Search This Blog

5.7.13

அய்யர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காதா? திருமணம் தேவையில்லாத நிகழ்ச்சி!

திருமணம் என்ற தேவையில்லாத நிகழ்ச்சி! - தந்தை பெரியார்

இன்றைய தினம் பழைமையின் கல்யாண முறைகள் மாற்றப்பட்டு புதிய முறையில் வாழ்க்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியதற்குக் காரணமே பெண் அடிமையினை ஒழிக்கவும், மூட நம்பிக்கைகளை ஒழிக்கவுமேயாகும்.

பழைய முறையில் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை உடைய பெண்கள் சமுதாயம் ஆணுக்கு அடிமையாக இருக்க வழி வகைகளை செய்யக் கூடியதாகவே இருந்தது.

பழைய முறைகளுக்கு நூல்களோ, சாத்திரங்களோ பெண்களை ஒரு உயிருள்ள ஜீவன் என்றுகூட கருதி நடத்தவில்லை.

இத்தகைய முறைகள் மூலம் பெண் அடிமை நீக்கப்படுகின்றது. பெண்கள் ஆணுக்கு அடிமை அல்ல, இருவரும் சமமான அந்தஸ்து உடையவர்களே என்பது நிலைநாட்டப்படுகின்றது.

அடுத்து முட்டாள்தனங்கள்; அர்த்தமற்ற சடங்குகள் ஒழிக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமான சங்கதிகளே மேற்கொள்ளப்படுகின்றன.

மனிதன் திருமணம் ஆன பிறகு தமது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு மட்டும்தான் தமது தொண்டு உழைப்பு என்று கருதுகிறார்களே ஒழிய மனிதனாகப் பிறந்தவன் மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதை விட்டு விடுகின்றார்கள்.

எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்வதை, தவறு சட்டப்படி குற்றமான காரியம் என்று ஆக்கி இருக்கின்றோமோ அதுபோல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும்.

நாங்கள் கூறுவது பலருக்கும் பிடிக்காது. கடவுள், மதம் பற்றி நாங்கள் கண்டிப்பது கண்டு ஆத்திரமும், வேதனையும் படுகின்றார்களே- அதுபோலத்தான் இதுவும்!

                       ----------------------------15.4.1973 அன்று வேலூரில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு (விடுதலை, 2.5.1973)
*********************************************************************************

திருமணம் என்கின்ற நிகழ்ச்சி ஒரு தேவை இல்லாத நிகழ்ச்சியாகும். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தும் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியானது முன்பு  பார்ப்பனர்களுக்குத்தான் தேவைப்பட்டது, நமக்கல்ல. பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்கு வரும்போது பெண்களைக் கூட்டிக் கொண்டு வரவில்லை. அவர்கள் தங்களுக்கு இந்த நாட்டுப் பெண்களையே மனைவியாக்கிக் கொள்ள முற்பட்டார்கள். நம் நாட்டுப் பெண்கள் அவர்கள் இஷ்டப்படி அடங்கி நடக்கவில்லை. அதன் காரணமாக நம் பெண்களை அடக்கி ஆள அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறைதான் விவாகம், பாணிக் கிரகணம், கல்யாணம் முதலியனவாகும்.

எதைக் கொண்டு சொல்லுகின்றேன் என்றால், தமிழர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றதும், மிகவும் பழைமையானதும் ஆன தொல்காப்பியத்தைப் பார்த்தே கூறுகின்றேன்.

பார்ப்பனர்கள் நம் பெண்களைத் தங்கள் இஷ்டப்படி அடக்கியாளவே காரணங்களை ஏற்படுத்தினர். பொய்யும், கழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்று நாட்டில் தங்கள் இஷ்டப்படி கட்டுப்பட்டு நடப்பதற்காக காரணங்களை ஏற்படுத்தினார்கள் என்பது.

நம் புலவர்கள் அய்யர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காது. அறிவால் மேற்பட்ட பெரியோர்கள் என்று முட்டாள்தனமாக வியாக்கியானம் பண்ணுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கும் கூறுவேன், தொல்காப்பியர் அவர்கள் அடுத்த சூத்திரத்திலேயே கூறுகின்றார்.

திருமண முறை என்பது மேல் ஜாதிக்காரராகிய பார்ப்பன, சத்திரிய, வைசியர்களாகிய மூன்று பிரிவினர்களுக்கும்தான் இருந்தது. பிறகு பிற்காலத்தில் கீழ் ஜாதிக்காரர்களுக்கும் அது புகுத்தப்பட்டது என்று.

`மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே

என்று பட்டாங்கமாகக் கூறி இருக்கின்றாரே!

எனவே, பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கத்தில்தான் திருமண முறை பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்டது.

நம் முன்னோர்களோ, புராணிகர்களோ, புலவர்களோ எவருமே பெண்களை ஒரு மனித ஜீவன் என்று கருதி கருத்தினை வெளியிடவே இல்லை.
அனைவராலும் பாராட்டப்படுகின்ற வள்ளுவன்கூட பெண்களைப்பற்றி மிகக் கொடுமையாகத்தானே பாடி இருக்கின்றான்.

பெண்களுக்குச் சுதந்திர வாழ்வு வேண்டும், ஆண்களுக்கு அடிமை என் கின்ற நிலை மாறவேண்டும் என்பதற்காகத் தோற்றுவிக்கப்படுவதுதான் இப்படிப் பட்ட மாறுதல் திருமணமாகும்.

பெற்றோர்கள் தங்கள் பெண்களை 22 வயது வரைக்கும் நன்றாகப் படிக்க வைக்கவேண்டும். அவசரப்பட்டு சிறு வயதிலே திருமணம் செய்துவிடக் கூடாது. படித்து முடித்து ஒரு தொழிலுக்குச் சென்ற பிறகே திருமணம் பற்றிப் பேச வேண்டும். அதுவும் திருமணச் சங்கதியைப் பெண்ணின் இஷ்டத்திற்கு விட்டுவிட வேண்டும். அவர்களாக தங்களுக்கு ஏற்றவரைத் தெரிந்து எடுத்துக் கொள்வார்கள்.

                         ------------------------------28.4.1973 அன்று திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு  (`விடுதலை, 9.5.1973).

38 comments:

தமிழ் ஓவியா said...





கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

50 வயது பெண்ணின் . . .


இளம் பெண்ணின் கற்பனைகள் தன் அழகைப்பற்றிய சிந்தனைகள், தன் உற்றார் உறவினரைப் பற்றிய பெருமிதம் இவை எல்லாம் இருக்கும்பொழுது கவலைக்கு இடமேது? ஆனால் வாலிபத்தைத்தாண்டி வயோதிகத்தை மிதிக்கும்பொழுது ஏற்படும் முதல் அறிகுறிதான் மனோபாஸ் என்ற சூற்பை ஓய்வு ஆகும். இந்நிலை ஏற்படும்பொழுதுதான் கருங்கூந்தலில் வெண்ணிறம், கண்ணில் கண்ணாடி, உடல் அங்கங்களிலெல்லாம் தொய்வு ஏற்பட்ட உணர்வு, ஏதோ தன்னிடம் இருந்த அழகெல்லாம் தன்னை விட்டுச் சென்று கொண்டிருப்பது போன்ற பிரமை ஆகியவை ஏற்படுகின்றன. ரோமானியப் பேரரசில் பெண்கள் முழுமையாக வாழ்ந்த காலமே 23 வயது வரைதான். கொலம்பஸ் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைந்தபோது 30 வயதாக இவ்வாழ்நாள் காலம் உயர்ந்தது.

அதுவே ராணி விக்டோரியா காலத்தில் 40ஆக மேலும் உயர்ந்தது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் சூற்பை ஓய்விற்கு முன்னரே பெண்கள் பழங்காலத்தில் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் இன்று 45 வயதிற்கு மேல் 75 வயதுவரை வளர்ந்த நாடுகளில் 95 விழுக்காடு பெண்கள் வாழ்கிறார்கள். உலக நாடுகளில் ஏறத்தாழ சூற்பை ஓய்விற்குப் பிறகு 1/3 விழுக்காட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.

சூற்பை ஓய்வு என்பது உடல் செயல்திறன் குறைபாட்டின் காரணம்தான் என்றாலும் சில சமயங்களில் அறுவை முறைப்படி கருப்பையும் அல்லது சூற்பையையும் சேர்த்து அகற்றப்படும் பொழுது மாதவிடாய் நின்றுவிடும். ஒரு பெண்ணுக்கு சூற்பை ஓய்வு எப்பொழுது ஏற்படப் போகிறது என்பதை எந்தப் பரிசோதனைகளின் மூலமும் அறிய முடியாது. வாழ்க்கைப் பயணத்தில் தேவையான ஒரு திருப்புமுனைதான் சூற்பை ஓய்வு என்பது

அதிகமான அளவு இரத்த ஒழுங்கு அல்லது அடிக்கடி உண்டாகும் மாதவிலக்கு என்பது சூற்பை ஓய்விற்கான அறிகுறி அல்ல. இம்மாதிரியான அறிகுறிகள் கருப்பையில் ஏற்பட்டு இருக்கும் நார்த்தசைக்கட்டி, தொங்கு தசைகளினாலேயே இருக்கலாம். மிக அபூர்வமாகக் கருப்பைப் புற்றின் காரணமாகக்கூட இருக்கலாம். இக்காரணங்களை முழுவதுமாகச் சோதனை மூலம் அறிந்துகொண்டால் நோயை முழுவதும் குணப்படுத்த முடியும். ஆகவே சூற்பை ஓய்வு தோன்றும் நிலை என்று, அடிக்கடி மாதவிலக்கு ஏற்படும்பொழுது நினைத்து ஏமாந்துவிடக் கூடாது.

அறிகுறிகள்:

50 வயதுகளில் ஏற்படும் கடைசி மாதவிடாய்க்குப் பிறகு தன் குழந்தைகள் வீட்டைவிட்டு வேலைக்குச் செல்லும் நிலைகளில் தன்னைத் தேடாத நிலையில் வருத்தம் ஏற்படும். ஏனெனில் அடிக்கடி மயக்கம், சிடுசிடுப்பு, நரம்புத் தளர்ச்சி, தலைவலி, தூக்கமின்மை, முகம் எரிச்சல், மனக்கசப்பு, மூட்டில் வலி, உடலில் ஊசி குத்துவது போன்ற உணர்வு இவை எல்லாம் அவ்வப்பொழுது வயதானதை உணர்த்திக் கொண்டு இருக்கும். இந்த அறிகுறிகளில் அவர்கள் மிகவும் கவலைப்படுவது மனத்தளர்ச்சி, மறதி, கலவியில் ஈடுபடமுடியாத இல்லற ஏமாற்றம் போன்றவை சுமாராக 30 விழுக்காடு ஏற்படுகிறது. மற்ற அறிகுறிகளெல்லாம் எப்பொழுதாவது தோன்றி மறையக் கூடியதே. சூற்பை ஓய்வு நிற்பதற்கு முன்புகூட ஓரிரு ஆண்டுகள் உடலில் வேர்வை, உடல் எரிச்சல், பெண்குறி காய்ந்து போதல் போன்றவைகள் தோன்றி நின்ற பிறகு மிகுந்த தொந்தரவைக் கொடுக்கும். நடுத்தர வயதினில் சிலசமயம் பெண்ணுக்கு சூற்பை ஓய்வு ஏற்படும். ஆனால், வயதான நிலையில் ஏற்படும் மாறுதல்களுக்கும் வீட்டுப் பிரச்சினைகளாலும் வாழ்வில் கிடைக்க வேண்டியவைகள் கிடைக்காத நிலைகளிலும் உண்டாகும் அறிகுறிகளுக்கும் ஈஸ்டிரோஜன் குறைபாடு என்று நினைத்து அதை மருந்தாகக் கொடுத்தாலும் நிச்சயம் தோல்வி ஏற்படும்.

தமிழ் ஓவியா said...


இரத்தக் குழாய்கள் தாக்கும் அறிகுறிகள்:

இரத்தக் குழாய்கள் தாக்கப்படுவதால்தான் இரவில் வியர்வையும், உடல் சூடும் ஏற்படுகின்றன. ஆனால் அறிவியல் ரீதியாக இதன் காரணத்தைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. எல்லோருக்கும் ஒரேவிதமான அறிகுறிகள் ஏற்படுவதில்லை.

எலும்புகளில் மாறுபாடு:

எலும்பில் இருந்து சுண்ணாம்புச் சத்து, விழுக்காடு என்ற அளவில் வெளியேறுகிறது. அப்பொழுது எலும்புகள் சிறுத்து வலுவற்று உடைவதற்கு ஏற்பதாக அமைந்து விடுகிறது. ஆகவேதான் ஆண்களைவிட பெண்களுக்கு சுமார் 50 வயதிற்குப்பின் தொடை எலும்பு, மணிக்கட்டு, முதுகெலும்பு முதலியவற்றில் சிறு அடிபட்டால்கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. படுத்த படுக்கையாக இருந்தாலும் சுண்ணாம்பானது எலும்பை விட்டு வெளியேறும். ஆகவே, வயதான நிலையிலும், பெண்கள் நடையுடன் இருந்து முடிந்தவரை தன் எலும்புகளுக்கு உதவி செய்வதற்காகவாவது நடக்க வேண்டும்.

உணர்ச்சி மாறுபாடுகள்:

சூற்பை ஓய்விற்குப் பிறகு பலதரப்பட்ட உணர்ச்சி மாறுபாடுகள் அடிக்கடி தோன்றுகின்றன. பெண்கள் உடல் சக்தியையும் மன பலத்தையும் இழந்த நிலையில் நன்றாக வேலை செய்ய முடியாமை மனத்தை ஒருநிலைப்படுத்த முடியாமை போன்றவை தோன்றுகின்றன. குடும்பத்தில் உண்மையான அன்பு இருப்பினும் தன்னுடைய குழந்தைகளிடமும், கணவனிடமும் சிறு காரியத்திற்குக்கூட சிடுசிடுப்பு, கோபம் அடைய வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள். இந்தவித உணர்ச்சி வயப்படும் தன்மையை கடைசி மாதவிடாய்க்கு முன்பு அவர்கள் உணர்ந்தே இருக்க மாட்டார்கள். மேலும் அத்துடன் தன்னைப் பற்றியே கவலை, தன்னைத்தானே சோதனை செய்து கொள்வது இத்துடன் உண்டாகும்.

இவர்களை ஒரு சிறந்த மனநல மருத்துவரே குணப்படுத்துவது நல்லது. மற்றவர்களால் தனக்கு உணர்ச்சிகள் கூடிகுறையும் நிலைகளில் எந்த ஒரு தகுந்த காரணமும் இன்றி அழுவார்கள். அப்பொழுது அவர்கள் மனத்தளர்ச்சியுடன் இருப்பார்கள். அதன்பிறகு உடல் சோர்வுற்று சக்தி அற்று தூக்கமின்மையுடன் உடல் எடை குறைந்து உணவு உண்பதற்கு ஆசையற்று மெலிந்து இருப்பார்கள் அல்லது அதிகமாக உண்டு உடல் பருமனாகக் காணப்படுவார்கள்.

மருத்துவம்

எப்படி இயற்கையாக மாதவிடாய் ஏற்படுகிறதோ, அதேபோல் நிற்பதும் இயற்கை ஆகும். இயற்கையாக நடப்பது உடல் நலத்திற்குத்தான். ஆனால் இவை சில அறிகுறிகள் ஏற்படுத்தும்பொழுது அதைப் புரிந்துகொண்டு கணவன் குடும்பத்துடன் ஒத்துப்போவது அவசியம். இதற்கும் மீறிய நிலையில் மருத்துவ உதவி தேவைப்படுகிறது. அப்பொழுது மன அமைதிக்கும் மன இறுக்கத்தைத் தவிர்ப்பதற்கும் மருத்துவர்கள் மருத்துவம் செய்வது உண்டு.

தமிழ் ஓவியா said...

சூற்பை ஓய்வுக்குப் பிறகு கடைபிடிக்க வேண்டியவை:

உடல் சிவக்கும் நிலை ஏற்படும் நாட்களில் சூடான உணவு, மசாலா போன்றவற்றை ஒதுக்க வேண்டும். மூச்சை உள்ளே ஆழமாக இழுத்து வெளிவிடப் பழகிக் கொள்ள வேண்டும். யாரையாவது சந்திக்கச் செல்லும்முன் உணர்ச்சி வசப்படாத நிலைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். நைலான், டெரிலின் போன்ற ஆடைகளை விடச் சிறந்தது பருத்தி ஆடை ஆகும். ஏனெனில் செயற்கைத் துணிகள் உடம்பில் ஒட்டிக் கொண்டு சூட்டை அதிகரிக்கச் செய்யும். அதேபோல் வயிற்றுக்குப் பெல்ட் போட்டுக் கொண்டால் உடல் இளைத்ததாக நினைத்துக் கொள்ளாது, கட்டுப்பாடான உணவையும் உடற்பயிற்சிகளையும் விடாது பின்பற்ற வேண்டும். கலவியில் ஈடுபடும்பொழுது களிம்புகள் உபயோகப்படுத்த வேண்டும். இவையனைத்தையும் தாண்டி மருந்தின்றி உடலும் உள்ளமும் ஒருமித்த நிலைக்கு உள்ளாக்க யோகாசனமும் சில சமயங்களில் உதவும்.

வாழ்வில் வெற்றி:

இல்லற வாழ்க்கைக்கு ஆணும் பெண்ணும் மிக அவசியம். 60 வயதிற்கு மேல் ஆணுக்குப் பெண் துணை மிக மிக அவசியம். இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி தன் மக்களையும் போற்றி அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதில்தான் வாழ்வின் வெற்றியே உள்ளது.

_ செய்தித் திரட்டு: சுகந்தா

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் -_ பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர் என்ற வரலா-று உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

ஈழம் இன்று :



சோத்தபய ராமபக் ஷே



”துக்ளக்கின் துதிபாடும் பயணம்”

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

ஈழம் சாத்தியமில்லை, கனவிலும்கூட நடக்காது, ஈழம் புலிகளின் நினைப்பு, எட்டுக்கோடித் தமிழர்கள் இருக்கும் தமிழ்நாட்டைத் தனிநாடாக்க முடியாமல் ஏன் இலங்கையைப் பிரிக்கப் போராடுகிறீர்கள் இதை நாங்கள் சொல்லவில்லை, ஈழத் தமிழர்கள்தான் சொல்கிறார்கள் என்று சொல்வது மகிந்தாவோ பொன்சேகாவோ கோத்தபாயவோ அல்ல, அரசியல் பார்வைகளின் தீர்க்கதரிசனமான பத்திரிகை என்று தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொள்ளும் துக்ளக்தான்.



எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தில் புத்த பிட்சுகளைத் தாக்குகிறார்கள், இலங்கை அரசு அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள்கூட தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்ற பெருத்த கவலையோடு தொடர்கிறது இலங்கையில் துக்ளக் என்ற துக்ளக்கின் பயணம்.

அதில் துக்ளக் நிருபர் குழு வடகிழக்கு மலையகப் பகுதிகளுக்கு ஆறே நாட்களில் சென்று மக்களின் நிலைமையையும் அப்பகுதிகளின் நிலையையும் ஆராய்ந்து வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரைகள் பல இடங்களில் வரலாற்று அறியாமையோடு எழுதப்பட்டுள்ளது என்றாலும், அதற்கும் மேலாக இன்றைய இலங்கை சொர்க்கமாக மாறி வருகிறது என்று அடுக்கடுக்காய்ப் பல பொய்களை அடுக்குகிறது. இந்த அடுக்கப்பட்ட பொய்களிலுள்ள ஓட்டைகள், இலங்கையில் துக்ளக் தவிர்த்த செய்திகள் குறித்த நிலைமைகள், துக்ளக் கண்ணில் படாத அத்துமீறல்கள், அமைதியைக் கற்பழிக்கும் _- இன்றும் தமிழர்களைக் காயப்படுத்தும் சிங்கள இனவாதிகளின் ஏளனங்கள் _- இந்த ஏளனவாதிகளின் படையாகச் செயல்படும் இலங்கை ராணுவம் _ இலங்கையைச் சிங்களர்களுக்கான தேசமாக மட்டும் மாற்றத் துடிக்கும் செயல்களைப் பற்றியும் துக்ளக் வாதங்கள் வழியிருந்தே தொடர்வோம்.

கொழும்பு நகரத்தில் உள்ள மெயின் ரோடு மற்றும் ஸீ தெருவில் பலரோடு பேசினோம். 90 சதவிகிதக் கடைகள் தமிழ்க் கடைகள்தான். நகைக் கடைகளுக்கும், ஜவுளிக் கடைகளுக்கும் முதலாளிகள், தொழிலாளிகள் எல்லாமே தமிழர்கள்தான். அவர்களிடமெல்லாம் பேசியபோது, போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இலங்கையில் அமைதி திரும்பி, எல்லோரும் நிம்மதியாக வாழத் தொடங்கி விட்டார்கள். தமிழகம் தயவுசெய்து மீண்டும் தமிழீழம் என்று ஆரம்பித்துக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றே பெரும்பாலோர் சொன்னார்கள் என்று இலங்கையில் துக்ளக் கூறுகிறது.

இவர்கள் கூறுவது போலாக தமிழர்களின் வணிகமே பெரும்பான்மை, சிங்களர்களின் வணிகம் என்பது இப்பகுதியில் மிகச் சொற்பமே. ஆனால் இவர்கள் சந்தித்த தமிழ்க் கடைக்காரர்கள் கொழும்பில் நிகழப்போகும் மாற்றங்கள் பற்றியும் தமிழர்கள் வசமுள்ள கொழும்பு மார்க்கெட் சொற்பமாக உள்ள சிங்களர்களின் கைக்குப் பிரித்துக் கொடுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதைப் பற்றியும், பலியகொடா என்ற பகுதியில் புது மார்க்கெட் அமையப் போகிறதைப் பற்றியும் ஏனோ கூறவேயில்லை போலும். ஆம், கொழும்பில் பெருமளவு பணம் புழங்கும் தமிழர்களின் மார்க்கெட் பகுதிகள் நகரக் கட்டமைப்புக்காகவும், பாதுகாப்புப் பிரச்சினைகள் என்ற காரணத்திற்காகவும் அகற்றப்பட்டு பலியகொடாவுக்கு மாற்றப்படயிருக்கிறது. மாற்றப்பட்டால் தமிழர்களுக்கு எந்த இழப்பும் இல்லாமல் கடைகள் பிரித்துக் கொடுக்கப்படும், அதோடு தமிழர்களுக்குக் கொடுத்ததைவிட மிகையாக, கடைகளே இல்லாத சிங்களர்களுக்கும் புதுக்கடைகள் தரப்படுவதற்கான வேலைகள் அரங்கேறுகின்றன.

தமிழ் ஓவியா said...

அதன் மூலம் இப்போது கொழும்பு மார்க்கெட் பகுதிகளில் தமிழர்களுக்கு உள்ள செல்வாக்கைக் குறைத்து சிங்களர்களைப் பெரும்பான்மையாக்குவதுதான் இதன் இறுதி வேலைத் திட்டம். ஆனால், இதற்குப் பிரச்சாரங்கள் என்னவோ கஷ்டப்படும் சிங்களத் தொழிலாளர்களுக்கும் வேலை தரும் செயல் என்று நடக்கிறது.. துக்ளக்கைச் சந்தித்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர், கொழும்பு நகரில் தனி ஈழம் தொடர்பாக வன்முறைகள் வெடித்ததில்லை. விடுதலைப் புலிகள்தான் அவ்வப்போது இங்கு வந்து வெடிகுண்டுகளை வைப்பதும், மனித வெடிகுண்டுகளை அனுப்புவதுமாக இருந்தனர். ஒருமுறை, மும்பைத் தாக்குதலைப் போல, கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி கண்மண் தெரியாமல் சுட்டபடி வந்தனர். மற்றபடி கொழும்பு நகரில் தமிழர் _- சிங்களர் மோதல்கள் பெரிதாக வெடித்ததில்லை என்று கூறுகிறார். ஏனோ இந்தப் பத்திரிகையாளருக்கு கொழும்பில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் - வெலிக்கடா சிறையில் தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டதும் _ - கறுப்பு ஜூலைக் கொடூரங்களும் நினைவிலே இல்லை. கொழும்பில் சோ என்று அன்றே கட்டுரைகள் எழுதிய துக்ளக்கின் சோவுக்கும் இவர்களைச் சந்தித்த பத்திரிகையாளருக்கும் வேண்டுமென்றால் கொழும்பில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்கள் நினைவில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இது ஓர் இனப்படுகொலை என்று பதிவு செய்திருக்கிறார்.

இதை எல்லாம் மறந்துவிட்டு, போன போக்கில் கண்டி தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர்கள் யாருமே தனித் தமிழீழத்தை விரும்பவில்லை என்றும், இங்கு கொஞ்ச நஞ்சம் பேருக்கு இருந்த தனித் தமிழ்ஈழ ஆசையும், வன்னி பகுதியில் நடந்த உயிரிழப்புகளைப் பார்த்துக் கரைந்து காணாமல் போய்விட்டது என்றும் எழுதியுள்ள துக்ளக், தமிழீழம் தேவையில்லை, தேவையில்லை என்றே முன்மொழிகிறதே தவிர மக்களுக்கான பிரச்சினைகள் பற்றியும் பொருளாதார வகையில் அவர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பற்றியும், எவ்வாறாக இன்றைய வட-கிழக்குப் பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் சிங்களத் தொழிலாளர்கள் உட்புகுகிறார்கள் என்பதைப் பற்றியும் ஆராயவேயில்லை.

1990-ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு அருகில் உள்ள காத்தாங்குடி மற்றும் ஏறாவூர் நகரங்களில், முஸ்லிம்கள்மீது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் முஸ்லிம் -தமிழர் ஒற்றுமையைக் குலைத்துப் போட்டது என்று ஒரு கடைக்காரர் சொன்னதாகக் கூறும் துக்ளக், 1970 காலகட்டத்தில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேலின் மொசாத் படை ஜெயவர்த்தனே காலத்தில் மீண்டும் இலங்கை வந்ததை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.

இந்து- முஸ்லிம் பிரச்சினைகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவைப் பிரித்தாளலாம் என்று இங்கிலாந்து ஏகாதிபத்தியம் எப்படி எண்ணியதோ , அதுபோலத்தான் சிங்கள இனவாதமும் தமிழர்- முஸ்லிம் முரண்களை உருவாக்குவதன் மூலம் தமிழீழம் என்ற கோரிக்கையை உடைக்கலாம் அல்லது அழிக்கலாம் என்று எண்ணியது இலங்கை அரசு . இந்த இனவாத எண்ணத்தைச் செயல்படுத்தியவர்கள் இஸ்ரேல் மொசாத் படையினர் . இந்தச் சூழ்ச்சியின் சூத்திரதாரியாக இருந்தவர் ஜெயவர்த்தன அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி. (கோத்தபாய ராஜபக்ஷே போல)

தமிழ் ஓவியா said...

இந்த இஸ்ரேல் மொசாத் படை புலிகளின் உடை வடிவத்தில் முஸ்லிம்களைத் தாக்குவதும் கொல்வதுமான வேலைகளைச் செய்தது. இந்தக் குற்றச்சாட்டு புலிகள் மீது விழ, என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் நிலையில் புலிகள் இருக்க, புலிகளோடு உறவாடிய சில முஸ்லிம்களே இலங்கை ராணுவத்துக்குப் புலிகளைக் காட்டிக் கொடுப்பவர்களாக (தலையாட்டி) மாறத் தொடங்கினர். அப்போதைய காலகட்டத்தில் ஆட்பலம் குறைவாக இருந்த புலிகள் இயக்கத்துக்கு, பாதுகாப்புத்தான் பெரிய தேவையாக இருந்தது. காட்டிக் கொடுப்புகளால் தங்கள் இயக்கத்தினருக்குப் பாதுகாப்பு இடையூறு ஏற்படுகிறது என எண்ணிய புலிகள் , முஸ்லிம்களைக் கண்டித்தாலோ_ தண்டித்தாலோ அது மதக்கலவரமாக மாற வாய்ப்புள்ளது என்று நினைத்தே முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

1990க்குப் பிந்தைய காலகட்டத்தில் முஸ்லிம் வெளியேற்று நடவடிக்கையால் ஏற்பட்ட பிளவுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பகிரங்கமாக மன்னிப்புகளும் கேட்டுள்ளார் பிரபாகரன். அதன்பின், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையேயும் புலிகளுக்கிடையேயும் பல பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன.
1993 இல் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரகுநாதன் என்ற தமிழ் இளைஞனால் தமிழர்-முஸ்லிம் பிரச்சினைகளைத் தூண்டியதன் சூத்திரதாரி லலித் அதுலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்திகளும் பதிவாகின.

அன்று தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க நினைத்த சூழ்ச்சிகளைச் செய்தது சிங்கள இனவாதம்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று வெளிப்படையாகவே மசூதிகள் தாக்கப்படுகின்றன, சிங்கள புத்தக் குழுக்கள் முஸ்லிம் கடைகள் மீது நடத்தும் தாக்குதல்களைத் தொடுக்கின்றது, ஹலால் பிரச்சினை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இஸ்ரேல் மொசாத் படையும் சிங்கள இனவாதமும் தமிழீழக் கோரிக்கையைத் துண்டாட உருவாக்கிய முஸ்லிம் பிரச்சினை தமிழீழம் வேண்டாம் என்று சொல்லும் துக்ளக்குக்கும் எப்படியோ உதவிவிட்டது.

தமிழீழக் கோரிக்கை என்பதை புலிகளுக்கான தாகவும் வடகிழக்குத் தமிழர்களுக்காகவும் பார்க்கும் துக்ளக் எப்படி தமிழீழக் கோரிக்கை எழுந்தது? வடகிழக்கு நிலப்பரப்பு தனித்தமிழ் நிலப்பரப்பாக எப்படி உருவெடுத்தது? ஆதி முதலே இலங்கையில் தமிழர்களின் வரலாறு என்ன? எண்பதுகளின் காலகட்டத்தில் சிங்களர்களால் துரத்தியடிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் எப்படியெல்லாம் சிங்களர்களுக்கிடையே சிக்கிப் பாதிக்கப்பட்டார்கள்? பின் அவர்கள் வடகிழக்குப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த பிறகும் எப்படி போர்ச் சூழலில் பாதிக்கப்பட்டார்கள்? வடகிழக்கில் இருந்த மலையகத் தமிழர்கள் எப்படி ஈழப் போராட்டத்தோடு ஒன்றிப் போனார்கள், 2009 உக்கிரப் போருக்குப் பிறகு இடம்பெயர் முகாமான மெனிக் பார்ம்யில் மலையகத் தமிழர்களும் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்? என்பதைப் பற்றியும் ஏன் அறிந்து கொள்ளவேயில்லை. மலையகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் இன்றைய வடகிழக்கில் ராணுவத்தால் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஏன் புலனாய்ந்திடவில்லை.

தமிழ் ஓவியா said...


சிங்களக் குடியேற்றமே நடக்கவில்லை என்று சொல்லும் யாழ்ப்பாண ராணுவத் தளபதி ஹத்துரசிங்க-வின் வாதத்துக்குச் சப்புக்கட்டுக் கட்டுவதற்கு தேசிய வளமைச் சட்டம் என்ற சட்டத்தைக் குறிப்பிட்டு, அதற்கு வடபகுதித் தமிழர்களைத் தவிர, கொழும்பிலோ அல்லது வேறு தென்பகுதி இலங்கையிலிருந்தோ யாரும் வடபகுதிக்கு வந்து சொத்துக்கள் வாங்க முடியாது என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இவ்வளவு அறிந்து கொண்ட துக்ளக்குக்கு, ஏன் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த வெலியோயா (மணலாறு) என்ற பிரதேசப் பிரிவு அநுராதபுரத்துக்கு உட்பட்ட ஒன்பது சிங்களக் கிராமங்களோடு இணைப்புப் பெற்றது? அந்தப் பிரிவை ஏன் முல்லைத்தீவு மாவட்டம் (தமிழ்ப் பகுதி) _ -அநுராதபுரம் மாவட்டம் (சிங்களப் பகுதி) என குழப்ப வேண்டும்.

வட பகுதி மக்களைத் தவிர வேறு யாரும் வடக்கில் நிலம் வாங்க முடியாது என்ற போது, எப்படி அங்கு சிங்களர்களுக்கு ராஜபக்க்ஷே நிலச்சான்றுகளைக் கொடுத்தார். உடனே, இங்கு சிங்களர்களும் வாழ்ந்தார்கள் என்ற வாதத்தை முன்வைப்பார்கள். அங்கு சிங்களர்கள் வாழவில்லை, போரின் சூழலில் 1983 காலகட்டத்தில் தமிழர்கள் வெளியேறிய பின்பு சிங்களர்கள் அங்கு ராணுவத் துணையோடு குடியமர்த்தப்பட்டனர். 2009 முடிந்த பின்பே இப்பகுதியிலிருந்து 1983இல் வெளியேறிய தமிழர்கள் மீள்குடியமர்த்தப்பட்டனர். ஆனால் சிங்களர்களோ 27 ஆண்டுகள் இருந்ததால் இது எங்கள் நிலம் என தமிழர் நிலங்களை உரிமை கோருகிறார்கள். அதற்குத்தான் ராஜபக்க்ஷே நிலச்சான்றும் அளித்துள்ளார். அப்படியெனில், துக்ளக் குறிப்பிட்ட தேசிய வளமைச் சட்டம் ஏன் இங்கு செயல்படவில்லை.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று ஹத்துரசிங்க சொல்கிறார். ஆம்! வடக்கு வாழ்கிறது, ஆனால் தமிழர்கள் வாழவில்லை, ராணுவம் சுகபோகத்தோடு வாழ்கிறது.

களத்தில் பிணத்தை முகர்ந்த இலங்கை ராணுவத்தைத் தேடி தமிழ்ப் பெண்கள் உதவி கேட்கிறார்கள் என ராணுவத் தளபதி ஹத்துரசிங்க சொல்வது நம்பும்படியாகவா உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆண்களற்ற பெண்களின் வீட்டை இரவு நேரத்தில் தட்டுவதும், நீ புலிதானே என்று மிரட்டி மிரட்டியே எண்ணிக்கையற்ற முறையில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும், ஏனோ துக்ளக்கர்களின் மனசாட்சியை உலுக்கவே இல்லை.

நாலா பக்கமும் ராணுவம் சுற்றிவளைத்துப் போர் நடந்த நிலத்தில், நாலு பேரைச் சந்தித்துப் பேசிவிட்டால் இன்றைய இலங்கையின் நிலைமையைத் தெரிந்து கொள்ள முடியாது. அதிலும், நீங்கள் சந்தித்து வந்துள்ளது அரசின் வசமுள்ள ஆட்களையும் ராணுவத் தலைமைகளையும்தான். திருடனிடம் சென்று நீ திருடுனியா? என்று கேட்டால் எந்தத் திருடன் உண்மையை ஒத்துக்கொள்வான். அப்படித்தான் துக்ளக், கொலைகாரனிடம் கொலைக்கான நியாயம் என்ன என்று கேட்டு வந்துள்ளது.

அரசின் மீதான விமர்சனத்துக்கும், ராணுவம் மீதான விமர்சனத்துக்கும், புலிகளில் இருந்து பிரிந்து சென்றவர்களின் மீதான விமர்சனத்துக்கும் அவர்களிடமே பதில் கேட்டு வாய்ப்பளிக்கிறது துக்ளக்கின் ஜனநாயகம். ஆனால், அதே ஜனநாயகம் ஓர் அரசு அந்த மக்களை என்ன செய்தாலும் கைகட்டி அடிமையாய்த் தலையாட்டி வாழ வேண்டும் என்கிறது. போராடினால் தப்பு, நியாயம் கேட்டால் அது அநியாயம், விடுதலை கேட்டால் அது தீவிரவாதம் என்கிறது.

(உண்மைகள் கசக்கும்)

தமிழ் ஓவியா said...

கடவுள் வழிபாடு மற்றும் பக்திப் பிரமிடு


- சரவணா.இரா

இன்றைய காலகட்டத்திலும் ஆலயங்களில் கூட்டம் கூடுகிறது என்றால் அந்தக் கூட்டத்தை நான்கு அடுக்குப் பிரமிடாகப் பிரிக்கலாம்.

முதல் அடுக்கு: தான் சார்ந்த மதம் என்ற சுயநலத்தில் கோயிலுக்குச் செல்பவர். இவர்களுக்கு 1%கூட கடவுள் பக்தியோ அல்லது பயமோ கிடையாது. இவர்களுடைய நோக்கம் வருமானம் மட்டுமே, இதில் பார்ப்பனப் பூசாரிகள் இதர ஜோதிடர்கள் மற்றும் கோயில்களில் கடை வைத்திருப்பவர்கள் காரணம். வருகிறவர்கள் எல்லாம் கன்னத்தில் தாளமிட்டு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொண்டு சென்றுவிட்டால் மேலே கூறியவர்களின் பிழைப்பிற்கு என்ன வழி?

இரண்டாம் அடுக்கு: கடவுளின் மீது நம்பிக்கை வைப்பது போல் நடிப்பவர்கள். இவர்கள் செல்வந்தர்கள், வியாபாரிகள், அதிகாரம் மிக்கவர்கள். இவர்களின் நோக்கமே ஆதாயம் _ உழைப்பின்றி ஆதாயம் பெறுவது. இவர்களுக்கும் கடவுள்பக்தி, பயம் என எதுவும் இம்மியளவும் கிடையாது. இவர்களுக்கு முதல் அடுக்குக்காரர்கள் பெரிதும் துணை செல்வார்கள். இலாபத்தொகையில் கணிசமான பங்கு முதல் அடுக்கு ஆட்களுக்கு உண்டு.

மூன்றாம் அடுக்கு: இவர்களுக்குப் பக்தி இருக்கும், ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்காது. எதற்குக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமல் செல்பவர்கள். இவர்களால்தான் பக்தி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

நான்காம் அடுக்கு: இருப்பதைக் கொடுத்துவிட்டு பகவான் செயல் என்று செல்லும் சாமானியர்கள். பிள்ளைக்குத் திருமணம் ஆகவேண்டுமா? மகளுக்கேற்ற மருமகனைத் தேடுவதைவிட்டு கோயில் கோயிலாகச் செல்வார்கள்!.

திருமணம் முடிந்து பிள்ளை பிறக்க வில்லையா? மீண்டும் கோயில்! மகள் குழந்தை யின்மைப் பிரச்சினையால் விரட்டப்பட் டாளா? மீண்டும் கோயில்! இவர்களின் பக்தி குறை யாமல் பார்த்துக் கொள்வதில் முதல்படி ஆசாமிகளின் பங்கு 100% உண்டு.

மேலும் இவர்கள் எண்ணிக்கையில் அதிகம். இவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட முழு உழைப்பும் பிடுங்கப்படுகிறது. இதில் என்ன வருத்தமான செய்தி என்றால், தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திருந்த மறுக்கிறார்கள். இவர்கள்தான் பக்தி வியாபாரத்திற்குத் தங்க முட்டையிடும் வாத்து. இந்த இறுதிநிலை மக்கள் திருந்தினால் ஒரே மாதத்தில் திருப்பதி ரெயில் நிலையம் இழுத்து மூடப்படும்.

தமிழ் ஓவியா said...

மொழிவழி மாநிலமாகப் பிரிந்த தால்தான் நிலமே நமக்குச் சொந்தமாகி உள்ளது. மொழி நம்முடைய அடையாளமாகவும் எல்லையாகவும் செல்வமாகவும் உள்ளது. தாய்மொழியிலேயே நம்முடைய படைப்புகளைக் கொண்டுவருவது இயல்பு. தாய்மொழியை இழந்துவிட்டால் நம்முடைய அடையாளத்தையே நாம் இழந்து விடுவோம். வாழ்க்கையில் எந்தப் பகுதியில் அறைகூவல் இல்லை. அறைகூவல்தான் வாழ்க்கையாகும்.

- கவிப்பேரரசு வைரமுத்து

தமிழ் ஓவியா said...

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அதற்கு முன் அரசியலை நன்றாகப் படித்துவிட்டு, மக்களுக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு வரவேண்டும். ஆந்திராவிலும் தமிழகத்திலும் சினிமா ஹீரோக்களைத் தலைவர்களாக நினைத்து வழிபடும் அறிவற்ற சூழல் இருக்கிறது.

எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். ஜெயித்த காலம் வேறு. ஜெயலலிதாவே எம்.ஜி.ஆரின் இதயக்கனி என்பதால்தான் ஆட்சிக்கு வந்தார். தமிழ்நாட்டைப் போல கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், கட்டாயம் தோல்விதான் அவர்களை வரவேற்கும். ஏனென்றால், மலையாள மக்கள் ஒன்றும் அவ்வளவு அப்பாவிகள் அல்ல!

_ அடூர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்

தமிழ் ஓவியா said...

சீனாவை முந்தும் இந்தியா


உலக அளவில் தற்போது 720 கோடியாக உள்ள மக்கள்தொகை 2025ஆம் ஆண்டில் 810 கோடியாகவும் 2050ஆம் ஆண்டில் 960 கோடியாகவும் இருக்கும். வளரும் நாடுகளில் இந்த மக்கள்தொகை அதிகரிப்பு விகிதம் இருக்கும்.

இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் மக்கள் தொகையானது 2 மடங்கு அதிகரிக்கும். இந்தியாவில் இந்த நூற்றாண்டில் மக்கள்தொகை 160 கோடியைத் தாண்டும். அதே நேரத்தில் சிறிதளவு குறைந்து 150 கோடியாக இருக்கும்.

சீனாவைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100ஆம் ஆண்டு) சீராகி 110 கோடியாக மாறும். தற்போதைய நிலவரத்தின்படி 2028ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை சீனாவைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அய்க்கிய நாடுகள் சபை நியூயார்க்கில் வெளியிட்ட உலக மக்கள்தொகை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

புதுமை இலக்கியப் பூங்கா


அந்தக் காலத்திலே நடந்தது



- கவிஞர் தமிழ்ஒளி

மரபுக்கவிதைகளில் முத்திரை பதித்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனால் தன் வழிகாட்டி எனப் புகழப்பட்டவர். காவியங்கள், தனிக்கதைகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல், வரலாறு மற்றும் நாடகங்கள் என தன் புலமைக்குப் பல வடிவங்களைத் தந்தவர். எந்த நிலையிலும் சமரசத்துக்காட்படாத தன்மானக் கவிஞர். திராவிட இயக்க இலக்கியவாதியாக மிளிர்ந்து, பொதுவுடைமையில் மலர்ந்தவர் கவிஞர் தமிழ்ஒளி. அவரது தனித்துவமான படைப்பிலிருந்து...

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான்முலை கவர்த னோனாது
புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில்
காழ்சோர் முதுசுவர்க் கணச்சித லரித்த
பூழி பூத்த புழற்கா ளாம்பி
ஒல்குபசி யுழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்...
(சிறுபாணாற்றுப்படை) நீண்ட நாட்களாக நெருப்பின் பரிசமே படாமற்போனதால் காளான்பூத்த அடுப்பு; பழைய சுவர்களில் செல் படர்ந்து அகப்பை முதலியவைகளை அரித்துத் தின்கிறது; சாம்பற் புழுதி நிறைந்த அடுப்பில் _ புனிற்று (குட்டிபோட்ட) நாய் தூங்குகிறது பட்டினியால், நாய்க்கும் பால் வற்றி விட்டது. இதெல்லாம் குட்டிகளுக்குத் தெரியுமா? அவைகளின் பசி சும்மா இருக்கவிடவில்லை. தாயின் முலைக் காம்புகளை மூலைக்கொன்றாகப்பற்றி உறிஞ்சி யிழுக்கின்றன. என்ன இருக்கிறது? பசியால் சுருண்டு விழி திறவாது கிடக்கும் நாய் இந்த வேதனையைத் தாங்காமல் வள் வள்ளென்று குரைக்கிறது. இத்தகைய நிலையில் அவ்வடுக்களை நமக்குத் தோற்றமளிக்கிறது.

இப்படிப்பட்ட காட்சிகளை நாம் நெடு நாட்களுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் கண்டு வருகிறோம். எல்லோரும் இல்லாமையின்றித் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்ததாகச் சொல்லவே முடியாது. சங்க காலப் பாடல்களும், தனிப்பாடல்களும் இந்தப் பலஹீனமான நிலையை அழகான அணி நயங்களால் படம் பிடித்துக் காட்டுகின்றன.

படிப்பவர் அழகைப் பார்க்கின்றனர்; பலவீனத்தை மறந்துவிடுகின்றனர். ஏனென்றால், அக்காலக் கவிஞர்கள் தனி மனிதனின் வாழ்க்கைத் துயரங்களுக்குக் காரணத்தை ஆழ்ந்து அலசி ஆராயாமலும் அவைகளின் மேல் தம் அபிப்பிராயங்களைப் பதித்து வைக்காமலும் விட்டு விட்டனர். அதற்குப் பதில் அவர்கள் செய்த கைம்மாறு, உவமைகளை அழகாகச் சொல்லி வைத்ததுதான்!

மூன்றாவது மனிதனாக ஒதுங்கி நின்று காட்சியைப் பார்த்தனர்; பார்க்கச் செய்தனர். அந்நிகழ்ச்சிகளுக்குக் காரணமான குற்றங்குறைகளை அழிக்கத் தூண்டும் போராட்ட உணர்ச்சியை அவர்கள் இழந்திருந்தனர்.

தமிழ் மொழி, அரியாசனமேறி, அரசு புரிந்துவந்த அதே நாட்களில்தான் காளான் பூத்த அடுப்புகளும் நனை சுவர்க் கூரைகளும் தமிழ்ப் புலவர்களின் _ இசைவாணர்களின் சொத்துக்களாக இருந்திருக்கின்றன.

ஆடையின்றி வாடையின் மெலிந்து
காலது கொண்டு மேலது தழீஇ
கையது கொண்டு மெய்யது பொத்தி
பெட்டியுள்ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும் ஏழையாளர்
(சக்திமுற்றப் புலவர் பாடல்)

துன்பமே உருவாய், சோக சரித்திரத்தின் ஏடுகளாய்க் காட்சியளித்த புலவர்கள், வாழாமல் வாழ்ந்து வந்ததும் அந்தக் காலத்தில்தான்! இதற்கெல்லாம் அவர்கட்குப் பரிகாரமாயிருந்தது, எப்போதோ மன்னர்கள் கொடுக்கும் பரிசில்தான்.


தமிழ் ஓவியா said...

வாழ்க்கை முழுமையையும் நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியாத இந்தப் பரிசில் பெறும் முறைமை, புரட்சி மனப்பான்மையை அடியோடு தகர்த்துவிட்டது.

தம் வாழ்க்கை நலிவுறுவதைப் போலவே நாட்டில் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையும் நசித்துக்கொண்டு வருகிறது என்ற உண்மையை அறியும் கண்ணோட்டத்தை யிழந்து பரிசில்கொடுத்த மன்னனுக்குப் பரணிபாடி அவன் ஆட்சியில் மக்கள் இந்திரர்களாகவும் சந்திரர்களாகவும் விளங்கினார்கள் என்று வறட்டு ஜம்பம் பேசிவிட்டுச் சென்றனர். இதனால் நாட்டு மக்களிடம் கோனாட்சியின் மேலிருந்த பற்று அதிகரித்ததே தவிர குறையவில்லை.

தமிழை அரியாசனத்தேற்றிப் பெருமைப்படுத்திய அதே நேரத்தில் வறுமையால் பீடிக்கப்பட்ட புலவனும் இருந்தான் என்றால் ஆட்சி எவ்வளவு தூரம் பொறுப்பற்றமுறையில் நிகழ்ந்து வந்திருக்கிறதென்றும், அவ்வாட்சியின் கீழ் எல்லா மக்களும் வளத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது எவ்வளவு பொருத்தமற்றதென்பதும் சாதாரண அறிவுடையவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் பாடம்.

இந்தப் பிரத்தியட்ச உண்மையை _ கௌரவப் பிச்சையான பரிசில் _ புலவர்களின் கண்ணில் படாமல் மறைத்துவிட்டது.

தாம் பெற்ற பரிசிலைப் போற்றியும் வறுமையால் வாடும் மற்றவர்க்கு அப்பரிசில் கிடைக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டி அவ்வழி அவர்களைச் செலுத்துவதாகவும் அமைந்த சாரமற்ற வாழ்க்கையை _ அக்காலப் புலவர்கள் போற்றியது _ அவ்வாழ்க்கையைப் பற்றித் தம் அபிப்பிராயத்தை வெளியிடாமலிருந்தது நமக்கு ஆச்சரியமாகவேயிருக்கிறது.

பார்த்ததைப் பார்த்தபடி அழகாக எழுதிவிடுவதால் மட்டும் புலவனுக்கு உயர்வு வந்துவிடுவதில்லை. புலவன் தான் பார்க்கும் காட்சிகளைப் படம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் அக்காட்சிகளிலுள்ள நியாய அநியாயங்களையும் அலசி ஆராய்ந்து, தான் கண்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்கின்றான்.

இதனால்தான் காவியம், மனித சமுதாயத்தைத் திருத்தும் சக்திவாய்ந்ததாக இருக்கின்றது.

சங்ககாலப் புலவர்களிற் பெரும்பாலோர் ஒரு நல்ல ஓவியனைப் போலிருந்தார்களே தவிர உண்மையைத் துருவிக்காணும் சிந்தனைச் சிற்பிகளாக இல்லையென்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும்.

மேலும் இந்தக் காலத்திய ஜனநாயக வளர்ச்சிகளையும் - திட்டப்படி அமைந்துள்ள மிகுந்த சக்திவாய்ந்த பொதுவுடைமைக் கருத்துகளையும் அந்தக் காலத்திலேயே பாடி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். நீதி நெறி வாக்கியங்களைப் பாடவந்த புலவர்களும்கூட, மாவிலும் ஒட்டாமல், கூழிலும் ஒட்டாமல்தான் பாடியிருக்கிறார்கள்.

கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டிலும்
கடும் புலி வாழும் காடு நன்றே

என்பன போன்ற நீதிகள், மன்னர் பரம்பரைக்கும் மணிமுடிக்கும் மண்ணுலகை ஆளும் பாத்தியதை உண்டு என்ற முடியரசு வாதத்தை எதிர்த்ததில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இடைக்காலப் புலவர்களும், முன் ஜென்ம வாசனை, பாவ புண்ணியம், தலைவிதி முதலியவைகள் ஆண்டவனின் கட்டளைகள் என்று நம்பி, அவற்றை வலியுறுத்தும் அடிப்படையிலேயே கதையைச் சிருஷ்டித்திருக்கிறார்கள் அல்லது சிருஷ்டிக்கப்பட்ட கதையைக் காவியப் பொருளாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அக்கதைக்கேற்ப முன் செய்த பாபவினை வந்து மூள்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிக்க _ பாத்திரங்களை உண்டாக்கி, அவைகளை விதியின் கைம்பொம்மைகளாக ஆட்டுவித்திருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

பெயர்கள் சொல்லும் வரலாறு


ஆய்வு : சிந்துவெளியில் தமிழர் தொன்மை /3

- ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்



சங்க இலக்கியங்களிலேயே சில வடமொழிச் சொற்கள் கலந்து இருக்கு. இப்படியெல்லாம் இருப்பதனால் கி.மு.200களில் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தை கி.மு.1900இல் அழிந்துவிட்ட சிந்துவெளி நாகரிகத்தோடு எப்படித் தொடர்புப்படுத்துவது? சமீபத்தில், நடந்த அகழ்வாராய்ச்சியின் மூலமாக இந்த கால, நில இடைவெளிகள் சுருங்கி வருகின்றன. இதுவரைக்கும் இந்தியாவில் கிடைத்த சிந்துவெளிக் குறியீடுகளோடு தொடர்புடைய மட்பாண்டக் கீறல்களில் 75லிருந்து 80 விழுக்காடு மட்பாண்டக் கீறல்கள் தமிழ்நாட்டில்தான் கிடைத்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சிந்துவெளி நாகரிகம் என்பது ஹரப்பா, மொகஞ்சதாரோவில் இருந்த மாதிரி அதே மாதிரியான நகரங்களைத்தான் எல்லா இடத்திலேயும், கட்டியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற தேவையில்லை. அவர்கள் அந்தந்த இடங்களில் கிடைத்திருக்கக்கூடிய கச்சாப் பொருட்களை மண், பாறை இவைகளை அடிப்படையாக வைத்துத்தான் கட்டடங்களைக் கட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவரைக்கும் மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய தைமாபாத் அப்படிங்கிற ஊர் வரைக்கும் சிந்துவெளி நாகரிகத்தினுடைய சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆனால், சங்க இலக்கியம் பேசுகிற விஷயங்கள் வடவேங்கடம் தென்குமரி எல்லைகளுக்குள் மட்டும் சுருங்கியதல்ல. சங்க இலக்கியத்தினுடைய நில எல்லை, கால எல்லை இவை இரண்டுமே கொஞ்சம் வித்தியாசமானது. வடவேங்கடம்_தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் என்று சொன்னாலும், சங்க இலக்கியத்தால் குறிப்பிடப்படுகிற பொன்படு_பொன்கானம் என்கிற ஒரு பகுதியைப்பற்றிப் பேசுவாங்க.அதுவந்து கொங்கன்போஸ்ட். அப்படியன்று கோவான்னு சொல்ற பகுதிதான் பொன்படு _ பொன்கானம். நன்னன் என்கிற ஒரு மன்னனைப்பற்றிப் பேசுவாங்க. அந்த நன்னனைப் பற்றிப் பேசும்போது ஏழில் மலை இருக்கக்கூடிய நன்னன் அப்படின்னு சொன்னா அதுவும் கொங்கனத்தைச் சேர்ந்த நன்னனாகத்தான் பேசப்படுகிறார்கள். துளு நாட்டைப் பற்றி சங்க இலக்கியத்தில் இருக்கிறது. அந்த துளு நாட்டோடு தொடர்பு பற்றிக் குறிப்பு இருக்கு. சங்க இலக்கியத்தில் வடவேங்கடம் என்பது வடக்கு எல்லையாகக் குறிக்கப்பட்டாலும் அதில் பேசப்படுகிற செய்திகள் அந்த எல்லைக்கும் அப்பாற்பட்ட செய்திகள். கிட்டத்தட்ட சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதைவிட தைமாபாத்துக்குப் பக்கத்தில் தெளிவாகக் கொண்டுபோய் விடுகிறது. சங்க இலக்கியத்தில் பேசப்படுகிற நிகழ்ச்சிகளெல்லாம் ஒரு சமகாலப் பதிவு கிடையாது.

சங்க இலக்கியப் புலவர்களெல்லாம் பத்திரிகை நிருபர்கள் கிடையாது. காலையில் போய் ஒரு அரசரைப் பார்த்துவிட்டு வந்து சாயந்தரம் ஒரு கவிதை எழுதல. அவர்கள் பதிவு செய்த விஷயங்களெல்லாம் அவர்களுக்கு முன்னால் _ நெடுநாளைக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள். அந்த நிகழ்ச்சிகள் பற்றி ஒரு சில குறிப்புகள் சொல்கிறேன். உதாரணமாக, கல்லூர் அப்படிங்கிற பெரும் புகழ்பெற்ற தொல்பொருள். கல்லூர்_ன்னு சொல்லி ஒரு அகநானூற்றுப் பாடல். சங்க இலக்கியம் ஒரு சமகாலப் பதிவல்ல. அது நீண்டநெடும் தொல் மரபினுடைய முதல் ஆவண முயற்சி. அதில் சொல்லப்படுகின்ற விஷயங்களும், கால,நில எல்லைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டின் எல்லைக்கும் அப்பாற் சென்றது. தமிழ்நாட்டு சங்க காலத்தினுடைய சமகாலத்திற்கும் அப்பாற் சென்றது. அந்த வகையில் அது சிந்து சமவெளியை மிகவும் நெருங்குகிறது.


தமிழ் ஓவியா said...

இடப்பெயர்கள் நாகரிகங்களைவிடத் தொன்மையானவை. நாகரிகம்கூட அழிந்துவிடும். ஆனால், இடப்பெயர்கள் அழியாது. சுமேரிய நாகரிகம் என்பது அழிந்துவிட்டது. ஆனால், சுமேரியா காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஊர்ப்பெயர்கள் இன்றைக்கும் ஈராக்கில் இருக்கிறது. வெசட்ட பூமி நாகரிகத்தில் எரிடு என்ற நகரம், ஊர் இன்றைக்கும் இருக்கிறது. சுமேரிய இலக்கியத்திலும் பதிவாகியிருக்கிறது. பைபிளில் விவிலிய நூலில் கூறப்பட்டிருக்கிற இடப்பெயர்கள் எல்லாம் இன்றைய வரை இருக்கிறது. ஆக இடப்பெயர்கள் நாகரிகங்களையும் கடந்து சாகாவரம் (சாதனை) பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட இடப்பெயர்கள் அங்கு பதிவாகி இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்தத் தொடர்புகளில் இருக்கும் என்று நினைத்து இந்தக் கண்ணோட்டத்தோடு தேடிக்கொண்டிருக்கும்போது கொற்கையைக் கண்டறிந்தேன். கொற்கையைக் கண்டறிந்தவுடன் வஞ்சியைத் தேடினேன். வஞ்சியையும் கண்டறிந்தேன். தொண்டியையும் கண்டறிந்தேன். ஒரே நாள் இரவில் மூன்று பகுதிகளையும் பாகிஸ்தான் பகுதிகளில் கண்டறிந்தேன். இங்கு தொண்டி, கொற்கை பல பெயர்கள் ஆப்கானிஸ்தானிலும் இந்தப் பெயர்களையெல்லாம் கண்டுபிடிக்கவும், அடுத்தடுத்து சேரன், சோழன், மாறன், வழுதி, அதியமான் நெடுமான் அஞ்சி, சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிற ஊர்ப் பெயர்களெல்லாம் புலவர்களுடைய பெயர்களோடு தொடர்புடைய ஊர்ப்பெயர்கள். அது என்னுடைய யூரேக்கா மணித்துளி. அந்த நள்ளிரவு இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. அது ஊர்ப் பெயர். பெயர் கண்டுபிடித்த இரவு எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. உறங்கிக் கொண்டிருந்த எனது மனைவியை எழுப்பி பாகிஸ்தானில் சிந்துவெளிப் பகுதியில் கொற்கை, வஞ்சி, தொண்டியைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொன்னேன். அவர் கேட்டு மகிழ்ச்சியோடு தூங்கச் சென்றார். இது என்னுடைய கண்டுபிடிப்பினுடைய அன்றைய உச்சகட்டமான நிகழ்ச்சி. ஆனால், 2002இல் இதைக் கண்டுபிடித்தேனே தவிர, 2010 கோவை செம்மொழி மாநாடுவரை நான் இதைப்பற்றி ஊடகங்களில் பேசவில்லை. கட்டுரைகள் எழுதவில்லை.

என்னைப் பொறுத்தவரை இந்தச் செய்தியை நான் எட்டு ஆண்டுகள் அடைகாத்தேன். இதை அடைகாத்ததற்கான காரணம், ஒரு தமிழ் மாணவன் என்ற முறையில் எனக்கு இருந்த பொறுப்புணர்ச்சி. ஏனென்றால், இந்த ஆராய்ச்சி மூலம் வெளிவரக்கூடிய செய்திகள், இதுவரை நாம் நமது தொன்மங்கள்பற்றி வைத்துக் கொண்டிருக்கிற பல கருத்தோட்டங்களை அசைத்துப் பார்க்கக்கூடும். அந்த அசைத்துப் பார்க்கக்கூடிய கருத்தோட்டங்களுக்கு நாம் தயாராக இருக்கிறோமா. அப்படிப்பட்ட கருத்தை நான் ஒரு வெளிமேடையில் பேசுவதற்கு முன்னால் அதை நானே பலமுறை மீண்டும், மீண்டும், மீண்டும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஒரு தமிழ் மாணவன் என்ற முறையில் எனக்கு இருந்தது. அதற்காகவே எட்டு ஆண்டுகள் இதைப்பற்றி நான் பேசவே இல்லை.

தமிழ் ஓவியா said...

வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

பார்ப்பனார் பற்றி
காந்தியார்

பிராமணர்கள் தங்களை உயர் வாகக் கருதும் தற்பெருமை காரணமாக, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேற்றுமை கொடூரமானது
- காந்தியார் (ஆதாரம்: இந்து ஏடு, 23.8.1920)

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசு வரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

மனித குலத்துக்கு அடிமைக் கயிறு!

கடவுள் கருத்து எப்பொழுதும் சமுதாய உணர்வுகளை உறங்க வைத்திருக்கிறது; மழுங்கடித்திருக்கிறது. உயிருள்ளவற்றிற்குப் பதிலாக அந்த இடத்தில் இறந்ததை வைக்கின்றது அது எப்பொழுதும் அடிமைத் தனத்தின் கருத்தாகவே - மிகவும் படுமோசமான அடிமைத் தனத்தின் கருத்தாகவே இருந்திருக்கின்றது. கடவுள் கருத்து எந்தக் காலத்திலும் தனி நபரைச் சமுதாயத்துடன் இணைத்ததில்லை; அது எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைத்தான் ஒடுக்கு பவர்களின் தெய்வத் தன்மைக் கற்பனையில் - கடவுள் நம்பிக்கை என்னும் கயிற்றால் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டி ருக்கின்றது. மதம் என்னும் நுகத்தடி மனித குலத்தை அழுத்திக் கொண்டிருப்பது; சமுதாயத்துக்குள்ளேயே உள்ள பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு - அதன் விளைவுதான் என்பதை மறப்பது குறுகிய பூர்ஷவா புத்தியாகும்.

- லெனின்

தமிழ் ஓவியா said...

வராத தேவன்

எந்த நிலையிலும் நான்
உன்னுடன் இருக்கிறேன்
கவலைப்படாதே!
- என்றது தேவ வசனம்!
நிலநடுக்கம் வந்தபோது
எல்லோரும் வெளியில்
ஓடித்தப்பிக்க
உள்ளேயே இருந்த அவன் மட்டும் இடிபாட்டில் சிக்கி
நொறுங்கிப் போனான்! வசனம் பேசிய
தேவன் வரவேயில்லை!

காழி - கு.நா.இராமண்ணா, சென்னை

தமிழ் ஓவியா said...




கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய் களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ் டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக் கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் இடஒதுக்கீடு



வரும் 19ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்க உள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் திரு. பி.சதாசிவம் அவர்கள், ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்த பேட்டி யில், ஓர் அருமையான கருத்தினை வெளியிட் டுள்ளார்.

உயர்நீதிமன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி நியமனத்தில், இடஒதுக்கீடு அவசியம் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மற்ற எந்த மாநில நீதிபதிகளை விடவும், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நீதிபதிகளுக்குச் சமூக நீதி என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? என்பது தெளிவாகவே புரிந்திருக்கும்; காரணம் - தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும்தான்.

இந்தக் கருத்து ஒன்றும் புதிய ஒன்றாகவும் கருதப்பட முடியாது. திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் பொதுக் குழுக்களிலும், மாநாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டேதான் வருகிறது.

மத்திய சட்ட அமைச்சராகவிருந்த சங்கரானந்து அவர்கள் சென்னை வந்தபோது அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேரில் சந்தித்து, நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுத்து மூலமாக கோரிக்கையினை அளித்தார் (விடுதலை 22.9.1988) என்பது, இந்த இடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, 37 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு, பிஜேபியைச் சேர்ந்த கரிய முண்டா தலைவராக வந்தார். அவர் வெளியிட்ட கருத்தும், தகவலும் மிக முக்கியமானவை.

இந்தியாவில் 481 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கின்றனர். அதில் 15 தாழ்த்தப்பட்டவர்களும், 5 பழங்குடியினர் மட்டுமே உள்ளனர். உச்சநீதிமன்றத் தில் தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியினர் ஒருவர்கூட நீதிபதியாக இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் முன் னேற்றம் அடைவதை, வேண்டுமென்றே திட்டமிட்டுக் கெடுக்கும் முயற்சியே இது. எங்கோ ஓர் இடத்தில் பாகுபாடு நிறைந்த மனோ நிலை, நிச்சயமாக நிலவுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களில் திறமை படைத்த நீதிபதி ஒருவர்கூட இல்லாமற் போய் விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அலுவலர்களுள் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளபோது, நீதித்துறையில் மட்டும் ஏன் இல்லை? மற்றவர்கள் எல்லோரும் கந்தையாக உள்ளபோது, சில நீதிபதிகள் மட்டும் அளவுக்கு அதிகமான அறிவாளிகளாக உள்ளனர் என்பதையும் என்னால் நம்ப இயலவில்லை என்றார் நாடாளு மன்ற நிலைக் குழுவின் தலைவர் கரியமுண்டா எம்.பி.
(தி.வீக் 13.8.2000).

இந்தக் கேள்விக்கு இதுவரை நியாயமான பதில் உண்டா? 1950ஆம் ஆண்டுக்கும் 1977 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் 50 பேர் என்றால், இதில் பார்ப்பனர்கள் மட்டும் 48 பேர் என்று தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்த, பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன் அவர்கள் குறிப்பிட்டது - இந்த இடத்தில் நினைவு கூரத் தக்கதாகும்.

நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தால் சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகள் அளிக்கப்பட்டு இருக்குமா? என்பது, சிந்தனைக்கு விருந்தான அரிய வினாவாகும்.

மண்டல் குழு தொடர்பாக இந்திரா - சகானி வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் திரு எஸ். இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தானே சமூகநீதிக்கு இணக்கமான தீர்ப்பை - மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு எழுதினார்.
சென்னை மாநிலத்தில் 1928 முதல் செயல்பாட்டில் இருந்த இடஒதுக்கீட்டைச் செல்லாது என்று கூறியது சென்னை உயர்நீதிமன்றம் என்றால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூவரில் இருவர் பார்ப்பனர்கள் என்பதுதான் முக்கிய காரணம்.

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு சீர் தூக்கிப் பார்த்தால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் (தமிழ்நாட்டுக்காரர்) கூறிய கருத்தின் அருமையும், நியாயமும் புரியும்.

தமிழ் ஓவியா said...


முடிந்த பாடில்லை...


மேனாட்டார் புதிது புதிதான விஞ்ஞான ரகசியங்களையும், இயந்தி ரங்களையும் கண்டுபிடிப்பதில் ஊக்கங் காட்டி வருகின்றனர். நம் நாட்டிலே புல்லிலும், பூண்டிலும் கடவுளைத் தேடி அவற்றின்பால் பக்தி செலுத்தும் வேலையும் மோட்ச வழி ஆராய்வதும் இன்னும் முடிந்தபாடில்லை.
(விடுதலை, 7.8.1950)

தமிழ் ஓவியா said...


வாழ்வின் இரு முக்கிய கண்காணிப்பாளர்கள்!


வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வாக அமைய வேண்டும் என் றால் அதற்கு உணவும், தூக்கமும் மிகப் பெரிய தேவைகள் அல்லவா?

இந்த இரண்டும் நம் உடல் நலத்தின் மிகப் பெரிய கண்காணிப்புகள் ஆகும்.

உடம்பார் அழியின்

உயிரார் அழியும் நிலை ஏற்படும்.

சரியான உணவோ, போதுமான தூக்கமோ இன்றி நம் வாழ்க்கை அமைந்தால் அதைவிட கொடுந் தண்டனை நமக்கு வேறு இருக்கவே முடியாது.

உணவுகூட, நல்ல நலவாழ்வுக்கு உகந்த, உதவிடும் உணவாக அமை வதும், அல்லது நாம் அமைத்துக் கொள்வதும் மிக கவனம் செலுத்தப் பட வேண்டிய அன்றாடக் கடமை களில் ஒன்று. ஏன் முக்கியமானதும் கூட!

இன்றைய இருபால் இளைஞர்கள் உணவை, வெறும் நாக்கு சுவைக் காகவே பல நூறு ரூபாய்கள் செலவழித்து, வேக உணவுகள் (Fast Foods) என்ற பல அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு உணவுகளில், இத்தாலியிலிருந்து உலக நாடு களுக்கு அனுப்பப்பட்ட பீட்சா, போன்றவைகளில் மோகம் கொண்டு, பர்கர் (Burger) களை வாங்கி தின்று கொழுப்பை உடலில் ஏற்றிக் கொண்டு, காற்றடைத்த பலூன்களைப் போல ஆகி விடுகிறார்கள். இப்போது அது இன்ப மாகக் கூடத் தோன்றலாம்! ஆனால் போகப் போக அது உடல் நலத்திற்கு எவ்வளவு கேடு செய்யக் கூடிய ஆபத்து என்பது புரியும்.

இதற்குமேல் (Coke) கோக், பெப்சி, செவன் அப் போன்ற இனிப்பு சுவைநீர் பானங்களை - தூய நீர் அருந்தாமல் குடித்து, பணத்தையும், உடல் நலத்தையும் இழக்க வேண்டியவர்களாகிறார்கள்!

முன்பெல்லாம் 50 வயதுக்குமேல் தான் சர்க்கரை நோய் - டயாபெட்டிஸ் (Diabetes)! இப்போதோ 30 வயதுள்ள வாலிபர்களுக்கே சோதனை தேவைப்படும் அளவு நாட்டில் இளைஞர் கூட்டம், நல்ல உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிட மறுக்கின்றனர்.

பல வீடுகளில் - பணக்காரர்கள்கூட அல்லர்; நடுத்தர வர்க்கத்தினர்தான் - அங்கே மாணவர்கள் - அடம் பிடித்து பெற்றோர்களிடம் காசை வாங்கிக் கொண்டு இப்படி வேக உணவு என்ற முறையில் விலை இல்லாக் கொழுப்பை, உடலில் சேர்க்கின்றனர்!

50 வயதுக்குமேல் உள்ள எவரும் நாக்குக்கு அடிமையாகாமல், நலக்கண்ணோட்டத்திற்கு உணவுகளையே மருத் துவ ஆலோசனைப்படி கைக்கொள்ள திடசித்தம் உடையவர்களாக வேண்டும்.

வயிறு 50 வயதுக்குமுன் நாம் என்ன சொன்னாலும், எதைத் தின்றாலும் செரிமானம் செய்து, சொன்னதைக் கேட்கும்.

ஆனால் 50-க்குப் பின், வயிறு என்ன சொல்கிறதோ, அதைக் கட்டளையாகக் கொண்டு நாம் வாழ்ந்தால்தான் நமக்கும் தொல்லை இருக்காது. மருத்துவச் செலவும் குறையும், நம்முடன் இருக்கும் குடும்பத்தவர்களுக்கும் நம்மால் தொல் லையோ தொந்தரவோ இருக்காது!

நாம் பிறருக்குச் சுகமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக் கூடாது!

தூக்கமும்கூட இதுபோல முக்கிய மாக 8 மணி நேரத் தூக்கம் என்று கூறுகிறார்கள்.

பலருக்கு - அது வாய்ப்பாக அமையா விட்டாலும்கூட குறைந்தது 7 மணி நேரம் இருந்தால் நிம்மதி; நல வாழ்வுக்குக் குந்தகம் ஏற்படாது என்பது பிரபல தூக்கவியல் ஆய்வாளர்களின் கருத் தாகும்!

மித மிஞ்சிய உணவு எப்படி அஜீர ணத்தில் கொண்டு போய் நம்மைத் தள்ளுகிறதோ அது போலவே, அதிக தூக்கம் - அளவு மீறிய தூங்கு மூஞ்சித் தனம் நம் நல வாழ்வுக்குக் கேடாய் முடிந்து நம் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும்!

மனம் அமைதியாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான், இந்த இரண்டு உடற்காவலர்களும் (உணவும் தூக்கமும்) நமக்கு நல்ல வண்ணம் ஒத்துழைப்பார்கள்.

அமைதியற்ற நிலையிலோ, ஆத்திரத்தின் இடையிலோ உணவை உண்டால் அது செரிமானமாகாது;

வயிற்றுப் பொருமல், முதல் பல் வகை அஜீரணக் கோளாறுகளில் கொண்டு போய் நிறுத்தவே செய்யும்!

இந்த இரண்டுக்கும் உள்ள புரிந்துணர்வு (Under Standing) மிகவும் வியக்கத்தக்கதாக இல்லையா?

இரவு உணவு மிகக் குறைத்தலும் கூட, தூக்கம் பாதியிலேயே பாதிப் பதை நானே பல முறை அனுபவித் துள்ளேன்.

எதையும் அளவுக்குள் வைத்து, குறையாமலும் கூடாமலும், பார்த்து வாழ்ந்தால் அதைவிட கொள்ளை இன்ப வாழ்வுதான் வேறு ஏது?

இளமையிற் கல்லாக இருக்கும் உடல் வேகமாக முதுமையில் நொறுங்கி மண்ணாகாமல் தடுக்க கட்டுப்பாடு இவை இரண்டிலும் தேவை! தேவை!!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை


- பேரா.ஏ.எஸ்.நடராஜ்

தனக்கு நேரக்கூடிய துன்பங்கள் அனைத்திற்கும் பிறர் காரணம் என்று மனிதன் கருதுகிறான். கடவுளே காரணம் என்று பல நேரங்களில் கதறுகிறான், பதற்றமடைகிறான்.

இப்படிப்பட்டவர்களுக்கு அறிவு, ஆறுதல் அளிப்பதில்லை. குறுக்கு வழியில் இன்பத்தைத் தேடும் முயற்சியும், பிறரை வஞ்சித்து வாழ்ந்திடவும் கண்டுபிடிக்கப் பெற்ற கருவிதான் சோதிடம்.

வாதி புளுகன், மாந்திரீகன் வீண் புளுகன், சோதிடன் என்பவனோ சுத்தப்புளுகன் என்பது நம் சான்றோர் வாக்கு.

சோதிடம் சொல்பவனுக்கும், கேட்பவனுக்கும் இடையே சொல்லொணாத் துன்பம் வருவதில்லையா? சோதிடத்தை சிலர் பிழைப்புக்கும் பெருமைக்கும் சொல்லிக் கொள்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை என்னும் ஆணிவேரின் ஒரு கிளையாகவே மனித மனத்தில் இது பதிந்துள்ளது.

சோதிடம் சுத்தப்பொய்; அது உண்மையென மெய்ப்பிப்பார்க்கு ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கும் சிந்தனையாளர் பேராசியர் ஏ.எஸ்.நடராஜ் என்பவரால் கன்னடமொழியில் (சோதஷத பஞ்சமுக தர்ஷன்) எழுதப் பெற்றதை, தமிழாக்கம் செய்துள்ளார். பகுத்தறிவுப் பாவலர் வீ.இரத்தினம்.

இது ஓர் அறக்கட்டளை சார்பான வெளியீடு என்பதால் பலரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற நோக்கில் பொதுநலம் கருதி, 107 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை உருபா பத்து (ரூ. 10) மட்டுமே!

நூல் கிடைக்குமிடம்:

V. Rathinam 1157, 11th Main Road, Hampi Nagar,
Bangalore-560014. Cell: 9449880117

தமிழ் ஓவியா said...


புதிய ஆகஸ்ட் புரட்சி அறிவித்து விட்டார் நம் தமிழர் தலைவர்!


ஆகஸ்ட் ஒன்றில் புது புரட்சி!
சாதி ஒழிப்பின் அடித்தளமாய்,
தீண்டாமை ஒழிப்பின் அடிப்படையாய்,
அறிவிக்கப்பட்ட அரும் புரட்சி!
ஆகமம் பயின்ற அனைத்துச் சாதியினரும்,
அர்ச்சகராக போராடும் புரட்சி!

மனித வாழ்வின் முதல் துவக்கம்,
தன்னலமற்ற தாயின் கருவறை!
மனித வாழ்வின் மாபெரும் இழிவு!
இன ஒதுக்கல் பேணும் இந்துக் கருவறை!

வெந்து நொந்து வியர்வை சிந்தி - கோயில் கட்டிடம் கட்டிய சூத்திரத்தொழிலாளியா?
எட்டி நில்! கருவறை வெளியே! உளிப்பிடித்த கைத்திறத்தாலும்
உள்ளத்தில் ஊறிடும் கலைதிறத்தாலும் -
கடவுள் உருவம் வடித்த சூத்திர சிற்பியே !

ஒதுங்கி நில் ! கருவறை வெளியே!
ஆயிரம் லட்சமென நன்கொடை நல்கிய உபய சூத்திரர்களே ! கருவறை
உள்ளே நுழைய அனுமதி பெற்றவை, உங்கள் கரன்சிகள் மட்டுமே! என மனுவின் குரலாய் ஒலித்திடும்

கருவறை சட்டங்கள்! வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
என்றே ஒலித்திடும் இழிவோசை-பார்ப்பன
அர்ச்சகன் அடித்திடும் மணிஓசை!

தேவன் கோவில் மணியோசையில் கேட்டிடாத பேத ஒலி!
புத்தம்! சரணம்! கச்சாமியில் இல்லையே இந்த வர்ண மொழி!
அல்லாஹு அக்பர் வாசலிலே அனைவரும் நுழைய தடையில்லை!
இந்துக்கோயில் கருவறையில் மட்டும்
சூத்திரனை பழிக்கும் மூத்திரச்சட்டம்!

வெள்ளையனே! வெளியேறு! என்றது பழைய ஆகஸ்ட் புரட்சி!
சூத்திரனை உள்ளே விடு என முழங்கிடும்
புதிய ஆகஸ்ட் புரட்சி!

ஆத்திகனானாலும் நாத்திகனானாலும்
தன்மானம் என்பது பொது உணர்வென
தரணிக்கு காட்டிட தமிழர் தலைவர் அறிவித்து விட்டார் அரும் புரட்சி!
ஆகஸ்ட் புதிய பெரும் புரட்சி!

பொங்கும் புனலென, பூக்கும் அனலென
திரண்டிட வேண்டும் திராவிடரே !
தமிழர் தலைவர் தடம் பதித்தே!

- தகடூர் தமிழ்ச்செல்வி -

தமிழ் ஓவியா said...


சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


சமூக நீதிக்கு எதிரான அரசாணை எண் 181அய் திருத்துக!

அரசாணை எண் 252அய் ரத்து செய்க!

சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் முனைவர் பாவலர் க. மீனாட்சிசுந்தரம், பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, பேராசிரியர் தேவா, தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் மனநல மருத்துவர் டி.எம்.என். தீபக் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி பெரியார் நூல்களை வழங்கினர். (சென்னை பெரியார் திடல் - 5.7.2013)

சென்னை, ஜூலை 6- தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு பணி நியமனத்தில் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்தவர்: பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார், மாநில செயலாளர், திராவிடர் கழக மாணவரணி.

தீர்மானம் வருமாறு:

தீர்மானம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 181 ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களை இடைநிலை (SGT)
மற்றும் பட்டதாரி (BT Asst.) ஆசிரியர் பணிகளில் பணி நியமனம் செய்ய வழி செய்துள்ளது. அது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இனி வருங்காலங்களில் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்திற்கான பணி நியமனத்திற்குத் தேவைப்படும் ஒரு தகுதித் தேர்வில் சமூகநீதி பின்பற்றப்படாமல் அனைத்துப் பிரிவு மக்களும் 60 சதவீதம் பெற்றால்தான் தேர்ச்சி என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைக்கான பணியை மறுக்கும் செயலாகும்.

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (NCTE) வகுத்துள்ள விதிமுறைகளின் படியே இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தனித்தனியே தகுதி மதிப்பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீதம் என்பதை கட்டாயமாக்கியது மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு விரோதமானதும், சமூகநீதிக்கு எதிரானதும் ஆகும்.

அரசாணை எண் 181 திருத்தப்பட்டு, வெவ்வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் வெவ்வேறு தகுதி மதிப்பெண்கள் வழங்கி இடஒதுக்கீட்டை ஆசிரியத் தேர்வு வாரியம் பின்பற்ற வழி செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

அரசாணை எண் 252 தகுதித் தேர்வின் அடிப்படையிலான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்திற்கான வழியைக் கூறாமல் வெயிட்டேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளது. பட்டாயம், பட்டம் பெற்றவரின் மேல்நிலைப்பள்ளி (+2) கல்வியில் பெற்ற மதிப்பெண் அடிப்படை வெயிட்டேஜ் வழங்கி உள்ளது மிகப் பெரும் சமூக அநீதி. ஆசிரியர் தகுதித் தேர்வே தேவையில்லை என்பது நமது நிலைப்பாடு எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது என்ற அரசின் முடிவிலும் சமூகநீதிக்கு எதிராக உள்ள வெயிட்டேஜ் முறையைக் கைவிட்டு, அரசாணை எண் 252 திரும்பப் பெற்று, பதிவு மூப்பையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையிலான பணி நியமனங்கள் /மாற்றுத் திறனாளி/பெண்கள் /திருநங்கை என அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் சமூகநீதி அடிப்படை யிலான வெவ்வேறு கட்-ஆஃப் நிர்ணயித்து இடஒதுக் கீட்டு முறையைக் கடைப்பிடிக்க இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

(பலத்த கரவொலிக்கிடையே தீர்மானம் நிறைவேற்றப் பட்டது).

தமிழ் ஓவியா said...


புலி வேட்டை


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்.
(விடுதலை, 20.10.1960)

தமிழ் ஓவியா said...

ராயப்பேட்டைத் தேர்தல் பார்ப்பனர்களின் சட்ட ஞானம்

ஸ்ரீமான் பி.எ. குருசாமி நாயுடு அவர்களும் ஸ்ரீமான் ஒ.எ.ஒ.கே. லட்சுமணன் செட்டியார் அவர்களும் ராயப்பேட்டை டிவிசன் நகர சபைத் தேர்தலுக்கு அபேட்சகர்கள். இதில் ஸ்ரீமான் செட்டியார் அவர்கள் நியமனத் தேதியில் கௌரவ மேஜிஸ்திரேட்டாக இருந்த தால் சட்டப்படி அபேட்சகராயிருக்க அருக ரல்லவென்று கமிஷனர் அவரை நீக்கித் தேர் தல் நடத்த உத்திரவிட்டார். இதன்மேல் அத்தேர்தலை நிறுத்த நமது பார்ப்பனர்கள் சென்னை மால் கே கோர்ட்டில் (ளுஅயடட உயரளந உடிரசவ) ஒரு பார்ப்பன நீதிபதியிடம் தடை உத்திரவு வாங்கினார்கள். அது அவரிட மே நிவர்த்தி செய்யப்பட்டும், மறுபடியும் இதன் பேரில் நமது பார்ப்பனர் ஹைக்கோர்ட்டில் பார்ப்பனரல்லாத மூன்று ஜட்ஜிகளிடம் ஒரு தடை உத்திரவு வாங்கினார்கள். இதையும் அவர்களிடமே நிவர்த்தி செய்து 30-ந் தேதிக் குள் தேர்தல் நடத்த உத்திரவிடப்பட்டது. இம்மூன்று ஜட்ஜிகள் உத்திரவிற்கு விரோத மாய் மறுபடியும் ஒரு பார்ப்பன ஹைகோர்ட் ஜட்ஜிடம் நமது பார்ப்பனர் அத் தேர்தலையும் நடைபெறாதபடி ஒரு தடை உத்திரவு வாங்கி விட்டார்கள். இந்த நிலையில் சென்னை பிரதம நீதிபதி அவர்கள் இந்த நடவடிக்கையில் சந்தேகப் பட்டு மூன்று ஜட்ஜிகள் கூடி பைசல் செய்த ஒரு விஷயத்தை மறுபடியும் ஒரு ஜட்ஜிடம் போய் எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்று கூட கோர்ட்டில் பார்ப்பன வக்கீல் களைக் கேட்டிருப்பதாகவும் அதற்கு அவர்கள் சட்ட சம்பந்தமான ஆதாரமிருப் பதாகவும் ஒரிஜினல் என்ற காரணத்தை உத்தேசித்து அங்கு போனதாகவும் சொல்லி திருப்தி செய்திருக்கிறார்கள். அப்படியானால் அதையும் என்னிடமே ஏன் கொண்டு வந்திருக்கக் கூடாது என்றும் பிரதம நீதிபதி அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்குச் சட்ட சம்பந்தமான சமாதானமாக அந்தக் காரணம் இந்தக் கோர்ட்டுக்கு வரக் கூடியதல்ல என்று சொன்னதாக தெரிய வருகிறது. இதைப் பார்த்தால் சட்டமியற்றுவது பார்ப்பனர்; அதை விவாதிப்பது பார்ப்பனர்; அதற்குத் தீர்ப்புச் சொல்லுவதும் பெரும்பாலும் பார்ப்பனர் என்று ஏற்படுகிறது. இந்நிலையில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி உள்ள விவகாரங்களில் பார்ப்பனரல்லாதாருக்கு நியாயம் கிடைக்கு மென்று உறுதியாய் நம்ப இடமிருக்கிறதா? என்பதை முடிவு செய்யும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டு விடு கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

எழுத்துச் சீர்திருத்த வரலாறு!

ஓமந்தூர் இராமசாமியார் முதலமைச்சராகவும் டி.எஸ். அவினாசிலிங்கம் கல்வி அமைச்சராகவும் இருந்த பொழுது தமிழ் எழுத்துச் சீர் திருத்தம் பற்றி கருத்து தெரி விக்க குழு ஒன்று அமைக்கப் பட்டது. டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வ.கல்கி ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றனர். தந்தை பெரியார் உருவாக்கிய எழுத்து சீர்திருத்தத்தை அக்குழு ஒப்புக் கொண்டு பரிந்துரைத்தது. அரசு அதை ஏற்று நடை முறைபடுத்துமுன், ஆட்சி மாறுதல் ஏற்பட்டு விட்டது. 2.2.75 அன்று தமிழக புலவர் குழுவும் தந்தை பெரியாரின் சீர்திருத்தத்தை ஒப்புக் கொண்டது. தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு அதற்கு அங்கீகாரம் வழங்கி விட்டது.

தமிழ் ஓவியா said...

கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல்

நமது ஜில்லா சட்டசபைத் தேர்தல் விஷயமாகச் சென்ற இதழில் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் வாசித் திருக்கக் கூடும். அவ்வியாசத்தின் வேண்டுகோள்படியே குடியான வகுப்பைச் சேர்ந்த அபேட்சகர்களான இரண்டு கவுண்டர் கனவான்களில் ஒரு கனவா னான ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் பின்வாங்கிக் கொண்டதாக கேள்விப்படுகிறோம். தங்கள் சமூக நன்மை யை உத்தேசித்து தங்கள் சமூகத்தாரில் யாராவது ஒரு கனவான் சட்டசபைக்கு வரவேண்டும் என்கிற ஒரே எண் ணத்தின் பேரில் மற்றொரு கவுண்டர் கனவானுக் காக விட்டுக் கொடுத்த ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களின் பெருந்தன்மையையும் குலாபிமானத் தையும் நாம் மனமாரப் போற்றுகிறோம். நாம் முந்திய வார இதழில் எழுதியது போலவே ஒருவர் பின்வாங்கிக் கொண்ட தினாலேயே மற்ற கனவானுக்கு யாதொரு பிரயத்தனமுமில்லாமல் சட்டசபை தானம் கிடைத்துவிடும் என்று நம்பி அஸ்

வாரஸ்யமாய் இருந்து விடக் கூடாது என்றும் தக்க முயற்சி எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாய் வேளாள சமூக பிரசாரகர்களைக் கொண்டு பிரச்சாரம் செய்து கிராமத்துக் குடியான மக்களுடைய மனதைத் திருப்ப முயற்சி செய்ய வேண்டும் என்றும் அப்படிக்கில்லாமல், அஸ்வா ரஸ்யமாயிருந்தால் கண்டிப்பாய் ஏமாற்ற மடைய நேரிடும் என்றும் தெரிவித்துக் கொள்வதோடு ஸ்ரீமான் சங்கரண்டாம் பாளையப்பட்டக்காரக் கவுண்டர் அவர் களுக்கு வெற்றி கிடைக்க வேண்டியது அவசியமென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926


தமிழ் ஓவியா said...

இந்தியாவின் `ஏக தலைவரான ஸ்ரீமான் எ.சீனிவாசய்யங்காரின் முடிவான லட்சியம்

எல்லா இந்திய காங்கிர தலைவரும், எல்லா இந்திய சுயராஜ்யக் கட்சித் தலைவரும், தமிழ்நாடு காங்கிர கமிட்டித் தலைவரும், தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவரும், மாஜி அட்வொகேட் ஜெனரலும் ஆகிய ஏக தலைவரான ஸ்ரீமான் எ. சீனிவாசய்யங்காருக்கு இன்னும் மூன்று லட்சியம்தான் இருக்கிறதாம்.
அதாவது :- 1. ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியாரவர்களையும் பனகால் ராஜாவையும் சென்னை சட்டசபையில் தானம் பெறாதபடி செய்துவிட வேண்டும்.

2. தான் இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுக் கப்பட வேண்டும்.

3. ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் ஆரியாவையும் ஜெயிலுக்கு அனுப்பிவிட வேண்டும்.

ஆகிய இம்மூன்று லட்சியங்களும் நிறைவேறி விட்டால் பிறகுதான் ராஜிய வாழ்விலிருந்தே விலகி விடுவாராம். ஏனெனில் ஒரு மனிதனுக்குச் செல்வம், பெண், கீர்த்தி ஆகிய மூன்று சாதனங்கள்தான் லட்சியமானதாகுமாம். அவற்றில் முதல் இரண்டைப் பற்றி தான் திருப்தியடைந்தாய் விட்டதாம். மூன்றா வதான கீர்த்திக்கு முட்டுக்கட்டையாக மேற்சொன்ன படி சென்னை சட்டசபையில் ஸ்ரீமான்கள் ஏ. ராமசாமி முதலியார், பனகால் அரசர் ஆகியவர் களும் இந்தியா சட்டசபைக்குப் போகாமல் இருக்கும்படி தடை செய்துவரும் ஸ்ரீமான்கள் நாயக்கர், ஆரியா ஆகியவர்கள் தன்னைத் தூற்றுவதும் ஆகிய காரியங்கள்தான் தடங்கலாயிருக்கிறதாம். அய்யோ பாவம்! இம்மூன்று காரியங்களும் அய்யங்கார் இஷ்டம்போல் நிறைவேறினாலாவது அய்யங்காரின் கடைசி லட்சியம் நிறைவேறுமா என்பது நமக்குச் சந்தேகமாகவே இருக்கிறது.
- குடிஅரசு - கட்டுரை, 03.10.1926

தமிழ் ஓவியா said...

தீண்டாமை விலக்குச் சட்டம்

பொதுத் தெருக்களில் எவரையேனும் நடக்கக் கூடாது என்று தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் போடலாம் என்கிறதாக ஒரு பிரிவை சென்னை ஜில்லா லோக்கல் போர்டு சட்டங்களில் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறிவிட்டதாகவும், முனிசிபாலிட்டி சட்டத்திலும் இவ்வித திருத்தம் செய்ய வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட திருத்தம்தான் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக வும் ஸ்ரீமான் வீரய்யன் அவர்களால் தெரி விக்கப்படுகின்றன.

குறிப்பு : இவ்வித சட்டம் செய்யப்பட்டது பற்றி நாம் மிகுதியும் களிப்பெய்துகிறோ மானாலும் பார்ப்பன வக்கீல்களும் பார்ப்பன நீதிபதிகளும் இச்சட்டம் செய்தவர் கருத் துப்படி பலனளிக்கச் சம்மதிப்பார்களா? அவர்களது சட்ட ஞானமும் பாஷ்ய ஞான மும் இச்சட்டத்தை உயிருடன் வைத்தி ருக்கச் சம்மதிக்குமா என்று கேட்கிறோம்?
- குடிஅரசு - செய்திவிளக்கம், 03.10.1926

தமிழ் ஓவியா said...

இளவரசன் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளான்!

தருமபுரியில், எதிர்பாராமல் இளவரசனுடைய மரணம் என்பது தற்கொலையா? அல்லது அவர்கள் சொல்கிறபடி படுகொலையா? என்ற உண்மை விரைவில் வெளிவரும்.

ஆனால், ஒன்று நிச்சயம், அது என்னவென்று சொன்னால், முழுக்க முழுக்க அது ஜாதி வெறியினரால் ஏற்பட்ட பலி - அதைத்தான் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். ஜாதி வெறி என்பது இருக்கிறதே, ஜாதியையும், தீண்டாமையையும் ஒழிப்பதைத்தான் வீர சபதமாக, சூளுரையாக நாம் எடுத்துக்கொள்வதுதான், அந்த வீரனுக்கு நாம் செலுத்துகின்ற மிகப்பெரிய வீரவணக்கமாக இருக்க முடியும்.

நாளைக்கோ, மறுநாளோ, சில நாள்களுக்குப் பிறகோ அவன் புதைக்கப்படலாம்; ஆனால், அவன் புதைக்கப்படமாட்டான்; விதைக்கப்படுவான் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும். நாம் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பதைப்போல, அன்புச்சகோதரர் எழுச்சித் தமிழர் நினைக்கவேண்டாம்; இறுதியில் சிரிப்பவர் யார் என்பது தெரியும். உண்மையான வீரன் அவன்தான். அந்த உணர்வு நமக்கு நிச்சயமாக வரும். அந்த வகையிலே, உங்களுடைய நிதானம் பாராட்டப்படவேண்டியதாகும்.

காலையில்கூட அவர் மிகுந்த ஆவேசத்தோடு, உணர்ச்சிவயப்பட்டு என்னிடம் பேசியபொழுது, நான் சில கருத்துகளைச் சொல்லியதாகச் சொன்னார். ஆம், நம்முடைய மவுனம் இந்த நேரத்திலேயே பல பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இந்த மவுனத்திற்கு அர்த்தம் நாம் தோற்றுவிட்டோம் என்பதல்ல; நாம் தான் இறுதியாக வெற்றி பெறப் போகிறோம். அது நிரந்தர வெற்றியாக அமையவேண்டும்; அது தற்காலிக வெற்றியாக அமையக்கூடாது என்பதற்கு அடிப்படையாகத்தான் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது. மறைந்த இளவரசன் அவர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தி, அவரது குடும்பத்திற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜாதி வெறிக்குப் பலியான ஒரு மாவீரன், காதல் உணர்வு என்பதற்காக பலியான ஒரு மாவீரனுக்காக அருள்கூர்ந்து அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுனம் காத்து வீர வணக்கத்தைச் செலுத்துவோம். (அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்).

- சென்னை பெரியார் திடலில் நேற்று (5.7.2013) நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர்

தமிழ் ஓவியா said...

மேலும் மகிழ்ச்சியை ஊட்டும் வகையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களால் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கும் தமிழரான திரு.பி.சதாசிவம் அவர்கள் கூறியிருப்பதற்கு இம்மாநாடு மகிழ்ச்சியையும், நல் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்வதுடன், மிகப்பெரிய பொறுப்பில் - அதிகாரத்தில் இருக்கும் நீதிபதியவர்கள் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்திட ஆவன செய்து, வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனையைச் செய்து முடிக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 3 (ஆ):

நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துக!

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 65-லிருந்து 68 ஆகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு

வயதை 62-லிருந்து 65 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உறுதி செய்யப்படுதல் அவசியம்

தமிழ்நாட்டிற்குரிய சட்டப்படியான காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழ்நாடு பாதிப்புக்கும், இழப்புக்கும் ஆளாக்கப்பட்டுள் ளதை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட இத்தகு பொதுப் பிரச்சினைகளில் சுருதி பேதம் இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் உரிமைக்குரல் கொடுக்கவேண்டுமாய் ஒட்டுமொத்த தமிழர்களையும், தலைவர்களையும், அமைப்புகளையும் இம்மாநாடு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் இத்தகு பொதுப் பிரச்சினைகளில் ஒட்டுமொத்த தமிழர்களின் ஒன்றுபட்ட கருத்தைத் திரட்டும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யுமாறு இம்மாநாடு முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசும் இப்பிரச்சினையில் நியாயமாகவும், சட்டப்படியாகவும், அரசியல் கண்ணோட்டமில்லாமல் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்துக!

தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் வழி செய்யவேண்டிய தமிழ்நாடு அரசு, அந்தத் திட்டமே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது - தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டுவதுடன், அத்தகு பழிக்கு ஆளாகாமல், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், வழக்கை விலக்கிக் கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்டவேண்டுமாய் இம்மாநாடு தமிழ்நாடு அரசை குறிப்பாக முதலமைச்சர் அவர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் திராவிடர் இயக்கத்தவர்கள் விரும்பிய திட்டம் மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க.வின் இரண்டு தேர்தல் அறிக்கைகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதையும் இம்மாநாடு நினைவூட்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணியில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை என்பதையும், அது அரசுக்குக் கடும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்ற கசப்பான உண்மையையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பக்தர்களுக்காக நாத்திகர்கள் நடத்தும் போராட்டம் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேச்சு


ராமநாதபுரம், ஜூலை 7- அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்டமானது பக் தர்களுக்காக நாத்திகர் களாகிய நாங்கள் எங் களையே வருத்திகொண்டு போராடுகிற போராட் டம். இந்த போராட்டத் துக்கு பொதுமக்களும், பக்தர்களும் ஆதரவுதர வேண்டும் என திரா விடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு பேசினார். பாளையங்கோட்டை, தூத்துக்குடி, கோவில் பட்டி, சிவகாசி, விருது நகர், அருப்புக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆற்றிய போராட்ட விளக்க உரை யிலிருந்து: இந்திய அர சியல் அமைப்பு சட்டத் தில் 18 இடங்களில் ஜாதி பற்றிபேசப்பட்டுள்ளது. இதேபோல், 17-ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுளளது. தீண் டாமைக்கு காரணமே ஜாதி தான். எனவே, ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது என்று எழுத வேண்டும் என்றார் தந்தை பெரியார். இதனடிப்படையில், ஜாதியை பாதுகாக்கும் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார்.

இதில், 5,000 போராட்ட வீரர்கள் கலந்துகொண்டு, 3000-க்கும் மேற்பட் டோர் சிறை சென்றனர். இந்த போராட்டத்தில் 3 ஆண்டுகள் வரை எமது தோழர்கள் சிறை சென் றனர். ஜாதி ஒழிப்பு கிளர்ச் சியில், 16 பேர் உயிரிழந் தனர். இப்படி 56 ஆண்டு களுக்கு முன் அடிக்கப் பட்ட ஜாதி பாம்பு தப்பியோடி இன்று கோயில் கருவறையில் நுழைந்து தன்னை பாது காத்துக்கொண்டுள்ளது. கோயில் கருவறைக்குள் நுழைந்த பாம்பை அடித்துக்கொல்வதற்கும், தந்தையின் (தந்தை பெரி யார்) நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற் கும் இன்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் போராட்ட களத் தில் நமது உரிமையை நிலைநாட்டும் போராட்ட களத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை போராட்டமானது 1969-ஆம் ஆண்டு தமிழர்க ளின் இழிவை நீக்க கர்ப்ப கிரக கிளர்ச்சி நடத்தப் படும் என தந்தை பெரி யார் அறிவித்தார். இதில், 2000-க்கும் மேற்பட்ட தோழர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொண்டு போராட்ட களத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிலையில், 1970-ஆம் ஆண்டு கலைஞர் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை பிரச் சினையில், அனைவருக் கும் சமவாய்ப்பளிக்க சட்டம் உருவாக்கப் படும் எனக்கூறியதைத் தொடர்ந்து 1970-ஆம் ஆண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக பெரியார் அறிவித்தார். இதனையடுத்து கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் காலத் திலும், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் காலத்திலும் ஏராள மான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டத்தின் பல னாக திமுக, அரசு சட்ட மியற்றியது. இதனை யடுத்து அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமைக்காக பயிற்சி அளிப்பதற்கு திருச்சி கம்பரசம்பேட்டையில் வேதஆகம கல்லூரி தொடங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெய லலிதா அறிவித்தார். இதற்கு தமிழர் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து, அர்ச்சகர் பயிற்சியில் வேதம் சொல்லித்தரக் கூடாது. ஆகமம்தான் சொல்லித்தர வேண்டும் என அரசுக்கு அறிவுறுத் தினார். இந்நிலையில் வேதம் படித்தவர்கள் சைவக் கோயில்களில் நுழையக் கூடாது என சைவர்கள் வழக்குத் தொடுத்துள்ள னர். ஆகமத்தில், சைவம், வைஷ்ணவம், காணபத் தியம், கவுமாரம், சாக் தம், சவ்ரவம் முறையே சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அம்மன், சூரி யன் ஆகிய கடவுள் வழி பாடாகும். இதில், பல அர்ச்சகர்களுக்கு கணப திக்கு ஓதுகிற மந்திரத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. நந்தி, கருடன், கொடி மரம், பலிபீடம், அர்த்த மண்டபம், மகாமண்ட பம் கடந்து கருவறைக் குள் சென்று வழி பாட்டை நடத்துகிற வழிமுறைகளை சொல் லித்தருவதே. ஆத்திகர் களின் உரிமைக்கு நாத்தி கர்கள் நடத்தும் போராட் டம். இதற்கு பொது மக்களும், பக்தர்களும் ஆதரவு வழங்க வேண் டும் என கேட்டுக்கொண் டார்.