Search This Blog

20.4.10

மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் நமது முக்கிய வேண்டுகோளும்



சென்னையில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்களுள் முக்கியமானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பானதாகும்.

(1) நடக்க இருக்கும் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்,- சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும் என்று நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கணக்கெடுப்பின்போது மதம் என்று கேட்கப்படும் பகுதியில் மத நம்பிக்கையற்றவர் (Non-Believer) நாத்திகர் (Athesit) என்று தெரிவிக்குமாறு பகுத்தறிவாளர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

இது ஏழாவது தீர்மானமாகும்.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதில் வெறும் மக்கள் தொகை என்பது மட்டுமல்லாமல் வேறு பல தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.

ஆடு, மாடுகள் உள்பட வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப்பெட்டிகள் வரை கேட்கப்பட்டுப் பதிவு செய்யப்படுகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள் பற்றிய புள்ளி விவரங்களும் திரட்டப்படுகின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்ளும் கணக்கெடுப்பு மட்டும் திட்டமிட்டே தடுக்கப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுங்கூட நடுவண் அரசு கேளாக் காதுடையதாக இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசக்கட்சியைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்றவாதி கே. எர்ரான் நாயுடு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தென்ன? 1931க்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்பெறவில்லை. எனவே அத்தகு கணக்கெடுப்பு அவசியம் தேவை என்று உச்சநீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டதே அப்படியிருந்தும் பிற்படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாதது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பதை இருளில் மூழ்கடிக்கும் சதியாகும் என்று எழுதியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமீர் புஜ்பால் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெளிவாக ஒன்றை நினைவூட்டி உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான புள்ளி விவரங்கள் திரட்டப்படவேண்டும் என்று காகாகலேல்கர் ஆணையமும், மண்டல் ஆணயமும் வலியுறுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திராவிடர் கழகம் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் பற்றிய புள்ளி விவரம் தேவையில்லை என்பதற்கான நியாயபூர்வமான அல்லது சட்ட பூர்வமான எந்தக் காரணத்தையும் தெரிவிக்காமலேயே அதேநேரத்தில் அத்தகு விவரங்கள் திரட்டாத ஒரு நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது. மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு ஆணையத்தின் கணக்கீட்டின்படி) பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிப்பதும், உரிமைகளைத் தடுப்பதுமாகும். இப்பொழுதுகூட காலம் தாழ்ந்துவிடவில்லை. இடையில் இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றன. மறுபரிசீலனை செய்து, நாட்டின் பெரும்பான்மையரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நல்லது செய்யுமாறு நடுவண் அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக முதலமைச்சர் அவர்களும் இந்த மிக முக்கியமான பிரச்சினை குறித்து பிரதமரை வலியுறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

(2) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது மதம் என்ற கலத்தில் மதமற்றவர் (Non-Believer) நாத்திகர் (Athesit) என்று சொல்லவேண்டும்.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பகுத்தறிவாளர்கள் எவ்வளவு என்கிற புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. உலகிலேயே தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பாளர்கள், மத மறுப்பாளர்கள் புள்ளி விவரம் அதிகாரப்பூர்வமான புள்ளி விவரத்தில் இடம் பெறவேண்டாமா?

தோழர்கள் இந்த முக்கியமான பிரச்சினையில் அலட்சியமாக இருந்துவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இனம் என்று வரும்போது திராவிடர் என்று கூறப்படவேண்டும். இது வரலாற்று ரீதியான உண்மையாதலால் அதனையும் பதிவு செய்யவேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் உள்பட திராவிட நாகரிகம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், பார்ப்பனர் அல்லாதார் எனும் கண்ணோட்டத்திலும் இது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

----------------------- “விடுதலை” தலையங்கம் 20-4-2010

2 comments:

Unknown said...

விலங்குகளை கணக்கெடுத்தாலாவது நன்மை உண்டு. பகுத்தறிவாளரை கணக்கிடின் கிட்டும் நன்மை என்னவோ? அதை விடுதலையின் சர்குலேஷனை பார்த்தே தெரியலாமே?

நம்பி said...

//Blogger rammy said...

விலங்குகளை கணக்கெடுத்தாலாவது நன்மை உண்டு. பகுத்தறிவாளரை கணக்கிடின் கிட்டும் நன்மை என்னவோ? அதை விடுதலையின் சர்குலேஷனை பார்த்தே தெரியலாமே?

April 20, 2010 9:36 PM//

விலங்கின் கோரிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கனிவுடன் பரிசீலனை செய்யவேண்டுமே!?