Search This Blog

1.1.12

எல்லா நாளும் நல்ல நாளே...

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என் கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்ப தால் நானும் கூறினேன் என்று கூறினார். நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவ தில்லையா? அவசர அறுவை சிகிச் சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன். அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லை யம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட் டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என் றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற் சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசை யிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரே கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள். கடவுளாக வழிபடும் ராமன் பிறந்த நாளை ராம நவமி என்றும், கிருஷ்ணன் பிறந்த நாளை கோகு லாஷ்டமி என்றும் கொண்டாடுகிறோம் என்றேன். என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது மாதம் இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம். என்று தணியும் இந்த மக்களிடம் நிரம்பியுள்ள அறியா மையின் மோகம்? சிந்திப்போம். செயல்படுவோம்.
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

------------------- ப.வீரமுத்து, மதுரை --நன்றி: (அறிவுத்திருக்கோவில் ஆண்டு மலர்) 17-12-2011

4 comments:

தமிழ் ஓவியா said...

இருவருக்கும் சந்தேகம்!


சார் ஒரு சந்தேகம். என்னடா? சரஸ்வதி எங்கே இருக்கிறாள்? வெண்டாமரையில். அவள் இருக்கும் அப்பூ எங்கே இருக்கிறது சார்? பிரம்மாவின் நாவில். பிரம்மா எங்கே இருக்கிறார் சார்? மஹாவிஷ்ணுவின் உந்தியில் (அதாவது தொப்புளில்). மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார்? ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல். அப்பாம்பு எங்கே இருக்கிறது சார்? அதுவா! திருப்பாற்கடலில். திருப்பாற்கடல் எங்கே இருக்கிறது சார்?

(உபாத்தியாயர் பெரிய சந்தேகத் துடன்) உனது பூகோளபடத்தை எடு. அதில் இருக்கிறதா என்று பார்ப்போம்.

- (விடுதலை 3.2.1970)

சசிகலா said...

முற்றிலும் உண்மை எடுத்து கூறிய விதம் அருமை .

தமிழ் ஓவியா said...

ராஜகுருவா சோ ராமசாமி?

2011 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. அமைச்சரவைக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். (16.5.2011)

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப் பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலை வர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற் றனர்.

முதல் வரிசையில் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி அமர்ந்து கொண்டு செய்த அட்டகாசங்கள் சாதாரண மானவையல்ல. லூட்டி அடித்தார் என்றே கூறவேண்டும். அட்டாணிக் கால் போட்டுக் கொண்டு,அடிக்கடி கைகளைத் தட்டிக் கொண்டு, அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டு ஒரேயடியாகத்தான் கும்மாளம் போட்டார்.

தொலைக்காட்சியில் இதனைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்குத் தான்தான் சூத்திரதாரி என்பது போலவும், தான்தான் ராஜகுரு என்பது போலவும் காட்டிக் கொண்டார். மக்களை நம்ப வைக்க இப்படி ஒரு ஏற்பாட்டைத் தனக்குத் தானே செய்து கொண்டு, திட்டமிட்ட வகையில் தான் அப்படி நடந்து கொண்டார் என்றே தெரிகிறது.

1971 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இதே பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் அமைச்சரவை பதவி ஏற்றது. (15.3.1971).

ஒருவர்கூட ஆண்டவன் பெயரால் உறுதிமொழி ஏற்கவில்லை.

அந்த நிகழ்ச்சியிலேயே தந்தை பெரியார் அவர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டு, முதல் அமைச்சர் கலைஞர் முதல் அத்தனை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தந்தை பெரியார் அவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்த காட்சியெல் லாம் மனக் கண் முன் நிழலாடுகிறது.

அப்பொழுது கனம் ராஜாஜி அவர்கள் இவ்வாறு எழுதினார். மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும்.

அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது (கல்கி 4.4.1971) தமிழக மந்திரி சபை என்று ஆத்திரம் அடைக்க எழுதினார் ஆச்சாரியார் ராஜாஜி.

அந்த நிலை எங்கே? இந்த நிலை எங்கே?

முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சுற்றி ஒரு பார்ப்பன ஒளிவட்டம் என்னும் தோற்றத்தை உருவாக்குவார்

சோ-.- இவர் நெஞ்சம் என்பது பூணூல் மஞ்சம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா அவர்கள் கூட தனிப்பட்ட எந்த ஒருவர் வீட்டுக்கும் செல்வது கிடையாது -_ சோ ராமசாமி வீட்டைத் தவிர. இந்த அந்நியோன்னியத்தைக் கூட தம் இனத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார் சோ.

மக்கள் ஆதரவு என்றால் ஜாதி ரீதியான வலை வீச்சு என்று கலைஞரைக் குற்றம் சாற்றி இவ்வார துக்ளக்கில் (25_-5_-2011) தலை யங்கம் தீட்டியுள்ளார். அதே நேரத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏன் சீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றி எழுத வேண்டியது தானே?

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ் வதிக்குக் கையாளாக இருந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பேட்டி கண்டார். சங்கராச்சாரியார் கேட்கச் சொன்ன கேள்விகளையெல்லாம் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேட்டவர் இந்த சோ. எம்.ஜி.ஆருக்குக் கையாளாக இருந்து அ.தி.மு.க. பொருளாளராக இருந்த சவுந்தர பாண்டியன்பற்றி உளவு பார்த்தார். எவ்வளவு பெரிய பார்ப்பன வெறியர் இவர் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

கேள்வி: சட்டசபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் பிராமண பாஷையில் பேசுவது யாரைக் கிண்டல் செய்ய?

சோவின் பதில்: தெரியவில்லை. இதையே தி.மு.க.வினர் யாராவது செய்திருந் தால் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இப்பொழுது ஏன் இப்படிச் செய்தார்? என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது. விடை தெரியவில்லை.

(துக்ளக் 22_-7_-2009 பக்கம் 14)

இதற்கு விளக்கம் தேவையா? இங்குப் பேசுவது குமுறுவது சோவின் பூணூல் தானே!

தமிழர்களின் கல்விக் கண்ணில் மண்ணை அள்ளிப் போடுவதில் முதல் ஆளாக இருக்கக் கூடியவர்தான் இந்த சோ. அதனால்தான் 1952 இல் ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை - அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற மனுதர்மத் திட்டத்தை இப்பொழுதும் ஆதரித்து எழுதுகிறார் என்றால் தெரிந்து கொள்ளலாமே.

(துக்ளக் 15-7-1988)

எதற்காக செல்விஜெயலலிதா அவர் களை இவர் ஆதரிக்கிறார்? ஜெயலலிதா பற்றி சோவின் கணிப்பு என்ன?

தமிழ் ஓவியா said...

திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது, அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத் திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாதவர். அந்தப் பாரம்பரியத் தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமை யாகவும், கேவலமாகவும் எதிர்க்கப் பட்டதோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்.

சரி, இப்படிப்பட்ட பாரம்பரியத்திற்குத் தலைமை ஏற்பதற்காக அவர் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டாரா என்று கேட்டால் கிடையாது.

கோவில், அர்ச்சனை, பிரசாதம் ஒரு புறம்; தீவிரவாதம் தமிழைப் பற்றியதாக இருந்தாலும், அதை நசுக்கவே முயற்சிப்பேன் என்ற முனைப்பு ஒரு புறம்; தொழிலாளிகளுக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உண்டு என்பதை நிலை நாட்டத் தயங்கமாட்டேன் என்ற தீர்மானம் மற்றொரு புறம்; மைனாரிட்டி மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றாலும், அதற்காக மெஜாரிட்டி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு இன்னொரு புறம்.

இப்படி எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷங்களை ஜெயலலிதா ஏற்கவில்லை. தன்னுடைய நம்பிக்கைகளை அந்தப் பாரம்பரியம் ஏற்கும்படி செய்தார். இது சமீப காலஅரசியல் அற்புதம்!

(துக்ளக்: 21-_-9_-2005) என்று விலாவாரியாக செல்வி ஜெயலலிதா பற்றி திருவாளர் சோ ராமசாமி எழுதித் தள்ளியுள்ளார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

ஜெயலலிதா திராவிட பாரம்பரியத்துக் குச் சம்பந்தமே இல்லாதவர். அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர். அவரது நம்பிக்கை திராவிட பாரம்பரியத்துக்கு எதிரானது. மாறாக தனது நம்பிக்கைகளை திராவிட பாரம்பரியத்தினை ஏற்கச் செய்தவர் என்று பச்சையாக - பார்ப்பனத்தனமாக செதிர் காயாக உடைத்துச் சொல்லிவிட்டார்.

இது -_ செல்வி ஜெயலலிதாவுக்குப் பாராட்டா _ இகழ்ச்சியா? என்பதை சம்பந் தப்பட்ட வர்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும். சோ, ஜெயலலிதாவை ஆதரிப் பதற்குக் காரணமே இந்தக் கண்ணோட்டம் தான். இதனை மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் புரிந்து கொள்வாரா என்று தெரியவில்லை.

உண்மையான திராவிடப் பாரம் பரியத்தாரும், அய்யா, அண்ணா கொள்கை புரிந்தோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழர்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடைசி செய்தி:

என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை! --_ சோ ராமசாமி.

ரஜினிபற்றிய ஆங்கில நூல் வெளி யீட்டு விழாவில்தான் இப்படிப் பேசினார். (சென்னை 2008 மார்ச்சு).

முதல்வர் ஜெயலலிதா இவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
-----------மின்சாரம் சனி, 21 மே 2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை