Search This Blog

21.1.12

பசுவின் புத்திரர்கள்! -விவேகானந்தர்


பசுவின் புத்திரர்கள்!

பசுவை நாம் தெய்வமென்று மதிக்கிறோம். முப்பத்து முக்கோடி தெய்வங்களும் பசுவின் உடலில் குடி கொண்டிருப்பதை நமது சான்றோர்களும், ஆன்றோர்களும் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் நமது நாட்டில் இன்று மாமிசத்திற்காக தினசரி ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொல்லப்படுகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு துணிச்சலாக பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்தப் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதிபாபாட்டில் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் பசுக்களைக் கொல்வோர்க்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்கிறது.

பசுக்களைக் கொல்வதற்காக வாகனங்களில் ஏற்றிச் செல்வோர்; பசுக்களை வாங்கி விற்கும் ஏஜெண்ட் உள்ளிட்ட அனைவருமே குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அதிகபட்ச தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கிறது. மத்தியப் பிரதேச அரசை மனமாரப் பாராட்டுகிறோம் - இப்படி ஒரு தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ஏடான விஜயபாரதம் (27.1.2012) எழுதுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

பசுவின் உடலில் உறையாத கடவுள்களே கிடையாதாம். அது கோமாதாவாம். அதனால் கொல்லக் கூடாதாம். இதன் மூலம் இந்து மதவாதச் சிந்தனையுடன்தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது வெளிப்படை! பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் இந்துத்துவாவின் தாண்டவம்தான் நடக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!

உணவுப் பழக்கம் என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் அரசு தலையிடுவது என்பது தவறானது. உலகம் முழுவதும் மாட்டுக்கறி உணவு முதன்மையான இடம் பெற்றுள்ளது. கிடைக்கும் சத்துள்ள உணவில் ஓரளவு மலிவானது மாட்டுக்கறியே! சாதாரண மக்கள் அதைப் பயன்படுத்தி வருவதைத் தட்டிப் பறிக்க இவர்கள் யார்? செத்துப் போன பசு மாட்டின் தோலை உரித்த அரியானாவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட தோழர்களைப் படுகொலை செய்தவர்கள் இந்தச் சங்பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்கள். மனிதர்களைவிட செத்துப்போன பசுவின் புனிதம் இவர்களுக்கு முக்கியமானது என்பதிலிருந்தே - இவர்களுக்கு மனிதப் பண்பு அறவே கிடையாது என்பது விளங்கிடவில்லையா?

பசுவின் உடலில் கடவுள்கள் உறைவது உண்மை யென்றால் பசுக்களுக்கு ஏன் நோய்கள் வருகின்றன - செத்துப் போகின்றன?

மாடுகளில் அது என்ன பசு மாட்டுக்கறியை மட்டும் உண்ணக் கூடாது என்ற தடை? காளை மாடு சிவனின் வாகனமாயிற்றே. அதனைக் கொல்லலாமா? எருமைக் கிடா எமனின் வாகனமாயிற்றே. அதன் கறியைச் சாப்பிட லாமா? சேவல் முருகனின் வாகனமாயிற்றே - அதன் கறியை உண்ணக் கூடாது என்று போராட்டம் நடத்திட முன் வருவார்களா?

ஒருமுறை விவேகானந்தரிடம் பசுக்களைப் பரிபாலிக் கும் சங்கத்தைச் சேர்ந்த ஒரு பிரச்சாரகர் வந்து பசுக்கள் பாதுகாப்புப் பணிக்கு நன்கொடை கொடுக்குமாறு கேட்டார். அப்பொழுது அந்தப் பிரச்சாரகரைப் பார்த்து உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன? என்று கேட்டார் விவேகானந்தர். நமது நாட்டில் உள்ள பசுத் தாய்களைக் கசாப்புக் காரர்களிடமிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக்கள், வலிவிழந்தனவும், கசாப்புக்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப்படுவதற்காகப் பசு வைத்தியசாலைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று பதில் சொன்னார். மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் - இவர்களுக்காக உங்கள் சங்கம் என்ன செய்தது? என்ற கேள்வியை எழுப்பினார் விவேகானந்தர்.

பஞ்சம் முதலிய துன்பம் வரும்போது நாங்கள் உதவி புரிவதில்லை. எங்கள் சபை பசுத் தாய்களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது. பஞ்சங்கள் என்பவை மக்களுடைய பாவ கருமத்தினாலே ஏற்பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே!

பசுத் தாய்களும் தம்முடைய கருமத்தினால் கசாப்புக்கடைக்காரர்களின் கையில் அகப்பட்டு இறக் கின்றன என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே என்று மடக்கினார் விவேகானந்தர். ஆம், நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் பசு நம் அன்னை என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே என்றார் பிரச்சாரகர். அப்பொழுது நறுக்கென்று ஒன்று சொன்னார் விவேகானந்தர் ஆம். பசு நம் அன்னை என்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்? என்று கேலியாகச் சொன்னார்.

மாட்டுக்குப் பிறந்தவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை மத்தியப் பிரதேச சட்டத்தைப் பார்த்தால் தெரிகிறதே!

------------------- "விடுதலை” தலையங்கம் 21-1-2012

0 comments: