Search This Blog

5.6.11

பூமியை ஆதிசேஷன் தாங்கினால் ஆதிசேஷனை யார் தாங்குகிறார்? - 2

பள்ளிக்கூடத்தில் புராணப் பாடம்!


உபாத்தியாயர்: அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.

பையன்: எனக்கு தெரியவில்லையே சார்.

உபாத்தியாயர்: ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்குகின்றான் என்கின்ற பழமொழிகூட நீ கேட்ட தில்லையா மடையா?

பையன்: நான் கேட்டதில்லை சார் - ஆனால் ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒரு நாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது ஆதிசேஷன், விஷ்ணுவின் படுக்கையென்றும், அந்த விஷ்ணு, ராம அவதாரம் எடுத்த போது இந்த ஆதிசேஷன், லட்சுமணனாக அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது.

உபாத்தியாயர்: ஆமாம், அந்த ஆதிசேஷன்தான் பூமியை தாங்கிக் கொண்டிருக்கின்றான் தெரியுமா?

பையன்: இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார்....!

உபாத்தியாயர்: என்ன சந்தேகம் சீக்கிரம் சொல்.

பையன்: பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற ஆதிசேஷன் விஷ்ணுவுக்குப் படுக்கையாய் வந்து விட்டால் அப்போது பூமியை, யார் தாங்குவார்கள்? தவிர லட்சுமணனாக உலகத்திற்கு வந்து விட்டபோது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்துவிட்டு வந்தார்? தயவு செய்து சொல்லுங்க சார்?

உபாத்தியாயர்: நீ என்ன குடிஅரசு படிக்கிறாயோ! அதுதான் அதிகப்பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய்! பொறு உன்னை இந்தப் பரீட்சையில் சைபர் போடுகின்றேன்.

பையன்: இல்லவேயில்லை சார். நான் சத்தியமாய் குடிஅரசு வை படிப்பதே இல்லை சார். ராமாயணம்தான் கேட்டேன். தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்தச் சந்தேகம் தோன்றிற்று சார்.

உபாத்தியாயர்: ஆதிசேஷன் தெய்வத்தன்மை பொருந்தியவன். அவன் ஒரே காலத்தில் பலவேலை செய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு; அவன் பூமியையும் தாங்குவான், விஷ்ணுவுக்கு படுக்கையாகவுமிருப்பான். விஷ்ணு, ராமனாக உலகத்திற்கு போகும்போது லட்சு மணனாக கூடவும் போவான் தெரியுமா?

பையன்: இப்ப தெரிந்தது சார். ஆனால், ஒரு சின்ன சந்தேகம் சார். அதுமாத்திரம் சொல்லிப் போடுங்கள். இனி நான் ஒன்றும் கேட்பதில்லை.


உபாத்தியாயர்: என்ன பார்ப்போம்.

பையன்: பூமியை, ஆதிசேஷன் தாங்குகிறான்; சரி அதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன்; அப்புறம் தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது சார். எனக்கு நிஜமாலும் தெரியவில்லை சார்.

உபாத்தியாயர்: என்னசொல் சங்கதி சொல்லு; நான் கோபிக்கிறதில்லை.

பையன் மறுபடியும்: பூமியை ஆதிசேஷன் தாங்குகின்றான் சார் (தலை சொரிந்து கொண்டு) ஆதிசேஷனை யார் தாங்கப் போறாங்க சார்? அவர் எதன் மேலிருந்து கொண்டு தாங்கறாங்க சார். அதை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப்போதைக்கு இல்ல சார்.

உபாத்தியாயர்: போக்கிரிப் பயலே! நீ குடிஅரசு படிக்கிறாய் என்பது இப்போது எனக்கு உறுதியாச்சுது. பொறு பொறு பேசிக்கொள்ளுகின்றேன். வாயை மூடிக் கொண்டு போய் உட்கார்; அதிகப் பிரசங்கிப் பயலே.

பையன்: பேசாமல் உட்கார்ந்து கொண்டான்; உபாத்தியாயரும் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு அவனை அனுப்பவில்லை. இதைப் பற்றி கேள்வி கேட்பாரும் இல்லை. பள்ளிக் கூட மேனேஜரையும் வாத்தியார் சரிப்படுத்திக்கொண்டார்.

------------------ சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்களால் எழுதப்பட்ட உரையாடல் ”குடி அரசு” - 8.4.1928

0 comments: