Search This Blog

21.10.12

சரஸ்வதி பூஜை என்பது என்ன?

சரஸ்வதி பூஜை என்பது என்ன?


- தந்தை பெரியார்
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.  அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.

அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது  ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால்  வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில்  ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து  பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில்  வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது  அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள். அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும், இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக்  கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.

இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும்  சரஸ்வதியாய் கருதி தொட்டுக்  கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு  நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு  செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு  தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

----------------ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 "குடிஅரசு" இதழில் வெளியானது.

12 comments:

தமிழ் ஓவியா said...

மோசம்/// மோசம்///


ஊடகங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

மோசமாக... மிக மோசமாக... மிகமிக மோசமாக இருக்கிறது. உண்மை, நேர்மை, நடுநிலைமை என்பதெல்லாம் கேள்விக்குறி ஆகிவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவது, பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என மோசமான திசையில் ஊடகங்கள் பயணிக்கின்றன. அதுவும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் சொந்தமாக மீடியா ஹவுஸ் வைத்திருப்பதால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அல்லது தங்களைப் பற்றிய என்ன பிம்பம் பரவ வேண்டும் என்று நினைக்கிறார்களோ... அவற்றை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். அதுவும் மின்னணுச் சாதனங்களின் வருகை... ஊடக உலகுக்கு ஏற்பட்ட சோதனை என்றே சொல்லலாம். பரபரப்புக்காகத் தவறான செய்திகளையும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட செய்திகளையும் வெளியிடு கிறார்கள். அதில் துளியும் உண்மை இருக்காது. மொத்தத்தில் இன்றைய மீடியா, மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறி வருகிறது.

இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார்

நன்றி : ஆனந்த விகடன்

தமிழ் ஓவியா said...

மனு தர்மத்திற்கும் மனித தர்மத்திற்கும் போராட்டம்


நூல்: திராவிடர் இயக்க நூறாண்டு வரலாற்றுச் சுவடுகள்...
ஆசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -600 007. பக்கங்கள்: 112 ரூ.40/-

கடந்த ஆகஸ்டு மாதம் திராவிடர் இயக்க நூறாண்டு வரலாற்றுச் சுவடுகள் என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. ஏற்கனவே பெரியாரியல்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு இத்தொகுப்பு ஒரு பெரும் உதவியாக அமைந்திருந்தது. படித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் தமிழின மக்களின் மீது பார்ப்பனிய ஆதிக்கத்தையும் உயர்சாதி மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொண்ட அடக்குமுறைகளையும் மீண்டும் மீண்டும் என் கண்முன்னே நிகழ்வது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது இந்நூல்.

நான் அண்ணாவைப் பார்த்தவன் அல்ல! பெரியாரைப் பார்த்தவன் அல்ல! இருந்த பொழுதிலும் அவர்களின் உணர்வினையும் அவர்களின் செயல்களையும் வாசகர்களுக்கு உணர்த்துகின்ற அளவில் இந்நூல் ஆசிரியர் கி.வீரமணி அப்படியே பிரதிபலிக்கச் செய்திருக்கிறார்.

இன்று திராவிடம்பற்றியும் திராவிட உணர்வுபற்றியுமான சிந்தனைகள் மீண்டும் மீண்டும் முகிழ்த்தெழ வேண்டிய காலச் சூழல் எழுந்துள்ளது.

இக்கால மனிதர்களுக்குக் கடந்து வந்த பாதையினை மறந்து விடுவது என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. எனவே திராவிட இனத் தலைவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்கப் போராடிய போராட்டங்களை நினைவுபடுத்துகின்ற வகையில் ஒவ்வொரு மேடையிலும் கி.வீரமணி அவர்கள் பேசும்போதும் - பெரியார், அண்ணா, நீதிக்கட்சி, திராவிடர் கட்சியை நினைவு கூர்கின்றவகையில் உரையாற்றுவார்கள். அந்த வகையில் 27.02.2012 அன்று திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழாவில் பேசிய உரையை மனு தர்மத்திற்கும் மனித தர்மத்திற்குமிடையே மிகப்பெரும் போராட்டம் என்ற தலைப்பிட்டு பஞ்சமனுக்குப் பொது இடங்களில் அளிக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டுகின்றார்.

கீழ்நிலையில் தள்ளப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் உயர்பதவிக்குச் சென்றாலும் அவனை இழிவானவனாகப் பார்க்கும் ஆதிக்கப்பார்வை நிலைகளையும் சிறப்பாக உணர்வுபொங்கச் சுட்டிக்காட்டுகின்றார்.

மார்ச் 1 அன்று தி-.மு.க. இளைஞரணியினர் கொண்டாடிய இளைஞர் எழுச்சி நாளில் பேசிய உரை 06.03.2012 அன்று சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறையில் பேசிய உரைகள் அனைத்தும் பழமையான சமூக இன்னல்களை சுட்டுவதாகவும் அவற்றை ஒழித்த திராவிட இனத் தலைவர்கள் பற்றி எடுத்தியம்புவதாகவும் இந்நூல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலைப் படித்தால் திராவிடர் இயக்கம் பற்றிய செய்திகளைத் தெளிவாக்கிக் கொள்ள _ திராவிட சமூகமே படித்துப் பயன்பெற வேண்டிய ஒரு நூலாக இந்நூல் அமைகின்றது.

- ம. புகழேந்திர சோழன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி

தமிழ் ஓவியா said...

பக்தியின் பலன் - ஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்


தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான். வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுதபூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.

மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுதபூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன்.

ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவிவிட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட் டான் என்று சொன்னார்கள்.

மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான். வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும் அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.

வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின. இதனால்தானே பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கத் துரைத்தனம் கெட்டது என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.

ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?

தமிழ் ஓவியா said...

சுயசிந்தனையை முடக்குபவை எவை??


ஒவ்வொரு மனிதனும் சுயமாக சிந்திக்கவும், சிந்தனைகளைச் செயல்படுத்தவும் ஆற்றல் படைத்தவன். எனினும், பெரும்பான்மை மக்கள் தங்களது சிந்தனைத் திறனைப் பல முக்கியமான விஷயங்களில் பயன்படுத்துவதில்லை. தங்களால் ஆய்வுக்கு உட்படுத்தாத கடவுள், மதம் போன்ற விஷயங்கள் தங்களது வாழ்வை வெகுவாகப் பாதிப்பதை உணராமலிருக்கிறார்கள். அதன் காரணமாக, மக்கள் மனங்களில்

மூடநம்பிக்கைகள் ஆட்சி செய்கின்றன. அறிவிற்குப் பொருந்தாத பல சடங்குகள், சம்பிரதாயங்கள் மனித சமுதாயத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. மதிப்புமிக்க மனித சக்தியும், இயற்கைச் செல்வங்களும் வீணடிக்கப்படுகின்றன.



அர்த்தமற்ற இலக்குகளுக்கான மக்கள் வாழ்வு பாழாகின்றது. ஆகவே, இது மனித சமுதாயத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மக்களுடைய சிந்தனைத் திறனை முடக்கும் காரணிகளைக் கண்டறிவோம்.

பொதுவாக மக்கள் காலங்காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளை, பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து பிரச்சனைகளின்றி வாழவே விரும்புகிறார்கள். தங்களுக்குப் பழக்கமான பழைய பாதைகளே ஆபத்தற்றவை என்று நினைக்கிறார்கள். அவற்றையே பின்பற்றுகிறார்கள். எவற்றிலும் மாற்றங்கள் செய்யப் பயப்படுகிறார்கள். இம்மனநிலை சுயசிந்தனையை முடக்கும் ஒரு சக்தியாக இருக்கிறது.

சுயசிந்தனையை முடக்கும் மற்றொரு சக்தியாக சம்பிரதாயங்கள் இருக்கின்றன. எவ்வாறெனில், தனி நபர்கள் பல்வேறு நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும், சுற்றுப்புற மக்களிடமிருந்தும் கிரகித்துக் கொள்கிறார்கள். அவர்கள் காலப்போக்கில் பல விழுமியங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாவலர்களாக மாறிவிடுகிறார்கள். அச்சம்பிரதாயங்களும், பழக்க வழக்கங்களும் மனிதர்களை மனதளவில் அடிமைகளாக்கி விடுகின்றன. ஆய்வு மனப்பான்மையை மழுங்கடித்து விடுகின்றன.

நவீன போக்குவரத்து வசதிகளும், தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் பல்வேறு கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளும் நல்வாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றன. ஊடகங்களின், இணையத்தின் பங்களிப்பு மிகப் பெரியது. இத்துடன் இலட்சக்கணக்கான மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். மேலும், தற்சமயம் அதிகமான மக்கள் தொகையினர் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். மாறுபட்ட கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்களுடன் பழகி வாழ்கிறார்கள். இவை மக்கள் மனதில் நல்ல மாற்றங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட நல்ல மனமாற்றங்கள் எதிர்பார்த்த அளவிற்கு உலகில் ஏற்படவில்லை. பழமையைக் கட்டிக் காக்கும் மனநிலைதான் பரவலாகி மேலோங்கி நிற்கிறது. முன்னோர்களிடமிருந்து சுவீகரித்த பல்வேறு நம்பிக்கைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள்.

இப்பழமை காக்கும் மனநிலை பரவலாக நிலவக் காரணங்கள் எவை? இதுபற்றி ஆராய்ந்தால், சமூகப் பிணைப்பு ஒரு காரணமாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறு கூட்டத்தின் அங்கத்தி னராக அடையாளப்படுத்திக் கொள் கிறான். அதன்மூலம் சமூகப் பாதுகாப்பை உணர்கிறான். சக சமூக அங்கத்தினர் களுடன் நட்புடன் உறவு கொண்டிருக்க விரும்புகிறான். அந்த உணர்வு மனிதனை ஒரு சிறு வட்டத்திற்குள் அடைத்து விடுகிறது. சக மனிதர்கள் விரும்பாத காரியத்தைச் செய்யும் தைரியத்தை இழந்து விடுகிறான். சக மனிதர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி மந்தை உணர்வுக்கு அடிமையாகி விடுகிறான்.

மந்தை மனப்பான்மை மனிதர்களின் மூளைக்கு விலங்கு போட்டு மனிதனது தனித்துவம் வளர்ச்சியுறாமல் செய்து விடுகிறது. தாங்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் தவறானவை என்று உணர்ந்தும் கூட அவைகளை வெளி யிடும் துணிவை இழக்கிறார்கள். எவை சரியானவை, நியாயமானவை என்பதைத் துணிந்து வெளியிடுவதற்கான தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் மெய்காண்பவனாக இருத்தல் வேண்டும். மெய் காண முற்படாமல், வழி வழியாக வரும் விழுமியங்களையும், பழக்க வழக்கங்களையும் அப்படியே பின்பற்றுவது நாகரிகத்தின் நற்பண்பு அன்று. அவை அடிமைப் பண்பாகும். எதையும் ஆய்வு செய்யாமல் பின்பற்றுதல் நல் ஒழுக்கம் அன்று. எதையும் அறிவுப் பூர்வமாக சிந்தித்து, அதன் முடிவிற்கேற்ப விழுமியங்களையும், பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்வதே உண்மையான ஒழுக்கமாகும். சிந்திக்க மறுப்பதும், சுயசிந்தனையின் மூலமாகச் சரியென்று உணர்ந்ததை வெளியிடத் தயங்கு வதும் கோழைத்தன மாகும். ஆய்வு முடிவுகளின்படி செயல்படத் தயங்கு வதும், செயல்படா மலிருப்பதும் நேர்மை யின்மையாகும்.

மனிதனின் சிந்தனையைக் கட்டுப்படுத்தும் முக்கிய சக்தியாக இருப்பது கடவுள் பற்றிய கருத்து. வெவ்வேறு சமுதாயங்கள் கடவுளுக்கு வெவ்வேறு குணாதிச யங்களை, பண்பு களைக் கற்பிக்கின்றன. அதுபோல, சமுதாயத் திற்கு சமுதாயம் வழிபாட்டுச் சடங்குகள், முறைகள் மாறுபடுகின்றன. ஆனால், அனைவரும் கடவுள் என்பவர் தற்புகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் விரும்புவதாகக் காட்டுகிறார்கள். அத்துடன் கடவுள் மனிதனின் தன்னல மறுத்தலையும், பலியிடுதலையும், சடங்குகளையும் விரும்பி ஏற்று அவர்களுக்கு நற்பயன்களை அளிப்பதாகச் சொல்கிறார்கள். இம்மாதிரிக் கற்பனைக் கதைகள் மக்கள் மனதில் குழப்பம் விளைவிக்கின்றன. எதையும் சந்தேகிக்கத் தூண்டுகின்றன. கடவுள் பற்றிய கருத்தையே மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஆனால், மதங்களும் புரோகிதர்களும் அர்ச்சகர்களும் மக்களை கடவுள் என்ற கருத்து பற்றி சிந்திக்க விடுவதில்லை. கடவுள் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்த்து மனிதர்களுக்கு நல்வாழ்வு இவ்வுலகில் அளிப்பார் என்றும், மோட்சத்தில் இடமளிப்பார் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். செய்த பாவங்களுக்கு எளிய பரிகாரங்களைச் சொல்கிறார்கள். மேலும் கடவுளையும், மதத்தையும் சந்தேகித்தால் நரகம் கிடைத்துவிடும் என்று பயமுறுத்துகிறார்கள். இப்பிரச்சாரங்கள் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடித்து விடுகின்றன. உண்மையான மதத்தின் இலக்கு மனிதனை ஊக்கப்படுத்தி செயல்படவைப்பதுதான் மதத்தின் நோக்கமாக இருக்கவேண்டும். மனித சமுதாயத்தின் முன்னேற்றம் இயற்கையை அறிவுப் பூர்வமாக ஆராய்ந்து அதைக் கட்டுப்படுத்தியதால்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதனை சரித்திரம் விளக்குகிறது. மனிதர்களின் வாழ்க்கைத் தரம் மனிதர்களது அறிவுப் பூர்வமான ஆய்வுகளால், உழைப்பால் உயர்ந்திருக்கிறது. பிரார்த்தனைகள் சடங்குகள், பலி யாகங்கள் செய்ததால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் தெய்வீகத்தின் பங்களிப்பு எதுவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கடவுளின் செயல்பாடுகள் என்று தவறாக விமர்சனம் செய்வது மனிதன் விதியை நம்பும்படி செய்து விடுகிறது. மனிதனிடம் முயற்சியின்மையைப் புகுத்தி விடுகிறது. அறிவியல் தாகத்தைத் தகர்த்து விடுகிறது. சுயசிந்தனையை முடக்கி விடுகிறது.

சுய சிந்தனையை முடக்கிவிடும் இன்னொரு காரணி வாழ்க்கை முறைகளை மாற்றி அமைக்கத் தயங்கும் பய உணர்வாகும். தத்துவஞானிகள் மெய்ம்மை காண்பது கடினமான செயலல்ல; மெய்ம்மையைக் கண்ட பின்னர் அதைக் கடைப்பிடிக்காமல் ஓடாமலிருப்பதுதான் கடினமான செயல் என்கிறார்கள்.

மெய் என்பது அறியாமை என்ற இருளில் ஏற்றப்படும் ஒளி விளக்காகும். மெய் காண்பது ஆய்வு, பரிசோதனை, சான்று, காரணம் என்பவற்றின் மூலமாக உணரப்படுகிறது. மெய் காணுதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய பிரார்த்தனை என்ற பொருளையே மெய் காணும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம். அது சம்பந்தமாக தர்க்க ரீதியாகவும், காரணத்தின் அடிப்படையிலும் பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்குப் பதில்கள் பெற வேண்டும். பெற்ற பதில்கள் மூலம் அறிவு பூர்வமான முடிவு எடுப்பதே மெய் காண்பதாகும். பிரார்த்தனை பற்றி மெய் காண முற்படும்போது இரண்டு அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன. மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி பிரார்த்தனைகளை ஏற்று, அதற்குப் பிரதிபலனாக ஏதாவது செய்கிறதா என்பது முதல் கேள்வி. தெய்வீக சக்தி விடையளிக்கிறதென்றால், அதற்குச் சான்று உள்ளதா என்பது இரண்டாவது கேள்வியாகும். சரித்திரச் சான்றுகளின்படி கடவுள் பிரார்த்தனைகளுக்கு எந்தவித விடையளிக்கவுமில்லை, பலனையும் அளிக்கவில்லை. இது சம்பந்தமாக அமெரிக்க நாட்டின் பகுத்தறிவுவாதி இங்கர்சால் (1833_1899) கூறும்போது தெய்வீக சக்தி பசித்தவனுக்கு உணவளிக்கவில்லை; ஏழைகளுக்கு உடை கொடுக்கவில்லை, எந்த அடிமையையும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கவில்லை, அடிமைக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும் அளிக்கவில்லை என்று கூறுகிறார். மனித சமுதாயத்தின் முன்னேற்றம் மனித முயற்சியாலும், செயல்பாடுகள்மூலமும்தான் ஏற்பட்டது. இச்சான்றுகள் தெய்வீக சக்தி பிரார்த்தனைகளுக்கு பலன் அளிப்பதில்லை என்பதனை உறுதி செய்கிறது. சமுதாயத்தில் விடுதலையும், சுதந்திரமும் நிலவும்போதுதான் மெய்காணும் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. மக்கள் அறிவியல் ஆர்வத்தோடும், மெய் காணும் தேடல் உணர்வோடும் செயல்படும்போதுதான் மெய்ம்மை உணர்தல் சிறப்பாக நடைபெறுகின்றன. இவ்வாறு கருத்துச் சுதந்திரமும், மெய் காணும் தேடல் உணர்வும் முக்கிய பங்களிப்பை வகிக்கும்போது, இவைகள் மனித சமுதாயத்தில் சிறப்பான நிலையில் நிலவவில்லை.

தமிழ் ஓவியா said...

இன்றைய நிலையில், மக்கள் சுதந்திரமாகவும் இல்லை. சுயசிந்தனையாளர்களாகவும் இல்லை. பெரும்பான்மை மக்கள் மனதில் மத நம்பிக்கைகளும், தப்பெண்ணங்களும், வெறுப்புணர்ச்சிகளும் நிரம்பியிருக்கின்றன. சுதந்திரமாக இருக்கிறோம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்றுஅறிஞர் கோதே விமர்சனம் செய்கிறார். உலகில் வாழும் பெரும்பான்மை மக்கள் மதம், இனம், சாதி, தேசீயம் என்பவற்றின் பெயரால் பல்வேறு தப்பெண்ணங்களையும், வெறுப்புணர் வையும் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனங்கள் சுதந்திரமாக இல்லை. அவர்கள் மூளை கட்டுண்டு கிடக்கிறது. இந்நிலையைப் பார்த்துத்தான் மக்கள் சுதந்திரமாகப் பிறக்கின்றார்கள். ஆனால் எங்கும் சங்கிலிகளால் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்று பிரான்சு நாட்டு அறிஞர் ரூசோ (1712_1770) விமர்சனம் செய்தார். இது இக்காலத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.

நம்முடைய பகுத்தறியும் திறனை எல்லாக் காரியங்களுக்கும் உபயோகப்படுத்த வேண்டும். சிந்தனைகள்தான் இயற்கையைப் புரிந்து கொள்ளவும், கட்டுப்படுத்தி சமுதாய நலனுக்குப் பயன்படுத்தவும் உதவுகின்றன. மேலும், மனித சக்திகளும் இயற்கைக் செல்வங்களும் பயனற்ற காரியங்களில் வீணாவதைத் தடுக்க உதவுகின்றன. மெய் காண்பதின் முக்கியத்துவத்தை விமர்சனம் செய்யும் அமெரிக்கப் பகுத்தறிவுவாதி இங்கர்சால் (1833_1899) தவறுகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்தியில் ஒளிர்கிற மெய்ம்மையைக் கண்டுபிடிப்பது மிகவும் உன்னதமான செயலாகும். அதைவிட சிறந்தது எதுவுமில்லை என்கிறார்.

மெய்ம்மையைக் கண்டவுடன், அதைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும். தனிநபரின் பொறுப்பு சுயசிந்தனையாளராக இருப்பதுதான். அதன் அர்த்தம் எல்லாத் துறைகளிலும் சிந்தனையை உபயோகப்படுத்துவதாகும். அதனால்தான், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம் நாட்டின் தத்துவ ஞானி போத்தீயஸ் ஒவ்வொரு தனி மனிதனும், சுய சிந்தனையும் பிரிக்க முடியாத பொருள் என்று கூறுகிறார். சுயசிந்தனையின் முக்கியத்துவத்தை இங்கர்சால் மிகவும் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது அவர் கூறுகிறார், மனிதன் சிந்திக்க வேண்டும்; எல்லா புலனுணர்வுகளையும் உபயோகப்படுத்த வேண்டும். எதையும் பரிசோதிக்க வேண்டும். எதையும் ஆய்வு செய்ய வேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் கீழான மனிதனாவான். சிந்திக்காதவன் அவனுக்கே விரோதியாவான். சிந்திக்க பயப்படுபவன் மூடநம்பிக்கையின் அடிமை என்கிறார். இதே கருத்தைத்தான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் சொன்னார்கள்.

மனிதர்களது ஊசலாடும் மனதைக் கண்டு கவுதம புத்தர் கீழ்க்கண்டவாறு புத்திமதி கூறுகிறார். மனிதர்கள் தங்களுடைய மனங்களை அங்கிங்கும் அலையாதபடி நெறிப்படுத்த வேண்டும். நன்கு நெறிப்படுத்தப்பட்ட மனம் என்பது உறவினரைவிட, தந்தையையும் தாயையும் விடச் சிறந்த துணையாக இருக்கும். ஏனெனில், அது தூய சிந்தனைகளை சிந்திக்கும். எவருக்கும் தீமை பயக்காது என்கிறார். ஆகவே, மக்கள் மனதைப் பண்படுத்துவதே சிறந்த தொண்டாகும். கடவுளைத் திருப்திப்படுத்த நாம் செய்ய வேண்டியவை எதுவுமில்லை என்ற கருத்தைப் பரப்பி, அறிவியல் ஆய்வு மனப் பான்மையை வளர்த்தெடுப்பதே சுயசிந்தனை வளர்ந் தோங்க நாம் செய்ய வேண்டிய காரியமாகும்.

- ந.ஆனந்தம்

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ் சோசலிசம் என்னவாயிற்று?


பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், மத்தியில் உள்ள மன்மோகன்சிங் அரசு, பல்வேறு மக்கள் நலவிரோதத் திட்டங்களை தனது கொள்கை முடிவுகளாக அறிவித்து வருகிறது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலாளிகளை கைலாகு கொடுத்து வரவேற்கும் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்நிய மூலதன முதலீடு (FDI) என்பது பன்னாட்டுத் தொழில் துறை திமிங்கிலங்களின் பச்சாதாபப்படாத சுரண்டல்களுக்குக் கதவு திறந்து விடுவது என்று கூட்டணியில் உள்ள கட்சிகளே சுட்டிக் காட்டியும் அதுபற்றி மத்திய அரசு கேளாக் காதுடன் செயல்படுகிறது.

இப்போது ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போன்று, அதற்கு மேலும் அடுத்த கட்டமாக, இன்ஷூரன்ஸ் - காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறை - இவை இரண்டிலும் அந்நிய முதலாளிகளை வரவழைக்க ஆயத்தமாவோம் என்று அறிவித்துள்ளது!

இன்ஷூரன்ஸ் துறையில் 26 சதவிகிதமான வெளிநாட்டு முதலீடுகள் பங்கு இனி 49 சதவிகிதமாக உயரும் என முடிவு செய்து பச்சைக் கொடி காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை - ஓய்வூதியத் துறையிலும் வெளிநாட்டு மூலதனக் கம்பெனிகளுக்குக் கதவு திறக்கப்பட்டுள்ளதாகும்.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைக்கு முற்றிலும் மாறானது இது. உள்நாட்டிலேயே தேவையான முதலீட்டைத் திரட்டலாம் என்பதே அதன் யோசனை.
சில புள்ளி விவரங்கள் மத்திய ஆட்சியின் முடிவை நியாயப்படுத்துவதாக இல்லை.

எடுத்துக்காட்டாக,கடந்த 10 ஆண்டுகளில் 6300 கோடி ரூபாய்கள் வெளிநாட்டு அந்நிய முதலீடாக வந்துள்ளது; ஆனால் எல்.அய்.சி. மட்டும் ரூ.7000 கோடி ஈவுத் தொகை வழங்கியுள்ளது.

11ஆவது அய்ந்தாண்டு திட்டத்திற்கு 7 லட்சத்து 415 கோடி ரூபாய் வழங்கியுள்ளது!

பொதுத்துறை நிறுவனத்தை முற்றாக தனியார் மயமாக்குவதற்குரிய முதற்கட்ட முயற்சியே இது!

1.83 கோடி பாலிசிதாரர்களைக் கொண்ட எல்.அய்.சி. 99 விழுக்காடு பாலிசிதாரர்களுக்கு முறையாக பணத்தை வழங்கியுள்ளது. ஆனால் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் பாலிசிதாரர்களில் 60 முதல் 80 விழுக்காடு மட்டுமே வழங்கி வருகின்றன.

இது எதைக் காட்டுகிறது? பொதுத்துறை நிறுவனம், தனியார் துறையைவிட சிறப்பாக திறமையாகச் செயல்படுகிறது என்பதைத்தானே!

நமது அரசியல் சட்டத்தில் உள்ள சோசலிசம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா?

ஓய்வூதியத்திலும் இந்த ஒட்டகத்தை நுழைய விடுவது மிகப் பெரிய மக்கள் விரோதம். ஓய்வூதியதாரர்களின் எதிர்காலம் இருண்டுவிடக் கூடிய ஆபத்து அறவே இல்லை என்று மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க முடியுமா?

தற்போதுள்ள அமைப்பில் - ஓய்வூதியத் திட்டம் 1995இல் ஒரு ஊழியர் இறந்தால் - அது ஆயுள் முழுமைக்கானது என்ற காரணத்தால், அவரின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் அல்லது 100 மாதங்களுக்கான மொத்த ஓய்வூதியம் கொடுக்கப்படும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.

இதே போன்று தனியார் நிறுவனங்கள் செயல்படுத்துமா? இடையில் மூடப்பட்டால் (என்ரான் போன்ற நிறுவனங்கள் முன்மாதிரி) இன்சால்வென்ட் ஆனால் யாரைப் போய் கேட்க முடியும்? அரசு உரிமையாளர் என்றால் நிலை அப்படி அல்லவே!

இன்னொரு திடுக்கிடும் புள்ளி விவரம் இந்த முடிவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது!

தற்போது இந்திய தொழிலாளர் வைப்பு நிதி செயல்படாத கணக்குகள் உள்ள தொகை ரூ.22,636 கோடி. (சந்தா செலுத்தாமை, மூடப்பட்ட நிறுவனங்கள் போன்றவைகளால்)

அதுபோல கேட்பாரில்லாத நிதி ரூ.4000 கோடி (நாலாயிரம் கோடி).

இந்நிலையில் எதற்கு அந்நிய முதலீடுகள் மேலும் உயர்த்தப்பட வேண்டும்?

பிரிட்டிஷ்காரனின் சுரண்டல் ஒழிக என்று கூறியவர்கள் ஆளும் காங்கிரசார்!

அந்நிய துணிகள் பகிஷ்காரம் என்றுகூறி பதவிக்கு வந்தவர்கள்!

“Be Indian, Buy Indian”,

இந்தியனாக இரு; இந்திய சாமான்களையே வாங்கு என்றெல்லாம் நெருக்கடி காலத்தில் தத்துவ முழக்கம் இட்டவர்கள் இப்படி தாறுமாறாக பன்னாட்டு முதலாளிகள் சுரண்டலுக்கு பகிரங்க அனுமதியும் அழைப்பும் தரலாமா?

இவை எல்லாவற்றைவிட, இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஆளும் கூட்டணி - (இடையில் கவிழ வாய்ப்பில்லை என்பதை ஒப்புக் கொண்டே) வாக்கு வங்கி பற்றியும், ஏழை, எளிய, பாமர, விவசாய, வியாபாரிகள் கண்ணோட்டம் ஆதரவு பற்றியும் சிந்திக்க வேண்டாமா?
மதவெறி ஆட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர இப்படிப்பட்ட முடிவுகள் மூலம், தங்களை அறியாமலேயே வழிவகுக்கலாமா?

மான்டேக்சிங் அலுவாலியாக்களும், ரங்கராஜ அய்யங்கார்களும், கெல்கர்களும் இதர ஜோல்னாப்பை அறிவு ஜீவிகளுமா வந்து வாக்கு கேட்கப் போகிறார்கள்? சோனியா காந்தியும், மன்மோகன்சிங்கும்தான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அரசியல் சாதுர்யம் கூட இல்லையே!

வேதனை! வேதனை!!

கி.வீரமணி
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


திருச்சி மலைக்கோட்டை கோயில் நுழைவுக்கு ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் கே.வி.ராமனாதன், டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் அந்த மலைப் படிக்கட்டுகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

பார்ப்பன எதிர்ப்பு ஏன்?


பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

தமிழ் ஓவியா said...

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன். -பெரியார்

Anonymous said...

தமிழ்மணம் என்னை மதம் சார் பதிவிட வேண்டாம் என்றது, ஆனால் பலரின் பதிவுகளுக்கு அனுமதிக் கொடுத்துள்ளது. அது ஏன்