Search This Blog

12.1.11

பெரியாரின் சிக்கனம் சேமிப்புக்கு இலக்கணம்


நாங்கள் கண்ட பெரியார்


சிக்கனம் என்பதற்கு
எதிர்ச்சொல்
ஊதாரித்தனம்.
நூறு ரூபாய் சம்பாதித்து
தொண்ணூறு செலவழித்து
பத்தைச் சேமிப்பது
சிக்கனம்.
நூறையும் செலவழித்து விட்டு
பத்து ரூபாய் கடன் வாங்குவது
ஊதாரித்தனம்.

இன்னும் விளக்கலாம்
வாளி நீரிலிருந்து
குவளையில் மொண்டு
கால் கழுவுவது சிக்கனம்
வாளி நீரை
அப்படியே காலில் கொட்டுவது
ஊதாரித்தனம்.
ஊதாரிகள் ஒரு போதும்
உயர்வதில்லை.

பெரியாரின் சிக்கனம்
சேமிப்புக்கு இலக்கணம்.
துளித்துளியாக
அவர் சேர்த்த செல்வம்
குளத்து நீரானது - அந்தக்
குளத்து நீரை
ஏரியாக்கிய பெருமை
வீரமணியைச் சாரும்.

சிந்தனைப் பெரியாருக்குள்
சிக்கனமும் அடக்கம்.
சிக்கனப் பெரியார்
காலத்தை மட்டும்
தாராளமாகச் செலவழிப்பார் - ஆம்
மாதத்திற்கு
முப்பது - முப்பத்தொன்று நாள்கள்
என்பது
போக்கிரித்தனம் - என்று
வைது விட்டு

மூன்று பத்து நாள்களையும்
தொடர் சுற்றுப் பயண முழக்கத்தில்
செலவிட்டு விட்டு
நேரமில்லை - என
ஏங்குவார்.

பெரியார்
ஒருநாள்
சிதம்பரத்தில்
கூட்டம் முடித்து விட்டுத்
தொடர் வண்டியில்
திண்டுக்கல் வழியாக
மதுரைக்குப் பயணமானார்.

சந்தனத்தேவன் - எனும்
பெரியார் தொண்டர்
அந்தக் காட்சியைச்
சித்திரச் சொற்களால்
இவ்வாறு சித்தரிக்கின்றார்.

சிதமபரத்தில் கூட்டம்
பேசி முடித்த பெரியார்
சென்னை செங்கோட்டை வண்டியில்
வருவதாகச் செய்தி.
எனக்கோ ரயில்வேயில்
பயணச்சீட்டு தரும் வேலை.
திண்டுக்கல் நிலையத்தில்
வண்டி நுழைய
அய்ந்தே நிமிடமுள்ளது.
என்னிடத்தில்
சக ஊழியரை அமர்த்தி விட்டு
அய்யா வரும் வண்டியை
எதிர்பார்த்து ஓடுகிறேன்.

அய்ந்த்ாறு கருஞ்சட்டைத் தோழர்கள்
கழகக் கொடி தாங்கி
பெரியார் வாழ்க
என முழக்கமிடுகின்றனர்.

வண்டி வந்து நின்றது.
பெருமூச்சு விட்டவாறு
ஒவ்வொரு பெட்டியாக
எட்டிப் பார்த்துக் கொண்டே ஓடுகிறேன்.
மூன்றாம் வகுப்புப்
பெட்டியொன்றில்
நான்கு பேர் உட்காரும் பலகையில் எட்டுப்பேர்
அவர்கள் மத்தியில்
அய்யா அமர்ந்திருப்பது கண்டு
கலங்கினேன்.
நான்கு தோழர்கள்
அவர் பக்கத்தில்
நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர்
புலவர் இமயவரம்பன்.
அவர் கையில் ஒரு வாளி.


அய்யாவுக்கு
கிட்னித் தொல்லை.
தன்னையும் மீறி ஒழுகும்
சிறுநீரைப் பிடிக்க
ஒரு வாளி.
அய்யாவின் இடுப்பைச்
சுற்றியிருந்த ரப்பர் குழாய்
வாளியில் தொங்கியது - அதைப்
பிடித்துக் கொண்டு நினறார் புலவர்

சின்னாளப்பட்டித் தோழர்
உரத்த குரலில்
பெரியாரிடம் சொல்கிறார்.
அய்யா
இந்த வண்டியிலேயே
பயணம் செய்து
மதுரையில் இறங்குறீங்க அங்கே
நாளை இரவுதான் கூட்டம்.
அதுவரை
உங்களுக்கு ஓய்வுதான்
நீங்க
பெரிய மனசு வைச்சு
இங்கே இறங்கினால்
மாலையில்
சின்னாளப்பட்டியில்
கழகக் கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்கிறோம்.
தமுக்கு அடித்தே
கொஞ்ச நேரத்தில்
கூட்டத்தைச் சேர்த்திடுவோம்.

காலையில்
இங்கிருந்தே
மதுரைக்குப் போக
டாக்சி ஏற்பாடு செய்கிறோம்
அதுவரை - அய்யா
உங்களுக்குத்
தங்கும் வசதி, உணவெல்லாம்
ஏற்பாடு செய்கிறோம்.
தாங்கள்
தலையசைத்தால் போதும்...

அந்தத் தோழர்
பேசி முடிக்கும் முன்பே
அய்யா தலையசைத்து விட்டார்.
எல்லோரும்
திண்டுக்கல்லில் இறங்கி விட்டனர்.
திண்டுக்கல்
ரெயில் நிலையம் அருகேதான்
நகராட்சிப் பயணிகள் விடுதியில்தான்
அய்யா தங்குகிறார் என்ற செய்தி
எனக்குத் தேனாய் இனிக்கிறது.
வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுகிறேன்.

தனிமையிலும் தனிமை
படுக்கையில் பெரியார் உட்கார்ந்துள்ளார்
துணைக்குப் புலவர்
அய்யாவை நோக்கிப்
பெரிய கும்பிடு போட்டேன்.
அய்யா யாரு ?
ஊர் உலகுக்கெல்லாம்
அய்யாவான அவருக்கு
நான் அய்யாவாம்.

அய்யா - நான்
கழக அனுதாபி
இரயில்வேயில் வேலை.

அப்படியா. நம்மவங்க
இரயில் உத்தியோகத்துக்கு வருவது
அபூர்வம்.
பார்த்துப் பிழையுங்க.
அது .. சரி
நாங்க
மதுரை வரைக்கும்
டிக்கெட் எடுத்திருக்கிறோம் - ஆனால்
திண்டுக்கல்லிலேயே இறங்கிவிட்டோம்
அந்தப்
பயணம் செய்யாத தூரத்துக்கு
காசு கிடைக்குமா ? வழியுண்டா ?

வழியிருக்குங்க அய்யா
பயணம் செய்யாத டிக்கெட்டை
திண்டுக்கல் ஸ்டேசன் மாஸ்டரிடம்
சரண்டர் செய்தால்
இரசீது - தருவார் - அதைத்
திருச்சி ரயில்வே ஆபிசுக்கு
அனுப்பினால்
பணம் வரும்.

வரட்டுமே ! கசக்கவா செய்யும்.

மொத்தம் பத்து ரூபாய் ரீபண்ட்
வரும் - அதுக்கு
நான்கு ரூபா
தபால் செலவு வரும்.

வரட்டுமே ஒரு பைசாவானாலும்
அதுவும காசுதானே.
அதுவும்
கட்சிக்கு வரவேண்டிய காசு
பொதுமக்கள் காசு.
புலவரே
அய்யாவோடு போய் ரசீது வாங்கி
இவரை வைத்தே
திருச்சிக்கு தபால் எழுதிடு.
போ ! போ !!

அய்யா தனியா இருப்பீங்களே
என்றார் புலவர்.

இம்மாம் பெரிய
கட்டிடம் இருக்கு
என்ன தனிமை ?
கிளம்பு, கிளம்பு

இப்படியெல்லாம் அய்யா
பைசா... பைசாவாகச்
சேர்த்ததுதான் - இன்று
மருத்துவமனையாக
பொறியியல் கல்லூரிகளாக
அரங்குகளாகத் திகழ்கின்றன - என்று
நினைத்துப் பார்க்கும்
எவருக்கும்
கண்கள் மட்டுமா கலங்கும் ?
அய்யோ... இதயமே...!

--------------நன்றி : அறிவுக்கொடி இதழ் - சூலை 2006 -உரைவீச்சு - எண்ணதாசன்

1 comments:

dunga maari said...

கண்கலங்கினேன். சிறியோரின் வாழ்வுக்காகவே வாழ்ந்தவர் பெரியார்.