Search This Blog

17.8.12

திராவிட இயக்க வரலாறு

திராவிட இயக்க வரலாறு
திராவிட இயக்க வரலாறு (தொகுதி -1) எனும் நூல் திரு. முரசொலிமாறன் அவர்களால் எழுதப்பட்ட அரிய கருவூலமாகும். அவர் மிசா கைதியாக சென்னை சிறையில் இருந்தபோது இந்த நூலுக்கான தொடக்கம் ஏற்பட்டது. 1975இல் தொடக்கம் பெற்று 1991இல்தான் நூலின் முதல் தொகுதி முற்றுப் பெற்றுள்ளது.

இந்நூல் முதல் தொகுதிதான்  - இரண்டாவது தொகுதி எழுதி முடிக்கப்படாதது  கெட்ட வாய்ப்பே! திராவிடர் இயக்கம் அடிப்படைச் சமுதாய மாற்றத்திற்கான புரட்சிச் சுக்கான் என்பதில் இரண்டு கருத்துக்களுக்கு இடம் இல்லை.


நீதிக்கட்சி ஆட்சி 20 ஆண்டுகள் சென்னை மாநிலத்தில் சிறப்பாக நடை பெற்றது. அவ்வாட்சியில் சமூகநீதி - தீண்டாமை ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு, இந்து அற நிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட முற்போக்கான சட்டங்கள் எல்லாம் இயற்றப்பட்டன. மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்றிருந்த பார்ப்பன சூழ்ச்சித் தடையைத் தகர்த்ததும் நீதிக்கட்சி ஆட்சிதான்.

ஆங்கிலேயர் மயமான மருத்துவத்துறையை இந்திய மயமாக்கிய சாதனைக்கும் உரியது நீதிக்கட்சியே!

காங்கிரசிலிருந்து கொண்டே வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றவர் ஈரோட்டு ஏந்தல் தந்தை பெரியார் அவர்களே!

சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள், விழிப்புணர்வுகள் திராவிடர் இயக்கத்தால் நிகழ்த்தப் பட்டவையே! இந்தச் சாதனைகள் மக்கள் மத்தியில் போய்ச் சேரவில்லை. பாடத் திட்டத்திலும் இடம் பெறவில்லை. 1938ஆம் ஆண்டிலேயே சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் இந்தியைத் திணித்தார். பள்ளிகளை இழுத்து மூடினார். அவற்றை எல்லாம் திராவிடர் இயக்கம் முறியடிக்கவில்லை என்றால், பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி உரிமை, வேலை வாய்ப்பு, பொது சிவில் உரிமைகளைக் கனவிலும்கூட நினைத்தே பார்த்திருக்க முடியாது.


நீதிக்கட்சி ஏன் தோன்றியது?  தோன்ற வேண்டிய அந்தக் காலச் சூழல், நிர்ப்பந்தம் என்ன? என்பவை எல்லாம் நம் மக்களுக்குத் தெரியாத பரிதாப நிலைதான். எல்லாம் செய்திருந்தும் போய்ச் சேர வேண்டி யவர்களுக்குப் போய்ச் சேரவில்லையே!

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா ஆண்டாகிய இவ்வாண்டில் முரசொலி மாறன் அவர்களால் எழுதி 1991இல் வெளியிடப்பட்ட முதல் பதிப்பு   - முரசொலிமாறன் அவர்களின் பிறந்த நாளாகிய இன்று (17.8.2012) முரசொலி வளாகத்தில் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது பெரிதும் வரவேற்கத் தகுந்ததாகும்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான மானமிகு கலைஞர் அவர்கள் வெளியிடுவதும், தாய்க் கழகத்தின் தலைவரான மானமிகு கி.வீரமணி அவர்கள் பெற்றுக் கொள்வதும்  சாலப் பொருத்தமாகும். இந்நூல் எழுதப்பட அப்பொழுது சென்னை சிறையில் மிசா கைதியாக உடனிருந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களின் உதவிகளையும் முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையிலும் இந்நூலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக் கொள்வது பொருத்தமானதே!

திராவிட இயக்க வரலாற்றில் இந்நாள் குறிப்பிடத்தக்க நாளாக ஏற்றுக் கொள்ளப்படும்.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பார்ப்பனப் பின்னணியுடன் எழுப்பப்படும் குரல்களின் மென்னியைப் பிடிக்க இந்நூல் ஒரு போர் ஆயுதமாக இருக்கப் போகிறது.

நிகழ்ச்சித் தொகுப்பைப் பொறுத்தவரை  இது ஒரு வரலாற்று நூல். அதே நேரம்; இந்த இயக்கத்தைப் பற்றிப் பரப்பப்பட்டு வருகிற விமர்சனங்கள் எப்படித் தவறானவை - உள்நோக்குக் கொண்டவை  என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக விளக்கங்களை ஆங்காங்கே தந்திருக்கிறேன் என்று நூலின் முன்னுரையில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார் நூல் ஆசிரியர் திரு. முரசொலி மாறன் அவர்கள்.

இந்த நூல் இன்று வெளியிடப்படுவதோடு நாடு தழுவிய அளவில் நூல் அறிமுக விழாக்கள் நடத்தப்பட வேண்டும், அப்பொழுதுதான் நூலின் அடக்கம் வேகமாகப் பரவக் கூடிய வாய்ப்புக் கிட்டும்.

35 தலைப்புகளில் வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. இந்நூலில் ஓர் இடம்   சுட்டிக் காட்டத் தகுந்தது. சட்டப் பேரவையில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

சட்டசபையில் இம்மசோதா கொண்டு வரப்பட்ட போது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழியக் கத்தினர். நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர். சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கிலத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார், கத்தினார். சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும் பலனளிக்கவில்லை என்று நினைத்து சமஸ் கிருதத்திலேயே பாடவும் செய்தார்

அந்த இயக்கம்தான் (நீதிக்கட்சியான திராவிட இயக்கம்தான்) நம் நாடு - இனம் - மொழி - மானம் - உணர்வெல்லாம் காத்திட திராவிடர்க்குத் தேனாய், நிலவாய் தீந்தமிழர்க்கோர் படைக்கலனாய் உருவாயிற்று!

சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே! வீரபாண்டியர் அரசேன் கவிழ்ந்தது? சோழர் உலவிய சோர்விலா நாட்டில் கோழைக் கொள்கை குவிந்ததெவ்விதம்? என வெடித்தன வினாக்கள் - அந்த வினாக்களுக்கு விடையாகத்தான் அரசியல் துறையிலே 1920இல் உதயமானது, பிராமணரல்லாதார் ஆட்சி என்ற முத்திரையோடு இந்நூல் முடிகிறது.


இன்னும் - ஏராளமான தகவல்கள் உண்டு, வாங்கிப் படியுங்கள்!


                --------------------"விடுதலை” தலையங்கம் 17-8-2012

14 comments:

தமிழ் ஓவியா said...


முரசொலிமாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூல் வெளியீடு தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்



திராவிட இயக்க வரலாறு நூல் வெளியீடு: திமுக தலைவர் கலைஞர் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். (17.8.2012 - சென்னை)

சென்னை, ஆக.17- முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாறு நூல் வெளியீட்டு விழா சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.

முரசொலிமாறன் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று காலை முரசொலி வளாகத்தில் உள்ள அவரின் சிலைக்கு திமுக தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக முன்னணி தோழர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற முன்னாள் - இந்நாள் உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமானவர்கள் மாலை அணிவித்தனர்.

நூல் வெளியீடு

முரசொலிமாறன் அவர்களின் திராவிட இயக்க வரலாறு இரண்டாம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது. திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட முதல் நூலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ரூபாய் அயந்நூறு கொடுத்துப் பெற்றுக் கொண்டார். தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினரும் கலைஞர்அவர்களிடமிருந்து நூலை பெற்றுக் கொண்டனர். ஏராளமான தோழர்கள் கலைஞரிடம் நேரடியாக பெற்றுக் கொண்டனர்.



தி.மு.க. தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் க. அன்பழகன் ஆகியோர் கையொப்பமிட்டு, தமிழர் தலைவரிடம் நூலை வழங்கினர்.

இந்நூல் 35 தலைப்புகள் 431 பக்கங்களைக் கொண்ட வரலாற்றுக் களஞ்சியமாகும் - விலை ரூ.200/-. மிசா கைதியாக சென்னையில் இருந்தபோது முரசொலிமாறன் அவர்களால் எழுதத் தொடங்கப்பட்டது. விடுதலையானபின் முரசொலி நாளேட்டிலும் தொடராக வெளிவந்து 1991இல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது. 1991-க்குப் பிறகு இரண்டாவது பதிப்பாக இன்று வெளியிடப்பட்டது.

திராவிடர் இயக்க நூற்றாண்டில் இந்நூல் வெளி வந்திருப்பது மிகவும் பொருத்தமும், தேவையுமாகும்.

கழகத் தலைவருடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னிப்பன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். 17-8-2012

தமிழ் ஓவியா said...

பாலிமர் தொலைக்காட்சியில் அனல் பறக்கும் விவாதத்தில் தமிழர் தலைவர்

19.8.2012 ஞாயிறு இரவு 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில் A.L. கண்ணனின் அனல் பறக்கும் விவாத அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சூடும் - சுவையும் நிறைந்த பதில்கள் ஒளிபரப்பப்படும்.

தமிழ் ஓவியா said...

சாதிக் கொடுமை!

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதினாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண சாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.

மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சிய சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: சாதிகளின பொய் தோற்றம் என்ற நூல், பக்கம் 108.

தமிழ் ஓவியா said...

ஈரேழு லோகமாம்!



கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்.

ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா? உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள்: அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர்வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.

-புரட்சிக் கவிஞர் (பாரதி தாசன் கதை: பக்கம்:100)

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!



பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண்டும். அய்யருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பையனுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...

அப்பா, ஒரு சந்தேகம்!



மகன்: ராஜ கோபுரத்தின் முன்னேயே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு

மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்துப் பார்க்கிறார்)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேட்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம் இவைகளை கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.

தமிழ் ஓவியா said...

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை' என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு; பல பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது. ''இருக் வேதத்தில் (இருக் வேதம் -457) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள்; மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும், முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம்- 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.''

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு -தொகுப்பு 1 -பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு- இந்திய வரலாறு-பக்கம் 118). ["விடுதலை'' அசுரன் மலர் 2006, பக்கம்- 16] ''உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம்'' என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம்-வால்மீகியும் கம்பரும், பக்கம் -15]

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் இரகு வம்சம் என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது;

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும், வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ரெ. பார்த்தசாரதி, சென்னை
18-8-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனை துளிகள்

சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.
ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.
துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.
கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.
சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

முதலில் படியுங்கள்!

திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் என்பவை அடிப்படையானவை - மேலோட்டமாக அதனைப் பார்க்கக் கூடாது. எடுத்துக் காட்டாக கல்லூரிப் படிப்பைப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வரவேண்டும் என்ற நிலை.

சென்னைக்கு வந்தால் எங்கே தங்கிப் படிப்பது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில். பார்ப்பனரல்லாதார் அங்குத் தங்கி உணவருந்த முடியாது. வேண்டுமென்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிட சங்க விடுதி (னுசயஎனையை ஹளளடிஉயைவடி ழடிளவநட) என்ற பெயரில் விடுதியைத் தொடங்கினார். (1916)

இன்றைக்கு அதன் அருமையை உணர முடியாமல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பாலை வனத்தில் ஒரு சோலைவனம் என்றே அதனைச் சொல்ல வேண்டும். டாக்டர் நடேசனார் அன்று தோற்றுவித்த திராவிடர் சங்கம், ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அழைத்துப் பாராட்டியது.

டாக்டர் டி.எம்.நாயர், ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் எல்லாம் அத்தகு கூட்டங்களில் பங்கு கொண்டு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டுவார்கள் - ஊக்கப்படுத்துவார்கள்.

டாக்டர் டி.எம். நாயர் ஒரு முறை மாணவர்களைப் பாராட்டியபோது கீழ்க்கண்ட உணர்ச்சி மிகு சொற்களைப் பயன்படுத்தினார்.

“Awake, Arise or Be For Ever Fallen”

விழித்துக் கொள்ளுங்கள்! எழுச்சி பெறுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர்!!!

என்பதுதான் அந்த எழுச்சியூட்டும் வீரம் செறிந்த வரிகள்.

டாக்டர் நடேசனார் அவர்களால் உண்டாக்கப்பட்ட விடுதியில் படித்த மாணவர்கள்தாம் - பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்த எஸ்.ஜி.மணவாள ராமானுஜம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள்.

திராவிடர் இயக்கம் என்ன செய்து சாதித்துக் கிழித்தது என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் பொறுப்பற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமானாலும் அந்தச் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து கொடுத்தது திராவிடர் இயக்கம். (சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் சாத்திர மயமாக்கி வைத்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.)

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் செய்த முதல் செயல் என்ன? 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால் அதன் தன்மை என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒரு காலத்தில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் மாணவர்களைத் தேர்வு செய்து சேர அனுமதிக்கும் அதிகாரம், உரிமைகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்குத் தான் உண்டு. அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள்தான் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்களாக இருந்ததால் பார்ப்பனர் அல்லாதார் கல்லூரி களுக்குள் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த ஆதிக்கக் கதவடைப்பிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர்களை மீட்டெடுக்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குக் குழுக்களை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது.

பிற்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அத்தகைய குழுக்களைக் கலைத்துவிட்டார்.

இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டக் களமாகத்தான் கல்வித் தளம் அமைந்திருந்தது.

முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாற்று நூலில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.

தமிழ்த் தேசியம் பேசுவோர் இது போன்ற நூல்களை முதலில் படிக்கட்டும்! 18-8-2012

தமிழ் ஓவியா said...

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி குமரி மாவட்ட கழகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்


குமரி மாவட்ட தோழர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி, ஆக.18- கன்னியாகுமரி மாவட் டத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், மத விழாக்களில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப் படும் அலங்கார வளைவு களை அனுமதிக்கக் கூடாது. அதுபோல மத விழாக்களில் வழிபாட் டுத்தலங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி களை அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,மாவட்ட அமைப்பளார் ஞா. பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் ம.தயா ளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட மாணவரணி அமைப் பாளர் இல.செந்தமிழ், மாவட்ட இளைஞரணி செயலாளர் த.சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ச.மணிமே கலை, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மு.சேகர், கழக தோழர்கள் கோட்டார் ச.ச.கருணாநிதி, கராத்தே மாஸ்டர் தலக்குளம் ஆ.சிவக்குமார், பள்ளம் லார்சன் பின்றோ, மந் தாரம்புதூர் மா.ஜான் மதி, கழக ஆதரவாளர் வி.இக்னேசியஸ் ஆகி யோர் 16.8.2012 அன்று காலை 11.30 மணிக்கு நாகர்கோவிலில் இருக் கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுத்த மனுவின் நகலை குமரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் போன்றோருக்கு நடவடிக்கைக்காக மாவட்ட செயலாளர் அனுப்பிவைத்துள்ளார். 18-8-2012

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இலட்சியங்கள்! - ஜி.டி.நாயுடு



பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை. அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன்.

இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...

பெரியார் மாளிகைக்குத் தீ வைக்க முயற்சி!



1953-இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் (உருவச்சிலை) உடைப்புப் போராட்டத்தினை நடத்திய நேரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்தும், அதன்வழி இயக்கத்தவர் பெற வேண்டிய பாடம் குறித்தும் 30.5.1953 விடுதலையில் முக்கிய அறிக்கையாக தலையங்கத்தில் அய்யா அவர்கள் எழுதியுள்ளதாவது:

... நான் 28ஆம் தேதி (28.5.1953) பிற்பகல் திருச்சிக்கு 55 மைல் தூரமுள்ள பாபநாசத்தை அடுத்த கோவில் தேவராயம்பேட்டைக்கு கழகக் கிளை திறப்பு விழாவிற்குச் சென்றுவிட்டு, அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு திருச்சிக்கு - என் ஜாகைக்கு வரும்போது கழகக் காம்பவுண்டிற்குள் சுமார் 1000பேர்கள் வரை தடிகள், கத்திகளுடன் இருந்து உற்சாகமாக ஆத்திரப் பேச்சுகள் பேசிக் கொண்டிருந்தனர். நான் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தினேன். ஆனால் - பெரியார் வாழ்க என்ற ஆரவாரத்திற்கிடையே என்னை வரவேற்றனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு வாலிபனை இழுத்துக் காட்டி, அவனிடமிருந்த நெருப்புப் பற்றவைக்கத் தக்க ஒரு நெருப்புப் பந்தத்தைக் காட்டினார்கள். விஷயம் என்னவென்றால் - என் மாளிகையை கொளுத்த ஒரு கூட்டம் திட்டமிட்டு வந்ததாகவும், அந்தச் செய்தி நம் மக்களுக்கு எட்டி, ஊர் திரண்டு வந்ததாகவும், அப்போது சிலர் ஓடிவிட்டதாகவும், இந்த வாலிபனை ஓடிப்பிடித்ததாகவும் சொல்லியவுடன், போலீசாருக்குத் தகவல் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார்கள். இது ஒரு பார்ப்பன மிராசுதார் ஏற்பாடு என்றும், சில பார்ப்பன வக்கீல்களின் மூளை வேலையென்றும் கூறி என்னை, உடனே மாடியில் படுத்துக் கொள்ளும்படி தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டனர்.

பின்னர் போலீஸ் வந்தவுடன், அவர்களை வைத்து எதிரிகள் ஓடிய வழியை, எதிர் காம்பவுண்டுக்குள் போய் பார்த்தனர். எதிர் காம்பவுண்டு சுவரின் உட்புறம் மற்றும் 2, 3 பந்தங்களும் ஒரு பாட்டில் பெட்ரோலும் இருக்கக் கண்டு எடுத்தார்கள். போலீசார் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு, இவைகளையும் எடுத்துப் போய் விட்டனர்.

தமிழ் ஓவியா said...

எது தம்பி வேண்டும்?



(ஒரு தோழர், இந்தக் கொள்கை சிறந்ததா, அந்தக் கொள்கை சிறந்ததா? எந்தக் கட்சி உயர்ந்தது? என்று பலப்பல பிரச்சினைகளைப் பற்றிய விளக்கம் விசாரிக்கும் முறையில் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கவிஞர், அக் கடிதத்தை கண்டார். தம்பி, ஏதேதோ பிரச்சினைகளை எண்ணித் தவிப்பதையும் தடுத்து, எது முக்கியமான பிரச்சினை என்பதையும் விளக்கி, அதன் மூலமாகவே தமது கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ஒரு கவிதைக் கடிதம் தீட்டி அனுப்பினார். அது இது.)
கொல்லையிலே ஒரு சிட்டு - நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை
சொல்லும் இவற்றினில் யாது - ஒரு துன்பம் இல்லாதது கூறு.
முல்லையிலே ஒரு வண்டு - பணமூட்டையின் மேல் ஒரு செல்வன்
இல்லை என்னாத நல்வாழ்வை நீ - இந்த இரண்டினில் விளக்கு
கோயில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு
தூயதுயாது சொல் தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது?
வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலைவார்க்குந் திருப்பணியாளன்
ஈய நினைத்திடும்காசை - நீ யாருக்குநல்குவாய் தம்பி.
ஊருக்கு உழைத்திடக் கேட்டார் - உனை யோகம்புரிந்திடச் சொன்னார்
யாருக்கு உடன்பட எண்ணம்நீ - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கார்விதைக்கும் தொழிலாளன் - நேர் கைலையை வேண்டிடும் சைவன்
யாரப்பனே நலம் செய்வோன் - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கற்சிலை செய்தகற்றச்சன் - இருகைதொழும் கோயிலின் வேலன்
நற்கலை ஈபவன் யாவன் - நீ நன்கு விளக்கிடு தம்பி.
முற்றும் இசைத் தொழிலாளி - வாய்மூடி அருள்செய்யும் கண்ணன்
நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு?
கடவுள் அணிந்திட்ட மாலை - பூங்காவிற் சிரிக்கின்ற முல்லை
உனதுபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது?
படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறுபண்ணையில் பொதுத்தன்மை எடைபோட்டு நீ கூறுவாயோ - இங்கு எது நன்மை எது தீமை, தம்பி.
நெய்தான் பிழையான் புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல்
வையத்தில் எது தம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி.
உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்யோகம் பார்க்கும் மைந்தன்
செய்யும் திருத்தொண்டு இரண்டில் - தம்பி, செம்மையாம் ஒன்றினைக் கூறு
நைகின்ற பெண்டாட்டி பிள்ளை - தெருநடுவிலே தள்ளாடும் கிழவன்
அய்யோ எனச் சொன்னபோது - நீ யாருக்கு முன் உதவவேண்டும்?
திராவிட நாடு - 14.4.1946, பக்கம்-1

தமிழ் ஓவியா said...

சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்
எழுத்துரு அளவு

1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.
2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.
3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.
4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.
5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.
6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.
7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.
8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.
தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947