Search This Blog

4.7.13

இது தானா தேசியம்? -பெரியார்

இது தானா தேசியம்?

மத விஷயங்களிலுள்ள குற்றங்களும், கொடுமைகளும், ஒழுக்கக் குறைவுகளும் தேசிய விஷயத்தில் இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது.

பொதுவாகவே தேசியம் என்னும் வார்த்தையை அர்த்தமற்றது என்றும், மோசக் கருத்துக் கொண்டது என்றும், அதில் பணக்காரத் தன்மை பிரதிபலிப்பதோடு, அது பணக்காரத் தன்மையை ஆதரிப்பதற்கென்று கற்பிக்கப்பட்டதென்றும் பல தடவை கூறி வந்திருக்கிறோம்.

நாம் மாத்திரமல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்கின்ற ஒரு மேதாவி "தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம்" என்று அதாவது "பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழி பிழைப்புக்கு மார்க்கமானது" என்று கூறி இருக்கிறார்.

இந்த அபிப்பிராயம் முதல் முதல் தேசியம், தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகள் எங்கு உண்டானதோ, அங்கு ஏற்பட்ட அபிப்ராயமே தவிர இந்தியாவில் "தேசிய விரோதிகள்" "தேசத் துரோகிகள்" "சர்க்கார் குலாம்கள்" என்று "தேசாபிமானி"களால் கருதப்படுகின்றவர்களால் சொல்லப்பட்டதல்ல. இது எப்படியோ இருக்கட்டும் என்று வைத்துக் கொள்ளுவோம்.

இன்று இந்திய தேசியவாதிகள், தேசாபிமானிகள் தேசியத்துக்கும், தேசாபிமானத்துக்கும் பத்திரிகை நடத்தும் பத்திராதிபர்கள், தேசாபிமானத்தில் வயிறு வளர்க்கும் பிறவி வாழ்க்கை தேச பக்தர்கள் என்பவர்களைப் பற்றிச் சற்று கவனிப்போம். இன்று இந்தியாவில் இந்திய சட்டசபைக்குத் தேர்தல்கள் நடக்கின்றன. இது ஒரு அரசியல் விஷயம்.

இந்திய சட்டசபை அரசியல் மூலம் ஜாதீய சம்மந்தமான மனித சமூக வாழ்வு சீர்திருத்த சம்பந்தமான அதாவது ஜாதி, மத, பழக்க வழக்க சம்பந்தமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. முடியும் என்றாலும் தேசியவாதிகள், தேசாபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இது விஷயங் களை சட்ட சபைகளில் பேசவோ, சட்டம் செய்யவோ ஒப்புக் கொள்ளுவதில்லை. ஒப்புக் கொள்வதானாலும் தேசமெல்லாம் ஒரே அபிப்பிராயமாய் அந்தந்த மத ஜாதிக்காரர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும் என்கின்றதான ஆகாத நிபந்தனைகளையெல்லாம் சொல்லுகின்றவர்கள்.

இந்திய தேசாபிமானம் என்பதே இன்று இந்த தேசப் பணக்காரர்களுடைய சௌகரியங்களைக் குறிப்பாய்க் கொண்டதும், பணக்காரர்கள் பண வருவாய் முறையை சிறிதும் மாற்ற முடியாததும், பணக்காரர்களுக்குப் பணம் பெருகிக் கொண்டு, வளர்ந்து கொண்டு போவதைத் தடுக்க முடியாததும், தேச செல்வம் எல்லாம் ஒருவன் கைக்கே போவதானாலும் ஆட்சேபிக்க முடியாததுமான கொள்கைதான் (தேசாபிமானத்தில்) இருந்து வருகிறதே தவிர, தேசம் தேச மக்களுக்குப் பொது தேசத்தின் செல்வம், விளைபொருள், வர்த்தகம், போக்குவரத்து தொழிற்சாலை ஆகியவைகளின் பலன்கள் இந்த தேசத்து எல்லா மக்களுக்கும் பொது என்று சொல்லக்கூடிய காரியங்கள் தேசாபிமானத்தில் இல்லவும் இல்லை. அதை அதில் சேர்த்துக் கொள்ள மகாத்மாக்கள் என்பவர்கள் முதல் எந்த தேச பக்தர்களும் சம்மதிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள நபர்கள் தாங்கள் சேர்ந்துள்ள ஸ்தாபனத்தையும், தாங்கள் சொல்லும் கொள்கைகளையும், தேசாபிமானம் என்று சொல்லிக்கொண்டு இருப்பதாலேயே தங்களை தேசாபிமானிகள் என்றும், தங்களோடு சேராதவர்கள் எல்லாம் தேசாபிமானிகள் அல்ல என்றும், தேசத் துரோகிகள் என்றும், தங்கள் ஸ்தாபனம்தான் குதிரைக்கு சமானமானது என்றும், மற்றவை கழுதைக்குச் சமானமானது என்றும் சொல்லுகிறார்கள். இதனாலேயே தேசாபிமானம் என்பது வடிகட்டிய அயோக்கியதனம் என்றும் அதில் வாழ்கின்றவர்கள் உலகிலுள்ள பிழைப்புகளில் எல்லாம் மிக இழிவான பிழைப்பில் பிழைக்கின்றவர் களாவார்கள் என்றும் சொன்ன சொல்லைப் பொன்னே போல் போற்றி பொன் எழுத்தில் எழுதி சொன்னவரை பொன்னே போல் வாழ்த்த வேண்டாமா என்று கேள்க்கின்றோம்.

இன்று சிறப்பாக இந்த நாட்டில் தன்னை ஒருவன் தேசாபிமானி என்று சொல்லிக் கொண்டாலோ, அல்லது அந்த ஸ்தாபனத்தில் சேர்ந்து கொண்டாலோ, அல்லது வேறு வழியில்லாமல் அதன் பயனாய் வாழ்வை நடத்த ஆரம்பித்து விட்டாலோ, அவன் எவ்வளவு அயோக்கியனாய், இழி பிறப்பாய், ஒழுக்கங் கெட்டவனாய் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மேடை ஏறவும், வாயில் வந்ததைப் பேசவும், மனதில் நினைத்ததை எழுதவும், பொய் பித்தலாட்டம் போக்கிரித்தனங்கள் செய்யவும் யோக்கியதைகள் ஏற்பட்டு விடுவது என்றால் இப்படிப்பட்ட தேசாபிமானத்தையும், தேசியத்தையும், தேச பக்தியையும் வெட்டிப் புதைக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

அதற்காக உயிர் போகுமளவும் பாடுபட்டு அதற்காக உயிர் விட நேரிடுவதைப் பெரியதொரு கிடைத்தற்கரியதொரு காரியம் என்று கருத வேண்டாமா? என்று கேட்கின்றோம்.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் நமது பாராட்டுதலுக்குரியவர் என்றே கருதுகிறோம். (நமது பாராட்டுதலை அவர் லக்ஷியம் செய்யா திருந்தாலும் இருக்கலாம்) அவரை உண்மைத் தியாகிகளில் ஒருவராகவே கொள்ளலாம். அவரது நிலைமையைப் பார்த்தும் அவர் தேசாபிமானத்தால் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர் என்றே கூறுவோம்.

அதோடு கூடவே ஒவ்வொருவருக்கும் அவரவர் கருதும் வழியில் தொண்டாற்ற, தியாகம் செய்ய, உயிர்விட அவரவருக்கு உரிமை உண்டு என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.

என்றாலும் "காங்கிரஸ் ஒன்றுதான் தேசாபிமான ஸ்தாபனம். காங்கிரஸ்காரர்கள்தான் தேசாபிமானிகள்" என்று சொல்லுவதும் "எவ்வளவுதான் ஒரு மனிதன் தனிப்பட்ட முறையில் சொந்த வாழ்வில், எவ்வளவு அயோக்கியனாய், ஈனனாய் இருந்தாலும் அவன் காங்கிரசில் சேர்ந்து விட்டால் அவன் யோக்கியனாய் விடுவான்" என்றும், "அவனை யோக்கியனாகக் கருத வேண்டும்" என்றும் சொல்ல முன் வந்துவிட்டாரானால் பிறகு இவரைப் பற்றி என்ன சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.

ஒரு சிட்டிகைச் சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டால் பெற்ற தாயாரைப் புணர்ந்த பாபம் நாசமாகி சிவனுடைய பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம் என்றும், "ஒரு தடவை ராமா என்றால் பல "ஜன்ம" பாபங்கள் தீர்ந்து வைகுண்டம் சேரலாம்" என்றும் சொல்லும் வாக்கியங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேழ்க்கின்றோம். இதனால்தான் இத்தேசத்தில் உள்ள அயோக்கியர்கள், இழி தொழிலாளிகள் ஆகிய எல்லோரும் தாங்கள் யோக்கியர்களாகக் கருதப்படலாம் என்று காங்கிரசில் வந்து சேருகிறார்கள் போலும்.

நாலணா கொடுத்துக் காங்கிரசில் சேர்ந்து விடுவதினால் ஒரு மனிதன் யோக்கியனாகி விடலாம் என்று ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் வாயினால் சொல்லப்பட்டு விடுமானால், மனிதன் அயோக்கியனாக, ஒழுக்க ஈனனாக, நாணையமற்றவனாக, இழி வாழ்க்கைக்காரனாக வாழப் பயப்படுவானா? என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை வணக்கமாக கேள்க்கின்றோம். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தொண்டும், நமது தொண்டும் பார்ப்பனர் நன்மை, பார்ப்பனரல்லாதார் நன்மை என்கின்ற தத்துவங்களின் போட்டித் தொண்டு என்று மாத்திரம் நாம் கண்ணியமாய் எண்ணி இருந்த எண்ணம், இப்போது அயோக்கியர் யோக்கியர் என்கின்ற விஷயத்திலும், போட்டித் தொண்டு என்று சொல்ல வேண்டியதாகின்றது என்றால் இதற்கு நாம் விசனப்பட வேண்டியதுதான்.

உலகம் எவ்வளவுதான் தந்திரங்களுக்கு அடிமைப்பட்டு விட்டது என்றாலும், இன்றைய நிலையில் நாணையத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அதாவது நானையம் ஒழுக்கம் என்கின்ற வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கின்றது என்றே கருதுகின்றோம். ஆதலால் நாணையம் இல்லாதவனும், ஒழுக்கம் இல்லாதவனும் காங்கிரசில் சேர்ந்தால் ஒழுக்கமும், நாணையமும் ஏற்பட்டு விடும் என்கின்ற வார்த்தையின் பயனாய் (அறிவுள்ள சமூகத்தில்) பிரதிகூலம் தான் ஏற்படுமே தவிர அனுகூலம் ஏற்படாதென்றே சொல்லுகின்றோம். அன்றியும் மனிதனின் முன் பின் நிலை, தியாகம், ஒழுக்கம், நாணையம் முதலியவை ஒன்றும் கவனிக்கப்படாமல் வெரும் தேசாபிமானத்தையும், தேசாபி அந்த மானத்துக்கும் தாங்கள் சொல்லுவதையே அர்த்தமாக வைத்துக்கொண்டு "காங்கிரஸ் காந்தி ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்" என்று சொல்லுவ தென்றால் அதன் தைரியத்தைப் பார்க்கும்போது தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் முழுமூடர்கள், கபோதிகள், களிமண் உருண்டைத் தலைகள் என்று கருதி இருப்பதாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது.

இன்றையத் தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை நாம் ஒரு கேழ்வி கேள்கின்றோம்.

அதாவது தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கும், ராமசாமி முதலியாருக்கும் எந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?

தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் என்பவருக்கும், டாக்டர் வரதராஜுலுவுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம்?

தோழர் குமாரசாமி ராஜா என்பவருக்கும் விருதுநகர் வி.வி. ராமசாமி அவர்களுக்கும் எந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?

தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்களுக்கும், சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்களுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம்?

தோழர் முத்துரங்க முதலியார் அவர்களுக்கும், தோழர் நடராஜ முதலியார் அவர்களுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம் சொல்லக் கூடும் என்று கேழ்க்கின்றோம்.

5 ஸ்தானங்களுக்கு காங்கிரசின் பேரால் 5 பேரை நிறுத்தி போட்டி போட்டுக்கொண்டு, காங்கிரசின் பேரால் என்று போடப்பட்ட ஆட்களைப் பற்றியோ, அவர்களின் யோக்கியதைகளைப் பற்றியோ ஒரு வார்த்தைகளைகூட எடுத்துப் பேச யோக்கியதை இல்லாத நிலையில் இருந்து கொண்டு "காங்கிரசு, காந்தி, காங்கிரசில் சேராதவன் தேசத்துரோகி, ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்" என்றும் "காங்கிரசுக்கும், காந்திக்கும் போர் நடக்கின்றது ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்" என்றும் சொல்லுகின்றதினாலேயே இவர்களை எப்படி ஜெயித்து விடுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட கனவான்கள் என்பவர்கள் ஜாதி மதங்களைக் காப்பாற்றும் வருணாச்சிரமவாதிகளா? அல்லவா? என்று கேட்கின்றோம்.

ஒருவர் இருவர் ஒரு சமயம் அரை வருணாச்சிரமவாதிகளாய் இருக்கலாம். அல்லது வெளியில் சொல்லப் பயப்படுபவர்களாய் இருக்கலாம். வேறு விதத்தில் மற்றவர்களை விடக் காங்கிரஸ்காரர்கள் எப்படி உயர்ந்தவர்கள் என்று கேட்கின்றோம்.

தமிழ் நாட்டுக் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் என்பதைத் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும், சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதி களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். (ஆனால் ஏன் பார்ப்பனரல்லாதாரில் தகுந்த ஆட்கள் வரக்கூடாது என்று கேட்கின்றார்கள். அது வேறு விஷயம்)

இந்தப் பார்ப்பனர்களின் கருத்து தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தலை எடுக்கக் கூடாது என்பதைத் தவிர வேறு இல்லை என்பது காந்தியார், ஜவகர்லால் வரையில் எட்டிய உண்மையாகும்.

இந்தத் தேர்தலில் இவர்களுடைய நோக்கம் எல்லாம் பார்ப்பனரல்லாத சுயபுத்தி உள்ளவர்கள் இந்திய சட்டசபைக்குப் போகக் கூடாது என்பதைத் தவிர சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தோழர்கள் ஆர்.கே.ஷண்முகம், பி.வரதராஜலு, ஏ.ராமசாமி முதலியார் போன்றவர்கள் கண்டிப்பாகப் போகக் கூடாது என்பதைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகச் சொல்லுவோம்.

இம்மூவரும் சென்றால், தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை விட ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள் பார்ப்பனரல்லாதாரிலும் இருக்கிறார்கள் என்பது உலகத்துக்கு விளங்கிவிடும். இதனால் தாங்கள் (பார்ப்பனர்கள்) இதுகால வரையில் பார்ப்பனரல்லாதாரைத் தமிழ்நாட்டை விட்டு வெளிமாகாணங்களுக்குத் தெரியாதபடி பத்திரிகை மூலமும் விஷமப் பிரசாரம் மூலமும் அடக்கி வைத்திருந்ததின் பயன் வீணாகப் போவதுடன் தங்கள் யோக்கியதைகளும் வெளியாகி விடுமே என்கின்ற நடுக்கமே அல்லாமல் வேறு ஒரு காரணமும் அல்ல.

எனவே இந்தக் கருத்தை முக்கியமாய் வைத்துக் கொண்டுதான் ஞானமற்ற சுயநலக்கார வேலையில்லாக் கஷ்டத்தால் துன்பப்படுகிற பொறாமைப் பேய்க்கு அடிமைப்பட்ட பூதக் கண்ணாடியை வைத்துக் கண்டுபிடிக்கத்தக்க யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார்களை சுவாதினம் செய்து கொண்டு காந்தி, காங்கிரஸ், தேசாபிமானம் என்று சொல்லிக் கொண்டு இப்படிப்பட்ட சூக்ஷியையும், பித்தலாட்டங்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பனரல்லாத சுயமரியாதையுள்ள மக்கள் உணரவேண்டும் என்று ஆசைபடுகின்றோம்.

   -------------------------  தந்தைபெரியார் ---”பகுத்தறிவு” கட்டுரை 09.09.1934

25 comments:

தமிழ் ஓவியா said...


சபாஷ் வரவேற்கத்தக்க கருத்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்!


சபாஷ் வரவேற்கத்தக்க கருத்து

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சதாசிவம் கருத்து

டில்லி, ஜூலை 4- நமது நாட்டின் உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிக்கும் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 19-ஆம் தேதியன்று சதாசிவம் பொறுப் பேற்க உள்ளார்.

இதனையொட்டி ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்ற வேண்டும். இந்நிய மனங்களின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் மூலம் நாட்டின் அனைத்து சமூக மக்களுக்கும் வாய்ப்பளிக்கப் படும். அதற்காக ஏற்கெனவே கடைப்பிடித்து வரும் குறிப் பிட்ட தகுதிகளைப் புறக் கணித்துவிட வேண்டும் என்பது அல்ல. அதாவது தகுதியற்ற நபர் களை தேர்வு செய்வது என்பது இதற்கு அர்த்தம் அல்ல..ஆனால் இடஒதுக்கீடு என்ற சலுகை வழங்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத்துகு நீதிமன்றங்கள் எதிரி அல்ல..

நீதித்துறை, சட்டசபை, அரசு நிர்வாகம் மூன்றும் அரசியல் சாசனத்தின் மூன்று அங்கங்களாகும். ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் இணைந்து இயங்கி வருகின்றன.

பொதுவாக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது; அதே போல் தான் நீதிமன்றத்தின் செயல்பாடு களை அரசால் தடுக்கவும், தலையிடவும் முடியாது; நீதித்துறை ஊழல்களுக்கு அப்பாற்பட்டது என நான் சொல்லவில்லை.

ஆனால் இதர துறைகளை ஒப்பிடுகையில் நீதித் துறையில் ஊழல் குறைவுதான். ஊழல் வழக்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை விரைவு படுத்தப்பட்டிருக்கிறது. குற்றத்தின் அடிப்படையிலேயே பிணை அளிப்பதும், மறுக்கப்படுவதும் முடிவு செய்யப் படுகிறது; தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து விவரங்களையும் அளிப்பது தவறல்ல என்றார் அவர்.

தமிழ் ஓவியா said...


சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது


செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சேலம், ஜூலை 4- 1927இல் தொடங்கப்பட்ட சேலம் சுயமரியாதைச் சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என்றார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள். செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

சேலம் தாய் வீடு என்று சொல்லுவார்கள்; 1927இல் சேலம் சுயமரியாதைச் சங்கம் தொடங்கப்பட்டது. அதற்கான சொந்த இடம் வாங்கி 1931 ஜூன் 29ஆம் தேதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் அப்போதைய அமைச்சர் திவான் பகதூர் பி.டி. ராஜன் கலந்து கொண்டார். 1957இல் இருந்து பழைமை வாய்ந்த சுயமரியாதை சங்க கட்டடத்தில் படிப்பகம் நூலகங்கள் இயங்க ஆரம்பித்தன. இந்த சுயமரியாதை சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருந்த சிலர் 1998இல் மனுகுல தேவாங்கர் சங்கத்தோடு இணைந்தார்கள். இந்த சுயமரியாதை சங்கமானது, பகுத்தறிவைப் பரப்புவதற்கும் ஜாதி பேதங்களை ஒழிப்பதற்கும், பெண்ணடிமை ஒழிப்பிற்காகவும், இயங்கி வந்தது. ஆனால் இந்த சங்கத்தை மனுகுல தேவாங்க சங்கம் என்ற ஜாதிச் சங்கத்தோடு இணைத்தது தவறு என்றும் வழக்கு நடத்தப்பட்டது.

இந்த சங்கத்தின் உறுப்பினராக இருந்த நடேசன் என்பவர் வழக்கு நடத்தி வந்தார். அவர் நோயுற்ற காலத்தில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் பிரச்சார செயலாளர் கி.வீரமணி அவர்களே இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என் கேட்டுக் கொண்டார்.

இந்த வழக்கின் இறுதியில் 19.6.2013-இல் பத்திரபதிவுத் துறையின் அய்.ஜி (இன்ஸ்பெக்டர் ஜெனரல்) ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் ஜாதி சங்கத்தோடு, சேலம் சுயமரியாதை சங்கத்தை இணைத்தது தவறு என்றும், சேலம் சுயமரியாதை சங்கம் தனித்து இயங்கலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் சேலம் சுயமரியாதை சங்கத்தின் அலுவலகம் இந்த கட்டடத்தில் இன்று முதல் இயங்குகிறது. தமிழகத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்ட (1927) சேலம் சுயமரியாதை சங்கம் சட்டப்படி மீட்கப்பட்டது என செய்தியாளர் சந்திப்பில் கூறினார் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள்.

மேலும் வேலூர் பி.ஜே.பி. முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்டதுபற்றி செய்தியாளர் கேள்விக்கு தமிழர் தலைவர் கூறியது:- கொள்கையளவில் வேறுபாடு இருந்தாலும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டுமே தவிர வன்முறையில் யார் ஈடுபட்டாலும் அது தவறு தான். தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மிகவும் மலிவாகிவிட்டது. தமிழக அரசு நோய் நாடி, நோய் முதல் நாடி என்பது போல அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து களைய வேண்டும் என்றார்.

தமிழ் ஓவியா said...

கடவுளுக்கே வறட்சியோ!

பழநி, ஜூலை 4- பழநி இடும்பன் மலைக்கோவிலில், தண்ணீர் இல்லாத தால், பூஜை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனராம்.

பழநிக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள், முதலில், இடும்பன் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு, மலைக்கோவில் செல்வர். இடும்பன் மலை கோவில் பூஜைக்கு, கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். வறட்சியால் கிணறு வற்றிவிட்டது.

இதனால், மலைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அபிஷேகத்திற்கு தண் ணீர் கிடைக்காததால், பூஜை முழுமை யாக நடப்பதில்லை. அர்ச்சகர்கள் குடங்களில், அவ்வப்போது கொண்டு செல்லும் தண்ணீரில், பூஜை செய்யப் படுகிறதாம். கோவில் செயற்பொறியாளர் குமரேசன் கூறுகையில்,"இடும்பன் மலை அடிவாரத்தில், புதிய தண்ணீர் தொட்டி கள் கட்டும்பணி நடக்கிறது. லாரி மூலம், இத்தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படும். இங்கிருந்து இடும்பன் மலை கோவிலுக்கு, தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இப் பணி, ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்,'' என்றார்.

தமிழ் ஓவியா said...

பழநி முருகன் தீர்த்து வைக்க மாட்டானா?

பழனி, ஜுலை.4- பழனி கோவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடி சேமநல பிடித்தத்தில் முறைகேடு ஆகிய வற்றை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள அறு படை வீடுகளுக்கும் ஆஸ்பிடாலிட்டி பெசிலிட்டி அன்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் என்ற தனியார் ஒப்பந்தக்காரர் மூலம் துப்புரவு பணியாளர்கள் நியமிக் கப்பட்டனர். பழனி மலைக்கோவில், கிரிவலவீதி, படிப்பாதை, தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கென துப்புரவு பணியாளர் கள் 325 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 125 பேர் ஆண்கள், 200 பேர் பெண்கள். இவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ.3,300 வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாதம் கூட குறிப்பிட்ட தேதியான 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கியது கிடையாது. சேமநல நிதியாக ஒவ்வொரு வருக்கும் ஊதியத்தில் இருந்து ரூ.400 பிடித்தம் செய்து அதனுடன் ஒப்பந்தகாரர் சார்பில் ரூ.400 சேர்த்து ரூ.800 வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால் துப்புரவு பணியாளர்கள் ஒருவருக்குகூட சேமநல நிதி வரவு வைக்கப்படவில்லை. இது குறித்து நிர்வாகத்திடம் பல முறை கேட் டும் எந்த வித பதிலும் தரவில்லை. இத னால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இன்று துப்புரவு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேமநல நிதி பிடித்தம் செய்யப்படு கிறதே தவிர அது வரவுவைக்கப்பட வில்லை. கடந்த 5 ஆண்டில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்தும் அவர்கள் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்கவில்லை. யாராவது அவர்களை எதிர்த்து கேட்டால் வேலையில் இருந்து நிறுத்தி விடுகிறார்கள். எனவே எங்களை திருக்கோவில் நிர்வாகத்தினரே தினக்கூலி அடிப்படையில் வேலையில் அமர்த்தி னால்கூட நிம்மதியாக பணியாற்றுவோம் என்று தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

மதம் பிடித்த 20 கோயில் யானைகளுக்கு மருத்துவம்!

பாலக்காடு, ஜூலை 4- கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானத் திற்கு சொந்தமாக 62 யானைகள் உள்ளன. இவை, கோயில் அருகேயுள்ள புனத்தூர் கோட்டை யானைதாவளத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம். ரூ.8 லட்சம் செலவில் இந்தாண்டுக்கான முகாம் நேற்றுமுன்தினம் துவங்கியது. முதற்கட்ட மாக 42 யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. யானைகளுக்கு அரிசி, பாசிபயறு, கொள்ளு மற்றும் அட்டசூர ணம் போன்ற ஆயுர்வேத மூலிகை கலந்த உணவு வகைகள் வழங்கப்படுகிறதாம்.

முகாமை, திருச்சூர் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஜோந்திர தாஸ் துவக்கி வைத்தார். மீதமுள்ள 20 யானைகளுக்கு தற்போது மதம்பிடித் துள்ளதால், அவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம் முகாம் ஜூலை 31ஆம் தேதி வரை நடக்கிறது.

தமிழ் ஓவியா said...


தவறான தீர்ப்பாம்!


சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு பார்ப்பனர்களின் - பிற்போக்குவாதிகளின் அஸ்திவாரத்தைக் கலகலக்க வைத்து விட்டது.

கல்கி துக்ளக் போன்ற பார்ப்பன இதழ்கள் பகிங்கரமாக எதிர்ப்புக் கணைகளை வீசு கின்றனர்.

இன்று வெளி வந்துள்ள துக்ளக் (10.7.2013) இதழில் ஒரு கேள்வி பதில்.

கேள்வி: திருமணமாகாத ஆண் - பெண்ணின் பாலியல் உறவை திருமணமாகவும், அவர்களைத் தம்பதிகளாகவும் கருதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியா?

பதில்: இது தவறான தீர்ப்பு என்பது என் கருத்து. அப்பீல் செய்யப்பட்டால் இந்தத் தீர்ப்பு மாற்றப்படும் என்பது என் எதிர்பார்ப்பு என்று எழுதுகிறது துக்ளக்.

கல்கி (7.7.2013) இதழில் வெளிவந்த கேள்வி பதில் வருமாறு: கேள்வி: ஆண் - பெண் இடையே நடக்கும் பாலியல் உறவே சட்டப்பூர்வமான திருமணம். மற்றவை அல்ல, என்று சென்னை ஹைகோர்ட்டு சொல்வதுபற்றி?

பதில்: மீடியாவும் சமூக வலைத்தளங்களும் பரபரப்படைந்து, நீதிபதி கர்ணனின் தீர்ப்பை விமர்சித்தன. இவ்வாறு விமர்சிப்பதை ஆட்சேபித்துள்ளார் நீதிபதி. தீர்ப்புகளை விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு என்று சட்ட வல்லுநர்களே எடுத்துரைக்கின்றனர். அது ஒருபுறமிருக்க, நீதிபதி குறிப்பிட்ட ஒரு வழக்கில் நியாயத் தீர்ப்பை அளித்து ஓர் அநீதிக்குப் பரிகாரம் காண்பதுடன் நின்றிருந்தால் பிரச்சினை தோன்றி இராது. நமது சமூகம் எளிதில் ஏற்க முடியாத பொதுப்படையான சில கருத்துகளைக் கூறப் போகத்தான் எதிர்ப்புக் குரல் ஏராளமாக எழக் காரணமாயிற்று. நீதிபதியின் விளக்கம் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது என்கிறது கல்கி

சென்னை நீதிபதியோடு இந்தக் கருத்து நிற்கவில்லை; உச்சநீதிமன்றத்திலும் நீதியர சர்கள் பி. சதாசிவம், ஜெகதீஸ் சிங் கேஹர் ஆகியோர் அடங்கிய அமர்வும் இதே வகையில் தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவின்மீது உச்சநீதிமன்ற அமர்வு - சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் அவர்களின் தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தீர்ப்பினை வழங்கி விட்டதே!

திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத் துடன் உடலுறவு கொண்டவரை நிரபாரதி என்று கூற முடியாது என்கிறது உச்சநீதிமன்றம்.

ஆண்கள்தன் ஆதிக்கத் தன்மையுடன் பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு விட்டு தப்பித்துக் கொள்வதை துக்ளக் கல்கி வகையறாக்கள் ஏற்றுக் கொள்கின்றனவா?

திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆண் கூறியது உண்மைதானே; அதைக் கூறி பாலியல் உறவு கொண்ட நிலையில் அதனைத் திருமணம் என்று ஏன் கருதக் கூடாதாம்?

நீதியரசர் கர்ணன் தன் தீர்ப்பில் இன்னொன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். சடங்கு ஆச்சாரங்களுடன் திருமணம் செய்து கொண்டு அதே நேரத்தில் பாலியல் உறவு கொள்ளவில்லையென்றால் அந்தத் திருமண மும் சட்டப்படி செல்லாது என்றும் கூறியுள் ளாரே! இதன் மூலம் கணவன் - மனைவி என்பதற்கு முக்கியமான அடையாளம் பாலியல் உறவு என்பது வெளிப்படவில்லையா?

பார்ப்பன வட்டாரங்கள் பதறுவதற்கு முக்கிய காரணமே - சடங்குகள் முக்கியமல்ல என்று கூறப்பட்டு இருப்பதுதான்; சடங்குகள் என்று சொல்லும்போது திருமணத்தில் முழுக்க முழுக்க பார்ப்பனக் கலாச்சாரம் சம்பந்தப்பட்டதுதான்.

ஓமக் குண்டம் சப்தபதி என்பதற்கும் பார்ப் பனர் அல்லாத மக்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆணும் ஆணும் சேர்ந்து பெற்ற பிள்ளை தான் அய்யப்பன் என்பதை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர்கள், வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதை முக்கிய சாட்சியமாக ஏற்றுக் கொள்ளாதது - ஏன்?

பார்ப்பனர் அல்லாத மக்கள் சிந்திக்கட்டும்!

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத் தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச்சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

(விடுதலை, 13.9.1972)

தமிழ் ஓவியா said...





கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் 17 ரூபாயிலும், நகரங்களில் 23 ரூபாயிலும் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருவதாக 2011 ஜூலை முதல் 2012 ஜூன் வரை நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ள 5 சதவிகித ஏழைகளின் சராசரி மாதாந்திர செலவு கிராமங்களில் ஆள் ஒன்றுக்கு 521.44 ரூபாயாகவும் நகரங்களில் 700.50 ரூபாயாகவும் உள்ளது.

மேல்தட்டில் உள்ள முதல் 5 சதவிகிதத்தினரின் சராசரி மாதச் செலவு ஆள் ஒன்றுக்கு கிராமங்களில் 4,481 ரூபாயாகவும் நகரங்களில் 10,282 ரூபாயாகவும் உள்ளதாம்.

அகில இந்திய அளவில் கிராமங்களில் ஒருவரின் மாதச் செலவு 1,430 ரூபாயாகவும் நகரங்களில் 2,630 ரூபாயாகவும் இருக்கிறது. இதிலிருந்து, நகரங்களில் வாழும் மக்களின் சராசரி மாதச் செலவு கிராம மக்களின் மாதச் செலவைவிட 84 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காலம் காலமாக தமிழர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணியாற்றி வந்த பழனி முருகன் கோயிலில் -_ பார்ப்பனர்கள் நுழைந்து தமிழர்களே அர்ச்சகராக முடியாத நிலையை உருவாக்கிவிட்டனர் என்ற வரலா-று உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கடவுள் வழிபாடு மற்றும் பக்திப் பிரமிடு


- சரவணா.இரா

இன்றைய காலகட்டத்திலும் ஆலயங்களில் கூட்டம் கூடுகிறது என்றால் அந்தக் கூட்டத்தை நான்கு அடுக்குப் பிரமிடாகப் பிரிக்கலாம்.

முதல் அடுக்கு: தான் சார்ந்த மதம் என்ற சுயநலத்தில் கோயிலுக்குச் செல்பவர். இவர்களுக்கு 1%கூட கடவுள் பக்தியோ அல்லது பயமோ கிடையாது. இவர்களுடைய நோக்கம் வருமானம் மட்டுமே, இதில் பார்ப்பனப் பூசாரிகள் இதர ஜோதிடர்கள் மற்றும் கோயில்களில் கடை வைத்திருப்பவர்கள் காரணம். வருகிறவர்கள் எல்லாம் கன்னத்தில் தாளமிட்டு தன்னைத்தானே தலையில் குட்டிக்கொண்டு சென்றுவிட்டால் மேலே கூறியவர்களின் பிழைப்பிற்கு என்ன வழி?

இரண்டாம் அடுக்கு: கடவுளின் மீது நம்பிக்கை வைப்பது போல் நடிப்பவர்கள். இவர்கள் செல்வந்தர்கள், வியாபாரிகள், அதிகாரம் மிக்கவர்கள். இவர்களின் நோக்கமே ஆதாயம் _ உழைப்பின்றி ஆதாயம் பெறுவது. இவர்களுக்கும் கடவுள்பக்தி, பயம் என எதுவும் இம்மியளவும் கிடையாது. இவர்களுக்கு முதல் அடுக்குக்காரர்கள் பெரிதும் துணை செல்வார்கள். இலாபத்தொகையில் கணிசமான பங்கு முதல் அடுக்கு ஆட்களுக்கு உண்டு.

மூன்றாம் அடுக்கு: இவர்களுக்குப் பக்தி இருக்கும், ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்காது. எதற்குக் கோயிலுக்குப் போகிறோம் என்று தெரியாமல் செல்பவர்கள். இவர்களால்தான் பக்தி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

நான்காம் அடுக்கு: இருப்பதைக் கொடுத்துவிட்டு பகவான் செயல் என்று செல்லும் சாமானியர்கள். பிள்ளைக்குத் திருமணம் ஆகவேண்டுமா? மகளுக்கேற்ற மருமகனைத் தேடுவதைவிட்டு கோயில் கோயிலாகச் செல்வார்கள்!.

திருமணம் முடிந்து பிள்ளை பிறக்க வில்லையா? மீண்டும் கோயில்! மகள் குழந்தை யின்மைப் பிரச்சினையால் விரட்டப்பட் டாளா? மீண்டும் கோயில்! இவர்களின் பக்தி குறை யாமல் பார்த்துக் கொள்வதில் முதல்படி ஆசாமிகளின் பங்கு 100% உண்டு.

மேலும் இவர்கள் எண்ணிக்கையில் அதிகம். இவர்களிடம் இருந்து கிட்டத்தட்ட முழு உழைப்பும் பிடுங்கப்படுகிறது. இதில் என்ன வருத்தமான செய்தி என்றால், தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரிந்தும் திருந்த மறுக்கிறார்கள். இவர்கள்தான் பக்தி வியாபாரத்திற்குத் தங்க முட்டையிடும் வாத்து. இந்த இறுதிநிலை மக்கள் திருந்தினால் ஒரே மாதத்தில் திருப்பதி ரெயில் நிலையம் இழுத்து மூடப்படும்.

தமிழ் ஓவியா said...

வெளிவந்துவிட்டது தோழர்களே, விரைந்து கடமையாற்றுவீர்!


திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்த அந்தச் சிறு வெளியீடு வெளி வந்துவிட்டது.

தந்தை பெரியார் 1970 இல் தீவிரமாகத் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தில் வெற்றி இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை!

கடந்த 43 ஆண்டுகளில் அடுக்கடுக்கான போராட்டங்கள் - அலை அலையான செயற்பாடுகள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றம். இவ்வளவு இருந்தும் பார்ப்பனர்களின் பாதுகாப்புச் சரணாலயமாக இருக்கக்கூடிய உச்சநீதிமன்றம் குறுக்குச்சால் ஓட்டி காலத்தைக் கரியாக்கிக் கொண்டிருக்கிறது.

இனியும் பொறுத்திருக்க நியாயம் இல்லை. அறப்போராட்டத் துக்குத் தேதி கொடுத்துவிட்டார் தமிழர் தலைவர்.

ஆகஸ்டு முதல் தேதி போர்! போர்!! போர்!!!

பல கட்டப் போராட்டங்களுக்குக் கறுஞ்சட்டைச் சிறுத்தைகளே தயாராவீர்! தயாராவீர்!! என்று சங்கநாதம் செய்துவிட்டார்.

இப்பொழுதே பட்டியல்கள் குவிய ஆரம்பித்துவிட்டன; இளைஞர்கள் இரத்தக் கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளனர் (பகுத்தறிவுச் சிங்கங்களே, இந்த முறை தேவையில்லை என்று ராஜபாளையம் மாநாட்டில் நமது தலைவர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார்).

மதுரையை நோக்கி தென்மாவட்டங்களிலிருந்து இரு பிரச்சாரப் படைகள் ஜூலை முதல் வாரத்தில் புறப்பட உள்ளன. நிறைவு விழாவில் (ஜூலை 8) தமிழர் தலைவர் மதுரை மாநகரில் பங்கேற்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாக இன இழிவு ஒழிப்புப் போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?

தமிழன் கட்டிய கோவில்களில் தமிழுக்கு ஏன் இடமில்லை? தமிழர்கள் ஏன் அர்ச்சகராக முடியவில்லை?

தந்தை பெரியார் இந்தக் குரலை எப்பொழுது முதல் கொடுத்து வருகிறார்? அதன் வரலாறு என்ன?

இந்த இலட்சியத்தை ஈடேற்ற நாம் கடந்து வந்த பாதைகள் யாவை?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டங்கள் இயற்றப்பட்டது - உச்சநீதிமன்றத்திற்குப் பார்ப்பனர்கள் படையெடுப்பு - உச்சீநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைகள் - இன்னோரன்ன அடுக்கடுக்கான ஆதாரபூர்வமான தகவல்கள் அடங்கிய கையடக்க ஆவணமாக சிறு கையேடு தயாரிக்கப்பட்டு வெளிவந்துவிட்டது.

32 பக்கங்களைக் கொண்ட இந்தக் கையேட்டின் நன்கொடை ரூபாய் அய்ந்தே, அய்ந்துதான்.

ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இந்த நூல் இருக்கவேண்டும் - அதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்களே, இளைஞரணி, மாணவரணித் தோழர்களே, தொழிலாளரணி, மகளிரணி செல்வங்களே, பகுத்தறிவாளர் கழக அன்பர்களே, வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை இந்த வெளியீட்டைக் கொண்டு சேர்ப்பீர்! சேர்ப்பீர்!!

காரணாக் காரியங்களை எடுத்துக் கூறி களத்தில் இறங்கும் பண்பாட்டைக் கொண்டது கறுஞ்சட்டைப் பாசறை.

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போரில் இந்த வெளியீடு முதற்கட்டப் பாய்ச்சல்.

ஒவ்வொரு கழகத் தோழரின் கைப்பையிலும் குறைந்தபட்சம் 25 நூல்களாவது தயாராக இருக்கவேண்டும். யார் யாரை எல்லாம் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் கை இந்த வெளியீட்டைத் தாங்கி நீளவேண்டும்.

இந்த முதற்கட்டப் பணியை முடித்தால்தான் வெற்றிச் சங்கை ஊதும் வாய்ப்பு விரைவில் கிட்டும்!

புறப்படுக! புறப்படுக!! புறப்படுக!!! பூம் பூம் பூம்...!

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

பார்ப்பனார் பற்றி
காந்தியார்

பிராமணர்கள் தங்களை உயர் வாகக் கருதும் தற்பெருமை காரணமாக, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேற்றுமை கொடூரமானது
- காந்தியார் (ஆதாரம்: இந்து ஏடு, 23.8.1920)

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்...

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன் வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும். இந்தியாவிலே கோடீசு வரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன?

ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயி ருக்கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியாவிலே மாஜிஸ்தி ரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடையவனாயிருக்கிறான்.

- டாக்டர் அம்பேத்கர்

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூற்று

மதாசாரியார்கள், குருக்கள் இறைவன் புதல்வர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள் அவர்களில் பலர் தொழில்செய்வதில்லை; கைத் தொழில் செய்ய வில்லை. பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காகப் பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள் மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களைப் படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள்.

- ராபர்ட் இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

இங்கர்சால் கூற்று

மதாசாரியார்கள், குருக்கள் இறைவன் புதல்வர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், முனிவர்கள் இவர்கள் எல்லாம் உலகத்திற்கு ஒரு சிறிதும் பயன்படாதவர்கள் அவர்களில் பலர் தொழில்செய்வதில்லை; கைத் தொழில் செய்ய வில்லை. பிறருடைய உழைப்பால் அவர்கள் வயிறு வளர்த்து வந்தார்கள். பிறர் அவர்களுக்காகப் பாடுபட்டால், அவர்கள் பிறரைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள் மக்களுக்கு இதோபதேசம் செய்யவே கடவுள் தங்களைப் படைத்ததாக அவர்கள் சொல்லிக் கொள்வார்கள் இவர்களே இழிவானவர்கள், துன்பத்தை உண்டாக்கக் கூடியவர்கள், அயோக்கியர்கள்.

- ராபர்ட் இங்கர்சால்

தமிழ் ஓவியா said...

மனித குலத்துக்கு அடிமைக் கயிறு!

கடவுள் கருத்து எப்பொழுதும் சமுதாய உணர்வுகளை உறங்க வைத்திருக்கிறது; மழுங்கடித்திருக்கிறது. உயிருள்ளவற்றிற்குப் பதிலாக அந்த இடத்தில் இறந்ததை வைக்கின்றது அது எப்பொழுதும் அடிமைத் தனத்தின் கருத்தாகவே - மிகவும் படுமோசமான அடிமைத் தனத்தின் கருத்தாகவே இருந்திருக்கின்றது. கடவுள் கருத்து எந்தக் காலத்திலும் தனி நபரைச் சமுதாயத்துடன் இணைத்ததில்லை; அது எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைத்தான் ஒடுக்கு பவர்களின் தெய்வத் தன்மைக் கற்பனையில் - கடவுள் நம்பிக்கை என்னும் கயிற்றால் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டி ருக்கின்றது. மதம் என்னும் நுகத்தடி மனித குலத்தை அழுத்திக் கொண்டிருப்பது; சமுதாயத்துக்குள்ளேயே உள்ள பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு - அதன் விளைவுதான் என்பதை மறப்பது குறுகிய பூர்ஷவா புத்தியாகும்.

- லெனின்

தமிழ் ஓவியா said...

வராத தேவன்

எந்த நிலையிலும் நான்
உன்னுடன் இருக்கிறேன்
கவலைப்படாதே!
- என்றது தேவ வசனம்!
நிலநடுக்கம் வந்தபோது
எல்லோரும் வெளியில்
ஓடித்தப்பிக்க
உள்ளேயே இருந்த அவன் மட்டும் இடிபாட்டில் சிக்கி
நொறுங்கிப் போனான்! வசனம் பேசிய
தேவன் வரவேயில்லை!

காழி - கு.நா.இராமண்ணா, சென்னை

தமிழ் ஓவியா said...




கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலா சாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திர போஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ்நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையைப் பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட் டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடுகளில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது ரூ.12 கோடி ரூபாய் களாகும்.

ரிபப்ளிக் நாடான சைனாவில் புராடஸ் டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக் கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மெஷினரிகள் தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினிகளோ, சில ஆண்டுகளுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள், இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறை வாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:- ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசுநாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ரிசர்வ் ஆக்க வேண்டும்.

இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத்தின் பேரால் செலவு செய்யும் கிறிஸ்து மதமாகட்டும், அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933, குடிஅரசு

தமிழ் ஓவியா said...


நீதித்துறையில் இடஒதுக்கீடு



வரும் 19ஆம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்க உள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் திரு. பி.சதாசிவம் அவர்கள், ஆங்கில ஏடு ஒன்றுக்கு அளித்த பேட்டி யில், ஓர் அருமையான கருத்தினை வெளியிட் டுள்ளார்.

உயர்நீதிமன்றங்கள், மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவி நியமனத்தில், இடஒதுக்கீடு அவசியம் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மற்ற எந்த மாநில நீதிபதிகளை விடவும், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் நீதிபதிகளுக்குச் சமூக நீதி என்றால் என்ன? அதன் அவசியம் என்ன? என்பது தெளிவாகவே புரிந்திருக்கும்; காரணம் - தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும்தான்.

இந்தக் கருத்து ஒன்றும் புதிய ஒன்றாகவும் கருதப்பட முடியாது. திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் பொதுக் குழுக்களிலும், மாநாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுக் கொண்டேதான் வருகிறது.

மத்திய சட்ட அமைச்சராகவிருந்த சங்கரானந்து அவர்கள் சென்னை வந்தபோது அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேரில் சந்தித்து, நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுத்து மூலமாக கோரிக்கையினை அளித்தார் (விடுதலை 22.9.1988) என்பது, இந்த இடத்தில் சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, 37 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு, பிஜேபியைச் சேர்ந்த கரிய முண்டா தலைவராக வந்தார். அவர் வெளியிட்ட கருத்தும், தகவலும் மிக முக்கியமானவை.

இந்தியாவில் 481 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கின்றனர். அதில் 15 தாழ்த்தப்பட்டவர்களும், 5 பழங்குடியினர் மட்டுமே உள்ளனர். உச்சநீதிமன்றத் தில் தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியினர் ஒருவர்கூட நீதிபதியாக இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் முன் னேற்றம் அடைவதை, வேண்டுமென்றே திட்டமிட்டுக் கெடுக்கும் முயற்சியே இது. எங்கோ ஓர் இடத்தில் பாகுபாடு நிறைந்த மனோ நிலை, நிச்சயமாக நிலவுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களில் திறமை படைத்த நீதிபதி ஒருவர்கூட இல்லாமற் போய் விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அலுவலர்களுள் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளபோது, நீதித்துறையில் மட்டும் ஏன் இல்லை? மற்றவர்கள் எல்லோரும் கந்தையாக உள்ளபோது, சில நீதிபதிகள் மட்டும் அளவுக்கு அதிகமான அறிவாளிகளாக உள்ளனர் என்பதையும் என்னால் நம்ப இயலவில்லை என்றார் நாடாளு மன்ற நிலைக் குழுவின் தலைவர் கரியமுண்டா எம்.பி.
(தி.வீக் 13.8.2000).

இந்தக் கேள்விக்கு இதுவரை நியாயமான பதில் உண்டா? 1950ஆம் ஆண்டுக்கும் 1977 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடஒதுக்கீடு தொடர்பாக விசாரித்த நீதிபதிகள் 50 பேர் என்றால், இதில் பார்ப்பனர்கள் மட்டும் 48 பேர் என்று தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்த, பேராசிரியர் முனைவர் மு. நாகநாதன் அவர்கள் குறிப்பிட்டது - இந்த இடத்தில் நினைவு கூரத் தக்கதாகும்.

நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தால் சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகள் அளிக்கப்பட்டு இருக்குமா? என்பது, சிந்தனைக்கு விருந்தான அரிய வினாவாகும்.

மண்டல் குழு தொடர்பாக இந்திரா - சகானி வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் திரு எஸ். இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தானே சமூகநீதிக்கு இணக்கமான தீர்ப்பை - மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு எழுதினார்.
சென்னை மாநிலத்தில் 1928 முதல் செயல்பாட்டில் இருந்த இடஒதுக்கீட்டைச் செல்லாது என்று கூறியது சென்னை உயர்நீதிமன்றம் என்றால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூவரில் இருவர் பார்ப்பனர்கள் என்பதுதான் முக்கிய காரணம்.

இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு சீர் தூக்கிப் பார்த்தால்தான் உச்சநீதிமன்ற நீதிபதி பி. சதாசிவம் (தமிழ்நாட்டுக்காரர்) கூறிய கருத்தின் அருமையும், நியாயமும் புரியும்.

தமிழ் ஓவியா said...


முடிந்த பாடில்லை...


மேனாட்டார் புதிது புதிதான விஞ்ஞான ரகசியங்களையும், இயந்தி ரங்களையும் கண்டுபிடிப்பதில் ஊக்கங் காட்டி வருகின்றனர். நம் நாட்டிலே புல்லிலும், பூண்டிலும் கடவுளைத் தேடி அவற்றின்பால் பக்தி செலுத்தும் வேலையும் மோட்ச வழி ஆராய்வதும் இன்னும் முடிந்தபாடில்லை.
(விடுதலை, 7.8.1950)

தமிழ் ஓவியா said...


வாழ்வின் இரு முக்கிய கண்காணிப்பாளர்கள்!


வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வாக அமைய வேண்டும் என் றால் அதற்கு உணவும், தூக்கமும் மிகப் பெரிய தேவைகள் அல்லவா?

இந்த இரண்டும் நம் உடல் நலத்தின் மிகப் பெரிய கண்காணிப்புகள் ஆகும்.

உடம்பார் அழியின்

உயிரார் அழியும் நிலை ஏற்படும்.

சரியான உணவோ, போதுமான தூக்கமோ இன்றி நம் வாழ்க்கை அமைந்தால் அதைவிட கொடுந் தண்டனை நமக்கு வேறு இருக்கவே முடியாது.

உணவுகூட, நல்ல நலவாழ்வுக்கு உகந்த, உதவிடும் உணவாக அமை வதும், அல்லது நாம் அமைத்துக் கொள்வதும் மிக கவனம் செலுத்தப் பட வேண்டிய அன்றாடக் கடமை களில் ஒன்று. ஏன் முக்கியமானதும் கூட!

இன்றைய இருபால் இளைஞர்கள் உணவை, வெறும் நாக்கு சுவைக் காகவே பல நூறு ரூபாய்கள் செலவழித்து, வேக உணவுகள் (Fast Foods) என்ற பல அமெரிக்க, மற்றும் வெளிநாட்டு உணவுகளில், இத்தாலியிலிருந்து உலக நாடு களுக்கு அனுப்பப்பட்ட பீட்சா, போன்றவைகளில் மோகம் கொண்டு, பர்கர் (Burger) களை வாங்கி தின்று கொழுப்பை உடலில் ஏற்றிக் கொண்டு, காற்றடைத்த பலூன்களைப் போல ஆகி விடுகிறார்கள். இப்போது அது இன்ப மாகக் கூடத் தோன்றலாம்! ஆனால் போகப் போக அது உடல் நலத்திற்கு எவ்வளவு கேடு செய்யக் கூடிய ஆபத்து என்பது புரியும்.

இதற்குமேல் (Coke) கோக், பெப்சி, செவன் அப் போன்ற இனிப்பு சுவைநீர் பானங்களை - தூய நீர் அருந்தாமல் குடித்து, பணத்தையும், உடல் நலத்தையும் இழக்க வேண்டியவர்களாகிறார்கள்!

முன்பெல்லாம் 50 வயதுக்குமேல் தான் சர்க்கரை நோய் - டயாபெட்டிஸ் (Diabetes)! இப்போதோ 30 வயதுள்ள வாலிபர்களுக்கே சோதனை தேவைப்படும் அளவு நாட்டில் இளைஞர் கூட்டம், நல்ல உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிட மறுக்கின்றனர்.

பல வீடுகளில் - பணக்காரர்கள்கூட அல்லர்; நடுத்தர வர்க்கத்தினர்தான் - அங்கே மாணவர்கள் - அடம் பிடித்து பெற்றோர்களிடம் காசை வாங்கிக் கொண்டு இப்படி வேக உணவு என்ற முறையில் விலை இல்லாக் கொழுப்பை, உடலில் சேர்க்கின்றனர்!

50 வயதுக்குமேல் உள்ள எவரும் நாக்குக்கு அடிமையாகாமல், நலக்கண்ணோட்டத்திற்கு உணவுகளையே மருத் துவ ஆலோசனைப்படி கைக்கொள்ள திடசித்தம் உடையவர்களாக வேண்டும்.

வயிறு 50 வயதுக்குமுன் நாம் என்ன சொன்னாலும், எதைத் தின்றாலும் செரிமானம் செய்து, சொன்னதைக் கேட்கும்.

ஆனால் 50-க்குப் பின், வயிறு என்ன சொல்கிறதோ, அதைக் கட்டளையாகக் கொண்டு நாம் வாழ்ந்தால்தான் நமக்கும் தொல்லை இருக்காது. மருத்துவச் செலவும் குறையும், நம்முடன் இருக்கும் குடும்பத்தவர்களுக்கும் நம்மால் தொல் லையோ தொந்தரவோ இருக்காது!

நாம் பிறருக்குச் சுகமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக் கூடாது!

தூக்கமும்கூட இதுபோல முக்கிய மாக 8 மணி நேரத் தூக்கம் என்று கூறுகிறார்கள்.

பலருக்கு - அது வாய்ப்பாக அமையா விட்டாலும்கூட குறைந்தது 7 மணி நேரம் இருந்தால் நிம்மதி; நல வாழ்வுக்குக் குந்தகம் ஏற்படாது என்பது பிரபல தூக்கவியல் ஆய்வாளர்களின் கருத் தாகும்!

மித மிஞ்சிய உணவு எப்படி அஜீர ணத்தில் கொண்டு போய் நம்மைத் தள்ளுகிறதோ அது போலவே, அதிக தூக்கம் - அளவு மீறிய தூங்கு மூஞ்சித் தனம் நம் நல வாழ்வுக்குக் கேடாய் முடிந்து நம் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக அமைந்துவிடும்!

மனம் அமைதியாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான், இந்த இரண்டு உடற்காவலர்களும் (உணவும் தூக்கமும்) நமக்கு நல்ல வண்ணம் ஒத்துழைப்பார்கள்.

அமைதியற்ற நிலையிலோ, ஆத்திரத்தின் இடையிலோ உணவை உண்டால் அது செரிமானமாகாது;

வயிற்றுப் பொருமல், முதல் பல் வகை அஜீரணக் கோளாறுகளில் கொண்டு போய் நிறுத்தவே செய்யும்!

இந்த இரண்டுக்கும் உள்ள புரிந்துணர்வு (Under Standing) மிகவும் வியக்கத்தக்கதாக இல்லையா?

இரவு உணவு மிகக் குறைத்தலும் கூட, தூக்கம் பாதியிலேயே பாதிப் பதை நானே பல முறை அனுபவித் துள்ளேன்.

எதையும் அளவுக்குள் வைத்து, குறையாமலும் கூடாமலும், பார்த்து வாழ்ந்தால் அதைவிட கொள்ளை இன்ப வாழ்வுதான் வேறு ஏது?

இளமையிற் கல்லாக இருக்கும் உடல் வேகமாக முதுமையில் நொறுங்கி மண்ணாகாமல் தடுக்க கட்டுப்பாடு இவை இரண்டிலும் தேவை! தேவை!!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


தாயின் குரலைக் கேட்கும் சிசு


தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிசு தாயின் குரலைக் கேட்கும் என்றால் யாரும் நம்ப மாட்டார் கள். ஆனாலும் இது குறித்த ஆய்வில் சிசு தாயின் குரலைக் கேட்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஜான் ஹாப்பின்ஸ் என்ற பல்கலைக் கழகம் உள்ளது. அந்தப் பல்கலைக் கழகம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டது. 36 வார கால கர்ப்பிணிப் பெண்கள் வரவழைக்கப்பட்டு புத்தகம் ஒன்றைக் கொடுத்து 2 நிமிட நேரம் படிக்க வைக்கப்பட்டனர். அவர்கள் படித்தபோது சிசு தன் அசைவை நிறுத்திக் கொண்டு இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு தாயின் குரலைக் கேட்பதைக் கண்டறிந்தனர். எப்படி? நம் நாட்டிலும் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள். மகரஜோதி தோன்றுகிறது வானத்தில் என்று கூறி, சூடத்தைக் கொளுத்தி பானையில் காட்டி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


இரண்டு மருத்துவர்கள்; இரண்டு குறிக்கோள்கள்!



ஜூலை ஒன்று இந்தியாவில் மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வேறுபட்ட இருதுறைகளில் சிறந்த சேவை செய்த இரு மருத்துவர்களைப் பற்றி இங்கே...

டாக்டர் க்ரா ஃபர்டு எம்லாங் 1815இல் அமெரிக்காவில் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்றார். அறுவை சிசிக்சை மருத்துவராகப்பணி புரிந்து வந்தார். அறுவை சிகிச்சையின் போது நோயாளிகள் வலியினால் துடிப்பதைக் கண்டு ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினார். வலியில்லாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று நினைத்தார்.

பல ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்த எத்தனாலும், சல்ஃயூரிக் அமிலமும் இணைந்த கலவை, கோழிக்குஞ்சுகளுக்கு தூக்கம் வருவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு விட்ராயில் இனிப்பு எண்ணை (Sweet oil vitroie) என்று பெயர். ஆனால் அதை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது பற்றி யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

அந்த எண்ணெயை மருத்துவர் லாங் டெய்தில் எய்தர் (Diethil either) ஆக மாற்றி, 1842-ஆம் ஆண்டு மார்ச் 30-இல் ஒரு நோயாளிக்குச் செலுத்தி கழுத்திலிருந்து ஒரு கட்டியை நீக்கினார். அது தான் முதல் வலியில்லாத அறுவைச் சிகிச்சை அப்போது அவருக்கு வயது 27 தான். அந்த சிகிச்சை மூலம், அவர் நோயாளியின் வலியையும் மருத்துவரின் கவலையையும், ஒரு மந்திரம் போல போக்கினார். ஆனால் அவர் பாராட்டுக்களுக்காக காத்திருக்கவில்லை.

நான்காண்டுகளுக்குப் பிறகு டி.ஜி.மார்ட்டன் (T.G.Morton) என்ற மருத்துவர் எத்தர் வலி நீக்கியின் பலனை பொதுமக்களுக்கு செய்து காட்டினார். அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களும் நவீனயுகத்தின வலி நீக்கியை பரவச்செய்தவர் என்றும் பெயர் பெற்றார். டாக்டர்களால், ஒரு பிரசவ சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போதே 1878-இல் மரணமடைந்தார்.

1991-இல், 122 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ஜார்ஜ் புஷ்சும், அமெரிக்க செனட் சபையும் கூடி, டாக்டர்லாங்கின் சேவைகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றினர். அமெரிக்காவில் மார்ச் 30-ஆம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கும் திறமையான மருத்துவரை நினைவு கூரவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நமது நாட்டில் பி.சி.ராய் பாட்னா பங்கிப்பூரில் ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். 14 வயதில் தாயை இழந்தார். அய்ந்து குழந்தைகளின் இளையவரான அவர் மருத்துவராக விரும்பினார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். எம்.பி.பி.எஸ் படிப்பிற்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ந்து படிக்க விரும்பினார். 30-ஆவது முயற்சிக்கு பிறகே வெற்றி பெற்றார். அவர் வெற்றிகரமாக MRCP, FRCS பட்டங்களையும் இரண்டாண்டுகளுக்குள் பெற்று, கல்வி பற்றிய பேராசிரியர்களின் அய்யங்கள் தவறு என நிரூபித்தார். பொது மருத்துவத்திலும், அறுவைத்துறையிலும் சிறந்து நின்றார்.

தொடர்ந்து வியாதிகளுக்கு அவரது எளிய மருந்துகளும், வியாதிகளைப் பற்றிய அவரது சரியான ஆற்றல் விரைவில் கண்டு பிடிக்கக் கூடிய திறனும் அவருக்குப் பெரும் புகழைக் கொண்டு வந்தன. ஆனால் அவர் சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். ஒரு தனி மனிதனை நலம் பெறச் செய்வதைக் காட்டிலும் பரந்த தேசத்தை நலம் பெறச் செய்தல் நன்று என்று அவர் எண்ணினார். அரசியலில் சேரும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். காங்கிரஸ் இயக்கத்தில் பல பதவிகளை வகித்தார். 1948-இல் மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியாகவும் வாய்ப்புப் பெற்றார். நல்ல நிருவாகியாக, தனது பதவிக் குரிய கடமைகளைச் செய்து சிறந்து விளங்கினார்.

அவர் பிறந்த நாளிலேயே இறந்தது ஒரு விந்தை. இந்தியாவில் அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. டாக்டர் லாங் மனிதன் வலியிலிருந்து விடுதலை பெற மரத்துப் போகச் செய்தார். டாக்டர் பி.சிராயோ, மரத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தவர்களை விழிப்புறச் செய்தார்!

தமிழ் ஓவியா said...


சோதிடத்தின் அய்ந்துமுகப் பார்வை


- பேரா.ஏ.எஸ்.நடராஜ்

தனக்கு நேரக்கூடிய துன்பங்கள் அனைத்திற்கும் பிறர் காரணம் என்று மனிதன் கருதுகிறான். கடவுளே காரணம் என்று பல நேரங்களில் கதறுகிறான், பதற்றமடைகிறான்.

இப்படிப்பட்டவர்களுக்கு அறிவு, ஆறுதல் அளிப்பதில்லை. குறுக்கு வழியில் இன்பத்தைத் தேடும் முயற்சியும், பிறரை வஞ்சித்து வாழ்ந்திடவும் கண்டுபிடிக்கப் பெற்ற கருவிதான் சோதிடம்.

வாதி புளுகன், மாந்திரீகன் வீண் புளுகன், சோதிடன் என்பவனோ சுத்தப்புளுகன் என்பது நம் சான்றோர் வாக்கு.

சோதிடம் சொல்பவனுக்கும், கேட்பவனுக்கும் இடையே சொல்லொணாத் துன்பம் வருவதில்லையா? சோதிடத்தை சிலர் பிழைப்புக்கும் பெருமைக்கும் சொல்லிக் கொள்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை என்னும் ஆணிவேரின் ஒரு கிளையாகவே மனித மனத்தில் இது பதிந்துள்ளது.

சோதிடம் சுத்தப்பொய்; அது உண்மையென மெய்ப்பிப்பார்க்கு ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கும் சிந்தனையாளர் பேராசியர் ஏ.எஸ்.நடராஜ் என்பவரால் கன்னடமொழியில் (சோதஷத பஞ்சமுக தர்ஷன்) எழுதப் பெற்றதை, தமிழாக்கம் செய்துள்ளார். பகுத்தறிவுப் பாவலர் வீ.இரத்தினம்.

இது ஓர் அறக்கட்டளை சார்பான வெளியீடு என்பதால் பலரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற நோக்கில் பொதுநலம் கருதி, 107 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை உருபா பத்து (ரூ. 10) மட்டுமே!

நூல் கிடைக்குமிடம்:

V. Rathinam 1157, 11th Main Road, Hampi Nagar,
Bangalore-560014. Cell: 9449880117

தமிழ் ஓவியா said...


புதிய ஆகஸ்ட் புரட்சி அறிவித்து விட்டார் நம் தமிழர் தலைவர்!


ஆகஸ்ட் ஒன்றில் புது புரட்சி!
சாதி ஒழிப்பின் அடித்தளமாய்,
தீண்டாமை ஒழிப்பின் அடிப்படையாய்,
அறிவிக்கப்பட்ட அரும் புரட்சி!
ஆகமம் பயின்ற அனைத்துச் சாதியினரும்,
அர்ச்சகராக போராடும் புரட்சி!

மனித வாழ்வின் முதல் துவக்கம்,
தன்னலமற்ற தாயின் கருவறை!
மனித வாழ்வின் மாபெரும் இழிவு!
இன ஒதுக்கல் பேணும் இந்துக் கருவறை!

வெந்து நொந்து வியர்வை சிந்தி - கோயில் கட்டிடம் கட்டிய சூத்திரத்தொழிலாளியா?
எட்டி நில்! கருவறை வெளியே! உளிப்பிடித்த கைத்திறத்தாலும்
உள்ளத்தில் ஊறிடும் கலைதிறத்தாலும் -
கடவுள் உருவம் வடித்த சூத்திர சிற்பியே !

ஒதுங்கி நில் ! கருவறை வெளியே!
ஆயிரம் லட்சமென நன்கொடை நல்கிய உபய சூத்திரர்களே ! கருவறை
உள்ளே நுழைய அனுமதி பெற்றவை, உங்கள் கரன்சிகள் மட்டுமே! என மனுவின் குரலாய் ஒலித்திடும்

கருவறை சட்டங்கள்! வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
வெளியே நிற்பது விபச்சாரி மக்கள்!
என்றே ஒலித்திடும் இழிவோசை-பார்ப்பன
அர்ச்சகன் அடித்திடும் மணிஓசை!

தேவன் கோவில் மணியோசையில் கேட்டிடாத பேத ஒலி!
புத்தம்! சரணம்! கச்சாமியில் இல்லையே இந்த வர்ண மொழி!
அல்லாஹு அக்பர் வாசலிலே அனைவரும் நுழைய தடையில்லை!
இந்துக்கோயில் கருவறையில் மட்டும்
சூத்திரனை பழிக்கும் மூத்திரச்சட்டம்!

வெள்ளையனே! வெளியேறு! என்றது பழைய ஆகஸ்ட் புரட்சி!
சூத்திரனை உள்ளே விடு என முழங்கிடும்
புதிய ஆகஸ்ட் புரட்சி!

ஆத்திகனானாலும் நாத்திகனானாலும்
தன்மானம் என்பது பொது உணர்வென
தரணிக்கு காட்டிட தமிழர் தலைவர் அறிவித்து விட்டார் அரும் புரட்சி!
ஆகஸ்ட் புதிய பெரும் புரட்சி!

பொங்கும் புனலென, பூக்கும் அனலென
திரண்டிட வேண்டும் திராவிடரே !
தமிழர் தலைவர் தடம் பதித்தே!

- தகடூர் தமிழ்ச்செல்வி -