Search This Blog

28.1.11

தீண்டாமை க்ஷேமகரமானது என்றவருக்கு மணி மண்டபமா?




காஞ்சிபுரத்தையடுத்த ஓரிக்கை என்னும் இடத்தில் காஞ்சிபுரம் 68ஆவது பீடாதிபதி என்று கூறப்படும் சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவருக்கு மணி மண்டபம் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் இன்று செய்யப்படுகிறதாம்.

கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவ துண்டு. மணி மண்டபத்துக்குக் கும்பாபிஷேகம் என்றால் இதன் பொருள் - புதிய கடவுள் ஒன்று சிருஷ்டிக்கப்படுகிறது என்று பொருள்.

இந்த மணி மண்டபத்தில் கர்ப்பக்கிரகம் உண்டாம். அதில் சந்திரசேகரேந்திரரின் சிலா மூர்த்தமும், பாதுகையும் பிரதிஷ்டை செய்யப்படுமாம். புரிகிறதா? சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் உருவமும், செருப்பும் (பாதுகை)யும் பூஜைக்கு வைக்கப்படுகின்றன என்பது இதற்குப் பொருள்.

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனுக் குருவின் செருப்புக்கு ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கின்றனர் என்றால், இந்த ஜாதித் திமிரை - பார்ப்பன குரூரப் புத்தியை என்னவென்று சொல்லுவது!

2011ஆம் ஆண்டிலும் இப்படிப்பட்ட அசிங்கமான - மனித உணர்வுகளை - புத்தியைக் கொச்சைப்படுத் துகிற காரியங்களைப் பார்ப்பனர்கள் துணிந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கேவலமான காரியத்துக்குப் பார்ப்பனர்கள் அள்ளிக் கொடுப்பதைவிட, பார்ப்பனர் அல்லாதார் கொட்டிக் கொடுக்கும் கோடிகள் எத்தனை எத்தனையோ!

இந்தச் சங்கர மடமும், சங்கராச்சாரியார்களும் நம்மையெல்லாம் வருண தரும அடிப்படையில் சூத்திரர்கள் என்று நினைப்பவர்கள் மட்டும் அல்லர்; அது நிலைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அமைப்புகளை வைத்திருக்கக்கூடியவர்கள்.

மிக வெளிப்படையாக தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறியவர்தான் இந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி. பாலக்காட்டில் காந்தியாரை மாட்டுக் கொட்டகை யில் வைத்துப் பேசியவர். தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியார் எவ்வளவோ மன்றாடியும் தீண்டாமை என்பது சாஸ்திர சம்பந்தமானது; அதனை ஒழிக்கக் கூடாது; ஒழிக்க நினைத்தால் சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்களின் மனம் நோகும் என்று காந்தியாரிடமே முகத்துக்கு முகம் சொன்னவரா யிற்றே!

இன்னும் சொல்லப் போனால் தீண்டாமையை ஆதரித்து வலியுறுத்திய குற்றத்துக்காக பிணையில் வெளிவர முடியாத குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் அவர். அவர் பகவானாம்! தெய்வீக ஒளி அவர் முகத்தில் அப்படியே ஜொலிக்கிறதாம்! அடேயப்பா.. இந்தப் பார்ப்பனப் புளுகர்கள் தங்களிடம் ஊடகங்கள் கைகளில் வசமாக இருக்கின்றன என்பதற்காக எப்படியெல்லாம் ஊதிப் பெருக்கிக் காட்டுகிறார்கள்? பக்திப் போதையில் குளித்த இந்தப் பாழாய்ப் போன தமிழர்களும் அவர்களின் வஞ்சகப் புத்தியையும், சூட்சமத்தையும் புரிந்து கொள்ளாத ஏமாளிகளாக இருந்து பெரியவாள் என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களே, எவ்வளவுக் கேவலம் - இழிவு!

சிருங்கேரி மடத்தின் கிளை மடம் கும்பகோணமடம் - அதைத்தான் பிற்காலத்தில் காஞ்சி மடம் என்று கூறி, தலைமை இடத்தை மாற்றி திருகுதாளம் செய்தார்கள். இதுகுறித்து சிருங்கேரி மடத்துக்கும் காஞ்சி மடத்துக்கும் வழக்குக்கூட நடந்ததுண்டு. இப்படி ஏமாற்று வேலை செய்தவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் கோயிலா? கோயில்கள் எப்படியெல்லாம் தோன்றி இருந்திருக்க வேண்டும் என்பதற்கு நம் கண்ணெதிரே ஓரிக்கையில் இன்று கும்பாபிஷேகம் செய்யப்படுகிறதே - இதைப் பார்த்தாவது புரிந்துகொள்ள வேண்டாமா?

இந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி எந்த அளவு மனிதாபிமானம் கொண்டவர்? நாத்திகர்களுக்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறும் அளவுக்கு மனிதாபிமானம் கொண்டவர். இப்படிப்பட்ட மானுட வெறுப்பாளர்தான் லோகக் குருவாம்.

ஆண்டாளின் தீக்குறளை சென்றோதோம் என்ற திருப்பாவையின் வரிக்கு திருக்குறளைப் படிக்க மாட்டோம் என்று பொருள் சொன்ன பெரிய மனுஷர் (?) இவர்.
குறளை என்றால் புறஞ் சொல்லுதல் என்று பொருள். அந்தப் பொருளில்தான் ஆண்டாள் பாடியுள்ளார். தமிழ்மீதும் தமிழர்கள்மீதும் கடும் வெறுப்புக் கொண்ட பார்ப்பனக் கூட்டத்தின் தலைவர் - தன் மன அழுக்கை, துவேஷத்தை - இதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

காஞ்சி சங்கர மடத்தில் பல பெயர்களில் டிரஸ்ட்டுகள் நடத்தப்படுகின்றன. வேத ரக்ஷண டிரஸ்ட், சஷ்டியப்த பூர்த்தி டிரஸ்ட், கன்னிகாதான டிரஸ்ட் போன்ற டிரஸ்டுகள் ஏராளம் உண்டு.

இவை அத்தனையும் பார்ப்பனர்களுக்காக மட்டுமேயல்லாமல் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

உண்மையைச் சொல்லப் போனால் ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் அவர்கள் சொன்னது போலவே, காஞ்சிமடம் என்பது பார்ப்பன மடம் - பார்ப்பனர்களுக்கு எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சு, பார்ப்பன திருமணம் ஏற்பாட்டு நிலையம்.

அந்த மடத்துக்கு எந்த ஒரு வகையிலாவது ஒரு துரும்பு அளவு லாபம் பார்ப்பனர் அல்லாதாரால் ஏற்படுமேயானால் அதைவிட தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்வது - தற்கொலைக்குச் சமமானது வேறொன்றும் இருக்கவே முடியாது - எச்சரிக்கை!

------------------”விடுதலை” தலையங்கம் 28-1-2011

0 comments: