Search This Blog

9.6.11

இந்து முன்னணி எழுதிய தினமணி தலையங்கம்


குறிக்கோள் மாறக் கூடாது என்ற தலைப்பில் தினமணி ஏடு இன்று தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. எழுதியது இந்து முன்னணி ராமகோபாலனா தினமணி வைத்திநாதய்யரா என்று சந்தேகப்படத் தேவையில்லை. இருவரும் ஆர்.எஸ்.எஸின் முகங்கள்தாம்.

சமச்சீர் கல்விபற்றி இந்து முன்னணி ராமகோபாலய்யர் ஏற்கெனவே சொன்னவற்றை அப்படியே நகல் எடுத்துத்தான் தலையங்கமாக தினமணியில் தீட்டப் பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி என்ற பெயரில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடலைப் புகுத்துவதையும், பகுத்தறிவுவாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக்களைத் திணிப்பதையும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, வீணாகி விட்டனவே என்று வேதனைப்படுவதைவிட, பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி என்று தினமணி தலையங்கம் கூறுகிறது.

சமச்சீர் கல்வி எதிர்க்கப்படுவதற்கான காரணம் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிடவில்லையா? ஆம் பூனைக்குட்டி வெளியில்வந்துவிட்டது. கலைஞர் அவர்கள் தலைசிறந்த படைப்பாளியில்லையா? எழுத்துலகில் அவருக்கென்று தனி சிம்மாசனம் இல்லையா? உரை நடை, கவிதை, சிறுகதை, புதினம், கவிதை என்று எழுத்துத் துறையில் சகல பரிமாணங்களிலும் முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் இல்லையா? செம்மொழி குறித்து அவரால் எழுதப்பட்ட குறிக்கோள் பாடல் ஒன்று இடம் பெற்றது மாபெரும் குற்றமா?

பகுத்தறிவு வாதம் என்ற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துக்களைத் திணிப்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதாம்.

பகுத்தறிவு வாதம் என்பதே அவர்களின் கண்ணோட் டத்தில் குற்றமாகி விடுகிறது. மாணவர்களுக்கு எந்த வகையிலும் பகுத்தறிவுச் சிந்தனைகள் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதிலே ஒரு கூட்டம் எவ்வளவு உன்னிப்பாக இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
மாணவர்களை கல்விக் கூடங்களுக்கு அனுப்புவதன் நோக்கம் வெறும் நெட்டுருப் போடத்தானா? அவர்களின் பகுத்தறிவை பட்டை தீட்டி கூர்மைப்படுத்துவதுதானே கல்வியின் நோக்கமாக இருக்க முடியும்.

திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றி பாட நூல்களில் இடம் பெற்றுள்ளதாம். அது ஒரு குற்றமாம். திராவிட இயக்கத் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள்பற்றி தமிழ்நாட்டில் சொல்லிக் கொடுக்காமல் வேறு எங்குப் போய் சொல்லிக் கொடுக்க வேண்டுமாம்? இவர்களைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் பிஞ்சு மனங்களில் விஷ விதைகள் தூவப்பட்டதாகப் பொருளா? தந்தை பெரியார் அவர்களின் சமூகப் புரட்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மனிதாபிமானச் சிந்தனைகளை அங்கீகரித்து அய்.நா. மன்றமே விருது அளித்து பாராட்டுகிறது. இந்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடுகிறது. ஆனால் இவர்கள் மட்டும் பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.

பாடத் திட்டங்களில் கந்தபுராணம், திருவிளையாடல் புராணம், மகாபாரதம், இராமாயணம் முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களின் அந்தரங்கத் துடிதுடிப்பு! தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனனுக்கு கடவுள் மோட்சம் கொடுத்ததையெல்லாம் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்தபடலம்) சொல்லிக் கொடுக்காமல், பக்தி தனிச் சொத்து; ஒழுக்கம் பொதுச் சொத்து! என்று சொன்ன பெரியாரின் கருத்துக்கள் பாட நூல்களில் இடம் பெறலாமா? அப்படி இடம் பெறுவது பிஞ்சு நெஞ்சங்களில் விஷ விதைகள் தூவுவதாகும் என்கிறது ஒரு கூட்டம். இன்றைக்கு தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது அண்ணா பெயரையும், திராவிட இனச் சுட்டுப் பெயரையும் (அண்ணா திமுக) கட்சியிலும் கொடியிலும் தாங்கிக் கொண்டிருக்கக் கூடியதுதானே! அப்படிப்பட்ட ஆட்சிக்குத் திராவிட இயக்கத் தோற்றம், அதன் சமூக நீதிப் பயணம் பற்றியும் சொல்லிக் கொடுக்க விருப்பம் இல்லை - திராவிட இயக்கத் தலைவர்கள், பற்றி பாடத் திட்டங்களில் கண்டிப்பாக இடம் பெறக் கூடாது என்று கருதுகிறதா என்பதை வெளிப்படையாகத் தெரிவித்து விட வேண்டும். திராவிட இயக்கம் பேரால் உள்ள, அண்ணாவின் பெயரால் உள்ள ஒரு கட்சியை அதற்கு எதிரான கொள்கை வழியில் திசை திருப்பித் தாங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழ்ச்சி இருப்பதாகவே தெரிகிறது. பார்ப்பனர் அல்லாதாரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள ஒரு கட்சி பார்ப்பனீயத்தை வளர்க்கும் வகையில் நடைபோடுகிறது என்ற எண்ணத்தைத்தான் பெரும்பான்மையான மக்களிடத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தும். எச்சரிக்கை!

------------------- “விடுதலை” தலையங்கம் 9-6-2011

0 comments: