Search This Blog

27.6.11

திராவிடக் கொள்கை எது தெரியுமா?பார்ப்பனர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது?


திராவிடக் கொள்கை எது தெரியுமா? (1)

திராவிடக் கொள்கை எது என்ற வினாவை எழுப்பியுள்ளது துக்ளக் (22.6.2011).

சரியான கூட்டணி அமைந்ததால், சரியாகவே ஜனங்கள் ஓட்டுப் போடுகிறார்கள். ஆனால், உலகம் போகிற போக்குத் தெரியாமல் கருணாநிதி இன்னமும் திராவிடம், திராவிட இனம் என்று, கீறல் விழுந்த இசைத்தட்டு மாதிரி அதையே சொல் லிக் கொண்டு திரிகிறார். இன்றுள்ள இளைஞனும் திராவிடம் என்றால் கிலோ என்ன விலை என்றுதான் கேட்பான் என்று எழுதுகிறது துக்ளக்.


இதே கேள்வியை துக்ளக் அண்ணா திமுகவை நோக்கிக் கேட்குமா? அந்தக் கட்சியின் பெயரிலும் திராவிட இருக்கிறதே - திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் அண்ணாவின் பெயரும் அந்தக் கட்சியில் உள்ளதே - அக்கட்சியைத் தேர்தலில் ஆதரித்த - ஆதரித்தும் கொண்டிருக்கிற துக்ளக் அறிவு நாணயத்துடன் கேட்க வேண்டுமா, வேண்டாமா,


அப்படியெல்லாம் அதிமுகவைச் சீண்டிப் பார்த்தால் உருட்டுக் கட்டைதான் பரிசாகக் கிடைக்கும்.


இன்னொன்றும் காரணமாக இருக்கலாம்; வெறும் பெயர்தானே திராவிட அண்ணா என்பதெல்லாம் அ.தி.மு.க.வுக்கு. அதனால் ஆரியர்களுக்குத் தொல்லை கிடையாதே - இன்னும் சொல்லப் போனால் திராவிட என்னும் பதாகைக்குள் ஆரிய சமாச்சாரங்கள்தானே தாம் - தூம் என்று நடக்கின்றன - எனவே கண்டு கொள்ள மாட்டார்கள்.


ஆனால் தி.மு.க.வோ, அதன் தலைவர் கலைஞரோ திராவிட என்பதற்கான பொருள் தெரிந்தவர்கள். அதற்கான சித்தாந்தம் தெரிந்தவர்கள் என்பதால் நமக்கு ஆபத்தானவர்கள் என்பதை திராவிடர்களின் எதிரிகளாகிய ஆரியர்கள் - பார்ப்பனர்கள் - துக்ளக் வட்டாரத்தினர் தெரிந்து வைத்துள்ளனர். அதனால் தான் திராவிடர் திராவிடம் என்ற சொற்களைக் கேட்ட மாத்திரத்திலேயே, படித்த மாத்திரத்திலேயே புழுங்கிச் சாகிறார்கள்.


இன்றுள்ள இளைஞர்கள் திராவிட இனம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறார்களாம். ஒரு வகையில் உண்மைதான். அந்த உணர்வை இந்த இளைஞர்கள் பெற்றிருப்பதால் தான் துக்ளக்குகள் விலை போகின்றன. திராவிட இனவுணர்வு பெறாத காரணத்தால்தான் நண்பர் யார்? எதிரிகள் யார் என்ற அடையாளம் தெரியாமல் அரசியலில் வாக்களிப்பதில் கூடத் தவறு செய்து விடுகிறார்கள்.


துக்ளக் ஏடு கிண்டல் செய்யும் அளவுக்கு நம் மக்கள் இனவுணர்வற்றுப் போயிருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம். இதற்குப் பதிலடி என்பது - நம் மக்களிடம் திராவிட இனவுணர்வை வலுவாக அழுத்தம் திருத்தமாக ஊட்டுவதுதான் - அதற்காகப் பல வகைகளிலும் பிரச்சாரம் செய்வதுதான்.


திராவிடம்பற்றி கலைஞர் பேசினால் அக்னி மயமாகி, நச்சுத் துண்டுகளை எழுத்தாக்கி, வியாபாரம் செய்யும் துக்ளக் பிராமணர்கள் சங்கம் வைத்து தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பகிரங்கமாகத் தீர்மானம் போடுகிறார்களே, அப்பொழுது அவர்களை நோக்கி ஏனப்பா, திராவிடத்தை உசுப்பிவிட ஆசைப்படுகிறீர்கள்? என்ற வினாவை எழுப்பி இருக்க வேண்டாமா?


திராவிடம், திராவிடர் என்ற மாத்திரத்திலேயே அந்த இடத்திலேயே அதனை அமுக்கி விட வேண்டும்; அது வளர்ந்தால் தங்களுக்கு ஆபத்து, மகா ஆபத்து என்பதை நன்கு உணர்ந்தவர்கள் அவர்களாயிற்றே!

ஆதி சங்கரர், திருஞான சம்பந்தரை திராவிட சிசு என்று வருணித்திருக்கிறாரே. எப்பொழுதாவது துக்ளக் வகையறாக்கள் அதற்கு மாற்றுக் கருத்துகள் சொன்னதுண்டா? நாட்டுப் பண்ணாகிய ஜனகனமன பாடலில் திராவிட உத்கலவங்கா என்று நோபெல் பரிசு பெற்ற கவி இரவீந்திரநாத் தாகூர் குறிப்பிட்டுள்ளாரே - அதுபற்றி விமர்சித்ததுண்டா துக்ளக்? மொகஞ்சதாரே, ஹரப்பா நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று அய்ராவதம் மகாதேவன் (அய்யர்) போன்றோர் சொன்னபோது இவர்களின் பேனாக்கள், முனை மழுங்கிப் போய் விட்டனவா? சிந்து நாகரிகத்தில் திராவிடர்களின் எருதைக் குதிரையாக கணினி மூலம் மாற்றி, அது ஆரியர் நாகரிகம் என்று காட்டியதே பா.ஜ.க. ஆட்சி. அதன் பொருள் என்ன? திராவிடர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள், ஆரியர்கள் வடமேற்குக் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் ஆடு மாடுகளை ஓட்டி வந்தவர்கள் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் இடம் பெற்றதை யெல்லாம் சாமர்த்தியமாகப் பார்ப்பனர்கள் நீக்கி விட்டனர் - அந்தத் தைரியத்தில்தான் திராவிடம் என்றால் என்ன என்று கேட்கிறது துக்ளக்; இதனை சவாலாக எடுத்துக் கொண்டு இனவுணர்வு வெப்பத்தை எழுப்புவதுதான் சரியான பதிலடியாக இருக்க முடியும் - அதனைச் செய்வோம்!

------------------"விடுதலை” தலையங்கம் 25-6-2011


திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (2)

திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத் தில் கலந்து கொண்டோமா, ஏதோ நாலு வார்த்தை பேசி விட்டுச் சென்றோமா என்று கருணாநிதி வந்திருக்கலாம். தேர்தல் தோல்வியைப்பற்றிப் பேசுகிறேன் என்று ஏதோதோ உளறிக் கொட்டி யிருக்கிறார் முத்தமிழர் வித்தகர் - என்று துக்ளக் எழுதுகிறதே (22.6.2011) - ஒரு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் எதைப் பேசுவது எதைப் பேசக் கூடாது என்பதைத் துக்ளக் சோ ராமசாமி அய்யரைக் கேட்டுக் கொண்டுதான் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்களா பார்ப்பனர்கள்?

தி.மு.க. தலைவர் எதைப் பேசினாலும், எழுதினாலும் சொந்தமாக பேசக் கூடியவர் - திராவிட இயக்கத் தலைவர்களின் கருத்துகளை ஆதாரம் காட்டிப் பேசக் கூடியவர்தான்; திராவிட இன உணர்வு கருத்துகளை மக்கள் மத்தியில் வைக்கக் கூடியவர் தான்; அந்த அடிப்படையில்தான் திருவாரூர் பொதுக் கூட்டத்திலும் பேசியிருக்கிறார்.

பார்ப்பனர்களுக்கு ஏன் தேள் கொட்டுகிறது?

திருவாரூர் பொதுக் கூட்டத்தில் ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார் தி.மு.க. தலைவர் என்று துக்ளக் குமுறுகிறதே - அப்படி என்ன ஏதேதோ பேசியிருக்கிறார்?

தி.மு.க. இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது, தோற்பது திராவிட இயக்கத்தில் உணர்வு, கொள்கைகள் அல்ல என்று பேசி விட்டாராம் மானமிகு கலைஞர் - அது பொறுக்க மாட்டாமல் தான் துக்ளக் பார்ப்பன வட்டாரம் தாண்டிக் குதிக்கிறது.

தமிழ்நாட்டில் தன்மான இயக்கமும், திராவிட இயக்கமும் ஊட்டிய இனவுணர்வு கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பார்ப்பன அல்லாத உணர்வு என்பதற்கான ஒரு குறியீடுதான் வரலாற்று ரீதியான திராவிடர் என்பதாகும். பார்ப்பனர் வேறு பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் வேறு என்று பிரித்துக் காட்டுவதற்கான எல்லைக் கோடுதான் அது.

வரலாற்றில் பார்ப்பன அல்லாத மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்று இழித்தும், பழித்தும், உரிமை பறித்தும், வேசி மக்கள் என்று ஒடுக்கியும் ஆதிக்கம் செலுத்தினார்களே, அந்த நிலையிலிருந்து விடுபட்டு மானமும், அறிவும் உள்ள மக்களாக, உரிமை படைத்த இனத்தவர்களாக பார்ப்பனர் அல்லாத மக்கள் வெடித்துக் கிளம்ப வேண்டும் என்ற வெப்ப உணர்வை ஊட்டும் வரலாற்றுச் சுக்கான்தான் திராவிடர் என்பதாகும்.

அதனை நினைவூட்டலாமா? அதனை நினைவூட்டிக் கொண்டே இருந்தால் அது ஆரியப் பார்ப் பனர்களுக்கு ஆபத்தாயிற்றே - அவர்களின் ஆதிக்க ஆணி வேரில் வைக்கப்படும் வெடி மருந்தாயிற்றே - அதனைத் தி.மு.க. தலைவர் செய்து கொண்டிருக் கிறாரே என்று ஆத்திரத்தில் எழுதும் அமில வரிகள் தான் ஆரிய ஏடுகளுடையது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகம் தோன்றுவதற்கு முக்கிய வேராக இருந்த வருமான டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் அவர்கள் 2001ஆம் ஆண்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை (பா.ஜ.க.) சந்தித்து திராவிடியன் என்சைக்ளோ பீடியோ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.

அந்நூலைப் பெற்றுக் கொண்ட ஜோஷி, அந்நூலின் பெயரில் உள்ள திரவிடியன் என்ற சொல்லை நீக்கி விடலாமன்றோ என்றார். இதற்குப் பதில் உரைத்த டாக்டர் வி.அய். சுப்பிரமணியம் மத்திய அமைச்சரை நோக்கி நீங்கள் நாட்டுப் பண்ணி லிருந்து திராவிடம் என்ற சொல்லை நீக்கி விடுங்கள்; நானும் திராவிடர் களஞ்சியம் என்பதிலிருந்து திராவிடம் என்ற பெயரை நீக்கி விடுகிறேன் என்றாரே!

துக்ளக் பார்ப்பனரிலிருந்து மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய பா.ஜ.க. பார்ப்பனர் வரை ஒரே மாதிரியாகவே சிந்திக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய திராவிடர்கள் தெரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால் கலைஞர் அவர்கள் திருவாரூரில் ஆற்றிய உரையில் இடம் பெற்றுள்ள சாரத்தின் அருமை நன்றாகவே புரியும் - ஆரியம் ஏன் துடிக்கிறது என்கிற சூட்சமும் விளங்கும்.

----------------"விடுதலை” தலையங்கம் 27-6-2011

0 comments: