Search This Blog

27.4.10

வருஷம், வருஷமாக அழகர் தாமதமாக வருவது ஏன்?


ஆற்றில் இறங்குவாரா அழகர்?

(புதனன்று (28.4.2010) மதுரையில் கள்ளழகர் திருவிழா நடைபெறுகிறதாம். இதன் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளவே இந்தக் கட்டுரை).

மதுரை மாநகரிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது அழகர் கோயில். அது அழகர்மலை என்றும் முன்னர் அழைக்கப்பட்டது. அங்கு ஓர் ஆட்சி நடந்ததற்கான ஆதாரங்களாக கோட்டையும், பெரிய மதில் சுவர்களும் இன்றும் உள்ளன!

அழகர் என்பவர் கடவுளோ, கடவுளின் அவதாரமோ கிடையாது. அவன் அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர் சமுதாய மக்களின் தலைவன் என்பதே உண்மை. பண்டைய பாண்டிய அரசர்களால், தொடர்ந்து கள்ளர் சமூக மக்கள் அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், நகர்ப்புறங்களில் வாழவும், மலைசார்ந்த விளை நிலங்களில் புகவும், அவர்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டும் வந்தே உள்ளார்கள். கள்ளர்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக அன்றைய அரசு அதிகாரத்துடன் பல்வேறு போர்களை நடத்தி வந்தனர். இதனால், கள்ளர்கள் முதன்முதலாக கொரில்லா முறை தாக்குதல்களை நடத்தி தங்கள் வாழ்வுக்காக கொள்ளையடித்தும்; தானியம், ஆடு, மாடுகளைக் கவர்ந்தும் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அழகர் மலைக்கு 3 கி.மீ. தூரத்தில் உள்ள கள்ளந்திரி கிராமம், கள்ளர்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அப்பெயர் பெற்றது. இப்போதும், கள்ளழகர் இவ்வூரிலிருந்து கள்ளன் வேடம் தரித்து மதுரை நோக்கிப் புறப்படுகிறார். இது ஆண்டு தோறும் நடக்கிற சித்திரைத் திருவிழாவின் ஒரு சடங்காகவே நடத்தப்படுகிறது.

திப்பு சுல்தான் கூட திண்டுக்கல் கோட்டையிலிருந்து கள்ளர்களுக்கு ஆதரவாக படை அனுப்பியதாக செய்திகள் உள்ளன.

இசுலாமிய மக்களும், கள்ளர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

கள்ளர்களின் திருமண முறை கூட இசுலாமிய முறைப்படிதான் நடந்து வந்தன. திருமணம் இரவு நேரங்களில், இந்து வைதீக முறைப்படியின்றி மணப் பெண்ணுக்கு மணமகனின் அக்கா கருகமணி சூட்டுவார்கள்.

திருமணத்தின் போது, கிடா அடித்து சாப்பாடு! தற்போதும் கூட, இப்பகுதியில் உள்ள கள்ளர் சமூகத் திருமணங்களில், 10, 20, 50 வரை என ஆடுகள் வெட்டப்பட்டு, அவரவர் செல்வாக்கிற்கேற்ப திருமணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலூர் வட்டாரத்தில் சென்னகரம்பட்டி, கள்ளம்பட்டி ஆகிய கிராமங்களில் கள்ளர் பலர் இசுலாமியராக மதம் மாறியுள்ளார்கள். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், இப்போதும் கூட இந்து எனக் கூறிக்கொள்கிற கள்ளர்கள் ரம்ஜான் நோன்பின்போது, முசுலிம்களுக்கு நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுகின்ற முறை, இங்கு நிகழ்ந்து வருகின்றது. இந்த நோன்புக் கஞ்சி காய்ச்சி ஊற்றுவதற்காக பரம்பரை, பரம்பரையாக நஞ்சை நிலம் ஒதுக்கப்பட்டு அந்தக் காரணத்திற்காக அதன் வருமானங்கள், பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிறமலைக் கள்ளர்கள் இசுலாமியார் போன்று சுன்னத் செய்வதும், முசுலிம்கள்போல சிய்யான் (தாத்தா) என்ற பொருள்பட அழைப்பதும் உதாரணங்-களாகும்.

ஜாதி, சமூக வேறுபாடுகளில்லாத இம் மக்களுக்கு, ஆட்சியாளர்களும், பாண்டிய நாட்டு உயர் குடி மக்களும் வைத்த பெயர்தான் கள்ளன் என்பது. இன்று தீவிரவாதிகள், போராளிகள் என்றழைக்கப்படுவது போன்ற ஒரு சொல்லே கள்ளர் ஆகும். அது ஜாதி ஆகாது.

சித்திரைத் திருவிழாவுக்கும், அழகர் ஆற்றில் இறங்குவதற்கும் இன்றுள்ள-படியான மத ரீதியான தொடர்பு ஏதுமில்லை. சொல்லப்போனால் இவ்விரண்டும், வெவ்வேறானவை. முரண்பட்டவை.

சித்திரைத் திருவிழா, மதுரை மீனாட்சி சொக்க நாதர் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. பண்டைய நாள்களில் இந்த விழாவிற்கு பக்கத்து நாட்டு மன்னர்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்கள், திவான்கள், சிற்றரசர்கள் என பெருந்தனக்காரர்கள் கூடுவார்கள். இன்று போல அன்று சாலைகள், அவற்றைக் கடக்கும் பாலங்கள், விரைவாகச் செல்ல வாகனங்கள் இல்லாத காலம். பெரும்பாலும் இவர்கள் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளிலும், மாடு பூட்டிய கூண்டு வண்டிகளிலும், ஆட்கள் தூக்கும் பல்லக்குகளிலும் பயணம் செய்வர்.

பழைய மதுரை; அதாவது அன்றைய பாண்டிய நாடு வைகை ஆற்றுக்குத் தெற்காக இருப்பது மட்டும்தான்! ஆற்றின் வடக்கே இருந்த பகுதிகள் மருத மரங்கள் நிறைந்த பெரும் காடுகளாக விளங்கின.

வடபகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள் இன்றைய ஆழ்வார்புரத்திற்கு வந்து ஆற்றைக் கடந்துதான் மதுரைக்குச் செல்லவேண்டும். இதைப் பயன்படுத்தி கள்ளர் படை ஆற்றுக்குள் இறங்கி தக்க தருணம் பார்த்து பயணிகளின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.

மீனாட்சிசொக்கன் திருக்கல்யாணத்திற்கு வருகின்ற சீமான்களைத் தடுத்து நிறுத்தி கொள்ளையிடுவது கள்ளர்களின் திட்டமும் வழக்கமும் ஆகும்.

கள்ளர் தலைவன் அழகர் குதிரைகளுடன் தம் கூட்டாளிகள் துணையுடன் வைகை ஆற்றில் இறங்கி அங்கிருந்த புதர்களில் மறைந்திருந்து இத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளான்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுடன் வண்டியூர் சென்று தனது வைப்பாட்டியான துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கியிருப்பதும், பின் பாதுகாப்புடன் மலையேறுவதும், அவன் வழக்கமாயின!

அழகர் மலைக் கொள்ளையர்களை, மதுரை வீரன் வரை போராடிப் பார்த்தும் அவர்களை அடக்கவும், ஒடுக்கவும் முடியாமல் இருந்து வந்துள்ளது. சங்கிலிக் கருப்பன் என்பவன் அழகரின் பின் தோன்றல் ஆவான். இந்த கள்ளர் படையின் தொல்லைகள் மதுரைப் பாண்டிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டது. இன்றைக்கு சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிரச்சினைபோல அது மிகப்பெரிய அளவில் இருந்திருக்கலாம்.

பாண்டிய நாட்டு ஆட்சியை நாயக்கர்கள் கைப்பற்றிக் கொண்டபோது, கள்ளர்களை எதிர்த்து அமைதியான ஓர் ஆட்சியை நடத்த முடியவில்லை.

கள்ளர் வாழ்வில் நல்லதொரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தவர் திருமலை நாயக்கரே என்றால் அது மிகையாகாது! கள்ளழகர் சமூக மக்களும் மற்ற மக்களைப்போல தம் பகுதியில் வாழ வழிவகை செய்யப்பட்டது. அதன் விளைவாக அதன்பின் கள்ளர்கள் சித்திரைத் திருவிழா வின்போது கொள்ளையடிப்பது தடுக்கப்பட்டது. அரசருக்கும் ஆட்சிக்கும் விசுவாமாக இருப்பது; அதே நேரத்தில் மேலூர் வட்டாரப் பகுதியை 18 கிராமங்களுடன் கூடிய கள்ளர் சீமையை அமைத்து கள்ளர் தாமே சுயமாக ஆள்வது என அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் கள்ளர்களின் தலைவர் அடக்கமான அழகர் மலையில் கோயில் எழுப்பி மன்னர் அழகரைப் பெருமானாகக் கருதி வணங்கினர். பின் அழகர் கள்ளழகர் ஆனார்.

கள்ளர்கள் எக்காரணம் கொண்டும் மதுரைக்குள் நுழைவது இதன் மூலம் தடுக்கப்பட்டது. என்றாலும், வழக்கம்போல அழகர் நினைவாக ஆற்றில் இறங்கி வண்டியூர் சென்று திரும்ப அழகர் மலை வந்து சேரும் நிகழ்வுகள் அரசு துணையுடன் நடத்தப்பட்டன. அவ்விழாவில் கலந்துகொள்ளும் கள்ளர்களுக்குத் தேவையான தானியங்கள், ஆடு, மாடுகள் இவற்றைத் தானமாக வழங்க அரசரால் ஆங்காங்கே மண்டபப்படிகள் அமைக்கப்பட்டு அரசரால் அவற்றிற்கு மானியங்கள் வழங்கப்பட்டன.

கள்ளர்கள் மலைகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதால் தம்மோடு பெண்களை அதிகமாக வைத்திருக்கவில்லை.

நாயக்கர் காலத்தில் கள்ளர்கள் மீதிருந்த ஒடுக்கு முறை தளர்த்தப்-பட்டதால்மேலூர் வட்டாரப் பகுதியில் நல்ல கலாச்சாரத்துடன் பெரும்பான்-மையினராக இருந்த கோனார், வெள்ளாளர் சமூக மக்களை எதிர்த்து அவர்களிடமிருந்து ஆடு, மாடு இவற்றுடன் அவர்கள் வீட்டுப் பெண்களையும் சிறை பிடித்து, கள்ளர் சீமை அமைந்தது என்றே சொல்லலாம்.

அதைப் போல பிறமலைக் கள்ளர்கள் உசிலம் பட்டியை மய்யமாக வைத்து அங்கு வாழ்ந்த வடுகர்களை விரட்டிவிட்டு வடுகப் பெண்களுடன் கூடி வாழ்ந்தனர். வடுக மொழி என்பது கொச்சைத் தமிழாகும்! இன்றும் கூட பிறமலைக் கள்ளர்கள் பேசும் தமிழ் கொச்சையாக இருப்பதைக் காண்கிறோம்.

இந்த அடிப்படையில்தான் கள்ளழகர் கள்ளர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் ஆண்டு தோறும் இறங்கி விட்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குவதும், தீட்டுப்படுவதும், அழகர் மலை சென்றதும், தீட்டு நீக்கப்பட்டபின் கோயிலுக்குள் அனுமதிப்பதுமான விழாக்கள் நடக்கின்றன.

திருக்கல்யாணத்தைக் காண, பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் மற்றும் சற்சூத்திரர்களுடன் மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களோ, அழகருடன் வந்து, அழகருடன் திரும்ப அழகர் கோயில்வரை செல்வதும், வணங்குதுமான முறைகளை இப்போதும் கூட பார்க்க முடிகிறது.

இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சைவ வைணவ ஒற்றுமையை உருவாக்க நினைத்த சிலர் சம்பந்தமில்லாத அழகரை, மீனாட்சி சகோதரர் எனவும், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டதால், அழகர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று விட்டதாகவும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். பொய்யான பிரச்சாரம் பக்தியின் பெயரால் உண்டாக்கப்பட்டதை அதிநவீன காலத்திலும் பகுத்தறியாது, பக்திப் பரவசம் காண்கிற முட்டாள்களை என்னவென்பது?

தந்தை பெரியார் சொன்னது போல் அவர்களைக் காட்டு மிராண்டிகள் என்பதில் என்ன சந்தேகம்? நியாயம்தானே!

அக்காலத்தில் வாகன வசதி இல்லை. நல்ல சாலை வசதிகள் இல்லை. ஒப்புக்காக ஏற்றாலும்கூட, அப்போது, அழகரால் தன் தமக்கையின் திருமணத்துக்கு வந்து சேருவதில் தாமதம் உண்டாகியிருக்கலாம். இன்று அவ்வாறில்லை. வாகன வசதிகள் உள்ளன. ஹெலிகாப்டரைக்கூட அவசரத்திற்குப் பயன்படுத்தலாம். சாலை வசதிகளுக்கும், மேம்பாலங்களுக்கும் குறைவு இல்லை. மதுரை நகருக்குள் நுழைய 7,8 பாலங்கள் வரை கட்டப்பட்டுள்ளன.

வருஷம், வருஷமாக இந்த அழகர் தாமதமாக வருவது ஏன்? ஒருத்தருக்கு ஒரு முறைதானே திருமணம். நம்ம மீனாட்சி சொக்கநாதருக்கு ஆண்டுதோறும் திரும்பத் திரும்பத் திருமணமா? நல்ல தமாஷாக உள்ளது. இந்தப் பொம்மைக் கல்யாணத்தை நம் பெரியவர்கள் எப்போது விடப் போகிறார்களோ?

நம்ம மந்திரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை ஆணையாளர் சமூக முன்னேற்றத்தை அழகரிடம் எடுத்துச் சொல்லி, இந்த ஆண்டாவது முதல் நாளே புறப்பட்டு மதுரை வந்துவிடுங்கள். உங்கள் சகோதரியும் சந்தோஷமடைவாள். விரைவான சொகுசான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இனி மேலாவது தாமதிக்காமல் திருமணத்திற்கு வரவேண்டும் என ஏன் சொல்லவும், செய்யவும் மறுக்கிறார்கள்.

அழகர் ஆற்றில் இறங்க வேண்டியதில்லை. ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் வழியாக மதுரையம்பதி வரலாமே! செய்வார்களா நம் ஆட்சியாளர்கள்? பக்த கே()டிகள் இருக்கிறவரை, அழகர் ஆற்றைக் கடக்கமாட்டார்! அவர் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆள்வதாகவே நினைத்திருக்கலாம்! அழகரை வைத்து வைதீகக் கூட்டம் வயிறு நிறைப்பது... நிற்பது... எப்போது?

----------------------- “விடுதலை” 27-4-2010

12 comments:

வஜ்ரா said...

நாட்டுல எத்தனையோ மீனாட்சிங்க கல்யாணத்துக்கு காசில்லாமல் கஷ்டப்படுறாங்கன்னா அவுங்களுக்கெல்லாம் சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைக்கவேண்டியது தானே ? உங்களை யார் தடுத்தார்கள் ?

அது சரி, உங்கள் தந்தையே சுயமரியாதை திருமணத்தை பிறருக்குஉபதேசித்துவிட்டு ரெஜிஸ்டர் கல்யாணம் கட்டியவர் தானே ? என்று எவனாவது கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதற்காக கோயில் திருவிழாவைத் திட்டி உங்கள் சுயமரியாதையைக் காட்டிக்கிறீங்களாக்கும் ..

gvsivam said...

ஹி..ஹி...மத நம்பிக்கை இல்லாத தாங்கள் இதைப்பற்றி கவலைப்படுவதை விட்டு ஆக்கப்பூர்வ வேலைகளில் ஈடுபடலாமே?நாட்டில் எவ்வளவோ ப்ரச்சனைகள் உள்ளன.லஞ்சம்,ஊழல் என்று.அதைவிட்டு விட்டு மக்கள் ஆத்ம திருப்திக்காக செய்கின்ற இன்த சடங்கு,சம்பிரதாயத்தை எதிர்ப்பதால் நீங்கள் ப்ரபலமாகலாமே தவிர,மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை என்பதே உண்மை.

adiyaarkku adiyavan said...

கள்ளர் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்த நீங்கள் அதற்கு பதிலாக கருணாநிதி, வீரமணியின் ஆரம்ப கால சொத்து மற்றும் தற்போதைய சொத்து விவரங்களையும் ஆராய்ந்து, அதன் வித்தியாசத்தின் காரணத்தையும் புள்ளி விவரங்களோடு வெளியிட்டு இருந்தால் நிஜமான தைரியசாலி என்று சொல்லலாம். அதிகார வர்கத்திடம் சொல்லி இந்த ஊழல் ஒழிய ஏதாவது யோசனை சொன்னீர்கள் என்றால் அது உருப்படியான வேலை.

mightymaverick said...

ஒரு பதிவில் துரௌபதியை வேசிக்கு சமானம் என்கிறீர்கள். மறு பதிவில் சீதையை பெண்ணடிமையின் சின்னம் என்கிறீர்கள். பெரியாரின் கருத்துகள் என்று பெண்ணடிமையை ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்படி முன்னுக்கு பின் முரணாக எழுதுவதை விட அவர்கள் எப்படி வாழ விரும்புகிறார்களோ அப்படியே வாழ விடுங்களேன்... நீங்கள் எப்படி உங்கள் இஷ்டப்படி இருப்பேன் என்று சொல்லுகிறீர்களோ அப்படி பெண்களும் தங்கள் இஷ்டப்படி வாழ்வது தான் சுதந்திரம்... அழகர் வந்தாரா வர வில்லையா என்று மதுரைக்காரங்க நாங்களே கவலைப்படாம எங்க வேலைய பாக்கும்போது வேலைவெட்டி இல்லாமல் ஏன் இப்படி...


உங்களுக்கு இன்னொன்றும் சொல்லிக்கொள்கிறேன். இந்த திருவிழாவினால் கஷ்டப்பட்டவன் இருக்கலாம்; ஆனால் நஷ்டப்பட்டவன் இருக்க முடியாது... இது புரிஞ்சா இனிமேல் இப்படி பதிவுகள் போடாதீர்கள்...

அப்புறம் உங்க அய்யா கலைஞர் கூட கள்ளர் தான். அதனால அவர் குடும்பம் தமிழ் நாட்டையே களவாடு அவருக்கு சந்தோசமாய் இருக்கலாம். ஆனால் நீங்க அதை எதிர்த்து பேசலைனா நீங்க என்ன முன்னேற்றம் கொண்டு வர விரும்புறீங்கன்னு ஊருக்கே வெளிச்சம் ஆயிடும்... அதனால இந்த மாதிரியான நாட்டுக்கு தேவையான விசயத்தை பேசுங்கப்பு...

Anonymous said...

//அழகர் வந்தாரா வர வில்லையா என்று மதுரைக்காரங்க நாங்களே கவலைப்படாம எங்க வேலைய பாக்கும்போது வேலைவெட்டி இல்லாமல் ஏன் இப்படி...

//

நீங்க கவலைப்படனுமென்றுதான் இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

மக்களை அவர்கள் போக்கில் விட்டால் நாடு முழுவதும் நித்தியானந்தாக்கள் பெருகிவிடுவார்கள்.

மதுரைக்காரர்களுக்குகண்டிப்பாக இப்படிப்பட்ட கட்டுரைகள் அவசியம். இங்குதான் சினிமாவில் ஒரு நாய் நடித்தாலும் கட் அவுட் வைத்து பாலாபிசேகம் செய்பவர்கள் வாழ்கிறார்கள்.

Anonymous said...

//வாழ்வுக்காக கொள்ளையடித்தும்; தானியம், ஆடு, மாடுகளைக் கவர்ந்தும் ...//

இப்படி ஒவ்வொருவனும் சொன்னால் எப்படி இருக்கும்?

‘என் வாழ்வுக்காக வங்கியைக் கொள்ளையடித்தேன்.’

‘என் வாழ்வுக்காக லஞ்சம் வாங்கினேன்’

‘என் வாழ்வுக்காக போலி மருந்தை விற்றேன்’

கட்டுரை முழுவதும் அப்பாவி மக்களைக்கொடுமைசெய்து வாழ்பவர்கள் ஹீரோக்களாக்கப்பட்டு, அனுதாபம் தேடப்படுகிறது!

Anonymous said...

//இந்த அடிப்படையில்தான் கள்ளழகர் கள்ளர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் ஆண்டு தோறும் இறங்கி விட்டு வண்டியூர் சென்று துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குவதும், தீட்டுப்படுவதும், அழகர் மலை சென்றதும், தீட்டு நீக்கப்பட்டபின் கோயிலுக்குள் அனுமதிப்பதுமான விழாக்கள் நடக்கின்றன. திருக்கல்யாணத்தைக் காண, பார்ப்பனர்கள், உயர் ஜாதிக்காரர்கள் மற்றும் சற்சூத்திரர்களுடன் மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார்கள். ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களோ, அழகருடன் வந்து, அழகருடன் திரும்ப அழகர் கோயில்வரை செல்வதும், வணங்குதுமான முறைகளை இப்போதும் கூட பார்க்க முடிகிறது. இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சைவ வைணவ ஒற்றுமையை உருவாக்க நினைத்த சிலர் சம்பந்தமில்லாத அழகரை, மீனாட்சி சகோதரர் எனவும், அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து விட்டதால், அழகர் கோபித்துக் கொண்டு வண்டியூர் சென்று விட்டதாகவும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். பொய்யான பிரச்சாரம் பக்தியின் பெயரால் உண்டாக்கப்பட்டதை அதிநவீன காலத்திலும் பகுத்தறியாது, பக்திப் பரவசம் காண்கிற முட்டாள்களை என்னவென்பது? //

இந்த முரண்பாட்டை என்ன சொல்வது?

கள்ளழகர் திருமணமாம். துலுக்க நாச்சியாரிடம் கூடி தீட்டுப்படுகிறாராம்!

இது கற்பனையில்லையாம்!

ஆனால், சைவ-வைணவ ஒற்றுமைக்கு பார்ப்பனர்கள் கள்ளழகரை மீனாட்சியின் அண்ணன் என்பது மட்டும் கற்பனையாம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதாம்.

pulikkutti said...

லலித் மோடி,மருத்துவர் கேதன் தேசாய் மற்றும் ஊழல் அரசியல் வாதிகள் போன்றவர்களை நீங்களும் உங்கள் இயக்கமும் தட்டி கேட்களாம் அது மக்களுக்கு நன்மையாக இருக்கும் . அதை விட்டு இந்துக்களின் நம்பிக்கையை விமர்சிக்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் செயல்களில் இறங்குங்கள்

Anonymous said...

துலுக்க நாச்சியார் எங்கே வந்தார்? அவர் அலாவுதீனின் மகளாயிற்றே? அவர் காலத்தில் சுந்தர பாண்டியனல்லவா மதுரையை ஆண்டான்?

கள்ளழகர் கோயில் கதையை இவர் எப்போதிருந்து ஆரம்பிக்கிறார்?

கோயில் ஆதிகாலத்த்தாயிற்றே!

சங்க காலத்துக்கு முன்பே உள்ளதாயிற்றே!

‘மாயோன் உறைய காடுடை உலகம்’ என்று ஆதிதமிழர் பிரித்த காட்டு நிலப்பரப்பு கடவுள் அல்லவா மாயோன். பின்னர் திருமால. காட்டு மனிதர்கள் - வேட்டையாடி வாழும் வேடர்களின் தெய்வமல்லவா?

இவர்கள் கள்ளர்களா? ஆர் சொன்னது?

ஆழ்வார்கள் மாயோன் என்றல்லாவா அழைக்கிறார்கள்?

திருமங்கை, பெரியாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள் - அனைவரும், இவர் காட்டுமக்கள் தெய்வம் என்று அங்கீகாரம் செய்துவிட்டுத்தான் எங்களையும் ஏற்றுக்கொள் என்று பாடுகிறார்கள்.

அவர்கள் அப்படி பாடியதாலேயே, பார்ப்பனர்கள் வந்து சேர்ந்தார்கள்.

அப்படியிருந்தும் கருப்பண்ணசாமி என்று முரட்டு காவல் தெய்வத்தை பாடி கார்டாக வைத்து பார்ப்பன பூஜார்களை அவரிடம் டெயிலி ரிபோர்ட் பண்ணல்லவா சொல்லபட்டிருக்கிறது?

இக்கோயில் காட்டுமனிதர்களுக்கானபடியால், இன்னும் இங்கு துள்சி தீர்த்தம் வழங்காமல் தேனும் திணைமாவுமல்லவா வழங்குகிறார்கள்!

எங்கே போனது பார்ப்பன சம்பிரதாயம்?

திருமாலிருன்சோலை என்பதே பெயர்.

There is complete hypocricy running through this essay.

Know about the temple thoroughly before writing on it.

சிங்கக்குட்டி said...

ஆகா, உங்க அறிவை பார்க்கவே கண்ணு கூசுது, அறிவு கொழுந்து! பாத்துங்க யாராவது கிள்ளி வாயில போட்டுக்க போறாங்க.

சரி, விசையத்துக்கு வருவோம், குறை சொல்லவேண்டும் என்ற ஒரே நோக்கோடு ஏதாவது அரைகுறையாக தெரிந்து கொண்டு உளறக்கூடாது, அதாங்க "மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் கருத்து சொல்வது சரியல்ல."

குலதெய்வம் என்பது பிறப்பால் மனிதனாக பிறந்து தம் குலமக்களை காக்கும் பொறுப்பில் தன் வாழ்க்கையை அர்பணித்த மகான்களைத்தான் நாளடைவில் கடவுள் அவதாரமாக அந்த அந்த வம்சா வழியில் பிறந்த சந்ததியினர் வழிபடுகிறார்கள் என்பது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு கூட தெரியும்.

அதாவது உங்க "பகுத்தறிவுக்கு" புரியுற மாதிரி சொல்லனும்னா, உங்களுக்கு எப்படி ஒரு சில கொள்கைகளுடன் வாழ்ந்த ஒரு அரசியல் கட்சி தலைவர் "தந்தை" முறை ஆனாரோ?!, அதே போலத்தான் தம் மக்களுக்காக வாழ்ந்த மகான்கள் அந்த அந்த வம்சா வழியில் பிறந்த சந்ததியினருக்கு கடவுள் அவதாரமாக குலதெய்வமானது.

காலம் காலமாக ஜாதி மதத்தை கிண்டி எரியவிட்டு அதில் குளிர் காய்வதை தவிர, மக்கள் ஒற்றுமையாக வாழ உருப்படியாக ஏதாவது செய்ய முயற்சிக்கலாமே!.

இப்படி ஒரு இடுகையை படிக்க நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.

தமிழ் ஓவியா said...

வந்தாரா - சென்றாரா?

மதுரையில் கள்ளழகர் வந்தார், சென்றார் என்றெல்லாம் தொலைக்காட்சி முதற் கொண்டு சரடு விடுகின்றனவே_ உண்மையிலேயே கள்ளழகர் என்பவர் (நடந்து) வந்தாரா? (நடந்து) சென்றாரா? கள்ளழகர் என்று ஒரு பெயரைச் சூட்டி ஒரு பொம்மையை சில ஆசாமிகள் தூக்கிக் கொண்டு வந்தனர். தூக்கிக் கொண்டு சென்றனர். இதுதானே உண்மை. அதற்கு மாறாக கள்ளழகர் என்பது ஒரு கடவுள் போலவும், அது தானாகவே தமது கால்களால் நடந்து வந்தது போலவும், தமது கால்களால் நடந்து சென்றது போலவும் கதை அளக்கிறார்களே! புளுகினால் பொருத்தமாகப் புளுக வேண்டாமா? ஓராண்டா _ ஈராண்டா? எத்தனை ஆண்டு காலமாக இப்படிப் புளுகித் திரிகிறார்கள்?கடவுள், மதச் சமாச்சாரங்கள் என்றாலே ஒரே புளுகு மூட்டைச் சமாச்சாரம்தானோ!

-------------"விடுதலை” 28-4-2010

தினேஷ் ராம் said...

// வருஷம், வருஷமாக இந்த அழகர் தாமதமாக வருவது ஏன்? ஒருத்தருக்கு ஒரு முறைதானே திருமணம். நம்ம மீனாட்சி சொக்கநாதருக்கு ஆண்டுதோறும் திரும்பத் திரும்பத் திருமணமா? நல்ல தமாஷாக உள்ளது. இந்தப் பொம்மைக் கல்யாணத்தை நம் பெரியவர்கள் எப்போது விடப் போகிறார்களோ? //

நல்ல பகடி. வாழ்த்துக்கள். மக்களுக்கு இதைப் படித்தாவது புத்தி வரட்டும். ஆனால் உண்மைகளை இன்னும் துருவி எழுத முடியுமா என பாருங்களேன்.

கருவறையில் இருக்கும் சிலையை விட சாலையில் நிற்கும் சிலைகள்(பெரியார், அண்ணா சிலை) அளிக்கும் வரங்கள் அதிகம் என நம்பும் பகுத்தறிவுவாதிகளின் மேதமை கள்ளழகர் ஆற்றுக்கு போகும் பொழுது கூடும் மக்களுக்கு இல்லை. அது உண்மை தான். அதனால் தான் பகுத்தறிவு ஆட்சி நடக்கிறது. இறந்து விட்ட அண்ணா பிறந்த நாளின் பொழுது.. சிலையாய் அவர் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்து தள்ளாத வயதில் கஷ்டப்பட்டு போடப்பட்டிருக்கும் மேடையில் ஏறி.. பொது மக்களை சாலையில் கைதிகளாக தவிக்க விடுவது பகுத்தறிவு. அது பரவாயில்லை. அதன் பின் வரிசையாக அடி பொடிகள் என சகலரும் மாலை போடுவார்கள். ம்ம்ம்..

இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தமாஷ் இல்லை.. அழகருக்கு ஒவ்வொரு வருடமும் கல்யாணம் செய்வது மட்டும் தான் தமாஷ். சரி தானே.. நான் சொல்வது!!