Search This Blog

12.9.10

எதற்கு இந்த திராவிடர்?

பெரியார் உணர்வைப் பரப்பிட
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும்
நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் விளக்கம்

பெரியார் ஏற்படுத்திய உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும் என்று நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார்.

சென்னை-பெரியார் திடலில் 7.9.2010 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழாவில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:

வீரமணி அவர்களுக்கு நன்றி

இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தைத் தொடங்கி வைக்கக் கூடிய பெருமை எனக்கு வழங்கப் பட்டிருப்பதாக என்னுடைய அன்புக்கும், மதிப்பிற்கும் உரிய, வீரமணி அவர்களுக்கு என் னுடைய உளமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இது ஒரு பெரிய வாய்ப்பு ஒரு சிறப்பு- ஒரு பெருமை என்னுடைய வாழ்க்கை வரலாற்றிலே நான் குறிப்பிடுவதாக இருந்தால் ஒரு முக்கியமான நாள் என்று நான் கருதுகின்றேன் (கைதட்டல்).

நிலைகுலைந்த திராவிடத்தை...

நிலைகுலைந்து போயிருந்த திராவிடத்தை தாழ்ந்த தமிழகத்தை, வீழ்ச்சியுற்ற தமிழகத்தை எழுச்சிபெறச் செய்வதற்காக நடைபெற்ற வரலாற்றின் தொடர்ச்சியாக; மேலும் அதை வலுப்படுத்துவதற்காக, விரிவு படுத்துவதற்காக வளர்ச்சியுறச் செய்வதற்காக, இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில், அவரைப் புரவலராகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

வீரமணி அவர்கள் ஆற்றுகின்ற பணி ஒருவகையிலே சொல்லப்போனால் வீரமணி அவர்கள் ஆற்றுகிற பணி மிக ஆழமான பணி. அழுத்தமான கொள்கையில் ஊன்றியிருக்கின்ற அத்தகைய பணி அனைவருடைய உள்ளத்திலேயும் கட்டாயம் இடம் பெற வேண்டிய பணி.

அப்படிப்பட்ட பணியை இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் மூலமாக பல பேராசிரியர்களின் மூலமாக நிச்சயமாக பெரிய அளவிலே வரும். அது வளரும். ஒளிபெறக்கூடிய அளவிலே வருவோம்

எந்தெந்த வகையிலே நாம் மறைக்கப் பட்டோமோ அந்த வகைகளில் எல்லாம் ஒளி பெறக்கூடிய அளவிலே நாம் வருவோம் என்ற நம்பிக்கையை நாம் பெறுவோம்.

இங்கே தலைமையுரையாற்றியிருக்கின்ற பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் ஒரு நூலைப் படித்து, அந்தக் கருத்துகளிலே உள்ள குறை பாடுகளை குறித்து ஆதங்கத்தோடு கருத்துகளை வெளியிட்டார். இதுதான் தமிழன் வரலாறே. இப்படி எழுதப்பட்ட நூல்களும், இயற்றப்பட்ட காவியங்களும், மக்களுக்குத் தரப்பட்ட செய்திகளும் நம்மை வீழ்த்துவதாக இருக்கின்றன என்று ஆராய்வதுதான் தமிழனுடைய வரலாறாக நீண்ட நெடுங்காலமாக ஆகியிருக்கிறது.

ஆய்வு மய்யத் தலைவராக ராமசாமி

அந்த முறையிலே ராமசாமி அவர்கள் ஏற்கெனவே திராவிடர் இயக்க வரலாற்றை, தி.மு.க வரலாற்றை, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதியவர் என்ற முறையில் அதுவும் ஆங்கிலத்தில் திறம்பட எழுதியவர் என்ற முறையில் அவர் இந்தத் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு தலைவராக இருப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. நான் பாராட்டுகிறேன் (கைதட்டல்).

உண்மையாகவே நாம் தமிழர் என்று சொல்லும் பொழுது கிடைக்காத உரிமையும், பெருமையும் திராவிடர் என்ற சொல்லுகிறபொழுது கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது (கைதட்டல்).

ஒரு காலத்திலே தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தபொழுது, பெரியாரும் அறிஞர் அண்ணா அவர்களுமாக சேர்ந்து அமைத்த பொழுது, சில பேராசிரியர்கள் எல்லாம் கூட என்னிடத்திலே கேட்டார்கள்.

எதற்காக தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்க வேண்டும்? தமிழர் என்ற பெயர் இருந்தால் போதாதா? அப்படியும் சில நண்பர்கள் சொல்லுகிறார்களே என்று கேட் பார்கள்.

நான் சொன்ன விளக்கம்

நான் அவர்களுக்கெல்லாம் சொன்ன ஒரு விளக்கம் பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழன்; பார்ப்பனரை விலக்கிய பெயர் திராவிடன் (கைதட்டல்).

பார்ப்பனரை விலக்குவதற்காகவே தொடங்கப் பட்ட இயக்கம்தான் நீதிக்கட்சி, பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகப் பிறந்த இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். ஆக இரண்டும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம் அதை அரசியல் துறையிலே நிலைநாட்டுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

எனவே அந்த அடிப்படையிலே தமிழர் என்பதால் பெருமைப்படுகிறேன். திராவிடர் என்பதால் உரிமை பெறுகிறேன் என்று நான் அவர்களிடத்திலே சொன்னேன். ( கைதட்டல்). இன்னும் சிலர் சைவ சார்புள்ளவர்களிடமெல்லாம் நான் அன்போடு பழகக்கூடிய வாய்ப்பு பெற்றிருக்கின்ற காரணத்தால், எதற்கு இந்த திராவிடர்? ஆதிதிராவிடரோடு உங்களை சேர்த்துவைத்துக் கொள்வதிலே என்ன பெருமை உங்களுக்கு? என்று கேட்பார்கள். நான் அவர்களுக்கு மேடையிலே சொன்ன பதில்: ஆதிதிராவிடன்தான் இந்த நாட்டின் முதல் குடிமகன். அவனோடு சேர்ந்தால்தான் எங்களுடைய உரிமையும் பாதுகாக்கப்படும் என்று சொன்னேன். மனிதத் தன்மையைக் காப்பாற்ற அதுதான் வழி; தீண்டாமையை ஒழிக்க அதுதான் வழி; வரலாற்று மறுமலர்ச்சிக்கு அதுதான் வழி என்று அன்றைக்குச் சொன்னேன்.

பெரியார் ஏற்படுத்திய உணர்வு

உள்ளபடியே இந்த மய்யம் இன்றைக்குத் தொடங்கப்படுகிறது என்று சொன்னால் தந்தை பெரியார் ஏற்படுத்திய உணர்வு நீண்ட நெடுங் காலம் நிலைப்பதற்கு வாய்ப்பாக இந்த மய்யம் உருவாகியிருக்கிறது.

குறிப்பாக திராவிடம் என்பது மறைக்கப்பட்டது மட்டுமல்ல; ஏறத்தாழ அழிக்கப்பட்டது. அந்த அழிக்கப்பட்ட திராவிடத்திற்கு உயிர் கொடுக்கக் கூடிய நிலைமை சூழ்நிலையின் அடிப்படையிலே நமக்கு ஏற்பட்டது. வரலாற்றில் எப்படி அமைந்தது என்று கேட்டால், வெள்ளையர்கள் வருவதற்கு முன்னாலே, ஆங்கில ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன்னாலே இந்தியா முழுவதும் கொடிகட்டிப் பறந்தது படித்த கூட்டத்தினரின் செல்வாக்கு என்ற பெயரால், வடமொழி அறிந்தவர்களின் செல்வாக்கு அதன் மூலமாக பார்ப்பனியத்திற்கு வந்தது.

வடமொழி அறிந்தவர்கள் பார்ப்பனரல்லாதவர்களாக இருந்தாலும் பார்ப்பனியத்தின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டவர்களாகத்தான் இருந்தார்கள். அதிலிருந்து விடுபட முடியாது.

வெளிநாட்டுக்காரன் பார்த்தது - வடமொழி

எனவே அந்த முறையிலே வடமொழிக்கு அகிலஇந்திய அளவிலே ஒரு செல்வாக்கு இன்னும் சொல்லப்போனால் இந்தியாவைப் பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் முதன்முதலாக ஜெர்மன் நாட்டு அறிஞனோ அல்லது இங்கிலாந்து நாட்டு அறிஞனோ இந்தியாவுக்கு வந்து பார்த்தபொழுது அவர்களுக்குக் கிடைத்த ஏடுகள் எல்லாம் வடமொழி ஏடுகள். வடமொழி தமிழைப் பார்த்து எழுத்துகளை உருவாக்கிக்கொண்டது. வட மொழி கி.பி.3ஆம் நூற்றாண்டுக்குப் பின்னால் தான் நூல் வடிவிலே வந்தது, எழுத்து வடிவிலே வந்தது என்று அறிஞர்கள் தெரிவிப்பார்கள்.

அந்த வடமொழி பிராமணர்களுக்கு உரிய மொழியாக இருக்கின்ற காரணத்தால் பிராம ணர்கள் செல்வாக்குள்ள ஜாதியினராக தங்களை உயர்த்திக்கொண்ட காரணத்தால், பிராமணன் கையிலே இருந்த மொழி அது உயர்ந்த மொழி; பிராமணன் பயன்படுத்திய மொழி-தேவமொழி; பிராமணன் அர்ச்சனைக்குப் பயன்படுத்திய மொழி-அது உயர்ந்த ஆற்றல் வாய்ந்த மொழி.

ஜெர்மன் நாட்டு அறிஞர் குறிப்பாக மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் பார்த்தார்கள். இந்தியா என்றால் வடமொழி. வடமொழி என்றால் ஆரியம்; ஆரியம் என்றால் ஜெர்மானியர்களுக்கும் ஆரியத்துடன் தொடர்புண்டு. ஆக இந்த மொழியின் பெருமையை நிலைநாட்ட, நிலைநாட்ட, அந்த மொழியை உலகத்திலே கொண்டுபோய் பரப்புவதன் மூலமாக ஆரியம் செல்வாக்கு பெறும் என்ற உணர்வோடு மாக்ஸ் முல்லரும் அவரோடு சேர்ந்த சில அறிஞர்களும் இருந்தனர்.

அதனால் வடமொழி நூல்களைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அக்காலத்திலே தென்னாட்டிலே இருந்த தலைமை பீடம் சென்னையிலே இருந்த ஆங்கில அரசுகூட கல்கத்தாவிலே தலைமை பீடம் மாறிய காரணத்தால் தொடர்ந்து கல்கத்தாவிலே உள்ள தலைமை வெள்ளைக்காரர்களுடைய பிரதி நிதியாக இருந்த கவர்னர் ஜெனரல் போன்ற வர்களிடத்திலே தொடர்பு கொள்ளக் கூடிய வர்கள் எல்லாம் வடநாட்டைச் சேர்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள். நீதிமன்றங்களில் சமஸ்கிருதம்

தென்னாட்டிலே பாதிரிமார்களிடத்திலே சில தமிழ்ப் புலவர்களும் தொடர்பு கொண்டி ருந்தார்கள். அது தென்னாட்டில். இது தமிழக அளவிலே முடிந்துவிட்டது. அகில இந்திய அளவிலே நீதிமன்றங்களிலே பார்சிய மொழி, சமஸ்கிருத மொழி. பார்சிய மொழி இஸ்லாமியர் களுக்காக; சமஸ்கிருதம் இந்தியர்களுக்காக-இந்துக்களுக்காக. ஆகவே அவர்களுடைய கலாச்சாரத்தைத்தான் நீதிமன்றங்களிலே எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது.

சமஸ்கிருதம்தான் உயர்ந்தமொழியாக, செல்வாக்குள்ள மொழியாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், எல்லா மொழியும் சமஸ் கிருதத்திலே இருந்து பிறந்தது; தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் சமஸ்கிருதத்திலே தோன்றியது என்ற கருத்து. எந்த மொழியும் சமஸ்கிருதத்திற்கு அப்பால் வளர்ந்த மொழி அல்ல. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் மனிதரல்லர்

இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் மனிதரல்லர் என்று கருதப்படக் கூடிய அளவுக்கு ஒரு கருத்து இந்த நாட்டில் சமஸ்கிருதத்தின் மூலமாக ஊன்றப் பட்டது.

பிரம்மாவின் முகத்திலே பிறந்தவன் பிராமணன், தோளிலே பிறந்தவன் ஷத்திரியன், தொடையிலே பிறந்தவன் வைசியன், பாதத்திலே பிறந்தவன் சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்?

முகத்தைத்தானே மதிக்க வேண்டும். தொடையை அவன் மதிப்பானா? அது வேற காரியத்திற்கு ஆக. அதனுடைய விளைவு என்ன? மற்றவன் எல்லாம் மனிதனல்ல. பார்ப்பனியத்தின் செல்வாக்கிற்காகவே சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டது.

தமிழ் சொற்கள் கூட ரிக்வேதத்திலே இருக்கிறது என்று எடுத்துச்சொன்ன சான்றுகள் உண்டு என்றாலும் கூட, இந்த சொற்கள் எல்லாம் நம்மிடமிருந்து குடியேறி அவர்கள் பயன் படுத்திக்கொண்டார்கள். அந்தப் பெருமையை நாம் பேச நமக்கு வாய்ப்பில்லை.

தமிழ் தாழ்ந்த மொழியா?

வடமொழிச் சொற்கள் தமிழிலே வந்து இடம் பெறுமானால் உலகத்திலே சமஸ்கிருதத்தினுடைய உதவி இன்றி தமிழ் இயங்காது ஆக, தமிழ் தாழ்ந்த மொழி; வடமொழி உயர்ந்த மொழி என்ற அடிப்படையிலே பார்ப்பனிய செல்வாக்கு வளர்ந்து அதனுடைய விளைவாக இந்தியா என்றால் ஆரியம் என்ற கருத்துதான் 200 ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தது.

அதற்கு அடுத்து சர்ஜான் ஹார்ட்ஸ் போன்ற வர்கள் ஒரு 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பின்னால் வடமொழி ஆய்விலே, அதே போல மொகஞ்சதாரோ சிந்துவெளி நாகரிக ஆய்வில் ஈடுபட்ட வர்கள்தான். அவர்களுடைய கருத்துகளில் சொன்னார்கள். வடமொழியிலே ஏராளமான கருத்திருக்கிறது உண்மை. அவைகளை எல்லாம் ஆய்வோம். இனியும் ஆய்வு செய்ய வேண்டுமானால் தமிழ் போன்ற மொழிகள் இருக்கின்றன. அந்த மொழியின் கருத்துகளை, ஏடுகளை ஆய்வு செய்யலாம் என்று ஆய்வு அறிஞர்களுக்கு வழிகாட்டுகின்ற வகையிலே இன்னும் பல மொழிகள் இருக்கின்றன என்று சொல்லக்கூடிய நிலை மேல்நாட்டவர்களிடம் உருவானது. கால்டுவெல் இல்லையென்றால்....

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேல் நாட்டார்தான் தமிழுக்கு ஏற்றம் தந்தனர். நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். டாக்டர் கால்டுவெல் மட்டும் இல்லை என்று சொன்னால் திராவிட நாட்டில் அந்தப் பெயரை நாம் காப்பாற்றியிருக்க முடியாது(கைதட்டல்). தந்தை பெரியார், அண்ணா அதற்காகப் போராடினார்கள். ஒரு வேளை அவர்களுடைய மறைவிற்குப் பிறகு அது மறைந்துபோகிற சூழ்நிலை உருவாகியிருக்கும்.

கால்டுவெல்தான் தமிழ்மொழி ஒரு தனிமொழி, தென்னாட்டு மொழிகள் ஒரு தனி குடும்பம், அந்தக் குடும்பம் ஆரியக் குடும்பம் அல்ல; அந்தக் குடும்பம் திராவிட குடும்பம் இதை எடுத்து நிலைநாட்டியவர் 1858 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்திலே டாக்டர் கால்டுவெல் அவர்களின் ஒப்பியன்மொழி நூல் வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான் நிலைநாட்டப்பட்டது.

மனோன்மணீயம் சுந்தரனார்

அதனுடைய தாக்கம்தான் மனோன்மணீயம் சுந்தரனார் நீராரும் கடலுடுத்த என்ற பாடலை பாடினார்.

ஆரியம் போல் வழக்கொழிந்து

அழிந்திடா உன்

சீரிளமைத் திறம் வியந்து

செயல் மறந்து வாழ்த்துதுமே என்று

மனோன்மணீயம் சுந்தரனார் பாடினார். தமிழன் என்ற மானஉணர்வோடு பாடினார். அவர் ஓர் இறைப் பற்றாளர். இறைப் பற்றாளருடைய மனதிலே இந்த வேதனை எப்படிப் புகுந்தது என்று கேட்டால் இறைவனைப் பாடுவதற்கு நம்முடைய தமிழிலே இடம் இல்லை. வடமொழிக்குத்தான் அந்தச் சிறப்பு உண்டு என்று சொல்லுகின்றார்களே, அந்த மொழி செத்துப் போய்விட்டது என்று சொல்லுகின்றார். அதே உணர்வு மறைமலை அடிகளுக்கு இருந்தது; ஏறத்தாழ அதே உணர்வு கா.சுப்பிரமணிய பிள்ளைக்கு இருந்தது;

நாவலர் சோமசுந்தர பாரதியார்

அதே நாவலர் சோமசுந்தர பாரதியாருக்கு இருந்தது. அந்த உணர்வைக் கொண்டு சென்ற ஆற்றல் அவர்களுக்கு உண்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசிக்கொண்டே வந்தார். அப்படி பேசிக்கொண்டு வரும்பொழுது சமஸ்கிருதம் என்று சொல்லமாட்டார். ஜம்சு கிருதம்

ஜம்சுகிருதம் என்று வேண்டுமென்ற அந்தச் சொல்லை விரும்பாமல் சொல்லுவார். ஜம்சுகிருதம் படித்தவன் எல்லாம் பெரிய பண்டிதர் என்று சொல்லுகின்றான். வடமொழியில் என்ன இருக்கிறது.? தமிழில் என்ன இல்லை? என்று கேட்டுவிட்டு அந்த ஜம்சு கிருதம் செத்துப்போய் நீண்ட காலம் ஆகிவிட்டது என்று சொன்னார்.

நாவலர் சோமசுந்தரபாரதியார் பேசுகிற பொழுது தமிழறிஞர்கள் கூட குறுக்கிட மாட்டார்கள். ஒருவர் திடீரென்று எழுந்து கேட்டார். அய்யா, நாவலர் அவர்களே! ஜம்சுகிருதம் செத்துப்போய்விட்டது என்று சொல்லுகின்றீர்களே! என்று சொன்னார். ஏன்? என்று நாவலர் கேட்டார். அது பிறக்கவே இல்லையே! என்று கேள்வி கேட்டவர் பதில் சொன்னார் (கைதட்டல்).

தமிழ்மொழி போல பிறந்தமொழி என்னும் சிறப்பு வட மொழிக்குக் கிடையாது. வடமொழி செய்யப் பட்டது. பல மொழிகளிலே இருந்து கடன் வாங்கி செய்யப்பட்ட மொழி.

கடன் வாங்கப்பட்ட மொழி

வெளிநாட்டிலேயிருந்து நூல்வாங்கி, இங்கு நெசவு செய்யப்படுவது போல் கடன் வாங்கப்பட்ட மொழி அது. அது பிச்சைக்காரன் பாத்திரம்

(கைதட்டல்).

------------------ "விடுதலை” 10-09-2010

************************************************************************************

மற்றவர்களுக்கு தொண்டு செய்வதுதான் உலகத்தில் உயர்ந்தது; திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது
நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பேச்சு

மற்றவர்களுக்கு தொண்டு செய்வதுதான் உலகத்தில் உயர்ந்தது என்று திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது என்று தி.மு.க பொதுச்செயலாளர் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார்.

சென்னை-பெரியார் திடலில் 7.9.2010 அன்று திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தொடக்க விழாவில் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அந்த பிச்சைக்காரன் பாத்திரம் நாடாள் தவற்கான பாத்திரமாக மாறியதற்குக் காரணம் பார்ப்பனிய ஆதிக்கம்.

தமிழ்மொழியிலே புலமை பெற்று நூறு பேர், இருநூறு பேர் இந்தியாவிலே குருமார்களாக உருவாக்கப்பட்டால் தமிழுக்கு ஏற்றம் கிடைக்காதா? ஆனால், உண்மை என்ன என்று கேட்டால் நம்முடைய கு.வெ.கி.ஆசான் போன்ற வர்கள் ஆய்வு நடத்துகிறபொழுது நிச்சயமாக உணருவார்கள் என்று நம்புகிறேன்.

புத்தர் தமிழர் வழியில் வந்தவர்

புத்தர் கூட தமிழர் வழியிலே வந்தவர் (கைதட்டல்). அவர்களுடைய மொழிகூட தமிழ் மொழியிலே வந்த மொழி. சமண மதத்தைத் தோற்றுவித்த மகாவீரர்- அவரும் திராவிட கலாச்சாரத்தின் பிரதிநிதிதான். சமஸ்கிருதத்திலே பிறந்த வேதக்கருத்துகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சமஸ்கிருதத்தை ஏற்காதவர்கள் தமிழர்கள்

தமிழர்கள் சமஸ்கிருதத்தையே ஒத்துக்கொள்வ தில்லை. இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்ற கொள்கையே அவர்களுக்கு உடன்பாடானதல்ல. பிராமணியத்தை எதிர்த்தார்கள். அப்படி எதிர்த்ததற் கான அடிப்படையான ஒரு காரணம்-அவர்கள் எல்லாம் திராவிட பண்பாட்டுக் கலாச்சாரத்தில் இடம்பெற்றவர்கள்.

ஒரு காலத்திலே தமிழ் பரவியிருந்தபொழுது அந்த எண்ணச் சுவடு அவர்களுடைய மனதிலே பதிந்துதான் அவர்கள் எல்லாம் அந்தப் போராட்டத்திலே ஈடுபட்டார்கள். இங்கே கூட கு.வெ.கி.ஆசான் பேசுகிறபொழுது சொன்னார்களே புவனேஸ்வரத்திற்கு பக்கத்திலே கி.மு. 175ஆம் ஆண்டில் ஹத்தி கும்பா கல் வெட்டைப் பற்றி அதற்கு முன்னாலே இருந்த சேர, சோழ, பாண்டியர், மூவேந்தர் பற்றிய கூட்டணியை தோற்கடித்ததற்காக எழுதி வைக்கப்பட்ட கல்வெட்டு என்று சொன் னார்கள்.

கூட்டணியே உடைந்தாலும்....

அவர் பேசுகிறபொழுதுதான் எனக்குத் தோன்றியது சிலப்பதிகாரம் பிறந்ததே அந்த காரணத்திற்காகத்தான். வடபுலத்திலே கனகவிசயன் தலையிலே சேரன் செங்குட்டுவன் கல்ஏற்றி வைத்தான். கூட்டணி உடைந்தாலும், தனிப்பட்ட முறையிலே தோற்கடித்துக் காட்டுவேன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மகத்தான தமிழ் உணர்வு தோன்றியது (கைதட்டல்).

ஆனால், உண்மை என்னவென்று கேட்டால், மக்களுடைய நிலைவேறு; புலவர்களுடைய நிலைவேறு. வடபுலத்திலே உள்ள பிராமணர்கள் புரோகிதத்தை சேர்ந்து செய்யக் கூடிய வாய்ப்புப் பெற்றவர்களாக மதகுருமார்கள். நம்முடைய புலவர்கள், மதகுருமார்கள் அல்லர். சமஸ் கிருதத்திலே ஆற்றல் மிக்கவர்களாக இருந்த வர்கள்தான் மிகப்பெரிய சாஸ்திரிகள். அண்ணா அவர்களுடைய சிவாஜி கண்ட இந்து ராஜ்யத்திலே வருகிறாரே காகபட்டர். அவர்களுடைய செல்வாக்கு மனிதர்களையே மடக்கக்கூடிய செல்வாக்கு. மதகுருமார்கள் தங்களுடைய எண்ணங்களை பிரதிபலித்து அதே எண்ணங்களை மக்கள் எண்ணும்படி ஆளாக்கு வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் புலவர், புலவராக இருந்தார். வேண்டுமானால் புலவரை ஆசிரிய ராகப் பயன்படுத்தினார்கள். வடபுலத்திலே புத்தருக்குக் கிடைத்த செல்வாக்கை விட, தென்னாட்டிலே திருவள்ளுவருக்குக் கிடைத் திருக்கிற செல்வாக்கு அதிகம். திருவள்ளுவர் சொல்லாத கருத்துகள் எதுவுமில்லை. (கைதட்டல்). திருவள்ளுவருடைய நடுநிலையை புத்தரால் கூட மறுக்கமுடியாது.

திருவள்ளுவருக்கு ஈடாக உலகில் இல்லை

சமண மதத்தினுடைய உயர்ந்த கொள்கை ஏதாவது இருக்குமானால், அதை திருவள்ளுவர் எடுத்துக்காட்டியிருக்கின்றார். அவர் தகுதி வாய்ந்த புலவர். மிகச்சிறந்த இலக்கியத்தைத் தந்த புலவர். வாழ்க்கையில் வாழ்நாளுக்குத் தேவையான அடிப்படைகளை வகுத்துத் தந்தவர். இதுபோன்ற கருத்துகளை எடுத்துச்சொன்ன மதகுருமார்கள் எவரும் உலகத்தில் இல்லை.

ஆனால், அந்தத் திருவள்ளுவருடைய பெருமை நமக்குத்தெரியாது. திருவள்ளுவர் பார்ப்பனருக்குப் பிறந்தார் என்பது தவறான நம்பிக்கை. திருவள்ளுவருடைய கருத்துதான் உலகத்தை ஆள வேண்டிய கருத்து (கைதட்டல்).

திருவள்ளுவர் ஓட்டு கேட்க வரவில்லை. தேர்தலில் நிற்கவில்லை. ஆகவே அவருடைய வரலாறு தேவையில்லை; அவருடைய ஜாதி தேவையில்லை. உலகில் அவர் சொன்ன கருத்துக்கு ஈடாக இதுவரையில் யாரும் சொல்லவில்லை என்பது தமிழுக்குள்ள தனிப்பெருமை (கைதட்டல்). அவர் பாதிரிமார் பள்ளிக்கூடத்திலே படித்து பயிற்சி பெற்றார். பாதிரியார்க்குரிய அந்த பாடங்களை எல்லாம் படித்தார். படிப்பதிலே மிகவும் வல்லவர். அதற்குப் பிறகு மருத்துவப் படிப்பு 4 ஆண்டுகாலம் படித்து பட்டம் பெற்றார். பிறகு திருமணம் செய்து கொண்டார். நான் படித்த மருத்துவ படிப்பு பயன்பட வேண்டுமானால் மருத்துவ வசதியும், வாய்ப்பும் பெற்ற அய்ரோப்பி யர்களிடத்திலே என் நாட்டு மக்களிடத்திலே நான் பணியாற்றுவதில் அர்த்த மில்லை.

மருத்துவத் தொண்டு யாருக்கும் கிடைக்காத நீக்ரோ மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று மத்திய ஆப்ரிக்காவிலே ஒரு பகுதியிலே போய் பணியாற்றினார். அவரை மக்கள் விரட்டினர். உங்களுக்காக கொண்டு செய்ய வந்தவன் என்பதை நிலைநாட்டி, 30 ஆண்டுகாலம் 40 ஆண்டுகாலம் தொண்டாற்றி நோபல் பரிசு பெற்றவர். அப்படிப் பட்ட ஆல்ஃபிரட் மகாத்மா காந்தியைப் போல, அன்னை தெரசா போல தொண்டாற்றியவர். தத்துவங்களிலே நாட்டம் கொண்டவர்.

அய்ரோப்பாவில் உள்ள தத்துவங்களை எல்லாம் படித்தார். கிறிஸ்துவத்திலே ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மனப்பான்மையிலே அத்தகைய ஈடுபாடு இருக்கத்தான் செய்யும்.

இந்தியத் தத்துவங்களைப் படித்துவிட்டு...

இந்தியாவில் தான் அதிக தத்துவங்கள் தோன்றின என்ற காரணத்தால் பவுத்த தத்துவத்தைப் படித்து சமண தத்துவத்தைப் படித்து சமஸ்கிருதத்திலே உள்ள வேதங்கள், ஆகம கருத்துகளைப் படித்து அதற்குப் பின்னர் அவர் கீதையைப் படித்து இப்படி பல தத்துவங்களை எல்லாம் படித்துவிட்டு அவர் ஒரு நூல் எழுதினார். அந்த நூலிலே அவர் சொல்லுகின்றார். நான் உலகத்திலே உள்ள தத்துவங்களை எல்லாம் படித்துப் பார்த்தேன்.

திருக்குறள்தான் சிறந்த நூல்

இந்தத் தொண்டுக்கு எந்த அளவுக்கு இடம் இருக்கிறது என்று தேடித்தேடி பார்த்தேன். வேதகால கருத்துகளையும் பார்த்தேன். திருக்குறள் தான் மனிதநேயக் கருத்துகளை சொல்லியிருக்கிறது (கைதட்டல்). இறை வழிபாடு, ஆன்மிகம், மதவெறி இவைகளை எல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்ற பொழுது, அதை விட மேலான ஒரு தத்துவத்தை திருக்குறள் சொல்லியிருக்கிறது. மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதுதான் உலகத்தில் உயர்ந்தது என்று திருக்குறளில் வலியுறுத்தப்படுகிறது. திருக்குறளுக்கு ஈடான ஒரு தத்துவத்தைப் பார்த்ததில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னாலே திருக்குறள் எழுதப்பட்டது.

ஆரியர் இருந்திருக்கலாம்

ஆரியர் அப்பொழுது இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் செல்வாக்கு பெறாத காலம். ஆரியத்தி னுடைய செல்வாக்கு எப்படி எல்லாம் இருந்தது என்பதைப் பார்த்தால்-தெருவோரத்திலே நடத்து கின்ற கூத்தாடிகளின் கூத்தைப் போல இருந்தது. ஆரியத்திற்கு ஆட்படாத திராவிடத்தை இந்த நாட்டு மக்கள் உணர்ந்து அதை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் பகுத்தறிவு அடிப்படையிலே எண்ணிப் பார்க்கின்றபொழுது நம்முடைய உள்ளத்திலே இந்தக் கருத்து தோன்றுகிறது.

இந்தியா என்றால் ஆரியம்

இந்தியா என்றால் ஆரியம்; ஆரியம் என்றால் இந்தியா. இன்னும் சொல்லப்போனால் இந்துமதம் தான் ஆரியத்தால் நிலைநாட்டப்பட்டது. இந்து மதம் என்பது ஒரு மதமே அல்ல. இந்துமதம் என்பது ஆரியர்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற மதமாக கூறப்படுகிறது.

இங்கே இருக்கின்ற தாழ்த்தப்பட்டவன் எந்தக் காளியை, துர்க்கையை சேர்த்துக்கொண்டாடுகின்றானோ, அதுவும் சேர்ந்ததுதான் இந்துமதம். இந்துமதம் என்பதை பார்ப்பனர்கள் பிழைப் பதற்காக வைத்துக்கொண்டார்கள். இந்து மதத்தின் பெயரை அதிகம் பயன் படுத்திக்கொண்டவர்கள் புரோகிதர்கள். இந்தியா வில் உள்ள அனைத்து மக்களும் இந்துக்கள்தான்-அவர்களுடைய இலக்கணப்படி.

ஆரியத்தை எதிர்த்த வள்ளலார்

வடலூர் வள்ளலாரே ஆரியத்தை எதிர்த்தார். அவர் ஒரு கவிஞர்; அவர் ஒரு இறையன்பர். ஆன்மிகக் கொள்கை உடையவர். ஜீவகாருண்யம் தான் ஆன்மிகத்தின் சிறந்த அடிப்படை என்பது அவருடைய தத்துவம்.

டாக்டர் நடேசனாரின் ஆர்வம்

அதற்குப் பின்னர் தமிழ்நாட்டிலே சிந்தனை வழியில் எத்தனையோ பேர் கருத்துகளைச் சொன்னாலும், பார்ப்பனரல்லாத மாணவர்கள் படித்தால்தான் முன்னேற முடியும் என்று கருதி டாக்டர் நடேசன் திராவிட சங்கத்தை ஏற்படுத் தினார். டாக்டர் நடேசன் அவர்கள் கொண்டிருந்த ஊக்கத்தால், அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் இணைக்கப்பட்டவர்கள்தாம் சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர்.

காங்கிரசிலே இருந்து வெளியேறியவர்கள்

மாநகராட்சியில் உறுப்பினர்களாக இருந்த பொழுது ஒருவருக்கு ஒருவர் எதிராகப் பேசிக் கொண்டவர்களும் கூட. சர்பிட்டி.தியாகராயரும் காங்கிரசிலே இருந்து வெளியே வந்தவர். டாக்டர் நாயரும் காங்கிரசிலே இருந்து வெளியேறியவர். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் காங்கிரசிலிருந்து கழற்றிக்கொண்டு வந்தவர். அய்யா பெரியார் அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி, துணிந்து இந்த இயக்கத்தைத் தோற்றுவித்து நடத்தியவர். திரு.வி.கவும் காங்கிரசிலிருந்து வெளியே வந்தவர்.

முத்தையா முதலியார்

நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்கள் பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர். 1928ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலே டாக்டர் சுப்பராயன் முதலமைச்ச ராக இருக்கின்றார். நீதிக்கட்சியின் ஆதரவைப் பெற்ற சுயேச்சை ஆட்சி. காங்கிரசைச் சேர்ந்த வர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இவர்களை ஆதரித்தார்கள்.


------------------தொடரும் “விடுதலை” 11-09-2010



0 comments: