Search This Blog

7.10.12

பெரியார் பொதுஉடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டது ஏன்?

 
ஈ.வெ.ரா. விளக்கம்

தோழர் ஈ.வெ.ரா. திருத்துறைப்பூண்டியில் தனது நிலைமையை விளக்கிக்காட்டச் செய்த உபன்யாசம் மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வுபன்யாசம் சு.ம. தொண்டர்களில் சிலர் செய்துவரும் விஷமப் பிரசாரத்துக்கு தக்க சமாதானமாகுமென்று நம்புகிறோம்.

தோழர் ஈ.வெ.ரா. மீது சு.ம. தோழர்கள் சிலர் செய்து வரும் விஷமப் பிரசாரமெல்லாம் ஈ.வெ.ராமசாமி பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும், ஈ.வெ.ராமசாமி மந்திரிகளுடன் குலாவுவதுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்பதுமே யாகும்.

பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு காரணம் முன்னமேயே கூறியிருக்கிறார்.

அதாவது அரசாங்கத்தார் பொதுவுடமைப் பிரசாரத்தை சட்ட விரோதமானதென்று தீர்மானித்துவிட்டதாலும், சு.ம. இயக்கம் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பிரசாரம் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக இருப்பதாலும் இப்போது சட்டத்தை மீறி பொதுவுடமைப் பிரசாரம் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாய்த் தெரிவித்து இருக்கிறார். அதோடு கூடவே சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதுபற்றி 10.3.35ந்தேதி குடிஅரசில் விளக்கியும் இருக்கிறார். இதையே திருச்சி ஜில்லா சு.ம. மகாநாட்டிலும் விளக்கமாக எடுத்துக்கூறி இருக்கிறார்.

பொதுவுடமைப் பிரசார சம்பந்தமாக இதற்கு மேலும் சமாதானம் கூற முடியாது.

அப்படி இருக்க ஒவ்வொரு மகாநாட்டிலும் ஒரு கூட்டம் இதையே திருப்பி கூச்சல் போட்டு கலகம் விளைவிக்க முயற்சிப்பது ஒரு காலமும் நல்ல எண்ணத்தின் மீது செய்யப்படும் காரியம் என்று சொல்லிவிட முடியாது.

அடுத்தபடியாக ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளுடன் குலாவுவது என்பதைப் பற்றிய புகார் வெறும் அறியாமையால் ஏற்பட்ட கற்பனையின் மீது உண்டான அசூயையே தவிர வேறு ஒன்றுமில்லை.

மந்திரிகளைப்பற்றிய ஈ.வெ.ராவின் அபிப்பிராயம் குடிஅரசு படிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. மற்ற பத்திரிகைகளிலும் அவ்வப்போது வந்திருக்கின்றன. மந்திரிகள் சு.ம. இயக்கத்துக்கு செய்த தீமைகள் பல ஒரு புறமிருக்க அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியையே எதிரிகள் முயற்சி இல்லாமலேயே ஒழிக்கும்படியான வேலைசெய்து வருவதைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட்டு வந்திருக்கிறார்.

ஆனால் மந்திரிகள் மீது சுமத்தப்படும் அரசியல் கொள்கைகள், வேலைகள் சம்மந்தப்பட்ட மட்டில் எதிரிகள் கூற்றைக் கண்டித்தும் பல சமயம் மந்திரிகள் கூற்றை ஈ.வெ.ரா. ஆதரித்தும் வருகிறார் என்றால் இது பார்ப்பனரல்லாதார் சமூக நலனை உத்தேசித்தே ஒழிய வேறில்லை.

மற்றப்படி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பது என்பது மாத்திரம் முழுதும் உண்மை. இதை அவர் எப்போதும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டியது தமது கடமை என உணருவதாக சுமார் 15 வருஷமாகவே கூறி வருகிறார். அன்றியும் ஜஸ்டிஸ் கட்சி ஏழை மக்கள், தீண்டப்படாத மக்கள், சமூக வாழ்வில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கட்சி என்பதாக உணர்கிறார். அந்த உணர்ச்சி மாறுபடும் வரையில் ஜஸ்டிஸ் கட்சியை அவர் ஆதரித்துத்தான் தீர வேண்டியிருக்கும்.

சு.ம. இயக்கம் ஏற்பட்டதும், அது பல கொள்கைகளைக் கொண்டு இருப்பதும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கு உதவி செய்வதற்காகவும் தானே ஒழிய வேறில்லை.

ஜஸ்டிஸ் கட்சியைப் பார்ப்பனரல்லாத மக்கள் பலர் சரியானபடி ஆதரிக்காததாலேயும், அக்கட்சி எந்த மக்களுக்காக பாடுபடுகின்றதோ அந்த மக்களிடம் போதிய நன்றி விஸ்வாசம் இல்லாததினாலேயும் அக்கட்சி இந்த மாதிரியாக தாழ்ந்த நிலையில் பேசவேண்டியதாக ஆகிவிட்டது.

ஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும், பல பணக்காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர அதன் கொள்கைகள், அதுசெய்த வேலைகள் ஆகியவை அனேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை.

இதன் காரணம் பாமர மக்களின் அறியாமை ஒரு புறமிருந்தாலும் மற்றும் பலருக்கு உத்தியோக ஆசையும், பணத்தாசையும், ஏமாற்றத்தால் ஏற்பட்ட பொறாமையும் தவிர வேறில்லை என்பது நமது அபிப்பிராயம்.

மந்திரிகள் பெரிய உத்தியோகக்காரர்களா யிருக்கிறார்கள். அதன் பிரமுகர்கள் பலர் பெரும் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்த இரு கூட்டத்தார்களும் கட்சி விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொள்ளாமல் தாங்கள் சுயநலத்துக்கும், அதற்கு வேண்டிய சூழ்ச்சிக்குமே கட்சியின் பெரும்பாகத்தை பயன்படுத்திக் கொள்வதால் பலருக்குத் தானாகவே அக்கட்சியின் மீது துவேஷம் ஏற்படும்படி செய்து விடுகின்றது.

ஆனால் இவ்விரு கூட்டமும் அதாவது மந்திரி உத்தியோகமும், பணக்காரர்கள் ஆதிக்கமும் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்றியமையாதது என்பதாக பலமுறை தோழர் ஈ.வெ.ரா. எடுத்துக்கூறி இருக்கிறார். காரணம் பணக்காரர்கள் இல்லாவிட்டால் எலக்ஷனில் ஜெயிக்க முடியாது. ஜெயிக்காவிட்டால் அரசியல் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது. ஆதலால் இந்த இரு கூட்டமும் அவசியமானதாகிறது.

இவர்கள் நாணயமாக நடக்கவில்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனாலும் தோழர்கள் சத்தியமூர்த்தியும் கல்யாண ராமய்யரும் போன்றவர்கள் எலக்ஷனில் வெற்றி பெற்று அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிவதை விட நாணயக் குறைவான மந்திரிகளும், சுயநலப் பணக்காரர்களும் அதிகமான கெடுதிக்காரர்களாக இருந்துவிட முடியாது என்போம்.

வெறும் பொறாமை ஒரு நன்மையையும் உண்டாக்கி விடாது. பணக் காரர்களின் இயற்கை குணம் இன்னது என்பது யாரும் அறியாததல்ல. யார் பணக்காரர்களானாலும் இப்படித்தான் இருப்பார்களே தவிர இதற்கு மேல் யோக்கியர்களாக இருந்துவிட முடியாது. இன்று காங்கிரசிலும் முழு சமதர்மத்திலும் இந்த யோக்கியதை உடன் தான் பல பணக்காரர்கள் இருந்து வருகிறார்கள்.

ஆனால் மந்திரிகளுடைய யோக்கியதை யார் பார்த்தாலும் இப்படித்தான் இருக்க முடியுமென்று சொல்லிவிட முடியாது. தோழர்கள் டாக்டர் சுப்பராயன், எஸ்.முத்தைய முதலியார் ஆகியோர்கள் மந்திரி பதவிகளானது கட்சிக்கு நன்றி விசுவாசமுள்ளதாக இருந்தது என்பதை நாம் மறைக்கவில்லை.

பெரிய அரசியல் பிரச்சினை, போட்டி, உள் கலகம், எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தின் ராஜதந்திரம், தங்கள் சுயநிலை ஆகியவைகளின் மத்தியில் மந்திரிகள் அரசியல் நிர்வாகம் செய்வது என்பது சுலபமான காரியம் என்று யாரும் நினைத்துவிட முடியாது. அன்றியும் மந்திரி பதவிகளுக்கு எவ்வித யோக்கியப் பொறுப்பான நிபந்தனையுமில்லாமல் லாட்டரிச் சீட்டு விழுவதுபோல் இருப்பதால் மந்திரிகளால் நாம் அடிக்கடி ஏமாற்ற மடைய வேண்டியதாகவும் ஏற்பட்டு விடுவதில் அதிசயமில்லை.

எப்படி இருந்த போதிலும் ஜஸ்டிஸ் கட்சியை அனாதரவு செய்யவோ, மந்திரிகளை கவிழ்க்கவோ சுயமரியாதை இயக்கம் ஒருப்பட முடியாது என்பதுடன் அவற்றை ஆதரிக்க வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்பதில் நமக்கு சிறிதுகூட தயக்கமில்லை.

மந்திரிகளுடன் தோழர் ஈ.வெ.ராமசாமி குலாவுகிறார் என்பவர்களில் பலருக்கு உள்ள முக்கியமானதும் சிலருக்கு ஒன்றே யானதுமான காரணம் "மந்திரிகள் ஈ.வெ.ராவுக்கு பணம் கொடுக்கிறார்கள்" என்று கருதி இருப்பது என்பதாக நாம் உணருகிறோம். இதுவும் மனிதனுடைய பேராசையில் ஏற்பட்ட கற்பனையின் பொறாமையேயாகும். தோழர் ஈ.வெ.ரா. இந்த 12 வருஷ காலமாக ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் முதலியவை செய்து வருவதில் ஒரு ஒத்தை ரூபாயாவது எந்த மந்திரியிடமாவதிருந்து கட்சி வேலைக்கு என்றோ, பிரசாரத்துக்கு என்றோ, மற்ற எந்தக் காரியத்துக்கு ஆவது என்றோ கேட்கவோ வாங்கவோ வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்ததே கிடையாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

அக்கட்சியினிடம் காட்டும் அபிமானமும், மந்திரிகளுக்கு பரிந்து பேசும் தன்மையும் சாதாரண மக்களுக்கு இந்த மாதிரி பணம் வாங்காமல் பேச முடியுமா அல்லது மந்திரிகள் பண உதவி இல்லாமல் ஈ.வெ.ரா.வுக்கு இவ்வளவு பிரசாரம் செய்ய முடியுமா என்றெல்லாம் தோன்றலாம். சிலருக்கு தாங்கள் வேண்டும் போதெல்லாம் ஈ.வெ.ரா. பணம் கொடுக்காததால் கோபித்துக் கொள்ளும் காரணமும், கொடுத்தது போதாமல் அயோக்கியத்தனமாய் விஷமப்பிரசாரம் செய்வதற்கு காரணமும் தோழர் ஈ.வெ.ரா. மந்திரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு பங்கு சரியாகக் கொடுக்கவில்லையே என்கின்ற குறைபாடே என்பதுகூட நமக்கு நன்றாய் விளங்குகிறது.

தோழர் ஈ.வெ.ரா. ஒரு சமயத்தில் வெளியிட்ட ஸ்டேட்மெண்டையே இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது "இயக்கத்திற்கு என்றோ வேறு என்ன காரியத்துக்கு என்றோ நாளதுவரையில் எந்த மந்திரிகளிடமிருந்தும் மற்றும் இயக்கத் தலைவர்கள் என்பவர்களிடமிருந்தும் ஒரு காசும் வசூலித்ததில்லை" என்று கூறியிருக்கிறார்.

திராவிடன் பத்திரிகை நடத்தும்போது ஜஸ்டிஸ் கட்சியார் பத்திரிகை நஷ்டத்திற்கு மாதம் மாதம் கொடுப்பதாக வாக்குக்கொடுத்த ரூபாயில் ஒரு காசு கூட கொடுக்கவேயில்லை. அதனால் சுமார் 20 30 ஆயிரத்துக்கு மேல் வெளியாரும், ஈ.வெ.ராவும் கை நஷ்டப்பட வேண்டிவந்தது. அதற்காக ஆதியில் பெரும் தொகை வாக்குக் கொடுத்த சில தோழர்கள் அக்காலத்தில் திராவிடனுக்கு சுமார் 3, 4 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கொடுத்தார்கள். இதைத் தவிர ஒருவரும் கொடுக்கவும் இல்லை. யாரையும் அவர் கேட்கவும் இல்லை.

டிசம்பர் மாதத்தில் 10 பிரசாரகர்களை தயார் செய்வதற்கும், அவர்களுக்கு ஒருமாத சாப்பாட்டிற்கும் போக்கு வரவு ரயில் சார்ஜுக்குமாக விருதுநகர் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானப்படி தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் வேண்டுகோளின் மீது பொப்பிலி ராஜா 300 ரூ அனுப்பினார்கள். 10, 13 தொண்டர்களின் 1 போதனைக்கும், சாப்பாடு ரயில் சார்ஜ் செலவுக்கும் இரண்டொரு இடங்களுக்கு பிரசாரத்துக்கு அனுப்புவதற்கும் செலவு செய்யப்பட்டது. அடுத்த மாதத்துக்கு அனுப்பும் விஷயத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்களே போதனா முறை பெற்றவர்களுக்கு வேலை கொடுப்பதாய் இருந்தால் தான் மேல்கொண்டு ஒரு பேட்ச்சுக்கு போதனா முறை யளிக்கலாம், இல்லாதவரை போதனாமுறையில் பிரயோஜனமில்லை என்று எழுதி நிறுத்தி விட்டார்.

மற்றப்படி கிரமமாய் கணக்குப் பார்த்தால் மந்திரிகளிடமிருந்து 100, 200 என்கின்ற கணக்கிலாவது ஈ.வெ.ராவுக்கு பணம் வரவேண்டி யிருப்பதாயும் மந்திரித்தனத்தை பாதுகாக்க பல நூறு ரூபாய் ஈ.வெ.ராவுக்கு செலவாகியும் அவர்கள் சொன்ன இடத்துக்குப் போகவும் அவர்கள் கூப்பிட்டபோது செல்லவும் மற்றும் பல நூறு ரூபாய்கள் செலவாகியும் இருக்குமே ஒழிய ஒரு மந்திரியிடமும் பணம் வாங்கவுமில்லை எதிர் பார்க்கவும் இல்லை. உண்மையிலேயே சில தோழர் தவறுதலாய் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.

யாரிடமும் பணம் வாங்காமலும், சுயநலத்துக்கு ஒரு காரியமும் செய்து கொள்ளாமலும் இருக்கிற ஒருவன் எப்போதும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதோடு அவனுக்கு எவ்வித குறைவும் வராது என்பது தோழர் ஈ.வெ.ராவின் முடிந்த முடிவாகும்.

இந்தக் காரணத்தாலேயே அவர் யாரையும் "நான் சொல்லுகிறபடி கேட்டால் கேள் இல்லாவிட்டால் போ" என்றும் "நான் அப்படித்தான் செய்வேன்" என்று சொல்லவும் தனது கொள்கையையும் இஷ்டத்தையும் யாருக்கும் அடிமைப்படுத்தாமல் இருக்கவும் முடிந்து வருகின்றது.

இந்த இயக்கம் தோழர் ஈ.வெ.ரா. வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொதுநல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார்.

அதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத் தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை.

அன்றியும் அவர் காரிய "வீரரே" தவிர கொள்கை வீரரல்ல. கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கை களைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சௌகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர்.

ஆகையால்தான் காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு பெயர் கோழை யென்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக் கவலை இல்லை.

கோழை என்பது செய்வதற்கு சவுகரியமுள்ள காரியங்களை விட்டு விட்டு ஓடுவதேயாகும்.

துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டு சுயநலத் துக்காகப் பின் வாங்குவதாகும்.

இன்று அவருக்கு செய்வதற்கு சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டு விட்டு அவர் ஓடவில்லை.

இரண்டாவதாக யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்கு பிரதி பிரயோஜனமடைந்தோ வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை.

ஆகையால் பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடமையாகாது. கருத்தொரு மித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடமையும் அறிவுடமையுமாகும். கருத்தொருமித்தவர்களே அவரது உயிர்த்தோழர்கள். கருத்து வேறுபாடுடையவர்கள் மற்றவர்களே யாவார்கள் என்பதை கூறி இதை முடிக்கின்றோம்.


             ------------------------தந்தைபெரியார் - “குடி அரசு” தலையங்கம் 29.03.1936

22 comments:

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீடு என்பது சலுகையின்பாற்பட்டதல்ல, உரிமையின்பாற்பட்டது மணிச்சுடர் வெள்ளி விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்!



சென்னை, அக்.7-இடஒதுக்கீடு என்பது சலு கையின்பாற்பட்டதல்ல, உரிமையின் பாற்பட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

மணிச்சுடர் நாளேட்டின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா சென்னை பெரியார் திடலிலுள்ள எம்.ஆர். ராதா மன்றத்தில் 4.10.2012 அன்று மாலை நடைபெற்றது.

விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கியதன் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அப்படி வந்தால்தான் இந்த இனத்தை, இந்த சிறுபான்மை சமூகத்தைப் பார்க்கவேண்டும்.

பாராட்டிப் போற்றி வந்த

பழைமை லோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்!

ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்

அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்!

அவர் வெண்தாடி அசைந்தால் போதும்;

கண்ஜாடை தெரிந்தால் போதும்.

கறுப்புடை தரித்தோர் உண்டு

நறுக்கியே திரும்பும் வாட்கள்!!

கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். கவிதை அல்ல என்ற தலைப்பிலே அன்றைக்கு எழுதினார்கள்.

அவர் பக்கத்திலே உட்கார்ந்திருந்தபொழுது, அதைத்தான் நான் அசைபோட்டு, அசை போட்டு சிந்தித்துக் கொண்டிருந்தேன். இப்படி எவ்வளவோ சொல்லலாம். ஆனால், விஷயத்திற்கு வரவேண்டும் என்ற காரணத்திலே, அவர்களையும் நான் நீண்ட நேரம் அமர வைத் திருக்க முடியாது என்ற காரணத்தினால் விஷயத் திற்கு வருகிறேன்.

மூடப்பட்ட கதவு முதலில் திறக்கட்டும்!

இன்னொரு செய்தியை சொல்லுகிறேன்,

இந்த சமுதாயத்தைப் பொறுத்தவரையிலே, ஆழமாக சுட்டிக்காட்டப்பட வேண்டுமானால், இந்த சமுதாயத்தினுடைய வாழ்வு, இந்த உரிமை, பாதுகாப்பு, இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொன்ன நேரத்திலே, ஆட்சியில் இருந்தபொழுது தலைவர் கலைஞர் அவர்கள்தான் 3.5 சதவிகிதம் முதலில் இடம் தொடங்கட்டும். மூடப்பட்ட கதவு முதலில் திறக்கட்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு முன்னாலே ஒரு பகுதியை பிற்படுத்தப் பட்டவர்களிலேயே இணைத்தார்கள். அதற்கு எத்தனையோ பேர் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள். அதனைப்பற்றி கவலைப்படவில்லை. ஆந்திராவிலே போடப்பட்டது, அடிபட்டது; ஆனால், இங்கே அதை செய்ய முடியவில்லை, காரணம் என்ன?

அவர்கள் போதிய சட்டப் பாதுகாப்போடு அதனை செய்தார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

வகுப்புவாரி உரிமையின், வரலாறும் பின்னணியும்

ஆகவேதான் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டு கிறோம் இந்த வீட்டுக்கு உரியவர்கள் நாங்கள்.

இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே, இந்த இட ஒதுக்கீட்டை முதல் முறையாகப் பெற்று இந்தியா விற்கே வழிகாட்டியவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு ஒரு சமுதாய மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் இஸ்லாமிய பெருமக்கள்தான் என்பது தந்தை பெரியார் அவர்கள் நமக்குத் தெரியாத ஒரு வரலாற்றை குடிஅரசு ஏட்டிலே அவர்கள் எழுதி, அதை நாங்கள் ஆவணப்படுத்தி, வகுப்புவாரி உரிமையின், வரலாறும் பின்னணியும் என்று மிகத்தெளிவாக இதிலே சுட்டிக்காட்டி இருக் கிறோம்.

இன்றைய தலைமுறை, ஏன் பல பேர் அரசியல் வரலாறு தெரிந்தவர்களுக்குக்கூட இது தெரியாத ஒரு செய்தியாகும். இதனைத் தெரிந்துகொள்ள வேண்டும்.



தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் அவர்கள், இட ஒதுக்கீட்டின் வரலாறு என்ன? எங்கே இருந்து தொடங்கியது? ஏன் தொடங்கியது? ஏன் சிறுபான்மை சமுதாய மக்கள் அப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள இட ஒதுக்கீடு கேட்கவில்லை? தங்களுக்கு நியாயம் வழங்கவேண்டும், உரிய இடம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அது சலுகையின் பாற்பட்டதல்ல, உரிமையின்பாற்பட்டது என்று மிகத்தெளிவாக சொல்லுகின்ற வகையிலே,

இந்திய கவுன்சில் ஆக்ட்

இந்தக் கொள்கையோடு ஏற்படுத்தப்பட்ட காங்கிரசில், அது ஏற்பட்ட 6, 7 வருஷத்திற் குள்ளாக, வகுப்பு உணர்ச்சிகள் ஏற்பட்டு, அதாவது 1892 ஆம் வருடத்திலேயே மிகத்தெளிவாக, 1892 ஆம் வருடத்து இந்திய கவுன்சில் ஆக்ட் என்ற பெயராலே ஒவ்வொரு வகுப்பாருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும், பல ஸ்தாபனங் களுக்கும் சர்க்காரே நாமினேசன் செய்ய அதிகாரம் வைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அரசாங்கத்தார் ஒரு சட்டம் செய்யவேண்டி வந்தது.

தனித் தொகுதிமூலம் தனிப் பிரதிநிதித்துவம்

எனவே, கேட்பது இருக்கிறதே, 1892 ஆம் ஆண்டிலேயே இப்படி அந்தந்த வகுப்பாருக்கு, அவரவருக்குரிய பங்கு கொடுக்கவேண்டும் என்று சட்டம் வந்தது. இந்த சட்டம் ஏற்பட்டும், இந்துக்களிடம் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதோடு, காங்கிரசினால் ஏற்பட்ட பதவிகள் முஸ்லிம்களுக்குச் சிறிதும் கிடைக்காமல் போனதால், 1906 ஆம் வருடத்தில் முஸ்லிம்கள் தங்களுக்கு ஜன விகிதாச்சாரம் தனிப்பட்ட பிரதி நிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று கேட்க வேண்டியவர்களானார்கள். இவற்றின் பயனாய், 1909 ஆம் ஆண்டிலேயே முஸ்லிம்களுக்குத் தனித் தொகுதிமூலம் தனிப் பிரதிநிதித்துவம் கிடைத்தது என்பது விளங்கும் என்று எழுதி இருக்கிறார்கள்.

முதல் முதல் சமூகநீதிக் குரல் கொடுத்தவர்கள் இஸ்லாமிய சமுதாய மக்கள்தான்

தமிழ் ஓவியா said...

எனவே, 1909 ஆம் ஆண்டிலேயே தனித்த இட ஒதுக்கீட்டை வாங்கி வழிகாட்டிய ஒரு சமுதாயம் இருக்கிறது என்றால், அது முதல் முதல் சமூகநீதிக் குரல் கொடுத்தவர்கள் இந்த சமுதாய மக்கள்தான் என்பதை நன்றாக உணர்ந்து பார்க்கவேண்டும்.

அந்த வழியிலேதான் இன்றைக்கும் உங்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று சொல்லும்பொழுது, நீங்கள் வேறு மற்றவர்கள் வேறு அல்ல. ஒரு ஜனநாயகத்திலே அதுவும் ஆதிக்கமற்ற ஒரு சிறுபான்மை சமுதாய மக்கள் என்றால், அவர்கள் எந்த மதத்தவர்கள் என்பது முக்கியமல்ல, அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்று சொல்லும்பொழுது, என் மதம்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், என் மொழிதான் இந்த நாட்டிலேயே ஒரே மொழியாக இருக்கவேண்டும் என்று சொல்லாமல், பன்மொழி, பல கலாச்சாரம், பன் மதங்கள், பல பண்பாடுகள் என்று வருகிற பொழுது, அத்தனையும் பாதுகாக்கப்படவேண்டும் என்று சொல்லுகிற அந்த உணர்வுதான் திராவிடர் சமுதாயத்தினுடைய தத்துவம், திராவிடர் இயக்கத் தினுடைய தனிப்பெரும் சாதனை! திராவிடத்தால் வீழ்ந்தோமா, எழுந்தோமா என்பதற்கு இவ்வளவு பெரிய அடையாளம் சிறப்பானது.

எனவேதான், சமுதாயம் இதனைத் தெளிவாக உணரவேண்டும், உணர்ந்திருக்கிறீர்கள், அதன் காரணமாகத்தான் இப்படி வெள்ளம்போல் திரண்டிருக்கிறீர்கள். எனவே, நண்பர்களே நான் இறுதியாக தளபதி அவர்கள் சொன்னதையும், பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் சொன்னதையும் வழிமொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மதவெறிக்கு இடமில்லாத அளவிற்கு...

இந்த நேரம் மிக முக்கியமான ஒரு நேரம், மதவாதம் மீண்டும் வந்துவிடுமோ, அரியணை ஏறிவிடுமோ என்று அச்சப்படுகின்ற இந்தக் கால கட்டத்திலே, அந்த மதவெறிக்கு இடமில்லாத அளவிற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பை நாம் உருவாக்கிப் பார்க்கவேண்டும்.

காயங்கள் நமக்குப் பல இருக்கலாம்; அதே நேரத்தில் நமக்குத் தொலைநோக்கும் தேவை. அந்த அடிப்படையிலேயேதான் கலைஞர் அவர்கள் சில நாள்களுக்கு முன்னாலே கூட, எங்களுக்கு எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும்கூட, நாங்கள் ஒரு மதவெறி ஆட்சி மீண்டும் அமர்ந்து விடக் கூடாது என்பதில் நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம் என்று சொன்னார்களே, இதுதான் இன்றைய சரியான பார்வையாகும்.

நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

எனவே, அந்தப் பார்வையையொட்டி, அருள் கூர்ந்து இந்த சமுதாய மக்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும், அவர்கள் ஒன்றே ஒன்றை நினைக்க வேண்டும். தங்களுடைய நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? பாம்பைப் பழுதென்று நினைக்காதீர்கள் - பழுதை பாம்பென்று நினைக்காதீர்கள். வெண் ணெய் எது என்று புரிந்துகொள்ளுங்கள்; சுண் ணாம்பு எது என்று ஒதுக்கி வையுங்கள். அதுதான் மிக முக்கியமானது. வெண்ணெயும் வெள்ளை, சுண்ணாம்பும் வெள்ளை என்று ஏமாந்துவிட்டீர் களேயானால், எரிவது நம்முடைய நாக்கே தவிர, பிறருடைய நாக்கல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு, மிகத்தெளிவாக வாழுங்கள்.

நாம் எடுக்கவேண்டிய உறுதிமொழி!

இதுதான் இன்றைக்கு திராட் மில்லத் அவர்க ளுடைய பிறந்த நாளிலேயே, மணிச்சுடர் நாளேட் டின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவிலே நாம் எடுக்கவேண்டிய உறுதி என்று சொல்லி, வாய்ப்புத் தந்த உங்களுக்கு நன்றி கூறி, முடிக்கிறேன். வணக்கம் நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

-இவ்வாறு பேசினார் திராவிடர் கழகத் தலைவர்.7-10-2012

தமிழ் ஓவியா said...

இந்தியா பாடம் பெறுமா?

தமிழக அரசியல்வாதிகளுக்குச் சிங்கள இராணுவத் தளபதி சவால்; டிசம்பர் மாதம் 45 பேர்களை பயிற்சிக்கு அனுப்புகிறோம் - முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்ற ஒரு செய்தி ஏடுகளில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.

இது உண்மையிலேயே தமிழக அரசியல் வாதிகளுக்கோ, ஈழத் தமிழர்கள்மீது நியாயமான அனுதாபமும், அக்கறையும் உடைய அமைப்பு களுக்கோ, தலைவர்களுக்கோ விடப்பட்ட சவால் அல்ல.

இந்திய அரசாங்கத்திற்கு விடப்பட்ட சவால் ஆகும். பல நேரங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பால் இந்தியாவில், இலங்கை இராணு வத்தினருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து குவித்த இலங்கை இராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கலாமா? என்ற வினா ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் எழுவதாக நினைக்க முடியாது. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் மீது கடும் கோபமும், கொந்தளிப்பும், நியாயம், மனிதநேயம் கொண்டவர்கள் அனைவரின் மத்தியிலும் எழுந்ததுதான், எழக் கூடியதுதான்!

இலங்கை இராணுவத் தளபதி விடும் சவால் எந்த அடிப்படையில்? எந்த நம்பிக்கையில்? தமிழ்நாட்டில் என்ன தான் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பினாலும் இந்தியா, அவற்றைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், கடைசியில் இலங் கைக்குச் சாதகமாகவே நடந்து கொள்ளும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படை யில்தானே இலங்கை இராணுவத் தளபதி மீசையை முறுக்குகிறார்!

இதன் விளைவு - ஈழத் தமிழர்கள் ஆதரவாளர்கள் மத்தியிலும், மனிதநேயம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தியாவின் மீதான அவமதிப்புதான் மேலோங்கி நிற்கப் போகிறது.

இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொண்டு ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்த போதும் இந்தியாவுக்குக் கெட்ட பெயர் விஞ்சியதுதான் மிச்சம்.

இனப்படுகொலை நடந்து முடிந்த பிறகு இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா பயிற்சியை இப்பொழுது அளிப்பதன் மூலமாகவும் இந்தியா வுக்குக் கெட்ட பெயரே!

மற்றொரு அபிப்பிராயமும் இந்தியாமீது ஏற் படுகிறது.

பன்னாட்டு அரசியலில் சீனா - இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறது - இந்நிலை இந்தியா வுக்கு உகந்ததல்ல எனும் காரணத்தால் இலங் கையைத் தம் நட்பு நாடாக வைத்துக் கொள்ளவே தான் இந்தியா கெட்ட பெயரை பற்றிக் கூடக் கவலைப்படாமல், இலங்கையுடன் பாச - நேசத்துடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்ற ராஜதந்திர அரசியலாவது சரிப்பட்டு வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

இலங்கை அரசுதான் இதிலும் ராஜதந்திர வெற்றியை ஈட்டி வருகிறது என்பது அப்பட்டமான உண்மையாகும். எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இந்தியா - சீனா எனும் இரு தரப்பு நாடுகளின் உதவிகளையும், பயிற்சிகளையும் பெற்றுப் பலனடைந்து வருவது இலங்கைதானே!

குட்டி நாடான இலங்கைத் தீவு, உலக வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவுக்குத் தண்ணீர் காட்டுகிறதே! புலிக்குப் பயந்தவன் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளலாம் எனும் தந்திரத்தில் இலங்கை, இந்தியாவை விட உயரத்தில் நிற்கிறதே!

ஆக ஒட்டு மொத்தத்தில் வீணான கெட்ட பெயர் வாங்கியதுதான் - வாங்கி வருவதுதான் இந்தியா கண்ட பலனாகும்.

நியாயமாக இலங்கை இராணுவத் தளபதியின் சவாலுக்கு இந்திய அரசு, தன் சுயமரியாதைக்குப் பங்கம் இல்லாமல் பதில் சொல்லக் கடமைப்பட்டு இருக்கவில்லையா?

உரலுக்கு ஒரு பக்கத்தில் இடி என்றால், இந்தியா என்ற மத்தளத்துக்கோ இரு பக்கமும் இடி! இடி!!

நியாயமான நிமிர்ந்த போக்கை கடைப்பிடிக் காதவர்கள் யாராக இருந்தாலும் இந்த நிலைக்குத் தான் ஆளாக நேரிடும் - இந்தியா பாடம் பெறுமா?

6-10-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் கவின்கலைத் துறை (Fine Art Dept) உருவாக்க ஆவன செய்யப்படும்

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் கவின்கலைத் துறை (Fine Art Dept) உருவாக்க ஆவன செய்யப்படும் பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி தொடக்க நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அறிவிப்பு


பெரியார் பகுத்தறிவு கலை - இலக்கிய அணியின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார். உடன் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர். (சென்னை - 6.10.2012)

சென்னை, அக்.7- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் விரைவில் கவின்கலைத் துறை உருவாக்கப்படும் என்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். சென்னை பெரியார் திடலில் நேற்று (6.10.2012) நடைபெற்ற பெரியார் பகுத்தறிவு கலை - இலக்கிய அணியின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை வகித்து, உரையாற்றுகையில் அவர் குறிப் பிட்ட ஒன்பது (நவமணி) கருத்துகள் திட்டங்கள் வருமாறு:

உண்மையான கலந்துரையாடல் கூட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் கூட்டம் அமைந்திருப்பதற்கு மகிழ்ச்சியை யும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1) பொதுவாக நம் தோழர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ஒரு செயலைச் செய்வதற்கு நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள் மனம் இல்லை - உழைக்க ஆர்வம் இல்லை என்றுதான் அதன் பொருள்.

நாம் நினைத்தால் நேரத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும். (நமக்கு இராகுகாலம், எமகண் டம், குளிகை, செவ்வாய், சனி என்பவை கிடை யாதே!)
வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஒதுக்கிக் கொண்டு பொதுத் தொண்டாற்றுங்கள்.

2) நாம் யார் என்றால் பெரியார் கொள்கையின் ஒலி பெருக்கி என்று பொருள். பெரியார் சொன்னதை எழுதியதை எடுத்துச் சொன்னாலே பல தலைமுறைகளுக்குப் போதுமானது.
கொஞ்சம் விளம்பரம் கிடைத்தால் விமர்சனத்தில் இறங்கி விடும் போக்குக்கு இங்கு இடம் கிடை யாது.

3) உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமோ தலைமைக் கழகத்தை அணுகலாம்.

4) நமது ஏடுகளை, வெளியீடுகளை நாள் தவறா மல் படிக்க வேண்டும்.

5) உங்களுக்குக் கணினிப் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் - இது இன்றைய காலத் தின் கட்டாயம், அவசியம்.

6) மூன்று நூல்களை முற்றும் கற்றுத் தேற உங்களுக்குப் பரிந்துரை செய்கிறேன். பெரியார் பேருரையாளர் பேராசிரியர் மறைந்த ந. இராமநாதன் அவர்களின் பெரியார் பாடங்கள் (இரண்டு பாகம்) பெரியார் பேருரையாளர், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களின் மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடை யாளம்.
தந்தை பெரியார் அவர்கள்பற்றி எழுப்பப்படும் எல்லா வினாக்களுக்கும் இம்மூன்று நூல்களிலும் விடை கிடைக்கும்.

7) திராவிடர் என்ற சொல் நம் இன எதிரிகளிடமிருந்து நம்மை அடையாளப்படுத்திக் கொள்வது. எதிர் பண்பாட்டுக்கு இங்கு இடம் இல்லை பார்ப்பனர்களை உள்ளே நுழைய விடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையுடன் கூடிய இனப்பெயர்.

இது நாமாகக் கற்பித்துக் கொண்டதும் அல்ல - வரலாற்று ரீதியான பெயரும்கூட.

நம்முடைய பிரச்சாரங்களில் இதனை விளக்கிக் கூற வேண்டும்.

8) இது மாதிரியான கலந்துரையாடல்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெற்று, அதில் செயல் திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும்.

9) நமது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் கவின்கலை (குநே ஹசவள னுநயீவ) துறை விரைவில் உருவாக்க ஆவன செய்யப்படும்.
மேற்கண்ட நவமணி - (ஒன்பது) திட்டங் களையும் கருத்துக்களையும் எடுத்துரைத்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.7-10-2012

தமிழ் ஓவியா said...


குத்து மதிப்பு
குத்து மதிப்பாகச் சொல்லுவது எனும் சொலவடை உண்டு. ஏடுகளும், இதழ்களும் இந்தக் கணக்கில்தான் பெரும்பாலும் வருகின் றன.

குமுதம் (10.10.2012) இதழில் ஒரு கேள்வி பதில்:

கேள்வி: நம் மாண வர்கள் ஹிந்தி படிக்க முடியாதபடி பார்த்துக் கொண்டன திராவிடக் கட்சிகள். அது நமக்குச் செய்த துரோகம்தானே?

பதில்: அவர்கள் வீட் டுப் பிள்ளைகள் மட்டும் ஹிந்தி படிக்கும்படி பார்த் துக் கொண்டார்களே, அதுதான் துரோகம்.

என்று குமுதம் அரசு பதில் சொல்லியுள்ளார்.

இதற்குப் பெயர்தான் குத்து மதிப்பு - பொத்தாம் பொது - என்பது. அடிப் படையைப் புரிந்து கொள் ளாமல் அரை வேக்காட் டுத்தனம் என்பதும் இது தான்.
இந்தியை யாருமே படிக்கக்கூடாது என்று திராவிட இயக்கம் சொன் னதா? எங்கே சொன் னது? எப்பொழுது சொன் னது? நாணயமான முறை யில் விடையளிக்க முன் வருவாரா திருவாளர் அரசு?

விரும்பிப் படிப்பது என்பது வேறு. கட்டாய மாகப் படித்தே தீர வேண்டும் என்பது வேறு. இரண்டுக்கும் இடையே உள்ள பொருள் புரியாத வர்கள் எல்லாம் பதில் சொல்ல முயற்சிப்பது தான் பரிதாபம்.

இந்தியை யாருமே படிக்கக்கூடாது என்பது தான் திராவிட இயக்கத் தின் கருத்து என்றால், சென்னை தியாகராய நகரில் இந்திப் பிரச்சார சபை இருக்க முடியுமா? (கோபாக்கினி அந்தப் பக்கம் திரும்பி இருக் காதா?)

இந்தி மட்டுமல்ல, இன்னும் எத்தனை மொழி களை வேண்டுமானாலும் தன் விருப்பத்தில் படித் துப் பன்மொழிப் புலவர் களாக தமிழர்கள் ஆனால் மகிழ்ச்சிதான்.
1937 இல் இந்தி யினைத் திணித்த ஆச் சாரியார் (ராஜாஜி) சமஸ் கிருதத்தைப் படிப்படி யாகப் புகுத்தவே இந்தியை இப்பொது கொண்டு வரு கிறேன் என்று சென்னை லயோலா கல்லூரியில் பேசிய சூட்சுமமெல்லாம் அரசுகளுக்குத் தெரி யுமா?

திராவிட இயக்கத் தைக் கொச்சைப்படுத்து வது என்பது ஒரு நாகரி கமாகப் போய்விட்டது. எந்தெந்த திராவிட இயக்கத் தலைவர்களின் பிள்ளைகள் இந்தி படிக் கின்றனர் என்று கூறத் தம் கைவசம் பட்டியல் இல்லை என்றால் எல் லோர்மீதும் சந்தேகப் புழுதியை வாரி வீசுவது நாலாந்தரமான மனப் போக்காகும்.

- மயிலாடன்
6-10-2012

தமிழ் ஓவியா said...

மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி? பெரியார் வழிகாட்டுகிறார்


தஞ்சாவூரிலுள்ள பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகம் தனது மொத்த மின் தேவையில் 65 சதவிகிதத்தை, தானே உற்பத்தி செய்து கொள்கிறது. இங்கு வீணாகும் குப்பைகள், கால்நடைக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளில் இருந்து உயிரி தொழில் நுட்ப முறையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் இங்கு விறகிலிருந்தும் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. வளாகம் முழுவதும் LED விளக்குகளும், சோலார் விளக்குகளும், சோலார் வாட்டர் ஹீட்டர்களும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன மற்ற கல்லூரிகளும், வணிக நிறுவனங் களும் இதனைப் பின்பற்றலாமே?

-சு.வீரமணி
நன்றி: புதிய தலைமுறை - 11.10.2012

தமிழ் ஓவியா said...

காப்பீட்டுத் துறையிலும், ஓய்வூதியத் துறையிலும்கூட அந்நிய முதலீட்டுக்கு அழைப்புக் கொடுப்பதா? திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம்


பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோதத் திட்டங்களை தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது.

கேளாக்காதாக மத்திய அரசு

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்நிய மூலதன முதலீடு (FDI) என்பது பன்னாட்டுத் தொழில் துறை திமிங்கிலங்களின் பச்சாதாபப்படாத சுரண்டல்களுக்குக் கதவு திறந்து விடுவது என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே சுட்டிக் காட்டியும் அதுபற்றி மத்திய அரசு கேளாக் காதுடன் செயல்படுகிறது.

ஓய்வுத் துறையிலுமா?

இப்போது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்று, அதற்கு மேலும் அடுத்த கட்டமாக, இன்ஷூரன்ஸ் - காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறை - இவை இரண்டிலும் அந்நிய முதலாளிகளை வரவழைக்க ஆயத்தமாவோம் என்று அறிவித்துள்ளது!

இன்ஷூரன்ஸ் துறையில் 26 சதவிகிதமான வெளிநாட்டு முதலீடுகள் பங்கு இனி 49 சதவிகிதமாக உயரும் என முடிவு செய்து பச்சைக் கொடி காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை - ஓய்வூதியத் துறையிலும் வெளிநாட்டு மூலதனக் கம்பெனிகளுக்குக் கதவு திறக்கப்பட்டுள்ளதாகும்.

உள்நாட்டிலேயே முதலீட்டைத் திரட்ட முடியுமே!

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு முற்றிலும் மாறானது இது. உள்நாட்டிலேயே தேவையான முதலீட்டைத் திரட்டாலாம் என்பதே அதன் யோசனை.

சில புள்ளி விவரங்கள் மத்திய ஆட்சியின் முடிவை நியாயப்படுத்துவதாக இல்லை.

எடுத்துக்காட்டாக,

கடந்த 10 ஆண்டுகளில் 6300 கோடி ரூபாய்கள் வெளிநாட்டு அந்நிய முதலீடாக வந்துள்ளது; ஆனால் எல்.அய்.சி. மட்டும் ரூ.7000 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.

தனியார்த்துறைக்குத் தாவும் பொதுத்துறைகள்

11ஆவது அய்ந்தாண்டு திட்டத்திற்கு 7 லட்சத்து 415 கோடி ரூபாய் வழங்கியுள்ளது!

பொதுத்துறை நிறுவனத்தை முற்றாக தனியார் மயமாக்குவதற்குரிய முதற்கட்ட முயற்சியே இது!

1.83 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.அய்.சி. 99 விழுக்காடு பாலிசிதாரர்களுக்கு முறையாக பணத்தை வழங்கியுள்ளது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் பாலிசிதாரர்களில் 60 முதல் 80 விழுக்காடு மட்டுமே வழங்கி வருகின்றன.

இது எதைக் காட்டுகிறது? பொதுத்துறை நிறுவனம், தனியார் துறையைவிட சிறப்பாக திறமையாகச் செயல்படுகிறது என்பதைத்தானே!

நமது அரசியல் சட்டத்தில் உள்ள சோசஷலிசம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

தமிழ் ஓவியா said...

ஓய்வூதியக்காரர்களின் எதிர்காலம்?

ஓய்வூதியத்திலும் இந்த ஒட்டகத்தை நுழைய விடுவது மிகப் பெரிய மக்கள் விரோதம். ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் இருண்டுவிடக் கூடிய ஆபத்து அறவே இல்லை என்று மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தற்போதுள்ள அமைப்பில் - ஓய்வூதியத் திட்டம் 1995இல் ஒரு ஊழியர் இறந்தால் - அது ஆயுள் முழுமைக்கானது என்ற காரணத்தால், அவரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் அல்லது 100 மாதங்களுக்கான மொத்த ஓய்வூதியம் கொடுக்கப்படும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.

இதே போன்று தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? இடையில் மூடப்பட்டால் (என்ரான் போன்ற நிறுவனங்கள் முன்மாதிரி) இன்சால்வென்ட் ஆனால் யாரைப் போய் கேட்க முடியும்? அரசு உரிமையாளர் என்றால் நிலை அப்படி அல்லவே!

செயல்படாத கணக்குகளால் லாபம்

இன்னொரு திடுக்கிடும் புள்ளி விவரம் இந்த முடிவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது!

தற்போது இந்திய தொழிலாளர் வைப்பு நிதி செயல்படாத கணக்குகள் உள்ள தொகை ரூ.22,636 கோடி. (சந்தா செலுத்தாமை, மூடப்பட்ட நிறுவனங்கள் போன்றவைகளால்)

அதுபோல கேட்பாரில்லாத நிதி ரூ.4000 கோடி (நாலாயிரம் கோடி).

இந்நிலையில் எதற்கு அந்நிய முதலீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும்?

அந்நிய துணி பகிஷ்காரம் செய்தது மறந்து போயிற்றா?

பிரிட்டிஷ்காரனின் சுரண்டல் ஒழிக என்று கூறியவர்கள் ஆளும் காங்கிரசார்!

அந்நிய துணிகள் பகிஷ்காரம் என்றுகூறி பதவிக்கு வந்தவர்கள்!

“Be Indian, Buy Indian”,

இந்தியனாக இரு; இந்திய சாமான்களையே வாங்கு என்றெல்லாம் நெருக்கடி காலத்தில் தத்துவ முழக்கம் இட்டவர்கள் இப்படி தாறுமாறாக பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலுக்கு பகிரங்க அனுமதியும் அழைப்பும் தரலாமா?

மதவெறி ஆட்சிக்கு வரவேற்பா?

இவை எல்லாவற்றைவிட, இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஆளும் கூட்டணி - (இடையில் கவிழ வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொண்டே) வாக்கு வங்கி பற்றியும், ஏழை, எளிய, பாமர, விவசாய, வியாபாரிகள் கண்ணோட்டம் ஆதரவு பற்றியும் சிந்திக்க வேண்டாமா?

மதவெறி ஆட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இப்படிப்பட்ட முடிவுகள் மூலம், தங்களை அறியாமலேயே வழிவகுக்கலாமா?

மான்டேக்சிங் அலுவாலியாக்களும், ரங்கராஜ அய்யங்கார்களும், கெல்கர்களும் இதர ஜோல்னாப்பை அறிவு ஜீவிகளுமா வந்து வாக்கு கேட்கப் போகிறார்கள்? சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும்தான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அரசியல் சாதுர்யம் கூட இல்லையே!
வேதனை! வேதனை!!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம் 6-10-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

கிரிக்கெட்டா?

செய்தி: குஜராத்தில் 13,000 கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு விவே கானந்தர் இளைஞர் மண்டலங்களுக்கு கிரிக்கெட் சாதனங்கள் வழங்கிட ரூ.12 கோடி ஒதுக்கி உள்ளார். முதல் அமைச்சர் நரேந்திரமோடி. சிந்தனை: அதில்கூட கிரிக்கெட்தானா? கீதையைப் படிப்பதைவிட உதைப் பந்தைக் (Foot Ball) கற்றுக் கொள் என்றாரே, அந்தச் சூத்திரர்கள் விளையாட்டை ஊக்கு விக்கக் கூடாதா!

சிக்கியது ரதம் தானா?

தேர்தல் பிரச்சாரத்துக் காக ரத யாத்திரையை மேற்கொண்டார் குஜராத் நரேந்திரமோடி. மோடியின் ரதம் சாலையின் பள்ளத் தில் சிக்கிக் கொண்டு விட்டது . அதனை வெளியே கொண்டு வர பெரிய கிரேனே தேவைப்பட்டதாம்.

விசேடம் என்ன தெரி யுமா? சாலையின் முன் னேற்றத்தில் மோடியின் சாதனை என்பதாம்;

தான் போன ரதமே பள்ளத்தில் விழும் அள வுக்குச் சாலையின் யோக் கியதை! சிக்கியது ரதம் மல்ல - மோடியின் சாதனை யும்தான்!

ஒடிசா கடற்பகுதியில்
குமரி மீனவர்கள் மீட்பு

நித்திரவிளை,அக்.6-நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன்.(35). இவரது விசைப்படகில் இனயம்புத்தன்துறை, மிடாலத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி ஒடிசா மாநிலக் கட லுக்கு சென்று மீன் பிடித்து கொண்டு இருந்த போது, விசைப் படகு உடைந்து கடலில் மூழ்கியது. 11 மீனவர் களும் கடலில் தத்தளித் தனர். அப்போது அரு கில் தூத்தூரை சேர்ந்த ஹெய்சன் என்பவரது விசைப்படகில் இருந்த மீனவர்கள் அவர்களை மீட்டனர்.

தமிழ் ஓவியா said...

விஷமிகளுக்குப் பதிலடி!



1967ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் உருவச் சிலை திறப்பு விழாவும் திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் தமிழக முதல்வர் அண்ணா, சபாநாயகர் சி.பா. ஆதித்தனார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கல்வி வள்ளல் காமராசர், ராஜா சர். முத்தய்யா



செட்டியார் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நான் தந்தை பெரியாரின் உதவியாளராகவும், விடுதலைக்கு செய்தி அனுப்புபவனாகவும், எப்போதும் அய்யா அவர்களின் அருகிலேயே இருக்கக் கூடிய வாய்ப்பினை பெற்றவனாகவும் இருந்தவன்.

தவத்திரு அடிகளார் வருகை தந்தபோது தந்தை பெரியாரவர்கள் தள்ளாடியபடி எழுந்து இரு கரங்களை கூப்பி வணங்கி, வரவேற்று அமரச் செய்தார்கள். அவர் காலில் விழுந்து வணங்கினார் என்பது உண்மைக்கு மாறுபட்ட செய்தி யாகும். இந்த விஷமத்தனமான செய்தி வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். 1968இல் நடைபெற்ற தந்தை பெரியாரின் 90ஆவது பிறந்த நாள் விழாவும் நிறுவனர் நாள் விழாவும் திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றதுஅதிலும் தவத்திரு அடிகளார் கலந்து கொண்டார். அப்போதும் அவர் காலில் விழவில்லை.

(தந்தை பெரியார்பற்றி புத்த ஜாதகக் கதைகளைக் கிளப்பி விடும் விஷமிகளுக்கு இது ஒரு பதிலடி!)

தமிழ் ஓவியா said...

இந்தியா பாடம் பெறுமா?

தமிழக அரசியல்வாதிகளுக்குச் சிங்கள இராணுவத் தளபதி சவால்; டிசம்பர் மாதம் 45 பேர்களை பயிற்சிக்கு அனுப்புகிறோம் - முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்ற ஒரு செய்தி ஏடுகளில் பரபரப்பாக வெளியாகியுள்ளது.

இது உண்மையிலேயே தமிழக அரசியல் வாதிகளுக்கோ, ஈழத் தமிழர்கள்மீது நியாயமான அனுதாபமும், அக்கறையும் உடைய அமைப்பு களுக்கோ, தலைவர்களுக்கோ விடப்பட்ட சவால் அல்ல.

இந்திய அரசாங்கத்திற்கு விடப்பட்ட சவால் ஆகும். பல நேரங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பால் இந்தியாவில், இலங்கை இராணு வத்தினருக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்து குவித்த இலங்கை இராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கலாமா? என்ற வினா ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் எழுவதாக நினைக்க முடியாது. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் மீது கடும் கோபமும், கொந்தளிப்பும், நியாயம், மனிதநேயம் கொண்டவர்கள் அனைவரின் மத்தியிலும் எழுந்ததுதான், எழக் கூடியதுதான்!

இலங்கை இராணுவத் தளபதி விடும் சவால் எந்த அடிப்படையில்? எந்த நம்பிக்கையில்? தமிழ்நாட்டில் என்ன தான் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பினாலும் இந்தியா, அவற்றைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல், கடைசியில் இலங் கைக்குச் சாதகமாகவே நடந்து கொள்ளும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படை யில்தானே இலங்கை இராணுவத் தளபதி மீசையை முறுக்குகிறார்!

இதன் விளைவு - ஈழத் தமிழர்கள் ஆதரவாளர்கள் மத்தியிலும், மனிதநேயம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தியாவின் மீதான அவமதிப்புதான் மேலோங்கி நிற்கப் போகிறது.

இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொண்டு ஈழத் தமிழர்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்த போதும் இந்தியாவுக்குக் கெட்ட பெயர் விஞ்சியதுதான் மிச்சம்.

இனப்படுகொலை நடந்து முடிந்த பிறகு இலங்கை இராணுவத்துக்கு, இந்தியா பயிற்சியை இப்பொழுது அளிப்பதன் மூலமாகவும் இந்தியா வுக்குக் கெட்ட பெயரே!

மற்றொரு அபிப்பிராயமும் இந்தியாமீது ஏற் படுகிறது.

பன்னாட்டு அரசியலில் சீனா - இலங்கையுடன் நெருக்கமாக இருக்கிறது - இந்நிலை இந்தியா வுக்கு உகந்ததல்ல எனும் காரணத்தால் இலங் கையைத் தம் நட்பு நாடாக வைத்துக் கொள்ளவே தான் இந்தியா கெட்ட பெயரை பற்றிக் கூடக் கவலைப்படாமல், இலங்கையுடன் பாச - நேசத்துடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்ற ராஜதந்திர அரசியலாவது சரிப்பட்டு வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

இலங்கை அரசுதான் இதிலும் ராஜதந்திர வெற்றியை ஈட்டி வருகிறது என்பது அப்பட்டமான உண்மையாகும். எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய இந்தியா - சீனா எனும் இரு தரப்பு நாடுகளின் உதவிகளையும், பயிற்சிகளையும் பெற்றுப் பலனடைந்து வருவது இலங்கைதானே!

குட்டி நாடான இலங்கைத் தீவு, உலக வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவுக்குத் தண்ணீர் காட்டுகிறதே! புலிக்குப் பயந்தவன் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளலாம் எனும் தந்திரத்தில் இலங்கை, இந்தியாவை விட உயரத்தில் நிற்கிறதே!

ஆக ஒட்டு மொத்தத்தில் வீணான கெட்ட பெயர் வாங்கியதுதான் - வாங்கி வருவதுதான் இந்தியா கண்ட பலனாகும்.

நியாயமாக இலங்கை இராணுவத் தளபதியின் சவாலுக்கு இந்திய அரசு, தன் சுயமரியாதைக்குப் பங்கம் இல்லாமல் பதில் சொல்லக் கடமைப்பட்டு இருக்கவில்லையா?

உரலுக்கு ஒரு பக்கத்தில் இடி என்றால், இந்தியா என்ற மத்தளத்துக்கோ இரு பக்கமும் இடி! இடி!!

நியாயமான நிமிர்ந்த போக்கை கடைப்பிடிக் காதவர்கள் யாராக இருந்தாலும் இந்த நிலைக்குத் தான் ஆளாக நேரிடும் - இந்தியா பாடம் பெறுமா? 6-10-2012

தமிழ் ஓவியா said...


காவிரி கருநாடகத்துக்கே எனில் தமிழ்நாடு யாருக்காம்?



பிரச்சினைகளுக்கு மத்தியில் மட்டுமே வாழ்கின்ற இனமான தமிழனின் இன் றைய தேதிக்கான பிரச்சினை காவிரிநீர் கண்களில் கவலையோடு காவிரிக்காக காத்திருக்கும் டெல்டா மாவட்ட விவ சாயிகள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவப் பெருந்தகை. மூன் றாம் உலகப் போர் நடக்கப் போவது தண்ணீருக்காகவே என்கிறார்கள் ஆய் வாளர்கள். இப்போது தமிழ்நாடு தண்ணீ ருக்காக பக்கத்து மாநிலங்களோடு போராட - போரிட வேண்டியிருக்கிறது.

பிச்சையா? உரிமையா?

இயற்கை அமைப்பின்படி தமிழ்நாட் டின் பாசனத்திற்கு தேவையான நீரை காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவை தான் கொடுத்து வருகின்றன. காவிரியில் புதிது புதிதாய் அணைகளைக் கட்டி தண்ணீரை கருநாடகா தேக்கிக் கொண்டதால் தமிழன் கண்ணீரையே பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டிய நிலை. தனக்கு மிஞ்சிதானே தானதருமம் என்று பிரச்சினையின் தன்மை புரியாமல் பேசும் மூடர்களாய் வாழும் மக்கள் கூட்டம் ஒருபுறம். காவிரி கருநாடகத்தில் தோன்றுவதால் அவர்களுக்கு மட்டுமே உரிமை என்ற தவறான புரிதலோடு பிரச்சினையை அணுகும் யாராக இருந் தாலும் உலகியல் சட்டப்படி, நியாயப்படி நீரியல் சட்டப்படி ஆயக்கட்டு உரிமை என்பது கடைமடைப் பகுதி வரை அனை வருக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நீர் என்பது தமிழர்களின் உரிமை - பிச்சையல்ல. நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்கிறான். விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும் போது - முது கெலும்பு முறிக்கப்படும்போது கண்டும் காணாமல் இருக்கும் நடுவண்அரசு.

அந்நியன் ஆண்டபோது...

காவிரிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக 1892ஆம் ஆண்டு பழைய மைசூரு அரசுக்கும், சென்னை அரசாங்கத் துக்கும் வெள்ளையர்கள், அந்நியர்கள் ஆண்டபோது ஒப்பந்தம் போடப்பட்டு அது பின்னர் 1924ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 50 ஆண்டு களுக்கான அந்த ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டு மறுஆய்வு செய்து புதுப்பித் திருக்க வேண்டும். 1974 முதல் கருநாடகா தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்து வஞ்சித்து வருகிறது. பல முறை பேச்சு வார்த்தை என்ற பெயரால் ஏமாற்று வேலை நடத்தியது கருநாடக அரசு.

தமிழ் ஓவியா said...

நடுவர் மன்றம் அமைத்திட

பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 1980-களிலேயே சொன்ன இயக்கம் திராவிடர் கழகம். நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதற்காக போராடி சிறை சென்ற தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி. அந்த கருத்து நாளும் வலுப் பெற்று சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக் காலத்திலே நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, விசாரித்து இடைக்கால தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது அதையும் அமல்படுத்தவில்லை கருநாடகா. அணை நிரம்பி உடையும் நிலை வந்தால் மட்டுமே தண்ணீரை திறந்து விடும் போக்குதான் இன்றளவும் தொடர்கிறது.

காவிரி நதியில் மொத்தம் உள்ள 740 டி.எம்.சி. தண்ணீரில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீரும், கருநாடகா 270 டி.எம்.சி., கேரளா 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி. தண்ணீரையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. 9 ஆண்டுகளுக்குப்பிறகு நீதிமன்ற கட்டாயத்தின் பேரில் கூடிய காவிரி நதிநீர் ஆணையம் 19.9.2012 அன்று கூடி கலைந்தது. தமிழ்நாட்டின் குறைந்தபட்ச தேவையான ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் வேண் டும் என்ற தற்காலிக கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டு 9000 கனஅடி நீரை (3/4 டி.எம்.சி) திறந்துவிட பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டார். அதையும் நிறைவேற்ற மறுத்து அடம்பிடிக்கிறது கர்நாடகா. தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது கருநா டகா காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மீண்டும் துவங்கிவிட்டது கருநாடகாவில் போராட்டம் - ஆர்ப்பாட்டம் மறியல், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்காதே காவிரி கருநாடகாவுக்கே என்றெல்லாம் ஆர்ப்பரிக்கிறார்கள். கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம், போக்குவரத்து பாதிப்பு எல்லைகளில் வாகனங்கள் நிறுத்தம் சாம்ராஜ் நகர், மாண்டியா மாவட்டங்களில் தொடரும் போராட்டம். உருவ பொம்மைகள் கொளுத்துதல் என்று சண்டித்தனம் செய்யும் கன்னடர்கள். தமிழ் நாட்டை அச்சுறுத்த நினைக்கிறார்களா?

தேசியம் பேசும் கட்சிகள்

தேசியம் என்பது மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தை என்றார் பெரியார். இந்திய தேசிய மயக்கம் கொண்ட ஒருமைப்பாடு பேசும் காங்கிரசு, பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் கட்சிநலன், ஓட்டு நலன், கருதி இரட்டை வேடம் போட்டு இந்திய தேசியம் என்பதே பித்தலாட்டம் என்று நிரூபிக் கிறார்கள். தமிழன் இன உணர்வு பேசினால் வகுப்புவாதம், பிரிவினைவாதம் என அலறும் தேசியக் கட்சிகள் செய்வது என்னவகை அரசியல்! தமிழர் நலனைப் புறக்கணித்து இந்திய தேசியத்தை காட்டிக் காக்கும் வெறியோடு செயல்படும் கட்சிகளை புறந்தள்ளுவோம்.

ஜனநாயகம் என்ற பெயரால் தந்திரத்திலும் வஞ்சகத்திலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது என்றார் பெரியார்.

தோழர்களே ஜனநாயகம் என்ற பெயரால் நடக்கும் கேலிக் கூத்துகளை ஒதுக்க வேண்டாமா? ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இடஒதுக்கீட்டு பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரிநீர் இப்படி எல்லாவற்றிலும் நம்மை வஞ்சிக்கின்ற தேசியம் நமக்கு தேவையா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டாமா? தனியாட்சியல்ல - மாநில சுயாட்சிகூட வழங்க மறுப்பது நியாயமா? வரலாற்றின் பக்கங்களில் இந்தியா ஒரே நாடா? காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 5 ஆண்டுகளுக்கு மேலாக கெசட்டில் வெளியிடாத காவிரி நடுவர் மன்றத்திற்கு தலைவரை நியமிக் காத மத்திய அரசு தமிழகத்தை தனது நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறதா - இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் உத்தரவை ஏற்க மறுக் கும் கருநாடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன்?

தமிழர்களே, தமிழ்நாட்டு நலனைப் புறக்கணிக்கின்ற யாரையும் புறக்கணிக் கின்ற மனநிலை நமக்கு வர வேண்டும். கருநாடகத்தின் தேவைக்கு போகத்தான் காவிரி நீர் தமிழ் நாட்டுக்கென்றால் நமது தேவைக்கு போகத்தான் நெய்வேலி மின்சாரம் அடுத்தவனுக்கு என்று நாம் சொல்ல வேண்டும் ஒரு சொட்டு நீர் கூட தர மாட்டோம் என்றால் யூனிட் மின்சாரம் கூட அளிக்க முடியாது கூடாது என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். உணர்ச்சி பெற வேண்டும் தோழர்களே காவிரி தஞ்சை மாவட்டத்தின் பிரச்சினை யல்ல தமிழர்களின் உரிமைப் பிரச்சினை. உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

தனித்தனி நாடுகளில் ஏற்படும் நதிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது ஏக இந்தியாவில் ஏன் தீர்க்க முடியவில்லை! சிந்திக்க வேண்டாமா?

காவிரி கருநாடகத்துக்கே என்று அவர்கள் சொன்னால் தமிழ்நாடு யாருக் காம்? கனடாவுக்குப் பக்கத்திலா இருக் கிறது தமிழ்நாடு?

- க. சிந்தனைச்செல்வன்
அரியலூர் மாவட்ட செயலாளர்
6-10-2012

தமிழ் ஓவியா said...

ஒழிக்கப்பட வேண்டிய மூன்று!



தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள் நம்மை தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும். முதலாவதாக மேல்ஜாதி, கீழ்ஜாதி ; ஒருவன் பார்ப்பான் - கடவுளுக்குச் சமமானவன். அவன் சாமி, பிராமணன் என அழைக்கப்படவேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்குப் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள், மனிதனில் எதற்கு மேல்ஜாதி, கீழ்ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில்லையே! மேல்ஜாதி என்பது பாடுபடாத சோம்பேரி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும ஜாதி, பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது.

இரண்டாவதாக, பணக்காரன்- ஏழை. இது எதற்காக? பணக்காரன்- ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை -பாடுபட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவசியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்ன பாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?

மூன்றாவதாக, ஆண்- எஜமானன்! பெண் - அடிமை. இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி, பெண் அடிமைதான்! சில நிர்பந்தம், அடக்குமுறை ஆண்களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவைகளுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண்- எஜமான; பெண்-அடிமை; இந்த வேறுபாடு தேவையில்லாதது. அக்கிரமமானதும் கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது. இங்கு மூன்று பேர். மேல் ஜாதி, 97 பேர் கீழ்ஜாதி! அது போல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறு பான்மையினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.

காரணம்: 1 கடவுள், 2. மதம், 3. அரசாங்கம். கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால், மதம்-சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழிய வேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்படவேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல்லாம் நினைக்கிறார்கள் - திராவிடர் கழகத்தைத் தவிர?

- 12.11.1958 அன்று மேலவாளடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு.

தமிழ் ஓவியா said...


சிதம்பரம் நடராசன் கோயிலில் தீட்சிதர்களின் பகல் கொள்ளை




சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆண்டவன் பெயரால் கொத்தடிமை முறை நடந்து வருகிறது. சமஸ்கிருதம் தவிர வேறு எந்த மொழியும் இந்தக் கோயிலில் பயன்படுத்தக் கூடாதாம். தமிழுக்கு இங்கே இடமில்லையாம். பிரதமர் ஜனாதிபதிகளுக்குக்கூட இங்குள்ள தீட்சிதர்கள் அனுமதி தந்தால்தான் நுழைய முடியும்... தில்லை நடராசர் கோயில் தீட்சிதர்களின் சொத்து அல்ல; பொது மக்களின் சொத்து. இந்த கோயில் அரசர்களின் காலத்தில் கட்டப்பட்டது. அரசர் காலத்தில் அமைச்சர் அந்தஸ்தில் உள்ளவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது; தீட்சிதர்களால் அல்ல. இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. (முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் தில்லையில் பேசியது, விடுதலை தேதி 22.4.1990).

2007ஆம் ஆண்டு கோயிலுக்குக் கிடைத்த மொத்த வருமானம் ரூ.37,199.00 அதில் செலவு ரூ.37,000 என்றும் மீதி ரூ.199 என்றும் கோயில் தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன் றத்தில் கணக்கு காட்டினார்கள்!

2009 பிப்ரவரி 5ஆம் நாள் நடராசர் கோயில் இந்து சமய அற நிலையத் துறையின் பொறுப்பில் வந்தது. 2009இல் கடந்த ஆறு மாதங்களில் வசூல் 6 இலட்சத்து 2845 ரூபாய் ஆகும். (விடுதலை நாள் 21.9.2009).

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு 2594 ஏக்கர் நஞ்செய் நிலமும், 895 ஏக்கர் புஞ்செய் நிலமும் என மொத்தம் 3489 ஏக்கர் நிலத்தில் இருந்து வரும் வருமானம் தீட்சிதர்களால் அனுப விக்கப்பட்டு வந்தது. (முரசொலி 22.9.2009)

கோயிலின் உண்டி வருமானம் 20.9.2012 அன்று 19வது முறையாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் களால் எண்ணப் பட்ட போது இதுவரை உண்டில் வசூலின் மொத்த தொகை ரூ.1,00,45,258/- கோயில் உண்டி வசூல் இதுவரை ஒரு கோடியைத் தாண்டி உள்ளது. (நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 21.9.2012)

இந்த உண்டி வசூல் கோயிலின் சீரமைப்பிற்குப் பயன்படுத்த முடியாது. இந்தத் தொகை நாட் டுடைமை ஆக்கப்பட்ட வங்கியில்தான் செலுத்தப்பட்ட வேண்டும். தீட்சி தர்கள் கோயில் நிர்வாகத்தை இந்துசமய அற நிலையத் துறை எடுத்துக் கொண்டதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக் கிறார்கள். நூற்றாண்டு காலமாக கோயில் வருமானத்தை அனுப வித்து வந்த ருசி பார்ப்பனர் களால் இழக்க முடியுமா? உச்சநீதி மன்றம் எண்ண தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதை சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர் நோக்கி உள்ளனர்.

1925இல் தமிழகத்தை ஆண்ட நீதிக்கட்சி, இந்து மதக் கோயில்களின் சொத்துக்களைப் பாதுகாக்க இந்து சமய அற நிலையத் துறை சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை பார்ப்பனர்கள் தீவிரமாக எதிர்த்தனர். நூற்றாண்டு காலமாக 30,000க்கு மேற்பட்ட கோயில்களின் சொத்துக் களை அவர்கள் அனுபவித்தவர்கள் ஆயிற்றே. இந்து சமய அற நிலையத் துறை சட்டத்தை 85 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு வந்த நீதிக் கட்சியை தமிழக மக்கள் கட்சி வேறுபாடு இன்றி பாராட்ட வேண்டும்.

சட்டம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க. பொதுவுடைமைப் போராளி சிங்காரவேலர் போன்ற தலைவர்கள் சட்டத்திற்கு முழு ஆதரவு அளித்துப் பிரச்சாரம் செய்தனர்.

- செய்யாறு இர. செங்கல்வராயன் 6-10-2012

தமிழ் ஓவியா said...


காகம் வழிகாட்டியானால்?

அரசுக்கு எந்த ஒரு மதமும் இல்லை என்பதுதான் மதச் சார்பின் மைக்குப் பொருள். அரசுக்கு மதம் உண்டு எனப் பிரகடனப்படுத்தவோ, மத அரசை உண்டாக்கவோ எவ ருக்கும் அதிகாரமில்லை இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை, 2004 மார்ச் 31ஆம் நாளன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜா, அரிஜித் பசாயட் ஆகியோர் அளித்திருக் கிறார்கள்!

அதோடு மட்டுமல்ல... இந்திய அமைப்புச் சட்டம் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியிலும் (51கி (லீ) துணைப் பிரிவிலும்) வலியுறுத் தப்படுவது.

1. அறிவியல் ரீதியான அணுகு முறை

2. மனிதாபிமானம்...

3. ஆய்வில் ஊக்கம்...

4. சீர்திருத்தம்.

இவை ஒவ்வொரு குடி மக்களின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது!

ஆனால்... நாட்டில்நடப்பதோ, வெட்கக் கேடு!.. மானக்கேடு!.. அறிவுக்கேடு!!!

விநாயகப் பெருமானின் திருவருளால், நாடு எங்கும் நலமும், வீடு எங்கும் வளமும் பெருகட்டும்!

இது கல்வியறிவில்லாத பாமரனோ.. அல்லது அரசியல் சட்டப் பிரிவு அறியாத அப்பாவியோ கூறிய..

அபத்தமான வார்த்தைகள் அல்ல!.... ஆரிய மாயையை எழுதிய பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்திடும்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கி இருக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் இன்றைக்கு மிக மிக அவசியமாகத் தேவைப்படும். அறிவுரை.
இப்படி முதலமைச்சர் ஜெய லலிதாவே அரசியலமைப்புச் சட்டத் திற்கு மதிப்பளிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படிய வில்லையென்றால்.. குடிமக்கள் நிலை என்ன?

நீதியின் முன் அனைவரும் சமம் என்பதற்குத்தான் என்ன பொருள்?

மக்களாட்சிக்கு புற்றுநோய் வந்துவிட்டதோ? என்று தானே, அறிவுலகம் அய்யப்படும்!..

நாடும் வீடும் இன்று நலமும், வளமும் பெற்றா விளங்குகிறது? ஒரு நாள் கூத்துக்கு செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய்களை...
மக்கள் நலவாழ்வுக்குப் பயன் படுத்தி இருக்கலாமே! அதற்கு பகுத் தறிவு சிந்தனையல்லவா வேண்டும்!! அய்யா என்றும் தேவைப்படுகிறார் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!

காகத்தை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டால் அது செத்த நாயிடம் தானே கொண்டு சேர்க்கும்!!

நெய்வேலி க. தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...

தகவல்களஞ்சியம்

துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.

நீண்டகாலம் வரை கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் தேன்.

உலகின் மிகப்பெரிய தீபகற்பம் -அரேபியா.

தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுவது - போடிநாயக்க னூர்.

யானைகளுக்கான முதல் மருத்துவ மனை தாய்லாந்து நாட்டில் 1993-ல் தொடங்கப்பட்டது.

கழுகு இனத்தில் மிகப்பெரியது தென்அமெரிக்காவில் ஆண்டிஸ் மலைகளில் உள்ள கொன்டோர் கழுகு.

அதிக ஞாபக சக்தியுள்ள பறவை புறா.

உலகில் மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தாவில், உள்ள தாவர பூங்காவில் பராமரிக்கப்படுகிறது.

உலகில் மிக வயதான மரம் இலங் கையில் அனுராதபுரத்திலுள்ள வெள்ளரசு மரமாகும்.

அதிவேகமாகப் பறக்கும் பறவை ஸ்விப்ட்.

தமிழ் ஓவியா said...

பொது ஒழுக்கக் கேடர்கள் நம் பூதிரிப் பார்ப்பனர்கள்



பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
அய்யுறலின்றிக் களித்திருப் பாரவர்
ஆரிய ராமமென்றிங் கூதேடா சங்கம்

என்ற பாரதியின் கூற்றுக்குச் சற் றேனுங் குறைவின்றி ஆரியப் பார்ப்பனர் மலையாள மண்ணில் ஆடிய ஆட்டம் அகிலம் ஏற்காது. திராவிடர் மக்களை நால் வர்ணமாக்கி, அதற்குள் தீண் டாமை நோயைக் கொடுந் தாண்டவ மாடச் செய்தவர்கள். இவர்களுக்குச் சூத்திரர் என முத்திரையிட்டு இவர்கள் பார்ப்பனர் அருகே வருவதோ தொடு வதோ தமக்குத் தோஷமெனப் பயமுறுத்தி வாழ்ந்தவர்கள் நம்பூதிரிகள். ஆண்களாய்ப் பிறந்த சூத்திரருக்கே இந்நிலையுங்கூட பெண்களுக்கன்று எனத் தனக்கேற்ப சட்டம் செய்து கொண்டனர்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்

என்பார் திருவள்ளுவர். பெருமைக் குரியோராய்ப் பார்ப்பனர் நடந்து கொண்டனரா? இல்லை. இல்லவே இல்லை. நம் பூதிரிகள், நாயரை டேய் என்று விளித்துத்தான் அழைப்பர். மேல்துண்டை இடுப்பில் கட்டி, கையைக் கட்டி, வாயைப் பொத்தித் தொலைவில் நின்று நாயரைப் பேசச் செய்வர். நாயரோ நம் பூதிரிகளைத் திருமேனி, திருமனசு, தம்பிரான் எனச் சிறப்பாய் விளித்துப் பேச வேண்டுமாம். ஆனால், சூத்திரப் பெண்களை நம்பூதிரி தொட்டுத் துயில் கொள்வது தீட்டல்ல, தோஷமல்லவெனச் சட்டம் செய்து கொண்டனர் தம் சுயபோகத் திற்காக.

மலையாள பூமியைத் தமக்கே சொந்தமென ஆக்கிக் கொண்டனர் நம்பூதிரிகள். சொத்துக்கள் பிரிந்து, குறைவுபடக் கூடாதென்பதற்காகவே குடும்பத்தில் மூத்த நம்பூதிரியே தன் இனத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வர்.

.... ஆண்களெல்லாம் களவின்பம் விரும்புகின்றார் கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதேசங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்புவாரே!

என்ற பாரதியாரின் கருத்துக்கேற்ப ஊருக்கு உபதேசங்கள் கூறிக் கொண்டே சூத்திரப் பெண்களைத் தன் வயப்படுத்திக் கெடுத்து, மானமிழந்து வாழ்ந்திடச் செய்தனர். நாயர் குலப் பெண்களை ஏனைய நம் பூதிரிகள் வைப்பாட்டிகளாக வைத்துக் கொண் டனர். ஒருவன் 40 முதல் 50 பெண் களோடு தொடர்பு கொண்டு ஒழுக்கக் கேடராய்த் திரிந்தனர். அப்பெண் களுக்கும் நான்கு முழுத் துண்டுகள் நான்கும், தலைமுழுக எண்ணெய் மட்டுமே ஓராண்டுக்கெனத் தந்தனர். பிள்ளைத்தாச்சியானால் அக்குழந் தையைக் காப்பாற்றும் பொறுப்பு, உரிய நம்பூதிரிக்குக் கிடையாதென அறை கூவல் விடுத்தனர். தெருவில் போகும் தனக்குப் பிடித்த நாயர் பெண்களின் வீடுதேடிச் சென்று அச்சமின்றி அவளோடு அயர்ந்து களித்தனர். ஊருக்குக் கூறிய காரணம், கடவுளிடம், நாங்கள் வேண்டியே மலையாளப் பெண்களை எங்களுக்காக அழகாகப் படையுங்கள் எனப் படைப்பித்தோம் எனப் பொய்யுரை கூறி ஏய்த்தனர். அப்பொய்யுரையைப் பொய்யென யாராவது தெரிந்தனரா? இல்லை. கடவுள், மதம் சிந்திக்க விடாமல் செய்துவிட்டன.

தமிழ் ஓவியா said...

பிறவியின் மேன்மையினால் படைப் புலகில் காணப்படும் பொருள்கள் அனைத்தும் தனக்குரிய செல்வமாகப் பெறுவதற்குப் பார்ப்பனன் உரிமை பெற்றிருக்கிறான் என்னும் மனு(அ) நீதிக்கு ஏற்பத் தம் இச்சைக்கு ஆட்பட மறுத்திடும் நிலை வாராதிருக்க சூத்திரர் வாழ்க்கை, தம்மைச் சார்ந்தே என ஆக்கிக் கொண்டனர். பூமியைத் தமக்கே உரிமையாக்கி, அங்குதான் உழைப்பவன் உழைத்திட வேண்டுமென்ற கட்டாய நிலையை உருவாக்கினர். பார்ப்பனரல் லாதார் குடியிருக்க இடம் தந்தனர் நம் பூதிரிகள் தம் போகங்கருதி நம் பூதிரியோடு சம்பந்தம் கொண்டு வாழ்தலே நாயர் பெண்களுக்கு மோட்சம் கிட்டும் நல்வழியென நம்பச் செய்தனர். மறுக்கும் குடும்பம் குடி யிருப்பையும், மோட்ச வீட்டையும் இழப்பர் என அச்சப்படுத்தினர். அரசின் அதிகாரப் பதவிகளைத் தாமே எடுத்துக் கொண்டு, வருமான மிகுதியால் அண்டை நிலங்களையெல்லாம் வாங் கித் தமக்காக்கினர். பார்ப்பனர் தொடர்பு தமக்குண்டென்பதைப் பெருமையாக நாயர் பெண்கள் பேசித் திரிந்திடச் செய்தனர். சில ஆண்டு காலங்கள் நம்பூதிரிகளின் தொடர்பு தமக்கு இல்லையாயின், அதனைக் குறையாக எண்ணிப் பணம் தந்து வலியச் சென்று பார்ப்பனன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது நாயர் குடும்பம். நம் பூதிரி வந்து தங்கிச் செல்லத் தம் வீட்டில் தனி அறையே கட்டி வைத்தனர். நாயரிடமே, அவரின் மனைவியின் அழகினை எடுத்துக் கூறி அவனை அழைத்து வரச் செய்த அயோக்கிய நம்பூதிரிகள் ஏராளம். தங்கள் பாக்கியத்தால் அவள் அழகுடையவளானாள் என மறுமொழி கூறி மறுக்காது அழைத்துச் சென்ற நாயர் பதிகள் ஏராளம்.

இச்சமூக ஒழுக்கக் கேட்டினைத்தான் நீக்கிச் சீர்படுத்திட 1926இல் சென்னை சட்டமன்றம் மலையாளக் குடிவார மசோதா கொண்டு வந்து வாதித்தது. மசோதாவை எதிர்த்துப் பார்ப்பனர் நலன் விரும்பி சர்.சி.பி. ராமசாமி அய்யர் வாதம் செய்தார். ஒழுக்கசீலர்! சத்திய மூர்த்தி அய்யரும் உடன் உலக்கையை உருட்டிக் கொண்டு ஒத்து ஊளையிட் டார். சர்.கே.வி. ரெட்டி நாயுடு கேட் டார், மலையாள தேசத்துப் பெண்கள் பக்குவமானால் முதன்முதல் பார்ப் பனன் தான் அவளைப் புணர வேண் டும் என்று இருக்கிறதே! அந்த அக்கிரமங்கள் தொலைந்து போய் விடுகிறதே என்று பயப்படுகிறீர்களா? என்று அய்யரைப் பார்த்துக் கேட்டார். அய்யர் சொன்னார், நிறைவேற்றினால் கவர்னர் மூலம் மசோதாவைத் தள்ளி விடச் செய்வோம் என்று திராவிடர் மலையாளத்திகளின் மானத்தைச் சூறை யாடிடச் சூளுரைத்து எழுந்தவர்களின் வளர்ச்சியைக் கருக்கிட வேண்டாமா? அன்று, நம் சகோதரிகளின் மானங் காத்திடப் பார்ப்பனரோடு உறுதியாகப் போராடியோர் திவான்பகதூர் எம். கிருஷ்ணநாயர், ஸ்ரீமான் நரசிம்மராஜூ, சர்.கே.வி. ரெட்டி நாயுடு ஆகிய திரா விடர் தலைவர்களே அடுத்த வர்ணப் பெண்களை, பிறன் மனைவியை இழிவுபடுத்துவது பொது ஒழுக்கக் கேடு என்பதனைப் பார்ப்பனர் உணர்ந் தனரா? குடியரசு சுட்டிக் காட்டியதே திருந்தினரா நம்பூதிரிகள்? ஒழுங்கை நிலைநிறுத்தினரா?


மா. பால்ராசேந்திரம்

தமிழ் ஓவியா said...


தெரியுமா சேதி?



1935 இயோலா மாநாட்டில் மனுஸ் மிருதியின் வாசகங்களை ஒரு பார்ப்பனரை விட் டுப் படிக்கச் செய்து அதனைத் தீயிட் டுக் கொளுத் தினார் அண்ணல் அம்பேத்கர்.

தமிழ் ஓவியா said...

கடவுளுக்குக் கடிதம்



பாதிரியாரே, பூசாரியே, நமாஸ் செய்யும் உஸ்தாசே!
என் கேள்விகள் கொண்டு சென்று கடவுளிடம் தருவீர் . . . அவர் சொன்ன பதில்களை உடன் கொண்டு வருவீர் . . .
ஏசு தூதனைக் கேட்பீரோ?
அல்லாவைக் கேட்பீரோ?
வைகுண்டம் சென்று நின்று விஷ்ணுவைக் கேட்பீரோ?

ஆத்திகனின் அகத்தோடு அழிந்துபோன கேள்விகள்!
நாத்திகனின் நாவினிலே நைந்து போன கேள்விகள்!
தூசு சேர்ந்து, படிந்து, படர்ந்து, மறைந்து போன கேள்விகள்!
பகுத்தறிவைப் புதைத்து நாம் மறைத்து போன கேள்விகள்!

அன்பு அல்லாவே! கருணை கிறிஸ்துவே! பாச பரம்பொருளே!
சுனாமியில் சுருட்டி, சுடுகாடு கட்டியது ஏன்?
பூகம்பமாய் புரட்டி, பூமியை அழிப்பது ஏன்?
பிறவி பலனுக்காக பிஞ்சுகளையுமடா கொல்வாய்?

பாவம் செய்தவனைப் படைத்தவன் நீ . . .
அறிவு அளித்தவன் நீ . . .
அணுவை அசைப்பவன் நீ . . .
அவன் செய்த பாவம் கூட உன் கணக்கில்தானே சேரும்?
அவன் குற்றம் புரிந்தவன் என்றால், நீ குற்றம் புரியத் தூண்டியவன் . . . அப்படித்தானே?

தண்டனைகள் தள்ளி வைத்து
தப்புகள் நடக்காமல்
தடுக்காதது ஏன்?

பூசைகள் இல்லை என்றால்
தெய்வ குற்றமாமே?
புகழ்ச்சிக்கு அலைபவனா நீ?
உயிர்வளி உள்வாங்கி, கரிவளி கக்கும்,
உயிர் பயணத்தில் ஆவிநிலை எங்கே?
சொர்க்க நரகம் எங்கமைத்தான்?
கருங்குழிக்கு அந்த பக்கமா?
நீ உரு அற்றவன்! ஒரு வாதம் . . . பல உரு கொண்டவன்! பல்லிறை வாதம். . .
கற்பனை என்றுவிட்டால்! விதண்டாவாதம். . .
அறிவியல் என்றால் அதுவே வீண்வாதம் . . .

யார்தான் நீ?
ஆணா? பெண்ணா? அலியா?
திடமா? திரவமா? வளியா?

அம்பு எய்தாய், ஆடு மேய்த்தாய், அசுரன் அழித்தாய்!
உன் தோற்றங்கள் எல்லாம்;

இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு,
இல்லையேல் 4 லட்ச வருடத்திற்கு பின்பு
கற்பனையில் பிறந்தவனா நீ?
கதைகளில் வாழ்பவனா நீ?

கல்லில் உனை செதுக்கியவன் சிற்பி,
காகிதத்தில் உனை வரைந்தவன் ஓவியன்,
பூசையில் உனை வளர்ப்பவன் பூசாரி,
பூமி முழுக்க உனை பரப்பியவன் சாமியார்.

இங்கு யார், யாரை படைத்தார்?
யார், யாரைக் காத்தார்?
யாரால், யாருக்கு நன்மை?

இக்கேள்விகளுக்குக் கண்ணைக் குத்துமாம் கடவுள் . . .
குத்தட்டும்!
குருட்டு நம்பிக்கையில் வாழ்வதை விட
குருடனாய் வாழ்ந்திடுவேன்!

மூங்கில் (முகநூல்)

ஆக்கம்: தமிழ் இனியன் பஞ்சு (மலேசியா)