Search This Blog

4.1.12

சொர்க்கவாசல் மகாத்மியம்தான் என்ன?


நாளை சொர்க்கவாசல் திறப்பாம்; வைணவ கோவில்களில் ஒரு கதவைத் திறந்து வைத்திருப்பார்கள்; பக்தர்களும் அதற்குள் நுழைந்து வெளியில் வந்தால் சொர்க்கம் சென்று வந்ததாக ஒரு நினைப்புப் போதை!

சின்ன குழந்தைகள் மண்ணில் மூத்திரம் பெய்து குழைத்து, சிறுவீடு கட்டி, கூட்டாஞ்சோறு ஆக்கிக் குதூகலிப்பதில்லையா?

வளர்ந்து ஒதிய மரமாகிய பின்பும் அந்த சின்னபுத்தி பக்தர்களைவிட்டு விலகுவதில்லை.


சொர்க்கத்திற்குப் போகப் போகிறோம் - வீடு பேறு அடையப் போகிறோம் - இனி திரும்பி சொந்த வீட்டுக்கு வரப் போவதில்லை என்ற நிலை இருந்தால் எந்தப் பக்தன் அல்லது பக்தை ஏகாதசியன்று விரதம் இருந்து குளித்து மூழ்கிக் கோவிலுக்குச் செல்லுவார்கள்? விரலை மடக்குங்கள் பார்க்கலாம்.

ஏகாதசி - சொர்க்கவாசல் என்று சிறப்பு இதழ்களை வெளியிடும் பத்திரிகை வியாபாரிகளோ, அந்த முதலாளிகளோ, ஆசிரியர்களோ அப்படி ஒரு நிலை இருந்தால், சொர்க்கவாசல் மண்டபத்திற்குள் நுழைவார்களா?

மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக்கிப் பகற்கொள்ளை அடிப்பதுதான் பத்திரிகைத் தொழிலா?

பிரஸ்கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நாக்கைப் பிடுங்கக் கேட்ட பிறகும்கூட இந்தப் பத்திரிகையாளர்கள் திருந்தவில்லையே!

இந்தச் சொர்க்கவாசல் மகாத்மியம்தான் என்ன? திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற பக்தி நூல் என்ன கூறுகிறது?

நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான். ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது நாமத்தையே சாத்திவிட்டான். கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, திரவியம் தருகிறேன் என்று கூறி, காவிரி தீரத்தில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்றுவிட்டான் - ஓடக்காரன் துணையோடு.

அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் கொள்ளிடம் என்றும், அந்தத் துறைக்குப் பார்வானத்துறை (பார்வானம் - சுடுகாடு, பார்வணம் - சிரார்த்தம் செய்யும் இடம்) என்றும் பெயரிட ஆண்டவனிடம் இறைஞ்ச, அவ்வாறே அளிக்கப்பட்டு, அன்று கொல்லப்பட்டவர்க்கெல்லாம் முக்தியும் அளிக்கப்பட்டதாம் (திருமங்கை ஆழ்வார் வைபவம் என்ற நூல் ஆதாரப்படி)

சீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படுகின்றதே சொர்க்கவாசல் - அது எங்கே செல்லுவது தெரியுமா? திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் கொன்று சிரார்த்தம் செய்த அந்தப் பார்வனத்துறைக்கு! சொர்க்கவாசல் மகிமை புரிகிறதா?


திருமங்கை ஆழ்வார் வைபவ நூல் இவ்வாறு கூறுகிறதே - இதன் பொருள் என்ன?

(1) திருமங்கை ஆழ்வார் என்பவன் ஒரு திருடன்!

(2) தொழிலாளர்களுக்குக் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுக்காமல் வஞ்சகமாக அழைத்துச் சென்று படுகொலை செய்தவன்!

(3) இந்தப் படுகொலைக்கு சீரங்கநாதன் என்று கூறப்படும் ரெங்கநாதன் என்ற கடவுளும் உடந்தை.

(4) இப்படித் திட்டமிட்டு படுகொலையையும் செய்துவிட்டு, அதனை வஞ்சகமாகப் பக்திப் போதை மாத்திரைகளாக உருட்டிக் கொடுத்து, பக்திப் பரவசமாக்கி - வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு என்று கூறி மக்களை ஆண்டுதோறும் வஞ்சிக்கிறார்கள் - சுரண்டுகிறார்கள் என்றால், இந்தக் கொடுமையை என்ன சொல்ல!

பக்தர்களே, உங்கள் முன்னோர்களைப் படுகொலை செய்த நாளைப் பயபக்தியோடு ஏற்கலாமா?

இந்தப் பார்ப்பன வஞ்சகத்தை வெறுக்கவேண்டாமா?

சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

--------------------- “விடுதலை” 4-12-2012

2 comments:

தமிழ் ஓவியா said...

ஒரு மாணவனின் வணக்கம்


ஆசிரியர்
விடுதலைக்கு மட்டுமல்ல
சாலை ஓரங்களில் எல்லாம்
விவரம் அறியா தமிழனுக்கு
நாள்தோறும் தன் பொதுக் கூட்டத்தையே
வகுப்பாக மாற்றுவதால்
இவர்,
தமிழர்களின் ஆசிரியர்
ஒரு மாணவனைப் போல்
நாள்தோறும் படிக்கின்ற ஆசிரியர்
ஒரு சிறந்த ஆசிரியர் எப்போதும்
படிப்பார் என்பதும்
படிக்கின்ற ஆசிரியரிடம்
படிக்கும் நாங்கள்
கொடுத்து வைத்தவர்கள்
மாணவராய் இருப்பதற்கு.

கவிஞர் நந்தலாலா
மாநிலத் துணைத்தலைவர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்

தமிழ் ஓவியா said...

பக்தி
அவர் என்ன செஞ்சார்

தமிழகத்துல ஒரு அம்மா தொல்லை தாங்கலைனா, மறுபக்கம் இன்னொரு அம்மா தொல்லைங்க, என் அம்மாவின் வற்புறுத்தலால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்தக் கோவிலுக்குச் செல்ல நேர்ந்தது. பெண்கள் எல்லாம் இருமுடி கட்டிட்டு மேல்மருவத்தூர் அம்மாவைப் பார்க்க வரிசையில் நின்றனர். அப்போது பங்காரு அவர்கள் சட்டைபோடாமல் வேகமாக நடந்து வருவதும் பெண்கள் எல்லாம் அம்மா, அம்மா எனக் கதறி காலில் விழுந்ததும் என்ன கொடுமைங்க (அம்மானாலே கால்ல விழுகணுமா?). அதாவது பரவாயில்லைங்க, எல்லாப் பெண்களும் அவர் படம் பொறித்த தங்கக் காசை வாங்கித் தாலியில் கோர்த்துக் கொண்டனர். ஆக இப்போது, பங்காரின் உருவம் பொறித்த தாலியினை மேல்மருவத்தூர் பக்தைகள் நெஞ்சில் சுமக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நான், பக்கத்தில் ஒரு தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொள்வதைக் காதில் கேட்க முடிந்தது.

தாத்தா: ஏண்டி இந்த வயசுல கண்டவன நெஞ்சுல சுமக்குற?

பாட்டி: இல்லைங்க, அவராலதான் நாம் கஷ்டம் எல்லாம் தீர்ந்து ஒரு நல்ல நிலமைக்கு வந்து இருக்கிறோம்.

தாத்தா: நான்தானடி உழைச்சேன், அவர் என்ன செஞ்சார்?

பாட்டி: நமக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லாம இருந்தபோது அவர்தானே குழந்தை கொடுத்தார். தாத்தா: அடிப்பாவி அப்போ குழந்தைக்கு நான் காரணம் இல்லையா???

தாத்தாவுக்கு இந்த வயதில் ஒரு சக்களத்தான், கொடுமையோ கொடுமை.

- பிரதிபா, சென்னை -"உண்மை” 1-15 2012