Search This Blog

7.1.12

ஆருத்ரா தரிசனமாம்! என்ன இந்தத் தரிசனம்?



மார்கழி மாதம் வைணவர்களுக்கு மட்டும் பட்டா எழுதி வைக்கப்பட்டுள்ளதா? ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் பேன் பார்த்துக் கொண்டு இருக்க வேண் டுமா?

உடனே ஆருத்ரா தரிசனம் - தில்லையம் பதியிலே என்று ஒரு பக்தி வியாபாரம்!

கைலையில் இருந்து மூவாயிரம் தீட்சதர்களை ஸ்ரீமான் நடராஜப் பெருமான் சிதம்பரத்துக்கு அழைத்து வந்தாராம். எண்ணிப் பார்த்தபோது எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டதாம். என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் அந்த ஒரு நபர் நான்தான் என்றாராம் நடராஜக் கடவுள்!

பார்ப்பனர்கள் கடவுளைப் பிடித்துக் கொண்டு ஏன் தொங்குகிறார்கள் என்பது இப்பொழுது தெரிகிறதா?

நமது கடவுள்களின் தோளிலும் பூணூல் தொங்குவதை எந்தப் பக்தன் கவனித்தான்? கடவுள் விஷயமாயிற்றே - கவனிக்கலாமா? கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுவது என்று ஆரம்பித்த பிறகு - இந்த கசமாலங்கள் எல்லாம் எங்கே தெரியப் போகிறது?

நாளை ஆருத்ரா தரிசனமாம்! என்ன இந்தத் தரிசனம்?

மார்கழி மாதம் திருவாதிரையன்று இந்த ஆருத்ரா தரிசனம் - அது நாளை!

இந்த நாளில் நடராஜன் நேரில் தரிசனம் தருவாராம். அடேயப்பா! இதுவரை கடவுளைக் கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டதில்லை என்று தானே கூறிக் கொண்டு கிடந்தனர்.
இப்பொழுது என்ன நேரடியாகத் தரிசனம்? உண்மையிலேயே நாளை நடராஜர் நேரில் தோன்றி பக்தர்களிடம் கலந்து உரையாடப் போகிறாரா?

சவால் விட்டுக் கேட் கிறோம் - இதனை நிரூபிக்க முடியுமா?

ரொம்பவும் மடியைப் பிடித்துக்கேட்டால் உங்கள் ஊனக் கண்ணுக்குத் தெரிய மாட்டார் என்று தப்பித்து ஓடுவார்கள்.

அவரை நேரில் நாளை தரிசிக்கும் அந்த ஞானக் கண் பேர் வழி யாரென்று அறிவிக்கட்டும் பார்க்கலாம்.

சரி, ஆருத்ராவுக்கு வருவோம்!

தாருகாவனத்து ரிஷிகள் பெரும் யாகம் செய்து பல சக்திகளைப் பெற்றனராம். சிவனை மதிக்கவில்லையாம். (ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலத்தையும் துறந்தவர்களின் லட்சணம் இது தானா?)

சிவனின் அழகில் மயங்கிய ரிஷிகளின் மனைவிகள், அவன் பின்னாலேயே சென்று விட்டனராம் (பதி விரதை என்றால் இப்படித் தானே இருக்க வேண்டும்!)

மேலும் சினம் கொண்ட ரிஷிகள், பல யாகங்களைச் செய்து மிருகங்களை உருவாக்கி சிவனின்மீது ஏவினார்களாம். பாம்புகள், பூதங்கள், யானை, புலி போன்றவைகளை உரு வாக்கி சிவனை அழிக்க முனைந்தாலும் அவற்றை யெல்லாம் அழகுப் பொரு ளாக்கி தன் உடலில் அணிந்து கொண்டானாம் சிவன்.

கடைசியில் முயலகன் மீது வலது காலை ஊன்றி ரிஷிகளுக்கு உண்மையை உணர்த்தினானம் - இதுதான் அந்த ஆருத்ரா தரிசனமாம்.

ஏற்கெனவே பயித்தியக் காரன் - அவன் சாராயத்தையும் குடித்தநிலையில், தேளும் கொட்டியதாம் - எப்படியெல்லாம் உளறுவான்?

அப்படிப்பட்ட கிறுக்கன் ஒருவன் புராணம் எழுதினால் எப்படி இருக்கும்? அதுதான் இந்த ஆருத்ரா தரிசனக்கதையும்.

உருவமற்ற கடவுள் என்று சொல்லிக் கொண்டு இத்தனைத் தி(தெ)ரு விளையாடல்களையும் ஏற்றி வைத்துள்ளனர். அதனை நம்பி மக்களும் பக்திப் போதையேறி ஆருத்ரா தரிசனம் பார்க் கச் செல்லுகின்றனர் என் றால், இதனை வெட்கக் கேடு என்பதா? பயித்தியக் காரத்தனம் என்பதா?

சிவன் என்ற கடவுள், காட்டுமிராண்டிக்காலத்தில் கற்பிக்கப்பட்ட ஒன்று.

புலித்தோல் அரைக்கு இசைத்து
வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடித்து
சுடலைப் பொடிப் பூசி
கொன்றைப்பூச் சூடி
ும்பை மாலை அணிந்து
மண்டை ஓடு கையேந்தி
மான், மழு, ஈட்டி, சூலம் கைப்பிடித்து
கோவண ஆண்டியாய் விடை(மாடு) ஏறி
ஒருகாலைத் தூக்கிக் கொண்டு
பேயோடு ஆடுகிறவன்
காட்டுமிராண்டியாய் இல்லாமல்
நகரவாசி - நாகரிகக்காரனாய்
இருக்க முடியுமா?

- ஈ.வெ.ரா.
(விடுதலை 18.7.1956)

காட்டுமிராண்டிக் காலமனிதன் கற்பித்த காட்டுமிராண்டிக் கடவுளை 2012-லும் தரிசிப்பவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம்?

-------------------"விடுதலை” 7-1-2012

0 comments: