Search This Blog

2.8.12

நலமுடன் இருக்கிறேன் - டெசோ மாநாட்டில் பங்கேற்பேன்!-கி.வீரமணி


நலமுடன் இருக்கிறேன் - டெசோ மாநாட்டில் பங்கேற்பேன்! வெள்ளம்போல் திரள்க - டெசோ மாநாட்டுக்கு! அமெரிக்காவிலிருந்து தமிழர் தலைவர் வேண்டுகோள்!

தக்க முறையில் மருத்துவ உதவி பெற்று நலம் பெற்று வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் நான் நலமுடன், புத்தாக்கத்துடன் தமிழகம் திரும்புவேன்; டெசோ மாநாடு நோக்கி வெள்ளம்போல் தமிழர்கள் திரளட்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

எனது அமெரிக்கப் பயணத்தை, கடந்த இரு வாரங்களுக்கு முன்பே முடித்து, தமிழ்நாடு திரும்பி, கழகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; டெசோ என்ற தமிழ் ஈழம் ஆதரவு அமைப்புச் சார்பில் ஏற்பாடு ஆகியிருக்கும் மாநாட்டுப் பணிகளில் - கருத்துரையாடல்களில் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுடன் பங்கேற்க வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தேன்.

எனது மருத்துவ சோதனை - நலம் பெற்று விட்டேன்!

சிகாகோவில் 1991 முதல் என்னைப் பரிசோதித்து ஆலோசனை வழங்கும் இதய நோய் மருத்துவரிடம் உடல் நல ஆய்வு செய்து கொண்டேன். அவரது ஆய்வு ஆலோசனைப் படியும் அறிவுரைப்படியும் இதயத் துடிப்பு சீராக்கும் சிகிச்சைக்கான கட்டாயம் ஏற்பட்டது.

இச்சிகிச்சைத்துறை அண்மைக்காலத்தில்தான் வளர்ந்துள்ள ஒரு முறை. ஆதலால் இதில் சிறந்த அனுபவமும் திறமையும் வாய்ந்த அமெரிக்க மருத்துவர்கள் பற்றி அவர் ஆராய்ந்து, பாஸ்டன் நகரில் ஹார்வேட் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியராகவும், அத்துறையில் வல்லுநராகவும் உள்ள டாக்டர் வில்லியம் ஜி. ஸ்டீவென்சன் அவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவது அவசியம் - அவசரம் என்று தெளிவாகத் தெரிவித்தார்.

உடனடியாக, சகோதரர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் ரோட் அய்லாண்டில் உள்ள தலை சிறந்த மருத்துவ நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் எஸ்.டி. சம்பந்தம் அவர்களும், வெகு சிரமப்பட்டு டாக்டர் வில்லியம் ஜி. ஸ்டீவென்சன் அவர்களிடம் விரைவாகத் தேதி வாங்கினர்.

அதன்படியே ஆழமும் அனுபவமும் அடக்கமும் நிறைந்த அந்த டாக்டரிடம் கடந்த சில வாரங்களாக மருத்துவ சிகிச்சை தொடர்ந்தது.

குறிப்பிட்ட நாள் அன்று அறுவை சிகிச்சை அறையில் அவரும் அவரது குழு டாக்டர்களும் இதயத் துடிப்பு சீராக்கும் சிகிச்சையை (Procedure) சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நடத்தினர்.

டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களும் உடன் இருந்தார்.

மயக்கம் தெளிந்து டாக்டர் என்னை தனி சிகிச்சை அறைக்கு அழைத்து வந்ததும் என்னிடம் நலம் விசாரித்து குடும்பத்தினருடமும் வெற்றிகரமாக முடிந்தது, கவலைப்பட வேண்டாம். அடுத்து தொடர் சிகிச்சைகள் தொடரும் என்று கூறினார்.

பல்துறை டாக்டர்களும், ஏற்பட்ட சில விளைவு களுக்கும் உரிய சிகிச்சையை 24 மணி நேரமும் செய்த பிறகு வெளியே அனுப்பி, குறிப்பிட்ட மருத்துவ முறைகளைக் கவனமாகச் செய்து மீண்டும் திரும்ப திங்கள் (ஜூலை 30) காலை மருத்துவமனை வருமாறு கூறினார் டாக்டர் ஸ்டீவென்சன்.

அதன்படியே மீண்டும் சில துறைகளால் பரிசோதிக்கப் பட்டு, அவரும் மற்றொரு டாக்டரும் (அவரது குழுவினர்) ஆய்வு செய்து, சில பரிசோதனைச் செய்த பின்னர்,

எல்லாம் நல்ல முறையில் அமைந்துள்ளது. இனி தக்க ஒழுங்குடனும் கவனத்துடனும் உங்கள் பணிகளைத் தொடரலாம். சில நாள் போதிய ஓய்வுடன் இருந்து மீண்டும் சந்தியுங்கள் எனக் கூறி அனுப்பினார்.

கழகக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான தகவல்

தற்போது நான் முந்தைய இதயத் துடிப்பு சீரின்மையிலிருந்து விடுபட்டு நலம் பெற்றுள்ளேன் என்பதை கவலை கொண்டுள்ள கழகக் குடும்பத் தினருக்கும், நலம் விரும்பும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நம் அறிவு ஆசான் பெரியார் கொள்கை பரப்பும் என் பணி இனியும் நிற்காது. புத்துயிர் பெற்றுத் திரும்பி யுள்ளதால் புத்தாக்கத்தை நோக்கி, புது உத்வேகத்துடன் தொடரும் என்பதை பணிவன்புடன் அறிவிக்கிறேன்.

மருத்துவ நண்பர்கள், இங்குள்ள நலம் நாடும் நண்பர்கள் அனைவரும் இங்கு (அமெரிக்காவில்) மேலும் தங்கி பிறகு தமிழ்நாடு திரும்பலாம் என்றும் வற்புறுத் தினர். அதனை தலை வணக்கத்துடன் மறுத்துவிட்டு, தமிழகம் திரும்பத் துடித்துக் கொண்டுள்ளேன்.

ஈழத் தமிழர் பிரச்சினை - அய்.நா.வின் மூத்த அதிகாரியிடம் பேசினேன்

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, டெசோ அமைப்பு மூலம் நாம் நம்மால் இயன்ற அளவு தமிழ் ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டின் மூலம் உலகப் பார்வையையும், ஆதரவையும் திரட்டி, ஈர்க்க வேண்டியவைகளையும் வற்புறுத்தி அழுத்தம் கொடுக்க வேண்டியவைகளை வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் எழுச்சியைக் காட்டி, ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவது அவசியம் என்ற முக்கிய கட்டத்தில் இங்கே இருந்து ஓய்வு எடுப்பது, எனது நோய் தந்த வலியைவிட அதிக அளவு வலியையும் வேதனையையும் தருவதாக அமையும் என்பதால் புறப்பட ஆயத்த மாகிறேன்.

நான் நியூயார்க்கில் கடந்த ஜூன் 27ந் தேதி அன்று அய்.நா. தலைமையகம் சென்று, அங்குள்ள அய்.நா. அரசியல் குழுவின் மூத்த அதிகாரியும் தென் கிழக்கு நாடுகளின் தலைமை அதிகாரியுமான திரு. ஹிட்டோடென் அவர்களை, அய்.நா. தொடர்பு அதிகாரி ரவிஸ் அம்மையாருடன் சென்று அய்.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் முயற்சியால் கொண்டு வரப்பட்ட தீர்மானம், அதன் பின்னரும் வாழும் ஈழத் தமிழர்கள் முள்வேலிக்குள் இன்னமும் முடங்கிக் கிடக்கின்ற நிலை, இலங்கை தமிழர்களின் மனித உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளைப் பற்றியும் விரிவாக விளக்கி அய்.நா. அதனை மற்ற நாடுகளில் நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து பரிகார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஹிட்டோடென் அவர்கள், நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் - செய்வோம். அதே நேரத்தில் இந்திய அரசங்கத்திற்கும் நீங்கள் (தமிழ்நாட்டவர்) போதிய அழுத்தம் தாருங்கள் என்று கூறினார்.

அப்போது டெசோவின் பணிகள், கூட்டப்படவிருக்கும் மாநாடு பற்றியும் அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தேன். இந்தச் சந்திப்பு, கலந்துரையாடல் சுமார் 45 மணித் துளிகள் நியூயார்க் அய்.நா. தலைமையகத்தில் 27.6.2012 அன்று நடந்தது. அதன் பிறகே எனது மருத்துவம் பற்றிய சிந்தனை எனக்கு வந்தது.

இந்நிலையில் நான் எப்படி இங்கே இருக்க முடியும்?

குறுக்குசால் ஒட்டும் சகோதரர்களுக்கு...

டெசோ மாநாட்டின் மூலமும், அந்த அமைப்பு மூலமும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை, நாம் அனைவரும் ஒருமுகப்பட்டு குரல் கொடுத்து மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது!

உலகப் பார்வை, இதற்குமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஈழத்தில் நடைபெறும் கொடுமைகள் பற்றியும் விடிவு ஏற்பட வேண்டும் என்பதுபற்றியும் அக்கறை எழுந்துள்ளது.

இத்தருணத்தில் நம் சகோதரர்கள் சிலர் குறுகிய நோக்குடனும், அரசியல் மனப்பான்மையுடனும் டெசோவை, கலைஞரை விமர்சிப்பது தேவைதானா?

அதன் பயன் யாருக்குப் போய் சேரும்? எண்ணிப் பார்த்தார்களா? சிங்கள இனவெறிக் கூட்டத்திற்குப் பாயசப் பரிமாறலாக அல்லவா அது அமையும்? நியாயந்தானா? சிந்தியுங்கள், நண்பர்களே!

நமக்கு பொது எதிரி யார்? சிங்கள இனவெறி ஹிட்லர் இராஜபக்சேவின் நடவடிக்கைகளா? அல்லது கலைஞரா? டெசோ அமைப்பா?

முடிந்தால், எங்களுடன் வாருங்கள் - வரத் தயங்கினால் வாய் திறவாமல் மவுனம் காத்து, டெசோவைவிட மேலும் புரட்சிகரமான செயற்பாடுகளைச் செய்யுங்கள் வரவேற்போம்; நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். ஒரு காலத்தில் நாம் அனைவரும் இப்பிரச்சினையில் பங்கேற்றவர்கள்தான் டெசோ அமைப்பில் - மறவாதீர்!

அரசியல் பார்வைகளை வேறு களங்களில் - தளங்களில் - நாம் வைத்துக் கொள்ளலாம். அருள்கூர்ந்து வதியும் ஈழத் தமிழர் பிரச்சினையில் காட்டாதீர்கள்.

அதையும் மீறி, பார்ப்பன ஊடக சடகோபங்களுக்கு ஆயுதமாகி, வீண் விமர்சனங்களை டெசோமீது வாரி இறைத்தால் அது டெசோவுக்கோ, கலைஞருக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மாறாக, அது டெசோ எனும் வயலில் முளைவிட்டுக் கிளம்பக் காத்திருக்கும் பயிர்களுக்கு நீங்கள் பாய்ச்சும் நீரும் உரமுமாகவே அமையும் - என்பது உறுதி.

உண்மையான உணர்வாளர்கள். இதை அரசியலாகப் பார்க்க மாட்டார்கள். ஓர் இனத்தின் விடியலாகவே காண்பர்.

டெசோ மாநாட்டுக்கு வாரீர்!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம் திரளட்டும் - டெசோ மாநாடு நோக்கி!

வீரங்கொள் அக்கூட்டத்தின் உறுதி சிங்களக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவாயுதமாக மாறட்டும்!

உலகத்தை ஈர்ப்போம்!!

எம் இனத்தை உய்விப்போம்!

என்று சூளுரைக்கும் சுயமரியாதை வீரர், வீராங்கனைகளே, திரண்டு வாருங்கள்! வாருங்கள்!!

-------------------பாஸ்டன் (USA) லிருந்து கி.வீரமணி , தலைவர் திராவிடர் கழகம் 2.8.2012 “விடுதலை”யில் வெளியிட்டுள்ள அறிக்கை

21 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு அரசின் அவசரக் கவனத்துக்கு...

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் இமிடிநாயக்கன் அல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சுரக்காப்பள்ளி என்ற கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்து குடும்பத்தினர் வசிக்கின்றனர், கவுரவ நாயக்கர் சமூகத்தை சார்ந்தவர்கள் நூறு குடும்பத்தினர் வசிகின்றனர். அந்தக் கிராமத்தில் உள்ள நியாயவிலை கடையின் அதிகாரியாக மஞ்சுளா என்ற தலித் பெண்மணி வேலை பார்க்கிறார்.

கவுரவ நாயக்கர் சமூகத்தை சார்ந்தவர்கள் ஒரு பறைச்சி கையில் எப்படி நாங்கள் அரிசி வாங்குவது,அதை எப்படி சாப்பிடுவது என்று அனைவரும் ஒன்றுதிரண்டு நியாயவிலைக்கடையை திறக்கவிடாமல் தடுக்கிறார்கள். எங்கள் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் எங்களுக்கு அரிசி கொடுக்க வேண்டும் என்றும் மீறினால் மஞ்சுளாவை கொலை செய்வோம் என்றும் மிரட்டுகிறார்கள்.சாதி இந்துகளுக்கு ஆதரவாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ் அவர்களும் செயல்படுகிறாராம்.

மாவட்ட ஆட்சியர் உடனே தலையிட்டுத் தடுக்காவிட்டால் கழகம் களம் காணும் என்று எச்சரிக்கின்றோம். 2-8-2012

தமிழ் ஓவியா said...

ஈழத்தமிழர் இன்னல் களைந்திட வாரீர்! கலைஞர் கடிதம் 1.8.2012

உடன்பிறப்பே,

இன்று 1-8-2012. இன்னும் இடையில் பத்தே நாட்கள்தான் உள்ளன. 12-8-2012 ஞாயிற்றுக் கிழமை அன்று நமது டெசோ அமைப்பின் சார்பில் நாம் நடத்தும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அந்த மாநாட்டினையொட்டி காலை 10 மணியளவில் சென்னை, தியாகராயர் நகரில் கலைவாணர் சிலை அருகில் அமைந்துள்ள அக்கார்ட் ஓட்டலில் ஆய்வரங்கம் (கான்கிளேவ்) என் தலைமையிலே நடைபெறவுள்ளது. ஆய் வரங்கத்தில் கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெறும்.

பொது மாநாடு மாலையில் நடைபெறவுள்ள பொது மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எவ்வாறு வடிவமைக்கப் பட வேண்டும், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நம்முடைய கோரிக்கைகள், வேண்டு கோள்கள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் அந்த ஆய்வரங்கில் கலந்து பேசி தீர்மானிக்கப்படும். மாலை 4 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொது மாநாடு நடை பெறவுள்ளது. அந்த மாநாட்டில்தான் உன்னையும், உன்னோடு வருகின்ற நமது உடன் பிறப்புகளையும் சந்திக்க இயலும்.

ஆய்வரங்கத்திலும், மாலை பொது மாநாட்டிலும் மத்திய அரசின் வேளாண் மைத் துறை அமைச்சர், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அருமை நண்பர் மாண்புமிகு சரத் பவார் அவர்கள்; எனது அந்தக் காலத்து நண்பர் காஷ்மீரத்து சிங்கம் ஷேக் அப்துல்லா அவர்களின் திருமகனும், மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சருமான மாண்புமிகு பரூக் அப்துல்லா அவர்கள்; ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நண்பர் திரு. சரத் யாதவ் அவர்கள்; லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், என்னுடைய நீண்ட நாள் நண்பரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள்; சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலா ளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திரு.ராம் கோபால் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

இலங்கையிலிருந்து....

இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நண்பர் திரு. மாவை சேனாதிராஜா, நண்பர் திரு. சுமந்திரன், நண்பர் திரு. யோகேஸ்வரன், நண்பர் திரு. க. சரவண பவன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நண்பர்கள் திரு. கஜேந்திர குமார் பொன்னம்பலம், திரு. செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், வழக்கறிஞர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எ. செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், நவ சமா சமாஜா கட்சியின் தலைவர் டாக்டர் திரு. விக்கிரம பாகு கர்ணரத்தினே அவர்களும், வருகை தந்து ஈழத் தமிழர்களின் உணர்வுகளையும் உள்ளக்கிடக் கையையும் தெரிவிக்கவிருக்கிறார்கள்.

நைஜீரியாவிலிருந்து....

மேலும் நைஜீரியாவிலிருந்து ஈடோ, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், மாண்புமிகு ஓஸிகேனா போய் டொனால்டு; நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ரசாக் மோமோ; சுவீடன் பாராளுமன்ற உறுப்பினர் திரு. நஸீம் மாலிக்; மொராக்கோவிலிருந்து திரு. டைடா முகம்மது; திரு. அஃபெகோ முபாரக்; துருக்கியிலிருந்து முனை வர் திரு. கெமால் இல்திரிம்ஸ்; மலேசியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு. யுஸ்மாடி யூசுஃப்; மற்றும் திரு. ஆனந்த் குருசாமி ஆகியோரும் வருகை தந்து ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை முழுமை யாக உணர்ந்துள்ள காரணத்தால் தமது ஆதரவினை நல்கி உரையாற்ற விருக்கிறார்கள்.

இவர்கள் தவிர உலகின் பல்வேறு பகுதிகளிலே உள்ள ஈழத் தமிழர்கள் நமது டெசோ மாநாட்டில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்று இண்டர்நெட் வாயிலாக தகவல் கேட்டவண்ணம் உள்ளனர். மேலும் பலர் பார்வையாளர்களாக கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டுப் பணிகள் காலையிலும் மாலை யிலும் அன்றாடம் அண்ணா அறிவாலயத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு அதன்படி மாநாட்டுக் கான தொடக்கப் பணிகளும், ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. டெசோ அமைப்பில் நமது கழகத்தின் சார்பில் உறுப்பினராக உள்ள பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்து மாநாட்டுப் பணிகளில் தனது அனுபவமிக்க யோசனைகளைச் சொல்லி வருகிறார். மற்றொரு உறுப்பினரான சகோதரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டில் இருப்பதால் அன்றாடம் சென்னை அலுவலகத்திற்கு வரமுடியா விட்டாலும், நேரம் கிடைக்கின்ற போதெல்லாம், தொலைபேசி வாயிலாக மாநாட்டிற்கான ஆலோசனைகளைச் சொல்லி வருகிறார்.

இளவல் வீரமணி டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவ ரான தமிழர் தலைவர் இளவல் வீரமணி அவர்கள் பணி காரணமாக அமெரிக்கா செல்வதாகவும், மாநாட்டுப் பணிகளைக் கவனிக்க விரைவில் திரும்பி விடுவேன் என்றும் என்னிடம் கூறிவிட்டுச் சென்றவர், அமெரிக்காவில் உடல் நலம் பாதிக்கப் பட்ட காரணத்தால், அங்கே சிகிச்சை பெற்று வரு கிறார். எப்படியும் மாநாட்டிற்கு வந்து விடுவதாக அங்கிருந்து எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெசோ அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவரு மான தம்பி திருமாவளவன் என் இல்லத்திற்கு வந்து மாநாட்டுப் பணிகளிலே தனது கடமை என்ன என்று விசாரித்ததோடு, மாநாடு குறித்த யோ சனைகளையும் நல்கினார். மற்றொரு உறுப்பின ரான தம்பி சுப. வீரபாண்டியன், அவரது பணி காரணமாக லண்டன் சென்றவர், இந்த மாநாட்டிற் காகவே தமிழகம் திரும்பியுள்ளார். காலையிலும், மாலையிலும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து இந்த மாநாடு குறித்த பணிகளிலே எனக்கு மிகவும் பேருதவியாக இருந்து வருகிறார்.

தமிழ் ஓவியா said...

டெசோ உறுப்பினர்களைத் தவிர்த்து, மாநாடு குறித்த ஏற்பாடுகளை கழகக் கண்மணிகள், தம்பிகள் பொருளாளர் மு.க. ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., கல்யாணசுந்தரம், முனைவர் பொன்முடி, வழக் கறிஞர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், அசன் முக மது ஜின்னா ஆகியோரும், மாநாட்டின் விளம்பரம் மற்றும் அழைப்பிதழ் பணிகள் போன்றவற்றை எ.வ. வேலு அவர்களும் ஓய்வில்லாமல் கவனித்து வருகி றார்கள். இலங்கையிலே உள்ள தமிழர் தலைவர் களிடம் எல்லாம் தம்பி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவர்களையெல்லாம் நம்முடைய மாநாட்டிற்கு அழைக்கும் பணியிலே ஈடுபட்டுள்ளார்.

வட இந்தியத் தலைவர்களுடன் பேசி மா நாட்டிற்கு அழைப்பதற்கான பணிகளை நாடாளு மன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கவனித்து வருகிறார். ஆய்வரங்கம் நடத்துவதற் கான ஏற்பாட்டினையும் விருந்தினர் தங்குவதற்கான ஏற்பாட்டினையும் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் செய்து வருகிறார். பொது மாநாடு நடைபெறுவதற்கான மேடை அமைப்பு பணிகளை சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ. அன்பழகன் கவனித்து வருகிறார்.

இந்த மாநாட்டின் மைய நோக்கக் கருத்துருக் களை விளக்கி கையேடு ஒன்றும் டெசோ சார்பில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்டு 16-7-2012 அன்றே ஏடுகளுக் குத் தரப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டிற்குத் தேவையான முக்கியமான குறிப்புகளை மாநிலங்களவை உறுப்பினர் திருமதி. கனிமொழி திரட்டித் தந்துள்ளார். இந்தக் கையேடு தயாரிப்பில் தம்பி அசன் முகமது ஜின்னா முக்கியப் பணி ஆற்றியுள்ளார்.

மாநாட்டு தீர்மானங்கள்

இந்த மாநாட்டில் நாம் நிறைவேற்றவுள்ள தீர்மானங்கள் எல்லாம் போரினால் பாதிக்கப் பட்டும், இடம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உயர்த்து வதற்கும், ஜனநாயக உரிமைகளோடு கண்ணியத் துடன் வாழ்வதற்கும், அதற்கு தாய்த் தமிழகத்திலே உள்ள நாமும், இந்திய அரசும் எந்த வகையில் எல்லாம் உதவிட முடியும் என்பதை வலியுறுத்து வதற்காகவுமான முயற்சியிலே ஈடுபட்டுள்ளோம். ஈழத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு வழியில்லாமல் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குடியேறி புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அகதிகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டிருக்கும் நமது தமிழ் இனத்தவர் மீண்டும் இலங்கை திரும்பி அமைதியானதும், உரிமையுடன் கூடியதுமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் இந்த மாநாட்டின் ஆய்வரங்கில் நாம் கலந்து பேசி முடிவெடுக்கவுள்ளோம்.

தமிழ் ஓவியா said...

இந்த மாநாடு குறித்து நாம் அறிவித்த போது, தமிழகத்திலே உள்ள சில நாளேடுகள் அதைப்பற்றி எப்படியெல்லாம் விமர்சனம் செய்தன என்பதை நீ படித்தறிந்திருப்பாய்! மாநாடு நடக்காது என்றும் - மத்திய அரசு அனுமதி கொடுக்காது என்றும் - மாநில அரசு தடை செய்யப் போகிறது என்றும் - கழக முன்னணியினர் ஆதரவு இந்த மாநாட்டிற்கு இல்லை என்றும் - மாநாடு வெற்றி பெறாது என்றும் தங்களால் முடிந்த அளவிற்கு விளம்பரம் தேடிக் கொடுத்தார்கள். அந்த ஏடுகள் எல்லாம் இன்னமும் வெளி வந்து கொண்டுதான் உள்ளன. அந்த ஏடுகள் எந்த அளவுக்கு தமிழ் இன உணர்வைப் பாது காத்திடப் பணியாற்றுகின்றன என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து

ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டனவா? 29-7-2012 தேதியிட்ட தினமலர் நாளேட்டில் கடலில் முளைக்கிறது புது ஆபத்து - ஊடுருவும் சீனாவுக்கு உதவுகிறது இலங்கை என்ற தலைப்பிலே ஒரு கட்டுரை வந்துள்ளது. அதில் போர் முடிந்த கையுடன் தனது நாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டதுடன் சீன இன்ஜினியர்களுக்கு ரத்தினக் கம்பள வரவேற்பும் கொடுத்தது. இன்ஜினியர்கள் என்ற போர்வையில் சீன ராணுவத்தின் கட்டுமானப் பிரிவு இன்ஜி னியர்கள் இலங்கையில் கால் வைத்தனர். இலங்கையின் தென் முனையில் உள்ள அம்பாந் தோட்டையில் பிரமாண்ட கடற்படை தளத்தை இலங்கை அனுமதியுடன் சீனா அமைத்து வருகிறது.

அது மட்டுமல்லாமல், சீன கடற்படையின் தயாரிப்பான அதிவிரைவு ரோந்து படகுகள் இந்திய கடல் எல்லைப்பகுதி வரை ஊடுருவி சீண்டிப் பார்க்கத் தொடங்கின என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. இலங்கைக் கடற்படை வீரர்களுடன் சீனர்களும் உள்ளனர் என்றும் இது குறித்து மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமேஸ் வரம் மீனவர்கள் எச்சரிக்கை குரல் கொடுத் துள்ளனர் என்றும் தொடரும் அந்தக் கட்டுரையின் இறுதியில், சீன கடற்படை வீரர்களின் உதவியுடன் தனுஷ்கோடி அருகே சர்வதேச கடல் எல்லையில் உள்ள 7வது தீடைப் பகுதியில் தற்காலிக கடற்படை முகாம் பணிகளை இலங்கை கடற்படை சுறுசுறுப் பாக மேற்கொண் டுள்ளது.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இனியும் இலங்கை விஷயத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு சாதக மானது அல்ல என்று மீனவர்கள் எச்சரிக்கின்றனர் என்றும் தினமலர் எழுதியுள்ளது. இதைப்பற்றி யெல்லாம் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, இந்தியத் திருநாட்டின் பாதுகாப்புக் கெதிரான அச்சுறுத் தல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் கோர வேண்டாமா? இதற்கெல்லாம் விடை காணுவதற்காகத்தான் 12ஆம் தேதி டெசோ மாநாட்டினை நாம் நடத்துகிறோம்.

புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்!

போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்று வோர் தூற்றட்டும், நம் கடன் தமிழர்க்கு பணி செய்து கிடப்பதே என்று, நம்மால் முடிந்த வரை, நம்முடைய குரல் ஈழத் தமிழர்களுக்காக ஒலிக்கும், ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் காயங்களுக்கும் - அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும் மருந்து போடு கின்ற மாநாடு தான் டெசோ மாநாடு! இந்த மாநாட்டிற்கான மைய நோக்கத்தைப் புரிந்து கொண்டு அனைவரும் பங்கேற்க வேண்டுமென உன் அண்ணன் அழைக்கின்றேன்.

அன்புள்ள,
மு.க. 2-8-2012

Anonymous said...

பதிவுக்கு நன்றிகள் !!!

தமிழ் ஓவியா said...

சட்டி சுட்டதடா - கைவிட்டதடா! அன்னா அசாரே குழுவின் பரிதாபம்

டில்லி, ஆக.3-ஊழ லுக்கு எதிராகவும், வலு வான லோக்பால் மசோதா வேண்டியும் நேற்றோடு 9 நாட்களாக தொடர் பட்டினி போராட்டம் இருந்து வரும் அன்னா குழுவினர் இன்று மாலை 5 மணி யுடன் தங்களது பட் டினிப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராக வும், வலுவான லோக் பால் மசோதா வேண்டும் என்று கூறி அன்னா அசாரே, குழுவினர் கடந்த 25ஆம் தேதி முதல் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ஆம் தேதி முதல் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து பட்டினிப் போராட்டம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவர்களை பட்டி னிப் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மருத் துவமனையில் சேரு மாறு டில்லி காவல் துறை வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்க வில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை பட்டினிப் போராட்டத்தை கை விடும் பேச்சுக்கே இட மில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதையடுத்து மத்திய அரசுடன் போராடு வதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழு வினர் திட்டமிட்டுள்ள னர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர் கள் தங்களின் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தை இன்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பட்டினி போராட் டம் இருந்து நம் முடைய மூச்சும், ஆவி யும்தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்கக் கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வரலாமா? மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு

இந் நிலையில் அன்னா அசாரே குழு வினர் சமூக வலைத்தளமான டிவிட் டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின் றனர்.

"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அசாரே களம் இறங்க வேண்டிய தருணம் இது தானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதளப் பக்கத் தில்,

- தற்போதைய அரசி யல் கட்சிகள் மீது உங் களுக்கு நம்பிக்கை இருக் கிறதா?

- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னா அசாரே முன்னெடுக்க வேண்டுமா?

என்று இரு கேள்வி கள் கேட்கப்பட்டிருக் கின்றன. 3-8-2012

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....



‘‘Not only a secretary But also a very sincere Person’’ என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்ட என்.வி. நடராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (3.8.1975)

தமிழ் ஓவியா said...

புனே குண்டுவெடிப்பு வன்முறையின் பின்னணியில் இந்துத்துவா பயங்கரவாதிகளா? விசாரிக்கிறது மகாராட்டிரா அரசு

புனே, ஜூலை 3- புனேயில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னணி யில் இந்துத்துவா பயங்கர வாத அமைப்புகளுக்குத் தொடர் பிருக்கிறதா என்பது குறித் தும் மகாராட்டிரா அரசு விசாரணை நடத்தும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.

புனேயில் அடுத்தடுத்து 4 இடங்களில் நேற்றுமுன் தினம் இரவு குண்டு வெடித் தது. இவை சக்திவாய்ந்தவை இல்லை என்பதால் உயிரி ழப்பு ஏதும் ஏற்படவில்லை. இக்குண்டு வெடிப்பு சம்ப வத்தில் இருவர் படுகாயம டைந்திருந்தனர்.

புனே குண்டு வெடிப்பு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அரசு, தீவிரவாத செயல் இல்லை என்று கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று குண்டுவெடித்த இடங் களை நேரில் பார்வையிட்ட ஆர்.ஆர்.பாட்டில், பயங்கர வாதிகளின் சதியா என்பது குறித்து பயங்கர வாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர் இந் துத்துவா பயங்கரவாதிக ளின் சதியாக இருக்குமா? என்று கேட்டதற்கு எல்லா வகையான கோணங்களி லும் இருந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருக்கிறார்.

தயானந்த பாட்டீல் யார்?

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது காயமடைந்தவர் களில் ஒருவ ரான தயானந்த பாட்டீல் என்பவர் புனே அருகில் உள்ள உருளி கஞ்சன் கிரா மத்தைச் சேர்ந்தவர். குண்டு வெடிப்பு சம்பவம் நடை பெற்ற இடங்களில் ஒன்றான பல்கான்தார்வா திரை யரங்கு முன்பாக அன்னா ஹசாரே குழுவினர் அண்மையில் போராட்டம் நடத்திய போது அப்பகுதியில் அவர் நடமாடியதாக கூறப்படு கிறது. நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்ற தயானந்த பாட்டீல் அங்கு தமது கைப்பையை இறக்கி வைத்து விட்டு சென்ற பிறகே குண்டு வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்த தயானந்த பாட்டீலின் பின்புலம் பற்றி இப்போது மகாராஷ்டிரா அரசு குடைந்தெடுத்து வருகிறது.

மலேகான் குண்டுவெடிப்பு

ஏற்கெனவே இதே மகா ராட்டிரா மாநிலம் மலே கானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந் துத்துவ அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா உள் ளிட்டோர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டமிடப்பட்ட சதி

இந்நிலையில் டில்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை செய லாளர் ஆர்.கே.சிங் கூறுகை யில், 500 மீட்டர் தொலை வுக்குள் 45 நிமிட நேரத்தில் நன்கு ஒருங்கிணைக்கப் பட்டு இத்தாக்குதல் நடத்தப்பட் டது.

இத்தாக்குதல் திட்ட மிட்டு நிறைவேற்றப்பட்டுள் ளது என்றார்.

மேலும் வெடிக்காத இரண்டு குண்டுகள் கைப் பற்றப்பட்டு ஆய்வு செய் யப்பட்டு வருவதாகவும் தேசிய பாதுகாப்பு படை யினர் மற்றும் மத்திய தடயவியல் துறை யினர் புனே சென்று அது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் சிங் கூறினார்.3-8-2012

தமிழ் ஓவியா said...

தோழர் வீரமணியின் சேவை!



வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர்.

இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக்க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.

விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம். இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள்தான் இருந்துவருவார். - ஈ.வெ.ராமசாமி

(விடுதலை-07.06.1964

தமிழ் ஓவியா said...

அய்யா - ஆசிரியர் உறவு




கேள்வி: அய்யா வாழ்ந்த காலத்தில், 1962 முதல் 1973 வரை விடுதலை பொறுப்பு, இயக்கப் பொறுப்புகளில் இருந்துள்ளீர்கள். (தந்தை பெரியார் அவர்களின் நேரடிப் பொறுப்பில்); இந்தக் காலகட்டத்திலோ, வேறு காலகட்டத்திலோ தந்தை பெரியார் தங்களிடம் வருத்தப்படவோ, குறை காணவோ ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?

பதில்: 1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில், விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து என்னை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், எனது வாழ்விணையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தோம். எங்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை என் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், எனது முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, என் வாழ்விணையர் எனக்கு முழு ஒத்துழைப்பைத் தந்து இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்ந்துவிட்டார். நான் இயக்கத்தின் முழு நேரத் தொண்டனாகத் தொடர்கிறேன்.

ஒளிவு மறைவின்றி நினைத்துப் பார்க்கிறேன்...! விடுதலை பொறுப்பாசிரியராக இருந்த காலத்திலும் இயக்கப் பொறுப்புகளில் இருந்தபோதும் சரி, அய்யா அவர்கள் என்னிடம் வருத்தப்படவோ, குறைகாணும்படியோ நான் எப்போதும் நடந்து கொண்டதே இல்லை என்பதுதான் நான் அய்யாவிடம் பெற்ற பெரும் சிறப்பூதியம்.

நான் பொறுப்பு ஏற்பதற்கு முன் மிகவும் அச்சப்பட்டேன். சில நேரங்களில் விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக வரும் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து என் கருத்தல்ல. அது எனக்கு உடன்பாடனவை அல்ல என்று அய்யா கையொப்பத்துடன் மறுப்பு விளக்கம் வந்த காரணத்தால், அதை எண்ணி நாம் மிகவும் எச்சரிக்கையுடன் எழுதவும், செயல்படவும் வேண்டும் என்று உணர்ந்து எனது கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றி வந்தேன்.

கூட்டங்களில் அய்யாவை வைத்துக் கொண்டு பேசும் நிகழ்ச்சிகளில்கூட, அவர் நிறுத்துங்கள் என்று தடியைத் தட்டவோ, ஜாடை காட்டிடும் நிலைமையோ எனக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. மாறாக, சில கூட்டங்களில் மேலும் பேசுங்கள் என்று கட்டளையிட்டு மகிழ்ந்துள்ளார்.

சில, பல செய்திகள் பற்றி தலையங்கங்கள் எழுதுங்கள் என்று சுற்றுப் பயணத்தில் இருக்கும் தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்; கடிதம் எழுதுவார்கள்; அதுதான் அய்யா தலையங்கமாக அச்சாகி இருக்கிறது. அதையே நான் எழுதியுள்ளேன் என்று பதில் அளித்ததைக் கேட்டு அய்யா மகிழ்ந்துள்ளார்; அதுதான் என் ஆசிரியப் பணிக்குக் கிடைத்த முறையான அங்கீகாரம்!

கவிஞர் கலி.பூங்குன்றன் கேள்விகளுக்கு ஆசிரியர் கி.வீரமணி அளித்த பதிலில்...

(ஆசிரியர் கி.வீரமணி பவள விழா மலர்)

தமிழ் ஓவியா said...

டெசோ சிந்தனை: ஹாங்காங்கும் -ஈழமும்!

ஹாங்காங் என்றால் டைமண்ட் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997இல் சீனாவசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனாலும் ஹாங்காங் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும். இப்பொழுது அங்கும் ஒரு பிரச்சினை! திபேத்தைப் போல ஹாங்காங்கையும் தன் கைக்குள் கொண்டுவர வல்லரசாகிய சீனா திட்டமிட்டு விட்டது போலும்! ஹாங்காங்கின் உள் விவகாரத்தில் சீனா தன் தலையை நீட்டும் வேலையில் இறங்கியது. ஹாங்காங் கல்விக் கூடங்களில் வரும் செம்டம்பர் முதல் சீனாபற்றிய தேசப் பக்தி வகுப்புகள் தொடங்கப்படத் திட்டமிடப் பட்டுள்ளதாம். இது ஹாங்காங் மாணவர்கள் மூளையிலே சீனக் கலாச்சாரத்தைத் திணித்து மூளைச் சலவை செய்யும் செயல் என்று ஹாங்காங் மாணவர்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

எந்த ஒரு சிறு இனமாக இருந்தாலும், அதன்மீது மாற்று இனம் தன் மொழி, கலாச்சாரப் பண்பாடுகளைத் திணிக்க முனைந்தால் (அது பெரும்பான்மை உடையதாக எண்ணிக்கையில் இருந்தாலும்) அதனை ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஹாங்காங் மக்கள் வீதிக்கு வந்து போராடும் செயலாகும். சீனா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம்., அதற்காக அதன் ஆட்டத்தை சின்னஞ்சிறு நகரமான ஹாங்காங் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். குறிப்பாக இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய தாகும். 1956இல் அங்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்ற சட்டம் அது. பின்னர் நீதித்துறைகளிலும் சிங்களம் மட்டுமே என்ற நிலை பிறந்தது.

சிங்கள மொழியின் ஆதிக்கம், தமிழ் மொழிக்குரிய உரிமைப் பறிப்பு - இவற்றை எதிர்த்துத்தான் தொடக்கத் தில் ஈழத் தந்தை செல்வநாயகம் போராட்டத்தைத் தொடங்கினார் (1956 ஜூன் 5) அதுவும் காந்தியார் காட்டிய அந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத்தான் தொடங்கினார். அதைக்கூட சிங்கள வெறியர்கள் பொறுத்துக் கொள்ள வில்லை. அடித்துத் துவைத்தனர். சிலரைப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் தூக்கியும் எறிந்தனர்.

அந்த ரத்தக் களறியோடு நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமர் பண்டார நாயகா ஏளனமாகச் சிரித்தார் எதற்காக இப்படி அடி வாங்கிச் சாகிறீர்கள்? சிஙகளவர்கள் கொஞ்சம் முரடர்கள். பேசாமல் கலைந்து செல்லுங்கள். தமிழ் என்றெல்லாம் பேசாதீர்கள், இனிமேல் சிங்களம் மட்டும்தான் ஆட்சிமொழி என்று சொன்னாரே!

அதன்பின் 1987இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்று சரத்தும் சேர்க்கப் பட்டதே - இதுவரை அது நடைமுறைப்படுத்தப்பட்டதா? இந்திய அரசுதான் தட்டிக் கேட்டதுண்டா?

இலங்கையின் இறையாண்மைக்குச் சேதாரம் இல்லாமல் இரு இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்று இதோபதேசம் செய்யும் கட்சிகள் - குறிப்பாக மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியினர் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளனர்?

வரலாறு காட்டும் படிப்பினை பற்றியும் லெனினின் தேசிய இன உரிமைப் பற்றியும் பாடம் நடத்துபவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை என்று வந்தால் மட்டும் ஒதுங்கிக் கொள்வது ஏன்?

மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் ஏன் பிரிந்தது? கம்யூனிஸ்டு நாடான செக்கோஸ்லோவேகியா இரு கூறுகளாகப் பிரிய வேண்டிய அவசியம் ஏன்? 15 மாநிலங்களைக் கொண்டு செயல்பட்ட சோவியத்து ஒன்றியம் தனித்தனியாகப் பிரிந்து சென்றது - ஏன்?

இந்த நிலை மற்ற எந்த இன மக்களைவிட இலங்கைத் தீவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்துமே! அவர்களின் தாய்மொழிக்கு ஆட்சிமொழி தகுதி கிடையாது.

சிங்களவர் ஒருவர்தான் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக வர முடியும் - அதுவும் அவர் புத்த மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த ஒரு சார்பு நிலை போதாதா - சிங்களத்திட மிருந்து தமிழ் தனியாகப் பிரிந்து தனி நாடாக மலர்வதற்கு?

செர்பியாவிலிருந்து விடுதலை பெற்றதாக கொசாவா 2008 டிசம்பரில் பிரகடனப்படுத்தியதை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச ஹேக் நீதிமன்றமும் அங்கீகரித்ததே! அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட உலக நாடுகள் அதனை அங்கீகரித்தனவே!

அதே நிலை கிட்டத்தட்ட இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது. இந்த வகையில் டெசோ சார்பில் ஆகஸ்டு 12இல் சென்னையில் நடைபெற விருக்கும் மாநாடு - அதற்கான நெருக்கத்தைக் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.

தீர்மானம் என்ற ஒன்றுக்கு இடம் இல்லாமலேயே அந்தத் திசை நோக்கி நகர்த்திட சென்னை மாநாடு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. 3-8-2012

தமிழ் ஓவியா said...

மரியாதை இல்லை!

பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமை யான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.

பெரியார்(விடுதலை, 22.6.191973)

தமிழ் ஓவியா said...

மத குருக்கள் பெண்களைக் கற்பழிக்க மாட்டார்களா? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு



பெண்களைக் கற்பழித்த மத குருவுக்கும், அவரது சீடருக்கும் உச்ச நீதிமன்றம் தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறியது.

மராட்டிய மாநிலத்தில் விருந் தவன், மங்கத்து ஆகிய இடங் களில் ஆசிரமங்களை நடத்தி வரும் திரிபாலு மகராஜ் என்னும் மத போதகர் ஒருவர் தாம் கிருஷ்ண பகவானின் மறு அவதாரம் எனக் கூறி பெண்களை ஏமாற்றி, மயக்கி, கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யுமாறு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சீடர்களுக்கும், மேற்கண்ட மத குருவுக்கும் எதிராக கீழ்க் கோர்ட் டில் வழங்கிய தீர்ப்பை பம்பாய் உயர்நீதி மன்றத்தில் உள்ள பெஞ்சு (அமர்வு) நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மராட்டிய மாநில அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் திரு.வி.என்.ரே, திரு.ஜி.டி. நானாவதி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், அதன் அடிப் படையில் குற்றவாளியை விடுவித்தது தவறானது என்றும் சுட்டிக் காட்டினர்.

சாமியார் மகராஜ் ஒரு வயது முதிர்ந்த துறவி என்பதையும், உலகம் எங்கும் பல சீடர்கள் அவருக்கு உள்ளனர் என்பதையும் கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - அடிப்படையில் தவறானது என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது போல் இவ்வகைச் சாமியார்கள் எல்லாம் தவறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ மத குருமார்கள் இளம் கன்னிகளை தம் காம இச்சைக்குப் பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

தன்னுடைய மதப்பிரிவைச் சார்ந்த எந்த ஒரு மதப் பிரச்சாரகருடன் ஒரு மத குரு உடலுறவு கொள்ள மாட்டார் என உயர்நீதிமன்றம் கூறியது பொய்யானது என்பதை அந்த மத குருவால் கற்பழிக்கப்பட்ட மூன்று இளம்பெண்கள் அளித்த வாக்குமூலம் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
(ஆதாரம்: தி இந்து 12-3-1997)

தமிழ் ஓவியா said...

அலகு குத்துவது - தீ மிதிப்பது



கேள்வி: அலகு குத்துபவர்கள் தீக்குழியில் நடப்பவர்களுக்கு வேதனை தெரியாமல் இருப்பது தெய்வ சக்திதானே?

பதில்: இல்லை. வலி என்பது நரம்பு மூலமாக அனுப்பும் செய்தி அந்த நரம்பை மரக்கடித்து விட்டால் எந்த வலியையும் தாங்க முடியும். அதற்குத் தான் தீ மிதிக்கிறவர்களும், அலகுக் குத்திக் கொண்டவர்களும் பழகியிருக்கிறார்கள்.

-சுஜாதா (குமுதம், 5.10.2005

தமிழ் ஓவியா said...

அறிவியல் சிந்தனை - முதுமை அடைவது எப்படி?



நேரம் என்பது தொடர்புடைய ஒரு கோட்பாடு என்பதும், கடல் மட்டத்திற்கு மேல் எவ்வளவு உயரத்தில மனிதர்கள் வாழ்கிறார்களோ அவ்வளவு வேகமாக அவர்கள் முதுமை யடைகிறார்கள் என் பதுமான விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ் டீன் அவர்களின் 100 ஆண்டு பழமையான கோட்பாடு உலகின் மிகத் துல்லியமான கடிகாரத்தால் தெளி வாக மெய்ப்பிக்கப்பட் டுள்ளது.

அன்றாட வாழ்க்கை உணர்த்துவது போல நேரம் என்பதும் இடைவெளி என்பதும் நிலையானது அல்ல என்று கூறும் அய்ன்ஸ்டீன் அவர்களின் தொடர்புக் கோட்பாடு கூறுகிறது. ஒளியின் வேகம் ஒன்றுதான் உண் மையில் நிலையானது என்று கூறும் அவர், நீங்கள் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தோ அல்லது எவ்வளவு வேகமாக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தோ நேரமும் வேகமாகவோ, தாமதமாகவோ ஓடக்கூடியது என்று கூறியுள்ளார்.

பூமியில் உயிரினம் தோன்றி வாழ்ந்து வரும் காலத்துக்கு ஏறக் குறைய சமமான காலமான 3.7 பில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி வேறுபாட்டை மட்டுமே காட்ட இயன்ற ஒரு மின்னணு கடிகாரத்தின் மூலம் அய்ன்ஸ்டீன் கோட்பாட்டின் இயல்புத் தன்மையை மிகமிகத் துல்லியமாக, முதன் முறையாக, ஆராய்ச்சியாளர் கள் சோதனை மூலம் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர்.

கொலர்டோ போல்டரில் உள்ள அமெரிக்க தேசிய தரங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜேம்ஸ் சின் வென் சூ மற்றும் அவரது தோழ ரும் இரண்டு கடிகாரங்களை கடல் மட்டத்தில் இருந்து ஒரு அடி உயர இடைவெளியில் அமைத்து சோதனை செய்ததில் அய்ன்ஸ்டீன் கூறியபடி எவ்வளவு உயரத்தில் இருக்கிறோமோ அவ்வளவு வேகமாக நேரம் ஓடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தத் துல்லியமான கடிகாரங்கள் புவிஈர்ப்பு விசை ஆற்றலையும் மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. எனவே, ஒரு கோளுக்கு அருகில் ஒரு கடிகாரத்தை வைத்தால், புவி ஈர்ப்பு விசை அதிகமாக ஆவதுடன், அதனை விட அதிக உயரத்தில் வைத்திருக்கும் மற்றொரு கடிகாரத்தை விட மெதுவாக ஓடுகிறது என்று சூ கூறினார். ஒரு மின் மண்டலத்தில் அடைக்கப்பட்ட அலுமனிய அணுக் களின் நுண்ணிய அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மின்னணு கடிகாரங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன. லேசர்களால் கண்டுபிடிக்கப்பட இயன்ற புறஊதாக் கதிர் ஒளியின் அதே அலைவரிசை யில் இந்தத் துடிப்புகளும் இருந்தன. ஒரு வினாடியின் நூறுகோடியில் ஒரு பங்கு நேரத்தைத் துல்லியமாக அள விடும் ஆற்றல் கொண்ட மின்னணு கடிகாரங்கள் இவை என்பதே இதன் பொருள்.

தரைக்கு மேல் இருக்கும் உயரத் தைக் கொண்டு காலத்தின் விரி வாக்கத்தைக் கண்டுபிடிக்க இயன் றவை இந்த கடிகாரங்கள். ஒவ்வொரு அடி உயரத்திற்கும் ஒரு வினாடியில் 90 பில்லியனில் ஒரு பங்கு நேரம் என்ற விகிதத்தில், 79 ஆண்டு கால வாழ்வில் மனிதர்கள், வேகமாக முதுமை அடைவார்கள் என்று சூ கூறுகிறார். அது மட்டுமன்றி, விண் வெளியில் பயணம் செய்யும் பாதிப்பை வேறுவழிகளில் ஏற்படுத்தும்போது, இந்த கடிகாரங்களில் அய்ன்ஸ்டீனின் தொடர்புக் கோட்பாடு கூறுவதைப்போல நேரம் மெதுவாக செல்கிறது என்பதை யும் இடந்த விஞ்ஞானிகள் சோதனை மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். 4-8-2012

தமிழ் ஓவியா said...

டெசோவுக்கு ஒரு நற்செய்தி!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம்!

இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் நியூசிலாந்து நாட்டில் போர்க்குரல்!



ஆக்லாந்து, ஆக. 4- சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற ஈழத் தமிழர் களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நியூசிலாந்து நாட்டின் பசுமைக் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் மெடிரியா டூரி என்ற பெண்மணி கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று ஆக்லாந்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறினார். அவரது கருத்தை எதிரொலித்து மரியாதைக் குரிய பிரபல மனித உரிமை ஆர்வ லரான ஜான் மின்டோ பேசுகையில், உங்களின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டு வருவதை நான் அறிவேன். உங்கள் உரிமைகளை அங்கீகரித்து, மதிக்காத ஒரு நாட்டில் நீங்கள் வாழ் வது என்பது முடியாது என்பதால், உங்களது சுயநிர்ணய உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறினார்.

ஒரு கருத்தரங்கம் போன்று நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சிவ வசந்தன் அவர்கள் தலைமை தாங் கினார். இலங்கை அரசால் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளை அய்க்கிய நாடுகள் நேரடியாக மேற்பார்வையிட்டுக் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கோரினார். தமிழர்- சிங்களவரிடையே நல்லிணக் கத்தை தற்போதைய இலங்கை அரசு ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு வீணானதே என்று ஏ.தேவராஜன் பேசும்போது குறிப்பிட்டார்.

இனப்படுகொலை, கலாச்சார சீரழிப்பு, புதிதாக உருவாகி வரும் போக்குகள், நீதி பெறவேண்டும் என்ற தணியாத தாகம், ஒரு தலைமுறை மக்களே அழிக்கப்பட்ட கொடுமை என்ற தலைப்புகளில் ஜானகி பாஸ்கரன், தருணி அகோ, ஆர். தானிஷா ஆகியோரும் மற்றும் இதர தமிழ் ஈழப் பிரதிநிதிகளும் தங்களது கட்டுரைகளை இந்த கருத்தரங்கில் படித்தனர்.

தேவை சர்வதேச விசாரணை!

அக்கூட்டத்தில் பேசிய தொழி லாளர் கட்சி நாடாளு மன்ற உறுப் பினரும், அயல்துறை நிழல் அமைச் சருமான பில் கோஃப் அவர்கள் பேசும்போது இலங்கையில் நடை பெற்ற போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். போர்க் குற்றவாளியாக குற்றம் சாற்றப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக் கான சிறீலங்காவின் தூதரை வெளி யேற்ற ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியினருடன் இணைந் துப் பணியாற்ற தனது கட்சி உறுதியாகத் தீர் மானித்துள்ளது என்று நியூசிலாந்து பசுமைக் கட்சித் தலைவி அறிவித் தார்.

தமிழ் ஓவியா said...

நாடாளுமன்ற உறுப்பினர் மெடிரியா டூரி ஆக்லாந்த் நாடாளு மன்ற பசுமைக் கட்சித் தலைவியும், அக்கட்சி யின் கூடுதல் தலை வருமான மெடிரியா டூரி பேசியதாவது:

உங்கள் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றி ணைந்து தொடர்ந்து நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நாங் கள் நெருக்கமாக கவ னித்துக் கொண்டு வரு கிறோம். இந்த விஷயத் தில் மிக உறுதியாகவும், திடமாகவும், சோர்வில் லாமலும் நீங்கள் செய லாற்றி வருகிறீர்கள். அத னால்தான் சிறீலங்காவில் உள்ள பிரச்சினைகள் பற்றி நாங்கள் நன்கு அறிந்தவர்களாக இருக் கிறோம். அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளரால் அமைக் கப்பட்ட நிபுணர் குழு வினர் தங்களது அறிக் கையில் தெரிவித்துள்ள படி இலங்கையில் நடை பெற்ற போர்க் குற்றங் கள், மனிதத் தன்மைக்கு எதிரான குற்றங்கள் மற் றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச தீர்ப்பாயத்தால் வெளிப் படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றஉலகளாவிய கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.

அத்துடன் மற்றொரு அறிவிப்பையும் நான் வெளியிடுகிறேன். சிறீலங்காவின் கடற் படையில் முன்பு பணி யாற்றிய, தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சிறீலங்காவின் தூதுவ ராக இருக்கும் திசாரா சமரதுங்கேயை வெளி யேற்ற, ஆஸ்திரேலியாவின் பசுமைக் கட்சியின ருடன் இணைந்து, தக்க அழுத்தம் கொடுக்க நாங்கள் உறுதி பூண்டுள் ளோம்.

ராஜரீக உறவு, நடை முறைகளில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நன்னெறிக் கோட் பாடுகள், ஒழுங்குமுறை களை மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் தொடர் புடைய ஒருவர் சீரழிப் பதை நாங்கள் ஒரு போதும் அனுமதியோம்.
-இவ்வாறு மெடிரியா டூரி பேசினார்.

மனித உரிமை ஆர்வலர் ஜான் மிண்டோ நியூசிலாந்து நாட் டைச் சேர்ந்த புகழ் பெற்ற மனித உரிமை ஆர்வலரான ஜான் மிண்டோஅவர்கள் பேசியதாவது:

அனைத்து மக்களின் உரிமைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உலகின் எந்த பகுதியி லும் இருக்கும் பூர்வக் குடி மக்களின் உரிமை களுக்கு நாங்கள் குரல் கொடுக்கிறோம். உரிமை கள் என்பது உலகளா வியது; அனைத்து மக்க ளுக்கும் சமமானது. பெரும்பான்மையினரின் உரிமைகள், சிறுபான் மையினரின் உரிமைகள் என்று எதுவும் கிடை யாது.பெரும்பான் மையினரின் கொடுங் கோன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

உங்களின் சுயநிர்ணய உரிமையை தொடர்ந்து நீங்கள் வெளிப்படுத்திக் கொண்டு வருவதை நான் அறிவேன். அய்க் கிய நாடுகளின் பிரக டனங்களில் அளிக்கப் பட்டிருக்கும் உங்கள் உரிமைகளை அங்கீ கரித்து, மதிக்காத ஒரு நாட்டில் நீங்கள் வாழ் வது என்பது முடியாது என்பதால், உங்களது சுயநிர்ணய உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம் அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட நிபு ணர் குழுவினர் தங் களது அறிக்கையில் தெரிவித்துள்ளபடி இலங்கையில் இழைக் கப்பட்ட போர்க் குற் றங்கள், மனிதத் தன் மைக்கு எதிரான குற்றங் கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு சுதந்திரமான சர்வதேச தீர்ப்பாயத் தால் வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது- இவ்வாறு ஜான் மிண்டோ பேசினார்.

அயல்துறை நிழல் அமைச்சர் பில் கோஃப் ஆக்லாந்து அரசின் அயல்துறை நிழல் அமைச்சரும் நாடாளு மன்ற உறுப்பினருமான பில் கோஃப் பேசிய தாவது:

சிறீலங்காவில் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப் பட்டுவரும் கொடுமை கள் பற்றி நாங்கள் விரிவாக அறிந்து கொள்ள, நீங்கள் மேற்கொண்டு வரும் தொடர்ந்த முயற் சிகளும் செயல்பாடு களும் உதவின.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித இனத்துக்கு எதி ரான குற்றங்கள் ஆகி யவை அனைத்துலக சட் டங்களின் கீழ் முறை யான விசாரணை இன்றி தவிர்க்கப் படுவதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது.

முதலில் இழைக்கப் பட்ட கொடுமைகளுக்கு நீதிவழங்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான போதுமான இழப்பீடுஅளிக்கப் படாத வரை எந்த வித சமாதானமும் எட்ட இய லாது. ஆனால், இது வரை இது போன்ற சமா தானத்தை எட்டும் முயற்சி எதுவும் இலங்கை யில் மேற்கொள்ளப்படவில்லை; வெறும் சொற்களில் மட்டுமே இது பேசப் பட்டு வருகிறது.
-இவ்வாறு பில் கோஃப் பேசினார்.

(தகவல்:டாக்டர் சோம. இளங்கோவன்
4-8-2012

தமிழ் ஓவியா said...

அன்னா ஹசாரே ஆட்டம் முடிந்தது!

திடீரென்று காந்தி குல்லாய் அணிந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் ஊழலை ஒழிக்கப் போகிறேன் ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று கூவிக் கொண்டு ஓடி வந்தார். இப்படிப்பட்ட உத்தம புத்திரனைத்தானே வரலாறு தேடிக்கொண்டிருந்தது என்ற பாணியில் இந்த நாட்டு ஊடகங்கள் எல்லாம் தூக்கிப் பிடித்து வித்தைகள் காட்டின.

நாட்டில்தான் ஊழல்கள் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கின்றனவே. இவற்றின் மீது வெறுப்பு கொண்ட வெகு மக்களும் இந்த மனிதரின் குரலைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தனர்.

ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் - பிரதமர் உட்பட விசாரிக்கப்படுவதற் கான அதிகாரம் உள்ள ஒரு மய்யம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறி இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உண்ணாவிரதமும் இருக்க ஆரம்பித்தார். காந்தி குல்லா போட்டவராயிற்றே - அவர் பாணியில் மக்களைக் கவர வேண்டாமா? மக்களும் கூட ஆரம்பித்தனர். பெரும் கூட்டத்தைப் பார்த்த மனுசர், தான் இந்தியாவின் மிகப் பெரிய தலைவராக அப்பொழுதே ஆகிவிட்டதாக மனப்பால் குடித்தார்.

ஆனாலும் அவரின் அடையாளம் அவ்வளவு சீக்கிரம் வெளிப்பட்டுவிடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. உண்ணாவிரத மேடையை ஆக்கிரமித்துக் கொண்டவர்களோ ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்கள் சகிதம் மேடையின் பின் திரையில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பயன்படுத்தும் பாரதமாதா படம்.

கிழிந்தது கஞ்சனூர் பஞ்சாங்கம்! விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்தன. இவரின் பூர்வோத்திரம் ஆர்.எஸ்.எஸ்.சில் தொடங்கப்பட்டது என்றெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்து விட்டது.

1983 இல் நானாஜி தேஷ்முக் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவரின் தலைமையில் ஹசாரே பணியாற்றினார் என்பதெல்லாம் படத்துடன் இந்தி நாளிதழில் வெளிவந்தது.

அதற்கேற்றாற்போல ஊழல் எதிர்ப்பு என்ற பீரங்கியை காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பக்கம் திருப்பினாரே தவிர, ஊழலின் உறைவிடமாக இருந்த பி.ஜே.பி. ஆளும் கருநாடகா போன்ற மாநிலங்கள் பக்கம் பராக்குக் கூடப் பார்க்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடி ஊழலற்ற ஆட்சியை நடத்துகிறார் என்று சொல்லித் தொலைத்துவிட்டார். போதும் போதாதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவர் மோகன்ராம் பகவத் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்ற பாணியில் செதிர் காயாக ஓர் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார்.

அன்னா ஹசாரேக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் தொடர்பு உண்டு; ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தும்படிச் சொன்னதே நாங்கள்தான்! என்று கோணிப் பைக்குள் பதுங்கி இருந்த பூனையை வெளியில் அவிழ்த்து விட்டுவிட்டார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா 10-11-2011)

தலைநகரில் ஜந்தர் மந்தரில் ஹசாரே மேற் கொண்ட உண்ணாவிரதத்துக்காகச் செலவழிக்கப் பட்ட தொகை ரூபாய் 50 லட்சம். இதற்காக பெரும் முதலாளிகளிடம் ரூபாய் 80 லட்சம் வசூலிக்கப்பட்டது என்ற தகவலும் அம்பலமானது.

அரசை நோக்கி அவர் வினாக்கணைகள் வீசியது போக, அவரை நோக்கி ஆயிரம் ஆயிரம் அம்புகள் துளைக்க ஆரம்பித்துவிட்டன. அவற்றிற்குச் சமா தானம் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது பரிதாபமே!

தனது அடுத்த கூடாரத்தை மும்பைக்கு மாற்றினார். மைதானம் இருந்ததே தவிர மக்களைக் காணோம்.

மறுபடியும் டில்லிக்கே சென்று உண்ணாவிரதம் என்று பாம்பாட்டி வித்தை காட்டினார். மக்களும் வரவில்லை; மத்திய அரசும் சமாதானம் பேச முன்வரவில்லை. நம் யோக்கியதை அவ்வளவுதான் என்று தெரிந்து கொண்ட ஹசாரேயும் - அவரைக் கைப் பொம்மையாக்கிக் குளிர் காய்ந்த அந்தக் குழுவும் சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்ற பாணியில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கப் போவதாக சப்த நாடியும் அடங்கி, ஈனக்குரலில் பேச ஆரம்பித்துள்ளனர். இதில் அன்னா ஹசாரேக்கு உடன்பாடு இல்லையாம்! குழுவுக்குள்ளேயே முரண்பாடுகள்.

பண ஊழலை விட இந்தியாவில் சமூக அமைப்பே வருணாசிரமதர்மம் என்ற ஊழல் மேடையில்தான் கட்டப் பட்டுள்ளது. அதைப் பற்றியெல்லாம் மூச்சு விடமாட்டார்கள். சுலபத்தில் விளம்பரம் கிடைப்பது பண ஊழலுக்குத்தானே! அதனை ஏணியாக்கி அரசியல் பதவிகளைப் பிடித்து விடலாம் என்ற நினைப்புதான் பலருக்கும். இதற்கு ஹசாரே குழுவும் விதிவிலக்கல்லவே! 4-8-2012

தமிழ் ஓவியா said...

அன்னா ஹசாரே குழுவின் தப்புத் தாளங்கள்!



மக்கள் ஆதரவை கிட்டத்தட்ட முழுமை யாகவே இழந்து விட்டார் அன்னா ஹசாரே. அடுத்தடுத்து அவரது குழு வினர் செய்த தவறுகள், குழப்பங்கள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இக்குழு இழந்துவிட்டது. இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆழ்ந்து யோசிக்காமல் அரசியல் பிரவேசம் என்ற மிகப் பெரிய தவறான முடிவை எடுத்து விட்டார்கள். இது மக்களிடையே மட்டுமல்லாமல், அன்னா வின் ஆதரவாளர்களிடமே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் மூலம் அன்னா ஹசாரே முதல் முறையாக போராட களம் இறங்கியபோது இதோ இன்னொரு காந்தி வந்துவிட்டார் என்றுதான் மக்கள் பேசினார்கள். மகாத்மா காந்தியைக் கூட சற்று காலத்திற்கு மக்கள் மறந்து போய் விடும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் அன்னா படம்தான், பேனர்கள்தான்.

நாட்டு மக்களிடையே விஸ்வரூபம் எடுத்து நின்றார் அன்னா ஹசாரே. சுதந்திரப் போராட்டத்தின்போது மட்டுமே இப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே உணர்வுடன், போராட்ட குணத்துடன் மக்கள் இருந்தனர். அதன் பிறகு இப்போதுதான் அப்படிப்பட்ட ஒருமித்த உணர்வை அன்னாவின் போராட்டத்தின் மூலம் காண முடிவதாக மீடியா செய்திகளில் அன்னா புகழப் பட்டார்.

டில்லியில் அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருந்தபோது மக்கள் கூட்டம் அலை மோதியது. அதற்கு முன்புஅவர் கைது செய்யப்பட்டபோது டெல்லியே ஸ்தம்பித்துப் போனது. நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. அன்னாவின் போராட்டம் மக்களிடையே ஆர்வத்தை எழுப்பவில்லை. மும்பையில் முதல் தோல்வியைச் சந்தித்தார் அன்னா. அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்த போது அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்க வில்லை. தற்போது டில்லியில் ஜந்தர் மந்தரில் அன்னா குழுவினர் உண்ணா விரதம் இருந்தபோதும் ஆதரவு கிட்ட வில்லை. அன்னாவே உட்கார்ந்தபோதும் எதிர்பார்த்த ஆதரவு திரளவில்லை.

இந்த நிலையில்தான் அன்னா அரசியல் பிரவேசம் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார். ஆனால் இது தற்கொலை முடிவுக்குச் சமம் என் கிறார்கள் அன்னாவை அறிந்தவர்கள்.

உண்மையில் ஊழல், லஞ்சத்துக்கு எதிரான போராட்டமாகத்தான் அன்னா வின் குழுவினர் களத்திற்கு வந்தனர். ஜன் லோக்பால் மசோதாதான் அவர் களது முக்கிய இலக்கும் கூட. ஆனால் இவர்களது போராட்டம் காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறி வைத்து நடந்து வந்ததுதான் இவர்கள் செய்த முதல் தப்பு.

பிரதமரையும், காங்கிரஸ் தலைவர் களையும், மத்திய அமைச்சர்களையும் குறி வைத்து தொடர்ந்து தாக்கிப் பேசி வந்ததாலும், பிரசாரம் செய்து வந்த தாலும், நாடாளுமன்றத்தை கடுமையாக தாக்கிப் பேசியதாலும், எங்களை விட நாடாளுமன்றம் ஒன்றும் உயர்ந்ததில்லை என்ற கடுமையான வார்த்தைப் பிர யோகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாலும் மக்களிடம் இவர்கள் மீது அதிருப்தியே ஏற்பட்டது.

கர்நாடகத்தில எடியூரப்பா மீதும், அவரது கட்சியினர் மீதும் மிகப் பெரிய ஊழல் புகார்கள் வெடித்தபோதெல்லாம் அதற்காக அன்னா குழுவினர் யாரும் போராட வரவில்லை. எடியூரப்பாவின் ஊழல் குறித்து யாரும் பேசக் கூட இல்லை. இதுகுறித்து அன்னா ஹசாரே ஒரு கருத்தைக் கூட சொன்னதில்லை. முழுக்க முழுக்க காங்கிரஸை மட்டுமே எதிர்த்து வந்தார்கள் அன்னாவும் அவரது குழுவினரும்.

தமிழ் ஓவியா said...

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில கூட காங்கிரஸைக் குற்றம் சாட்டிப் பேசி வந்தார்களே தவிர திமுகவுக்கு எதிரா கவோ அல்லது ராசாவுக்கு எதிராகவோ போராட அவர்கள் சென்னை பக்கம் வரவில்லை. அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள முதல்வர் ஜெய லலிதாவுக்கு எதிராக இவர்கள் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

இதனால் இந்த அன்னா ஹசாரே குழுவின் நோக்கமே காங்கிரசுக்கு எதிராக அரசியல் செய்வது என்பதாகிவிட்டது.

இப்போது மக்களிடையே அன்னா குழுவினர் மீதான நம்பிக்கை முற்றிலும் போய் விட்டது என்பதே உண்மை. இதற் கும் கூட முழுக்க முழுக்க அன்னா குழுவில் உள்ள உறுப்பினர்களே காரணம். கிரண் பேடி மீதான பல்வேறு சர்ச்சைப் புகார்கள், அரவிந்த் கேஜ்ரிவால் மீதான புகார்கள் என சரமாரியாக புகார்கள் வந்தபோது அன்னா என்ன செய்திருக்க வேண்டும், அவர்களை அதிரடியாக நீக்கி தான் பாரபட்சமற்றவன் என்பதை நிரூபித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே போன்றோரின் கருத்துக்களுக்கு அன்னா குழுவினர் யாருமே மதிப்பு அளிப்பதில்லை. இதனால் அவர் கவுரவமாக ஒதுங்கிக் கொண்டார். பல்வேறு கருத்துக்களையும் கேட்டு ஒரு ஆரோக்கியமான விவாதத் திற்குப் பின்னர் நல்ல முடிவுக்கு வருவது தான் ஒரு வெற்றிகரமான இயக்கத்தின் வெற்றி ரகசியம். ஆனால் அன்னா குழு வில் அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை. இப்போது மக்கள் செல்வாக்கை இழந்துள்ள நிலையில் அரசியல் பிரவேசம் என்ற தவறான முடிவுக்கு அன்னா வந்திருப்பது அவருக்கான ஆதரவு பலத்தை மேலும் மோசமாக செயலிழக்க வைக்கவே வகை செய்யும் என்கிறார்கள் அன்னாவின் போராட்ட வியூகம் குறித்து அறிந்தவர்கள்.

அரசியல் களங்கப்பட்டிருக்கிறது, அரசியல்வாதிகள் சரியில்லை, நாடாளு மன்றம் மோசமாக உள்ளது என்று கூறி விட்டு இப்போதே அதே அரசியலில் அன்னாவும் காலடி எடுத்து வைப்பது நிச்சயம் புதிய பாதையாக இருக்க முடி யாது, தடம் மாறிய பாதையாகவே இருக்க முடியும்.

ஒருவேளை அரசியல் பிரவேசம் என்று அன்னா குழுவினர் தீர்மானித்து விட் டால், அதில் உறுதியாக இருந்தால் அவர்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்வார்கள்... காங்கிரஸை மட்டுமேவா அல்லது மற்றவர்களையும் எதிர்ப் பார்களா?

அத்வானிக்கு எதிராக வேட்பாளர் களை நிறுத்துவார்களா? ஜெயலலிதா வுக்கு எதிராக நிறுத்துவார்களா? எதி யூரப்பாவை எதிர்த்து கடுமையாக பிர சாரம் செய்வார்களா? ராசாவை எதிர்த்து வெறித்தனமாக உழைப்பார்களா?

காங்கிரஸை மட்டுமே எதிர்ப்போம் என்று கூறிக் கொண்டு அரசியல் களத்தில் அன்னா ஹசாரேவும் அவரது கட்சியினரும் களம் இறங்கினால் அது மக்களை முட்டாளாக்கும் வேலையாகவே அமையும். காங்கிரஸ் மட்டும்தான் ஊழல் செய்கிறது, மற்றவர்களெல்லாம் ஒழுக்க சீலர்கள் என்பது போல இவர்கள் சொன் னால் அது அவர்களின் பெரிய முட்டாள் தனமாகவே முடியும்.

மக்கள் வெறுக்க ஆரம்பித்து விட்ட நிலையில் அவர்களிடமிருந்து தப்பி அரசியலுக்குப் போவது என்பது புலி வாலைப் பிடித்த நாயர் கதைதான் என்பதை ஹசாரே குழுவினர் புரிந்து கொண்டால் சரி... 4-8-2012