Search This Blog

20.1.12

பூணூல் அணிவது தேவைதானா? -காந்தியார்


ரிஷிகேசத்தில் துறவிகள் பலர் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் மிகுந்த பற்றுக் கொண் டிருந்தார். ஃபோனிக்ஸ் கூட்டத்தாரும் அங்கே இருந்தனர். அவர்களைப் பற்றி அத்துறவி என்னைப் பல கேள்விகள் கேட்டார். மதம் பற்றி நாங்கள் உரை யாடினோம். இதில் எனக்கு மிகுந்த அக் கறை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார். கங்கையில் நீராடிவிட்டு, உடலில் சட்டையில்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் நான் வந்துகொண் டிருப்பதைப் பார்த்தார். தலையில் உச்சிக் குடுமியும், உடலில் பூணூலும் இல்லா மல் நான் இருந்ததைக் கண்டு அத் துறவிக்கு மனவேதனையாகிவிட்டது.

இந்து தர்மத்தில் நம்பிக்கையுள்ள நீங்கள், பூணூல் அணியாமலும், உச்சிக்குடுமி இல்லாமலும் இருப்பதைக் காண என் மனம் வேதனைப்படுகிறது. இவை இரண்டும் இந்து தர்மத்தின் புறச் சின்னங்கள். ஒவ்வொரு இந்துவுக்கும் இவை இருந்தாக வேண்டும் என்று கூறினார்.

பூணூல் அணிவதைக் கைவிட்ட கதை

இந்த இரண்டையும் நான் ஏன் கைவிட்டேன் என்பதே ஒரு தனிக் கதையாகும். நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, பார்ப்பனச் சிறுவர்கள் தாங்கள் அணிந்திருந்த பூணூலில் சாவிக் கொத்துகளைக் கோத்துத் தொங்கவிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் பொறாமைப்படுவது உண்டு. நானும் அப்படிச் செய்யவேண்டும் என்று ஆசைப் பட்டேன். கத்தியவாரிலிருக்கும் வைசிய குடும்பத்தினர் அக்காலத்தில் சாதாரணமாகப் பூணூல் அணிந்து கொள்வதில்லை. ஆனால், முதல் மூன்று வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டியது அவசியம் என்று வற்புறுத் தும் இயக்கம் ஒன்று அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. இதன் காரணமாக காந்தி சாதியைச் சேர்ந்த சிலர் பூணூல் போட்டுக் கொண்டனர். எங்களில் இரண்டு மூன்று சிறுவர்களுக்கு ராம ரட்சை கற்பித்துக் கொண்டிருந்த பார்ப்பனர் எங்களுக்குப் பூணூல் போட்டு விட்டார். நான் சாவிக்கொத்தை அதில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், ஏதோ ஒரு சாவிக் கொத்தைக் கண்டுபிடித்து என் பூணூலில் மாட்டிக் கொண்டேன். பிறகு பூணூல் அறுந்து போய்விட்டது. அது போய்விட்டதே என்று அப்போது நான் வருத்தப் பட்டேனா என்பது பற்றி எனக்கு இன்று நினைவில்லை. ஆனால் அதற்குப் பிறகு புதிதாகப் பூணூலைத் தேடி நான் அணிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் அறிவேன்.

பூணூல் அணிவது தேவையற்ற பழக்கம்

நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆஃப்பிரிக்கா விலும் பலர், நல்ல எண்ணத்தின் பேரி லேயே என்னைப் பூணூல் அணியும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றி அடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் அணிந்து கொள் ளக்கூடாது என்றால், மற்ற வருணத் தாருக்கு மட்டும் அதை அணிந்து கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அவர்களுடன் வாதாடினேன். பூணூல் அணிந்து கொள்வது தேவை யற்ற பழக்கம் என்பது என் கருத்து. ஆதலால், அதை அணியவேண்டும் என்பதற்குப் போதுமான காரணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. பூணூலைப் பொருத்தவரையில் எனக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.
வைணவன் என்ற முறையில் என் கழுத்தில் துளசி மாலை அணிந் திருந்தேன். குடுமி வைத்திருப்பது அவசியம் என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் கருதி வந்தனர். ஆயினும், நான் இங்கிலாந்துக்குப் புறப்பட விருந்த சமயத்தில் எனது உச்சிக் குடுமியை எடுத்து விட்டேன். எடுக்காதிருந்தால் தலையில் தொப்பி இல்லாதபோது அதை யாராவது பார்த்துவிட்டால் கேலி செய்வார்கள் என்றும், ஆங்கிலேயர்கள் என்னை ஒரு காட்டுமிராண்டி என்று நினைப்பார்கள் என்றும் அப்போது நான் எண்ணினேன். இந்த கோழைத் தனமாக உணர்ச்சியின் காரணமாக, தென் ஆஃப்பிரிக்காவில் மத நம்பிக்கையுடன் உச்சிக்குடுமி வைத்திருந்த என் அண்ணன் மகனான சகன்லால் காந்தி யையும் குடுமியை எடுத்துவிடுறு செய்தேன். ஏனெனில், அவருடைய பொதுத் தொண்டுக்கு அக்குடுமி இடையூறாக இருக்குமென அஞ்சினேன். ஆதலால், அவர் மனத்துக்குச் சங்கடமாக இருக்குமே என்பதைக் கூட எண்ணாதபடி, அவர் குடுமியை எடுக்கும்படி செய்துவிட்டேன்.

பூணூல் அணியும் உரிமை எப்போது?

இவற்றையெல்லாம் மேற்கண்ட துறவியிடம் கூறி விட்டு நான் மேலும் கூறியதாவது:-

கணக்கற்ற இந்துக்கள் பூணூல் அணியாமலேயே இந்துக்களாக இருந்து வர முடிகிறது. பூணூல் அணிய வேண்டும் என்பதற்கு எந்த விதமான நியாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆதலால் அதை நான் அணிந்து கொள்ளப் போவதில்லை. மேலும் பூணூல் என்பது ஆன்மீகப் புனர்வாழ்வுக்குரிய சின்னமாக இருக்க வேண்டும். அதை அணிகிறவர், உயரிய தூய வாழ்க்கை நடத்துவதற்கு முயல் பவராகவும் இருக்க வேண்டியது முக்கி யம். ஆனால், இந்து மதமும் இந்தியா வும் இன்றுள்ள நிலைமையில், அத்தகைய தத்துவத்தோடு கூடிய ஒரு சின்னத்தை அணிந்து கொள்வதற்குத் தங்களுக்கு உரிமையுண்டென்று இந்துக்கள் காட்டமுடியுமா என்று அய்யப்படுகின் றேன். இந்து சமயத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு - தாழ்வு என்ற வேற் றுமைகள் எல்லாம் நீங்கி, அதில் இன்று மலிந்து கிடக்கும் பல்வேறு தீமைகளும், நடிப்புகளும் நீங்கிய பிறகே இந்துக் களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும்.

பூணூலைப் பற்றிக் கவலை இல்லை

ஆதலால் பூணூல் அணிந்து கொள் வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது. ஆனால், குடுமியைப் பற்றி நீங்கள் கூறும் கருத்து சிந்திக்கத் தக்கதே. ஒரு சமயம் குடுமி வைத்திருந்து, வெட் கம் என்ற தவறான எண்ணத்தினால் அதை எடுத்துவிட்டேன்.

ஆகவே, மீண்டும் அதை வளர்த்துவிட வேண்டும் என்று உணர்கிறேன். என் தோழர் களுடன் இதைப் பற்றி விவாதிப்பேன்.

பூணூலைக் குறித்து என்னுடைய நிலையைத் துறவியார் ஒப்புக் கொள்ள வில்லை. அதை அணிய வேண்டியது இல்லை என்பதற்கு எனக்கு என்ன நியாயங்களாகத் தோன்றினவோ, அவையே அணிய வேண்டும் என்ப தற்குக் காரணங்களாக அவருக்குத் தோன்றின!
இவ்விஷயத்தில் ரிஷிகேசத்தில் நான் கொண்டிருந்த கருத்து எதுவோ அதுவே இன்றும் என் கருத்தாகும்.

சமயங்கள் பல இருந்து வரும் வரையில், ஒவ்வொரு சமயத்திற்கும் வெளிப்படையான சின்னம் ஏதாவது அவசியமாக இருக்கலாம். ஆனால், அந்தச் சின்னமே பிரமாதமாக்கப்பட்டு, இன்னொரு மதத்தை விட தன் மதமே உயர்வானது என்று காட்டுவதற்கு அது பயன் படுத்தப்படுமாயின் அப்பொழுது அச்சின்னம் புறக்கணிக்கப்படுவதற்கே ஏற்றதாகும்.,

ஹிந்து சமயத்தை மேன்மைப் படுத்துவதற்கான சாதனமாக பூணூல் இன்று எனக்குத் தோன்றவில்லை. ஆகை யால், அதில் எனக்குக் கவலையும் இல்லை.

--------------------------- காந்தியார்- சுயசரிதையிலிருந்து --நன்றி:- ”விடுதலை”24-12-2011

0 comments: