Search This Blog

15.4.11

தந்தை பெரியாரும், தவத்திரு குன்றக்குடிஅடிகளாரும்


சுயமரியாதைச் சுடரொளி கரூர் வழக்கறிஞர் மானமிகு வீர.கே. சின்னப் பன் இலக்குமி ஆகியோரின் திருமணத்தில் (27.12.1960) கலந்து கொண்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் நம் நாட்டுக் கோயில்கள் பற்றி அவருக்கே உரித் தான பாங்கில் படம் பிடித்துக் காட்டினார்.

இன்று கோயிலுக்கும், ஹோட்டல்களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தல மாக ஆக்கி விட்டார்கள் காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று வரிசையாய் பலகையில் விலை போட்டு இருப்பது போல, கோயிலிலும் இறைவனை வழிபடுவதற்கும் இன்ன இன்ன ரேட் (விகிதம்) என்று ஆக்கி வைத்து விட்டார்கள் (விடுதலை - 6.12.1960 பக்கம் 3) என்று குறிப்பிட்டார் தவத்திரு குன் றக்குடி அடிகளார் அவர்கள்.

இதன்மூலம் கோவில் என்பது வழிபாட்டுக்குரிய இடம் என்பதைவிட, வியாபார நிறுவனம் ஆகிவிட் டதைச் சுட்டிக் காட்டுகிறார்.
கருஞ்சட்டைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கருத்தை காவி உடையில் சொன்னவர்தான் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

தந்தை பெரியாரும், தவத்திருஅடிகளாரும் ஒரு வரை ஒருவர் மதிக்கும் பாங்கு குறித்தும், தவத்திரு அடிகளார் உதிர்க்கும் கருத்துகள் வித்தியாசமாக ஒலிப்பது குறித்தும், தவத்திரு அடிகளார் அவர்களைக் கருப்புச் சட்டை சாமியார் என்று பொது மக்கள் வருணிக்கும் அளவுக்கு நிலைமை இருந்ததை, யார்தான் மறுக்க முடியும்?

அதனால்தான் சென்னை பெரியார் திடலில் விடுதலைப் பணிமனையை திறந்து வைப்பதற்குத் தவத் திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை அழைத்திருந்தார் தந்தை பெரியார் அவர்கள். அந்த விழாவில் உரையாற்றிய அடிகளார் குறள்போல குறுகத் தரித்து பொன்னால் வேய்ந்த சொல் மணிகளை உதிர்த்தார்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல் விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட் டிலும் இருக்க வேண்டும் (விடுதலை 2.11.1965) என்றாரே - என்னே இனநலம் - தமிழ்நலம்!

தந்தை பெரியார் மறைந்த நிலையில், பெரியார் திடலுக்கு வரும்பொழுதெல்லாம் அய்யா அருங்காட்சியகத்தில் உள்ள அவரது படுக்கையின் அருகே நிற்கும் பொழுதெல்லாம் அடிகளார் தம் கண்கள் பொல பொலவென நீர்மணிகளைக் கொட்டிட - அந்த நெகிழ்ச்சி மிகு நிகழ்ச்சிகளை என் சொல்வது!

அடிகளாரின் நெஞ்சப் பேழையில் அய்யா அவர்களுக்கு அளித்திருந்த அந்த விலை மதிக்க முடியாத மதிப்பீட்டைத்தான் அது புலப்படுத்தும்.

1962 சனவரி 6,7 நாள் களில் சென்னைப் பெரியார் திடலில் இருநாள் மாநாடு களைக் கூட்டினார் தந்தை பெரியார். இரண்டாம் நாள் வாக்காளர் மாநாடு. அதன் தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள். மாநாட்டுக்கு மகாசந்நி தானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுந்தருளயிருக் கிறார் என்று தந்தைபெரியார் அறிவித்தார் என்றால், அடிகளாரைத் தந்தைபெரியார் மதித்த விதம், மாற்றுக் கருத்துள்ளவர்களை அவர் கள் முறையில் எப்படி அழைக்க வேண்டும் என்ற உயரிய பண்பாட்டையும் இதன் மூலம் தந்தை பெரியார் போதனை செய்துள்ளார். அடிகளாரைப்பற்றி எழுதுவதற்குக் காரணம் இன்று அடிகளாரின் நினைவு நாள்! (1995)

----------- மயிலாடன் அவர்கள் 15-4-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: