Search This Blog

24.9.10

ஒரு பக்கம் பன்றி வராக அவதாரம்-இன்னொரு பக்கம் பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி

ஒரு பக்கம் பன்றியை வராக அவதாரம் என்று வணங்குகிறான்
இன்னொரு பக்கம் பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி போடுகிறான்
திருவல்லிக்கேணி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

ஒரு பக்கம் பன்றியை வராக அவதாரமாக வைத்து நம்மவர்கள் கும்பிடுகிறார்கள். இன்னொரு பக்கம் பன்றிக் காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

அறிவு ஆசான் பிறந்தநாள் பகுத்தறிவுப் பகலவன் நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய வளர்ச்சியை அவருடைய கொள்கை வளர்ச்சியை நாம் பார்க்கிறோம்.

உலகில் எத்தனையோ சமுதாயப் புரட்சியாளர்கள்

உலகத்தில் எத்தனையோ சமுதாய புரட்சியா ளர்கள் தோன்றியதுண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு சமுதாயப் புரட்சியாளர். உலக வரலாற்றிலேயே எத்தனையோ நாடுகளில் எத்தனையோ தலைவர்கள் வந்திருக் கிறார்கள்.

அய்.நா. மாமன்றம் (UNESCO) தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டி விருது வழங்கியது. அய்யாஅவர்கள் வாழ்ந்த காலத்திலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்தான் சென்னையிலே அவர்களுக்கு இந்த விருதை, அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த டாக்டர் திரிகுணசென் என்ற வங்காளப் பேராசிரியர் பொருளாதார நிபுணர் அவர்களுடைய தலைமையிலே சென்னை ராஜாஜி மன்றத்திலே அரசு நிகழ்ச்சியாக இல்லாமல் யுனெஸ்கோ மன்றம் என்ற தனிப்பட்ட அமைப்பின் சார்பாக வழங்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது அந்த நிகழ்ச்சியிலே வழங்கிய யுனெஸ்கோ விருதிலே, தென்கிழக்கு ஆசியா வினுடைய சாக்ரட்டீஸ் என்று அய்யா அவர்களைக் குறிப்பிடுகிறார்கள் (கைதட்டல்).

அதே போல நாம் அய்யா அவர்களைப் பற்றி முழக்கங்கள் கொடுக்கின்ற பொழுதுகூட, இங்கர்சாலோடு ஒப்பிடுகிறோம்; லெனினோடு ஒப்பிடுகிறோம். காரல் மார்க்சோடு ஒப்பிடுகிறோம்; இப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் புரட்சி யாளர்கள்.

பெரியார் மாறுபட்டவர்

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எப்படி அவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள் என்று சொன்னால் இத்தனை தலைவர்களும் ஒன்று அவர்கள் சிந்தித்துச் சொன்ன நேரத்திலே எதிர்ப்பை சந்திக்கவில்லை. எந்தத் தலைவரும்-அது சாக்ரட்டீஸ் காலம் தொட்டு காரல் மார்க்ஸ் காலம் வரையிலே, மிகப்பெரிய புரட்சியாளர்கள் காலம் வரையிலே சந்திக்காத ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் சந்தித்தார்.

மிகப்பெரிய எதிர்ப்பு. தந்தை பெரியார் அவர்களுக்கு அன்றாடம் எதிர்ப்புக்கிடையிலே வாழ்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்தவன் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

புகழிலே ஆசை இருக்கும்

நல்ல பெயர் எடுக்க வேண்டும்; புகழ்பெற வேண்டும்; பதவி, பணம், பட்டம் இவைகளைப் பற்றி எனக்குக்கவலை இல்லை என்று சொல்லுகின்ற மனிதருக்குக்கூட புகழிலே ஆசை இருக்கும். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், எனக்குப் புகழைப் பற்றியும் கவலை இல்லை. யார் இகழ்ந்தாலும் சரி; இகழ்வதும் சரி, புகழ்வதும் சரி எனக்கு ஒன்றுதான் என்று இரண்டையும் சம நிலையில் எடுத்துக்கொண்ட மிகப்பெரிய தத்துவஞானி அவர். உலகில் அவ்வளவு சுலபமாக இதுபோன்று இருக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருடைய ஒவ்வொரு பிறந்தநாள் விழாவும் எல்லா ஊர்களிலும் நடைபெறும். இந்த செப்.17முதல் அடுத்த செப். 16 வரை

செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கினால் அடுத்த செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலே அய்யா அவர்களுடைய பிறந்தநாள் விழாக்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும். இது வரலாறு. அப்படி நடைபெறும்பொழுது, பல கட்சி நண்பர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் எல்லோரும் வருவார்கள்.

அய்யா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும், நூறாண்டு காலம் வாழவேண்டும் என்றெல்லாம் பாராட்டினார்கள். தந்தை பெரியார் அவர்களால்தான் எங்கள் பிள்ளைகள் படித்தார்கள்; அறிவு பெற்றார்கள்; பகுத்தறிவு பெற்றார்கள்; மானம் பெற்றார்கள் என்றெல்லாம் நன்றி உணர்ச்சியைக் குவிக்கின்ற வகையிலே சொல்லுவார்கள்.

வெட்கமாக இருந்தது

அய்யா அவர்கள் இறுதியிலே பேசும்பொழுது சொல்லுவார்கள். நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தபொழுது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. வெட்கமாக இருந்தது.

எனக்கு எதிர்ப்பு, வசவு என்று சொன்னால் அதைக்கேட்பதற்கு எனக்குத் தயக்கம் கிடையாது. என்னை யாராவது பாராட்டுகிறார்கள். வாழ்த்துகிறார்கள் என்று சொன்னால், எனக்கு அதுதான் சங்கடமான விசயம்.

ஒரு மனிதன் பாராட்டைக் கேட்டுக் கொண்டிருப்பதைவிட பெரிய கொடுமை வேறு ஒன்றுமே கிடையாது. அய்யா அவர்கள் எவ்வளவு பெரிய தத்துவஞானி என்பதற்கு உதாரணம் இதுதான்.

அய்யா சொன்னார். நீங்கள் எல்லாம் வாழ்க! வாழ்க என்று சொல்லுவதற்காக நான் மகிழ்ச்சி அடைந்தால், என்னை ஒழிக என்று சொல்லு கிறவர்கள்தான்-வாழ்க என்று சொல்லுகிறவர்களைவிட ரொம்ப அதிகம்.

இரண்டும் எனக்கு ஒன்றுதான்

இதற்காக நான் மகிழ்ச்சி அடைந்தால், அதற்காக நான் எவ்வளவு வருத்தப்படவேண்டும். அதற்கும் நான் வருத்தப்பட்டதில்லை. இதற்கும் நான் மகிழ்ச்சி அடைந்ததில்லை. இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவு சிந்தனை என்பதிருக்கிறதே, அது எல்லையற்ற ஒரு தொண்டறம். அறிவைத் தாராளமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள். உண்மைகளைப் பார்க்கும்பொழுது அதனை நிர்வாணத் தன்மையிலே ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். எனவேதான் தந்தை பெரியார் அவர்களைப் பகுத்தறிவுப் பகலவன் என்று தெளிவாக எடுத்துச்சொன்னார்கள்.

அமெரிக்காவில் அண்ணா

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவருக்கு அமெரிக்க மருத்துவ மனையிலே சிகிச்சை செய்ய ஏற்பாடு. சிகிச்சையிலிருந்து வெளியேறக்கூடிய ஒரு பருவத்திலே அவர் ஓய்வோடு இருக்கின்ற காலகட்டம். அந்த காலகட்டத்திலே நாங்கள் விடுதலை மலரை அண்ணா அவர்களுக்கு அனுப்புகின்றோம். அய்யாஅவர்களுடைய செய்திகள் ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். அந்த மலரைப் படித்து விட்டு அண்ணா உடனே பதில் எழுதினார். அய்யா அவர்களுக்கு அண்ணா எழுதினார்

அய்யாஅவர்களுக்கு எழுதினார். அய்யா நீங்கள் ஏதோ கொஞ்சம் சலிப்படைந்த மாதிரி அந்த குறிப்புகளில் நான் பார்த்தேன். தயவு செய்து நீங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சலிப்போ, விரக்தியோ அடைய வேண்டிய அவசியமில்லை. காரணம் சொல்லுகின்றார்- தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சொல்லுகின்றார். பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் அண்ணா. அவருடைய ஆட்சியையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என்று சட்ட மன்றத்திலே பிரகடனப்படுத்தினார்களே இதுவே ஒரு வரலாறு. அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நிகழ்ந்த சம்பவம் இது.

உலக வரலாற்றிலே எந்தப் புரட்சியாளருக்கும்....

உலக வரலாற்றிலே எந்தவொரு புரட்சி யாளருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பு. இந்தச் செய்தியைக்கேட்டு மருத்துவமனையிலே இருந்த அண்ணா எனக்கு வலி குறைந்தது என்று சொன்னார்.

இதை தந்தை பெரியார் ஒப்புக்கொண்டார். இதுதான் சிறப்பானது. எனவே, எந்த ஒரு புரட்சியாளரும் அவருடைய வாழ்நாளிலே தான் பெற்ற தனது வெற்றிக்கனியை சுவைத்ததில்லை. நீங்கள் மட்டும்தான் வரலாற்றிலேஅதற்கு விதி விலக்கு என்று பெரியார் அவர்களுக்கு அண்ணா எழுதினார். தந்தைபெரியார் அவர்களுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு, அலை அலையாக. எதிர்நீச்சல் தொடர்ச்சியாக. அதே நேரத்தில் வெற்றிகள் இன்னொரு பக்கம்.

ஆனால், வெற்றிகள் குவிந்துவிட்டதே என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததில்லை. விரக்தி அடையவில்லை. ஏனென்றால், இது காலம் காலமாக இருக்கின்ற மூடநம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக இருக்கின்ற இழிநிலை. சூத்திர, பஞ்சம என்ற நிலை. அவர்கள் சொன்ன மாதிரி மிருகத்தை எல்லாம் கடவுள் ஆக்கினான்.

எட்டி நில் என்கிறான்!

கடவுள் ஆக்கியது மட்டுமல்ல, நாயைக் கொஞ்சுகிறான். கழுதையை, குதிரையைத் தடவிக்கொடுக்கின்றான். அப்படிப்பட்ட நிலை யிலே ஆறறிவு படைத்த நம்முடைய சகோதரனை, எட்டி நில் என்று சொல்லுகின்றான்.

தொட்டால் தீட்டு என்று சொல்லுகின்றான். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலே தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும் என்று சொல்லுகின்றான். சுதந்திரம் அடைந்து இதுவரை 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத்திற்கு மிட்டாய் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் காந்தியாருடைய நாளிலே தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கின்றோம்.

ஆனால், இன்னமும் கிராமங்களுக்குப் போனால் என்ன நிலை? தீண்டாமை ஒழிப்பு சட்ட மாகிவிட்டது. யாராவது தீண்டாதவன், பறையன், பள்ளன் எட்டிநில் என்று சொன்னால் உடனே காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய எல்லா அதிகாரமும் இருக்கிறது.

இன்னமும் இரட்டைக் குவளை முறை

இன்றைக்கும் நண்பர்களே! கிராமங்களில் இரட்டைக்குவளை முறை இருக்கிறதா? இல்லையா? கடைசி இரட்டைக்குவளை இருக்கிற வரையிலே பெரியாருக்கு வேலை உண்டு. பெரியார் வாழ்கிறார். பெரியார் தத்துவம் மறையாது.

மருந்து என்பது எப்பொழுதும் தேவை. பன்றிக்காய்ச்சல் எப்பொழுது வரும் என்று யாருக்குத் தெரியும்? தேர்தல் வந்தால் பன்றிகள் வரும் கூட்டத்தைக் கலைக்க. இப்பொழுது பன்றிக்காய்ச்சலும் சேர்ந்து வந்திருக்கிறது.

பன்றிக்காய்ச்சலுக்கு உங்களிடம்தான் மருந்து இருக்கிறது. நீங்கள் அளிக்கின்ற வாக்குகள் மூலம்தான் பன்றிக் காய்ச்சலை அகற்ற முடியும்; பொற்கால ஆட்சியைத் தொடரமுடியும். பன்றிக் காய்ச்சலுக்கு அவரவர் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டியது தானே.

பத்து அவதாரங்கள்

நமது கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறது. நாவலர் நெடுஞ்செழியன்தான் ரொம்ப வேடிக்கையாகச் சொல்லுவார். இந்தத் தொகுதிக்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1971இல் திருவல்லிக்கேணி தொகுதியில் தான் அவர் வெற்றிபெற்றார். அதுவும் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையிலே வெற்றிபெற்றார்.

பத்து அவதாரமும் சுற்றிச்சுற்றி...

அவர் பேசும்பொழுது சொல்லுவார் பத்து அவதாரத்தையும் மகாவிஷ்ணு எங்கே எடுத்தார்? ஒரு அவதாரம் பாகிஸ்தானில் எடுக்கவில்லை. இன்னொரு அவதாரம் அபிசீனியாவில் எடுக்க வில்லை. சுத்தி சுத்தி பகவான் இங்கேயா எடுத்தான் என்று கேட்பார்.

அப்படி எடுத்த அவதாரங்களில் ஒன்றுதானே வராக அவதாரம். சிறீமுஷ்ணம் என்கிற இடம். சிதம்பரத்திற்குப் பக்கத்தில் திருமுட்டம் என்ற இடம் இருக்கிறது. அங்கு பன்றியைக் கடவுளாகவே வைத்துக் கும்பிடுகிறான்.

இன்னொரு பக்கம் பன்றிக்காய்ச்சல்

இன்னொரு பக்கம் பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கின்றோம் (கைதட்டல்). தந்தை பெரியார் அவர்கள்தான் சொன்னார் கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று அது யாரையும் வைவதற்கு அல்ல. புண்படுத்துவதற்கு அல்ல. நான் சொல்லுகிறேன் இந்தக் கூட்டமோ, அல்லது எங்களுடைய பிரச்சாரமோ மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதற்காக. எங்களுக்கு யாரும் எதிரிகள் அல்லர். நாங்கள் யாரையும் எதிரிகளாக நினைப்பவர்கள் அல்லர்.

எல்லோரையும் மனிதர்களாக ஆக்க வேண்டும் என்று பாடுபடுகின்ற இயக்கம், திராவிடர் கழகம். சுயமரியாதை இயக்கம் (கைதட்டல்). எங்களைப் பலபேர் தவறாகப் புரிந்துகொள்ளுகிறார்கள். மனதைப் புண்படுத்துகிறார்களே என்று சொல்லுகின்றார்கள். இருப்பதை வைத்துத்தானே உங்களைத் திருத்த வேண்டும்?

அறுவை சிகிச்சை செய்யாமல்...

நோய் இருக்கிறது; அதுவும் புரையோடிப் போய் இருக்கிறது. புரையோடிப் போன அந்த நோயைத் தீர்க்க அறுவை சிகிச்சை செய்துதானே ஆக வேண்டும்? அறுவை சிகிச்சை செய்யும் பொழுது கத்தியை வைக்காமல் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடியும்? அறுவை சிகிச்சை செய்கிற மருத்துவருக்கு நோயாளி மீது ஏதாவது கோபமா? இல்லை.

மாறாக, நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு எவ்வளவு கவலையோ அது போல என்னுடைய சகோதரர்கள். அவர்கள் இந்து முன்னணியில் இருக்கலாம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களாக இருக்கலாம்.

திராவிடர்கள்தானே அவர்கள்? பார்ப்பனர்களைத் தவிர. ஆனால், எங்களுடைய சகோதரர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் எவ்வளவு பெரிய கடவுள் வழிபாட்டாளர்களாக இருந்தாலும் அவர்களைத் திருத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. காரணம் இந்த நாட்டு இந்து மதம் அவர்களையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறது. சூத்திரர்கள் என்றால் பாரத ரத்னா பட்டமல்ல. சூத்திரன் என்று சொன்னால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன். தேவடியாள் மகன் என்று எழுதி வைத்திருக்கின்றான். இன்னமும் இது நமது அரசியல் சட்டத்தில் இருக்கிறது.

--------------------தொடரும்........ “விடுதலை” 22-9-2010

**************************************************************************

கருவறையில் தேவநாதன் செயலுக்கு கடவுள் இருந்திருந்தால் தண்டித்திருக்க வேண்டாமா?
திருவல்லிக்கேணி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி


கடவுள் பக்தியினால் ஒழுக்கம் வளரவில்லை; அதற்குப் பதிலாக தேவநாதன்களால் ஒழுக்கக்கேடுதானே வளர்ந்திருக்கிறது. கடவுள் இருந்திருந்தால் தண்டித்திருப்பானா? இல்லையா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற அய்யா பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்து சட்டத்தில் ஜாதி முறை இருக்கிறது

இந்துலா என்கிற இந்து சட்டத்தில் ஜாதி முறை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. வருணாசிரம தர்மம் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி இருக்கிறது.

உலகத்தில் எங்குமில்லாத பிறவிக் கொடுமை இந்த நாட்டில்தான் இருக்கிறது. ஜாதி முறையை யார் உண்டாக்கியது?

மனிதன் உண்டாக்கினான் என்றால், ரொம்ப நாளைக்கு முன்னாலேயே அதை ஒழிப்பதற்குத் தயாராக இருப்பார்கள்.

ஜாதியை உண்டாக்கிய ஆரியம் வஞ்சகமாக என்ன செய்தது என்றால், ஜாதியை நீயும் நானும் உண்டாக்கவில்லை; கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்லிவிட்டது.

பிரம்மா முகத்திலிருந்து பிறந்தவர்களாம்!

அந்த பிரம்மா ஆன கடவுள் உருவாக்கினார். அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன்முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று பிரித்திருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள். இது மனு தர்மத்தில் இருக்கிறது.

அந்த நான்கு ஜாதிகள், நான்காயிரம் ஜாதிகளாக ஆகியிருக்கின்றன கீழ் ஜாதிக்காரர்கள் படிக்கக் கூடாது. சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் அறிவைக்கொடுக்கலாகாது.

80 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழன் நிலை

இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன்னாலே-80 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழன் படித்தி ருந்தானா? தமிழர்களுக்குப் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததா? ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு வாய்ப்பு இருந்ததா? ஏன் இல்லை? அப்படியானால், தமிழ னுக்கு அறிவு இல்லையா? அன்றைக்கும் ஆறறிவு இருந்தது; இன்றைக்கும் ஆறறிவு இருக்கிறது.

ஆனால், அந்த அறிவை சாணை தீட்டிக் கொள்ளக் கூடிய அறிவு, வாய்ப்பு, மறுக்கப்பட்டது. யாருக்கும் இடமே கிடையாதே. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் உள்ளே நுழையக்கூடாதே. நாடகம் பார்க்க பஞ்சமனுக்கு இடமில்லை

1800ஆம் ஆண்டு இறுதியில் சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் அபிராமசுந்தரி நாடகம் போடுகின்றான். பஞ்சமனுக்கு இடம் இல்லை என்று நாடக விளம்பரத்தில் போடுகின்றான்.

என்னய்யா? பஞ்சமன் என்றால் அது மனிதன் இல்லையா? நம்மாளுக்கு நாடகம் பார்க்கக்கூட உரிமை இல்லை. அப்படியானால் என்ன அர்த்தம்? பொருளாதார வசதி அவனுக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. சமுதாய இழிவு என்று சொல்லி அந்த உரிமை மறுக்கப்பட்டது.

பெரியார் கொதித்தெழுந்தார்

இதைக் கண்டு தந்தை பெரியார் கொதித்து எழுந்தார். எரிமலையாய் வெடித்தவர்தான் தந்தை பெரியார். பெரியார் அவர்கள் இல்லையானால், நம்முடைய தோளிலே துண்டு இருக்குமா?

நாம் ஒவ்வொருவரும் பெரியாருக்குக் கடமைப் பட்டிருக்கின்றோம். நீங்கள் விபூதி போட்டிருக்க லாம். நாமம் போட்டிருக்கலாம். பெரியாரின் கட வுள் மறுப்பை ஒப்புக் கொள்ளாதவராக இருக்க லாம். ஆனால், பெரியார் அவர்களுடைய உழைப்பு இல்லையானால் முத்தன் மகன் முனியன் அமெரிக் காவிலே கம்ப்யூட்டர் எஞ்சினீயராக இன்றைக்கு இருப்பானா? (கைதட்டல்)

பெரியார் பிறந்தநாள் என்றால்.....!

பெரியார் இயக்கத்தைப் பற்றி ரொம்ப பேருக்கு வரலாறு தெரியாது. பெரியார் பிறந்தநாள் என்றால், இந்த வரலாறை சொல்வதுதான். பெரியாருடைய தொண்டு என்பது காலம்காலமாக ஏற்படுகின்ற மாமருந்து. அரசாங்கத்தில் கணக்கெடுத்தார்கள். காலாவதி மருந்து எங்கெங்கிருக்கிறது என்று கண்டு பிடித்தார்கள். அதன் பிறகு காலாவதியான பொருள் எங்கெங்கு இருக்கிறது என்று கணக் கெடுத்தார்கள். இதை எல்லாம் காவல் துறையினர், மற்றும் அதிகாரிகள் எல்லாம் உள்ளே போய் கண்டுபிடித்து வழக்குப் போட்டார்கள்.

காலாவதியான கருத்துகளை வைக்கலாமோ?

காலாவதி மருந்தை சாப்பிட்டால் எவ்வளவு பெரிய கேடு ஏற்படும் என்று நினைத்து அதை தூக்கி எறிகிறார்கள் அல்லவா?

இதைத்தான் தந்தை பெரியார் செய்தார். காலா வதியான கருத்துகள் நம்முடைய மக்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது (கைதட்டல்). ஆகவே, காலாவதியான மருந்து-அது உடலை மட்டும் தான் கெடுக்கும். ஆனால் காலாவதியான கருத்து இருக் கிறதே, அது மூளையைக் கெடுக்கும். மூளைக் காய்ச்சல் வந்தால் மனிதனுக்கு எல்லா உறுப்பு களும் கெட்டுப்போய்விடும்.

பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்

எனவே, பெரியார் அவர்கள் அறிவைப் பற்றிக் கவலைப்பட்ட காரணத்தால்தான் அவரை பகுத் தறிவுப் பகலவன் என்று உலகம் கொண்டா டியது. (கைதட்டல்). எனவே தந்தை பெரியார் அவர்களு டைய தொண்டர்களாகிய எங்களுக்கு யாரையும் புண்படுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும். ஆனால், இந்தச் சமுதாயத்தில் இருக்கிற மூடநம்பிக்கையின் தாக்கம் இருக்கிறது பாருங்கள், அது புதுப்புது வடிவம் எடுக்கிறது அவ்வப்பொழுது.

பெரியார் காலத்தில் இல்லாத சவால்-இப்பொழுது!

பெரியார் காலத்தில் இல்லாத ஒரு மிகப்பெரிய சவால் பெரியார் தொண்டர்களாகிய எங்கள் காலத்தில் இருக்கிறது. அந்தக் கொடுமைகளை நாங்கள் சந்தித்தாக வேண்டும். சந்தித்துக் கொண் டிருக்கின்றோம். பெரியார் காலத்தில் டெக்னாலஜி- தொழில் நுட்பம் அவ்வளவு வளரவில்லை. நான் மேஜை மீது ஏறி 9 வயதிலிருந்து பேசிக்கொண்டி ருக்கின்றேன். ஒன்றுக்கு முப்பத்திரண்டு அளவில் நோட்டீஸ் அடிப்பார்கள். இந்த மாதிரி விளம்பரம் எல்லாம் அன்றைக்குக் கிடையாது. அய்யா போன்றவர்கள், அண்ணா போன்றவர்கள் கூட்டத்திற்கு வந்தால், அந்தக் கூட்டத்திற்கு மிகப்பெரிய அறிவிப்பு வரும். நோட்டீசில் கூட்டத்தில் ஒலிபெருக்கி உண்டு.

ஒலிபெருக்கி உண்டு இப்படி ஓர் அறிவிப்பு

ஒலிபெருக்கி உண்டு என்பது பெரிய அறிவிப்பு. அது சாதாரண அறிவிப்பு அல்ல. ஏதோ மிகப் பெரிய அளவுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தில் முன் சீட்டு பிடிப்பதுபோல வைதிகர்கள் நினைக்கிற மாதிரி நோட்டீஸ் போடுவர்கள். யார் கூட்டத்திற்கு? பெரியார் கூட்டத்திற்கே இப்படித் தான் போடு வார்கள். அண்ணா கூட்டத்திற்கும் இப்படித்தான்.

நாங்கள்,கலைஞர் எல்லாம் கிராமம் கிராம மாகப் பிரச்சாரத்திற்குப் போனவர்கள். இன்றைக்கு யாராவது துண்டறிக்கையில் கூட்டத்தில் ஒலி பெருக்கி உண்டு என்று போட்டால், அவர்களை எவ்வளவு கேலி செய்வார்கள்? இன்றைக்கு இந்த டெக்னாலஜி மின்னணுவியல் என்பது வளர்ந்தி ருக்கின்றது.

தந்தைபெரியார் இனி வரும் உலகம் என்ற நூலில் சொல்லியிருக்கின்றார். அவருடைய ஒப்பற்ற சுய சிந்தனையின் விளைவாகச் சொன்னார். இனி மேல் ஒவ்வொருவருடைய கையிலேயும் தொலைப்பேசி இருக்கும். இதை 70 ஆண்டுகளுக்கு முன்னாலே, கல் லூரிக்கே போகாத தந்தைபெரியார் சொன்னார். (கைதட்டல்). பள்ளிக்கூடத்திற்கு மழைக்குக்கூட ஒதுங்காத பெரியார் சொன்னார்.

அது மட்டுமல்ல; அவர் சொன்ன கருத்து இருக் கிறது பாருங்கள். ஒவ்வொருவருடைய தலையிலும் முகம் பார்த்து பேசக்கூடிய சிறிய கருவி இருக்கும். பள்ளிக் கூடத்திற்கு பாடம் நடத்த பலஆசிரியர்கள் தேவை யில்லை.ஒரு இடத்தில் வகுப்பு வைத்து, ஒரு ஆசிரியர் வகுப்பெடுத்தார் என்றால், எல்லா இடத்திற்கும் அது பரவும் என்று சொன்னார்.

வீடியோ கான்ஃபரன்சிங்-காவல் நீட்டிப்பு

வீடியோ கான்பரன் சிங் மூலம் இப்பொழுது நடைபெறுகிறது. நமது காவல்துறையே இப் பொழுது என்ன செய்கிறது? சிறைச் சாலையில் இருக்கிற கைதியை மீண்டும் ரிமாண்ட் பண்ண வேண்டும் என்று நினைத்தால், நீதிபதி நீதிமன்றத்தி லேயே இருந்து ரிமாண்ட் பண்ண உத்தரவு போடலாம் இன்றைக்கு. காரணம், கைதியை வெளியே அழைத்துப் போய் சிறைக்குள் மீண்டும் கொண்டு வந்து அடைப்பதற்கு அதிகப்படியான சிரமம் எடுக்க வேண்டியிருக்கிறது.

தீவிரவாதிகள் தப்பித்துவிடுவார்கள்

பயங்கரவாதிகள் எங்கே தப்பித்து விடுவார்களோ என்ற நிலை இருந்த காரணத்தால்தான் இன்றைக்கு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவே கைதியை ரிமாண்ட் செய்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் நீதிபதிகளே சிறைச் சாலைக்கு வந்து கைதியிடம் கேள்வி கேட்டு, காவல் நீட்டிப்பை அதிகப்படுத்திவிட்டுப் போனார்கள். இன்றைக்கு அந்த நிலை மாறி இருக்கிறது.

வீடியோ கான்ஃபரன்சிங் என்பது சத்யசாயிபாபா கையைத் தூக்கியதால் பொத்தென்று விழுந்ததா? அறிவியல் கண்டுபிடிப்புதான் வீடியோ கான் பரன்சிங் என்பது.

அக்னியை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால்?

திருமண விழாவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, அக்னி சாட்சியாக என்று சொல்லுவார் கள். அக்னி சாட்சியாக என்று நீதிமன்றத்தில் சொன் னால் ஃபயர் சர்வீசும் சேர்ந்து வரவேண்டும். (கைதட்டல்).

ஆகவே, எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். எனவே, அக்னி சாட்சியாக என்றும் சொல்ல முடி யாது. இப்பொழுது உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே சொல்லிவிட்டார்கள்.

வீடியோ சாட்சியாக என்று சொல்லுவது ஏற் கப்படும். வீடியோ என்பதை யார் கண்டு பிடித்தது? அறிவியல் வளர்ச்சி. மேல்நாடுகளிலே சிந்தித்துச், சிந்தித்து மாறுதல்களை உண்டாக்கி, ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

கம்ப்யூட்டரையே கெடுக்கின்றான்

பெரியார் அவர்களுடைய கருத்துகள் எவ்வளவு அறிவியல் பூர்வமானது; அவருடைய சிந்தனை என் பது எவ்வளவு உயர்ந்தது என்பதைக் காட்டுவதற்கு, ஒவ்வொரு நாளும் அறிவியல் வளர்ந்து கொண்டி ருக்கின்றது.

கம்ப்யூட்டருக்கு குங்குமம், சந்தனம், விபூதி வைத்து அதனுடைய தொழில்நுட்பத்திறனே பாழ் படக்கூடிய அளவுக்கு செய்கிறார்கள். கம்யூட்டரிலே தூசி, தும்பு படக்கூடாது என்பதற்காகத்தான் குளிர்சாதன அறையில் வைக்கிறார்கள். ஆனால் இவர்களோ, அதற்கு குங்குமம், விபூதி வைக்கிறார்கள்.

நம்மாள் கையிலே கம்ப்யூட்டரைக் கொடுத் தால் கணபதி உருவம் வரைகிறான். இப்பொழுது செல்ஃபோன் வந்திருக்கிறது. எல்லா இடத்திலே யும் பாத்தீர்களேயானால் எஸ்.எம்.எஸ். இல்லாத இடமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறது.

செல்ஃபோனால் நன்மையும்-தீமையும்

செல்ஃபோனினாலே எவ்வளவு நன்மை ஏற்பட்டிருக்கிறதோ அவ்வளவு கெடுதியும் இருக் கிறது. இளைஞர்களைக் கெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் மறுபுறம் இருக் கிறது. அது தொலைக்காட்சியாக இருந்தாலும், வானொலியாக இருந்தாலும், மறுபுறம் அதனு டைய கெடுதியும் இருக்கிறது. அதைப் பயன்படுத் துகிற முறையைப் பொறுத்தது. நன்மைகள் எவ் வளவு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தீமைகளும் இருக்கின்றன. கத்தியைப் பழம் அறுப்பதற்கும் பயன் படுத்தலாம். அது நன்மை. கத்தியை இன் னொருவர் மீது குத்துவதற்குப் பயன் படுத்தினால் அது தீமை. ஆகவே அந்த மாதிரி மூடநம்பிக்கை கள், அறிவியலுக்கு மாறான கருத்துகளை, அறி வியல் ரீதியாக இன்றைக்குப் பரப்புகின்ற மிகப் பெரிய கொடுமை இந்த நாட்டில் வந்துவிட்டது.

தொலைக்காட்சியால்...

தொலைக்காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பு ஒரு ஊரில் மட்டும் நடைபெற்ற சம்பவம். ஆனால், இன்றைக்கு சாராய சாமியாரை எல்லா ஊர்களிலும் காட்டுகிறார்கள். இங்கே நம்மாள்கள் சொன்னார்கள்-பிள்ளையார் ஊர்வலத்தில் நித்யானந்தா வாழ்க! என்று ஒலி முழக்கம் போட்டுக்கொண்டு சென்றார்கள் என்று சொன்னார்கள். அதிலிருந்தே அவர்களுடைய நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நமது பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார். கடவுள் இல்லை என்பதற்கு தேவநாதன் போதுமே!

ஒழுக்கத்தை வளர்ப்பதற்காகவாவது கடவுள், கடவுள் பக்தி இருக்க வேண்டாம்களா? ஒரு பயத்திற்காகவாவது இருக்க வேண்டாமா? என்று எங்களைப் பார்த்துக் கேட்பார்கள்.

கடவுள் இருக்கிறது என்று சொன்னால்தானே ஒரு பயமாவது இருக்கும் அவனுக்கு. தவறு பண் ணாமலாவது இருப்பானே என்று சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த நிலை மாறிப்போய்விட்டது. காஞ்சிபுரம் கோவில் பார்ப்பன அர்ச்சகன் தேவ நாதன்-அவனைவிட கடவுள் இல்லை என்பதை அதிகமாகப் பிரகடனப்படுத்திய மேதை உலகில் வேறு யாரும் இல்லை. கோவில் கருவறைக்குப் பின்னாலேயே எல்லாப் பெண்களையும் வரச் சொல்லியிருக்கின்றான். மிகக் கேவலமாக நடந்துகொண்டிருக்கின்றான். இதற்குப் பிறகும் நம்மாள் அந்தக் கோவிலுக் குப் போய் கும்பிடுகின்றான். அந்தக் கடவுளுக்கா வது சக்தி இருந்தால், அவனை ஏதாவது செய்திருக்க வேண்டும். ஒன்றும் செய்யவில்லையே.

அந்த தேவநாதன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு ஹீரோ மாதிரி வருகிறான். அது மட்டுமல்ல; அந்தக் கோவில் சம்பந்தப்பட்ட நண்பரே என்னிடத்தில் சொன்னார், என்ன கொடுமைங்க? அந்த தேவநாதன், அப்பா அர்ச்சக ராக இருந்தார். அந்த வைதீகருக்காக இவரை நாங்கள் போட்டோம். அந்த தேவநாதன் 80 லட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் என்று சொன்னார். எப்படிங்க 80 லட்சம் ரூபாய் சம்பாதித்தான் என்று கேட்டோம்.

பெண்களை பிளாக்மெயில் பண்ணி பணம் வாங்கினானா? என்று கேட்டோம். இல்லிங்க, அவன் செய்தது சாதாரண காரியமல்ல. அவன் செல்ஃபோன் மூலமாக அசிங்கமான காட்சிகளை அவனே படம் எடுத்து, அந்தப் படங்களை சி.டி. யாகப் போட்டு, வளைகுடா போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதித்து விட்டான் என்று சொன்னார். இது எவ்வளவு பெரிய ஒழுக்கக்கேடு? எவ்வளவு பெரிய சங்கடம். தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்-கடவுளை மற; மனிதனை நினை என்று.

கடவுள் பக்தி ஒழுக்கத்தைப் பரப்பியதா? ஆத்திகர்கனின் கடவுள் நம்பிக்கை ஒழுக்கத் தைப் பரப்பியதா? மனிதனை வாழ வைத்ததா? பல குடும்பங்களை கெடவைத்ததா? இல்லையா? இன்றைக்குப் பெரியார் சொன்ன கருத்துகளுக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.

------------------தொடரும்.....”விடுதலை” 23-9-2010

0 comments: