Search This Blog

30.6.11

பூணூல் மத அடையாளமா? அரசை ஆட்டிப் படைக்கின்ற ஆயுதமா?


பூணூல் மகிமை

கடந்த 25.6.2011 சென்னை பதிப்பு சிட்டி எக்ஸ்பிரசில் சங்கராச்சாரிய சிறீசிறீராகவேஸ்வர பாரதி மகா சுவாமிஜி ஓர் அரிய கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்திய மாநிலங்களைச் சநாதன தர்மத்தின் வழி ஒன்றி ணைப்பது என்பது அக்கட்டுரையின் நோக்கமாகும். அக்கட்டுரைக்கு ஆங்கிலத்தில் இடப்பட்டிருந்த தலைப்பு UNITING NATIONS THROUGH SANATHANA DHARMA என்பதாகும்.

இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு மாநிலமும் ஒரு தேசிய இனத்தின் அடையாளம் தானே! ஜனநாயக யுகத்தில் சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்கள் - வெகு மக்களாக - எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிற நிலையில் - இவர் களுக்கெல்லாம் வாக்குரிமை வழங்கப்பட்டு இருக்கிறபோது இப்படிப்பட்ட தலைப்பில் எழுதுவதற்கு ஆச்சாரியாருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அவர் என்னதான் அப்படி எழுதினார் என்கிறீர்களா? அக்கட்டுரையின் சாரம் இதுதான்.

பெருவெள்ளம் வருகிறது. மக்கள் எல்லாம் அடித்து செல்லப்படுகிறார்கள். அவர்களுள் ஒரு சிலர் அவ்வெள்ளத்தை எதிர்த்து நீந்தி கரை சேருகிறார்கள். ஆனால் அரிதான ஆத்மாக்களே அப்பெரு வெள்ளத்தின் திசையையே மாற்றி விடுகிறார்கள். தம்மையும் பிறரையும் காப்பாற்றுகிறார்கள்.

இங்கே பெருவெள்ளம் என்று எழுதப்பட்டு இருப்பது சமண, பவுத்த மதங்களின் எழுச்சியையாகும். இந்த எழுச்சியின் விளைவாக நமது தாய்நாடு இருளில் மூழ்கியது. வேத தர்மம் கண்டனம் செய்யப்பட்டது.

நமது மரபு, பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாவற்றையும் மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர். பெரும்பாலான மக்கள் சமண, பவுத்த மதங்களையே போற்றினர். அவை இரண்டும் அரசுகள் போற்றுகின்ற மதங்களாகவும் இருந்தன.

இதனால் மக்களிடையே ஒற்றுமையின்மையும், சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களை வணங்குகிற பக்தர் களிடையே வேறுபாடுகள் தோன்றின. இப்படிப்பட்டதாய் இருந்தது அப்பெரு வெள்ளம்.

அதனைத் திசை திருப்பி மக்களைக் காப்பாற்றியவர் ஆதி சங்கரர். அதனால்தான் சிவருமானே அவதாரம் எடுத்து சங்கரராக கேரளத்தில் உள்ள காலடியிலே பிறந்தார். 32 ஆவது வயதில் மறைந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கொள்கைகளை எடுத்துச் சொல்ல அவருக்கு உகந்த உறுதுணை இல்லை. அரசுகளின் ஆதரவும் இல்லை. ஆனால் ஆதிசங்கரர் சமண, பவுத்தர்களை வென்று வேத தர்மத்தை தனி மனிதராக இந்நாட்டில் நிலைநாட்டினார். எப்படி அவரால் இந் நாட்டில் அப்படிப்பட்ட சிறந்த மனிதராக தனிநபராக ஈடுபாடு கொண்டு வேத தர்மத்தை நிலைநாட்ட முடிந்தது?

ஆதிசங்கரரைப் போன்ற மகான்களிடம் உள்ள உள்ளுணர்வு மிக பலம் வாய்ந்தது. இன்னும் முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் புறக்கருவிகளைவிட அகவுணர்வு மிகபலத்தோடு அவருக்கு ஆதரவை நல்கியதால் அவர் அந்த வெள்ளத்தை எதிர்த்து வேத தர்மத்தை நிலைநாட்டினார். ராமன், ராவணனது மாபெரும் ராணுவத்தை, யானைகளையும், ராட்சதர்களையும் கொண்ட ராணுவத்தை எப்படி வெற்றிக் கொள்ள முடிந்தது?

அதுவும் குரங்கு, கரடிகளின் கூட்டத்தை வைத்துக் கொண்டு என்றால் அவனது ராமனது உள்ளுணர் வாலும் அவன் பக்கம் சரியான நியாயம் இருந்ததாலும் ஆகும். அதே போன்றது தான் ஆதி சங்கரருடைய நிலையும்! அவர் ஆன்ம பலத்தினால் தான் வெற்றி பெற்றார். அவர் வாக்கு பலத்தாலும், தவ வலிமையானலும், ஆத்ம பலத்தாலும் ஆன்மிகப் புரட்சியைச் செய்தார்.

எப்போது தர்மம் அழிக்கப்படுகிறதோ அப்போது கடவுள் தோன்றி அந்தத் தர்மத்தைக் காப்பாற்றுவார். ஆகையினால் தான் சமண, பவுத்த வெள்ள காலத்தில் சிவனான கடவுள் சங்கரராக அவதரித்தார். அதாவது கேரளாவிலுள்ள காலடியில் பிறந்தார். ஆகவேதான் சங்கரக் குழந்தை அதன் 8 ஆவது வயதிலேயே நான்கு வேதங்களிலே பெரும் தேர்ச்சி பெற்றது. 12 வயதிற்குள் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தது.

தனது 16 வயதிற்குள் உபநிடதங்களுக்கும், கீதைக்கும் விளக்கவுரையை எழுதியது அந்த ஞானக் குழந்தை! 16 வயதிற்குள் ஞானத்தைப் பெற்றுக் கொண்ட சங்கரர் என்ன செய்தார்?

அவர் உயிர் வாழ்ந்த மேலும் 16 ஆண்டுகளுக்குள் இப்பரந்த பாரத தேசத்தில் பயணம் மேற்கொண்டு சநாதன தர்மத்திற்குப் புதிய எழுச்சியை உருவாக்கினார். அப்படி மேற்கொண்ட பயணத்தின் போது அவர் நிகழ்த்திய தருக்கதினால் நாட்டில் இருந்த மற்ற சிந்தனை நெறிகளையும் மதக் கொள்கைகளையும் வென்றார். அவரது போராட்டம், தத்துவங்களின் வழியான அறப்போராட்டம்.

சங்கரரை வெல்வதற்குப் பகைவர்கள் இல்லை. அவர் பகையை வென்றெடுத்தார். சங்கரர் தம் கர்மத்தினாலே உயர் ஞானம் பெற்று வாதிட்டு வென்றதைப் போலவே மந்தன மிஸ்ராவையும் வென்றார். அவர் சங்கரரின் சீடரானார். சங்கரர்க்கு என எந்தப் பட்டமும் இல்லை. சித்து விளையாட்டுகளும் அவரிடத்தில் இல்லை.

அவர் லோககுரு; அத்வைதக் கொள்கையை நிலைநாட்டி அதற்கு மாமன்னராய் விளங்கி வருபவர். நாட்டில் இருந்த அறியாமையைப் போக்கியவர். அவர் கொளுத்திய அறிவு ஜுவாலை எப்போதும் சுடர்விட்டுக் கொண்டே இருக்கும். பாரத தேசத்தில் எத்தனையோ குருக்கள் பிறந்திருக்கிறார்கள்.

ஆனால் ஆதி குரு என்று சொல்லக் கூடியவர் சங்கராச்சாரி யார் மட்டுமே. ஆதிசங்கரரருடைய மாபெரும் கொடை என்னவென்றால் மதத்தின் மூலமாகவும் கலாச்சாரத்தின் மூலமாகவும் பாரத தேசத்தை ஒருங்கிணைத்து இருக்கிறார். மக்கள் கடவுளின் பெயராலும், மதங்களின் பெயராலும் அதன் தத்துவங்களின் பெயராலும் சண்டை யிட்டுக் கொண்டு இருந்தனர்.

கோவில்களை அழித்தனர். வேதங்களை எரித்தனர். அப்போது சங்கரர் ஒரே மேடையில் எல்லா கடவுள்களையும் வழிபடுவதற்குரிய பஞ்சயாதன பூசையை ஒன்றாகச் சேர்ந்து வழிபட நெறிப்படுத்தினார்.

இப்பஞ்சயாதன பூசையில் அய்ந்து தெய்வங்களை மட்டும் புனிதக்கல் வடிவத் தில் வழிபாடு நிகழ்த்த பிரநிதித்துவப்படுத் தப்பட்டது. சிவன் லிங்க வடிவத்திம், விஷ்ணு சாளக்கிராம வடிவத்திலும், துர்க்கை சொர்ணமுகி கல் வடிவத்திலும், கணேசருடைய உருவம் ஷோனபத்ரா கல்லிலும், சூர்யனின் வடிவம் சப்திகா விலும் வடிக்கப்பட்டன. இக்கற்கள் எல்லாம் பாரத தேசத்தின் பல பகுதிகளிலிருந்து எடுத்து வரப்பட்டன.

பாரதத்தின் ஒருமையை ஒரு சின்னமாக எடுத்துரைப் பதற்காக! நாம் எப்போது பஞ்சயாதன பூசை செய்கிறோமோ அப்போது நாம் பாரத மாதாவை வழிபடுகின்றோம் என்று பொருள். ஆதி சங்கராச்சாரியார் மற்றொரு கொடையை நாட்டிற்கு அர்ப்பணித்து இருக்கிறார்.

சநாதன தர்மத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக மடங்களை நிறுவியதுதான் மாபெரும் சிறந்த பணியாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோகர்ணத்தின் அருகே நிறுவிய அஷோக் என்ற இடத்தில் ஸ்ரீரகோத்தமா மடத்தை நிறுவிய தாகும். இப்போது இதனை சிறீராமச் சந்திரபுரம் மடம் என்று கூறுகிறார்கள்.

நாம் ஒரு நாடு, ஒரு ராணுவம், ஒரு பொருளாதாரக் கொள்கை, ஒரே அரசாங்கம் என்று கூறுகின்றோம். ஆனால் நாம் அப்படி இப்போது இல்லை. ஆனால் ஆதிசங்கராச்சாரி யார் வாழ்ந்த காலத்தில் அங்கம், வங்கம், கலிங்கம் எனப் பல நாடுகளாக இருந்ததை அவரால் சநாதன தர்மத்தின் மூலமாக ஒரே நாடாக ஒன்றி ணைக்க முடிந்தது. இன்றைய தினம் அப்படி நாம் இணைவதற்கு - இணைக் கப்படுவதற்கு - நமக்கு அப்படி ஒரு சக்தி - அதிகாரம் தேவைப்படுகிறது.

அரசியல் சட்டத்தில் மதச்சார்பின்மையைப் பற்றி எழுதி வைத்து விட்டு அல்லது திருத்தம் செய்துவிட்டு சநாதன தர்மத்தின் மூலம் எப்படி இந்தியாவை இணைக்க முடியும்? இங்கே இருக்கிற மதச் சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் என்னாவது?

அவர்கள் இந்த நாட்டைவிட்டு எங்கே போவார்கள். (வர்ணாசிரம) சநாதன தர்மம் என்றால் என்ன? சில பேர் அந்த சமூக முறை இன்னமும் இருக்கிறதா என்று கேட் கிறார்கள். அதுவும் விவரம் தெரிந்தவர்கள் கூட இப்படிப் கேட்கிறார்கள்.

அது பார்ப்பனர்களின் வாழ்வியல் முறை - ஓசை எழுப்பாமல் கடிக்கின்ற நாகத்தைப் போல இருக்கும். இதனை இன்னும் வெகு அழகாகவும் ஆழமாகவும் விதைக்காமல் விளைகின்ற கழனி என்றார் அறிஞர் அண்ணா!

ராமச்சந்திரபுரம் சங்கராச்சாரி யார் ஏன் இப்போது பாரததேசம் சநாதன தர்மத்தின் மூலம் இணைக்க வேண்டும் என்று எழுதுகிறார்? ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார்களின் முழக்கங்களும் அது தானே! அதுதான் பூணூல் மகிமை; அந்த நூலில் என்ன இருக்கிறது? அதை ஏன் புதுப்பிக்கிறார்கள்? என்பதை யெல்லாம் நாம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். பூணூல் அணிவது மத அடையாளம் மட்டும் அன்று; அது அரசியல் ஆதிக்கத்தின் அடையாளம்! அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

--------------------(தொடரும்) --"விடுதலை” 28-6-2011

பூணூல் மகிமை

கடந்த 29.5.2011 அன்று பெரியார் திடலில் எம் அருமை நண்பர் திருவாரூர் இரா.தியாகராசன் (சின்ன குத்தூசி) அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் எந்த ஒரு பத்திரிகை யாளருக்கும் இப்படிப்பட்ட ஓர் இரங்கல் கூட்டம் நடைபெற்றதில்லை. அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவரைப் பற்றி பேசுகிற போது தொடக் கத்திலேயே ஒன்றை நாம் குறிப்பிட் டோம். பார்ப்பனப் பெற்றோர்க்குப் பிறந்த தியாகராசன் சூத்திரராக மரித்தார் என்று பேசினோம். அது எப்படி என்பதை எம்மால் அக்கூட்டத்தில் மிக விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியவில்லை; போதுமான நேரமில்லை.

பிராமண, ஷத்திரிய , வைசிய, சூத்திர நால்வர்ணத்தில் முதல் மூன்று பிரிவினருக்கு பூணூல் அணியும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. சரி, பூணூல் என்பது எங்கிருந்து வந்தது? படைப்புக் கடவுளான பிரம்மா பிறக்கிற போதே பூணூலோடு தோன்றினார். அதனால் நால்வர்ண வரிசையில் முதல் முப்பிரிவினர் உயர்ந்தோர் ஆதலால் பூணூல் அணிகிற பழக்கம் உண்டாயிற்று. அதற்கென்று மரபு, சம்பிரதாயங்கள், யாகங்கள், மந்திரங்கள் என்று தோன்றலாயின. பூணூல் அணிவதைப் பூணூல் கல்யாணம் என்றும் உபநயனம் என்றும் கூறுவர்.

பூணூலை அணிந்த பிறகுதான் பார்ப்பனப் பெற்றோர்க்குப் பிறந்தாலும் வேதத்தைக் கற்பதற்கு அனுமதி பெற்றது போன்றது ஆகும். ஆகவே தான் வேதத்தைக் கற்பதற்கு வேத விதிப்படி செய்ய வேண்டிய ஸம்ஸ்காரம் உபநயனம் எனப்படும் பூணூல் அணிகிற முப்பிரிவினையும் துவிஜர்கள் எனப் படுவார்கள். அப்படி என்றால் என்ன? தாயிடம் முதல் பிறப்பும் உபநயனத்தின் போது மவுஞ்சீ பந்தனத்தால் (பூணூல் அணிவதால்) இரண்டாவது பிறப்பு இம்மூவருக்கும் ஏற்பட்டு விடுகிறதாம். இதனால் இவர்களை துவிஜர்கள் - இரு பிறப்பாளர்கள் என்று கூறு கிறார்கள். இந்த மூன்று பிரிவினருக்கும் பூணூல் அணிவதற்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிராமண, ஷத்திரிய, வைசியர்கள் முறையே 8,12,16 வயதிற்குள் அதாவது காமம் மனத்தில் புகுவதற்கு முன் உபநயன தீட்சை பெற்றுவிட வேண்டும். வேதங்களுக்கு PROCEDURE CODE கள் பல உண்டு. அதை அவர்கள் சுருதிகளிலும் ஸ்மிருதிகளிலும் விதிக்கப் பெற்ற நித்திய கருமங்கள் என்று கூறிச் செல்வர். மேலே நாம் குறிப்பிட்டுள்ள வயதிற்கு விதிவிலக்குகளும் வழங்கி இருக்கிறார்கள். பிராமணனுக்குப் 16 வயது வரை உபநயனத்தை ஒதுக்கி வைக்கலாம். அவ்வாறே ஷத்திரியனுக்கு 22 வயது வரையிலும், வைசியனுக்கு 24 வயது வரையிலும் ஒதுக்கி வைக்கலாம். பூணூல் அணிவதில் ரிக்வேதிகளும், சாமவேதிகளும் இருக்கிறார்கள். உபநயனம் செய்விக்கிற புரோகிதர் - வாத்தியார் யாருக்கு உபதேசம் செய்து பூணூலை அணிவிக்கிறாரோ அப்போது அவர் கீழ் வருமாறு கூறுகிறார்.

இந்த குமாரனுக்குப் பிறந்தது முதல் இந்த வினாடி வரை பிற ஜாதி தாதியிடமும் செவிலித் தாயிடமும் பாலுண்டதாலும், பிறஜாதி ஹைவாஸ ஸஹபோஜனத்தாலும், தகுதியற்ற கூட்டத்தின் போஜனத்தாலும், உச்சிஷ்ட போஜனத்தாலும்,

தொடத்தகாதவற்றைத் தொட்டதாலும், அந்தந்த காலத்திற்குரிய பரிசுத்தமின்மையாலும் ஏற்பட்ட
எல்லாப் பாவங்களுக்கும் பிராயச்சித்த வாயிலாக காயத்திரி ஸ்வீகாரத்திற்கும் எனக்கு காயத்திரியை உபதேசிப்பதற்கும், யோக்கியதை சித்திக்க அனுக்கிரகம் செய்தருள வேண்டும்.

மேலே காயத்திரியை உபதேசிப்பதற்கு என்று கூறப்படுவது ரிக்வேத மந்திரம். அது சூரியனைப் புகழ்ந்து பாடுவது போன்றதாகும். காயத்திரி என்றால் துர்க்கை, சரஸ்வதி என்றும் பொருள்படும். இந்த மந்திரங்களைக் சொல்லி பிராமண பெற்றோர்க்குப் பிறந்த பிள்ளைக்கு அதற்குரிய வயதில் அல்லது சலுகைத் தரப்பட்ட வயதில் பூணூலை அணிவித்தால் தான் வேதங்களைப் படிக்கிற தகுதி அப்பிள்ளைக்குக் கிடைக்கிறது. மற்ற இருவருக்கு ஷத்திரிய - வைசியர்க்கு பூணூல் அணிகிற பெருமை மட்டுமே உண்டு. இன்னுஞ் சொல்வதானால் வைசியர், ஷத்திரியர் அப்பெருமையோடு மட்டும் நிறுத்திக் கொண்டனர். அதற் குரிய காரணங்களை இங்கே விளக்கினால் கட்டுரை மிகப் பெரிதாகிவிடும். ஆனால் பிராமண, ஷத்திரியர்களுக்குப் பூணூல் அணிவது என்ன உரிமையை சமூகத்தில் அவர்களுக்கு வழங்குகிறது?

பிராமண தருமம் ஞான விருத்தி செய்வது, ஷத்திரிய தருமம் அய்ஸ்வரிய விருத்தி செய்வது.இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவாயிருக்க வேண்டும் என்று அவர்களுடைய PROCEDURE CODE கள் விளக்கமளிக்கின்றன. வைசியன் உற்பத்தியான பொருள்களை மக்கள் நுகர்ச்சிக்கு எடுத்துச் சென்று வணிகம் செய்து பொருள் ஈட்டுபவனாக இருப்பான். மேல் அடுக்கு இரண்டின் ஆதரவு எப்போதும் அவனுக்கு உண்டு, கிடைக்கும். சூத்திர பிரிவுக்கும் நால் வர்ணத்திற்கு அப்பாலுள்ள தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பூணூல் அணியும் உரிமை வழங்கப்படவில்லை. சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்கள் தான் எண்ணிக்கையில் அதிகமானவர்கள், நுகர்ச்சிக்கான உற்பத்தி பொருள்களை உருவாக்குபவர்கள். இவர்கள் தான் சமூகத்தின் அடிப்படை. இந்த வெகு மக்களின் உற்பத்திப் பொருள்களைப் பகிர்ந்து கொள்வதிலும், அவர்களை ஆள்வதிலும் நேரடியாக ஈடுபடுவர்கள் ஆட்சியாளர்கள் - ஷத்திரியர்கள்! அவர்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். அவர்களை வழிநடத்துபவர்கள் பார்ப்பனர்கள். கடவுளோ, தெய்வமோ பார்ப்பனர்களின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். அது ஒரு கற்பனையான கருதுகோள் தானே. உழைக்கிற சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஞானம் பெறவும், அய்ஸ்வரியத்தை உருவாக்கிக்கொள்ளவும் உரிமை இல்லை. ஆனால் எல்லா உழைப்பும் அவர்களு டையதே!

வர்ணாசிரம சநாதன தர்மம் என்பது மதப்போர்வையில் உள்ள ஓர் அரசியல் அமைப்பு முறையே ஆகும். இதற்குக் கடவுள்கள் பயன்படுத்தப்பட்டு இருக் கிறார்கள். கோவில்கள் இவ்வமைப்பு முறைக்கு மய்யமாக இயங்கி வந்து இருக்கின்றன. சமணம், பவுத்தத்திற்கு முந்தியது, ஆனாலும் புத்தரின் இயக்கம் அமைப்பு முறையாக இயங்கிய அறிவு இயக்கமாகும். அதனால்தான் இந்த மதம் - இயக்கம் சிறப்புற்றிருந்த காலத்தைப் புனிதத் தென்றல் வீசிய காலம் என வர்ணிக்கிறார் பண்டித நேரு! உலகிலேயே அமைப்பு முறையாக முதன் முதலில் இயங்கிய மதம் புத்தமதமே! இதனைத்தான் பிற மதங்கள் பின்பற்றத் தொடங்கின. சமணமும், பவுத்தமும் எழுச்சி பெற என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். பூணூல்தான் காரணம்! எப்படி?

மொத்த மக்கள் தொகையிலிருந்து ஆளுகிறவர்களை வேறுபடுத்தி அறிவ தற்காக காயத்ரி வழிபாட்டின் மூலமாக அடையாளப்படுத்தப்பட்டு அணிவிக்கப் பட்டது தான் - பூணூல் என்பது! இதை ராகுல சாங்கிருத்யாயன் மொழியில் சொல்வதானால் கீழ்க்காணும் விதத்தில் குறிப்பிடலாம்.

பிரமாணர், ஷத்திரியர், வைசியர் ஆகிய சொத்துடைமை வர்க்கத்தாரின், தனிச்சொத்துடை மையைப் பாதுகாப்பதற்காகவே, அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே,செய்வினைப் பயன் என்ற மதத் தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காகவே, தனிச் சொத்தின் காவல்காரனான அரசின் கரங்களை மதத்தின் மூலம் வலுப்படுத்துவதற்காகவே மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினரின் பிறப்புகளுக்கும் விசேஷஅந்தஸ்து அளிக்கப்பட்டது.

இந்த மூன்று பிரிவினரின் அதிகாரங்கள், அக்கிரமங்கள் அதிகரித்ததன் விளைவாக அறிவு பூர்வமாகச் சிந்திக்க தொடங்கினர் ஷத்திரியர்கள். அதன் விளைவாகத் தோன்றியதுதான் சமணமும், பவுத்தமும்! இவ்விரண்டு அமைப்பு களையும் தோற்றுவித்தவர்கள் அரசர் களாய் இருந்தவர்களே! இவ்விரு மதங்களின் எழுச்சியைத்தான் இந்தியன் எக்ஸ்பிரஸின் சிட்டி எக்ஸ்பிரஸ்சில் எழுதிய சங்கராச்சாரியார் கட்டுரை, வெள்ளம் என்று கூறுகிறது. அத்தகைய வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சநாதன தர்மத்தை நிலைநாட்டியவர் தான் ஆதிசங்கரர். அது போல இப்போதுள்ள மாநிலங்களை இந்த ஜனநாயக ஊழியில் ஒன்றிணைக்க வேண்டும் என்று ஒரு சங்கராச்சாரியார் எண்ணி கட்டுரை எழுதுகிறார் என்றால் வர்ணாசிரம சநாதன தர்மம் முழுவதுமாக இயங்கிய கால கட்டத்தில் பூணூலின் மகிமை என்னவாக இருந்திருக்கும் என்பதை நம்மவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூணூல் என்பது மத அடையாளம் மட்டுமல்ல, அது அரசையே ஆட்டிப் படைக்கின்ற ஆயுதம், அந்தப் பூணூலையே அணியாமல் அதற்குரிய சடங்குகளை செய்து கொள்ளாமல் அதைப் பற்றி நன்குணர்ந்து புறக்கணித்துவிட்டு சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தம் வாழ்நாள் முழுவதும் போராட்ட எழுத்துக்களாக எழுதிக் குவித்த திருவாரூர் இரா.தியாகராசனை (சின்ன குத்தூசியை) எப்படிப் பார்ப்பனர் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

ஆகவே அவரைப் பற்றிய இரங்கலுரையை ஆற்றுகிறபோது பார்ப்பன பெற் றோருக்குப் பிறந்த திருவாரூர் இரா. தியாகராசன் சூத்திரராய் மரித்தார் என்று மட்டுமே பேசினோம். விளக்கமாகப் பேச முடியவில்லை. பார்ப்பதற்கு நூலாய்த் தெரியும். அதனுள் எத்தனை நுட்பங்களை எப்படியெல்லாம் திணித்து வைத்து இருக்கிறார்கள். ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம், உபநயனம் - பூணூல் கல்யாணம் என்பதில் எல்லாம் அரசியல் உள்ளதே இதனை நம்மில் ஒருவரும் கவனிப்பதில்லையே! எவ்வளவு தந்திரமாக ஒரு சமூக ஏற்பாட்டை மதத்தோடு பிணைத்து அரசியலோடு இணைத்து இருக்கிறார்கள். உலகிலேயே இப்படி ஒரு சமூக ஏற்பாட்டைப் பார்க்க முடியாது.

மேல்நாட்டிலும் ‘CHURCH AND STATE’ என்று சொல்வதுண்டு. அதன் பிணைப்பும் இத்தகைய இறுக்கமான ஒன்றே. ஆனால் அவர்கள் அதனை சநாதனம் என்று கூறிக்கொண்ட தில்லை. ஒரு சாதியை மட்டும் - வர்ணத்தை மட்டும் மேலாண்மை உடையதாக ஆக்கிக் கொள்ள வில்லை. இங்கே அப்படி இல்லை. கீதை வர்ணசங்காரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று போதிக்கிறது. வர்ணசங்காரம் என்பது பிராமணன் ஷத்திரியானா கவோ, ஷத்திரியன் வைசியனாவோ, வைசியன் பிராமணனாகவோ, சூத்திரன் இதர வர்ணத்தானாகவோ மாறக்கூடாது. அதாவது வர்ணக் கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது. திருமண உறவுகள் நிகழ்ந்துவிடக்கூடாது. இதனைத்தான் வர்ண சங்காரம் என்று குறிப்பிடுகிறது கீதை. அந்தந்த வர்ணத்தானுக்குரிய வேலையை அவனவன் செய்ய வேண்டும். இதுவே வர்ணாசிரம தருமம் - முறை. இதை அழிவுறாமல் காப்பாற்ற வேண்டும். அப்போது தான் அம்முறை நிலைத்து இயங்கும். அதுவே சநாதனம் என்று கூறப்படுகிறது. அதற்கு அழிவில்லா தது என்று பொருள். இப்படி பூணூல் ஆளும் வர்க்கத்தின் அடையாளமாக மதப்போர்வையில் இருக்கிறது.

முரணியக்கத்தைக் கூறுகின்ற காரல் மார்க்ஸ் எந்த ஒரு சமூக நிகழ்வும் அரசியல் இல்லாமல் இல்லை என்று கூறியதைப் பூணூலுக்குப் பொருத்திப் பாருங்கள். எவ்வளவு துல்லியமாக ஒவ்வொரு சமூக நிகழ்வையும் அவர் மதிப்பிட்டு எழுதி யிருப்பார் என்பதை இந்த ஒரு எடுத் துக்காட்டைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். ஆக, ஒருவன் பார்ப்பனப் பெற்றோருக்குப் பிறந்ததால் மட்டுமே பிராமணன் ஆகிவிட முடியாது. பூணூல் தரிக்க அதற்கான சடங்கு களைச் செய்து அணிந்து கொள்ளும் போது தான் அவன் இரு பிறப்பாளன் - பிராமணன் ஆகிறான். அதனை இந்தக் காலத்திலும் நடைமுறைப் படுத்திக் கொண்டு பார்ப்பனர்கள் இருந்தாலும் அதைக் கொண்டே இந்தியாவை இணைக்க வேண்டும் என்கிற ஆசை சிறீராமச்சந்திரப்புரத்து சங்கராச்சாரியாருக்கு இந்த ஜனநாயக யுகத்திலும் தோன்றி இருப்பது பூணூலின் பழைய மகி மையை அவர் நினைத்துப் பார்த்து கொண்டதன் விளைவே ஆகும்.

------------------(நிறைவு) -"விடுதலை” 30-6-2011 இல் க. திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: