Search This Blog

22.4.10

சிறைச்சாலையில் பெரியார் எப்படி நடத்தப்பட்டார்? எப்படி நடந்து கொண்டார்?


வைக்கம்

வைக்கம் போராட்டம் என்பது இந்தியத் துணைக் கண்டத்து வரலாற்றிலேமாபெரும் திருப்பத்தைக் கொடுத்த சமூகப் புரட்சிப் போர்!

தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையிலே இன்னொரு மாநிலத்தின் பிரச்சினையிலே தலையிட்டு, களம் அமைத்து இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த ஈடு இணையில்லாப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களே!

உள்ளூர் காங்கிரஸ்காரர்களின் விருப்பத்துக்கு மாறாகவும், ஏன் காந்தியாரின் இடையூறுகளைப் பொருட்படுத்தாமலும் வெற்றிக்கொடி நாட்டிய வரலாற்று நாயகர் வைக்கம் வீரர் நம் அய்யா.

வைக்கத்தில் தந்தை பெரியார் நடத்திய இந்தப் போராட்டம்தான் மாகத் என்னும் இடத்தில் உள்ள பொதுக்குளத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு நீர் அருந்தும் போராட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நடத்துவதற்குத் தூண்டுகோலாக இருந்தது.

இந்நாள் அதாவது ஏப்ரல் 22 இல்தான் (1924) தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் முதலாவதாகக் கைது செய்யப்பட்டு அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார். திருவிதாங்கூர் அரசர் தந்தை பெரியார் அவர்களின் நட்புக்கு உரியவர் என்பதால் தண்டனை இலேசாகவே இருந்தது. சில நாள்களிலேயே விடுதலை செய்யப்பட்ட தந்தை பெரியார் மீண்டும் படுவேகமாகக் களத்தில் குதித்தார். மீண்டும் கைது செய்யப்பட்டு திருவிதாங்கூர் மத்திய சிறைச்சாலையில் கடின காவல் கைதியாக வைக்கப்பட்டார்.

திருவிதாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட்டார்? தந்தை பெரியார் எப்படி நடந்து கொண்டார்? என்பதை பாரிஸ்டர் கே.பி.கேசவமேனன் தமது சுயசரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இரு மடங்கு வேலை செய்கிறார்.

ஒரு சாதி இந்து என்று சொல்லக் கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கின்ற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வரவேண்டாமா?

-----------------------------கே.பி.கேசவமேனன், மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108

எதிலும் தந்தை பெரியார்தான் முதல் தொண்டர், முதன்மைத் தலைவர் என்பதில்தான் அய்யமுண்டோ!

------------ மயிலாடன் அவர்கள் 22-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: