Search This Blog

10.6.11

இந்தியா ஏழை நாடா?


இந்த நாட்டின் செல்வத்தில் எவ்வளவு பெரிய பாகம் மதமும் கடவுளும் என்கின்ற பேரால் வேலை செய்யாத சோம்பேறிகள் அனுபவிக்கின்றார்கள் என்பதை நமது மூட ஜனங்கள் அறியாமலேயே இந்த நாடு தரித்திர நாடு என்று அழுகின்றார்கள்.
இந்த நாட்டில் உள்ள சன்னியாசிகள், துறவிகள், மதாச்சாரிகள் என்பவர்களுக்கு உள்ள சொத்துக்களும் வரும்படிகளும் வேறு யாருக்காவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமா?

அவர்களுக்கு எதற்காக அவ்வளவு சொத்தும் வரும்படியும் வேண்டி இருக்கின்றதென்று எந்தப் பொருளாதார வாதியாவது கவனிக்கின்றானா? ஒரு சந்நியாசி கோடிக்கணக்கான ரூபாய் சொத்தும் வருசத்தில் லட்சக்கணக்கான ரூபாய் வரும்படியும் உடையவனாக இருந்தால் அந்த நாடு ஏழை நாடு தரித்திர நாடு என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கின்றேன். (இதைப்படிக்கும் போது ராம்தேவ் போன்றோர் ஞாபகம் வருகிறதா? -தமிழ் ஓவியா)

ஒரு முழம் முக்கால் முழம் உயரமுள்ள குழவிக் கல்லுகளுக்கு நமது நாட்டில் எத்தனைக் கோடி ரூபாய்கள் சொத்தும், எத்தனை லட்சம் ரூபாய்கள் வரும்படியும் இருக்கின்றனவென்று பாருங்கள். இப்படி எத்தனை நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு யானை, ஒட்டகம், குதிரை, பல்லக்கு, தேர், ரதம் முதலிய வாகனங்களோடு, பல பெண்டாட்டிகளோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் உண்மையில் நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்ல வருவானா? இதை எந்த பொருளாதார நிபுணனாவது கவனித்து நமது நாடு தரித்திரமுள்ள நாடு என்று சொல்லுகிறானா?


------------------- தந்தை பெரியார், ”குடி அரசு” 14.9.1930

0 comments: