Search This Blog

6.7.13

நீதிமன்றங்கள் தந்தை பெரியாருக்குச் சூட்டும் வெற்றி மாலைகள்!


1928இல் (மே 28) அருப்புக் கோட்டையை அடுத்த சுக்லநத்தம் என்னும் கிராமத்தில் முதல் சுயமரியாதைத் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார் தந்தை பெரியார். அந்நாள் முதற்கொண்டு நாட்டில் புரோகித எதிர்ப்புத் திருமணங்கள் (Anti Prohit Marriages) நடக்கத் தொடங்கின.
தொடக்க கால கட்டத்தில் எதிர்ப் புகள் கிளம்பியதுண்டு என்றாலும் நாளடைவில் மக்கள் பக்குவப்படுத்தப் பட்டார்கள்.

அதிலும் குறிப்பாக சுயமரியாதைத் திருமண மேடையை தந்தை பெரியார் பயன்படுத்திய விதம் - உலகில் வேறு எங்கும் காணப்படவே முடியாததாகும்.
செய்யாறை அடுத்த வாழ்குடை என்னும் ஊரில் (மணமகன் வி.எஸ். கிருஷ்ணசாமி, -_ போலீஸ்காரர்) நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் மூன்று மணி நேரம் உரையாற்றியிருக்கிறார் என்றால் சாதாரணமானதுதானா?

அந்த மேடையில் சுயமரியாதைத் திருமணம் ஏன்? வைதிக முறையில் நடக்கும் திருமணத்தில் இடம் பெறும் மூடநம்பிக்கைகள், ஆரியக் கலாச்சாரத் திணிப்பு, பெண்ணடிமைத் தன்மை, வேதம், சாஸ்திரப் புராணம் என்பதில் அடங்கியுள்ள பிற்போக் கான கருத்துக்கள், பகுத்தறிவுச் சிந்தனைகள், கர்ப்ப ஆட்சியின் அவசியம் குறித்துத் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணத் தில் ஏராளமான கருத்துக்களையும் தகவல்களையும் வாரி வழங்குவார்கள்.

தந்தை பெரியார் உரையைக் கேட்கும் எவராக இருந்தாலும் அதில் உள்ள நியாயத் தன்மையை உணர்ந்து கருத்தால் ஈர்க்கப்படுவார்கள்.

ஒரு திருமண மேடையை சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன் படுத்தி வெற்றி கண்டதில் தந்தை பெரியாருக்கு நிகர் தந்தை பெரியாரே!

அத்திருமண மேடைகளில் தந்தை பெரியார் அவர்களால் எடுத்து வைக் கப்பட்ட கருத்துக்கள் வலியுறுத்தப் பட்ட உரிமைகள் பிற்காலத்தில், மாநில மத்திய அரசுகளால் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்குத் திருமண வயது, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவையர் திருமண உரிமை, வாரிசுரிமை குறித்துத் தந்தை பெரியார் தெரிவித்த கருத்துக்கள் இன்று சட்டமாக்கப்பட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.

தந்தை பெரியார்பற்றி அறிஞர் அண்ணா கூறுவார்.

எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண் டுகளில் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை இருபதே ஆண்டுகளில் தந்தை பெரியார் செய்து முடித்தி ருக்கிறார். அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால் நாட்டினுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள். அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டு காலம் என்ற அளவில் ஒரு பகுத்தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்ப தற்காக ஒரு வால்டேர், ஒரு ரூஸோ இப்படித் தொடர்ச்சியாகப் பலர் வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுதான் பகுத்தறிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தன. இப்படி இரண்டு நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களை பெரியார் அவர்கள் இருபதே ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டுமெனக் கிளம்பினார்கள் திட்டமிட்டார்கள்.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். “Putting Centuries Into a Capsule’’ என்று சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத்திரைகளிலே தருவது போல பல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து அவர்கள் தம்முடைய வாழ் நாளி லேயே சாதித்துத் தீர வேண்டுமென்று அறிவோடும், உணர்ச்சியோடும் நெஞ்சில் ஊக்கத்தோடும், யார் வரு கிறார்கள் -யார் போகிறார்கள் - என்பதைக் கூட இரண்டாந்தரமாக வைத்துக் கொண்டு, எந்தளவு முன்னேறுகிறோம் என்பதைக் காண்பதிலேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார்கள் என்று தந்தை பெரியார் அவர்களை அவ்வளவுக் கன கச்சிதமாகப் படம் பிடித்தார் அறிஞர் அண்ணா (திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் 89 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் 17.9.1967 -அன்று அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

தங்கள் மகத்தான பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்த வாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நம் நாட்டில் என்று அமெரிக்காவி லிருந்து அண்ணா அவர்கள் எழுதிய ஒரு கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார் (10.10.1968)

சுயமரியாதைத் திருமணத்தில் கலந்து கொண்டபோது மணமகன் பெயருக்குப் பின்னாலும், மணமகள் பெயருக்குப் பின்னாலும் படிப்புக்கான பட்டம் (Degree) குறிப்பிடப்பட்டு இருந்தால் தந்தை பெரியார் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, மேடையிலே துள்ளிக் குதித்து உற்சாகத் துடன் அதனைக் குறிப் பிட்டுப் பேசுவார்கள்.

பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு நாட்டிலே,  பெயருக்குப் பின்னால் படிப்புப் பட்டம் போட வைத்தது தந்தை பெரியார் அவர்களின் மகத்தான தொண்டின் விளைச்சலால் அல்லவா?

இப்படி ஆயிரக்கணக்கில் சுய மரியாதைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்  சட்டத்தின் முன் நீதிமன்ற பார்வையில் பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற நிலைதான்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ரெங்கம்மாள், கோட்டை யூர் ராம. - அழ. -சிதம்பரம் சுயமரி யாதைத் திருமணம் சம்பந்தமான வழக்கில்தான் அவ்வாறு தீர்ப்புக் கூறப்பட்டது.

இவர்கள் யார் என்றால் நமது கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் மாமனார் _ மாமியார் ஆகியோரின் திருமணம் _ 1934ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி கருணாநிதி பூங்காவில் தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது. மணமகன் சிதம்பரம் அவர்கள் துணைவியை இழந்தவர். அதுபோலவே ரெங்கம் மாள் அவர்கள் இளம் வயதிலேயே துணைவரை இழந்தவர். புரட்சிகரமான மறுமணம் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் அது. இன்றைக்கு 79 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய புரட்சித் திருமணம் என்றால் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சிதம்பரம் அவர்களின் மறைந்த முதல் மனைவியின் குடும்பத்தினர் (மருமகள் தெய்வானை ஆச்சி) சொத்துத் தொடர்பாக வழக்கொன்றைத் தொடர்ந்தார். சிதம்பரம் அவர்கள் திரண்ட சொத்துக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் ரெங்கம்மாள் ஆகியோரின் திருமணத்தில் சடங்கு ஆச்சாரங்கள் நடக்கவில்லை. அது சுயமரியாதைத் திருமணம் எனவே சட்டப்படி செல் லாதாகையால், அவர்களின் பிள்ளைகளுக்குச் சொத்தில் பங்கு கிடையாது என் பது தான் அந்த வழக்கு.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜகோபாலன், அய்.சி.எஸ்., சத்திய நாராய ணராவ்  இருவரும் அந்த வழக்கினை விசாரித்தனர் (வழக்கு 1955 4) M.L.J. 128).

26.8.1953 அன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. குறிப்பிட்ட சிதம்பரம் -_ ரெங் கரம்மாள் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று கூறப்படுகிறது. இது சாஸ்திரங்களின்படி நடைபெறவில்லை. சப்தபதி என்ற ஏழு அடி எடுத்து வைத்தல், ஒமம் வளர்த்தல் போன்ற எந்த சடங்கும் நடத்தப் பெறாமல் நடைபெற்றுள்ளது. இப்படி நடப்பது (Customary Marriage) வழமையான திருமணமா என்றால் அதுவும் இல்லை. எனவே இது சட்டப்படி செல்லத்தக்க திருமணமே அல்ல.

யாரோ சிலர் கூடி தங்கள் விருப்பத்திற்கேற்ப நாங்கள் இத்திருமணம் நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாக (In Some Hoc Form) செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படி யான பிள்ளைகளாகவே கருத முடியாது. இந்து மதத்தில் வைப்பாட்டி களாக இருப்பதற்கும், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும், அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கும் பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளை களுக்குச் சொத்தில் பங்கு உண்டு; ஆனால் இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டிகளாகவே கருதப்படுவார் கள் என்று இரு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்புரையாக வழங்கினர்.

இந்தத் தகவல்களை சென்னையில் பெரியார் திடலில் 30.6.2013 ஞாயிறு அன்று நடைபெற்ற செல்வர்கள் க. தமிழ்ச்செல்வன் - க. வினோதினி  ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விவரித்து விட்டு - ஒரு முக்கியமான இன்னொரு தீர்ப்பை ஒப்பிட்டுக் காட்டி, தந்தை பெரியார் அவர்கள் எத்தகு இமாலய வெற்றியின் உச்சிக்குச் சென்றுள்ளார் என்பதை அவருக்கே உரித்தான தனித் தன்மை யுடன் விளக்கினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சி.எஸ். கர்ணன் அவர்கள் சில நாட்களுக்குமுன் (17.6.2013) வழங்கிய ஒரு தீர்ப்பை ஒப்பிட்டுக் காட்டியது அருமையிலும் அருமையே!
கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயாரித்து விற்பனை செய்பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லாமிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமதுவுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வருகிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத் தில் பாத்திமா வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை குடும்பநல நீதி மன்றம் விசாரித்தது. விசாரணையின் போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய் யப்பட்டன. செருப்புக் குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதிடப்பட்டது. இரண்டாவது குழந்தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை டாக்டர் சாட்சியாகக் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந்தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
ஆனாலும், முகமதுவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத் தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.

இந்த இரண்டு குழந்தைகளையும், முகமதுக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.

திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத் தின் அடிப்படையில் அவை கட்டாய மல்ல.

இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறை யானவைதான். ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கெனவே திருமணம் ஆகாத நிலை யில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண் டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.

ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்ப தற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்டப்பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.

ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதால், அவரிடம் இருந்து சட்டப்பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது. சட்டப்பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடுகின்றனர்.

அப்படி சட்டப்பூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாதவர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்டப்பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.

தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப்பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலியல் உறவு இருந்ததற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத் தில்  தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.

அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.
திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.

பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்

ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-ஐ பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப் டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1953 ஆகஸ்டு 26ஆம் தேதியன்று இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ராஜகோபாலன், சத்திய நாராயணராவ் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் என்ன கூறினார்கள்?

ரெங்கம்மாள் - சிதம்பரம் ஆகி யோருக்கு நடைபெற்ற திருமணம் சடங்குகள் இல்லாமல் செய்யப்பட்டது - அதனால் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது 
இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு.

இன்றைக்கு நீதியரசர் கர்ணன் தீர்ப்பு என்ன கூறுகிறது? சடங்குகள் திருமணமாகாது என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு கணம் மறுபடியும் 1953ஆம் ஆண்டையும், 2013ஆம் ஆண்டை யும் ஒப்பிட்டுப் பாருங்கள். காலங் கடந்தாலும் தந்தை பெரியார் அவர்கள் அல்லவா வென்றிருக்கிறார்கள். வெற்றிச் சிரிப்பின் வெகுமதி தந்தை பெரியார் அவர்களின் மடியில் அல்லவா விழுந்திருக்கிறது.

இப்பொழுது இன்னொரு கூடுதல் தீர்ப்பும் தந்தை பெரியார் அவர்களின் கழுத்தில் மிகப் பெரிய வெற்றி மாலையாக விழுந்திருக்கிறது.
அந்த வெற்றியானது உச்சநீதிமன் றத்திலிருந்து தந்தை பெரியாரை நோக்கி விரைந்து வந்திருக்கிறது.

அந்தத் தீர்ப்பு இதுதான்.

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவ ருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை  எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங்கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப் பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து கார்த்திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.
நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த் திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருமணம் செய்துகொள்வதாக பொய்யாக வாக்குறுதி அளித்து பெண் ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
பாலியல் உறவு என்பதே திரும ணத்திற்கு முக்கியமானது என்பதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து விட்டது - பெண்ணை ஏமாற்றிப் பாலி யல் உறவு கொண்டு பின் ஏமாற்றும் ஆண் கூட்டத்திற்குக் கசையடி கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லவா இது?

சடங்குகள் இல்லாவிட்டாலும் தாம்பத்ய உறவு இருந்திருக்கிறது. எனவே செல்லும் என்று சடங்குகளுக்குச் சாவு மணி உச்சநீதிமன்றத்திலும் அடிக்கப் பட்டு விட்டதே!

தந்தை பெரியார் கணித்தது எல்லாம் இனியும் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வரத்தான் போகிறது.

பெரியாரை உலக மயமாக்குவோம் என்றார் தமிழர் தலைவர். அது படிப் படியாக நடந்து கொண்டேதானிருக்கிறது.

வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!!
*****************************************************************************
 
கல்கி இதழ் 7.7.2013 வெளிவந்த கேள்வி பதில் இதோ:

கேள்வி: ஆண் _ பெண் இடையே நடக்கும் பாலியல் உறவே சட்டப்பூர்வமான திருமணம். மற்றவை அல்ல, என்று சென்னை ஹைகோர்ட்டு சொல்வதுபற்றி?

பதில்: மீடியாவும் சமூக வலைத்தளங்களும் பரபரப்படைந்து,  நீதிபதி கர்ணனின் தீர்ப்பை விமர்சித்தன. இவ்வாறு விமர்சிப்பதை ஆட்சேபித்துள்ளார் நீதிபதி. தீர்ப்புகளை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று சட்ட வல்லுநர்களே எடுத்துரைக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, நீதிபதி குறிப்பிட்ட ஒரு வழக்கில் நியாயத் தீர்ப்பை அளித்து ஓர் அநீதிக்குப் பரிகாரம் காண்பதுடன் நின்றிருந்தால் பிரச்சினை தோன்றி இராது. நமது சமூகம் எளிதில் ஏற்க முடியாத பொதுப்படையான சில கருத்துகளைக் கூறப் போகத்தான் எதிர்ப்புக் குரல் ஏராளமாக எழக் காரணமாயிற்று. நீதிபதியின் விளக்கம் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்கிறது கல்கி.

நீதிபதி என்ன தவறாகக் கூறியுள்ளார்? கல்கிக்கு ஏன் கோபம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது? தாலி கட்டுவதும் சப்தபதி எடுத்து வைப்பதும் தான் (நெருப்பைச் சுற்றி ஏழு அடி எடுத்து வைப்பதுதான்) திருமணம் என்று நினைக்க வேண்டாம். அதையும் தாண்டி வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் உறவு ஏற்பட்டால் அது திருமணமாகவே கருதப்பட வேண்டும் என்று நீதிபதி கூறியிருப்பது பெண்ணுக்குப் பாதுகாப்பு; ஏமாற்றும் ஆணுக்கு ஒரு தடை - இது தானே இதில் இருக்கிறது. இதில் நீதிபதி என்ன குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்?

சடங்குகள்தான் கல்யாணம் என்று கருதக் கூடாது என்று நீதிபதி சொல்லி விட்டார் அல்லவா? _- அங்குதான் அவாளுக்குப் பிரச்சினை! அடி மடியில் அல்லவா கை வைத்து விட்டார்.
**************************************************************************************
----------------------- ---------- கலி.பூங்குன்றன் அவர்கள் 06-07-2013 “விடுதலை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

22 comments:

தமிழ் ஓவியா said...


தாயின் குரலைக் கேட்கும் சிசு


தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிசு தாயின் குரலைக் கேட்கும் என்றால் யாரும் நம்ப மாட்டார் கள். ஆனாலும் இது குறித்த ஆய்வில் சிசு தாயின் குரலைக் கேட்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஜான் ஹாப்பின்ஸ் என்ற பல்கலைக் கழகம் உள்ளது. அந்தப் பல்கலைக் கழகம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டது. 36 வார கால கர்ப்பிணிப் பெண்கள் வரவழைக்கப்பட்டு புத்தகம் ஒன்றைக் கொடுத்து 2 நிமிட நேரம் படிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் படித்தபோது சிசு தன் அசைவை நிறுத்திக் கொண்டு இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு தாயின் குரலைக் கேட்பதைக் கண்டறிந்தனர். எப்படி? நம் நாட்டிலும் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள். மகரஜோதி தோன்றுகிறது வானத்தில் என்று கூறி, சூடத்தைக் கொளுத்தி பானையில் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


இரண்டு மருத்துவர்கள்; இரண்டு குறிக்கோள்கள்!



ஜூலை ஒன்று இந்தியாவில் மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வேறுபட்ட இருதுறைகளில் சிறந்த சேவை செய்த இரு மருத்துவர்களைப் பற்றி இங்கே...

டாக்டர் க்ரா ஃபர்டு எம்லாங் 1815இல் அமெரிக்காவில் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்றார். அறுவை சிசிக்சை மருத்துவராகப்பணி புரிந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது நோயாளிகள் வலியினால் துடிப்பதைக் கண்டு ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினார். வலியில்லாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

பல ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்த எத்தனாலும், சல்ஃயூரிக் அமிலமும் இணைந்த கலவை, கோழிக்குஞ்சுகளுக்கு தூக்கம் வருவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு விட்ராயில் இனிப்பு எண்ணை (Sweet oil vitroie) என்று பெயர். ஆனால் அதை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது பற்றி யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

அந்த எண்ணெயை மருத்துவர் லாங் டெய்தில் எய்தர் (Diethil either) ஆக மாற்றி, 1842-ஆம் ஆண்டு மார்ச் 30-இல் ஒரு நோயாளிக்குச் செலுத்தி கழுத்திலிருந்து ஒரு கட்டியை நீக்கினார். அது தான் முதல் வலியில்லாத அறுவைச் சிகிச்சை அப்போது அவருக்கு வயது 27 தான். அந்த சிகிச்சை மூலம், அவர் நோயாளியின் வலியையும் மருத்துவரின் கவலையையும், ஒரு மந்திரம் போல போக்கினார். ஆனால் அவர் பாராட்டுக்களுக்காக காத்திருக்கவில்லை.

நான்காண்டுகளுக்குப் பிறகு டி.ஜி.மார்ட்டன் (T.G.Morton) என்ற மருத்துவர் எத்தர் வலி நீக்கியின் பலனை பொதுமக்களுக்கு செய்து காட்டினார். அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களும் நவீனயுகத்தின வலி நீக்கியை பரவச்செய்தவர் என்றும் பெயர் பெற்றார். டாக்டர்களால், ஒரு பிரசவ சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே 1878-இல் மரணமடைந்தார்.

1991-இல், 122 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஜார்ஜ் புஷ்சும், அமெரிக்க செனட் சபையும் கூடி, டாக்டர்லாங்கின் சேவைகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றினர். அமெரிக்காவில் மார்ச் 30-ஆம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கும் திறமையான மருத்துவரை நினைவு கூரவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நமது நாட்டில் பி.சி.ராய் பாட்னா பங்கிப்பூரில் ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். 14 வயதில் தாயை இழந்தார். அய்ந்து குழந்தைகளின் இளையவரான அவர் மருத்துவராக விரும்பினார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். எம்.பி.பி.எஸ் படிப்பிற்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ந்து படிக்க விரும்பினார். 30-ஆவது முயற்சிக்கு பிறகே வெற்றி பெற்றார். அவர் வெற்றிகரமாக MRCP, FRCS பட்டங்களையும் இரண்டாண்டுகளுக்குள் பெற்று, கல்வி பற்றிய பேராசிரியர்களின் அய்யங்கள் தவறு என நிரூபித்தார். பொது மருத்துவத்திலும், அறுவைத்துறையிலும் சிறந்து நின்றார்.

தொடர்ந்து வியாதிகளுக்கு அவரது எளிய மருந்துகளும், வியாதிகளைப் பற்றிய அவரது சரியான ஆற்றல் விரைவில் கண்டு பிடிக்கக் கூடிய திறனும் அவருக்குப் பெரும் புகழைக் கொண்டு வந்தன. ஆனால் அவர் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். ஒரு தனி மனிதனை நலம் பெறச் செய்வதைக் காட்டிலும் பரந்த தேசத்தை நலம் பெறச் செய்தல் நன்று என்று அவர் எண்ணினார். அரசியலில் சேரும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். காங்கிரஸ் இயக்கத்தில் பல பதவிகளை வகித்தார். 1948-இல் மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியாகவும் வாய்ப்புப் பெற்றார். நல்ல நிருவாகியாக, தனது பதவிக் குரிய கடமைகளைச் செய்து சிறந்து விளங்கினார்.

அவர் பிறந்த நாளிலேயே இறந்தது ஒரு விந்தை. இந்தியாவில் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. டாக்டர் லாங் மனிதன் வலியிலிருந்து விடுதலை பெற மரத்துப் போகச் செய்தார். டாக்டர் பி.சிராயோ, மரத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தவர்களை விழிப்புறச் செய்தார்!

தமிழ் ஓவியா said...


சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை


- பேரா.ஏ.எஸ்.நடராஜ்

தனக்கு நேரக்கூடிய துன்பங்கள் அனைத்திற்கும் பிறர் காரணம் என்று மனிதன் கருதுகிறான். கடவுளே காரணம் என்று பல நேரங்களில் கதறுகிறான், பதற்றமடைகிறான்.

இப்படிப்பட்டவர்களுக்கு அறிவு, ஆறுதல் அளிப்பதில்லை. குறுக்கு வழியில் இன்பத்தைத் தேடும் முயற்சியும், பிறரை வஞ்சித்து வாழ்ந்திடவும் கண்டுபிடிக்கப் பெற்ற கருவிதான் சோதிடம்.

வாதி புளுகன், மாந்திரீகன் வீண் புளுகன், சோதிடன் என்பவனோ சுத்தப்புளுகன் என்பது நம் சான்றோர் வாக்கு.

சோதிடம் சொல்பவனுக்கும், கேட்பவனுக்கும் இடையே சொல்லொணாத் துன்பம் வருவதில்லையா? சோதிடத்தை சிலர் பிழைப்புக்கும் பெருமைக்கும் சொல்லிக் கொள்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை என்னும் ஆணிவேரின் ஒரு கிளையாகவே மனித மனத்தில் இது பதிந்துள்ளது.

சோதிடம் சுத்தப்பொய்; அது உண்மையென மெய்ப்பிப்பார்க்கு ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கும் சிந்தனையாளர் பேராசியர் ஏ.எஸ்.நடராஜ் என்பவரால் கன்னடமொழியில் (சோதஷத பஞ்சமுக தர்ஷன்) எழுதப் பெற்றதை, தமிழாக்கம் செய்துள்ளார். பகுத்தறிவுப் பாவலர் வீ.இரத்தினம்.

இது ஓர் அறக்கட்டளை சார்பான வெளியீடு என்பதால் பலரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற நோக்கில் பொதுநலம் கருதி, 107 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை உருபா பத்து (ரூ. 10) மட்டுமே!

நூல் கிடைக்குமிடம்:

V. Rathinam 1157, 11th Main Road, Hampi Nagar,
Bangalore-560014. Cell: 9449880117

தமிழ் ஓவியா said...


புதிய ஆகஸ்ட் புரட்சி அறிவித்து விட்டார் நம் தமிழர் தலைவர்!


ஆகஸ்ட் ஒன்றில் புது புரட்சி!
சாதி ஒழிப்பின் அடித்தளமாய்,
தீண்டாமை ஒழிப்பின் அடிப்படையாய்,
அறிவிக்கப்பட்ட அரும் புரட்சி!
ஆகமம் பயின்ற அனைத்துச் சாதியினரும்,
அர்ச்சகராக போராடும் புரட்சி!

மனித வாழ்வின் முதல் துவக்கம்,
தன்னலமற்ற தாயின் கருவறை!
மனித வாழ்வின் மாபெரும் இழிவு!
இன ஒதுக்கல் பேணும் இந்துக் கருவறை!

வெந்து நொந்து வியர்வை சிந்தி - கோயில் கட்டிடம் கட்டிய சூத்திரத்தொழிலாளியா?
எட்டி நில்! கருவறை வெளியே! உளிப்பிடித்த கைத்திறத்தாலும்
உள்ளத்தில் ஊறிடும் கலைதிறத்தாலும் -
கடவுள் உருவம் வடித்த சூத்திர சிற்பியே !

ஒதுங்கி நில் ! கருவறை வெளியே!
ஆயிரம் லட்சமென நன்கொடை நல்கிய உபய சூத்திரர்களே ! கருவறை
உள்ளே நுழைய அனுமதி பெற்றவை, உங்கள் கரன்சிகள் மட்டுமே! என மனுவின் குரலாய் ஒலித்திடும்

கருவறை சட்டங்கள்! வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
என்றே ஒலித்திடும் இழிவோசை-பார்ப்பன
அர்ச்சகன் அடித்திடும் மணிஓசை!

தேவன் கோவில் மணியோசையில் கேட்டிடாத பேத ஒலி!
புத்தம்! சரணம்! கச்சாமியில் இல்லையே இந்த வர்ண மொழி!
அல்லாஹு அக்பர் வாசலிலே அனைவரும் நுழைய தடையில்லை!
இந்துக்கோயில் கருவறையில் மட்டும்
சூத்திரனை பழிக்கும் மூத்திரச்சட்டம்!

வெள்ளையனே! வெளியேறு! என்றது பழைய ஆகஸ்ட் புரட்சி!
சூத்திரனை உள்ளே விடு என முழங்கிடும்
புதிய ஆகஸ்ட் புரட்சி!

ஆத்திகனானாலும் நாத்திகனானாலும்
தன்மானம் என்பது பொது உணர்வென
தரணிக்கு காட்டிட தமிழர் தலைவர் அறிவித்து விட்டார் அரும் புரட்சி!
ஆகஸ்ட் புதிய பெரும் புரட்சி!

பொங்கும் புனலென, பூக்கும் அனலென
திரண்டிட வேண்டும் திராவிடரே !
தமிழர் தலைவர் தடம் பதித்தே!

- தகடூர் தமிழ்ச்செல்வி -

தமிழ் ஓவியா said...


கிளிக்கு நட்ட ஈடு

இங்கிலாந்து நாட்டில் கிளி ஒன்றுக்கு நட்ட ஈட்டை அந்நாட்டு இராணுவம் அளித்தது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்.

இங்கிலாந்து - அயர்ஷியர் பகுதியில் ஒருவர் கிளி ஒன்றை வளர்த்தார் விமானப் படையின் விமானம் குறைந்த உயரத்தில் பறந்து அதிக ஒலியை எழுப்பியதால் அதிர்ச்சி அடைந்த அந்தக் கிளி செத்துப் போய் விட்டது. கிளியின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் இங்கிலாந்து இராணுவம் கிளியின் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் நட்ட ஈடு அளித்தது. கடந்த 3 ஆண்டில் மட்டும் இங்கிலாந்து இராணுவம் இதுபோல் அளித்த நட்ட ஈடு ரூ.12 கோடியாம்! _ எப்படி இருக்கிறது?

தமிழ் ஓவியா said...


சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


சமூக நீதிக்கு எதிரான அரசாணை எண் 181அய் திருத்துக!

அரசாணை எண் 252அய் ரத்து செய்க!

சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் முனைவர் பாவலர் க. மீனாட்சிசுந்தரம், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, பேராசிரியர் தேவா, தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் மனநல மருத்துவர் டி.எம்.என். தீபக் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி பெரியார் நூல்களை வழங்கினர். (சென்னை பெரியார் திடல் - 5.7.2013)

சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனத்தில் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்தவர்: பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார், மாநில செயலாளர், திராவிடர் கழக மாணவரணி.

தீர்மானம் வருமாறு:

தீர்மானம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 181 ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களை இடைநிலை (SGT)
மற்றும் பட்டதாரி (BT Asst.) ஆசிரியர் பணிகளில் பணி நியமனம் செய்ய வழி செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இனி வருங்காலங்களில் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கான பணி நியமனத்திற்குத் தேவைப்படும் ஒரு தகுதித் தேர்வில் சமூகநீதி பின்பற்றப்படாமல் அனைத்துப் பிரிவு மக்களும் 60 சதவீதம் பெற்றால்தான் தேர்ச்சி என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைக்கான பணியை மறுக்கும் செயலாகும்.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) வகுத்துள்ள விதிமுறைகளின் படியே இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தனித்தனியே தகுதி மதிப்பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீதம் என்பதை கட்டாயமாக்கியது மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு விரோதமானதும், சமூகநீதிக்கு எதிரானதும் ஆகும்.

அரசாணை எண் 181 திருத்தப்பட்டு, வெவ்வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வெவ்வேறு தகுதி மதிப்பெண்கள் வழங்கி இடஒதுக்கீட்டை ஆசிரியத் தேர்வு வாரியம் பின்பற்ற வழி செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

அரசாணை எண் 252 தகுதித் தேர்வின் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்திற்கான வழியைக் கூறாமல் வெயிட்டேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளது. பட்டாயம், பட்டம் பெற்றவரின் மேல்நிலைப்பள்ளி (+2) கல்வியில் பெற்ற மதிப்பெண் அடிப்படை வெயிட்டேஜ் வழங்கி உள்ளது மிகப் பெரும் சமூக அநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வே தேவையில்லை என்பது நமது நிலைப்பாடு எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது என்ற அரசின் முடிவிலும் சமூகநீதிக்கு எதிராக உள்ள வெயிட்டேஜ் முறையைக் கைவிட்டு, அரசாணை எண் 252 திரும்பப் பெற்று, பதிவு மூப்பையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையிலான பணி நியமனங்கள் /மாற்றுத் திறனாளி/பெண்கள் /திருநங்கை என அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் சமூகநீதி அடிப்படை யிலான வெவ்வேறு கட்-ஆஃப் நிர்ணயித்து இடஒதுக் கீட்டு முறையைக் கடைப்பிடிக்க இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பலத்த கரவொலிக்கிடையே தீர்மானம் நிறைவேற்றப் பட்டது).

தமிழ் ஓவியா said...


புலி வேட்டை


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்.
(விடுதலை, 20.10.1960)

தமிழ் ஓவியா said...

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம்

ஸ்ரீமான் பி.எ. குருசாமி நாயுடு அவர்களும் ஸ்ரீமான் ஒ.எ.ஒ.கே. லட்சுமணன் செட்டியார் அவர்களும் ராயப்பேட்டை டிவிசன் நகர சபைத் தேர்தலுக்கு அபேட்சகர்கள். இதில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் நியமனத் தேதியில் கௌரவ மேஜிஸ்திரேட்டாக இருந்த தால் சட்டப்படி அபேட்சகராயிருக்க அருக ரல்லவென்று கமிஷனர் அவரை நீக்கித் தேர் தல் நடத்த உத்திரவிட்டார். இதன்மேல் அத்தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள் சென்னை மால் கே கோர்ட்டில் (ளுஅயடட உயரளந உடிரசவ) ஒரு பார்ப்பன நீதிபதியிடம் தடை உத்திரவு வாங்கினார்கள். அது அவரிட மே நிவர்த்தி செய்யப்பட்டும், மறுபடியும் இதன் பேரில் நமது பார்ப்பனர் ஹைக்கோர்ட்டில் பார்ப்பனரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம் ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள். இதையும் அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந் தேதிக் குள் தேர்தல் நடத்த உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள் உத்திரவிற்கு விரோத மாய் மறுபடியும் ஒரு பார்ப்பன ஹைகோர்ட் ஜட்ஜிடம் நமது பார்ப்பனர் அத் தேர்தலையும் நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள். இந்த நிலையில் சென்னை பிரதம நீதிபதி அவர்கள் இந்த நடவடிக்கையில் சந்தேகப் பட்டு மூன்று ஜட்ஜிகள் கூடி பைசல் செய்த ஒரு விஷயத்தை மறுபடியும் ஒரு ஜட்ஜிடம் போய் எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று கூட கோர்ட்டில் பார்ப்பன வக்கீல் களைக் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் சட்ட சம்பந்தமான ஆதாரமிருப் பதாகவும் ஒரிஜினல் என்ற காரணத்தை உத்தேசித்து அங்கு போனதாகவும் சொல்லி திருப்தி செய்திருக்கிறார்கள். அப்படியானால் அதையும் என்னிடமே ஏன் கொண்டு வந்திருக்கக் கூடாது என்றும் பிரதம நீதிபதி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்குச் சட்ட சம்பந்தமான சமாதானமாக அந்தக் காரணம் இந்தக் கோர்ட்டுக்கு வரக் கூடியதல்ல என்று சொன்னதாக தெரிய வருகிறது. இதைப் பார்த்தால் சட்டமியற்றுவது பார்ப்பனர்; அதை விவாதிப்பது பார்ப்பனர்; அதற்குத் தீர்ப்புச் சொல்லுவதும் பெரும்பாலும் பார்ப்பனர் என்று ஏற்படுகிறது. இந்நிலையில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி உள்ள விவகாரங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம் கிடைக்கு மென்று உறுதியாய் நம்ப இடமிருக்கிறதா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடு கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

எழுத்துச் சீர்திருத்த வரலாறு!

ஓமந்தூர் இராமசாமியார் முதலமைச்சராகவும் டி.எஸ். அவினாசிலிங்கம் கல்வி அமைச்சராகவும் இருந்த பொழுது தமிழ் எழுத்துச் சீர் திருத்தம் பற்றி கருத்து தெரி விக்க குழு ஒன்று அமைக்கப் பட்டது. டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வ.கல்கி ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றனர். தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தத்தை அக்குழு ஒப்புக் கொண்டு பரிந்துரைத்தது. அரசு அதை ஏற்று நடை முறைபடுத்துமுன், ஆட்சி மாறுதல் ஏற்பட்டு விட்டது. 2.2.75 அன்று தமிழக புலவர் குழுவும் தந்தை பெரியாரின் சீர்திருத்தத்தை ஒப்புக் கொண்டது. தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு அதற்கு அங்கீகாரம் வழங்கி விட்டது.

தமிழ் ஓவியா said...

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்

நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாகச் சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித் திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோள்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேட்சகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவா னான ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மை யை உத்தேசித்து தங்கள் சமூகத்தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண் ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக் காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந்தன்மையையும் குலாபிமானத் தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்ட தினாலேயே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை தானம் கிடைத்துவிடும் என்று நம்பி அஸ்

வாரஸ்யமாய் இருந்து விடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரச்சாரம் செய்து கிராமத்துக் குடியான மக்களுடைய மனதைத் திருப்ப முயற்சி செய்ய வேண்டும் என்றும் அப்படிக்கில்லாமல், அஸ்வா ரஸ்யமாயிருந்தால் கண்டிப்பாய் ஏமாற்ற மடைய நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்வதோடு ஸ்ரீமான் சங்கரண்டாம் பாளையப்பட்டக்காரக் கவுண்டர் அவர் களுக்கு வெற்றி கிடைக்க வேண்டியது அவசியமென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926


தமிழ் ஓவியா said...

இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்

எல்லா இந்திய காங்கிர தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிர கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.
அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும்.

2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக் கப்பட வேண்டும்.

3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம். மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர் களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம். அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.
- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

இளவரசன் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளான்!

தருமபுரியில், எதிர்பாராமல் இளவரசனுடைய மரணம் என்பது தற்கொலையா? அல்லது அவர்கள் சொல்கிறபடி படுகொலையா? என்ற உண்மை விரைவில் வெளிவரும்.

ஆனால், ஒன்று நிச்சயம், அது என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அது ஜாதி வெறியினரால் ஏற்பட்ட பலி - அதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஜாதி வெறி என்பது இருக்கிறதே, ஜாதியையும், தீண்டாமையையும் ஒழிப்பதைத்தான் வீர சபதமாக, சூளுரையாக நாம் எடுத்துக்கொள்வதுதான், அந்த வீரனுக்கு நாம் செலுத்துகின்ற மிகப்பெரிய வீரவணக்கமாக இருக்க முடியும்.

நாளைக்கோ, மறுநாளோ, சில நாள்களுக்குப் பிறகோ அவன் புதைக்கப்படலாம்; ஆனால், அவன் புதைக்கப்படமாட்டான்; விதைக்கப்படுவான் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பதைப்போல, அன்புச்சகோதரர் எழுச்சித் தமிழர் நினைக்கவேண்டாம்; இறுதியில் சிரிப்பவர் யார் என்பது தெரியும். உண்மையான வீரன் அவன்தான். அந்த உணர்வு நமக்கு நிச்சயமாக வரும். அந்த வகையிலே, உங்களுடைய நிதானம் பாராட்டப்படவேண்டியதாகும்.

காலையில்கூட அவர் மிகுந்த ஆவேசத்தோடு, உணர்ச்சிவயப்பட்டு என்னிடம் பேசியபொழுது, நான் சில கருத்துகளைச் சொல்லியதாகச் சொன்னார். ஆம், நம்முடைய மவுனம் இந்த நேரத்திலேயே பல பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த மவுனத்திற்கு அர்த்தம் நாம் தோற்றுவிட்டோம் என்பதல்ல; நாம் தான் இறுதியாக வெற்றி பெறப் போகிறோம். அது நிரந்தர வெற்றியாக அமையவேண்டும்; அது தற்காலிக வெற்றியாக அமையக்கூடாது என்பதற்கு அடிப்படையாகத்தான் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. மறைந்த இளவரசன் அவர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தி, அவரது குடும்பத்திற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜாதி வெறிக்குப் பலியான ஒரு மாவீரன், காதல் உணர்வு என்பதற்காக பலியான ஒரு மாவீரனுக்காக அருள்கூர்ந்து அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் காத்து வீர வணக்கத்தைச் செலுத்துவோம். (அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்).

- சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்

தமிழ் ஓவியா said...


கும்மிடிப்பூண்டி மாநாட்டின் தீர்மானங்கள்

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உறுதி செய்யப்படுதல் அவசியம்!

இளவரசன் மரணத்திற்கு பதிலடி; ஜாதியை முற்றாக ஒழித்துக் கட்டுவதே!

கும்மிடிப்பூண்டி மாநாட்டின் தீர்மானங்கள்

கும்மிடிப்பூண்டி, ஜூலை 7- இளவரசன் மரணத் திற்குப் பதிலடி ஜாதியை முற்றாக ஒழிப்பதே என்கிற சூளுரைத் தீர்மானம் உட்பட 5 தீர்மானங்கள் கும்மிடிப் பூண்டியில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் (6.7.2013) நிறைவேற்றப்பட்டன.

கழகப் பொதுக்குழு உறுப்பினர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். பலத்த கரவொலி கிடையே 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மா னங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:

தோழர் இளவரசன் மறைவிற்கு இரங்கல்

1. ஜாதி மறுப்பு - காதல் திருமணம் செய்துகொண்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நத்தம் தோழர் இளவரசன் அவர்களின் அதிர்ச்சியூட்டக்கூடிய மறை விற்கு இம்மாநாடு தனது ஆழ்ந்த இரங்கலையும், சொல் லொணாத் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

இளவரசனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற அய்யப்பாடு எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிப்பதில், தமிழ்நாடு அரசு சற்றும் தயக்கம் காட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மறைவிற்குக் காரணமாக இருக்கக்கூடிய ஜாதிய சிந்தனையையும், வெறியையும், கட்டமைப்பையும் எதிர்த்துப் போராடுவதே - ஒழிப்பதே இதற்குக் கொடுக்கும் பொருத்தமான பதிலடி என்பதால், திராவிடர் கழகம் மேலும் தீவிரத் தன்மையுடனும், ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்தும் ஜாதி ஒழிப்பை முதன்மைப்படுத்திக் கடுமையாகப் பாடுபடுவது - போராடுவது என்று இம்மாநாடு உறுதி கொள்கிறது.

தீர்மானம் 2:

ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம்)

ஜாதி - தீண்டாமை ஒழிப்பின் முக்கிய அம்சமான கோவில் கருவறைகளில் அதிகாரப்பூர்வமாக ஆணவத் துடன் குடிகொண்டிருக்கும் - பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் என்கிற நிலையை மாற்றி, அனைத்து ஜாதியினருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களால் இறுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் பெருந்திரளாக ஈடுபடுவது என்றும், திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்துக்குத் தமிழினப் பெருமக்கள் அனைவரும் பெரும் ஒத்துழைப்புக் கொடுத்து வெற்றி பெறச் செய்யவேண்டுமெனவும் இம்மாநாடு தமிழ்ப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இது தொடர்பான வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி, வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ளவேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (அ):

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழர் பதவி ஏற்புக்குப் பாராட்டும் - வேண்டுகோளும்!


தமிழ் ஓவியா said...

ஒரு தமிழர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு இம்மாநாடு தனது பாராட்டுதலையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் மகிழ்ச்சியை ஊட்டும் வகையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களால் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் தமிழரான திரு.பி.சதாசிவம் அவர்கள் கூறியிருப்பதற்கு இம்மாநாடு மகிழ்ச்சியையும், நல் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்வதுடன், மிகப்பெரிய பொறுப்பில் - அதிகாரத்தில் இருக்கும் நீதிபதியவர்கள் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்திட ஆவன செய்து, வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனையைச் செய்து முடிக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (ஆ):

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துக!

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-லிருந்து 68 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு

வயதை 62-லிருந்து 65 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உறுதி செய்யப்படுதல் அவசியம்

தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழ்நாடு பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாக்கப்பட்டுள் ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இத்தகு பொதுப் பிரச்சினைகளில் சுருதி பேதம் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் உரிமைக்குரல் கொடுக்கவேண்டுமாய் ஒட்டுமொத்த தமிழர்களையும், தலைவர்களையும், அமைப்புகளையும் இம்மாநாடு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் இத்தகு பொதுப் பிரச்சினைகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒன்றுபட்ட கருத்தைத் திரட்டும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யுமாறு இம்மாநாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசும் இப்பிரச்சினையில் நியாயமாகவும், சட்டப்படியாகவும், அரசியல் கண்ணோட்டமில்லாமல் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துக!

தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வழி செய்யவேண்டிய தமிழ்நாடு அரசு, அந்தத் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது - தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், அத்தகு பழிக்கு ஆளாகாமல், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், வழக்கை விலக்கிக் கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்டவேண்டுமாய் இம்மாநாடு தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் திராவிடர் இயக்கத்தவர்கள் விரும்பிய திட்டம் மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க.வின் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதையும் இம்மாநாடு நினைவூட்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணியில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை என்பதையும், அது அரசுக்குக் கடும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்ற கசப்பான உண்மையையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பக்தர்களுக்காக நாத்திகர்கள் நடத்தும் போராட்டம் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு


ராமநாதபுரம், ஜூலை 7- அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்டமானது பக் தர்களுக்காக நாத்திகர் களாகிய நாங்கள் எங் களையே வருத்திகொண்டு போராடுகிற போராட் டம். இந்த போராட்டத் துக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஆதரவுதர வேண்டும் என திரா விடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசினார். பாளையங்கோட்டை, தூத்துக்குடி, கோவில் பட்டி, சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆற்றிய போராட்ட விளக்க உரை யிலிருந்து: இந்திய அர சியல் அமைப்பு சட்டத் தில் 18 இடங்களில் ஜாதி பற்றிபேசப்பட்டுள்ளது. இதேபோல், 17-ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுளளது. தீண் டாமைக்கு காரணமே ஜாதி தான். எனவே, ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று எழுத வேண்டும் என்றார் தந்தை பெரியார். இதனடிப்படையில், ஜாதியை பாதுகாக்கும் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார்.

இதில், 5,000 போராட்ட வீரர்கள் கலந்துகொண்டு, 3000-க்கும் மேற்பட் டோர் சிறை சென்றனர். இந்த போராட்டத்தில் 3 ஆண்டுகள் வரை எமது தோழர்கள் சிறை சென் றனர். ஜாதி ஒழிப்பு கிளர்ச் சியில், 16 பேர் உயிரிழந் தனர். இப்படி 56 ஆண்டு களுக்கு முன் அடிக்கப் பட்ட ஜாதி பாம்பு தப்பியோடி இன்று கோயில் கருவறையில் நுழைந்து தன்னை பாது காத்துக்கொண்டுள்ளது. கோயில் கருவறைக்குள் நுழைந்த பாம்பை அடித்துக்கொல்வதற்கும், தந்தையின் (தந்தை பெரி யார்) நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற் கும் இன்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் போராட்ட களத் தில் நமது உரிமையை நிலைநாட்டும் போராட்ட களத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்டமானது 1969-ஆம் ஆண்டு தமிழர்க ளின் இழிவை நீக்க கர்ப்ப கிரக கிளர்ச்சி நடத்தப் படும் என தந்தை பெரி யார் அறிவித்தார். இதில், 2000-க்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டு போராட்ட களத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிலையில், 1970-ஆம் ஆண்டு கலைஞர் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை பிரச் சினையில், அனைவருக் கும் சமவாய்ப்பளிக்க சட்டம் உருவாக்கப் படும் எனக்கூறியதைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக பெரியார் அறிவித்தார். இதனையடுத்து கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் காலத் திலும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் காலத்திலும் ஏராள மான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டத்தின் பல னாக திமுக, அரசு சட்ட மியற்றியது. இதனை யடுத்து அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக பயிற்சி அளிப்பதற்கு திருச்சி கம்பரசம்பேட்டையில் வேதஆகம கல்லூரி தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்தார். இதற்கு தமிழர் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, அர்ச்சகர் பயிற்சியில் வேதம் சொல்லித்தரக் கூடாது. ஆகமம்தான் சொல்லித்தர வேண்டும் என அரசுக்கு அறிவுறுத் தினார். இந்நிலையில் வேதம் படித்தவர்கள் சைவக் கோயில்களில் நுழையக் கூடாது என சைவர்கள் வழக்குத் தொடுத்துள்ள னர். ஆகமத்தில், சைவம், வைஷ்ணவம், காணபத் தியம், கவுமாரம், சாக் தம், சவ்ரவம் முறையே சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அம்மன், சூரி யன் ஆகிய கடவுள் வழி பாடாகும். இதில், பல அர்ச்சகர்களுக்கு கணப திக்கு ஓதுகிற மந்திரத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நந்தி, கருடன், கொடி மரம், பலிபீடம், அர்த்த மண்டபம், மகாமண்ட பம் கடந்து கருவறைக் குள் சென்று வழி பாட்டை நடத்துகிற வழிமுறைகளை சொல் லித்தருவதே. ஆத்திகர் களின் உரிமைக்கு நாத்தி கர்கள் நடத்தும் போராட் டம். இதற்கு பொது மக்களும், பக்தர்களும் ஆதரவு வழங்க வேண் டும் என கேட்டுக்கொண் டார்.

தமிழ் ஓவியா said...


காரணம்



எதற்கும் பகுத்தறிவை உப யோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்கா மலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப் பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.

- (குடிஅரசு, 4.5.1930)

தமிழ் ஓவியா said...


நிதி வழங்க விரும்புகிறேன்


நிதி வழங்க விரும்புகிறேன்

தமிழர் தலைவர் அவர்களுக்கு என்றும் உங்கள் கொள்கைத் தொண்டன் இன்று திருவாரூர் மாவட்ட கழகக் குடும்பங்களின் கலந்துரையாடலில் குடும்பத்துடன் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோராது செயலாற்றி வரும் தங்களின் தொண்டறம் தொடர பெரிதும் விழைகின்றேன்.

மூடநம்பிக்கையிலிருந்து இன்னும் விடுபடாத மக்கள், அரசியலிலும் தெளிவற்ற நிலை, இன உணர்வற்ற தமிழர்கள், இவற்றுக்கிடையே இனமான பகுத்தறிவுப் பேரொளியாக அய்யாவின் வழியில் தங்கள் எழுத்தும், பேச்சும், செயல்பாடுகளும் என்றும் தொடர என்றும் எங்கள் துணை உங்களுக்கு இருக்கும்.

தங்களை 2013-ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரிதும் மகிழ்ந்து தங்கள் உடல்நல மருத்துவ பாதுகாப்பு நிதியாக ரூ.2013/- (இரண்டா யிரத்து பதின்மூன்று ரூபாய் மட்டும்) வழங்கி மகிழ்கிறேன். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் நிதி வழங்கிட விரும்புகிறேன்.

- மணியம் கிருஷ்ணமூர்த்தி, புலிவலம்.

தமிழ் ஓவியா said...

விடுதலையின் பணி

28.6.2013 விடுதலை இதழின் மழை வேண்டி யாகமாம் என்ற தலையங்கமும், மும்மாரி என்ற ஒற்றைப் பத்தியும் பல முறைப்படித்து பயனுற மட்டுமல்ல, பத்திரப்படுத்தவுமான பதிவுகள். தமிழக அரசின் நடவடிக்கையை விமர்சித்து எழுப்பப்பட்டவை அனைத்தும் வெறும் கேள்விகள் அல்ல. கொள்கைக் கூர் ஆயுதங்கள்! அறிவின் பகைவர்கள் எவரும் பதில் கூறும் திராணியற்று விழி பிதுங்கச் செய்யும் வினாக்களைத் தொடுக்கும் பேராண்மை பெரியார் பேரியக்கத்துக்கு மட்டுமே உண்டு என்பதை இனியாவது தெரிந்து கொள்ளட்டும்.

ஆயிரம் அறிவை இவர்கள் பெற்றிருக்கலாம். ஆறாம் அறிவு இல்லையே!

மடமைப் படுகுழிக்கு மக்களை இழுத்துச் செல்லும் மதபோதையர்களை நல்வழிப்படுத்த இதுபோல் வீறுகொண்டு எழட்டும் விடுதலை.

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...


தலைவர்கள் சிந்திக்கட்டும்!


கும்மிடிப்பூண்டி மாநாடு பல வகைகளிலும் சிறப்பானது. கழகத்தின் புதிய மாவட்டமாக உதயமான இம்மாவட்டத்தில் இப்படி ஓர் எழுச்சி மாநாடு நடைபெற்றது என்பது சாதாரணமானதல்ல.

மூடநம்பிக்கையை முன்னிறுத்திப் பேசப்படும் கருத்துகளுக்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிய முடிகிறது. மாநாட்டின் நிறைவுரையில் தமிழர் தலைவர் ஆற்றிய அந்த வகையான பேச்சுக்குப் பெரும் வரவேற்பைக் காண முடிந்தது. அரசியல் தொடர்பான தலைப்புக்குச் செல்லாமல் மக்களின் அறியாமை குறித்துச் சுட்டிக் காட்டி அவர் பேசிய பேச்சுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது.

குறிப்பாக கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் தவிர்த்து பார்ப்பனர் அல்லாதார் செல்லக் கூடாது; அர்ச்சனை செய்யக் கூடாது - அப்படி சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்ற ஏற்பாட்டின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் கருத்துக்களை எடுத்து வைத்தார்.

கடவுள் தீட்டுப்பட்டு விடும்; தோஷம் பட்டு விடும் என்று கூறுவதே அவர்கள் கூறும் கடவுள் தன்மைக்கு முரண்பாடு இல்லையா? என்ற கேள்வி எல்லோரையும் கவர்ந்தது.

கடவுள் மறுப்பு இயக்கமான திராவிடர் கழகம் கோயில் அர்ச்சகர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வது ஏன் என்ற கேள்விக்கு நியாய மான அறிவு நாணயமான பதிலை வழங்கினார்.

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது மனித உரிமைப் பிரச்சினை என்று அழகான முறையில் பதில் அளித்தார்.

கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் திராவிடர் கழகத்தினர் எவரும் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தினர்.

இந்தப் பிரச்சினையில், ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றி, நீதியரசர் மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்குவது ஆகமங்களுக்கு விரோதமானதல்ல என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளதே!

அந்தக் குழுவில் திருமுருக கிருபானந்தவாரியார், காஞ்சி சங்கராச்சாரியார் போன்றவர்களும் அங்கம் வகித்தனரே!

நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், பயிற்சிப் பள்ளி அமைத்துப் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளதே!

இதற்குமேல் என்ன ஆதாரங்கள், நியாயங்கள் தேவை? உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் எதற்கு முட்டுக்கட்டை போடுகிறது?

தற்போதைய அ.இ.அ.தி.மு.க. அரசு, அதன் முதலமைச்சர் (1999-2004) ஆட்சிக் கால கட்டத்தில், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பச்சைக் கொடி காட்டியதே! இப்பொழுது ஏன் இந்தப் பிரச்சினையில் அழுத்தமான அமைதியை மேற்கொள்கிறது?

இந்தப் பிரச்சினை குறித்து திராவிடர் கழகம் தவிர, மற்ற கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் ஏன் போதுமான அக்கறை இல்லை? இது என்ன ஓர் இயக்கப் பிரச்சினை மட்டும் தானா?

தந்தை பெரியார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத, மதிக்காத கட்சியோ, தலைவரோ தமிழ் நாட்டில் இருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது தந்தை பெரியார் தன் இறுதிப் போராட்டம் என்று அறிவித்த - இந்த ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் பணியில் ஏன் அக்கறை காட்டுவதில்லை?

அதே நேரத்தில் தன் ஜாதி ஆதிக்கத்தைச் சற்றும் விட்டுக் கொடுக்க விரும்பாத நிலையில் பார்ப்பனர்கள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்லுவதை அறிந்திருந்தும் பார்ப்பனர்பற்றிய புரிதல் நம் பார்ப்பனர் அல்லாத தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் புரியவில்லையா? தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிடைக்கப் பெற்றால், அது இந்தியா விலேயே புரட்சிகரமான சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துமே.

ஜாதி வெறியைக் கையில் எடுத்துக் கொண்டு அரசியல் நடத்தப்படுவதற்கும் முடிவு கட்டப்பட்டு விடுமே!

நிதானமாகச் சிந்திக்கட்டும்; இது மிக மிக முக்கியமான மனித உரிமைப் பிரச்சினை - அலட்சியம் காட்டுவது பொறுப்பற்ற தன்மையாகும்.

வேறு தடங்களில் எதைச் சாதித்து இருந்தாலும், இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதன் மூலமே தலைவர்களும் அமைப்புகளும் எதிர்காலத்தில் மதிக்கப்பட முடியும்.

சிந்திப் பார்களாக!

தமிழ் ஓவியா said...


இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

தமிழ் ஓவியா said...

மதுரை, ஜூலை 9- நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண் டும் என மதுரையில் நேற்று (8.7.2013) நடை பெற்ற பொதுக் கூட்டத் தில் தமிழர் தலைவர் வலியுறுத்தினார்.

அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை, சேது சமுத்திரத் (தமிழன் கால்வாய்) திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி நாகர் கோவில் முதல் மதுரை வரை -ஒரு குழுவும் தென்காசி முதல் மதுரை வரை மற்றொரு குழுவும் தொடர் பிரச்சாரம் நடத்தி வந்தன. இந்த பிரச்சார நிறைவு விழா மதுரை டி.எம். கோர்ட் அருகே 8.7.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரிமை மீட்பு எழுச்சி உரை

இக்கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டதாவது: "இரண்டு பிரச்சினை களை முன்னிறுத்தி இங்கே இந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. ஒன்று அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது, இன்னொன்று சேது சமுத்திரத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்பது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது 43 ஆண்டு களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை. தந்தை பெரியார் தொடங்கி, அன்னை மணியம்மை யார் தலைமையில், அதற்கு பின் என்னைப் போன்றோர் தலைமை யில் தொடர்ந்து எழுப் பப்பட்டு வரும் கோரிக்கை. கட்சிக ளுக்கு அப்பாற்பட்டு, நாத்திகமா, ஆத்திகமா என்பதற்கு அப்பாற் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில் எழுப் பப்படும் கோரிக்கை. இன்னும் சூத்திரன், பஞ்சமன் என்றில்லாமல் மனிதராக இருக்க வேண்டும் என்பதற்காக எழுப்பப்படும் பிரச் சினை. இதை அலட்சி யப்படுத்தினால் ஆட்சிய திகாரமே ஆட்டம் காணக் கூடும் என்பதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்லர். மற்ற நாடுகளில் மனிதன் மனிதனாகப் பிறக்கிறான். ஆனால் இந்த நாட்டில் தான் மனிதன் பிறக்கும் போதே, சூத்திரானாக, பஞ்சமனாகப் பிறக்கின் றான். சாகும்போதும் சூத்திரனாக, பஞ்சம னாகத்தான் சாகின்றான். இன்னும் தீண்டாமை இருக்கிறது,ஜாதி வேற்றுமை இருக்கிறது. இன்றைக்கும் ஜாதி வேற்றுமையால்தான் திவ்யாக்களும், இளவர சன்களும் நிம்மதியாக வாழ முடியவில்லை.

தீண்டாமை, இன்னும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அரசியல் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை நீக்கப்பட்டது (ருவேடிரஉடைவைல ஹடிடளைநன) என்று தான் இருக்கிறது: இன்னும் ஜாதி ஒழிக்கப் பட்டது என்று அரசியல் சட்டத்தில் இல்லை. அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகப் பயிற்சி பெற்றவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி சிறீ ரங்கம் கோயில், காஞ்சி காமாட்சி கோயில் போன்ற இடங்களில் அர்ச்சகர்களாக நியமிக் கப்பட வேண்டும். ஜாதி இழிவு நீங்கும் வரை விட மாட்டோம். சட்டப்படி யாக போராடுவோம்! அறப் போராட்டமாக போராடுவோம். ஒரே நாளில் முடியும் போராட்டமாக அல்ல பல கட்டங்களாக போராடுவோம் உறுதி யாக வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்பட்டும்கூட இப்பொழுதுதான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (சதாசிவம்) ஆகியிருக் கிறார். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீதியரசர் பி. சதா சிவம் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார் கள். அதை நாங்கள் வரவேற்கிறோம் என்று தமிழர் தலைவர் பேசி னார். மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு

திராவிடர் கழகத்தின் அடுத்த கட்ட கிளர்ச்சி

இந்த நாட்டினுடைய 65 ஆண்டுகால வரலாற்றில், முதன்முறையாக தமிழ்நாட்டைச் சார்ந்த, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருகின்ற 19 ஆம் தேதி பதவியேற்க விருக்கிறார். ஆனால், ஒரு கொடுமை என்னவென்றால், அவர் அந்தப் பதவியில் 9 மாதங்கள்தான் இருப்பார்.

இந்த 9 மாதத்திலும் அய்ந்து மாதங்கள் வரவேற்பு; மீதி நான்கு மாதத்தில் பிரிவு உபசார விழா; இதிலேயே பதவிக்காலம் முடிந்துவிடுமே! ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்; ஏர் பிடித்த உழவர் அவர்; ஈரோட்டு மண்ணிலே பிறந்த ஒருவர், முதன்முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்னாலேயே, நீதிபதிகள் நியமனங்களில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடு தேவை என்று கூறியுள்ளார். இதுவரை மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் நியமனங்களில் மட்டும்தான் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. முதல் முறையாக பெரியார் பிறந்த மண்ணிலே இருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வந்திருக்கிறார்.

அவர் பதவி ஏற்பதற்கு முன்பு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்திலும் இடஒதுக்கீடு அமலாக வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இதற்காகத்தான் திராவிடர் கழகத்தினுடைய அடுத்த கிளர்ச்சி! அதில் ஒன்றும் சந்தேகமில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.

(8.7.2013 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையிலிருந்து...)