Search This Blog

17.1.11

அய்யப்பப் பக்தர்கள் மறைவு - நமக்கோ ரத்தக் கண்ணீர்

கடவுள் பக்தி நிகழ்ச்சிகளை ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பால் விளைவு என்ன?
ராக்கெட் விஞ்ஞானியே மூடநம்பிக்கையாளர் - சாதாரண மக்களைச் சொல்ல வேண்டுமா?
115 அய்யப்பப் பக்தர்கள் மறைவு; உறவினர்கள் கதறல் - நமக்கோ ரத்தக் கண்ணீர்
பக்தர்களே! கடவுளுக்குச் சக்தி இல்லை என்று இனியாவது புரிந்து கொள்ளுங்கள்!
ஆக்கிரமிப்பு அனுமன் சிலை - கோயில்களை இந்து அறநிலையத்துறை தடுக்க வேண்டும்


கடவுள் பக்தி நிகழ்ச்சிகளை ஊடகங்கள் நேரடியாகப் பரப்புவதன் விளைவு பக்தர்களின் பலி இன்னும் அதிகமாகிறது. மது போதையைவிட பக்தி போதை கொடுமையானது. திடீர் கோயில் - அனுமன் சிலைகளை இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை தடுக்க வேண்டும். ஜன.14 அன்று 115 அய்யப்பப் பக்தர்கள் - இறந்த செய்தி கொடுமையானது. அவர்களது உறவினர்களின் கதறல் நம் உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. ராக்கெட் விடும் விஞ் ஞானிகளே மூடநம்பிக்கையாளர்களாக இருக்கும் பொழுது, சாதாரண மக்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?


இறந்த தமிழக பக்தர்களின் குடும்பத்திற்காக விரைந்து நடவடிக்கை எடுத்த முதல்வரைப் பாராட்டு கிறோம். கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள் பக்தர்களே! என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

பக்தி மூடநம்பிக்கை காரணமாக...


அந்தோ கொடுமை! அய்யப்ப சாமிக்கு வேண்டுதல் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக, மகர விளக்கு வெளிச்சத்தைக் காண என்று தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை பெருகுகிறது என்பது, இந்த அறிவியல் யுகத்தில் பெருமைப்படக் கூடியது அல்ல; வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது மோசடி என்பது முன்பே வெளியான உண்மை.


கடவுளின் பெயரால் பக்தி வியாபாரம்!


இங்கே தமிழ்நாட்டில் தெருவுக்குத் தெரு, மூலைக்குமூலை, (பெரும்பாலும்) வீட்டுக்கு வீடு சாமிகளும் கடவுள்களுக்குக் கோயில்களும் உள்ளன. திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாவது குறிப்பிட்ட ஊர்களில் பக்தி வியாபாரம் - கடவுளின் பெயரால் சுரண்டல் பிசினஸ் செழிப்பாக நடைபெறுகிறது!


இந்நாட்டில் உள்ள ஊடகங்களும் இந்த பக்தி போதைகளை ஊக்குவித்து, அந்த மூடநம்பிக்கை களைப் பெருக்குவதன் மூலம் தங்கள் வியாபாரத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளுகிறார்கள்.


ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பால்....


நாய் விற்ற காசு குலைக்காது!
கருவாடு விற்ற காசு நாறாதே!

அதுபோல மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சில ஏடுகளும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இந்த பக்தி மூடநம்பிக்கையை ஓர் ஊரில் நடப்பதை நேரடி ஒளிபரப்பு பொதிகை மற்றும் வானொலி ஒலி பரப்பு என்று அரசின் மதச் சார்பின்மையை, ஊடகங்கள் அக்கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு அநியாய மாய் இப்படி மக்களை அறியாமைப் படுகுழியில் தள்ளுவார்களா?


மத போதை, மது போதையை விடக் கொடுமை!


ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற பார்ப்பன இந்துமதவெறி அமைப்புகள், புதுப்புது பண்டிகைகளை தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து மக்களுக்கு பக்தி போதையை ஊட்டுவது - இந்த மதபோதை மது போதையை விடக் கொடுமை.


எப்படி எனில், குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பது பழமொழி. அது தெளியும் சில மணி நேரங்களில்! ஆனால் மத போதை, பக்தி போதை என்பது, அபின், கஞ்சா, சாராயம் மற்றும் பல போதை வஸ்துக்களைவிட மிகவும் கொடுமையானது.
அவை உடலைக் கெடுக்கின்றன. மூடநம்பிக்கை, பக்தி போதையோ மனித மூளையையே விலங்கிட்டு செயல்படாததாக ஆக்குகின்றது! ஈரோட்டு மருந்துதான் ஒரே மருந்து.


அனுமன் சிலை வைத்து உண்டியல் வியாபாரம்!


திடீர் என அனுமன் ஜெயந்தி என்று குரங்குக்குக் கோயில் கட்டி - வேண்டுமென்றே எங்குபார்த்தாலும் பெரும் சாலையோரங்களைத் தேர்ந்தெடுத்து சட்ட விரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல், பல அடி உயரத்திற்கு குரங்கு - அனுமார் நிற்கும் சிலை பொம்மையை வைத்து, உண்டியல் வியாபாரத்தை செழித்தோங்கச் செய்கின்றனர்.


அறநிலையப் பாதுகாப்புத் துறை அனுமதிக்கக் கூடாது


இவற்றை நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த் துறை, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைகள் அனும திக்கவே கூடாது; யாராவது தனியார் இப்படி பக்திச் சுரண்டல் பிசினசைத் துவக்குவதைக் கண்காணித்து, அதை அறநிலையப் பாதுகாப்புத் துறை தடுக்க வேண்டும்.


மார்க்சிஸ்ட் தோழர்களும் மறந்து விடுகிறார்கள்


கார்ல்மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள், (இந்தியாவைப் பற்றியவை) இந்தியாவில் குரங்கைக் கடவுளாகக் கும்பிடும் கொடுமையைக் கண்டித்துள்ளார் என்பதை ஏனோ நமது மார்க்சிஸ்ட் தோழர்களும் மறந்து விடுகிறார்கள்!


கேரளத்து அய்யப்பசாமி வரலாறோ ஆபாசம்! அருவருப்பு நிறைந்தது! ஹரிபுர புத்திரா என்று கோஷம் கொடுத்துக் கொண்டே அங்கே அசல் காட்டுமிராண்டிகள்போல தங்கள் உருவங்களை மாற்றிக்கொண்டு மெத்தப்படித்த மேதாவிகள், பதவியாளர்கள், ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் உள்பட பலரும் செல்வது - அவர்களது மனம் தங்களது அநீதி, அக்கிரம - லஞ்ச வாழ்க்கையை பம்பா நிதி என்ற அந்த நீரோடையில் கழுவிவிட்டு வர விரும்புகிறார்கள் போலும்!


ஆணும், ஆணும் பிள்ளை பெற முடியுமா?


ஹரி என்றால் விஷ்ணு (ஆண் கடவுள்); அரன் என்றால் சிவன். ஹரிஅர புத்திரன் என்றால், என்ன பொருள்? மகாவிஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்றால், ஆணும் ஆணும் கூடி பிள்ளை பெற முடியுமா? எந்த எந்த பக்தி போதையாளனும் யோசிப்பதில்லையே! மகா மகா வெட்கக்கேடு, சரியா?


பக்த கோடிகள் பத்திரமாகத் திரும்புகிறார்களா?


சாமியே சரணம் என்று கூவிக் கூவி அழைத்து பல நாள் திருமுடி, இரு முடி என்று எல்லா முடியையும் கட்டி, அய்யப்பசாமி யாத்திரை செல்லும் கிரேடு வாரி பக்தர்கள் கன்னிசாமி, குருசாமி, பெரியசாமி என்ற பல ரக பக்தி கோடிகள் அங்குசென்று பத்திரமாகத் திரும்புகிறார்களா?

ஜன. 14ஆம் தேதி நடந்த கோர விபத்து


கடந்த வெள்ளிக்கிழமை (2011 - 14-ஆம் தேதி, ஜனவரி) நடந்த கோரமான விபத்து நமது நெஞ்சைப் பிளப்பதுபோல உள்ளது!

சுமார் 115 பக்தர்கள் இந்த விபத்தினால் இறந்துள் ளனர். சடலங்களை அடையாளம் காணுவதுகூட எளியதாக இல்லை. இடுக்கி பகுதியில், வண்டிப் பெரியார் பகுதியில் இப்படி ஒரு வரலாறு காணாத விபத்து நடந்து பல உயிர்கள் பலியாகியுள்ளன; சிலரே பிழைத்துப் படுகாயங்களுடன் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.


எல்லாம் அவன் செயல் என்பது புருடா!


கருணையே வடிவான கடவுள் அவனின்றி ஓரணுவும் அசையாது எல்லாம் அவன் செயல்? என்பதெல்லாம் வெறும் புருடா - பொய் மூட்டைகள் என்பது இப்போதாவது புரிய வேண்டாமா?

தமிழ் நாட்டிலிருந்து சென்று இறந்த பக்தர்கள் எண்ணிக்கை 40அய் தாண்டும் கொடுமையை நினைத்து மிகவும் துன்பப்படுகிறோம், துயரப்படு கிறோம் - மனிதநேயமான அடிப்படையில்!


இது தவிர்க்கப்பட்டிருக்கலாமே - இந்த மூட நம்பிக்கை யில்லாமல் இருந்தால்.


முதல்வர் கலைஞரின் துரித நடவடிக்கை


தமிழக முதல் அமைச்சர் மானமிகு கலைஞர் உடனே வருவாய்த் துறை அமைச்சர் திரு. அய். பெரியசாமி அவர்களை அழைத்து குமுளி பகுதிக்கு அவர்களது சடலங்களைத் தத்தம் ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும், மருத்துவமனையில் உள்ளோருக்கு மருத்துவச் சிகிச்சையை முடுக்கவும் ஆணையிட்டு விரைந்து செயல்பட வைத்துள்ளார்கள் என்பது மிகவும் ஆறுதல் அளிப்பதாகும்!

இறந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் தொகையை அளித்துள்ளார்கள்.


பெரியார் சீடரின் மனிதநேய ஆட்சி!


கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் கோட்பாட்டை அவர்தம் குருகுல சீடர் மிக்க மனிதநேயத்துடன் ஆட்சியின் மூலம் தனது கடமையை வழுவாது செய்கிறார்.


இதுதான் நாத்திகரின் தனிச் சிறப்பு!


இழப்புக்காக நாம் வருந்துகிறோம், வேதனைப் படுகிறோம். பக்தர்களின் உயிர் என்றாலும் மனிதர்கள் உயிர்தானே? அவர்தம் குடும்பங்களின் கதறல்கள் நம் உள்ளத்தில் ரத்தக் கண்ணீரை அல்லவா வரவழைக்கிறது?


மக்கள் புத்தி பெறாமல்...


மூடநம்பிக்கை இப்படி ஆண்டுதோறும் பலி வாங்கியும் மக்கள் புத்தி பெறாமல் மீண்டும் குடிகாரன் - குடிப் பழக்கத்திற்கே அடிமையாவதுபோல் ஆகிறார்களே என்ற வேதனை நம்மை வாட்டுகிறது!


ராக்கெட்டை விடும் விஞ்ஞானியின் நிலையோ...


காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்து நொறுங்குகிறது; அக்கோயிலில் விண்வெளி ராக்கெட் விடும் விஞ்ஞானி போய் வேண்டுதல் செய்து விட்ட ராக்கெட் விண்கலம் கடலில் சுக்கல் நூறாகி விழுந்து நொறுங்கியதுதானே மிச்சம்?

திருப்பதி வெங்கடாஜலபதி, குருவாயூரப்பன், காளஹஸ்தி கடவுள் என்ற கூட்டணியால் கடுகளவு பலனாவது ஏற்பட்டதா?

விஞ்ஞானிகளே இவ்வளவு மூடநம்பிக்கையாளர் களாகி அரசின் மதச் சார்பின்மைக்கு விரோதமாக நடந்தால், சாதாரண அய்யப்பப் பக்தன்பற்றி சொல்லவே வேண்டாம்! கறுப்பு வெள்ளிக்கிழமைகள் இனி நடக்கக் கூடாது.

எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இனியாவது பக்தி மூடநம்பிக்கையாளர்களே, கடவுள்களுக்கு எந்தச் சக்தியும் கிடையாது என்பதைப் புரிந்து புத்தி கொள்முதல் செய்யுங்கள்!


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

**************************************************************************************

இன்னும் புத்தி வரவில்லையா?

சபரிமலை அய்யப்பன் கோயில் மகர ஜோதி தரிசனத்துக்குச் சென்ற பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பரிதாபகரமான முறையில் பலியானார்கள் என்ற துயரச் செய்தி மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரின் குருதியையும் உறைய வைக்கக் கூடிய கொடியதாகும்.


இடுக்கி மாவட்டம் வண்டி பெரியார் அருகில் பேருந்து ஒன்று இரு வாகனங்களில் மோதியதால் அந்த இரு வாகனங்களும் பெரிய பள்ளத்தில் விழுந்தன.

வாகனங்களில் இருந்த அத்தனைப் பேரும் பலியானார்கள் பயத்தின் காரணமாக மிரண்டு ஓடிய பக்தர்களும் நெரிசலில் சிக்கி மரணமடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பப் பக்தர்கள் சாலை விபத்துகளில் பலியாவது சர்வ சாதாரணம் என்றாலும், இவ்வாண்டு அதிகமான விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான பக்தர்கள் பலியாகிவிட்டனர்.

இதற்குப் பிறகும்கூட அய்யப்பன் கடவுள் அதிக சக்தி உடையவர்; நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்புவதைவிட கேடு கெட்ட முட்டாள்தனம் வேறு ஒன்று இருக்க முடியுமா?

சத்திய ஜோதி தெரியுதய்யா
நித்திய வாழ்வு புரியுதய்யா
சாஸ்த்தா ஆலயம் தெரியுதய்யா
சங்கடமெல்லாம் மறையுதய்யா.
இருமுடிப் பிரியனே சரணம் பொன் அய்யப்பா
இடர்கள் தவிர்ப்பாய் சரணம் பொன் அய்யப்பா
- என்று ஆடிப் பாடி அய்யப்பப் பக்தர்கள் சபரிமலை செல்லுகிறார்களே -
இந்தப் பாடல் வரிகளில் பொதிந்து கிடப்பவை உண்மைதானா?

சங்கடமெல்லாம் மறையுதய்யா! என்று பாடுகிறார்களே - நூற்றுக்கணக்கான பக்தர்கள் பரிதாபமான முறையில் சாவதுதான் சங்கடங்களைத் தீர்க்கும் இலட்சணமா?

இடர்கள் தவிர்ப்பாய்
சரணம் பொன் அய்யப்பா!
என்ற வரிகளில் உள்ள இடர்களைத் தவிர்க்கும் யோக்கியதை இதுதானா?

இவற்றை அன்றாடம் அனுபவித்தும்கூட அறிவைச் செலுத்த மறுக்கிறார்களே - இவர்களுக்கு அறிவு இருந்தும் என்ன பயன்?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறியது பட்டப் பகல் சூரியன் போல பிரகாசமாகத் தெரியவில்லையா?

இதில் இன்னொரு கொடுமையை, பித்தலாட்டத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். சத்தியஜோதி தெரியுதய்யா

நித்திய வாழ்வு புரியதய்யா! என்ற அந்த வரிகளைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

சத்தியஜோதி தெரியுது என்பது உண்மைதானா? மகர ஜோதி என்பது பித்தலாட்டம்; கேரள மின் வாரியத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சட்டியில் சூடத்தைக் கொளுத்திக் காட்டுகிறார்கள் - பொன்னம்பலமேட்டில் என்பது நிரூபிக்கப் படவில்லையா? கேரளப் பகுத்தறிவாளர்கள் நேரில் சென்று படங்களுடன் குட்டை உடைத்து விட்டார்களே!

பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் ஜார்ஜ் எடமருகு இதுகுறித்து கேரள முதல் அமைச்சர் ஈ.கே. நாயனாரிடம் தெரிவித்தபோது, அவர் என்ன பதில் சொன்னார்?

உண்மைதான் - செயற்கையாகத்தான் மகர தீபத்தைக் காட்டுகிறார்கள்; ஆனாலும் இதில் நாங்கள் தலையிட முடியாது என்று சொன்னாரா - இல்லையா?

மோசடி என்று தெரிந்திருந்தும் ஒரு மார்க்ஸிஸ்ட் அரசாங்கம் அதற்குத் துணை போவது வெட்கக் கேடுதானே?

தேவசம் போர்டு அமைச்சரும், அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும்கூட பொய்யாகத்தான் ஜோதி ஏற்றப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டு விட்டனர். இதுபற்றி ஏடுகளில் விரிவாகவும் வெளி வந்தது.

இவ்வளவுக்குப் பிறகும் மகரஜோதியைத் தரிசிக்கப் போகிறேன் என்று லட்சக்கணக்கில் பக்தர்கள் செல்லுகிறார்களே!

கடவுள் ஒழிப்புதான் யோக்கியமான முதல் தொண்டு என்று தந்தை பெரியார் கூறியதன் அருமையை இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.

கடவுள் விஷயம் என்றால் மனிதன் மடையன் ஆகிறான்; அரசாங்கம் அயோக்கியத்தனம் செய்கிறது; ஊடகங்கள் புளுகுகின்றன.

இதிலிருந்தே கடவுள் ஒழிப்புத் தொண்டில் ஈடுபடுவது தான் யோக்கியமான பணியாக, அவசியமான கடமையாக இருக்க முடியும் என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

-------------------விடுதலை” தலையங்கம் 17-1-2011

2 comments:

Unknown said...

ஸார்,
ஆத்திகம் நாத்திகம் ஒருபுறம் இருக்கட்டும்.
எனக்கு தெரிந்து ஒரு சுனாமியிலோ அல்லது இது போன்ற விபத்துகளிலோ ஸ்பெக்ற்றம் போன்று ஊர் பணத்தை வாயில் போட்டவர்களோ நாட்டை தப்பாக ஆண்டு தன் குடும்பத்துக்கு சொது சேர்த்து அனி யாயம் பண்ணியவர்களோ யாரும் உயிர் இழந்தது கிடையாது. இதை நினைக்கும் போது எனக்கும் பொதுவாகவே இறைவன் ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

நம்பி said...

//கிணற்றுத் தவளை said...

ஸார்,
ஆத்திகம் நாத்திகம் ஒருபுறம் இருக்கட்டும்.
எனக்கு தெரிந்து ஒரு சுனாமியிலோ அல்லது இது போன்ற விபத்துகளிலோ ஸ்பெக்ற்றம் போன்று ஊர் பணத்தை வாயில் போட்டவர்களோ நாட்டை தப்பாக ஆண்டு தன் குடும்பத்துக்கு சொது சேர்த்து அனி யாயம் பண்ணியவர்களோ யாரும் உயிர் இழந்தது கிடையாது. இதை நினைக்கும் போது எனக்கும் பொதுவாகவே இறைவன் ஒருவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
January 17, 2011 10:33 PM //

அப்போ வரிகட்டாதவங்க...நிலவரி கட்டாதவங்க, வீட்டு வாடகை வரி கட்டாதவங்க, நிலபத்திரத் தொகையை குறைத்து காட்டி அரசை ஏமாற்றியவர்கள், நிலத்தை விற்பனை செய்ததை கருப்புல 70 சதவீதம் வெள்ளையில 30 சதவீதம் வாங்கி அரசை ஏமாற்றியவர்கள் எல்லாம் யார் பணத்தை வாயில் போட்டவர்கள், வருமானத்தை ஆடிட்டரை குறைத்து காட்டி அரசை ஏமாற்றியவர்கள்...எங்கே? இந்த தவறுகளை ச்சீ ச்சீ ஊழல்களை செய்யாத ஒரு குடிமகனையாவது காட்டுமே பார்ப்போம்....அப்பா லஞ்சம் வாங்கியப்பணத்தில் கல்வி பயிலாத ஒரு மாணவரையாவது காட்டுமே பார்ப்போம்...சிபாரிசின் மூலம் வேலை பெறாதவர்களை எல்லாம் காட்டுமே பார்ப்போம்...இந்த தவறு செய்யவில்லை என்றால் இன்னொரு தவறு..இல்லை இன்னொன்று என்று ஊழலை வெவ்வேறுவிதமாக செயகின்ற தனிமனிதர்கள் தான் அதிகம். இவர்களால் பாதிக்கப்படும் ஏழைகள் தான் அதிகம். இவர் ஒன்றும் ஊர்பணத்தை கொள்ளையடிக்கவில்லை...

நீர் அடித்ததை நோண்டினாலேயே மாட்டிக்கொள்வாய். உமது பத்திரத்தை எடுத்து பார்த்தாலே மாட்டிக்கொள்வாய்...பக்கத்து வீட்டுக்காரர் எழுதிப்போட்டாலே மாட்டிக்கொள்வாய்.


(வீட்டுல போய் பத்திரத்தை உடனடியாக எடுத்துப்பார்க்கலாம்)

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்....?