Search This Blog

17.8.12

ஒரு தோழரின் கடிதத்திற்கு பெரியார் ஈ.வெ.ராமசாமி பதில்

ஒரு தோழரின் கடிதத்திற்கு ஈ.வெ.ராமசாமி பதில்

தோழரின் கடிதம்

"அன்புடைய ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கட்கு ஷேமம். ÷ஷேமத்துக்கு எழுதுங்கள். வெகு நாளாகக் கடிதப் போக்கு வரத்தில்லை. நானும் உங்களுக்குச் சில விஷயங்கள் பற்றிக் கடிதம் எழுத வேண்டும் என எண்ணியெண்ணி முடியாது போயிற்று.

நான் சொல்ல விரும்பும் விஷயம் சிலவுண்டு. உங்கள் இயக்கம் உயர்வானது. அவ்வியக்கம் பலப்பட்டு எல்லா வகுப்பாருடைய உதவியும் பெறவேண்டுமானால் நீங்கள் தற்காலம் அனுஷ்டித்து வரும் முறை சரியல்லவென்பது எனது உண்மையான எண்ணம். உங்கள் இயக்கத்தில் எனக்கு ஆர்வமுண்டு. 10, 15 வருஷ காலமாக இவ்வியக்கத்தின் கொள்கை காரணமாய் நான் இந்தியாவில் நடைபெறும் ஒரு இயக்கத்திலும் நேர்முகமாய்க் கலந்து கொள்ளாது இருந்து வந்திருக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு இயக்கத்திலும், சிற்சில நல்ல அம்சங்களிருக்கின்றன; பல கெட்ட அம்சங்களும் உண்டு.

சமதர்மக் கொள்கையை ருஷ்யாவில் கொண்டாடும் முறையில் இந்தியாவில் புகுத்துவது முடியாது. அவர்களது பழைய கொள்கைகளையே மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

நீங்கள் செய்துவரும் பிரசாரத்தில் தற்காலம் இந்தியாவில் இருக்கும் ஒரு இயக்கத்துடனும் சேர்ந்திருப்பது சரியல்ல. அப்பொழுது உங்கள் இயக்கம் நாளுக்கு நாள் பலஹீனப்படும்; விரோதிகளும், போலி சிநேகிதர்களும் ஏற்படுவார்கள்.

சமதர்மக் கொள்கைக்கு வேலை செய்ய முன்வருபவர்கள் யாதொரு விதமான வருமானத்தையும் எதிர்பார்த்தவர்களாயிருக்க முடியாது. ஏனெனில் இது ஏழைகளது இயக்கம்.

நமது நாட்டில் தோன்றியுள்ள காங்கிரஸ், ஜஸ்டிஸ், மற்றய இயக்கங்கள் எல்லாம் முதலாளிகளுடையவும் நிலச்சுவான்தார் களுடையவும் இயக்கமாகும். இவ்வியக்கத்தில் ஜஸ்டிஸ் இயக்கம் ஜாதி வித்தியாசம் பாராதது என்று எண்ணமுடியவில்லை. அதிலும் முதலியார், நாயக்கர் சண்டை இருக்கிறது. காங்கிரஸும் அப்படித்தான். நீங்கள் ஜஸ்டிஸ் கட்சி இயக்கத்தில் சென்னையில் சேர்ந்து பிராமணர், பிராமணர் அல்லாதார் பிரச்னையைக் கிளப்பிப் பேசினீர்கள். உங்கள் கொள்கைக்கு அப்பிரச்சினையே ஏது? அப்பிரச்சினையொன்றிருப்பதாக எண்ணியும் இருக்கக்கூடாது. அதைப்பற்றிப் பேசியுமிருக்கக் கூடாது. அவ்வாறு பேசியதிலிருந்து உங்கள் சமதர்மக் கொள்கையில் உங்களுக்குப் பூரண நம்பிக்கை இன்னம் ஏற்படவில்லையென்றோ அல்லது அதனை நீங்கள் அறிய வில்லையென்றோ என்போலுள்ளவர்கள் நினைக்க வேண்டியேற்படுகிறது.

நான் இவ்விதம் எழுதுவதால் என் பேரில் வருத்தமடைய மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. இப்பொழுது காங்கிரஸ் அசெம்பிளித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது. இவர்கள் சாதிக்கப் போவதொன்றுமில்லை. யாருக்குச் சௌகரியம் ஏற்பட வேண்டுமோ அவர்கட்கு ஏற்படப் போவதில்லை யென்பது எனது முடிவு. ஏன்? அது முதலாளிகளால், கருப்பு முதலாளிகளால் வெள்ளை முதலாளிகளுக்கு விரோதமாய் ஏற்பட்ட இயக்கமாய் விட்டது. அதனைத் திருத்தியமைக்க மாட்டாமல் மகாத்மாவும் அவ்வியக்கத்தை விட்டு கிராம புனருத்தாரணத் திட்டத்திற்கு ஆயத்தம் செய்கிறார். இவ்வியக்கத்தைக் கவனிக்கையில் உள்நாட்டு முதலாளிகளின் சௌகரியத்திற்காக ஏழைகள் உழைக்கவேண்டிய காலமும் வரும் எனத் தெரிகிறது. இவர்களினின்றும் தப்பிக்க வேண்டி மறுபடியும் ஏழைகள் போராட வேண்டி வரும்.

ஆகவே சமதர்மக் கொள்கையென்று அறியக்கூடாத முறையில் எல்லா இயக்கத்தவர்களும் நமக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் ஓர் திட்டம் செய்து வேலை யாரம்பிக்க வேண்டும். அதற்கான வேலையைத் தமிழ் ஜில்லாக்களில் ஆரம்பிப்பது அவசியம். நீங்கள் செய்து கொண்டு வரும் முறையில் மாறுதல் செய்ய வேண்டியது அவசியம் என்பதையாவது உணர்கிறீர்களா? நான் சொல்வது தவறுதல் எனக் கண்டால் அதையாவது தெரிவியுங்கள்.

பிறபின்....." என்று எழுதியிருக்கிறார்.

இதை அனுசரித்து இன்னும் சிலரிடமிருந்து பல கடிதங்களும் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லோருமே பார்ப்பன நண்பர்கள் ஆதலால் அவற்றிற்கெல்லாம் இந்த பதில் பயன் படுமென்று எண்ணுகிறேன்.

ஈ.வெ.ரா. பதில்

அன்புள்ள தோழர் அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் 24.11.34ந் தேதி கடிதம் கிடைத்தது. அதைக் கவனித்துப் பார்த்தேன். அதில் "எனது இயக்கத்தைப் பற்றி புகழ்ந்திருப்பது குறித்து மகிழ்கிறேன். ஆனால் நான் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்ததும் பிராமணர் அல்லாதார் என்கின்ற பிரச்சினையைக் கிளப்பினதும் தங்களுடைய சம்மதத்தைப் பெறவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் தாங்கள் சமதர்மத்தை மனப்பூர்வமாய் ஆதரிப்பவர்கள் என்றும் அதிலிருந்து தெரிகிறது.

நான் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினையை இன்று நேற்று அல்லாமல் இந்த 10 வருஷ காலமாகவே "கிளப்பி விட்டு" அதற்காக வேலை செய்து வருவது தாங்கள் அறிந்ததாகும்.

இந்த நாட்டில் பாமர மக்களுக்காகவோ ஏழை மக்களுக்காகவோ ஒருவன் வேலை செய்ய வேண்டுமானால் அவன் உண்மையான தொண்டனாய் இருப்பானானால், அவனுக்கு முதலில் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரச்னைதான் முன்நிற்கும். ஏனெனில் அப்பிரச்சினையை கிளப்பி விட்டு அதன் மீது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி உண்டாகச் செய்து விட்டால்தான் அத்தொண்டினது வேலை சிறிதாவது பயன்படக் கூடியதாகும்.

மற்றும் நமது பாமர மக்களின் குறைவு என்ன? அவர்களது தேவை என்ன? என்பதை ஒருவன் ஜாதி மத செல்வ அபிமானம் இல்லாமல் பார்ப்பானேயானால் அவனுடைய நேர்மையான நாட்டம் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினையில் தான் கொண்டு போய்விடும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். ஒரு சமயம் நான் பார்ப்பனரல்லாதாராய் இருக்கிறேன் என்பதினால் எனக்கு இந்த அபிப்பிராயம் தோன்றிற்றோ என்பது சம்சயத்துக்கு இடமுண்டாகக் கூடியதாய் இருந்தாலும் இருக்கலாம்.

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இன்றைய தினம் பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆட்களைப் பொருத்ததோ, அல்லது பார்ப்பனர் அல்லாதார் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆட்களையும் பொருத்ததோ அல்ல என்பதையும், ஆனால் அது இன்று ஒரு பார்ப்பனன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளுகின்றவன் அவன் உணர்ச்சியில், ஒழுக்கத்தில் எப்படிப்பட்டனவாய் இருந்தாலும் அதற்காக கவலைப்படாமல் தனக்கு என்ன என்ன உரிமை எதிர்பார்க்கிறான் என்ன என்ன உரிமை அனுபவிக்கிறான் என்பதையும், அதே மாதிரியாகவே தன்னை ஒரு பார்ப்பனரல்லாதான் என்று கருதிக் கொண்டிருப்பவனோ சொல்லப்படுகின்றவனோ ஆன ஒருவன், தனக்கு என்ன உரிமை உண்டு என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதோடு, வாழ்க்கையில் என்ன உரிமை அனுபவிக்கிறான் என்பதையும் மற்றும் பார்ப்பனன் என்று தன்னை சொல்லிக் கொள்ளுபவனால் அல்லாதவனுக்கு என்ன என்ன உரிமை நிலைமை உண்டு என்று எழுதி வைத்த ஆதாரத்தையும், அமுலில் இருக்கும் அனுபவத்தையும் பொருத்ததே ஒழிய வேறில்லை என்பதை தங்கள் ஞாபகத்துக்குக் கொண்டுவர நான் பணிவாய் ஆசைப்படுகின்றேன்.

ஆதலால் நான் பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினையில் எனது காலத்தைச் செலவழிப்பது குற்றம் என்று என்னால் கருத முடியவில்லை.

ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாய் இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனை தனக்கு சமமாகவும், மற்றொரு மனிதனுக்கு தான் சமமானவனென்றும் கருதும்படியான ஒரு உணர்ச்சியைக் கொள்ளவில்லையானால் அல்லது கொள்ளும்படி செய்யவில்லையானால் சமதர்மத்தைப்பற்றி பேசும் பேச்சு எதற்கு என்பதும், அதற்காக பாடுபடுவது எதற்கு என்பதும் என் சிறிய புத்திக்கு விளங்கவில்லை.

ஜஸ்டிஸ் கட்சியிலிருப்பவர்கள் அயோக்கியர்களாக இருக்கலாம். காங்கிரசில் இருப்பவர்கள் யோக்கியர்களாக இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகள் மனித சமூகத்தின் சமுதாய வாழ்க்கையைப் பொருத்தவரையிலும் சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனரல்லாதார் உரிமை என்பதை ஆதரிக்கின்றது என்பதும், அந்தப்படி ஆதரிக்கவில்லை என்றாலும் எதிர்க்கவில்லை என்பதும் எனது அபிப்பிராயம்.

அது போலவே காங்கிரசைப் பற்றியும், அதன் கொள்கைகள் மனித சமூகத்தைப் பொருத்த வரையிலும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே முதலாளிகளுடையவும், நிலச்சுவான்களுடையவும் நன்மைக்கு ஏற்பட்டது என்பதோடு பார்ப்பனீயத்துக்கும் (அதாவது நான் எந்த பார்ப்பனீயம் என்று மேலே சொன்னேனோ அதற்கும்) முழு ஆதரவும் பலத்தையும் கொடுத்து வருகின்றது அதற்கு ஆகவே பெரிதும் பாடுபடுகின்றது என்பதும் எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.

மேலும் தாங்கள் குறிப்பிட்டது போல் நான் சமதர்மக் கொள்கையை அறியாதவனாக இருந்தாலும் இருக்கலாம் அல்லது அறிந்திருந்தும் அதில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும் இருக்கலாம்.

ஆனால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயங்களில் உள்ள குறைகளும் ஏற்பட வேண்டிய மாறுதலும் என்ன என்று நான் கருதிக் கொண்டிருக்கின்றேனோ அவற்றில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு அவ்வெண்ணம் நாளுக்கு நாள் பலப்பட்டும் வருகின்றது.

நிற்க மற்றொரு விஷயம். ஏழை பணக்காரன் என்பதில் தாங்கள் கொண்டுள்ள கருத்துக்கும் நான் கொண்டுள்ள கருத்துக்கும் வித்தியாச மிருக்கும் போல் தோன்றுகின்றது. இந்தியாவில் ஏழை பணக்காரத் தன்மை ஜாதியைப் பொருத்தே அனேகமாய் 100க்கு 95 பங்காய் இருந்து வருகின்றது.

பணக்காரன் ஏழை என்பது இந்தியாவில் பெரிதும் பிறவியினால் ஏற்பட்ட ஜாதியினாலேயே ஏற்பட்டிருக்கிறது.

பணக்காரன் ஏழை என்பதற்கு நான் கொண்டிருக்கும் அருத்தம் பாடுபடாமல் சரீரத்தால் உழைக்காமல் வாழ்கின்றவன் பணக்காரன் என்றும் அதாவது சரீரத்தினால் உழைப்பது பாவம், அல்லது தோஷம் என்று எந்த எந்த ஜாதியானுக்கு உரிமை இருக்கின்றதோ அவனெல்லாம் செல்வவான் கூட்டத்தில் சேர்ந்தவன் என்றும், எவனெவன் உழைக்கக் கட்டுப்பட்டவன் என்றும் மற்றவனுக்கு உழைத்துப் போட வேண்டியவன் என்றும் உரிமையோடும் இருக்கிறானோ அவனையும், எவனெவன் உழைத்துக் கஷ்டப்பட்டும் போதிய சுகமில்லாமல் இருக்கிறானோ அவனையும் ஏழை என்றும் நான் கருதிக்கொண்டிருக்கின்றேன்.

இந்த விஷயத்தை வாக்கு சாமர்த்தியத்தாலும் அல்லது "இதை விட முக்கியமானது வேறு ஒரு காரியம்" என்று காட்டுவதாலும் எதிர்க்கலாம் என்றாலும் இதை மாற்ற வேண்டியதே பிரதானம் என்றும், சமதர்மத்தில் இதுவும் ஒரு கடுகளவாவது சேர்ந்ததாய் இருக்கலாம் என்றும் நான் கருதுகின்றேன்.

"அதோடு ருஷியாவில் இருக்கிற மாதிரியான சமதர்மக் கொள்கையை இங்கும் புகுத்த வேண்டும்" என்பது எனது கருத்தல்ல என்பதோடு அது சரியா தப்பா என்பதைப் பற்றியும் நான் இப்போது வாதம் செய்யவும் விரும்பவில்லை.

ஆதலால் நமது பிரச்னைகளில் ருஷியாவை மறந்துவிட்டு நம் கண்ணெதிரில் நமது அனுபவத்தில் உள்ள விஷயங்களையும் நமது புத்திக்கு சரி என்று தோன்றும் விஷயங்களையும் பற்றியே பேசுவோம் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

ஜஸ்டிஸ் கக்ஷியில் உள்ள முதலியார், நாயக்கர் சண்டை ஜாதியைப் பொருத்ததல்ல. ஆனால் உத்தியோகங்களுக்குப் பெரிய சம்பளமும் கௌரவமும் இருப்பதால் அதை பெருவதற்கான முயற்சிகள் நாயக்கர் முதலியார் செட்டியாராக இருந்து வருகின்றதே ஒழிய வேறில்லை.

பார்ப்பனர்களைப் பார்த்து அவர்களைப் பின் பற்றுகின்றது என்கின்ற முறையில் ஏதாவது சிறிது உயர்வு தாழ்வு கொண்டாடும் உணர்ச்சி இருந்தாலும் இருக்கலாம் என்றாலும் அதை வெளிப்படையாய் கவனிக்க வேண்டிய அளவு நான் காண முடியவில்லை. ஆதலால் அதைப்பற்றி நான் கஷ்டப்படவில்லை. ஏனெனில் உத்தியோக சம்பளம் குறைந்து அதற்கு சரியான பொருப்பும் நிர்ணயமும் ஏற்படும்போது இந்த சண்டைகள் மறைந்துவிடும் என்பது உறுதி. மற்ற பெயர்களுடன் இருக்கும் அரசியல் கக்ஷிகளும் மறைந்து விடும். ஆனால் பிரவிப் பெருமைக்காகவும் உரிமைக்காகவும் இருந்து வரும் சண்டைகள் அப்பெருமையும் உரிமையும் ஒழிந்தாலல்லது ஒரு நாளும் மறைந்து விடாது என்றே கருதுகின்றேன்.

அசம்பளி தேர்தல் விஷயத்தைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான் என்றாலும் இந்த வெற்றி காந்தியாருக்கு மிக மிக ஆனந்தமாய் விட்டது.

நிற்க காங்கிரசின் போக்கையோ, கொள்கையையோ திருத்தி அமைக்கமாட்டாமல் "மகாத்மா"வும் அதை விட்டு விலகி விட்டார் என்றும் அவர் கிராமப்புனருத்தாரண வேலைக்குப் போயிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் காங்கிரசிலிருந்தாலும் சரி கிராமப்புனருத்தாரணத்தில் இருந்தாலும் சரி அவர் ஜீவன் உள்ளவரையில் பார்ப்பனர்களுக்கோ மற்றும் வெள்ளை அல்லது கருப்பு முதலாளிகளுக்கோ இரும்புக் கூடு போன்ற காவலாளியாய் இருப்பாரே ஒழிய மற்றபடி அவரால் ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படப் போவதில்லை. அவரது கிராமப் புனருத்தாரணம் என்பது வருணாச்சிரமப் புனருத்தாரணம் தான் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்து பலனை கவனித்து வரும்படி கோருகிறேன்.

கிராமப் புனருத்தாரணத்தின் பேரால் அவர் செய்யப் போவதாய் வெளிப்படுத்தி இருக்கும் திட்டங்கள் ஏழை மக்களுக்கும் இழிவுபடுத்தப் பட்ட மக்களுக்கும் என்ன பலனைக் கொடுக்கக் கூடும் என்பது எனக்கு விளங்குவது போலவே தங்களுக்கும் விளங்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

முடிவாக தாங்கள் குறிப்பிட்டபடி நான் செய்துகொண்டு வரும் வேலை முறையில் மாறுதல் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். லக்ஷியத்தில் மாறுதலில்லாமல் வேலை முறையில் அடிக்கடி மாறுதல் செய்ய வேண்டியதும் செய்து வருவதும் குற்றமாகாது. லக்ஷியம்கூட சில சமயங்களில் திருத்தவேண்டிய அவசியத்துக்கு உட்பட்டு விடுகின்றதும் உண்டு. ஆனாலும் இப்போதைக்கு லக்ஷியத்தை மாற்ற வேண்டிய அவசியமிருப்பதாக தோன்றவில்லை. முறைகளில் தாங்கள் எழுதியபடியே கூடிய சீக்கிரம் மற்ற தோழர்கள் பலரையும் கலந்து ஏதாவது மாறுதல் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

எப்படி இருந்தாலும் காயம் அசைவில் இருக்கும்வரை ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டுமல்லவா? அந்த வேலையானது மற்றொருவருக்கு அடிமைப்பட்டதாகவோ அல்லது மற்றொருவருடைய அபிப்பிராயத்துக்கு அடிமைப்பட்டதாகவோ இல்லாமல் கூடியவரை தன் தன் புத்திக்கு சரியென்று தோன்றிய லக்ஷியத்துடன் நடந்து செல்ல வேண்டியதைத்தான் நான் சுயமரியாதையோடு கூடிய வாழ்வு என்று கருதி இருக்கிறேன். ஆதலால் நான் எனது உண்மை அபிப்பிராயங்களை தங்களுக்கு தெரிவித்திருக்கின்றேன் என்ற அளவிலாவது தாங்கள் நம்பிக்கை வைப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தங்கள் பக்ஷம் மறவாத தோழர்,

ஈ.வெ. ராமசாமி  ---:பகுத்தறிவு” கடிதம் 09.12.1934

10 comments:

தமிழ் ஓவியா said...

பாலிமர் தொலைக்காட்சியில் அனல் பறக்கும் விவாதத்தில் தமிழர் தலைவர்

19.8.2012 ஞாயிறு இரவு 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில் A.L. கண்ணனின் அனல் பறக்கும் விவாத அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சூடும் - சுவையும் நிறைந்த பதில்கள் ஒளிபரப்பப்படும்.

தமிழ் ஓவியா said...

ஈரேழு லோகமாம்!



கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்.

ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா? உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள்: அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர்வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.

-புரட்சிக் கவிஞர் (பாரதி தாசன் கதை: பக்கம்:100)

தமிழ் ஓவியா said...

அப்பா, ஒரு சந்தேகம்!



மகன்: ராஜ கோபுரத்தின் முன்னேயே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு

மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்துப் பார்க்கிறார்)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேட்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம் இவைகளை கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.

தமிழ் ஓவியா said...

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை' என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு; பல பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது. ''இருக் வேதத்தில் (இருக் வேதம் -457) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள்; மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும், முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம்- 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.''

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு -தொகுப்பு 1 -பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு- இந்திய வரலாறு-பக்கம் 118). ["விடுதலை'' அசுரன் மலர் 2006, பக்கம்- 16] ''உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம்'' என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம்-வால்மீகியும் கம்பரும், பக்கம் -15]

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் இரகு வம்சம் என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது;

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும், வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ரெ. பார்த்தசாரதி, சென்னை
18-8-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனை துளிகள்

சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.
ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.
துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.
கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.
சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

முதலில் படியுங்கள்!

திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் என்பவை அடிப்படையானவை - மேலோட்டமாக அதனைப் பார்க்கக் கூடாது. எடுத்துக் காட்டாக கல்லூரிப் படிப்பைப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வரவேண்டும் என்ற நிலை.

சென்னைக்கு வந்தால் எங்கே தங்கிப் படிப்பது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில். பார்ப்பனரல்லாதார் அங்குத் தங்கி உணவருந்த முடியாது. வேண்டுமென்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிட சங்க விடுதி (னுசயஎனையை ஹளளடிஉயைவடி ழடிளவநட) என்ற பெயரில் விடுதியைத் தொடங்கினார். (1916)

இன்றைக்கு அதன் அருமையை உணர முடியாமல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பாலை வனத்தில் ஒரு சோலைவனம் என்றே அதனைச் சொல்ல வேண்டும். டாக்டர் நடேசனார் அன்று தோற்றுவித்த திராவிடர் சங்கம், ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அழைத்துப் பாராட்டியது.

டாக்டர் டி.எம்.நாயர், ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் எல்லாம் அத்தகு கூட்டங்களில் பங்கு கொண்டு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டுவார்கள் - ஊக்கப்படுத்துவார்கள்.

டாக்டர் டி.எம். நாயர் ஒரு முறை மாணவர்களைப் பாராட்டியபோது கீழ்க்கண்ட உணர்ச்சி மிகு சொற்களைப் பயன்படுத்தினார்.

“Awake, Arise or Be For Ever Fallen”

விழித்துக் கொள்ளுங்கள்! எழுச்சி பெறுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர்!!!

என்பதுதான் அந்த எழுச்சியூட்டும் வீரம் செறிந்த வரிகள்.

டாக்டர் நடேசனார் அவர்களால் உண்டாக்கப்பட்ட விடுதியில் படித்த மாணவர்கள்தாம் - பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்த எஸ்.ஜி.மணவாள ராமானுஜம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள்.

திராவிடர் இயக்கம் என்ன செய்து சாதித்துக் கிழித்தது என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் பொறுப்பற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமானாலும் அந்தச் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து கொடுத்தது திராவிடர் இயக்கம். (சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் சாத்திர மயமாக்கி வைத்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.)

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் செய்த முதல் செயல் என்ன? 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால் அதன் தன்மை என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒரு காலத்தில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் மாணவர்களைத் தேர்வு செய்து சேர அனுமதிக்கும் அதிகாரம், உரிமைகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்குத் தான் உண்டு. அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள்தான் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்களாக இருந்ததால் பார்ப்பனர் அல்லாதார் கல்லூரி களுக்குள் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த ஆதிக்கக் கதவடைப்பிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர்களை மீட்டெடுக்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குக் குழுக்களை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது.

பிற்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அத்தகைய குழுக்களைக் கலைத்துவிட்டார்.

இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டக் களமாகத்தான் கல்வித் தளம் அமைந்திருந்தது.

முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாற்று நூலில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.

தமிழ்த் தேசியம் பேசுவோர் இது போன்ற நூல்களை முதலில் படிக்கட்டும்! 18-8-2012

தமிழ் ஓவியா said...

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி குமரி மாவட்ட கழகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்


குமரி மாவட்ட தோழர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி, ஆக.18- கன்னியாகுமரி மாவட் டத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், மத விழாக்களில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப் படும் அலங்கார வளைவு களை அனுமதிக்கக் கூடாது. அதுபோல மத விழாக்களில் வழிபாட் டுத்தலங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி களை அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,மாவட்ட அமைப்பளார் ஞா. பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் ம.தயா ளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட மாணவரணி அமைப் பாளர் இல.செந்தமிழ், மாவட்ட இளைஞரணி செயலாளர் த.சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ச.மணிமே கலை, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மு.சேகர், கழக தோழர்கள் கோட்டார் ச.ச.கருணாநிதி, கராத்தே மாஸ்டர் தலக்குளம் ஆ.சிவக்குமார், பள்ளம் லார்சன் பின்றோ, மந் தாரம்புதூர் மா.ஜான் மதி, கழக ஆதரவாளர் வி.இக்னேசியஸ் ஆகி யோர் 16.8.2012 அன்று காலை 11.30 மணிக்கு நாகர்கோவிலில் இருக் கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுத்த மனுவின் நகலை குமரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் போன்றோருக்கு நடவடிக்கைக்காக மாவட்ட செயலாளர் அனுப்பிவைத்துள்ளார். 18-8-2012

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இலட்சியங்கள்! - ஜி.டி.நாயுடு



பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை. அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன்.

இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...

பெரியார் மாளிகைக்குத் தீ வைக்க முயற்சி!



1953-இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் (உருவச்சிலை) உடைப்புப் போராட்டத்தினை நடத்திய நேரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்தும், அதன்வழி இயக்கத்தவர் பெற வேண்டிய பாடம் குறித்தும் 30.5.1953 விடுதலையில் முக்கிய அறிக்கையாக தலையங்கத்தில் அய்யா அவர்கள் எழுதியுள்ளதாவது:

... நான் 28ஆம் தேதி (28.5.1953) பிற்பகல் திருச்சிக்கு 55 மைல் தூரமுள்ள பாபநாசத்தை அடுத்த கோவில் தேவராயம்பேட்டைக்கு கழகக் கிளை திறப்பு விழாவிற்குச் சென்றுவிட்டு, அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு திருச்சிக்கு - என் ஜாகைக்கு வரும்போது கழகக் காம்பவுண்டிற்குள் சுமார் 1000பேர்கள் வரை தடிகள், கத்திகளுடன் இருந்து உற்சாகமாக ஆத்திரப் பேச்சுகள் பேசிக் கொண்டிருந்தனர். நான் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தினேன். ஆனால் - பெரியார் வாழ்க என்ற ஆரவாரத்திற்கிடையே என்னை வரவேற்றனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு வாலிபனை இழுத்துக் காட்டி, அவனிடமிருந்த நெருப்புப் பற்றவைக்கத் தக்க ஒரு நெருப்புப் பந்தத்தைக் காட்டினார்கள். விஷயம் என்னவென்றால் - என் மாளிகையை கொளுத்த ஒரு கூட்டம் திட்டமிட்டு வந்ததாகவும், அந்தச் செய்தி நம் மக்களுக்கு எட்டி, ஊர் திரண்டு வந்ததாகவும், அப்போது சிலர் ஓடிவிட்டதாகவும், இந்த வாலிபனை ஓடிப்பிடித்ததாகவும் சொல்லியவுடன், போலீசாருக்குத் தகவல் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார்கள். இது ஒரு பார்ப்பன மிராசுதார் ஏற்பாடு என்றும், சில பார்ப்பன வக்கீல்களின் மூளை வேலையென்றும் கூறி என்னை, உடனே மாடியில் படுத்துக் கொள்ளும்படி தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டனர்.

பின்னர் போலீஸ் வந்தவுடன், அவர்களை வைத்து எதிரிகள் ஓடிய வழியை, எதிர் காம்பவுண்டுக்குள் போய் பார்த்தனர். எதிர் காம்பவுண்டு சுவரின் உட்புறம் மற்றும் 2, 3 பந்தங்களும் ஒரு பாட்டில் பெட்ரோலும் இருக்கக் கண்டு எடுத்தார்கள். போலீசார் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு, இவைகளையும் எடுத்துப் போய் விட்டனர்.

தமிழ் ஓவியா said...

எது தம்பி வேண்டும்?



(ஒரு தோழர், இந்தக் கொள்கை சிறந்ததா, அந்தக் கொள்கை சிறந்ததா? எந்தக் கட்சி உயர்ந்தது? என்று பலப்பல பிரச்சினைகளைப் பற்றிய விளக்கம் விசாரிக்கும் முறையில் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கவிஞர், அக் கடிதத்தை கண்டார். தம்பி, ஏதேதோ பிரச்சினைகளை எண்ணித் தவிப்பதையும் தடுத்து, எது முக்கியமான பிரச்சினை என்பதையும் விளக்கி, அதன் மூலமாகவே தமது கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ஒரு கவிதைக் கடிதம் தீட்டி அனுப்பினார். அது இது.)
கொல்லையிலே ஒரு சிட்டு - நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை
சொல்லும் இவற்றினில் யாது - ஒரு துன்பம் இல்லாதது கூறு.
முல்லையிலே ஒரு வண்டு - பணமூட்டையின் மேல் ஒரு செல்வன்
இல்லை என்னாத நல்வாழ்வை நீ - இந்த இரண்டினில் விளக்கு
கோயில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு
தூயதுயாது சொல் தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது?
வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலைவார்க்குந் திருப்பணியாளன்
ஈய நினைத்திடும்காசை - நீ யாருக்குநல்குவாய் தம்பி.
ஊருக்கு உழைத்திடக் கேட்டார் - உனை யோகம்புரிந்திடச் சொன்னார்
யாருக்கு உடன்பட எண்ணம்நீ - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கார்விதைக்கும் தொழிலாளன் - நேர் கைலையை வேண்டிடும் சைவன்
யாரப்பனே நலம் செய்வோன் - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கற்சிலை செய்தகற்றச்சன் - இருகைதொழும் கோயிலின் வேலன்
நற்கலை ஈபவன் யாவன் - நீ நன்கு விளக்கிடு தம்பி.
முற்றும் இசைத் தொழிலாளி - வாய்மூடி அருள்செய்யும் கண்ணன்
நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு?
கடவுள் அணிந்திட்ட மாலை - பூங்காவிற் சிரிக்கின்ற முல்லை
உனதுபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது?
படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறுபண்ணையில் பொதுத்தன்மை எடைபோட்டு நீ கூறுவாயோ - இங்கு எது நன்மை எது தீமை, தம்பி.
நெய்தான் பிழையான் புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல்
வையத்தில் எது தம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி.
உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்யோகம் பார்க்கும் மைந்தன்
செய்யும் திருத்தொண்டு இரண்டில் - தம்பி, செம்மையாம் ஒன்றினைக் கூறு
நைகின்ற பெண்டாட்டி பிள்ளை - தெருநடுவிலே தள்ளாடும் கிழவன்
அய்யோ எனச் சொன்னபோது - நீ யாருக்கு முன் உதவவேண்டும்?
திராவிட நாடு - 14.4.1946, பக்கம்-1