Search This Blog

16.3.12

திரு.வி.க. பார்வையில் திராவிடர், திராவிடம், திராவிட நாடு - 4


நேற்றைய தொடர்ச்சி...

அடுக்கடுக்காக அன்று வினாக்களைத் தொடுத்தார் திரு.வி.க. இன்று பிரிவினை என்பதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் விட்டுவிட்டு, எவ்வளவோ தொலைவு இந்திய ஒருமைப்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் அடுக்கடுக்காக பாகிஸ்தான், சீனப்போர் ஆக்கிரமிப்பு எல்லைத் தாக்குதல், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றின் பயனால் ஏற்பட்டது.

எனவேதான் அண்ணா அவர்கள் 1962இல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையினைக் கைவிட்டது என்பதை அறிவித்தார். அப்போதும் கூட அண்ணா அவர்கள் பிரிவினைக் கோரிக்கையை ஒத்தி வைத்திருப்பதாகவும், பதிலாக மாநில சுயாட்சி மய்யத்தில் கூட்டாட்சி எனும் கொள்கையை வலியுறுத்துவ தாகவும், பிரிவினைக்கு எழுப்பிய கோரிக்கையின் நியாயம் தொடர்ந்து இருந்து வருவதாகவும் வலியுறுத்தியது நினைவு கூரத் தக்கதாகும்.

இன்றைய நாளில் திராவிட இயக்க நூற்றாண்டு விழாக் கொண்டாடுவது திராவிட நாட்டுப் பிரிவினை கோரியதாகக் கருதுவது தவறு. ஆனால் அதே வேளையில் திராவிட மக்களின் எழுச்சியை, இழிநிலை இன்றும் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதோடு, வாழ்வில் உயரக் கல்வியில், தொழிலில் கவனத்தைச் செலுத்த வழிகாட்டுவதே ஆகும்.

திரு.வி.க. தமது தொழிலாளர் ஆதரவுக் கோணத்தில் அன்றைய இந்திய தேசியக் காங்கிரசை விமர்சித்தார். காங்கிரசை விட்டுப் பழம்பெரும் தேசியத் தலைவர்கள், காங்கிரசை உடல், பொருள், உழைப்பு ஆகியன அனைத்தும் கொடுத்து உயர்த்திய உழைத்த தந்தை பெரியார், தாம் காங்கிரசை விட்டு விலகியது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் தெரிவித்தது இன்றைய நாள் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய, அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மைகள்.

நான் பன்னெடுங்காலமாகப் பாடு பட்டு வளர்த்த காங்கிரஸ் இன்று சாகும் நிலைக்கு வந்து விட்டதே எங்கள் கண் முன்னாலேயே. எத்துணை பெரியவர்கள் காங்கிரசின் வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்தார்கள். பெசன்ட் என்ன, சுரேந்திரநாத் பேனர்ஜி என்ன, தாதாபாய் நவ்ரோஜி என்ன, ஒரு திலகர் என்ன, ஒரு கோகலே என்ன, ஒரு காந்தியார்தான் என்ன, இவர்கள் வளர்த்த காங்கிரசார் இன்று நம் கண்முன் காணப்படுகிறது. தோழர்களே! ஆகஸ்டு வரைதான் எனக்குக் காங்கிரசின் மீது பற்றுதல் இருந்தது. ஆகஸ்டு 15ஆம் தேதி அதிகாரம் மாறிய அன்றே என் மனமும் மாறி விட்டது. சுதந்திரம் வந்து விட்ட தாகக் கருதப்பட்ட அன்றைய தினமே காங்கிரஸ் கலைக்கப்பட்டிருக்க வேண் டும். கலைக்கப்பட்டிருந்தால் எவ்வளவோ நன்றாய் இருந்திருக்கும். காங்கிரஸ் இவ்வளவு கீழ் நிலைக்கு வருவதைக் காண வேண்டியி ருந்திருக்காது. 40 ஆண்டுக் காலத்திற்கு மேலாக நாங்கள் உழைத்து உழைத்து வளர்த்து வந்த காங்கிரஸ், தொழிலாளர்களுக்குள்ள எல்லாக் குறைகளையும் போக்கும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்களால் வளர்க்கப்பட்டு வந்த காங்கிரஸ், முடிவில் தொழிலாளர்களின் வயிற்றிலேயே அடிக்க ஆரம்பித்து விட்டதென்றால் அத்தொழிலாளர்களைக் காங்கிரசைப் பின்பற்றி நடக்கச் செய்த எங்கள் மனம் பொறுக்குமா? அடுத்துக் காங்கிரசில் இருந்த தங்கள் செல்வாக்கைக் குறித்துப் பேசும் செய்தி இது.

தோழர்களே! எனக்கும் பெரியாருக்கும் உள்ள நட்பின் பெருமையை நீங்கள் உள்ளபடி உணர்ந்திருக்க மாட்டீர்கள். நாங்கள் இருவரும் சற்றேறக்குறைய ஒரே நேரத்தில் காங்கிரசில் சேர்ந்தோம். ஒரே நேரத்தில் காங்கிரசை விட்டு விலகி னோம். ஒரு முறை காஸ்மோபாலிடன் கிளப்பில்; நாங்கள் இருவரும் கூடித் தோழர் ஷண்முகம் செட்டியார் முன்னி லையில் காங்கிரசிலிருந்து விலகிக் கொள்வதென்றும் மறுபடி இருவரும் கலந்து பேசிக் கொள்ளாமல் எப்போதும் அவ்வியக்கத்தில் சேர்வதில்லை என்றும் முடிவு செய்து கொண்டோம். அம்முடிவுப் படியேதான் நாங்கள் இதுவரையும் நடந்து வந்திருக்கிறோம். ஆகஸ்டு 15 ஆம் தேதிக்குப் பிறகு காங்கிரசை மறந்து விட்டுத் தொழிலாளர் இயக்கத்தையும் மறந்துவிட்டு ஒதுங்கி விட்டேன், பூரண ஓய்வுடன் இருக்க விரும்பி. அது சமயம் டி.எஸ்.எஸ். ராஜன் வாயிலாக எனக்கோர் அழைப்பு வந்தது. அதை நான் இயற்கையின் எச்சரிக்கையாகக் கருதிக் கொண்டேன். ஒதுங்கி இருந்த என்னை இத் துரோகி ஏன் அழைக்க வேண்டும் என்று ஆலோசித்தேன். ஏன் ஒதுங்கி யிருக்கின்றாய்? தொழிலாளர்கட்கு மீண்டும் பணி செய் என்று இயற்கை எனக்கு எச்சரிக்கை செய்ததாகவே நான் அதை எடுத்துக் கொண்டேன்.

மறுபடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டேன். போராட்டக் காலத்தில், காங்கிரஸ் ஸ்தாபனம் எவ்வளவு பிற்போக்கு அடைந்து விட்டது என்று மீண்டும் கண்டேன். அத்தொழிலாளர் போராட்டத் தின் போது பலர் என்னை விட்டுப் பிரிந்தார்கள். பலர் கலங்கினார்கள். பெரியார் கலங்கினாரில்லை. வந் தார் என்னுடன். வீர உரையாற் றினார். அப்போராட்டம் இன்றும் முடிவடையாமல்தான் இருந்து கொண்டிருக்கிறது. திராவிடர் கழகம் தன் அறப்புரட்சியின் மூலம் வெற்றி பெறும்போதுதான் தொழி லாளர் வாழ்வு மலரும்.

ஆரியரும் திராவிடரும் குறித்துத் திரு.வி.க. குறிப்பிட்டதை இங்கே சுட்டிக் காட்டுதல் வேண்டும். எவ்வளவு எடுத் துக் கூறினாலும் ஆரியரும், திராவிடரும் ஒன்றென்று பிதற்றிக் கொண்டு வருகி றீர்களே! ஆராய்ச்சி நூல் எதையேனும் படித்துப் பார்த்ததுண்டா நீங்கள்? ஆரியக் கலை வேறு; திராவிடக் கலை வேறு; ஆரியப் பண்பு வேறு; திராவிடப் பண்பு வேறு என்பதை ஜெர்மன் ஆராய்ச்சியாளர் கள் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

திருக்குறள் ஒன்றே போதுமே ஆரியத்தையும், திராவிடத்தையும் பிரித்துக் காட்ட. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றைப் பற்றித்தானே எழுதியிருக்கிறது. வீட்டைப் பற்றி மோட் சத்தைப் பற்றிக் குறிப்புக் கூடக் காட்ட வில்லையே திருவள்ளுவர்! திருவள்ளுவர் ஒன்றும் நாஸ்திகர் அல்லவே! இருந்தும் ஏன் மோட்சத்தைப் பற்றிப் பேச மறுத் தார்? திருக்குறள் திராவிடப் பண்பை விளக்கும் நூல். எனவே ஆரியப் பண்பான மோட்சத்துக்கு அதில் இடம் இருக்கக் கூடாது என்பதால்தானே!

வீட்டிற்கு எல்லை கட்டியவனாயிற்றே தமிழன்! அறம், பொருள், இன்பம், இவற் றோடு தன் வாழ்க்கைக்கு எல்லையைத் தீர்மானித்துக் கொண்டவனாயிற்றே தமிழன்! தொல்காப்பியர் முதல், திருவள் ளுவர் ஈராக எந்தத் தமிழனும் இவற்றைத் தாண்டி ஏதும் இருப்பதாகச் சொல்ல வில்லையே! கேபிடல் என்னும் உலகம் போற்றும் பொருளாதாரத் தத்துவ நூலை எழுதிய கார்ல் மார்க்ஸ் என்பவரும் இதைத்தானே கூறியுள்ளார்? திருவள் ளுவர் கூறிய அறம், பொருள், இன்பம் இவற்றுடன் நின்றவரை தமிழர்கள் தம் நாட்டை இழந்தாரில்லை. நாகரிகத்தில் அந்த வளர்ச்சியில், எதிலும் குறைந்தாரில்லை.

-------------முனைவர் பேரா. ந.க.மங்களமுருகேசன் அவர்கள்15-3-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

அன்னையார் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்போம்!


இன்று அன்னை மணியம்மையார் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள். இந்நாள் நமக்குச் சடங்காச் சாரமான நாளல்ல; ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

தந்தை பெரியார் மறைந்த நிலையில், அன்னையார் அவர்கள் கழகத் தலைமைப் பொறுப்பை ஏற்று ஓர் உறுதிமொழியை ஏற்கச் செய்தார்கள்.

தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலங் களுக்கும் ஆளாகாமல் சென்று முடிப்போம்! என்பதுதான் அந்த உறுதிமொழி. அதனை அம்மா அவர்களின் காலத்திலும் சரி, அவர்கள் மறைந்த நிலையிலும் சரி, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகள் அவர் போட்டுத் தந்த பாதையில் தொடர்ந்து கொண்டே தான் உள்ளன.

1) குறிப்பாக அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் திணிக்கப்பட்ட வருமான வரம்பு ஆணையை எதிர்த்துத் தமிழர் தலைவர் தலைமையில் நடத்தப்பட்ட தொடர் போராட்டம் - அதன் விளைவாக அந்த ஆணை திரும்பப் பெறப்பட வைத்ததோடு அல்லாமல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் விழுக்காடு 49-லிருந்து 69 ஆக உயர்ந்தது.

69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் பாதுகாக்கப்படத் தேவையான சட்ட உதவியை செய்ததும் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள்தான்.

2) இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் காலந் தொட்டு மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

காகா கலேல்கர் தலைமையிலான முதலாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டும், அதன் பரிந்துரைகள் அலமாரிகளில் குறட்டை விட்டுத் தூங்கியதுதான் மிச்சம்.

இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பிந்தேஸ்வரி மண்டல் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் உரிய நேரத்தில் தம் பரிந்துரைகளைச் சிறப்பாக அளித்தும், பரிந்துரைகளைச் செயல்படுத்த வைக்க 10 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி அதன் விளைவாக, தமிழ் நாடு அளவில் மட்டுமல்ல; அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைக்கும் வகை செய்யப்பட்டது.

(3) பகுத்தறிவுப் பிரச்சாரத் திசையில் எண்ணிறந்த மாநாடுகள், மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள், கருத் தரங்குகள், தொடர் பிரச்சாரங்கள், கிராமப் பிரச்சாரம் கல்வி நிறுவனங்கள் முன் பிரச்சாரம் என்று முடுக்கி விடப்பட்டன. வெளியீட்டுத் துறையில் புதிய சகாப்தமே உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லலாம்.

நூற்றுக்கணக்கான சிறு வெளியீடுகளும், களஞ்சியங் களும், குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. மாதம் ஒருமுறை இருந்த உண்மை மாதம் இருமுறையாக கொண்டு வரப்பட்டது. குழந்தைகளுக் காகப் பெரியார் பிஞ்சு மாத இதழ் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. விடுதலை நாளேடு 4 பக்கங் களிலிருந்து 8 பக்கம் விடுதலை ஆக்கப்பட்டு, திருச்சி யிலும் இன்னொரு பதிப்புக்கு வகை செய்யப்பட்டது. சந்தாச் சேர்ப்பு ஓர் இயக்கமாகவே நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தழுவிய அளவில் நூல்கள் மக்களைச் சென்றடைய நடமாடும் புத்தகச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் நடத்தும் புத்தகக் கண்காட்சிகளில் எல்லாம் இயக்க நூல்கள் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

(4) இளைஞர்களுக்கு, மாணவர்களுக்குத் தொடர்ந்து பெரியாரியல் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. களப்பணி முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. பெரியார் சமூகக் களப்பணி உருவாக்கப்பட்டது.

(5) பெண்ணுரிமை என்பது இயக்கத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும் அம்சமாகும். ஏராளமான பெண்கள் மாநாடுகள், விதவையர்க்கும் பூச்சூட்டு விழா, மகளிரணி, மகளிர் பாசறை என்ற அமைப்புத் தொடங்கப்பட்டு புது வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன.

(6) அய்யா, அம்மா காலத்தில் தொடங்கப்பட்ட நாகம்மையார் குழந்தைகள் இல்லம் செழுமைப்படுத்தப் பட்டு, புதிய கட்டடங்கள், நவீன வசதிகள் செய்து நிமிர்ந்து நிற்கின்றன. சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் தம் இணையருடன் அவ்வில்லத்தைப் பார்த்து வியந்து தமது கவிதை நூலுக்கான ராயல்டியை உவகையுடன் வழங்கிடச் செய்தார்.
(7) தஞ்சையில் கடந்த 10,11 ஆகிய நாள்களில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 5 திசைகளில் 5 குழுக்களாகப் பிரிக்கப் பட்டு, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை முழக்கப் பிரச்சாரக் கூட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் அதிகக் கூட்டங்கள் நடத்தியது திராவிடர் கழகமே என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

தந்தை பெரியார் அவர்களின் தொண்டறம் தொய் வின்றி தொடர வேண்டும் என்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இந்நாளில் அன்னையாரை வழி காட்டியாகக் கொண்டு, நம்மை நாம் குடும்பம் குடும்பங் களாக அர்ப்பணித்துக் கொள்ள உறுதி எடுப்போம்!

வாழ்க பெரியார்!
வாழ்க அன்னையார்! 16-3-2012

தமிழ் ஓவியா said...

அன்னையார் நினைவு அலைகள்!


இன்று, நமது அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் என்ற தன்னேரிலாத, தன்மான, தன்னல மறுப்பின் இலக்கணமான தகைசான்ற தலைவரின் 33ஆவது நினைவு நாள்.

நாம் அடிக்கடி குறிப்பிடுவதுபோல, நமது திராவிடர் இயக்கத் தலைவர்கள், நினைவு நாள் என்பது சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல; சரித்திரக் குறிப்பு. அவ்வளவுதான்; எந்நாளும் அவர்தம் பாதையில் நடைபோட்டும் பெரியார் பணி முடிக்க எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாது லட்சியப் பயணத்தைத் தொடரும் நமக்கு அவர்தம் தொண்டறம் மறக்கப் படாதவை; மக்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டியவை!

எம்மைப் பொறுத்தவரை இந்த எளிய பெரியார் தொண்டனுக்கு - தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் எதையும் சிந்திக்காது, கண்ணை மூடிக் கட்டுப் பாட்டுடன் கழகத்தில் செயல்பட்ட ஒரு இராணுவச் சிப்பாய் என்ற கடமை மட்டுமே; அது அய்யாவிற்குப் பின் அன்னையார் தலைமை ஏற்ற பின்பும் தொடர்ந்த நிலை!

சிந்திப்பது எம் பணி அல்ல; செயல்படுவதே எம் பணி!

எம் கடமை என்று தொடர்ந்து, கொடி தூக்கி, கொள்கையைக் காத்து, சிறையோ, போராட்டக் களமோ என்று தலைமையின் ஆணைவரும் போதெல்லாம் தட்டாமல் ஈடுபடும் பணிக்கு எம் பொறுப்பு முடிந்தது என்ற எளிதான நிலை!

ஆனால் 16.3.1978-க்குப் பின் தலைவர் அன்னையார் மறைந்த பின்பு, அய்யா, அன்னையார் அவர்தம் அரும் தொண்டர்கள் தோழர்கள் ஆணையை ஏற்று பொறுப்புக்கு வந்தபின், தனி மரமானோமோ -நமக்கு வழிகாட்டும் ஒளியாம் அந்த கலங்கரை விளக்குகள் மரணம் என்ற சூறாவளியால் தகர்த்தெறி யப்பட்ட நிலையில் - அடுத்து நம் கழக நிலை என்ன என்ற ஏக்கமும் கவலையும் வாட்டி வதைத்தன!

அன்னையாரின் தனி வாழ்வில்லா பொது வாழ்வில் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும், துரோகங் களுக்கும் பஞ்சமில்லை.

இந்த அறைகூவல்களை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் என்ற பெருங்கவலையும் திகைப்பும் உள்ளத்தை வாட்டியது; உணர்வை அரித்தது. உடலை உலுக்கியது. நம்மை நம் வாழ்வை பலிபீடத்தில் நிறுத்தியாவது, நம்மை நம்பி பொறுப்பை ஒப்படைத்த நிலையில், லட்சியப் போர்க்களத்தில் மரணம் வரும் வரையில் போராடி வெற்றியைப் பறித்து, வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவோம் என்ற உறுதி உள்ளுக்குள் எழுந்தது. எமது உயரம் குறைவுதான்; ஆனால் எம்மைத் தாங்கும் தோள்களின் வலிமையும், உயரமும் பலங் குன்றாதவை மிக உயர்ந்தவை. பகையை வெல்லும் பராக்கிரமத் திற்குரியது என்ற தெம்பு கிட்டியது!

சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தியையே எங்கும், எதிலும் பயன்படுத்துவோம்; அதன் மூலமே காணாமற் போன கலங்கரை விளக்கு வெளிச்சம் கிட்டும் என்று எண்ணினோம்!

பின்பே பயணம் எளிதானது; பாதை தெளிவானது; கூட்டுத் தோழர்களின் ஒத்துழைப்பு மலிவானது, அய்யாவும், அன்னையாரும் மறையவில்லை வாழுகிறார்கள் தத்துவங்களாக என்ற எண்ணம் நம்பிக்கை ஒளியானது.

எத்தனை இடர்கள், இடுக்கண்கள் வந்தாலும் இலட்சியப் பாதையில் எம் பயணம் எமது கூட்டுத் தோழர், தோழியர்களுடன் இலக்கு மாறாப் பயணமாக நடந்து வாகையூருக்குச் சென்று, சுயமரியாதைக் கொடியேற்றி நிறைவு செய்ய மறைந்த அன்னையார் நினைவு நாளில், கறுப்பு மெழுகுவத்திகளின் சுடர்களைக் காத்து ஒரு மெழுகு உருகினால் அதிலிருந்தே ஆயிரமாயிரம் மெழுகுவத்திகளைக் கொளுத்தி அறியாமை, இல்லாமை, கல்லாமை, ஜாதி, பெண்ணடிமை, மூடநம்பிக்கை இருள் அகற்றும் பணியை இடையறாது செய்வோம் வெற்றி பெறுவோம்! சூளுரைத்து பயணம் தொடருவோம்!

வாழ்க தந்தை பெரியார்!

வாழ்க அன்னை மணியம்மையார்!!

வளர்க பகுத்தறிவு!!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

பக்தர்களுக்கு இலவசதாலி வழங்கியவரின் தாலி பறிப்பு


திருவொற்றியூர், மார்ச் 16- சென்னை, திரு வொற்றியூர், வடிவு டையம்மன் கோவில் மாசி திருவிழாவை யொட்டி சுந்தரர் சங்கிலி நாச்சியார் திருக்கல் யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட பக்தர் களுக்கு திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பால கிருஷ்ணா நாயுடு கால னியை சேர்ந்த தன லட்சுமி (வயது 75) மஞ்சள் தாலி பிரசாதமாக வழங்கினார். வழங்கி விட்டு வீட்டிற்கு சென்ற போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை காண வில்லை. உடனே அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தனலட்சுமி திருவொற் றியூர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் தாலி பறித்து சென்ற ஆசாமியை தேடி வரு கிறார்கள். 16-3-2012