த நாட்டில் பகுத்தறிவுவாதிகள் மிக மிகக் குறைவு. பகுத்தறிவுவாதிகள் தங்களுக்கு முன்னோர்களைத் துணைக்கு இழுத்துப் பேச மாட்டார்கள். எதையும் அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும் என்று கூறுவதன் காரணமாக நாஸ்திகன் என்று தூற்றப் படுகின்றான்.

இந்த நாட்டில் நம்பிக்கைவாதிகள்தான் அதிகம். நம்பிக்கை வாதிகள் என்றால் எதை எடுத்தாலும் முன்னோர்களையும், கடவுள்களைத் துணைக்கு இழுத்துப் பேசுவார்கள். முன்னோர்கள் நடப்புக்கு மாறாகி நடக்கக் கூடாது என்பார்கள். இவர்களுக்குப் பெயர் இந்த நாட்டில் ஆஸ்திக சிகாமணிகள் என்று எல்லாம் போற்றப்படுகின்றார்கள். இந்த நாட்டில் முதன்முதல் அறிவுப் பிரச்சாரம் செய்தவர் புத்தர்தான். இவர் இயற்பெயர் புத்தர் அல்ல, சித்தார்த்தர் என்பது. இவர் புத்தியை ஆதாரமாகக் கொண்டு எதையும் சிந்தித்து எடுத்துச் சொன்னதின் காரணமாக புத்தியை உபயோகப்படுத்தி எதையும் பார்க்கச் சொன்ன காரணத்துக்காக ஒழிக்கப்பட்டு இருக்கின்றார். மடாலயங்களை எல்லாம் இடித்து பாழ் செய்து இருக்கின்றார்கள்.

இந்நாட்டில் புத்தியை உபயோகப் படுத்தச் சொன்ன ஆள் புத்தருக்குப் பிறகு வள்ளுவர் தான்.

இவர், எப்பொருள் யார்வார்
வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

அவருக்கு அடுத்தபடி நாங்கள் தான் சொந்த புத்திக் கொண்டு எதையும் சிந்தித்துப் பார்த்து சரி என்று பட்டதை ஏற்றுக் கொண்டு, மற்றதை தள்ளி விடுங்கள் என்கின்றோம் என்று குறிப்பிட்டு, மேலும் பேசுகையில், மாணவர்கள் சகல துறைகளிலும் அறிவைப் பயன்படுத்தி காரியம் ஆற்ற வேண்டும் என்றும், மூட நம்பிக்கைகளை அறவே விட்டொழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் பேசுகையில், நமது கடவுள், மதம், சாஸ்திரங்களின் பேரால் நாம் கீழ்மக்களாகவும், அறிவுத் துறையில் பின்னடைந்து இருப்பவர்களாகவும் இருப்பது பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

---------------------24.8.1961 அன்று விருதுநகர் செந்தில்குமார் கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 5.9.1961.

1 comments: