Search This Blog

17.4.10

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மதநம்பிக்கையற்றவர்-திராவிடர் என்று பதிவு செய்யவும்


திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாடு சீர்குலையும் மாணவர், இளைஞர்களைக் காப்பாற்றும் இயக்கம் உருவாக்கம் தேசிய உயர் கல்வித் திட்டம் கூடாது தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு கோபுர சின்னத்தை அகற்றுக - திருவள்ளுவர் உருவத்தைப் பொருத்துக! மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நாத்திகர் என்று பதிவு செய்க! இனம் என்பதில் திராவிடர் என்று பதிவு செய்க! வரலாற்றுச் சிறப்புமிக்க பத்துத் தீர்மானங்கள்

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மத நம்பிக்கையற்றவர் நாத்திகர் என்று குறிப்பிடவேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

16-4-2010 வெள்ளியன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

சீர்குலையும் மாணவர், இளைஞர்களைக் காப்பாற்றும் இயக்கம் உருவாக்கம்

முன்மொழிந்தவர்: ஜெ. தம்பி பிரபாகரன் பி.காம்., பி.எல். (சேலம் மண்டல மாணவரணி செயலாளர்)

மாணவர்கள் மத்தியில் தனிநபர் ஒழுக்கம், பொது ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவை நாளும் குலைந்து வரும் போக்கு கவலை அளிப்பதாக உள்ளது. ஜாதி, மதம், மது, பதவிப் போதைகள் வெறிகள், தீவிரவாதம், கிரிக்கெட் பைத்தியம், அறிவியல் சாதனங்களான கைப்பேசி, இணையதளங்களைத் தவறாகப் பயன்படுத்தி மாணவப் பருவத்தைப் பாழாக்கிக் கொள்ளும் அவலம் தலை விரித்தாடுகிறது. சின்னத்திரைகளும், சினிமாவும், ஊடகங்களும், விளம்பரங்களும் இவற்றிற்குத் தீனி போடுகின்றன. நுகர்வுக் கலாச்சாரம் என்பது மிகப்பெரிய அளவில் தனி வாழ்வையும், குடும்ப வாழ்வையும் நாசப்படுத்திக் கொண்டு வருகின்றன.

இந்தத் தீயவிளைவுகளிலிருந்து மாணவர்களை, இளைஞர்களைக் காப்பாற்றிட ஊர்தோறும் இளைஞர்-களைக் காப்பாற்றும் இயக்கம் ஒன்றினைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2:

கல்வி, வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்குக:

முன்மொழிந்தவர்: எ. சிற்றரசு (திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி தலைவர்)

கல்வி, வேலை வாய்ப்புகளை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:

தேசிய கல்வித் திட்டம் கூடாது:

முன்மொழிந்தவர்: இரா. மோகன்தாஸ் எம்.ஏ.,பி.எட்., (தஞ்சை மண்டல மாணவரணி செயலாளர்)

தேசிய உயர்கல்வி ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி, இந்தியா முழுமையிலும் ஒரே வகையான கல்வித் திட்டம் என்ற பெயரால் புதியதோர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த விரும்பும் மனித வள மேம்பாட்டுத் துறையின் முடிவுக்கு இம்மாநாடு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு இந்தத் திட்டத்தில் இல்லை என்பது ஒருபுறம்; கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதிக்கச் செய்யும் நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்படுகிறது என்பது இன்னொரு புறம்; மாநில உரிமைகளில் தலையீடு இன்னொரு பக்கம்; பல்வேறு இனம், மொழிப் பிரச்சினைகளைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்து மக்களுக்கு ஒரே மாதிரியான கல்வித் திட்டம் என்பது ஒவ்வாத ஒன்று என்பதையும் இம்மாநாடு திட்டவட்டமாகச் சுட்டிக் காட்டுகிறது. இந்தத் திட்டத்தைத் தொடக்கக் கட்டத்திலேயே கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைக் கொண்டு வரும் முடிவைக் கைவிடுக!

முன்மொழிந்தவர்: ம.அறிவழகன் பி.இ., (அரக்கோணம் மாவட்ட மாணவரணி செயலாளர்)

உள்நாட்டில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்-களை ஒழித்துவிட்டு, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்-களைக் கொண்டுவரும் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வியாபார நோக்கு, தகுதி திறமை என்கிற எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களால் இந்திய மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்பதோடு, பாதகமே ஆகும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இல்லையெனில் தமிழக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கிறது.

தீர்மானம் 5:

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை:

முன்மொழிந்தவர்: தா. தம்பி பிரபாகரன் பி.ஏ.,பி.எல்., (விழுப்புரம் மண்டல மாணவரணி செயலாளர்)

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களிலும், அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படவேண்டும் என்றும், அதற்குகந்த வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து-மாறும் நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. மாநில அரசுகளும் இந்த வகையில் நடுவண் அரசை வலியுறுத்தி, சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

(ஆ) 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தேவை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6:

மாநில மொழிகளை
ஆட்சி மொழியாக்கக் கோருதல்

முன்மொழிந்தவர்: சுரேஷ் எம்.ஏ., (நாகை மாவட்ட மாணவரணி செயலாளர்)

மாநில ஆட்சி மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளின் பட்டியலில் சேர்ப்பது; அரசமைப்புச் சட்டம் எட்டாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மொழிகளை மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்வதுபற்றி சீதா காந்த மகாபத்ரா குழு அறிக்கையை வெளியிடுமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7:

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்

மத நம்பிக்கையற்றவர் என்று தெரிவிக்க வேண்டுகோள்:

முன்மொழிந்தவர்: இரா. பெரியார்செல்வன் எம்.எஸ்சி., (கடலூர் மண்டல மாணவரணி செயலாளர்)

நடக்க இருக்கும் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கணக்கெடுப்பின்போது மதம் என்று கேட்கப்படும் பகுதியில் மதநம்பிக்கையற்றவர் , நாத்திகர் என்று தெரிவிக்குமாறு பகுத்தறிவாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இனம் என்னும் இடத்தில் திராவிடர் என்று கூறுமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 8:

கோபுரச் சின்னத்தை அகற்றி

திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்க வேண்டுகோள்:

முன்மொழிந்தவர்: ம. கவுதம சங்கமித்திரை (தருமபுரி)

மதச் சார்பற்ற அரசு என்கிற முறையில், தமிழ்நாடு அரசு சின்னமான கோபுரச் சின்னத்திற்குப் பதிலாக திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 9:

நடைபாதை மற்றும் அரசு இடங்களில் கோயில்களை, வழிபாட்டுத் தலங்களை அகற்றுக!

முன்மொழிந்தவர்: அ. சண்முகம் எம்.எஸ்சி., பி.எட்., எம்.ஃபில்., (திருச்சி மண்டல மாணவரணி செயலாளர்)

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மிகத் தெளிவாக, திட்டவட்டமாக தீர்ப்புகள் வழங்கிய பிறகும்கூட, நடைபாதைகள், அரசு அலுவலக வளாகங்கள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் கோயில்கள் இருந்து வருகின்றன. புதிதாகக் கட்டப்பட்டும் வருகின்றன. இந்தச் சட்ட விரோத செயலுக்கு அரசு அலுவலர்கள்கூடத் துணை போவது வருந்தத்தக்கது. இது சட்ட விரோதச் செயல்களை மக்கள்மத்தியில் ஊக்குவிக்கும் நிலைப்பாடாகும்.

எனவே, மேற்கண்ட இடங்களில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் உடனடியாக அகற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச்சார்பின்மையைக் காப்பாற்றுமாறு மத்திய மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 10:

சுற்றுச் சூழல் பாதுகாப்பு - விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளுதல்:

முன்மொழிந்தவர்: பெரியார் சுரேஷ் (பழனி மாவட்ட மாணவரணி செயலாளர்)

புவி வெப்பம் என்ற பிரச்சினை உலகையே உலுக்கி வருகிறது. எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற அபாய அறிவிப்பு குறித்து நாளும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இயற்கையின் இயல்புகளுக்குச் சேதாரம் ஏற்படாத வகையில், மரங்கள் வளர்த்தல், உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணி என்பது மனிதநேய பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகத்தைச் சார்ந்தது என்பதால் இத்திசையில் திராவிடர் மாணவர் கழகம் பிரச்சாரம் உள்ளிட்ட ஆக்கப் பணியில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

-------------------- “விடுதலை” 17-4-2010

1 comments:

Vipasana said...

திராவிட கழக மாணவ மாநாட்டின் அனைத்து தீர்மானங்களையும் கட்சிகள் கழகங்கள் அமைப்புகள் போன்ற அனைத்து வேறுபாடுகளையும் விலக்கி வைத்து விட்டு எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக வாழ்வுரிமைக்காக விவாதிப்பதும் செயல்படுத்துவதும் அவசர மற்றும் அவசிய தேவையாகும் ...

தேசிய உயர் கல்வி ஆணையமாம் ...

போலி பல்கலைகழகங்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் சமூக நீதிக்காக , பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் கல்வி உரிமைக்காக ,கிராமப்புற மேம்பாட்டிற்காக ,வணிக நோக்கின் சிறு சாயலும் இன்றி தொண்டாற்றி வரும் , அப்துல் கலாமாலேயே இதை போல நூறு பல்கலைகள் இருந்தால் நாடே சுபிட்சம் பெறும் என்று சென்ற இடமெல்லாம் அவரால் பாராட்டப்பட்ட எம் மக்கள் பல்கலை மீது பூணூல் சிபலின் அச்சுறுத்தலாம்...

வெளி நாட்டு பல்கலைகழகங்களுக்கு வெத்திலை பாக்காம் ... பூணூல் சிபல் குசு விட்டாலும் சங்கீதம் என்று புல்லரிக்கக் கூடிய IIPM கல்வியாளர்கள் கூட இந்த விசயத்தில் சிபலுக்குஎதிர்ப்பு என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும் < அரிந்தம் சவுத்ரி வகையராக்களை எல்லாம் கல்வியாளன் என்று சொல்வதற்காய் கல்வியாளர் சூழலியல் போராளி பகுத்தறிவாளர் டாக்டர் நல் ராமசந்திரன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் >

கல்வி மூலம் சமூக நீதி என்று ஆதிக்க ஆக்டோபசுக்களுக்கு எதிராக போராடி வரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கு எதிராக நடத்தப் பெற்று வரும் அநீதி களுக்கு கலைஞர் அவர்கள் வெளிப்படையாக கடும் கண்டனம் தெரிவிக்காதது மிகுந்த வருத்தத்திற்குரியதாக இருக்கிறது ...

பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தை யார் வந்து தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள் என்பதை வயோதிகத்தின் காரணமாக கலைஞர் மறந்து விட்டிருக்கலாம் ... ஆனால் நினைவு படுத்துவது கவி கனிமொழியின் ,அண்ணன் அழகிரியாரின் , நமது துணை முதல்வரின் கடமை அல்லவா!

பெரியார் மணியம்மை பல்கலை விடயத்தில் கண்டும் காணாது இருப்பாரென்றால் பெரியாரிஸ்ட் என்று சொல்லி கொள்ள கலைஞருக்கு என்ன உரிமை இருக்கிறது ?

சிலை உடைபட்டாலே பதறுவாறே கலைஞர் ... மஞ்சள் மகிமை என்பது இது தானோ?

விரிவான பதிவொன்றை எழுதத்தான் ஆசை ... என்ன செய்வது உடல் நலன் அப்படி ...
hruprakash@gmail.com