Search This Blog

16.8.12

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிமீது கிரிமினல் வழக்கு!


வீரமணியின் மனைவி என்னைச் சந்தித்தார் என்று கூறிய சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிமீது வழக்கு செய்தி வெளியிட்ட தினமலர்மீதும் கிரிமினல் வழக்கு!



(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், தமிழர் தலைவர் கி.வீரமணி, வழக்கறிஞர் த. வீரசேகரன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் உள்ளனர். (சென்னை - 16.8.2012))

அக்டோபர் 5 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு

செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு


  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்விணையரும் தம்பியும் தம்மைச் சந்தித்ததாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாக தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது.

ஜெயேந்திர சரஸ்வதி மீதும், திருச்சி பதிப்பு தினமலர் மீதும் அவதூறு வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

திருச்சி பதிப்புத் தினமலரில் (10.5.2012) கீழ்க்கண்ட செய்தி வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ஆன்மிகத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. தமிழகத்திலும் ஆன்மிகம் சிறப்பாக உள்ளது. ஆன்மிக வளர்ச்சிக்கு அரசு முழு அளவில் ஆதரவு அளித்து வருகிறது.

ஆனால் திமுக தலைவர் கருணாநிதியும், தி.க. தலைவர் வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதிராகவே செயல் பட்டு வருகின்றனர். பேசி வருகின்றனர். ஆனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் 3 முறை என்னை வந்து சந்தித்துள்ளார்.

வீரமணியின் மனைவியும், மத்திய அமைச்சர் அழகிரி மனைவியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளனர். வீரமணியின் தம்பியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளார். கருணாநிதியும், வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதிராக செயல்பட்டாலும், அவர்கள் குடும்பத்தினர், ஆன்மிகத்துக்கு ஆதரவாகவே உள்ளனர் என்று தினமலரில் செய்தி வெளிவந்துள்ளது.


இந்தச் செய்தி உண்மைக்கு மாறானது. எனது வாழ்விணையர் இயக்கக் கொள்கையில், பகுத்தறிவு செயல்பாட்டில் மிகவும் தீவிர உணர்வு கொண்டவர் - கடைபிடிக்கக் கூடியவர்!

இந்த நிலையில் எனது வாழ்விணையர் காஞ்சிபுரம் சங்கராச்சாரியாரைச் சந்தித்தார் என்று சொல்லுவது  கழகத் தோழர்கள் மத்தியிலும் ,பொது மக்கள் மத்தியிலும் எங்கள்மீது அவதூறை, கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இதுகுறித்து தினமலர் ஏட்டுக்கும், சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி அவர்களுக்கும் வழக்குரைஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சங்கராச்சாரியார் சொன்னதைத்தான் நாங்கள் வெளியிட் டோம். எங்களுக்கு வேறு நோக்கம் இல்லை என்று தினமலர் தரப்பி லிருந்து பதில் வந்தது. சங்கராச்சாரியாரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை.

இந்த நிலையில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மற்றும் திருச்சி பதிப்பு தினமலர் மீதும், எங்களது இரண்டாவது மகனும், திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாள ருமான வீ.அன்புராஜ் சென்னை மெட்ரோபாலிட்டன் முதன்மை நீதிபதி முன் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டு வரும் அக்டோபர் 5ஆம் தேதியன்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ள இருவரும் நேரில் ஆஜராக வேண்டு மென்று ஆணை பிறப்பித்துள்ளார் நீதிபதி.


விமர்சனம் என்பது வேறு உண்மைக்கு மாறாக அவதூறாகச் சொல்லுவது என்பது வேறு. நாங்கள் விமர்சனங்களை சந்திக்கத் தயாராகவே உள்ளோம் அதே நேரத்தில் அவதூறு செய்தால் அதனை சட்ட ரீதியாகச் சந்திப்போம். இதில் குற்றம் நிரூபிக்கப் பட்டால் இபிகோ 500 மற்றும் 501 பிரிவின்படி இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் என் தம்பியும் சங்க ராச்சாரியாரைச் சந்தித்தாராம். எனக்குத் தம்பியே கிடையாது. எங்கள் குடும்பத்தில் நான்தான் கடைசிப் பிள்ளை!

தினமலரைப் பொறுத்தவரை சங்கராச்சாரியார் சொன்னதைத் தான் நாங்கள் அப்படியே வெளியிட்டோம். வேறு நோக்கம் இல்லை என்று பதில் சொன் னாலும்கூட  செய்தி வெளியிடுவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மன்னிப்புக் கோரினாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதுதான் சட்டத்தின் நிலை என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

 ********************************************************************************

டெசோவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கேள்வி: டெசோ மாநாட்டுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்: (1) தமிழ்நாடு முழுவதும் டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் ஆகஸ்டு 20 முதல் 30 வரை நடக்கும் என்று டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். இதில் டெசோவின் உறுப்பினர்களாக உள்ள கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.

(2) டெசோ மாநாட்டுத் தீர்மானம் அய்.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படும்.

(3) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

மாநாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அலறுவதே போதுமானது. இன்றைய நாளேடுகளில் அது பற்றிய செய்தியும் வெளிவந்துள்ளது.

டெசோ மாநாட்டைத் தடை செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு முதல் அமைச்சர்  சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றும்போது கூட ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பேசவேண்டிய அளவிற்குத் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

எந்தெந்த கோணத்தில் யார் ஆதரவு கொடுத்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம்! இதற்குப் பிறகாவது வீண் விமர்சனங்களை நிறுத்திக் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

- சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (16-8-2012)
*******************************************************************************
ஆன்மீகவாதிகளாக மாறி விட்டனரா?

கேள்வி: விஞ்ஞான மனப்பான்மை ஒருபக்கத்தில் வளர்ந்தாலும் ஒருகாலத்தில் நாத்திகர்களாக இருந்தவர்கள்கூட, பிற்காலத்தில் ஆத்திகர்களாக மாறும் நிலை ஏற்பட்டு வருகிறதே! ஆன்மீகவாதி களாக மாறுகிறார்களே?

பதில்: யாரோ ஒருவர், இருவர் அப்படி மாறியிருக்கலாம் பெரும்பாலும் ஆத்திகர்களாக இருந்தவர்கள்தான் நாத்திகர்களாக மாறினர் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. திராவிடர் கழகத் தோழர்களைப் பொறுத்தவரை கொள்கையில் எப்பொழுதுமே உறுதியாக இருக்கக் கூடியவர்கள்.

உலகம் பூராவும் நாத்திகர்கள் எண்ணிக்கை வளர்ந்து வருகிறது என்று இன்றைக்கும்கூட செய்திகள் வெளி வந்துள்ளனவே!

- சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர்

                        ---------------------"விடுதலை” 16-8-2012

14 comments:

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்

சமபந்தி!

செய்தி: ஆகஸ்டு 15 சுதந்திர நாளையொட்டி கோயில்களில் சம்பந்தி விருந்து.

சிந்தனை: நாள் தோறும் உணவு விடுதி களிலும் அதுதான் நடந்து கொண்டு வருகிறது. கோயிலுக்குள் இன்னும் சில இடங்களில் தாழ்த்தப் பட்டோர் நுழைய முடிய வில்லை; கோயில் கரு வறைக்குள் ஒரு ஜாதி மட்டும் தான் நுழைய முடியும். அங்கெல்லாம் சம்பந்தி நடப்பது எப்பொழுது?

16-8-2012

தமிழ் ஓவியா said...

எதிரியைப் பார்!

சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடுபற்றி இன எதிரிகள் இல்லாததும் பொல்லாததுமான விஷமச் செய்திகளைப் பரப்பும் வேலையில் மும்முரமாக இறங்கினர்.

மாநாட்டின் நோக்கம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத் துருவில், தனியீழம் தொடர்பான தீர்மானம் மாநாட் டில் நிறைவேற்றப்படாது என்று சொன்னதுதான் தாமதம் - டெசோ என்று பெயர் வைத்துக் கொண்டு தனியீழம் கேட்கும் தீர்மானம் மாநாட்டில் இடம் பெறாது என்றால் என்ன பொருள் என்று வீராதி வீரர்கள் போலே தோளைக் குலுக்கினார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், டெசோவை இரண்டாவது முறை புதுப்பித்த போது தனியீழம் கேட்கும் அதன் குறிக்கோளை வரவேற்றார்களா என்றால், அதுதான் இல்லை.

அப்பொழுதும் ஏறுமாறான விமர்சனங்களில்தான் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை மய்யப்படுத்தி அவர் எது செய்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது என்ற திசையில் எழுதி வந்தனர்.

மாநாடு நடக்காது; தடை செய்யப்பட்டு விடும் என்றனர். அதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டனர் என்பதும் உண்மைதான். டெசோ அமைப்பில் பதற்றப்படாத, பக்குவமான முயற்சி களினால், எதிர்ப்பாளர்களின் முகங்களில் கரி தடவப்பட்டு, டெசோ மாநாடு வெகு சிறப்பாகவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அட்டியின்றி நடைபெற்றது.

சில பல காரணங்களால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர்கள் வரவில்லை என்றாலும் உலகம் தழுவிய அளவில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.

சிங்களவரான - இடதுசாரி எண்ணம் கொண்ட டாக்டர் விக்ரம பாகுகர்ண ரத்தினே அவர்களே கலந்து கொண்டு ராஜபக்சேயின் பாசிச நடவடிக்கைகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். மிக அருமையான தீர்மானம் 14 - ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது குறை சொல்ல முடியாத நிலையில் தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் சம்பிரதாயமான முறையில் மாநாடு நடைபெற்றது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டுள்ளன.

இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்னும் அளவுகோல் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது எதிரிகளிடத்தில் தான் இருக்கிறது.

ஈழத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கை அரசால் கண்காணிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்துத் தெரிவித் திருந்தது. (அதனைக் கண்டித்துக்கூட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

இலங்கை அதிபர் ராஜபக்சே டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்தும் டெசோவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகும்.

இதன் மூலம் டெசோ நடத்தும் மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது என்பது வெளிப்படையாகி விட்டதா - இல்லையா?

மாநாடு முடிந்த நிலையில்கூட இலங்கையில் உள்ள சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ன கருத்துக் கூறியுள்ளது?

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால், மகிந்த ராஜபக்சே அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அய்.நா.வில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட தனியீழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளதே!

எதிரிகள் நம்மைச் சரியாகப் புரிந்து கொண் டுள்ளனர். ஆனால் இங்குள்ளவர்களோ டெசோ மாநாடு தோல்வி என்கின்றனர். இவர்களை எது கொண்டு சாற்றுவதோ! 16-8-2012

தமிழ் ஓவியா said...

பாலிமர் தொலைக்காட்சியில் அனல் பறக்கும் விவாதத்தில் தமிழர் தலைவர்

19.8.2012 ஞாயிறு இரவு 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில் A.L. கண்ணனின் அனல் பறக்கும் விவாத அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சூடும் - சுவையும் நிறைந்த பதில்கள் ஒளிபரப்பப்படும்.

தமிழ் ஓவியா said...

சாதிக் கொடுமை!

ஒருமுறை சண்டாளன் தான் உண்ட பிறகு எச்சில் இலையை வீசி எறிந்தான். அது காற்றில் பறந்து பதினாயிரம் பிராமணர்களுக்காக சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுச் சாலையில் விழுந்தது. அதனை முதலில் கவனியாமல் உணவுண்ட பதினாயிரம் பிராமணர்களும் செய்தி தெரிந்த பின் பிராமண சாதியிலிருந்து நீக்கப்பட்டு சூத்திராயினர்.

மற்றொரு ஊரில் பசித்தாளாமல் சூத்திரன் உண்டு எச்சிய சோற்றை தின்ற பிராமணன் தன் சாதிக்காரர்களின் கொடுமைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டான் என்ற புத்த சாதகக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: சாதிகளின பொய் தோற்றம் என்ற நூல், பக்கம் 108.

தமிழ் ஓவியா said...

ஈரேழு லோகமாம்!



கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்.

ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா? உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

மற்றொரு வேண்டுகோள்: அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர்வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.

-புரட்சிக் கவிஞர் (பாரதி தாசன் கதை: பக்கம்:100)

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!



பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண்டும். அய்யருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பையனுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...

அப்பா, ஒரு சந்தேகம்!



மகன்: ராஜ கோபுரத்தின் முன்னேயே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?

தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு

மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?

தகப்பனார்: (மகனை முறைத்துப் பார்க்கிறார்)

மகன்: (பயந்து கொண்டு) அப்பா.

தகப்பனார்: என்னடா?

மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.

தகப்பனார்: சரி என்னத்தை கேட்கப்போற?

மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?

தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம் இவைகளை கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.

மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?

தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.

- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.

தமிழ் ஓவியா said...

இராமாயணம் ஒரு கட்டுக்கதை!

சம்பூகன் வதம் ஆரிய திராவிட போராட்டம்! இராமாயணம் ஒரு கட்டுக்கதை' என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிவித்துள்ளார்.

இராமாயணம் என்ற நெடுங்கதையே (இதிகாசம்) பலகாலமாக சிறுகதை களாக கூறப்பட்டு; பல பகுதிகளில் பலவாறாக விரிவாக்கம் செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட கதை நூலேயாகும். இராமாயணங்களுக்கான மூலக்கரு இருக் வேதத்திலிருந்து எடுக்கப்பட் டுள்ளது என்று தெரிகிறது. ''இருக் வேதத்தில் (இருக் வேதம் -457) சீதையென்னும் பெண் வயல் நிலங் களுக்கு தெய்வமாகவும் உழவு காலமாகவும் சொல்லப்படுகிறாள்; மழைக் கடவுளாகச் சொல்லப்படும் இந்திரன் சீதையின் கணவனாக அங்கே சொல்லப் படுகிறான்.வால்மீகி இராமாயணத்தில் உழவுச் சாலின் முனையில் நிலத்திலிருந்து சீதை பிறந்தாள் என்றும், முடிவில் நிலத்தில் புகுந்து மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது.

(சீதை என்றாலே ஏர் கலப்பை என்று தான் பொருள்).

'ராம்' என்ற சொல் இந்திரனுக்குரிய ஒரு பெயராகவே இருக் வேதத்தில் (இருக் வேதம்- 110, 151, 152) பல இடங் களில் காணப் படுகிறது.''

(கேம்பிரிட்ஜ் இந்திய வரலாறு -தொகுப்பு 1 -பக்கம் 223- ஆக்ஸ்ஃபோர்டு- இந்திய வரலாறு-பக்கம் 118). ["விடுதலை'' அசுரன் மலர் 2006, பக்கம்- 16] ''உலக அனுபவத்தை வைத்து ஆராய்ந்து யோசித்தால், வால்மீகி ரிஷியானவர் இராமாயணத்தை பாடியதற்கு முன்னமேயே, அதாவது புராதன காலந்தொட்டே சீதா ராமசரித்திரம் மக்களிடை எழுத்து வடிவம் பெறாமலே பல நூற் றாண்டுகள் வாய்வழிக் கதையாக வழங்கி வந்திருப்பதாகத் தோன்றுகிறது.

கர்ண பரம்பரையாக முன்னமேயே இருந்த ராம சரிதத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு வால்மீகி பகவான் நூல் வடிவம் கொடுத்தார்போல் தோன்றுகிறது. அதனாலேயே கதையில் பல சிக்கல்கள் ஏற்பட்டதென்றும் ஊகிக்கலாம்'' என்று இராஜாஜி கூறு கிறார். [இராமாயணம்-வால்மீகியும் கம்பரும், பக்கம் -15]

புத்த மதத்தினரின் ஜாதகக் கதை களில் (போதிசத்துவரின் கதைகள்) வரும் இராமாயணம் தான் முதல் முதலாக வழங்கப்பட்ட இராமாயணம் என்று தெரியவருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கூறு வது போல், வால்மீகி இராமாயணத்தில் புத்தரைப் பற்றி வருவதால் புத்தர் காலத்திற்கு பின் (2500 ஆண்டு களுக்குள்) தான் வால்மீகி இராமா யணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

வால்மீகி இராமாயணம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இராமா யணக் கதைகள் நாட்டில் உலவி வருகின்றன. காளிதாசரின் இரகு வம்சம் என்கிற காவியத்திலும் இராமாயணக் கதை வருகிறது;

அதிலும் சம்பூகன் வதம் பற்றி வருகிறது. அதில் சம்பூகன் என்கிற சூத்திரன், நான்காம் வருணத்தவன், தலைகீழாக மரத்தில் தொங்கிக் கொண்டு இராம ராஜ்ஜி யத்தில் தவமிருப்பதால் வருணதர்மம் கெட்டு, பார்ப்பன சிறுவன் இறந்து விட்டதாகவும்; இதை கேட்ட இராமன் புஷ்பக விமானத்தில் சென்று, சம்பூ கனை வாளால் வெட்டிக் (தலையை சீவி) கொன்று வருணதர்மத்தை காத் தான் (16வது சருக்கம்) என்று உள்ளது.

இராமாயணம் கட்டுக்கதை என் றாலும், பார்ப்பனர்கள் புராணங்களை யும், வேதங்களையும், சாஸ்திரங்களையும் தனக்கு சாதகமாக அமைத்துக் கொண்டு தான் வாழவும், மற்றவர்களை அழிக்கவும், தாழ்த்தவும், இழிக்கவும் பயன்படுத்திக் கொண்டனர்; இதனால் எழுந்தது தான் ஆரிய திராவிட போராட்டம்.

தகவல்: செ.ரெ. பார்த்தசாரதி, சென்னை
18-8-2012

தமிழ் ஓவியா said...

சிந்தனை துளிகள்

சந்தேகம் விவேகத்தின் தொடக்கம், முடிவல்ல.
ஒரு வினாடி நாம் செய்யும் தவறு வாழ்க்கை முழுவதும், வேதனைகளை தேடித் தருகிறது.
துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலாகும்.
கருணையும், இரக்கமும் இல்லாத ஒருவனை மனிதன் என்றழைக்க முடியாது.
சிக்கல்கள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
பலவீனருடைய பாதையில் தடையாயிருக்கும் கல், பலமுள்ளவர்களின் பாதையில் படிக்கல்லாய் இருக்கும்.

தமிழ் ஓவியா said...

முதலில் படியுங்கள்!

திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் என்பவை அடிப்படையானவை - மேலோட்டமாக அதனைப் பார்க்கக் கூடாது. எடுத்துக் காட்டாக கல்லூரிப் படிப்பைப் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் வரவேண்டும் என்ற நிலை.

சென்னைக்கு வந்தால் எங்கே தங்கிப் படிப்பது. விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களிடத்தில். பார்ப்பனரல்லாதார் அங்குத் தங்கி உணவருந்த முடியாது. வேண்டுமென்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில்தான் டாக்டர் சி. நடேசனார் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக திராவிட சங்க விடுதி (னுசயஎனையை ஹளளடிஉயைவடி ழடிளவநட) என்ற பெயரில் விடுதியைத் தொடங்கினார். (1916)

இன்றைக்கு அதன் அருமையை உணர முடியாமல் இருக்கலாம். அந்தக் கால கட்டத்தில் பாலை வனத்தில் ஒரு சோலைவனம் என்றே அதனைச் சொல்ல வேண்டும். டாக்டர் நடேசனார் அன்று தோற்றுவித்த திராவிடர் சங்கம், ஆண்டுதோறும் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்ற பார்ப்பனர் அல்லாத மாணவர்களை அழைத்துப் பாராட்டியது.

டாக்டர் டி.எம்.நாயர், ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் எல்லாம் அத்தகு கூட்டங்களில் பங்கு கொண்டு பார்ப்பனர் அல்லாத மாணவர்களைப் பாராட்டுவார்கள் - ஊக்கப்படுத்துவார்கள்.

டாக்டர் டி.எம். நாயர் ஒரு முறை மாணவர்களைப் பாராட்டியபோது கீழ்க்கண்ட உணர்ச்சி மிகு சொற்களைப் பயன்படுத்தினார்.

“Awake, Arise or Be For Ever Fallen”

விழித்துக் கொள்ளுங்கள்! எழுச்சி பெறுங்கள்!! இன்றேல் என்றும் நீவிர் வீழ்ந்து பட்டோராவீர்!!!

என்பதுதான் அந்த எழுச்சியூட்டும் வீரம் செறிந்த வரிகள்.

டாக்டர் நடேசனார் அவர்களால் உண்டாக்கப்பட்ட விடுதியில் படித்த மாணவர்கள்தாம் - பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்த எஸ்.ஜி.மணவாள ராமானுஜம், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள்.

திராவிடர் இயக்கம் என்ன செய்து சாதித்துக் கிழித்தது என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறும் பொறுப்பற்றவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சமூகமும் முன்னேற வேண்டுமானாலும் அந்தச் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து கொடுத்தது திராவிடர் இயக்கம். (சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் சாத்திர மயமாக்கி வைத்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.)

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் செய்த முதல் செயல் என்ன? 1937-1939 இல் 2,500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால் அதன் தன்மை என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஒரு காலத்தில் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் மாணவர்களைத் தேர்வு செய்து சேர அனுமதிக்கும் அதிகாரம், உரிமைகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்களுக்குத் தான் உண்டு. அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர்கள்தான் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்களாக இருந்ததால் பார்ப்பனர் அல்லாதார் கல்லூரி களுக்குள் கால் பதிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த ஆதிக்கக் கதவடைப்பிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர்களை மீட்டெடுக்க கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குக் குழுக்களை நீதிக்கட்சி ஆட்சி ஏற்படுத்தியது.

பிற்காலத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ராஜாஜி அத்தகைய குழுக்களைக் கலைத்துவிட்டார்.

இப்படி பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டக் களமாகத்தான் கல்வித் தளம் அமைந்திருந்தது.

முரசொலி மாறன் அவர்களால் எழுதப்பட்ட திராவிட இயக்க வரலாற்று நூலில் ஏராளமான தகவல்கள் தாராளமாகக் கிடைக்கும்.

தமிழ்த் தேசியம் பேசுவோர் இது போன்ற நூல்களை முதலில் படிக்கட்டும்! 18-8-2012

தமிழ் ஓவியா said...

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றக்கோரி குமரி மாவட்ட கழகத்தினர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்


குமரி மாவட்ட தோழர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி, ஆக.18- கன்னியாகுமரி மாவட் டத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், மத விழாக்களில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப் படும் அலங்கார வளைவு களை அனுமதிக்கக் கூடாது. அதுபோல மத விழாக்களில் வழிபாட் டுத்தலங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி களை அனுமதிக்கக் கூடாது ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்,மாவட்ட அமைப்பளார் ஞா. பிரான்சிஸ், பொதுக் குழு உறுப்பினர் ம.தயா ளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட மாணவரணி அமைப் பாளர் இல.செந்தமிழ், மாவட்ட இளைஞரணி செயலாளர் த.சுரேஷ், மாவட்ட மகளிரணி தலைவர் ச.ச.மணிமே கலை, நாகர்கோவில் நகர இளைஞரணி தலைவர் மு.சேகர், கழக தோழர்கள் கோட்டார் ச.ச.கருணாநிதி, கராத்தே மாஸ்டர் தலக்குளம் ஆ.சிவக்குமார், பள்ளம் லார்சன் பின்றோ, மந் தாரம்புதூர் மா.ஜான் மதி, கழக ஆதரவாளர் வி.இக்னேசியஸ் ஆகி யோர் 16.8.2012 அன்று காலை 11.30 மணிக்கு நாகர்கோவிலில் இருக் கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுத்த மனுவின் நகலை குமரி மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் போன்றோருக்கு நடவடிக்கைக்காக மாவட்ட செயலாளர் அனுப்பிவைத்துள்ளார். 18-8-2012

தமிழ் ஓவியா said...

பெரியாரின் இலட்சியங்கள்! - ஜி.டி.நாயுடு



பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை. அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன்.

இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...

பெரியார் மாளிகைக்குத் தீ வைக்க முயற்சி!



1953-இல் தந்தை பெரியார் அவர்கள் பிள்ளையார் (உருவச்சிலை) உடைப்புப் போராட்டத்தினை நடத்திய நேரத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்தும், அதன்வழி இயக்கத்தவர் பெற வேண்டிய பாடம் குறித்தும் 30.5.1953 விடுதலையில் முக்கிய அறிக்கையாக தலையங்கத்தில் அய்யா அவர்கள் எழுதியுள்ளதாவது:

... நான் 28ஆம் தேதி (28.5.1953) பிற்பகல் திருச்சிக்கு 55 மைல் தூரமுள்ள பாபநாசத்தை அடுத்த கோவில் தேவராயம்பேட்டைக்கு கழகக் கிளை திறப்பு விழாவிற்குச் சென்றுவிட்டு, அன்று இரவு சுமார் 10.30 மணிக்கு திருச்சிக்கு - என் ஜாகைக்கு வரும்போது கழகக் காம்பவுண்டிற்குள் சுமார் 1000பேர்கள் வரை தடிகள், கத்திகளுடன் இருந்து உற்சாகமாக ஆத்திரப் பேச்சுகள் பேசிக் கொண்டிருந்தனர். நான் குழப்பத்துடன் வண்டியை நிறுத்தினேன். ஆனால் - பெரியார் வாழ்க என்ற ஆரவாரத்திற்கிடையே என்னை வரவேற்றனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

ஒரு வாலிபனை இழுத்துக் காட்டி, அவனிடமிருந்த நெருப்புப் பற்றவைக்கத் தக்க ஒரு நெருப்புப் பந்தத்தைக் காட்டினார்கள். விஷயம் என்னவென்றால் - என் மாளிகையை கொளுத்த ஒரு கூட்டம் திட்டமிட்டு வந்ததாகவும், அந்தச் செய்தி நம் மக்களுக்கு எட்டி, ஊர் திரண்டு வந்ததாகவும், அப்போது சிலர் ஓடிவிட்டதாகவும், இந்த வாலிபனை ஓடிப்பிடித்ததாகவும் சொல்லியவுடன், போலீசாருக்குத் தகவல் தெரியப்படுத்தியிருப்பதாகவும் சொன்னார்கள். இது ஒரு பார்ப்பன மிராசுதார் ஏற்பாடு என்றும், சில பார்ப்பன வக்கீல்களின் மூளை வேலையென்றும் கூறி என்னை, உடனே மாடியில் படுத்துக் கொள்ளும்படி தட்டிக் கொடுத்து அனுப்பி விட்டனர்.

பின்னர் போலீஸ் வந்தவுடன், அவர்களை வைத்து எதிரிகள் ஓடிய வழியை, எதிர் காம்பவுண்டுக்குள் போய் பார்த்தனர். எதிர் காம்பவுண்டு சுவரின் உட்புறம் மற்றும் 2, 3 பந்தங்களும் ஒரு பாட்டில் பெட்ரோலும் இருக்கக் கண்டு எடுத்தார்கள். போலீசார் அந்த வாலிபரை அழைத்துக் கொண்டு, இவைகளையும் எடுத்துப் போய் விட்டனர்.

தமிழ் ஓவியா said...

எது தம்பி வேண்டும்?



(ஒரு தோழர், இந்தக் கொள்கை சிறந்ததா, அந்தக் கொள்கை சிறந்ததா? எந்தக் கட்சி உயர்ந்தது? என்று பலப்பல பிரச்சினைகளைப் பற்றிய விளக்கம் விசாரிக்கும் முறையில் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
கவிஞர், அக் கடிதத்தை கண்டார். தம்பி, ஏதேதோ பிரச்சினைகளை எண்ணித் தவிப்பதையும் தடுத்து, எது முக்கியமான பிரச்சினை என்பதையும் விளக்கி, அதன் மூலமாகவே தமது கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்து, ஒரு கவிதைக் கடிதம் தீட்டி அனுப்பினார். அது இது.)
கொல்லையிலே ஒரு சிட்டு - நல்ல கூட்டினிலே ஒரு கிள்ளை
சொல்லும் இவற்றினில் யாது - ஒரு துன்பம் இல்லாதது கூறு.
முல்லையிலே ஒரு வண்டு - பணமூட்டையின் மேல் ஒரு செல்வன்
இல்லை என்னாத நல்வாழ்வை நீ - இந்த இரண்டினில் விளக்கு
கோயில் பார்ப்பனர் வேதம் - குப்பை கூட்டிடுவாள் தமிழ்ப்பேச்சு
தூயதுயாது சொல் தம்பி - அன்றித் தொல்லை விளைப்பது யாது?
வாயிலிலே கொஞ்சும் ஏழை - சிலைவார்க்குந் திருப்பணியாளன்
ஈய நினைத்திடும்காசை - நீ யாருக்குநல்குவாய் தம்பி.
ஊருக்கு உழைத்திடக் கேட்டார் - உனை யோகம்புரிந்திடச் சொன்னார்
யாருக்கு உடன்பட எண்ணம்நீ - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கார்விதைக்கும் தொழிலாளன் - நேர் கைலையை வேண்டிடும் சைவன்
யாரப்பனே நலம் செய்வோன் - உரை இந்தப்பேர் வையகத்துக்கே.
கற்சிலை செய்தகற்றச்சன் - இருகைதொழும் கோயிலின் வேலன்
நற்கலை ஈபவன் யாவன் - நீ நன்கு விளக்கிடு தம்பி.
முற்றும் இசைத் தொழிலாளி - வாய்மூடி அருள்செய்யும் கண்ணன்
நற்சுவை தந்தவன் யாவன் - நீ நன்றி செலுத்துதல் யார்க்கு?
கடவுள் அணிந்திட்ட மாலை - பூங்காவிற் சிரிக்கின்ற முல்லை
உனதுபட்ட நெஞ்சத்தில் தம்பி - நல்ல உயிர்கொண்டு சேர்ப்பது யாது?
படைகொண்ட மன்னவன் செங்கோல் - சிறுபண்ணையில் பொதுத்தன்மை எடைபோட்டு நீ கூறுவாயோ - இங்கு எது நன்மை எது தீமை, தம்பி.
நெய்தான் பிழையான் புதுநூல் - பிறர் நூல்கண்டு செய்திட்ட பெருநூல்
வையத்தில் எது தம்பி வேண்டும் - நீ வாய்விட்டு விள்ளுவாய் தம்பி.
உய்யும் புரோகிதத் தந்தை - அவன், உத்யோகம் பார்க்கும் மைந்தன்
செய்யும் திருத்தொண்டு இரண்டில் - தம்பி, செம்மையாம் ஒன்றினைக் கூறு
நைகின்ற பெண்டாட்டி பிள்ளை - தெருநடுவிலே தள்ளாடும் கிழவன்
அய்யோ எனச் சொன்னபோது - நீ யாருக்கு முன் உதவவேண்டும்?
திராவிட நாடு - 14.4.1946, பக்கம்-1