Search This Blog

31.1.11

நாத்திகம் வெற்றி - பெரியார் உலகமயமாகிறார்

நாத்திகம் வெற்றிபெற்று வருவதால்
பெரியார் உலகமயமாகிக்கொண்டிருக்கிறார்

-நாத்திகம் வெற்றி பெற்று வருவதால் பெரியார் உலகமயமாகிக் கொண்டிருக்கிறார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இராமன் எப்படி பிறந்தான்? இராமன் முதலில் தசரதனுக்குப் பிறந்தானா? என்று ஒரு கேள்வியைக் கேட்டாலே செத்துப்போய்விடுவான்.

இராமன் பிறப்பைச் சொன்னாலே போதுமே!

அவதாரமான ராமன் எப்படி பிறந்திருப்பான்? பிறக்காத ராமன் பெயரைச் சொல்லி ராமன் பாலம் என்று பெயரைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை சிலர் தடுக்கப்பார்க்கின்றனர். இது எவ்வளவு பெரிய கொடுமை? இந்த மூடநம்பிக் கையின் விளைவு-ஆத்திக நம்பிக்கையின் விளைவு.

நம்முடைய வளர்ச்சியை, நம்முடைய முன்னேற்றத்தை எவ்வளவு பாழ்படுத்துகிறது இந்த மூடநம்பிக்கை என்பதை நினைத்துப் பாருங்கள். எங்களுக்கு மேளா, கீளா என்பதெல்லாம் கிடையாது. பார்ப்பனர்கள் எழுதிய இராமாயணத் திலிருந்துதான் சொல்லப்போகின்றேன்.

அவர்களுக்கு கடவுள் ஒரு கருவி!

அவர்கள் கடவுளை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்துகிறார்கள். வெறும் தியரி, எத்திசம் - (Athiesm) நாத்திகத்தை மட்டும் எடுத்துச் சொல்லி விட்டுப் போகவில்லை.

இந்த ஜாதியைக் காப்பாற்றுவது மட்டுமல்ல. கடவுள் கருத்தையும் பின்னால் தள்ளி உயர்ஜாதியை உருவாக்கியிருக்கிறான். சமஸ்கிருத ஸ்லோகம் பாருங்கள்: தெய்வாதீனம் ஜகத் சர்வம் என்ன இதற்கு அர்த்தம்? இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது.

மந்த்ராதீனம் தூ தைவதம்

இதற்கு என்ன அர்த்தம்? கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது.

மூன்றாவதுதான் மிக முக்கியம்

தன்மந்த்ரம் பிராமணாதீனம் இதற்கு அர்த்தமென்ன? மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. தஸ்பத் பிராமணம் பிரபு ஜெய அப்படியென்றால் என்ன அர்த்தம்? பார்ப்பானை முன்னுக்கு வைத்து கடவுளைத் தள்ளி விட்டான்

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பார்ப்பன ருக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணரை நீங்கள் வணங்க வேண்டும். கடவுளை அல்ல என்று சொல்லி கடவுளை பின்னாலே தள்ளிவிட்டான். பார்ப்பானை முன்னால் வைத்துவிட்டான்.

இந்த இடத்தைத்தான் பெரியார் கண்டு பிடித்தார். அதனால்தான் பெரியாரிசத்தை அசைக்க முடியவில்லை. பெரியார் என்கிற மாமருந்து இருக்கிறதே, அது நாத்திகத்திற்கு மட்டுமல்ல; மனித வாழ்வினுடைய உயர்வுக்கு-பேதமற்ற பெருவாழ்வுக்கு அடித்தளமாக இருந் திருக்கிறது. ஆகவே பெரியாருடைய சிந்தனைகள் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

காவி கழுத்தை வெட்டும்!

அமெரிக்காவிலே பெரியாருடைய கருத்தை ஆராய்ச்சி செய்திருக்கிறார் பவ்லாரிச்சின் என்ற அமெரிக்கப் பேராசிரியை. இராமாயணத்தைப் பற்றி பெரியாரின் மாறுபட்ட கருத்துகளை எடுத்துச்சொல்லியிருக்கிறார்.

அண்மையிலே அந்த அம்மையாரை நான் சிங்கப்பூரிலே சந்தித்தேன். அந்த அம்மையார் சொல்லுகிறார்-காவி கழுத்தை வெட்டும் என்பதைப் பற்றிச் சொன்னார். இதை எல்லாம் கனிமொழி அவர்கள் சொன்னார்.

கடவுள் இல்லை!

தமிழ்நாட்டில்தான் கடவுள் மறுப்பு வாசகத்தை ஒவ்வொரு பெரியார் சிலையிலும் நீங்கள் பார்க்கலாம். கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை.

கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்கு கிறவன் காட்டுமிராண்டி என்று எழுதினார்.

இதுதான் தமிழகத்தில் உள்ள தந்தை பெரியார்சிலையின் கீழ் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சொற்கள் எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் தார்கள்.

நீதிபதி ஒரு பெரிய பக்திமான். அவர் ஒரு கடவுள் நம்பிக்கையாளர். அவர் ஒரு சிறந்த தீர்ப்பைக் கொடுத்தார். பெரியார் என்ன விரும்பினாரோ, எது அவருடைய கொள்கை என்று சொன்னாரோ. அதைத்தானே அவருடைய சிலையின் கீழே வைக்க முடியும்? இதில் உங்களுக்கு ஒன்றுமில்லையே! என்று சொல்லி தீர்ப்பளித்தார்.

பெரியார் சிலைக்குக் கீழே சங்கராச்சாரி கருத்தையா வைக்க முடியும்? பெரியார் சிலைக்குக் கீழே பெரியார் சொன்ன கருத்தைத்தானே போட முடியும்? சங்கராச்சாரி சொன்னதையா போடுவான்? ஒழுங்காக வழக்கை வாபஸ் வாங்குங்கள்; இல்லாவிட்டால் அபராதம் விதிப்பேன் என்று சொல்லி தீர்ப்பைச் சொன்னார்.

பெரியார் அங்கும் வெற்றி பெற்றார் (கைதட்டல்). ஆகவே தமிழ்நாட்டில்தான் இதை நீங்கள் பார்க்க முடியும். பெரியாருடைய கடவுள் மறுப்புக்கொள்கையை நீதிமன்றமே சரி என்று ஒத்துக்கொண்டிருக்கிறது. இராமாயணத்தை வால்மீகி எழுதினார். அதுதான் ஒரிஜினல், முற்பட்டது. துளசிதாஸ், கம்பன் எழுதிய இராமாயணங்கள் பிறகு திருத்தி எழுத்தப்பட்டவை.

சச்சின் இராமாயணத்தை-உண்மை இராமாயணத்தை அரசாங்கம் தடை செய்தது. பிறகு வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் சொன்னது: பெரியார் தனது கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை படைத்தவர். அவர் இராமாயணத்தைப் பற்றி தனது கருத்து களைச் சொல்லுவதற்கு முழு உரிமை படைத்தவர். ஆகவே பெரியாரின் சச்சி இராமாயணத்திற்கு உத்தரப்பிரதேசம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது.

அதுவும் நெருக்கடி காலத்திலே வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்றவர்களால் அந்தத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பெரியார் ஏன் இராமாயணத்தை நினைத்தார்? ஒன்றே ஒன்றைச் சொல்லு கின்றேன்.

உத்தரகாண்டத்தை வெளியிட மறுப்பதேன்?

உத்தரகாண்டத்தையே வெளியிட மாட்டேன் என்கிறார்கள். அந்த உத்தரகாண்டத்தில்தான் மனுதர்ம தத்துவம் இருக்கிறது. ராம ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் என்று சொல்லுகிறார்களே, இந்த இராம இராஜ்ஜியம் வந்தால் எப்படியிருக்கும் என்பதற்கு அடையாளம் பாருங்கள்.

ராமராஜ்ஜியம் நடக்கிறது. ராமராஜ்ஜியத்தில் ஒரு குழந்தை இறந்துபோய் விட்டது. உத்தர காண்டத்தில் இருப்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்லுகின்றேன். இராமா! உன்னுடைய ராம ராஜ்ஜியத்தில் இவ்வளவு பெரிய அநீதி நடக்கலாமா? தர்மத்திற்கு கேடு வரலாமா? என்று கேட்கிறார்கள்.

என்னுடைய பிராமணக் குழந்தை இறந்து போனான். ஏன் இறந்து போனான் தெரியுமா? யார் உன்னுடைய குழந்தையை கொன்றது என்று கேட்கிறார்கள்.

தர்மத்திற்கு விரோதமாக சம்பூகன் என்று சொல்லக்கூடிய ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். தவம் செய்வது என்றால் நேரடியாகக் கடவுளைத் தொழுவது.

சூத்திர சம்பூகன்
கடவுளைத் தொழுததால்...

சூத்திர சம்பூகன் கடவுளை நோக்கித் தவம் செய்தான். அந்த அதர்மத்தால் என்னுடைய குழந்தை இறந்தது என்று ராமனிடம் முறை யிட்டார்கள்.

ஆகவே, இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் சூத்திர சம்பூகன் கழுத்தை வெட்டு என்று சொன்னார்கள். உடனே ராமன் விசாரணை எல்லாம் செய்யவில்லை. நேராக இராமன் போகிறான். சூத்திர சம்பூகன் கழுத்தை இரண்டு துண்டாக வெட்டுகின்றான். உடனே இந்தக் குழந்தை பிழைத்துக்கொண்டது என்று சொல்லுகின்றான். சூத்திரனை ஒழிப்பது?

இதுதான் இராமாயணத்தில் இருப்பது. அப்படியானால் அதன் தத்துவம் என்னவென்று சொன்னால் சூத்திரரை ஒழிப்பது. அதனால்தான் ஞானசூரியன் என்னும் நூலை எல்லோரும் படியுங்கள் என்று கலைஞர் சொன்னார்.

ஞானியானாலும், மூடனானாலும் சூத்திரனுக்குத் தெய்வம் பிராமணனே ஆவான். இதுதான் மனுதர்மத்தில் இருக்கின்ற ஸ்லோகம். சூத்திரனுக்கு நேரடியாகக் கடவுளைத் தொழ உரிமை இல்லை-இந்து வர்ணாஸ்ரம தர்ம மனுதர்மப்படி. ஆகவே சூத்திர சம்பூகனின் கழுத்தை வெட்ட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லுகின்றான்.

ஏகலைவன் கதையும் அதே!

அதே போன்ற கருத்து. ஏகலைவன் கதை- பாரதத்தில் உங்களுக்குத் தெரியும். ஏகலைவன் குறிபார்த்து அம்பு எய்து ஒரு நாயை வீழ்த்தினான். நேற்று இரண்டு பார்ப்பன நீதிபதிகளே உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஏனய்யா கட்டை விரலை வெட்டிக்கொடு என்று துரோணாச்சாரியார் கேட்டதை இந்தக் காலத்தில் எவராவது ஒத்துக்கொள்வார்களா?

பெரியார் அங்கும் வெற்றி பெறுகிறார். பெரியாருடைய தத்துவங்களை ஆரம்பத்தில் மறுத்தவர்களாலே இன்றைக்கு முடியாது என்று காட்டக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறார்கள்.

பெரியார் உலகமயமாகிறார்

பெரியார் உலகமயமாவது மட்டுமல்ல. எந்தெந்த இடத்தில் எல்லாம் பெரியாருடைய கருத்துகள் தடுக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியாருடைய தத்துவங்கள் மறைக்கப்பட்டனவோ, எங்கெல்லாம் பெரியாருடைய கருத்துகளை ஏற்க தயக்கம் இருந்ததோ அங்கெல்லாம் கூட பெரியா ருடைய ஒளி இன்றைக்குப் பரந்து பாய்ந்து கொண்டிருக்கிறது.

நாத்திகத்தின் வெற்றி

அது நாத்திகத்தின் வெற்றி. ஆத்திகத்தின் தோல்வி என்பதை இந்த மாநாட்டின் மூலம் பிரகடனப்படுத்துவதுதான் இந்த மக்கள் வெள்ளத் தில் மிகப்பெரிய பணி என்று கூறி நாளைய நிறைவுரையில் பல முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

-------------------”விடுதலை” 31-1-2011

0 comments: