Search This Blog

9.6.11

ஈழத்தமிழர் தீர்மானம் பற்றி கி. வீரமணி அவர்களின் அறிக்கை

ஈழத் தமிழர்களுக்கான சட்டமன்ற தீர்மானத்தின்மீது தமிழக அரசியல் விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்க வேண்டும்
நாம் ஒற்றுமையாக இல்லை என்று காட்டிக் கொண்டால்
ராஜபக்சே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் பயன்படும்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஈழத் தமிழர்களுக்காக நேற்று நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்மீது முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா பேசிய உரை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று தமிழக சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் முன் மொழியப் பட்ட - ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழர்களின் நன்றிக்குரியத் தீர்மானமாகும்.

இதனை தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் வரவேற்றுள்ளன; ஆதரவு தெரிவித் துள்ளன, நல்ல சூழல்!

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வரின் விமர்சனங்கள்


ஒட்டு மொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இத்தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல் அமைச்சர் தி.மு.க.வையும், அதன் தலைவர் கலைஞர் அவர்களையும் கடுமையாக தாக்கி விமர்சித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்; தமிழ்நாட்டு அரசியலில் நடந்த கடந்த கால கசப்பான அனுபவங்களையே சுட்டிக் காட்டி, ஒவ்வொருவரும் பரஸ்பரக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள் என்ன?

அருள்கூர்ந்து நடுநிலையோடு விருப்பு, வெறுப்பின்றி யோசிக்க வேண்டும்.

பொது எதிரியைத் தப்பிக்க விடுவதா?


1. பொது எதிரியான - போர்க்குற்றவாளி ராஜபக்சே தப்பித்துக் கொள்ளவே இது வழி வகுக்கக்கூடும்.

2. மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக, இங்குள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினையை மறந்து விட்டு, பொது எதிரியை ஒதுக்கிவிட்டு, ஒருவருக் கொருவர் மறுப்பு அல்லது தன்னிலை விளக்கம் அளித்து, தமிழ்நாட்டவர்கள் ஈழத் தமிழர் வாழ் வுரிமைப் பிரச்சினையை இனவுணர்வுப் பிரச்சினையாகவோ, மனித உரிமைப் பிரச்சினையாகவோ பாராமல், நல்ல அரசியல் முதலீடு என்றுதான் கருதி, தீப்பற்றி எரியும் நேரத்திலும், அணைப்பதற்கு முந்துவதற்குப் பதிலாக, யார் எந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்; அணைக்க வில்லை என்ற ஆராய்ச்சி லாவணியிலா இறங்குவது?

காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்க செல்வி ஜெயலலிதா முன்வரவில்லையா?


மத்தியில் ஆளும் காங்கிரசை ஆதரிப்பதில் - இதற்கு முழு முதற் காரணமான இலங்கைக்கு இராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான மத்தியில் ஆளும் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுப்போம் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது மறுமொழியாக தி.மு.க. பதிலுக்குக் கூற ஆரம்பித்தால், எந்த நோக்கத்தோடு இத்தீர்மானம் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுணர்வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோ அந்தச் சூழல், அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வலிமை குறைந்து விடுமே! மீண்டும் பழைய கருப்பனாகவே ஈழத் தமிழர் வாழ்வுரிமை ஆகி விடுமே என்ற கவலையாலும், பொறுப்புணர்ச்சி யினாலும் தான் நாம் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி யாருக்காகவும் வாதாட அல்ல.

தி.மு.க. தோல்விக்குக் காரணம்


தி.மு.க. தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றதற்குள்ள பல காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகும்.

எனவே அனைத்துக் கட்சி ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயல் உருவாக்கம் கொள்ளச் செய்ய ஆளுங்கட்சியும், முதல் அமைச்சர் அவர்களும் முன்வர வேண்டும் என்றால் ஒற்றுமை, ஒத்துழைப்பு நம் அனைவருக்கும் இடையே தேவை.

மத்திய அரசுக்கும் ஒரு வாய்ப்பு


இல்லையானால் ராஜபக்சேக்கள் நடவடிக்கைகளி லிருந்து காப்பாற்றிக் கொள்ளத்தான் உதவும்; - மற்ற நாடுகளுக்குள்ள மனிதநேயம்கூட மத்தியில் ஆளும் கட்சிக்கு இல்லை என்ற நிலைப்பாடு மாறியுள்ளது என்று காட்ட மத்திய அரசுக்கும் இது ஒரு நல் வாய்ப்பு - செய்யுமா மத்திய அரசு?

------------------ கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் - ”விடுதலை” 9-6-2011


0 comments: