Search This Blog

16.1.12

தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாளே!

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம், உயிர். குமுகாயம், ஊர், நகர், நாடு, உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது.

நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின் - குறள் 334

என்ற குறள் மூலமும் காலம் அறிதல் என்ற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையைத் திருவள் ளுவர் உணர்த்துகிறார்.

நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, மாதம், ஆண்டு, ஊழி என்று வானி யல் முறைப்படி வரையறை செய்துள்ளனர். 60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறு சிறு பொழுது களாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், உதிர், முன்பனி, பின்பனி என்று ஆறு பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளார்கள்.

காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சி களைத் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு ஆகியவற்றுக்குப் பொதுவான தொடர் ஆண்டுக் கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்ற வில்லை என்பது வியப்பாக இருக் கிறது; வருத்தம் அளிக்கிறது.

தொடர் ஆண்டு


தலைநகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு, அரசர்கள் முடிசூட்டிக் கொண்ட ஆண்டுத் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங் கள் மூலம் தெரிகின்றன.

நாட்டுக்கும் மக்களுக்கும் மொழிக்கும் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களி டம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமை யாமையை அரசர்களுக்கும் பொது மக்களுக்கும் எடுத்துக்கூறியதாகவும் தெரியவில்லை.

60 ஆண்டு வந்த வழி


இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த கடவுள், மதம், ஜாதி, மூடநம்பிக்கைச் செல் வாக்கையும் அரசர்களிடம் பெற் றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத் திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்தி விட்டது ஆரியம்.


ஆபாச 60 ஆண்டுப் பெயர்களும் சித்திரைப் புத்தாண்டு சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி. 78இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவை யாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன.

ஆதாரம்: - பக்கம் 7 தி ஹிந்து, 10.3.1940

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை. 60 ஆண்டுகளின் பெயர்கள் கிருஷ்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்ற பிள்ளைகள் என்ற கதை மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

எனவே, அய்ந்நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென் னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா.நமச்சிவாயர் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர்; அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டுத் தொடக்கம் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் கா.நமச்சிவாயனார் ஆகியோர் ஆவார்கள்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன? என்று முத்தமிழ்க் காவலர் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள்; போதும் என்று விளக்கம் தந்தார்.

திருக்குறளார், தமிழ் மறைக் காவலர் வீ.முனிசாமி அவர்களிடம் இந்த நான்கு முடிவுகள் பற்றிக் கேட்டேன். தமிழ்க்கடல் மறைமலை அடிகள் சொல்வதே ஆதாரம் என்று கூறினார்.


தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது; பின்னர் தொல்காப்பியர் காலத்தில் ஆவணியில் தொடங்கி ஆடியில் முடியும் ஆண்டு நாள்காட்டி வழக்கில் இருந்தது. ஆரிய ஆதிக்கத்தில் சித்தரை 60 ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.

நாம் புதிதாக எதையும் புகுத்தவில்லை. இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதை மீட்டு எடுத்து நடை முறைப்படுத்தி வருகின்றோம்.

வானநூல் பொருத்தமும் வயல் விளைச்சல் பொருத்தமும் ஒருங்கே அமையப் பெற்ற தை மாதம் முதல் நாளைத் தமிழர்தம் ஆண்டுத் தொடக்கமாகப் பெற்றிருந்தனர் எனின் அவர்தம் அறிவினை என் னெனக் கூறி வியப்போம் என்பது நாவலர் சோமசுந்தரபாரதியாரின் நற்சான்றாகும்.

முன்னாளில் தமிழ் ஆண்டு தை முதல் மாதத்தில்தான் இருந்தது என்பது கம்பன் அடிப் பொடி சா.கணேசன் கருத்தாகும்.

சிந்து வெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பும் ஆயிற்று என்கிறார் விஞ்ஞானி நெல்லை சு.முத்து அவர்கள்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு
என்ற புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடல்களும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்பதைத் தெளிவு படுத்துகின்றன.

முன்காலத் தில் வருடப்பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை; தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரி யோர்கள் கொண்டாடினார்கள்.

- மூதறிஞர் மு.வரதராசனார்

தைப் பொங்கல் திருநாள் தமிழர் களாகிய நமக்குப் புத்தாண்டுத் தொடக்க நாளாகும்.
- அறிஞர் நாரண துரைக்கண்ணன்

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண் டின் தொடக்க நாள் என்பது தெள்ளிதின் புலனாகும். அறிவியல் அடிப்படையில் இது ஏற்கத்தக்கதுமாகும்.

- டாக்டர் மெ.சுந்தரம்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண் டின் தொடக்கம் என்பதை 1935ஆம் ஆண்டில் திருச்சியில் மறைமலை அடிகள் தலைமையில் நடந்த தமிழர் மாநாட்டில் தந்தை பெரியார் ஏற்றுக் கொண்டார். தை முதல் நாள் தமிழினத்தின் ஆண்டு முதல் நாள்

- பேராசிரியர் செல்வி பாகீரதி

பொங்கல் விழா நாளையே தமிழர் கள் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொண்டாடி வந்துள்ளனர் என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட கழக இலக்கியங்களில் சான் றுகள் உள்ளன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் - நற்றினை
தைஇத் திங்கள் தண்ணியதரினும் - குறுந்தொகை
தைஇத்திங்கள் தண்கயம் போல் - புறநானூறு
தைஇத்திங்கள் தண்கயம் போல் - ஐங்குறுநூறு
தையில்நீராடி தவம் தலைப்படுவாயோ - கலித்தொகை


தை முதல் நாள் தமிழர் திருநாள் மட்டுமல்ல. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளும் இதுவே. தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டை நாம் கடைப்பிடிக்க முன்வரவேண் டும்.

- தலைவர் கலைஞர் மு.கருணாநிதி

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதை ஏற்பதற்கு எந்தச் சான்று; இதுவரை எவரும் தரவில்லை. புராணிகச் சார்பை வைத்துக் கொண்டு ஒரு புத்தாண்டைக் கைக் கொள்வது தமிழர்களுக்கு இழுக்குத் தருவதாகும்.

ஆண்டுப் பிறப்பு (வருஷப் பிறப்பு) என்பதன் பொருளே அது நாரதர் குழந்தை என்ற கதை மரபால்தான். மற்றபடி ஆண்டுத் தொடக்கம் என்பது தான் தமிழர் மரபு.

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக்கழகம், மலேசியத் திராவிடர் கழகம் மூன்றும் இணைந்து மலேசி யாவில் இயங்கும் மேலும் 15 தோழமை இயக்கங்கள் மற்றும் உலகளாவிய இயக்கங்களின் ஒத்துழைப்புடன் 6.1.2001ஆம் நாள் மலேசியா, கோலாலமபூரில் நடத்திய உலகப் பரந்துரை மாநாட்டில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண் டுத் தொடக்கம் என இன்று முதல் (6.1.2011) உலகப் பரந்துரை செய் கின்றோம் என்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த உலகப் பரந்துரை மாநாட் டில் திருக்குறள் மறை இறைக்குருவ னாரும் (தென்மொழி ஆசிரியர்), நானும் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினோம்.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பதற்குத் தமிழ் நாடு அரசு ஆட்சி அங்கீகாரம் அளித்தல் வேண்டும் என்பது தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள், தமிழ் மொழி, இன உணர்வாளர்கள் ஆகி யோர்களின் அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும்.

திராவிடர் கழக மாநாடுகளிலும் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங் களிலும் மற்ற கழக நிகழ்ச்சிகளிலும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதைத் தமிழக அரசு ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறார்.

விடா முயற்சி வெற்றி தரும்; கூட்டு முயற்சி ஈட்டும் வளர்ச்சி என்பதற்கு ஏற்பத் தலைவர் கலைஞர் அவர்கள் அனைவர்களின் கோரிக்கைக்கு மதிப் பளித்து ஏற்று 2008இல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தினார். சித்திரை மாதத்தைப் புத்தாண்டாக ஏற்றுக் கொள்பவர்கள் கொண்டாடலாம்; தடை இல்லை என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்.

2011 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. அரசின் முதலமைச்ச ராக 16.5.2011இல் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றார். அன்றே முதல் வேலை யாக விடுதலை நாளிதழை நூலகங் களிலிருந்து அகற்றிட ஆணை யிட்டார். தலைவர் கலைஞர் அவர்களின் மீதுள்ள அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாகத் தமிழ்ப் புத் தாண்டு தை முதல் நாள் என்ற சட் டத்தை ரத்து செய்து சட்டம் இயற் றினார்.

இவை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கொள்கைக்கு எதிரானவை. தமிழ் மொழி, இன உணர்வாளர்கள், அறிஞர்கள், சான் றோர்கள், புலவர்கள், பகுத்தறிவா ளர்கள் முதலியவர்களின் வெறுப் புணர்வும் பகையுணர்வும் முதல்வர் மீது ஏற்பட்டுள்ளன.

திராவிட, அண்ணா என்பதைக் கட்சிப் பெயராக வைத்துக் கொண் டும் கட்சிக் கொடியில் அண்ணா உருவத்தை பொறித்துக் கொண்டும் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிராகச் செயலாற்றுவது பகையுணர்வை வளர்க்கவே பயன்படும்.

ஈரடியில் பொய்யாமொழி
ஈரோட்டு அய்யா மொழி
அறிஞர் அண்ணாவின் அறிவுமொழி
அனைத்துமே தமிழர் உய்யும்வழி


என்பதை உணர்ந்து தெளிந்த தமிழர்கள் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்றுக் கொண் டாடுவார்கள்; பார் முழுதும் பரப்புவார்கள்.

--------------------- கல்பாக்கம் வ. வேம்பையன் அவர்கள் 12-1-2012 “விடுதலை” பொங்கல் சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள்


சென்னை, ஜன.17- தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற் கான காரணங்களை விவரிக்கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழி இப்பொழுது தை பிறந்தால் தமிழ் புது வருடம் பிறக்கும் என்னும் புதுமொழியாகியிருக்கிறது.

தமிழகத்தில் பலகாலமாக பிரபவ முதல் அட்சய வரையிலான சமஸ்கிருதப் பெயர்கள் தாங்கிய வருடங்கள் தாம் பழக்கத்தில் இருந்துள்ளன.

இந்த அறுபது சமஸ்கிருத பெயர் களுக்குரிய காரணங்கள் தமிழுக்கும், தமிழ் நெறிக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் பொருந்தாதவையாகும்.

கண்ணன் என்னும் தெய்வத்துடன் நாரதன் என்னும் ஆண் மகன் தன்னைப் பெண்ணுருவாக்கிக் கொண்டு இருவரும் பாலியலில் ஈடுபட்டு அறுபது மக்களைப் பெற்றனர். அக்குழந்தைகளின் பெயர் களே இந்த அறுபது வருடங்களின் பெயர் கள் என்று கூறும் புராண காரணங்கள் சிரிப்புக்குரியவையாகும்.

இந்த அறுபது ஆண்டு கணக்கின் அடிப்படையில் எந்தவொரு வரலாற்று நிகழ்ச்சியின் காலத்தையும் நிர்ணயிக்க முடிவதில்லை.

சங்கத் தமிழ் வளர்ந்த காலம் எது? தெரியாது. வள்ளுவர் காலம் எது? தெரியாது. தொல்காப்பியர் காலம் எது தெரியாது. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், பல்லாயிரக் கணக்கான சான்றோர்களின் வரலாற் றுக் காலம் எது? தெரியாது.
ஏனெனில், தமிழகத்தில் காலங் காட்டி (காலண்டர்) என்ற ஒன்று இப் பொழுது இல்லை! முன்னெப் பொழுதும் இல்லாமல் இருந்ததா எனில் அது ஆய்வுக்குரியது.

எண் கணிதம் பல்லாயிரமாண்டாகத் தமிழகத்தில் இருக்கிறது. நாட்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் மாதங்களுக் குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நாளை யும் மாதத்தையும் 1,10,100, 1000, கோடி என்று எண்ணுகிற முறையை அறிந்திருக் கிறார்கள். ஆனால் ஆண்டுகளை மட்டும் ஒன்று, பத்து, அறுபதுடன் நிறுத்திக் கொண்டு, நூறு, ஆயிரம் கோடி என்று எண்ணுவதற்கு இல்லாமல் இருந்தார்கள் என்றால் அது ஏற்கக் கூடியதாக இருக்கிறதா?

கனலுக்கும் புனலுக்கும் கரையானுக் கும் அழிந்து போன எண்ணிறந்த பழம் சுவடிகளில் காலங்காட்டியும் இருந்து மறைந்து போயிற்றா? ஆகவேதான், இது ஆய்வுக்குரியது என்கிறோம். வருடங் களைத் தொடர்ந்து கணக்கிடும் காலங் காட்டி ஒன்று தமிழருக்கு வேண்டும் என்னும் வேணவா தமிழ்ச் சான்றோருக் குத் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள், திருவள்ளுவர் காலம், கி.மு. 31 என்றும், அதுமுதல் தமிழுக்குரிய காலங்காட் டியைத் தொடருவது என்றும், அதற்கு திருவள்ளுவர் ஆண்டு எனப் பெயர் சூட்டுவது எனவும் தீர்மானித்துள்ளனர். அதன்பின்னர் 1939இல் திருச்சியில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடந்த இந்திய தமிழர் மாநாடு தை மாதம் தமிழ் ஆண்டின் முதல் திங்கள் எனவும், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாள் எனவும் வரையறை செய் துள்ளனர். அண்மைக் காலத்துத் தமிழறி ஞர்களில் முதன்மையான டாக்டர் மு. வரதராசனார் கூறினார். முன் காலத் தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாக பெரி யோர்கள் கொண்டாடினார்கள்

இதனையே மறைந்த குன்றக்குடி அடிகளார் அறிவியல் அறிஞர் அய்ரா வதம் மகாதேவன் போன்றவர்கள் தை திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தினம் என்றே - உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள்.

தமிழகக் கவிஞர்களில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று பாடிச் சென்றுள்ளார்.

இந்த வரலாற்றின் அடிப்படையிலும், தமிழரின் வரலாற்றுத் தொன்மையை எடுத்துக்காட்டும் வகையிலும் டாக்டர் கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் 1.2.2008இல் தமிழக சட்டப் பேரவையில் சட்டமியற்றி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாள் தைத் திங்களின் முதல் நாள் என்று அறிவித்தார்.

ஆனால் இன்றைக்குள்ள செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, கலைஞர் அரசின் சட்டத்தை நிராகரித்து சித்திரைதான் தமிழாண்டின் முதல் மாதம் என்று அறிவித்து, தமிழக வரலாற்றுத் தொடர்ச்சிக்கு ஒரு பெரிய பாதகத்தை செய்திருக்கிறது.
இது கலைஞருக்கு எதிரான சட்டமல்ல; தமிழுக்கும் தமிழ் நெறிக்கும், தமிழ் நாகரிகத்துக்கும் எதிரான முடிவு. தமிழகத்தை ஆளுவோர் தமிழுக்கும் தமிழ் பண்புக்கும், தமிழ் தொன்மைக்கும் உரிய மதிப்பைத் தருதல் அவசியமல்லவா?

தமிழுக்கு மதிப்பளிக்கும் தகைமையில் செல்வி ஜெயலலிதா மீண்டும் தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண் டின் முதல் நாள் என்று அறிவிக்க வேண் டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன்.